Sunday 8 December 2019

உளவியலும் கொள்கை பிரச்சார வழிமுறைகளும்...ஜெ.வெண்ணிலா மகேந்திரன்

உளவியலும் கொள்கை பிரச்சார வழிமுறைகளும்
            ஜெ.வெண்ணிலா மகேந்திரன்

அனைவருக்கும்.வணக்கம். டிசம்பர் 2, அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பிறந்த நாள். சுயமரியாதை நாள். ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தக் கூட்டத்தில்  'உளவியலும் கொள்கை பிரச்சார வழிமுறைகளும் ' என்னும் தலைப்பில் பேசுவதில் மிக்க மகிழ்ச்சி.

ஒரு பயிற்சி பற்றி பேசுவோம்.மலை ஏறும் பயிற்சிக்கு என்னவெல்லாம் எடுத்துக்கொண்டு போவார்கள்..(பார்வையாளர்கள் பதில் கூறினார்கள்). மலை ஏறும் பயிற்சிக்கு சென்றவர்கள் பைகளில் உணவு,தண்ணீர்,ரோப் கயிறு, ஆக்சிசன் சிலிண்டர்  போன்றவற்றை பைகளில் எடுத்துக்கொண்டு போனார்கள். இருட்டான நேரம். மலையில் ஏறி ஓர் இடத்தில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அதனால்  அவர்கள் கொண்டு சென்ற பையின் கனம் குறைந்தது. அவ்விடத்தில்  பயிற்சி ஆசிரியர்,சில கற்களைப் பார்த்து, பைகளில் எடுத்துப்போட்டு கொள்ளுங்கள் என்று  சொல்கிறார். இப்போதுதான் சுமை குறைந்தது ,இப்போது மறுபடியும் கல்லைக்கொண்டு பையை நிரப்பச்சொல்கிறாரே என்று சிலர் நினைத்தர்.ஆனால் பயிற்சி ஆசிரியர் சொல்லைத்தட்டக்கூடாது என்று சிலர் முழுமையாக பையை கற்களால் நிரப்பிக்கொண்டனர்.சிலர் பயிற்சி ஆசிரியர் பார்க்கும் நேரம் மட்டும் கற்களைப் போட்டு பாதி நிரப்பிக்கொண்டனர். சிலர் இவரென்ன சொல்வது, நாம் என்ன பையை நிரப்புவது என்று நிரப்பாமல் விட்டு விட்டனர். மலையில் ஏறி பின் கீழே வந்து பார்த்த போது அது மிக விலை உயர்ந்த இரத்தினக்கற்கள் போன்ற மதிப்புடையது என்று தெரிந்தது.முழுமையாக நிரப்பியவர்கள் பயன்பெற்றனர். பாதிப்பையை நிரப்பியவர்கள் முழுவதுமாக நிரப்பியிருக்கலாமே என நினைத்தனர். பையை நிரப்பாதவர்கள் வாய்ப்பை இழந்தனர்.இப்படி மூன்று வகையான மனிதர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். சொல்வதைக் கேட்டு கீழ்ப்படிந்து உடனே செய்பவர்கள். சொல்வதைக் கேட்டு அரைகுறையாக செய்பவர்கள்.சொல்வதைக் கேட்டு, இவரென்ன சொல்வது நாம் என்ன செய்வது என்னும் அலட்சியப்போக்கில் மறுப்பவர்கள் அல்லது தவிர்ப்பவர்கள். இப்படிப்பட்ட மூன்று வகையான மனிதர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். இந்தக்கூட்டத்திலும் இருக்கின்றோம்.  ஒரு பயிற்சி என்பது தன் பயிற்சி மூலமாக இந்தக்கதையில் வரும் மலையேறுபவர்கள்  அனைவரையும் பைகளை கற்களால் நிரப்ப வைக்கவேண்டும். அதுதான் பயிற்சி. அப்படி கொள்கை பிரச்சாரத்தை நாம் அனைவரும் கொண்டு செல்வதற்கு எப்படிப்பட்ட பயிற்சி தேவை என்பதனை சொல்லும் பயிற்சி ஆசிரியராக என்னை நான் நினைத்துக்கொள்கிறேன். கொஞ்சம் கண்டிப்பான பயிற்சி ஆசிரியராக என்னைக் கருதிக் கொள்ளுங்கள்.இங்கே என்ன வசதி என்றால் நீங்கள் கேள்வி கேட்டு பதில் வாங்கியே கற்களை உள்ளே போடலாம்.ஆனால் எல்லோரும் பைகளுக்குள் கல்லைப்போடவேண்டும்.

இந்தப் பயிற்சி வெறுமனே நான் மட்டும் பேசுவதாக இருக்காது. கலந்துரையாடலாகவும், சில கருத்துகள் உங்களிடமிருந்து வருவதாகவும் இந்தப் பயிற்சியை வைத்துக்கொள்ளலாம்.மனிதனை நம்புங்கள் என்று சொல்வது ஓர் உளவியல் அணுகுமுறை.கடவுளை நம்பாதே என்று சொல்வதை விடவும் மனிதனை நம்புங்கள் என்று சொல்வது மனித நேய அடிப்படையிலானது.பள்ளிக்கூடத்தில் ஓடாதே, ஓடாதே என்று சொல்வதை விடவும் மெதுவா நடடா, மெதுவா நடடா என்று சொல்வது நேர்மறை அணுகுமுறை.என்னிடம் ஒருவர் 'வெண்ணிலா, நீங்கள் அர்த்தமுள்ள இந்துமதம் படித்து இருக்கின்றீர்களா ? எனக் கேட்டபோது ' நான் அர்த்தமற்ற இந்து மதம் படித்திருக்கிறேன் ' என்று சொன்னேன்.அவருக்கு பதிலும் ஆனது,நேர்மறை அணுகுமுறையும் ஆனது.இப்படி கொள்கை பரப்பும் அணுகுமுறையில் நேர்மறையான அணுகுமுறையை நாம் கைக்கொள்ள வேண்டும்.இந்த அணுகுமுறையைத்தான் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம். இன்னும் இதனை வரைமுறையாக(சிஸ்டமாக) அணுகலாம். ஏன் என்றால் வெளியே எல்லாம் கொள்கை பரப்புரை செய்யும் சிலரால் குடும்பத்திற்குள் பண்ண முடியாது.கடவுள் நம்பிக்கையற்றவர்களை மதவாதிகள் எப்படி பார்க்கின்றார்கள் என்பதை அண்ணன் நேரு சொன்னார்.ஆண்களுக்கே இவ்வளவு பிரச்சனை என்றால் பெண்களுக்கு எவ்வளவு பிரச்சனை?...

