Wednesday 2 December 2020

அதிசயமான இயக்கத்தின் ஆச்சரியமான தலைவரே !

 அதிசயமான இயக்கத்தின் 

ஆச்சரியமான தலைவரே !

                     வா.நேரு




அய்யாவின் அடிச்சுவட்டில்
நீங்கள்...
உங்களின் அடிச்சுவட்டில்
நாங்கள்...

தந்தை பெரியார் தந்த
புத்தி போதும் உங்களுக்கு....
நீங்கள் தரும் புத்தி
போதும் எங்களுக்கு....

"தந்தை பெரியாரின் கொள்கை
கைத்தடி நான்"-..நீங்கள்..
உங்களின் கொள்கை
கைத்தடிகள் நாங்கள்...

பெரியார் பணி முடிப்பே
வாழ்வின் இலக்கு- உங்களுக்கு..
தாங்கள் இடும் பணிகளை
முடிப்பதே எங்கள் வாழ்வின் இலக்கு...

'ரத்தமும் சதையும் நகமுமாய்'
எனது தோழர்கள் என
ஆனந்தக்  களிப்பு தங்களுக்கு,,,
உலகு எங்கும் உள்ள
தங்களின் தோழர்கள்
எங்களின் தோழர்கள் ஆவதால்
இரட்டிப்பு மகிழ்ச்சி எங்களுக்கு,,,

கொடுந்தொற்று கரோனா
கொல்கிறது மக்களை...
கொடிது கொடிது கரோனாவினும்
கொடிது ஆரியம் எனும்
அறிவுறுத்தல்
கேட்கிறது தங்களிடமிருந்து...

அனைவருக்கும் அனைத்தும்
இதுதான் திராவிடம்...
திராவிடத்து காளைகளே
செப்புவீர் இதனை செகமனைத்தும்
எனும் குரல் கேட்கிறது
பிறந்த நாள் குரலாக தங்களிடமிருந்து..

ஆரிய ஆதிக்கம்
ஆக்டோபஸ் போல,,,
தெரிந்த கரங்களை விட
தெரியாத கரங்கள் அதிகம்...
பெற்றவை கையளவு..
பெறவேண்டியதோ மலையளவு...

கையளவு பெற்றதையும்
காணாமல் ஆக்கிடவே
நச்சுக்கொள்கைப்  பாம்புகள்
படம் எடுத்து ஆடுகின்றன...
காளைகளே புறப்படுங்கள்...
களம் நோக்கி என
கட்டளையிடும் எங்கள் தலைவரே..

வயது 88 எனினும்
கட்டளை இடுவதில்
களத்தில் நிற்பதில்
கருத்தில் மோதுவதில்
என்றும் 28 வயது இளைஞரே...
எங்கள் தலைவரே..

உங்கள் தொண்டர் ஒருவர்
தனது ஆசையை
என்னிடம் சொன்னார்....
எனது படத்தை அய்யா
ஆசிரியர் திறந்து வைக்க வேண்டுமென..
அங்கணமே நிகழ்ந்தது..
துன்பமான நிகழ்வு எனினும்
தங்கள் தொண்டர்கள்
அவர்கள்  இறப்பு
குறித்து கவலைப்பட்டதில்லை...
அய்யா பெரியார் கொள்கை வளர..
நமது இனம் வாழ
அய்யா ஆசிரியர் வாழவேண்டும்
என்பதே அவர்கள் நினைப்பு
அவர்கள் வாழ்க்கை எல்லாம்...

அதிசயமான இயக்கத்தின்
ஆச்சரியமான தலைவரே !
78 ஆண்டுகள்
பெரியார் பணியின் தொகுப்பே...
100 ஆண்டுகள்
பெரியார் பணியின் தொகுப்பாய்
உங்களைக் காண
எங்களுக்கும் ஆசை....
வாழ்க ! வாழ்க !
நீங்கள் வாழ்க !
                             வா.நேரு  





நன்றி : விடுதலை 02.12.2020 


 

Thursday 19 November 2020

படைப்பையும் கூடத்தான்..

              


தண்ணீரில் போட்ட

கல் போலக்கிடந்தன...

அக்காலக் கதைகள்...


பத்திரிக்கை அலுவலகம் போனதா?

பிரித்தார்களா?

படித்தார்களா?

வெளியிடுவார்களா?

மாட்டார்களா ?

எதுவும் தெரியாமல்

சகதியில் மாட்டிய

எருமை போல

மனசு அல்லல்படும்....


எடுத்து வைத்த நகல்

சில நாட்களில்

மறைந்து போகும்...

பின்பு எடுத்துக்கூட்டி

எழுத இயலுவதில்லை...

பெரும்பாலும்...

மறைந்து போன கதைகள்

பட்டியலில் இடம் பெறும்...


மறைந்து போன கதையென

மறந்து போன கதையை

திடீரென்று பிரசுரித்து

களிப்பூட்டும் சில நேரங்களில்

சில பத்திரிக்கைகள்...


இந்தப் பத்திரிக்கைக்கு

இப்படி எழுதல் வேண்டும்...

அந்தப் பத்திரிக்கைக்கு

அப்படி எழுதல் வேண்டுமென

நீண்ட பட்டியல்

பத்திரிக்கைக்கு ஏற்றபடி

எழுதுவதற்கு

பட்டியல் வைத்திருப்பான்

அக்கால எழுத்தாள நண்பன்...



கணினி வந்தது...

எல்லாம் மறைந்து போனது...

கணினி தானாகவே

நகல் வைத்திருக்கிறது இன்று...

எனது கருத்து இது...

எனது கதை இதுவெனப்

பதிய முடிகிறது...

வலைத்தளங்களில் பதிந்தவுடன்

படித்தவர்கள் எண்ணிக்கை வருகிறது...

பின்னோட்டம் வருகிறது....

விளைவுகள்...எதிர்விளைவுகள் என

படைப்பைக் கொண்டாடி

மகிழ்கிறது....


அட ! கணினி

வாழ்க்கையை மட்டுமா மாற்றியது...

படைப்பையும் கூடத்தான்..

                         வா.நேரு,20.11.2020

Tuesday 17 November 2020

இனி வரும் காலத்தில் பிரபஞ்சம்.....வா.நேரு


நன்றி : உண்மை (16-30 நவம்பர்,2020)..மாதம் இருமுறை பகுத்தறிவு இதழ்

                                   இனி வரும் காலத்தில் பிரபஞ்சம்
                                         (முனைவர்.வா.நேரு)
                                               

"இன்றைய உலகமானது பழங்கால உலகம் என்பதிலிருந்து நாளுக்கு நாள் எப்படி மாறுதலடைந்து வந்திருக்கிறது? இனிச் சில நூற்றாண்டுகளில் எப்படிப்பட்ட மாறுதலை அடையும்.?என்பனவாகிய விஷயங்கள் பகுத்தறிவாதிகளுக்குத்தான் ஏதாவது தெரியக்கூடுமே தவிர புராண இதிகாசப்பண்டிதர்கள் என்பவர்களுக்கு,அதுவும் நம் "கலை காவியப் பண்டிதர்களுக்கு தெரிவது சுலபமான காரியமல்ல" என்றார் தந்தை பெரியார்.(இனிவரும் உலகம்..முன்னுரை).அறிவியல் பற்றி எல்லாம் கவலைப்படாமல், புராண இதிகாசப்பண்டிதர்கள் கதை அளந்து கொண்டிருந்த காலத்தில் கரோனா அவர்களின் கதையை எல்லாம் பொய் என்பதனை நிருபித்துக்கொண்டிருக்கிறது.நாம் பகுத்தறிவாதிகள் இந்தப் பிரபஞ்சம் பற்றிச்சிந்திப்போம்.

