Sunday 26 February 2017

எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தோம்.......

திராவிடர் கழகத்தோழர்களின் இல்ல நிகழ்வுகள்  தந்தை பெரியாரின் தத்துவத்தை,கொள்கையை பறைசாற்றும் விழாக்களாகத்தான் பல்லாண்டுகளாக நடைபெறுகின்றன. எட்டிக்காயென எட்டி நிற்போர் கூட கழகத்தோழர்களின் அணுகுமுறையால் பலாச்சுளையென உணர்ந்து கொள்வதைக் காணமுடிகின்றது வாழ்க்கை முழுவதும். அந்த வகையில் அண்மையில் நடந்த வேலூர் மண்டலத் திராவிடர் கழகத்தலைவரும், லிட்டில் பிளவர் என்னும் பள்ளியின் தாளாளருமான அய்யா வி.சடகோபன் இல்லத்திருமண நிகழ்வும் சிறப்புக்குரியதாகும். அந்த நிகழ்வினைப் பற்றியும் , நன்றியும் கூறி அய்யா சடகோபன் அவர்களின் கடிதம் இன்றைய விடுதலையில்(26.02.2017) வந்துள்ளது. இனி அந்தச்செய்தி தங்கள் பார்வைக்கு.....

இல்ல இணைஏற்பு விழாவின் மூலம் விளைந்த கொள்கை விளைச்சல்


வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, அன்பு கனிந்த வணக்கம்.

எங்கள் இல்ல இணை ஏற்பு விழாவிற்கு தங்களின் வாழ்த்துரை மிக அருமையாக அமைந்திருந்தது. எங்கள் குடும்பத் தலைவராயிருக்கும் இனத்தலை வரின் வாழ்த்துரையை மணவிழாவிற்கு வந்தி ருந்த உறவினர்களும், நண்பர்களும், நம் கழகக் குடும்பத்தினரும் வெகுவாகப் பாராட்டினர். தாங்களே நேரில் வந்து வாழ்த்தியதைப் போன்று அனைவரும்கூறினர்.இரத்தினச்சுருக்கமாக3 நிமிடங்களில் எங்களின் இயக்க உழைப்பு, வாழ்வில் நாங்கள் அடைந்த உழைப்பின் வெற்றி, அடுத்த தலைமுறையினரையும் இயக்கத்தின்பால் ஈடுபடுத்தும்உணர்வுஅத்தனையையும்நினைவு கூறி குறிப்பிட்டது, உறவினர்கள் இயக்க ஈடு பாட்டிற்காக எங்களை கடந்த காலங்களில் அவ மதித்து, அசிங்கப்படுத்தியமை எல்லாம் பஞ்சாய்ப் பறந்துபோனது. உறவுகள் எங்களை உயர் வாய் மதிப்பீடு செய்யுமளவிற்கு உயர்த்தியது. நல்வாய்ப்பாக தங்களின் உரையினை குறித்த நேரத்தில் ஒளிபரப்பி அனைவரையும் கண் ணுறச் செய்ததில், நம் இயக்கத்தின் புகழ் எளிய மனிதர்களையும் சென்றடைய நல்வாய்ப்பாக அமைந்தது.மணமகள்வீட்டார்பக்திமூடநம் பிக்கைக் கொண்டோர். ஆனாலும் ஆர்ப்பாட்ட மில்லாமல் நாங்கள் செய்த திருமண ஏற்பாட்டினை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர். தங்களின் ஆழ்ந்த சிந்தனை உரை அவர்கள் நெஞ்சினையும் தொட்டது எனப் பாராட்டினர். மணமக்கள் விழிக்கொடையும், உடற்கொடையும் அளித்த நிகழ்ச்சியை அனைவரும் இமைகொட்டாமல் பார்த்து வியப்படைந்தனர்.

அதோடு கழகத் துணைத்தலைவர் கவிமாமணி கலி.பூங்குன்றன் அய்யா அவர்களின் எளிய நடை குறிப்பாக பெண்களின் மனதைத் தொட்டது. புராண இதிகாசங்களும், வருணதர்மத்தை கூறும் மனுதர்மம் - குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் ஆதாரங்களை எடுத்துக்கூறியதை பெண்கள் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொண்டனர். நம் இயக்கத்தின் பிரச்சாரத்தையோ, புத்தகங்களையோ அறியாத பெண்கள் பலர், என்னிடம் வந்து, “ஏங்க நாங்கள் செய்கின்ற திருமணங்களில் இவ்வளவு அசிங்கங்கள் இருக்கிறதா?” என வியப்புடன் கேட்டனர். பெரியார் தொண்டர்களின் மான உணர் வினையும், இனஉணர்வினையும் வெகுவாகப் பாராட்டிச் சென்றனர்.

நமது இயக்கத்தின் பல கூட்டப் பிரச்சாரத் தினையும், அப்போதே அதன் பலனையும் கண் கூடாகப் பார்த்த அனுபவம் இம்மணவிழாவின் மூலம்கிடைத்தது.இயக்கப்புத்தகங்கள்ரூ.5000-த் திற்கு விற்பனையானது. கழக வெளியீடுகள்-சுயமரியாதை திருமணம் ஏன்?, அய்யாவின் சிந்தனை நூல்வரிசை - 5, தமிழர் மீது பார்ப்பனர் தொடுத்த பண்பாட்டுப் படையெடுப்பு, மாணவர் களுக்கு அய்யாவின் சிந்தனைத் தொகுப்பு போன்ற 5 வகையான நூல்கள் 2000 புத்தகங்கள் அன்பளிப்பாக அனைவருக்கும் வழங்கப்பட்டன. மரக்கன்றுகள், காய்கறிச்செடிகள் இருவேளையும் 4000 வழங்கப்பட்டன. மணவிழா மூலம் அமைதி யான இயக்கப்பிரச்சாரம் நடைபெற்றது கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தோம்.

கவிஞர் அவர்கள் எங்கள் இல்லத்திருமணத் திற்கு வருகைதந்து வாழ்த்துரை வழங்கியது எங்களுக்கெல்லாம்நல்வாய்ப்பாகஅமைந்தது. மணவிழாவிற்கு வந்திருந்த பெரியார் பெருந் தொண்டர்கள் சத்துவாச்சாரி இரட்டையர்கள் பொதுக்குழுஉறுப்பினர்இரா.கணேசன்,மாவட்ட கழக அமைப்பாளர் ச.கி.செல்வநாதன் ஆகி யோரையும் நேர்காணல் மூலம், அவர்களின் 60 ஆண்டுகளுக்கும்மேலான இயக்க ஈடு பாடு, இயக்கத்திற்கு அளித்த உழைப்பு, சமு தாயத்தில் அவர்கள் சந்தித்த போராட்டங்கள், கழகப்போராட்டங்களின் முன்னணி வீரர்களாக பங்கேற்றது அத்தனையையும் மிக நேர்த்தியாக தொகுத்து கவிஞர் அவர்கள் ‘விடுதலை’ ஞாயிறு மலரில் வழங்கினார்கள். ஞாயிறுமலரைப் படித்த அப்பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சி; எனக்கும் தொலைபேசியில் நன்றி தெரிவித்தனர்.

அன்றே மாலை நிகழ்வாக, என்னுடைய பள்ளியான லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் அன்னை மணியம்மையார் அரங்கில், சுயமரியாதை இயக்க 90ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன? என்ற தலைப்பில் கவிஞர் அவர்கள் இயக்க வரலாற்றினையும், தமிழர் மானவுணர்வு பெற்ற நிகழ்ச்சிகளையும் விளக்கினார். மாணவர்களும், இருபால் ஆசிரியர்களும், பெற்றோர்களும் அரங் கம் நிறைந்து, கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியும் நிறைவாக அமைந்தது.

இல்லமணவிழா நிகழ்ச்சியையும், பள்ளி விழாவினையும், கொள்கை விளக்கப் பிரச்சாரத் தினையும் ‘விடுதலை’ மூலமாக கண்ணுற்றக் கழகத் தினர் தொலைபேசி மூலம் மகிழ்ந்து பாராட்டினர்.

கடந்த 20.02.2017 ஆம்பூரில் நடைபெற்ற கழகக்தொண்டரின் மணவிழாவில் கலந்து கொள்ள நானும், எனது இணையர் ஈஸ்வரி அவர்களும் சென்றபோது மணவிழாவிற்கு வருகைதந்த கழகத் தோழர்கள் ‘விடுதலை’யில் படித்துவிட்டு, அழைப்பிதழ் கிடைக்கப் பெறாததற்கும், பங்கேற்று இம்மகிழ்வான மணவிழாவினையும், பள்ளியில் நடைபெற்ற விழாவினையும் காண வாய்ப்பில்லாமல் போனமைக்காகவும் வருத்தப்பட்டனர். எங்கள் மீது கோபித்தும் கொண்டனர்.