கல்யாணமே பெரிய பிரச்சனை.நாம்(பெண்கள்) கொள்கையில் நாம் தெளிவாக இருந்தால் நமக்கு எது வேண்டும் என்பதனை நாம் முடிவு செய்ய முடியும்.கல்யாணத்திற்கு சில நிபந்தனைகள்(கன்டிசன்) எல்லாம் வைப்பார்கள். மாப்பிள்ளை வேலை பார்க்கவேண்டும்.மாப்பிள்ளை குடும்பம் இப்படி இருக்கவேண்டும் என்றெல்லாம் சில நிபந்தனைகள் வைப்பார்கள்.நான் தெளிவாக இருந்தேன். நான் வேலை பார்ப்பேன். நிறைய சம்பளம் வாங்குவேன் என்பது எனக்குத் தெரியும்.நான் வைத்த ஒரே நிபந்தனை.மாப்பிள்ளை இந்த இயக்கத்தில் இருக்கவேண்டும். தாலி கட்டாமல் திருமணம் செய்யத் தயாராக இருக்கவேண்டும்.எனது அப்பா அந்த மாதிரியே பார்த்து செய்துவைத்தார். நான் அன்று தெளிவாக முடிவு எடுத்ததால்தான் இன்றுவரை மகிழ்ச்சியாக இருக்கிறேன்.நான் இந்த இயக்கக் குடும்பத்தில் பிறந்தவள்,வளர்ந்தவள் என்பதால் சிறு வயது முதலே அனுபவப்பட்டிருக்கிறேன்.நான் பள்ளியில் படிக்கும்போதே ,'வெண்ணிலா, உன்னை கடவுள் நம்பிக்கையாளராக மாற்றுவதுதான் எனது இந்த வருடத்தின் குறிக்கோள்' என்று ஒவ்வொரு வருடமும் ஆசிரியைகள் சொல்வார்கள்.நீ பிரார்த்தனை(பிரேயர்) செய்யவில்லை என்றால் பெயிலாகி விடுவாய் என்பார்கள். நான் ஆசிரியையிடம் ' அப்போ பெயிலானவர்கள் எல்லாம் பிரேயர் பண்ணாதவர்களா? ' என்று கேட்பேன்.

ஒவ்வொரு நொடியும் நமக்கு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. திருமணம் எப்படி செய்வது?, பிள்ளைக்கு எப்படி பேர் வைப்பது என்று ஒவ்வொரு நிகழ்விலும் நமக்கு உறவினர்களால் பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். எனது மகளுக்கு எனது பெயர்தான் முன்னெழுத்து. அதாவது வெ.ம.கயல் என்பது எனது மகள் பெயர். பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை..இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை ? அம்மா பெயர்தான் முதல் முன்னெழுத்து என்று வைத்தோம்.என் பெண்ணிடம் இன்சியலுக்கு விளக்கம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு இடத்திலும் கேள்விகளும் பிரச்சனைகளும் நமக்கு வந்து கொண்டேதான் இருக்கும். இப்படிப்பட்ட நேரத்தில் கேள்வி கேட்பவர்களில் ஈகோ பாதிக்காமல்,சரியான விளக்கத்தை நாம் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.அதுவே கொள்கை பரப்பல்தான். நமது நிலைப்பாட்டை மற்றவர்களுக்கு விளக்கும்போது கொள்கையை அவர்களுக்கு விளக்குகின்றோம்.ஆண்களுக்கு இரட்டை பிரச்சனை.குடும்பத்தில் ஆணாதிக்கம் என்றும் ஆகிவிடக்கூடாது அதே நேரத்தில் கொள்கையையும் எடுத்துச்செல்லவேண்டும்.

கொள்கை என்பதை குடும்பத்தில் இணையரிடம் கொண்டு செல்லவேண்டியிருக்கிறது. பின்பு குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.நாம் பார்க்கிறோம். அப்பா நாத்திகராக இருப்பார். பிள்ளை கோவில் கோவிலாக போய்க்கொண்டிருப்பான். சில இடங்களில் அப்பா கோயில், கோயிலாக போய்க்கொண்டிருப்பார். பிள்ளை நாத்திகராக இருப்பான்.குழந்தைகள் எப்படி எந்த இடத்தில் ஈடுபாடு(இன்ஸ்பைர்) ஆவார்கள் என்று தெரியாது.ஈடுபாடு ஆகிவிட்டால் அவ்வளவுதான், முழுமையாக ஈடுபாடு ஆகிவிடுவார்கள். இன்று உலகம் முழுவதும் அக்னாஸ்டிக் என்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி  வருகிறது.கடவுள் இருக்கிறார் என்பவர்களின் எண்ணிக்கை ஒரு காலத்தில் அதிகமாக இருந்தது. இன்று கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்று தெரியாது எனச்சொல்லும் அக்னாஸ்டிக் என்பவர்களின் எண்ணிக்கை  மேற்கத்திய நாடுகளில் அதிகமாகக்கொண்டு  இருக்கிறது.நமது நாட்டிலும் அவர்களின் எண்ணிக்கை கூடுகின்றது.  அவர்களை நாம் அணுக வேண்டும். கடவுள் இருக்கிறா ? என்பது தெரியவில்லை என்று சொன்னாலே சிந்திக்க ஆரம்பித்து விட்டான் என்று பொருள்.அவர்களை பகுத்தறிவு அடிப்படையில் சிந்திக்க வைத்தால் நமக்கு வெற்றி கிடைக்கும்.நம்முடைய இலக்கு அவர்களாக நாம் வைத்துக்கொள்ளலாம் என்பதற்காகச்சொல்கிறேன்.

