Thursday 30 April 2015

வாழிய நின் புகழ் !...


எங்களின் புரட்சிக்கவியே !
நீ கொடுத்த எரிதழல்
எரிந்து கொண்டுதான்
இருக்கிறது மனதில்...
இரவும் பகலும்
எரிப்பவற்றை நினைத்தபடி!

வையகம் ஏமாறும்படி
வைத்துள்ள நூற்களை
சில கற்றறிந்தோர்
காமுற்று பேசுகையில்
சினந்து வந்து விழுந்த
உன் கவிதை வார்த்தைகள்
மூளைக்குள் மின்னலென
வந்தமர்ந்து  மறைகிறது !

பக்திக்கு மட்டுமே தமிழ்
என்றறிந்தோர் மத்தியில்
இடியென இறக்கினாய்
' கடவுள் கடவுளென்றதற்கும் 
கதறுகின்ற மனிதர்காள் '
என நாத்திகத் தமிழை !

'உடை வெளுக்கும் தோழரை
கழுதை முன்னேற்றுமா?
கடவுள் முன்னேற்றுமா ? '
எனும் உனது கேள்விக்கு 
இன்றும் பதிலில்லை....
ஆத்திகப்பசப்பல்களுக்கு 
எதிராய் மேடையேறும் 
ஒவ்வொரு மேடையிலும்
உனது வரிகளே எங்கள்
வார்த்தைகளின் கேடயமாய் !



வெளிச்சமிக்க நாடு
எனப் பகற்றியோர் மத்தியில்
' இருட்டறையில் உள்ள நாடு ...
இன்னும் சாதி எனும் சதியால்
சதிராடும் நாடு ' என்றாய்
'ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பர்' ஆவதற்கான
உணர்ச்சியைக் கொடுத்தாய்...

நூறு ஆண்டுகளுக்குப் பின்னால்
வந்தது வாழ்வு என ஆடும்
'நூல்'களின் வாலறுக்கும்
நுட்பங்களை சொற்களாய்
தமிழியக்கமாய் கொடுத்தாய் ...

இளைஞர்கள் கைகளில்
உந்தன் கவிதைகள்
மீண்டும் தவழ்கிறது .....
உணர்ச்சியும்
மகிழ்ச்சியும்
எழுச்சியும் 
ஏற்றமும்  பெறுகின்றார்
உந்தன் கவிதைகளால்...
வாழிய நின் புகழ் !

                  வா. நேரு ....29.04.2015






Saturday 18 April 2015

எல்லோருக்குமானவர்.........

எல்லோருக்குமானவர்



‘அம்பேத்கர் களம் 125' கண்டேன். சாதியத்தின் வெற்றி எப்படி என்பதை ஆதாரங்களால் நிறுவியவர் அம்பேத்கர். வரிசையாக அடுக்கப்பட்ட சமமின்மை என்பதே சாதியம் என்பதனை உணர்த்தியவர். ஏணிப்படிகளைப் போன்ற அமைப்பு உள்ள சாதி அமைப்பில் மிகக் கீழ்ப்படியில் உள்ளோரும், மிக மேல்படியில் உள்ளோரும் சண்டையிட்டுக்கொள்வதில்லை.
அடுத்தடுத்த படிகளில் உள்ளவர்கள்தான் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்கிறார்கள், சாகின்றார்கள். நாங்கள் சண்டையிடுகிறோமா என்று உச்சாணிப்படியில் இருக்கும் சாதியினர் கேட்கின்றார்கள். ஆனால், இப்படிச் சண்டையிடும் அமைப்பை ஏற்படுத்தியவர்கள், இன்று வரை கட்டிக்காப்பவர்கள் அவர்கள்தான் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர் அம்பேத்கர்.
இந்து மதம் இருக்கும் வரை சாதி இருக்கும், சாதி இருக்கும் வரை தீண்டாமை இருக்கும் என்றவர் அம்பேத்கர். “சாதி என்பது இந்துக்கள் கலந்து உறவாடுவதற்குத் தடையாக உள்ள கல்சுவரோ, கம்பி வேலியோ அல்ல; சாதி என்பது ஓர் எண்ணம், ஒரு மனநிலை. எனவே சாதியை ஒழிப்பது ஒரு பவுதிகத் தடையை அழிக்கும் செயல் அல்ல, மக்களின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்தும் செயல்’’ எனக் கூறினார்.
இதையே தந்தை பெரியார் “மூளையில் போடப்பட்ட விலங்கு, கண்ணுக்குத் தெரியாதது’’ என்றார். எல்லா சாதியைச்சார்ந்த பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என்பதற்காகச் சட்டம் இயற்றி அது நிறைவேறாமல் போனதால் தனது அமைச்சர் பதவியைத் துறந்தவர் அம்பேத்கர்.
அவர் எல்லோருக்குமான தலைவர் என எல்லோரும் உணரும்போது மாற்றம் நிகழலாம். ஆனால், சாதியவாதிகள், மதப் போர்வையில் சாதி வேண்டும் எனப் பாடுபடுபவர்கள் அவ்வளவு எளிதாக மக்களை அவ்வாறு உணரவிட மாட்டார்கள்.
முனைவர் வா. நேரு, மாநிலத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம், மதுரை.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 18.04.2015


Monday 13 April 2015

அண்மையில் படித்த புத்தகம் : அம்பேத்கர் வாழ்வும் பாடமும்....சு.அறிவுக்கரசு


அனைவருக்கும் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125-ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள்






அண்மையில் படித்த புத்தகம் : அம்பேத்கர் வாழ்வும் பாடமும்
ஆசிரியர்                   : சு.அறிவுக்கரசு 
வெளியீடு                  : விஜயா பதிப்பகம், கோவை, முதல் பதிப்பு 2010
விலை                     : ரூ 65

                                               இந்த நூலின் ஆசிரியர் திரு. சு.அறிவுக்கரசு அவர்கள் ஏற்கனவே பெரியார் பன்முகம், பெண், இந்து -ஆத்மா-நாம், தென்றல் அல்ல புயல் , புராணங்கள் 18+1 , அச்சம்+அறியாமை=கடவுள் என்னும் புத்தகங்களின் ஆசிரியராவார். 'அம்பேத்கர் வாழ்வும் பாடமும் ' என்னும் இந்த நூல் மொத்தம் 5 தலைப்புக்களை உள்ளடக்கியதாக உள்ளது. 'அடித்தளம், அமர்க்களம், அரசியல்தளம், சமூகத்தளம், பிழைபடப்புரிதல்' என்பவை அந்த 5 தலைப்புக்களாகும்.

                         அடித்தளம் என்னும் பகுதியில் " பிரிட்டிஷார் இந்தியாவை ஆளத்தொடங்குவதற்கு முன்பிருந்தே எம் மக்களின் நிலையோடு இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப்பார்த்தால் , நாங்கள் கிஞ்சித்தும் முன்னேறவில்லை; மாறாக நாள்களை நகர்த்திக்கொண்டிருக்கிறோம் ... " என ஆரம்பித்து கேள்விகளை இங்கிலாந்து நாட்டின் பிரதமரை நோக்கி இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில்  கேட்ட முதுகெலும்பிருந்த முதல் மனிதர் யார்? அவர் பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் ! என்னும் அறிமுகத்தோடு இந்த நூல் தொடங்குகின்றது. தொடர்ந்து முதல் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் இங்கிலாந்து பிரதமர் ராம்சே மாக்டொனால்டையும் ,என்.எம்.ஜோசியையும் தவிர்த்து மற்ற பிரதிநிதிகள் அனைவரிலும் அதிகமான கல்வித்தகுதியைப் பெற்றிருந்தவர் டாக்டர் அம்பேத்கர்தான் என்னும் தகவலைக் குறிப்பிடுகின்றார்
.
                        நால்வருண அமைப்பிற்கும் அப்பால் , ஐந்தாம் வருணமாகப் பஞ்சமர் ,அவர்ணஸ்தர் என்று கூறித் தொடக்கூடாது, பார்க்கக்கூடாது, பழகக்கூடாது என்றெல்லாம் தடைவிதிக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட மக்கள் என்றாக்கப்பட்ட மனித குலத்தில் பிறந்தவர் பீம்ராவ் அம்பேத்கர் என அறிமுகப்படுத்துகின்றார் . ராம்ஜி சுக்பாலின் 14 குழந்தைகளில் கடைக்குட்டியாக 14.4.1891-ல் பிறந்தவர் அம்பேத்கர், இவரின் தாயார் பீமாபாய் என்று அவரின் பிறப்பினைப் பற்றிய தகவல்களைத் தருகின்றார். அம்பேத்கர் பிறந்த காலகட்டத்தில் இருந்த சமூக நிலையை சு.அறிவுக்கரசு சுட்டிக்காட்டுகின்றார்.  
1848-ல் மராட்டிய மாநிலம் புனே நகரில் ஜோதிபாபுலே தொடங்கிய பள்ளிதான் தாழ்த்தப்பட்டோருக்கான முதல் பள்ளியே ! .பிற்படுத்தப்பட்ட ஜாதியைச்சேர்ந்தவரான மகாத்மாபுலே அவர்கள்தான் பெண்கல்விக்காக முயற்சிகள் எடுத்துப் பெண்களுக்கான பள்ளியையும் முதலில் ஏற்படுத்தியவர்.இதற்காக ஆசிரியர் யாரும் முன்வராத காரணத்தினால் தம் வாழ்க்கைத் துணைவரான சரசுவதி புலேவுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து ஆசிரியை ஆக்கி நடத்திய செயல்வீரர் என அந்தக் கால கட்டத்தினை அறிமுகப்படுத்துகின்றார்.  