எங்கள்இல்லவிழாவில்தங்களின்வாழ்த்து ரையும், கவிஞரின் வாழ்த்துரையும் உணர்ச்சி யூட்டுவதாய் அமைந்தது. அதேபோன்று தமிழர் தலைவர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு மிகச்சிறப்பாக இயங்கிவரும் எங்கள் பள்ளியில் சுயமரியாதை இயக்க 90ஆம் ஆண்டு விழா கருத்தரங்கத்தில் கவிஞர் அவர்களின் அறிவியல் விளக்கங்களுடன் அமைந்த உரை எங்கள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர் களுக்கும் நல்வாய்ப்பாக அமைந்தது. அனைவரின் சார்பிலும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

13.02.2017 அன்று நடைபெற்ற அடுக்கடுக்கான இயக்கப்பிரச்சார நிகழ்ச்சிகளால் நாங்கள் நூறாண்டு வாழ்ந்து இயக்கத்திற்கு உழைக்க வேண்டும் என்ற உறுதியையும் அளித்தது. கழகம் எங்களுக்கு அளித்தஇந்தப்பெருமைக்கு என்றென்றும் நன்றி யுடையவர்களாக இருப்போம் என்று உறுதி கூறுகிறோம். நன்றி, நன்றி, நன்றி!

- வி.சடகோபன்

தலைவர், வேலூர் மண்டல திராவிடர் கழகம்

நன்றி : விடுதலை 26.02.2017



Tuesday 21 February 2017

'புறாக்காரர் வீடு ' -சிறுகதைத் தொகுப்பு-பாலகுமார் விஜயராமன்

கடந்த 04.02.2017 சனிக்கிழமை காலை 7.05 மணிக்கு ,  மதுரை வானொலியில் நூல் விமர்சனம் பகுதியில் ஒலிபரப்பபட்டதன் எழுத்துவடிவம் இது.......
                  **********************************************************

இன்று நாம் சுவைக்க இருக்கின்ற புத்தகத்தின் தலைப்பு 'புறாக்காரர் வீடு ' .புறாக்காரர் வீடு என்னும் இந்தப்புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு .இதன் ஆசிரியர் பாலகுமார் விஜயராமன். நூல் வனம்  பதிப்பகத்தால் ஜீன் 2016-ல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 128 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தின் விலை ரூ 80 ஆகும்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பல நகரங்களில்  புத்தகத்திருவிழாக்கள் நடைபெறுகின்றன நம்மையெல்லாம் மிகப்பெரிய மகிழ்ச்சிக்கு உள்ளாக்கக்கூடிய செயல் இந்தப் புத்தகத்திருவிழாக்கள் .. ஆண்களும் பெண்களும் முதியவர்களும் இளைஞர்களும் குழந்தைகளுமாய் அணி அணியாய் புத்தகத்திருவிழாக்களில் அணி வகுக்கிறார்கள். புத்தகத்தின் உள்ளடக்கத்தை அறியாதவர்களை, ஒரு புத்தகத்தை எடுக்கவைப்பதில் அட்டைப்படத்திற்கு முக்கிய பங்கு உணடு. அப்படி பார்த்தவர்கள், கையில் உடனே எடுத்துபார்க்கும் வண்ணம் அழகிய அட்டைப்பட  வடிவமைப்பை இந்த புறாக்காரர் வீடு என்னும் சிறுகதைத் தொகுப்பு பெற்றிருக்கிறது.  எழுத்துப்பிழைகள் இல்லாத புத்தகமாகவும் இந்தப்புத்தகம் இருக்கிறது.

இந்த 'புறாக்காரர் வீடு ' என்னும் புத்தகத்தில் 14 சிறுகதைகள் இருக்கின்றன. 14 சிறுகதையுமே தனித்துவமாய் இருக்கின்றன. எந்தச்சிறுகதையும் இன்னொரு சிறுகதையைப்போல இல்லை.பல எழுத்தாளர்களில் தொகுப்புகள் தனித்தனிக் கதைகள் என்றாலும் ஒவ்வொன்றும் தனித்தன்மையான கதைகளாக இருப்பதில்லை. ஆனால் இந்தத் தொகுப்பு அப்படிப்பட்ட தனித்தன்மையைக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு கதையும் ஒரு மாறுபட்ட முயற்சியாக இருக்கிறது.ஒரு மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.

இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரையை எழுத்தாளர்  பாவண்ணன் எழுதியிருக்கின்றார். அவர் தனது அணிந்துரையில் "நல்ல சிறுகதை என்பது சொல்லப்பட்ட கதையை விட படித்துமுடித்தபின் சொல்லப்படாத கதையைப் பற்றியும் நம்மைச்சிந்திக்க வைப்பதாக இருக்கவேண்டும்." எனச்சொல்கின்றார். சொல்லப்பட்ட கதை என்பது சுருக்கமாக இருந்தாலும் கூட சொல்லப்படாமல் விட்ட கதை விரிவாக மனக்கண் முன் படிப்பவனுக்கு ஏற்படுத்திவிட்டால் அது சிறந்த கதைதான். பதினான்கு கதைகளுள் ஒன்றாக இருக்கக்கூடிய 'புறாக்காரர் வீடு'  என்னும் சிறுகதை அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை வாசிப்பவருக்கு தருகிறது.





" புறாக்காரர் வீடு இத்தொகுப்பின் முக்கியமான ஒரு சிறுகதை. பிள்ளைகளைப் போல புறாக்களை பாசத்துடன் வளர்க்கும் அப்பா. புறாக்காரர் வீடு என்று அவர் வாழும் வீட்டை ஊரார்கள் அடையாளப்படுத்தும் அளவுக்கு அவருடைய பாசம் பேர்போனது.வீட்டின் மாடிப்பகுதியில் ஒருபக்கம் புறாக்கள் அடையும் கூடுகள்.இன்னொரு பக்கம் அப்பாவின் அறை. புறாக்கள் மெல்ல மெல்ல வளர்கின்றன. வானவெளியில் பறந்து திரிகின்றன. பொழுதெல்லாம் அலைந்து திரிந்துவிட்டு மாலையில் கூட்டை அடைகின்றன. புறாக்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகளை அக்கறையோடு பார்த்துக்கொள்கின்றன. இரையெடுக்கவும் பறக்கவும் கற்றுக்கொடுக்கின்றன. சுதந்திரமாகப் பறந்து திரிவதைப் பார்த்து ஒதுங்கி நின்று மகிழ்கின்றன. அப்பா வளர்க்கும் புறாக்கள் வளர்ந்து பெரிதாவதுபோல பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். பெரிய அக்கா வளர்ந்து மணம் முடித்துக்கொண்டு ஒரு திசையில் சென்று விடுகிறாள். சின்ன அக்காவும் தனக்கு விருப்பமான மாப்பிள்ளையையே திருமணம் செய்துவைக்கவேண்டும் என பிடிவாதம் பிடித்து ,மணம் முடித்துக்கொண்டு இன்னொரு திசையில் சென்று விடுகிறாள். தம்பி சென்று அடையவும் கல்விக்கான தேடல் என ஒரு திசை கிடைத்து விடுகிறது. அண்ணனுக்குத் திருமணம் நடக்கிறது. ஆனால் திசை தேடிச்செல்ல விரும்பாத அவன் வீட்டிலேயே இருந்து , கொஞ்சம் கூடக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல் மெல்ல மெல்ல அப்பாவின் இடத்தைக் கைப்பற்றி விடுகிறான். தனிமை வேண்டும் என்பதால் அப்பாவின் அறையை முதலில் எடுத்துக்கொள்கிறான் புறாக்கள் வளரும் கூண்டு நாற்றமடிக்கிறது என மகன் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக  புறாக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றது. மாடியில் அப்பா இல்லாததால் கவனிப்பாரில்லாத புறாக்கள் ஒன்றையடுத்து ஒன்றாக இறந்து போகின்றன. புறாக்கள் அந்த வீட்டில் இருந்தன, அவற்றை அவர் வளர்த்தார் என்பதெல்லாம் இப்போது ஒரு பழங்காலத்து அடையாளம் மட்டுமே. அப்பாவின் ஏக்கத்தையும் பெருமூச்சையும் மதிக்காத ஒரு புதிய காலம் எழுச்சி பெறுகிறது". அணிந்துரையில் பாவண்ணன் என்ன சொல்கின்றார் என்றால் இந்தக் கதை மிக நுணுக்கமான  குறீயீடுகளின் மூலமாக தனிமைப்பட்டுப் போகும் அப்பாவைப் பேசுகிறது எனச்சொல்கின்றார்.

