Wednesday 28 December 2016

பிபிசியின் ''100 பெண்கள் '' சிறப்பு தொகுப்பு ....வறுமையில், பாரலிம்பிக்ஸ் தங்கப்பதக்கம் வென்ற வீரரை உருவாக்கிய சாதனைத் தாய்

வறுமையில், பாரலிம்பிக்ஸ் தங்கப்பதக்கம் வென்ற வீரரை உருவாக்கிய சாதனைத் தாய்
விபத்தில் கால் சேதமடைந்த மகனின் விளையாட்டு சாதனைக் கனவுக்காக வாழ்க்கையில் போராடிய ஏழைத்தாய் சரோஜாவை பிபிசி தமிழுக்காக சந்தித்தார் பிரமிளா கிருஷ்ணன்
பரபரப்பான சேலம் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள அமைதியான தீவட்டிப்பட்டி கிராமத்திற்குக் கடந்த செப்டம்பர் மாதம் புதிய ஒரு அடையாளத்தைத் தந்தார் பாரலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு.


மாரியப்பனின் தாய் சரோஜா
பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரத்தில் பாரலிம்பிக் போட்டிகளில் அவர் உயரம் தாண்டுதல் போட்டியில் விளையாடியபோது, அவரது ஒரே நம்பிக்கையாக இருந்தவர் அவரது தாய் சரோஜா. மாரியப்பன் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற தருணத்தில், சரோஜா அவரது வாழக்கையில் வென்று விட்டதை தீவட்டிப்பட்டி கிராமம் ஒப்புக்கொண்டது.
பிபிசியின் ''100 பெண்கள் '' சிறப்பு தொகுப்பு
மகன் அடையவிருக்கும் வெற்றிக்கான பயணச் செலவாக, வெறும் பத்து ரூபாயை மட்டும் தர முடிந்த சரோஜா தனித்து வாழும் ஒரு சாதனைப் பெண்.
தனது இளம் வயதில் வாழ்வதற்கான போராட்டம், தனது மூன்று ஆண் குழந்தைகளையும் வளர்க்க எதிர்கொண்ட சிக்கல்கள் பற்றி பிபிசி தமிழிடம் பேசினார்.
''திருமண வாழ்க்கையில் சந்தித்த தோல்வி என்னைத் தனித்து வாழும் பெண்ணாக மாற்றியது. ஒலிம்பிக்ஸ் போட்டி பற்றி எனக்கு தெரியாது. ஆனால் என் மகன் உலக அளவில் பாராட்டு பெற வேண்டும் என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்ததில்லை. எனது மகன் பாரலிம்பிக்ஸ் போட்டிக்காகச் சென்றது எங்கள் ஊரில் பலருக்கும் தெரியாது.தொலைக்காட்சியில் மாரியப்பன் தங்கம் வென்றதைப் பார்த்த பலருக்கு அதை நம்ப முடியவில்லை,''' என்றார்.

ஆரம்பத்தில் ஒரு மாற்றுத் திறனாளி குழந்தை இருந்ததால் வாடகை வீடு கிடைப்பதில் கூடச் சிரமப்பட்டதாக அவர் கூறுகின்றார். ''உறவினர்கள் பலரும் ஒதுக்கி வைத்தனர். செங்கல் சுமக்கும் வேலை, விவசாய கூலி வேலையில் கிடைத்த காசு, எனக்கும் எனது மூன்று மகன்களுக்கும் ஒரு வேளை உணவை உறுதி செய்தது. அவர்கள் என்னிடம் எதையும் வாங்கித் தர கேட்டதில்லை,'' என்றார் சரோஜா.

மாரியப்பனின் தாய் சரோஜா
மாரியப்பனின் ஐந்து வயதில் ஒரு விபத்தில் அவரது வலது கால் பாதத்தின் பெரும்பகுதி சிதைந்தது. விளையாட்டில் ஆர்வம் கொண்ட தனது மகனுக்கு உற்சாகம் மட்டுமே அளிக்கமுடிந்தது என்றார் சரோஜா. ''மாரியப்பன் மற்றும் அவனது தம்பிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை நான் அனுமதித்தேன். அவர்களுக்கு அளிக்கும் சுதந்திரம் மட்டும் தான் என்னால் தர கூடிய ஒன்றாக இருந்தது. வளரும் போது, அவன் பரிசு வாங்கும் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல கூட எனக்கு நேரம் இருந்ததில்லை,'' என்கிறார்.

கடந்த சில மாதங்களில் தனது உடல் பலம் முழுவதையும் இழந்து, மன வலிமையையும் இழந்த சரோஜா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். ''தற்கொலை தான் தீர்வு என நினைத்தேன். எனது மகன் மாநில அளவு மற்றும் தேசிய அளவில் பரிசுகளை குவித்திருந்தாலும், எங்கள் குடும்பத்திற்கு உதவ யாரும் முன்வரவில்லை. இந்த ஒலிம்பிக் பரிசு எங்களுக்கு புதிய பாதையை அமைத்துக் கொடுத்துவிட்டது,'' என்றார் சரோஜா.

மாரியப்பன் ஒலிம்பிக்ஸ் பதக்கத்தை வென்ற பிறகு
தமிழக அரசு கொடுத்த இரண்டு கோடி ரூபாய், மத்திய அரசு வழங்கியுள்ள 75 லட்சம், பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் கொடுத்த நிதி எனப் பல பரிசுகள் சரோஜாவின் இல்லத்தில் குவிந்துள்ளன. ஆனால் சரோஜாவுக்கு, அடுத்தமுறை தனது மகன் விளையாட்டு போட்டிக்கு செல்லும் போது, கை நிறைய பணம் தர முடியும் என்பது பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

நன்றி : பி.பி.சி.தமிழ்


Tuesday 20 December 2016

அண்மையில் படித்த புத்தகம் : ஊரும் சேரியும் ----- சித்தலிங்கையா...தமிழில் : பாவண்ணன்.... தொடர்ச்சி

அண்மையில் படித்த புத்தகம் : ஊரும் சேரியும் ----- சித்தலிங்கையா...தமிழில் : பாவண்ணன்.... தொடர்ச்சி

           பகுதி மூன்று முழுவதும் அவருடைய விடுதி வாழ்க்கை பற்றியது. கோபாலஸ்வாமி ஐயர் தலித் மாணவர் விடுதியில் தன்னை தனது தாய் சேர்த்துவிட்டதையும் அந்த விடுதிலேயே தனது தாய் குப்பை கூட்டுபவராக வேலை பார்த்தையும் எழுதிச்செல்கின்றார். 'ஒவ்வொரு அறையிலும் பத்து முதல் முப்பது வரையிலும் மாணவர்கள் படுத்துக்கிடப்போம். மாணவர்கள் உடம்பில் படையும் சிரங்கும் ஏராளம். சிரங்கு உள்ளவர்கள் உடலெங்கும் மருந்தைப் பூசிக்கொண்டு வெயிலில் நிற்கிற காட்சி சாதாரணமான ஒன்றாகும் ' என்று தான் விடுதியில் தங்கிப்படித்த காலங்களை விவரித்து செல்கின்றார். பேய்,பிசாசு நம்பிக்கை மாணவர்களை என்ன பாடு படுத்தியது என்பதனை 'செண்பகமரமும் கொள்ளிவாய்ப்பிசாசும் , பிரார்த்தனைக்கு எழுப்பிய பேய்,சாப்பிட உட்கார்ந்த பேய் என்று பேய் நம்பிக்கை பற்றி சித்தலிங்கையா எழுதும் எழுத்துக்கள் படித்து படித்து ரசிக்கலாம், சிரிக்கலாம்.

