Tuesday 31 December 2013

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக கொள்கை உறவுகள், உறவினர்கள், நண்பர்கள் , உடன் பணியாற்றும் தோழர்கள், தோழியர்கள் , அதிகாரிகள்,.வாசிப்போர் களம், எழுத்து இணையதளம், வலைத்தள, முக நூல் , டுவிட்டர் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். சாதிகள் ஒழிந்த, மதங்கள் மறைந்த, கடவுள்கள் காணாமல் போன ஆனால் மனித நேயம் மிக்க, உலகம் நோக்கி நடக்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும். வாழ்த்துக்கள், 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNM91_cCFkj2-YA3XhTYvg6pvB3-o4htyETw0el5ZrBIIczHyVXzaW0mveJtiem-XwqCPcryesx2SGJOLf_My2GvCgCTKoVpUVK5GnbUii5DhP6SIp4WMrgyfeDZMQMCIMIxTybMwD57_z/s1600/download.jpg


 வா. நேரு

பாராட்டும், விருதுப்பட்டயமும் நண்பர்களின் பார்வைக்காக.

இணையதளப் படைப்பாளிகள் பேரவை , புதுச்சேரி சார்பாகவும் "எழுத்து" இணையதளத்தின் சார்பாகவும் எனக்கு "பகுத்தறிவு படைப்பாக்க செம்மல்-2013 " என்ற விருதினை அளித்திருக்கின்றார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பொதுவாக விருதுகளில் எனக்கு நம்பிக்கையில்லை. வாங்கப்படும் சில விருதுகளை நான் அறிவேன் என்றாலும் இந்த விருதுப்பட்டயத்தில் கையெழுத்திட்டிருக்கும் நால்வரையும் நான் நேரில் சந்தித்ததில்லை. அமைப்பாளர் திரு. அமிர்தகணேசன் என்னும் அகன் அவர்கள் மிகப்பெரிய ஊக்கமூட்டக்கூடியவர். புதிய எழுத்தாளர்களை எழுத்து இணையதளத்தில் அற்புதமாகப் பாராட்டக்கூடியவர். , வழி நடத்தக்கூடியவர். முனைவர் க.பஞ்சாங்கம் அவர்கள் 'யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும் ' என்னும் தொகுப்பில் எனது 'மத்த்தின் அளவு மட்டுமே ; என்னும் கவிதையை தனது முன்னுரையில் பாராட்டியிருந்தார். யார் என்று தெரியாதபோதும், எவரென்று நேரில் அறியாதபோதும் படைப்புக்களின் தரத்தை மட்டுமே வைத்து அளவிடும் தோழர்களின் , பெரியோர்களின் பாராட்டுக்களை, விருதினை ஏற்றுக்கொள்கிறேன். இன்னும் நிறைய பகுத்தறிவு படைப்புக்களை ஆக்கு என இந்த விருதின் மூலம் கட்டளையிட்டு இருக்கின்றார்கள் . தொடர்வேன் என்னும் உறுதிமொழியோடு , அவர்களின் பாராட்டும், விருதுப்பட்டயமும் நண்பர்களின் பார்வைக்காக. 




விருதுகள்-2013 பகுத்தறிவு படைப்பாக்க செம்மல்-2013

தோழர்களே...

வணக்கம் ..

ஒரு படைப்பாளி ,
அவன் சார்ந்த சமூகத்தின் கண்ணாடி.
தூய்மை செய்யும் துப்புரவாளி...
சினங்கொண்டு எழும் சீர்கேடழிக்கும் போராளி...
எல்லாவற்றிக்கும் மேலாக சரி என்பதை சார்ந்து நின்று சான்றுகளோடு தவறுகளை சுட்டிக்காட்டி அழித்தொழிக்கும் ஆயுதம் கொண்ட அவதாரம்...

தமிழகத்தைப் பொறுத்த மட்டில் சமூக நீதிக்கு அரும்பணி ஆற்றிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இல்லையெனில் தமிழனின் நிலை இன்றுள்ள நிலையை விட மோசமாகி இருந்திருக்கும்...பெண்களுக்கு சொத்துரிமை எனும் ஆயுட்கால அருமருந்தை போராடி பெற்று அளித்து சென்றவர் அவர் எனவே அவரும் ஒரு படைப்பாளியே...!!!

தேர்தல் அரசியலை விரும்பாதவர் பெரியார்...அரசியலில் பங்கு ஏற்க விரும்பாதவர்.: மறுத்தவர் என்றாலும் அவரில்லாமல் தமிழகத்தில் ஓர் அரசியல் இருந்திருக்க இயலவில்லை...தமிழர் கலாச்சார விழுமியங்களில் மூடத்தன மடமைகளை வெளிக்கொணர்ந்து பகுத்தறிவு பாடம் புகட்டியவர்...அவர் கோட்பாடுகள் மூலம் இறைமையை மையப்படுத்திய மூடத்தனங்களை அழிக்க பல நிலைகளிலும் பாடுபட்டார்.

முக்கியமாக தமிழ் இலக்கிய மரபின் மூலமாகவும்
கற்பனை செய்திகள் வழியாகவும் பழக்கவழக்கங்கள் எனும் போர்வையிலும் தமிழர் சமுதாயம் மூட நம்பிக்கைகளில் மூழ்கி அவதியுறும் நிலை மாறிட படைப்பாளிகள் எழுத்தைப் பயன்படுத்தி குமுகாய
தொண்டாற்றுவதும் ஒரு படைப்பாளியின் பணியாகும்.

இந்நிலையில் நமது தளத்தில் பகுத்தறிவு ஆக்க வரிகளை இந்த தமிழ் சமூகத்திற்கு தனது படைப்பு மற்றும் கருத்துக்களால் அளித்து வரும் இவர் 2014ஆன் ஆண்டின் முதல் விருது என "பகுத்தறிவு படைப்பாக்க செம்மல்-2013 " எனும் விருது பெறுகிறார்.

யார் அவர் ?
*******************************************************************
$$$$$ "பகுத்தறிவு படைப்பாக்க செம்மல்-2013 " $$$$


எனும் விருது பெறும்

@@@@@ தோழர் .முனைவர் வா. நேரு @@@@@



--------------------------------------------------------------------------------------------
திரு அகன் அவர்கள் - எழுத்து இணையதளத்தில் எழுதியது.


http://eluthu.com/kavithai/165294.html

Sunday 29 December 2013

அண்மையில் படித்த புத்தகம் : ஆயிஷா

அண்மையில் படித்த புத்தகம் : ஆயிஷா -ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை
ஆசிரியர்                                         : இரா. நடராசன்
முதல் பதிப்பு                                : ஏப்ரல் 2005           16-ஆம் பதிப்பு : 2013
வெளியீடு                                      : Books for Children
விற்பனை உரிமை                      : பாரதி புத்தகாலயம், சென்னை -18 .
விலை                                             : ரூ 15 மொத்த பக்கங்கள் : 24

                                                  மிகச் சுருக்கமாக அமைந்த ஆபிரஹாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை போல , வீரியமிக்க குறு நாவலாக இந்தச்சிறிய  நூல் அமைந்துள்ளது.கனவு ஆசிரியர் என்னும் புத்தகத்தில் தனக்கு அறிவியல் மனப்பான்மை வரக் காரணமாக இருந்தவர் பெரியசாமி வாத்தியார் என்ப்தனை ' எங்கள் ஆசிரியரிடம் ஒரு பயாஸ்கோப் இருந்தது ' என்னும் கட்டுரையாக எழுதிய.இரா. நடராசன்  வாசிக்கும் எந்த ஆசிரியருக்கும், ஏன் எந்த மனிதருக்கும்  அறிவியல் மன்ப்பான்மை வரக்கூடிய அளவிற்கு வலிமையாக எழுதியுள்ள குறு நாவலாக 'ஆயிஷா ' அமைந்துள்ளது.  குறும்படம்,நூல் மதிப்புரை என இணையத்தில் இந்த நூலைப் பற்றிய செய்திகள் பல உள்ளன என்றாலும் மீண்டும் மீண்டும் சொல்லப்படவேண்டிய புத்தகம் இந்தப் புத்தகம்  என உணர்கின்றேன். 

                         பள்ளிக்கூடங்களும் , ஆசிரியர்களும் எப்படி இருக்கின்றார்கள் எனும் உண்மையை உடைத்துப்போடும் கதை, 1995-ல் வந்த புத்தகம் என்றாலும், இன்றும் நாளையும் பொருந்தும் கதை. கேள்வி கேட்பதை ஊக்கப்படுத்துவதுதான் கல்வி, ஆனால் கேள்வி கேட்கும்   மாணவி ஆயிஷா எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறாள், அவமானப்படுத்தப்படுகிறாள் ஆசிரியர்களால் என்பதுதான் கதை. இன்றைய சூழலில் எதையும் கேட்காதே, நம்பு , நம்பு என்று சொல்லும் பள்ளிக்கூடங்கள்,எதையும் வாசிக்காத, தெரிந்து கொள்ள விரும்பாத ஆசிரியர்களிடம் சிக்கிக்கொள்ளும்  மாணவ், மாணவிகள், அதுவும் கேள்வி கேட்கும் மனப்பான்மை இருந்தால் எப்படியெல்லாம் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதை நாம் இக்கதையின் மூலம் ஊகிக்கலாம்.  ஒரு ஆசிரியை " ஆயிஷாவின் உறவில்தான் நான் உணர ஆரம்பித்தேன் எவ்வளவு தூரம் விஞ்ஞானமற்ற முறையில் நாம் நம் குழ்ந்தைகளுக்கு விஞ்ஞானம் போதிக்கிறோம் என்று.நான் எங்கே குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தை உணர்ந்து கேள்வி கேட்க அவகாசம் தருகிறோம்? அவர்கள் கேட்கத் தொடங்கும் முன்னரே நாமாக முன் தயாரிக்கப்பட்ட கேள்விகளால் அவர்களை மூழ்கடித்து விடுகிறோம். அறிவும் வளருவதில்லை. பள்ளியில் ஆசிரியர்கள் அதிகம் சொல்வது எதை ? " கையைக் கட்டு ... வாயைப் பொத்து ...:ப்க்கம் 17 "  உணர்வதாக , ஆயிஷாவால்  தனது பணியை, படிப்பை புதிப்பதாக வரும்  பகுதி  அருமை. வகுப்பறைகள் மாறினால் , நாடே மாறும். இன்று வகுப்பறைகள் எல்லாம்  பெரும்பாலும் அஞ்ஞானத்தை பரப்பும் இருட்டறைகளாக உள்ள நிலையில் வெளிச்சத்தைக் கொடுக்கும் மெழுகுவர்த்தியாய் இந்தப் புத்தகம் , ஒரு நம்பிக்கை அளிக்கிறது.
ஆனந்த விகடன் பேட்டியில் இந்த நூலின் ஆசிரியர் அளித்த பதில்

''ஆயிஷா உருவான கதையைச் சொல்கிறீர்களா?''

''என்னிடம் பயின்ற முஸ்லிம் மாணவன் ஒருவன்தான் 'ஆயிஷா’வுக்கான உந்துதலாக இருந்தான். மாணவனைக் கதையில் மாணவி என்று மட்டும் மாற்றிக்கொண்டேன். வகுப்பறை என்பது குழந்தைகளுக்கு ஒரு வெறுக்கத்தக்க இடமாக இருப்பதைப் பார்த்து இருக்கிறேன். ஒரு கடையில் ஒரு பொருள் வாங்கும் நுகர்வோருக்கு அந்தப் பொருளில் திருப்தி இல்லை எனில் நீதிமன்றத்துக்குப் போகலாம். ஆனால், நம் சட்டமும் சமூகமும் கல்வி பயிலும் மாணவர்களை நுகர்வோராகப் பார்ப்பது இல்லை. அவர்களுக்கு உகந்த கல்வி இல்லை எனில், அவர்கள் ஆட்சேபிக்கும் உரிமைகூட அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. ஆசிரியர் நினைப்பதுபோல் எல்லாம் மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டும் இங்கே! கேள்வி கேட்கக் கூடாது. குழந்தைகள் ஆசிரியர்களிடம் வாதாடக் கூடாது. இந்தக் கொடுமைகள் எல்லாம் நடந்துகொண்டு இருக்கும் இதே சமூகத்தில்தான் திண்டிவனம் அருகே ஒரு கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே பரிசோதனைச் சாலையாக மாற்றிக்கொண்டு மரணத்தைத் தழுவினான். இதை வைத்து 'ஆயிஷா’வை எழுதினேன். 1985-ம் ஆண்டே 'ஆயிஷா’ எழுதப்பட்டுவிட்டது என்றால் நம்புவீர்களா? அனுப்பிய இடங்களில் எல்லாம் கதை திரும்பி வந்தது. 'ஆயிஷா’ சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது நம் சமூகத்தில் இல்லை. குழந்தைகளுக்கு நம் கல்விமுறையில் அளிக்கப்படும் தண்டனைகளில் ஒரு தவறும் இல்லை என்றேதான் நினைத்துஇருந்தது சமூகம். 10 ஆண்டுகள் விடாமல் முயன்றேன். பின்னர், 1995-ல் 'கணையாழி’ குறுநாவல் போட்டியில் இரா.முருகன், சுஜாதா இருவரும் நடுவராக இருந்து 'ஆயிஷா’வைத் தேர்ந்தெடுத்தார்கள்.'

இன்று இந்தப் புத்தகம் 1 இலட்சம் பிரதிகள் விற்றுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார்கள். இன்னும் அதிகம் விற்கக்கூடும். நம்மைப் போன்றவர்கள் இந்த நூலின் பிரதியை தெரிந்த மாணவ, மாணவிகளிடம் ,ஆசிரியர்களிடம் கொடுக்க வேண்டும். 'ஆயிஷா ' புத்தகம் படித்துள்ளீர்களா எனத் தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும். வெறும் 15 ரூபாயில் கிடைக்கும் மாற்றுச்சிந்தனை, ஆக்கச்சிந்தனை  புத்தகம் இந்தப் புத்தகம. படிக்காதவர்கள் தய்வுசெய்து வாங்கிப்படியுங்கள். பரப்புங்கள்.

Saturday 21 December 2013

அண்மையில் படித்த புத்தகம் : அலெக்ஸாண்டர் கிராஹம்பெல்

அண்மையில் படித்த புத்தகம் : அலெக்ஸாண்டர் கிராஹம்பெல்
ஆசிரியர்                   : கெளரி ராமஸ்வாமி
வெளியீடு                  : ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை-4
இரண்டாம் பதிப்பு             : 2008,  விலை ரூ 23.00 மொத்த பக்கங்கள் 104

                                 தொலைபேசி, செல்பேசி, உள்ளூர் இணைப்பு, வெளியூர் இணைப்பு, வெளி நாட்டு இணைப்பு என்னும் சொற்கள் காதுகளில் விழுந்து கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் தொலைபேசி சார்ந்து கோடிக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்புப்பெற்று பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் 1871- ல் தான் , அ.கி.பெல் தன்னுடைய உதவியாளர் வாட்ஸனுடம் முதன் முதலில் தொலைபேசி மூலம் பேசியிருக்கின்றார். 134 ஆண்டுகளில் உலகத்தை , உலக நடப்பை தலைகீழாக மாற்றிய தொலைபேசியைக் கண்டுபிடித்த அ.கி.பெல்லினைப் பற்றிய சுவையான தகவல்களைத் தரும் புத்தகம் இந்தப் புத்தகம்.

                                    "முன்னோர்கள், இளமைப்பருவம், குடும்பத்தில் சோகம், பிராண்ட போர்ட், பாஸ்டன், 'மிஸ்டர் வாட்ஸன்-இங்கு வாருங்கள்- நான் உங்களைப் பார்க்க விரும்புகிறேன்', நூற்றாண்டுக் கண்காட்சி, தொலைபேசிப் பரிசோதனைகள், சாதனைக்குப் பிறகு, பெல்லின் குடும்பம், பெல்லின் கண்டுபிடிப்புகள், அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் - ஒரு கணிப்பு " என்னும் 12 தலைப்புகளின் அ.கி. பெல்லின் வாழ்க்கையும், அவரது கண்டுபிடிப்பிற்காக அவர் பட்ட பாடுகளும், அறிவியல் அறிஞரான அவர் விற்பனைத் திறன் இல்லாமையால் பொருளாதார ரீதியாக நலிந்ததையும் ஆனால் மனித நேயமிக்க மனிதராக வாழ்ந்ததையும் இப்புத்தகம் நேர்த்தியாகக் கூறுகின்றது.

                             நாடகமும், இலக்கியமும் அ.கி.பெல்லை, அவரது தந்தை மெல்வில் பெல்லை, அவரது தாத்தா அலெக்ஸாண்டர் பெல்லை (செருப்புத் தைக்கும் தொழிலாளி ) எவ்வளவு தூரம் ஈர்த்தது என்பதும், குறிப்பாக சேக்ஸ்பியரின் நாடக வரிகளை மனப்பாடம் செய்து ஏற்ற இறக்கங்களோடு பேசுவதை ஒரு கலையாக மூன்று தலைமுறையாக செய்து வந்தனர் என்பதும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. 'இருப்பதா? இறப்பதா ? " என்னும் சேக்ஸ்பியரின் வசனமே , தொலைபேசி முன்னோட்டச்சோதனைகளில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை என்பதும் புதிய தகவல் .