(கேட்பாளர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள்.ஒவ்வொரு குழுவும் ஒரு பெயர் சூட்டிக்கொண்டார்கள்.உங்களுக்கு மிகவும்  பிடித்த  உணவு? உங்களுக்கு மிக விருப்பமான ஒரு மனிதர் பெயரோடு,உங்களுடைய தனித்திறன் என்ன? உங்களுக்கு மிகப்பிடித்தமான செயல்பாடு  போன்ற கேள்விகள் குழுவில் உள்ள ஒவ்வொருவரிடமும் கேட்கப்பட்டு, பதில்கள் தொகுக்கப்பட்டு ஒவ்வொரு குழுவின் பிரதிநிதியாலும் வாசிக்கப்பட்டது. பங்கேற்பாளர்கள் அனைவரும் மிகவும் ஈடுபாட்டோடு இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பதில் அளித்தார்கள்.)

உங்களுக்குப் பிடித்த உணவு என்று கேட்டால் எல்லோரும் உடனே பதில் சொல்லிவிட்டீர்கள். ஆனால் உங்கள் தனித்திறமை என்ன என்று கேட்டபோது எல்லோரும் யோசித்தீர்கள்.நாம் நம்மைப் பற்றி யோசிப்பதில்லை. நமது திறமை எது என்பதனை தெளிவாகத் தெரிந்துகொள்வதில்லை. நாம் கொள்கைப்பிரச்சாரம் செய்யும்போது தடுமாறக்கூடாது. கேள்விகள் கேட்டால் பதில் சொல்ல வேண்டும். அதற்கு நமது கொள்கையும் தெரியவேண்டும். நம்மைப்பற்றியும் தெரியவேண்டும்.நம்மிடம் இயலாமை இருக்கும்போதுதான் கோபம் வரும். மனைவி இயலாமையை உணரும்போது குழந்தையை அடிக்கிறார்.கணவன் இயலாமையை உணரும்போது மனைவியை அடிக்கிறார்.சில மனைவிகள் இயலாமையை உணரும்போது தற்கொலை செய்துகொள்கிறார்கள். கணவன் அடிக்கும்போது மனைவி திருப்பி அடித்தால் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள். ஆனால் நாம் அதனை சொல்லித்தருவதில்லை. அதனால் இயலாமையாக உணர்ந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.நமக்கு இயலாமை மனப்பான்மை வரக்கூடாது.தனித்திறமை என்ன என்று கேட்டபோது வேறுபட்ட பதில்கள் நிறைய வந்துள்ளன. ஒருவர் திண்ணைப்பிரச்சாரம். ஒருவர் போட்டோகிராபி.,ஒருவர் கணினி தொழில் நுட்பம் இப்படி பல்வேறு வகையான பதில்கள்.

நாம் பரப்புரை என்று நினைக்கும்போது இந்தமாதிரி உட்கார்ந்து ஒருவர் பேசுவதைக் கேட்பது ஒன்றுதான் பரப்புரை என்று கிடையாது.தினந்தோறும்காலையில்  அய்யா ஆசிரியர் அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளின் கருத்துக்களைப் போட்டு குறள் வடிவில் வெண்பா இயற்றி அண்ணன் சுப.முருகானந்தம் அனுப்புகிறார். இது பரப்புரைதான்.பகுத்தறிவு சம்பந்தமான ஒரு மீம்ஸ் போடுகிறார்கள் என்றால் அது ஒரு வகையான பரப்புரைதான்.ஆட்டோ செல்வம் தனது ஆட்டோவில் அய்யா ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனையின் ஒரு பக்கத்தை ஒட்டிச்செல்கிறார் என்றால் அது ஒருவகையான பரப்புரைதான். நவீனத்திற்கு ஏற்றாற்போல் வாட்சப்,பேஸ்புக், யூ டியூப்,டிக்டாக் என அனைத்து செயலிகளின் வழியாக நமது கருத்துக்களை கொண்டு போவதும் ஒரு பரப்புரைதான்.( ஒரு படத்தினை காட்டி சுற்றுச்சூழல் --ஆப்டிக்கல் இல்லுசன் என்பதைப் பற்றி விளக்கம் கொடுத்தார் ). சுற்றுச்சூழல் வைத்துத்தான் மக்கள் முடிவு செய்கிறார்கள்.தவறான செயல்களைக் கூட நியாயப்படுத்தும் மக்கள் சுற்றுச்சூழல் நிகழ்வுகளால் உருவாகின்றார்கள். இதனை நீக்க ஆராய்ந்து பார்க்கின்ற தெளிவு வேண்டும். இந்த ஆராய்ந்து பார்க்கின்ற தெளிவை தந்தை பெரியார் கொடுத்தார். நாம் தெளிந்தால் மற்றவர்களைத் தெளிவுபடுத்த முடியும்.

