Saturday 29 March 2014

நிகழ்வும் நினைப்பும்(20) வாழும் படைப்பாளியை அவர் வாழும் காலத்திலேயே பாராட்டுவது

           நிகழ்வும் நினைப்பும்(20)  வாழும் படைப்பாளியை  அவர் வாழும் காலத்திலேயே பாராட்டுவது :


                                         புதுச்சேரியில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80-ம் ஆண்டு  பிறந்த நாள் விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை 23.3.2014 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. எழுத்து. காம் இணையதளத்தில் எழுதக் கூடிய பல தோழர்களை, தோழியர்களை சந்திக்கும் வாய்ப்பினை புதுச்சேரி தோழர் அகன் என்னும் தி.அமிர்த கணேசன் ஏற்படுத்தித் தந்திருந்தார்.  80 படைப்பாளிகளுக்கு விருது அளிக்கப்பட்டது,9 நூல்கள் வெளியிடப்பட்டன.அதில் சூரியக் கீற்றுகள் என்னும் என்னுடைய கவிதைத் தொகுப்பும் ஒன்று. தொடர்ந்து இயங்கும், தன்னுடன் இருப்பவர்களை இயக்கும் பல்துறைக் கவிஞர் அய்யா கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களால் என்னுடைய கவிதை நூல் வெளியிடப்பட்டது மகிழ்ச்சி தந்தது.

                                                        புதுச்சேரி சென்று அடைந்தவுடனேயே, புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் அய்யா சிவ.வீரமணி அவர்கள் ரெயில் நிலையத்திற்கே வந்து வரவேற்றார்கள். அன்று முழுவதும் அவரோடு சில மணி நேரங்கள் இருப்பதற்கும், உரையாடுவதற்கும்,சிற்றுண்டி அருந்துவதற்குமான வாய்ப்பாக அமைந்தது. திராவிடர் கழகத் தோழர்களுக்கு உரித்தான எவ்வளவு வ்சதி வாய்ப்புகள் இருந்தாலும், உயர் பணியில் இருந்தாலும் தோழமை கலந்த நட்பும் மரியாதையும் வியப்புத் தருவது. அந்த வகையில் அய்யா சிவ.வீரமணி அவர்களின் இல்லத்தில் இருந்து காலையில் குளித்துவிட்டு, உணவ்ருந்திப் பின்பு பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் அய்யா புதுச்சேரி மு. ந. நடராசன் அவர்களோடு சேர்ந்து நிகழ்வு நடைபெறும் விவேகானந்தா பள்ளியைச்சென்று அடைந்தோம்.தோழர்கள் கடலூர் பகுத்தறிவாளர் கழக மாவட்டத்தலைவர்  ஜெயக்குமார், பொறியாளர் சிவக்குமரன் ஆகியோரும் வந்திருந்தனர். தோழர் புதுச்சேரி பழனி எங்கிருந்தோ வந்து தங்களின் படைப்பாக்கத்திற்கு வாழ்த்துக்கள் என்று சொல்லி பொன்னாடையப்  போர்த்தி விட்டு போனார்.

                                                             பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் நட்பு போல தொலைபேசி வாயிலாகவும், கணினி வாயிலாகவும் நான் அறிந்த தோழர் அகன் அவர்களைச்சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 60 வயது என நம்ப்முடியாத 35, 40 என எண்ணத்தோன்றும் தோற்றம். உற்சாகமான வரவேற்பு அளித்த தோழர் அகன் நான் நினைத்ததைவிட அதிகமாகவே நெற்றிக் குறிகளோடு இருந்தார். அதனை கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் பேசும்போது, என்னுடைய மூத்தமகனைப் போன்றவர்  அகன்  , நான் நாத்திகன், நான் வேண்டாம் என்று சொல்ல சொல்ல, இல்லை வேண்டும் என்று சொல்லி இத்தனை ஏற்பாடுகளையும் செய்த அகன் ஆத்திகன் என்று சொன்னபோது அரங்கம் அதிர்ந்தது.  எந்த இடத்திலும் நான் நாத்திகன் அல்லது ஆத்திகன் என்று தன்னை வெளிப்படையாக வெளிப்படுத்திக் கொள்வது , மாற்றுக் கருத்து உள்ளவரிடமும் அன்பு செலுத்துவது வரவேற்புக்குரியதுதான். பாராட்டுக்குரியதுதான்.