                                  பல சமயங்களில் ஒரே வேலையைச்செய்யும் திறமை பெற்றவராக அ.கி.பெல் இருந்ததும், மனித நேயத்தை தனது வாழ் நாள் முழுவதும் கடைப்பிடிப்பவராக,ஊமை, செவிடுகளாக இருந்த மாற்றுத்திறனாளிகளுக்காக தனது வாழ்வு முழுமையும் அர்ப்பணித்தவராக இருந்ததும் விவரிக்கப்படுகின்றது. தொலைபேசி மட்டுமல்ல, 16 கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர் என்பதும், தனது 29-ம்  வய்திலேயே தொலைபேசியை அவர் கண்டுபிடித்து விட்டாலும், பகட்டாக- சோம்பேறியாக அந்தப் பணத்தை செலவழிப்பவராக இல்லாமல், தனது வாழ் நாள் முழுவதையும்  அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக செல்வ்ழிப்பவராக  அவர் வாழ்ந்ததும் சொல்லப்பட்டுள்ளது. .

                      " நிறையப் பொதுமக்கள் டெலிபோனைப் பற்றிப் பலவிதங்களில் நினைத்து பயந்தார்கள். 'டெலிபோன் வைத்துக்கொள்வது வீட்டுக்குள் ஒரு ஒற்றனை வைத்துக்கொள்வது போல' என்றார்கள். ...'கம்பி மூலம் மின்சாரம் போகிறது, அப்படி நோய்களும் போய்ப் பரவி விட்டால்...' என்று மற்றொரு பயம். டெலிபோனால் காது செவிடாகுமா? மன நிலை பாதிக்குமோ ?" என்ற கவலைகள் வேறு. இவற்றைத் தவிர 'கடவுள் டெலிபோன் பற்றி என்ன நினைப்பார் ' என்ற விசாராம் வேறு! கிறிஸ்துவர்களின் வேதமான பைபிளில் 'டெலி போனை உயபோகிக்க்க்கூடாது ' என்று எழுதியிருப்பதாக ஆதாரத்துடன் காட்டவும் சிலர் இருந்தனர்! இந்தக் கருவி கண்டுபிடிப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இதை உபயோகிக்ககூடாது என்று பைபளில் எழுதி வைத்திருக்கிறதாம் " பக்கம்-56-57 . மேலை நாட்டில் கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் முட்டுக்கட்டை போடும் இயந்திரமாக கிறித்துவ மதம் இருந்திருக்கின்றது  என்பதும், பல அறிவியல் அறிஞர்கள் மதவாதிகளுக்கு அஞ்சியே வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதும் வரலாறு. அதற்கு அ.கி.பெல்லும் விதி விலக்கு அல்ல போலும். டெலிபோனில் முதலில் கரகரவென்று குரல் கேட்டதும் 'சாத்தான் க்ம்பி வழியாகப்பேசுகிறது' என்றும் மக்களிடம் பரப்பி விட்டார்கள் என்பதும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த 2014 ஆம் ஆண்டு பிறக்கப்போகும் இப்போதும்கூட , சிலர் சொர்க்கம் என்றும் நரகம் என்றும், சாத்தான் என்றும் பிதற்றிக்கொண்டிருக்கும் வேளையில் 1880-களில் மக்கள் நம்பியதில் என்ன வியப்பு இருக்கின்றது. அதையெல்லாம் மீறித்தான் அ.கி.பெல் வெற்றி பெற்றிருக்கின்றார்.

                   அ.கி.பெல் தன்னுடைய காதலி, பின்னால் மனைவியாகிய மேபெல் ஹப்பரிடம் எவ்வளவு அன்பு வைத்திருந்தார்(மனைவியிடம் அலெக் பெல் கொண்ட அன்பு, இலக்கியத்தில் பொறிக்கத்தக்கது ,இருவரும் மிக அந்நியோன்யமாக, ஒருவருடன் மற்றவர் ஆதரவோடு இணைத்துக்கொண்டு இறுதிவரை வாழ்ந்தார்கள் (பக்கம்102))  என்பதும், அதனைப் போல உலக்ப் புகழ்பெற்ற சாதனையாளர் ஹெலன் கெல்லரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது அ.கி.பெல்லின் உதவி(அலெக் பெல்லை சந்தித்ததுதான் தனக்குத் தன்னம்பிக்கையை  கொடுத்து 'இருட்டிலிருந்து வெளிச்சத்துக் கொண்டு போனது; தனிமையிலிருந்து நட்புக்குக் கூட்டிப்போனது ' என்று எழுதியிருக்கின்றார் (பக்கம் 102) )என்பதும் சுட்டப்பட்டுள்ளது. ' நேஷனல் ஜியாகிரபிக் ' பத்திரிக்கையை வாங்கி , பல புதுமைகளைப் புகுத்தி , தனது மருமகனான கில்பர்ட் கிராஸ்வீனர் என்பவரை ஆசிரியராக நியமித்து, அதன் வளர்ச்சியில் அ.கி.பெல்லின் பங்களிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

                                             செவிடர்களுக்கு காது கேட்க வைக்க முடியுமா? என்பதற்காகவே தனது தந்தை உருவாக்கிய பார்க்கும் பேச்சை, ஒலி கேட்கும் தன்மையை, காதின் அமைப்பை, அதில் ஒலி கேட்கும் தன்மையை சிறுவய்திலேயே ஆராய்ந்திருக்கின்றார். எம்பதி என்று சொல்வார்களே, அதனைப் போல காது கேளாதவர்களின் துன்பத்தை தனது துன்பமாக ,உணர்ந்ததே தொலைபேசி கண்டுபிடிப்பிற்கு அடிப்படை. " இவர் மனம் அவர்கள்பால்(காது கேளாதவர்கள் ) மிகவும் இரங்கியது. 'என்னுடைய உணர்வுகளும் இரக்கமும் ஒவ்வொரு நாளும் பொங்குகிறது. இந்தக் குழ்ந்தைகள் படும் துயரைப் பார்த்து என் இதயம் வலிக்கிறது ' என்று ..குறிப்பிட்டார். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நண்பருடன் பேசுகையில் 'செவிடர்களின் தனிமையை யாரால் கற்பனை செய்து பார்க்க முடியும் ? நாம் கிராமத்துக்குப் போய், வயல்களில் நடக்கும்பொழுது , தனிமையாக இருப்பதாக உணர்கிறோம். ஆனால் ஒரு புத்திசாலியான செவிட்டு மனிதன் , ஒரு சந்தோசமான கூட்டத்தின் மத்தியில் , மற்றவர்களுடன் பேசவோ, கேட்கவோ முடியாமல் இருக்கும்போது உணரும் தனிமைக்கு முன் எம்மாத்திரம்? " என்று வேதனையுடன் குறிப்பிட்டார்( பக்கம் 100),... உலகம் முழுவதும் இருக்கும் செவிடர் பள்ளிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுப்பதுடன் நின்று விடாமல் , தன் பெயரையும் ,செல்வாக்கையும் உபயோகித்து ,அவர்கள் துயரைக் களைய பல திட்டங்களையும் ,அமைப்புகளையும் ஏற்படுத்தினார். மனித குல உயர்வுக்காக இன்னும் என்ன புதிய கண்டுபிடிப்புகளைச்செய்யலாம் என்பதே அவர் வாழ்வின் குறிக்கோளாக இருந்தது.(பக்கம் 104).

                 ஒரு அறிவியல் அறிஞரின் சாதனைகளை, கண்டுபிடிப்புகளை விவரிப்பதோடு நின்று விடாமல், அவரின் மனித நேய மறுபக்கத்தை மிக இயல்பாக, படிப்பவர்க்கு ஆர்வம் ஏற்படும் வகையில் இந்தப் புத்தகத்தை இந்த் நூலின் ஆசிரியர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. இளைஞர்கள், மாணவர்கள் படிக்க வேண்டிய புத்த்கம் இந்தப்புத்தகம். 

Friday 20 December 2013

நிகழ்வும் நினைப்பும்(11) : ஓடிக்கொண்டிருக்கும் பெரியாரியல் இணைய நதியாய் ....

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பர் இணையம் இணைப்பு பி.எஸ்.என்.எல்-ல்லில் வேண்டும் என்றார். விவரங்கள் பல கேட்டார். இணைப்பையும் வாங்கினார். எத்தனையோ பேர் இணைய இணைப்பு வாங்கி , என்ன செய்வது , எப்படி அதனைத் தனக்கும் , சமூகத்திற்கும் பயன்படும் வகையில் பயன்படுத்துவது என்று இன்றும் கூடத் தெரியாது இருக்கும் நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு இணைப்பு வாங்கி , ஒரு வலைத் தளம் ஆரம்பித்தார். எனக்குத் தெரிந்த அந்த நண்பர், மிகப்பெரிய பணக்காரர் இல்லை, பெரிய வாய்ப்பு வசதிகள் இல்லை, ஆனால் ஆழமான புரிதல் பெரியாரியலில் உண்டு.தந்தை பெரியாரின் தொண்டர்களுக்கே உரித்தான கடுமையான உழைப்பு உண்டு.  தொடர்ந்து , தொய்வில்லாமல், எந்த விதப் பலனையும் எதிர்பார்க்காமல், தான் எடுத்துக்கொண்ட கொள்கைக்காக தொடர் உழைப்பினைக் கொடுக்கும் அந்த இனிய நண்பர் பழனி வ.மாரிமுத்து அவர்கள். தமிழ் ஓவியா என்னும் பெயர் தமிழ் மணம் மற்றும் தமிழ் திரட்டிகளில் மிகவும் புகழ்வாய்ந்த பெயர்.அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளித்தரும் வலைத்தளமாய், தந்தை பெரியாரை, அண்ணல் அம்பேத்கரை, புரட்சிக் கவிஞர் பாவேந்தரை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை, திராவிடர் இயக்க கொள்கையை இந்த வலைத்தளத்திற்குள் சென்றால் , தெவிட்ட தெவிட்ட  தெரிந்து படிக்கலாம் என்ற வகையில் அமைந்திட்ட வலைத்தளமாய் தோழர் தமிழ் ஓவியாவின் வலைத்தளம்.

                        

                                      பல ஆண்டுகள் தொடர்ந்து காலை 4 மணி முதல் காலை 6 மணிவரை இணையத்தில் தகவல்களை ஏற்றும்  தோழர். விடுதலையில் , உண்மையில் , பெரியார் பிஞ்சுவில் வரும் செய்திகளை, தனது வலைத்தளத்தில் தரும் தோழர். ஆரம்பித்த காலத்தில் , பரம்பரைப் பகைவர்கள், பொய்ப்பெயர்களில் வந்து திட்டிக் குவித்தபோதும், ஆபாசமாய் அர்ச்சித்த போதும், தனது பணியைத் தொடர்ந்து செய்தவர். பழகுவதற்கு மிகவும் இனியவர்.  சாதி மறுப்புத்திருமணம் செய்து கொண்டவர்.நண்பரின் இணையர் தமிழரசி, மேல் மெய்ஞ்ஞானபுரத்து திராவிடர் கழகக்  குடும்பத்தினைச்சேர்ந்தவர். ஒத்த மனதினராய், ஒருமித்த கருத்தினராய், தந்தை பெரியாரின் கருத்துக்க்ளை தரணி எங்கும் கொண்டு செல்லும் ஆற்றல் மிக்க இணையருக்கு ஆக்கபூர்வமாய் ஒத்துழைக்கும் அன்புத் தங்கை தமிழரசி அவர்கள். பெரியார் பன்னாட்டு மையத்தின் தலைவர் , மதிப்பிற்குரிய சிகாகோ டாக்டர் சோம்.இளங்கோவன் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் , மிகப்பெரிய பணி, தமிழ் ஓவியாவின் பணி, அவரை அறிவீர்களா எனக்கேட்டார். நன்றாக அறிவேன் என்று கூறியபோது, மிகப்பெரிய அளவிலே பாராட்டினார்கள். இன்றைக்கும் உலகத்தில் இருக்கும் பெரியார் தொண்டர்கள், தமிழர் தலைவர் ஆசிரியரின்  தலைமையைஏற்றுச்செல்பவர்கள் எல்லாம் பார்த்து வியக்கும் வண்ணம் , அன்பிற்குரிய நண்பர் பழனி வ.மாரிமுத்து அவர்களின் பணி அமைந்துள்ளது. இயக்க ரீதியாக என்னைச்சுற்றி இருக்கும் பல தோழர்களைப் பார்க்கிறேன், வியக்கின்றேன். என்ன எதிர்பார்ப்பு வாழ்வில் அவர்களுக்கு, தந்தை பெரியார் சொன்ன மனித நேயக்கொள்கை வளரவேண்டும் என்பதனைத் தவிர. , தன் வீட்டுச்சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு,தன் சொந்தக் காசை செலவழித்து பொதுத்தொண்டு ஆற்றும் பெரியாரின் தொண்டர்களைப் பார்த்து பல நேரம் வியந்திருக்கின்றேன்.  . பழனி மாவட்டத்தின் பகுத்தறிவாளர் கழக மாவட்டத்த்லைவராக பணியாற்றக்கூடிய அருமையான தோழர் அவர். அவரின் பணி இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். அவருடைய உழைப்பிற்கு தலை வணங்குகின்றேன். "19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி " என்று தன்னுடைய வலைத்தளத்தில் பதிந்திருக்கின்றார் தமிழ் ஓவியா . இதுவரை அவரது வலைத்தளத்திற்குள் செல்லாதவர்கள் சென்று பாருங்கள் . http://thamizhoviya.blogspot.in/. வியந்து போவீர்கள். ஓடிக்கொண்டிருக்கும் பெரியாரியல் இணைய நதியாய்- தமிழ் ஓவியாவின் வலைத்தளம்,பாராட்டுக்கள் , பாராட்டுக்கள். .

Wednesday 27 November 2013

நிகழ்வும் நினைப்பும்(10) : கால தாமதமும் தண்டனையும்

இன்று(26.11.2013)  காலை மதுரை தியாகராசர் கல்லூரி விலங்கியல் துறைப்பேராசிரியர் திருவள்ளுவன் மற்றும் மதுரைக் கல்லூரி கணிதப் பேராசிரியர்  தர்மலிஙகம் ஆகியோரைச் சந்தித்துப்பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது பேரா.திருவள்ளுவன் அவர்கள், தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் கதையைச்சொன்னார். டாக்டருக்குப் படித்தவர் கிராமத்தைச்சேர்ந்தவர். சில மைல் தூரம் நடந்து வந்து பேருந்தைப் பிடித்து , மருத்துவக்கல்லூரிக்கு வரும்போது , வகுப்பிற்கு அரை மணி நேரம் தாமதமாக வரும் நிலை. தினந்தோறும் இதனைப்போல் இந்த மருத்துவ மாணவர் தாமதாக வருவதைப் பார்த்த , ஆசிரியர் கண்டிக்கின்றார். நாளை முதல் இப்படி வரக்கூடாது என்று சொல்கின்றார். மருத்துவ மாணவர் விடுதியில் தங்கிப் படிக்கப்பணமில்லை. கிராமத்திலிருந்து வருவதற்கு , ஒரு பேருந்தை விட்டால் வேறு வழியில்லை, தினந்தோறும் மிகக் கடினமாக 3 மைல் 4 மைல் நடந்து,பின்பு  பேருந்தைப் பிடித்து  ஏறி வந்து வகுப்பிற்கு அரை மணி நேரம் தாமதமாக வருவதைத் தவிர வேறு வழியில்லை. கண்டிக்கும் ஆசிரியர், சில நாட்களில் வகுப்பிற்கு உள்ளே வராதே, வெளியில் நில் எனச்சொல்ல, வெளியில் தினந்தோறும் பல்  நாட்கள் நிற்கின்றார். வெளியில் நிற்கும் நேரத்தில் , அந்த அரை மணி நேரத்தில் ஜன்னல் வழியாகப் பாடஙளைக் கேட்டு,குறிப்பு எடுத்து நல்ல மதிப்பெண் பெறுகின்றார். சில நாட்களில், இவரது நேரத்திற்கு வர இயலாமை,ஏழ்மையப் புரிந்து கொண்ட பேராசிரியர்கள் , வகுப்பிற்குள் அனுமதிக்கின்றார்கள்.Winning the heart என்று சொல்வார்களே , அப்படி பேராசிரியர்களிடம் தனது பக்க நியாயத்திற்காக சண்டை போடாமல், பொறுமையாகத் தனது நிலையை உணர்த்திய மருத்துவ கல்லூரி மாணவர் தன்னுடைய பொறுமையான அணுகுமுறையால் வெற்றி பெற்றார்.  பின்பு படித்து இன்று புகழ் பெற்ற மருத்துவராக இருக்கின்றார் எனச்சொன்ன போது என் கண்கள் பனித்தன.
                                   