கண்களைப் பார்த்து பேசவேண்டும். கேட்பவர்களைத் தயார் படுத்தித்தான் பேசவேண்டும். தந்தை பெரியாரின் எல்லாப் பேச்சுகளையும் கேட்டுப்பாருங்கள். முதலில் கேட்பவர்களைத் தயார்படுத்துவார். கேள்விகளாக நிறைய கேட்பார்.தான் பேசுவதை மக்கள்  கேட்பதற்கு தயாராக மக்களை ஆயுத்தப்படுத்துவார். கேட்பவருக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவார்.பின்புதான் அய்யா முக்கியமான கருத்தைப் பேசுவார். நாமும் அப்படித்தான் பேசவேண்டும்.நீங்கள் எல்லாம் பயிற்சிக்கு விடை அளித்தீர்கள். நான் நேரடியாக பேச்சை ஆரம்பிப்பதற்கு முன்பே சார்ட்டுகளை கொடுத்து, குழுவாகப் பிரித்து எழுதச்சொல்லியிருந்தால் இவ்வளவு ஆர்வமாக சொல்லி இருக்க மாட்டீர்கள்.நான் ஒரு கதையைச்சொன்னேன்.அப்புறம் சில செய்திகளைச்சொன்னேன். பிறகுதான் உங்களுக்கு பயிற்சிகள் கொடுத்தேன். இப்படிசெய்யாமல் நேரடியாக பயிற்சி என வந்திருந்தால் இவ்வளவு பங்களிப்பு(ரெஸ்பான்ஸ்) இருந்திருக்காது.தயார்படுத்துதல்(எஸ்டாபிளிஸ்) செய்ய வேண்டும். கூட்டத்தினரை தயார்படுத்துவதற்கு நமக்கு நிறைய டேட்டா தெரியவேண்டும்.இந்தக்கூட்டத்திற்கு வருவதற்கு முன் நிறைய கேள்விகளை அண்ணன் செல்வத்திடம் கேட்டேன். எத்தனை பேர் வருவார்கள்? பெண்கள் எவ்வளவு பேர் வருவார்கள்? என்றெல்லாம் கேட்டு தெளிவு படுத்திக்கொண்டேன். யாரிடம் போய் நாம் பேசப்போகிறோம் என்ற தெளிவு நமக்கு வேண்டும்.

வெளி நாட்டில் பந்து விளையாடுவதைக் கூட படிப்படியாக சொல்லித்தருகின்றார்கள். வெறும் பந்து விளையாட்டு என்று நினைப்பதில்லை. எப்படி பந்து வரும், எப்படிப் பிடிக்கவேண்டும், பந்திற்குப் பதிலாக கத்தி வந்தால் கூட எப்படிப் பிடிக்கவேண்டும் என்பதனைச்சொல்லிக்கொடுக்கின்றார்கள்.பிடிக்க வைப்பதற்கு அக்கறை காட்டுகிறார்கள். அந்த அக்கறை நமக்கு இருக்க வேண்டும். சும்மா நான் பந்தைப் போட்டு விட்டேன், நீ பிடித்தால் பிடி, பிடிக்காவிட்டால் போ என்று அவர்கள் விடுவதில்லை.கத்தியை தூக்கி எறிவதைப்போல நாம் கேட்பவர்களிடம் உங்களிடம் சில செய்திகளைச்சொல்லப்போகிறேன். அது உங்களுக்கு வருத்தத்தைத் தரலாம். ஆனால் உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும். அதற்காகச்சொல்கிறேன் என்று அவர்களைத் தயார்படுத்திவிட்டு நாம் சொல்லவேண்டும்.அய்யா ஆசிரியர் உரைகள் இப்படித்தான் இருக்கும் ,உன்னை சங்கடப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல, ஆனால் உண்மை அப்படி இருக்கிறதே என்று சொல்வது.நாங்கள் பிள்ளைகளுக்கு பந்து பயிற்சி கொடுக்கும்போது ஒரு பந்து போடுகிறேன் என்று சொல்லிவிட்டு 4 பந்தைப் போடுவோம். சில நேரம் பந்துக்குப் பதிலாக ஏதேனும் கூர்மையான பொருளைப் போடுவோம்,பிடிப்பார்கள். அவர்களிடம் சமூகம் இப்படித்தான் இருக்கும். நீங்கள் பந்து வரும் என்று எதிர்பார்க்கும்போது கத்தி வரும்.அவர்களுக்கு என்ன சொல்வோம் என்றால் சமூகத்தில் இப்படித்தான் மனிதர்கள் இருக்கிறார்கள். அதனையும் நீங்கள்  சமாளிக்க வேண்டும்,அலர்ட் ஆக இருக்க வேண்டும் எனச்சொல்வோம்.பலவிதமான மனிதர்களுக்கு நாம் பரப்புரை செய்யும்போது வாய்மொழியாக சில செய்திகளை சொல்லிவிட்டு பரப்புரை செய்யலாம்.

(மறுபடியும் குழுவினருக்கு கேள்விகள் கொடுக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் உங்கள் மனதை மிகவும் பாதித்த பிரச்சனை என்ன ? என்று கேள்வி கேட்கப்பட்டு ஒவ்வொருவரிடமும் பதில்கள் வாங்கப்பட்டது. பின்னர் தொகுத்து, இவ்வளவு பேரின் பிரச்சனை என்ன என்று தொகுத்துப்பார்த்தால் வேலையின்மை பிரச்சனை, வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை, பணப்பிரச்சனை, மனரீதியான பிரச்சனை, ,உறவுகள் ரீதியான பிரச்சனை,குழந்தைகளுக்கு இருக்கும் பிரச்ச்சனைகள் என்று இருக்கின்றது என்று பயிற்சியாளர் தெளிவுபடுத்தினார்)