                                                     சில்ம்பொலி செல்லப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உரையரங்கம் நன்றாக் இருந்தது. முனைவர் க. பஞ்சாங்கம், முனைவர் மணிகண்டன் போன்றோரின் உரைகள், கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் இலக்கியப் படைப்புகளின் மேன்மையையும், தனித்தன்மையையும் தெளிவு படுத்தின, தொடர்ந்து தமிழகத்தின் மிகப்பிரபலமான கவிஞர்கள் யுகபாரதி, கருணாநிதி, இளம்பிறை உள்ளிட்டோரின் கவியரங்கம் நடந்தது. தொடர்ந்து கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் அருமையானதொரு ஏற்புரையை நிகழ்த்தினார். எனக்குப் பிடித்த கவிஞர்களில் ஒருவரான இளம்பிறை அவர்களைச்சந்திக்கும் வாய்ப்பும் ,உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. தோழர் பொள்ளாச்சி அபி , அகனோடு சேர்ந்து ஒத்துழைத்துக்கொண்டிருந்தார்.

                                    முழுக்க, ,முழுக்க இலக்கிய நிகழ்வாக, அரசியல் கடந்து , மதம் கடந்து நிகழ்ந்த நிகழ்வாக மிகச்சிறப்பாக அய்யா கவிஞர்  ஈரோடு தமிழன்பன் அவர்களின் விழா நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது. வாழும் படைப்பாளியை, அவர் வாழும் காலத்திலேயே பாராட்டுவது, அவருக்கு விழா எடுப்பது, எடுக்கும் விழாவையும் இலக்கியப் படைப்பாக்கத்திற்கான ஒரு களமாக ஆக்குவது, புதிய புதிய தோழர்களை ஊக்குவிப்பது, அவர்களின் படைப்பாக்கத்திறனை வெளிப்படுத்தும் நிகழ்வாக அந்தப் பாராட்டு விழாவை ஆக்குவது, எந்த விதப் பிசிறும் இல்லாமல் நிகழ்ச்சிகளை திட்டமிட்டு நடத்தியது, செவிக்கு உணவு மட்டுமல்லாது ஒரு நல்ல விருந்தினை அளித்தது என அத்தனையும் அகம் குளிர நடந்தது. அத்தனைக்கும் காரணமான தோழர் புதுச்சேரி அகன் என்ற தி.அமிர்த கணேசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

                                  
                                                        




பு

Friday 7 March 2014

நிகழ்வும் நினைப்பும் :(19) திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் முதல்வர்-டாக்டர் இரா.கனகசபாபதி


 நிகழ்வும் நினைப்பும் :(19)
2003 மார்ச்  8 வரை  மார்ச்-8  எனபது மகளிர் தினம் மட்டுமே என்பது போய் எனது வாழ்வின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரை இழந்த தினமாகவும் ஆகிப்போனது. எத்தனைதான் நாம் நேர்மையை, ஒழுக்கத்தை, மேன்மையை புத்தகங்களில் படித்தாலும், நேரிடையாக அப்படி வாழ்பவர்களைப் பார்க்கும்போதுதான் நமக்கு உந்துதலும் உத்வேகமும் கிடைக்கிறது என்பது உண்மை . அப்படி என் வாழ்வில் சந்தித்தவர்களில் மிக முக்கியமானவர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் முதல்வர் எங்கள் பிரின்ஸ்பால் திரு. டாக்டர் இரா.கனகசபாபதி அவர்கள்.

1981-முதல் 1984-வரை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்தபோது எங்களின் கல்லூரி முதல்வராக இருந்தவர் திரு. இரா.கனகசபாபதி அவர்கள். அப்படி ஒரு மரியாதை கலந்த பயம் மாணவர்களுக்கு அவரிடம் இருந்தது. ஆசிரியர்கள், பணிபுரிபவர்கள் எல்லோருக்கும் அப்படித்தான் அவரிடம். மிக அதிகமாகப் பேசமாட்டார். மிகத் தெளிவான முடிவுகளை எடுப்பார். மனித நேயத்தோடு மாணவர்களை அணுகுவது,உதவுவது  என்பது அவரின் பிறவிக் குணமாக இருந்தது.

