Monday 27 March 2017

முதல்வர் டாக்டர் இரா. கனகசபாபதி அவர்களைப் பற்றிய புத்தக வெளியீடு




ஆண்டுகள் பல ஆனாலும் சில நினைவுகள் மறப்பதில்லை. ஆயிரமாயிரம் மனிதர்களைப் பார்த்தாலும் , அவரைப் போல உண்டா என நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் மனிதர்கள் சிலர்தான் வாழ்க்கையில் அமைகின்றார்கள். அப்படி ஒரு நிகழ்வாக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் எங்கள் முன்னாள் முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களைப் பற்றிய புத்தக வெளியீடு நேற்று(26.03.2017) மதுரை காந்தி மியூசியத்தில்  நடைபெற்றது.


பசுமை நிறைந்த நினைவுகளாய், வாழ்வின் உயரத்தில் இருக்கும் பலர், இந்த உயர்வுக்கு காரணம் இந்தப்புத்தகத்தில் வாழ்க்கை வரலாறாக இருக்கும் இவர்தான் என அவரைப்பற்றி நினைவு கூர்ந்தது நிகழ்ந்தது.நிகழ்வின் தொடக்கத்தில் திரு தேவதாஸ் காந்தி அவர்களும் , அகில இந்திய வானொலி மதுரை மீனாட்சி அவர்களும் சர்வசமயப்பாடல்களைப் பாடினர்.

வரவேற்புரையாற்றிய பேரா.டாக்டர் சு. ஆண்டியப்பன் தனது வாழ்க்கை நினைவுகளோடு ஆரம்பித்து , தான் வாழ்வில் இந்த நிலைக்கு வந்ததற்குக் காரணம் முதல்வர் கனகசபாபதி அவர்கள்தான் ,அவரின் வழிகாட்டுதல்தான் என்பதனைக் குறிப்பிட்டு வந்திருக்கும் சிறப்பு அழைப்பாளர்களின் சிறப்புக்களை தனித்தனியாகக் குறிப்பிட்டு  அனைவரையும் வரவேற்றார். 

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் 'தனித்துவ மிக்க காந்திய முதல்வர் டாக்டர் இரா. கனகசபாபதி ' என்னும் இந்த நூலினை எழுதியுள்ளார். அறிமுக உரையாற்றிய முன்னாள் முதல்வர், டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் ,தானுமொரு முன்னாள் முதல்வர் என்றாலும் , திருச்செந்தூரி கல்லூரி மாணவர்கள் முதல்வர் என்று சொன்னால் அது திரு.இரா.கனகசபாபதி அவர்களைத்தான் குறிக்கும் என்றார். நான் 150 நூல்கள் எழுதியிருக்கிறேன் ஆனால் எனக்கு மிகப்பெரிய நிறைவைத்தருவது 151-வது நூலான இந்த நூல்தான் என்றார். டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களைப்பற்றிய பல்வேறு நினைவுகளை மிக விரிவாகப்  பகிர்ந்துகொண்டார்.

'மிக நீண்டகாலமாக திரு.கனகசபாபதி அவர்களோடு உடனிருந்தவர். உடன் வேலை பார்த்தவர். அவரின் ஒவ்வொரு செயலையும் அருகே இருந்து பார்த்தவர். எனவே இந்த நூலினை  வேறு யார் எழுதியிருந்தாலும் இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. மா.பா. குருசாமி அவர்கள் மிகச்சிறந்த எழுத்தாளர் ' எனக்குறிப்பிட்டு புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைமை ஏற்ற  தமிழ் நாடு சர்வோதய மண்டல் தலைவர் திரு.க.மு. நடராசன் அவர்கள் உரையாற்றினார்.நூலினை வெளியிட்ட சேவாப்பூர் இன்ப சேவா சங்கத்தின் தலைவர்  ,திரு.மா.பாதமுத்து அவர்கள்  தனக்கு திரு கனகசபாபதி அவர்களோடும் திரு. மா.பா.குருசாமி அவர்களோடும் இருக்கும் தொடர்பையும் எதார்த்தமாகவும் , எளிமையாகவும் அரங்கில் பகிர்ந்துகொண்டார்,    
                                   
\

புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட சிவகாசி தொழிலதிபர் திரு தனசேகரன் அவர்கள் , விருது நகரில்  டாக்டர் கனகசபாபதி அவர்களிடம் பி.யூ.சி. படித்தது, பின்பு உடன் வேலை பார்த்தது ,தன்னுடைய உயர்வுக்கு எப்படி எல்லாம் திரு.கனகசபாபதி அவர்கள் உதவியாக இருந்தார் என்பதை மிக நெகிழ்வாக குறிப்பிட்டார். தன்னுடைய மகனுக்கு கனக என சாரின் பெயரை இணைத்து வைத்திருப்பதைக் குறிப்பிட்டார்.