                   தொடக்கக் கல்வியைக் கற்றுக்கொண்ட பீமராவ் உயர்நிலைப்பள்ளியில்  சேர்க்கப்பட்டார். வீட்டிலிருந்தே கோணிச்சாக்கு எடுத்துக்கொண்டு பள்ளிக்கு போய் வகுப்பறையின் கடைக்கோடி மூலையில் அமர்ந்து பாடம் கேட்டார் . ஆசிரியர் எவரும் அவரிடம் பாடம் பற்றி கேள்வி கேட்பதே கிடையாது. அவரது நோட்டுப்புத்தகங்களை வாங்கிப் பார்ப்பதும் கிடையாது. தீட்டாகி விடுமே ,அதனால்!. கேள்வி ஞானம் கொண்டே படித்தார். ஒரு கதை சொல்லப்படுகிறது , அம்பேத்கர் அவர்களின் பெயருக்கு . அம்பேத்கர் பள்ளியில் படிக்கும்போது ' அம்பேத்கர் ' என்னும் பெயர் கொண்ட ஆசிரியர் மட்டுமே இவரிடம் கருணையாக நடந்து கொண்டார் என்றும் அதனால் அவரின் (இரண்டாம் ) பெயரை பீம்ராவின் (இரண்டாம் ) பெயராக மாற்றி எழுதினார் என்றும் அதனால்தான் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆனார் என்றும் கர்ணபரம்பரைக் கதை ஒன்று அவிழ்த்து விடப்பட்டுள்ளது.மராட்டியர்கள் தம் பெயருடன் தம் ஊர்ப்பெயரையும் சேர்த்தே அழைத்துக்கொள்வர். அம்பேத்கரின் அம்மா பெயர்கூட பீமாபாய் 'முர்பாத்' கர். அதேபோல அம்பேத்கரின் சொந்த ஊர் அம்பாவடேகர். அவரின் அப்பா பெயர் ராம்ஜி அம்பாவடேகர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம், அம்பேத்கரின் பெயரை எழுதும்போது பீம்ராவ் ராம்ஜி அம்பாவடேகர் என்று எழுதப்பட்டு பின்பு அது பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என மறுவியிருக்கலாம் என்னும் கருத்தை இந்த நூலாசிரியர் வைக்கின்றார்.

                  உயர் நிலைப்பள்ளியில் இரண்டாம் பாடமாக சமஸ்கிருதம் படிக்க பீம்ராவுக்கு அனுமதி தரப்படவில்லை. அதனால் பாரசீக மொழி படித்தார். பின்னாளில் அவர் தன் முயற்சியால் சமஸ்கிருதம் படித்து  அதில் பெரும் பாண்டித்யம் பெற்றார். 1903-ல் மெட்ரிகுலேசன் தேர்வில் வெற்றி பெற்றார். அவர் சார்ந்த 'மஹர் ' ஜாதியில் முதன்முதலில் மெட்ரிகுலேசன் தேறியவர் இவர்தான் என்பதால் பெரும் பாராட்டு விழாவே நடத்தப்பட்டது. பாராட்டிப்பேசிய கிருஷ்ணாஜி அர்ஜீன் கெலுஸ்கர் என்பார் தந்த ' புத்தரின் வாழ்க்கை வரலாறு ' என்னும் நூல் அம்பேத்கரின் வாழ்வில் இறுதிவரை செல்வாக்கு செலுத்தியதை வரலாறு புலப்படுத்துகிறது  என்பது போன்ற பல தகவல்களைக் குறிப்பிடுகின்றார் இந்த நூல் ஆசிரியர் சு.அறிவுக்கரசு.

                 பரோடா மகாராஜாவின் உதவியும் உபகாரச்சம்பளமும் பெற்று அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்காகச்சென்றார். பிரிட்டிஷ் இந்தியாவின் மாநில நிதி ஆதார வளர்ச்சி என்ற தலைப்பில் ஆய்வு செய்தமைக்காக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆனார். 

                    கல்வித்தாகம் அடங்காத நிலையில் அமெரிக்காவிலிருந்து லண்டன் போனார். 1916-ல் சட்டமும் பொருளாதாரமும் படிக்க தனித்தனிக்கல்லூரிகளில் சேர்ந்தார். 1921-ல் எம்.எஸ்.ஸி. பட்டம் பெற்றார். 1922-ல் ஜெர்மனியின் பான் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். லண்டனில் அவர் சமர்ப்பித்த "ரூபாய் பற்றிய பிரச்சனைகள் " என்னும் ஆய்வுக்காக டி.எஸ்.சி (D.Sc) டாக்டர் ஆப் சயின்ஸ் என்னும் அரிய , உயரிய பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. பாரிஸ்டர் பட்டமும் பெற்றார். சட்டம், சமூகவியல், பொருளாதாரம் என்று பல்துறை அறிஞராக பட்டங்கள் பலபெற்று அறிஞராக அங்கீகாரம் பெற்றார் அம்பேத்கர் என இந்த நூல் ஆசிரியர் விவரிக்கின்றார் .

                   " அரசியல் தளம் " என்னும் தலைப்பின் கீழ் இந்து மதச்சீர்திருத்த சட்ட வரைவில் (Hindu Reform Bill) கொண்டுவர அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தீவிரமாக முயற்சி எடுத்ததையும் , அந்தச்சட்ட முன்வரைவு பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் போனதால் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மத்திய அமைச்சர் பதவியைத் துறந்ததையும் விரிவாக எடுத்துக்கூறுகின்றார். " சமரசம் செய்து கொள்ள மறுத்த போர் வீரராகவே அவர் செயலாற்றினார் " என விளக்குகின்றார்.
தொழிலாளர் துறை அமைச்சராக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இருந்தபொழுது கொண்டு வந்த சில சட்டங்கள் :
1) அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த முறைதான் தொழிலாளரும் முதலாளியும் கூடிப்பேசும் முத்தரப்பு பேச்சுவார்த்தை முறை.
2) தொழில் தகராறு, தொழில் சட்டம், தொழிலாளர் நலன் ஆகிய மூன்றையும் கவனிக்கும் தொழிலாளர் நலத் தலைமைக் கமிஷனர் அலுவலகத்தை 1945-ல் ஏற்படுத்தியவரே அம்பேத்கர்தான்
3) தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாள்கள் அளிக்கப்படவேண்டும் எனச்சட்டம் இயற்றினார் அம்பேத்கர். இந்த விடுமுறையை எடுக்காமல் சேர்த்து வைத்துக்கொள்ளும் உரிமையை அளித்தார்.(அது பணமாக ஓய்வுபெறும்போது தரப்படுகின்றது ).
4) " ஓவர் டைம் " பணிக்குக் கூடுதல் ஊதியம் வழங்கப்படவேண்டும் எனும் சட்டமும் அம்பேத்கரின் கொடையே 
5) குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்திட மண்டல குழுக்களை நியமித்து , ஊதியத்தை நிர்ணயிக்கச்செய்தார்.