இன்றைக்கு இருக்கும் முதியவர்களின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் தனிமை. தனிமைதான் இன்றைய முதியவர்களுக்கு மிகப்பெரிய சவால். இயக்க தொடர்பு உள்ளவர்கள், நண்பர்கள் வட்டம் உள்ளவர்கள், வாசிக்கும் பழக்கமுள்ளவர்களாக இருக்கும் முதியவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்.ஆனால் அதிகாரமாக இருந்துவிட்டு, முதுமையில் தனிமைப்பட்டுப்போகும் முதியவர்களின் தனிமை கொடுமை. முதியவர்களை நன்றாக கவனித்துக்கொள்ளும் நாடுகள் என ஒரு பட்டியல் உலக அளவில் போட்டிருக்கின்றார்கள். அதில் கடைசியில் இருந்து 3 வது அல்லது 4-வது இடத்தில்தான் இந்தியா இருக்கிறது. மிக நுணுக்கமாக முதியவர்களின் தனிமையை இந்தக் கதை கூறுகிறது. வெறும் சட்டத்தினால் மட்டும் முதியவர்களின் தனிமையை சரிபடுத்திவிடமுடியாது. இன்றைக்கு சட்டம் இருக்கிறது. கவனிக்காத மகனை, மகளைப் பற்றிக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று. ஆனால் எத்தனை பெற்றோர்கள் நம் நாட்டில் அப்படிப் புகார் கொடுப்பார்கள்? ஆயிரத்தில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். தனியாய்க் கிடந்து மருந்தைக் குடித்து செத்தாலும் சாவார்களே தவிர புகார் அளிக்கமாட்டார்கள்.. எவ்வளவுதான் ஒதுக்கப்பட்டாலும் முதியவர்கள் வீட்டிலிருந்து ஒதுங்க விரும்புவதில்லை. புறாக்கள் தனது குஞ்சுகளை பிரித்து தனித்து போ எனச்சொல்கின்றன, அல்லது தாங்கள் தனித்து போய்விடுகின்றன. ஆனால் அப்பாக்கள் அப்படி இல்லை. இப்படி மிக நுட்பமாக மூத்தவர்களின் பிரச்சனையை சொல்லியிருக்கும் கதையாக இந்தத் தொகுப்பில் உள்ள ;புறாக்காரர் வீடு ' என்னும் கதை இருக்கிறது. இந்தக் கதையைச்சொல்லியிருக்கும் பாங்கு, மொழி நன்றாக உள்ளது.

அதனைப் போலவே 'முதல் தாயம் ' என்னும் சிறுகதை பொறியியல் படித்து முடித்து வேலையைத் தேடும் ஒரு இளைஞனைப் பேசுகிறது. 'முழுதாய் பத்து மணி நேரம் கரைந்திருந்தது அவன் அந்த அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து' என்று ஆரம்பிக்கும் கதை ஒரு பன்னாட்டு தொழில் நிறுவனத்தில் தொழில் நுட்ப தேர்வுக்காக நிற்கும் அவனின் மன ஓட்டத்தைப்பேசுகிறது. கல்லூரியில் படிக்கும்போதே , வளாகத்தேர்வுகளில் தான் ஏன் தேர்வாகவில்லை என்னும் கேள்வி இன்றுவரை அவனுக்கு தொக்கி நிற்கிறது. பள்ளிப் படிப்பு முடித்து பொறியியல் படிக்கும் அவனை  அவனது குடும்பமே நம்பி நிற்கும் வேலையில் வளாகத்தேர்வுகளில் அனைத்துக்கட்டங்களிலும் தேர்வு பெற்று , ஆனால் நேர்முகத்தேர்வின் முடிவில் தேர்ந்தெடுக்கப்படாமல் போனது ஏன் என்பது புரியாமல் போனாலும் வேலை கிடைக்கும் என்னும் நம்பிக்கையோடுதான் கல்லூரி நாட்கள் நகர்கின்றன. ஆனால் கல்லூரியை முடித்து வெளியே வந்ததும் வேலைக்காக ஒவ்வொரு அலுவலகமாக ஏறி ஏறி இறங்கி சோர்ந்து போகிறான். வளாகத் தேர்வுகளில் மயிரிழையில் தவற விட்ட வாய்ப்புகள் கொடுங்கனவாய்த் துரத்துகின்றன, தன்னுடன் படித்த ஆனால் வளாகத்தேர்வில் வெற்றி பெற்ற நண்பர்கள் மேல் பொறாமை படத்தோன்றுகிறது.தொடர்ந்து தோன்றும் உணர்வுகளை ' இயலாமை வெறுப்பாய் மாறியபோது ,மெளனம் மிகப்பெரிய தடுப்புச்சுவராய்  மாறி உள்ளெரியும் தீயை மறைத்துக்கொள்ள உதவியது. கொடும்பசியில் தூங்குகின்றவனை தட்டி எழுப்பி , ' இன்று உனக்கு உணவு இல்லை, படுத்துறங்கு !" என்று கூறிச்செல்லும் அசரிரியாய்த்தான் ஒவ்வொரு நேர்முகத்தேர்வும் இருந்தது. பகல் வேளையில் தனியனாய் அறையில் அமர்ந்திருக்கும் போது பெருங்குரலெடுத்துக் கத்தி, சுற்றி சுற்றி கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கும் கடவுளை பளாரென கன்னத்தில் அறையத் தோன்றும் " என வேலை இல்லாமல் இருக்கும் நிலையை கதாசிரியர் விவரித்துச்செல்கின்றார். முடிவில் பத்து மணி நேரம் காத்திருந்த பன்னாட்டு நிறுவனத்தில் தொழில் நுட்பத்தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் பேரில் இவனது பெயரும் இருக்கிறது. பணி நியமன ஆணை கையில் கிடைக்கிறது. 'பணியானைப் பெற்றுக்கொள்ள எழுகையில் ,தரையில் அவனது கால் அழுத்தமாகப் பதிந்தது. ஆட்டத்திற்கான முதல் தாயம் விழுந்து விட்டது. பயணம் துவங்கியது " என  முதல் தாயம் கதை முடிகிறது.

தாயம் விளையாட்டைப் போலத்தான் வாழ்க்கை விளையாட்டும் இருக்கிறது. முதல் தாயம் போட்டுவிட்டவர்கள் , காய்களை நகர்த்திக்கொண்டு உள்ளே போய்க்கொண்டிருக்க, இன்னும் முதல் தாயம் போடாதவர்கள் தாயம் விழு , தாயம் விழு என மனதிற்குள் சொல்லிக்கொண்டே தாயம் விளையாடுவதைப்போல, உடன் படித்தவர்கள் வளாகத்தேர்வில் வெற்றிபெற்று அடுத்த ,அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து சென்று கொண்டிருக்க வேலை கிடைக்குமா , வேலை கிடைக்குமா என்று வேலை தேடி அலைவதை முதல் தாயம் விழு, விழு எனச்சொல்லிக்கொண்டே விளையாடுவதைப்போன்றது என்று ஒப்பிடுகின்றார். நல்ல ஒப்பீடு. மனதில் நிற்கும் சிறுகதை.  .

               அதேபோல 'மழை வரும் பருவம் ' என்னும் கதை. ஒரு கொடுமையான அனுபவம். கல்லூரியில் படிக்கும் நண்பன். அந்த நண்பனின் அம்மா இறந்துபோனதாக செய்தி வருகிறது. அம்மாவின் இறப்பிற்குச்செல்லும் நண்பனோடு உடன் செல்லும் நண்பனின் அனுபவமாக இந்தக் கதை அமைகின்றது. வண்டியில் செல்லும் போது எதுவுமே பேசாமல் இறுக்கமாக வரும் நண்பன், எதைக் கேட்டாலும் விட்டேத்தியாக பதில் சொல்லும் நண்பன், நண்பனின் அம்மா எப்படி நண்பனை வளர்த்தார்கள் என்பதெல்லாம் மிக விளக்கமாக இந்தக் கதையில் எழுதப்பட்டுள்ளது. அதிலும் நண்பனின் அப்பா, நண்பன் அம்மாவின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே இறந்து விட, கண்வனின் இறப்பிற்காக கூடும் கூட்டத்தில் 'நான் சொல்ல ஒரு செய்தி இருக்கிறது ' என்று சொல்லி நெல்லுமணியின் மூலம் தான் கர்ப்பமாக இருப்பதைச்சொல்வதாக கதை நகர்கிறது. எழுத்தாளர் தொ.பரமசிவம் , தனது 'அறியப்படாத தமிழகம்' என்னும் நூலில் , கர்ப்பமாக இருக்கும் நிகழ்வை, கணவன் இறந்துவிட்ட நிலையில் நெல் மணிகள் மூலமாக  ஊர்மக்களுக்கு மனைவி தெரிவிக்கும் நிகழ்வைக் குறிப்பிடுவார். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இக்கதையில் வருகின்றது. துக்கத்தை அடைத்துவைத்துக்கொண்டே வந்த நண்பன் தனது அம்மாவின் பிணத்தைப் பார்த்ததும் உடைந்து போய் அழுவதை பாலகுமார் தனக்கே உரித்தான நடையில் விவரித்துச்செல்கிறார். மிக  ஆழமான கதை. துன்பங்களை அடைத்து வைத்துக்கொண்டிருக்கும் பலர் அதனை வெளிக்காட்டிக்கொள்வதில்லை, மழை வருவதற்கு முன்னால் மேகங்கள் கூடுவதுபோல கூடிக்கொண்டே வரும் துன்பம் ஒரு கட்டத்தில் கண்ணீராய், அழுகையாய் மழையென கொட்டுகிறது என்பதனை விவரித்துச்செல்கின்றார்.

