Tuesday 31 July 2012

இழப்புகளை ஏற்றுக்கொண்டே


எதிர் ஆட்டக்காரர்
எக்குத்தப்பாய்
முன்னேறினார்
தற்காப்பு ஆட்டம்
ஆடித் தடுத்துக்
கொண்டே இருந்தேன்
வெகு நேரமாய்

தற்காப்பு ஆட்டம்
தற்கொலைக்கு ஒப்பானது
என்று மனது சொல்ல
எதிராளியின் காய்களை
வெட்டி வெட்டி
விளையாட ஆரம்பித்தேன்

எனது காய்களை
இழந்தாலும்
எதிராளியின் தவறுகளைக்
கணிக்க முடிந்தது
அப்பன்ஸ் ஆட்டத்தால்
வெற்றி பெற முடிந்தது

வாழ்க்கையும்
இழப்புகளை
ஏற்றுக்கொண்டே
தொடர்ந்து முன்னேறுதல்தானோ
சதுரங்க விளையாட்டைப்போல

                                          எழுதியவர் :வா. நேரு
                                              நாள் :2012-07-16

 nantri - eluthu.com



                                                                

Monday 16 July 2012

நட்பால் ஜெயிக்கலாம்


நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.- குறள் 789.

நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.- இது மு.வ். அவர்களின் உரை.
மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.- இது இந்தக் குறளுக்கு டாக்டர் கலைஞர் அவர்களின் உரை.

இந்த திருக்குறளின் உரையினை செயல்வடிவமாகக் காணும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு மதுரையில் எனக்குக் கிடைத்தது. மேலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக பணியாற்றும் திரு. R. சந்திரன் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழா அது. Ph.D. கணிதத்தில் பெற்றமைக்காக மதுரை விக்டரி லயன்ஸ் சங்கமும், சந்திரன் அவர்களின் நண்பர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விழா  அது.  பள்ளிக் காலம் முதல் ஒன்றாய்ப் பழகிய நண்பர்கள் தனது நண்பனின் உழைப்புக்காக, அவரது உழைப்பினால் கிடைத்த உயர்வுக்காக எடுத்த பாராட்டு விழா அது. தினம் அடுத்த வேளை சாப்பாடு என்பது உழைத்தால்தான் கிடைக்கும் என்னும் நிலையில் இருந்த குடும்பத்தில் இருந்து  படித்தால் உயர முடியும் என்பதனை நிருபித்ததிற்காக அமைந்த பாராட்டு விழாவாக அது அமைந்தது மகிழ்ச்சியாக இருந்தது.
சுப.முருகானந்தம், மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், திரு.C. கிருஷ்ணன்,எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரி, திரு. A.மோகன சுந்தரம்,  R.பழனிவேல்ராசன் மதுரை IOC துணை மேலாளர் , திரு R.சந்திரன், திரு.க. மணிமாறன் , ப.இராஜசேகரன்  ஆகிய எட்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் இளமைக் காலம் முதல். இன்று 50 வயதைத் தாண்டி நிற்கும் இந்த நண்பர்களின்  40 ஆண்டுகளுக்கும் மேலான  நட்பு மேலே சொன்ன குறளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
                           இவர்களின் நட்பினை அறிந்த யாதவர் கலைக் கல்லூரியின் செயலாளர் திரு. K.P. நவநீதகிருஷ்ணன் அவர்களும்,  யாதவர் கலைக் கல்லூரியின் தலைவர் திரு A. தங்கவேலு அவர்களும் இவர்களின் நட்பின் சிறப்பினை பேசினர். வரவேற்புரை ஆற்றிய திரு.C.கிருஷ்ணன் தங்களின் இளமைக் காலங்களை நினைவு கூர்ந்தார். உரையாற்றியார் அனைவரும் கல்வியின் சிறப்பினை எடுத்துரைத்தனர். ஸ்டீபன் கவே தன்னுடைய " The seven habits of highly effective people" புத்தகத்தில் இருவர் வெற்றி பெற  " Win -Win " என்னும் வழிமுறையை எடுத்துக்காட்டியிருப்பார். இங்கு எட்டு  நண்பர்கள் வின்-வின் தத்துவத்தின் மூலம் தாங்களும் வெற்றி பெற்று, தங்கள் நண்பர்களும் வெற்றி பெற உதவியிருக்கிறார்கள் . இன்றைக்கும் ஒருவர் வீட்டில் ஒரு நிகழ்வு என்றால் அனைவரும் ஒன்றாக வந்து நின்று செயல்படுகிறார்கள். உடன் பிறந்தோரிடம் கூட காணாத ஒரு ஒற்றுமை, ஒரு உண்மையான உள்ளன்பு இவர்களிடம் இருக்கிறது என்றால் மிகையில்லை. நட்பால் ஜெயிக்கலாம் என்று காட்டியிருக்கிறார்கள் . பாராட்டு பெற்ற சந்திரனுக்கும்  அதே நேரத்தில் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