 இந்த மூன்றாம் பகுதியில் ' ரயில் மறியல் போராட்டம்' என்ற வகையில் அவர் எழுதியிருக்கும் செய்தி, காவிரி நீர்ப்பிரச்சனையில் நமக்கு எதிராக நிற்கும் கன்னடியர்களுக்கு உண்மையை விளக்கும் வண்ணம் உள்ளது.

 " சிறீராமபுரத்தில் கன்னடர்களும் தமிழர்களும் ஒன்றாகவே சேர்ந்து வாழ்ந்தார்கள். அப்போது கன்னடக் கட்சி வலிமையோடு இருந்தது. இக்கட்சியின் சார்பில் நடந்த கூட்டங்களுக்கு கன்னட இலக்கியவாதிகள் பங்கேற்று மனதில் எழுச்சியையூட்டும் சொற்பொழிவுகளை ஆற்றிச்சென்றனர். அச்சொற்பொழிவுகளைக் கேட்க நான் செல்வதுண்டு. ....வாட்டாள் நாகராஜ் அடிக்கடி வந்து உணர்ச்சிப்பெருக்கான சொற்பொழிவாற்றுவார். இவர்களுடைய சொற்பொழிவுகளால் எழுச்சியுற்ற மக்கள் போராட்டத்தில் இறங்கினர். பெங்களூரில் இருந்து பம்பாய்க்குச்செல்லும் ரயிலை மறிக்கிற போராட்டத்தைத் தொடங்கினர். இந்த ரயில் மறிப்பு போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான பேர்கள் சேர்ந்தார்கள். ' மகாஜன் ரிப்போர்ட்டை அமுல் படுத்துங்கள் ' என்பதுதான் மக்களின் பிரதான கோஷமாக இருந்தது. மக்கள் கடலின் உற்சாகம் எல்லை மீறியது. 'உயிரைக் கொடுத்தாலும் கொடுப்போம்,பெல்காமை இழக்கமாட்டோம்' என்று ஒரே குரலில் மக்கள் குரல் எழுப்பினர்.

 அன்றைய போராட்டத்தின் முக்கியத்தலைவர்களாக இருந்த ஐந்து பேர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார்கள். ரயில் வரும் சத்தம் கேட்டது. தண்டவாளத்தின் இருபுறங்களிலும் கூடியிருந்தவர்களின் இதயங்கள் துடித்துக்கொள்ளத் தொடங்கின. கோஷங்கள் விண்ணைத் தொட்டன. ரயில்வருவது கண்ணுக்குப் புலப்படத் தொடங்கியது. மக்களின் பரபரப்பை சொல்லி மாளாது. தண்டவாளத்தில் படுத்திருந்தவர்களில் ஒருவர் தொலைவில் ரயிலைப் பார்த்ததுமே உயிர் மீது இருந்த யதார்த்த பயத்தின் காரணமாக மெல்ல எழுந்து ஓரமாக வந்து வியர்வையைத் துடைத்துக்கொண்டார். இன்னும் கொஞ்சம் ரயில் நெருங்கியதும் மேலும் மூன்று பேர் எழுந்து ஓரமாக வந்து திரளோடு சேர்ந்தனர். தண்டவாளத்தில் எஞ்சி இருந்தவர் ஒருவரே.'மகாஜன் ரிப்போர்ட்டை அமுல்படுத்து ' என்று கோஷமிட்டபடி அவர் ஒருவரே படுத்துக்கிடந்தார். கருணையே இல்லாத ரயில் அவர் மீது ஏறிக்கடந்தது. மக்கள் கண்ணீர் வடித்தனர். அன்றைய தினம் ரயில் மறியல் போராட்டத்தில் உயிரிழந்தவர் கோவிந்தராஜீ. அவர் தமிழர். பெங்களூரில் பல காலமாகக் கன்னட முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். ரயில் தண்டவாளங்களின் மேல் படுத்துக்கிடந்து, ரயில் வரும் சத்தத்தைக் கேட்டதும் எழுந்து ஓடி வந்த நான்கு பேர்களும் தூய கன்னடியர்கள்" பக்கம் (78).

 தான் கவிதை எழுதத்தொடங்கியது பற்றியும், அண்ணல் அம்பேத்கர் பற்றிப் பல இடங்களில் சொற்பொழிவு ஆற்றியது பற்றியும் இந்தப் பகுதியில் எழுதி செல்கின்றார்.

           பகுதி நான்கு ஆலை வேலைக்காரன் என்று சொல்லி பாத்திரம் கழுவும் வேலை பார்த்ததையும், பெரும்பாலும் பொழுதுபோக்கும் இடமாக தனக்கு சுடுகாடு இருந்ததையும், தனது கவிதை ஆர்வம் வளர்ந்த கதையையும், கவிதை போட்டியில் வெற்றி பெற்றதையும், கிடைத்த பரிசுக்கோப்பைகளை விற்றதையும் விளையாட்டுப் போக்கில் சொல்லிக்கொண்டே போகின்றார். நமக்குத்தான் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு சிறுகதைக்குரிய கருவையும் , சுருக்கத்தையும் கொண்டதாகத் தெரிகிறது. கவிதைப் போட்டியில் தன்னோட போட்டியிட வந்த ஒரு வருட சீனியர் டி.ஆர்.நாகராஜ் தனது வாழ் நாள் நண்பரான கதையை சொல்லிச்செல்கிறார்.

           பகுதி ஐந்தில் அறிவு ஜீவிகள் என்ற அமைப்பை நிறுவியதையும், தலித் மாணவர்களை ஒருங்கிணைத்ததையும் ஊர்வலம் நடத்தியதையும், 3000,4000 மாணவர்களை வைத்து நடத்திய தலித் மாணவர்கள் ஊர்வலத்தைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள் என்றும் போலீஸ்காரர்கள் ஆச்சரியப்பட்டார்கள் என்றும் எழுதிச்செல்கின்றார். அதன் விளைவாக தலித் மாணவர்களுக்கு விடுதியில் ,கல்லூரிகளில் இருந்த பல பிரச்சனைகளை தீர்க்க முடிந்ததையும் குறிப்பிடுகின்றார். ஒன்று சேர்ந்ததால் முதலமைச்சரே அழைத்து பேசியதைக் குறிப்பிடுகின்றார்.