               பாலகுமார் விஜயகுமார் என்னும் எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பான 'புறாக்காரர் வீடு ' நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருகின்ற புத்தகம் . நீங்களும் வாங்கி வாசித்துப்பாருங்கள்.
 புத்தகத்தின் தலைப்பு 'புறாக்காரர் வீடு ' .புறாக்காரர் வீடு என்னும் இந்தப்புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு .இதன் ஆசிரியர் பாலகுமார் விஜயராமன். நூல் வனம்  பதிப்பகத்தால் ஜீன் 2016-ல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 128 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தின் விலை ரூ 80 ஆகும்

                         ***************************************************

. நூல் விமர்சனத்திற்காக என்னால் தயாரிக்கப்பட்டு, என் குரலில் ஒலிபரப்பானது. மதுரை அகில இந்திய வானொலிக்கு எனது நன்றிகள். வா.நேரு

Monday 20 February 2017

மூளை தானம் கோரும் விஞ்ஞானிகள்

மூளை தானம் கோரும் விஞ்ஞானிகள் - காணொளி

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஒருவர் இறந்த பிறகு அவரது மூளையை மருத்துவ ஆய்வுகளுக்கு தானமாக தந்து உதவுமாறு விஞ்ஞானிகள் கேட்கிறார்கள்.
குறிப்பாக மன அழுத்தம் மற்றும் விபத்தின் பின்னரான மன உளைச்சல் ஆகியவை குறித்த புதிய சிகிச்சைகளுக்கான ஆய்வுகளுக்காக அதிக மூளைகள் தேவைப்படுகின்றன.
இவை குறித்த மேலதிக தகவலுக்காக பொஸ்டனில் உள்ள மூளை வங்கிக்கு பிபிசி குழு சென்றது.

http://www.bbc.com/tamil/global-39031130
நன்றி : பி.பி.சி. 20.02.2017
குருதிக்கொடை,கண் கொடை,  உடல் கொடை என்பதற்கு அடுத்தகட்டமாக உடல் மூளை நன்கொடை பற்றிய பி.பி.சியின் செய்தி இது. நரம்பியல் மற்றும் குணம் சம்பந்தமான புதிர்களைத் தீர்க்க இந்த மூளைக் கொடை உதவும் என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கின்றார்கள். தமிழ் நாட்டில் மூளை நன்கொடைத் தனியாகக் கொடுக்கவேண்டுமா அல்லது உடல் கொடையிலியே தனியாக மூளையை எடுத்துக்கொள்ளலாமா என்பது தெரியவில்லை......தெரிந்தவர்கள் விவரிக்கலாம். 

Saturday 18 February 2017

அண்மையில் படித்த புத்தகம் : ' எங்கேயும் எப்போதும் ' சிறுகதைத் தொகுப்பு




இன்று நாம் காண இருக்கின்ற புத்தகத்தின் தலைப்பு " எங்கேயும் எப்போதும் " . இதன் ஆசிரியர் பொள்ளாச்சி அபி. 'ஒரு துளிக்கவிதை' புதுச்சேரி வெளியீடு. கவிஞர் ஈரோடு தமிழன்பன் பிறந்த நாள் வெளியீடாக வெளியிட்ட நாள் 25.10.2016,  232 பக்கங்கள் உள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ 160

'எங்கேயும் எப்போதும் ' இன்னும் இந்தப்புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு. இதன் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி தனது என்னுரையில் ' வணக்கம் தோழர்களே ' என ஆரம்பித்து இது தனது முதல் சிறுகதைத் தொகுப்பு என்பதனைக்கூறுகின்றார்.  தொடர்ந்து ' அன்றாடம் சந்திக்கின்ற ,கேள்விப்படுகின்ற, வாசிக்கின்ற சில அனுபவங்களுக்கு முன்னும் பின்னும் இருப்பவற்றை- இருந்தவற்றையே சிறுகதைகளாக எழுதுகிறோம் என எல்லோரும் சொல்வதைத்தான் நானும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
அந்த வகையில் , இந்தக் கதைகள் எல்லாமே நீங்கள் தந்ததுதான். அதனைப் பதிவு செய்தது மட்டுமே நானாக இருக்கிறேன். முடிந்தவரை புனைவுகளைத் தவிர்த்து எதார்த்தத்தில் என்னவெல்லாம் நடந்ததோ அதனைப் பெரும்பாலும் அப்படியே தந்திருக்கிறேன் ' எனக் குறிப்பிடுகின்றார். இந்தச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள 27 கதைகளையும் படித்து முடித்தபிறகு பொள்ளாச்சி அபியின் கதைகள் அனைத்தும் நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை இலக்கிய விவரிப்புகளோடு காண்கின்ற காட்சியாகத்தான் தென்படுகிறது.எதுவுமே வானத்திலிருந்து குதித்து எழுதிய கதையாகத் தெரியவில்லை.

'எங்கேயும் எப்போதும் ' என்னும் இந்தச்சிறுகதை தொகுப்பு நூலுக்கு புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ அவர்கள் அணிந்துரை அளித்துள்ளார். அவர் தனது அணிந்துரையில் 'இலக்கிய வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான் .கவிதைகளை நேசிப்பது, வாசிப்பது என்பதைவிட ஒரு பிடி கூடுதலாகத்தான் நான் சிறுகதையை நேசிக்கிறேன். வாசிக்கிறேன். புதுமைப்பித்தனை, அழகிரிசாமியை, மெளனியை,ஜெயகாந்தனை, பிரபஞ்சனை வாசிப்பதுபோலவே இன்றைய புதிய சிறுகதை ஆசிரியர்களையும்  நான் வாசிக்கிறேன்.

செய் நேர்த்தியில் வேறுபாடுகள் தெரிந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.
சிறுகதைகளில் மட்டும் அப்படி என்ன ஈர்ப்பு ?        

 தேனீக்கள் எல்லைகள் கடந்து மலர்க் கூட்டங்களைத் தேடி,நாடித் துளித்துளிகளாய் மலர்களில் உள்ள இனிப்புச் சுரப்பை உறிஞ்சி வயிற்றில் சுமந்து,கூட்டுக்கு வந்ததும் ஆற அமர வயிற்றிலே சில பல வேதிமாற்றங்களைச் செய்து,அந்த இனிப்பைத் தேனாக்கிச் சேமித்துத் தருகிறதே,அப்படித்தான் சிறுகதை ஆசிரியர்களும்.வாழ்க்கை அவர்களின் படைப்பில்,படைப்பாற்றலில் வேதி மாற்றமடைந்து அழியாத கலையாகிறது;இலக்கியமாகிறது.

       சிறுகதை என்பது சிறிய கதை இல்லை.சின்னதாய்க் கதை சொல்வதால் அது சிறுகதை ஆவதில்லை.கதைகள் வேறு இது வேறு.வாழ்க்கையின் ஒரு பகுதி,உணர்வோட்டத்தின் ஒரு துணுக்கு,கதாபாத்திரங்களினுடனான கணநேரத் தீண்டலின் சிலிர்ப்பு இவற்றில் ஏதோவொன்றோ அல்லது இதுபோன்ற பிறிதொன்றோ படைப்பாளியின் எழுத்தாற்றலால் நம் மனமேடையில் நடத்தும் நாடகமே சிறுகதை.

       சிறுகதை ஆசிரியன் பேராற்றலோடு சுழித்தோடும் வாழ்க்கை என்னும் ஆற்றின் ஒரு கரையில் இறங்கி வாசகர்களின் கழுத்தைப் பிடித்து ஓடும் ஆற்று நீரில் சில கணங்கள் முக்கி எடுத்து விடுகிறான்.

