Monday 29 January 2018

எதிர்க்கவிதையாளர் நிகனோர் பர்ரா!........சமயவேல்

எதிர்க்கவிதையின் முன்னோடியான நிகனோர் பர்ரா, சிலியின் சான்டியாகோ நகரில் ஜனவரி 23-ல் தனது 103-வது வயதில் காலமானார். “சிலி தனது இலக்கிய வரலாற்றில் ஒரு மாபெரும் ஆசிரியரை இழந்துவிட்டது. மேற்கத்தியக் கலாச்சாரத்தில் தனித்ததொரு ஒற்றைக் குரல் அவருடையது” என்று அந்நாட்டு அதிபர் மிச்செல் பாச்சிலே புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார். தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடவும், நாடு முழுவதும் இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

நிகனோர் பர்ரா, லத்தீன் அமெரிக்காவில் மிகுந்த செல்வாக்குள்ள கவிஞர். நீண்டகாலமாகக் கவிஞர் பாப்லோ நெருதா தக்கவைத்திருந்த ஸ்தானத்தின் சரியான வாரிசாக அமைந்தார். எதிர்க்கவிதையின் பிரதிநிதியாக, சிலியில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இலக்கிய வெளிப்பாட்டை புரட்சிகரமாக மாற்றியவர். ஒரே சமயத்தில் நகைச்சுவையாகவும் உணர்ச்சித் ததும்பலாகவும் எல்லாவற்றுக்குமான பதிலியாகவும் எளிதில் அணுக முடிவதாகவும் இருந்த இவரது எதிர்க்கவிதை, ஸ்பெயின், லத்தீன் அமெரிக்கக் கவிஞர்களின் அலங்கார ‘ரொமாண்டிக்’ மரபுக்கு எதிரானதாக இருந்தது.

சிலி நாட்டின் சில்லான் என்னும் சிறுநகரில் 1914-ல், இசையால் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தார். அவரது சகோதரி வயலெட்டா பர்ரா, உலக அளவில் புகழ்பெற்ற பாடகியாகவும் பாடலாசிரியராகவும் இருந்தார். பள்ளி ஆசிரியரான அவரது அப்பா இரவில் கிட்டார் வாசிப்பதில் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், பாடுவதும் ஆடுவதும் போக அவர் குடிக்கவும் செய்தார். அப்பாவின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து அவரது கிட்டாரின் நரம்புகளைக் கழற்றிவிட்டார் இளம்வயது நிகனோர் பர்ரா. தனது வாழ்க்கை முழுவதும் அவர் செய்யவிருந்த கலகங்களின் முன்னோட்டம் அது.

சான்டியாகோவில் உள்ள ஒரு சிறந்த உயர்நிலைப் பள்ளியின் கல்வி உதவித்தொகையை பர்ரா வென்றார். அவரது முதன்மையான ஆர்வம் இலக்கியமாக இருந்தபோதும் கணிதத்தின்பால் அவர் ஈர்க்கப்பட்டார். சிலி பல்கலைக்கழகத்தில் கணிதத்திலும் இயற்பியலிலும் பட்டங்கள் பெற்றார். பின்னர் ஆக்ஸ்ஃபோர்டு சென்று எந்திரவியலும் பிரபஞ்சவியலும் பயின்றார். ஒரு இயற்பியல் பேராசிரியராக சிலி திரும்பிய அவர் ஆர்க்கிமிடீஸ், அரிஸ்டாட்டிலிருந்து நியூட்டன் வரையிலும் பயின்றார். நியூட்டனை நிராகரித்த அறிவியல் ஞானம், ஒரு கவியாக பர்ரா வளர்வதைப் பாதித்தது. எந்த ஒரு விஷயத்தின் உண்மையும் அது எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது என அவர் நம்பத் தொடங்கினார். கலாச்சாரம், அரசியல் மற்றும் மதம் ஆகியவற்றின் உண்மையான பிரச்சினைகளைக் கவிதை கையாள வேண்டும் என நம்பினார்.

தனது சமகால அக்கறைகளைக் கையாள ஒரு புதிய மொழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். வால்ட் விட்மனின் பேச்சு மொழியையும், காஃப்காவின் அவல நகைச்சுவையையும் இணைக்கும் முயற்சியில் சொற்களை இரு நிலைகளில் பயன்படுத்தினார். ஒன்று மற்றதை விமர்சிக்கையில் ஒரு நகைமுரண் விளைவு உருவாகியது. இந்த வகையில் கவிதைகளை, கணிதத் தேற்றங்களாக எழுத ஆரம்பித்தார் பர்ரா. குறைந்த சொற்கள், நிறைந்த உள்ளடக்கம். மொழிச் சிக்கனம். படிமங்கள் இல்லை. உருவகங்கள் இல்லை. நேரடிக் கவிதைகள் இவ்வாறே உருவாகின. பிழைப்புக்கு இயற்பியல், உயிர்த்திருப்பதற்குக் கவிதை என்றார்.

லத்தீன் அமெரிக்காவில் முதல் நோபல் பரிசைப் பெற்ற, கவிஞர் கேப்ரீயலா மிஸ்ட்ரால் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு, மேடையில் தாவிக் குதித்த ஏறிய பர்ரா ஒரு கவிதை வாசித்தார். அதைக் கேட்ட மிஸ்ட்ரால், “உலகளாவிய புகழை அடையப்போகிற ஒரு கவி நம்முன் நிற்கிறார்” என்றார். அது உண்மையும் ஆகியது. பிறகு, பாப்லோ நெருடாவைச் சந்தித்தார். பர்ராவின் ‘கவிதைகளும் எதிர்க்கவிதைகளும்’ தொகுப்பை வெளியிட ஒரு பதிப்பகத்தை ஏற்பாடு செய்துகொடுத்தார் நெருதா. இத்தொகுப்பு 1954-ல் வெளியாகிப் பரவலாக வாசிக்கப்பட்டது. இரு விருதுகளையும் வென்றது. கவிதை என்னும் வடிவத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த தீவிரமான புனிதக் கோட்டை, பர்ராவால் தகர்த்தெறியப்பட்டது. அடுத்ததாக வெளியான ‘சலான் செய்யுள்கள்’ என்னும் தொகுப்பு, லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் அசலான, புதிதான குரலை உறுதிசெய்தது. பிறகு 20-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளியாகின.