                                  முதலாம் ஆண்டு , முதல் செமஸ்டரில் நல்ல மதிப்பெண் எடுத்தவுடன் அவரது அறைக்கு அழைத்தார். எனது குடும்ப விவரங்களையெல்லாம் கேட்டுக்கொண்டார். வீட்டில் நாங்கள் 5 பேர். அம்மா மட்டும்தான் ஆசிரியராக இருக்கின்றார்கள். அப்பா இறந்து விட்டார் என்பதையெல்லாம் அறிந்து கொண்ட அவர், எந்த ஹாஸ்டலில் இருக்கின்றாய் என்றார். ' காந்தி விடுதி ' என்றேன். நல்லது , அங்கேயே இருந்து தொடர்ந்து படி என்றார். பகுதி நேரமாக வேலை பார்க்கின்றாயா? ஹாஸ்டலில் பணம் கட்டுவதற்கு வசதியாக இருக்கும் என்றார். சரி என்றேன். முதல் முதலில் எனக்கு உழைப்பின் மூலம் கிடைத்த பணம் , சம்பளம் என்பது திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நூலகத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்துக் கிடைத்துதான். கல்லூரி 4 மணிக்கு முடியும். மாலை 4 முதல் 6 மணிவரை கல்லூரி நூலகத்தில் வேலை. மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டுவரும் புத்தகங்களை பதிவது, புத்தகங்களை அடுக்கி வைப்பது, பிரித்து அடுக்குவது போன்ற வேலைகள். கல்லூரிக் காலத்தில் நூலகத்தில் இருந்ததும், நூல்களை அடுக்கியதும் .அந்த வேலைகள் மூலமாக கல்லூரிக்கு பணம் கட்டியதும் டாக்டர் இரா,கனகசபாபதி அவர்கள் இல்லையென்றால் இல்லை.

                                            காந்தி ஹாஸ்டல் என்றும், மெயின் ஹாஸ்டல் என்றும் இரண்டு ஹாஸ்டல் அன்று திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இருந்தது. மெயின் ஹாஸ்டலில் மாத மெஸ் பில் 600 என்றால் காந்தி ஹாஸ்டலில் 200 ரூபாய்தான் வரும் , ஏழை மாணவர்கள் தங்கிப் படிக்க ஓர் அருமையான அமைப்பை கல்லூரி நிர்வாகத்தோடு கலந்து ஏற்படுத்தி இருந்தார். அளவு சாப்பாடுதான் என்றாலும் பணம் நிறையக் கட்ட முடியாதவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக காந்தி ஹாஸ்டல் இருந்தது. அதில் படித்தவர்கள் இன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். ஏழை மாணவர்கள் தங்கள் ஏழ்மையை உணர்ந்து படிப்பதற்கான இடமாக் அன்றைக்கு அந்த ஹாஸ்டல் இருந்தது,ஹாஸ்டலில் கண்டிப்பு இருக்கும் , ஆனால் கெடுபிடிகள் இருக்காது. 

                                 முதலாம் ஆண்டின் முடிவில்  விடுமுறை இரண்டு மாதங்கள். வகுப்பில் முதல் இரண்டு,மூன்று இடங்களுக்கு மார்க் எடுத்தவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது,.அது தினத்தந்தி அலுவலகத்தில் வேலை பார்ப்பது. எனக்கு மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் வேலை பார்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. மூன்று நேரமும் தினத்தந்தி அலுவலகத்தில் சாப்பிட்டுக் கொள்ளலாம். அப்போது இரண்டு மாதம் வேலை பார்த்தற்கும் ஒரு சம்பளம் போட்டுக் கொடுத்தார்கள், மீண்டும் அது படிப்புச்செலவுக்கு உதவியது. இது எனது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள். இப்படி ஏழ்மையோடு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்த ஒவ்வொரு மாணவர் வாழ்வு உயர்விலும் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் பங்களிப்பு என்பது மகத்தானது. மறக்க முடியாதது. எனது கல்லூரி வாழ்வில் ,பெரியாரியலை எனக்கு முறையாக அறிமுகப்படுத்திய பேரா.கி.ஆழ்வார் அவர்களின் பங்களிப்பும் மகத்தானது.டாக்டர் இரா.கனகசபாபதி அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர். ஆனால் பேரா.கி.ஆழ்வார் அவர்கள் பெரியாரிஸ்ட். ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒருவருக்கொருவர் அவ்வளவு மரியாதையும், அன்பும் இருந்தது.