                மினிமம் வேஜ், லிவிங் வேஜ்,  பேர் வேஜ் என்று நீட்டிப்பேசும் தோழர்கள், மேலே சொன்ன அனைத்தையும் அரசியலமைப்புச்சட்டத்தில் இடம் பெறச்செய்தவர் டாக்டர் அம்பேத்கர் என்பதை அறிந்திருப்பார்களா ? எனும் கேள்வியை இந்த நூலின் ஆசிரியர் சு.அறிவுக்கரசு கேட்கின்றார் . மேலும் வருங்கால வைப்பு நிதி, சேமிப்புத்திட்டங்கள், பங்களிப்பு காப்பீட்டுத்திட்டங்கள் போன்ற பல தொழிலாளர் நலத்திட்டங்களும் , தொழிலாளர் இழப்பீட்டுச்சட்டமும் , பிரசவ கால நலச்சட்டங்கள் போன்ற பலவும் அவரால் அளிக்கப்பட்டவை என்பதைத் தொழிலாளர் உலகம் அறிந்து கொள்ளவேண்டும் என இந்த நூலின் ஆசிரியர் பக்கம் 59ல் குறிபிடுகின்றார்.

              தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று என்கிற வர்க்க உணர்வு ஏற்பட்டு ஒரே வர்க்கம் என்ற நிலை உருவாவதற்கு ஜாதிகள் தடையாக இருக்கின்றன என்பதை உணர்ந்து  அதனை ஆழமாகச்சிந்தித்து  நிறைய எழுதினார். அதன் அடிப்படையிலேயே எந்தவிதத் தளைகளுமற்ற சுதந்திரமான அமைப்பாக இயங்கவேண்டும் என்னும் நோக்கத்தில் 1936-ல் சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கினார். 'முதலாளிகளும் தொழிலாளிகளும் சரிசமமாக நடத்தப்படக்கூடாது, தொழிலாளர்களுக்கு அதிக உரிமையும் முதலாளிகளுக்குக் குறைந்த உரிமையும் தரப்பட வேண்டும் ' என்பது அம்பேத்கரின் கருத்து எனக்கூறுகின்றார். " பொருளாதாரச்சுரண்டல்  என்பதைப்போன்றே முக்கியத்துவம் பெற்றது சமூக, சமய ஒடுக்குமுறைகளும் பெண்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளும் ஆகும் : என  எடுத்துக்காட்டி  எல்லாவிதமான சுரண்டல்களையும் எதிர்த்துப்போராடவேண்டும் என்றவர் டாக்டர் அம்பேத்கர் என்று இந்த நூல் ஆசிரியர் சு.அறிவுக்கரசு குறிப்பிடுகின்றார். 

                           'சட்டச்சிற்பி அம்பேத்கர் ' என்னும் தலைப்பின் கீழ் இந்திய அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் இடம்பெற்றது, இந்தியாவுக்கான தேசியக்கொடியை வடிவமைக்கும் குழுவில் டாக்டர் அம்பேத்கர் ஓர் உறுப்பினராக இடம் பெற்றது குறித்த பல தகவல்களை ஆதாரங்களுடன் பக்கம் 63-ல் குறிப்பிடுகின்றார் . இந்திய அரசியல் நிர்ணய சபையில் அரசமைப்புச்சட்டம் எழுதும் வரைவுக்குழு அமைக்கப்பட்டு அதன் தலைவராக டாக்டர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டதையும் , வரையறைக்குழுவில் 7 பேர் இருந்தாலும் , முழுப்பழுவையும் டாக்டர் அம்பேத்கர் தன்னுடைய தோள்களில் சுமக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதையும் விவரிக்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். 

                           தனி நபர் வழிபாடு மிகவும் ஆபத்தானது, பகுத்தறிவற்ற கண் மூடித்தனமான தலைவர் வழிபாடு கூடாது என எச்சரித்தவர் டாக்டர் அம்பேத்கர். 26.11.1949-ல்  395 கூறுகளையும் , 8 அட்டவணைகளையும் கொண்ட அரசமைப்புச்சட்டத்தை மக்களுக்கு அர்ப்பணித்ததைக் குறிப்பிடுகின்றார். 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்கள் பாடுபட்டு எழுதப்பட்ட சட்டம், 7600 திருத்தங்கள் முன் ம்மொழியப்பட்டு, 2473 திருத்தங்கள் பரிசீலிக்கப்பட்டு எழுதப்பட்ட சட்டம், 26.1.1950 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் என விரிவாகவும் விளக்கமாகவும் அரசமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டதை இந்த நூல் ஆசிரியர் கூறுகின்றார்.

                          ' அவர் கண்ட குறைகள் ' என்னும் தலைப்பில் அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்ட அரசியல் சட்டக்கூறு 340, சமூக ரீதியாகவும் , கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கான வழிவகைகளைத் தெரிந்து அவற்றை செயல்படுத்திடத் தேவையான பரிந்துரைகளைத் தெரிவித்திடக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் எனத் தெரிவிக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டீற்கான புள்ளி விவரங்களை சேகரித்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற டாக்டர் அம்பேத்கரின் கோரிக்கை பிரதமர் நேருவால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் அம்பேத்கர் பதவி விலகினார் எனப்பக்கம் 70-ல் இந்த நூல் ஆசிரியர் சு.அறிவுக்கரசு குறிப்பிடுகின்றார்.தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும் உடலில் வலதுகை, இடதுகை போன்றவர்கள் என்ற கருத்தும் , இருவரும் இணைந்து போராடவேண்டும் என்கிற உறுதியான நிலையைக் கொண்டவராக அம்பேத்கர் விளங்கினார் என சு.அறிவுக்கரசு குறிப்பிடுகின்றார். 

                             சமூகத் தளம் என்னும் பொதுத்தலைப்பில் கல்விக்கு முகாமை, இந்துவை விட்டொழித்தார், இந்து மத ஆராய்ச்சியாளர் எனும் தலைப்புக்களில் விரிவாக பக்கம் 71 முதல் 108 வரை விளக்குகின்றார். பிழைபடப்புரிதல் என்னும் தலைப்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்களை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் தந்தை பெரியாருக்கும் டாக்டர் அம்பேத்கருக்கும் உள்ள ஒற்றுமைகளை இந்தப் பகுதியில் விளக்குகின்றார் .' கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் ' எனும் தாரக மந்திரத்தை தனது வழிகாட்டிகளுக்கு சுட்டிக் காட்டினார் டாக்டர் அம்பேத்கர்.   டாக்டர் அம்பேத்கர் கண்ட கனவு நனவாக, எண்ணம் ஈடேற, இலட்சியம் வெல்ல என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பதனை இந்த நூல் ஆசிரியர் சு.அறிவுக்கரசு விரிவாக எடுத்துரைக்கின்றார். படித்துப்பாருங்கள் . டாக்டர் அம்பேத்கரை முழுமையாகப்புரிந்து கொள்ள ' அம்பேத்கர் வாழ்வும் பாடமும் ' என்னும் இந்தப்புத்தகத்தை. 
குறிப்பு : வானொலியில் புத்தக விமர்சனப் பகுதிக்காக எழுதியது. மதுரை அகில இந்திய வானொலியில்  சில மாற்றங்களோடு ஒலிபரப்பப்பட்டது. 

Saturday 11 April 2015

நினைவில் நிற்கும் முகம்....

தலையங்கம் தொடங்கி முழுமையாக இரண்டு பக்கங்களை ஜெயகாந்தனுக்காக ஒதுக்கிய ‘தி இந்து' தமிழ் நாளிதழுக்குப் பாராட்டுகள்.