பெங்களூருக்குத் தந்தை பெரியாரை அழைத்ததையும் அதற்கு எழுந்த எதிர்ப்புக்களையும் 'பெங்களுரில் பெரியார் ' என்னும் தலைப்பிட்டுத் தருகின்றார். இதோ அந்தச்செய்தி ' பெங்களூருக்கு பெரியார் ராமசாமி நாயக்கரை அழைத்திருந்தார்கள். இதை எதிர்த்து சிலர் எதிர்ப்பு வேலைகளில் ஈடுபட்டார்கள். பெரியாரை வரவேற்கும் குழுவில் நாங்கள் அனைவரும் இருந்தோம். பெரியார் கூட்டத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தபோதே, வெளியே 'ஒழிக' கோஷங்கள் முழங்கின. நாங்கள் ஜெய கோஷ்ங்கள் எழுப்பினோம். அப்போது பேசிய பி.லங்கேஷ் ' இந்த ஒழிக கோஷங்களுக்கெல்லாம் பெரியார் அஞ்சுபவர் அல்லர். அவர் எதிர்ப்புக்களின் நடுவிலேயே வளர்ந்தவர் ' என்றார். பெரியாரின் பேச்சு மிகவும் எழுச்சியூட்டுவதாக இருந்தது.. அடிப்படையில் பெரியார் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். தமிழ் நாட்டில் மிகப்பெரும் சக்தி மிக்க தலைவராக இருந்தவர். அங்கே மக்களின் அன்புக்குரிய தலைவர்களான அண்ணாதுரை, கருணா நிதி போன்றவர்கள் பெரியாரின் சீடர்கள். பெரியார் 'கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி' என்ற கோஷத்துடன் தன் பேச்சைத் தொடங்கினார். புராணக் கதைகளைக் கிண்டல் செய்வதில் அவர் மிகப்பெரிய ஆள். சின்னஞ்சிறிய எலியின் மேல் தொப்பை விநாயகர் உட்கார்ந்தால் எலி நசுங்கி விடாதா? என்று கேள்வி எழுப்பினார். பார்வதி தன் வியர்வை அழுக்கை உருட்டி விநாயகரை உருவாக்கினாள் என்றால் ,அவள் குளித்து எத்தனை ஆண்டுகள் ஆகின? என்று கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். புராணங்களின் செய்திகளையோ ,குறியீடுகளையோ அவர் பொருட்படுத்தவே இல்லை. புராணங்களின் மேல் எளிய தருக்கங்களைப் பிரயோகித்து அவர் பேசினார்.

பெரியாரின் பேச்சு ஈர்ப்புச்சக்தி மிக்கது . ஒருமுறை அவருடைய பேச்சைக் கேட்பவர்கள் அவருடைய ஆளுமைக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள். அன்று மாலை காந்தி நகரில் இருந்த விடுதியில் பெரியாரும் மாணவர் தலைவர்களும் உரையாடிக்கொண்டிருந்தனர். நானும் அக்ரஹார கிருஷ்ணமூர்த்தியும் வெளியே வந்தோம். விடுதிக்கு வெளியே நின்றிருந்த பெரியார் எதிர்ப்பாளர்கள் எங்கள் மீது பாய்ந்து தாக்கினார்கள். கிருஷ்ணமூர்த்திக்கு காயமுண்டானது. என் உதடு கிழிந்து ரத்தம் ஒழுக ஆரம்பித்தது.காலிலும் அடிபட்டு நொண்டும்படி ஆனது'.....பக்கம் 112 & 113.பின்பு ஒரு கருத்தரங்கத்திற்கு தலைமை ஏற்று நடத்தியது அதன் விளைவாக ஏற்பட்ட கல்வரம், கருப்பாக இருந்தவர்களுக்கெல்லாம் விழுந்த அடி,உதை என்று விவரித்து செல்கின்றார்.

        'சூத்ர' என்னும் கன்னட பத்திரிக்கையில் தன்னுடைய கவிதைகள், அண்ணல் அம்பேத்கரின் சொற்பொழிவு மொழிபெயர்ப்பு வெளிவந்தது, முதுகலை வகுப்பில் மாணவராக சேர்ந்தது, விடுதி பணம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டபோது டாக்டர் கே.மருளசித்தப்பா ,டாக்டர் .சி.வீரண்ணா ஆகியோர் உதவியது, மார்க்ஸிஸ்ட் கட்சியுடன் ஏற்பட்ட தொடர்பு,சேரிப்புரங்களில் இரவுப்பள்ளிகள் நடத்தியது, தனது முதல் கவிதைத் தொகுதியான 'பறையர்கள் பாட்டு ' பிரசுரமானது, அந்தப் புத்தகம் ஒரே வாரத்தில் ஆயிரம் பிரதிகள் விற்றுத்தீர்ந்தது, முதுகலை படிப்பில் முதல் வகுப்பில் தேறி தங்கப்பதக்கத்தைப் பெற்றது. பின் பல்கலைக் கழகத்தில் கன்னட இலக்கியப்பிரிவில் உதவி ஆய்வாளர் வேலைக்கு விண்ணப்பித்து  வேலைக்கு சேர்ந்ததோடு தன் வரலாற்றை சித்தலிங்கையா முடிக்கின்றார்.

           டி.ஆர். நாகராஜ் அவர்களின் பின்னுரை ஆய்வுரைக் கட்டுரையாகவும், இந்தத் தன் வரலாற்றின் தன்மைகளை ஆராய்வதாகவும் அமைந்திருக்கின்றது. மிக்க செறிவான கட்டுரை.
முடிவில் இந்தப் புத்தகத்தினை மொழிபெயர்த்த எழுத்தாளர் பாவண்ணன் 'மொழி பெயர்ப்பாளர் குறிப்பு ' என்பதைக் கொடுத்திருக்கின்றார். பாவண்ணனின் மொழிபெயர்ப்பு அவ்வளவு விறுவிறுப்பாகவும் , சுவையூட்டக்கூடிய வாசிப்பு அனுபவத்தை தருவதாகவும் அமைந்திருக்கிறது. வாழ்த்துகள் மொழிபெயர்ப்பாளருக்கு.

       " நம் தமிழ்ச்சூழலிலும் ;ஊரும் சேரியும் ' போலப் பல உண்மைகள் உண்டு. அவமானங்கள் உண்டு. போராட்டங்களும் உண்டு. இந்நூலின் தூண்டுகோலாய் யாரேனும் ஒருவராவது முன்வந்து அவற்றையெல்லாம் எழுதத்தொடங்கினால் என் ஆசைக்குப் பலன் கிடைத்துவிட்டதாக எண்ணி மகிழ்வேன் ' என்று சொல்கின்றார் மொழிபெயர்ப்பாளர். படிப்பவர் எவரையும் பதியத்தூண்டும் மொழிபெயர்ப்பு இது. உறுதியாய் பாவண்ணனின் ஆசை நிறைவேறும்.

அண்மையில் படித்த புத்தகம் : ஊரும் சேரியும்
கன்னட மொழியில்          : சித்தலிங்கையா
தமிழில்                    : பாவண்ணன்
வெளியீடு                   : புத்தா வெளியீட்டகம், 3, மாரியம்மன் கோவில் வீதி, உப்பிலிபாளையம்,கோயம்புத்தூர்-641 015
வெளியிட்ட ஆண்டு          : டிசம்பர் 2004, 144 பக்கங்கள், விலை ரூ 60
மதுரை மைய நூலக எண்    : 155565

Monday 19 December 2016

திருச்சி: ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் முத்தரப்பு மாநாட்டில் முத்தான மூன்று தீர்மானங்கள்

தேசிய புதிய கல்விக் கொள்கை 2016 திட்டத்தை இம்மாநாடு முற்றிலுமாக நிராகரிக்கிறது-
‘நீட்’ தேர்வை அறவே கைவிடுக - இல்லையெனில் தமிழ்நாட்டுக்கு விதிவிலக்குத் தேவை
கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து
மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருக!
திருச்சி: ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் முத்தரப்பு மாநாட்டில்  முத்தான மூன்று தீர்மானங்கள்

