Sunday 28 April 2013

அண்மையில் படித்த புத்தகம் : சிங்கப்பூர் வாங்க !

அண்மையில் படித்த புத்தகம் : சிங்கப்பூர் வாங்க !

நூலின் தலைப்பு : சிங்கப்பூர் வாங்க !
நூல் ஆசிரியர்கள் : ஜெயந்தி சங்கர் , ரம்யா நாகேஸ்வரன்
வெளியீடு                 : விகடன் பிரசுரம்
முதல் பதிப்பு          : ஆகஸ்ட் ,2006 , 175 ப்க்கம் , விலை ரூ 80

                                                                             சிங்கப்பூர் அன்புடன் வரவேற்கிறது என்னும் தலைப்பில் நூல் ஆசிரியர்கள் , ஜெயந்தி சங்கர் &  ரம்யா நாகேஸ்வரன் ஒரு நல்ல முன்னுரையைக் கொடுத்து ' இந்தியருக்கு சிங்க்ப்பூர் இன்று அண்டை வீடாகிப்போனது .சுற்றுலாப் பயணியாகவும், மாணவனாகவும் மற்றும் பிழைப்புத் தேடி வருவோருக்கும் சிங்கப்பூர்தான் முதல் தேர்வு " என்பதனைச்சொல்லியிருக்கிறார்கள் . ஏன் என்பதனை மிக விளக்கமாக 14 தலைப்புகளில் நூலின் உள்ளே விவரித்திருக்கின்றார்கள்.

                                அறிமுகம் என்னும் பகுதியில் சென்னையிலிருந்து விமானத்தில் எவ்வளவு நேரப்பயணம் என்பது முதல், சிங்கப்பூரில் எது எதற்கெல்லாம் பைன் கட்டவேண்டும் என்பதனை முன்கூட்டியே கொஞ்சம் நம்மை உஷார் படுத்தி, சிங்கப்பூர் வெள்ளி பற்றியும் , இங்கிலீசு சிங்கிலீசு பற்றியும் நல்ல கல கலப்பாகவே சொல்லியிருக்கின்றார்கள். 2-ம் அத்தியாயத்தில் சிங்கப்பூரின் வரலாறு பழையது ,புதியது இரண்டையும் கொடுத்து எப்படி அது சவால்களை சந்தித்து வென்றிருக்கிறது என்பதனையும் , சிங்கப்பூரின் சிற்பியான லீ க்வான்யூ எப்படி சிங்கப்பூரின் இன்றைய வளர்ச்சிக்கு அடிகோலினார், வளர்த்தார் என்பதனையும் புள்ளி விவரங்களோடு கொடுத்திருக்கின்றார்கள்.

                       3-ம் அத்தியாயத்தில் பண்டிகைகள், சீனப்புத்தாண்டுக் கொண்டாட்டம், வேற்றுமையிலும் எப்படி ஒற்றுமையோடு இருக்கின்றார்கள், வித விதமான சாப்பாடு , அது கிடைக்குமிடம் எனப் பட்டியலிட்டு அசத்தியிருக்கின்றார்கள். 4--ம் அத்தியாயத்தில் நம்பிக்கைகள், பலன்கள்  என்று தொகுத்து தந்துள்ளார்கள். நாய் ,பன்றி ,எலி,காளை ....என்னும் ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு எப்படி இருப்பார்கள் என்று நம்பும் நம்பிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.இந்த புத்தகத்தில் இந்த விவரங்கள் இவ்வளவு விரிவாக நம்மூர் ராசி பலன் மாதிரி தேவையில்லை என்பது என் கருத்து.
                  சுற்றுலா சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் , ஷாப்பிங் செல்ல   இருக்கும் இடங்கள் பற்றியும் அத்தியாயம் 5 மற்றும் 6-ல் விவரித்துள்ளார்கள்.

               அண்டை நாடுகள் என அத்தியாயம் 7-ல்  மலேசியா, தாய்லாந்து மற்றும் பல்வேறு நாடுகளைப் பற்றிய தகவல்கள், எப்படி அந்த நாடுகளுக்கு சிங்கப்பூரிலிருந்து செல்வது போன்ற விவரங்கள் உள்ளன. குட்டி குட்டி நாடுகளைப் பற்றிய விவரங்களைப் படிக்கும்போது, எதிர்காலத் தமிழ் ஈழமும் பக்கத்து நாடாக அமையும் என்னும் நம்பிக்கையும் , சிங்கப்பூர் போல உலகில் அது புகழ்பெறும் என்னும் எண்ணமும் பிறக்கிறது.

