Friday 2 September 2011

பசியால் உலர்ந்து....


கொடிது கொடிது
பெற்றோரின் கண்
முன்னால்
பிள்ளைகள் சாவது கொடிது
அதனினும்
பசிக்கிறதே எனக் குழந்தைகள்
அழுக
கொடுக்க எதுவும் இல்லாமல்
நான் அழுக
என் கண்முன்னால்
நான்கு குழந்தைகள்
பசியால் உலர்ந்து
செத்துப்போனார்கள்
எனக் கதறி இருக்கிறார்
சோமாலியா நாட்டுத் தாய் !

எல்லாம் வல்ல !
இறைவனின் பெயரால்
கைகளில் துப்பாக்கியோடு
என் நாட்டுக் குழந்தைகளுக்கு
எதுவும் கொடுக்காதே
என்கிறார்களாம் சிலர் அந்நாட்டில்

உயிருக்குப் போராடும்
குழந்தைக்கு உதவும்
கரங்கள் எந்த மதத்துக்
கரங்களாய் இருந்தாலென்ன?
மதத்தால்
சாகலாமா மனிதம் ?

உலகில்
பசிக்கும் குழந்தையெல்லாம்
என் குழந்தை என
மதம் தாண்டி நாடு தாண்டி
பாலூட்டூம் சோறூட்டூம்
நாளே மனிதர்கள் நாள் !

அதுவரை
உண்டு களித்து
உறங்கி விழித்து
எவருக்கோ என
போய்க்கொண்டிருக்கிறோம்
நீங்களும் நானும்
மனிதர்கள் எனும்
பெயர் தாங்கி !

வா. நேரு