சமூக அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவந்தார். தனது சுதந்திரத்தை அவர் பெரிதும் பேணிய போதிலும் அவரது கவிதைகளில் அரசியல் அதிகரித்துக்கொண்டே இருந்தது. “நான் வலதையோ இடதையோ ஆதரிக்கவில்லை. வார்ப்பில் கட்டிதட்டிப்போன எல்லாவற்றையும் உடைக்கிறேன்” என்றார். யதார்த்தத்தை சார்பியல்ரீதியாகப் பார்க்கும் அவரது பார்வை, எல்லா வகையான அரசியல் கோஷங்களையும், அவை எத்திசையில் இருந்து வந்தாலும், ஐயப்பட வைத்தது. சிலியின் அயந்தே நாட்களில் அவர் விலக்கப்பட்ட கவியாக இருந்தார். ஆனால் ‘கலைப் பொருட்கள்’ என்னும் ஒரு சிறிய கேலிச்சித்திரம் போன்ற கிறுக்கல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு தனது சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொண்டார். இதுவரை கவிதையே வாசிக்காதவர்கள்கூடப் புரிந்துகொள்ளும்படி விளம்பரங்களைப் போல அவை வடிவமைக்கப்பட்டிருந்தன. பின்னாட்களில் சூழலியல் கவிதைகளையும் எழுதி ‘எக்கோ போயம்ஸ்’ என்னும் தொகுப்பை வெளியிட்டார். ‘இன்னொரு முறை என்னால் இந்தப் பூமியைப் படைக்க முடியாது’ என்று கடவுள் கூறுவதாக எழுதினார்.

சிலியின் தேசிய விருதை 1969-லும் 1981-லும் பெற்றார். ஸ்பானிஷ் மொழியின் மிக உயரிய செர்வாண்டிஸ் விருதை 2011-ல் பெற்றார். தான் எழுதத் தொடங்கியதிலிருந்து ஒரு கலகக்காரக் கவியாகவே வாழ்ந்து மறைந்துள்ளார் நிகனோர் பர்ரா.

- சமயவேல், கவிஞர், ‘அரைக் கணத்தின் புத்தகம்’,

‘இனி நான் டைகர் இல்லை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

தொடர்புக்கு: samayavelk@gmail.com

நான் கூறிய எல்லாவற்றையும் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்

நான் செல்வதற்கு முன்பு

ஒரு கடைசி ஆசையைப் பெறுவதாக நான் நம்புகிறேன்:

தாராளமான வாசகர்களே

இந்தப் புத்தகத்தை எரித்துவிடுங்கள்

நான் என்ன கூற விரும்பினேனோ அதுவே இல்லை

இது ரத்தத்தில் எழுதப்பட்டபோதிலும்

நான் என்ன கூற விரும்பினேனோ அது இல்லை.

என்னுடையதைப் போலத் துயரமானது எதுவும்

இருந்திருக்க முடியாது

எனது சொந்த நிழலால் நான் தோற்கடிக்கப்பட்டேன்:

எனது சொற்கள் என் மேல் பழி தீர்த்தன

வாசகரே, நல் வாசகரே, என்னை மன்னித்துவிடுங்கள்

நான் உங்களை விட்டுப் போக முடியாவிட்டால்

ஒரு கதகதப்பான தழுவலோடு,

நான் உங்களை விட்டுப் போகிறேன்

ஒரு கட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் வருத்தமான புன்னகையோடு.

அவ்வளவுதான் நானாக இருக்கலாம்

ஆனால், எனது கடைசி வார்த்தையைக் கேளுங்கள்:

உலகத்தில் இருக்கும் மாபெரும் கசப்புடன்

நான் கூறிய எல்லாவற்றையும் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்.

ஸ்பானிஷ் மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: மில்லர் வில்லியம்ஸ்; தமிழில்: சமயவேல்
-------------------------------------------------------------------------------------------------------------------------

நாம் பாப்லோ நெருதாவை தமிழ் வழியாக அறிந்திருக்கின்றோம். அப்படி நிகனோர் பர்ரோவை தமிழ் வழியாக அறியும் வாய்ப்பை தி இந்து -தமிழ் வழியாக கவிஞர் சமயவேல் ஆரம்பித்து வைத்திருக்கின்றார் என நினைக்கின்றேன். (ஏற்கனவே இருந்திருந்தால் குறிப்பிட்டிருப்பார்). நல்ல கவிஞர்கள் எல்லோருமே உலகம் முழுவதும் அறியப்படவேண்டும். தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டும், நாடு முழுவதும் இரண்டு நாள் துக்கம் கடைப்பிடித்தும் ஒரு கவிஞனுக்காக மரியாதையை செலுத்திய சிலி நாடு,சிறிய நாடு என்றாலும் பண்பால் பெரிய நாடாகத்தோன்றுகிறது.எதிர்க்கவிதையாளர் நிகனார் பர்ரோ பற்றிய நினைவஞ்சலி கட்டுரை மிகவும் உருப்படியான கட்டுரை.இதனைப் படித்து இணையத்திலும் தேட ஆரம்பித்து இருப்பார்கள் நமது இளைஞர்கள்.வெளி நாட்டு கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகளில் கவிஞர்களின் பெயரை ஓரிடத்திலாவது ஆங்கிலத்திலும்-அடைப்புக்குறிகளுக்குள் குறிப்பிடலாம். அவர்களின் கவிதைகளைப் படிப்பதற்கான இணைய சுட்டிகளையும் குறிப்பிடலாம். முனைவர்.வா.நேரு,மதுரை
------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : தி இந்து தமிழ் 28.01.2018