திருச்சி, டிச.19- தேசிய புதிய கல்விக் கொள்கையை முற்றிலும் நிராகரிப்பதாகவும், நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என்றும், கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி மூன்று முத்தான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருச்சிராப்பள்ளி உழவர் சந்தையில் திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை மற்றும் ‘நீட்’ எதிர்ப்பு மாநாட்டில் (தமிழ்நாடு ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் முத்தரப்பு மாநாட்டில்) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் எண் 1:
முன்மொழிந்தவர்: பி.சரவணன், மாநிலப் பொரு ளாளர், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி.
தேசிய புதிய கல்விக் கொள்கையை கைவிடுக!
‘‘தேசியக் கல்விக் கொள்கை - 2016 சில உள் ளீடுகள்’’ என்ற பெயரால் (Some Inputs for Draft National Education Policy - 2016)  வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை என்பதை இம்மாநாடு முற்றி லுமாக நிராகரிக்கிறது!
மத்திய அரசின் இந்தத் தேசிய கல்விக் கொள் கையை முற்றாக நிராகரிப்பதற்கான காரணங்கள்:
1.பெரும்பாலான பொதுமக்களின் கருத்தை அறிந்து கல்வித் திட்டம் தயாரிக்கப்பட்டு இருப்பதாகக் கூறியிருப்பது உண்மைக்கு மாறானதாகும்.
2.இக்கல்வித் திட்டம், கல்வியாளர்களைக் கொண்டுதயாரிக்கப்பட்டதல்ல.பச்சைஆர்.எஸ்.எஸ். காரரான ஜெ.எஸ்.ராஜ்புத் என்பவர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. அய்ந்தாம் வகுப்புவரை, தேர்வு முறையில்லை; அதற்குப் பின் தேர்வு உண்டு. அதில் இரண்டு முறைக்குமேல் தேர்ச்சி பெறவில்லையெனில், தொழில் பயிற்சிக்கு அந்த மாணவர் அனுப்பப்படுவார். அந்த மாணவனைப் பொறுத்தவரையில் அதிகபட்சக் கல்வி என்பது வெறும் அய்ந்தாம் வகுப்பே!
தொழிற்பயிற்சிக்கு மாணவர் அனுப்பப்படுவார் என்று  கூறப்பட்டு இருப்பது - அனுபவத்தில், யதார்த்தத்தில் மாணவரை, பெற்றோரைச் சார்ந்த குலத்தொழிலுக்கு அனுப்புவதே. இது குழந்தைத் தொழிலாளர் தன்மையை ஊக்குவிப்பதாகும்.
1952-1954 இல் அன்றைய சென்னை மாநில முதல மைச்சர் சி.சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரால் (ராஜா ஜியால்) கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தின் நவீன மறுபதிப்பே இத்திட்டமாகும்.
தமிழ்நாடு, தந்தை பெரியார் தலைமையில் கிளர்ந்து எழுந்து நின்று அந்தக் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தது மட்டுமன்றி ராஜாஜியையே பதவியை விட்டு விலகும்படிச் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
4. மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி வரை இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் என்பது - இந்தியாவின் பன்முகத்தன்மை, மொழி, பண்பாடு, தட்பவெட்பம் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆர்.எஸ்.எஸ். கொள்கையான ஏக இந்தியா - ஒரே மொழி, ஒரே தேசியம், ஒரே கலாச்சாரம் என்னும் இந்துத்துவா கலாச்சாரத்தைக் கல்வி மூலமாகத் திணிப்பதே!
5. வேதக் கல்வியையும், குருகுலக் கல்வியையும் முன்னிறுத்துகிறது.
இதன் பொருள் இந்து மதத்தின் பிறப்பின் அடிப் படையிலான வருணாசிரம தர்மத்தைப் புதுப்பிப்பதாகும்.
6. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான மதச் சார்பின்மை, சிறுபான்மை மக்களின் உரிமை - இவற்றைப் புறக்கணிக்கிறது.
7. கல்விக் கூடங்களில் யோகாவைக் கட்டாயப்படுத்துவது, சமஸ்கிருதத்தைத் திணிப்பது - தாய்மொழிக் கல்விக்கு இடமில்லாத நிலை.
செத்தமொழியான சமஸ்கிருதமே இந்த நாட்டின் பண்பாட்டுக்கும், உயர்கல்வி வளர்ச்சிக்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது என்று கூறும் இந்தக் கல்விக் கொள்கை உயர்தனிச் செம்மொழியான தமிழை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
8. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதைப் பயன்படுத்தி, கல்வியில் மாநிலத்தின் சிந்தனை, பங்களிப்புக்குச் சிறிதும் இடமின்றி, மத்திய அரசின் கொள்கையை மாநில அரசுகள் செயல்படுத்தியே தீரவேண்டும் என்கிற ஆதிக்க நிலைப்பாடு.
9. ஆசிரியர்களை கல்வியை விற்பனை செய்யும் முகவர்களாகவும், முதல்வர், துணைவேந்தர் எல்லோருமே இனி முதன்மைச் செயல் அதிகாரிகள் என்றும் அழைக்கப்படும் நிலை.
மாநிலப் பள்ளி, கல்லூரி துறை நிர்வாகத்துக்கு அகில இந்திய தேர்வின்மூலம் இந்திய அரசுக் கட்டுப்பாட்டியல் (MHRD Cadre Control)  முறையில் அலுவலர்கள் நியமனம்.
10. ஆசிரியர்களின் ஒழுங்கு அவர்கள் மீதான நடவடிக்கை, விருதுக்குப் பரிந்துரைத்தல், அவர்களின் தரத்தை மதிப்பிடுதல் அனைத்தையும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை (SMCS- School Management Committees) அமைத்து, அதன் ஆதிக்கத்தில் விடுவதால், கல்வித் துறையை விட பள்ளி மேலாண்மைக் குழு அதிகாரம்மிக்கதாக வளர்ந்துவிடும் ஆபத்து.
ஆசிரியர்களின் பதவி உயர்வு, தலைமையாசிரியர் / முதல்வர் நியமனம், அவர்களைத் தேர்ந்தெடுத்தல், அவர்களின் பொறுப்புக் காலம் அனைத்தும் வெளிப்படைத் தன்மையற்றவையாதல்.
ஆசிரியர்களின் திறன் அய்ந்தாண்டுக்கு ஒருமுறை கணிக்கப்படும் என்பதும், அதனடிப்படையிலேயே பணி உயர்வும், ஊதிய உயர்வும் அமையும் என்பதும் முற்றிலும் முறையற்றதும், ஆசிரியர்களை சிறுமைப்படுத்துவதும் ஆகும்.
11. கல்விக் கூடங்கள் அனைத்தும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தின் நிகிஜிஷி GATS (General Agreement on Trade in Service)   விதிகளுக்குக் கட்டுப்படுத்தப்படும் தன்மை.
12. கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இட ஒதுக்கீடு என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட அளவுகோலுக்கு விரோதமாக அனைத்துச் சமூகத்தையும் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கல்வி உதவித் தொகை வழங்குவது என்ற திட்டம்; சமூகநீதி என்ற சொல்லாக்கம் எந்த இடத்திலும் கிடையாது.
13. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குக் கதவைத் திறந்துவிட்டு, உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு நெருக்கடியை உண்டாக்குதல். வெளிநாட்டுப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களை உள்ளே புகுத்தி இங்குள்ளவர்களை வெளியேற்றும் சூழ்ச்சி!