எழுத்தாளரை மதிக்காத எந்தச் சமூகமும் முன்னேற இயலாது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி ஜெயந்திரர் வரை பல்வேறு கருத்தோட்டம் உடையவர்கள் ஜெயகாந்தனுக்கு அளித்திருக்கும் பாராட்டுகளே அவருடைய பண்பாட்டுக்கும் புலமைக்கும் சான்று.தனது எழுத்துகளால், படிப்பவர் மனங்களில் ஊடுருவியவர் ஜெயகாந்தன். இன்னும் 200 வருடங்கள் கழித்தும் நிற்கப்போவது அவரின் எழுத்துகள்தான்.
எழுத்தாளன் என்பவன் கையேந்தும் பிச்சைக்காரன் அல்ல, தனது கருத்துகளை எழுத்துகளால் அள்ளி அள்ளி வழங்கும் வள்ளல் என்பதை நடைமுறையில் காட்டியவர். எவருக்கும் பயப்படாத தன்மை கொண்டவர்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் ‘வாழ்வியல் சிந்தனைகள்' நூல் வெளியீட்டு விழாவில், கலந்துகொண்டு உரையாற்றியபோது ‘நான் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுத்தான் பேசுகிறேன்' என்று ஆரம்பித்து, அவர் ஆற்றிய உரை இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.
கி.வீரமணிக்கும் ஜெயகாந்தனுக்கும் கடுமையான கருத்து முரண்பாடு இருந்தாலும்கூடப் பொதுத்தன்மையான அந்த நூல் வெளியீட்டு விழாவில் அவ்வளவு ஈர்ப்பாகவும் எடுப்பாகவும் தோழமையோடும் பேசினார். இன்னும் பல ஆண்டுகளுக்குத் தமிழ் இலக்கிய உலகில் மறையாமல் நினைவில் நிற்கும் ‘கம்பீரமான முகம்'தான் ஜெயகாந்தனின் முகம்.

- முனைவர் வா. நேரு, மாநிலத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்.

நன்றி :  தி  இந்து -தமிழ் நாளிதழ் 11.04.2015 

Monday 6 April 2015

நிகழ்வும் நினைப்பும் (36) : கவிஞர் முத்து நிலவனின் கலைஞர் தொலைக்காட்சிப்பேட்டி

நிகழ்வும் நினைப்பும் (36) : கவிஞர் முத்து நிலவனின் கலைஞர் தொலைக்காட்சிப்பேட்டி

தோழர் கவிஞர் முத்து நிலவனின் நேர்காணல் இன்று(6.4.2015)  காலை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. தோழர் முத்து நிலவனைப்போலவே அவரது பேட்டியும் இயல்பாகவும், எதார்த்தமாகவும் இருந்தது. தமிழ் ஆசிரியர் என்பதாலோ என்னவோ மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட வார்த்தைகளாக அவரின் பதில்கள் வந்து விழுந்தன. நேர்காணல் காண்பவரின் தமிழ் உச்சரிப்பைப் பாராட்டிவிட்டு (உண்மையிலேயே அவரின் உச்சரிப்பு நன்றாக உள்ளது ) ஊடகத்தில் இருக்கும் பலர் தமிழ் உச்சரிப்பைக் கொலை செய்வதைக் குறிப்பிட்டார். கல்வி இன்று வியாபாரமாக இருப்பதையும் , கல்வி என்பது ஆசிரியர்கள் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல, அனைத்து தரப்பினரும் பங்கு கொள்ள வேண்டிய, பணியாற்ற வேண்டிய பணி என்பதனைக் குறிப்பிட்டார். " ஆசிரியர்கள் வகுப்பறையில் இருக்கும் பெற்றோர்கள், பெற்றோர்கள் வீட்டில் இருக்கும் ஆசிரியர்கள் " என்று குறிப்பிட்டது அருமை. இணையத்தின் பயன்பாடுகளை, வலைத்தளப்பயன்பாடுகளைப் பற்றியெல்லாம் மிக நன்றாகக் குறிப்பிட்டார். எல்லாவற்றிலும் எதிர்மறை (நெகடிவ்) இருக்கிறது, அதற்காக அதனைப் பயன்படுத்த மாட்டேன், ஒளிந்து கொள்வேன் என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகத்தான் இருக்கும். தான் வலைத்தளம் ஏற்படுத்தி பயன்படுத்துவது மட்டுமல்ல, வலைத்தளத்தில் எழுதும் பலருக்கு மிகப்பெரிய ஊட்டசக்தியாகத் திகழ்பவர் தோழர் முத்து நிலவன் அவர்கள். பேட்டியில் அதனைக் கூறியிருக்கலாம். தன்னடக்கத்தால் அதனைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டார் என எண்ணுகின்றேன்.

                    தோழர் முத்து நிலவன் பேட்டியில் எனக்கு நெருடலான ஒரு செய்தியும் இருந்தது. கம்பனின் எழுத்துக்களைப் பற்றிக் கூறியது. கம்பன் கவிதை நன்றாக இருக்கலாம், படிக்க சுவையாக இருக்கலாம் , ஆனால் அதன் விளைவு. இன்றைக்கும் இராமனை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு பக்க துணை கம்பன்தானே, நமது சேது சமுத்திரத்திட்டம் நனவாகப்போனது தடுத்து நிறுத்தப்பட்டது அதனால்தானே, திருக்குறள் பேரவை என்று பெயர்வைத்துக்கொண்டு கம்பராயணத்தைப் பற்றி அந்த அவையில் பேசிக்கொண்டு இருக்கும் நிலைதான் பல இடங்களில் இன்றும் . இன்றைக்கும் திருக்குறளைப் பரப்புவதற்கு இடையூறாக இருக்கும் இலக்கியம் கம்பராமாயணம்.  கம்பரசம் எழுதினார் அறிஞர் அண்ணா - அவரே தீ பரவட்டும் என்றார், மலத்தில் அரிசி பொறுக்கும் வேலை என்றார் அய்யா பெரியார். வால்மீகி கொடுத்த புராணத்தை , முகமூடி போட்டுக் கொடுத்தவர் கம்பன். கணினித் தமிழுக்கு நேர் எதிரானது கம்பன் தமிழ். இதில் அவருடைய கருத்தோடு முற்றிலும் எதிரான கருத்து எனக்குண்டு.

மற்றபடி சமூக அக்கறையோடு பட்டிமன்றப்பேச்சாளராய், எழுத்தாளராய், வலைத்தளப்பதிவராய், தமிழ் ஆசிரியராய் வலம் வரும் தோழர் முத்துநிலவனின் பேட்டி மிக அருமையான பேட்டி.வாழ்த்துக்கள் தோழரே...
பேட்டி எடுக்கப்படுபவர் முழுமையாகத் தனது கருத்தை பதிவு செய்யும்வரை பொறுமையாகக் காத்திருந்து, கேட்டு பின்பு அடுத்த கேள்விக்குச்சென்று செழுமையான விவாத அரங்கமாக, பேட்டியாக அமைத்த ஊடகவியலாளர் , பேட்டி எடுத்த ஸ்ரீவித்யாவுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்

Thursday 2 April 2015

புகழாரம் சூட்டப்பட்ட பேரா. நம்.சீனிவாசனின் நூல்....

