Sunday 25 November 2012

நிரம்பி வழிகின்றன

நிரம்பி வழிகின்றன
உணவு விடுதி மேஜைகள்

வித விதமான
ஆடைகளோடும்
அணிகலன்களோடும்
ஆண்களும் பெண்களும்
யுவதிகளும் கிழவிகளுமாய்
உணவினை
சுவைத்துக்கொண்டும்
ஆர்டர் இட்டுக்கொண்டுமாய்
நிரம்பி வழிகின்றன மேஜைகள்

உணவுக்கு ஆர்டர் கொடுத்து
உண்ணும் போதும்
உண்டு முடித்த பின்பும்
எக்மோர் ரெயில்
நிலையத்தில் கேட்ட குரல்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது
காதுகளில் விடாது

நான் பெத்த பிள்ளைகளா
நான் சாப்பிட
ஒத்த ரூபா போடுங்க ராசா
என்னும் அந்தக்குரலுக்கு
செவிமடுக்காது
தாண்டி வந்த பின்பும்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது
விடாது அந்தக்குரல்

நிரம்பி வழிகின்றன
உணவு விடுதி மேஜைகள்
ஏற்றத் தாழ்வைப்
பார்த்துக்கொண்டே
கடந்து செல்லும்
அரசியல்வாதி போலவே

இல்லாக் கொடுமையும்
இருப்பவனின் ஊதாரித்தனமும்
ஏன் இந்நாட்டில் எனும்
கேள்விகளின்றி
சர்வருக்கு சில
நாணயங்களை வைத்துவிட்டு
நடந்து செல்கிறேன் நானும்....





எழுதியவர் :வா. நேரு

நாள் :2012-10-15
nantri : eluthu.com

அண்மையில் படித்த புத்தகம்-நேசத்துணை-திலகவதி

அண்மையில் படித்த புத்தகம்

நூலின் தலைப்பு : நேசத்துணை
ஆசிரியர்        : திலகவதி
பதிப்பகம்        : அம்ருதா பதிப்பகம்
முதல் பதிப்பு    : டிசம்பர் 2007
விலை          : ரூ 80 , 168 பக்கங்கள்

                                            நேசத்துணை எனபது நாவல். மொத்தம் 24 அத்தியாயங்கள் உள்ளன. தமிழில் நவீன எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் திலகவதி. காவல்துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர். கிரேன்பேடி போல மக்கள் பலரால் தமிழகத்தில் அறியப்பட்டவர். திலகவதியின் இந்த நாவல் நல்ல இல்லறத்திற்கு என்ன தேவை என்பதனை கேள்வியாகக் கேட்டு அதற்கு பதிலாக அன்பு  என்பதனைப் பதிலாக தரும் நாவல் எனலாம்.

                                                  160 பக்கம் கதையைப் போலவே திலகவதியின் முன்னுரையும் அருமையாக உள்ளது. ஜெயகாந்தன் தனது நாவல்களில் முன்னுரைகளில் நிறையப் பேசுவதுபோலவே திலகவதியும் பேசியிருக்கிறார். நாவல் ஆசிரியர்கள் முன்னுரையில் பேசவேண்டும்.

                                                   " பெண் , இன்று ஒரு மட்பாண்டம் இல்லை, யார் உடைத்தும் அவள் சிதறிப் போக மாட்டாள். அவள் இன்று கல்வி பெறுகிறாள், உயர்ந்த தேர்வுகளில் உயர்ந்த இடம் பெறுகிறாள். ...பெண் உயர்வு என்பது மானுட உயர்வு. மானுடம் என்பது அன்பினை ஆதாரமாகக் கொண்ட மன ஊற்று.இரு வேறு மனிதர்களை ஒன்றாய் இணைப்பதில் அன்பெனும் ரசாயனம் ஆகச்சிறந்த பங்கினை ஆற்றுகிறது....மனிதர்கள் சோற்றால் வாழ்வதில்லை. அன்பினால் ஜீவிக்கிறார்கள்.  இப்படியாகத் தங்களை அன்பினால் நிரப்பிக்கொண்ட ஒரு ஜோடியை எனக்கு தெரியும். அவர்களிக்கிடையே படிப்பு வித்தியாசம் இருந்தது. இன்னும் பலப்பல வேறுபாடுகள் இருந்திருக்கலாம், என்றாலும் அனைத்துக்குறுக்குச்சுவர்களையும் இடித்து நிரவி சமன்படுத்தியது இந்தப் புரிதலும் அன்புமேயாகும் " என்று முன்னுரையில் குறிப்பிடும் திலகவதி அந்த ஜோடியை வடிவேலு, நளினி பாத்திரங்களை மிக நன்றாக உருவாக்கி நாவல் முழுவதும் உலவ விட்டிருக்கிறார். வாழ்க்கை இணையர்களின் ஒற்றுமை என்பது ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுப்பதிலும் , ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதிலும்தான் இருக்கிறது என்பது மிக அழுத்தமாக இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது .

                                                   அதனைப் போலவே கஸ்தூரி பாத்திரமும். ஆனால் நளினி பாத்திரம் அளவுக்கு இல்லாமல் கொஞ்சம் செயற்கைத்தனம் இருக்கிறது . வடிவேலு , நளினி. கஸ்தூரி பாத்திரங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, " அவர்கள் ஏற்கனவே பூமியின்மேல் இருந்தார்கள், நான் அவர்களை அறிய நேர்ந்தது. உங்களுக்கு அவர்களை எழுதிக்காட்டியிருக்கிறேன். இப்போது என்னைப் பொறுத்தவரை இலக்கியத்தின் பயன் இதுதான் என்று நம்புகின்றேன் " பக்கம்-7 என்று சொல்கின்றார் திலகவதி. உணமைதான். செம்மைப்படுத்தவும் வாழ்க்கையை செழுமைப்படுத்தவும் ஆற்றுப்படுத்துதல்தானே நல்ல இலக்கியத்தின் நோக்கம்.பாகீரதி பாத்திரம் பெண்ணியவாதிகளை  கேலி செய்யும் விதத்தில் இருப்பது மனதைக் கொஞ்சம் நெருடுகிறது.

                               நாவல் விறுவிறுப்பாகவும் அதே நேரத்தில் இடையில் கொஞ்சம் நகைச்சுவை கலந்தும் ஆசிரியரால் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. நாவலைப் படித்து முடித்தவுடன் எனது மனைவியிடம் நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக அன்பு செலுத்த வேண்டும் என்று தோன்றியது. இந்த நாவலைப் படித்ததன் பயன் எனக்கு இது. நீங்களும் படித்துத்தான் பாருங்களேன்.

                           இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பக்கத்தில் " NESATHUNAI. A collection of short stories in Tamil by G. Tilakavathi " என்று போட்டிருக்கிறார்கள். நாவலை எப்படி சிறுகதைத் தொகுப்பு என்று அச்சிட்டார்கள் எனத் தெரியவில்லை. அடுத்த பதிப்புகளில் திருத்திக்கொள்ளலாம்.

                                           

Friday 16 November 2012

அண்மையில் படித்த புத்தகம் -தோல்விகளைத் துரத்தி அடி

 அண்மையில் படித்த புத்தகம்

நூலின் தலைப்பு : தோல்விகளைத் துரத்தி அடி
ஆசிரியர்                : எழில் கிருஷ்ணன்
பதிப்பகம்               : கிழக்கு பதிப்பகம்
முதல் பதிப்பு       : டிசம்பர் 2008
விலை                    : ரூ 75 , 160 பக்கங்கள்

                                               இது ஒரு சுய முன்னேற்றப்புத்தகம். படிக்கட்டுகள் எனத்தலைப்பிட்டு 8 தலைப்புகளில் கருத்துக்கள் உள்ளன.  வெற்றி பெற்றவர்கள் சிலரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள், ஜென் துறவிகள் சொன்ன சில உண்மைகள், நிகழ்வுகள் என நூல் முழுவதும் பல தகவல்கள், சுய முன்னேற்றக் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ள நூல் இது.கையில் எடுத்தால் படிக்கத்தூண்டுமளவு விறுவிறுப்பாய், பல்வேறு விசயங்களை மாறுபட்ட கோணத்தில் சொல்கின்ற புத்தகமாய் இந்தப்புத்தகம்

                                             ஒரு புத்தகச்சந்தையில் எப்படிப்பட்ட புத்தகங்கள் நிறைய விற்கின்றன என்று ஒரு பதிப்பாளரைக்க் கேட்டபொழுது , நிறைய ஜோதிடப்புத்தகங்கள் விற்கின்றன, அதற்கு அடுத்தாற்போல் சுய முன்னேற்றப்புத்தகங்கள் நிறைய விற்கின்றன என்றார். இரண்டுமே சுய நலம் சார்ந்த புத்தகங்கள் என்றார் பக்கத்தில் இருந்த நண்பர் . எப்படி என்றபோது ஜோதிடம் பொய் , ஆனாலும் நிறையப்பேர் படித்தவர்களே நம்பி ஏமாந்து போகிறார்கள் என்றவர், சுய முன்னேற்றப்புத்தகங்கள் பலவும் கூட நீ மட்டும் ஜெயிக்க என்ன வழி என்று சொல்பவைதான் என்றார்.

                                            தோல்விகளைத் துரத்தி அடி என்னும் புத்தகத்தில் கவனித்த ஒரு விசயம் இவர்களின் நோக்கம் என்ன என்பதனைத் தெளிவாக்கியது . " வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களிடம் சில பொதுப்பண்புகள் இருக்கும். வம்புதும்புக்குப் போக மாட்டார்கள் . அடுத்தவர் பிரச்சனையில் தலையிட மாட்டார்கள். மூக்கை நுழைக்க மாட்டார்கள். தன் வேலையுண்டு , தானுண்டு என்று இருப்பார்கள்.

                                                                                                  கலாட்டா செய்ய மாட்டார்கள்.யூனியன் மீட்டிங் அது ,இது என்று எந்தப்புறக்காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டார்கள். கவனித்துப்பாருங்கள், எந்தப் பெரிய ஆளாக இருந்தாலும் அவன் வேலையத் தவிர எதிலும் சிறு ஆர்வம்கூட காட்டிக்கொள்ள மாட்டான் அப்போதுதான் தன் வேலையில் முழுக்கவனம் செலுத்த முடியும் என்பது புத்திசாலிக்குத் தெரியும் " பக்கம் 83.
                        "அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப்போராடாது, அநீதி களைய முடியாது", "ஒன்று படுவோம், போராடுவோம், வெற்றி பெறுவோம் " என்பது தொழிற்சங்கங்க கூட்டங்களில் , போராட்டங்களில் எழுப்பப்படும் முழக்கங்கள். அமெரிக்கக் கன்வுகளோடு இருக்கும் நமது இளைஞர் கைகளில் தவழும் சுய முன்னேற்றப்புத்தகங்களில் தென் படும் உன் வேலையத் தவிர வேறு எதையும் கண்டு கொள்ளாதே என்பது ஆபத்தானது மட்டுமல்ல, இப்போது இருக்கும் பணக்காரர்களையும் , உயர் ஜாதிக்காரர்களையும் பாதுகாக்கும் வேலை என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.  


