Friday 31 October 2014

திராவிடர் கழகச்செயலவைத்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்களுக்கு பவழ பிறந்த நாள் வாழ்த்துக்கள்: :

அறிவுக்கரசு.சு.

நிகழ்வும் நினைப்பும் (25)  -திராவிடர் கழகச்செயலவைத்தலைவர்  அய்யா சு.அறிவுக்கரசு அவர்களுக்கு பவழ பிறந்த நாள் வாழ்த்துக்கள்:  :


                                   திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் , அய்யா சு.அறிவுக்கரசு அவர்களின் 75-ஆம் ஆண்டு பிறந்த நாள் (01.11.2014) இன்று. பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவராக அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் இருந்தபொழுது, நான்  மாநிலப்பகுத்தறிவாளர் கழகப்பொதுச்செயலராக நியமிக்கப்பட்டேன். பின்னர அய்யா குடந்தை தி.இராசப்பா அவர்கள் மாநிலத்தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் நான் 2005-ல் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவராக நியமிக்கப்பட்டேன். தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணிக்கு அடுத்த நிலையில் இருந்த   அய்யா பொருளாளர் கு.சாமிதுரை, அய்யா கு.வெ.கி.ஆசான் போன்றவர்களிடம் மரியாதையும் ,அன்பும் உண்டெனினும், நெருங்கிய  நட்பு ரீதியான தொடர்பு இல்லை. அய்யா சு.அறிவுக்கரசு அவர்களைப் பொறுத்த அளவில் ஒரு மூத்த நண்பரைப் போலப் பழகினார்.இப்போதும் பழகுகின்றார்.எனக்கு கிடைத்த மிகப்பெரிய நட்பாக, திசைகாட்டியாக அய்யா சு.அறிவுக்கரசு அவர்க்ளின் நட்பு அமைந்தது.

                                         பகுத்தறிவாளர் கழகத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிப்பதற்காக, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழிகாட்டுதலில் நாகர்கோவிலில் இருந்து ஒவ்வொரு மாவட்டமாக வரும் சுற்றுப்ப்பயணத்தை அய்யா சு.அறிவுக்கரசு அவர்க்ள் மேற்கொண்டார். அவரோடு நாகர்கோவிலில் இருந்து நானும் அந்தப் பயணத்தில் உடன்வந்தேன். பல ஊர்களில் கருத்தரங்குகளும் நடைபெற்றன. பல ஊர்களில் நானும் பேசினேன். 2002-03-ல் நடந்த அந்தக் கூட்டங்களில் எனது பேச்சைக் கூரிமையாக கவனித்து பல்வேறு ஆலோசனைகளை அய்யா சு.அறிவுக்கரசு அவர்க்ள் அளித்தார்கள். " பேச விரும்பினால் நிறையப் புத்தகங்கள் படிக்கவேண்டும். பத்திரிக்கைகளைப் படிக்க வேண்டும். ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு நோட்டுப் போடவேண்டும். 40,50 வருடமாகப் பேசிக்கொண்டிருந்தாலும் ஒவ்வொரு கூட்டத்திற்கும் நான் தயாரிப்போடுதான் போகின்றேன் . தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தமிழர் தலைவர் கி.வீரமணி, சமூக நீதி,திராவிட இயக்க வரலாறு ...என்று பல தலைப்புக்களுக்கு நோட்டு போட்டு எழுதுகின்றேன். அதனைப்போல் நீங்களும் செய்ய வேண்டும் " என்றார். மிகப்பெரிய வழிகாட்டுதலாக இருந்தது. அவரின் வழிகாட்டுதல்  ஒவ்வொரு முறையும் பேசி முடித்தபின்பு , அன்றைக்கே எனது பேச்சின் நிறை,குறைகளைச்சுட்டிக்காட்டுவார். நான் பேசுவதைவிட, அவர் பேச்சைக்கேட்கப்போகும் கேட்பாளானாக விரைவில் மாறிப்போனேன். தொடர்ந்து பேசிவந்தாலும், முதல் கூட்டத்தில் பேசியதை அப்படியே பேசும் பேச்சாக அவரின் பேச்சு  இருக்காது. ஒவ்வொரு கூட்டத்திலும் நிறைய புதிய செய்திகள், புதுக்கோணத்தில் பல்வேறு செய்திகளைச்சொல்வதாக அவரின் சொற்பொழிவு இருக்கும் இன்றுவரை அவரின் உரைவீச்சு அப்படித்தான் புதிய கோணத்தில், புதிய செய்திகளைச்சொல்லும் உணர்ச்சிமிக்க உரையாகவே இருக்கிறது. தனது உரையில் புரட்சிக்கவிஞரின் கவிதைகளை பெரும்பாலும் நிறைய இடங்களில் உபயோகப்படுத்துவார்.  எனது பேச்சைக் கேட்கும் தோழர்கள் நிறைய புதிய செய்திகளைக்கூறும் சொற்பொழிவாக எனது சொற்பொழிவு இருந்தது எனக்குறிப்பிடுவதுண்டு. அதற்குக் காரணமாக அமைந்தது அய்யா சு.அறிவுக்கரசு அவர்களின் தொடர்பும், அறிவுரைகளும். .

                            சொந்த வாழ்க்கையில் கிடைத்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, 'படித்த பார்ப்பன ந்ண்பரே ' என்னும் கவிதையை எழுதி, விடுதலை ஞாயிறு மலருக்கு அனுப்பினேன். அப்பொழுது விடுதலையில்   இருந்த அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் அதனை வெளியிட்டதோடு, 'உங்களுக்கு  இந்தப் புதுக்கவிதை வடிவம் நன்றாக வருகிறது.தொடர்ந்து எழுதுங்கள்  ' என்று வழிகாட்டினார். அதிலிருந்து நிறையத் தொடர்ச்சியாக பல கவிதைகளை எழுதி  விடுதலை ஞாயிறு மலருக்கு அனுப்பினேன். வெளிவந்தது. பின்னர் அந்தக் கவிதைகளை எல்லாம் 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் ' என்னும் தலைப்பில் வெளியிட்டோம். அந்தக் கவிதை நூலுக்கு நல்லதொரு அணிந்துரையை வழங்கினார். பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் மதிப்பிற்குரிய அய்யா சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களால் மதுரையில் வெளியிடப்பட்டு ஒரு நூலாசிரியர் என்னும்  பெயர்  பெற்றேன். அதனைப்போலவே 'எழுத்து 'இணையதளத்தில் எழுதி வெளிவந்த எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு  நூலான 'சூரியக் கீற்றுகள் 'கவிதைக்கும் அணிந்துரையை பாராட்டுரையாக  எழுதி அளித்தார். அடுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்போகின்றேன். என்றேன். கொடுங்கள், அணீந்துரையை எழுதித்தருகின்றேன் என்றார். மிகவும் உரிமையோடும் தோழமையோடும் தனது இயக்கத்தோழரான எனக்கு,  எனது  புத்தகங்கள்  வெளியீட்டுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் விளங்குகின்றார்.  