Wednesday 24 January 2018

தந்தை பெரியாரும்-உளவியலும்.....ஜெ. வெண்ணிலா

உளவியல் என்பது ஒரு மிகப்பெரிய பகுதி. உளவியல் குறித்து பல கோட்பாடுகள் இருக்கின்றன. அவற்றுள் அடிப்படையான ஒன்று மாஸ்லோ கோட்பாடு. தேவைதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்றார் அவர். அந்த அடிப்படையில்  மனிதர்களின் தேவைகளை  5 அடுக்குகளாகக் காட்டினார். அது பிரமிட் வடிவம் கொண்டது. ஒவ்வொருவருக்கும் அடிப்படைத் தேவை உண்ண உணவு, இருப்பிடம் போன்றவை. அப்புறம் பாதுகாப்பான இடம், பாதுகாப்பான வேலை போன்றவை அடுத்த அடுக்கு. அடுத்து அன்பு செலுத்தப்படுதல், அப்புறம் சமூக ரீதியலான மரியாதை. அப்புறம் முழுத்திறனையும் நான் உயயோகப்படுத்தி விட்டேன், நான் நன்றாக இருக்கின்றேன் எனத் தன்னை உணர்தல் போன்றவை.தேவைகள் மனிதர்களுக்கு மனிதர் மாறுபடும் என்றாலும்,  எந்தத் தேவையாக இருந்தாலும் இந்த 5 அடுக்குகளுக்குள் கொண்டு வந்து விடலாம். இந்த 5 அடுக்குகளில் எல்லாக் காரணிகளும் நிறைவேறி இருந்தால் ஒரு மனிதன் மன நிறைவாக இருக்கலாம்.
இந்த 5 அடுக்குகளில் இருப்பதில் எது குறைந்தாலும் அது நமக்கு பிரச்சினையைத் தரும்  என்பது உளவியல். நமது தேவை நிறைவேறவில்லையென்றால்  நமக்கு மன உளைச்சல் வரும். என்றைக்காவது காலையில் எழுந்தவுடன் அலுப்பு, சலிப்பு போன்றவை இருந்தால் நமக்கு உளவியல் பிரச்சினை இருக்கிறது என அர்த்தம்..திருப்தி இல்லாத நிலைமையில் நாம் அடுத்தவர்களை நோண்டுவோம்.தேவையைப் பொறுத்து இந்த நோண் டுதல் தொடரும் -பிரச்சினைகள் தொடரும்.
மனிதர்கள் நம்பிக்கைகளின் அடிப்படையில் வாழ்கின்றார்கள். நான் நன்றாக இருக்கிறேன் என்று நினைப்பது ஒரு வகையான நம்பிக்கை என்றால், நான் எதற்குமே லாயக்கில்லை என்று நினைப்பது, யாரும் என்னை விரும்புவதில்லை என்று நினைப்பது இவை எல்லாம் கூட நம்பிக்கைதான். இந்த நம்பிக்கைதான் மன உளைச்சலைக் கொடுக்கின்றது. சேரக் கூடாத வர்களோடு சேர வைக்கிறது, தவறான காரியங்களைச் செய்ய வைக்கிறது. இதுதான் அடிப்படையான தன்மை.
நம்மை, சமூகத்தை மிகவும் பாதித்த சம்பவம் மாணவி அனிதாவின் தற்கொலை. அண்மையில் ஒரு பள்ளியில் படித்த 4 மாணவிகள் ஒன்றாக தற்கொலை செய்துகொண்டார்கள். இப்படி நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நமக்கு மிகுந்த கவலையைத் தருகின்றன.எங்கோ நடக்கும் மன உளைச்சல் விளைவு இது என நாம் விட்டுவிடமுடியாது.இது நமது வீட்டைத் தாக்க எவ்வளவு நேரம் ஆகும்?. எப்படி இதனை அணுகப் போகிறோம்?ஏன் மன உளைச்சல், தற்கொலை போன் றவை நிகழ்கின்றன? என்பதனை நாம் உளவியல் கருத் துக்களோடு பார்க்க வேண்டும்.
வாழ்க்கையில் நம்பிக்கைதான் குணத்தை மாற்று கின்றது. தந்தை பெரியார் நாம் நம்பிக் கொண்டிருந்த நம்பிக்கைகளைத்தான் அசைத்தார்.  நம்பிக்கைகளுக்கு  ஆதாரமான விசயங்களை அசைத்தார் .நம்பிக்கைகளை அசைப்பதற்கு கேள்விகள்தான் அடிப்படை..பெரியார் அத்தனையையும்  கேள்வி கேட்டார். கேள்வியைக் கேட்டு கேட்டு பதிலை வரவழைத்தார். நாம் கேள்வி கேட்கப் பழக வேண்டும். நான் கேள்வி கேட்கச் சொன்னேன் ?ஏன் கூட்டத்தில் இருக்கும் பெண்கள்  யாரும் கேள்வி கேட்கவில்லை? நமக்கு பெண்களுக்கு  பதில் சொல்லித்தான் பழக்கம்.சிறுவயதிலிருந்து நாம் கேள்வி கேட்கப்பழகவில்லை.பெரியார் சொன்னது கேள்வி கேட்கத்தான். நிறையக் கேள்விகள் நாம்  கேட்க வேண்டும். பெண் விடுதலை என்பதே கேள்விகள் அடிப்படையில்தான் நிகழும். நமக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால்  என்ன மாதிரியான நம்பிக்கை யினால் நமக்கு இந்தப் பிரச்சினை வருகிறது என்று நமக்குள்ளேயே நாம் கேள்வி கேட்டிருக்கின்றோமா ?
பணமே அத்தனை மகிழ்ச்சியை யும் நமக்கு  கொடுத்துவிடும் என்னும் நம்பிக்கையா? எல்லாமே ஒழுங்கு இல்லாமல் இருக்கிறது என்னும்  நம்பிக்கையா? வீடுகளில் செல்போன் தான் பிரச்சினை என்னும் நம்பிக் கையா? இப்படி நமக்கு நாமே கேள்வி கேட்க வேண்டும். என்ன பிரச்சினை என்று தெரியாமலேயே நமது பெண்கள் இருக்கின்றார்கள், அதுதான் பிரச் சினை.  பெண்கள் படிக்கின்றார்கள், வெளியில் வந்து வேலை பார்க்கின் றார்கள். இன்றைக்கு ஒரு ஆய்வு சில சாதிப் பெண்களுக்கு, வீட்டுப் பெண் களுக்கு  மனச்சிதைவு நோய் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. ஏன்? அந்தப் பெண்களுக்கு மதம் சார்ந்த சடங்குகள் மிக அதிகம். அது அவர்களைப் பாதிக்கின்றது. மனச் சிதைவு நோய்வாய்ப்படுகின்றார்கள்.  அடுப்படியிலேயே வைத்திருந்தால் நமது வீட்டுப் பெண்களுக்கும்  வரும் பெண்களுக்கு அவர்களுடைய திறனை, சக்தியைப் பயன்படுத்த விடவேண்டும்.பெண் விடுதலை வேண் டும். இன்னும் வரவில்லை என்பதற்கு பெண்களின் எண்ணமும் காரணமாக இருக்கிறது. ஆண்களைச் சார்ந்தே சிறுவயதிலிருந்தே பழகிவிடு கின்றோம். சுயமாக வாழ வேண்டும். பெரியார் சொன் னது போல பெண்கள் சுயமாக எதையும் எதிர்கொள்ள வேண்டும்.