.இந்தப் பிரச்சனைகள் இந்த அரங்கத்தில் மட்டும் இருப்பவர்களுக்கான பிரச்சனை அல்ல. சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இதுதான் பிரச்சனை.நீங்கள் நமது கொள்கைகளை பரப்புரை செய்யப்போகும் எல்லா இடத்திலும் இந்தப்பிரச்சனைதான் இருக்கிறது.இதுதான் மக்கள் பிரச்சனை. நாம் இந்தப்பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு நோக்கி மக்களை நகர்த்த வேண்டும்.முதலில் அவர்கள் பிரச்சனைகளைப் பேசவேண்டும். பிறகு எதனால் அந்தப்பிரச்சனைகள் என்பதனை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.பின்பு தீர்வினை நோக்கி எப்படி செல்வது என்பதனைச்சொல்லவேண்டும். பார்ப்பனர்களுக்கு அய்யா பெரியாரைப் பிடிக்காது. ஆனால் பார்ப்பனப்பெண்களுக்கு அய்யா பெரியாரைப் பிடிக்கும்.ஏனென்றால் பார்ப்பனப்பெண்களின் பிரச்சனையை தந்தை பெரியார் பேசினார். அந்தந்தப் பகுதி மக்களின் பிரச்சனைகளைத் தந்தை பெரியார் பேசியிருக்கிறார்.கல்யாண வீட்டில் பேசும்போது ஏன் எல்லாச்சாதிக்காரர்களும் சமைக்கக் கூடாது? சமைத்து சாப்பிட்டால் என்ன நிகழும் ? என்று பிரச்சனைகளை பேசியிருக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் அந்தந்த இடத்தின் பிரச்சனையைப் பேசவேண்டும்.பேசுவது மட்டுமல்ல,செயல்பாடு வேண்டும்.

செயல்பாடுகளைக் காட்டுவது களப்பணி. திராவிட இயக்கத்தின் அடித்தளம் களப்பணிதான்.அதுதான் அணுகுமுறை.களப்பணி தொய்வு இல்லாமல் நடக்கவேண்டும்...அடித்தள மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் நாம் நிற்கவேண்டும்.நாம் நிற்கவில்லை என்றால் யார் நிற்கிறார்களோ அவர்கள் பின்னால் மக்கள் போய்விடுவார்கள்.ஒவ்வொரு இடத்திலும் சிலம்பம் சொல்லித்தருகிறார்கள்.ஸ்போக்கன் ஆங்கிலம் சொல்லித்தருகிறார்கள். நிறைய களப்பணிகள் நம்மைச்சுற்றி மற்றவர்களால் நடத்தப்படுகிறது.. நாம் கவனிக்க வேண்டும்.நம்மிடம் ஸ்போக்கன் ஆங்கிலம் சொல்லித்தர ஆள் இல்லையா?,சிலம்பம் சொல்லித்தர ஆள் இல்லையா? இதில் ஆசிரியர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. தன்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லித்தான் எனது அப்பா  இயக்கத்தைப் பற்றித் தெரிந்ததாக சொல்வார்.  பள்ளி ஆசிரியர் முதலில் நிறைய அப்பாவிடம் பேசியிருக்கிறார். ஸ்காலிர்ஸிப்,படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்று நிறைய பேசியிருக்கிறார்..படிப்பதில்,வாழ்க்கையில் உள்ள சிக்கல்களைப் பேசியிருக்கிறார். பள்ளி ஆசிரியர் மேல் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.. பின்பு இயக்கத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். இதுதான் நமது அணுகுமுறையாக இருக்க வேண்டும்.தனிப்பட்ட மனிதர்களுக்கு பிரச்சனை என்று வருகின்றபொழுது என்னைப்போன்றவர்களிடம் கவுன்சிலிங்க் என்று வருகின்றார்கள். நாங்கள் தீர்வைச்சொல்கிறோம். அதனைப்போல நம்மைச்சுற்றி இருக்கும் மக்களின் சிக்கல்கள் நமக்குத்தெரிய வேண்டும்.அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்விற்கு நாம் வழிகாட்டுதல்(கைடன்ஸ்) கொடுத்தால் போதும்.மக்கள் நம்மை நோக்கி வர ஆரம்பிப்பார்கள். அது இங்கிருக்கும் நமது ஒவ்வொருவராலும் முடியும்.நம்மால் முடியும்.எல்லாவிதமான திறமைகள் இருக்கும் ஆட்கள் எல்லாம் கலந்துதான் இங்கு இருக்கின்றோம்.நமது கழகத்தில் இருக்கின்றோம்.

இங்கு இருக்கும் மனிதர்களின் பிரச்சனைகளை நாம் தொகுத்ததுபோல, உங்கள் கிராமத்தில் அல்லது உங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை நீங்கள் தொகுக்க வேண்டும்.இதற்கு நாங்கள் உளவியலில்  தேவை(need analysis) பகுப்பாய்வு என்று சொல்வோம்.இந்தத் தேவை பகுப்பாய்வு-பின்பு தீர்வு என்பதனை மிக எளிதாக ஆரம்பிப்போம்.உங்களிடம் முதலில் சாப்பிடுவதில் என்ன பிடிக்கும் என்றவுடன் ஆர்வமாக பதில் சொன்னீர்கள்.பின்பு கொஞ்சம் கடினமாக கேட்டபோது,யோசித்தீர்கள், ஆனால் பதில் சொன்னீர்கள். இது 2 மணி நேர பயிற்சி. இதுவே இரண்டு நாள், மூன்று நாள் என்று வருகின்றபோது இயல்பாக பேச ஆரம்பிப்பீர்கள். நம்பிக்கை வரும்.புரிதல் வரும். அதன் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு வரும். .  

