Friday 25 January 2019

Saturday 19 January 2019

ஒளவையின் கூற்றை அடித்துத் துவைக்கிறார் அய்யா பெரியார்..

அரிது அரிது மானிடராய்ப்
பிறத்தல் அரிது என்றார் ஒளவை...
ஒளவையின் கூற்றை
அடித்துத் துவைக்கிறார் அய்யா பெரியார்..
கொடிது ! கொடிது! என்று கூறடா
மானுடப்பிறப்பை எனக் கூறுகிறார்....

தேடித் தேடி இரையைத் தின்னும்
இணையோடு குதுகலிக்கும்
சில நேரங்களில் துன்புறும்
ஆனால் துன்பமிது என்று உணரும்
கொடுமை விலங்குகளுக்கு இல்லை

குதிரையை வண்டியில் பூட்டி நோகடித்தாலும்
காளையைப் பிடித்து காயடித்தாலும்
துன்புறும் ஆனால் துன்புறுகிறோமே எனும்
துயர உணர்ச்சி அவைகளுக்கு உண்டோ....

நாளைக்கு வேண்டுமே எனும் கவலை உண்டா?
போதாது போதாது எனும் பேராசை உண்டோ?
விலங்குகளிடம் ..

அடப்போடா, இத்தனையும் கொண்ட மனிதா,
நீதான் உலகில் இழிந்த பிறவி போ,போ
என்று சொல்கிறார்....

கவலை இல்லா மனிதரில்லை...
பேராசை இல்லா மானிடப்பிறப்பு இல்லை
அட இவைகள் கூட இயற்கைத் தடைகள்....

செயற்கைத் தடைகள் எத்தனை? எத்தனை?
ஆளுக்கொரு கடவுள்....
அவரவர் விருப்பப்படி வணங்கும் முறைகள்....
ஒன்றிணையா விடாது துரத்தும்
சாதிகள்...மதங்கள்..சாத்திரங்கள்...குப்பைகள்...
பார்ப்பானுக்கு கொட்டி அழவே
எத்தனை சடங்குகள்...விழாக்கள் ...
அரசு வசூலிக்கும் வரிகள் அறிவாய் நீ
அவாள்கள் வசூலிக்கும் வரிகள் அறிவாயோ நீ?

பகுத்து உணரும் அறிவு உண்டு உனக்கு
அட அதனைப் பயன்படுத்தும்
அறிவு உனக்கு உண்டோ ?
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என
எந்த வகையில் குதுகலிக்கிறாய் நீ?

பெரியார் அன்றும் இன்றும்
புத்தகத்தைத் திறந்த உடனே
வந்து விழும் வினாக்களுக்கு
விடை சொல்வார் யாருமுண்டோ...சொல்வீரே....



                                                                                                        வா.நேரு
                                                                                                          19.01.2019


Tuesday 15 January 2019

'கருஞ்சட்டைப்பெண்களின் மணிமகுடம் மணியம்மையார்........ஓவியா...

அண்மையில் படித்த புத்தகம் : கருஞ்சட்டைப் பெண்கள்
நூல் ஆசிரியர்               : ஓவியா
வெளியீடு : கருஞ்சட்டைப்பதிப்பகம்,044-42047162
முதல் பதிப்பு : நவம்பர் 2018, 176 பக்கங்கள்,விலை ரூ 130/-

                                   கட்டுரை (5)

முடிவாக 'கருஞ்சட்டைப்பெண்களின் மணிமகுடம் மணியம்மையார் ' என்னும் தலைப்பில் கொடுத்திருக்கும் கட்டுரை மிக அரிதான கட்டுரை. எதிர்மறைக் கருத்துகள் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல , திராவிட இயக்கத்தைச்சார்ந்தவர்களே ஒரு முறைக்கு இருமுறை படித்து தெரிந்துகொள்ள வேண்டிய கட்டுரை. "பொதுவாக அன்றைய கருஞ்சட்டைப்பெண்கள் அனைவருமே சமூகத்தின் அவமதிப்புகளை ஏற்றுக்கொண்டவர்கள்தான். ஆனால், எவரும் ஏற்றிராத பழியேற்று தியாகத்தீயில் தன்னையே எரித்துக்கொண்ட தலைவர் அன்னை மணியம்மையார்.மணியம்மையார் அளவுக்கு ஒரு மிகப்பெரிய எதிர்ப்பலையை,வசவுச்சொற்களை,அபவாதத்தைச்சந்தித்த வேறு ஒரு பெண் தலைவர் திராவிடர் இயக்கத்தில் மட்டுமல்ல,வேறு எந்த இயக்கத்திலாவது இருக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.இல்லையென்றே சொல்லலாம்  " என்று ஆரம்பித்து நூல் ஆசிரியர் கொடுக்கும் புள்ளிவிவரங்களும், வரலாற்றுத் தகவல்களும்,உணர்வு பூர்வமான விவரிப்புகளும் அருமை.