தந்தை பெரியார் பெண்களிடம் கர்ப்பப்பையை எடுத்து விடுங்கள் என்றார். அப்புறம் சந்ததி எப்படி வளரும் என்று கேட்டபோது அது ஆண்களின் கவலை என்றார். அது உன் கவலை இல்லை. உளவியலில் ஒருமுகமாக பார்ப்பது, அதாவது போகஸாகப் பார்ப்பது மிக முக்கியம். தந்தை பெரியார் பெண் விடுதலை விசயத்தில் போகஸாக பெண்களுக்கு கர்ப்பப்பை என்பது பெண் விடுதலைக்கு தடையாக இருக்கிறது என்று பார்க்கின்றார். இப்படித்தான் பார்க்க வேண்டும் உளவியல் அடிப்படையில். .
தந்தை பெரியார் எப்படி  ஒரு பிரச்சினையை அணுகுவது என்பதனை நமக்கு கற்றுக் கொடுத் திருக்கின்றார். அது உளவியல் அடிப்படை சார்ந்தது. எதையும் மேலோட்டமாகப் பார்ப்பதல்ல தந்தை பெரியாரின் அணுகுமுறை. எதனையும் ஆழமாகப் பார்ப்பது. உள்ளுக்குள் சென்று பார்ப்பது என்பதல்ல, பெரியாரின் அணுகுமுறை. உள்ளுக்குள் உள்ளுக்குள் உள்ளுக்குள் சென்று பார்ப்பது, ஒவ்வொரு விசயத்தை யும் நிர்வாணமாகப் பார்ப்பது. அடிப்படையிலிருந்து ஆரம்பித்து அணுகி அணுகிப் பார்ப்பது என்பது. தந்தை பெரியாரின் இந்த அணுகுமுறையை நான் பயன்படுத்துகின்றேன். பிரச்சனைகளைத் தீர்க்கின்றேன். கடவுளைப் பற்றி இப்படி அணுகினால் அச்சம்தான் கடவுளுக்கு அடிப்படை என்பதனை நாம் உணரமுடியும்
நாங்கள் உளவியலில் ஒவ்வொரு விசயத்தையும் என்ன? ஏன், எதற்கு? யார்? எங்கே? என்னும் 5 டபுள்யூ மற்றும் எப்படி என்னும் ஒரு ஹெச் என்பதாகப் பார்க்கவேண்டும் என்று சொல்லித்தருகின்றோம். இதைத்தான் பெரியார் சொல்கின்றார். இல்லை, இல்லை பெரியார் சொன்னதை நாங்கள் சொல்கின்றோம். அவரின் தர்க்க முறைகள் ஆச்சரியமானவை.பெரியார் சொன்ன தத்துவ விசாரணை  என்று ஒரு பகுதி இருக் கிறது. சர்வ சக்தி என்று சொல்லப்படும் கடவுள் பற்றி
7 கேள்விகள் கேட்கின்றார். 70 வகையான பதில்கள் இருப்பதைச் சொல்கின்றார்.
நாம் நினைப்பதற்கும் நடப்பதற்கும் உள்ள வேறுபாடே மன அழுத்தம். நான் உளவியல் ரீதியாக அணுகும்போது ஒவ்வொரு விசயத்தையும் நிர்வாண மாகப் பார்ப்பது போல் பார்க்கின்றேன். அதுதான் உண்மை. நீங்கள் முகம் சுளிக்கலாம். ஆனால் அப்படிப் பார்த்துப் பழக வேண்டும்.  சமூக அறிவியல் படிக்கும் போது முதல் நாள் நாமெல்லாம் ஸ்பிருச்சுவலாக (ஆன்மிகமாக) இருக்க வேண்டும் என்றார்கள். மறு நாள் பாடம் ஆரம்பிக்கும்போது முதல் பாடமே தந்தை பெரியார் பற்றித்தான். ஆசிரியரிடம் கேட்டேன், அவர் பெரியார் இல்லாமல் சமூக அறிவியல் பாடம் எப்படி இருக்க முடியும் என்றார்! பெரியாரைத் தாண்டி சமூக அறிவியல் கிடையாது. நாம் எந்தத் துறைக்குள் சென் றாலும் பெரியார் சொன்ன கருத்துக்களைப் பார்க்கலாம். உளவியலிலும் அப்படித்தான். பெரியார் சொன்ன பல விசயங்கள் உளவியலாக சொல்லித்தரப்படுகின்றன.
மும்பையில் உளவியல் சார்ந்து ஒரு கருத்தரங்கம் வைத்திருந்தார்கள். சென்றிருந்தேன். அங்கே சென்றால் தந்தை பெரியார் சொன்ன  கேள்விகள் கேட்பதைத் தான் சொல்லித்தருகின்றார்கள். இதுதான் எனக்கு முதலிலேயே பெரியார் மூலமாகத்தெரியுமே என்றுதான் நினைத்தேன். பெரியார் ஒழுக்கத்தை மாணவப் பருவத் திலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்திச் சொல்கின்றார். நாம் நினைத்துக் கொண்டி ருக்கின்ற ஒழுக்கம் என்பது வேறு. பெரியார் சொன்ன ஒழுக்கம் என்பது வேறு. நாம் எடுத்துக் கொண்டிருக்கின்ற பொறுப்பை செவ்வனே செய்வதுதான் ஒழுக்கம் என்று சொல்கின்றார் பெரியார்.. இந்த அரங்கத்தில் பேச வந்தி ருக்கின்ற எனது ஒழுக்கம், நான் பேசுவது 10 பேருக்கா வது உபயோகமாக இருக்கும்படி பேசுவதுதான். ஒவ் வொரு நிமிடத்தையும் நாம் ஒழுக்கமாக செய்திருக்கின் றோமா என்று யோசிக்கவேண்டும் என்று சொல்கின்றார் பெரியார். ஒவ்வொரு நிமிடமும், படிக்கும்தோறும் ஆச்சரியத்தைக் கொடுக்கின்றார் பெரியார்.
உறவு முறைகளில் வரும் சிக்கல்கள் என்பவை உளவியலில் மிக முக்கியமானவை. உறவுமுறைகளில் வரும் சிக்கலுக்கு தீர்வு கொடுக்க  நான் ஒரு மன நல மருத்துவரைத்தான் நாடுகின்றேன். அந்த மன நல மருத்துவர் அய்யா ஆசிரியர் வீரமணி. நமது மாமியார் ஏதாவது சொல்லிவிட்டார் என்று சொன்னால் அதனையே நினைத்துக்கொண்டிருப்போம். இல்லை வேறு யாரும் ஏதாவது சொல்லிவிட்டால் அதனைப் பற்றி நினைப்பது,பேசுவது என இருப்போம். அய்யா ஆசிரியர் சொல்கின்றார் , மாடு அசை போடுவதுபோல, உறவுகள் சொல்லும் சொற்களை அசை போடுவதை நிறுத்துங்கள் என்று சொல்கின்றார்.  அவரின் வாழ்வியல் சிந்தனைகள் மனதைத் தொடுபவை. ஒரு நிகழ்வை நாம் பாதிக்கப்பட்டவர்கள் நிலையில் நின்று பார்க்க வேண்டும். இதனைத்தான் “வாழ்வியல் சிந்தனைகள்” கட்டுரையில் அய்யா ஆசிரியர் அவர்கள் “எம்பதி” யோடு இருங்கள் என்று சொல்கின்றார். அடுத்தவர் களைப் பற்றிக் குறை சொல்வதற்கு முன் அவர்கள் நிலையில் நின்று நாம் யோசிக்க வேண்டும் என்று சொல்கின்றார். அடுத்தவர் நிலையில் நின்று பிரச்சினை களை அலசுகின்றபோது மன அழுத்தம் இருக்காது. மன அழுத்தம் இல்லையென்றால் அமைதி இருக்கும்.மகிழ்ச்சி இருக்கும். ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப் போவதற்கு முன்பு மனிதத்தன்மையோடு நடந்து கொண்டோமா ? என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் சொல்கின்றார்.