"வானம் எனக்கு ஒரு போதிமரம்/நாளும் எனக்கு அது சேதி தரும் " என்பது ஒரு திரைப்படப்பாடலின் வரிகள்.வானத்தைப் பற்றி நாள்தோறும் புதுப் புதுச்செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
பிரபஞ்சம் என்றால் என்ன?இரவில் வீட்டின் மாடியில் படுத்துக்கொண்டு வானத்தை நோக்கினால் சின்ன சின்ன புள்ளிகளாக நிறைய நட்சத்திரங்கள் தெரிகின்றன. சில நட்சத்திரங்கள் பெரிதாகவும்,சில நட்சத்திரங்கள் சிறிதாகவும் வானம் நமக்கு ஒரு நட்சத்திர தொகுப்பாக தெரிகிறது.நாத்திகரான அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் இந்தப் பிரபஞ்சத்தை ஆராய்ந்து சில செய்திகளைச்சொன்னார்." நமது பிரபஞ்சத்தில் பல இலட்சக்கணக்கான காலக்சிகள்(Galaxy)உள்ளன.ஒருகாலக்சியில் 10,000 கோடி நட்சத்திரங்கள் இருக்கலாம்.அந்த காலக்சிகளில் ஒன்றுதான் நமது பால்வெளி மண்டலம்.இந்த பால்வழி மண்டலத்தில் 100 மில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன, அவற்றில் ஒன்றுதான் நமது சூரியன்.நமது சூரியன் ஒரு நட்சத்திரம்.சூரியனை 8 கிரகங்கள்,வால் நட்சத்திரங்கள்,குள்ளக்கோல்கள்,விண்கற்கள் எனச்சுற்றிக்கொண்டு இருக்கின்றன.இதனை சூரியக்குடும்பம் என்கிறோம்.இது போலவே மற்ற நட்சத்திரங்களையும் கிரகங்கள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன.நமது பால்வழி மண்டலத்தில் மட்டும் பூமியைப் போல் 5000 கோடி கிரகங்கள் இருக்கின்றன"(ஸ்டீபன் ஹாக்கிங்-தன்னம்பிக்கையின் நாயகன்,ஏற்காடு இளங்கோ,மங்கை வெளியீடு,சென்னை-18.பக்கம் 99).பிரபஞ்சத்தை பற்றி நினைத்துப்பார்ப்பதே மலைப்பாக இருக்கிறது.நாம் இருப்பது பூமியில். பூமி இருப்பது சூரியன் எனும் நட்சத்திரக் குடும்பத்தில். நமது பால்வெளி சூரியனைப் போன்ற 100 மில்லியன்(10 கோடி) நட்சத்திரங்கள் அடங்கியது, .நமது பால்வெளியைப் போல இலட்சக்கணக்கான பால்வெளிகள்(காலக்சிகள்) அடங்கிய தொகுப்பிற்கு பிரபஞ்சம் என்று பெயர்.எவ்வளவு பெரிய பிரபஞ்சம்.இவ்வளவு பெரிய பிரபஞ்சம் என்றவுடனேயே ஒரு ஆத்திகர், கடவுள் படைப்பு என்று சொல்ல ஆரம்பிப்பார்.ஆனால் கடவுள் படைப்பு,சொர்க்கம் என்பதனை எல்லாம் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் முழுமையாக மறுத்தார்.

"ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புத்தகமான பிரம்மாண்ட வடிவமைப்பு(The Grand Design) என்பதில் உலகத்தைக் கடவுள் படைக்கவில்லை.இயற்பியல் விதிகளுக்கு ஏற்ப அது தானாகவே உருவானது என்று குறிப்பிட்டுள்ளார்.இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பு எதுவும் இல்லை.இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை.கடவுள் இதனை உருவாக்கவும் இல்லை.மதத்தத்துவவாதிகள் கூறுவது போல உலகுக்கு வெளியிலிருந்தும் எவரும் படைக்கவில்லை.அதற்கு வாய்ப்பும் இல்லை.கடவுள் வந்து ,தடவிப்பார்த்து,பிரபஞ்சமே,நீ உருவாகு என்று கூறுவது அபத்தமானது என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார் "(ஸ்டீபன் ஹாக்கிங்-தன்னம்பிக்கையின் நாயகன்,ஏற்காடு இளங்கோ,பக்கம் 86). தனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்பதனையும்,சொர்க்கம் என்று ஒன்று இல்லை என்பதனையும் ,பிரபஞ்சத்தினைப் பற்றிய விளக்கங்கள் கூறும்போது மிக அழுத்தமாகச்சொன்னவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

சரி, இந்தப் பிரபஞ்சம் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளும் அது பற்றிய சிந்தனைகளும்  எப்படியெல்லாம் மனித குலத்திற்கு பயனுள்ளதாக இருக்கப்போகிறது? நாம் வாழும் இந்த உலகம்,பூமி எத்தனை ஆண்டுகள் இருக்கும்? பூமி இருக்கும் சூரிய குடும்பம் எத்தனை ஆண்டுகள் இருக்கும் ?நாம் வாழும் பூமி ஒரு நாள் அழிந்து போகுமா ? என்பதை எல்லாம் பிரபஞ்ச அறிவியலோடு இணைத்து பார்ப்பது நமக்கு வியப்பைத் தருகிறது.

ஒரு நாள் பூமியில் இனி மனிதர்கள் வாழ முடியாது  என்ற நிலைமை வருமா?. வரும் என்று சொல்கின்றார் பிரபஞ்சத்தைப் பற்றி பல்வேறு அறிவியல் உண்மைகளைத் தனது ஆராய்ச்சிகளின்மூலம் நிருபீத்த ஸ்டிபன் ஹாக்கின்ஸ் அவர்கள்.இன்றைய கரோனா காலமே அப்படி ஒரு நிலைமையை உண்டாக்கி இருக்கிறது.நமது அருமையான தோழர்கள் சிலரை இழந்திருக்கிறோம்.பல தோழர்கள் கரோனா நோயை எதிர்கொண்டு, முழு குணம் பெற்று இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.கரோனாவால் உலகமே பெரும் அச்சத்தில் உள்ளது.மக்கள் பயப்படுகிறார்கள். கரோனா போன்ற பல தொற்று நோய்கள்,, மிக எளிதாக மனிதர்களிடையே பரவக்கூடிய தொற்று நோய்கள், இனியும் தொடர்ந்து தோன்றும்,பரவும், மனித குலத்தை அச்சுறுத்தும்  என்று அறிவியல் அறிஞர்களும் சுற்றுச்சூழல் அறிஞர்களும்  சொல்கிறார்கள்.அப்படிப்பட்ட நிலைமை தொடர்ந்து வருகின்றபோது என்ன செய்வது என்னும் கேள்வி எழுகிறது.அதற்கான பதிலாக ஸ்டீபன் ஹாக்கின்ஸ், மனிதன் வேறு கிரகங்களில் சென்று குடியேற வேண்டும் என்று சொன்னார்.இனி வரும் உலகம் பற்றி சிந்தித்து சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள் பல்வேறு கருத்துக்களை சொன்னது போல,இனி வரும் பிரபஞ்சத்தைப் பற்றி சிந்தித்து ஸ்டீபன் ஹாக்கின்ஸ் பல்வேறு கருத்துக்களைச்சொன்னார்.

நாம் வேறு கிரகங்களில் குடியேறி வாழலாம். அப்படி வாழும் காலம் எதிர்கால நூற்றாண்டுகளில் மனிதர்களுக்கு கிடைக்கலாம். மனித இனம் எப்போது தோன்றியது,எங்கே தோன்றியது, எப்படி இப்போது இருக்கும் பூமி முழுவதும் பரவியது என்பதைப் பற்றி பல செய்திகளை மரபியல் ஆய்வுகள் சொல்கின்றன.ஒரு இடத்தில் தோன்றி வாழ்ந்த மனித இனம்,.பல ஆயிரம் ஆண்டுகள் பயணத்தின் விளைவாக இன்றைக்கு உலகம் முழுவதும் பரவி இருக்கிறது.முதல் பரவல் என்பது கால்நடையாக. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு. கால்நடையாக சென்றிருக்கிறார்கள். போகும் வழியில் தங்கி, தங்கி பின்னர் அங்கிருந்து கிளம்பி ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு. அது போலவே ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு கால்நடையாகவே மனிதர்கள் குழு குழுவாகச்சென்றிருக்கிறார்கள்.தங்களது பண்பாட்டை, நாகரித்தை வளர்த்திருக்கிறார்கள். பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு கிடைத்த மூளை வளர்ச்சியும், இரண்டு கால்களால் நேராக நிமிர்ந்து நடக்கும் தன்மையும் விளைவித்த அற்புதம் அவனை உலகம் முழுவதும் பரவ வழி செய்தது.பேருந்து,இரயில்,விமானம் என்று அடுத்தடுத்த வந்த நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கோ, ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கோ செல்வதை மிக எளிமையாக்கி இருக்கிறது.சில மணி நேரங்களில் கண்டம் விட்டு கண்டம் செல்ல முடிகிறது.ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிறந்து வாழ்ந்து, அங்கேயே செத்து மடிந்த மனிதன், இன்றைக்கு அறிவியலால் பல நாடுகளில், பல கண்டங்களில் வாழும் மனிதனாக மாறியிருக்கிறான்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு விமானத்தில் செல்வது போல , நமது பூமியிலிருந்து வேறு கிரகங்களுக்கு இராக்கெட் மூலமாக செல்வதும், அங்கு சென்று வேலை பார்ப்பதும், பின்னர் பூமிக்கு,தாய் நாட்டிற்கு திரும்புவது போல தாய்க்கிரகத்திற்கு திரும்புவதும் எதிர்காலத்தில் இயல்பு ஆகலாம்.அமெரிக்காவைக் கண்டுபிடித்தவுடன்,அங்கிருந்த இயற்கை செல்வங்களை எல்லாம் வெள்ளையர்கள் அள்ளிக்கொண்டு சென்றது போல,வேறு கிரகத்தில் இருக்கும் இயற்கை வளங்கள் பூமிக்கிரகத்தில் இருப்பவர்களுக்குப்  பயன்படலாம்.கொண்டு வரலாம்.இப்படியெல்லாம் கூட நாம் யோசிக்கலாம்.