               அத்தியாயம் 8-ல் கல்வி முறை பற்றிய விரிவான தகவல்களைக் கொடுத்திருக்கின்றார்கள். இந்த அத்தியாயத்தை மட்டும் எடுத்து நமது கல்வியாளர்களிடம் கொடுக்கலாம். நமக்கும் அவர்களுக்கும் கல்வி முறையில் எப்படி வேறுபாடு, எப்படி அவர்களின் கல்வி அவர்களை உயர்த்துகிறது என்பதனை சொல்லும் விதம் அருமை. " மாணவன் 'என்ன' கற்கிறான் என்பதை விட 'எப்படி' கற்கிறான் என்பதே வலியுறுத்தப்படுகிறது.(பக்கம் 85 ).அதனைப்போலவே கலைப்பள்ளிகள் பற்றியும் அதனைக்கற்றவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் பற்றியும் அடுத்த அத்தியாயம் பேசுகின்றது.

          சோசியல் விசிட், வேலை வாய்ப்பு, வேலை மற்றும் தகுதி போன்ற அத்தியாயங்கள் எப்படி மாணவர்கள் சிங்கப்பூரில் படிப்பது, எந்தத் தகுதி உள்ளவர்கள் எப்படிப்பட்ட வேலைகளைப் பெறலாம் சிங்கப்பூரில் பொன்ற பல உபயோகமான செய்திகளைக்கொடுத்ததோடு, முகவரிகள், இணையதள முகவரிகள் போன்றவற்றைக் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.குட்டி இந்தியா என்ற தலைப்பில் இந்தியாவில் நடப்பது போன்ற கோயில் விழாக்கள், ஒரு பகுதியைச்சேர்ந்தவர்கள் ஒன்று கூடுவது , ஊருக்குப்போகும்போது என்ன வாங்கிக்கொண்டு போகலாம் என்ப்தையெல்லாம் கொடுத்திருக்கின்றார்கள்.

                         கடைசி அத்தியாயத்தில் சிங்கப்பூரில் எப்படி தொழில் முதலீடு செய்யலாம்?எப்படி துவங்கலாம்? என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன என்பதையும் கொடுத்திருக்கின்றார்கள்.ஏஜெண்டுகளை நம்பி ஏமாறுவதை விட சிங்கப்பூர் செல்ல நினைப்போர் இந்தப் புத்தகத்தைப் படித்தால் தெம்பாக சிங்கப்பூர் சென்று வரலாம்.  என்னுடன் வேலை பார்க்கும் பொறியாளர் தோழர் ச.திருநாவுக்கரசு அவர்கள் இந்த நூலைக் கொடுத்து படிக்கச்சொன்னார்.நல்ல நோக்கத்தோடு , நல்ல முறையில் எழுதப்பட்டுள்ள புத்தகம் . படித்துப்பாருங்கள்.

Wednesday 24 April 2013

நியாய நாள் தீர்ப்புக்காக‌ !

நியாய நாள் தீர்ப்புக்காக‌
காத்திருக்கும் நண்பர்களே!
உங்கள் பார்வையில்
எங்களுக்குத் தண்டனையுண்டு
அந்த நாளில் !
பெற்றுக் கொள்கிறோம்
அப்படி ஒரு நாள் இருந்தால் !
நீங்கள் நம்பும்
ஆண்டவன் அங்கிருந்தால் !

இவ்வுலகின் இன்னல்கள்
பலவும்
மதமென்னும் மாயையில்
மாட்டிக்கொண்ட மனிதர்களால்
எனும் எங்கள் கருத்தையும்
சொல்ல இடம் கொடுங்கள் !

கடவுள் இல்லை என்றாலே
கழுத்தை முறிக்கும்
மன்னர்கள் ஆட்சிபோல‌
கணினி யுகத்திலும்
கடுமை வேண்டாம் !
மனிதத்தை நம்புங்கள் !
நீங்கள் நம்பும்
நியாய நாள் தீர்ப்பை எண்ணி
அமைதியாயிருங்கள் !

ஒரு கடவுளை நம்பும்
ஒரு பிரிவினர்
கடவுளைத் தொழும் வேளை
அதே கடவுளின்
மற்றொரு பிரிவால்
குண்டு வெடிக்கிறதே !
மனித உடல்கள்
வெடித்துச் சிதறி
நூறு அடி தூரம் முழுவதும்
இரத்தமாய் கொட்டிக்கிடக்கிறதே !
பக்கத்து நாட்டில்
பலமுறை நடக்கிறதே !
இது எதன் பேரால்
நடக்கும் இன்னல் நண்பா ?
ஆண்டவர் பெயரால் தானே !