தந்தை பெரியார்-அன்னை மணியம்மையார் திருமணத்திற்கு பிறகு இயக்க நிகழ்வுகளுக்கு வந்தவரல்ல மணியம்மையார். சிறுவயதிலிருந்தே திராவிடர் கழகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.வசதியுள்ள குடும்பத்தில் பிறந்தவர். அந்தக்காலத்தில் 10-ஆம் வகுப்பு வரை படித்தவர். " ஒரு பெண் பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைப்பது என்பது இயல்பாக நடப்பது இல்லை....பெண்களை பொதுவெளிக்கு அழைத்து வந்ததில் திராவிடர் கழகத்தின் பங்கு மிகவும் தனித்துவமானது.குடும்பத்தினருடன் கூட்டங்களுக்கு வரவேண்டும் என்பதை வாழ்க்கை முறையாக பெரியார் வலியுறுத்தினார் " பெரியாரைத் திருமணம் செய்துகொள்வதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தன்னை திராவிடர் கழக இயக்கச்செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொண்டவர். திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டு 2 முறை சிறைக்குச் சென்றவர்.அவரது இயற்பெயர் காந்திமதி.கே.காந்திமதி,கே.மணி உள்ளிட்ட சில பெயர்களில் எழுத்தாளராக இருந்திருக்கின்றார். திராவிடர் கழக பேச்சாளராக இருந்திருக்கின்றார். "நான் படிப்பது நல்ல அடிமையாகவா? அல்லது மேன்மையும் விடுதலையும் பெறவா? இதற்கு மாதர் சங்கங்கள் பாடுபடவேண்டும் " என்று திருமணத்திற்கு முன்பே எழுதியிருக்கின்றார்.திருமணத்திற்கு முன்பே பெண்கள் திராவிடர் கழகத்தில் வந்து பணியாற்ற வாருங்கள் என்னும் பெரியார் கொடுத்த அழைப்பைப் பற்றி மணியம்மையார் பேசியிருக்கின்றார்,அவருக்கு திருமணம் ஆகும்போது வயது 30, அன்றைய காலகட்டத்தில் 15 வயதில் அனைத்துப்பெண்களுக்கும் திருமணம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் அவரது வயது திருமண வயதைப் போல இருமடங்கு வயது, அந்த வயதுவரை அவர் திருமணத்தை மறுத்து பொது வாழ்க்கையில் இருந்திருக்கின்றார்,மணியம்மையார் ,திராவிடர் கழகத்தை தேர்ந்தெடுத்தது அவரது சுய தேர்வாகும்  போன்ற பல செய்திகளை எடுத்துக்காட்டுகளோடு குறிப்பிட்டிருக்கின்றார்.

"பொதுவாழ்வின் தூய்மைக்கு இலக்கணம் என்றால் ,அது பெரியாரும் மணியம்மையாரும் என்று சொல்லத்தக்கவகையில் உயர்ந்து நிற்கின்றார்கள்." என்று குறிப்பிடும் ஓவியா," பெரியாரைப் பராமரிக்கும் பொறுப்பைத் திருமணத்திற்குபிறகுதான் அவர் எடுத்துக்கொண்டார் என்பது இல்லை. இது மிகவும் முக்கியமாக நாம் புரிந்துகொள்ளவேண்டிய விசயம் " மற்றும் " பெறுவதற்கு அரிதாகத் தோன்றிய மாமணியாக இந்த சமூகத்திற்கு கிடைத்தவர் பெரியார். இந்த சமூகத்தை நேசிக்கும் ஒரு வடிவமாகவும்,சமூகத்திற்கு தொண்டு செய்வதன் ஒரு வடிவமாக பெரியாருக்கு தொண்டு செய்வதை மணியம்மையார் ஏற்றுக்கொண்டார் " என்பதனைக் குறிப்பிட்டு மணியம்மையார் அவர்களை படிப்பவர் புரிந்துகொள்ளும்வகையில் நூலாசிரியர் வரிசைப்படுத்திக்கொடுத்திருக்கின்றார். 