முங்கி எழுந்த வாசகர்களாகிய நமக்கோ அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே கொஞ்ச நேரம் பிடிக்கிறது.உள்ளே முங்கியிருந்த கணத்தில் வந்து மோதிய ஆற்று நீரின் வேகம்,குளிர்ச்சி,வாசம்,சுவை இவைகளெல்லாம் நினைவில் மீண்டும் மீண்டும் அலை அலையாய் வந்து மோதி நம்மைப் பரவசப்படுத்துகின்றன.ஆறு எங்கே தொடங்கியது? எங்கே முடியப் போகிறது? எதுவும் நமக்குத் தெரியாது;நமக்கு அதைப் பற்றிக் கவலையுமில்லை.

       நீரில் முங்கிய நேரத்தில் கடந்துபோன ஆற்றுப் பெருக்கைத்தான் நமக்குத் தெரியும்.நம் உறவு அதனோடுதான்.அது தந்த அதிர்ச்சி,சிலிர்ப்பு,மகிழ்ச்சி,பரவசம் இவை தாம் நமக்கு முக்கியம்.சிறுகதைகளும் அப்படித்தான்.நண்பர் பொள்ளாச்சி அபியின் சிறுகதைகளும்  சற்றேறக்குறைய அதைத்தான் செய்கின்றன.


                                               

       பொள்ளாச்சி அபியின் "எங்கேயும் எப்போதும்" சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் இருபத்தேழு சிறுகதைகள் உள்ளன.பெரும்பாலான சிறுகதைகள்,அவரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்தே சிறுகதை வடிவம் பெற்றிருக்கின்றன என்று ஊகிக்க முடிகிறது.எழுத்தாளர் அபியின் சிறுகதைகளுக்கான படைப்புலகம் மிக விரிந்தது.அவருடைய கதைகளின் மைய அச்சு உயிர் இரக்கம்.அபியின் உயிர் இரக்கச் சிந்தனை மனித நேயத்திற்கும் மேலானது.வள்ளலாரின் ஜீவகாருண்யச் சிந்தனையை ஒத்தது.இவரின் சிறுகதைகள் மனிதர்கள் மீதான கரிசனத்தோடு மட்டும் நின்று விடவில்லை.சிட்டுக் குருவிகள்,யானை,நாய்,புளியமரம் என்று உலகின் அனைத்து உயிர்களின் வதை மற்றும் வாதைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றது.உயிர் இரக்கம் என்கிற மைய அச்சினைச் சுற்றியே அவரின் கதைகள் இயங்குகின்றன.  " எனக்குறிப்பிட்டு தனது அணிந்துரையை கொடுத்துள்ளார். உண்மைதான், இந்தத் தொகுப்பின் மையக்க்ருத்தோட்டம் மனித நேயமும் ,உயிர்கள் நேயமும் எனத்தான் சொல்லத்தோன்றுகிறது.

                     இந்தத் தொகுப்பில் 'மெய்ப்பொருள் காண்பது அறிவு ' என்னும் சிறுகதை உள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையம். விமானத்திலிருந்து இறங்கி வெளியே வரும் பயணி சண்முகம், அவரைச்சுற்றி வாடகைக்கு கார் வேண்டுமா எனும் பல குரல்கள், அந்தக்குரல்களில் மிகப்பாவமாக இருக்கும் ஒரு ஓட்டுநரின் காரில் ஏறிக்கொள்ளும் சண்முகம், அந்தக் கார் என்ன வகைக் கார் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஏறிய சண்முகத்திடம், ஓட்டுநர் பேச ஆரம்பிக்கின்றார். ஓட்டுநர்  பாடல் கேட்கிறீர்களா ? எனக்கேட்க , சண்முகம் தன்னிடம் இருக்கும் பென் டிரைவைக் கொடுத்து அதனைப் போடச்சொல்கின்றார். பென் டிரைவ் -லிருந்து பறை இசை கேட்கிறது. அந்த இசை எழுவதை, ஒலிப்பதை மிக நுணுக்கமாக நூலின் ஆசிரியர் விவரித்துச்செல்கிறார். முடிவில் பலர் கைதட்டுவதும் , பாராட்டுவதும் கேட்கிறது. கார் ஓட்டுநர் ," இசை நமது இசை, பாராட்டுவது வெள்ளைக்காரர்கள் குரல்போல இருக்கிறதே " எனக் கேட்கிறார். ஆமாம் , லண்டனில் சென்று இசை வாசித்தேன். வெள்ளைக்காரர்கள்தான் பாராட்டினார்கள் என சண்முகம் சொல்கின்றார். பேசிக்கொண்டே வரும்போது சண்முகம் இறங்க வேண்டிய கிராமம் வருகிறது. முன்னாடியே இறங்கிக்கொள்கிறேன் என்று சண்முகம் சொல்ல , இல்லை சார் நான் ஊருக்குள்ளேயே வந்து இறக்கி விடுகின்றேன், நானும் ஒரு தேனீர் குடித்து செல்கிறேன் என்று சொன்ன ஓட்டுநர் ஊருக்குள் இருக்கும் ஒரு தேனீர்கடைக்கு முன்னால் நிறுத்துகின்றார். அப்போது ஒரு இறுக்கமான முகத்தோடு சண்முகம் இருக்கின்றார். கார் ஓட்டுநர் தேநீர்கடையில் தேநீர் கேட்க, பிளாஸ்டிக் கப்புகளில் தேநீர் தரப்படுகிறது. சூடாக இருக்கும் தேநீரை பிளாஸ்டிக் கப்பில் குடிக்க அல்லல்படும் கார் ஓட்டுநர் கடைக்கு உள்ளே அமர்ந்திருப்பவர்கள் சிலர் சில்வர் டம்பளர்களில் தேநீர் குடிப்பதைப் பார்க்கின்றார். இவர்களைப் போல இன்னும் சிலர் கடைக்கு வெளியே நின்று பிளாஸ்டிக் கப்புகளில் தேநீர் குடிப்பதைப் பார்க்கின்றார். ஏதோ புரிய சண்முகத்தை கார் ஓட்டுநர் பார்க்கின்றார். சண்முகத்தின் கண்களில் நீர் கோர்த்து நிற்கிறது. இதுதான் கதை. மிக நுட்பமாக சில கிராமங்களில் இன்றைக்கும் நிலவும் சாதிக் கொடுமையை, இரட்டை டம்ளர் முறையை விவரிக்கும் கதை. லண்டனில் சென்று நீ இசைக்காகப் பரிசு வாங்கி வந்தாலும் , எங்கள் கிராமத்தைப் பொறுத்தவரை உனக்குத் தனி டம்ளர்தான் என்ற மனப்பான்மை கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றிச்சொல்லும் கதை.

            இந்தத் தொகுப்பின் தலைப்பாக அமைந்திருக்கும் 'எங்கேயும் எப்போதும் ' என்னும் சிறுகதை ஜனவரி மாதம் 4ந்தேதி 2015-ல் மூன்று நாடுகளில் நடக்கும் மூன்று வகையான நிகழ்வுகளை நமக்குத் தருகின்றது. நியூயார்க் நகரில் தனது காதலனோடு சண்டையிடும் சாரா, இலங்கை யாழ்ப்பாணத்தில் அரேபியா நாட்டிற்கு தனது பெண் ரிசானைவை  வேலைக்கு அனுப்பிவிட்டு ஒரு வருசம் முடியட்டும் என்று காத்திருக்கும் அவரது பெற்றோர் பசீர், பாத்திமா, இந்தியாவில் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் இருக்கும் இசக்கியம்மாவின் பத்தாவது படிக்கும் மகள் செல்வி, கழிப்பறை இல்லாத காரணத்தால் கிராமத்தை ஒட்டி இருக்கும் காட்டுக்குள் செல்கின்றாள் என மூன்று பேரை விவரித்து விட்டு முடிவுரையாக  2015-ஜனவரி 5 என்று தேதியிட்டு நியூயார்க் சர்ச்சு வளாகத்திலும், சவூதியில் ஒரு அரேபியன் வீட்டிலும், தமிழக கிராமம் ஒன்றின் சாலையோரக்கோவில் அருகிலும், சித்திரவதை செய்யப்பட்டு, கற்பழித்துக்கொலை செய்யப்பட்டதாக அன்றைக்கு வெளியாகியிருந்த அந்தந்த நாட்டு தினசரி செய்தித்தாள்களில் , தொலைக்காட்சிகளில் பெண்களின் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகியிருந்தன. " கடவுளே ....உனக்கு இரக்கம் என்பதே இல்லையா ...? என்று எங்கேயும் எப்போதும் நிறைந்திருக்கும் அவரவர்களின் கடவுளை எண்ணி மனதுக்குள் அங்கலாய்த்துக்கொண்டே , அந்தந்த நாட்டு மக்கள் படித்துக்கொண்டும் பார்த்துக்கொண்டுமிருந்தனர் " என்று முடியும் இந்தச்சிறுகதை மிக அழுத்தமாக எங்கும், எந்த நாட்டிலும், எந்த இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதனை மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

             யானைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளில் வருகின்றன என்று செய்தித்தாள்களில் படிக்கின்றோம். யானைகள் இருக்கும் இடத்தில் நாம் போய் குடியிருப்புக்களைக் கட்டிக்கொண்டு வசிக்கின்றோம். பின்பு யானைகளைத் துரத்துகிறோம். யானை தன் நிலையிலிருந்து சொல்லும் கதையான 'நீயே சொல்லு சார்'  யானைகள் தங்கள் தரப்பு நியாயத்தை மனிதர்களிடம் பேசுவதாக அமைந்த கதை. அதனைப் போல வெட்டப்படும் மரங்களால் பூமியில் சுற்றுச்சூழல் மாறுகிறது.ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுகிறது. அடுத்தடுத்த சந்திதிகளுக்கு உயிர்வாயு கிடைக்குமா என்னும் கேள்வி எழுகிறது. புளியமரம் ஒன்று தனது சொந்தக்கதையை, சோகக்கதையைப் பேசும் ' இதுதான் விதியா ? " என்னும் கதை மனிதர்கள் பேசுவது போல பேசிக்கோண்டே சென்று கடைசியில் புளியமரம் சொல்வதாக முடிகின்றது. 'சுத்தம் ' என்னும் சிறுகதை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு இன்றைய எதார்த்தத்தைப் பேசுகிறது. நல்ல நையாண்டித்தனம் நிறைந்த வார்த்தகளால் ஆன கதை. வங்கிகளின் மாறுபட்ட முகங்களைக் காட்டும் ' நமக்கும் தெரிந்த முகங்கள் ' நாம் அனைவரும் வாசித்து பார்த்து உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டிய கதை.

" இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளின் முழுமை என்பது அதன் அரசியல் பார்வையோடு தொடர்புடையது. கதையின் ஊடாக வெளிப்படும் படைப்பாளியின் சமூக விமர்சனங்களும் எதிர்க்குரல்களுமே இத்தொகுதியின் தனித்த அடையாளம் . அபியின் பெரும்பாலான கதைகள் எந்த அரசியலையும் தனித்த அடையாளங்களோடு உரத்த குரலில் பேசுவதில்லை. மாறாக எல்லாக்கதைகளின் ஊடாகவும் இழையோடும் நுண் அரசியலோடு இத்தொகுப்பு இயங்குகின்றது." என பேரா.இளங்கோவன் சொல்வதைப்போல இந்தத் தொகுப்பு இலக்கியத்தின் வழியான ஒரு கலகக்குரலாகவே வாசிக்க இயலுகிறது. நீங்களும் வாசித்துப்பாருங்கள் .புத்தகத்தின் தலைப்பு " எங்கேயும் எப்போதும் " . இதன் ஆசிரியர் பொள்ளாச்சி அபி. 'ஒரு துளிக்கவிதை' புதுச்சேரி வெளியீடு. கவிஞர் ஈரோடு தமிழன்பன் பிறந்த நாள் வெளியீடாக வெளியிட்ட நாள் 25.10.2016,  232 பக்கங்கள் உள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ 160 .

18.02.2017 காலை 7-05 மணிக்கு மதுரை வானொலியில் நூல் விமர்சனம் பகுதியில் முனைவர் வா.நேரு-வின் குரலில், அவரால் தயாரிக்கப்பட்டு , ஒலிபரப்பபட்டதன் எழுத்து வடிவம்.
நன்றி : அகில இந்திய வானொலி, மதுரை .


Tuesday 14 February 2017

மதுரை விடுதலை வாசகர் வட்டம் .....

மதுரை, பிப். 14- 11.2.2017 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் அய்ம்பதாவது நிகழ்ச் சிக்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் பொ. நடராசன் (பணி நிறைவு நீதிபதி) தலைமை தாங்கினார்.
வந்திருந்தோரை தனராஜ் (தலைமை ஆசிரியர் பணி நிறைவு) வரவேற்று உரையாற்றினார். அடுத்து பேசிய பா. சடகோபன் அவர்கள் இலக்கியம் பற்றிய பெரியாரின் கருத்துக்களை தெளிவுபட எடுத்து விளக்கினார்.



அண்ணாவின் நினைவலைகள் என்ற தலைப்பில் பேசிய துரை எழில் விழி யன் (திராவிட முன்னேறக் கழகம்) அண்ணா அவர்களின் அரசியல் வாழ் வில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 1957இல்  தந்தை பெரியார் அவர்களை கைது செய்ய சட்ட மன்றத்தில் சட்டம் ஒன்று கொண்டுவர சி. சுப்பாராமனின் அவர்கள் முயற்சித்த போது அண்ணா அவர்களின் எதிர்ப்பு உரையை அழகாக எடுத்துக்காட்டினார்.


1962இல் பொது தேர்தலின் போது காஞ்சிபுரம் தொகுதியில் பேருந்து அதிபர் நடேசன் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டபோது அண்ணாவைப் பற்றிய அவதூறான வார்த்தைகளால் எழுதிய விளம்பரப் பலகை வைத்தபோது கழகத் தினர் அனைவரும் கொதித்தெழுந்த நிலையில், அண்ணா அவர்கள் அந்த விளம்பரப் பலகையின் கீழே தன் செல வில் பெட்ரோ மாக்ஸ் விளக்கு வைக் கும்படி கூறியதை நினைவூட்டி அரசியல் நாகரிகத்தை அண்ணா அவர்கள் பேணிக் காத்ததை பெருமையுடன் விளக்கினார்.


1967இல்  திராவிட முன்னேற்ற கழகம் முதன் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியபோது அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களை சந்திக்க சென்றதையும் பெரியார் அவர்கள் அது பற்றி விவரிக்கும் போது “அண்ணாவை யும் தி.மு.க. வையும் இதுவரை மிச்ச மீதம் இல்லாமல் திட்டித் தீர்த்தேன், இந்நிலையில் அவர்கள் என்னை சந்திக்க வந்தபோது புது மணப்பெண் போல வெட்கப்பட் டேன்” என்று 3.6.1967 விடுதலையில் பெரியார் அவர்கள் எழுதியதை சுட்டிக் காட்டினார்.


அண்ணா அவர்கள் இறுதிக்காலத்தில் தனது ஆட்சியில், 1. சுயமரியாதை திரு மணச் சட்டம், 2. தமிழ்நாடு பெயர் மாற்றம், 3.இருமொழிக்கொள்கை ஆகிய வற்றிற்கான சட்டங்கள் இயற்றியதையும் இவற்றை இனி வருங்காலத்தில் எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது என்று பெருமித்ததோடு அண்ணா கூறியதை நினைவூட்டினார்.
சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த விநாயகம் அவர்கள் “உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன ” என்று கூறியபோது அண்ணா அவர்கள் “எனது அடிகள் அளந்து எடுத்து வைக்கப்படுகின்றன ” என்று அதிக பொருள் கொண்ட பதிலை அழுத்தமாக கூறியதை அழகுற விளக்கினார். விடுதலை வாசகர் வட்டத்தின் அய்ம்பதாவது நிகழ்ச்சி என் பதை முன்னிட்டு அனைவர்க்கும் தேநீர் வழங்கப்பட்டது. இறுதியில் விடுதலை வாசகர் வட்டத்தின் அமைப்பாளர் மா.பவுன்ராசா நன்றி கூறினார்.


நன்றி : விடுதலை 14.02.2017


Sunday 12 February 2017

அவன் தோரணையும் இறுமாப்பும்.....



அலுவலக
உணவுக்கூடம்
எப்போதும்
களை கட்டும்

அணி அணியாய்ப்
பிரிந்து நின்று
அரசியல் பேசும்...

நெற்றி நிறைப்
பட்டை
வயது முதிர்
பெருசுகளின்
அசிங்கப்பேச்சுகளால்
சில நேரம்
வாயில் இடும்
உணவு கூட
வாந்தியாய்
வெளியில் வரும்.....

நற்செய்திக்
கூட்டங்களின்
நாயகரின்
அழுக்குப்பேச்சுகள்
மனதுக்குள் எப்போதும்
காமத்தை
சுமந்தலையும்
'பிராய்டின்'
தத்துவத்தை
நினைவுபடுத்தும்..


உணவுக்கூடம்
உடன் உண்ணுபவனுக்கு
சில நேரம்
மருத்துவம் சொல்லும்...
பலரின் மகத்துவம்
சொல்லும் .....
இன்னும் இன்னும்
எழுத்தில் எழுத
முடியாத எது எதுவோ
பகிரப்படும்..........