நாலு வகை வர்ணம் பிரித்து
நாலாயிரம் சாதி வகுத்து
இன்றும் கூட தர்மபுரிகள்
எரிகின்றதே !
பார்க்காதே ! தீண்டாதே 1
அண்டாதே எனும் அநீதி
இன்றும் கூட தொடர்கிறதே
கடவுளின் பெயரால் !

என் கடவுள் இருக்கிறது!
உன் கடவுள் இல்லை !
எனும் போராட்டம்தானே
ஆயிரம் ஆண்டு
சிலுவைப்போர்கள் !
எத்தனை உயிர்கள்
அழிந்தன !
செத்தது மனிதம்தானே !

உழைப்பவன் உணவுக்கு
அலைவதும்
உழைக்காதவன் உண்டு
கொழுப்பதுவும் கடவுள்
ஆணை என்று சொல்லி
நம்மைப் பிரித்துவைக்க
சிலர் செய்த சூழ்ச்சி
கடவுள் என்பதும்
அது போட்ட குட்டி
மதம் என்பதுவும்

பட்டினாய் கிடப்பவன்
அப்படிக் கிடப்பது
கடவுளின் தண்டனை
என்று கதைப்போர்க்கு
மத்தியில்

உலகில் உள்ள எல்லோரும்
உண்ணவும் உறங்கவும்
உடுக்கவும் பொருள்
வேண்டும் என்போர் எல்லாம்
உரக்கச்சொல்லும் வார்த்தை
"எவரின் கடவுளும்
இல்லை,இல்லை,
இல்லவே இல்லை "
என்பதுதான்

எழுதியவர் :வா. நேரு
நாள் :2013-04-23 21:05:55
நன்றி : எழுத்து.காம்

Thursday 4 April 2013

அண்மையில் படித்த புத்தகம் : புதையல் புத்தகம்


நூலின் தலைப்பு                   : புதையல் புத்தகம்
ஆசிரியர்                                   : சா. கந்தசாமி
வெளியீடு                                 : கவிதா பப்ளிகேஷன், சென்னை-17.
முதல் பதிப்பு                           : டிசம்பர் 2011
பக்கங்கள்                                 : 272, விலை ரூ 150.

                                                            புதையல் புத்தகம் என்னும் இந்தப்புத்தகத்தில் சா. கந்தசாமி அவர்கள் படித்தால் புதையல் போல் கருத்துக்களும், மகிழ்ச்சியும் ,துயரமும் கிடைக்கக்கூடிய புத்தகங்களைப் பட்டியலிட்டு அந்தந்தப் புத்தகத்தின் அருமை,பெருமைகளை எடுத்துக்காட்டியுள்ளார்.

                                                            " புதையல் புத்தகம் இரண்டு அம்சங்களை  எடுத்துச்சொல்கிறது. முதல் அம்சம் படித்தவர் ஈடுபாடு; அக்கறை; ரசனை. இரண்டாவது அம்சம் படித்த புத்தகத்தை எடுத்துச்சொல்லும் முறை. புத்தகத்தில் சொல்லப்பட்டு இருப்பதும், சொல்லப்படாமல் இருப்பதுமான தனித்தன்மை. புதையல் புத்தகம் ஒவ்வொன்றும் அசல் புத்தகம் என்றும், படிக்கப்பட வேண்டிய புத்தகம் என்ற கருத்துடனே எழுதப்பட்டு இருக்கிறது."என்று முன்னுரையில் குறிப்பிடுகின்றார் இந்த நூலின் ஆசிரியர் சா.கந்தசாமி.