"கடவுளை மறுக்கின்ற,நாத்திகத்தைப் பிரச்சாரம் செய்யும் ஒரு இயக்கம் தொண்டு செய்வதை தன்னுடைய இயக்கச்செயல்பாட்டின் ஒரு பகுதியாக வைத்துள்ளது.அந்த ஆதரவற்ற இல்லக்குழந்தைகள்(நாகம்மையார் குழந்தைகள் இல்லம்) அனைவருக்கும் தன்னை தாயாக வரித்துக்கொண்டவர் அன்னை மணியம்மையார். திராவிடர் கழகத்திற்கு உள்ள இந்த 'தொண்டு முகம்' வெளியே பரப்பப்படாத ஒரு செய்தியாகவே உள்ளது " பக்கம் 134. பெரும்பாலும் திராவிடர் கழகம் செய்யும் தொண்டறப்பணிகளை விளம்பரத்திக்கொள்வதில்லை.ஆனால் திராவிடர் கழகத்தினை அறிந்தவர்கள் அறிவார்கள். சத்தமில்லாமல், அதற்கு ஆதரவுக்கரமும் நன் கொடையும் அளிப்பவர்கள் அதிகம்.திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர்  வீ,அன்புராஜ் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட நாகம்மையார் குழந்தைகள் இல்ல 50-ஆம் ஆண்டு விழா , அதைப் பற்றிய வெளிச்சத்தை சமூகத்திற்கு காட்டியது. அந்த வகையில் நூலாசிரியர் இப்படியெல்லாம் தொண்டு செய்யும் திராவிடர் கழகம் அதனை மிகப்பெரிய அளவில் பரப்புவதில்லையே என்னும் ஆதங்கத்தை காட்டியுள்ளார். 

"சாதி ஒழிப்பு குறித்து இன்று அதிகம் பேசப்பட்டாலும், சாதி ஒழிப்பு போர் பற்றி ஏன் பேசப்படுவதில்லை ?அந்த நினைவுகள் ஏன் புதுப்பிக்கப்படுவதில்லை? ஏன் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படுவதில்லை ? " என்னும் நியாயமான கேள்விகளை முன்வைத்து "சாதி ஒழிப்பு என்பதை இலக்காக வைத்து இந்தியாவிலேயே ஒரு இயக்கம் போராடி இருக்கிறது என்றால் அது திராவிடர் கழகம் மட்டுமே " என்று குறிப்பிடும் நூலாசிரியர் அந்தப்போராட்டத்தில் அன்னை மணியம்மையாரின் பங்களிப்பை மிகச்சரியாக விவரித்திருக்கிறார். 2009-ல் தோழர் முத்துக்குமார் இறந்தபோது அவரின் உடலை ஊர்வலமாகக் கொண்டு போகமுடியவில்லை ஆனால் சாதி ஒழிப்பு போரில் மாண்ட இரண்டு தியாகிகளின் உடலை ஊர்வலமாக அன்னை மணியம்மையார் கொண்டு போனார் என்பதனை" இன்றைய காலத்தில் ஆண் தலைவர்களாலேயே செய்ய முடியாத இந்த காரியத்தை அன்று செய்து காட்டியவர் அன்னை மணியம்மையார்...அன்று திருச்சியின் முக்கிய வீதிகள் வழியாக,அரசாங்கத்தின் கெடுபிடிகளை மீறி இரண்டு தியாகிகளின் உடல்களை எடுத்துச்சென்று எரியூட்டினார் மணியம்மையார். ஆக்ரோசமான காத்திரமான தலைவராக மட்டுமல்ல, அந்த உத்வேகத்தை தொண்டர்களிடமும் கடத்திய எழுச்சிமிக்க தலைவராக செயல்பட்டவர் அன்னை மணியம்மையார் " எனச்சொல்லி அந்த நிகழ்வு முழுவதையும் நூலாசிரியர் விவரிக்கின்றார். 


பத்திரிக்கை சுதந்திரத்திற்காக என்று தலைப்பிட்டு " பத்திரிக்கை சுதந்திரம் என்பதற்காகத் தொடர்ந்து எண்ணற்ற சுமைகளைத் தாங்கிய இயக்கம் திராவிடர் கழகம்.இந்த இயக்கத்தின் பத்திரிக்கைகள் சந்திக்காத தடைகளே கிடையாது....பகையில் இருந்து தமிழர்களைக் காக்கும் தடுப்பரண் திராவிடர் கழகம்.இந்தக் காரணத்தினாலேயே 'தமிழகம் ஒழுங்கற்ற மாநிலம்' என்று நெருக்கடி காலத்தில் எரிச்சலாகச்சொன்னார் இந்திராகாந்தி. அவர்களால் எப்போதும் சமாளிக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.இந்தியாவின் வேறு எந்தப்பகுதியும் அவர்களுக்கு இப்படிப்பட்ட அச்சுறுத்தலைத் தருவதில்லை. தமிழ் நாட்டின் இந்த நிலைக்குக் காரணம் 'ஒரு நாள் புரட்சி அல்ல' அல்ல.அது ஒரு இயக்கத்தின் தொடர் நிகழ்வு.அதன் தொடர் பணிகளால் விளைந்த கனி ' என்று சிறப்பாக குறிப்பிடுகிறார். இன்றைக்கு இருக்கும் மத்திய அரசும் கூட தமிழகத்தைப் பொறுத்த அளவில் குழம்பிப்போய்த்தான் கிடக்கிறார்கள்.....அதனால்தான் பெரியார் மீதும் திராவிட இயக்கத்தலைவர்கள் மீதும் வெறுப்பை உமிழ்கிறார்கள்.