அடுத்து கல்வி. பகுத்தறிவுக் கல்வி வேண்டும் என்றார் பெரியார். சுயமரியாதை உணர்ச்சியைத் தரும் கல்வி வேண்டும் என்றார். குழந்தைகளுக்கு சுயமரி யாதையை, பகுத்தறிவைச்சொல்லித்தரும் கல்வி வேண்டும் என்றார்.நமது பிள்ளைகளுக்கு 13 வயது வரை தான் நாம் சொல்லித்தர முடியும். நாம் சொல்வதை அந்த வயதுவரைதான் கேட்பார்கள். அதற்குப்பின் அவர்கள் சொல்வதை நாம் கேட்கவேண்டும். கேள்வி கேட்கவிட வேண்டும். உங்களை எதிர்த்து பேச விடவில்லையென்றால் அடிமையாகத்தான் இருப்பான். சுதந்திரமாக சிந்திக்க வேண்டும் என்றால் கேள்வி கேட்க விடுங்கள். 13 வயதுவரை நிறையப் பேச வேண்டும். அப்போதுதான் நம்மிடம் பேசுவான்.
பிள்ளைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது.எதையும் சமாளிக்கும் மன வலிமையை உண்டாக்க வேண்டும். எனது மகளிடம் “கணினியை பயன்படுத்து, போட்டோவை நெட்டில் போட்டு விடுவேன் என்று சொன்னால், போட்டால் போடுடா, எனக்கு ஒரு காபி அனுப்படா” என்று சொல்லிவை என்றுதான் சொல்லி வைத்திருக்கிறேன். புளுவேல் கேமிற்குப் பிள்ளைகள் எப்படி பலியாவர்கள், நாம் நம் பிள்ளைகளிடம் பேசினால்? நாம் நமது பிள்ளைகள் சொல்வதைக் காது கொடுத்து கேட்க வேண்டும். பிள்ளைகளைக் கவனிக்க வேண்டும். “வாழ்வியல் சிந்தனைகள்”  5-ஆம் பாகத்தில் விடலைப் பருவத்தில் என்னும் தலைப்பில் ஆசிரியர் வீரமணி எழுதியிருக்கின்றார்; குழந்தைகள் அடிக்கடி உடல் ரீதியாகப் பிரச்சினை இருக்கிறது என்று சொன் னால், கை வலிக்கிறது,வயிறு வலிக்கிறது என்று சொன் னால் கவனிக்க வேண்டும். பேசவேண்டும்.  மருத்து வரிடம் காண்பிக்க வேண்டும்.அப்படியே உளவியல் மருத்துவரைப் போல அந்த வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையில் அய்யா ஆசிரியர் எழுதியிருக்கின்றார். படிக்கும் பிள்ளைகளுக்கு ஹோமோ செக்ஸ் தொந்தரவு இருக்கின்றது. வெளி நாட்டில்தான் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள். இங்கும் இருக் கிறது. பகுத்தறிவோடு குழந்தைகளை வளர்க்க வேண் டியது அவசியம். அப்போதுதான் பிள்ளைகள் எந்தப் பிரச்சனையையும் சமாளிப்பார்கள்.மனம் என்னும் குப்பையை கிளீன் செய்யுங்கள் என்று ஆசிரியர் சொல்கின்றார்.
பகுத்தறிவை பயன்படுத்த வேண்டும். பகுத்தறி வோடு சிந்திக்காத சமூகத்தில் என்ன கொண்டு வந்தாலும் பலன் இல்லை என்றார் பெரியார். டிஜிட்டல் இண்டியா கொண்டு வந்தாலும் பகுத்தறிவு இல்லை யென்றல் பலன் இல்லை.எதையும் பகுத்தறிவு மூலம் அணுக வேண்டும். அப்படித்தான் திருமணம் என்ப தனை கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்றார் பெரியார். சமூகப்பணி ஆற்றுவதற்கு திருமணம் தடையாக இருக்கிறது என்றார் பெரியார். மன நலத் தோடு வாழ்வதற்கான வழிதான் பகுத் தறிவு. எனக்கு உடல் ரீதியாக பல பிரச் சினைகள் உண்டு. ஆனால் மன தைரியத் தோடு இருப்பதற்கு பகுத்தறிவுதான் கார ணம். பிள்ளைகள் அவர்களாக வளர்கின் றார்கள் என்றார் பெரியார்.பிள்ளைகள் வளரவேண்டும். நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். எனது மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தனியாக வெளி நாடு சென்று வந்தாள் .உலக அளவில் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்றாள். அய்யா ஆசிரியர் அவர்களிடம் பாராட்டு பெற்றாள்.
உடல் ரீதியாக எல்லோருக்கும் பிரச் சினைகள் இருக்கின்றன. நான் முதுகு வலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் படுத்துக்கொண்டு கொஞ்சம் சோர்ந்து இருந்தேன். எனது பெரிய அத்தான் வந்து பார்த்தார்.எனக்கு இருதயத்தில் எத்தனை ஓட்டை இருக்கிறது தெரியுமா? என்ன நடந் தது என்று படுத்துக் கொண்டு கிடக்கிறாய், நாமெல்லாம் பெரியாரிஸ்ட் இல்லையா ? என்றார். துள்ளி எழுந்து உட்காருவதுபோல எழுந்தேன். எத்தனை வலிகளைத் தாங்கிக்கொண்டு தந்தை பெரியார் பாடுபட்டார். அவரின் உடல் வலியோடு ஒப்பிடும் போது நமது உடல் வலியெல்லாம் வலியே அல்ல என்பதுதான் உண்மை.
மற்ற தலைவர் எல்லாம் நெஞ்சில் இருக்கின்றார்கள். ஆனால் பெரியார் மூளையில் இருக்கின்றார். நெஞ்சில் இருப்பது அழிந்துவிடும். ஆனால் மூளையில் இருப்பது அழியாது. அதனால் தான் நமது எதிரிகளால் தமிழகத்தில் நோட்டாவைக் கூட வெல்ல முடியவில்லை. என்னோடு இருப்பவர்களுக்கு, உளவியல் துறையில் இருப்பவர் களுக்கு  இல்லாத ஒரு விசயம் என்னிடம் இருக்கிறது. அது பெரியார் கொள்கை. அது மனப்பாடமாகத்தெரியும். அதனை இன்றைக்கு இருக்கும் பிரச்சினைகளோடு இணைத்து தீர்வைச்சொல்கின்றேன். தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது என்பதற்கு அடிப்படைக்காரணம் பெரியார்தான். அதனால் எனது துறையில் வெற்றி பெற முடிகிறது.உளவியல் பற்றி நாள் கணக்கில் பேச இயலும், நான் அதனின் சில பகுதிகளை மட்டும் எடுத்துக் காட்டியிருக்கிறேன்!
மதுரையில் 30.12.2017 அன்று நடைபெற்ற  கருத்தரங்கத்தில் “தந்தை பெரியாரும் உளவியலும்” என்னும் தலைப்பில் ஜெ.வெண்ணிலா அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.
தகவல்: வா.நேரு