                                                           மொத்தம் 47 புத்தகங்களை புதையல் புத்தகங்களாக இன்றைய தலைமுறைக்கு அடையாளம் காட்டுகிறார் ஆசிரியர். " ஆனந்தரங்கப்பிள்ளை நாள் குறிப்பு  ,  பெரியாரின் அயல் நாட்டுப்பயணக்குறிப்புகள்,  சங்க இலக்கியத்தில் தாவரங்கள், காரல் மார்கஸ், நடந்தாய் வாழி காவேரி, தமிழ் நாடு, சிவ பாதசேகரனின் தஞ்சைக்கல்வெட்டுகள், நாடு விட்டு நாடு, ரசிகன் கதைகள், இருபது வருடங்கள், என் கதை, தம்பிரான் வணக்கம், பெளத்தமும் தமிழும், மலையருவி, சித்திரம் பேசுதடி, மதராசபட்டினம், ஆகாயத்தாமரை, மயன் கவிதைகள், கலைஞர் முதல் கலாப்பிரியா வரை, கமலாம்பாள் சரித்திரம், வாழ்க்கைக்குறிப்புகள், பிரதாப முதலியார் சரித்திரம், என் சரித்திரம், புதுக்குரல்கள், பிரசாதம், போதி மாதவன், வீடுபேறு, கன்யாகுமரி, சிலப்பதிகாரம், பரமார்த்த குருவின் கதை, மங்கையர்க்கரசியின் காதல், வரும் போகும், ஆத்ம சோதனை, குறுந்தொகை, அழியாச்சுடர், கோநகர் கொற்கை, அறியப்படாத தமிழகம், சேர நாட்டில் தமிழ் வட்டெழுத்து, வெள்ளிப்பாதரசம், வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப்பேரகராதி, தமிழ்ச்சுடர் மணிகள், புயலிலே ஒரு தோணி, புதுமைப்பித்தன் வரலாறு, அன்று வேறு கிழமை, சிந்தா நதி, மாந்தருக்குள் ஒரு தெய்வம், தாசிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர் " ஆகிய 47 புத்தகங்களைப் பற்றிய பெருமைகளையும் , அவை வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றிய தனது கருத்தையும் பதிந்துள்ளார் ஆசிரியர்.

                                 பேச்சுத்தமிழில் எழுதப்பட்ட அபூர்வப் புத்தகம் , இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த சுய சரித்திரம் , 1736-ஆம் ஆண்டு முதல் 1761 ஜனவரி 12 வரை தொடர்ந்து எழுதப்பட்ட நாள்குறிப்பு - "ஆனந்தரங்கப்பிள்ளை நாள் குறிப்பு" என்பதனைக் குறிப்பிட்டு , தமிழ் அறிந்தவர்கள் படிக்க வேண்டிய தமிழ்ப்புத்தகம் , எனக்குறிப்பிடுகின்றார் நூலின் ஆசிரியர் சா. கந்தசாமி.

                             இரண்டாவது புத்தகமாக பெரியாரின் " பெரியாரின் அயல் நாட்டுப்பயணக்குறிப்புகள் " என்னும் புத்தகத்தைக்குறிப்பிட்டு , " பெரியாரின் முதல் வெளி நாட்டுப்பயணம் மலேசியா.1929 ..... புதிய நாட்டில் மாறுபட்ட சூழ் நிலைகளில் வாழ்கின்ற தமிழர்கள் சாதி, சமய வேறுபாடுகளை கை விட்டுவிட்டு, மூடப்ப்ழக்கங்களை ஒழித்து விட்டு ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று அறிவுறுத்தினார். பெரியார் மலேசிய பயணம் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த தமிழர்களிடையே ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் பொங்கலைத் த்மிழர் திரு நாளாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள் " பக்கம் 19-ல் ..

                              இலக்கியத்தையும் தாவரத்தையும் ஒப்பிட்டு பக்கம் 26-ல் சா.கந்தசாமி இவ்வாறு எழுதுகின்றார் ..." இலக்கியம் என்பது ஒற்றைப்பரிணாமம் கொண்டதில்லை. அதற்கு எல்லையோ ,காலமோ கிடையாது . ஒரு மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் மொழிக்குள்ளே அடங்கியிருப்பது இல்லை. அசலான தன் அடையாளங்களோடு - பொதுத்தன்மை பெற்று எல்லோருக்கும் பொதுவாக இருப்பதாகும். அதாவது கொடி ,செடி, மரங்கள் என்னும் தாவரங்கள் எங்கு வளர்ந்தாலும் என்ன பெயரில் அழைக்கப்பட்டாலும் அவை எல்லோருக்கும் பொதுவாக இருக்கின்றன " , இந்த ஒப்புமை இதுவரை நான் எதிலும் படித்ததில்லை, அழகான உவமையாக இந்த ஒப்புமை இருக்கின்றது எனக் கருதுகின்றேன்.