Sunday 8 July 2012

அண்மையில் படித்த புத்தகம் : எழுத்துக் கலைஞன் கந்த்ர்வன்

அண்மையில் படித்த புத்தகம் : எழுத்துக் கலைஞன் கந்த்ர்வன்

நூலின் தலைப்பு : எழுத்துக் கலைஞன் கந்தர்வன்

தொகுப்பு  : மு.முருகேஷ்

வெளியிட்டவர்கள் : அகநி வெளியீடு, வந்தவாசி 604 408,
                                             -  பேச : 04183-226543  செல்: 94443 60421.
முதல் பதிப்பு : 2007
விலை ரூ 70
மொத்த் பக்கங்கள் : 160

                                                            தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராய் இருந்து மறைந்தவர் கந்தர்வன். அவர் எழுதிய கடிதங்கள் முன்னுரைகள், அணிந்துரைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் இவற்றையெல்லாம் தொகுத்து ஒரு நூலாக வெளி வந்திருக்கிறது. முதலில் இந்த நூலைத் தொகுத்தளித்த எழுத்தாளர் மு.முருகேஷ் அவர்களைப் பாராட்ட வேண்டும், ஒரு படைப்பாளியின் பன்முகத்தை இந்த நூல் மூலம் நமக்கு காட்டியிருக்கிறார்.

                                                                                                            கந்தர்வன் ஒரு அரசு ஊழியர், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பாளா, கவிஞர், சிறு கதை ஆசிரியர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். தனிமையில் அமர்ந்து, தன்னந்தனியாய் குளு குளு அறையில் உட்கார்ந்தால்தான் எனக்கு கவிதை வரும் என்பவர்கள் மத்தியில் போராட்டமே வாழ்க்கை, வாழ்க்கையே எனது இலக்கியம் எனப் படைத்த ஒரு படைப்பாளனின் பங்களிப்பை ஒன்று கூட்டித் தர எடுத்திருக்கும் முயற்சி எனலாம். தம்பிக்கு(சு.லெ.நரசிம்மன)  எழுதிய கடிதத்தில் " உங்கள் வேலையின் மீதும் திறமையின் மீதும் நம்பிக்கை வையுங்கள். தாராளமாய்ப் பழகுங்கள். படைப்பாளி என்றாலும் பத்திரிக்கையாளனென்றாலும் இது ரொம்ப முக்கியம் " -பக்கம் 18 என்று குறிப்பிடுகின்றார் கந்தர்வன். அவர் 44 பேருக்கு எழுதி அனுப்பிய கடிதங்கள் முதலில் கொடுக்கப்பட்டுள்ளன. கடிதங்கள் இவ்ரின் உள்ளக் கிடக்கையை , இயக்கத்தின் பால் இவர் கொண்டிருந்த ஈர்ப்பை சொல்வதோடு, குடும்பதினர் மீதும் வீட்டின் மீதும் வைத்திருந்த அன்பை சொல்கின்றன.