நன்றி : விடுதலை 24.01.2018

Monday 22 January 2018

தந்தை பெரியாரும்-உளவியலும்: கருத்தரங்கம்...

மதுரை, ஜன.22 மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சிறப்புக்கூட்டம் 30.12.2017 அன்று மாலை 6.15 மணிக்கு மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ.எஸ். அரங்கில் நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பா.சடகோபன் அனைவரையும் வரவேற்றார். ஓய்வுபெற்ற நீதியரசர் பொ.நடராசன், மதுரை மண்டல  செயலாளர் மா.பவுன்ராசா, திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் வே.செல்வம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். கூட்டத்திற்கு பகுத்தறி வாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு தலைமை தாங்கினார்.





அவர் தனது தலைமை உரையில் “கவிஞர் வைரமுத்து அவர்கள் ஒரு கவிதையில் மனிதனுக்கு மலச்சிக்கலும், மனச்சிக்கலும்? இருக்கக்கூடாது என்பார்.  மனச்சிக்கல் நம்மைப் பலவிதத்திலும் தொல்லைப்படுத் துவது. மனச்சிக்கலில் மாட்டிக்கொள்பவர்கள் அதனை முறையாக அணுகத் தெரியாமல் கார்ப்பரேட் சாமியார்களிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படுகின்றார்கள். மனச்சிக்கலில் மாட்டிக் கொள்பவர்கள் படிக்காதவர்கள் அல்ல, மெத்தப்படித்தவர்கள், சாப்ட்வேர் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்கள், நிறைய சம்பாதிப்பவர்கள். சிலர் மனச்சிக்கல் களில் மாட்டிக்கொண்டு, அதனைத் தீர்ப்பதற் காக என்று சொல்லி கார்பரேட் சாமியார்களின்  அடிமைகளாக மாட்டிக்கொண்டு முழிக்கின் றார்கள். இன்றைய சிறப்புப்பேச்சாளர் ஜெ. வெண்ணிலா பகுத்தறிவுக் குடும்பத்தைச் சார்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான  பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர்” எனக்குறிப்பிட்டு உரையாற்றினார்.
“மானம், மானுடம் பெரியார்”
நூல் அறிமுகம் பகுதியில் புத்தகத் தூதன் பா.சடகோபன் திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் எழுதிய “ மானம், மானுடம் பெரியார் “ என் னும் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். அவர் தனது உரையில் “ சு.அறிவுக்கரசு அவர் களால் எழுதப்பட்டுள்ள இந்த நூல் மிகப் பெரிய வரலாற்றுக் கருவூலம். கருவூலம் என்பது சேர்ப்பவருக்கும் பயன்படும், பயன் படுத்துபவருக்கும் பயன்படும். அப்படி அய்யா அறிவுக்கரசின் மன ஓட்டத்தை மட்டு மல்ல, வாசிக்கும் நமது மன ஓட்டத்தையும் செலுமைப்படுத்தும் கருவூலம் இந்தப்புத்தகம்.
இந்த நூலின் அறிமுகவுரையில் நேரு அவர்கள், ஆற்றில் ஓடும் வெள்ளம், கரை புரண்டு ஓடும். அது சுழற்றி சுழற்றி அழுக்கு களை அடித்துச்செல்லும் . அப்படி உணர்ச்சி வெள்ளமாகச்செல்லும் அறிவுக்கரசு அவர் களின் எழுத்துகள் சமூக அழுக்குகளை அடித்துச்செல்லும் தன்மை உள்ளதாக உள்ளது என எழுதியிருப்பார். அப்படி ஒரு உணர்ச்சி வெள்ளமாக இந்த நூல் வந்துள்ளது. மனி தனை அச்சத்திலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை செய்வதுதான் பெரியாரின் கருத் துக்கள் என்று இந்த நூல் ஆசிரியர் எழுதியிருக்கின்றார். உண்மை, அச்சம் பல வகை என்றாலும் மனிதனுக்கு முதலில் ஏற் பட்ட அச்சம் உடல் வலியாகத்தான் இருக்கவேண்டும். உடல் வலிதான் மனிதனை முடக்குகின்றது.உடல் வலிக்குப்பின்புதான் உயிர் அச்சம், இழப்பு அச்சம் போன்ற பல அச்சங்கள். ஆனால் உடல் வலி என்னும் அச்சம் தந்தை பெரியாரை ஒன்றும் செய்ய இயலவில்லை.சிறுவயது முதல் இறப்புவரை தந்தை பெரியாரை உடல் வலி தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் அதனை  மீறி வெற்றி படைத்தவர் பெரியார்.
அதனைப் போலவே ஆதிக்கத்திலிருந்து விடுதலை. காட்டில் வாழ்ந்த மனிதனை முதலில் ஆதிக்கப்படுத்தியது அவன் விரும் பிய உணவு என்று நான் கருதுகின்றேன். எந்த உணவு மீண்டும் மீண்டும் உண்ண வேண்டு மென்று தோன்றியதோ அதுதான் அவனை ஆதிக்கப்படுத்தியிருக்க வேண்டும்.ஆனால்  எந்தவொரு ஆதிக்கமும் தந்தை பெரியாரை ஆட்கொள்ள இயலவில்லை. ஒடுக்கப்படு பவர்கள் அவர்களை ஒடுக்குபவர்கள், இரு வருக்கும் ஒருவர் நல்லவராக இருக்கமுடியாது. இதற்கு பெரியார் ஒரு எடுத்துக்காட்டு சொல் கின்றார். .திருடனுக்கும் திருட்டுக்கொடுப்பவ னுக்கும் ஒருவன் நன்மை செய்யமுடியாது. அப்படித்தான் திருடுபவர்கள் ஒரு வகுப்பார். திருட்டு கொடுப்பவர்கள் ஒரு வகுப்பார் எனச்சொல்கின்றார். ஆனால் எல்லாவிதமான ஆதிக்கத்தையும் எதிர்ப்பேன் என்று சொல் கின்றார் பெரியார்.  பார்ப்பனர்கள் ஏதாவதொரு ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டால் அந்த ஆதிக்கத்தையும் நான் எதிர்ப்பேன் என்று சொல்கின்றார் பெரியார். இப்படி ஏராளமான செய்திகள் இந்தப்புத்தகத்தில்  இருக்கிறது” எனக் குறிப்பிட்டு உரையாற்றினார்.
திராவிடர் கழகத்தின் அமைப்புச்செயலாளர் வே.செல்வம் சிறப்புரையாற்றிய ஜெ.வெண் ணிலா  மகேந்திரன் பற்றிய அறிமுக உரையை ஆற்றினார். மதுரை அய்.ஜெயராமன் அவர்களின் மகள். தூத்துக்குடி மாவட்டத்தின் தலைவராக இருந்து மறைந்த  சிவானணைந்த பெருமாள் அவர்களின் மருமகள், அண்ணன் மறைந்தும் மறையாமல் இருக்கின்ற தூத்துக் குடி பொறியாளர் மனோகரன் அவர்களின் தம்பி- திண்டுக்கல்லில் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் மகேந்திரன் அவர்களின்  மனைவி என்னும் சிறப்புக்குரியவர். சமூக அறிவியல்,உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனத்தில் உளவியல் ஆலோசகராக,தற்போது மேலாளராகப் பணியாற்றுபவர். தொடர்ந்து இளைஞர் களின், பெண்களின், மாணவ, மாணவி களின் பிரச்சினைகளைப் பேசித்தீர்த்து வைப்பவர்..” என்று சிறப்பாக சிறப்புரையாற்றுபவரின் தனித்தன்மைகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து “ தந்தை பெரியாரும் உளவியலும்” “ என்னும் தலைப்பில் ஜெ.வெண்ணிலா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் “சிறு வயது  முதல் பெரியாரைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்து, படித்து வருபவள் நான். எனது இணையர் மகேந்திரனின் குடும்பமும் பெரியாரைப் பின்பற்றும் குடும்பம். எனது கணவரின் அண்ணன் மறைந்த எனது மாமா மனோகரன் எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்பவர். எனவே பெரியாரைப் பற்றிப் பேசுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியது. அதிலும் பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் பேசுவது மிகுந்த மகிழ்ச்சி தருவது ஏன் என் றால் பகுத்தறிவாளர் கழகம் என்றால்  மனி தர்கள் கழகம் என்றார் பெரியார். மனிதர்கள் கழகத்தில் பேசப்போகிறோம் என்பது எனக்கு மகிழ்ச்சி.
“தந்தை பெரியாரும் உளவியலும்” என்பது என் தலைப்பு. உளவியல் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிறுவனத்தில் பணி புரிபவள் நான் “ எனக்குறிப்பிட்டு உளவியல் தத்துவம், தந்தை பெரியாரின் கருத்துக்கள், திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் கருத்துக்களை இணைத்து பவர் பாயிண்ட் மூலம் காணொலிக் காட்சிகளாவும் காட்டி, திரை யிட்டும் திரையிட்டதை விளக்கியும் புதிய அணுகுமுறையில் புத்துணர்ச்சி தரும் அடிப்படையில் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தின் முடிவில் கேட்கப்பட்ட அய்யங்களுக்கு எல்லாம் ஜெ.வெண்ணிலா பதில் அளித்தார். கூட்டத்தின் நிறைவில் கல்லூரி மாணவி சொ.நே.அறிவுமதி நன்றி கூறினார்.
கூட்டத்தில் உசிலை மாவட்டத்தலைவர் சிவகுருநாதன்,பொதுக்குழு உறுப்பினர் இராக்கு தங்கம், வழக்குரைஞர் அணி மாநில துணைச்செயலாளர் நா.கணேசன், பொறியாளர் முத்தையா, ந.முருகேசன் -அவரது துணைவி யார்,வழக்குரைஞர் தியாகராசன்,வடக்குமாசி வீதி செல்லதுரை, சுமதி செல்வம், மாரிமுத்து, பேக்கரி கண்ணன், ஆட்டோ செல்வம் உட் பட்ட பொறுப்பாளர்களும், மகளிரும், ஆர்வ லர்களும் கலந்து கொண்டனர்.