மதுரை ஸ்பார்க் செண்டர் பார் ஐ.ஏ.எஸ். ஸ்டிஸ் நிறுவனத்தின் செயலாளராக இருந்த , மதுரையின் தொழிலதிபர் திரு.டி.கல்யாணசுந்தரம் தான் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்த கதையையும் பின்னர் தனக்கு முன்னோடியாக பேராசிரியர் பதவியை வேண்டாம் என உதறித்தள்ளி தொழிலதிபரான திரு தனசேகரன் அவர்களின் ஆலோசனையின் படியே தான் தனியாகத் தொழில் தொடங்கியதையும் திரு கனகசபாபதி சாரிடம் எப்போதும் ஒரு மரியாதை கலந்த பயம் இருந்ததையும், தனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய தன்னம்பிக்கையை, சுய நம்பிக்கையை ஏற்படுத்தியவர் திரு.கனகசபாபதி அவர்கள் என்பதையும்  குறிப்பிட்டுச்சொன்னார்.

 மதுரை அமுதம் மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் திரு ஜெயவீரபாண்டியன் அவர்கள் ஐ.ஏ.எஸ் -ஆக இருக்கும் தனது சகோதரரின் உயர்வுக்கும், அமுதம் பள்ளியின் உயர்வுக்கும் திரு.கனகசபாபதி அவர்கள் எப்படி எல்லாம் வழிகாட்டினார்கள் என்பதனை ஒரு அறிக்கையாகவே வாசித்து அளித்தார்கள். 2003 மார்ச் 8 எப்படி ஒரு கொடுமையான தினமாக அமைந்தது என்பதனை மிக்க துயரத்தோடு பகிர்ந்துகொண்டார்


.
தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் வெங்கட்ராமன் அவர்கள், தனது டாக்டரேட் படிப்புக்கும், தனக்கு பல்கலைக்கழகத்தில் வேலை கிடைப்பதற்கும் திரு.கனகசபாபதி அவர்களின் வழிகாட்டுதலே காரணம் என்பதையும்,திருகனகசபாபதி அவர்கள் மைனஸை பிளசாக மாற்றும் வல்லமை கொண்டவர் என்பதையும்  தனக்கே உரித்தான நகைச்சுவையோடு அவையில் எடுத்துவைத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் கி.ஆழ்வார் அவர்கள், 1967-ல் முதன்முதலாக விருதுநகரில் முதல்வர் அவர்களைச்சந்தித்ததையும்,அவர் ஒரு இன்ஸ்டியூசன் பில்டராக இருந்தார் என்பதையும்  ஆன்மிகவாதியாக இருந்த திரு.கனகசபாபதி அவர்கள் பக்கத்தில் வைத்திருந்தது டாக்டர் அப்துல்ரசாக் அவர்களையும் நாத்திகனான என்னையும்தான் எனக்குறிப்பிட்டார். மாணவர்களுக்கு சமூக நீதி அடிப்படையிலும் மனித நேய அடிப்படையிலும் உதவ வேண்டும் என்பதே அவரின் நோக்கம். அவரின் நோக்கத்திற்கு முழுமையாக ஆதித்தனார் கல்லூரியின் நிர்வாகமும் உதவி செய்தது என்பதனையும் குறிப்பிட்டார். தந்தை பெரியார் அவர்கள் மறையும்போது ,உங்களை இன்னும் இந்த இழிவு நிலையில் விட்டுவிட்டுப் போகின்றேனே என்பதே அவரின் கவலையாக இருந்தது. அதனைப்போல டாக்டர் கனகசபாபதி அவர்களின் நோக்கம் முழுவதும் மாணவர்களின் உயர்வு என்பதுமட்டுமே இருந்தது. டாக்டர் கனகசபாபதி அவர்கள் எழுதிய ஆங்கில நூலான 'How to develop a college in backward Area' என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறிப்பிட்டுப்பேசினார்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைப்பேராசிரியர், ஸ்பார்க் நிறுவனத்தின் தமிழ் விரிவுரையாளராக இருந்த பேரா.ம.இராமச்சந்திரன் அவர்கள் தனக்கு உறவினர் டாக்டர் கனகசபாபதி என்பதையும், குலையன் கரிசல் ஊரைப்பற்றியும் ,அவரின் தனித்தன்மைபற்றியும் குறிப்பிட்டார்.திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் வளர்ச்சியையும் ,திரு.கனகசபாபதி அவர்களின் வாழ்க்கையையும் பிரித்துப்பார்க்கமுடியாது என்றார்.