எலன் மஸ்க்(Elon musk) என்பவர் தென்னாப்பிரிக்காவைச்சார்ந்த தொழில் அதிபர்.இவர் கடந்த சில வருடங்களாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதைப் பற்றி பேசுகின்றார். எழுதுகிறார்.அவருடைய திட்டத்தின்(பிராஜக்ட்) பெயர் ஸ்பேஸ்-எக்ஸ்(SPACE X).2019-ஆம் ஆண்டிற்கான ஸ்டீபன் ஹாக்கின்ஸ் -விண்வெளி தொடர்பு(Space communication) விருதினை பெற்றிருக்கின்றார்.அமெரிக்காவில்  உள்ள நாசாவின் உதவியோடு அதற்கான திட்டங்களை தீட்டி, முதலில் ஒரு 100 பேரை செவ்வாய்க் கிரகத்தில் குடியேற்றுவது என்று திட்டமிட்டு செயல் ஆற்றி வருகின்றார். அதனைப் போல சந்திரனில் சென்று மனிதர்கள் வாழ்வதற்கான குடியேற்றம் பற்றியும் தனது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ரைட் சகோதரர்கள் விமானத்தில் முதன் முதலில் பறப்பதற்கு முயற்சி செய்தது போல எல்ன் மஸ்க் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியிருப்பை கட்டுவதே தனது நோக்கம் என்று சொல்கிறார்.முதலில் நாம் கேட்கும்போது நமக்கு சிரிப்பு வரும்.ஆனால் பூமியில் இருந்தால் நாம் இனி உயிரோடு இருக்க முடியாது. இன்னும் கொஞ்ச நாளில் இறந்துபோவோம் என்று நிலை வருகின்றபோது, உயிரோடு இருப்பதற்கான,வாழ்வதற்கான வாய்ப்பு இன்னொரு கிரகத்திலோ அல்லது சந்திரன் போன்ற துணைக்கோளிலோ இருக்கிறது என்று சொன்னால், கொஞ்சம் பணம் அதிகம் இருந்தாலும் பரவாயில்லை,அங்கு சென்று சில ஆண்டுகள் வாழ்ந்து பார்ப்போமே என்று மனிதர்களுக்குத் தோன்றும். ஆனால் இது  நடைமுறையில் வந்தால், பல கோடி ரூபாய் வசதி உள்ளவர்கள் மட்டுமே வேற்று கிரகத்தில் சென்று வாழமுடியும்.

மாற்றி யோசிப்பதுதானே பகுத்தறிவு.கடவுள் சித்தப்படி உலகம் நடைபெறுகிறது என்று எண்ணிக்கொண்டு ஆத்திகவாதி சென்று கொண்டிருக்கிறான். ஆனால் வரக்கூடிய ஆபத்துக்களையும், எதிர்காலத்தில் வரக்கூடிய வாய்ப்புகளையும் இணைத்து முன் செல்லக்கூடியவன் பகுத்தறிவுவாதி.நாம் வேறு கிரகத்தில் சென்று வாழ்வது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறோம். வேற்று கிரகத்தில் வசிப்பவர்கள் , நம்மைப் போல அந்தக்கிரகத்தில் இருந்து வந்து பூமியில் வசிக்க வேண்டும் என்று நினைத்தால்?....வேற்று கிரகத்தில் உயிர்கள் வாழக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா? ...இருக்கிறது என்று சொன்னார் ஸ்டீபன் ஹாக்கின்ஸ். எந்த எந்தக் கிரகத்தில் எல்லாம் தண்ணீர் இருக்கிறதோ, அங்கெல்லாம் உயிர்கள் தோன்றியிருக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது.இந்தப் பிரபஞ்சம் என்பது பல இலட்சக்கணக்கான கிரகங்களைக் கொண்டது.உயிரினங்கள் இருக்கக்கூடிய கிரகங்களும் இருக்கும், இல்லாத கிரகங்களும் இருக்கும் என்றார்.பறக்கும் தட்டு என்பது எல்லாம் உண்மை இல்லை என்ற ஸ்டீபன் ஹாக்கின்ஸ் வேற்றுக்கிரகவாசிகள் நமது பூமிக்கு வரலாம் என்றார். அப்படி வந்தால் பூமியில் இருக்கும் நாம் பாதிப்புக்கு உள்ளாவோம். எப்படி கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தவுடன், அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் பாதிப்புக்கு உள்ளாகி,உயிரை இழந்தார்களோ, அப்படி பூமியில் இருக்கும் நமக்கு வேற்றுக்கிரகவாசிகளால் ஆபத்து ஏற்படும். அவர்கள் நம்மை விட பலமடங்கு அறிவுக்கூர்மை உடையவர்களாக இருக்கக்கூடும் என்ற ஆபத்தையும் நமக்கு சொன்னவர் பகுத்தறிவுவாதி ஸ்டீபன் ஹாக்கின்ஸ்.எதைக்கண்டும் அஞ்சி வாழ்வதல்ல வாழ்க்கை ஆனால் இனி வரும் பிரபஞ்சம் எப்படி இருக்கக்கூடும் என்னும் அறிவு,அறிவியல் தரும் அறிவு, நமக்கு புதிய வழிகளையும், புதிய வெளிச்சங்களையும் காட்டக்கூடும்.

 

   



Saturday 31 October 2020

நூற்றாண்டு கடந்தும் வாழ்க!

 அய்யா ஆசிரியர் வீரமணிக்கு

அமைந்திட்ட போர்க்கருவி இவர் !

திராவிடர் கழகத்தின் 

பொறுப்புகளில் பலவற்றில் இருந்து

இன்று திராவிடர்கழகத்தின் '

செயலவைத்தலைவர் இவர் !





வானோடையில் தங்கிக் கிடக்கும்

நட்சத்திரங்கள் போல

இவரது நினைவோடைகளில் 

தங்கிக் கிடக்கும்

நினைவுகள் பல பல !

நினைவு படுத்தி அவர்

கொடுக்கும் தகவல்கள்

அரை நூற்றாண்டுக்கும் 

மேற்பட்ட வரலாறு சொல்லும்!

தமிழக வரலாறு முதல்

உலக வரலாறு வரை 

உண்மை வரலாற்றை சொல்லும்

மேடை நட்சத்திரம் இவர் !


இன்றுதான் புதிதாய் 

மேடை ஏறுவது போல

தலைப்புக்கு ஏற்றவாறு

எடுத்த குறிப்புகளோடுதான்

மேடை ஏறுவார்....

அதில் இன்றைய செய்தியும்

நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட

செய்தியும் இணையாய் வரும்!

அரை நூற்றாண்டுக்கும் மேல்

பேசுபவர் என்றாலும்

அவர் எடுக்கும் குறிப்புமுறை

எப்போதும் மேடை ஏறுபோவர்கள்

கற்றுக்கொள்ளும் முறை


தேடித் தேடிப் படிப்பதும்

படித்தவற்றை 

பகுத்தறிவு சொற்பொழிவில்

பயன்படுத்துவதும்

எவர் கேட்பினும் 

இதோ ஆதாரம் என

முகத்துக்கு நேரே 

எடுத்துக்காட்டுவதுமாய்

இவரது உரைகள்!