                                                                                                    இரண்டாவது பகுதி முன்னுரைகள் மற்றும் அணிந்துரைகள் . " தெருக்களிலும் வயல்களிலும் கிடைத்த அனுபவங்களை இவர்கள் கவிதைகளில் சொல்ல முயல்கிறார்கள் . எனவே அது இயல்பாக இருக்கிறது, சரியாக இருக்கிறது. ஆனால் அழகாகவும் இருக்கவேண்டும் என்ற முக்கிய உண்மையையும் இந்த இடத்தில் சொல்லியாக வேண்டியுள்ளது " (பக்கம்-74) என்று அழகியலின் முக்கியத்துவத்தை ஜன நேசன் என்பவரின் ஆலிவ் இலைகளேந்தி  கவிதைத் தொகுப்புக்கான முன்னுரையில் சொல்கின்றார். " ஊரெங்கும் பவர்கட்/ இயந்திரங்கள் இயங்குகின்றன /அடடா ....பெண்கள் " என்னும் கவிதையைக் குறிப்பிடுகின்றார். கவிதை எழுதும்போது மிக அவசியமான மூன்று என்று "
செய் நேர்த்தி அவசியம்
மொழி லாவகம் முக்கியம்
சுருக்கம் அதி முக்கியம் "  கந்தர்வன் சொல்கின்றார். கவிதை எழுதுகின்ற அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.
சோவியத் சோசலிச அமைப்பு சிதறுண்டதை ஜீவி என்னும் கவிஞரின்  (கவிதைத் தொகுப்பின் பெயர் - வானம் தோலைந்து விடவில்லை )
கவிதையை
" அம்மா சாவுக்கு
  சிரிக்கும் குழ்ந்தையாய்
மாஸ்கோ வாசிகள் " குறிப்பிட்டு ஒரு பொறுப்பு மிகுந்த கவிஞனின் மிக உயர்ந்த விமர்சனம் (பக்கம் 78 ) என்று சொல்கின்றார் கந்தர்வன்.   

முத்து நிலவனின் "புதிய மரபுகள் " என்னும் கவிதை நூலுக்கான மதிப்புரையில் மரபு என்றால் என்ன என்பதற்கு அழகான விளக்கத்தை அடுக்கடுக்காய்த் தருகின்றார். அடுத்து கவிஞர் முத்து நிலவனுக்கும் தனக்கும் இருந்த நெருக்கத்தைச் சொல்லி தன்னைப்போலவே ஒரு பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி முத்து நிலவன் என்பதனை சுட்டிக்காட்டுகின்றார்.
" அன்பே தெய்வமென
 அடுத்தவனை  உதைக்கும்
மதங்கள் " என்பதில் பொதுமை அதிகம்

" கலைக்கு வயதில்லை
சும்மா சொல்லக்கூடாது-
அந்த ஐ,ஏ,எஸ்.வீட்டுக்
கிழவியின் நடனம்
அருமை " என்னும் கவிதையில் இருக்கும் கேலியும் கிண்டலும் தொகுதி முழுவதும் விரவிக் கிடக்கிறது என்கிறார்.  

கந்தர்வன் கவிதைகளைப்பற்றி எழுதியிருப்பவைகளை மட்டும் எடுத்து தனிப்புத்தகமாகப் போடலாம் போலிருக்கிறது. " சலிப்பும் ,துக்கமும், நிராசைகள் மிக்கதுமான வாழ்க்கையை நல்ல கவிதை ஈரப்படுத்துகிறது. சருகு உதிர்ந்த இடங்களில் துளிர் விட வைக்கிறது. ....வேட்டி,சட்டை, செருப்பு, சீப்பு என்று எந்தப் பொருள் தயாரிக்கவும் கூட்டு உழைப்பு வேண்டும்,இலக்கியம் மட்டுமே தனி மனிதத் தயாரிப்பு. இலக்கிய வகையில் கவிதை இன்னும் ஒரு படி மேலே ...." பக்கம் 94 இப்படிப் பலவிதமான கவிதை குறித்த பார்வைகள் நூல் முழுவதும் விரவிக்கிடக்கிறது.