                              மூன்றாம் ஆண்டு , கடைசி செமஸ்டர் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன. எனது அண்ணன் திரு வா.ஜெயராஜூ அவர்கள் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை கிடைத்திருக்கும் கடிதத்தோடு நேரிலே வந்து கொடுத்து , வேலையில் போய்ச்சேர். உன்னை விட மூத்தவர்கள் ,இரண்டு பேர் இருக்கின்றோம். எங்களுக்கு அரசு வேலை கிடைக்கவில்லை, உனக்கு கிடைத்திருக்கிறது,போய்ச் சேர்ந்தால் நல்லது , ஆனால் நீ மூன்று வருடம் படித்த படிப்பிற்கு , டிகிரி வாங்க முடியாதடா என்றார். நேரே போய் பிரின்ஸ்பாலைப் பார்த்தேன். அரசு வேலை வந்திருக்கின்றதா, வேலை கிடைப்பது அரிது, நீ நல்லாப் படிக்கிற, எம்.எஸ்.ஸி படிச்சு, போட்டித்தேர்வுகள் எல்லாம் நீ எழுதினால் வெற்றி பெறுவாய். ஆனால் உனது குடும்பம் இப்போ இருக்கிற நிலைமையில், நீ வேலைக்குப்போவது உனக்கு மட்டுமல்ல, உனது குடும்பத்திற்கும் நல்லது என்று சொல்லி, போய் அட்ட்ண்டன்ஸ் ரிஸிஸ்டரை வாங்கி வா என்றார். வாங்கி வந்தேன் . 45 நாள் கல்லூரி நடந்திருந்தது,45 நாளும் நான் வந்திருந்தேன்.  90 நாள் கல்லூரி நடக்கும், அதில் 45 நாள் வந்திருந்தால் பரீட்சை எழுதலாம் . போ, போய் வேலையில் சேர், அங்கு போய் உட்கார்ந்து படி. வந்து கெமிஸ்டரி பிராக்டிகல் பரீட்சையையும் , செமஸ்டர் தேர்வையும் எழுதிச்செல் என்றார் அப்படித்தான் , நான் பி.எஸ்.ஸி கெமிஸ்டரியை  நல்ல மதிப்பெண்கள் பெற்று , முடித்தேன். வேலைக்குப் போனாலும் தொடர்ந்து படித்துக்கொண்டே இரு என்றார். 1984-முதல் 1998 வரை  நெருங்கிய தொடர்புகள் இல்லை.

                               மதுரை தொலைதொடர்புத் துறையில் வேலை பார்த்துக்கொண்டிருநதபோதுதான், 1996-ல்  பிரின்ஸ்பால், மதுரையில் ஸ்பார்க் செண்டர் பார் ஐ.ஏ.எஸ். என்னும் நிறுவனத்தை அற்க்கட்டளை நிறுவி நடத்தப்போகின்றார் என்று தெரியவர, நானும் தொலைபேசித்துறையில் வேலை பார்த்த நண்பர் இரா.சீனிவாசனும் அவரைப் போய் பார்த்தோம். மதுரையில் இருந்த திருச்செந்தூர் கல்லூரி பழைய மாணவர்கள் பல் பேரைச்சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மதுரை பெயிண்டிங் கம்பெனி உரிமையாளர்-திருச்செந்தூர் கல்லூரியின் முன்னாள் பேரா. திரு. டி.கல்யாணசுந்தரம், பேரா. திரு,மச்சக்காளை, பேரா.திரு. ஆண்டியப்பன், திரு.சுடலை போன்றவர்களின் நட்பும், தொடர்பும் கிடைத்தது.எனக்கு கற்றுக்கொடுத்த கணிதப்பேராசிரியர் சேகர் சார்,தமிழ்ப்பேராசிரியர் அய்யா இராமச்சந்திரன்,இயற்பியல் பேராசிரியர் இராமசேகரன் சார் எனப் பழைய பேராசிரியர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது.  தொடர்ந்து திரு.இரா,கனகசபாபதி அவர்களின் மாணவன் நான் என்று அறிமுகம் செய்து கொள்வதில் பெருமை கொள்பவனாகத் தொடர்கிறது வாழ்க்கைப் பயணம்.