இராவண லீலா நிகழ்வினை, அந்த மகத்தான போராட்டத்தை நினைவு கூறுகின்றார். "அறிவித்தபடியே பெரியார் நினைவு நாளுக்கு அடுத்த நாள்,மணியம்மையார் தலைமையில் இலட்சக்கணக்கான தொண்டர்கள் சூழ பெரியார் திடலில் இராவண லீலா நடைபெற்றது. அதில் நானும் பங்கேற்றிருப்பதில் பெருமைப்படுகிறேன் " எனும் குறிப்பிடும் ஓவியா " திராவிடர்களின் கலாச்சாரத்திற்காகப் போராடவேண்டுமென்றால் அன்னை மணியம்மையாரின் பெயரை உச்சரிக்காமல் வரலாற்றை எழுதி விடமுடியாது.இராமாயாணத்திற்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது என்று எடுத்துக்கொண்டால்,இராமனைக் கொளுத்திய திராவிடர் கழகத்திற்கும் இராவண லீலா நடத்திய மணியம்மையாருக்கும் அந்த வரலாற்றில் இடமுண்டு ' எனப் பெருமையாகப் பதிவு செய்கின்றார்.

நெருக்கடி காலத்தில்  திராவிடர் கழகத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் அதனைத் தீரமாக எதிர்த்து போரிட்ட அன்னை மணியம்மையாரையும் உணர்வு பூர்வமாக விவரித்துள்ளார் நூலாசிரியர் ஓவியா.தனது அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். "நெருக்கடி காலத்தில் பத்திரிக்கை நடத்தியது  மிகப்பெரிய விசயம். 'மின்சாரம்' என்னும் பெயரில் கவிஞர் எழுதிய கட்டுரைகளைப் படிக்க  அப்போது ஆவலாகக் காத்திருப்போம். எனது பள்ளிக்காலத்தில் அதைக் கார்பன் காப்பி எடுத்து ,பேருந்துகளில் அதை விட்டுவிட்டு வருவோம். அதை யாராவது எடுத்துப்படிப்பார்கள் என்பதற்காக அப்படிச்செய்தோம்.திராவிடர் கழகக் குடும்பத்தின் சிறு பிள்ளைகளுக்குக் கூட இருந்த இயக்க உணர்வு அது '' எனக்குறிப்பிடுகின்றார்.

அய்யா ஆசிரியர் உட்பட திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்படுகிறார்கள்.சிறைச்சாலைகளில் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். அப்போது ஆளுநரைப் பார்த்து, " எதற்காக எங்கள் இயக்கத்தைவரைக் கைது செய்கிறீர்கள் ...."என்று அன்னை மணியம்மையார் ஆளுநர் சொல்கிறார் " நீங்கள் திமுகவை ஆதரிப்பதுதான் தவறு. திமுகவை ஆதரிக்கமாட்டோம் என்று நீங்கள் சொன்னால் நாங்கள் உங்கள் தோழர்களை விட்டுவிடுகிறோம் என்று  சொன்னார். 'அப்படிச்சொல்ல முடியாது 'என்று தீர்மானமாகச் சொன்னார் அன்னை மணியம்மையார்."அரசின் அடக்குமுறைக்கும் ,நியாயமற்ற கோரிக்கைகளுக்கும் இடம் தராதவர் அவர்.வரலாற்றில் இது எவ்வளவு முக்கியமான பக்கம் என்பதைச் சிந்தியுங்கள்.எந்த இயக்கம் தன் மீதான அவதூறில் தொடங்கப்பட்டதோ அந்த இயக்கத்துக்கான ஆதரவை தரவேண்டிய வரலாற்றுத்தேவையை அந்தத் தியாகப்பெண்மணி பற்றற்ற உறுதியுள்ளத்துடன் நல்கினார் ' என்று குறிப்பிடுகின்றார்...."அவரது(அன்னை மணியம்மையார்) உடல் நலன் குன்றியபோது ,ஆசிரியர் அவர்களை பொறுப்பெடுக்கச்சொல்லிக் கேட்டார்கள். அதை ஆசிரியர் மறுத்துவிட்டார்." இது ஒரு வரலாற்றுப்பதிவு. என்னைப்போன்றவர்கள் இயக்கத்திற்குள் வராத காலகட்டம்.அன்னை மணியம்மையார் அவர்கள் கேட்டுக்கொண்டபோதும், அவர் இருக்க நான் தலைமைப்பொறுப்பு எடுக்க மாட்டேன் என்று அய்யா ஆசிரியர் அவர்கள் மறுத்திருக்கின்றார்.