என்ன தேவை இருக்கிறது என்று கண்டு பிடிப்பது....சமூகவியலில் முதலில் நாம் வாழும் பகுதியில் இருப்பவர்களோடு பேசவேண்டும்.பின்பு தேவை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.பின்பு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நம்மாலான விசயங்களைச்செய்ய வேண்டும். பின்புதான் நாம் என்ன செய்ய நினைக்கிறமோ அதனைச்செய்ய வேண்டும்.   நாங்கள் ஒரு கிராமத்திற்கு சென்றோம். ஒரு 5000 குடும்பங்கள் உள்ள கிராமம். ஒவ்வொரு குடும்பத்திலும் ரூ 1000 வரை தண்ணீருக்காக(மினரல் வாட்டர்) செலவு செய்கிறார்கள் என்பதனை நாங்கள் ஆய்வு மூலம் கண்டுபிடித்தோம்.அந்தக்கிராமத்தில் ஒரு ஆர்வோ பிளாண்ட் நிறுவினோம்.எல்லாக் குடும்பத்திற்கும் ரூ 1000 மிச்சமானது. .பின்பு நாங்கள் சொல்வதை என்னதான் சொல்கிறார்கள் என்பதனைக் கேட்க ஆரம்பித்தார்கள்.சிலர் எதிர்ப்புக் குரல் கொடுத்தபோதுகூட மக்களே அவர்கள் குரலை அடக்கினார்கள்.ஒரு ஊரில் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பே அந்த ஊருக்கு சென்று விசாரிப்போம். அந்த ஊரைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் திரட்டிவிட்டுத்தான் ஊருக்குள் போவோம்.ஊரில் உள்ள  ஒரு பிரிவினருக்கும் மட்டும் இவரகள் வேண்டியவர்கள் என்ற எண்ணம் ஊர்மக்களுக்கு ஏற்படாதவண்ணம் செயல்படவேண்டும்.இப்படித்தான் நாம் செய்யவேண்டும்.

இந்த வேலை சமூகவியல் வேலை என்பது புதிததல்ல. இந்திய சமூகவியல் பாடப்புத்தகத்தை எடுத்தீர்கள் என்று சொன்னால் முதல் படம், முதல் பாடம் தந்தை பெரியாரைப் பற்றியதுதான்.அதற்குப்பிறகுதான் மேல் நாட்டு சமூகவியல் அறிஞர்கள் படம்,பாடம் எல்லாம் இருக்கும்.இந்திய சமூகவியல் என்று நீங்கள் இண்டர் நெட்டில் போனாலும் தந்தை பெரியாரைப் பற்றித்தான் வரும்.கம்யூனிட்டி ஒர்க் என்பது நமக்கு புதிதல்ல, நான் இங்கு நினைவுபடுத்துகிறேன்,அவ்வளவுதான்.நாம் எங்கு பரப்புரை செய்யப்போகிறோமோ அங்கே இருக்கும் தேவையை முன் கூட்டியே பகுத்து ஆய்ந்து போனால் நமது பரப்புரை எளிதாக இருக்கும். ஒவ்வொரு தோழருக்கும் என்ன திறமை இருக்கிறதோ அந்தத் திறமை மூலமாக மக்களை அணுக வேண்டும்.பேச்சுத் திறமை இருப்பவர்கள் பேச்சின் மூலமாக, எழுத்து திறமை இருப்பவர்கள் எழுத்தின் மூலமாக பரப்புரை செய்யவேண்டும்.இதே அணுகுமுறைதான் குடும்பத்திலும். நமது இயக்கத்திலேயே சிலர் சொல்வார்கள், எனது மனைவி கோயிலுக்கு போறேன் என்று சொல்கிறாள், சொன்னாள் கேட்க மாட்டேன் என்கிறாள் என்று சொல்வார்கள்.நான் கேட்பேன். அவர்களுடைய சமையல் வேலையிலே நீங்கள் நின்று இருக்கிறீர்களா?துவைக்கும் வேலையில் நீங்கள் துணை நின்றிருக்கிறீர்களா? வீடு கூட்டிருக்கிறீர்களா?குழந்தைகளைப் பார்த்து இருக்கிறீர்களா ?  என்று கேட்பேன்.இல்லை என்றால் எப்படி உங்களை அவர்கள் நம்புவார்கள் ? என்று கேட்பேன்.குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் என்ன என்பதையும் நீங்கள் பார்க்கவேண்டும்.மனைவியின்,பிள்ளைகளின் பிரச்சனையைக் கவனிக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள்.முற்போக்கு விசயங்களை சொல்லும்போது நம்புவார்கள்.இந்த இயக்கத்திலே இருப்பதனால் எனது கணவர் இவ்வளவு உதவியா இருக்கிறார் என்று நம்ப ஆரம்பிக்கும்போது இயக்கத்தையும் பார்க்க ஆரம்பிப்பார்கள். வர ஆரம்பிப்பார்கள்.

"பகுத்தறிவு என்பது ஆதாரங்களைக் கொண்டு தெளிவடைவது " தந்தை பெரியார் சொன்னது.பரப்புரைக்கு போகும்போது ஆதாரம் வேண்டும்.இந்த ஆதாரங்களை உங்களிடமும் தேடுங்கள்.இந்தத்திறமை எனக்கு இருக்கிறது என்றால் அதற்கு என்ன ஆதாரம்? எனக்கு நல்லா எழுதத்தெரியும் என்றால் என்ன எழுதியிருக்கிறீர்கள்? எனக்கு பாடத்தெரியும் என்றால் என்ன பாடியிருக்கிறீர்கள்/...அப்படி ஆதாரத்தோடு தெளிவடைவது என்பதுதான் பகுத்தறிவு.ஆதாரம்தான் அடிப்படை.