                            பெரியாரியல் அடிப்படையில் நான் இணையரை அமைத்துக்கொண்டதும், நல்ல நிம்மதியான வாழ்க்கை நடத்திக் கொண்டுவருவதும் மிக்க மகிழ்ச்சி அவருக்கு. எனது குழந்தைகளை பேரன் அன்புமணி என்ன செய்கிறான், பேத்தி அறிவுமதி என்ன செய்கிறாள் என்றுதான் கேட்பார். அப்படி ஒரு பிரியம் தன்னுடைய மாணவர்களின் பிள்ளைகள் மீது. நண்பர் இரா.சீனிவாசன் , அவனது மகள் பாரதி மீதும் அதேமாதிரியான பாசம் பொழிந்தார் ,மதுரையில் வசித்த காலங்களில்.

                      மதுரை ஸ்பார்க் செண்டர் பார் ஐ.ஏ.எஸ். சார்பாக நானும்,மற்ற நண்பர்களும் இணைந்து பல கல்லூரிகளில் சென்று பேசியிருக்கின்றோம். எங்களுக்கு எல்லாம் பயிற்சி கொடுக்கும் ஆசிரியராக அவர் திகழ்ந்தார். கல்லூரி மாணவ், மாணவிகளிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது, அவர்களிடம் இருக்கும் சோர்வை, அறியாமையை எப்படி நீக்குவது, போட்டித்தேர்வுகள் எழுதுவதை எப்படி அவர்களிடம் ஊக்கப்படுத்துவது போன்ற பல செய்திகளைச்சொல்லுங்கள் என்பார்.சொன்னதன் அடிப்படையில் மாணவ, மாணவியர்கள் கொடுக்கும் மறுமதிப்பீடை( பீட்பேக்), ஒவ்வொரு தாளாகப் படித்து எங்களுக்கு ஆலோசனைகளை, பாராட்டுக்களைச்சொல்வார்.  மாணவ, மாணவியர்கள் நலனில் தனது கடைசி மூச்சுவரை பாடுபட்டவர் அவர். அவரது மாணவர்களில் மச்சேந்திரநாதன் போன்ற ஐ.ஏ.எஸ்.கள். மகாலிங்கம் போன்ற ஐ.ஆர்.எஸ்.கள், பேராசிரியர்கள், பல்கலைக் கழ்க ஊழியர்கள் என்று பரந்து விரிந்து இருக்கின்றார்கள். . பல பொறுப்புகளில், பல நாடுகளில் இருக்கின்றார்கள்.அவரிடம் படித்த ஒவ்வொருவரின் முன்னேற்றத்திலும் அவரது பங்களிப்பு நேரடியாக  இருக்கும்.

                                         நானும் நண்பர்களும், சார் , உங்கள் அனுபவங்களை ஒரு புத்தகமாகப் பதிவு செய்தால் என்ன என்று கேட்டபோது ,முதலில் மிகவும் தயங்கினார். சரி என்று முடிவுசெய்து ,அவர் தன்னுடைய அனுபவங்களை எழுத ஆரம்பித்தபொழுது அசந்து போனோம். அத்தனை பைல்கள். தான் பிரின்ஸ்பாலாக வேலை பார்த்த 26 ஆண்டுகளின் அனுபவங்களையும் பைல்களாக, தனித்தனி பதிவுகளாக வைத்திருந்தார். அவற்றையெல்லாம் இணைத்து ' How to develop a college in a rural area "  என்று ஒரு புத்தகமாக கொண்டு வந்தார். அற்புதமான புத்தகம். பல கல்லூரிகளில் ரெபரென்ஸ் புத்தகமாக உள்ள புத்தகம். மாணவர்கள் உள்ளம், அவர்க்ள் புறச்சூழல் அதன் விளைவாக அவனுக்கு இருக்கும் அகச்சூழல், பிற்படுத்தப்பட்ட தன்மை என்பது எப்படி அவனது மூளைக்குள் இருக்கின்றது, அதனை எப்படி நீக்குவது, ஆசிரியர்கள் கடமை என்ன, நிர்வாகத்தின் கடமை என்ன, பெற்றோர்களின் கடமை என்ன என்று தனது அனுபவத்தை எல்லாம் இணைத்து அந்த நூலைக் கொண்டு வந்தார். மறுபதிப்பு கொண்டு வரவேண்டும், அதனை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று பழைய மாணவர்களின் நினைப்பு இன்னும் நினைப்பிலேயே இருக்கின்றது.