அரசுப்பதவி முடிந்தபின்புதான்

எழுத ஆரம்பித்தார்

20 ஆண்டுகளில் 

25க்கும் மேற்பட்ட நூல்கள்

ஒவ்வொன்றும் ஆராய்ச்சியே...

பெரியாரின் பன்முகம் தொடங்கி

உலகப்பகுத்தறிவாளர்கள் வரை

இவரது எழுத்துத் தொடாதா

பகுத்தறிவாளரே உலகில் இல்லை

பகுத்தறிவுக்கருத்துக்களே இல்லை

எனும் அளவில்

சுருக்கெனத்தைக்கும் 

எழுத்தாய் விரிகிறது 

இவரது எழுத்துலகம்....


தொழிற்சங்கப் பணியில்

உயர்பொறுப்புவரை

வகித்த தலைவர் இவர்!

அப்பணியில் கிடைத்திட்ட

விழுப்புண்ணும்

டாக்டர் கலைஞர்

மருத்துவமனையில் வந்து

விசாரித்ததும்...

இழப்பதற்கு தயாராக

இவர் திராவிடர் கழகத்தில்

தொழிற்சங்கத்தில் 

பணியாற்றிய வரலாறு சொல்லும்.....


வெகுண்டு எழுவார்

சில நேரம்

புரட்சிக்கவிஞரை நேரில்

பார்த்தது போல் இருக்கும்

பின்பு குளிர்ந்து

அன்பு செலுத்துவார்

அய்யா பெரியாரைப் 

பார்த்தது போல இருக்கும்....


அப்பா,

அறிவுக்கரசு தாத்தாவின் குரல்

ஒலி நாடாவில் கேட்கும்

தந்தை பெரியாரின் குரல்

போலவே இருக்கிறது

என்றாள்  மகள்....

உண்மைதான் 

குரல்மட்டும் அல்ல....

கருத்தும்கூட அப்படியே

தந்தை பெரியார்போல

ஒளிவு மறைவு ஏதுமின்றி

உள்ளத்தில் உள்ளதை

மக்களின் நன்மைகருதி

அப்படியே சொல்வது என்றேன்...

அப்படியா என்று அதிசயத்தாள் மகள்...


இடித்துரைப்பதில் 

இவருக்கு இணை இவர்தான்!

எதிரிகளை  மட்டுமல்ல 

சில நேரங்களில் தனது

தோழர்களையும் 

வறுத்தெடுப்பவர் இவர் !

வழி நடத்தும் செயலென

புரிந்துகொண்டார்க்கு 

இவரது சொற்கள்

'உற்ற நோய் நீக்கி 

உறாமை முற்காக்கும் "

சொற்கள் என்பது புரியும்..


வெறுக்க கற்றுக்கொள்பவனே

வெற்றி பெறுவான்

எல்லோருக்கும் நல்லவராய்

இருத்தல் இயலாது...

வெறுக்க வேண்டியவர்களை

வெறுக்க கற்றுக்கொள்

என்பார் என்னிடம்...


சில தோழமைகள் அற்புதமாய்

அமைகின்றன வாழ்வில்...

அப்படி எனக்கு கிடைத்திட்ட

பெரும் தோழமை

பெரியார் வழி தோழமை

அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள்...


எண்பது வயது கடந்து

இன்றைய நாளில்

எண்பத்தொன்று வயதில்

அடி எடுத்து வைக்கும்

அய்யா சு,அறிவுக்கரசு 

நூறையும் கடந்து வாழ்க !

நூற்றாண்டு கடந்தும் வாழ்க!

                         வா.நேரு, 01.11.2020




Wednesday 28 October 2020

திதி பார்த்து திவசம் செய்தல்.........வா.நேரு

 நினைவலைகள் 

எப்போதும் நீள்கிறது...

நீத்தார் நினைவுகளோடு....


அப்பா இறந்து 

அரை நூற்றாண்டுகள்

ஓடிப்போனது...

ஆனாலும் அவரின்

நினைவலைகள்  தொடர்கிறது...


அப்பாவிடம் வண்டப்புலியில்

படித்தவர்கள்...

அப்பாவிடம் சாப்டூரில் 

படித்தவர்கள்....

அப்பாவோடு கைப்பந்து 

விளையாடிவர்கள்...

அதற்காக ஊர் ஊராய்

சென்று வென்றவர்கள்...

கதை கதையாகச்சொல்கிறார்கள்

அப்பாவின் உயர்குணம் பற்றி...


அறியா இளம்வயதில்

அப்பாவைப் பறிகொடுத்த எனக்கு

நினைவலைகள் 

எப்போதும் நீள்கிறது...

அவரோடு இருந்தவர்கள் 

சொல்லும் அத்தனை 

நினைவுகளோடும் 

அப்பாவின் நினைவும் தொடர்கிறது... 


எப்போதும் போல 

அப்பாவின் நினைவு நாள்

முதியோர் இல்லத்தோடும்

அக்னி சிறகுகள் 

அறக்கட்டளையோடும் தொடர்கிறது...

விளம்பரம் போல இதனை

வெளிப்படுத்துவது மனதுக்குள்

உறுத்துகிறது என்றாலும்


இறந்தவர்களுக்கு திதி பார்த்து

திவசம் செய்தல் என்பது 

ஊறிப்போய்க்கிடக்கிறது 

நமது மக்கள் மூளைகளில்


அதீத சக்தி வாய்ந்தது

தர்பைப்புல்! அட!

தர்ப்பைப்புல் 

மூன்றை வைத்து

இறந்து போன உங்கள்

பெற்றோரை வரவழைக்கலாம்

என்று உழைக்காமல்

உண்ணுகின்ற பார்ப்பனர்கள்

கூறுவதை நம்புகின்ற

நம் மக்கள்


பெற்றோரின் நினைவாக

பார்ப்பனருக்கு 

அரிசி,காய்கறி..

பணம் அளித்து 

ஆசி பெற வேண்டும் என

எவனோ சொல்லிவைத்ததை

பெற்றோருக்கு செய்யும்

பெருங்கடமையாய்

படித்தவரும் கூட

செய்கின்ற இந்த நாளில்


பெற்றோர்களின் நினைவு நாளில்

இல்லாது இருப்போருக்கு உதவுங்கள்

இணைந்து ஏதேனும் நல்லது

செய்வோருக்கு துணை நில்லுங்கள்

என்னும் சொல்லை 

சொல்ல வேண்டும் என்னும் 

செய்கையே தவிர வேறில்லை...


                       வா.நேரு

                       28.10.2020

நண்பரே, இந்தக் கவிதையையும் சேர்த்து படித்துவிட்டுப்போங்கள்

https://vaanehru.blogspot.com/2014/10/blog-post_27.html

நன்றி





Monday 14 September 2020

பற்றி எரியும் நெருப்பாய்,படைத்த படைப்பாளி பேரறிஞர் அண்ணா

 பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் இன்று..'நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர், அது தந்தை பெரியார் ' என்றுரைத்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று. நான் முதலமைச்சராகப் பதவி வகிக்கும் இந்தக் காலம் எனது வாழ்வின் வசந்த காலமல்ல,மாறாக கரடுமுரடான பாதைகளில் பயணம் செய்து,பகுத்தறிவுப்பகல்வன் தந்தை பெரியாரோடு இணைந்து பகுத்தறிவு பிரச்சாரம் ஆற்றிய காலமே, எனது வாழ்வின் வசந்த காலம் என்று எழுதிய  பேரறிஞரின் பிறந்த நாள் இன்று.அனைவர்க்கும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் வாழ்த்துகள்





திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் முகநூலில் நேற்று(14.09.2020) முதல் தொடர்ச்சியாக பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை பட்டியலிட்டு வருகின்றார். எத்தனை சிறுகதைகள்(120),எத்தனை நாவல்கள்(36),எத்தனை நாடகங்கள்..ஓரங்க நாடகங்கள்(12,60), எத்தனை கடிதங்கள்(290), எத்தனை கவிதைகள்(63),எத்தனை கட்டுரைகள்(1960) எனப் பட்டியலிட்டு தமிழில் மட்டுமா, ஆங்கிலத்தில் இத்தனை என அய்யா கொடுக்கும் பேரறிஞர் அண்ணாவின் படைப்பு பட்டியலை இளைஞர்கள் ஊன்றிப்படிக்கவேண்டும். தலைவாருவது பற்றிக்கவலையில்லை,படுத்து உறங்க மெத்தை கேட்டதில்லை,மாபெரும் தலைவராக பவனி வந்த நேரத்திலும், தொண்டன் கொடுத்த பாயில், கையை தலையணாக வைத்து படுத்து உறங்கிய அந்த மக்கள் தலைவரின் படைப்புகளின் எண்ணிக்கையே  படிப்பவருக்கு மலைப்பை ஏற்படுத்துகிறது. எழுதுவதற்கு எனக்கு மனநிலை நன்றாக இருக்கவேண்டும், நல்ல இடம் வேண்டும்,சுற்றுலாத்தலம் போன்ற இடங்களில் இயற்கை கொஞ்சும் சூழலில் அமர்ந்தால்தான் எனக்கு எழுதவரும் என்று சொல்லக்கூடியவர்கள் மத்தியில், நாள்தோறும் தொண்டர்களைச்சந்திக்க பயணித்துக்கொண்டே இருந்த ஒரு தலைவர்,மாபெரும் இயக்கத்தின் தலைவராக இயங்கிக்கொண்டே இருந்த தலைவர், இவ்வளவு படைப்புகளை எழுதிக்குவித்திருக்கிறார் என்று சொன்னால்,எப்படி விளைந்தன இத்தனை படைப்புகள்?