                        தனிப்பட்ட வாழ்விலும் என் மேல் மிகப்பெரும் அன்பைச் செலுத்துபவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள்.சில நேரம் எரிமலை போல பொங்கிவிடுவார் , அதனால் பல பேர் அவரிடம் நெருங்கவே பயப்படுவதுண்டு. ஆனால் அவர் ஒரு பலாப்பழம் போல. வெளிப்பார்வைக்கு கரடுமுரடானவர் போலத்  தோன்றினாலும் பொங்கும் அன்பாலும் , அனுபவமிக்க வழிகாட்டுதலிலும் பலாச்சுளையைப் போன்றவர் அவர். எப்போதும் உரிமையோடும் , நட்போடும் ,உணமையோடும் பழகுபவர்களுக்கு அவர் பலாச்சுளைதான். ஆனால் தன்னை யாராவது ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தால் எரிமலைதான்  . புரட்சிக் கவிஞரின் ஊரான புதுச்சேரிக்கு பக்கத்து ஊரான கடலூரைச்சார்ந்தவர் என்பதாலோ என்னவோ புரட்சிக் கவிஞரைப் போலவே பல விசயங்களை நேருக்கு நேராகவே பட்டென்று சொல்லிவிடுவார். 2, 3 ஆண்டுகளுக்கு முன்னால் , அலுவலகப்பணியை விட்டுவிடப்போகிறேன்(வி.ஆர்,எஸ்) என்றேன். எதற்கு என்றார் . சில செய்திகளைச்சொன்னேன். "பையன் படித்து வேலைக்குப் போய்விட்டானா ? பொண்ணு படித்து வேலைக்குப் போய் திருமணம் முடிந்ததா "? " என்றார். எனது குடும்பத்தை நன்றாக அறிந்தவர், என்ன இப்படிக் கேட்கிறாரே என்று நினைத்துக்கொண்டு ".பிள்:ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருக்கின்றார்கள்". என்றேன். "அது தெரியும் எனக்கு, . என்னவோ குடும்ப பொறுப்பு எல்லாம் முடிந்ததுமாதிரி, வி.ஆர்.எஸ்.என்று பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். ஒழுங்காக அலுவலகத்திற்கு சென்று வேலையைப் பாருங்கள்" என்றார். "வேலைக்குப் போய்வந்து மீதமிருக்கும் நேரத்தில் மற்ற வேலைகளைப் பாருங்கள். போதும், போதும்" என்றார். அத்தோடு எனது வி.ஆர்.எஸ். பேச்சு  முடிந்தது. 

                 இன்னும் நிறைய் செய்திகளை எழுதலாம். கடலூரில் உள்ள அவரது வீட்டிற்குப் போயிருக்கிறேன். மாடி முழுவதும் புத்தகங்களாக இருக்கும் . புத்தகம் என்றால் மிக அரிதான புத்தகங்கள், அதிக விலை உள்ள புத்தகங்கள். ஆனால் எல்லாம் ஒழுங்காக இருக்கும் . எளிதில் தேடி எடுக்க வசதியாக இருப்பதாக இருக்கும் . இதனை நான் நடைமுறைப்படுத்தவேண்டும். அதனைப் போல உயர் அரசு அதிகாரியாகப் பணியாற்றியதாலோ என்னவோ, டாக்குமெண்டேசன் அவ்வளவு பிரமாதமாக இருக்கும் . பைல் , பைலாக பிரித்து பிரித்து வைத்திருப்பார். சாதாராண தோழரிடமிருந்து வந்த 50 பைசா கடித்த்தைக்கூட மிகக் கவனமாக பைலில் நம்பர் போட்டுச்சேர்த்திருப்பார். மிகப்பெரிய ஞாபகசக்தி உடையவர். பல்வேறு வரலாற்றுத்தகவல்களை, நாள் அன்று என்ன கிழமை என்பதையெல்லாம் கூறுவார். வியப்பாக இருக்கும். ஆங்கிலத்திலும் மிக அருமையாகப்பேசுவார். தொழிற்சங்கத்தில் தமிழகத்தின் தலைவராக திரு.சிவ.இளங்கோ அவர்களுக்குப் பின் இருந்தவர். அவரின் தொழிற்சங்க அனுபவங்களும், விழுப்புணகளும் ஒரு நூலாக ஆக்கும் அளவுக்கு விரிவானவை, நிறைய நகைச்சுவை  உணர்வு கொண்டவர். 

                       தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஊர்க்காரர் என்பது மட்டும்ல்ல, அவரின் மிகப்பெரிய நம்பிக்கைக்கு உரியவராக அரை நூற்றாண்டுக்கும் மேலாக அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் திகழ்கின்றார். 'பெரியாரின் பன்முகம்' என்னும் நூலில் ஆரம்பித்து இதுவரை 15 நூல்களை ஆக்கியுள்ளார். எல்லா நூலும் பெரியாரியல் அடிப்படையில் அமைந்தவை. படிப்பவனிடம் சுயமரியாதை உணர்வை ஊட்டும் வல்லமை பெற்றவை. பேருக்காக எழுதுபவராக இல்லாமல், பரம்பரைப் பகைவர்களின் போருக்காக எழுதுபவராக இருக்கின்றார்.நவம்பர் 8-ந்தேதி கடலூரில் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் அய்யா சு.அறிவுக்கரசு அவர்களின் 75-ஆம் ஆண்டு பவழ விழா நடைபெறுகின்றது. அய்யா சு.அறிவுக்கரசு அவர்களுக்காக வெளியிடப்படும் மலரில் அவரது எழுத்துக்கள் பற்றிய கட்டுரை- எனது கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. அவரது எழுத்தின் வலிமை , துணிவு பற்றி அதில் விரிவாக எழுத வாய்ப்புக்கிடைத்தது. எழுதியிருக்கிறேன். வாய்ப்பு இருப்பவர்கள் படித்துப்பாருங்கள். 

                       இன்று பவழ பிறந்த நாள் காணும் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் 100 ஆண்டையும் கடந்து வாழவேண்டும். வாழ்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இன்னும் நூல்கள் பல படைக்க வேண்டும் . வய்தாக வயதாக தந்தை பெரியார் குரலைப் போலவே அய்யா அறிவுக்கரசு அவர்களின் குரலும் இருக்கிறது. தந்தை பெரியார் வாழ்ந்த காலம் தாண்டி  அவரின் குரலில் , தந்தை பெரியாரின் கருத்துக்களைப் பரப்புவார். நாம் பார்ப்போம்

                        அய்யா சு.அறிவுக்கரசு அவர்களுக்கு பவழ பிறந்த நாள் வாழ்த்துக்கள். 