                           புகழாரம் சூட்டப்பட்ட பேரா. நம்.சீனிவாசனின் நூல்


                                       பத்து வயதில் பகுத்தறிவுப்பணியைத்தொடங்கி, 82 வயதிலும் இருபது வயது இளைஞராய் தந்தை பெரியாரின் பணியைத்தொடரும் தமிழர் தலைவர் கி.வீரமணி தனித் தன்மை மிக்கவர். பன்முகத்தன்மை கொண்டவர். பேச்சுப்போட்டிகளில் பரிசுகளை வாங்கிக் குவித்தவர் , ஆனால் அந்த ஆற்றலை தன் வளத்திற்காகப் பயன்படுத்தாமல் திராவிடர் வளத்திற்காகப் பயன்படுத்தியவர். ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாதாடுவதில் வல்லவர் நேரில் என்றாலும் ஊடகத்திலும் என்றாலும் நீதிமன்றத்தில் என்றாலும் ஆனால் அந்த வாதத்திறமையைப் பயன்படுத்தி வழக்கறிஞர் தொழிலில் அள்ளிக்குவித்தவரல்ல   விடுதலை ஆசிரியராய் தந்தை பெரியாரின் கட்டளையைக் கேட்டு வந்தமர்ந்து அரை நூற்றாண்டாய் விடுதலைப் பத்திரிக்கையின் ஆசிரயராக உலக சாதனை படைத்தவர், கட்டந்தரைகளாய் கிடந்த இடங்களை எல்லாம் கல்விச்சோலைகளாய் மாற்றிக் காட்டியவர். தனிப்பெரும் தலைவர் தந்தை பெரியாரின் தொண்டர் அய்யா ஆசிரியர் அவர்களின்  வாழ்வை, பணியை தனது முனைவர் பட்ட ஆய்வேடுக்காக எடுத்துக்கொண்டு, கடுமையாக உழைத்து, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆனால் தமிழர் தலைவரின் தனித்தன்மைகளை இயல் இயலாகப் பிரித்து பிரித்து , ஆதாரங்களை அடுக்கடுக்காகப் பட்டியலிட்டு , அவரின் ஒப்பற்ற தன்மைகளை உலகிற்கு அறிவிக்கும் வண்ணம் ஆய்வேட்டை அளித்து , அதன் மூலம் முனைவர் பட்டம் பெற்றார் மதுரை மன்னர் கல்லூரியின் தமிழ்த்துறைப்பேராசிரியர் நம்.சீனிவாசன்.


அந்த ஆய்வேடு 'தமிழர் தலைவரின் வீரமணியின் வாழ்வும் பணியும் ' என்னும் நூலாக வடிவம் பெற்றது திராவிடர் கழக(இயக்க ) வெளியீடாக. அந்த நூலினை முதன்முதலில் வெளியிடும் பெருமையைப் பெற்றது தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம். அதன் பொறுப்பாளர்கள் தேனியாகச் சுற்றி சுற்றி வலம் வந்து , இந்த வெளியீட்டு நிகழ்வு மூலம் மற்றவர்களுக்கு அந்தத் தேனை அளிக்கும் பெருமை பெற்றனர். அந்த விழா 28.03.2015 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் , தஞ்சாவூர் குழந்தை ஏசு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்திய இந்த நூல் வெளியீட்டு விழாவின் தொடக்கத்தில் மானமிகு தெற்குநத்தம் பி.பெரியார்நேசன்-குமரவேல், பலகுரல் மன்னன் வே,தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழங்கிய பல்சுவை கலை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகத்தின்  மாநில துணைத்தலைவர் மா.அழகிரிசாமி நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றினார். தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச்செயலாளர் கோபு.பழனிவேல் அனைவரையும் வரவேற்றும், ஒருங்கிணைத்தும் உரையாற்றினார். முன்னிலை ஏற்ற தி.க. மாவட்டத்தலைவர் சி.அமர்சிங், மாவட்டச்செயலாளர் அ.அருணகிரி, பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வ.இளங்கோவன், மாவட்டத்தலைவர் ந.காமராசு, மாவட்ட துணைச்செயலாளர் தங்க.வெற்றிவேந்தன் , மாவட்ட துணைத்தலைவர் VMK வீ.கதிரேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் பாராட்டுரை வழங்கினார். எப்போதும் போல கழகச்செயல்பாட்டில் தஞ்சாவூர் முந்திக்கொண்டுள்ளது என்று பாராட்டிய பொதுச்செயலாளர் "தமிழகத்தில் முதன்முதலாக இந்த நூல் வெளியீடு தஞ்சையில் வெளியிடப்படுவது பெருமை, பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்களுக்கு பாராட்டுகள் , பேரா.நம்.சீனிவாசன் தன்னுடைய எம்.பில். ஆய்வுப்பட்டத்திற்கே , கி.வீரமணியின் சொற்பொழிவுகள் -ஒரு ஆய்வு என்றுதான் ஆய்வு செய்தார். ஒரு அற்புதமான நூல் அது. இன்றைக்கு முனைவர் படத்திகும் அய்யாவின் வாழ்வை, பணியை எடுத்துக்கொண்டு செய்துள்ளார். பாராட்டப்படவேண்டிய பணி அவரின் பணி " என்று புகழாரம் சூட்டினார்.
.
தொடர்ந்து  நூலின் முதல்படியினை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் வெளியிட தஞ்சை மருத்துவக்கல்லூரியின் மேனாள் நரம்பியல் துறைத்தலைவர் டாக்டர் இரா.இளங்கோவன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து திராவிடர் கழக,பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்களும், பெரியார்-மணியம்மை பல்கலைக்கழகப்பேராசிரியர்களும் ,ஊழியர்களும் , பல்துறை சார்ந்த அறிஞர்களும், பல கட்சியினைச்சார்ந்த பொறுப்பாளர்களும் தொடர்ந்து புத்தகங்களைப் பெற்றனர். ஒரே நேரத்தில் 360 புத்தகங்கள் விற்றுத்தீர்ந்தன.

நிகழ்வின் தொடக்க உரையில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா, நேரு " எவருக்கும் கிட்டாத, பெருமைக்குரிய தலைவர் நமக்கு கிடைத்திருக்கின்றார்.அவரின் தொலை நோக்கு எண்ணி எண்ணி வியக்கத்தக்கது. மக்கள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு.நல்.இராமச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நமது பல்கலைக்கழகத்தை சுற்றிக்காண்பித்து பல்கலைக் கழகத்தின் தனித்தன்மைகளைக் குறிப்பிட்டார். 30 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர் தலைவர் கண்ட கனவு இன்று நனவாகி இருக்கிறது.    பன்முக ஆற்றல் கொண்ட தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் பணியினை, தொண்டற வாழ்வினைத் தொகுப்பாக பேரா. நம்.சீனிவாசன் கொடுத்திருக்கின்றார். அற்புதமான உழைப்பின் மூலம் இந்த அரிய பணியினை நம்.சீனிவாசன் தமிழ்ச்சமூகத்திற்கு அளித்திருக்கின்றார். நம்.சீனிவாசன் மதுரையில் இருப்பவர். மதுரையில் உள்ள கல்லூரியில் பணியாற்றுகிறவர்.தமிழகத்தில் உள்ள தலைசிறந்த ஆளுமைகளை எல்லாம் கல்லூரிக்கு வரவழைத்து பேசவைப்பவர். தன்னை முன்னிலைப்படுத்தாதவர். அடக்கமே உருவானவர். எங்களைப்போன்றவர்களுக்கெல்லாம் முன் மாதிரியாக  இருப்பவர். வானொலியில் பேசுவதற்கு எப்படி தயாரிப்பது என்பதனை அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். எளிமையும் இனிமையும் கொண்ட பண்பாளர் நம்.சீனிவாசன் அவர்கள். அவரின் இந்த ஆய்வேடு நூலினை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். திருமணம் மற்றும் விழாக்களுக்கு அன்பளிப்பாக இந்தப்புத்தகத்தை நாம் அளிக்கவேண்டும்.அய்யா ஆசிரியர் அவர்களின் பன்முக தொண்டறப்பணியை அறிமுகப்படுத்துவதற்கு நல்வாய்ப்பாக அமைந்தது இந்த நூல் " எனக்குறிப்பிட்டு  வெகுசிறப்பாக ஏற்பாடுகளைச்செய்த தஞ்சை பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்களுக்கு, கழகப்பொறுப்பாளர்களுக்கு  பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.