"அந்தக் காலத்திலேயே திராவிடர் கழகம் என்னும் மகத்தான இயக்கத்திற்கு தலைமை தாங்கியவர் அன்னை மணியம்மையார்.இந்த அளப்பரிய சாதனை கண்டுகொள்ளப்படாதது ஏன் ? அவரின் மறைவுச்செய்தியை 'ஹிந்து ' பத்திரிக்கை செய்தியாகக் கூட வெளியிடாமல் ,காலமானவர்கள் பட்டியலில் வெளியிட்டது .அவர் இராவண லீலா கொண்டாட்டத்தை முன்னெடுக்காமல் இருந்திருந்தால் 'ஹிந்து 'இவ்வாறு செய்திருக்குமா? வரலாற்றின் பக்கங்களில் இந்தக் கேள்வி பதிந்து நிற்கிறது." என்று குறிப்பிடுகின்றார்.

முடிவாக போர்க்குணமிக்க கொள்கைப் பிடிப்பு கொண்டவர் மட்டுமல்ல அன்னை மணியம்மையார் நிர்வாகத்திறன் மிகுந்தவர் என்பதனை பட்டியலிட்டு காட்டியுள்ளார் இந்த நூலின் ஆசிரியர் ஓவியா அவர்கள். "தனது திருமண ஏற்பாட்டின்  நோக்கத்தை நிறைவு செய்யும் பொருட்டு அம்மா அவர்களை அய்யா அவர்கள் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் ஆயுட்செயலாளராக நியமித்தார். அவருடைய எண்ணமும் மதிப்பீடும் எவ்வளவு சரியானது என்பதை வாழ்ந்து மெய்ப்பித்தார் அம்மா .பெரியாருடைய சொத்தைத் தொடர்புபடுத்தி அம்மையார் அவமதிக்கப்பட்டது மிக அதிகம்.ஆனால் தனக்கென கொடுத்த சொத்துக்களையும் காப்பாற்றி அவருடைய சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கே எழுதிக்கொடுத்தார் அம்மா " என உருக்கமாக , மிகச்சரியான தனது தாய் பட்ட வேதனை பொறுக்காமல் அவரது தியாகத்தை, பணியை,நெஞ்சுரத்தை,கொள்கை வீரியத்தை,தன்னலமற்ற பொது நலத்தை விவரிக்கும் அன்னை மணியம்மையாரின் மகளாக இந்த இடத்தில் நூலாசிரியர் ஓவியா தென்படுகின்றார். பாராட்டுகள், நன்றிகள்,வணக்கங்கள்....

"நிறைவாக அன்னை மணியம்மையாரின் மறைவுக்குப்பிறகு அவரது வழியில் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழி நடத்தி வருகிறார்.அய்யா அவர்களின் பெண் விடுதலைக் கொள்கைகளை தொடர்ந்து பரப்புரை செய்துவருகிறது இயக்கம் .பெண்களின் கல்விக்காக நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன....." எனக் குறிப்பிட்டு அன்னை மணியம்மையார் காலகட்டத்துக்கு பின்னால் இந்த நூல் பயணிக்கவில்லை எனக்குறிப்பிடுகின்றார். அண்மையில் மறைந்த திராவிடர் கழகத்தின் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி உள்ளிட்ட கருஞ்சட்டைப்பெண்களின் வரலாறு அடுத்தப் பாகமாக எழுதப்படல் வேண்டும்.

பின் இணைப்பாக "சுயமரியாதை இயக்கப்  பெண்கள் பங்கேற்ற கூட்டங்களும் மாநாடுகளும்" எனத் தலைப்பிட்டு கொடுத்திருக்கின்றார். " உலக வரலாற்றில் ஒரு நாத்திக இயக்கத்துக்குத் தலைமை வகித்து எழுச்சியுடன் நடத்திக்காட்டிய அன்னை மணியம்மையார் குறித்து ,வெளி உலகத்துக்குக் கொண்டு வரவேண்டிய பல தகவல்களை அரிதின் முயற்சி செய்து வெளியில் கொண்டு வந்துள்ள தோழர் ஓவியாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் " இது திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது அணிந்துரையில் கொடுத்திருக்கும் பாராட்டுரை. படித்துப்பாருங்கள். பாராட்டி மகிழ்வீர்கள்.   