                                   வாழ்க தந்தை பெரியார், வாழ்க தமிழர் தலைவர் கி.வீரம்ணி, வாழ்க பவழ விழாக்காணும் அய்யா சு.அறிவுக்கரசு, வாழ்க பகுத்தறிவு. .


                     

Wednesday 29 October 2014

அண்மையில் படித்த புத்தகம் : ஒரு கோப்பை மனிதம்- மு.கீதா (கவிதை நூல்)

அண்மையில் படித்த புத்தகம் : ஒரு கோப்பை மனிதம் (கவிதை நூல்)
ஆசிரியர்                                         : மு.கீதா (தேவதா தமிழ்)
வெளியீடு                                       : கீதம் பப்ளிகேஷன்ஸ்,சென்னை-96  044-24960231
முதல் பதிப்பு                                 :2014 ,மொத்தப்பக்கங்கள்: 72 விலை ரூ 60.00

                              ஆசிரியராகப் பணியாற்றும் மு.கீதா அவர்களின் கவிதைத் தொகுப்பு நூல் இது. தன்னுடைய velunatchiyar.blogspot.com  வலைப்பூவிலும், முக நூலிலும் எழுதிய கவிதைகளின் தொகுப்பு எனக்குறிப்பிடுகின்றார் நூலாசிரியர். " "சமூகத்தோடு என்னைப் பிணைத்த எனது எண்ணங்களே கவிதைகளாய் நெய்து உங்கள் மனங்களை வலைவீசிப் பிடிக்கின்றன . எனை வார்த்த கவிதைகளும் , என்னால் வார்க்கப்பட்ட கவிதைகளும் தொகுப்பாய் மலர்ந்துள்ளன " என்று சொல்லும் என்னுரையே கவித்துவமாகத்தான் இருக்கிறது.

                       கவிதை என்பது சமூகம் சார்ந்ததாக, நம்மைச்சுற்றி நிகழும் அவலங்களை எடுத்துக்காட்டுவதாக அமையும்போதுதான்  கவிதையாக நம்மைப்போன்றோருக்கு தோன்றுகிறது. மு.கீதா அவர்களின் கவிதைகள் பலவும் அப்படி சுட்டிக்காட்டுகின்றன, நல்ல கவித்துவமும் கற்பனையும் மிக்க வரிகளால் ., எடுத்துக்காட்டாக ஒரு கவிதை 'பருவத்தின் வாசலில்'

"பள்ளியிலும் வீட்டினிலும்
        பட்டாம்பூச்சியான
               பறத்தலுடன்
ரசனையான வெகுளிச்சிறுமி
சிந்நாட்கள் காணாத நிலையில்
      சின்னதொரு சிரிப்புடன்
       வெட்கமுமாய் மீண்டும்
           துழாவிய போது
கண்ணீரில் மிதந்த கண்களுடன்
            குழறலாய்க் கூறினாள்
சிறகுகள் வெட்டப்பட்டதை  " நமது நாட்டைப் பொறுத்த அளவில் ,பெண் குழ்ந்தைகளுக்கு சிறகுகள் வெட்டப்பட்டு, சிந்தனைகளுக்கு விலங்கிடப்படுவதுதானே ,பருவமடைதல். அதை மிக நேர்த்தியாகக் கூறுகின்றார்.

                       அனுபவத்தை அப்படியே கவிதையாக ஆக்குகின்றார் சில கவிதைகளில். 'மழையோடு ' பக்கம் (14), 'தொடர் வண்டிப் பயணத்தில் ஒரு நாள்' பக்கம் 22, 'சுட்டிக்காற்று' பக்கம் 55 போன்றவை அனுபவம் சார்ந்த கருத்து சொல்லும் கவிதைகளாய் இந்த நூலில் . சில வரிக் கவிதைகள் என்றாலும் , சில கவிதைகள் சுருக்கென ஊசி குத்துவது போல எதார்த்ததை எடுத்துரைக்கின்றன. எடுத்துக்காட்டாக 'பேசு பொருளாய் ' கவிதை பக்கம் 57, 'கானல் நீர் ' கவிதை பக்கம் 61 போன்றவை.

                        பெண் கவிதை எழுதுவது குறைவு , அதிலும் பகுத்தறிவு , மத மறுப்பு சம்பந்தப்பட்ட கவிதைகள் எழுதும் பெண் கவிஞர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட ஒருவராக மு.கீதா திகழ்கின்றார் என்பது மகிழ்ச்சிக்குரியது .
இந்து நாம் ...?

நான்கு வர்ணம்
ஒன்று இணைந்து
ஒரே வர்ணமாகையில்
சாதியோழிந்து
சனங்கள் சேர்ந்து
மகிழ்ந்தொலிப்போம்
இந்து நாம் என்று ......   பக்கம் 64.
சுடுகாட்டில் கூட ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு சுடுகாடு என்று வைத்துக்கொண்டு 'இந்து நாம் ' என்று பேசுவது எவ்வளவு அபத்தமானது என்பதனை சாதி ஒழியட்டும் ,பிறகு இந்து என்று பேசுவோம் என்று அழுத்தமாகச்சொல்கின்றார் இக்கவிதையில். அதனைப் போலவே 'மனுதர்மம்' என்னும் கவிதை

"காலில் பிறந்தோன்
உந்தியில் உதித்தோனுக்கும்
உந்தியில் பிறந்தோன்
மார்பில் பிறந்தோனுக்கும்
தீட்டென்று தீயிட்டுக்கொள்ள
மூடர்களே மூவருமே தீட்டு
நெற்றி பிறந்தோனுக்கென
சூளூரைத்தது மனுதர்மத்தின்
                         உயிர் நாடி  "  பக்கம் 28
நெற்றியில் பிறந்தோமென்று சொல்லிக்கொள்பவர்களின் மேலாண்மையையும், மற்றவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதையும் மிகச்சுருக்கமாக ஆனால் தெளிவாகச்சொல்லும் கவிதையாக இக்கவிதை

              சமூகத்தின் கோரமுகத்தைக் காட்டுவதாக 'பட்டாசு கனவில் 'பக்கம் 15, ' பார்க்க முடிகின்றதா உங்களால்' பக்கம் 20, ;'கானல் நீராய் 'பக்கம் 24, 'கதவு இல்லா குடிசையில் ' பக்கம் 27 போன்ற கவிதைகள்,
 " பார்க்க முடிகின்றதா உங்களால் " கவிதையில் கடைசியில்
" ஆண் இனத்தின்
   அவமான சின்னங்களை
   நிலம் பிளப்பது போல்
   நீர் விழுங்குவது போல்
  தீ உண்ணுவது போல்
எழும்பும் பெண்ணினம் " எனும்  வரிகள் அநீதி கண்டு கனல் கக்கும் வரிகளாக இருக்கின்றன.