                                                    

Monday 12 November 2012

ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்

                                  அண்மையில் படித்த புத்தகம்

    புத்தகத்தின் தலைப்பு  : ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்
    ஆசிரியர்                           : மாலினி சிப்
     தமிழில்                             : ஐஸ்வர்யன்
     வெளியீடு                        : விகடன் பிரசுரம் ( 628)
     முதற்பதிப்பு                    :  டிசம்பர் 2011
     மொத்த பக்கங்கள்       :    248        
      விலை                             :  ரூ 100

                                                          சுயசரிதையை படிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்த செயல். அந்த வகையில் மாலினி சிப் என்னும் பெண்ணின்  இந்த சுய சரிதை என்பது அற்புதமான ஒரு வாசிப்பு அனுபவமாகவும் , அதே நேரத்தில் சமூக சிந்தனையோடு சுயபரிசோதனை செய்யும் விதமாகவும் அமைந்தது என்றால் அது மிகையில்லை.

                                                     தன் கதையை தானே விவரிக்கும் விதமாக அமைந்த இந்த மாலினி சிப்பின் வரலாறு என்பது படிக்கும் பலருக்கும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடியது. பிறவியில் ஏற்படும் சிறு குறைபாடுகளுக்கே அலுத்துக்கொண்டு வாழ்வில் சலித்துக்கொள்வோர் எல்லாம் அவசியம் படிக்க வேண்டிய கதை இது.

                                                    "செரிப்ரல் பால்ஸி' நோய் என்றால் என்ன்வென்று இந்த நூலைப் படிப்பதற்கு முன்னால் எனக்குத் தெரியாது , ஆனால் இந்தப்புத்தகத்தைப் படித்துமுடித்தபோது அந்த நோய் என்ன செய்யும் , அந்த  நோய் பாதிப்பு ஏற்பட்டால் குடும்பத்தினர் செய்ய வேண்டியது என்ன, சமூகத்தினர் செய்ய வேண்டியது என்ன  போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலும், அப்படிப்பட்ட இயல்பான ஒரு பதிவாக இப்புத்தகம் அமைந்துள்ளது இதன் சிறப்பு.

                                                   இந்தப் புத்தகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி - வேர்கள் என்ற தலைப்பில் 1 முதல் 72 பக்கம் வரை. டாக்டர்கள் சொன்னது பொய்யாப்போச்சு என்னும் முதல் அத்தியாயம் 1966 -ஜீலை மாதம் மாலினி சிப் பிறந்தது, இயல்பான வளர்ச்சி இல்லாததால் , பரிசோதனைகள் மூலம் 'செரிப்ரல் பால்ஸி' என்ற நோய் பாதிப்பு மாலினி சிப்பிற்கு உள்ளது என்பதனை கண்டுபிடித்தது, கடைசிவரை இந்தக் குழந்தை காலம் முழுக்க படுக்கையிலே கிடப்பாள் என்னும் மருத்துவர்களின் கூற்றை மாலினி சிப்பின் பெற்றோர்கள் மனதளவில் மறுத்து மாற்று வழி தேடியது, மாலினி சிப்பின் மருத்துவத்திற்காகவே இவரது பெற்றோர்கள் லண்டனுக்கு சென்றது என்று பல தகவல்கள் கதையாக விவரிக்கப்பட்டுள்ளன.

                                               மாலினி சிப்பின் 6 வயதில் இந்தியாவுக்கு வருகின்றார்கள். லண்டன் பள்ளிக்கும் , இந்தியாவில் கிடைத்த அனுபவத்திற்கும் உள்ள வேறுபாட்டை மாலினி சிப் பக்கம் 34-ல் குறிப்பிடுகின்றார் இப்படி " அந்தப்பள்ளியைச் (லண்டன்) சேர்ந்தவர்கள் , வார்த்தை விவரிக்கு அப்பாற்பட்டு, அன்பாக, இதமாக, உணர்வுபூர்வமாக என்னோடு பழகியதை, எனக்குச் சம உரிமைவழங்கிப் பராமரித்த்தை இன்றளவும் என்னால் மறக்க இயலவில்லை. கண்ட நாள் முதலே அவர்கள் என்னை ஒரு சிறுமியாகத்தான் பார்த்தார்களே தவிர ' ஊனமுற்ற சிறுமி'யாக அல்ல.ஆனால் .இந்தியாவில் கிடைத்த எதிர்மறையான அனுபவமோ சொற்களால் ,வெளிப்படுத்த முடியாத அளவு வலியும் வேதனையும் தந்திருந்தது....முரட்டுத்தனம்,அதிகாரப்போக்கு, அகந்தை, மிரட்டும் போக்கு என சகல கருப்பு அம்சங்களும் நிறைந்திருக்க...அவர்கள் அளித்த சிகிச்சைகள் என்னைக் குணப்படுத்தாமல் காயப்படுத்தின " .