                             மூன்றாம் பகுதியாக கந்தர்வனின் நேர்காணல்கள். விரிவாக வந்திருக்கிறது. அவரின் ஈடுபாடு, கந்தவர்வன் என்னும் புனைபெயர் மற்றும் பல்வேறு கருத்துக்களைப் பதித்திருக்கிறார்.  நான்காம்  பகுதியாக தோழர் மதிமாறன் அவர்கள் எழுதிய "பாரதிய ஜனதா பார்ட்டி " என்னும் நூலுக்கு மறுப்புரையாக மார்க்சிஸ்ட் இதழில் எழுதிய கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது.  மதிமாறன் அவர்கள் கருத்தே சரியானது எனபது என் கருத்தாகும் அதைப்போலவே அதிசயங்கள் பார்த்தேன் என்னும் கட்டுரையோடு நூல் முடிகிறது. (பக்கத்தில் இருக்கும் என் மகன் புத்தக் விமர்சனத்தையே  இவ்வள்வு விரிவாக எழுதினால் , யார் படிப்பார்கள் என்கிறான்) . விமர்சனத்தையும் படிப்பார்கள், ஒரு படைப்பாளனின் பன்முகத்தையும் படிப்பார்கள் என்னும் நம்பிக்கை எனக்குண்டு என்றேன் அவனிடம். 

Friday 6 July 2012

பெருச்சாளி பேடு


எலியை அடிப்பதொன்றும்
அவ்வளவு எளிதாயில்லை !
கண்ணுக்கு முன்னே தோன்றி
கண நேரத்தில் மறைந்து
கண்ணா மூச்சி காட்டி
என்னோடு எலி விளையாடியது !

வெறுப்பான நான்
கையில் கம்போடு
ஓடி ஓடி இளைத்ததுதான்
மிச்சம் !

துவைக்கும் எந்திரத்தின்
வயரை எல்லாம்
கடித்துக் குதறி
துப்பிவிட்ட எலிமேல்
கடும்கோபம் கொண்டு
ஓடி ஓடித் தவித்த என்னை
உச்சத்தில் ஏறி அமர்ந்து
எட்டி எட்டிப் பார்த்த எலி
ஏளனமாய்ச் சிரிப்பதுபோலவே
தோன்றியது எனக்கு !

எலி தப்பிச்சிருச்சா ?
இவ்வுலகில் எல்லா உயிரும்
வாழ உரிமை இருக்கென
அடிக்கடி சொல்வீர்களே
ஏன் இந்தக் கொலைவெறி
என்றாள் மகள்

மறு நாள் எலிகொல்லும்
பேடை வாங்கி
அது வரும் வழியில்வைத்து
மாட்டிக்கொண்ட எலியை
கொன்றபோது
வலிமையாக ஓடிக்
கொல்லமுடியாமல்
வஞ்சகமாய் வீழ்த்தி
விட்டாயடா மனிதா
எனக்கேட்பது போல
ஒரு பார்வை பார்த்துவிட்டு
எந்த வித எதிர்ப்பும்
இன்றி செத்துப்போனது !

சட்டத்தின் சந்து
பொந்துகளில் நுழைந்து
தப்பித்துக்கொள்ளும்
நாட்டின் பெருச்சாளிகளை
பிடிப்பதற்கு
பெருச்சாளி பேடு
ஏதேனும்
செய்ய இயலுமா?
                                     வா. நேரு 
                           நன்றி: eluthu.com / 02.07.2012