14. பத்தாம் வகுப்புக்கு நாடு முழுவதும் ‘ஏ’ லெவல், ‘பி’ லெவல் என்று தேர்வுகள் நடத்தப்படும். ‘ஏ’ லெவலில் கணிதப் பாடத்தில் ஆர்வம் உள்ளவர்கள் சேர்ந்து படிக்கலாம். ‘பி’ லெவலில் கணிதம் எடுத்துப் படிக்க முடியாதவர்களுக்கானது. (15 வயதுக்குள் ஒரு மாணவனை இந்த வகையில் தேர்வு செய்வது என்பது இயலாத ஒன்று என்பது கல்வியாளர்களின் கருத்தாகும்).
15. 1968 ஆம் ஆண்டில் கோத்தாரி கல்விக் குழு கல்விக்கு 6 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்று கூறியது.
48 ஆண்டுகளுக்குப் பிறகும் - டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் குழு அதே ஆறு சதவிகித நிதி ஒதுக்கீட்டுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
16. உயர் கல்விக்கு அரசு செலவழிக்கக் கூடாது. நிதி தன்னாட்சியை (Financial Autonomy) 
அதாவது மாணவர்களிடையே கட்டணத்தை வசூலித்துக் கொள்ளவேண்டும்.
இதன் பொருள் ஏழை, எளிய மக்களுக்கும், முதல் தலைமுறையாக மேற்படிப்புப் படிக்க விரும்புவோருக்கும் கதவை சாத்தும் சமூக அநீதி!
17. இருபால் மாணவர்களும் சேர்ந்து படிக்கத் தடை!
18. பிளஸ் டூ தேர்ச்சிக்குப் பின், கல்லூரிகளில் சேர தேசிய நுழைவுத் தேர்வு.
19. கல்வி நிறுவனங்கள்மீதான புகார்கள் இனி நீதிமன்றங்களில் விசாரிக்கப்படாது; மாறாக கல்வி தீர்ப்பாயத்தில்தான்  (ணிபீuநீணீtவீஷீஸீணீறீ ஜிக்ஷீவீதீuஸீணீறீ) விசாரிக்கப்படும். (அரசின் கட்டுப்பாட்டில்தானே இது இருக்கும் - நியாயம் எங்கேயிருந்து கிடைக்கப் போகிறது?).
20. கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சங்கம் வைத்துக் கொள்ளத் தடை.
மேலே கூறப்பட்ட தேசிய புதிய கல்வித் திட்டம் என்பது வெகுமக்களுக்கு விரோதமான- குலக்கல்வித் திட்ட அடிப்படையிலும், வருணாசிரமதரும தன்மையிலும், சமூகநீதிக்குக் குழிபறிக்கும் நோக்கத்திலும், குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் பார்வையிலும், மாநில உரிமைகளை நசுக்கும் நச்சு எண்ணத்துடனும்,. கல்வியை சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டுள்ள பார்ப்பனிய, முதலாளித்துவக் கண்ணோட்டத்தோடு திணிக்கப்படும் தேசிய புதிய கல்வித் திட்டத்தை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அடங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இம்முத்தரப்பு மாநாடு முற்றாக ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாகப் பிரகடனப்படுத்துகிறது.
தமிழ்நாடு அரசும் இந்த அடிப்படையில் மத்திய அரசுக்குக் கருத்துத் தெரிவிக்கவேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2:
முன்மொழிந்தவர்: இலா.தியோடர் ராபின்சன், மாநிலத் தலைவர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
நீட்’ தேர்வு கூடாது
மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு ‘நீட்’ என்ற அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதை கைவிடவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
2007 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள தன்மையில், மாநில அரசின் உரிமையில் தலையிடும் வகையில் அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்துவது சட்ட விரோதமும், நியாய விரோதமும், சமூகநீதி விரோதமானதுமாகும்.
இந்த ‘நீட்’ தேர்வுமூலம் சமூகநீதிக்கு உலை வைக்கப்படுகிறது. கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த முதல் தலைமுறையாக  படிக்க முன்வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இருபால் மாணவர்களை வஞ்சிக்கும் ஏற்பாடாகவே ‘நீட்’ தேர்வை இம்மாநாடு கருதுகிறது.
மாநிலங்களின் நிதியில் நிருவகிக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களை, மத்திய அரசு, தானடித்த மூப்பாக அகில இந்தியாவுக்குக் கொண்டு சென்று, நுழைவுத் தேர்வு வைத்துப் பங்கு பிரிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படவே முடியாத அநீதி என்றும் திட்டவட்டமாகத் அறிவித்து இம்மாநாடு மத்திய அரசுக்கு தன் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு இடமில்லை என்று நிலைநாட்ட வேண்டியது தமிழ்நாடு அரசின் அடிப்படைக் கடமை என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
69 சதவிகித இட ஒதுக்கீட்டை தனிச் சட்டம்மூலம் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்து திராவிடர் கழகத் துணையுடன் பாதுகாத்ததுபோலவே, ‘நீட்’ என்ற அகில இந்திய நுழைவுத் தேர்வு, தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது - தேவையில்லை என்கிற வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, உரிய வகையில் மத்திய அரசை வலியுறுத்தி - ஆண்டாண்டு காலமாக தமிழ்நாட்டில் கட்டிக் காத்து வந்த சமூகநீதியை நிலை நாட்டவேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. குறைந்தபட்சம் தமிழ்நாட்டுக்கு இதில் விதி விலக்கு அளிக்கப்படுவது அவசியம் என்று  இம்மாநாடு உறுதியாக வற்புறுத்துகிறது.
ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் ஆங்காங்கே புதிய கல்விக் கொள்கை, ‘நீட்’ தேர்வு இவற்றின் தீங்குகளை ஒல்லும் வகைகளில் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி, தமிழ்நாட்டின் வெகுமக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
அதற்கான முயற்சிகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண் 3:
முன்மொழிந்தவர்: கி.மகேந்திரன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் மன்றம்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்குக்
கொண்டு வருக!
கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும், ஒன்றிணைந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வெற்றி பெறுவதுதான் கல்வி தொடர்பான இடர்ப்பாடுகளிலிருந்து மீட்சிபெற ஒரே வழி என்பதை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. இதற்கு ஆவன செய்யுமாறும் அனைத்துக் கட்சிகளையும், தமிழ்நாடு அரசையும் இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
(பலத்த கரவொலிக்கிடையே இம்மூன்று தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன).