எப்போதும்
ஒரே கட்சியாய் நின்று
எதிர்க்கட்சிகளின்
கேள்விகளுக்கு
இடக்கு மடக்காய்
பதில் சொல்லும்
இருவரும் அன்று
தங்களுக்குள்
சண்டை இட்டுக்
கொண்டிருந்தனர்.....

யார் பெரியவர்கள்?
ஊழலில்...
வாரிசு அரசியலில்...
திடீரெனத் தாங்கள்
வரித்துக்கொண்ட
தலைமைக்கு ஆதரவாய்
நெருப்பென வார்த்தைகளை
கொட்டித் தீர்த்துக்கொண்டனர்....

பூனைகளுக்கு
அப்பம் பகிர்ந்தளித்த
குரங்கு போல
பல இலட்சம்
சட்டையணியும்
தலைவரின் தொண்டன்
அமைதியாய்ப் பார்த்து
ரசித்து
சிரித்துக்கொண்டிருந்தான்

சின்ன ரவுடிகளை
மோதவிட்டு
வேடிக்கை பார்க்கும்
பெரிய ரவுடியென
அவன் தோரணையும்
இறுமாப்பும்.....

உணவுக்கூடமே
திடீரென
கற்றுத்தரும்
பள்ளிக்கூடமாய்.....

                                          வா.நேரு, 13.02.2017


குரங்கிலிருந்து வளர்ந்து வந்த மனுசங்கடா.......

உலகத்தின் போக்கையே மாற்றியமைத்த அறிவியல் அறிஞர் சார்ல்ஸ் ராபர்ட் டார்வின்(Charles Robert Darwin) அவர்களின் பிறந்த நாள்(பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) இன்று . 1809 ஆம் ஆண்டு பிறந்தவர். இன்று 2017,பிப்ரவர் 12. ஏறத்தாழ 208 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தவர். அன்றைய கால கட்டத்தில் இருந்த உலகம் பற்றி இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. மன்னர்களின், நாடுகளின் வரலாற்றைப் படிப்பதுபோலவே  பகுத்தறிவு அடிப்படையிலான உலக வரலாறு என்று ஒன்று எழுதப்பட்டால் அதில் மிக முக்கியமான வரலாறு  சார்ல்ஸ் ராபர்ட் டார்வின் அவர்களுடைய வரலாறாக இருக்கும். அதுவரையில் உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்றுதான் அனைவரும் நம்பினார்கள். அதிலும் உலகத்தில் உள்ள உயிரினங்கள் எந்த எந்த தோற்றத்தில் உள்ளனவோ அதே தோற்றத்தில் கடவுளால் படைக்கப்பட்டவை என்று நம்பினார்கள். இன்றைக்கும் கூட அப்படி நம்புவர்கள் உண்டு.ஆனால் அப்படி நம்பக்கூடியவர்கள் உலகம் முழுவதும் எடுத்துக்கொண்டால் 10 சதவீதம் கூடத்தேறாது. ஆனால் அன்றைக்கு 100-க்கு நூறு சதவீதம் உலகத்தில் உள்ள உயிர்னங்கள் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது என்று நம்பிய நேரத்தில் தனது அறிவியல் அடிப்படையிலான ஆராய்ச்சி முடிவால் அந்த நம்பிக்கையைத் தகர்த்தவர் சார்லஸ் ராபர்ட் டார்வின் அவர்கள்..

டார்வின் அவர்களின் ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக இன்றளவும் அறிவியலில் ஏற்படும் மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. இருதய வால்வு மாற்றங்களில் மனிதர்களின் இருதய வால்வுக்குப் பதிலாக அறுவை சிகிச்சையின் மூலம் பன்றியின் இருதய வால்வுகள் பொருத்தப்படுகின்றன. பன்றி கொடுக்கும் உடல் உறுப்பு நன்கொடையால் மனிதர்களின் வாழ்வு நீடிக்கின்றது. மரபியல்  அறிவியல் , உலகம் முழுவதும் இருக்கும் மனிதர்களின் மூதாதையர்களின் தொடர்ச்சியை கணினி மூலம் கண்டுபிடிக்க உதவுகிறது. 'நாங்கள் கடவுளின் முகத்தில் இருந்து பிறந்தவர்கள்' என்று பிதற்றிக்கொள்ளும் பேதமைக்கு எல்லாம் டார்வினின் கோட்பாடு முடிவுரை எழுதியிருக்கிறது.

1859-ஆம் ஆண்டு டார்வின் வெளியிட்ட புத்தகம் உலக நடப்பையே, சிந்தனையையே புரட்டிப்போட்ட புத்தகம். 'இயற்கைத் தேர்வு மூலமாக உயிர்னங்களின் தோற்றம் ' என்னும் அந்தப்புத்தகம் வெளியிட்ட நாளிலேயே 1000 பிரதிகள் விற்றுத்தீர்ந்தன என்று படிக்கும்போது வியப்பு ஏற்படுகிறது. இன்றைய நவீன கருவிகள் உலகில் வெளியிடும் நாளில் 100 புத்தகங்கள் விற்றாலே பெரிது என்று நினைக்கும் நிலையில் இப்படிப்பட்ட அறிவியல் தொடர்புகள் இல்லாத நிலையில் அவரின் புத்தகம் அப்படி ஒரு விற்பனையை ஏற்படுத்தியது என்றால் , அதனைப் பற்றிக்கேட்டவர்கள் எல்லாம் வாங்குவதற்கு ஓடியிருப்பார்கள் போலும் .'உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும் ,வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும், மற்றவை அழிந்து போகும் ' என்பது டார்வினின் கோட்பாடு. ஆனால் மனிதர்கள் நாம். வாழ்க்கைப்போராட்டத்தில் வலிமை இல்லாதவர்களும் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.டார்வின் தனது கொள்கையை வெளியிட்ட காலத்தில் அது மனிதனுக்குப் பொருந்தாது என்று மக்கள் நினைத்திருக்கின்றனர். விலங்குகளுக்கும் செடி, கொடிகளுக்கும் அது பொருந்தக்கூடும் என்று நினைத்திருக்கின்றனர். ஆனால் மனிதர்களுக்கும் அது பொருந்தும் என்று அறிவியல் அடிப்படையில் டார்வின் விவரித்தபோது மதவாதிகள் கண்டனம் தெரிவித்தனர். அன்று முதல் இன்றுவரை அவரது கோட்பாடு அறிவியல் உண்மை என்றாலும் மதவாதிகள் அந்தக்கோட்பாட்டை நம்ப மறுக்கின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்றளவும் டார்வின் கொள்கை பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை என்று கேள்விப்படுகிறோம்.

அறிவியல் அறிஞர்கள் உலகத்தை மாற்றியிருக்கிறார்கள். கண்டுபிடிப்புகளின் உதவியால் வாழ்க்கைத் தரத்தை மாற்றியிருக்கிறார்கள். டார்வின் அவர்களைப் பொறுத்தவரையில் உலகத்தின் நம்பிக்கையை மாற்றியவர். இந்தியாவைப் பொறுத்தவரையில் சாதிக்கொடுமைக்கும் அடிப்படையாக இருப்பது வர்ணாஸ்சிரமம் எனப்படும் சாதி அடுக்குமுறைத் தத்துவம். கடவுள் தன்னுடைய உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒவ்வொரு வர்ணத்தைப் படைத்தார் என்னும் அந்தத் தத்துவம்தான் இன்றைக்குவரைக்கும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளின் தத்துவமாக இருக்கிறது. அந்த அமைப்பைச்சார்ந்தவர்கள் இன்றைக்குவரைக்கும் 'சாதி ' வேண்டும் எனச்சொல்வதற்கு அவர்களின் கடவுள் நம்பிக்கையும் , அந்தக் கடவுளின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட சாதி அமைப்பு முறையால் உயர் ஜாதிக்காரர்களுக்கு கிடைத்த வாய்ப்புமே காரணம். அப்படிப்பட்டவர்கள் சார்ல்ஸ் டார்வினை ஆழமாகப் படிக்க வேண்டும். இன்றைக்கு வளர்ந்திருக்கும் மரபியல் அறிவியலைப் படிக்கவேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் சார்லஸ் இராபர்ட் டார்வின் கொள்கை ஜாதி முறையின் தோற்றத்தோடும் வளர்ச்சியோடும் இணைத்து பேசப்படவேண்டும்.அண்ணல் அம்பேத்கர் சுட்டிக்காட்டிய சமமில்லாத ஏணிப்படியிலான சாதி முறையைத் தகர்ப்பதற்கு டார்வின் கொள்கை பயன்படுத்தப்படவேண்டும். 'மனுசங்கடா, நாமெல்லாம் ஒரே மாதிரி குரங்கிலிருந்து வளர்ந்து வந்த மனுசங்கடா, இங்கே எங்கே வந்தது உசந்த சாதி, தாழ்ந்த சாதி, மனுசங்கடா நாமெல்லாம் ஒரே மாதிரி குரங்கிலிருந்து வளர்ந்து வந்த மனுசங்கடா' என்று பாடுவதற்கும் , அதனைப் பரப்புவதற்கும் டார்வின் கொள்கையைப் பயன்படுத்தவேண்டும்.