இனி வரப்போகும் காலம் இப்படித்தான் வரப்போகுது...அம்மா ...நான் ஒரு நாத்திகவாதி என்னும் பதாகையோடு ..இந்தப் பக்கம் பாருங்கள்...ஆட்டுக்குத்தான் மேய்ப்பவர்கள் தேவை..இந்த மாதிரியான பதாகைகளோடு பேரணிகள் வெளி நாடுகளில் நிறைய வர ஆரம்பித்து விட்டது.இந்த மாதிரியான பேரணிகள் நமது பள்ளிக்குழந்தைகள் நடத்துவதற்கு ரொம்ப நாள் ஆகாது..ஆனால் அதற்கான களப்பணியை நாம் உருவாக்க வேண்டும்.நான் எப்படி இயக்கத்தை நம்ப ஆரம்பித்தேன் ?.அவ்வளவு சுதந்திரம்... எங்கள் வீட்டில் படிக்கணுமா படி, வேலை பார்க்கணுமா..வேலை பாரு..எந்த நேரத்தில் மாப்பிள்ளை பார்க்கணும் என்று நினைத்தேனோ அப்போதுதான் மாப்பிள்ளை பார்த்தார்கள்.இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. நீங்களும் மதியம் வெளியே சாப்பிட்டுக்கொள்ளுங்கள், நானும் சாப்பிட்டுக்கொள்கிறேனென்று என் கணவரிடம் சொல்லிவிட்டேன்..இன்றைக்கு என்று இல்லை வேலைக்கு போன நாளில் இருந்தே , முடியவில்லை என்று சொன்னால் எனது கணவரிடம் ஒன்று நீங்கள் சமையுங்கள், அல்லது நீங்கள் வெளியே சாப்பிட்டு விட்டு எனக்கும் வாங்கி வந்து விடுங்கள் என்று சொல்லிவிடுவேன்.ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு நன்றாக சமைக்கத்தெரியும். எல்லா வேலையும் தெரியும். ஆனால் இந்த வேலையை இப்ப செய்ய வேண்டுமா? வேண்டாமா?என்பது எனது முடிவு.உரிமையை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். இரவு என்றாலும் நான் தனியாகப் போவேன். நாம் நம்மை நிருபித்தால்தான் நம்மை வெளியே விடுவார்கள்.ரொம்ப பாதுகாப்பான வளையத்தை விட்டு வெளியே வந்து நாம்(பெண்கள்) நம்மை நிருபிக்கவேண்டும்.

பில் ஜிக்கர்மேன் என்பவர் ஒரு சமூக அறிஞர் .இவர் ஒரு ஆராய்ச்சி செய்கிறார்.அந்த ஆராய்ச்சி முடிவின்படி, நாத்திக பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் மிகவும் பெருந்தன்மையுடையவர்களாக இருக்கிறார்கள்.சுயநலம் இல்லை. ஆனால் மத நம்பிக்கை உடைய பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் மிக அதிகமான சுய நலம் உடையவர்களாக இருக்கிறார்கள்.மதக்குழந்தைகள் தன்னிடம் உள்ள எந்தப்பொருளையும் கொடுக்க மறுக்கையில், நாத்திகக் குழந்தைகள் கேட்கும் பொருளை எல்லாம் கொடுக்கின்றார்கள்.நாத்திகக் குழந்தைகளுக்கு எல்லாம் கிடைக்கும் என்னும் நம்பிக்கை இருக்கிறது.நாத்திக்குழந்தைகள் மனதில் இனவெறி என்பதே இல்லை.நேர்மறையாக இருக்கிறார்கள்.நான் இணையத்தில் இருந்துதான் எடுத்திருக்கிறேன். Children of atheist என்று போட்டாலே எல்லாம் வந்துவிடும்.அறிவியல் அறிஞர் ஆராய்ச்சியின்படி கொடுத்திருப்பதால் இது மிகவும் பிரபலமாக இருக்கிறது. சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்..அது எப்படி நாத்திகக்குழந்தைகளை நல்ல விதமாக சொல்லலாம் என்று.ஆனால் உண்மை உண்மைதானே.. இதெல்லாம் நமக்கு ஆதாரம். நாம் நாத்திகவாதிகளாக இருக்கிறோம். நாத்திகத்தில் நாம் நம் குழந்தைகளை வழி நடத்திச்செல்கிறபோது எப்படிப்பட்ட நல்ல குழந்தைகளாக வளர்கிறார்கள் என்பதற்கு இது எல்லாம் ஆதாரம்.ஆதாரத்தோடு நாம் பரப்புரை செய்ய முடியும்.

Quora என்பது இணையத்தில் கேள்வி கேட்கும் தளம். அதில் தந்தை பெரியார் பற்றி நமது இயக்கத்தைச்சாராதவர்கள் பதில் கொடுத்திருக்கின்றார்கள்.பெரியார் என்பது வெறும் கடவுள் மறுப்பாளர் மட்டும் இல்லை. மக்கள் பிரச்சனையை பேசியவர் பெரியார் .சமூக நீதியை,பெண்ணுரிமையை, சாதி ஒழிப்பை முன்னெடுத்தவர் என்று பதில் கொடுத்திருக்கின்றார்கள்.ஜனார்த்தனன் என்று அவரின் பெயர். அவர் வட நாட்டைச்சார்ந்தவர் என்று வருகின்றது.நாம் பெரியாரை பேசுகிறோம்,. அதில் ஆச்சரியமில்லை. இன்றைக்கு இந்தியா முழுவதும் பெரியாரைப் பேசுகிறார்கள். பேசுகின்றவர்களை பெரியார் எந்த வகையில் தொட்டு இருக்கின்றார் என்பதனை நாம் பார்க்கவேண்டும். அப்போதுதான் நாம் அந்த முறையில் பரப்புரை செய்வதற்கு வசதியாக இருக்கும்.அந்த வகையில் தான் நான் களப்பணியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு சமூகப்போராளியாய் ,தந்தை பெரியாரைப் பார்க்கும் பார்வை ஆணித்தரமாக மக்களிடம் இருக்கிறது.தந்தை பெரியார் எப்படிப்பட்ட சமூகப்போராளி என்னும் அறிமுகத்தோடு நாம் பரப்புரையை ஆரம்பிக்கலாம். எவரும் கேட்பார்கள்.