அன்பினால் விளைந்த படைப்புகள் பேரறிஞர் அண்ணாவின் இலக்கியப் படைப்புகள். நாடாண்ட தமிழன், இப்படி நமது நாட்டிற்குப் பிழைக்கவந்த நாடோடிக்கூட்டத்தால்,ஆரிய வஞ்சகத்தால் அடிமைப்பட்டு கிடக்கிறார்களே என்னும் ஆற்றாமையால் விளைந்த படைப்புகள் அவை.நமது மக்கள் வீரத்தில் குறைந்தவர்களா? அறிவில் குறைந்தவர்களா? ஆற்றலில் குறைந்தவர்களா?, எதில் குறைந்தோம் நாம்? ஆனால் ஆண்டாண்டு காலமாக 'நாங்கள்தான் அறிவிற்கு முதன்மையானவர்கள்' என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொண்ட பரதேசிகள்,நம்மைப் பழிக்கிறார்களே என்னும் கோபத்தில் விளைந்த படைப்புகள் அவை.உண்மையை நமது மக்களுக்குச்சொல்லவேண்டுமே என்னும் உணர்வில் விளைந்த எழுத்துகள் அவை.


மேன்மையான நோக்கம் இருக்கும்போது,பற்றி எரியும் நெருப்பாய் ,மனதிற்குள் கொடுமைகளைக் கண்டு குமுறும் எரிமலையாய் சிந்தனைகள் இருக்கும்போது., சுற்றி நிகழும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளும் தத்துவமும், ஆட்சி செய்பவர்களின் அதிகார மமதையை எழுத்துகளால் வடிக்க வேண்டும் என்னும் வேகம் இருக்கும்போது மகத்தான இலக்கியப்படைப்புகள் பிறந்திருக்கின்றன..மக்களின் விடுதலைக்கு வழி வகுத்திருக்கின்றன.


'தாய்' என்னும் நாவலைப் படைத்த மகத்தான எழுத்தாளன் மார்க்சிம் கார்க்கி எழுதியது பணத்திற்காக அல்ல, புகழுக்காக அல்ல. இத்தனை மொழிகளில் தனது நாவல் மொழி பெயர்க்கப்படும் என்னும் எதிர்பார்ப்பில் அல்ல. மாறாக மக்களோடு மக்களாக இருந்த மார்க்சிம் கார்க்கி, தன்னைச்சுற்றி இருக்கும் உழைக்கும் மக்களின் வேதனைகளைப் பார்த்து, உழைத்து உழைத்து ஓடாய்ப்போகும் அவர்களின் நிலையைப் பார்த்து தனக்கு பிழைப்புக்காக கிடைத்த அத்தனை வேலைகளையும் பார்த்துக்கொண்டு, அடிபட்டு,மிதிபட்டு,அல்லல்பட்டு ,வாழ்வின் வேதனைகளை முழுமையாக உணர்ந்த நிலையில்,அன்றைய ரசியாவின் ஜார் மன்னனின் கோமாளித்தனத்தையும் ,அதிகாரத்திமிரையும் உள்வாங்கி அதற்கு எதிராகக் கிளர்ந்தெழும் கதாபாத்திரங்களை உள்ளடக்கி மகத்தான நாவலைப் படைத்திட்டான். உலக மக்களின் உள்ளத்திலே நிலைத்திட்டான். 


திராவிட இயக்க எழுத்தாளர்களின் எழுத்துகள் வெறும் பொழுது போக்கு இலக்கியமல்ல.கும்பகோணத்தில், காவிரிக்கரையில் வெற்றிலையைப் போட்டுக்கொண்டு அமர்ந்துகொண்டு, கரைபுரண்டு ஓடும் காவிரியைப் பார்த்துக்கொண்டு,ஒருத்தியை மோகித்து, மோகத்தின் முள்ளினை  நூற்றுக்கணக்கான பக்கங்களை எழுதி 'இதற்குத்தானா?' என்று கேட்கும் இலக்கியங்கள் முதல்தரமான இலக்கியங்கள் தமிழகத்தில் இருக்கும் சில விமர்சகர்களுக்கு...ஆனால் உள்ளத்தில் பற்றி எரியும் ,கொடுமைகளுக்கு எதிரான கருத்துத்தீயை எழுத்துக்களாக கொட்டிய எழுத்துகள் மூன்றாம் தர இலக்கியங்கள் சிலருக்கு...வாங்கடா வாங்க, எங்கள் திராவிட இயக்கத்து எழுத்தாளர்களை மட்டுமல்ல, உங்களையும் வாசித்துவிட்டுத்தான் நாங்கள் எழுதுகிறோம்..


'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 'என்னும் தத்துவத்திற்கு மாற்றாக, கடவுளின் முகத்திலே பிறந்தவர்கள்,தோளிலே பிறந்தவர்கள், தொடையிலே பிறந்தவர்கள், காலிலே பிறந்தவர்கள் என்று கதை கட்டி ,பெரும்பான்மையான மக்களை மயக்கத்திலே ஆழ்த்திய சதிகாரர்களுக்கு எதிராக களமாடிய எழுத்துகள் திராவிட இயக்க எழுத்துகள்.


பேரறிஞர் அண்ணாவை ,பொருளாதார நிலையில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட உயர்ந்து நிற்கும் நிலைக்கு அடித்தளம் இட்டதற்காக,'தமிழ் நாடு' என்னும் பெயர் வைத்தற்காக, இரு மொழிதான் ஆட்சி மொழி என்று உறுதி செய்தற்காக,, சுயமரியாதைத் திருமணத்தை சட்டபூர்வமாக ஆக்கியதற்காக என்று அறிந்து வைத்திருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்..அதே வேளையில், தனது பேச்சாற்றலால் உலகத்தை ஈர்த்த பல்வேறு பேச்சாளர்களை வரலாற்றில் படித்திருக்கிறோம் ஆனால் அவர்கள் எல்லோரையும் மிஞ்சிய பேச்சாளராக, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்கணக்கில் காத்திருந்து, பொறுத்திருந்து கேட்ட பேச்சாளராக பேரறிஞர் அண்ணாவை அறிந்திருக்கின்ற இளைஞர்கள், எழுத்தாளர் பேரறிஞர் அண்ணாவை முழுமையாக அறிய வேண்டும். அவரது படைப்புகளை நாவல்களை,சிறுகதைகளை, கவிதைகளை,கடிதங்களை எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் நாடகங்களைப் படிக்கவேண்டும். இன்றைய நிலையோடு பொருத்திப்பார்க்கவேண்டும். ஆங்கிலத்தில் ,மற்ற மொழிகளில் புலமையுள்ளவர்கள் பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை மொழிபெயர்க்க வேண்டும்.திருக்குறளை வேறு மொழிகளில் மொழி பெயர்க்க தமிழக அரசே முயற்சி எடுப்பதுபோல, பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை வேறு மொழிகளில் கொண்டு செல்ல தமிழக அரசே முயற்சி எடுக்க வேண்டும்.இளைஞர்கள் மத்தியில் பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை கொண்டு செல்ல , இந்த நாளில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்.

               வாழ்க பேரறிஞர் அண்ணா! வாழ்க பேரறிஞர் அண்ணா புகழ்...  