அறிமுகவுரையை பெரியார் சிந்தனை மையத்தின் துணை இயக்குநர் முனைவர் க.அன்பழகன் ஆற்றினார்." இந்த நூலின் ஆசிரியர்  'நம்' சீனிவாசன் என்று பாராட்டிய அவர், எதை எதையோ எத்தனையோ பேர் ஆராய்ச்சி செய்கின்றார்கள். ஆனால் மக்களின் தலைவரைத் தேர்ந்தெடுத்து மக்களுக்குப் பயன்படக்கூடிய ஆய்வினைக் கொடுத்திருக்கின்றார் நம்.சீனிவாசன்." எனக்கு சொந்த புத்தி இல்லை , தந்தை பெரியார் தந்த புத்திதான் எனக்கு உண்டு " எனத் தொண்டுசெய்யும் தமிழர் தலைவரைப் பற்றிய ஆய்வு இது. 1962-ல் வழக்கறிஞர் தொழிலில் நல்ல வருமானம் வந்த நிலையிலும் அதனை விட்டுவிட்டு , தந்தை பெரியார்  வா என்று சொன்னவுடன்  வந்தவர்.விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்றவர். தமிழர் தலைவருக்கு திருமண ஏற்பாடு என்பதுகூட தந்தை பெரியார் அவர்கள் அமைத்துக்கொடுத்துதான். கொள்கையா , சொத்தா என வந்த நிலையில் ,தனது மாமனாருக்கு கொள்கைக்கு விரோதமாக கொள்ளிவைக்கமாட்டேன் என்று நின்றதால் பல இலட்சங்களை இழந்தவர். இலட்சியமா, சொத்தா என்று வந்தபோது  இலட்சியமே  என நின்றவர்"    எனக்குறிப்பிட்டு  நூலின் சிறப்புக்களை மிகச்சிறப்பாக அவைக்கு அறிமுகப்படுத்தினார்.

நூலினைப்பெற்றுக்கொண்டு உரை நிகழ்த்திய டாக்டர் இரா.இளங்கோவன் அவர்கள், இது ஒரு அறிவுசார் நிகழ்ச்சி. எனது அண்ணன் இரா.பண்டரிநாதன் ஆசிரியராக இருந்தவர். இந்த நிகழ்வுக்கு தலைமை ஏற்கும் அழகிரிசாமி போன்ற பல பகுத்தறிவாளர்களை உருவாக்கியவர். அவரது தம்பி என்ற தகுதியில் இந்த நூல் வெளியீட்டு விழாவில் நான் நிற்கின்றேன்.  எழுத்தாளர் பொன்னீலன் , பகுத்தறிவாளர் கழக மாநிலத்துணைத்தலைவர் அழகிரிசாமி ஆகியோராடு தனக்கு இருக்கும் தொடர்பினைக் குறிப்பிட்ட டாக்டர் இரா.இளங்கோவன் அவர்கள், எழுத்தாளர் பொன்னீலன் நம்.சீனிவாசன் அவர்களை 'நம்ம சீனிவாசன் , தோழர் ' என மிகப்பெருமையாக குறிப்பிட்டார் எனக்குறிப்பிட்டார். அறிவியல் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதர்களின் வாழ்வில் என்ன மாற்றம் ?. பல்லக்கினைச்சுமந்து செல்பவர்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள். அதனை மனுஸ்கிருமிதிகள் போன்றவை இனறைக்கும் நியாயப்படுத்துகின்றன. 2 000 ஆண்டுகளுக்கு முன்னால் விமானம் இருந்தது என்று சொல்கின்றார்கள். ஏன் அது தொடர்ந்து விடப்படவில்லை? பழம்பெருமை பேசி நம்மை கண்கட்டி, கற்பனையான உலகத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்கின்றார்கள். உலக அளவில் நடந்த தத்துவ மாநாட்டில் தலைமை வகித்த அறிஞர்களிடம் இந்தியாவில்  முன் உதாரணம் இல்லாமல் சுயமாக சிந்தித்த தலைவர் யார் ? என்ற கேள்வி கேட்கப்பட்டது. காந்தி என்றார்கள், பதில் இது இல்லை என்றார்கள். நேரு என்றார்கள் , அவரும் இல்லை என்றார்கள் . யார் என்று கேட்டபோது பெரியார் என்று பதில்சொன்னார்கள். எந்த முன் உதாரணமும் இல்லாமல் சுயமாகச்சிந்தித்த தலைவர் பெரியார். அந்த சுய சிந்தனையோடு இந்த சமூகக்கேடுகளை வேரோடும் வேரடி  மண்ணோடும் மாற்ற வேண்டும் என்று தனிமனிதராகப் புறப்பட்டார்.தன்னுடைய சுய சிந்தனையால் தத்துவங்களுக்கு விளக்கம் சொன்னவர் பெரியார். உலகத்திலேயே களப்பணியையும் , தத்துவப்பணியையும் இணைத்து எழுத்தும் பேச்சுமாகத் தன்னுடைய போராட்டத்தை நடத்தியவர் பெரியார் ..இன்று அந்தப்பணியை திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்கின்றார். அந்தப்பணியை புத்தகமாக எழுதிவிடலாம். ஆனால் ஒரு ஆய்வேடாக, ஒரு பல்கலைக்கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, ஒரு வரைமுறைக்குள் கொண்டு வரவது மிகவும் கடினம். அந்தப்பணியை பேரா.நம்.சீனிவாசன் செய்திருக்கின்றார். பொதுவாழ்வில் இன்றைக்கு பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் இந்த மூன்று பேரின் கொள்கைகளைக்கூறுபவர்கள் ஒன்று சேர்வதன் மூலமே சமூகத்தில் மாற்றம் ஏற்படும் எனக்குறிப்பிட்டார். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்க்கையை, பணியைக் கூறும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் நான்  நான் கலந்து கொள்வது  மிகப்பெரும் பெருமை  எனக்கு எனக்குறிப்பிட்டு பல்வேறு நிகழ்வுகளை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துணைவேந்தர் நல்.இராமச்சந்திரன் அவர்கள் சரவெடியாய் கருத்துக்களை அவையில் விதைத்தார்.  : வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி இது . தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களைப்பற்றிய அற்புதமான ஆய்வுக்களஞ்சியம் இந்த நூல். இந்த நூல் என்னும்  அற்புதமான பேழையை  எதிர்காலம் மிகப்பெரிய அளவிலே பயன்படுத்திக்கொள்ளவேண்டும் ,நம்முடைய சீனிவாசன்,  'நம் .சீனிவாசன் ', அவர்தான் எம் சீனிவாசன் என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் பேரா.நம்.சீனிவாசன் . புரட்சிக் கவிஞர் தமிழரின் ஆற்றல் பற்றிக் கவிதை பாடினார்.  அவ்வாற்றல் அமையப்பெற்ற தலைவர்,  தமிழர் தலைவர் நம் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.. முனைவர்  பட்டத்திற்காக பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்கின்றார்கள். ஆனால் முனைவர் ஆய்வை சமூக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு செய்பவர்கள் மிகக்குறைவு. அதனை நம்.சீனிவாசன் செய்திருக்கின்றார்.  .ஒவ்வொரு வீட்டிலுலும் இந்த நூல் இருக்கவேண்டும்.இளைய தலைமுறையை படிக்கச்சொல்லவேண்டும். இளைய தலைமுறை அவசியம் படிக்கவேண்டிய நூல் ,என் இளைய .தம்பியின் மகன் 5-ஆம் வகுப்பு படிக்கிறான.இந்தப் புத்தகத்தைப் பார்த்தான்." ஏய், அப்பா,. ஆசிரியர் தாத்தா பற்றி ஆய்வுப்பட்டம் எனப்போட்டிருக்கிறதே" எனச்சொன்னான்." இன்றைய குழந்தைகளை  நெறிப்படுத்துவது யார் கையில் இருக்கிறது? சமூக சிந்தனையாளர்களிடத்தில் இருக்கின்றது. இளம் தளிர்கள் கூட பெரியார் பிஞ்சுகள் கூடத்தெரிந்துகொள்ளக்கூடிய விதத்திலே தனக்கே உரித்தான இந்த நூலை பேரா. நம்.சீனிவாசன் தந்திருக்கின்றார். 5 இயல்களாகப் பிரித்து  - எப்படியெல்லாம் அய்யாவை அடையாளம் கண்டுகொண்டிருக்கின்றார்கள்.எது போன்ற சிந்தனைகளை எல்லாம் தந்திருக்கின்றார்கள்.வியப்பாக இருக்கிறது.  படித்தேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு 'படி'தேனாக, மாமருந்தாக  இந்த நூல்  இருக்கிறது. நண்பர் நேரு அவர்கள் நம்.சீனிவாசன் மதுரையில் வேலை பார்ப்பவர்  என்று சொன்னார். நம்.சீனிவாசன் பக்கத்தில் இருக்கிற வலங்கைமானைச்சேர்ந்தவர். காவிரி ஆற்றின் தண்ணீர் குடித்து வளர்ந்தவர். நமது பல்கலைக் கழகத்தின் இணை துணைவேந்தர் பேரா.தவமணி அவர்கள் ஒரு அருமையான முகவுரை இந்த நூலுக்கு தந்திருக்கின்றார்கள். படித்துப்பாருங்கள். எத்தனை புத்தகங்கள்-தமிழில் ஆங்கிலத்தில் பயன்படுத்தி இந்த ஆய்வினைச்செய்திருக்கின்றார் (பட்டியலைப் படித்தார்) எவ்வளவு குறிப்புகள்... ஒவ்வொரு வார்த்தைக்கும் மேற்கோள்கள, ஆதாரங்கள். மிகச்சிறந்த பேழையாக இந்த நூலைக் கொடுத்துள்ளார்.இன்று மேடையில் மருத்துவர், பேராசிரியர்கள், பொறியாளர்கள், துணைவேந்தர், முன்னாள் துணை வேந்தர் என்று இருக்கின்றோமே , இதற்கெல்லாம் காரணம் தந்தை பெரியார்.விருந்தோம்பலின் பண்பினை நம்.சீனிவாசனின் இல்லத்தில்  கண்டேன். நம்.சீனிவாசனும் அவரது துணைவியார் பேரா.ஜோதியும்  போட்டிபோட்டு அவ்வளவு வகைவகையாகப் பரிமாறினார்கள். அவரது மகள் பொறியாளர் பட்டம் பெற்று  இன்று நல்ல பணியில் இருக்கின்றார். நம் மாணவர். இப்படி எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கின்ற நம்.சீனிவாசன் நமது பாராட்டுக்குரியவர். போற்றுதலுக்குரியவர். நம்.சீனிவாசன் மேலாய்வுக் களன்கள் என்ற தலைப்பில்ஒன்பது தலைப்புக்களை கொடுத்திருக்கின்றார் மற்றவர்கள் முனைவர் பட்ட ஆய்வு செய்ய விரும்புவர்கள் தமிழர் தலைவரைப் பற்றி ஆய்வு செய்வதற்கு.  முன்வரவேண்டும் எனக்குறிப்பிட்டு  உரையாற்றினார்.மேலை நாட்டைப்போல அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று ,பாராட்டினை இந்த நூலின் ஆசிரியர் பேரா.நம்.சீனிவாசனுக்கு தெரிவிக்க வேண்டும் என்று துணைவேந்தர் கேட்டுக்கொள்ள,அரங்கமே எழுந்து நின்று கைதட்டி மகிழ்ந்து பாராட்டியது.