 பாண்டிச்சேரி சிவில்சர்வீஸ் திரு.சுந்தரேசன் ஐ.ஏ.எஸ். அவர்கள் , தான் பதவியில் இருக்கும்போது யாராவது திட்டினார்கள் என்றால் அது அந்தப்பதவியைத்தான், தன்னை அல்ல என்பதனை எனக்கு உணர்த்தியவர் திரு. கனகசபாபதி என்பதனைக் குறிப்பிட்டார்.

 தொடர்ந்து ஹைதராபாத்திலிருந்து இந்த நூல் வெளியீட்டிற்க்காக வந்திருந்த திரு ஆறுமுகப்பாண்டியன் அவர்கள்,தான் SBI-ல் cGM ஆக இருப்பதையும் ,தான் படிக்க வந்த காலத்தில் எவ்வளவு வறுமையான சூழலில் வந்தேன் என்பதையும் , முதல்வர் மூலமாக கிடைத்த உதவிகளையும் டெலிபோனில் வேலை கிடைத்தது என்று சொன்னபோது , நீ பெரிய பதவிக்கு போவேன் என்று நினைத்தால் கிளார்க் வேலைக்குப்போகிறேன் என்று சொல்கிறாயா என்று சொன்னதையும் , அவரின் உந்துதலாலேயே போட்டித்தேர்வுகள் எழுதி, வெற்றி பெற்று மிகப்பெரிய பொறுப்பில்தான் இருப்பதையும், கல்லூரியில் நான் எந்தப்பணமும் கட்டவில்லை என்பது மட்டுமல்ல கல்லூரியிலிருந்து முடிந்து செல்லும்போது 50 ரூயாய் மீதத்தோடு போனேன் என நினைவுகூர்ந்து சொன்னவிதம், இன்றுவரை தான் நேர்மையாக, மரியாதையாக இருப்பதற்குக் காரணம் டாக்டர் கனகசபாபதி அவர்களே எனச்சொன்னபோது அரங்கமே வியந்து பார்த்தது.


தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர், டாக்டர் கனகசபாபதி அவர்களின் உறவினர், டாக்டர் கனகசபாபதி அவர்கள் மதுரையில் இருந்தபொழுது அவரின் உடல் நிலையைக் கவனித்துக்கொண்ட மருத்துவர் திரு.டாக்டர் பி.ஜெகதீசபாண்டியன் அவர்கள் , திரு.கனகசபாபதி அவர்களுக்கு நான் மாமா முறை. ஆனால் வயதில் அவரைவிட இளையவன். தனது கிராமமான குலையங்கரிசலுக்கே உரித்தான உருவத்தோற்றம் டாக்டர் கனகசபாபதிக்கும் தனக்கும் இருப்பதை ஒப்பிட்டுக்கூறினார். குட்டி மாமா எனத்தன்னை அழைப்பார் என்பதையும் தான் மருத்துவராக வழிகாட்டியதையும், அவரின் உடல் நிலை எப்படி திடிரென மோசமானது என்பதைப் பற்றியும் குறிப்பிட்டு, திரு.கனகசபாபதி அவர்கள் மருத்துவமனையில் இருந்தபொழுது பழைய மாணவர்கள் அடிக்கடி வந்ததையும் கவனித்ததையும் குறிப்பாக இன்றைக்கு சென்னை வருமானவரித்துறை ஆணையாளராக இருக்கும் திரு.மகாலிங்கம் IRS அவர்கள் தினந்தோறும் வந்ததையும் குறிப்பிட்டு இப்படி ஒரு பிணைப்பை ஆசிரியரிடம் மாணவர்கள் கொண்டிருந்ததைக் கண்டதாகவும் குறிப்பிட்டார்.

 மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இரண்டு திருக்குறளைக்குறிப்பிட்டு, அது எப்படி தனது வாழ்க்கையில் திரு.கனகசபாபதி அவர்கள் மூலமாக விளக்கவுரை கிடைத்தது என்பதைக் குறிப்பிட்டார்.

 தியாகராசர் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் ஆர். raaகோவிந்தசாமி அவர்கள் திரு.கனகசபாபதி அவர்கள் பயின்ற கல்லூரியில் தானும் திரு வேத சிரோன்மணியிடம் கல்வி கற்றதையும் , அவரைப் பற்றித் திரு.மா.பா.குருசாமி அவர்கள் இந்தப்புத்தகத்தில் அவரைப் பற்றிக்குறிப்பிட்டிருப்பதைக் குறிப்பிட்டு திரு கனகசபாபதி அவர்கள் Physically fit, Mentally Alert, Morally correct எனக்குறிப்பிட்டு  உரையாற்றினார். பால்வண்ணம் அவர்கள் திரு.கனகசபாபதி அவர்களைப் பற்றி ஒரு பாடல் பாடினார். முடிவில் பழைய மாணவர் முனைவர் வா,நேரு  , டாக்டர் கனகசபாபதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவோம், அதற்கு ஆங்கிலப்பேராசிரியர்  சாமுவேல் லாரன்ஸ் போன்றவர்களின் உதவியை நாடுவோம் என்றும் கூறி அனைவருக்கும் நன்றி கூறி முடிக்க புத்தக் வெளியீட்டு விழா முடிவுற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை காந்திய இலக்கியச்சங்க செயலாளர் பா.அன்புசிவன்,நந்தா, கல்வி அலுவலர் நடராசன், நூலகர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.