  சார்லஸ் இராபர்ட் டார்வின்  புகழ் என்றும் உலகில்  நிலைத்து நிற்கும். வாழ்க சார்ல்ஸ் ராபர்ட் டார்வின்....

வா.நேரு, 12.02.2017



Thursday 2 February 2017

சாதி முறையைத் தகர்க்க இயலுமா ?....

அண்மையில் படித்த புத்தகம்: சாதி முறையைத் தகர்க்க இயலுமா ?
ஆசிரியர்                          : டி.ஞானையா
வெளியீடு                        : விழிகள் பதிப்பகம், சென்னை-41
முதல் பதிப்பு                 : 2012 , 200 பக்கங்கள், விலை ரூ 150.

அண்மையில் ஒரு புத்தக்கத்தை வாங்குவதற்குமுன் அதன் அணிந்துரையைப் பார்த்தேன். திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏறத்தாழ 14 பக்கங்கள் அந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கியிருந்தார்கள். ஆசிரியர் அவர்களின் அணிந்துரை இத்தனை பக்கங்கள் அமைந்த புத்தகம் வேறு ஏதும் நான் பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தபின்புதான் அந்தப் புத்தகத்தின் முக்கியத்துவமும் ஆய்வும் எனக்குப் புரிந்தது, அந்தப் புத்தகத்தின் தலைப்பு "சாதி முறையைத் தகர்க்க இயலுமா ? " என்னும் புத்தகம் . அதன் ஆசிரியர் டி.ஞானையா.  அகில இந்திய அளவில் மிகப்பெரிய தொழிற்சங்கப்பொறுப்பில் இருந்தவர்.  இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம், அனைத்துப் பகுதிகளுக்கும் தொழிற்சங்கப்பணிகளுக்காக சென்று பணியாற்றியவர்.

                                                     எவர் படித்தாலும், ஏன் பார்ப்பனரே படித்தாலும் இந்தச்சாதி முறை என்பது எவ்வளவு கொடுமையானது, எப்படி இந்தச்சாதி முறை உருவாக்கப்பட்டது, எப்படி இந்தச்சாதி முறை நிலை நிறுத்தப்பட்டது, இன்றைக்கும் கூட அது ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறது, சாதி இன்னும் உயிரோடு இருப்பதற்கு என்ன காரணம், எப்படிப்பட்ட மன நிலை பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டது, அது ஏன் இன்னும் அனைத்து மக்களிடமும் படிந்து இருக்கின்றது  என்பதனை உணர்ந்து கொள்ளும் வகையில் இந்தப்புத்தகம் அமைந்துள்ளது.

                                           இந்தபுத்தகத்தில் மொத்தம் 11 இயல்கள் உள்ளன. முதல் இயலான 'வர்ண தர்மாவின் இறை இயலும் சட்டமும் ' என்னும் பகுதி வட இந்தியாவை பார்ப்பனியம் எப்படி ஆட்கொண்டது என்பதனை விவரிக்கின்றது.தங்கள் இனத்தின் நலத்திற்க்காக எப்படிப் பார்ப்பனர்கள் மன்னர்களைப் பயன்படுத்தினார்கள் , சூத்திரருக்கான தண்டனையை எப்படிப் பார்ப்பனர்கள் மன்னர் ஆட்சிகளில் நிறைவேற்றினார்கள், மனுவின் கால எல்லை பொன்றவற்றை மிகப்புகழ் அடைந்த வரலாற்று ஆசிரியர்கள் டாக்டர் கொசம்பி, ரோமிலா தார்பர், ஆர்.எஸ்.சர்மா, சுவிரா ஜெஸ்ஸ்வால் போன்றவர்களின் ஆய்வுகளை மேற்கோள் காட்டி இந்த் நூலின் ஆசிரியர் நிறுவுகின்றார். இராமனும் , கிருஷ்ணனும் எப்படிக் கடவளாக்கப்பட்டனர், அவர்களின் உண்மையான பாத்திரப்படைப்பு என்ன என்பதனை அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகள் கொண்டு விளக்குகின்றார்.

                                                          வட நாட்டை ஆக்கிரமித்த பார்ப்பனர்கள் எப்படி தெற்கு நோக்கி நகர்ந்தார்கள்,  நிலை  கொண்டார்கள் என்பதனை 'தெற்கு நோக்கிப் படர்ந்த பிராமணியம் ' என்னும் இயல் விளக்குகிறது.  .  இஸ்லாமியர்களின் படையெடுப்பும், ஆட்சியும்  எவ்வாறு சூத்திரர்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும்  பயன்பட்டது வட இந்தியாவில் என்பதனை மூன்றாவது இயலும், பார்ப்பனர்கள் இந்து மதம் ஒரு சகிப்புத்தன்மை உள்ள மதம் என்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், அன்று முதல் இன்று வரை சாதி அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வு, பார்ப்பனர்களின் தலைமை என்பதுதான் இந்து மதத்தின் அடிப்படை என்பதனை ' சாதியத்தைக் கைவிடாத நவீன இந்து மதம் ' என்னும் இயலும் விவரிக்கன்றன.

                                            சமூக நீதித் தத்துவத்தின் முன்னோடிகளான ' ஜோதிராவ் புலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சிங்கார வேலர்  போன்றவர்களைப் பற்றிய விரிவான தகவல்களையும், போராட்டத்தையும் தன்னுடைய நோக்கில் மிகச்சிறப்பாகவே இந்த நூலாசிரியர் விவரித்துள்ளார். தமிழ்த்தேசத்தில் பகுத்தறிவுவாதம என்னும் பிரிவில் தமிழருக்கும் பார்ப்பனர்களுக்குமான வேற்றுமை, திருக்குறளுக்கும் கீதைக்கும் உள்ள வேற்றுமை போன்றவற்றை விவரித்துள்ளார்.  'திருப்பித் தாக்குதல் ' என்னும் வழிமுறை எப்படி ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தியது என்பதையும், அமெரிக்காவில் கறுப்பர்கள் இருந்த நிலையும் இன்று அவர்கள் அடைந்த மாற்றமும், ஏன் இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை என்பதனையும் ஒப்பீட்டு அளவில் விளக்குகின்றார்.

                               இந்தியாவில் வர்க்கம் என்ற பார்வையால், கம்யூனிஸ்டுகள் அம்பேத்கருக்கும் , பெரியாருக்கும் எதிராக நின்ற கொடுமையை விமர்சிக்கின்றார்.  சொந்த சாதியிலேயே திருமணம் முடிக்கும் அகமண முறை சட்டப்படி குற்றம் என ஆக்கப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தும் அவர், இந்தியாவில் மாபெரும் கலாச்சார புரட்சி ஏற்பட 11 திட்டங்கள் என்று தன் திட்டங்களை முன்வைக்கின்றார்.

                         ஒரு பொதுவுடமை இயக்கத்தோழரிடமிருந்து வந்துள்ள , நல்ல புரிதல் உள்ள, சாதி முறையைத் தகர்ப்பதற்கான திட்டம் உள்ள ஒரு புத்தகம். பல்வேறு ஆதாரங்கள் அணிவகுக்கின்றன .மாறும் என்ற வார்த்தையைத் தவிர மற்றவை எல்லாம் மாறும் என்றார் மார்க்ஸ். ஆம், ஒரு காலத்தில் மாறாது என்று நினைத்தவை எல்லாம் மாறியிருக்கிறது, சமூகத்தில் அழியாது என்று நினைத்தவை எல்லாம் அழிந்திருக்கிறது நமது முன்னோடிகள் உழைப்பால். பார்ப்பன சக்திகள் திட்டமிட்டு, சுய சாதி பெருமை பேசுவதை ஒரு திட்டமாக வைத்திருக்கும் நிலையில் சாதியின் தீமைகளை மீண்டும், மீண்டும் பேசவேண்டியிருக்கிறது.சமூகத்தின் புற்று நோயாய் புரையோடிப்போயிருக்கும் இந்தப்பொய்மைக்கட்டினை உடைப்பதற்கு, ஆக்கபூர்வமான மாற்றுத்திட்டத்திற்கு நமக்கு கிடைத்திருக்கும் ஓர் ஆவணம் .இந்தப் புத்தகத்தினை  .கட்டாயம் படிக்க வேண்டும். பரப்ப வேண்டும்