அடுத்தது அன்பின் மொழி என்பது.உங்கள் நண்பராக இருக்கலாம், உறவாக இருக்கலாம் அல்லது கணவன் மனைவியாக இருக்கலாம். இரண்டு பேரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் ஏதோ ஒரு இடத்தில் சண்டை வருகிறது.ஒத்துப்போகாத நிலைமை இருக்கிறது என்றால் என்ன மாதிரியான மொழியில் நாம் பேசவேண்டும் என்பது தெரியவேண்டும்.அதற்கு  இந்த அன்பின் மொழி(லவ் லாங்குவேஜ்)யை நீங்கள் பயன்படுத்தலாம். அன்பின் மொழி என்பது எந்த வகையான மொழியில் நாம் பேசவேண்டும் என்று தெரிந்துகொள்வது. அதற்கு உளவியல் சில வரையறைகளைக் கொடுக்கிறது.இந்த படத்தில் 30 கேள்விகள் இருக்கிறது. 30க்கும் நீங்கள் பதில் அளிக்கவேண்டும்.அந்தப் பதில்களை 5 வகையாகப் பிரிக்கிறார்கள். சிலருக்கு பாராட்டுவது மட்டும்தான், வாய் வார்த்தைகளின் மூலமாக பாரட்டுவது மட்டும்தான் பிடிக்கும். பாராட்டுபவர்கள் மட்டும்தான் நம் மீது அன்பாக இருக்கிறார்கள் என்று நினைப்பார்கள். சிலருக்கு தன்னோடு தன்னுடைய நேரத்தை  செல்வழிப்பவர்கள் மட்டும்தான் அன்பானவர்கள் என்று நினைப்பார்கள்,சிலர் ஏதேனும் தனக்கு அன்பளிப்பு கொடுப்பவர்கள் மட்டும்தான் தன்னிடம் அன்பாக இருக்கிறார்கள் என நினைப்பார்கள்,தன்னோடு சேர்ந்து வேலை பார்ப்பவர்கள் மட்டுமே தன்னிடம் அன்பாக இருப்பவர்கள் என சிலர் நினைப்பார்கள்,சிலருக்கு உடலைத் தொட்டு சொல்பவர்கள்,பழகுபவர்கள் மட்டுமே தன்னிடம் அன்பாக இருப்பதாக நினைப்பார்கள். நாம் ஒத்துப்போக நினைப்பவர்கள் இந்த 5 வகையான பிரிவில் எந்த பிரிவு என்பதில் கண்டுபிடிப்பதில்தான் வெற்றி இருக்கிறது,மகிழ்ச்சி இருக்கிறது.

எனது மகளுக்கு உடலைத் தொட்டு பழகுவது தான் பிடிக்கும் என்றால் நான் எவ்வளவு பாராட்டிப்பேசினாலும், எவ்வளவு வாங்கிட்டு வந்து கொடுத்தாலும் பிடிக்காது.புரியாது. புகழ்ந்து பேசுவதை மட்டுமே விரும்புகிறவர்களிடம் நீங்கள் தொட்டுப்பேசினாலோ, நேரம் செல்வழித்தாலோ,உதவியாக வேலை செய்தாலோ பிடிக்காது. கல்யாணம் முடிந்த புதிதில் ஒருவரது கணவர் அவரது மனைவிக்கு   கிப்டாக வாங்கி வந்து கொடுத்தார்.மனைவியின்  விருப்பமோ கணவர் அவரோடு  சேர்ந்து வீட்டு வேலை பார்க்கவேண்டும் என்பது.கொஞ்ச நாட்களுக்குப்  பின்பு இணையர்களுக்கு புரிதல் ஏற்பட்டது.இப்போது கணவருக்கு மனைவி கிப்ட் வாங்கித்தருகிறார். கணவரோ மனைவியின்  வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்கிறார்.இருவரின் அன்புமொழியும் ஒருவருக்கு ஒருவர் புரிந்ததால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படி உங்களோடு இருப்பவர்களை,உங்களைச்சுற்றி இருப்பவர்களைப் புரிந்து கொள்ள இந்த உளவியல் பயன்படும்

பாராட்டு மட்டுமே எதிர்பார்ப்பவரிடம் நீங்கள் விமர்சனம் செய்தால் உங்கள் பக்கமே திரும்ப மாட்டார்.  வார்த்தைகளால் பாராட்டை விரும்புவர்களுக்கு .ஒரு வாரமாக பாராட்டு கிட்டவில்லையென்றால் சோர்வாகி விடுவார்கள்.கிப்ட் பிடிப்பவருக்கு ஒரு வாரமாக ஒரு கிப்ட்டும் கொடுக்கவில்லையென்றால் மனச்சோர்வு ஆகிவிடுவார். வேலையில் உதவி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் கணவரோ,பிள்ளைகளோ வேலைக்கு உதவி செய்யவில்லை என்றால் சோர்வாகி விடுவார்கள். இதுதான் மனச்சோர்வு. மற்றவர்களுக்கு  எதிரான விசயங்களை அவர்கள் சொல்வதற்குக் காரணம் இதுதான். இது தனிப்பட்ட மனிதர்களுக்கு தேவைப்படும் அன்பின் மொழி.

சமுதாயத்திற்கு,கம்யூனிட்டிற்கு அன்பின் மொழி என்பது களப்பணி,மனிதர்கள் சொல்வதைக் கேட்பது, அவர்களுக்கு உதவி செய்வது,வழி காட்டுவது  அதனை நாம் செய்ய வேண்டும்.செய்வோம்.வலிமையான பரப்புரையை மேற்கொள்வோம்.நமது பெரியார் கொள்கை உலகமயமாகிறது. உலகெங்கும் மக்கள் நாத்திகம் நோக்கி தங்கள் பார்வையை செலுத்தத்தொடங்கியிருக்கிறார்கள். நாம் திட்டமிட்டு பரப்புரை செய்தால்,மிகப்பெரிய வெற்றியை நாம் பெற முடியும்.அதற்கு இந்த உரை பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சியே. வெற்றிபெறுவோம். வாய்ப்பிற்கு நன்றி.  

சுயமரியாதை நாளை(டிசம்பர் 2)  முன்னிட்டு மதுரையில் 24.11.2019 ஞாயிறு காலை  'உளவியலும் கொள்கை பிரச்சார வழிமுறைகளும்' என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் உளவியல் வல்லுநர் ஜெ.வெண்ணிலா மகேந்திரன் அவர்களின் உரையின் எழுத்து வடிவம். தொகுப்பு...முனைவர்.வா.நேரு