நிகழ்வில் பேரா.சாமுவேல் லாரன்ஸ்( அமெரிக்கன் கல்லூரி), பேரா. இ.கி.இராமசாமி (யாதவர் கல்லூரி), பேராசிரியர் சீனிவாசன் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்),பேரா.கதிரேசன், பேரா.சந்திரசேகரன், பேரா.கணேசன், பேரா.மச்சக்காளை, பேரா.ஜெயப்பிரகாசம்,பேரா.டாக்டர் கமல்ராசு,மதுரை ஸ்பார்க் கா.பா.மாரிக்குமார், அவரிடம் பயிலும் மாணவ,மாணவிகள், டாக்டர் கனகசபாபதியின் மாணவர்கள் பேரா.டாக்டர்.இரா.சீனிவாசன்,தே.கல்லுப்பட்டி பாலகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், வேலுச்சாமி, பதஞ்சலி சில்க்ஸ் உரிமையாளர் செல்வம், திரு. லட்சுமணன்,கண்ணன், பாலதண்டாயுதம்,பி.எஸ்.என்.எல். ராஜ்குமார்,மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியைச்சார்ந்த டாக்டர் வனம், அவருடைய மாணவர்கள் கலந்துகொண்டனர். திருமதி ஆண்டியப்பன்,திருமதி கல்யாணசுந்தரம்,திருமதி தனசேகரன்,திருமதி நேரு,திருமதி பேரா.ஆழ்வார் மற்றும் நேருவின் பிள்ளைகள் சொ.நே.அன்புமணி, சொ.நே.அறிவுமதி கலந்துகொண்டனர். நூல் வெளியீட்டு விழா அன்றே 800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்றுத்தீர்ந்தன. குடும்பம், குடும்பமாக பேரா.கனகசபாபதி அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டீல் கல்ந்துகொண்டதும்,பல உயர் பதவிகளில் இருக்கும் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் மாணவர்கள் உயர் அதிகாரிகள் என்றாலும் மிகச்சாதாரணமானவர்களைப் போலக் கலந்துகொண்டதும் திரு.கனகசபாபதி அவர்களுக்கு நன்றியுணர்வு காட்டியதும் புதியவர்களுக்கு வியப்பளித்தது,.









Monday 20 March 2017

சுகமான வாழ்வு.........

பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் மருத்துவர் அய்யா சோம.இளங்கோவன், அவரது இணையர் மருத்துவர் அம்மா சரோஜா அவர்களும் இணைந்து அனுப்பிய வாழ்த்து

வெள்ளிவிழா காணும் வாழ்விணையர்களே!
வாழ்வின் சிறப்பை உழைப்பாலும் நட்பாலும்
பெருமையை பெரியாரின் கொள்கையாலும்
மகிழ்வை உங்கள் இருவரின் நட்பாலும்
செல்வங்களை மக்கள் செல்வங்களாலும்
பெற்றுள்ளீர் ! வாழ்வீர் நலமுடன்
வாழிய பல்லாண்டு! வாழிய பல்லாண்டு !

சரோ & சோம.இளங்கோவன்.


திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் , வாழ்க்கை இணையர்களாக நானும் தோழியர் சொர்ணமும் வாழ்க்கை ஒப்பந்தம் ஏற்றுக்கொண்ட நாள் இந்த நாள் (மார்ச் 20). 1993 மார்ச் 20-ஆல் இல்லற வாழ்க்கையைத் தொடங்கி , 24 ஆண்டுகள் முடிந்து 25-ஆம் ஆண்டு தொடங்கியிருக்கிறது. வாழ்வில் ஏற்படும் இன்பம், துன்பங்களில் உற்ற நண்பர்களாக வாழ்வோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டது வெறும் உறுதிமொழியாக இல்லாமல் நடைமுறை மொழியாகவே தொடர்கிறது. சனிக்கிழமை காலை வெவ்வேறு சாதிகளைச்சார்ந்த நாங்கள் இருவரும் வாழ்க்கை துணைவர்களாக இணைவதற்கு இருந்த எதிர்ப்புகள் எல்லாம் நேற்று நடந்ததுபோலவே மனக்கண் முன்னால் ஓடுகின்றது. 'சுயமரியாதை வாழ்வே சுகமான வாழ்வு ' என்பது வெறும் வார்த்தைகள் அல்ல, அப்படி வாழ முற்பட்டால் அது எவ்வளவு மகிழ்ச்சிகரமான வாழ்வு என்பதை அப்படி வாழ முற்பட்டால் எளிதாகப் புரிந்து கொள்ள இயலும்.