Saturday 12 January 2019

அண்மையில் படித்த புத்தகம் : கருஞ்சட்டைப் பெண்கள்.....(4)...ஓவியா

ண்மையில் படித்த புத்தகம் : கருஞ்சட்டைப் பெண்கள்
நூல் ஆசிரியர்               : ஓவியா
                                   கட்டுரை (4)
அண்மையில் எழுத்தாளர் சமஸ் அவர்கள் " பெரியாரைப் புரிந்து கொள்வது எப்படி ? " என்று தி இந்து தமிழ் நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நல்ல கட்டுரை. இந்தக் கருஞ்சட்டைப் பெண்கள்   நூலின் ஆசிரியர் ஓவியா அவர்கள் இந்தப் புத்தகத்தில் " காந்தியாரைப் புரிந்து கொள்வது எப்படி? -அதுவும் பெண்ணியல் நோக்கில் " என்று தலைப்புக் கொடுக்கும் வண்ணம் ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார். அதன் தலைப்பு " இந்தியப் பெண்ணுரிமைப் போராட்டத்தின் பிதாமகனா காந்தியார் ? " என்னும் கட்டுரை.  சங்க கால இலக்கியத்தில் இருந்து ஆரம்பித்து பெண் கல்வி பற்றி ஒரு முன்னோட்டத்தை,வரலாற்றை சொல்லும் நூல் ஆசிரியர் ஓவியா காந்தியின் போராட்ட களத்தில் பெண்கள், தந்தை பெரியாரின் போராட்ட களத்தில் பெண்கள் என இரண்டு பார்வைகளை வைக்கின்றார்.இரண்டையும் வேறுபடுத்திக்காட்டும் விதம் புதுமை.

காந்தியைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமான ஒன்று. நமக்கு காந்தியார் கொள்கைகளில் மாற்றுக்கருத்து உண்டே தவிர, அவர் மீது மரியாதை உண்டு. அவரின் எளிமை, உண்மைத்தன்மை போன்றவற்றில் இன்றைக்கும் எனக்கு ஈர்ப்பு உண்டு.ஆனால் பெரியாரியல்,அம்பேத்கர் இயல் நோக்கில் விமர்சனப்பார்வை எப்போதும் உண்டு.காந்தியார்  தெரிந்துதான் குழப்பினாரா? அல்லது தெரியாமல் குழப்பினரா ? என்பது நம்மையே குழப்பிவிடும் கேள்வி. விவாதத்துக்குரியது.ஓவியா இந்த நூலில் அதனைத் தெளிவுபடுத்துகிறார். காந்தியாரின் நம்பிக்கை என்பது எதன் அடிப்படையலானது என்னும்  உண்மை புரிந்தால் நம்மால் காந்தியைப் புரிந்து கொள்ள முடியும்.

" காந்தியாரைப் போலி மனிதராகப் பார்க்கவில்லை.அவர் போலியான வார்த்தைகளை உச்சரிக்கவில்லை.உண்மையாகவும் ,உணர்வு பூர்வமாகவும் இவ்வாக்கியங்களை அவர் சொல்கிறார். 'மதத்தில் இருந்து ஒரு நொடி கூட என்னைப் பிரிக்க முடியாது'. என்னுடைய அரசியலாக இருக்கட்டும், என்னுடைய நடவடிக்கைகளாக இருக்கட்டும். அவை என்னுடைய மதத்திலிருந்துதான் வருகின்றன.'என்று அவர் சொல்கிறார். அவருடைய மதம் என்பது இந்து மதம்...." மதத்தை எதிர்க்காமல் பெண் விடுதலையைப் பேச முடியுமா? அப்படிப் பேசினால் அது உண்மையானதாக இருக்குமா ?என்பதுதான் நாம் அடிப்படையாக வைக்கின்ற கேள்வி". எந்த மதமாக இருந்தாலும் மதத்தை நான் உண்மையாகப் பின்பற்றுகிறேன் என்று ஒருவர் சொன்னால், அவர் பெண் விடுதலைக்கு எதிரான மன நிலை உள்ளவர் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள முடியும். உணர்ந்து கொள்ள வேண்டும். சாதியை எதிர்த்தால் நமது நாட்டில் ஆணவக்கொலையில் முடிகின்றது. அயல் நாடுகளில் மதத்தை எதிர்த்தாலும் ஆணவக்கொலையில் முடிகின்றது. 18 வயதான 'ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன்' -சவூதி அரேபியப் பெண் இன்றைக்கு இஸ்லாத்தில் இருந்து நான் விடுபட்டுக்கொண்டேன், எங்கள் நாட்டு சட்டப்படி என்னைக் கொன்று விடுவார்கள், எனக்கு அடைக்கலம் கொடுங்கள் என்று கனடாவில் தஞ்சம் புகுந்திருக்கின்றார். எங்கள் குடும்பத்தினரே என்னைக் கொன்று விடுவார்கள் என்று சொல்கின்றார்.எனவே எவராக இருந்தாலும் ஈரோட்டுக்கண்ணாடியில் பார்த்தால், மத ஆதரவாளர் என்றால் பெண் விடுதலைக்கு எதிரானவர் எனப்பொருள். காந்தியார் தன்னுடைய அரசியல், உண்ணல், உடுத்தல்,உறங்கல், பேசுதல்  என அனைத்தும் தன்னுடைய மதத்திலிருந்துதான் வருகின்றது என்று சொல்கின்றார். எனவே  ஒரு அளவிற்கு பெண்ணுக்கு உரிமை  வேண்டும் எனச்சிந்தித்தவர் காந்தியார் எனக்குறிப்பிடுகின்றார்.   