                                                  குழந்தைப் பருவ நிகழ்வுகள், மாலினி சிப்பின் அப்பாவிற்கும் அம்மாவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு, அதனால் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட விவாகரத்து, கணவரைப் பிரிந்த வேதனையை வெளிக்காட்டாமல் அவரது அம்மா அவரை வளர்த்தது, சிறப்புப்பள்ளியில் படித்தது, ஹாஸ்டல் வாழ்க்கை எனத் தன் குழ்ந்தைப் பருவ நிகழ்வுகளை விவரிப்பதாக - வேர்கள் என்னும் இந்த முதல் பகுதி அமைந்துள்ளது. எலெக்டிரிக் நாற்காலி என்னும் அந்த கருவி எவ்வளவு தூரம் அவரது வாழ்க்கையை மாற்றியது என்பதனை விவரிப்பது அருமை.

                                                  நூலின் இரண்டாம் பகுதியான வளர் பருவத்தில் (பக்கம் 73 முதல் 132 வரை )  மாலினி சிப்பின் இளமைக்காலமும் படிப்பும் விவரிக்கப்பட்டுள்ளது. பம்பாயின் புனித சேவியர் கல்லூரியில் பி.ஏ. படித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றார். " பொதுவாகப் பத்திரிக்கைக்காரர்கள் திரும்ப திரும்ப கேட்ட ஒரு கேள்வி, கல்லூரியில் படித்த காலத்தில் நான் மற்றவர்கள் மத்தியில் வித்தியாசமாக உணர்ந்தேனா என்பதே. நிச்சயமாக உணர்ந்தேன். செயிண்ட் சேவியர் கல்லூரிக் காலத்தில்தான் அந்த வித்தியாசம் நேரடியாக என்னைத் தாக்கிற்று. " பக்கம் -75  எனக்குறிப்பிடும் மாலினி சிப் மேலை நாட்டுப்படிப்பையும் நமது நாட்டுப் படிப்பையும் ஒப்பிடுகிறார். மிகவும் நன்றாகப் பாடம் நடத்தும் உமா என்னும் ஆசிரியர் இறுக்கமாக மாணவிகளிடம் நடந்து கொள்ளும் தன்மையை சொல்லும் விதம் நன்றாய் உள்ளது. ஒயினை ருசித்ததைப் பற்றித் தனி அத்தியாயமே உள்ளது. கன்னிப்பருவத்திலே என்னும் தலைப்பில் அமெரிக்கா சென்றிருந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றார் மாலினி சிப். " எனது அமெரிக்கப் பயணமே எனது கண்களைத் திறந்த பெருமைக்கு உரியது. தங்களுக்கென ஒரு வாழ்க்கையை கவுரமாக வாழும் அத்தனை மாற்றுத்திறனாளிகளை நான் அமெரிக்கபயணத்துக்கு முன் சந்தித்தே இல்லை " என்று சொல்லும் அவர் மாற்றுத் திறனாளிகள் பற்றிய சமூகப் பார்வையைச் சொல்கின்றார். " மாற்றுத் திறனாளிகள் எப்போதுமே அடுத்தவரைச் சார்ந்தவர்கள் என்றும், வேறு கதி இல்லாதவர்கள் என்றும்தான் நமது சமுதாயம் குறுகிய பார்வை கொண்டிருக்கிறது. அது நியாயமா ? முதலில் நாங்களும் மனிதர்கள். அப்புறம்தான் மாற்றுத்திறனாளிகள் . ஆனால்,பெரும்பாலோர் கண்ணுக்கு மாற்றுத்திறனாளிகளின் குணங்கள் கண்ணுக்குத் தெரிவதற்குமுன்  அவர்களின் அங்கக் குறைபாடுதான் கண்ணுக்குத் தெரிகிறது" பக்கம் -114.
இதனைப் போன்ற பல்வ்று தன்னுடைய  மன் ஓட்டங்களை இந்த நூலில் பதிந்திருக்கின்றார் மாலினி சிப்.

                                                 நூலின் மூன்றாம் பகுதியான சுதந்திரக்காற்றில் , மறுபடியும் லண்டன் சென்றதைப் பற்றி எழுதியுள்ளார். பேசுவதிலும் எழுதுவதிலும் தனக்கு இருந்த பிரச்சனையை சரிசெய்யப் பயன்பட்ட கருவிகளைச் சொல்கின்றார். " இமெயில் வசதி என் வாழ்க்கையில் பெரும் புரட்சியையே ஏற்படுத்திவிட்டது எனலாம் . அனைவருடனும் என்னால் சுயமாகவே தொடர்புகொள்ள முடிந்தது" - (பக்கம் 151) எனச்சொல்லும் மாலினி சிப் இணையமும் , எழுது உபகரணமும்  தன் வாழ்வில் ஏற்படுத்திய மாற்ற்த்தை விவரிக்கும் விதம் அருமை. 'சொந்தக் காலில்'  நிற்கும் திறனையும் துணிச்சல்காரியாக மாறியதையும் சொல்கின்றார். வாகை சூடினேன் என்னும் தலைப்பில் " அந்த ஒற்றைச் சிறு விரல்  எனது வல்லமையின் பொக்கிஷமாக இருந்தது. சிரமமின்றி இமெயிலை உபயோகித்தேன் . " எனக்குறிப்பிடும் மாலினி சிப், எழுத்தாளர் ஜென்ஸி மோரிஸின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டதை விவரிக்கின்றார். அவரை " மாற்றுத் திறனாளிப்  பெண் ஒருத்தி அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளப்போராடிக் கொண்டே , புற உலகோடும் இணைந்து செய்ல்படும்போது சந்திக்க நேரிடும் சிரமங்களை விளக்கமாகச்சொல்லி, பெரியதொரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார் " (பக்கம் 182) எனக்குறிப்பிடுகின்றார்.