நன்றி : விடுதலை 19.12.2016


Sunday 18 December 2016

‘வாடி’, ‘போடி’ என்று பேசாதீர்! துணைவரைத் தேடும் உரிமை பெண்களுக்கே .......

பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு
குழந்தைப் பேறு பெண்களின் தனி உரிமை!
‘வாடி’, ‘போடி’ என்று பேசாதீர்!
துணைவரைத் தேடும் உரிமை பெண்களுக்கே!
ஆணவக் கொலைகளைத் தடுப்பீர்!
பெண்களே அணிமணிகளைத் தவிர்ப்பீர்!
சம வேலைக்கு சம ஊதியம்
இந்துத்துவாவை எதிர்ப்போம்!
பூரண மதுவிலக்குத் தேவை!
விவசாயிகளுக்கு வாழ்வுயர்வு தேவை
இழிவுபடுத்தும் வேதங்கள் - ஸ்மிருதிகளை எரிப்போம்!
தேவை அனைத்திலும் பாலின சமத்துவம்!!
தீப்பொறி பறக்கும் திருவாரூர் மகளிர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்கள

திருவாரூர், டிச.18 பாலின சமத்துவம் உள்ளிட்ட தீப்பொறி பறக்கும் 36 தீர்மானங்கள் திருவாரூரில் நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1:
பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு
மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கும் பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட ஆவன செய்யுமாறு மாநில, மத்திய அரசுகளையும் தனி யார்த் துறைகளையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. உயர்நீதி மன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதி பதவிகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வழிசெய்யுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 2:
33 சதவீத இடஒதுக்கீடு
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாமல் 1996ஆம் ஆண்டு முதல் முடக்கப்படுவதற்குக் காரணமான அனைத்துத் தரப்பினருக்கும் இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரி வித்துக் கொள்கிறது. இனியும் காலதாமதமின்றி நடப்புத் தொடரிலேயே அந்த சட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்குமாறு அனைத்துக் கட்சிகளையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. அதில் உள்ஒதுக்கீடு கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்பதையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. தவறும்பட்சத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் அனைத்துத் தரப்புப் பெண்களையும் குறிப்பாக மாணவிகளை ஒன்றுதிரட்டி வீதிக்கு வந்து கடுமையாகப் போராட நேரிடும் என்றும் இம் மாநாடு எச்சரிக்கிறது.
தீர்மானம் 3:
விவாகரத்து வழக்குகள்
மணவிலக்கு முறையை குற்றப் பார்வையோடு பார்க் காமல், பெண்களின் உரிமை உணர்வோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கவேண்டும் என்றும் இம்மாநாடு கருதுகிறது. இத் தகு வழக்குகளில் காலத்தை விரயமாக்கும் போக்குத் தடுக்கப்பட்டு, மூன்று மாதத்திற்குள் முடித்திட வகை செய்யவேண்டுமென்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. விருப்பற்ற இரு சாராருக்கும் காலநீட்டிப்பு தேவையற்ற மன உளைச்சலைத்தான் ஏற்படுத்தும்.
தீர்மானம் 4:
குழந்தைப் பேறு - பெண்ணின் உரிமை
குழந்தைப் பேறு என்பதை பெண்களே முடிவு செய்ய வேண்டுமேயல்லாமல் இதில் ஒரு தரப்பாக வெறும் ஆண்கள் ஆதிக்கத்திற்கு இடம் இருக்கக்கூடாது என்று இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 5:
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளும் வளர்ந்து வருகின்றன. ஆண்டுக்கு 12 சதவீதம் அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. இது மிகவும் வெட்கப்படத்தக்கதாகும். சட்டம் வெறும் காகிதமாக இல்லாமல் நகமும், பல்லும் உள்ளதாக மாற் றப்பட்டு, செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்றும் இது போன்ற குற்றங்களை விசாரிக்கும் காவல்துறைப் பிரிவில் பெண்களையே அதிகமாக நியமிக்குமாறும் மாநில, மத்திய அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.
தீர்மானம் 6:
பெண்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி
ஆண்கள்-பெண்கள் விகிதாச்சாரத்தில் பெண்களின் எண்ணிக்கை நாளும் குறைந்து வருவது அதிர்ச்சிக் குரியதாகும். பெண் சிசுக்களை அழிப்பதில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும்கூட இருக்கவே செய்கிறார்கள்! பெண்ணுரிமை இயக்கங்கள் வெளியில் வந்து விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் பாசறை இதற்கு முன்னுரிமை கொடுக்கும் என்று இம்மாநாடு தெரி வித்துக்கொள்கிறது. கருவில் வளர்வது ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்துச் சொல்லுவது குற்றம் என்று ஆக்கப் பட்டாலும் நடைமுறையில் இச்சட்டமெல்லாம் முனைமுறிந்த மூளியாகவே காணப்படுவதை மாற்றி, உயிரோட்டம் உள்ளதாகச் செயல்படுத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 7:வாடி - போடி என்று அழைக்கக் கூடாது
பெண்களை வாடி, போடி என்றும், வா, போ என்றும் மரியாதைக் குறைவாக ஒருமையில் அழைக்கும் பிற் போக்குப் புத்தியிலிருந்து ஆண்கள் மாற வேண்டும் என்று இம்மாநாடு கண்டிப்பாகத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தப் பார்ப்பனக் கலாச்சாரத்தைக் கைவிடாவிட்டால், பெண்கள் எதிர்நிலையில் ஆண்களை விளிக்கும் நிலை ஏற்படும் என்று இம்மாநாடு எச்சரிக்கிறது.
தீர்மானம் 8:
யோகாவிற்குப் பதில் கராத்தே பயிற்சி
பள்ளிகளில் பெண்களுக்கு யோகாவிற்குப் பதில் வீர விளையாட்டுகளையும், கராத்தே போன்ற தற்காப்புக் கலை யையும் அவசியம் கற்றுத்தர வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.தேவைப்பட்டால்பெண்களுக்குத்துப்பாக்கிச் சுடும் பயிற்சியையும் அளித்து, துப்பாக்கி உரிமத்தையும் அளிக்கவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 9:
வாழ்விணையரைத் தேர்வு செய்யும் உரிமை
18 வயது அடைந்த பெண்கள் தன் வாழ்விணையரை தேர்ந்தெடுத்துக் கொள்வது அவர்களின் உரிமையே ஆகும்! தேவைப்பட்டால், பெற்றோர்கள் வழிகாட்டலாம்; அதேநேரத்தில், வலுக்கட்டாய முறையிலோ வன்முறையிலோ அணுகுவது சட்டப்படி குற்றம் மட்டுமல்ல; மனித உரிமைக்கு எதிரானது என்பதை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.