                                     வெளியில் வந்தவுடன் என் அருகிலிருந்த மகன் சொ. நே. அன்புமணி ஏன் இதைக் கேட்டு, உணர்ச்சி வசப்ப்பட்டீர்கள் என்றான். எனக்கும்  கூட இப்படி அனுபவம் உண்டு என்றேன் அவனிடம். 1980-களில் தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் பள்ளியில் +2 படித்தபொழுது, சாப்டூரில் இருந்து காலையில் 7 மணிக்குப் பேருந்து. அதனை விட்டால் 8.50 க்குத் தான் பேருந்து. ஒன்று காலையில் வெகு சீக்கிரம் கிளம்பி 9 மணிக்குப் பள்ளிக்கூடத்திற்கு 7.30க்கு போய் விடுவேன். அப்படி இல்லையென்றால் 8.50 பேருந்தில் போனால் 9.30 க்குத்தான் பள்ளிக்குப்போக முடியும். அப்பொழுது +1 வேதியியல் ஆசிரியர் சுதந்திர மணி என்பவர். என்ன , உனக்கு மட்டும் 9.30 க்குப் பள்ளிக்கூடமா, மற்றவனுக்கெல்லாம் 9-ம்ணிக்கா என்பார். ஆனால் வகுப்பிற்கு உள்ளே சென்று அமர அனுமதிப்பார். எனது அம்மா ஆசிரியரென்றாலும் காலையில் 3 மணிக்கு எழுந்து, மாடுகளுக்கு தண்ணீர் வைத்து, இரையப் போட்டு, பால் பண்ணைக்காரர்களுக்கு பாலைக் கறந்து ஊத்தி , 5 பிள்ளைகளையும் பார்த்து பள்ளிக்கு அனுப்பி என்று இயந்திரம் போல வேலை பார்த்துக்கொண்டிருப்பார். எனக்கு மட்டும் காலை 7 மணிக்குள் சோறாக்கி கொடுத்து விடுவது சாத்தியமில்லை, 7 மணிக்குப் போகும் சில நேரஙகளில் பழைய சோறோடு போவேன். சில  நாள் 8.50 வண்டிக்குப் போனேன். சுதந்திர மணி சார் நம்மை, 9.30 மணிக்கு அனுமதிக்கிறார் என்று மகிழ்ச்சியோடு போனேன். ஒரு நாள் தலைமை ஆசிரியர் பள்ளியைச்சுற்றி வரும்போது , என்னக்கூப்பிட்டு, என்ன் லேட்டாக வருகிறாய் என்றார். அப்படியே அழைத்துக்கொண்டு, வேதியியல் ஆசிரியரிடம் வர, சுதந்திர மணி சார் என்னைக் காப்பாற்றுவார் என நினைக்க, தலைமை ஆசிரியரிடம் போட்டுக் கொடுத்து விட்டார். " அய்யா, இவனுக்கு மட்டும் பள்ளிக்கூடம் 9 மணிக்குப் பதிலாக, 9.30க்குத்தான், தினந்தோறும் இப்படித்தான் வருகின்றான் " என்று சொல்ல, திட்டும் அடியும் விழுந்தது. நான் வேண்டுமென்றே செய்யவில்லை, தாமதமாக வந்தது , எனது சூழல் , வசதியின்மை அப்படி இருந்தது. புரியாமல் நம்மைத் திட்டுகிறார்களே என்று பல நாள் வலித்தது. பின்பு கால ஓட்டத்தில் மறைந்து போன நினைவுகளை பேரா.திருவள்ளுவன் சொன்ன நிகழ்வு ஞாபக்ப் படுத்தியதால் கண் கலங்கினேன் என்றேன் என் மகனிடம். " உங்களோடு துயரமப்பா, ஆ,ஊன்னு உடனே பிளாஸ் பேக் போயி விடுவீங்க  " என்றான் என் மகன் என்னிடம் .  " என்ன செய்வது, அன்பு ,இன்றைக்கு உங்களுக்கு கிடைக்கும் வசதியும் , வாய்ப்பும் எங்களுக்கு கிடைக்கவில்லை " என்றேன். " பேருந்தில் அதிகக்கூட்டம் இருக்கும், பேருந்திற்குள் உள்ளே நிற்கக்கூட இடமில்லாமல், பேருந்தின் மேற்கூரையில் (டாப்பில்)ஏறிப் பல நாட்கள் போயிருக்கின்றோம். கரண்ட் வயர் வரும்போது மட்டும் ,குனிஞ்சிக்க, குனிஞ்சிக்க , கரண்ட் வயர் வருது " என்று கத்து வோம். அப்படித்தான் நாங்கள் படித்தோம என்றேன்.

Friday 8 November 2013

நிகழ்வும் நினைப்பும் (9) : தொழு நோய்த் தீர்வும் எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரிசெட்டி அவர்களும்



                                                             நான் அண்மையில் படித்த புத்தகமான 'முள்' என்னும் புத்தகத்தை எனக்கு தலைமை ஆசிரியராக இருந்தவரும், எனது வாழ்வின் வழிகாட்டிகளில் ஒருவருமாகிய திரு வி.வீரிசெட்டி சார் அவர்களிடம் கொடுத்தேன். அவருக்கு இப்போது வய்து 75-ந்திற்கு மேல். அவரிடம் படித்த மாணவன் நான். (பத்தாம் வகுப்பில் இன்னொரு பையனோடு சண்டை போட்டதற்காக அவரிடம் நன்றாகவே அடி வாங்கியிருக்கின்றேன்).நான் +2 வேறு ஊரில் படித்து, கல்லூரி முடித்து, வேலைக்கு வந்து, திண்டுக்கல் , பெரியகுளம், உசிலம்பட்டி, திருமங்கலம் எனப்  பல ஊர்களில் வேலை பார்த்து, மதுரையில் வந்து  வேலை பார்த்த நேரத்தில்  அவரைச் சந்திக்க வேண்டும் என்று சந்தித்தேன். அன்றிலிருந்து ஏறத்தாழ 15 ,20 ஆண்டுகளாக, பல விசயங்களில் எனக்கு அறிவுரைகள் சொல்லக்கூடியவராக இருக்கக்கூடிய எனது  ஆசான் அவர்.இப்போதும் ஒரு சைக்கிளில்தான் வருவார், போவார். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக(C.E.O ), மெட்ரிக்குலேசன் பள்ளி ஆய்வாளராக (Inspector of Matriculation Schools- South Tamilnadu )  இருந்தவர். நேர்மையின் அடையாளமாக தனது பணிக்காலத்தில் இருந்தவர்.  இன்றைக்கும் இருப்பவர். எளிமை என்றால் அப்படி ஒரு எளிமை.   இந்த வயதிலும் நல்ல புத்தகங்களைத் தேடித் தேடிப் படிப்பவர். படிப்பவர் மட்டுமல்ல, அவர் கையிலிருக்கும் ஒரு சின்ன நோட்டில் , புத்தகத்தின் தலைப்பு, ஆசிரியர் , பதிப்பகம், முகவரி, விலை என அனைத்தையும் குறித்து வைத்து தேடித் தேடி வாங்குபவர். தான் படித்த மிக நல்ல புத்தகங்களை என்னிடம் கொடுத்துப்படிக்கச்சொல்லுவார். அதனைப்போலவே நான் படித்த, என்னைப்பாதித்த நல்ல புத்தகங்களை அவரிடம் கொடுப்பேன். படித்து தனது கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுவார். இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வாழ்வில்.

                                                 'முள்' புத்தகத்தைப் படித்து விட்டு, கல்வி, கல்வி, கல்விதான் நம்மை உயர்த்தும் என்றார். அதனைத் தந்தை பெரியாரும் அவரது இயக்கமும் நன்றாக மக்கள் மனதில் பதிய வைத்து விட்டார்கள் என்றார். முத்து மீனாள் வாழ்வின் மாற்றம் குறித்து பேசிக்கொண்டிருந்த போது சில செய்திகளைச்சொன்னார். " எப்படி போனாலும் எங்கே போனாலும், கிறித்துவர்களின் பங்களிப்பை மருத்துவத்திலும், கல்வியிலும் நாம் ம்றுக்க முடியாது, மறக்கக்கூடாது. முத்து மீனாளுக்கு ஆதரவு கொடுத்த கரங்கள் கிறித்துவ இல்லங்கள்தானே. அங்குதானே அவருக்கு மருத்துவமும் , கல்வியும் கிடைத்திருக்கிறது. இந்து மதத்திலே தொடாதேன்னான், பார்க்காதேன்னான், ஆனால் கிறித்துவன் தானே நம்மோடு கை குலிக்கினான், சாதி வேற்றுமை இல்லாமல் எல்லோரும் படிக்க வாய்ப்புக்கொடுத்தான். நம்ம நாட்டில் இத்தனை மடாதிபதிகள் இருந்தார்களே, இருக்கின்றார்களே, எத்தனை பேர் தொழு நோய் மறு வாழ்வு இல்லம் கட்டி வைத்திருந்தார்கள்? வைத்திருக்கின்றார்கள் ? " என்றார் . மிக நியாயமான கேள்வியாக இருந்தது.

                  " நேரு, 1960- 65 களில் தொழு நோயின் பாதிப்பு மிகுந்த அளவில் இருந்தது. அரசு ஒரு போர்க்கால நடவடிக்கை போல , தொழு நோய் ஒழிப்பதற்கான திட்டங்களத் தீட்டி செயல்படுத்தினார்கள். எப்படி செய்ல்படுத்துவது, எங்கிருந்து ஆரம்பித்து இந்த நோயை ஒழிப்பது எனக்குழப்பம் இருந்தது. அப்போது நான் ஆசிரியராக இருந்தேன். மதுரை  அரசு மருத்துவமனைக்குச்சென்று, தலைமை மருத்துவரைச்சந்திந்தேன். தொழு நோய் ஒழிப்பு நடவடிக்கையை பள்ளிக்கூடங்களில் இருந்து ஆரம்பியுங்கள். என்று சொன்னேன். தொழு நோய்ப்படை அறிகுறி யார் யாருக்கு இருக்கிறது என்பதனை பள்ளிக்கூடங்களுக்கு வந்து சோதனை செய்யுங்கள். இருப்பவர்களைக்கண்டு அவர்களுக்கு மருந்து கொடுங்கள். அவர்கள் குணமாவார்கள். அப்படியே பெரியவர்களுக்கும் மருத்துவம் செய்யுங்கள் என்றேன். அந்தத் தலைமை மருத்துவர் அப்படியே எழுந்து வந்து கட்டித் தழுவிக்கொண்டார். அருமையான யோசனை சொன்னீர்கள் என்று பாராட்டினார் என்று சொன்னார். "  இன்றைக்கு பெருமளவில் தொழு நோய் மறைந்திருக்கிறது, அதற்கு அரசுகளின் நடவடிக்கையை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றார்.கடவுள் கொடுத்த நோய் என்று சொன்னான். மேலை நாடுகளில் கூட தொழு நோய் வந்து விட்டால் தனியாக ஒரு தீவில் கொண்டு போய் விட்டிருக்கின்றார்கள் . தொழு நோய் அவ்வளவு கடுமையாக பார்க்கப்பட்டது, பாதிக்கப்பட்டவர்கள் அவ்வளவு கொடுமையாக நடத்தப்பட்டார்கள்  என்று பழைய வரலாறுகளை எல்லாம் சொன்னார். .

                           எங்கள் ஊரில் (சாப்டூரில்) ஒரு 20,25  ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு இயக்கம் போல,விக்டனரி  டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் , மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் இணைந்து வீடு ,வீடாகச்சென்று யாருக்கும் தொழு நோய் பத்து இருக்கிறதா என்று கணெக்கெடுத்தோம். இருந்த ஒரு சிலருக்கு மருந்துகள் கொடுக்க ஏற்பாடு செய்தோம். ஒரு பொதுவான காரியம் என்றவுடன், தன்னலம் இல்லாத செயல் என்றவுடன் எல்லோரும் அவ்வளவு ஒப்புதல் கொடுத்தார்கள், அந்த நோயைப் பெருமளவுக்கு எங்கள் ஊரில் ஒழிக்க முடிந்தது என்று எனது முன்னாள் தலைமை ஆசிரியரிடம் சொன்னேன்.

                        பொதுவான காரியங்களுக்கு , நல்ல காரியங்களுக்கு உதவி செய்பவர்கள் இருக்கின்றார்கள். கேட்கத்தான் வேண்டும், கேட்டு அதனைச்சரியாக நடைமுறைப்படுத்தினால் அவ்வளவு உதவி கிடைக்கும் என்றார். சாப்டூரில் தலைமை ஆசிரியராக இருந்தபோது அவர் செய்த நல்ல காரியங்கள் தெரியும், ஆனால் அவர் தலைமை ஆசிரியராக இருந்த தொண்டி, சிறுகுடி, நத்தம், வாடிப்பட்டி, கருங்காலக்குடி எனப்பல ஊர்களில் செய்த பொதுக்காரியங்களை ( பள்ளிக்கூடம் கட்ட இடம் வாங்குதல், பொதுப்பணித்துறை உதவியோடு கட்டிடம் கட்டுதல், மின்சார வசதி, காலை, மாலை ஸ்டடி, படிக்க அனுப்பப்படாத பெண்பிள்ளைகள் வீட்டிற்கு சென்று பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பக்கேட்டுக்கொள்ளுதல்  ) எனப்பல காரியங்கள் அவர் காலத்தில் நடந்ததை விவரித்தார். மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கும் ஒரு கனவு இருக்கிறது. எனது தலைமை ஆசிரியர் திரு வி.வீரிசெட்டி அவர்களிடம் படித்த, அவரால் முன்னேற்றம் பெற்ற பழைய மாணவ, மாணவிகளை எல்லாம் இணைத்து அவருக்கு ஒரு விழா எடுக்க வேண்டும், அவரைப் பற்றிய்  ஒரு நூலைக்  கொண்டுவர வேண்டும் என்று. அவர் சம்மதிப்பாரா எனத் தெரியவில்லை. ஒரு தடவை அவர் போட்டோவை என் வீட்டில் மாட்ட வேண்டும் என்று கேட்டேன். தருகிறேன் என்று சொல்லிவிட்டு மறு நாள் " யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா ....." என்னும் முழுப்பாடலையும் பிரேம் போட்டிருந்ததைக் கொடுத்தார். "ஆட்கள் மறைந்து போவோம் . நாம் செய்த நல்ல காரியங்கள்தான் உலகில் நிற்கும் , என்னை நினைத்துக்கொள்ள வீட்டில் இதனை  மாட்டு" என்றார்,அதனைத் தான் மாட்டி வைத்திருக்கின்றேன்.
 .

Wednesday 6 November 2013

அண்மையில் படித்த புத்தகம் : முள் --முத்து மீனாள்



அண்மையில் படித்த புத்தகம் : முள்
நூலின் ஆசிரியர்                             : முத்து மீனாள்
வெளியீடூ                                          : ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை-24
மூன்றாம் பதிப்பு                              :  ஆகஸ்ட் 2009
மொத்த பக்கங்கள்                          : 108, விலை ரூ 50

                                                                            இது ஒரு பெண்ணின் சுய சரிதை. அவர் சாதனை புரிந்தவரல்ல, வேதனையில் வளர்ந்தவர். தொழு நோய் - இன்றும் கூட அந்த நோயின் பெயரைக் கேட்டவுடனே ஒதுங்குபவர்கள் நிறைய உண்டு. இந்த நூலின் ஆசிரியர் முத்து மீனாள் அந்த நோயின் அறிகுறியால் , இளம் வய்திலேயே வீட்டை விட்டு வெளியேறி தொழு நோய்களுக்கான விடுதியில் சேர்கின்றார். அவரின் பிறப்பு முதல் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வுவரையிலான பதிவாக இந்த நூல் அமைகின்றது.

                                                எழுத்தாளர் பாமா ஒரு நிறைவான முன்னுரையை 'எளிமையும் நேர்மையும் நிறைந்த எழுத்துக்கள் ' எனக் கொடுத்திருக்கின்றார். " தொழு நோய் பற்றிய விவரிப்புகள் ,சிகிச்சை முறைகள், சமுதாயப் பார்வை , உடனுறைபவர்களின் உளவியல், பாலியல், உடலியல் சிக்கல்கள், கன்னியர்களின் கனிவு, கண்டிப்பு, கருணை, விடுதியின் விதிமுறைகள் அவற்றை எதிர்கொண்டு வாழ்ந்த முறை அனைத்தையும் வெகு இயல்பாக ,எளிமையான ந்டையில் கூறுகிறார். தனிமையின் கொடுமை, கால் அறுவைச்சிகிச்சையின் போது ஏற்பட்ட அனாதை உணர்வு, உடல் வலியோடு சேர்ந்து உலுக்கிய உள்ளத்து வேதனை, உடனிருப்பவர்கள் அனுபவித்த துயரங்கள், மனக்காயங்களை மிகவும் நுட்பமாக , ஆழமாக , அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். " எனப் பாமா விவரிக்கும்  முன்னுரை, புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் படித்து உள்வாங்கி  , பாமா முத்து மீனாளாக மாறி எம்பதி எனும் மன உணர்வோடு பதிந்த பதிவாக உள்ளது.