மாற்றுத்திறனாளிகள் செக்ஸ் ரீதியாக புறக்கணிக்கப்படுவதை மிக விரிவாக எழுதும் மாலினி சிப், "நீ ஊனமுற்றவள், உனக்கு செக்ஸ் கிடையாது " என்னும் தன் கட்டுரையின் தாக்கம் பற்றியும் விவரிக்கின்றார். ' பெண்ணியம் பற்றி தெரிந்தால்தான், நமது அன்றாட வாழ்வை அலசி ஆராய்ந்தால்தான் பெரிய அளவிலான பெண் அடக்குமுறையை எதிர்த்துப்போராட முடியும் எனும் விழிப்பு உணர்வு எனக்கு ஏற்பட்டது " (பக்கம் - 188) எனச் சொல்கின்றார் .என்னாலும் வாழமுடியும் என்று தன்னம்பிக்கை பெற்றதையும் , இன்னொரு எம்.ஏ.பட்டம் பெற்றதையும் விவரிக்கின்றார். தன்னுடைய துன்பத்தையும் குறிப்பிட்டுச்சொல்கின்றார். " மற்றவர்களுக்கெல்லாம் ஒரு மணி நேரமே ஆகக்கூடிய ஒவ்வொரு பணியும், ஒற்றை விரலைக்கொண்டு செய்து முடிக்க எனக்கு ஒரு நாள் ஆகிவிடும் " என்பதைச் சொல்கின்றார் . தனக்கு மும்பையில் வேலை கிடைத்த்தையும் , ADAPT ( Able Disabled All People Together) என்னும் அமைப்புக்கு உயிரூட்டியதையும் அதில் வேலை செய்து மாற்றுத் திறனாளிகளை ஒன்றிணைத்தையும் குறிப்பிடுகின்றார்.
                 2004-ல் மும்பை மராத்தான் ஓட்ட பந்தயத்தின் பந்தய விதிமுறைகளில் " சக்கர நாற்காலிகளுக்கும் நாய்களுக்கும் அனுமதி இல்லை " எனும் குரூரமான வாசகமும் அதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை ஒருங்கிணைத்ததை, போராடியதை மாலினி சிப் பதிந்துள்ளார்.

                தனக்கு ஏற்பட்ட அவமானங்களை, அவமதிப்புக்களை, ஒதுக்கப்பட்டதை மிக நுட்பமாக நூல் முழுவதும் பதிந்துள்ளார் மாலினி சிப். " ஒருவருக்கு  மட்டுமே தனிப்பட்ட முறையில் நிகழ்வு நிகழ்ந்ததுகூட சக்தி மிக்க ஆயுதமே . அதை மறைப்பதும் ,புதைப்பதும் கூடவே கூடாது. அது மக்கள் மத்தியில் பேசப்பட்டு, ஆதரவு திரட்டப்படும் பட்சத்திலேயே பின்னாளில் அது போன்ற அவலம் நிகழாமல் தவிர்க்க இயலும்" (பக்கம் 234 ) . ஆம் உண்மைதான், இந்த நூலின் நோக்கத்தை விளக்கும் பகுதி இது எனலாம்.

                                                      மாற்றுத் திறனாளிகள் மற்ற நாடுகளில் மனித நேயத்தோடு அணுகப்படுவதற்கும் , நமது நாட்டில் அவ்வாறு அணுகப்படாமைக்கும் என்ன காரணம் என்பதனை மாலினி சிப் சொல்லும் விதம் சிந்திக்கத்தக்கது, மிகவும் தீவிரமாக விவாதிக்கப்படவேண்டியதும்கூட " ஒழுங்கற்ற எங்கள் உடல்களை மட்டும் பார்த்து மதம் சார்ந்த நம்பிக்கையாக முற் பிறப்புப் பாவங்களின் சின்னமாகவே எங்களைக் கணிக்கிறார்கள். பல தடவை ' நான் அப்படி என்ன பாவம் செய்து விட்டேன் ? ' என்று நிஜமாகவே  நான் யோசித்தது உண்டு " பக்கம் - 244. இந்த்  நாட்டில் மாற்றுத் திறனாளிகள் ஏன் மனிதாபிமானத்தோடு நடத்தப்படுவதில்லை என்றால், இவர்கள் முற்பிறவியில் பாவம் செய்தவர்கள், அதனால் இப்படி இருக்கின்றார்கள் என்னும் மன்ப்பான்மை ஊறிப்போயிருக்கிறது என்கின்றார். ஒரு கொலைகாரனுக்கு தண்டனை கிடைத்தால்  எப்படி மக்கள் அவன் செய்த செயலுக்கு தண்டனை என்று நினைக்கின்றார்களோ , அதைப்போல மாற்றுத்திறனாளிகள் என்றால் அவர்கள் முற்பிறப்பில் கொடுமை செய்தவர்கள் என்ற நினைப்பு மக்கள் மத்தியில், மதத்தின் அடிப்படையில் இருக்கிறது என்கின்றார்.