                                          மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினராக இருந்து பல மாற்றங்களுக்கு காரணமாக இருந்தார். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ஒரு நாள் அவர் ஆவார் என்பது எங்கள் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.  மார்ச்-8 என்பது எங்கள் பிரின்ஸ்பால் திரு.டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின்  நினைவு நாள்:, அவரது இறுதி அடக்கத்தில் குலையன்கரிசலில் நேற்றுத்தான் கலந்து கொண்டது போல் இருக்கின்றது. 11 ஆண்டுகள் ஓடிவிட்டது. ஆம் அவர் மறைந்த நாள் மார்ச்-8 , 2003 . திருச்செந்தூர் என்ற பெயர் கண்ணில் பட்டாலே எனது நினைவுகளில் ஓடுவது டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் நினைவுகள்தான்.  மண்ணில் வாழ்ந்த மகத்தான மனிதர்கள் புத்தகங்களில் மட்டுமல்ல, நம்மைச்சுற்றியும் இருக்கின்றார்கள், இருந்தார்கள்...இருப்பார்கள்.                           

Sunday 2 March 2014

அண்மையில் படித்த புத்தகம் : ஜெயிப்பது நிஜம் - இன்ஸ்பயரிங் இளங்கோ

அண்மையில் படித்த புத்தகம்  : ஜெயிப்பது நிஜம்
ஆசிரியர்                                          :   இன்ஸ்பயரிங் இளங்கோ
பதிப்பகம்                                         :    கிழக்கு பதிப்பகம்- சென்னை-14. 044-42009601
முதல் பதிப்பு                                 :    ஜனவரி  2014 ,144 பக்கங்கள், விலை ரூ 100.

                                                               அனைத்திலும் இருந்து மாறுபட்ட புத்தகம் என்று கொடுத்திருக்கின்றார்கள். உண்மைதான். மற்ற சுய முன்னேற்ற நூல்கள் போல் இல்லாமல் மாறுபட்டதாக இந்தப் புத்தகம் அமைந்ததற்குக் காரணம் இது இன்ஸ்பயரிங் இளங்கோவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு என்பதால் மட்டுமல்ல , புத்தக வரிகளுக்குள் புதைந்து கிடக்கும் உண்மையாலும்தான் எனலாம்..

                                 நான் மாற்றுத் திறனாளி அல்ல சிறப்புத்திறனாளி எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் இளங்கோவின் தன்னம்பிக்கை , இந்த நூல் முழுவதும் விரவி  வாசிப்பவர்களைத் தன் வசம் ஆக்கிக் கொள்கிறது. அறிஞர் அண்ணாவின் மேற்கோளை உதாரணம் காட்டி , வாழ்தல் வேறு, இருத்தல் வேறு என்பதனை முன்னுரையில் விளக்கும் இளங்கோ, வாழ்தல் எப்படி என்பதனை தன் வாழ்வின் வெற்றிப்படிக்கட்டுகளில் இருந்து விளக்கிச்செல்வது எதார்த்தமாகவும், இயல்பாகவும் இருக்கிறது.