Wednesday 22 July 2020

என்னுடைய தோழர்கள்: புதுச்சேரி மு.ந.நடராசன்

என்னுடைய தோழர்கள்:    புதுச்சேரி மு.ந.நடராசன், மேனாள் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்துணைத்தலைவர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்துணைத்தலைவராக இருந்து மறைந்த அய்யா புதுச்சேரி மு.ந.நடராசன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (24.07.2020).புதுச்சேரி மு.ந. நடராசன் அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தில் என்னோடு இணைந்து பணியாற்றியவர்.2002- முதல் இறக்கும்வரை தொடர்பில் இருந்தவர். மாதம் ஒரு முறை அல்லது இருமுறை கட்டாயம் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும்.அவர் அழைக்கவில்லையென்றால் நான்  அழைப்பேன். புதுச்சேரி கூட்டத்திற்கு செல்லும்போதெல்லாம் அவரது இல்லத்தில்தான் பெரும்பாலும்  தங்கியிருக்கிறேன். அன்போடும் பாசத்தோடும் விருந்தோம்பல் செய்பவர். அவரது இணையர் அம்மா அவர்களும் அப்படி ஒரு உபசரிப்பு செய்வார்கள்.

முதலில் குடும்பத்தை சரிசெய்ய வேண்டும் என்பார். குடும்பக்கடமைகளை முதலில் முடிக்க வேண்டும் என்பார். மாதத்தின் முதல் வாரத்திலேயே வீட்டிற்கு வாங்க வேண்டிய பொருளை எல்லாம் வாங்கி வீட்டில் போட்டு விடுங்கள் என்பார். அவரை விட நான் 18 வயது இளையவன் என்றாலும் நான் மாநிலத்தலைவர் அவர் மாநிலத்துணைத்தலைவர் என்றாலும் எந்தவிதமான ஈகோ இல்லாமல் பழகக்கூடியவர்.அன்பு காட்டுபவர். ஆனால் தன் மனதிற்கு பட்டதை மிகப் பளிச்சென்று சொல்வார். அய்யா ஆசிரியர் அவர்கள் அறிவிக்கும் பெரியார் திரைப்படம் உள்ளிட்ட அத்தனை அறிவிப்புக்களுக்கும் அவருடைய பங்களிப்பு என்பது முதலிலேயே இருக்கும்.தன்னுடைய பங்களிப்பை முதலில் கொடுத்துவிட்டு பின்பு வசூல் செய்தும் கொடுப்பார்.

தி.மு.க.வின் புதுச்சேரி மாநிலப்பொருளாராக இருந்து தி.மு.க. மாநில மாநாடு நடத்தியதை குறிப்பிடுவார்.மறைந்த தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் திருச்சி அன்பில்.தர்மலிங்கம் அவர்கள் அய்யா பெரியாருக்கு மோதிரம் செய்து கொடுக்க விரும்பியதையும், அதற்காக முதன் முதலில் தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்ததையும் அய்யா அவர்களுக்கு கைவிரல் அளவு எடுத்து மோதிரம் செய்து கொடுத்ததையும் அடிக்கடி குறிப்பிடுவார்.அந்த நிகழ்வை சொல்லும்போதெல்லாம் ஒரு சிறு குழந்தையைப் போல அந்த நிகழ்வை சொல்லி சொல்லி மகிழ்வார்.
தி.மு.க்.விலிருந்து திராவிடர் கழகத்திற்கு வந்தவர். பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்புகளிலேயே இருக்க விரும்பினார்.இருந்தார். சின்ன சின்ன வெளியீடுகளாக பல வெளியீடுகளை கொண்டு வந்தார்.அந்த வெளியீடுகளை திராவிடர் கழக,பகுத்தறிவாளர் கழக நிகழ்வில் எல்லோருக்கும் கொடுப்ப்பார்.கொடுக்கச்செய்வார். மாநாட்டு நிகழ்வில் அய்யா மு.ந.நடராசன் அவர்களின் வெளியீடு கைக்கு வந்துவிட்டது என்றால் அய்யா மு.ந.நடராசன் வந்துவிட்டார் என்பதனை புரிந்துகொள்வோம்.  மதுரையில் நடந்த பகுத்தறிவாளர் கழகக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

விஜயவாடாவில் நடைபெற்ற உலக நாத்திக மாநாடுகள்,மகாராஷ்டிரா நாக்பூரில் நடைபெற்ற இந்திய நாத்திக மாநாடுகளில் நாங்கள் எல்லாம் இணைந்து கலந்துகொண்டு இருக்கின்றோம்.அங்கு வரும்போது ஆங்கிலத்தில் தனது வெளியீடுகளைக் கொண்டு வருவார். யார்? எவர் ? என்னும் தலைப்பில் தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி எனத் திராவிட இயக்கத்தின் தலைவர்களைப் பற்றி தொடர்ச்சியாக வெளியீடுகளைக் கொண்டுவந்தார்.  சிக்கனமாக இருப்பார். ஆனால் நல்ல செயல்களுக்கு பணம் செலவு செய்வதைப் பற்றி எப்போதும் கவலைப்படாமல் செலவழிப்பார்.இளைஞரைப்போல எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்.

அவருடைய சொந்த ஊர் திருச்சி அருகில் உள்ள சிறுகாம்பூர். அந்த ஊரில் சில ஆண்டுகளுக்குமுன் அரசு உயர் நிலைப்பள்ளியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினார். என்னையும் மற்ற பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்களையும் அழைத்திருந்தார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி,போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, ஆசிரியர்களுக்கு தந்தை பெரியாரின் புத்தகங்களை வழங்கி என மிகப்பெரிய அளவில் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இன்றைக்கும் கூட நினைவில் நிற்கிறது.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில மாநாடு இரண்டு நாட்கள் புதுச்சேரியில் 2004-ஆம் ஆண்டில் நடைபெற்றது.மிகப்பிரமாண்டமாக நடந்த அந்த மாநாட்டின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு ,மிகப்பெரிய வெற்றி மாநாடாக நடத்திக்காட்டினார்.அதைப்போல இராவண லீலா தொடர் நிகழ்வுகளை புதுச்சேரியில் நடத்தினார். அய்யா சிவ.வீரமணி அவர்கள் புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தலைவராக வந்த பின்பு, அவரோடு இணைந்து பல இயக்க நிகழ்வுகளுக்கு உறுதுணையாக இருந்தார்.

அய்யா மு.ந.நடராசன் அவர்களின் 73-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று(24.05.2020) மாலை நடைபெற்ற காணொளி நிகழ்வில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அய்யா துரை.சந்திரசேகரன் அவர்களும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் காணொளி வழியாக உரையாற்றினார்கள்.திராவிடர் கழகத்தின் அய்யா ஆசிரியர் அவர்கள் உரையாற்றும்போது "அருமைத்தோழர் மு.ந.நடராசன் அவர்கள் புதுவையில் மட்டுமல்ல, புதுமையான உலகம் அமையவேண்டும் என்பதற்காக தன் வாழ் நாள் முழுவதும் உழைத்து வாழ்ந்து காட்டியவர்.துரு துருவென்று சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்.எங்கு சென்றாலும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்றாலும் கூட திராவிடர் இயக்கத்தை,பகுத்தறிவாளர் கழகத்தை கையோடு எடுத்துச்சென்றவர்.விபத்துகள் எதிர்பாராதவை.அதிர்ச்சியாக நமக்கு அமைந்துவிடுபவை. ஆனால் நாம் பகுத்த்றிவாளர்கள். தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதனை செயல்படுத்துபவர்கள்.
தோழர் நடராசன் அவர்கள் தான் மட்டும் கொள்கையாளராக வாழவில்லை. அவருடைய வாழ்விணையராக இருந்தாலும் அவரது பிள்ளைகளானாலும் கொள்கைத்தங்கங்களாக இருப்பதும், விடுதலை வாசகர்களாக இருப்பதும்,இயக்கப்பணிகளுக்கு உறுதுணையாக இருப்பதும் நடராசன் அவர்கள் இன்னும் நம்மை விட்டு மறையவில்லை,ஆலமரம் விழுந்தாலும் அதனுடைய  விழுதுகள் தாங்கி நிற்பதுபோல வாழைமரம் சாய்ந்தாலும் அதன் கன்றுகள் நிற்பதுபோல அவரின் குடும்பத்தினர் இருக்கின்றனர்.ஒளிக்கீற்றாய் நடராசன் அவர்கள் பாடுபட்ட பகுத்தறிவு பரப்பலும், சாதி ஒழிப்பும், அறிவியல் மனப்பான்மை வளர்ப்புமான அந்த லட்சியச்சுடரை ஏந்தி தொடர்ந்து பயணிப்போம். " என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.