                                                                        இந்த நூல் என் அம்மாவுக்கு என்று மாலினி சிப் காணிக்கையாக்கியுள்ளார். மாலினி சிப்-ன் வெற்றிக்கு அவரது அம்மா எவ்வளவுதூரம் உறுதுணை என்பதனை படித்துப்பாருங்கள் , புரியும்.இப்படி அம்மாக்கள் வாய்த்தால், எந்த மாற்றுத்திறனாளியும் மனம் கலங்க மாட்டார்கள். படிக்க வேண்டிய புத்தகம், மற்றவர்களையும் படிக்கச்சொல்ல வேண்டிய புத்தகம். ஒரு நல்ல புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்த ஐஸ்வர்யனுக்கும், சிறப்பாக வெளியிட்டுள்ள விகடன் பிரசுரத்திற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Tuesday 6 November 2012

டாக்டர் பால்கர்ட்ஸ்


அமெரிக்க நாட்டுத் தத்துவப் பேராசிரியர், மனிதநேயத் தலைவர் டாக்டர் பால்கர்ட்ஸ் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் இரங்கலுரை
சென்னை,நவ.6-அமெரிக்க நாட்டுத் தத்துவப் பேராசிரியரும், மனிதநேய அமைப்பின் தலைவருமான டாக்டர் பால்கர்ட்ஸ் (Dr. Paul Kurtz) அவர்கள் 2012 அக்டோபர் மாதம் 20ஆம் நாள் காலமானார். பால்கர்ட்ஸ் அவர்களின் மறைவிற்கு இரங்கல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நவம்பர் 5ஆம் நாள் மாலை நடை பெற்றது.
பகுத்தறிவாளர் கழகம் ஏற்பாடு செய்த இரங்கல் கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி பால்கர்ட்ஸ் அவர்களின் படத்தினை திறந்துவைத்து இரங்கல் உரையாற்றினார். கூட்டத்தில் பொருளாதார நிபுணரும், சீரிய பகுத்தறிவாளருமான பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன் மற்றும் பகுத்தறி வாளர் கழகத்தின் மேனாள் தலைவர் முனைவர் மா.நன்னன் ஆகியோர் உரையாற்றினர்.
பால்கர்ட்ஸ் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் உரை: டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்களின் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆற்றிய உரை வருமாறு:
ஒருவர் காலமாகும் பொழுது ஏற்படுகின்ற வருத்தத் தின் அளவு அவர் சமுதாயத்திற்கு எந்த அளவிற்குப் பயன்பட்டார் என்பதைப் பொறுத்ததாக அமையும் என்று தந்தை பெரியார் கூறுவார். அமெரிக்க நாட்டுத் தத்துவப் பேராசிரியர் டாக்டர் பால் கர்ட்ஸ் அவர்களின் மறைவு நமக்கெல்லாம், மனிதநேயம் தழைத்திடப்  பாடுபடும் அமைப்புகளுக்கெல்லாம் மாபெரும் இழப்பை, வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. பல அறிஞர்கள் சிந்தனையாளர் களாக விளங்கியுள்ளார்கள். அறிவியல் அறிஞர்கள் பலர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். டாக்டர் பால்கர்ட்ஸ் துணிச்சல் மிக்க சிந்தனையாளர். தான் சிந்தித்ததை துணிச்சலாக வெளியிட்டவர். மனிதர்களுக்கு மனித நேயம் முக்கியம்; வாழ்க்கையினை அமைதியானதாக ஆக்கி வாழ்ந்து மகிழ வேண்டும்; வாழும்பொழுது மனநிறைவில் திளைக்க வேண்டும் என வலியுறுத்தியவர். அமெரிக்க நாட்டில் நாத்திக மனப்பான்மையுடன் பலர் இருக்கிறார்கள். ஆனால் தங்களை நாத்திகர் என வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொள்பவர்கள் வெகு சிலரே. அந்த வகையில் பெரியார் போட்டுத் தந்த பகுத்தறிவுப் பாதையில் பெரும்பான்மையானவர்கள் பயணித்து தங்களை நாத்திகர் என வெளிப்படையாகக் காட்டுவதில் உலகத்திலே பெரும்பான்மையானவர்களைக் கொண்ட மாநிலமாக இருப்பது தமிழ்நாடுதான். நாத்திகர் உலகிற்கு தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது.
உலகில் மத அடிப்படையில்தான் போர்கள் பல நிகழ்ந்திருக்கின்றன. பல்லாயிரக்கணக்கில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மதம் அமைதியான வாழ்வினை அளிக்க வில்லை. பகுத்தறிவிற்கு மதம் புறம்பானது. பகுத்தறி வாளர்களுக்கு மதம் பிடிக்காது; மதமும் பிடிக்காது.
டாக்டர் பால் கர்ட்ஸ் மனிதநேயம் என்பதை மதவாதிகளின் பிடியில் இருந்து மீட்டு மதச்சார்பற்ற மனிதநேயம் (Secular Humanism) என அடையாளப் படுத்தி வலியுறுத்தி வந்தார். Living without Religion (மதம் நீங்கிய வாழ்வு) என ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி யுள்ளார். அழகான ஒரு புதிய ஆங்கிச் சொல்லை உருவாக்கினார். Eupraxophy என்பதே அந்த சொல். மதம் என்ற வேர்ச்சொல் ஆங்கில மொழியில் கிடையாது. Religion  என்பது டச்சு மொழிச் சொல்லாகும். டச்சு மொழியில் Religion என்பதன் பொருள் கடவுளுக்குச் சேவை செய்வது என்பதாகும். ஆங்கிலத்தில் Religion என்ற சொல் ஆரம்பத்தில் கிடையாது.