                          26,10.2014 மதுரையில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் 3-வது  மாநாட்டில் இந்த நூலை புதுக்கோட்டை கவிஞர் நா.முத்து நிலவன் வெளியிட நான் பெற்றுக்கொண்டேன். இந்த நூலைப் படிக்க, படிக்க சொல்வதற்கு நிறைய இன்னும் இருப்பதை உணர்கின்றேன். திருச்சியைச்சார்ந்த திராவிடர் கழக்த்தோழர் வி.சி.வில்வம் அவர்களின் சகோதரி , இந்த நூலின் ஆசிரியர் மு.கீதா அவர்கள். " ஆசிரியர் தொழிலை மிகவும் அர்ப்பணிப்போடு, ஈடுபாட்டோடு செய்யக்கூடியவர், குழந்தைகளோடு குழ்ந்தையாக அமர்ந்து , குழ்ந்தைகள் மனதில் இடத்தைப்பிடித்து, பாடத்தைக் கற்பிப்பவர். சமச்சீர் கல்வி வருவதற்கு முன்பே , பலவிதமான முயற்சிகள் மூலம் கற்பித்தலை மேம்படுத்தியவர். நல்ல ஓவியர். பகுத்தறிவாளர், பெரியாரியலைப் பின்பற்றுபவர் " என்று தன் சகோதரியைப் பற்றிய செய்திகளைச்சொன்னார் வி.சி.வில்வம். மு.கீதாவின் 3-வது நூல் இது. இன்னும் பல நூல்களைப் படைக்கும்  ஆற்றல் உடையவராக மு.கீதா திகழ்கின்றார். இன்னும் பல நூல்களைப் படைக்க வேண்டும்.

            " எப்போது ஒரு கலை சமகால நிகழ்வுகளைப்  பதிவு செய்கிறதோ அப்போதுதான் அது உண்மையான படைப்பாகிறது " என்று வைகறை தன்னுடைய மதிப்புரையில் கூறுவதுபோல , சமகால நிகழ்வுகளைப் பதிவு செய்த ஒரு கவிதைப்புத்தகமாக, " பண்பட்டுப்போன உள்ளம் அவருக்கு(மு.கீதாவுக்கு). மகிழ்ச்சி , பரிதவிப்பு, ஆதங்கம், ஆக்ரோஷம், வேதனை என ரசித்து ருசித்து அறுசுவையுடன் படைத்திருக்கிறார் இவ்விருந்தை " என அணிந்துரையில் கனடாவின் இனியா கூறுவதைப்போல பல உணர்வுகளின் வடிகாலாக இக்கவிதைகள் இருக்கின்றன.
                            முன்ன்ரையில் ' உங்கள் கவிதைகளை உங்கள் வலைப்பதிவில் நித்தம் ரசித்துப் பருகிவரும் எனக்கு விதவிதமான பின் விளைவுகள் ஏற்படுகின்றன. அவை உடனடிப்புன்னகை, நீடித்த சிந்தனை எனப்பல வகைப்படுகின்றன " என மைதிலி (makizhnirai.blogspot.com)  கூறுவதைப் போல நீடித்த சிந்தனை அளிக்கும் கவிதைகள் பலவற்றை உள்ளடக்கியதாக இத்தொகுப்பு உள்ளது.

                       புதுக்கோட்டை கவிஞர் நா.முத்துநிலவன், அவரது வாழ்க்கை இணையர் மல்லிகா(பி.எஸ்.என்.எல்) அவர்களோடு நிறையத்தோழர்கள், தோழியர்கள் வலைப்பதிவர் 3-வது மாநாட்டிற்கு வந்திருந்தனர். அதில் பல தோழியர்கள் தங்களுக்கென வலைத்தளங்களை வைத்துள்ளனர். தொடர்ந்து படைப்புகளை, தங்களது கருத்துக்களை வலைத்தளங்களில் பதிகின்றனர் என்பது பாராட்டிற்குரியது. புதுக்கோட்டை கணினி தமிழ்ச்சங்கம் என்பது இவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கும் அமைப்பாக இருக்கிறது என்பதும், இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, உற்சாகப்படுத்தும் , வழிகாட்டும் பெருமைக்குரியவராக கவிஞர் நா.முத்து நிலவ்ன் இருக்கின்றார் என்பதும்  மகிழ்ச்சிக்குரியது. நமது பாராட்டுக்குரியது. புதுக்கோட்டை கணினி தமிழ்ச்சங்க உறுப்பினர்களை எல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பாக 'ஒரு கோப்பை மனிதம் ' நூல் வெளியிட்டு விழா அமைந்தது.

                        'ஒரு கோப்பை மனிதம் ' கவிதை நூலைப் படித்துப்பாருங்கள். விலை ரூ 60-தான். வாங்கிப் படிக்கலாம்.மற்றவர்களையும் படிக்கச்சொல்லலாம். படித்துவிட்டு நூலின் முகவரிக்கு நாலு வரி எழுதிப்போடலாம். அதுவே உண்மையான ஊக்குவிக்கும் செயலாக இருக்கும்.












Monday 27 October 2014

தாத்தாவின் நினைவு நாளில் ....அப்பாவின் கோரிக்கை ..

என் தந்தை கரம்பற்றி
நான் நடந்ததாக
எனக்கு நினைவில்லை !

அதை வாங்கிக் கொடுங்கள்
இதை வாங்கிக் கொடுங்கள்
என என் தந்தையிடம்
நான் கேட்டதாக
நினைவுகள் இல்லை !

அப்பாவின் முதுகில்
அமர்ந்து யானை
சவாரி செய்ததாகவோ
அவர் ஓட்டும்
வண்டியில் அமர்ந்து
பள்ளிக்குச்சென்றதாகவோ
எந்த வித நினைவுகளும் இல்லை !

ஏழு வயதில்
அப்பாவின் பாடையோடு
இடுகாட்டிற்குப்போனது
மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது !

ஆறடி உயரமுள்ள
அப்பாவை
ஆறடி உயரமுள்ள
குழிக்குள் உள்ளே இறக்கி
கல்லைப் போடு
கல்லைப் போடு
மண்ணைப் போடு
மண்ணைப் போடு
என்று மற்றவர்கள் சொல்ல
கல்லைப் போட்டு
மண்ணைப் போட்டு குழியை
மூடியது மட்டுமே
நினைவுகளில் இருக்கிறது !

கங்காரு போலவே
பிள்ளைகளைச்
சுமந்து கொண்டே
அலைகின்றாய் என
நண்பர்கள் திட்டியபோதும்
அவரவராய் வளரட்டுமே
எனப் பலர் அறிவுறுத்தியபோதும்
உங்களோடு இருப்பதிலே
உள்ளபடியே மகிழ்ச்சிதான் !