தீர்மானம் 10:
ஜாதி ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டும்
ஜாதி ஆணவக் கொலைக்குக் கவுரவக் கொலை என்று கூறி ஜாதியைக் கடந்து காதல் திருமணம் செய்கிறவர்களைப் படுகொலை செய்யும் ஜாதி வெறியர்களை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. இதில் ஈடுபடும் குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய கடுந்தண்டனை அளிக்கப்பட்டால், அது சமுதாயத்திலே ஓர் அதிர்வை ஏற்படுத்தும் என்பதால், இந்த வகையிலே அரசுகள் செயல்பட வேண்டும் என்று இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது.  போதிய வயதடைந்த பெண்கள் காதல் கொண்டு திருமணம் செய்து கொள்வதை நாடகக் காதல் என்பதெல்லாம் அசல் பிற்போக்குத் தனம் என்பதையும் இம்மாநாடு அறிவித்துக் கொள்கிறது. ஜாதியைப் பார்த்து வருவதல்ல காதல் என்பதையும் இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 11:
பெயருக்கு முன் தலைப்பெழுத்து
குழந்தைகளின் தலைப்பெழுத்துக்கு (ஐவையைட) தாய், தந்தை இரு பெயர்களைப் பயன்படுத்தலாம் என்ற மாநில அரசின் ஆணையிருந்தும், நடைமுறையில் போதுமான அளவில் பயன்படுத்தாதிருப்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டி, நூறு சதவீதம் செயல்படுத்துமாறு இம்மாநாடு பெற்றோர்களைக் கேட்டுக்கொள்கிறது. ஆதார், கடவுச்சீட்டு  (ஞயளளயீடிசவ), நிரந்தர கணக்கு எண் அட்டை (ஞய ஊயசன) போன்ற மத்திய அரசு ஆவணங்களில் தலைப்பெழுத்துகள் நீக்கப்பட்டு, தந்தை பெயர் மட்டும் பயன்படுத்தப்படுவதால், தாய், தந்தை பெயர்களைப் பயன்படுத்தும் மாநில அரசின் ஆணை பயனற்றதாகி விடுகிறது. ஆதார் உள்ளிட்ட மத்திய அரசு ஆவணங்களிலும் தாய் பெயரும் சேர்க்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 12:
உயர் கல்விக்கு ஊக்கம் தருக!
பெண் கல்வி வளர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கக் கூடியது என்றாலும் மேல் வகுப்புகளுக்குச் செல்லச் செல்ல பெண்களின் சதவீதம் குறைந்து வருகிறது. (னுசடியீ டீரவள) அதனைத் தடுக்கப் பெண் கல்விக்கு ஊக்கம் தரும்வகையில் அரசுகள் போதிய ஊக்கத் தொகையையும், வசதியையும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 13:
இரயில் பெட்டிகளில் பெண்களுக்குக் கூடுதல் இடங்கள்
இரயில்களில் பெண்களுக்கான தனிப் பெட்டிகள் மிகவும் சுருக்கப்பட்டு வருவதை மாற்றி, கணிசமான அளவில் விரிவுப்படுத்த வேண்டும் என்று இரயில்வே துறையை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 14:
(அ) அணிமணிகள் வேண்டாமே!
பெண்கள் நகை, பட்டுப் புடவை, அணிமணிகள் இவற்றில் ஆர்வம் காட்டுவதைத் தவிர்த்து, உரிமை உணர்வுப் பக்கம் ஊக்கம் பெற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. குறிப்பாக வளையல் அணிவதை அறவே தவிர்க்க வேண்டும் என்றும்,  தாலி கட்டிக் கொள்வதையும் கட்டாயம் பெண்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(ஆ) அழகுப் போட்டிக்கு ஆயத்தப்படுவதைவிட, அறிவுப் போட்டிக்கும், அனுபவப் போட்டிக்கும் முந்துறுவதே மகளிருக்கு மாண்பை உருவாக்கும்.
தீர்மானம் 15:
சட்டங்கள் இருந்தும் செயல்படாத தன்மை
குழந்தைத் திருமண சட்டம் - 1929, விபச்சார தடுப்புச் சட்டம் - 1956, வரதட்சணை தடுப்புச் சட்டம் - 1961, பெண்களை இழிவுபடுத்திடும் சித்தரிப்புத் தடுப்புச் சட்டம் 1986, பாலியல் தொந்தரவு தடுப்புச் சட்டம் - 2000, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் - 2005, பாலியல் வன்முறைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் - 2012 முதலிய சட்டங்கள் இருந்தும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதை இம்மாநாடு வருத்தத்துடன் சுட்டிக்காட்டுவதுடன் எந்த நோக்கத்துக்காக இத்தகு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டனவோ, அவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது. குறைந்தபட்சம் மேல்நிலை, கல்லூரி, பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களில் இவற்றைப் பற்றிய விவரங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும், இந்தச் சட்டங்கள்பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 16:
பெண்களுக்கு அர்ச்சகர் உரிமை
ஆண்களைப் போலவே பெண்களுக்கு வழிபாடு மற்றும் அர்ச்சகர்கள் உரிமைக்கான சட்டம் கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 17:
இழிவுபடுத்தும் வேதங்கள் - ஸ்மிருதிகள்
பெண்களை இழிவுபடுத்தும் வேதம், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்களைத் தடை செய்ய வேண்டும் என்று இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. இதுகுறித்தவற்றைப் பாடத் திட்டங்களிலிருந்து அறவே நீக்கி வைக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதற்கென வரும் ஆண்டில் மகளிரே முன்னின்று அத்தகைய பகுதிகளின் நகல்களை எரிக்கும் போராட்டத்தை அறிவிக்க கழகத் தலைவரை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 18:
தமிழிலேயே பெயர் சூட்டுக!
தமிழ்நாட்டுப் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கண்டிப்பாக வேறு மொழிப் பெயர்களை வைக்காமல், குறிப்பாக சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டாமல், பெயர், எண்கணித ஜோதிடத்தில் ஏமாந்து விடாமல் தமிழிலேயே பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று இம்மாநாடு வற்புறுத்துகிறது.
தீர்மானம் 19:
விதவைப் பெண்களுக்கு முன்னுரிமை
துணைவரை இழந்த பெண்களைத் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்குதல், விதவைகளுக்குப் பூச்சூட்டல் (அத்தன்மையை அழிக்க) போன்றவற்றிற்கு முன்னிலைப்படுத்துதல் என்பதை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டுமாய் இம்மாநாடு முக்கியமாகக் கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறது. அதன் மூலமாகச் சமுதாயத்தில் ஒரு விழிப்பை ஏற்படுத்த முடியும் என்று இம்மாநாடு கருதுகிறது.
தீர்மானம் 20:
மூடத்தனங்களைக் கைவிடுக!
கோயிலுக்குச் செல்லுதல், சாமியார்களை நாடுதல், மதச்சடங்குகளில் ஆர்வம் காட்டுதல், குறிப்பிட்ட கோயில்களுக்குச் சென்று நிர்வாணப் பூஜை செய்தல் இவற்றை இழிவாகக் கருதி மனரீதியாகப் புதிய சிந்தனை, ஊக்கம் பெறுமாறு பெண்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 21:
பெண்கள் நுகர்வுப் பொருள்கள் அல்ல!
தொலைக்காட்சிகளில், திரைப்படங்களில் பெண்களை வில்லியாகவும், கோழையாகவும், கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் பலவீனர்களாகவும் சித்தரிப்பதற்கும் இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. பெண்கள் வீரமானவர்கள் என்று பழைய காலத்து வரலாற்றுப் பாத்திரங்களைப் பெருமையாகப் பேசும் இந்தத் துறையினர், நிகழ்காலத்திலும் பெண்களை வீரமுள்ளவர்களாக, துணிவுள்ளவர்களாக, திறன் உள்ளவர்களாக, தலைமை தாங்கும் பண்புள்ளவர்களாகச் சித்தரிப்பதில் மனத் தயக்கம் காட்டுவது ஏன் என்ற வினாவை இம்மாநாடு கலையுலகினரையும், படைப்பாளிகளையும், எழுத்தாளர்களையும், அரசியல்வாதிகளையும் கேட்க விரும்புகிறது.
அதேபோல பெண்களை அரைகுறை உடையுடன் அட்டைப் படம் போடுவது, விளம்பர நுகர்வுப் பொருளாகச் சித்தரிப்பது - நாய் விற்றக் காசு குரைக்காது என்ற போக்கில் நடந்துகொள்வது ஆண்களின் அழுக்கு மனப்பான்மையையே காட்டுவதாக இம்மாநாடு கருதுகிறது. இந்நிலை நீடித்தால் பெண்களை ஒன்றுதிரட்டி திரைப்படம், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், விளம்பர நிறுவனங்கள் முன் முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்று இம்மாநாடு அறிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 22:
சமையல் - ஆண்,  பெண்ணுக்குப் பொதுவானதே!
சமையல் என்றாலே பெண்கள்தான் என்ற நிலை மாற்றப்பட்டு, ஆண்-பெண் இருவருக்கும் பொதுவான பணி என்ற மற்ற நாடுகளின் நடைமுறைகளை இந்த நாட்டிலும் பின்பற்ற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 23:
பாலின சமத்துவம்
சமூகநீதி என்பது பாலியல் நீதியும் உள்ளடக்கியது என்பதை இம்மாநாடு தெளிவுப்படுத்தி பிரகடனப்படுத்துகிறது. பாலின சமத்துவம் என்பது மனித உரிமை என்று  அய்.நா.மன்றம் அறிவித்திருப்பதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று இம்மாநாடு தெரிவிக்கிறது.
தீர்மானம் 24:
கற்பு என்பது பொதுவானதே!
கற்பு என்பது எந்தப் பொருளில் கூறப்பட்டாலும் சரி, அதனை முதன்மைப்படுத்தி பெண்களை ஒடுக்குவது என்பது சமுதாயக் கூடா ஒழுக்கம் என்று கருதப்பட வேண்டும் என்றும், கற்பு என்பது ஒழுக்கமே; கட்டுப்பாடே என்று கருதப்படுமேயானால், அது ஆண் - பெண் இருவருக்குமே பொதுவானதாக ஆக்கப்பட வேண்டும், உருவாக்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 25:
வரதட்சணையும் - நன்கொடையும்
வரதட்சணை என்பது குற்றம். ஆனால், நன்கொடைகள் குற்றமல்ல என்று வியாக்கியானம் சொல்லுவதெல்லாம் யதார்த்தத்தில் ஒன்றேதான் என்பதால் இந்த மறைமுகப் பேரம் சட்டப்படியாகத் தடுக்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 26:
பெண் ஏன் அடிமையானாள்?
பெரியார் என்று பெண்கள் மாநாடு கூட்டி பட்டம் கொடுத்துப் பெருமை பெற்றவர்கள் பெண்கள். பெண்ணுரிமை தளத்தில் பெரியார் படைக்க விரும்புவது வெறும் புதுமைப் பெண்ணல்ல; புரட்சிப் பெண்கள் என்பதை உணர்ந்து, அதனைப் பாடத் திட்டமாகவும், சமுதாயக் கருத்தாகவும், மாற்றியமைக்கப் பாடுபடுவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது. குறிப்பாக தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? எனும் நூலை ஓர் இயக்கமாகவே முனைந்து பரப்பிடுவது என்று இம்மாநாடு முடிவு செய்கிறது
தீர்மானம் 27:
பெண்களின் திருமண வயதை உயர்த்துக!
இன்னும் சில குறிப்பிட்ட வட்டாரங்களில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்குத் தந்திரமான முறையில் திருமணம் நடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. திருமண வயது 18 என்று ஆக்கப்பட்டாலும் கல்வியில் மேலும் உயர்நிலை எட்டும் வகையில் அந்தத் திருமண வயதை நடைமுறையில் தள்ளிப்போடும் மனப்பான்மையைப் பெண்கள் பெற வேண்டும் என்றும், படிக்கும்போதே திருமணம் செய்து  வைக்கும் நிலை தடுக்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. பெண்களின் திருமண வயதை மேலும் உயர்த்தும் வகையில் சட்டம் இயற்றுமாறும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 28:
ஜாதி மறுப்புத் திருமண இணையர்களின் குழந்தை எந்த ஜாதி?
ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் இடஒதுக்கீடு பெறுவதற்கு தந்தையின் ஜாதியைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பை மாற்றி, தாய் அல்லது தந்தையாரின் ஜாதியை பெற்றோர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வைத்துக் கொள்ளலாம் என்ற முந்தைய நிலை தொடருவதற்குச் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வருமாறு மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 29:
உச்சநீதிமன்றத்தின் தவறான தீர்ப்பினை மாற்றுக!
மாமியாரை மருமகள் எட்டி உதைத்தால் அது ஒன்றும் குற்றமல்ல என்றும், என் மகன் உன்னை விவாகரத்து செய்து விடுவான்! என்று மாமியார் மிரட்டுவதும் குற்றமல்ல; இது குற்றவியல் பிரிவு 498இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்சநீதிமன்ற அமர்வு (நீதிபதிகள் எஸ்.பி.சின்கா, சிரியாக் ஜோசப் -  நாள்: 22.7.2008) வழங்கிய தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்பட்டு, சட்டத் திருத்தத்தின் மூலம் பெண்களுக்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 30:
மூப்படைந்த பெற்றோர்களைப் பேணுக!
மூப்படைந்த பெற்றோர்களைப் பேணிக் காப்பதில் ஆண்களைவிட பெண்கள் கூடுதல் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு இம்மாநாடு பெண்களைக் கேட்டுக்கொள்கிறது. இதன்மூலம் ஆண்களிடத்திலும் புதிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று இம்மாநாடு கருதுகிறது.
தீர்மானம் 31:
மார்பகப் புற்றுநோயும் பெண்களும்
மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வரும்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட அனைத்து சுகாதார நிலையங்களிலும் அதனைக் கண்டுபிடிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவி செய்யவுமான வசதிகளைச் செய்து கொடுக்குமாறும் தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 32:
திருநங்கைகள் உரிமை - வளர்ச்சி
மூன்றாவது பாலினமான திருநங்கைகளின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள வாரியத்தை பெயரளவுக்கு இல்லாமல் செயல்படும் வாரியமாக ஆக்க வேண்டும் என்றும், சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் திருநங்கைகளையும் நியமனம் செய்ய வேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 33:
இந்துத்துவாவைப் புறக்கணித்திடுக!
இந்துமதம், இந்துத்துவா என்பதெல்லாம் பெண்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் பெண்களை அடிமைப்படுத்தும் அடிப்படை நோக்கம் கொண்டவை என்பதால், இவற்றிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கி நிற்குமாறு பெண்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 34:
சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கிடுக!
சம வேலைக்குச் சம ஊதியம் என்ற அடிப்படையில் ஆண் - பெண் ஊதிய விகிதத்தில் வேறுபாடு கூடாது என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 35:
தேவை முழு மதுவிலக்கு
ஆண்களிடம் உள்ள மதுப் பழக்கமென்பது பெரும்பாலும் குடும்பத் தலைவியையும், பிள்ளைகளையும், ஒட்டுமொத்த குடும்பத்தையும் பெரிதும் பாதிக்கச் செய்வதால் முழு மதுவிலக்கை செயல்படுத்துமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 36:
விவசாயக் குடும்பங்கள் மீட்சி பெற
மழை பொய்ப்பதாலும், நதிநீர் தடைப்படுவதாலும் விவசாயத் தொழில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. அதை நம்பி வாழும் இலட்சக்கணக்கான குடும்பங்களின் அன்றாட வாழ்வே கேள்விக்குறியாகிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகிறது. இந்த நிலையில் வங்கிக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், நட்டப்படும் விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்குவதில் தாராள சிந்தனையையும் மனிதாபிமானத்தையும் காட்ட வேண்டும் என்றும், மாநில அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. இம்மாதிரி சூழலில் மத்திய அரசு தேவையான நிதி உதவியையும் மாநில அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும், இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
விவசாயம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை வறட்சிப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.விவசாயத் தொழிலில் ஆண்களுக்கு நிகராகப் பென்களும் பெரும் அளவில் ஈடுபடுவதையும் இம்மாநாடு சுட்டிக்காட்டி நினைவூட்டுகிறது.

நன்றி : விடுதலை 18.12.2016