மனிதரை மேம்படுத்த மதம் தேவையில்லை. மதம் மனிதனை பின்னடையவே செய்திடும். Eupraxophy எனும் சொல்லில் Eu என்பது நல்லது என பொருள்படும். Praxis என்பது செயல் ஆகும். Sophia என்பது அறிவுடைமை (Wisdom) என பொருள்படும். எனவே eupra xophy என்பதுதான் முழுப்பொருள் நல்ல நடைமுறைக்கான அறிவுடைமை (Good practical wisdom) எனக் கொள்ளலாம்.
மனித நேயம் என்பது மதமல்ல என்பதை வலியுறுத்த eupraxophy எனும் ஆங்கிலச் சொல்லை புதிதாக உருவாக்கி மானிடத் திற்கு அளித்தவர் டாக்டர் பால்கர்ட்ஸ். மதம் என்பதே மற்றவர்களை புண்படுத்து வதாகும். சிந்திக்காதே! நம்பு! ஏற்றுக்கொள்! கேள்வி கேட்காதே! என தடைபோடுவது மதமாகும். மனித நேயத்தின் முழுப்பயன் மானிடத்திற்கு கிடைக்க வேண்டுமானால் மனிதநேயம் மதமாக இருத்தல் கூடாது. மதத்தின் பிடியிலிருந்து மீட்கப்படவேண்டும். என சிந்தித்து, தனது கருத்தினை நடைமுறைப் படுத்தியவர் பால் கர்ட்ஸ் அவர்கள் - தனது சிந்தனை களை பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களாக வடித்து அதைப் பதிப்பிப்பதற்காக புரோமிதியஸ் புக்ஸ் (Prometheus Books) எனும் வெளியீட்டகத்தினை நிறு வினார். தனது புத்தகங்களோடு, பிற அறிஞர்களின் புத்தகங்களையும் பதிப்பித்து வெளியிட்டார். புரோமிய தியஸ் என்பது கிரேக்க புராணப் பெயராகும். பெரியார் இயக்கத்துடன் தொடர்பு
மனிதநேயத்தினை வலியுறுத்திய புராண காலத்தில் வாழ்ந்தவர் பெயராகும். டாக்டர் பால்கர்ட்ஸ் 20 ஆண்டுகளுக்கு முன்பு பம்பாயில் பெரியார் இயக்கத்திற்கு அறிமுகம் ஆனவர். அது முதல் பெரியாரின் பணிகளைப் படித்து அறிந்து, கேட்டு அறிந்து பெரியாரது இயக்கத் தின்பால் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். அமெரிக்க நாட்டிலுள்ள பெரியார் பன்னாட்டு மய்யத்தினர் அவருடன் தொடர்பில் இருந்தனர். அமெரிக்கா செல்லும்பொழுது அவரது இடத்திற்குச் சென்று அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அதுபோல 2007ஆம் ஆண்டில் நமது அழைப்பினை ஏற்று சென்னை-பெரியார் திடலுக்கு வருகை தந்தார். கருஞ்சட்டைத் தோழர்க ளுடன் கலந்துரையாடினார். தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார்.
டாக்டர் பால்கர்ட்ஸ் ஆற்றிய மனித நேய மேம்பாட்டுப் பணியினை பெருமைபடுத்தும் விதமாக மதிப்புறு முனைவர் (D. Litt)
பட்டத்தினை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வழங்கியது.
பெரியார் இயக்கம் நடத்திடும் கல்வி நிலையங்களை பார்த்துவிட்டு ஒரு பகுத்தறிவு இயக்கம் கல்வி மேம் பாட்டுக்கு இந்த அளவிற்கு செயல்பட முடியுமா? என வியந்து பாராட்டினார் டாக்டர் பால்கர்ட்ஸ்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை பிறநாடுகளில், தமது எழுத்துகளின் மூலம் பரப்பிடுவதில் ஒரு குறிப்பிட்ட பங்காற்றியவர் டாக்டர் பால்கர்ட்ஸ். பெரியார் கொள்கை பரப்பு தூதுவர் என்பது மிகவும் பொருத்தம். தந்தை பெரியார் உலகமயமாகும் சூழலில் டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்கள் காலமானது நமக்கெல்லாம் பேரிழப்பாகும். டாக்டர் பால் கர்ட்ஸ் அவர்களது சிந்தனைகள், போற்று தலுக்குரியன. அவருடைய மனிதநேய மேம்பாட்டிற்கான பங்களிப்பு நினைவு கூர்ந்து பாராட்டப்பட வேண்டியது. வாழ்க பால்கர்ட்ஸ் சிந்தனைகள். வாழ்க அவரது புகழ்!
-இவ்வாறு தமிழர் தலைவர் பால்கர்ட்ஸ் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உரையாற்றினார்.
முனைவர் மு.நாகநாதன் உரை
டாக்டர் பால் கர்ட்ஸ் அவர்களுக்கான இரங்கல் கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய பொருளாதாரப் பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன் குறிப்பிட்டதாவது:
பொதுவுடைமை தத்துவத் தந்தை காரல் மார்க்ஸின் துணைவியார் ஜென்னி மார்க்ஸ் தனது கணவருக்கு துணையாக இருந்த ஒரு நாத்திகப் போராளி. தந்தை பெரியாருக்கு வாழ்க்கைத் துணைவியாக, இயக்கத் துணைவியாக, அவரது மறைவிற்குப்பின் இயக்கத்தினை வழி நடத்திய பெருமைமிக்க அன்னை மணியம்மையார் பெயரில் அமைந்துள்ள இந்த மன்றத்தில் டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடை பெறுவது சிறப்புக்குரியது.