                                                    பின்னுரை எழுத்தாளர் சுகுமாரன் 'இந்தியா டுடே ' பத்திரிக்கையில் எழுதிய நூல் விமர்சனம். "தமிழில் பொது வாசிப்புமுறை இன்று பெரிதும் மாறியிருக்கிறது. கதைகள், கவிதைகள் போன்ற இலக்கிய வடிவங்களை விடவும் அவையல்லாத பிற ஆக்கங்கள் அதிகமாக வாசிக்கப்படுகின்றன, குறிப்பாக சாதாரணமானவர்கள் என்று நாம் கருதும் மக்களின் வாழ்க்கைக் கதைகள் விருப்பத்துடன் வாசிக்கப்படுகின்றன."(பக்கம் 105 )  என்று சுகுமாரன் குறிப்பிடுகின்றார். உண்மைதான். முதல் தலைமுறை, சாதாரணமானவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படித்திருக்கின்றார்கள், சிலர் பட்டம், பதவி பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் தங்களைப் போன்றவர்களின் கதைகள் வரும்போது விரும்பி வாசிப்பது மட்டுமல்ல, பல இடங்களில் தங்கள் வாழ்க்கை அக்கதைகளில் பிரதிபலிப்பதைக் காண்கின்றார்கள். எனவே விரும்பி வாசிக்கின்றார்கள் , விரும்பி அப்படிப்பட்ட புத்தகங்களை வாங்குகின்றார்கள் எனலாம். " முத்து மீனாளின் பிள்ளைப் பருவத்திலிருந்து தொடங்கி அவரது திருமணம் வரையிலான வாழ்க்கை நிகழ்ச்சிகளைச்சொல்லுகிறது இந்தப் புத்தகம் ....நம்மை ஒரு முறை மதிப்பிட்டுக்கொள்ள இந்தப் புத்தகம் உதவும் என்பதுதான் இதை முக்கியமானதாகக் க்ருத என் வசமிருக்கும் காரணம் . " எனச்சுகுமாரன் குறிப்பிடுகின்றார்.

                                                 முன்னுரையும் பின்னுரையும் புத்தகத்தின் உள்ளடக்கத்தை சுருக்கமாகச்சொல்லிவிடும் அதே நேரத்தில் , உள்ளே சென்று நாம் புத்தகத்தை வாசிக்கிற போது முத்து மீனாளை மட்டுமல்ல, முத்து மீனாளை சுற்றி உள்ள கிராமப்புறத்துப்பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களை, அவர்களின் துன்பகரமான வாழ்க்கை நிலைகளச்சொல்லிச்செல்கின்றார். மாமியாவால் சாகும் மருமகள்களைத் தெரியும் , கிராமத்தில் அம்மா கொடுமையால் சாகும் மல்லிகா ஒரு அழுத்தமான பாதிப்பை படிக்கும் நம் மனதில் ஏற்படுத்துகின்றார். மதுரைக்குப் பக்கத்தில் உள்ள அரிட்டாபட்டியில் 1970-ல் பிறந்தவர் என்று நூல் ஆசிரியரின் குறிப்பு கூறுகின்றது என்றால் கதைக்குள் இருக்கும் பல நிகழ்வுகள் கிராமப்புறத்தில் இருக்கும் நமது சகோதரிகளின் வாழ்க்கை துன்பக்குறிப்புக்களைக் கூறுகின்றது.

                                                     " ஆஸ்பத்திருக்கு வரும் மதர் மதுரையிலிருந்து வருவார்கள். அவர் இத்தாலி நாட்டைச்சேர்ந்தவர். அவருக்குத் தமிழ் தெரியாது. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சேவை எண்ணத்தோடு நடந்து கொள்வார். மதரை நான் அம்மா என்று அழைப்பேன். ...ஒரு வருடத்தில் என் முகத்தில் இருந்த படை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்தது. பெரியப்பா என்னை மருத்துவமனை நிரிவாகியிடம் அழைத்துச்சென்றார். நான் தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டேன். நான் படிக்க விரும்புவதைப் பெரியப்பா நிர்வாகியிடம் சொன்னார்.
அப்போது நான் அவர் காலில் விழுந்தேன். இனிமேல் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று அவர் அறிவுரை கூறினார். பின்னர் டாக்டரும் நான் படிப்பதற்கு ஒப்புக்கொண்டு அனுமதியளித்தார் " பக்கம் 26. இந்தப் பகுதி படிக்கும்போது என்னை வெகுவாகப் பாதித்தது. நம் கிராமத்துப் பிள்ளைகள் எப்படியாவது படிச்சுப்போட மாட்டமா? இப்போது இருக்கிற சூழலில் இருந்து மாறிவிட மாட்டோமா? படிப்பினால் நமது வாழ்க்கையில் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கின்றார்கள் என்பதற்கு மேலே சொன்ன பகுதி எடுத்துக்காட்டு.கும்பகோணம் சென்று தொழு நோய்க்கு மருத்துவத்தோடு படிப்பும் கிடைத்ததுதான் முத்து மீனாளின் வாழ்க்கையில் திருப்புமுனை. அந்த நிகழ்வே இந்தப் புத்தகத்தை எழுதும் அளவிற்கு அவருக்கு கிடைத்த வாய்ப்பின் தொடக்கம்

                                             சில ஆண்டுகள் மருத்துவம் பார்த்து மாத்திரை சாப்பிட்டவுடன் முத்து மீனாள் முழுமையாக தொழு நோய்த் தாக்கத்திலிருந்து மீள்கின்றார். இது இந்த நூலின் மிகப்பெரிய செய்தி. இன்றைக்கும் கிராமப்புறங்களில், தொழு  நோய் என்பது முன் ஜென்மப் பலன், இந்த நோய் குணமாகாது என்ற மூட நம்பிக்கை இருக்கிறது. முத்து மீனாளின் வாழ்க்கை அந்த மூட நம்பிக்கையை முறியடித்து தூக்கி எறிகின்றது,படிப்பவர்கள் மத்தியில், தனக்குத் தெரிந்த குடும்பங்களில் யாருக்காவது தொழு நோய் அறிகுறி இருந்தால் , முறையான் மருத்தவம் எடுத்துக்கொண்டால் சில வருடங்களில் முழுமையான விடுதலை தொழு நோயிலிருந்து கிடைக்கும் என்பதனை அழுத்தமாகச்சொல்வதற்கு அடிப்படையாக இருக்கின்றது.கிராமம் சார்ந்த பல செய்திகளை இந்தப் புத்தகத்தில் முத்து மீனாள் பதிந்திருக்கின்றார்.படித்துப்பாருங்கள்.  தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் வலியையும் , உள வலியையும் மிக எளிதாக இந்தப்புத்தகம் உங்களுக்கு உணரவைக்கும்.

                                      


                                                  

Sunday 3 November 2013

ஒலிக்கும் வெடிச்சத்தங்களால் ! வா. நேரு


அடைய வந்த
பறவைகள்
ஒரு மரத்திலிருந்து
இன்னொரு மரத்திற்காய்
மாறி மாறி
அலைந்து அலைந்து
பறந்து கொண்டிருந்தன
ஒலிக்கும் வெடிச்சத்தங்களால் !

ஓசோன் ஓட்டை 
பற்றித் தினம் எழுதும்
பத்திரிக்கைகள்
கருமேக மூட்டமென
வானை மூடும்
கரிப்புகைகள் பற்றி
கள்ள மெள்னம் காத்தன !
திருவிழாக்களின் மேன்மை
பற்றி மேட்டுக்குடிக்கு
எழுத்துக்களால்
பல்லக்குத் தூக்கும் ஒருவன்
விதவிதமாய்
விவரித்திருந்தான் பத்திரிக்கையில் !

சில ஊர்களில்
சாதிக்கலவரம் வரக்கூடும்
தீபாவளியால் !
அபாய அறிவிப்பினைக்
கொடுத்துக்கொண்டிருந்தது
உளவுத்துறை !

நடு இரவே
ஆடுகள் அனைத்தும்
உரிக்கப்பட்டு
வரிசையாய்த் தொங்கும்
பலூன்கள் போல
ஏகத்திற்கும் தொங்க
விடப்பட்டிருந்தன !

சைக்கிளின் மீது
ஏறி அமர்ந்து
உட்காரவும் முடியாமல்
ஓட்டவும் முடியாமல்
விழுந்து விழுந்து
எழுந்திரித்துக்கொண்டிருந்தான்
நடுரோட்டில் ஒருவன்
தீபாவளிப் போதை
இன்னும் இறங்கவில்லை போலும்


கறி தின்று
தண்ணி அடித்து
சண்டையிட்டு
மண்டையுடைதல்தான்
தீபாவளி என
நிருபித்துக்கொண்டிருந்தனர்
தெருவில் சிலர்

பதவி கிடைத்தவன்
பணம் கிடைத்தவன்
தங்களுக்கு கிடைத்தவற்றை
கரியாய் புகையாய்
துணியாய் வெடியாய்
வேடிக்கை காட்டிய வேளையில்

கந்து வட்டிக்காரனிடம்
கடன் வாங்கிப்போட்ட
தெருவோரக் கடை
வியாபாரம்
நேற்றுப்பெய்த மழையில்
படுத்திருச்சே! அய்யய்யோ !
கழுத்திலே கத்தியை
வைப்பானே கந்துவட்டிக்காரப்
பய மவன் எனும் 
பயத்தோடு
விற்பனைக்கு வைத்திருந்த
புதுத்துணிகளை எல்லாம்
குடிசைக்குள்ளே
போட்டு விட்டு
அழுக்கு வேட்டியோடும்
பழைய சேலையோடும்
அடுப்பெரிக்க மனமில்லா
நினைப்போடும்
வானவேடிக்கைகளை
வண்ண வண்ணத் துணிகளை
பார்த்த வண்ணம்
உட்கார்ந்திருக்கும் வேலையிலே

கருப்பா  ஒருத்தி
டி.வி.பெட்டிக்குள்ளே
உக்காந்துகிட்டு
எவ்வளவு மகிழ்ச்சி இன்னைக்கு !
எங்க நம்பிக்கை இன்னைக்கு !
இதிகாசமெல்லாம்
உண்மையாக நடந்ததுதென்னு
நமக்கு ஆத்திரம்
வரப் பேசுறாளே ! அம்மா !
நம்ம  தாத்தாவை
பார்த்தாலே தீட்டுன்னு
பண்ணி வச்ச
பாவிகளுக்கு ஆதரவா
ஏகமா வரிஞ்சு கட்டி
எக்குத்தப்பா பேசுராளே அம்மா !

                                                                       . வா. நேரு .











அண்மையில் படித்த புத்தகம் : ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய்


நூலின் தலைப்பு             :  ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய்
நூலின் ஆசிரியர்            : அப்துல் ரஹீம்
வெளியீடு                          : சாமி புக்ஸ், சென்னை-04
முதல் பதிப்பு                    : 2007 , பக்கங்கள் - 128 , விலை ரூ 60 .

                                                                     லியோ டால்ஸ்டாயின் நூல்களைப் படித்துள்ளேன். டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும் ' பற்றி காந்தியார் எழுதியுள்ளதைப் படித்திருக்கிறேன், ஆனால் முழுமையாக டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றைப் படித்ததில்லை. இந்த நூல் அதற்கான வாய்ப்பைக் கொடுத்தது.

                                                       முன்னுரை, பதிப்புரை என்றெல்லாம் ஒன்றும் இந்தப் புத்தகத்தில் இல்லை. புத்தகத்தின் 3-ம் பக்கமே டால்ஸ்டாயின் பிறப்பும் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் ஆரம்பிக்கிறது. மொத்தம் 12 தலைப்புக்களில் டால்ஸ்டாய் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அப்துல் ரஹீம் கொடுத்திருக்கின்றார்." பிறப்பும் வளர்ச்சியும், இலக்கிய முயற்சி, போர் அணிச்சேவை, காதல் வாழ்வு, போரும் அமைதியும், குடும்ப வாழ்க்கை, ஆன்மீக விழிப்பு,எளிமையில் இன்பம், டால்ஸ்டாய் இயக்கம், மதப்பிரஷ்டம், குடும்பத் துறவு, மகரிஷியும் மகாத்மாவும்"  என்பன நூலாசிரியர் கொடுத்திருக்கும் 12 தலைப்புக்களாகும்.

                                          லியோ நிகலோவிஸ் டால்ஸ்டாய் என்னும் முழுப்பெயர் கொண்ட டால்ஸ்டாய் ரஷ்யாவிலுள்ள யாஸ்னாயா பால்யானா என்னும் கிராமத்தில் பிறந்தவர்  , மிகப்பெரிய பிரபு குடும்பத்தைச்சேர்ந்தவர் , 42 அறைகளிலுள்ள பிரமாண்டமான மாளிகையில் பிறந்தவர், இவரோடு சேர்த்து மூன்று ஆண்கள், ஒரு பெண் இவர் குடும்பத்தில், 3 வய்தில் தாயையும், 9 வய்தில் தந்தையையும் இழந்தவர் , அத்தையால் வளர்க்கப்பட்டவர், இளமையில் படிப்பில் கவனம் செலுத்தாதவர், பள்ளியில் படிக்கும்போது பிரபு குடும்பததைச்சேர்ந்தவன் என்னும் தற்பெருமையோடும், கர்வத்தோடும் நடந்து கொண்டவர் , பாடத்தைப் படிக்கவில்லையே தவிர தனக்குப் பிடித்த விசயங்களைப் படித்தவ்ர, குறிப்பாக ரூஸோவின் இருபது வால்யூம்களையும் திரும்பத் திரும்ப படித்தவர் , 16 வய்திலேயே தன்னுடைய எண்ணங்களை எழுத ஆரம்பித்து விட்டவர் என்பன போன்ற பல செய்திகளை முதல் அத்தியாயமான 'பிறப்பும் வளர்ச்சியும்' என்னும் த்லைப்பில் இந்த் நூலின் ஆசிரியர் , சுவைபடக்கூறுகின்றார்.

                                            பாகப்பிரிவினை ஏற்பட்டதால் டால்ஸ்டாய்க்கு  மிகப்பெரிய சொத்து கிடைத்தது. தன் கிராமத்தை மாற்ற விரும்பினார். ' தன்னுடைய கிராமத்திலுள்ள குடியானவர்க்ள் இறைவனால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களென்றும் ,அவர்களுடைய நலன்களைப் பற்றிக் கவனிப்பது தன்னுடைய தலையாய கடன் என்றும் உணர்ந்தார். அவர்களுக்கு கல்வி அறிவைப்புகுத்தி அவர்களிடையே வாசம் செய்யும் வறுமைப்பேயை விரட்டியடிக்க வேண்டுமென்றும் எண்ணினார் அவர் .எவ்வித உடல் மூளை உழைப்பையும் பொருட்செலவையும் அவர் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவர்களுக்குத்  தாராளமாக மான்யங்கள் வழ்ங்கினார். ...அவர்க்ள் கல்வி பயில்வதெற்கென ஒரு பள்ளிக்கூடத்தையும் நிறுவினார். ஆனால் குடியானவர்களோ அவ்ரை விரும்புவதற்குப் பதிலாக வெறுக்கத் தலைப்பட்டனர். அவரை ஏமாற்றவும்   முற்பட்டார்கள், அவரை ஒரு முட்டாள் என்று தங்களுக்குள் பேசிக்கொள்ளவும் செய்தார்கள். ...அவர் பள்ளிக்கூடம் நிறுவியதும் அவர்களுக்கு ஏற்பட்ட கோபத்திற்கு அளவேயில்லை ..."  பக்கம் (14) . கிராமத்து மனிதர்களை மாற்ற முடியாமல் , டால்ஸ்டாய் கிராமத்தை விட்டு வெளியேறி , மாஸ்கோவிற்கு சென்று விட்டார் . யார் நமக்கு நன்மை செய்பவர்கள்,யார் நமக்கு கெடுதல் செய்பவர்கள் என்று உணராத தன்மை நம் நாட்டிற்கு மட்டும் சொந்தமல்ல போலும், ரஷ்யாவிலும் அப்படித்தான் போலும் . மாஸ்கோவிற்கு சென்று மது, மாது ,சூது எனப் பணத்தை தண்ணீராக செலவு செய்தார் என்றும் அதுவும் சூதாட்டத்தில் பணத்தை எல்லாம் பெருமளவில் இழந்தார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை முதல் சூதாட மாட்டேன் , இது சத்தியம் என்று தனக்குத் தானே உறுதி எடுத்துக்கொள்வதற்காக நாட்குறிப்பில் எழுத ஆரம்பித்தார் என்றும் , அதனைத்  தானே மீறிப் பணத்தை இழந்து , இழந்து அவதியுற்று, அதனையும் நாட்குறிப்பில் எழுதினார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது . இவ்வாறு இருந்த நிலையிலும் கற்பனையிலும், ஆகாயக் கோட்டை கட்டுவதிலும் ஈடுபட்டு , தன்னுடைய சிற்றன்னையிடம் கூறியபோது ' கற்பனை விசும்பில் பறந்து செல்லும் நீ நவீனம் எழுதத்தான் தகுதியானவன் ' என அவள் கூறினாள் . தன்னுடைய சிற்றன்னை கூறிய கருத்து  , ஆங்கிலத்தில் ஸ்பார்க என்று சொல்வார்களே , அதனைப் போல மனதில் உருவாகி, ஏன் நாம் நவீனம் எழுதக்கூடாது என்ற எண்ணம் டால்ஸ்டாய் மனதில் தோன்றியது ..எழுதத் தொடங்கினார். எழுதும்போதே தன்னுடைய சகதி எங்கேயிருக்கிறது என்பதைக் கண்டு கொண்டார்.
அவருடைய   எழுத்துப்பயணம்  'குழந்தைப் பருவம் ' என்னும் நவீனத்தில் ஆரம்பித்தது , எல்.என். என்னும் புனைபெயரில் காண்டம்பரரி என்னும் பத்திரிக்கையில் 1852-ல் வந்தவுடன் ரஷ்யா முழுவதும் பிரபலமடைய ஆரம்பித்துவிட்டார் -டால்ஸ்டாய் என்பதனை இந்த நூல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