நான் இழந்ததை
உங்களுக்கு தருவதற்காக
எனை வருத்திக்கொள்வதை
எனது பலவீனமாய்
எடுக்க மாட்டீர்கள்
எனும் நம்பிக்கை
எனக்கு உண்டு
என் குழந்தைகளே !

ஆண்டு தோறும்
திதி அன்று திவசம் என்று
தந்தையை இழந்தவர்கள்
உழைக்காதவர்கள்
உண்பதற்கு
இழவு வரி அளிக்கும்
ஏற்பாட்டில் எனக்கு
உடன்பாடில்லை !

என் தந்தை நினைவுநாளில்
முதியோர் இல்லத்தில்
நுழைகின்றேன்
அங்கிருப்போர்
என் தந்தை வயதிலிருப்போர்
இருகரம் கூப்பி
எழுந்து நின்று வணங்கும் போது
என் தந்தையும் உயிரோடு
இருந்திருந்தால்
இவர் வயதில் இருப்பாரோ
எனும் எண்ணம் ஓட
அவர்களுக்கு வணக்கம்
சொல்லிபடியே நுழைகின்றேன் !
என்னால் முடிந்ததை
அவர்களுக்கு செய்கின்றேன் !

என் குழந்தைகளே !
தாத்தாவின் நினைவு நாளில்
அப்பாவின் கோரிக்கை ....
எதிர்காலத்தில்
என வழியைப் பின்பற்றுங்கள் !
அர்த்தமற்ற சடங்குகளை
ஆழக்குழி தோண்டிப்
புதையுங்கள் !
பெற்றோரின் நினைவு நாளில்
எளியோருக்கு உதவுங்கள் !



  • எழுதியவர் : வா.நேரு
  • நாள் : 28-Oct-14, 8:29 am
Nantri: Eluthu.com
எனது தந்தை சாப்டூர் க.வாலகுரு ஆசிரியர் அவர்கள் மறைந்து 43 ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரின் நினைவு நாள் இன்று (28.10.2014) . அவர் மறைந்த நாள் 28.10.1971. முதியோர் இல்லம் போய் வந்தவுடன் தோன்றிய நினைவுகளால் எழுந்த கவிதை. .... வா. நேரு 

Friday 24 October 2014

அண்மையில் படித்த புத்தகம் : என் பார்வையில் பாரதிதாசன்-பி.எல்.இராசேந்திரன் , எம்.ஏ.

அண்மையில் படித்த புத்தகம் : என் பார்வையில் பாரதிதாசன்
ஆசிரியர்                                        :  பி.எல்.இராசேந்திரன் , எம்.ஏ.
வெளியீடு                                      : செல்லம்மாள் பதிப்பகம் , சென்னை-600 014.
முதல் பதிப்பு                                : ஏப்ரல் -2008, மொத்த பக்கங்கள் 198, விலை ரூ 100.
மதுரை மைய நூலக எண்        :  182120

                                                              புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் 3 ஆண்டுகள் உதவியாளராக உடன் இருந்து , தமிழ் கற்றுக் கொண்டவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் இந்த நூலின் ஆசிரியர் பி.எல்.இராசேந்திரன் அவர்கள், சுவை படவும், பல நிகழ்வுகளின் மூலம் புரட்சிக் கவிஞரை முழுமையாக படிப்போர் புரிந்து கொள்ளவும் , அறிந்து கொள்ளவும் இயற்றியுள்ள நூலாக இந்த் நூல் உள்ளது.

                                                          "பாவேந்தர் பார்ப்பதற்கு முரட்டுத்தோற்றம் உடையவர். ஆனால் அவர் ஒரு பலாப்பழம். மேலே முள்ளிருக்கும் , உள்ளே அவ்வளவும் தீங்கனிச்சுளைகள் . அதுபோலவேதான் புரட்சிக் கவிஞர் வாழ்க்கையும் என்று இந்நூலாசிரியர் இந்நூலில் நிறுவியுள்ளார் " என்று அணிந்துரையில் திரு.இரா.முத்துக்குமாரசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

                           " பாவேந்தர் பாரதிதாசன் மீது அப்படியென்ன அக்கறை உங்களுக்கு ? " என்று யாரேனும் கேட்கக்கூடும். அவர் கறுப்பா? சிவப்பா? குணம் எப்படி ? மனம் எப்படி ? என்றெல்லாம் கூடத் தெரியாத சில அதிமேதாவிகள் ' பாரதிதாசனைப்ப் பற்றிப் பேச உனக்கென்ன யோக்கியதை இருக்கிறது ? "...எனக்கேட்டுத் துள்ளிக் குதிப்பதையும், ' அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா ? ' எனக்கேட்டு, பாவேந்தருக்கே தொடர்பில்லாத சில கட்டுக்கதைகளைக்  கற்றறிவாளர் அவைகளிலேயே அவிழ்த்து விடுவதையும் நானே கண்டிருக்கிறேன்; கேள்விப்பட்டும் இருக்கிறேன். வேதனைப்பட்டிருக்கிறேன்.
                           சம்பந்தமில்லாதவர்களெல்லாம் தனக்குத்தானே சாயம் பூசிக்கொள்ளுகிறபோது , மூன்றாண்டுகளுக்கு மேல் அவர் கோபத்தில் எரிந்து , அன்பில் நனைந்து , பாராட்டுதலில் மகிழ்ந்து குருகுலவாசம் இருந்த நான் , அவரைப் பற்றிய சில உண்மைகளை இந்நூல் மூலம் பதிவு செய்ய விரும்புகிறேன் " பக்கம் - 6 என்று இந்த நூலின் நோக்கத்தை மிகத்தெளிவாக நூலாசிரியர் முதல் அத்தியாயத்திலேயே வரையறைத்து விடுகின்றார். அதற்கேற்ப பட்டுக் கோட்டையில் முதன் முதலாக ,தற்செயலாக புரட்சிக் கவிஞரை சந்தித்தது, திராவிடர் கழகத்துக்காரர்களான விஸ்வநாதன்(செட்டியார்), இளவரியிடம் தெரிவித்தது , வீட்டிலிருந்து புலால் உணவு கொண்டு போய்க் கொடுத்தது என ஆரம்பிக்கும் நிகழ்வுகளை மிகச்சுவையாக படிப்போர் அறிந்து கொள்ளும் விதமாக நூலாசிரியர் விவரித்துள்ளார்.

                                பாவேந்தரின் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் இந்த நூலில் நூலாசிரியர் விவரித்துள்ளார். அதில் பாவேந்தரின் மாப்பிள்ளையான , வசந்தா அவர்களின் கணவர் மா.தண்டபாணி பற்றியும் , கவிஞரின் மகன் மன்னர்மன்னன் பற்றியும் நிறைய செய்திகளைக் கூறியுள்ளார்.