இறுதியாக தெள்ளிய நீரோடையில் ஓடும் நீராய் , அமைதியாய் அமைந்த ஆழமான ஆய்வுரையாக தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் ம.இராசேந்திரன் அவர்களின் சிறப்புரை அமைந்தது. ஊர்ந்து போன மரவெட்டியைப் பற்றிக் கதையைச்சொல்லி அவையைக் கலகலப்பு ஊட்டினார். நூலாசிரியர் நம்.சீனிவாசன் மதுரையா? தஞ்சையா என்றார்கள் . ஆனால   நூலாசிரியர் பிறந்த ஊர் என்பதல்ல, நூல் எவரைப் பற்றிப்பேசுகிறதோ, அந்த நூலுடைய தலைவருக்கும் தஞ்சைக்கும் உள்ள தொடர்பால் இந்த நூல் தஞ்சையில் வெளியிடப்பட்டிருக்கிறது என்றார். 2.3.1977ல் அன்னை  மணியம்மையார் அவர்கள் ஒரு கடிதம் கொடுத்து வைத்திருக்கின்றார். ஐ.ஓ.பி.யில் கடிதம் பத்திரப்படுத்தப்பட்டிருந்தது. தஞ்சை மாவட்டத்தைச்சார்ந்த கா.மா.குப்புசாமி அவர்க்ள் அம்மையார் மறைந்தபிறகு அந்தக் கடிததைக் கொண்டு வந்து  கொடுத்தார்.ஆசிரியர் அவர்களைத் தனக்குப்பின் பொதுச்செயலாளராக்கி அம்மையார் எழுதியிருந்தார்கள். கா.மா.குப்புசாமி அவர்கள் தஞ்சையைச்சார்ந்தவர்.   1946-ல் தஞ்சாவூரில் கருப்புச்சட்டை முதல் மாநாடு நடைபெறுகிறது.13-வய்து பையனாக மேடையில் தமிழர் தலைவர் வீரமணி உரையாற்றுகின்றார். இராமையா என்பவர் அன்றைக்கு ரூ 10த்தினை  மேடையில் ஆசிரியருக்கு பாராட்டிக் கொடுக்கின்றார். ஆசிரியர் அதனை தனதுஆசான் திராவிட மணியிடம் கொடுக்கின்றார்.திராவிடமணி அந்தப் பத்து ரூபாயை கழகத்திடம் ஒப்படைக்கின்றார்.  வாழ்நாள் முழுவதும் தனக்கு கிடைத்த பரிசுப்பொருளை கழகத்திற்கு அளிப்பவர் ஆசிரியர் அவர்கள். அதற்கான தொடக்க நிகழ்வு , 13 வயதில் நிகழந்த இடம் தஞ்சை. உலகத்திலேயே ஒரு தலைவருக்கு  எடைக்கு எடை தங்கம் கொடுத்தது தமிழர் தலைவர் ஆசிரியருக்குத்தான். கொடுத்த இடம் தஞ்சாவூர்தான். அவரது காருக்குக்கூட  தங்கச்சாவி கொடுத்தார்கள். எதைக் கொடுத்தாலும் அதனை இயக்கத்திற்கு அளித்து அதனை மக்களுக்கு பயன்படும் வகையில் ஆக்குகின்றவர் ஆசிரியர் அவர்கள்.  நாத்திகர்கள் இருவர் பெயரில் பல்கலைக்கழகம், தந்தை பெரியார் ,அன்னை மணியம்மையார் பெயரில் பல்கலைக்கழகங்கள் .உலகத்தில் வேறு எங்கும் இப்படி இல்லை. அப்படிப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு இடம் என ஆசிரியர் தேர்ந்தெடுத்தது தஞ்சைக்கு அருகில் உள்ள இடத்தைத்தான். இப்படி ஆசிரியர் அவர்களின் பொது வாழ்வோடு தொடர்புடைய ஊர் தஞ்சை .அதனால்தான் தஞ்சையில் இந்த நூலின் வெளியீட்டு விழா நடைறுகின்றது. போராட்டமே வாழ்க்கையாகக் கொண்ட தலைவரைப் பற்றிய நூல் எந்த நாளில் வெளியிடப்படுகிறது? ஒரு போராட்ட நாளில் வெளியிடப்படுகிறது. தமிழர்களின் உரிமைக்கான போராட்ட நாளில்,காவிரி நீருக்கான போராட்ட நாளில்  திராவிடர் கழகத்தோழர்கள் எல்லாம் கைதான நாளில் இந்த நூல் வெளியிடப்படுவது சிறப்பு.இந்த நூலில் ஏகப்பட்ட வரலாற்றுத்தகவல்கள் உள்ளன. பிற்படுத்தப்பட்டோர்க்கு 33 விழுக்காடு 50 விழுக்காடு ஆனது எப்படி என்பதைப்போன்ற  தகவல்கள்  இதில் சிறப்பாக உள்ளன.ஒவ்வொரு இயலையும் விவரிக்கலாம். சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபவர்கள் இருக்கிறார்கள், இருக்கிற சூழ்நிலையை மாற்றுபவர்கள் இருக்கிறார்கள். சூழலை மாற்றுகிறவர்கள்தான் சமுதாய முன்னேறத்திற்கு காரணமாக இருக்கிறார்கள். தந்தை பெரியார் அவர்கள் அப்படிப்பட்டவர்கள். அவரே சிந்தித்தார். அவரே அதனை பிரச்சாரம் செய்தார். அதற்காக அவரே போராட்டம் நடத்தி, நடைமுறைப்படுத்தக்காரணமாக இருந்தார். அதனால்தான் .பிரச்சாரம், போராட்டம். இரண்டையும் ஆசிரியர் அவர்களிடம் காண்கின்றோம். அவரின் வாழ்க்கையில் எத்தனை பிரச்சாரப்பயணங்கள், எத்தனை போராட்டங்களில் கைது, அனைத்தும் இந்த நூலில் இருக்கின்றது. ஆசிரியர் அவர்களின் ஆளுமை என்பது கடுமையான உழைப்புத்தந்த நிலை. இப்படியான ஆளுமை உருவாக்கத்திற்கு காரணமாக இருந்தவற்றை இந்த நூலில் பேரா. நம்.சீனிவாசன் கூறுகின்றார். ஆளுமை உருவாக்கத்திற்கு முதல் காரணம் ஆசிரியரின் ஆசிரியர் திராவிடமணி. சாரங்கபாணி என்னும் பெயரை  வீரமணி என்று மாற்றியவர் திராவிடமணி. அந்த வீரமணி என்னும் பெயர் அறிஞர் அண்ணாவின் கலிங்கராணி என்னும் படைப்பில் வந்த ஒரு பாத்திரப்படைப்பு. எனவே வீரமணி என்னும் பெயருக்கு அறிஞ்ர் அண்ணா காரணமாகின்றார். ஆசிரியர் அவர்கள் 6-ம் வகுப்பு படிக்கும்போது, கல்வி ஆய்வாளர் பள்ளிக்கு ஆய்வுக்க்காக வருகின்றார். வகுப்பில் போது யாருக்காவது திருக்குறள் தெரியுமா எனக்கேட்கிறார்.ஆசிரியர் , கட கடவெனத் திருக்குறள்களை ஒப்பிக்கின்றார். மகிழ்ந்து போன கல்வி ஆய்வாளர் ஆசிரியர் வீரமணிக்கு 6-ம் வகுப்பிலிருந்து 11ஆம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்க ஆணையிடுகின்றார். ஆசிரியரின் வளர்ச்சியில் திருக்குறளுக்கு பங்கு இருக்கின்றது.  ....அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் சேருகின்றார். படிக்க வசதியில்லை. அண்ணா சொல்கின்றார் , காஞ்சிபுரம் வந்து விடு, இங்கு படிக்கலாம் என்று. ஆசிரியர் செல்லவில்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலேயே படிக்க விரும்புகின்றார். ஆனால் படிக்க வசதியில்லை. இந்த இடத்தில்  இயக்கம் எப்படி ஆசிரியரின் ஆளுமை உருவாகக்த்தில் பங்கு வகித்தது என்பதனை நூலில் குறிப்பிடுகின்றார்.. எம்.ஆர்.இராதா நாடகம் போட்டு ஆசிரியரின் படிப்பிற்கு பணம் திரட்டுகின்றார். தந்தை பெரியார் தலைமை தாங்குகின்றார். தந்தை பெரியார் வழிச்செலவுத்தொகை வாங்கவில்லை மேலும் 100 ரூபாய் போட்டுத்தருகின்றார்.எவ்வளவு பெரிய நிகழ்வு. இந்த நூலில் பதிவு இருக்கின்றது. மேலும் படிக்கும் காலத்தில் , பணம் இல்லாமல் ஆசிரியர் துன்பப்படுகின்றார்.  இராகவனந்தம் என்ற நணபர் பெரியாரிடம் கடிதம் எழுதிக் கேட்கச்சொல்கின்றார்.ஆசிரியர் தயங்குகின்றார். முடிவில் கடிதம் எழுதி,  கடனாகக் கேட்கிறார் பெரியாரிடம்.  தனது படிப்பிற்கு இயக்கத்தின் தலைவரிடம் பணம் கேட்கலாமா என்னும் தயக்கம் . கடிதம் அனுப்புகின்றார். பாருங்கள். கடிதத்தைப்பார்த்ததும் பெரியார் தந்தி மணியார்டரில் பணம் அனுப்பியிருக்கின்றார். அன்று தந்தை பெரியாருக்குத் தெரியுமா எதிர்காலத்தில் இந்த இயக்கத்தைக் கட்டிக்காக்கப்போகின்றவர் இவர்தான் என்று. ஆசிரியர் திருமணத்தை தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரும்  முன்னின்று நடத்துகின்றார்கள் திருமணத்தை முடித்தபின் இதோ மாமியார் வீட்டிற்கு போகப்போகின்றேன். சிறைக்குப் போகத் தயாராகின்றார் ஆசிரியர் .தினத்தந்தி புது மாப்பிள்ளை சிறைக்குப்போகத்தயாராகின்றார் எனச்செய்தி போடுகிறது. இப்படி ஏராளமான தகவல்கள் இந்த நூலில். "நான் சிறைக்குப்போகின்றேன். மணியம்மையார் இயக்கப்பணிகளைத் தொடர்வார். நீ அவருக்கு துணையாகச்செயல்படு" என்று தந்தை பெரியார் கூறுகின்றார். அதனை ஆசிரியர் நடைமுறைப்படுத்துகின்றார் என்னும் செய்தி இந்தப்புத்தகத்தில் உள்ளது.. யாரும் யாரின் மீதும் நம்பிக்கை வைக்கலாம்.ஆனால் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக, எந்த நம்பிக்கையில் தனக்கு தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரும் பொறுப்புக்களை அளித்தார்களோ , அந்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் செயல்படும் தலைவரைப் பற்றிய நூலாக இதனைப்பார்க்கின்றேன். பேரா.நம்.சீனிவாசனை மனம்திறந்து பாராட்டுகின்றேன் " எனப்புகழாராம் சூட்டி உரையாற்றினார்.
ஏற்புரையை ஆற்றிய பேரா.முனைவர் நம்.சீனிவாசன் " என்னை எல்லோரும் பேச அழைக்கின்றார்கள் ஏன் என்று ஒரு நண்பர் கேட்டார் . வேறு ஒன்றுமில்லை, சுருக்கமாகப்பேசி அமர்ந்துவிடுவேன் அதனால் என்னை அழைக்கின்றார்கள் என்று சொன்னேன் என்றார். அய்யா ஆசிரியர் அவர்களைப் பற்றி ஒரு அறிமுக அட்டை(விசிட்டிங் கார்டு)தான் இந்த நூல். ஏராளமாக அய்யா ஆசிரியர் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி , பணியைப் பற்றி எழுதலாம். ஆனால் அறிமுக அட்டையைப்போல சிலவற்றை மட்டும் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளேன். ஆசிரியர் அவர்களைப் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது என் வாழ்க்கையில் கிடைத்த பெரும்பேறு " என்று குறிப்பிட்டு உணர்வுமயமாக நன்றி தெரிவித்தார். விழாவின் இறுதியில் தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ச. அழகிரி நன்றியுரையாற்றினார், வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கெல்லாம் பொன்னாடை அணிவித்தும் , சொற்களால் புகழாரம் சூட்டியும்  சிறப்பு செய்தினர் தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்கள். விழாவினை ஒருங்கிணைத்து சிறப்பாக நிகழ்வு அமைந்திட வழிகாட்டினார் திராவிடர் கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள். மனம் நிறைந்த நிகழ்வில், தன்னுடைய அரிய செயலுக்காக  புகழாரம் சூட்டப்பட்ட பேரா.நம்.சீனிவாசனின் ' தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும் ' நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நிகழ்வு , பசுமை நிறைந்த நினைவுகளாய் பல்லாண்டுகள் மனதில் நிற்கும் நிகழ்வு, பாராட்டப்படவேண்டிய நிகழ்வு, மற்ற ஊர்களில் எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்த நிகழ்வு. வாழ்த்துக்கள் தோழர்களே, பாராட்டுக்கள் பொறுப்பாளர்களே, பாராட்டுக்கள். பாராட்டுக்கள்.

முனைவர் .வா.நேரு, மாநிலத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்.


நன்றி : விடுதலை 2.4.2015