                                      போர் அணியில் சேர்ந்தததையும் , அங்கு அவர் எழுதுவதையும் நிறுத்தவில்லை, தீய பழக்கங்களையும் நிறுத்தவில்லை என்பதனையும் , கல்வி பற்றிய டால்ஸ்டாயின் சிந்தனைகளையும் , அன்றைய ரஷ்யாவில் நிலவிய சமூகக்கொடுமைகளையும்   'போர் அணிச்சேவை '   என்னும் அத்தியாயம் விவரிக்கிறது. சோன்யா, எலிசபெத் என்று இரண்டு உடன்பிறந்த சகோதரிகள் டால்ஸ்டாயை விரும்பியதையும், அதில் சோன்யா என்பவரை டால்ஸ்டாய் திருமணம் செய்து கொண்டதையும் அடுத்த அத்தியாயம் விவரிக்கிறது.  ,

                                      சோன்யாவுடன் திருமணம் முடிந்த 18-வது நாளிலேயே இருவருக்கும் கருத்து வேற்றுமை வந்து சண்டையிடத் தொடங்கினர் என்றும் அதற்குக் காரணம் தன்னுடைய கெட்ட செயல்களையெல்லாம் எழுதி வைத்திருந்த நாள்குறிப்பை டால்ஸ்டாய் தன்னுடைய மனைவியிடம் காட்டியதுதான் என்றும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். அதற்குப்பின்  டால்ஸ்டாயின் ஒவ்வொரு நடவடிக்கையையும் சோன்யா சந்தேகப்பட்டார் என்றும் அதனைப்போல டால்ஸ்டாயும் தன்னுடைய மனைவியை சந்தேகித்தார் என்றும் , அவர்களின் குடும்ப வாழ்க்கை புயலாய் ,சோகமாய் ஆனது என்றும் குறிப்பிடுகின்றார். ஆனால் அந்த நிலையிலும் ஒரு உதவியாளரைப் போல டால்ஸ்டாயின் புரியாத எழுத்துக்களைப் புரிந்து படித்து ஏழு முறை நகலை கைகளால் சோன்யா தன்னுடைய கணவருக்காக் எழுதிக் கொடுத்தார் என்றும், ஒவ்வொரு முறை புரூப் வரும்போதும் பெருமளவில் அடித்து விடுவது, பெருமளவில் சேர்ப்பது என்பதனை டால்ஸ்டாய் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்த்க்கது 'போரும் அமைதியும்" என்னும் நவீனம் உருவான நிகழ்வை விவரிக்கும் 5-வது அத்தியாயம்.
                                     அவர் எழுதிய நவீனத்தின் தலைப்பு மட்டுமல்ல, அன்றாட அவரின் வாழ்க்கையும்  எப்படி போரும் அமைதியுமாக இருந்தது என்பதனை விளக்குவது 'குடும்ப வாழ்க்கை' என்னும்  தலைப்பிலான அத்தியாயம். ஆனால் 'அன்ன கரீனா' என்னும் நாவல் எப்படி அவருக்கு புகழையும் , பணத்தையும் அள்ளிக் கொடுத்தது என்பதும், அதில் அவரது மனைவி சோன்யாவின் பங்களிப்பும் (புரியாத எழுத்தை புரிந்து பலமுறை எழுதிக்கொடுத்ததில்)  விவரிக்கப்பட்டிருக்கிறது.

                                               மதக்கோட்பாடுகளை தீவிரமாகப் பின்பற்றியும் , இறைவனை எல்லா நேரங்களிலும் வணங்கியும் மதப்பற்றாளராக சில காலம் டால்ஸ்டாய் வாழ்ந்திருக்கின்றார். " ஆனால், சிறிது காலத்திற்குள் மதத்துக்குள்ளிருந்தே மதத்திற்கு விரோதமாகப் புரட்சிக்கொடியைத் தூக்க ஆரம்பித்து விட்டார். மாதாகோவிலில் நடக்கும் சடங்குகளில் மூன்றில் இரண்டு பகுதியை அவரால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ...புனித தினங்களைக் கொண்டாடவே அவருக்கு வெறுப்பாக இருந்தது. கிறிஸ்துமஸ்ஸைத் தவிர்த்து மற்றப் பண்டிகைகளெல்லாம் ஆச்சரிய நிகழ்ச்சிகளின் ஞாபகார்த்த நாட்களாகவே இருந்தன. பிறரின் காரண மகிமையில் அவருக்கு நம்பிக்கையே இல்லை.இயேசு நாதர் உயிர்த்தெழுந்தார் என்ற கிறிஸ்துவ கோட்பாட்டை அவரால் நம்ப இயலவில்லை. மதம் என்ற போர்வையில் உண்மை நூலுடன் மெல்லிய உரோமம் போன்ற பொய்மை நூல்களும் கலந்து நெய்யப்பட்டிருப்பதைக் கண்ணுற்றார்" (பக்கம்  71) என்று டால்ஸ்டாயின் மனமாற்றத்தை விவரிக்கும் நூலாசிரியர் மதங்க்ளில் நம்பிக்கை இல்லாதவராக ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவராக டால்ஸ்டாய் வாழ்ந்த விவரங்களை ஆன்மிக விழிப்பு என்னும் அத்தியாயத்தில் விவரிக்கின்றார்.

                                             பட்டு மெத்தைகளில் வாழ்ந்த டால்ஸ்டாய், எப்படி எளிமையான ,பிறருக்கு உதவும் வாழ்க்கைக்கு மாறினார் என்பதனை 'எளிமையான வாழ்க்கை ' என்னும் அத்தியாயம் விவரிக்கின்றது. எளிமையாக வாழவேண்டும், அகிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும் , நிறைய நிலம் வைத்திருப்பவர்கள் அதனை குடியானவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும் போன்ற கொள்கைகள் அடங்கிய'டால்ஸ்டாய் இயக்கம் ரஷ்யாவிலும், மற்ற இடங்களிலும் பரவியதையும், டால்ஸ்டாயின் நாடகத்தை ஸார் சக்ரவர்த்தி ரசித்துப் பார்த்ததை, பின்பு அவரே நாடகத்திற்கு தடை போட்டதை, டால்ஸ்டாயிற்கும் அவரது மனைவி சோன்யாவிற்கும் தகராறு முற்றியதை, மனைவியின் கொடுமை பற்றி டால்ஸ்டாய் 'குரூட்ஸர் ஸோனடா' என்னும் நவீனத்தை எழுதிவிட்டார் என்று சோன்யா 'யாருடைய தவறு ? ' என்று ஒரு புத்தகம் எழுதியது , டால்ஸ்டாய் இயக்கத்தின் சிறப்புகள்  பற்றியும் மிக இயல்பாக இந்த இயலில் ஆசிரியரால் சொல்லப்பட்டுள்ளது.

                                           மதப்பிரஷ்டம் என்னும் அத்தியாயம் டால்ஸ்டாயின் எழுத்துக்களைக் கண்டு ரஷ்ய அரசாங்கம் பயந்ததையும், அவரின் எழுத்துக்களால் ஏற்பட்ட மாற்றம் அவ்ர்களை உறுத்தியதையும் ஆனால் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் ஸார் மன்னனின் ஆட்சிக்கு எதிராக டால்ஸ்டாய் எழுதியதையும், பின்னர் கிறித்துவ மதக் கருத்துக்களை சுருக்கி 5 கட்டளைகளாக டால்ஸ்டாய் வடிவமைத்தமைக்காக அவர் மதப்பிரஷ்டம் செய்யப்பட்டத்தையும் விவரிக்கிறது. குடும்பத்துறவு என்னும்  அத்தியாயம் டால்ஸ்டாயின் உயிலின் மீதே அவரின் மனைவி சோன்யா கவனமாக இருந்ததையும், அதனால் வெறுத்து தனது மகளிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி, பின்பு ஓரிடத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்ததையும் , அவர் சேர்த்து வைத்த புத்தகப்பட்டியலையும் , ரஷ்யப் புரட்சிக்கு இவரின் எழுத்துக்களும் காரணம் என்பதால் அவருக்கு அளிக்கப்பட்ட மரியாதைகளும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
காந்தியாரின் வாழ்க்கையில் டால்ஸ்டாயின் வாழ்க்கையும், புத்தகங்களும் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து கடைசி அத்தியாயமான மகரிஷியும் மகாத்மாவும் என்னும் பகுதி விவரிக்கின்றது.

                                        வாழ்க்கை வரலாறு என்பதனையும் தாண்டி, இந்தப் புத்தகம் வாசிப்பவர் மனதில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் புத்தகம். கேளிக்கைகளில் மூழ்கிக் கிடந்த ஒரு மனிதர் தன்னுடைய எழுத்தாலும், படிப்பாலும் , எண்ணத்தாலும் எப்படி இன்றைக்கும் படிப்பவ்ர்களை ஈர்க்கும் ஓர் ஆளுமையாக மாறினார் என்பது படிப்படியாக அருமையாக விவரிக்கப்பட்டுள்ள புத்தகம் .படித்துப்பார்க்கலாம். பாதுகாத்து வைக்க்லாம்.


                            

 


நரகாசுரப் படுகொலை ஏன்? எப்படி?

வா. நேரு

உலகம் முழுவதும் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அந்தந்த மதத்தைச்சேர்ந்தவர்கள், தங்கள் மதத்தைத் தோற்றுவித்தவரின் பிறந்த நாளையோ அல்லது மதப் பிரச்சாரம் சம்பந்தப்பட்ட நாட்களையோ தங்கள் மதப் பண்டிகைகளாக கொண்டாடுகின்றார்கள்.

நாம் அறிந்த வரையில் பிறந்த நாளுக்குப் பதிலாக இறந்த நாளை எவரும் கொண் டாடுவதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் தீபாவளி என்னும் பண்டிகை நரகாசுரன் என்பவர் இறந்ததாகவும், அவரே தன்னுடைய இறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் அதனால் அந்த நாளை தீபாவளி என்று கொண்டாடுவதாகவும் பார்ப்பனர்கள் நம் மக்களுக்கு கதை சொல்லி வைத்திருக்கின்றார்கள். நம் மக்கள் , திராவிடர்களே தீபாவளி இனாம் கொடுங்கள், போனஸ் கொடுங்கள் என்று ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டு தீபாவளி கொண்டாட தயாராக இருப்பதைப் பார்க்கின்றோம்.

இந்த தீபாவளி கொண்டாடுவதற்கான கதை என்ன என்பதனை நம் மக்கள் முழுமையாகப் புரிந்து கொண்டால், உணர்ந்து கொண்டால் கட்டாயமாக தீபாவளியைக் கொண்டாட மாட்டார்கள். தீபாவளி கொண்டாடுவதற்கான கதையை முழுமையாக உண்மை நோக்கில் விளக்கும் புத்தகத்தை அண்மையில் படித்தேன். அப்புத்தகத்தின் தலைப்பு "நரகாசுரப் படுகொலை -ஓர் அரிய ஆராய்ச்சி நூல் " என்னும் புத்தகமாகும். 1947-இல் வெளி வந்த இந்தப்  புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய தந்தை பெரியார் அவர்கள் ,' பொதுமக்கள் இதை இந்தப் புத்தகத்தின் உதவியைக் கொண்டு நன்றாய் ஆராய்ச்சி செய்து பார்த்து தீபாவளி கொண்டாட வேண்டியது அவசியம் என்றுபட்டால் அந் தப்படி செய்யுங்கள்" என்று அடக்கத்தோடு குறிப்பிடுகின்றார்.இந்த நூலின் முதல் பகுதி தந்தை பெரியாரின் முன்னுரை. அடுத்ததாக ஆக்கியோன் முன்னுரை. அடுத்து பக்கம் 7 முதல் பக்கம் 56 வரை நூல் ஆசிரியரின் கருத்து விளக்கம். முதல் பகுதி  நரகாசுரப் படுகொலை என்னும் தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது. 'சில நூறு ஆண்டுகளாகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிற தென்பதை எல்லோரும் அறிவர். இந்தப் பண்டிகை எதற்காக கொண்டாடப்படு கிறது? இதனால் யாருக்கு என்ன விதமான நன்மை ஏற்படுகிறது? இதைக் கொண் டாடாமல் நிறுத்தி விட்டால் என்ன கேடு வந்து விடும்? இந்தப் பண்டிகையை ஆதியில் ஆரம்பித்தவர்கள் யார்? அவர்கள் இதை ஆரம்பித்த நோக்கம் என்ன? இப்போது இந்தப் பண்டிகையை யார் யார் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்?
இந்தப் பண்டிகையைக் கொண்டாடக் கடமைப்பட்டவர்கள் யார் ? இந்தக் கொண் டாட்டம் அறிவுடைமையான கொண்டாட் டம்தானா?" என்று நிறையக் கேள்வி களோடு ஆரம்பிக்கும் இந்த நூல் , கேள் விக்கான பதில்களை வரிசையாகக் கொடுக்கின்றது. 
தீபாவளிப் பண்டிகைக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது விஷ்ணு புராணங்களில் ஒன்றான பாகவதமாகும்.
இதிகாசங்களில் ஒன்றான பாரதத் தையும் ஒரு துணை ஆதாரமாகக் கொள்ள லாம் என்று கூறும் நூல் ஆசிரியர் சைவ மதப் புராணங்களை ஆராயும்போது வைணவ புராணங்களையும், வைணவ புராணங்களை ஆராயும்போது சைவ புராணங்களையும் ஆதாரமாக வைத்துக் கொண்டால் உண்மை விளங்கும் என்று குறிப்பிடுவது நல்ல ஆராய்ச்சித்தன்மை உடையதாகும். நரகாசுரன் வரலாறு என்று குறிப்பிட்டு சைவ புராணம் சொல்வதையும், வைணவப் புராணம் சொல்வதையும் ஒப்பிட்டு நகைச்சுவையோடு கதையை விவரிக்கின்றார். விஷ்ணுப் பன்றி பூமா தேவியைப் புணர்ந்ததால் பிறந்தவன் நரகா சுரன் என்று இரண்டுமே குறிப்பிடுகின்றன என்பதனைக் குறிப்பிடுகின்றார். நரகா சுரன் காலம் எனக்குறிப்பிட்டு, புராணப்படி 54,43,20,000 (54 கோடியே 43 இலட்சத்து ,இருபது ஆயிரம் ) ஆண்டுகள் நரகாசுரன் வாழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இத்தனை கோடி வருசம் வரை நரகா சுரன் உயிரோடு இருந்திருக்க முடியுமா ? என்னும் கேள்வியை நூல் ஆசிரியர் கேட் கின்றார். பூமி சுருண்ட விதம் எனக் குறிப்பிட்டு, பூமியின் மொத்த பரப்பளவு, நீளம், அகலம் போன்றவைகளைக் குறிப் பிட்டு எப்படி இதனப் பாயைப் போலச்சுருட்ட முடியும்? சுருட்ட முடியுமென்றால் பூமியைப் போல எத்தனை மடங்கு பலசாலியாக சுருட்டுபவர் இருக்க முடியும் ? போன்ற கேள்விகளைக் கேட்கின்றார்.