அவரின் நினைவு நாளில் அவரின் உணர்ச்சியும் வேகமும் இயக்க ஈடுபாடும் மனது முழுவதும் நிற்கிறது. அவரது மூத்தமகன் பாஸ்கர் அவர்களோடு அவரின் பிறந்த நாளை ஒட்டி பேச வாய்ப்புக்கிடைத்தது. மிக நல்ல பொறுப்பில் உயர் பதவியில் இருக்கும் அவரின் பெரியாரியல் பற்றி புரிதலும், அவரது அப்பாவைப் பற்றிய அவரின் மதிப்பீடும், தனது தந்தை மு.ந.நடராசன் அவர்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்து,எப்படி ஒரு எதிர் நீச்சல்காரரை வாழ்க்கையில் உயர்ந்து திடீர் விபத்தால் மறைந்தார் என்பதனை அவர் பேசப்பேச, ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவரோடு உரையாடிய நிகழ்வு, அய்யா மு.ந.நடராசன் அவர்கள் தான் மறைந்தாலும் தனது உணர்ச்சியை, வேகத்தை,அறிவை, இயக்க ஈடுபாட்டை தனது குடும்பத்தினருக்கு அளித்துச்சென்றிருக்கார் என்பது மிகப்பெரும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனது தோழர்கள் எதையும் எதிர்பாராதவர்கள்,கொள்கைக்காக உயிரையும் கொடுக்கக்கூடியவர்கள், எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக உணமையை உரக்கச்சொல்வதனால், பொய்யர்களிடமிருந்தும்,ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து வரும் எதிர்ப்புக்களை எதிர்பார்த்தும்,எதிர்கொண்டும் வாழ்வில் செம்மையாக வாழ்பவர்கள்.

முதலாம் ஆண்டு நினைவு நாளினை ஒட்டி, புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக காணொளி வழிக்கூட்டம் நடத்துகிறார்கள். பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொறுப்பாளர்களோடு திராவிடர் கழகத்தின் பொருளாளர் அண்ணன் வீ.குமரேசன்,பொதுச்செயலாளர் அய்யா முனைவர் துரை.சந்திரசேகரன்,துணைத்தலைவர் அய்யா கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் காணோளி நிகழ்வில் கலந்துகொண்டு அய்யா சுயமரியாதைச்சுடரொளி மு.ந. நடராசன் நினைவு உரை நிகழ்த்துகிறார்கள். நிகழ்வு சிறக்கட்டும்.

புதுச்சேரி மு.ந.நடராசன் அவர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்.முதலாம் ஆண்டு நினைவு நாளில் எனது அருமைத்தோழர், தமிழகம் &புதுச்சேரி மாநிலப்பகுத்தறிவாளர் கழகத்தின் முன்னாள் துணைத்தலைவர் அய்யா மு.ந. நடராசன் அவர்களுக்கு வீரவணக்கம்.

                            வா.நேரு, 23.07.2020 இரவு 10.15 மணி

Monday 13 July 2020

போனாயே எங்கள் தோழா......