எங்களின் இணை ஏற்பு நாளை முன்னிட்டு , எனது பிள்ளைகள் சொ.நே.அன்புமணி, சொ.நே.அறிவுமதி இருவரும் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 2500 அளித்திருக்கின்றார்கள். கல்லூரிச்செலவுக்காக தினந்தோறும் நான் கொடுக்கும் தொகையில் மிச்சம் பிடித்து, இந்தத் தொகையை அளித்திருக்கின்றார்கள். இருவருக்கும் எங்கள் நன்றி. வாழ்த்துக்கள் தெரிவித்த அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களுக்கும் அவரது இணையர் மருத்துவர் சரோஜா அவர்களுக்கும் , மற்றும் உறவுகளுக்கும், நட்புகளுக்கும், இயக்க உறவுகளுக்கும் நன்றி..நன்றி...








             




நன்றி :விடுதலை 20.03.2017


Sunday 12 March 2017

தம்பட்டம் அடித்துக் கொள்ளும்.......

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை  வருமாறு:

உத்தரப்பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் நேற்று (11.3.2017) வெளிவந்துள்ளன.

பா.ஜ.க.வுக்கு இது பெரு வெற்றி - மோடியின் தலைமைக்குக் கிடைத்த சிறப்பு என்றெல்லாம் பத்திரிகை உலகமும், ஊடகங்களும், பா.ஜ.க.வும், அதன் சுற்றுக் கிரகங்களும் கூறித் தம்பட்டம் அடித்துக் கொள்ளும்.

ஆனால், விருப்பு வெறுப்பற்ற பொது நிலையில் (ளிதீழீமீநீtவீஸ்மீ) இந்தத் தேர்தல் முடிவுகளை ஆராய்ந்தால், கீழ்க்கண்ட காரணங்கள்தான் பிரதான வெற்றிக்கானவை என்பது புரியும்.

ஆளும் கட்சிகளுக்கு எதிராக....

1. ஆளுங்கட்சி - அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தி - எதிர்ப்பு - 5 மாநில முடிவுகளும் - Anti-incumbency.

(அ) உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லை

(ஆ) ஆளுங்கட்சிக்குள் அப்பா - பிள்ளை சண்டை தெருவில் அடிதடி வரை வந்து சிரித்தது.

(இ) திட்டமிட்ட பா.ஜ.க. - அமித்ஷா - மோடி இருவரின் வியூகமும், உழைப்பும் குறிப்பிடத்தகுந்தவை.

(ஈ) உத்திரகாண்ட்டிலும் ஆளும் காங்கிரஸ்மீது அதிருப்தி

(உ) பஞ்சாபில் அகாலிதள (குடும்ப) ஆட்சியின்மீது அதிருப்தி - எதிர்ப்பு.

(ஊ) கோவாவிலும் பா.ஜ.க. ஆட்சிமீது வெறுப்பு - அக்கட்சி பிளவுபட்டது!

மாயாவதி செய்த தவறு

(எ) மாயாவதி தன் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களை அரவணைக்காது விரட்டியது.

(ஏ) இஸ்லாமியர்களின் வாக்கு ஒருங்கிணைந்து எந்தக் கட்சிக்கும் செல்லாதது!

(அய்) மோடியின் பகிரங்க ஹிந்துத்துவா ஆதரவுப் பேச்சு - தீபாவளிக்கு தடையில்லா மின்சாரம் கிடையாது; ஆனால், ரம்ஜானுக்கு மட்டும் உண்டு என்பது போன்ற பேச்சுகளால் உரு வாக்கிய ஓர் முனைப்படுத்திய (Polaraize) தன்மை!

மத உணர்வைப் பயன்படுத்திவிட்டு, இப்போது மதத்தின் வெற்றி அல்ல என்று அமித்ஷா கூறுவது ‘‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’’ என்பதுபோல - அசல் கேலிக்கூத்து!

2014 மக்களவை தேர்தலைப் போல் இம்முறை மோடி அலை பயன் தராது என்ற நிலையில், உத்தரபிரதேச மாநில பாஜக தலைவராக கேசவ் பிரசாத் மவுரியாவை நியமித்தது; பார்ப்பனர்கள் மற்றும் ஒட்டுமொத்த உயர்ஜாதியினரின் வாக்குகள் பாஜகவிற்கு வருவது உறுதியானது.