                                புரட்சிக் கவிஞர் நடத்திய 'குயில் ' இதழ் பற்றியும் அதில் தான் பணியாற்றியது பற்றியும் விரிவாக விவரித்துள்ளார். நூலின் க்டைசிப்பகுதியில் 'குயில்' ஏட்டில் வாராவாரம் எழுதியவர்கள் யார் ? யார் என்னும் பட்டியலை கொடுத்துள்ளார். மதுரைக்காரர்கள் நிறையப்பேர் வருகின்றார்கள் அந்தப் பட்டியலில். 'முதல் பத்திரிக்கை ' அனுபவம் 'என்ற தலைப்பின்கீழ் தான் குயிலில் பணியாற்றியதுபற்றியும் , எந்தவித சமரசமும் இல்லாமல் புரட்சிக் கவிஞர் கொள்கைக்காக மட்டுமே அந்த இதழை நடத்தினார் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். கண்ணதாசன் தன்னைத் தாக்கி எழுதிய பாட்டை , நன்றாக இருக்கிறது என்று ரசித்துவிட்டு, இலக்கணப்பிழையை சுட்டிக்காட்டி, இதனை எழுதிப்போடு என்று  புரட்சிக் கவிஞர் சொன்ன செய்தியைப் பதிந்துள்ளார் நூலாசிரியர் . இதனைப் போல இதழோடு தொடர்புடைய பல நிகழ்வுகள் புதுமையாகவும், வியப்பாகவும் உள்ளன.

                           இன்று திருவள்ளுவர் சிலையைக் காண்கின்றோம். எங்கெங்கும் திருவள்ளுவர் படம் காண்கின்றோம். திருவள்ளுவர் படத்தினை ஆக்குவதற்கான புரட்சிக் கவிஞரின் பங்களிப்பையும் , அதனை பெருந்தலைவர் காமராசர் அவர்களும், டாக்டர் கலைஞர் அவர்களும் நடைமுறைப்படுத்தியதையும் சுட்டிக்காட்டி திருவள்ளுவர் படத்தினை அழுகுற வரைந்த திரு. வேணுகோபல சர்மா அவர்களையும் பெருமைப்படுத்தியுள்ளார்,' திருவள்ளுவர் படமும் புரட்சிக் கவிஞரும் ' என்னும் தலைப்பில்.

                               புரட்சிக் கவிஞரின் இறுதி நாட்கள் பற்றியும், இறுதி ஊர்வலம் பற்றியும் தகவல்களைத் தந்துள்ளார். புரட்சிக் கவிஞருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டபொழுது , கடைசியில் அவரோடு உடன் இருந்தவர் புலவர். ந.இராமநாதன்(கரந்தை) அவர்கள் என்பதையும் , அவர் சொன்ன செய்திகளையும் குறிப்பிட்டுள்ளார். 1983-84-ஆம் ஆண்டுகளில் பெரியாரியல் பட்டயச்சான்றிதழ் அஞ்சல் வழியில் நான் படித்தபொழுது , அதன் இயக்குநராக அய்யா புலவர் .ந. இராமநாதன் அவ்ர்கள் இருந்தார். தந்தை பெரியார் பற்றியும், புரட்சிக்கவிஞர் பற்றியும் அவர் பாடம் எடுத்த காட்சிகள் இன்றைக்கும் கூட என் மனக்கண் முன்னால் ஆடுகின்றன. அப்படி ஓர் ஈடுபாடு, அப்படி ஒரு பற்றோடு அய்யா புலவர் ந.இராமநாதன் அவர்கள் தந்தை பெரியார் பற்றியும் , புரட்சிக் கவிஞரின் பாடல்கள் பற்றியும் வகுப்புகள் எடுப்பார்.  அய்யா புலவர் ந.இராமநாதனுக்கும்  புரட்சிக்கவிஞருக்கும் இருந்த நெருக்கத்தை, உணர்வை இந்தப் புத்தகத்தின் பல இடங்களில் சுட்டிக்காட்டுகின்றார் நூலாசிரியர்.

                                பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் யார் ? யார் என்பதையும், பாரதிதாசனால் தான் கற்றுக்கொண்டதையும் , பொது வாழ்வில் விருதுகள் பல பெற்றுக் கொண்டதையும் நன்றி உணர்ச்சியோடு குறிப்பிடுகின்றார். பாவேந்தர் விருது பெற்றவர்கள், பாவேந்தரின் வாழ்க்கைக் குறிப்புகள், பாவேந்தர் எழுதிய பல பாடல்கள் எழுவதற்காக எழுந்த சூழல் எனப் பல செய்திகள் புதியதாக உள்ளன .. புரட்சிக் கவிஞரின் வாழ்க்கை பற்றி மிகச்சிறப்பாக் எழுதப்பட்டுள்ள நூலாக இந்த நூல் விளங்குகின்றது. 'எனது கவிதைகள்' என்னும் தலைப்பில் இந்த நூலின் ஆசிரியர் பி.எல். இராசேந்திரன் அவர்கள் எழுதியுள்ள கவிதைகள் ' அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை ' என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் பாரதியைப் பாடியதுபோல , புரட்சிக் கவிஞரைப் பற்றிப் பி.எல். இராசேந்திரன் பாடியதாக உள்ளன.  புரட்சிக் கவிஞரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்புவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது. 

Wednesday 22 October 2014

சூரியக் கீற்றுகள்- நூல் அறிமுகம்-சு.கருப்பையா.



முனைவர் வா.நேருவின்   இரண்டாவது கவிதை நூல் இது. வாசிக்கும் பொழுது மனதை வருடும் வார்த்தைகள்ஆனால் எழுதப்பட்டுள்ள இந்த 51 கவிதைகளும்  சமூகத்தில்   நிலவும் மூடநம்பிக்கைகளையும் அவலங்களையும் எதார்த்தமாக இடித்துக் காட்டுகின்றன. கற்பனைகளையும் ,கனவுகளையும் பாலியியல் உணர்வுகளையும் சுமந்து கொண்டு, புரியாத வார்த்தைகளில் வெளிவரும் இக்கால  கவிதைகள் மத்தியில் எளிமையான வார்த்தைகளுடன் சக மனிதனாகப் பேசும் வா.நேருவின் மொழி நம் மனதிற்குள் சட்டென நுழைந்து விடுகின்றன. 

இந்தக் கவிதைகள் அனைத்தும் எழுத்து வலைதளத்தில் வெளிவந்த பொழுது 99 சதவீதமான வாசகர்கள் ( அவரைத் தவிர ) இவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை என்ற தமது ஆழ்ந்த வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் தோழர்.பொள்ளாச்சி அபி. ஏனென்றால் நேருவின் கவிதைகளில் மோகத்தைத் தூண்டும் காதல் வார்த்தைகள் இல்லை; வார்த்தை விளையாட்டு இல்லைஅத்தோடு மற்றவர்களால் பாராட்டப்படவேண்டும் என்ற ஏக்கத்திலும் எழுதப் படவில்லை. ஆனால் அனைத்தும் மனதை வலிக்கச் செய்யும் நிதர்சனமான உண்மைகள்.  