Friday 12 January 2018

உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்பு.........


திருச்சி உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்பு
பகுத்தறிவுக் கொள்கையை மக்கள் இயக்கமாக ஆக்கியிருக்கும்
திராவிடர் கழகத்தின் பணியைக் கண்டு உலக நாத்திகர்கள் பாராட்டு!
எல்லோருக்கும் எல்லாமுமான சமூகநீதியை முன்னெடுப்போம்!

கோவையில் தமிழர் தலைவர் அளித்த பேட்டி


கோவை,ஜன.10 எல்லோருக்கும் எல்லாமு மான சமூகநீதியை முன்னெடுப்பது என்ற உலக நாத்திகர் மாநாட்டின் பிரகடனத்தை செயல் படுத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கோவையில் 8.1.2018 அன்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

ஜனவரி 5, 6, 7:


உலக நாத்திகர் மாநாடு

வணக்கம். கோவை செய்தியாளர் நண்பர் களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

கடந்த 5, 6, 7 ஆகிய நாள்களில் உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் மூன்று நாள்கள் சிறப்பாக நடந்து முடிந்தது. அதில், உலகத்தினுடைய பல பகுதிகளில் இருந்து, தெளிவாகப் பிரகடனப்படுத்திக் கொண் டிருக்கக்கூடிய நாத்திக அமைப்புகள், மனித நேய நன்னெறி அமைப்புகள் மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ ணிtலீவீநீணீறீ பிuனீணீஸீவீst கிssஷீநீவீணீtவீஷீஸீ  என்ற உலகம் முழுவதும் 150 கிளைகள் இருக்கக்கூடிய ஒரு பொது அமைப்பு - அதனுடைய தலைமையிடம், லண்டனிலும், பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகரிலும் உள்ளது.

அதனுடைய தலைமைப் பொறுப்பாளர் அம்மையார் ஓ’கேசி என்பவர். அதேபோல, இங்கிலாந்தில் அதற்கு மிகப்பெரிய அளவிற்கு பேச்சாளராக, கருத்தாளராக இருக்கக்கூடிய கேரி மெக்லேலண்ட் என்பவரும் அந்த நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொண்டார்கள்.

அதேபோல, அமெரிக்க, பெரியார் பன்னாட்டு அமைப்பு, அதுபோல, கனடா, இங்கிலாந்து, மலேசியா, குவைத் மற்றும் பல நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் ஏராளமாக வந்திருந்தார்கள்.