உ.பியில் 19 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட பார்ப்பனர்கள், தாக்கூர் போன்ற உயர் ஜாதியினர் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது உறுதியானதும், யாதவர் அல்லாத, ஜாட் இனத்தவர் அல்லாத 170 பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களை களமிறக்கியது. இதனால் யாதவர் இன வாக்குகளைத் தவிர்த்து மற்ற பிற்படுத்தப் பட்ட மக்களின் வாக்கு வங்கியானது முழுமையாக பாஜகவின் பக்கம் சென்றது.

பாஜக உத்தரப்பிரதேசத்தில் அப்னாதள் மற்றும் சுஹேல்தவ் பாரதிய சமாஜ் கட்சி ஆகிய சிறு கட்சிகளோடு கூட்டணி வைத்திருந்தது.  பூர்வாஞ்சல் மற்றும் மத்திய உத்தரபிரதேசத்தில் கணிசமான பட்டேல் குர்மி இன மக்கள் உள்ளனர். அப்னா தள் அவர்கள் ஆதரவு பெற்ற கட்சி. சுஹேல்தவ் கட்சிக்கு, 18 சதவீத மக்கள் தொகையை கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ராஜ்பர் ஜாதி மக்கள் ஆதரவு இருந்தது. பிரச்சாரத்தின்போது தாக்கூர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ராஜ்நாத்சிங்கும், பார்ப்பனர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கல்ராஜ் மிஷ்ராவும் பிரச்சாரம் செய்தனர்.

மாற்றுக் கட்சித் தலைவர்களை இழுப்பது...

பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பிரஜேஷ் பதக், ஸ்வாமி பிரசாத் மவுரியா மற்றும் ஆர்.கே.மவுரியா போன்ற முக்கிய தலைவர்களை பாஜக தன்பக்கம் இழுத்து, பகுஜன்சமாஜ் கட்சியின் அடுத்த நிலை தலைவர்களே இல்லாமல் செய்தது. காங்கிரஸ் கட்சியின் உ.பி மாநில முன்னாள் தலைவர் ரிதா பகுகுணாவையும் பாஜக விலைக்கு வாங்கியது; எந்த பகுதிகளில் கட்சி பலகீனமாக இருந்ததோ, அங்கு பிற கட்சிகளை சேர்ந்த பலமிக்க தலைவர்களை விலைக்கு வாங்கியது

2015 ஆம் ஆண்டிலேயே இது தொடங்கப்பட்டதை அப் பொழுது ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வெளிப்படுத்தியதே!

அதிகமான அளவு தீவிர இந்துமத உணர்வு கொண்ட மக்களின் வாக்குகளைப் பெற இஸ்லாமியர்கள் யாருக்கும் இடம் கொடுக்கவில்லை. அதே போல்  மோடியும், அமித்ஷாவும் இந்துக் களை முஸ்லிம்களுக்கு எதிராக திரள செய்யும் வகையிலான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ரம்ஜானுக்கு இலவச மின் சாரம் அளிக்கப்படுகிறது; அதேநேரத்தில் தீபாவளிக்கு அளிக்கப்படவில்லை என்றார் மோடி. பாகிஸ்தான் தீவிரவாத கசாப்பிடமிருந்து உ.பி. விடுதலை பெற வேண்டும். கசாப் என்றால் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் முதல் எழுத்துக்களை வைத்து சொல்கிறேன். வேறொன்றும் இல்லை என்றார் அமித்ஷா.

திடீர் என்று முளைத்த கூட்டணி

சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி இருந்தாலும் திடீர் என்று முளைத்த கூட்டணி ஆகையால் சமாஜ்வாடி தொண்டர்கள். இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. சில தொகுதிகளில் சமாஜ்வாடி வெற்றி பெற வாய்ப்பிருந்தது.அதை காங்கிரசுக்கு ஒதுக்கியதால் உள்ளூர் நிர்வாகிகள் காங்கிரசை எதிர்த்து வேலை பார்த்தனர். ஆட்சிக்கு எதிரான அலையும் ஒரு காரணம்.

தந்தை மகனே கட்சிக்காக சண்டை போட்டதால் ஆட்சி மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது.

பீகாரைப் போலவே உ.பியில் முதல்வர் யார் என்பதை அறிவிக்காமல் பாஜக தப்பு செய்துவிட்டதாக விமர்சகர்கள் கூறினர். ஆனால் முதல்வர் வேட்பாளர் யார் என கூறாமல் தேர்தலை சந்தித்தது பாஜகவுக்கு ஒரு வகையில் வசதியாகிவிட்டது. ஏனெனில் பாஜக நம்பிய அனைத்து ஜாதியினருமே பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். முதல்வர் வேட்பாளராக யாரையாவது அறிவித்திருந்தால் இதர ஜாதியினரின் வாக்குகளை பாஜக இழந்திருக்கும்.