இந்தக் கவிதைகள் சமூகநலத்தை நேசிக்கும் மனிதர்களால் மட்டுமே வாசிக்க இயலும் வாசிக்கப்படும் ,விரும்பப்படும் மற்றவர்களால் புறந்தள்ளப்படும் என்று கருதுகிறேன். இப்போது எனக்கு பிடித்த  கவிதைகளின் சில பகுதிகளை மட்டும்  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

கவிதை எண் – 1:  “வயிற்றிலிருந்து இரத்தம் கொட்ட கொட்ட

அய்யா பசியோடிருந்தன
என் குழந்தைகள்
அவர்களின் பசியைப்
பார்த்துக்கொண்டு
வீட்டுக்குள் இருக்க
இயலவில்லை என்னால்
--
எதிர்பார்க்கவில்லை நான்
கத்தியால் வயிற்றில்
குத்துவார்களென
-----
வயிற்றிலிருந்து இரத்தம்
கொட்ட கொட்ட
வாயிலிருந்து அய்யா
பசியோடிருந்தன  என்
குழந்தைகள்---

மதக் கலவரக்காரர்களால் கல்கத்தாவில் கொல்லப்பட்ட காதர் மைதீனின்   வார்த்தைகள் இது. பத்து வயதில் தனது மடியில் உயிரிழந்த  காதர்   மைதீனின்   இந்த வார்த்தைகள் தான் எனக்கு வறுமையின் கொடுமையை  புரிய வைத்து என்னை பொருளாதார மேதையாக்கியது என்று நோபல் பரிசு பெறும்பொழுது மனம் நெகிழ்ந்து கூறினார் அமர்த்தியா சென்.


கவிதை எண் – 4: “ அந்தக்  கிழவி 

அந்த அதிகாலைக்குரல்
தெளிவாகக் கேட்டது
"அம்மாகீரை"
வீட்டின் முன்னே
பார்த்தேன்!
ஊன்றிய தடி
ஒரு புறமும்
கீரைக் கூடையின்மேல்
ஒரு கையுமாய்,
எழுபதைத்  தாண்டிய 
அந்தக்  கிழவி…..

உழைத்து  உண்ண வேண்டும் என்ற எண்ணத்தில்  வாழும் அந்த  எழுபது வயதுக் கிழவியைப் போல ,பேனா விற்கும் எண்பது வயது முதியவரையும் கைவினைப் பொருள்கள் விற்கும் பார்வையற்றவர்களும் எனக்குத் தெரியும்.  யாரையும் சார்ந்திராமலும் ,  பிச்சை எடுக்காமலும் வாழும் இவர்களே உண்மையான உழைப்பாளிகள்.

கவிதை எண் – 7: “அன்றொரு நாள் கிடைத்த  

சாதியையும்
மதத்தையும்
நெஞ்சு நிறைய
சுமந்து திரியும்
அந்தப் பெரிய மனிதர்
ஊரை அழைத்து
வைத்த விருந்தில்
பங்கேற்ற குற்ற உணர்வு
அகல மறுக்கிறது இன்றும்...

சிறிய  வயதில் சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஒருவரின் வீட்டில் உணவு அருந்தியதை நினைத்துக் குமுறும் கவிஞரின்  சாதியத்தை சாடும் வரிகள்.

கவிதை எண் – 13: “மார்ச் 8” 

மாதச் சம்பளம்
ஐம்பதினாயிரம்
அவளின் கணக்கில்
ஏ டி எம் கார்டை
கணவனிடம்
கொடுத்துவிட்டு
வெகு நேரமாய்
கை ஏந்தி நிற்கிறாள்
பேருந்தில்
அலுவலகம் செல்ல
ஐந்து ரூபாய் கேட்டு....!

இந்தக் கவிதையின் மூலம் ,  மார்ச்-8  உலக உழைக்கும் மகளிர் தினம் கொண்டாடும்  நாம் பெண்களுக்கு உண்மையான சுதந்திரமும் உரிமையும் இன்னும் கொடுக்கவில்லை என்பதைச் சாடுகிறார் வா.நேரு. 

கவிதை எண் – 16: “பலர் வாழ்வைக் கொள்ளும் நஞ்சாய் 

தொலைக்காட்சி
பெட்டிகளில்
வேறுபட்ட ஆடைகளில்
ஒரே மாதிரி
பொய்களோடு
ஜோதிடர்கள்
.....
ஜோதிடம்
பலர் வாழ்வைக்
கொள்ளும் நஞ்சாய்
சமூக வாழ்வில்
கொசு பரப்பும் நோய்போல
மதம் பரப்பும் நோயாய்..

இன்றைய காலகட்டத்தில் தொலைக் காட்சியில் வரும் தொடர்களும் பரப்பப்படும் ஜோதிடம் ,  அருள் வாக்கு போன்ற மூடநம்பிக்கைகளும் சமூகத்தைப் பிடித்துள்ள நோயாகப் பார்க்கிறார் கவிஞர் . இதை மூளைக்குள் புகுத்தப்பட்ட விலங்குஉடைத்தெறிவது அவ்வளவு எளிதாயில்லை என்று குமைகிறார்.

கவிதை எண் – 21: “நடமாடும் கடவுளாகி விடு 

வாயிலிருந்து லிங்கம் கக்கு!
கையிலிருந்து விபூதி கொட்டு!
முதல்  குடி முதல்
கடைகுடி வரை
காலில் விழ வை
நிறுத்தி நிறுத்தி
இரண்டொரு வார்த்தைகள் பேசு
.......
இந்தியாவில்
எளிதாய் சொத்து சேர்க்க
நீயும் கடவுளாகி விடு
…….
அசைந்து திரிந்த கடவுளின்
அசையா சொத்து
நாற்பதினாயிரம் கோடி.
மதம்ஆன்மிகம் என்ற பெயரில் போலிகள் பணம் பண்ணுவதையும் அவர்களுக்கு அரசு இயந்திரம் பக்க பலமாய் இருப்பதையும்  இந்தக்  கவிதையின் மூலம் நையாண்டி செய்கிறார் கவிஞர் வா.நேரு.கவிஞர் குறிப்பிட்டது போல் புட்டப்பர்த்தி சாயிபாபா காலிலும் காஞ்சி ஆச்சாரியார் கால்களிலும் விழுந்து கிடக்கும் அல்லது கிடந்த அரசியல் வாதிகள் உயர் அதிகாரிகள் எத்தனை பேர்கள்.