                               முதல் அத்தியாயத்தில் தன்னை ராக்கிங் செய்யும் ராபர்ட் என்னும் சீனியர் மாணவனை, இளங்கோ எதிர்கொண்டவிதம் அருமை. எதிராளியை நிலைகுலைய வைக்கும் ராபர்ட்டை நிலைகுலையச்செய்த அவரின் அணுகுமுறை மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டியது . "என்ன அப்பா, இவ்வளவு ஆர்வமா இந்தப் புத்தகத்தை படிச்சிக்கிட்டு இருக்கீங்க", என்று தன் கையில் வாங்கிய என் மகள் அறிவுமதி முழுவதுமாக படித்து விட்டுத்தான் என் கையில் கொடுத்தார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் 20 நாளில் இருக்கும் நிலையில், பாடத்தை மறந்து அவரைப் படிக்கத்தூண்டியதாக இந்தப் புத்தகம் அமைந்தது. படித்து முடித்து சில பகுதிகளைத் தன் தாயாரிடமும், தன் அண்ணனிடமும் படித்துக் காண்பித்துக்கொண்டிருந்ததைப் பார்த்ததும், இந்தப் புத்தகம் செய்யும் வேலை எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த அளவிற்கு ஈர்ப்பும், உண்மையுமாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. சூப்பர் இன்ஸ்பயரிங் புத்தகம்தான்., ".' வாழ்ந்து காட்டுவதை விட பழிவாங்கும் செயல் எதுவுமில்லை ' என்பதை அழுத்தந்திருத்தமாக நம்புகிறவன் நான் , எனவே வாருங்கள் வாழ்ந்து காட்டுவோம் " என்று இளங்கோ கூறுவது , சின்னச்சினன சொற்களுக்குக்கூட உடைந்து போகும் இன்றைய இளையதலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

                                            தன்னை மேம்படுத்திய ஆசிரியரையும்(டிசில்வா), தன்னை சிறுமைப்படுத்திய ஆசிரியரையும்(கணக்கு வாத்தியார்) இந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். மற்ற மாணவர்கள் மத்தியில் சிரிப்பு ஒலி எழுப்புவதற்க்காக தன்னை கேலி செய்யும் ஆசிரியரை, மதிப்பெண் எடுத்துக்காட்டி எதிர்கொண்ட விதம் -நயத்தக்க நாகரீகம். தொலைபேசியில் பேசும்போது கவனிக்க வேண்டியவை, உடை அலங்காரத்தில் கவனிக்க வேண்டியவை, உடற்பயிற்சியின் முக்கியத்துவம், அடுத்தவர்களின் நேரத்தை மதிப்பது, உறவுகளை எப்படிப் பேணிப்பாதுகாப்பது போன்ற பல நடைமுறைச்சிக்கல்களையும், அதன் தீர்வாக அவர் வாழ்க்கையில் கைக்கொண்ட வழிமுறைகளையும் அதனால் பெற்ற நன்மைகளையும் இயல்பாகச்சொல்லிச்செல்கின்றார்.

                                                 ஒரு விரலால் ஜெயித்த மாலினி சிப் போலத் தன் வாழ்வில் ஏற்பட்ட  குறைபாடு தன்னை சுய பச்சாதபம் ஏற்பட வைக்காமல், நான் வெற்றி பெறப்பிறந்தவன் என்னும் மனப்பான்மையோடு வெற்றி பெற்ற வரலாறும், இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியானவன் தான் என்னும் மனப்பான்மையும் , இளங்கோ பார்வையற்றவர் என்னும் குறைபாடே இல்லாமல் மனதளவில் வாழ்வதும் படிப்போரை ஈர்க்கும்.ஆங்கிலத்தில் Ph.D, பல விருதுகள், பல பேருக்கு வேலை கொடுக்கும் இளங்கோ, பல ஆயிரக்கணக்கானோர் மத்தியில் சிறப்புரை ஆற்றும் இளங்கோ என அவரின் சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன, எனக்கு sight இல்லாமல் இருக்கலாம். அதற்காக நான் வருத்தப்படவில்லை, உட்கார்ந்து அழுது கொண்டிருக்கவில்லை. எனக்கு இருக்கும் vision-ல் இந்த உலகத்தை வியப்படைய வைக்கிறேன் என்று வியப்படைய வைத்திருக்கின்றார் இளங்கோ.  மிகச் சிறந்த தன்னம்பிக்கை அளிக்கும் புத்தகம் . வாங்கிப் படிக்கலாம், படிக்கும் மாணவர்களுக்குப் பரிசாக அளிக்கலாம். இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசச்சொன்னால், 144 பக்கம் உள்ள இந்தப் புத்தகம் பற்றி ஒரு மணி நேரம் பேச நான் ரெடி. ...