அதிகார பலம் - ஊடக பலம்

மத்திய அரசின் அதிகார பலம் ஊடக பலங்கள் இன்னொரு பக்கம்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் இரண்டும் தனித்தனியாக நின்றதால் இஸ்லாமியர் மற்றும் தலித்துகளின் வாக்குகளும், முற்றிலும் சிதறிவிட்டன; பாஜகவின் வெற்றிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்றே போடப்பட்ட வாக்குகள் பா.ஜ.க. பக்கம் விழுந்தன.

மத்திய ஆட்சியின் கொள்கை முடிவுகளுக்கு இது வரவேற்பல்ல.

இந்த முடிவுகள்மூலம் மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் கூடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது ஒருபுறம்; குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்போது, பா.ஜ.க. வேட்பாளருக்கு இது பெரிதும் துணை நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

வெற்றி பெற்ற அத்துணைக் கட்சிக்காரர்களுக்கும் நமது வாழ்த்துகள்!

அதிகார ஆணவம் - பதவியை குடும்பச் சண்டைக்குப் பயன்படுத்தினால் நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள் என்ற பாடத்தையும் இம்முடிவுகள் உணர்த்துகின்றன!



கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.

12.3.2017
சென்னை



Read more: http://viduthalai.in/page1/139488.html#ixzz4b6i1Gxwa

Thursday 9 March 2017

மனு(அ)தர்மத்தைக் கொளுத்துகிறார்கள்..........



நாளை (10.03.2017) திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமான நாள். திராவிடர் கழகத்தின் மகளிரணித்தோழியர்கள் தமிழ் நாடெங்கும் மனு(அ)தர்மத்தைக் கொளுத்துகிறார்கள். உற்சாகமூட்டக்கூடிய அளவிற்கு தோழியர்கள் அணி, அணியாக நாளைப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்று செய்தி கிடைக்கிறது. தந்தை பெரியாருக்குப்பின் நாத்திக இயக்கத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்று திராவிடர் கழகத்தோழர்களை வழி நடத்திய அன்னை மணியம்மையாரின் பிறந்த நாள் நாளை மார்ச்-10. அந்த நாளில் திராவிடர் கழகத்த்லைவர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் இந்தப்போராட்டத்தை மிகச்சிறப்பாக தோழியர்கள் செந்தமிழ்ச்செல்வி, தகடூர் தமிழ்ச்செல்வி, கலைச்செல்வி எனப் பலரும் இணைந்து அருமையாக ஒருங்கிணைத்திருக்கின்றார்கள். மதுரையில் நடைபெறும் போராட்டத்திற்கு திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் தோழியர் இராக்கு தங்கம் அவர்கள் தலைமை ஏற்கின்றார். தினசரி கூலித்தொழிலாளிகளான தோழர் தங்கமும், தோழியர் இராக்கும் கடந்த 30 ஆண்டுக்கும் மேலான திராவிடர் கழக உறுப்பினர்கள். மதுரையில் நடைபெற்ற போராட்ட ஆயுத்தக்கூட்டத்தில் உள்ளத்தில் இருந்து கொட்டிய சொற்களால் கூட்டத்தை ஈர்த்த தோழியர் இராக்குதங்கம் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற மனு(அ)தர்ம எரிப்பு போராட்டமும், தமிழகம் முழுவதும் நடைபெறுகின்ற மனு(அ)தர்மப் எரிப்பு போராட்டமும் மகத்தான வெற்றி பெறும். வெற்றி பெறுவதற்கு  மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக போராட்ட வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எரியுட்டும் மனுதர்மம் என்னும் திராவிடர் கழகத்துணைத்தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன் அவர்கள் எழுதிய  புத்தக பி.டி.எப் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. படிப்பீர், மற்றவர்களையும் படிக்கச்சொல்வீர். சுயமரியாதைக்காக களம் காணும் திராவிடர் கழக தோழியர்களுக்கு, தோழர்களுக்கு ஆதரவைத்தாரீர்.

http://viduthalai.in/images/pdf/POSUNGATTUM_MANUTHARMAM.pdf



Thursday 2 March 2017

பகுத்தறிவே சிறந்த வழி காட்டி.......மறவாதீர்!..

மனித வாழ்க்கையில் - முற்றிலும் பகுத்தறிவையே பயன்படுத்தித்தான் வாழ்வார்கள்; வாழவேண்டும் என்பது இயற்கையான வாய்ப்பு என்றாலும் கூட, நம்மில் பலரும் அப்படி வாழ் வதில்லை; பெரும்பாலோர் அப்படி வாழ விரும்புவதே இல்லை.

காலங்காலமாக எப்படி மற்றவர்கள் வாழுகிறார்களோ அப்படியே ‘செக்கு மாட்டு வாழ்க்கையே’ வாழுகிறார்கள்!