                               வெ. சாமி நாத சர்மா  எழுதிய "காரல் மார்க்ஸ் " என்னும் புத்தகத்தை குறிப்பிடும் திரு,சா.கந்தசாமி " காரல் மார்க்ஸ் என்னும் புத்தகத்தின் அடி நாதம் அவர் சொந்த வாழ்க்கைதான். அதனோடு பல இழைகள் வந்து சேர்ந்து கொள்கின்றன " (பக்கம் 29). எனச்சொல்கின்றார். செத்துப்போன தன் பிள்ளைக்கு சவப்பட்டி வாங்க காசு சேர்த்து வைக்கவில்லை, ஆனால் இலட்சக்கணக்கான பிள்ளைகள் செத்துப்போகாமல் இருப்பதற்கான தத்துவத்தை சொன்னவரல்லவா காரல் மார்கஸ்.

                             "நாடு விட்டு நாடு - என்று தன் குடும்பத்தின் சரித்திரத்தைச்சொல்லும் முத்தம்மாள் சுய சரித்திரம் ஒரு புலம் பெயர்ந்த குடும்பத்தின் வழியாகப் பல குடும்பங்களின் சொல்லப்படாத சரித்திரத்தைச்சொல்வதாகும்.: பக்கம் 51.எழுபதாவது வயதில் எழுதிய சுய சரித்திரம் என்பதனை சுட்டிக்காட்டுகின்றார்.
                             18 சிறுகதைகளை மட்டுமே எழுதியிருக்கும் ந.ரகுநாதன் ஏன் முக்கியமானவர் என்பதனை 'ரசிகன் கதைகள் ' விமர்சனத்தில் அழகுற விளக்கியுள்ளார். " இலக்கிய அங்கீகாரம் என்பது எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததில்லை. அசலான படைப்பு,தரமானது என்பதால் வருவதாகும் " என்று சொல்கின்றார் சா.கந்தசாமி பக்கம் 54-ல்.

                            இப்படி மேலே சொன்ன 47 புத்தகங்களைப் பற்றியும் தரமான விமர்சனங்களை, பாராட்டுக்களை வைக்கின்றார் சா. கந்தசாமி. மூவலூர் ஆ.ராமாமிர்தம் அம்மையார் தன்னுடைய 53-ஆம் வய்தில் எழுதிய " தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர் " என்னும் நாவலோடு இந்த புதையல் புத்தகம் முடிகின்றது. " பெண் கல்வி ,பெண்கள் முன்னேற்றம் என்று தமிழகத்தில் பாடுபட்ட பெரியார் தேவரடியார்கள் ஒழிப்பிலும் முதன்மையாக இருந்தார். அது பற்றிச்சமூகம் என்ன சொன்னாலும் , சாஸ்திரங்கள் புகழ்ந்து சொன்னாலும் தேவரடியார்கள் என்பது ஒழிக்கப்படவேண்டியது. அத்ற்கு எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும்; தேவரடியார்கள் குலத்தினர் பெண்களும் ஆண்களும் முன்னணியில் இருக்க வேண்டுமென கூறினார். சமூக வளர்ச்சி, சமத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடும் அக்கறையும் கொண்ட பலர் அவர் அறை கூவலை ஏற்றுத் தன்னளவில் போராட முன் வந்தார்கள். அவர்களில் ஒருவர் மூவலூர் ஆ.ராமாமிர்தம் அம்மாள் .....பெரியார் ஆரம்பித்த சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டார். தமிழகம் முழுவதும் சென்று பொதுக்கூட்டங்களில் பேசினார். அவருக்கு எழுதுவதில் ஆர்வம் இருந்தது. ... புனைகதைகள் கருத்தை எடுத்துச்சொல்ல ஒரு சாதனம் என்று கருதி 1936-ஆம் ஆண்டில் தாஸிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் என்ற நாவலை எழுதி வெளியிட்டார். . .. நாவல் கதை சொல்கிற நாவல் இல்லை. பிரச்சார நாவல். தீமை என்றும் , சமூக அவலம் என்றும் கருதப்பட்ட ஒரு வழக்கத்தை அக்குலத்தில் பிறந்த ஒரு பெண் ஒழிக்க எழுதப்பட்டதாகும். " (பக்கம் 269-270.)

                                 ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றியும் சொல்லிவிட்டு , அந்த அசல் புத்தகத்தின் ஒரு பகுதியை அப்படியே கட்டுரையின் கடைசி இணைப்பாக கொடுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். பெரும்பாலும் சுய வரலாற்றுப்புத்தகங்கள் என்றாலும் படித்தவர் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர் படித்திருக்கவேண்டிய, அல்லது படிக்க வேண்டிய புத்தகங்களை சிறப்பாகச்சுட்டிக்காட்டி இருக்கின்றார் சா. கந்தசாமி அவர்கள்.