ஆரியர்களின் கட்டுக்கதைகள் இவை என்பதனை படிப்ப வர்கள் மனதில் நிலை நிறுத்துகின்றார். இந்தியாவைத் தவிர்த்த எல்லா தேசத்தாருக்கும் கீழ்க்கண்டபடி எழுதிக் கேட்டுப்பாருங்கள்:- "ஒரு காலத்தில், இரண்யாக்ஷ்ன் என்கிற அசுரன் நாம் வாழுகின்ற பூமியைச்சுருட்டிக்கொண்டு போனதாகவும், அதை எங்கள் மகா விஷ்ணுக் கடவுள் மீட்டுக்கொண்டு வந்த தாகவும் எங்களுடைய தெய்வீகப்புராணங் கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட சம்பவம், எப்பொழுதாவது உலகத்தில் நடந்ததாக, உங்கள் நாட்டுச்சரித்திரங்களில் காணப் படுகிறதா? என்று எழுதிக் கேட்டுப் பாருங்கள்" பக்கம் (22) என்று குறிப்பிடு கின்றார்.   அடுத்த பகுதி நரகாசுரன் யார்? என்னும் பகுதியாகும். "நரகாசுரன் யார்? அவன் எந்த இனத்தைச்சேர்ந்தவன்? என்பவைகளை ஆராய வேண்டுமானால், முதலாவது அவன் வாழ்ந்த நாடு எது? அந்த நாட்டில் அக்காலத்தில் எந்த இனத் தார் வாழ்ந்ததாகச்சரித்திரங்கள் கூறு கின்றன? ....புராணங்களில் வரும் சூசக மான குறிப்புகளை வைத்துக் கொண்டு தான் சரித்திர ஆராய்ச்சியில் நுழைய வேண்டும் " பக்கம் (23) என்று குறிப்பிடும் நூலாசிரியர் தற்போதையை அஸ்ஸாம் மாகாணத்தில் இருக்கிற ஒரு பகுதியை ஆண்ட திராவிட அரசன் நரகாசுரன் என்று குறிப்பிடுகின்றார் பல ஆதாரங்களோடு. ஆரியப்புலவர்கள் எப்படி திராவிட மன்னர்களை அரக்கர்கள் எனக்குறிப்பிட்டு இழிவு படுத்தினார்கள் என்பதனையும் ,கொலை செய்தார்கள் என்பதனையும் குறிப்பிடுகின்றார்.

" நண்பர்களைப் போல, அடிமைகளைப் போல நடந்து உளவறிந்து, சமயம் வாய்த்த போது ,அடையாளம் காண முடியாமல் மாறுவேடமிட்டுக் கொண்டு ,திறமை மிகுந்த திராவிட மன்னர்களைக் கொலை செய்துவிட்டு, கொலையுண்டு இறந்த திராவிட மன்னர்கள் மீது, ஆரியர் களுக்கு மட்டும் விளங்கத்தக்க விதத்திலும், வெறுப்புண்டாக்கும் விதத்திலும் ,இழிவான புனைபெயர்களிட்டு ....மகாவிஷ்ணு என் கிற ஆரியன் , பன்றி வேடமிட்டுச்சென்று இந்தியாவை ஒரு குடையின் கீழ் அர சாண்ட இரண்யாக்ஷ்ன் என்கிற திராவிட மன்னன், வேட்டையாடவோ, வேறு காரண மாகவோ தனித்து வந்து, காட்டிலுள்ள ஏதோ ஒரு பள்ளத்தில் நிற்கும் சமயம் பார்த்துத் திடீரென்று தாக்கிக் கொலை செய்துவிட்டு, அவனுடைய அரசாட்சியைக் கைப்பற்றிக்கொண்ட கதை..." பக்கம் 26 என்று விவரித்து, ஆரியர்கள் சூழ்ச்சியால் திராவிட மன்னனைக் கொன்ற நாள்தான் தீபாவளி என்பதனைக் குறிப்பிடுகின்றார்.

நரகாசுரன் செய்ததாக சொல்லப்படும் குற்றங்கள் அதிதியின் குண்டலம், வருணன் குடை, இந்திரனின் மணிகூட பர்வதம் போன்றவற்றைக் குறிப்பிட்டு, ஒரு மன்னன் செய்ததாகச்சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் சிறுபிள்ளைத்தனமானது என்பதனையும், ஆரியர்களின் மனித நேயமற்ற யாகத்தை, சடங்குகளை, சம்பிர தாயங்களை எதிர்த்ததால் வஞ்சகமாக ஆரியர்களால் கொல்லப்பட்ட திராவிடன் நரகாசுரன், அவனது இயற்பெயர் வேறாக இருக்கும், அவனை இழிவுபடுத்தவே இப்படிப்பட்ட பெயரைச் சுட்டியிருக்கிறார் கள் எனக் குறிப்பிடுகிறார். கிருஷ் ணாவதாரம் எனக்குறிப்பிட்டு கிருஷ்ண வதாரத்தின் வண்டவாளங்களைத் தோலு ரிக்கின்றார் பக்கம் 45 முதல் 54 வரை .பகைவர்களை வஞ்சித்துக்கொலை செய்வதற்காக ,ஆரிய மன்னர்கள் முதலில் அவர்களுடைய மனைவிமார்களைக் கொண்டு, காதல் வலை வீசச் செய்து, அந்த வலையில் பகைவர்கள் வீழ்ந்திருக் கும் சமயம், பக்கத்தில் மறைவாக் இருந்து கொன்று விடுவார்கள் என்பதேயாகும் .இவ்விதமாகவே  . கிருஷ்ணன் சத்தியபாமையுடன் நள்ளி ரவில் சென்று நரகாசுரனைக் கொன்றி ருக்கிறான் (பக்கம் 53) .நரகாசுரனைக் கொன்ற கிருஷ்ணன், நரகாசுரன் மனை வியரை எல்லாம் சிறை எடுத்துக்கொண்டு வந்து தனக்கு மனைவியராக்கிக் கொண் டதாகப் புராணம் கூறுவதையும் குறிப்பிடு கின்றார்.  "கிருஷ்ணன் என்பவன் கடவுள் அவதாரமல்ல, அவன் ஓர் ஆரியன்.ஆரியன் மட்டுமல்ல, ஆரியர்களின் தலைவன், தலைவன் மட்டுமல்ல, திராவிடர்களின் பரம விரோதி ....இந்தக் கொடியவன் , நம் குலத்தைக் கொலை செய்த கொண்டாட்ட நாளைத்தான் நாமும் மான வெட்கமின்றிக் கொண்டாடி வருகின்றோம். தீபாவளி என்றால் அது திராவிடர்களை வீழ்த்திய நாள் என்று அர்த்தம். நரக சதுர்த்தசி என்றால் அது,இந்த நாட்டு மக்களை நாசம் செய்த நாள் என்றுதான் அர்த்தம். " (பக்கம் 54) முடிவில் ஒரு கேள்வி கேட்கின்றார் நூல் ஆசிரியர். "அமெரிக்க நாட்டு அணுகுண் டினால், அழகிய நகரங்கள் தரை மட்ட மாக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு அடி பணிந்த ஜப்பானிய வீரர்கள், அந்த நாளை நல்ல நாளென்று கொண்டாடுவார்களா? " என்று கேட்டு, திராவிடர்களாகிய நீங்கள் மட்டும் தீபாவளியைக் கொண்டாடுகின் றீர்களே, சரியா என்று கேட்கின்றார். 
இந்த நூலின் முன்னுரையை தந்தை பெரியார் கொடுத்திருக்கின்றார். அவர்  தமது முன்னுரையில் "நரகாசுரப் படுகொலை என்னும் இப்புத்தகத்திற்கு, நான் முகவுரை எழுத வேண்டும் என்று, எனது நண்பர் ஒருவர் வேண்டிக்கொண்டார். மகிழ்ச்சி யோடு சம்மதித்து எழுதுகிறேன்.

நரகாசுரன் என்பதாக ஒருவன் இருந் தானோ, இல்லையோ என்பதும், நரகாசுரன் வதை சம்பந்தமான கதை, பொய்யோ, மெய்யோ என்பதும்பற்றி, நான் கவலை எடுத்துக் கொள்ளவில்லை.

இப்படிப்பட்ட கற்பனைகளைச் செய்து, ஆரியர்கள் அவற்றை நம் தலையில் சுமத்தி, நம்மை அதற்கு ஆளாக்கி, தங்கள் உயர்வுக்கும், நமது இழிவுக்கும், தங்கள் வாழ்வுக்கும், நமது தாழ்வுக்கும், அவர்கள் நலத்திற்கும், நமது கேட்டிற்கும், அவர்கள் சமர்த்துக்கும், நம் முட்டாள் தனத்துக்கும், நிரந்தர ஆதரவாக்கிக் கொண்டு, பாடும், கவலையுமில்லாமல் சுகபோகிகளாய் இருந்து, நம்மைச்சுரண்டி வருகிறார்களே என்பதற்காகவே, நான் கவலைப்பட்டு இதன் தன்மையை, நம் திராவிட மக்க ளுக்கு உணர்த்துவதற்கு ஆக பொது வாகவே, ஆரிய சாஸ்திர புராண இதி காசங்களின் ஆபாசங்களையும், காட்டு மிராண்டித் தனங்களையும், விளக்கும் தொண்டை எனது வாழ்வின் முக்கிய தொண்டுகளில் ஒன்றாகக் கொண்டு, பணியாற்றி வருகிறேன். அதனாலேயே இப்படிப்பட்ட புத்தகத்திற்கு என்னை முகவுரை எழுதக் கேட்டார்கள் என்பதாகக் கருதியே, எழுதச் சம் மதித்தேன்.
திராவிட மக்கள் அருள் கூர்ந்து, நரகா சுரன் வதைப் புராணத்தை, சற்று பகுத் தறிவோடு சிந்திக்க வேண்டும்
ஆரியக் கற்பனையாகிய இக்கதையில் உள்ள முக்கிய சில குறிப்புகளை மாத்திரம் குறிப்பிடுகிறேன்.
1. இரணியாட்சன் என்கிற இராக்கதன், பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்திற்குள் போய் பாதாளத்தில் ஒளிந்து கொண்டது.
2.    மகாவிஷ்ணு என்கின்ற கடவுள், பன்றி உருவம் எடுத்து, சமுத்திரத் திற்குள் புகுந்து, இராக்கதனைக் கொன்று, பூமியை எடுத்துக் கொண்டு வந்து விரித்துவிட்டது.
3.    இந்த விஷ்ணுப் பன்றியைக் கண்டு, பூமிதேவி காம விகாரப்பட்டுப் மோகித்துக் கலவி செய்தது.
4. இக்கலவியின் பயனாய் ஒரு பிள்ளை பிறந்து, அப்பிள்ளை ஓர் அசுரனாக ஆகி, ஒரு இராஜ்ஜியத்தை ஆளும், அரக்கனாகி, தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு, தன் தாய் தந்தையான கடவுளுக்கும்) கேடு செய்தது.
5. பிறகு, அந்த நரகாசுரனைக் கடவு ளும் கடவுள் மனைவியும் கொன்றது.
6. அந்தக் கொலைக்கு, மக்கள் மகிழ் வது.
7. அந்த மகிழ்ச்சிக்குப் பேர்தான் தீபாவளிக் கொண்டாட்டம்.
என்பனவாகிய இந்த ஏழு விஷ யங்களை திராவிட மக்கள் மனித புத்தி கொண்டு சிந்திக்க வேண்டும் என்பதே, இப்புத்தகம் எழுதியவருடைய ஆவல்.
ஆதலால், பொதுமக்கள் இதை இந்தப் புத்தகத்தின் உதவியைக் கொண்டு நன்றாய் ஆராய்ச்சி செய்து பார்த்து தீபாவளி கொண்டாட வேண்டியது அவசியம் என்றுபட்டால் அந்தப்படி செய் யுங்கள். " .என்று சொல்கின்றார்.  நூலைப் படித்து முடிக்கும் எந்தத் திராவிடருக்கும் , தலைமுறைக்கும் தீபாவளி கொண்டாடத் தோன்றாது. புத்தகத்தின் தலைப்பு : நரகாசுரப்படு கொலை -ஓர் அரிய ஆராய்ச்சி நூல்
ஆக்கியவர் : அருப்புக்கோட்டை எம்,.எஸ்.இராமசாமி.
வெளியீடு   : திராவிடர் கழக் (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், சென்னை-7
மறுபதிப்பு   : அக்டோபர் 2012 , விலை ரூ 25.

***நன்றி : விடுதலை -1-10-13****


.

Saturday 2 November 2013

நிகழ்வும் நினைப்பும் (8) : இசையின்பன் சிறுகதையும் பாராட்டும்:

நிகழ்வும் நினைப்பும் (8) : இசையின்பன் சிறுகதையும் பாராட்டும்:
                                                                                         மாதம் இருமுறை வரும் பகுத்தறிவு இதழான 'உண்மை ' இதழ் இரண்டு நாட்களுக்கு முன்னால், சந்தா கட்டியிருப்பதால் வீட்டிற்கு வந்தது. அந்த இதழைப் படித்தேன் . அதில் இருந்த 'கற்றதனால் ஆன பயன் ' என்னும் சிறுகதையை எழுத்தாளர் இசையின்பன் எழுதியிருந்தார். சிறுகதை என்றாலே எவருக்கும் எளிதில் புரியக்கூடாது,நாலைந்து தடவை படித்தால் கூட எழுதின ஆளுக்கும் புரியக்கூடாது,  , படிக்கிறவனுக்கும் புரியக்கூடாது.  நல்ல கருத்தை ஆழமாகச்சொல்லக்கூடாது .சொன்னால் அது பிரச்சாரக் கதையாக ஆகிவிடும், நவீன சிறுகதையாக இல்லாமல் போய்விடும் என்று சில பித்துக்குளிகள் இலக்கணம் வகுத்துக் கொடுக்க, அப்படி எழுதுவதுதான்  நவீன சிறுகதை என்று நம்மாள் சிலரும் முட்டி,மோதிக்கொண்டிருக்கும் வேலையில், மிக அருமையாக எளிதில் புரியும்வண்ணம், இசையின்பன் அவர்கள் எழுதிய 'கற்றதனால் ஆன பயன் ' என்னும் சிறுகதை இருந்தது. நல்ல கருத்து, சரளமான நடை  என சிறுகதைக்கு உரிய அத்தனை இலக்கணங்களும் பொருந்தியது மட்டுமல்ல. படிப்பவர்களின் மனதை உருக்கும் வண்ணம் எழுதியிருந்தார். இட்டுக்கட்டி அல்ல, இன்றைக்கும் சமூகத்தில் நடைமுறையில் இருக்கும் சாதி வேற்றுமையையும், படிப்பதற்காக ஆதி திராவிடர் வீட்டுப் பிள்ளைகள் படுகிற பாட்டையும் எடுத்துக்கூறியது மட்டுமல்ல, இது ஒரு தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் chain reaction என்று சொல்வார்களே , அப்படி ஒரு தொடர் நிகழ்வாக  இருக்கவேண்டும். கற்று உயர்ந்தவர், மேலே வர முயற்சிப்பவருக்கு கற்றுக்கொடுப்பதே , 'கற்றதனால் ஆன பயன் ' என்பதனை அழுத்தம் திருத்தமாக  "அவளைத் தூக்கி யார் காலிலும் விழக்கூடாது என்பதுதான் சுயமரியாதை. அந்தச் சுயமரியாதை உனக்கு வரச் செய்வதற்கு உதவிதான் இந்தப் படிப்பு. இனி உன்னால் எல்லாவற்றையும் நன்றாகக் கற்க முடியும். இயல்பாக உனக்கு உள்ள மூளைத் திறமையும் கற்ற கல்வியறிவும் உனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தையும் உண்டுபண்ணும். வருங்காலத்தில் உன் சமுதாய மக்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்கிக் கைகொடுத்துத் தூக்கிவிடு! அதைத்தான் நான் விரும்புகிறேன் " எனச் சொல்லியிருந்தார்.