 "காந்தியார் எவ்வாறு ஒருபுறம் தாழ்த்தப்பட்டோர் விடுதலையை முன்னிறுத்தி பேசிக்கொண்டே மற்றொரு புறம் அவர்களை அடிமைப்படுத்துகிற வர்ணாசிரமத்தை ஆதரித்தாரோ அதே போல்தான் பெண்கள் விசயத்திலும் அவரது எண்ணப்போக்கு இருந்தது. இது காந்தியாரின் முரண்பட்ட சிந்தனைப்போக்கு. அவருடைய மகன், தனது மனைவி இறந்தபின் மறுமணம் செய்துகொள்ள விரும்பி  அவரிடம் கேட்டபோது " உன்னைப்போலவே திருமணமாகி ஒரு குழந்தையுடனிருக்கும் விதவைப் பெண்ணைத் திருமணம் செய்துகொள் ' என்று சொல்கின்ற காந்தியாரைப் பார்த்து வியக்கின்ற நேரத்தில் ,அவரது மகன் ஒரு இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதை கேள்விப்பட்டவுடன் எதிர்க்கின்ற காந்தியாரை எப்படி புரிந்து கொள்வது என்று நாம் திகைக்க வேண்டியிருக்கிறது ...." பக்கம்(34).. 

" ஒரு பெண் ஜாதிக்கும் மதத்திற்கும் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்பதில் எந்த மாற்றத்தையும் விரும்பாத காந்தியார்,பெண்கள் படிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைக்கிறார்  அது எப்படி சாத்தியம் ? எனக் கேள்வி கேட்கும் நூல் ஆசிரியர் அது ஏன் சாத்தியமில்லை என்பதற்கான காரணங்களை விளக்கியிருக்கின்றார், இன்றைய அமைப்பு என்பது ஆணாதிக்க அமைப்பு, பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும் அமைப்பு. " நமது நோக்கமெல்லாம் தத்துவார்த்த ரீதியாக இந்த அமைப்பைக் கேள்வி கேட்கின்ற தலைவர்கள் யார் இருந்தார்கள் என்பதுதான்.எனக்குத்தெரிந்த வரையில் பெரியார் ஒருவரே அந்த இடத்தை மிகச்சிறப்பாக நிரப்புகிறார். நாம் இதுவரை பார்த்த அந்த வரலாற்றில் பெண்ணடிமை தொடங்கிய மூலத்தை கேள்வி கேட்டவராக அவர் மட்டும்தான் இருக்கிறார்.திருமண அமைப்புக்கு வெளியே நின்ற பெண்கள்தான் சாதனையாளர்களாக இருந்திருக்கிறார்கள்.பெரியார் ஒருவர்தான் அந்த மூலத்திற்கு வருகிறார். அவர் கூறுகிறார்."திருமணம் என்பது கிரிமினல் குற்றமாகக் கருதப்படக்கூடிய சமுதாயம் வர வேண்டும் " என்று. "பெண் விடுதலைக் கோரிக்கைகளை பகுதி பகுதியாக பலர் முன்வைத்திருக்கிறார்கள்.ஆனால் அவற்றை ஆணிவேரிலிருந்து தொட்ட,தொடர்ந்து பயணித்த இயக்கமாக பெரியார் இயக்கம் இருந்தது ..." எனக்குறிப்பிடுகின்றார்.