அமெரிக்க நாட்டில் நாத்திக கருத்துகள் பரவலாக இருக்கும் நிலையினை எதிர்த்து கடவுள் பற்றினை வளர்த்தெடுக்கும் விதமாக லட்சக்கணக்கில் டாலர் களை செலவழிக்கும் குழுமங்கள் உருவாகி உள்ளன. இத்தகைய சூழல் நிலவும் அமெரிக்க நாட்டில் டாக்டர் பால்கர்ட்ஸ் ஆற்றிய நாத்திகப் பணி, அறிவியல் மனப்பான்மை வளர்ப்புப் பணி, மனிதநேய பணி அளப்பரியது; மகத்தானது.
1973ஆம் ஆண்டு அமெரிக்க மனிதநேய சங்கம் (American Humanist Association) வடித்துக் கொடுத்த மனிதநேயர் அறிக்கை (Humanist Manifesto) தயாரிப்பில் டாக்டர் பால் கர்ட்ஸ் முக்கிய பங்காற்றினார். மூடநம்பிக்கையை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். உலகியலை மதச்சார்பற்ற வகையில் பார்க்கும் உளப்பாங்கு உருவாகிட அயராது சிந்தித்து உழைத்தவர் அந்தப் பெருமகனார். தனது எழுத்துகளில் அத்தகைய சிந்தனை களை வலியுறுத்தி கூறியவர். அண்மையில் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி மார்கண் டேய கட்ஜு ஊடகங்களைத் தாக்கும் போதைகளாக மத மூடத்தனம், சினிமா, மட்டைப் பந்து ஆகியவற்றைக் குறிப் பிட்டார். தந்தை பெரியாரின் இயக்கமும் அதன் இன்றைய தலைவரான வீரமணியார் அவர்களும் அந்தப் போதை எதிர்ப்புப்பிரச்சாரம்தான் செய்து வருகின்றார்.  மனித நேயம் தழைப்பது பகுத்தறிவா ளர்கள் கையில் தான் உள்ளது. மதம் நீங்கிய மனிதநேயத்திற் காகப் பாடுபட்டவர் பால் கர்ட்ஸ். பெரியார் இயக்கத்தின் உற வோடு சமு தாயப் பணி ஆற்றிய வர். பால் கர்ட்ஸ் அவர்களின் நினைவுகள் மனிதநேயம் மனித ரிடம் பெருகிட உறுதியாகப் பயன்படும், பயன்படுத்திட வேண்டும்.
முனைவர் மா.நன்னன்
பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் தலைவர், தமிழாய்ந்த பகுத்தறிவு அறிஞர் முனைவர் மா.நன்னன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
பகுத்தறிவாளர்களுக்கு, மனிதநேயர்களுக்கு நாடு, மொழி, எல்லைகள் கிடையாது. அவர்களது சிந்த னைகள், செயல்பாடுகள் உலகளாவியவை. ஒருநாட்டு எல்லைக்குள் அவர் களைச் சுருக்கிவிடக் கூடாது. பால் கர்ட்ஸ் அத்தகைய ஒருமனிதநேயர். இழப்பு என்பது வருத்தத்தை அளித்தாலும், மானிட இயல்பு அது. வருத்தத்தில் மூழ்கிவிடாமல், இறந்தவர் ஆற்றிய சமுதாயப் பணியினை நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டும்.
அப்பொழுதுதான் மனிதநேயம் மேலும் வலுப்படும். ஒருவரின் மறைவினை காலமாகிவிட்டார் எனக் கூறுதல் மிகவும் பொருத்தமாகும். காலமாகிவிட்ட வருக்கு வைகுண்ட பதவிகள், சிவலோக பதவிகள் மத மூடநம்பிக்கையினால் அளிக்கப்படுகின்றன.
மோசமான வருக்கு நரகபதவி அளிக்க யாரும் முன் வருவதில்லை. மதம், மத உணர்வுகள் என்பதே ஒருவரது விருப்பத்தின் வெளிப்பாடு. பொதுவாழ்வுப் பணி புரிந்தோருக்கு பகுத்தறிவாளர் இரங்கல் கூட்டம் நடத்தும் பொழுது வீரவணக்கம் எனச்சொல்வதை விடுத்து காலமான வரை நினைவு கூருகிறோம் என மரியாதை செலுத்துவது பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் அண்மையில் காலமான மனிதநேயர் முனைவர் பால்கர்ட்ஸ் அவர்களை நினைவுகூர்வோம்.
இரங்கல் கூட்டத்தின் துவக்கத்தில் டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்களுக்கு பெரியார் இயக்கத்துடன் உள்ள தொடர்புகளைக் குறிப்பிட்டு, பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் அறிமுகவுரை யாற்றினார். டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பின் சுருக்கத்தினை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சமா.பிரின்ஸ் என்னாரெசு பெரியார் வாசித்து நிகழ்ச்சியினை தொகுத்தளித்தார்.
டாக்டர் பால் கர்ட்ஸ் அவர்களின் இரங்கல் கூட்டத்திற்கு லண்டன் மாநகரிலிருந்து பன்னாட்டு மனிதநேய நன்னெறி அமைப்பின் (International Humanist and Ethical Union) மற்றும் ஒடிசா பகுத்தறி வாளர் சங்கத்தினர் செய்தி அனுப்பி இருந்தனர்.
இரங்கல் கூட்டத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், புதுமை இலக்கிய அணிச் செயலாளர் வீரமர்த்தினி, திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, சென்னை மாநகர மேனாள் மேயர் சா.கணேசன் திராவிடர் கழக, பகுத்தறி வாளர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் மனிதநேய உணர்வாளர்கள் பலர் வருகை தந்தனர்.