                                              இந்தச்சிறுகதையைப் படிப்பவர்களுக்கு, இப்படியெல்லாம் இன்றைக்கும் இருக்கிறதா என்று தோன்றும். இருக்கிறது என்பதுதான் உண்மை. திருமணம் முடித்தவுடன், மனைவி வேலைக்குப்போகக்கூடாது என்பதும், சில கிராமங்களில் படித்தவர்கள் ஆதி திராவிட வீட்டுப்பிள்ளைகளுக்கு டியூசன் எடுக்க மறுப்பதும் நடைமுறையில் உள்ள உண்மை. இந்தச்சிறுகதையை படித்தவுடன் , தோழர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்களிடம் இசையின்பன் அவர்களின் தொலைபேசி எண் வாங்கி , அலைபேசியில் அழைத்து இசையின்பன் அவர்களிடம் பாராட்டைத் தெரிவித்தேன். நல்ல கருத்து உள்ள சிறுகதை, தெளிந்த நீரோடையாகச்செல்லும் கதை ஓட்டம், சில இடங்களின் மிகவும் நெகிழ வைத்த கதை. படிக்க வாய்ப்புக் கிடைக்காதா, படிப்பின் மூலம் முன்னேற மாட்டோமா  கிராமத்து மாணவ, மாணவிகளின் உணர்வைப் பிரதிபலிக்கும் கதை என்றேன்.இசையின்பன் நெகிழ்ந்தார். அய்யா, இயக்கப்பொறுப்பில் உள்ள உங்களைப் போன்றோர் , படித்து, உடனே அழைத்துப் பாராட்டுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். சிறுகதை வடிவம் நன்றாக உங்களுக்கு வருகின்றது. தொடர்ந்து எழுதுங்கள் என்றேன். நீங்களும் கூட இந்தக் கதையைப் பின்வரும் தொடர்பில் படிக்கலாம் . என்னைப் போலவே உங்களுக்கும் பிடித்தால் அவரைப் பாராட்டலாம்,. வெளியிட்ட உண்மை இதழையும் வாசகர் கடிதம் மூலமோ, இணையம் மூலமோ பாராட்டலாம்.  
http://www.unmaionline.com/new/1749

Tuesday 29 October 2013

நிகழ்வும் நினைப்பும் (7) : உடல் வலியும் உள வலிமையும்

இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை. சிறு நீரகக் கல் இருக்கிறது என்று மருத்துவப்பரிசோதனையில் தெரிந்து அதனை எடுப்பதற்காக மருத்துவமனையில் இருந்த நேரம். மயக்க மருந்தைக் கொடுத்து ,க்ல்லை உடைத்து  பின்பு அறையில் வந்து போட்டிருந்தார்கள். மயக்கம் தெளிந்த பின்பு , சிறு நீர் போகும் பாதையில் ஒரு குழாயை மாட்டி அதன் வழியாக சிறு நீர் கழிக்கும் நிலமை. பெரிய வேதனையாக இருந்தது. உடைக்கப்பட்ட கல் துகள்கள், ஒவ்வொரு முறையும் சிறு நீரோடு கழிந்து போகும்போது கொடுக்கும் வேதனை , மரண வேதனையாக இருந்தது. அதனைப் போல எழுந்து நடப்பது, படிப்பது, படுத்து தூங்குவது என்று ஒவ்வொரு நிலையும் மிகப்பெரிய துன்பமாக இருந்தது,

                                அருகில் இருந்த எனது இணையர் சொர்ண்ம் வலி அதிகமாக இருக்கிறதா என்றார் . ஆமாம் என்றேன். இந்த நிலையில் வெளியில் போவது, அல்லது இதோடு  பொது நிகழ்வில் கலந்து கொள்வது நினைத்துப்பார்க்கமுடியுமா ? என்றேன். எப்படி போக முடியும் ?என்றார். தந்தை பெரியார் போயிருக்கின்றார். ஆண்டுக் கணக்கில் போயிருக்கின்றார். குழாயை மாட்டிக்கொண்டு, அது போய்ச்சேர ஒரு மூத்திரச்சட்டியையும் வைத்துக்கொண்டு போய் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். வேதனையோடு சில நேரங்களில் வலியால் சத்தமிட்ட நிலையிலும் பேசியிருக்கின்றார். 10 நிமிடம் , 15 நிமிடம் அல்ல, 3 மணி நேரம் 4 மணி நேரம் பேசியிருக்கின்றார். எதனைப்பற்றியும் கவலைப்படாமல், வரக்கூடிய எதிர்ப்புக்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பேசியிருக்கின்றார். எப்போது செத்தாலும் பரவாயில்லை, எப்படி செத்தாலும் பரவாயில்லை என்று 100 சதவீத கமிட்மெண்ட் என்று சொல்வார்களே அந்த உணர்வோடு பேசியிருக்கின்றார் என்றேன்.

                                    நினைத்துப்பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. எம்பதி எம்பதி என்று சொல்கின்றார்களே, அதனை நடைமுறையில் நடத்திக்காட்டியவர் தந்தை பெரியார். இப்படி சதிகாரர்களில் வலைகளில் சிக்கி நமது மக்கள் துன்பச்சகதியில் உழல்கிறார்களே, இவர்களுக்கு உண்மையைச்சொல்ல வேண்டும். இதிகாச, புராண, பண்டிகைப்புரட்டுக்களை மக்க்ளிடம் பிட்டுப்பிட்டு வைக்க வேண்டும். சாதி என்னும் இழிவினைச் சமூகத்தில் இருந்து துடைக்க வேண்டும் என்ற உணர்வோடு பயணித்த அவரின் பயணம் மிகக் கடினமானது. பார்ப்பனர்களால் விளைந்த கேடுகளை விட அவருக்கு , அவர் யாருக்காக பாடுபட்டரோ அவர்களிடம் இருந்து கிடைத்த கேடுகள்,குறுக்கீடுகள்  அதிகம் . எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச்சாதித்தவர்களின் சாதனை எளிது. ஆனால் இந்தச் சாதி வெறி பிடித்த முட்டாள்களின் மத்தியில், உடல் வேதனையைப் பற்றிக் கவலைப்படாமல் உள வலிமையோடு பயணித்த அவரின் பயணமும் , அவர் அடைந்த வெற்றியும் நினைக்கும் போதெல்லாம் தெம்பு ஊட்டக்கூடியதாய் இருக்கின்றது.  நமக்கு ஏற்படும் சின்னச்சின்ன வலிகளை மறக்க வைப்பதாக  இருக்கிறது 

நிகழ்வும் நினைப்பும் (6) --கடவுளான என் மீது ....

"நித்யானந்தா இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 100 குழந்தைகளை எந்தவிதமான பாடத்திட்டமும் இல்லாமல் நித்யானந்தா பாடத்திட்டம் என்ற ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு மாநில அரசு என எந்த அரசுகளின் கல்வித்துறையின் அனுமதியில்லாமல், ஒரு உள்ளூர தங்கும் பள்ளியை நடத்தி வருகிறார். அதன் மூலம்அவர் கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கிறார். இது சட்ட விரோதம் என உமேஷ் ஆரத்தியா கூறியுள்ளார்.

உமேஷ் ஆரத்தியாவின் அறிக்கையை தொடர்ந்து, நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம் மேல் நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு கர்நாடக அரசு வந்துள்ளது என தெரிகிறது. இதைத் தெரிந்து கொண்ட நித்யானந்தா கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையாவை, கண்டபடி திட்டி தனது இணையதளத்தில் பேசியுள்ளார். என் மேல் நடவடிக்கை எடுத்த முதல்வர்கள் காணாமல் போனார்கள். என் மேல் நடவடிக்கை எடுத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சதானந்த கவுடா ஆகியோர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டனர். கடவுளான என் மீது காவல்துறையை ஏவும் முதல்வர் சித்தராமையா விரைவில் சின்னாபின்னமாகிவிடுவார் என சாபமிட்டார்."  நக்கீரன்  செய்தி.

                                 நித்யானந்தா ஜெயிலுக்குள் கம்பி எண்ணாமல்  வெளியில் தெரிவதும், மீண்டும் தொலைக்காட்சிகளில் பிரசங்கம் செய்வதும், அதைப் படித்தவர்கள் பல பேர் கன்னத்தில் போட்டுக்கொண்டு பார்ப்பதும் என்ன கொடுமையடா இது ? என்று யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்களே !. நானே கடவுள் என்று சொல்லும் தைரியம் நித்யானந்தாவிற்கு எப்படி வந்தது ?  கடவுளான என் மீது .... என்று சொல்கின்றாரே இந்த ஆள் ? யார் இவர்? இவர் பூர்வீகம் என்ன ? எப்படி பிரபல்யம் ஆனார் ? இப்படி நானே அல்லா என்று ஒரு முஸ்லீம் அல்லது நானே பரமபிதா என்று ஒரு கிறித்துவர் சொன்னால் அந்த மதத்தைச்சேர்ந்தவர்கள் விட்டு விடுவார்களா? இப்படிச்சொல்லும் நித்யானந்தாவிற்குப்பின்னால் இந்து மதத்தைக் காப்பாற்றப்போகிறோம் என்று சொல்பவர்கள் - இராம கோபாலன் போன்றவர்கள் இருக்கின்றார்களே ? எப்படி ? தப்பித்தவறி கூட இதைப்பற்றி ஜெயமோகன்கள் - குருமூர்த்திகள் பேச மாட்டேன் என்று மெளனம் சாதிக்கின்றார்களே ? ஏன் ?  தமிழ் இந்து பேப்பர் எழுதுவதற்கு தமிழகத்தில் வேறு யாருமே இல்லாதது போல ஜெயமோகன் கட்டுரைகளாகவே நிறைய வெளியிடுகிறதே ? ஏன் ?  எதிர்ப்பது போல் காட்டிக்கொள்ளும் இவர்களை எல்லாம் இணைக்கும் மையப்புள்ளி எது ?

Monday 21 October 2013

என்று மாறும் இந்நிலை ? - வா.நேரு

சுவரில் காந்தி
சிரித்துக்கொண்டிருந்தார்
பொக்கை வாயைத்
திறந்தபடி - அவரின்
பொன்மொழிகள்
ஆங்கிலத்திலும்
தமிழிலும்
வாடிக்கையாளரே
முக்கியமானவர் எனப்
பறைசாற்றியபடி !

வங்கி மேலாளர் முன்
வெகு நேரமாய்
நின்று கொண்டிருக்கிறேன்
ஏதோ ஒன்று எதிரில்
நிற்கிறதே எனும்
உணர்வு கூட இன்றி
கணினியைப் பார்ப்பதும்
பேப்பரைப் பார்ப்பதுமாய்
வெகு நேரமாய்
செய்யும் பம்மாத்து !

பொறுக்க முடியாமல்
சார் என்றேன்
என்னங்க என்றார்
அவசரத்தில்
வெடுக்கெனப்பிடுங்கும்
நாயின் குரலில் !
கிராமத்து வங்கிகளுக்கு
எப்படித்தான்
இப்படி ஆட்களாய்
பொறுக்கி வந்து
போடுகிறதோ அரசாங்கம் ?


அகம் நிறையக்
கடுப்பும்
முகம் சுளிக்கும்
பேச்சும்
எவருக்கும் உதவா
இயல்பும்
கொண்டவராய்
எங்கள் ஊரின்
வங்கி மேலாளர் !

பேருந்து கூட்டத்தில்
அறுந்து போன
செருப்பு காலில்
நிற்காமல்
கலவரம் செய்தது !
தைத்து வரலாம் என
மிதிவண்டியில்
பீபிகுளம் போனேன் !

செருப்புத்தைக்கும்
கடை திறந்திருந்தது
ஆளைக் காணோம்
கடை என அழைக்கப்படும்
துணிப்பந்தலுக்கு
அருகே நின்றிருந்தேன்

கையில் டீ டம்ளரோடு
ஓடி வந்தார் அவர்
அய்யா, கொடுங்கள்
தைக்கிறேன் என்றார்
டீ ஆறிவிடும்
முதலில் குடியுங்கள்
பின்பு தையுங்கள் என்றேன்
இல்லை ,இல்லை !
கொடுங்கள் என்றார்

நான் செருப்பில்
சுமந்து வந்த
அழுக்கை அகற்றி
ஊசியால் குத்தி
மேலும் தோலைச்சேர்த்து
அற்புதமாய்த் தைத்துத்
தந்தார் தோழர் அவர் !
அன்பு நிறை அவசரமும்
கனிவு நிறை கவனிப்பும்
மெய் சிலிர்க்க
வைத்தது என்னை !

எனது இரத்த வழிச்
சொந்தம் சிலபேர்
இவரைத் தொடாதே என்கிறான் !
வங்கி மேலாளரைச்
சாமி என வணங்குகிறான் !
என்று மாறும் இந்நிலை ?

எழுதியவர் : வா.நேரு
நாள் : 11-Oct-13, 7:13 pm
Nantri: Eluthu.com 

Thursday 10 October 2013

அண்மையில் படித்த புத்தகம் : : கனவு ஆசிரியர்

அண்மையில் படித்த புத்தகம் : : கனவு ஆசிரியர்
தொகுப்பாசிரியர்                          திரு. க. துளசிதாசன்.
 வெளியீடு                                     : புக்ஸ் பார் சில்ரன் -பாரதி புத்தகலாயத்தின் ஓர் அங்கம் ,சென்னை-18
முதல் பதிப்பு                               : மே 2012  விலை ரூ 90 - மொத்த பக்கங்கள் : 144

                                                மதுரையில் நடைபெற்ற . புத்தகச்சந்தையில் கிடைத்த புத்தகம் . படித்து முடித்த பின் , படித்த நாள்  முழுவதும் புத்தகத்தில் இருக்கும் கருத்தைப் பற்றி யோசிக்க வைத்த புத்தகம். புகழ்பெற்ற  ஆளுமைகளிடம், அவர்களின் கனவு ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் எனக் கேட்டு, அந்த புகழ் பெற்ற  ஆளுமைகளின் கட்டுரைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். ஒவ்வொருவரின் கட்டுரையும்  தனித் தன்மையாக உள்ளது. எந்தக் கட்டுரையும் மற்றொரு கட்டுரையைப் போல இல்லை. சிலர் தங்கள் கனவு ஆசிரியரை வர்ணிக்க, பலர் தங்கள் அனுபவங்களைத்  தங்களை  ஆற்றுப்படுத்திய, வழி காட்டிய  ஆசிரியரை அடையாளம் காட்டக் கிடைத்த வாய்ப்பாக இக்கட்டுரைகளை ஆக்கியுள்ளார்கள். 
 
                                   முதல் கட்டுரையாளர் எழுத்தாளர் அசோகமித்திரன். அவர்  'பிஸினஸ் லைன் ' பத்திரிக்கையைச்சுட்டிக் காட்டி, அதில் 8க்கு 6 பேர், தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான வழிகாட்டியாக பள்ளி ஆசிரியரைத்தான் சுட்டுகின்றார்கள் என்பதனைச்சுட்டிக் காட்டுகின்றார்.

                                  எழுத்தாளர் பிரபஞ்சன் தனது கட்டுரையில் ' ஐயா , நான் தங்களுக்குக் கடன் பட்டவன் ' என்று தனது தமிழ் ஆசிரியர் திருநாவுக்கரசைக் குறிப்பிடுகின்றார்.தமிழகத்துப் பள்ளிகளுக்கும், பிரெஞ்சுப் பள்ளிகளுக்குமான வேறுபாட்டைச்சுட்டிக் காட்டுகின்றார். ஏன் பிள்ளை படிக்கவில்லை என்று பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் கேட்கலாம், அதற்கு அவர்கள் பதில் சொல்வார்கள் பொறுப்பாய் என்று குறிப்பிடுகின்றார்.'என் தமிழ் ஆசிரியர் வணக்கத்திற்குரிய வித்வான் திருநாவுக்கரசு அவர்கள் ஒரு நாள் என் கட்டுரை நோட்டைப் பார்த்து, என்னை என்னிடம் இருந்த எழுதுகிறவனைக் கண்டு பிடித்தார். நான் ஏழாம் வகுப்பில் இருந்தேன்....ஆசிரியர்கள் என்பவர்கள்,  மூடிய கதவுகளைத் தட்டித் திறப்பவர்கள். வெளிகளின் காற்றை உங்களுக்கு நமக்கு சுவாசிக்க கற்றுத் தருபவர்கள். எங்கள் இருட்டை அவர்கள் திறந்து எங்களுக்கு ஒளி தந்தவர்கள். அவர்கள் கைகளில் விளக்குகள்  இல்லை. அவர்களே தீபங்களாக இருக்கிறர்ர்கள், எரிகிறார்கள் ... " பக்கம் 16 . " கற்கத் தொடங்குகிறவன் மாணவன், கற்றுக்கொண்டே இருக்கிறவன் ஆசிரியன் " எனக் குறிப்பிடும் பிரபஞ்சனின் கட்டுரை ஆழமான விமர்சனங்களைக் கொண்ட கட்டுரை இத்தொகுப்பில்.

                               எழுத்தாளர்  பொன்னீலன் கல்வித்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிவர். தான் வியந்த ஆசிரியரையும் அந்தச்சூழலையும் அவர் விவரிக்கும் பாணி அலாதியானது,வியப்பூட்டக் கூடியது அந்த ஆசிரியரின் வகுப்பில் மாணவர்கள் எவ்வளவு ஈர்ப்பாய்,ல்யித்து செயல்முறை மூலமாக கற்றுக்கொண்டார்கள் என்பதனை நன்றாக விவரிக்கின்றார். அவர் வியந்ததைச்சொன்னவுடன் நமக்கும் கூட அந்த வியப்பு தொற்றிக்கொள்கின்றது.. " இதுவரை சேமிக்கப்பட்ட அறிவைத் தன்வயப்படுத்திக் கொள்ள வேண்டியவர்கள் மட்டுமல்ல குழந்தைகள், அவற்றைத் தன் வயப்படுத்திக்கொண்டு , நாளைய தேவைகளுக்கான அறிவை உருவாக்க வேண்டியவர்களும் அவர்கள். இந்தப் பேருண்மையை உணர்ந்து செயல்படவேண்டியவர்கள் ஆசிரியர்கள் " எனப் பொன்னீலன் குறிப்பிடுகின்றார் (பக்கம் 25) .