உலகப் பெண் விடுதலை இயக்கத்திற்கும்,இந்திய பெண் விடுதலை இயக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டும் ஓவியா,இரண்டுக்கும் உள்ள மொழி வேறுபாட்டை சுட்டிக்காட்டுகிறார்.மாற்றி யோசிக்க சொல்கிறார் நம்மை. ஏன் இப்படி எனச்சிந்திக்கவும் சொல்லி அதற்கான விடையையும் நூல் ஆசிரியரே கூறுகின்றார். வர்ணாசிரமம் என்பது வெறுமனே சாதி வேறுபாட்டை நிலை நிறுத்துவது மட்டுமல்ல, பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்துவது என்பதைச்சொல்கிறார். " எப்படி வர்ணாசிரமம் பார்ப்பனர்களைத் தூக்கி நிறுத்துகிறதோ,அப்படியே ஆண்களையும் தூக்கி நிறுத்துகிறது " ...அந்த வர்ணாசிரமத்தை முழுமனதோடு ஆதரித்தவர் காந்தியார் என்பதனை வலியுறுத்துகின்றார்.
காந்தியார் 'உடல் ரீதியாக பெண் ஆணுக்கு இணையானவள் 'என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான ஆதாரங்களைப் பட்டியலிட்டு கொடுத்திருக்கின்றார்.பெண்களைப் பொறுத்தவரையில் காந்தியாரின் கோட்பாடும் வர்ணாசிரமக் கோட்பாடும் ஒன்றுதான் எனச்சொல்கின்றார். இதற்கு நேர் எதிரானது தந்தை பெரியாரின் புரிதல்...ஒரே வாக்கியத்தில் 'வீட்டிற்கு ஒரு அடுப்படி, ஆணுக்கு ஒரு பெண் என்கிற அமைப்பை என்று  மாற்றுகிறாயோ அன்றுதான் பெண்ணுக்கும் விடுதலை, ஆணுக்கும் விடுதலை ' என்று சொல்கின்றார். இது இன்னொரு எல்லை என்பதையும் குறிப்பிட்டு சொல்லி விளக்கியிருக்கின்றார்.காந்தியாரின் கொள்கையைப் பற்றியும் அவர் ஏன் அகிம்சைப்போரட்டத்தில்,சுதந்திரப்போராட்டத்தில் பெண்களை பங்குபெறச்செய்தார் என்பதைப் பற்றியும் நூல் ஆசிரியரின் பார்வை தனித்தன்மையாக இருக்கிறது.இதனை திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் மிகச்சிறப்பாக இந்தப் புத்தகத்தின் வெளியீட்டின்போது தனது உரையில் குறிப்பிட்டார்.

குடும்பத்திலிருந்து தொடங்கினார் என்னும் தலைப்பிட்டு, தந்தை பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மா பற்றியும்,அன்னை நாகம்மையார் பற்றியும் அன்னை நாகம்மையார் அவர்களை நெறிப்படுத்த தந்தை பெரியார் மேற்கொண்ட முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்டு, அப்படி அய்யா பெரியார் அவர்கள் முயற்சி எடுத்திருக்காவிட்டால்,அப்பேற்பட்ட நாகம்மையார் கிடைத்திருப்பாரா என்பதனைக் குறிப்பிடுகின்றார்.கள்ளுக்கடை மறியல், அன்னை நாகம்மையார் அவர்கள் இறந்தபோது பெரியாரின் இரங்கலுரை போன்றவற்றை விரிவாக எடுத்துரைக்கின்றார்.தந்தை பெரியார் அவர்களின் தங்கை கண்ணம்மா பற்றி தனி அத்தியாயம் இருக்கிறது. அதனைப் போலவே மூவலூர் இராமமிர்தம் அம்மையார்(அரிய பல தகவல்களோடு ஒரு 17 பக்க கட்டுரை) பற்றிய கட்டுரை பல நியாயமான கேள்விகளை எழுப்புகிறது . மூவலூர் இராமமிர்தம் அம்மையாரின் நூலிற்கு முன்னுரை எழுதியவர் ஒரு பெண்,பொருள் உதவி செய்தவர் ஒரு பெண், மற்றும் அவரின் போராட்ட முறைகள்,எந்த நிலையில் இருந்து அவர் பொதுப்பணிக்கு வந்தார், எப்படி சமாளித்தார் என விரிவான தகவல்களோடு அந்தக் கட்டுரை உள்ளது.  முத்துலெட்சுமி அம்மையாரின் மவுனம் பற்றிய கட்டுரை, குஞ்சிதம் குருசாமி, மீனாம்பாள் சிவராஜ்,வீரம்மாள், டாக்டர் எஸ்.தருமாம்பாள்,நீலாவதி அம்மையார்,தொடரும் வீராங்கனைகள், பார்ப்பனியப் பெண்களின் சாட்சியம் என்று தொடர் கட்டுரைகளைக் கொடுத்திருக்கின்றார்.ஒவ்வொரு கருஞ்சட்டைப் பெண் தலைவரைப் பற்றியும் அவர் கொடுத்திருக்கும் தகவல்களும் விவரிப்பும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது.பேச்சாளர்கள் கட்டாயம் படித்து குறிப்புகள் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டுரைகள் அவை.எப்பேர்ப்பட்ட கருஞ்சட்டை பெண் தலைவர்களைப் பெற்றிருக்கிறோம் நாம் எனும் இறுமாப்பு கொள்ளவைக்கும் தகவல்கள் அவை... 

                                                                                         (அடுத்த பகுதியோடு முடியும்)