கவிதை எண் – 27: “கருகின பயிரைப் பார்த்து 

இக்கவிதையில் கடன் வாங்கி விவசாயம் பார்த்து நொடித்து போகும் ஏழை விவசாயிகளின் ஏமாற்றத்தையும்மனக்குமுறலையும் அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக;
செத்துப் போன
பிள்ளையைப் பார்த்து
கதறி அழும் பெத்தவன்போல
கருகின பயிரைப் பார்த்து
மனதிற்குள் கதறி அழும் வேலை
வட்டிக்கு கடன் கொடுத்த
வட்டிக்காரன் வாரானே!
என்ன செய்ய?”

இந்த ஏழைக் குடியானவனின் அபயக் குரலை மேல்தட்டு வாசகர்கள்  அதிகம் உள்ள  எழுத்து.காம் வலைத்தளத்தில் எழுதிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த  முனைவர் நேரு அவர்களை கட்டாயம் பாராட்டியே தீர வேண்டும். ஆனால் விவசாயம் நொடித்துப் போவதையோ அல்லது  கடனுக்குப்  பயந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதையோ தெரிந்து கொள்ளாத அல்லது புரிந்து கொள்ளாத மக்கள் வாழும் நாடு இது. கவிதையின் இறுதியில் இப்படி எழுதி இருக்கிறார்;

இருக்கிற தண்ணியை
பகிர்ந்து கொடுக்க வக்கில்லே
இல்லாத பகுதிக்கு
தண்ணி வர வைக்கிற
திட்டம் ஏதுமில்லேஇந்தியாவில்.
பின்னே எதுக்கு அரசாங்க வானொலியில்
அன்பார்ந்த விவசாயிகளே!
என்று முடித்திருப்பார். ஆனால் நான் வாசித்த மூலக்கவிதையில் கீழ்காணும் வகையில் இருந்ததாக ஞாபகம்;  
பின்னே எதுக்கு அரசாங்க வானொலியில்
அன்பார்ந்த விவசாயிகளே!
                            என்று அழைக்கிறீர்கள்
சாகப் பிறந்தவர்களே
என்று அழையுங்கள்! .....
நூலில் ஏனோ கடைசி வரியை நீக்கி இருக்கிறார் கவிஞர். எனக்கென்னவோ அந்த வரிகளும் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

கவிதை எண் – 41: “மாணவனை மறைமுகமாகக் கழுவேற்றி 

இக்கவிதையில் ஆசிரியர்களும் பெற்றோர்களும்  படிப்பு என்ற பெயரில் குழந்தைகளை சித்திரவதை செய்யும் கொடுமையை கடுமையாக விமர்சித்துள்ளார். குழந்தைகளை அவர்களின் வழியே சென்று ,அவர்களின் அறிவைத் தூண்டி வளர்ப்பதற்குப் பதிலாக வியாபார நோக்கில் உருவாக்குவது தவறு என்று சுட்டிக்காட்டுகிறார். அதற்கு அவர் கூறும் காரணம்;

மதிப்பெண் மட்டுமா வாழ்க்கை!
பிள்ளைகளின் வசந்த காலத்தை
இருண்ட காலமாய் ஆக்காதீர்!
விரும்பிய பாடம் படிக்கட்டும்
விருப்பப்படி படிக்கட்டும் !
படித்தவர்கள் எல்லாம் ஜெயித்ததில்லை!
ஜெயித்த பலபேர்
நன்கு படித்ததில்லை!
திணிக்காதீர் உங்கள் கனவுகளை
உங்கள் பிள்ளைகளின் மேல்!

இதே கருத்தில் எனக்கு  முழு உடன்பாடு இருப்பதால்  இந்தக் கவிதை எனக்கு பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை தான்.

கவிதை எண் – 42: “சொல் போதும் எனக்கு 

கவிஞர் வா.நேரு ,  இந்தக் கவிதையில் தன்னைப் பற்றிய ஒரு சுயபிம்பத்தை நமக்குத் தந்துள்ளார். அது  ஒரு எளிய மனிதனின் உயர்ந்த எண்ணங்களை நமக்கு உணர்த்துகிறது.

மதிப்புறு முனைவர்
பட்டங்கள்
எனக்கு வேண்டாம்!
---
சாதனையாளன்
நான் எனச்
சட்டைக் காலரைத்
தூக்கிவிட்டுத்
திரிதல் வேண்டாம் !
சக மனிதன் என்னை
"மனிதன் இவன்"
என்று சொல்லும் சொல்
போதும் எனக்கு!
----
மாட மாளிகையும்
பவனி வரக் காரும்
பவிசும் வேண்டாம் எனக்கு!
நல்ல மகன்
நல்ல கணவன்
நல்ல தந்தை
என்று எனது
உறவுகள் சொல்லும் சொல்
போதும் எனக்கு!

என்ன கவிஞர் இவர்?.  சினிமாவிற்கு பாட்டெழுதி  புகழ் பெற ஆசையில்லாமல் கார்  வாங்க விருப்பமில்லாமல் தலை முழுவதும் தான் உலகப் புகழ் பெற்ற கவிஞன் என்ற தலைக்கனம் இல்லாமல் வாழ ஆசைப்படுகிறார்?


கவிதை எண் – 42: “நிறைந்திருக்கிறாய் அம்மா! 

தனது தாயின் மரணத்தினால் ஏற்ப்பட்ட  சோகத்தை இப்படி பதிவு செய்து தாய்மைக்கு பெருமை சேர்த்துள்ளார்
குடத்திற்குள்
நிறைந்திருக்கும்  நீர்போல
நினைவுகள்  முழுக்க
நிறைந்திருக்கிறாய் அம்மா!
---
ஏழு வயதில் தந்தையை
இழந்த என் வளர்ச்சியில்
தந்தையும் தாயுமாய்
செடியை வளர்க்கும்
சூரிய ஒளி போல்
அருகில் இருந்த போதும்
தூரத்தில் இருந்த போதும்
ஒளியூட்டினாய்
உணர்வூட்டினாய்
செரிவூட்டினாய்
என் வாழ்வை அம்மா!

இப்படி தாயன்பை அழகாக கொடுத்துள்ளார்.
இவ்வாறே நூலில் உள்ள மற்ற கவிதைகளிலும் முனைவர்.நேருவின் அனுபவங்களும் பட்டறிவும்   கவிதை வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது. அவர் இக்கவிதைகள் மூலம் சுட்டிக்காட்டும் மனித வாழ்க்கை சமூகத்திற்கு உரம் போட்டு வளர்க்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனாலும் சாதியத்திற்கு எதிரான வலுவான கவிதைகளும் விதவை மறுமணம் காதல்நட்பு பட்டினி வறுமை ஒழிப்பு போன்ற தளங்களைச் சுட்டிக்காட்டும் கவிதைகளையும் முனைவர் வா.நேரு  இன்னும் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் படைப்புகள் தொடர்ந்து பயணிக்கட்டும்!

-       -சு.கருப்பையா.
Nantri  :http://vasipporkalam.blogspot.in/2014/10/blog-post_22.html
நன்றி : வாசிப்போர் களம் - வலைத்தளம்