                                                               'கிள்ளுவது ,கொட்டுவது, பிரம்பால் அடிப்பது போன்ற கொடுமைகள் நான் பள்ளியில் படித்தபோது சர்வசாதாரணம். இன்று அது மிகவும் குறைந்து விட்டது'  எனச்சொல்லும் தியடோர் பாஸ்கரன், முன்னாள் அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்.  வன்முறை என்பது உடலளவில் வருத்துவது மட்டுமல்ல, வாய்ப்பேச்சு வன்முறையும் பயங்கரமானதுதான் என்பதனைச்சுட்டிக்காட்டி டில்லியில் தனது மகள் வகுப்பில் நடந்த நிகழ்வைச்சுட்டிக் காட்டுகின்றார். மேலும் " மக்களிடையே மத ரீதியில் ,மொழி ரீதியில் ,ஜாதி ரீதியில் உள்ள வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு ,அவைகளை மதிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கலாம் அந்தப்புனித வாய்ப்பு அவர்க்ளுக்கு இருக்கின்றது " என்றும் குறிப்பிடுகின்றார்(பக்கம் 29).

                                                          தமிழ் இலக்கியத்தில் இளங்க்லை,முதுகலை பயின்று,இந்திய ஆட்சிப்பணியில் இருக்கும் ஆர்.பாலகிருஷ்ணன் 'கடவுள் பதவிகள் காலியாய்க் கிடப்பது எதனால் ? ' எனும் கேள்வியைத் தலைப்பாக்கி தனது கட்டுரையைத் தந்துள்ளார். : "கற்பித்தல் என்பது ஒரு வகையில் கண்டுபிடிக்கும் கலை, கண்டுபிடிப்பில் உதவும் கலை, பலருக்கு தங்களின் பலம் எதுவென்று கூடத் தெரிவதில்லை. நல்ல ஆசிரியர்கள் மாணவர்கள் தங்களின் தனித்திறனை, பலத்தைக் கண்டுபிடிக்க உதவுகின்றார்கள். எனது சொந்த அனுபத்திலிருந்தே சொல்கிறேன். 'என்னை','எனக்கு','அடையாளம்' காட்டி 'அறிமுகம்' செய்து வைத்ததே எனது ஆசிரியர்தான். எனக்கு மேடையில் பேசும் திறமை உள்ளது என்று கண்டுபிடித்து ,என்னைப் பேசவைத்து, கைதட்டல், பரிசுகள் பாராட்டுக்கள் வாங்கிக் கொடுத்த அவரே என்னைக் கண்டு பிடித்த 'விஞ்ஞானி ' " எனக்குறிப்பிடுகின்றார்.ஆனால் அந்த ஆசிரியரின் பெயரை திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிடவில்லை. குறிப்பிட்டிருந்தால் இவரை உருவாக்கிய ஆசிரியரின் பெயரையும் உலகம் தெரிந்திருக்கும்.

 " ஆசிரியப் பணி என்பது மற்ற எல்லா வேலைகளைப் போன்ற இன்னொரு 'வேலை' அல்ல. ஊதியத்தை மட்டும் கருதும் உழைப்பும் அல்ல. விரும்பிச்செய்வது, இன்னும் சொல்லப்போனால் விரும்புவர்கள் மட்டுமே செய்ய வேண்டியது(பக்கம் 32) எனச்சொல்லும் ஆர்.பாலகிருஷ்ணன் ஆசிரியப் பணியின் அடிப்படைகள், நல்ல ஆசிரியர் நல்ல மாணவர், நல்லாசிரியர் தாயுமானவர் , நல்லாசிரியரின் சமூகப்பொறுப்பு, நம்பிக்கையை விதைப்பவர், யார் கனவு ஆசிரியர் எனத் தலைப்புகள் கொடுத்து, ஒவ்வொரு தலைப்பிற்கு கீழும் தனது கருத்துக்களை கொடுத்துள்ளார். முடிவில் " எந்தப் பஞ்சத்தையும் இந்தப்பாரத  தேசம் தாங்கும். நல்ல ஆசிரியர்களுக்கான பஞ்சத்தைத் தவிர" என முடிக்கின்றார்.

                                                               'நல்ல ஆசிரியருக்கு அடிப்படை நல்ல மனிதராக இருப்பதுதான்' எனத் தன கட்டுரையில் குறிப்பிடும் பேரா. ச.மாடசாமி 'கலங்கிய கண்களைக் கண்டுபிடிப்ப்து முக்கியமானது ' எனத் தலைப்பிட்டு தனது கட்டுரையைத் தந்துள்ளார். அதற்கான எடுத்துக்காட்டுக்களாக  தான் பேராசிரியராக இருந்தபொழுது நடந்த நிகழ்வுகளை எடுத்துக்காட்டியுள்ளார்.'எனக்குரிய இடம் எங்கே? ' என்று புத்தகத்தின் ஆசிரியர் பேரா.ச,மாடசாமியிடம் இன்னும் அதிகமாக நான் எதிர்பார்த்தேன். ஏமாற்றம்தான் எனக்கு.ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதனை பேரா,இரத்தின நடராசன் , இப்படி இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தான் எண்ணும் 10 எண்ணங்களைப் பட்டியலிட்டு உள்ளார். பக்கம் (50-51) .

                                                              எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ' ஒவ்வொரு ஆசிரியரின் முகத்திலும் கனவு ஆசிரியரின் முகத்தைத் தேடுகிறேன் ' என்னும் தலைப்பிட்டு தனது கட்டுரையைக் கொடுத்துள்ளார். 'டோட்டோ ஜான் -ஜன்னலில் ஒரு சிறுமி என்கிற புத்தகத்தை வாசிக்காத ஆசிரியர் கனவு ஆசிரியராவது அப்புறம், ஓரளவுக்கு நல்ல ஆசிரியராகக்கூட இருக்க முடியாது " என்று கூறுகின்றார். பக்கம் 55. பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, நாம் கனவு ஆசிரியராகக் கூட நினைக்கமுடியாத ஒரு உண்மையான ஆசிரியரைப் பற்றிய ஜப்பான் மொழிப் புத்தகம் அது. பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம். அதனை வாசித்திருப்பது ஒரு ஆசிரியருக்கான இலக்கணம் என்று அழுத்தம் திருத்தமாக இந்தப் புத்தகத்தில் கூறுகின்றார். 

என் கனவு ஆசிரியர் சாதி உணர்வு இல்லாதவராக ,எல்லாச்சாதி குழ்ந்தைகளையும் சமமாகப் பாவிக்கிறவராக அதே சமயம் சமூக நீதிப்போராட்டத்தின் வரலாற்றை அறிந்தவராக இருப்பார் என்று கூறும் ச.தமிழ்ச்செல்வன் அறிவியல் பாடம் எடுப்பவர் வெறும் அறிவியல் பாடம் எடுப்பவராக மட்டும் இருந்தால் போதாது, அறிவியல் மனப்பான்மை உள்ளவராக இருக்கவேண்டும் என்றும் கூறுகின்றார். மற்றவர்கள் யாரும் தொடாத கருத்துக்களை துணிந்து கூறும் கட்டுரையாக ச,தமிழ்ச்செல்வனின் கனவு ஆசிரியர் கட்டுரை உள்ளது கவனிக்கத்தக்கது.

                                                நாடகக் கலைஞர் பிரளயனின் கட்டுரை கல கல என அவரின் கடந்த் கால நிகழ்வுகளால் சிரிப்பும் சிந்தனையும் வரவைக்கும் கட்டுரை. அவருக்கு நான்காம்  வகுப்பு நடத்திய வடிவேலு வாத்தியார் சந்திர கிரகணம் பற்றி நடத்தியதையும், தமிழ்ப்பாடத்தின் பாடல் பகுதிகளை சொல்லித்தரும்போது 'தத்தகாரத்தோடு சொல்லித்தந்ததையும் நன்றாக ,சுவை பட விளக்கியுள்ளார். 'ட்ர்ர டும்ம டர்ரடும்/ டர்ர டும்ம டர்ரடும் எனப் பாடிக்கொண்டே வீட்டிற்கு போவோம் என்பதனைச்சொல்லும்போது , நாமே ஏதோ நாலாம் வகுப்பில் படித்துக்கொண்டு இந்தப் பாடலைப் பாடுவதுபோல ஓர் உணர்வு வருகின்றது. முடிவில் அன்று அவர் படித்த காலத்தில் இருந்த ஆசிரியர்கள்,சமூகம் இன்றைய காலத்தில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் ,சமூகம் பற்றிய ஒப்பீடும், மதிப்பீடும் மிக எதார்த்தமாக, நடைமுறைச்சிக்கல்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளன.  

                                        எழுத்தாளர் பாமா, ஓர் ஆசிரியையாக இருப்பவர். தனது ஆசிரியருக்கு கடிதம் எழுதுவதுபோலத் தனது கட்டுரையை 'இந்த் டீச்சருகிட்ட அடிக்க மாட்டாங்க ' என்னும் தலைப்பில் கொடுத்திருக்கின்றார். தனது சிறுவயதுக் கனவு ஓர் ஆசிரியை ஆக வேண்டும் என்பதும் அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று தனது ஆசிரியை பற்றிக் குறிப்பிடுகின்றார். தனது ஆசிரியை சொல்லிக் கொடுத்த சில பாடல்கள் இன்றும் நினைவில் இருப்பதாகக் குறிப்பிட்டு , அந்தப் பாடல்களைக் குறிப்பிடுகின்றார். சாதி அடிப்படையில் தன்னை இழிவுபடுத்திய தலைமை ஆசிரியர் பற்றிக் குறிப்பிடுகின்றார். " என்னைப் பதப்படுத்திய உருவாக்கிய ஊக்கமூட்டிய பல ஆசிரியைகளின் கைவண்ணந்தான் இப்போது இருக்கும் இந்த 'நான்' .இவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம் ...." பக்கம் 81 என்று குறிப்பிடும் பாமா இத்தனைக்கும் ஆதிமூலமான உங்களை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என்று தனது பல ஆசிரியர்களை நினைவுபடுத்தி அவர்களைப் பாமா வணங்குகின்றார்.
                    
                                         பத்திரிக்கையாளர் ஞாநி , 'நான் பள்ளி ஆசிரியனாக இருந்தால்' என்று தனது கனவு ஆசிரியரைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கின்றார். ' என்னைச்சுற்றியுள்ள இன்றைய உலகம் புத்திசாலி மனிதர்களின் அயோக்கியத்தனங்களாலும் , நல்ல மனிதர்களின் முட்டாள்தனங்களாலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது " என்று குறிப்பிடும் ஞாநி, இந்த நிலையை மாற்றக்கூடியவர்கள் தன் வகுப்பறையில் இருப்பதாக தான் ஆசிரியராக இருந்தால் நம்புவேன்  என விவரிக்கின்றார்.  

                             இந்த கனவு ஆசிரியர் நூலில் மிகவும் குறிப்பிடத்தக்க கட்டுரை ஆயிஷா இரா, நடராஜனின் 'எங்கள் ஆசிரியரிடம் ஒரு பயாஸ்கோப் இருந்தது ' என்னும் கட்டுரை. நிறைய அறிவியல் நூல்களை இன்று எழுதும் நடராஜன் , தனக்கு அறிவியல் மனப்பான்மை வரக்காரணமாக இருந்தவர் பெரியசாமி வாத்தியார் என்பதனை மிக்க நன்றி உணர்ச்சியோடும், உணர்வோடும் எழுதுகின்றார். ஆறாம் வகுப்பில் " என் வாழ்வின் மொத்த அர்த்தத்தையும் மாற்றித் திசை திருப்பும் பெரிய சக்தியாக அங்கே போன மூன்றாம் நாள் பெரியசாமி சார் அறிவியல் ஆசிரியராய் எங்கள் வகுப்பறைக்குள் நுழைந்தார் ' என்று விவரிக்கும் இரா.நடராஜனின் கட்டுரை இன்றைய அறிவியல் ஆசிரியர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை.

                    ஓவியரான டிராட்ஸ்கி மருது 'அப்பாதான் எனது கனவு ஆசிரியர்' என்று தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கின்றார். 'உலகம் மிகப்பெரிய வகுப்பறை ' என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் தனது எண்ண ஓட்டங்களை வாசகர்களிடம் தெரிவிக்கின்றார். 'பொறுமைதான் ஆசிரியருக்கான அடிப்படைப் ப்ண்பு ' எனச்சொல்லும் எஸ்.இராமகிருஷ்ணன், 'கற்றுக்கொள், கற்றுக் கொடு,கற்றதை செய்ல்படுத்து ' என்று குறிப்பிடுகின்றார்.

                                   ஆயிஷா இரா.நட்ராசன் தன் அறிவியல் வாத்தியாரைச்சொல்லி  கலக்குகிறார் என்றால் எழுத்தாளர் த.வி.வெங்கடேஸ்வரன் தனது கணக்கு வாத்தியாரைச்சொல்லி கலக்குகிறார். த.வி.வெங்கடேஸ்வரன் தனது உயர் நிலைப்பள்ளி கணித ஆசிரியர் சங்கரன் சார் பற்றி ' காதலைத் தூண்டி விட்ட எனது கணித ஆசிரியர் '  என்னும் கட்டுரையை எல்லோரும் படிக்க வேண்டும். புதுமையான, எளிமையான சங்கரன் சார் அவர்கள் கணிதப்பாடத்தை நடத்திய விதம் அறியவாவது நீங்கள் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்.

                                         " அந்நிய சூழல், அன்பற்ற ஆசிரியர்கள்,கழுத்தை அறுக்கும் போட்டி, தலைசுற்றும் வீட்டுப்பாடம், நாளொரு தேர்வு என்று அவர்கள் (மாணவர்கள்) வெளியே வரத் தெரியாத மாயப்பாதையில் மாட்டிக்கொண்டு அவதியுறுகிறார்கள்.குழ்ந்தைகளின் படைப்பாக்கத்திறன் மிக நேர்த்தியாக நசுக்கப்பட்டு அவர்கள் நெஞ்சங்களில் தங்கப்பதக்கங்கள் தவழ்கின்றன.அவர்களின் கருத்துக்கள் குருத்துக்களிலேயே வெட்டப்பட்டுவிடுகின்றன" பக்கம் 118 என்று கூறும் வெ.இறையன்பு இலட்சிய ஆசிரியர்களுக்கான 10 படிகளை வரிசைப்படுத்திக்கூறுகின்றார்.

                                            எழுத்தாளர் கீரனூர் ஜாகீர்ராசா 'நீங்களும் மருதமுத்து அய்யாவாக விரும்புகிறேன் ' என்று தனது கட்டுரை தலைப்பையே தனது ஆசிரியர் பெயரால் கொடுத்திருக்கின்றார். தனது தந்தை, தாய். ..பள்ளி இறுதித்தேர்வில் தோல்வி ...,அதற்காக கலங்கிய தன் தந்தையின் கண்களும், அதன் தொடர்ச்சியாக தூக்கம் தொலைத்த இரவுகளும் என விவரித்துச்செல்கின்றார். மருதமுத்து அய்யா போதித்த தமிழுணர்வு, பகுத்தறிவு,பொதுவுடமை மட்டுமல்ல , நீ பின்னாளில் எழுத்தாளனாகவோ,பேச்சாளனாகவோ வருவாய் எனும் கணிப்பு போன்றவற்றை எழுதிச்செல்லும் கீரனூர் ஜாகீர்ராசா தன் வாழ்வின் நிகழ்வுகளை முன்னிறுத்தி எழுதியுள்ள கட்டுரை எதார்த்தமாக உள்ளது. எழுத்தாளர் பவா.செல்லத்துரையின் கட்டுரை பல கசப்பான அனுபங்களையும் , பல ஆசிரியர்களின் இழிவுகளை  தன் எளிய கம்பீரத்தால் துடைத்த தனது ஆசிரியர் எ.அ.ஜெயக்குமார் பற்றிக் குறிப்பிடுகின்றார். முடிவில் இந்தப் புத்தகத்தின் தொகுப்பு ஆசிரியர் க.துளசிதாசன் அவர்களின் கட்டுரையும் முடிவில் ஆப்ரஹாம் லிங்கன் தனது மகன் படித்த தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.

                                                        சில கட்டுரைகளை மிக விரிவாகப் பேசலாம். குறிப்பாக ச.தமிழ்ச்செல்வன், ஆயிஷா இரா.நடராசன், த,வி,வெங்கடேஸ்வரன், கீரனூர் ஜாகீர்ராசா ஆகியோரின் கட்டுரைகள் ஒவ்வொன்றைப்பற்றியும் பல பக்கங்கள் எழுதலாம் .விவாதிக்கலாம். இந்தப் புத்தகத்தை வாங்கி வீட்டில் கட்டாயம் வைத்திருங்கள். படியுங்கள். கண்ணில் படுகின்ற ஆசிரியர், ஆசிரியைகளிடம் கொடுத்து படிக்கச்சொல்லலாம். இந்தப் புத்தகத்தின் சில கட்டுரைகளை ஆசிரியர்களுக்குப்பாடம் எடுப்பவர்களிடம் கொடுத்து விவாதிக்கச்சொல்லலாம். பல ஆண்டுகள் கழிந்த பின்னும் மாணவர்களின் மனதில் மாமனிதர்களாய் அமர்ந்திருக்கும் ஆசிரியர்களின் குண நலன்கள் என்ன என்பதனை உணரச்செய்யலாம். ( அகில இந்திய வானொலி- புத்தக அறிமுகத்திற்காக எழுதியது  )
.