அரியானா, பஞ்சாப், மத்தியப் பிர தேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலங் கானா, ஆந்திரா, கேரளா இப்படி பல மாநிலங்களிருந்து சுமார் 500 பேராளர்கள் வந்திருந்தார்கள். எல்லோரும் சேர்ந்து மூன்று நாள்கள், பல்வேறு வகையில் மதவாத தீவிரவாதங்கள் பரவிக்கொண்டு, ஜாதி வெறி, மதவெறி போன்ற அமைப்புகள் வளர்ந்துகொண்டிருக்கின்ற இன்றைய சூழலில், நாத்திகம் என்பதுதான் மனித நேயத்தை வளர்க்கக்கூடிய, மனித சமு தாயத்தை ஒன்றுபடுத்தக்கூடிய ஒரு சிறந்த தத்துவமாக - பெரியாருடைய தத்துவம் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நாத்திக அமைப்புகள் எல்லோருமே இணைந்து, மனித குலத்தினுடைய சிறந்த நன்னம்பிக்கை என்ற அந்தக் கருத்தை மய்யமாக வைத்து, மூன்று நாள்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அத்துணை பேரும் மிகுந்த மகிழ்ச்சியோடு பல ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தார்கள்.  ஆய்வரங்கங்கள் நடைபெற்றன.

பிரகடனம் நிறைவேற்றப்பட்டது

முதல் நாள் தொடக்க விழாவில், பல்வேறு பேராசிரியர்கள், அறிஞர்கள் எல்லோரும் பங்கேற்றனர்.

சிறந்த நாத்திகராகவும், பகுத்தறிவாளராக வும் இருக்கக்கூடிய மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களும் கலந்து கொண்டார் முதல் நாளில். அதேபோல, மற்ற கருத்தாளர்களும் ஏராளமாக அம்மாநாட்டில் பங்கேற்றார்கள்.

இரண்டாம்நாள்மாநாட்டில்,நாடா ளுமன்ற உறுப்பினராகவும், திராவிட முன் னேற்றக் கழக மகளிரணி பொறுப்பாளராகவும் இருக்கக்கூடிய கவிஞர் கனிமொழி அவர் களும், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களும் மற்ற தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

அதேபோல, மூன்றாம் நாள் மாநாட் டில், பல, பேராசிரியர்கள், நாகநாதன்  போன்றவர்கள்; கருநாடகத்தில் இருக்கக் கூடிய சட்ட நிபுணர்கள் - மேனாள் அரசு தலைமை வழக்குரைஞர் ரவிவர்மகுமார் போன்றவர்கள் கலந்துகொண்டு, பிuனீணீஸீவீst ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ என்ற ஒரு பிரகடனத்தை - தீர்மானமாக - பொதுவாக இதுபோல சர்வ தேச மாநாடுகள், பன்னாட்டு மாநாடுகள் - உலக மாநாடுகள் நடைபெற்றால், அந்த மாநாடுகளில் தீர்மானம் என்று நிறை வேற்றுவதில்லை. மாறாக, ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ பிரக டனம் என்று சொல்வார்கள்.

எனவே, 2018 இல் நடைபெற்ற இம்மாநாட் டில், அத்துணை பெருமைகளும் கலந்து நிறைவேற்றப்பட்ட ஒரு தெளிவான பிரக டனம் என்னவென்று சொன்னால், மதவெறி, ஜாதி வெறி, தீண்டாமை போன்றவை இந்தி யாவை உலுக்கிக் கொண்டிருக்கின்றன.


எல்லோருக்கும் எல்லாமும் என்ற சமூகநீதி

உலகம் முழுவதும் இருக்கின்ற மக்கள் ஒன்றுபடுவதற்குப் பதிலாக, அவர்கள் பல் வேறு வகைகளில் பிரித்து வைக்கப்படுவது; அவைகளுக்கு வன்முறை மூலமாக கருத்துகளை, சகிப்பின்மை என்பதை ஏற்றுக்கொண்டு, மாற்றுக் கருத்துகளையே ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லாத ஒரு சூழ்நிலை - இவைபற்றியெல்லாம் கவலை கொள்கிறது - எனவே, இதனை மாற்றி, ஒரு புத்தாக்கத்தை உருவாக்கவேண்டும். அதன் மூலம், எல்லோருக்கும் எல்லாமும் என்ற சமூகநீதி, பகுத்தறிவு அதேபோல, மனிதநேயம் இவையெல்லாம் வளர்க்கக்கூடிய அளவிற்கு இந்தத் தத்துவங்கள் பரவவேண்டும் என்று சொன்னார்கள்.

அதாவது சுருக்கமாக சொன்னால், இந்தத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட தத்துவம்தான், திராவிட நெறி - திராவிடத் தத்துவம்  என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னோம்.

‘‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்!’’

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘’

‘‘அனைவருக்கும் அனைத்தும்‘’

சுயமரியாதை இயக்கத்தினுடைய, பெரியார் அவர்களுடைய கொள்கைத் தத்துவம்.


மக்கள் இயக்கமாக இருக்கிறது

இதை அவர்கள் வெகு அளவிற்குப் பாராட்டினார்கள். அடுத்தடுத்து இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட பல்வேறு சமூகநீதிக்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்று சொல்லி, அவர்கள் உரையாற்றும்பொழுது, அவர்களுடைய நாட்டில், நாத்திகம், பகுத்தறிவு அமைப்புகள் என்பது ஓர் அரங்கத்தில் இருக்கக்கூடிய ஓர் ஆய்வரங்கமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில்தான், தந்தை பெரியார் அவர்களுடைய முயற்சியினால், அது ஒரு மக்கள் இயக்கமாக இருக்கிறது என்பதை பார்த்து வியந்தனர்.

எனவேதான், உலக நாத்திகர் மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள்; இருபாலரும் வந்திருந்தார்கள்; குழந்தைகளோடு வந்திருந்தார்கள். எனவே, ஒரு புதிய திருப்பம் - மக்கள் மத்தியில். குழந்தைகளுக்கும் பகுத்தறிவு உணர்ச்சி ஊட்டப்படவேண்டும். நம்முடைய நாட்டின் பாடத் திட்டங்களில், மற்றவைகளில் அறிவியலைப் படிக்கிறோமே தவிர, அறிவியல் முறையில் வாழவில்லை.

பிரியா விடைபெற்றனர்

எனவே, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும்; மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லாமல் இருக்கவேண்டும். ஆண் - பெண் என்ற பிறவி பேதம் இருக்கக்கூடாது; எல்லோருக்கும் சம வாய்ப்பு தரப்படவேண்டும் என்பதையே மய்யப்படுத்திய அந்தக் கருத்தரங்கத்தினுடைய செய்திகளை உலகளாவிய நிலைகளுக்கு எடுத்துப் போய், அந்தந்த நாடுகளிலும், அந்தந்த மாநிலங்களிலும் இந்தக் கொள்கையை வைத்துப் பரப்புவது என்று அவர்கள் பிரியா விடைபெற்றனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த மாநாடு 7 ஆம் தேதி மாலையுடன் நிறைவுற்றது.

நன்றி : விடுதலை 10.1.2018