இன்னும் பலர் பழைய பாதையே பாதுகாப்பானது என்ற பயத்தின் கார ணமாக, ஒருவகை அடிமை வாழ்க்கை யில் வாழுகிறார்கள்! அடிமைத்தனம் என்று இங்கே நாம் குறிப்பிடுவது மூளை அடிமைத்தனத்தைத்தான்!

சிலர் அதைப் பெருமையுடன் கூறி ‘கித்தாப்பு’ அடைகின்றனர்! தன் பெருமை, தன் சக்தி, தன் சாதனை என்று தம்பட்டம் அடித்து மகிழ்வது தான் அவர்கள் சிக்கிய போதையாகும்!

எடுத்துக்காட்டாக, கடை வீதியில் நடந்துகொண்டே வந்தவர், ஒன்று வாங்கினால் மேலும் இரண்டு ‘இலவசம்‘ என்ற விளம்பரம் கண்டு திகைத்தவராக, உடனே அவரது தேவையை உத்தேசித்தோ யோசிக் காமலே, அவரிடம் உள்ள கடன் (கிரெடிட் கார்டு) அட்டையைப் பயன்படுத்தி உடனே அக்கடையில் நுழைந்து வாங்கி வருகிறார். எந்தக் கடைக்காரரும் நட்டத்தில் வியாபாரம் செய்யமாட்டார்களே, இவர் மட்டும் ஏன் இப்படி விளம்பரம் செய்கிறார் என்று ஒருகணம்கூட பகுத்தறிவுக்கு வேலை தருவதில்லை; தான் ஏதோ மற்றவர்களுக்கு இல்லாத ஒரு வாய்ப்பை இதன்மூலம் பெற்றுவிட் டோம் என்ற ஒருவகை போலிப் பெருமையில் (அதுவே ஒரு வகை போதைதான்) மிதந்து வருவார்!

மனித வாழ்வில் உணர்ச்சிகளின் திடீர் ஆக்கிரமிப்பு - படையெடுப்பு - பகுத்தறிவுக்கோ, தர்க்க ரீதியான சிந்தனைக்கோ இடம்பெறுவதில்லை!

கடைகளுக்குச் சென்று வாங்குவது என்பது பகுத்தறிவு அடிப்படையில் பார்த்தால், கண்ணுக்கும், காதுக்கும், தமது பெருமைக்கும் இடம் தருவதற்கான கொள்முதலாக இருக் கக்கூடாது - பகுத்தறிவின்படி பார்த் தால்!

எது நமக்கு இன்றியமையாததோ, அதைக் குறித்து வைத்து, அதற்கான ‘பட்ஜெட்’ நமக்கு உள்ளதா என்று ஆராய்ந்து, கையில் உள்ள சேமிப் பையோ அல்லது சம்பாதனையின் கீழ்வரும் பட்ஜெட்டையோ பற்றி மட்டும் கவலை கொண்டால், நிச்சயம் நாம் ‘கடனாளி’யாகி விடமாட்டோம்!

ஆனால், ஆசையும், வீண் பெருமையும், பதவி ஆசையைவிட மிகவும் கொடுமையானது! சூதாட்டத் தில் வெற்றி பெற்றவனும் எழுவ தில்லை (சிலர் வேண்டுமானால் விதிவிலக்கு) தோற்றவனும் எளிதில் எழுவதில்லை. இருவரையும் ஒன்றே ஈர்த்து எல்லாவற்றையும் இழக்கச் செய்வது பற்றிய யோசனையே இல்லாது இருப்பது உலக இயல்பாகி விட்டது!

பகுத்தறிவு பலவிடங்களில் தோற்று ஒதுங்கிக் கொள்ளுகிறது; உணர்ச்சிகள் கோலோச்சத் தொடங் கிய இடத்தில்! அதன் விளைவு காலங்கடந்த ஞானோதயம்!

அளவுக்கு மீறிய சொத்து சேர்த்துக் கொண்டே செல்வதில் சுவை கண்ட வர்கள் - தங்களது மரண வாக்குமூலத் தில் எதைக் குறிப்பார்கள்?

யான்கண்ட சுகம் ஒன்றுமில்லை உண்மையே! இடையில் ஏற்பட்ட போதை - பண போதை - சொத்து போதையைத் தவிர என்பார்கள்!

எதற்கும் எல்லை உண்டு என்ப வர்கள் பகுத்தறிவைத் தாராளமாகப் பயன்படுத்தியவர்கள், இறுதியில் தொல்லை அடைவதில்லை - இடை யில் இடையூறுகளால் அலைக்கழிக் கப்பட்டாலும்கூட!

எனவே, பகுத்தறிவே சிறந்த வழி காட்டி என்பதை மறவாதீர்!...

திராவிடர் கழகத்தலைவர், பகுத்தறிவாளர் கழகப்புரவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்-

நன்றி : விடுதலை 02.03.2017