போனாயே எங்கள் தோழா......
மதுரை மண்டலத் திராவிடர் கழகத்தலைவர் அய்யா மா.பவுன்ராசா(வயது 58) இன்று 05.07.2020 மாரைடைப்பால் தூக்கத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார். காலையில் மிக அதிர்ச்சி தரத்தக்க இந்தச்செய்தியைச்சொல்லி , மாநில மகளிரணி அமைப்பாளர் மானமிகு தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் உண்மையா எனக்கேட்டபோது,உறுதிப்படுத்திக்கொள்ள ,மதுரை புறநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தலைவர் மன்னர்மன்னன் அவர்களைத் தொடர்புகொண்டபோது,ஆமாம் அய்யா,உசிலம்பட்டியில் பவுன்ராசா வீட்டில்தான் இருக்கிறோம்,இரவில் தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது என்றார்.
கடந்த 30 ஆண்டுகளாக திராவிடர்கழகத்தின் அடிப்படையில் தொடர்பில் இருந்தவர். திராவிடர் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.கரடுமுரடான தனது பகுதியில் பெரியார் கொள்கைக்கு பாதை அமைத்தவர். அதில் ஏற்பட்ட இன்னல்களை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டவர். அவர் தான் திராவிடர் கழகத்தில் இணைந்தது,தனது ஊரில் கூட்டம் நடத்தியது, அப்போது ஏற்பட்ட நிகழ்வுகள் போன்றவற்றை எல்லாம் அவ்வளவு ஈடுபாட்டோடு விவரிப்பார். இப்போது பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டத்தலைவராக இருக்கும் மன்னர்மன்னன் மூலமாகத்தான் இயக்கம் பற்றியும், தந்தை பெரியார் பற்றியும் தெரியும் என்று சொல்வார்.
டவுசர் போட்டுக்கொண்டிருந்த காலத்தில் ,உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள அய்யனார்குளத்தில் திராவிடர் கழகம் கூட்டம் போடவேண்டும் என்று விரும்பியதையும் அதற்காக மதுரை மேற்கு மாவட்ட திராவிடர்கழகத்தின் தலைவராக அப்போதிருந்த அய்யா பெரியகுளம் ம.பெ.முத்துக்கருப்பையா அவர்களைப் போய்ச்சந்தித்ததையும், அவர் டவுசர் போட்டு வந்த ஒரு பையன் கிராமத்தில் தி.க.கூட்டம் போட விரும்பியதை ஏற்றுக்கொண்டு தனது கிராமத்திற்கு வந்ததையும் ,அய்யா போடி இரகுநாகநாதன் .ம.பெ.முத்துக்கருப்பையா அவர்களின் வழிகாட்டுதலோடு முதன்முதலில் அய்யனார்குளத்தில் திராவிடர் கழக கூட்டம் நடைபெற்றதையும், அன்றைக்கு திராவிடர் கழகத்தின் பேச்சாளராக இருந்த கண்மணி தமிழரசன் அவர்களும், தமிழரசன்(தோழர் ஓவியாவின் தந்தை) அவர்களும் கலந்து கொண்டு பேசியதையும் குறிப்பிட்டு,
" அண்ணே, முதன் முதலில் உசிலம்பட்டி அய்யனார்குளத்தில் திராவிடர் கழகப்பொதுக்கூட்டம்.நம்ம கூட்டத்துக்கு நாமே காசு செலவழிக்காமலேயே பயங்கர விளம்பரம் ஆகிப்போச்சு. கடவுள் இல்லைன்னு சொல்றவங்க கூட்டம் போடுறாங்க,அதுவும் சின்னப்பையல்களா சேர்ந்து கூட்டம் போடுறாங்க என்று சொல்லி ஊர் முழுவதும் பரபரப்பு. கூட்டம் ஆரம்பிச்சு நடந்துக்கொண்டு இருக்கும்போது சத்தம் போட்டாங்கே,கலாட்டா பண்றது மாதிரி ஆளுங்க இங்குட்டு அங்குட்டு போய்க்கிட்டு கத்திக்கிட்டு இருந்தாங்கே...சிறப்பு பேச்சாளர் கண்மணி தமிழரசன் அவர்கள் பேச ஆரம்பிக்கும்போது நிறைய கல் வந்து விழுந்தது.ஒரு கல் கண்மணி தமிழரசன் அவர்களின் நெற்றியில் பட்டு, பொல பொல வென்று இரத்தம் வந்தது. சும்மா சொல்லக்கூடாது அந்த அம்மாவை... மேடையில் இருந்த சில ஆட்கள் எல்லாம் கீழே இறங்கியபோதும் தன்னுடைய சேலையின் முந்தானையில் ஒரு பகுதியை கிழித்து நெற்றியில் கட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தார். மூன்று மணி நேரம் பேசினார். அவரின் பேச்சுக்கு முதலில் இருந்த எதிர்ப்பு மறைந்து கொஞ்சம் கொஞ்சமாக உட்கார ஆரம்பித்தார்கள்.உங்களுக்காக பாடுபடும் இயக்கம் என்பதை அந்த மக்களுக்கு புரியும் மொழியில் பேச பேச கூட்டம் அப்படியே நின்றது" என்பதனைச்சொல்லி அடுத்து தொடர்ந்து அய்யனார்குளத்தில் கூட்டம் நடத்தியதையும் குறிப்பிடுவார். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திராவிடர்கழகத்தில் அய்யனார்குளம் பகுதியில் இணைந்ததற்கும், கொள்கை வழி நின்றதற்கும் அய்யா பவுன்ராசா அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகப்பெரிய காரணம்.
"உசிலம்பட்டி பகுதியில் மிகமிக பின் தங்கிய கிராமத்திலிருந்து சுமார் 10 கி.மீ நடந்து மெயின்ரோடு வந்து தான் பஸ் ஏற வேண்டும் - என்ற நிலையிலும் நான் அறிய சுமார் 30 ஆண்டு காலம் இயக்க நிகழ்வுகள் அனைத்திலும் முன்கூட்டியே வந்து விடுவார்.தமிழ்நாடு முழுவதும் ஏதாவது ஒரு நிகழ்வில் பங்கேற்றுக் கொண்டிருப்பார்.இயக்க வேலைகளை பிடிவாதமாக விரும்பி களத்தில் வேலை செய்யும் முன்னோடித் தோழர் அய்யா பவுன்ராஜா அவர்கள். போராட்டங்கள் ,இரத்ததான முகாம்கள் , பெரியார் 1000 , பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் -இவற்றையெல்லாம் பாம்பட்டிக்காட்டில்( பழமை நிறைந்த கிராமத்தில்) - முன்னின்று நடத்திக் காட்டியவர். தமிழர் தலைவர் அய்யா அவர்கள் மதுரை வருகிறார் என்ற செய்தியை விடுதலை யில் பார்த்தவுடன் எங்களிடம் வேலையைத் துவங்கி விடுவார் .அய்யா தலைவர் மதுரைவர்றாங்க 2 விடுதலை ஆண்டுச் சந்தா வாங்கிக் கொடுங்க என வேலையைத் துவங்கி விடுவார் எப்படியாவது தலைவர் அவர்களைப் பார்க்கும் போது விடுதலை,உண்மை சந்தா கொடுக்காமல் சந்திக்க மாட்டார். ஒரு கறுப்புச் சட்டைக்காரன் - இழப்பு என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல. ஒரு முதலாளி மறைந்து விட்டால் இரண்டு முதலாளி அந்தக் குடும்பத்தில் தோன்றி விடுவார்.ஒரு தொழிலாளி மறைந்துவிட்டால் இன்னொரு தொழிலாளி கிடைத்து விடுவார்.ஒரு விவசாயி மறைந்துவிட்டால் இன்னொரு விவசாயி நம் குடும்பத்திலேயே கிடைத்து விடுவார்.ஒரு கட்சிக்காரன் மறைந்து விட்டால் இன்னொறு கட்சிக்காரன் கிடைத்து விடுவான்.ஆனால் ஒரு கொள்கைக்காரன் மறைந்துவிட்டால் - அந்த இடத்தை நிறப்புவது எளிதல்ல அதிலும் ஒரு கறுப்புச் சட்டைக் காரனின் இழப்பை ஈடுகட்டுவது அவ்வளவு எளிதான காரியமல்ல.தோழருக்கு வீரவணக்கம்l வீரவணக்கம்l.தமிழர் தலைவர் வணக்கத்திற்குறிய அய்யா அவர்கள் தலைமையில் பெரியார் பணி முடிப்போம்" .மேலே சொன்ன வரிகள் மதுரை புற நகர் மாவட்டத்திராவிடர் கழகத்தின் முன்னாள் மாவட்டச்செயலாளர், தலைமைக்கழகப்பேச்சாளர் அ.வேல்முருகன் அவர்கள் எழுதியது.
"நான் தி.க.வில் இருந்தபோது 1993 ல் எங்கள் ஊரில் RSS அமைப்புக்கும் எங்களுக்கும் மோதல் இருந்தது. தோழர் பவுன்ராசா அவர்களிடம் இதைப்பற்றிப் பேசினோம். மோதலை முடிவுக்குக் கொண்டுவர, ஒரு மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்தோம். எதிர்பார்த்தபடியே காவல்துறை வழியாக காவிகள் தடைவிதித்தனர். ஒரு சமரசத் தீர்வு உண்டானது. "மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் வேண்டாம். வெறும் ஊர்வலம் நடத்திக்கொள்ளுங்கள்" என்றது காவல்துறை. எங்களது விருப்பமும் அதுமட்டும் தான்.
உசிலம்பட்டியிலிருந்து கையில் அரிவாள்களுடன் 100 தோழர்களுடன் வந்து களமிறங்கினார் பவுன்ராசா. அவரோடு திண்டுக்கல் மாவட்ட தி.க.தோழர்கள், உள்ளூர் தோழர்கள் என நூற்றுக்கணக்கானோர் கையில் அரிவாள்களுடன் ஊர்வலத்தை நடத்தினோம். அந்த ஊர்வலத்திற்குப் பிறகு RSS அமைதியாகிவிட்டது. அதில் இருந்த பலர் சில ஆண்டுகளில் தி.க.வுக்கே வந்தனர். 1993 ல் எங்களுடன் மோதிய RSS ல் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள் தோழர் பவுன்ராசா அவர்களின் ஜாதியினர்தான். ஒருவர் அவரது உறவினர். ஆனாலும் பெரியாருக்காக, தனது ஜாதியையும் உறவுகளையும் எதிர்த்து 100 இளைஞர்களை - அரிவாளைத் தூக்குமளவுக்குத் தயாரிப்பது என்பதுதான் பெரியாரிஸ்ட்டுகளின் அடையாளம்.
பொதுவெளியில் எழுத இயலாத பலவற்றைச் சாதித்துக் காட்டிய உற்ற தோழர் பவுன்ராசா அவர்களுக்கு காட்டாறுகுழுவின் சார்பில் வீரவணக்கம். AThi Asuran"
நெஞ்சினில் கொண்ட கொள்கை. நினைவினில் தேக்கி நின்று
அஞ்சிடா பயணம் செய்து
அலைந்துமே ஊரூர் சென்று
துஞ்சலும் மறந்து நித்தம்
தொடர்ந்துமே தொண்ட றந்தான் விஞ்சினாய் புகழாம் வானை
வென்றதோர் கதிரைப் போல!
இயக்கமே வாழ்வாய்க் கண்டு
எளியதோர் தோற்றம் கொண்டு
தயங்கிடா தணுகி மக்கள்
தன்நிலை உணரச் செய்ய
அயர்விலா உழைப்பைத் தந்து
அனுதினம் செய்தாய் தொண்டு!
புயலென செயலால் வென்றாய் போனாயே எங்கள் தோழா!!
- சுப.முருகானந்தம்
மதுரை மாநகர் திராவிடர் கழகம்.
திராவிடர் கழகம் என்பது அரசியல் கட்சி அல்ல. இது ஒரு இயக்கம். இந்த இயக்கத்தில் இயங்கிக்கொண்டே இருந்தவர் அண்ணன் மா.பவுன்ராசா அவர்கள்.நான் தல்லாகுளம் தொலைபேசி நிலையத்தில் வேலை பார்த்தபொழுது அடிக்கடி வருவார். நிறையப் பேசுவோம். இயக்க நிகழ்வுகள் நடந்தவை, நடக்க இருப்பவை என்று பல செய்திகளைப் பகிர்ந்துகொள்வோம். எனக்குத் தெரிய மிகவும் வெளிப்படையாக எதையும் பேசுவார். திராவிடர்கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களிடமே பல விசயங்களைப் பேசுவார். இயக்க நடப்புகளைச்சொல்வார்.காணொலி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டிருந்தார்.
திராவிடர் கழகப்பொறுப்பாளர்கள் யாரேனும் விடுதலைக்கு சந்தா கட்டாவிட்டால் நன்றாகவே கோபப்படுவார். விடுதலையை வாங்க வலியுறுத்துவார். இரங்கல் அறிக்கையில் அய்யா ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல எவரையும் சந்தித்து துணிந்து பேசுவார். வாதாடுவார். தன்னுடைய பிறந்த நாளில்(12.06.2020), விடுதலையின் 86வது பிறந்த நாள் வரும் ஜீன் மாதத்தில் தான் பிறந்திருக்கிறேன் என்று குறிப்பிட்டு வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி சொல்லியிருந்தார்.கடந்த 10 நாட்களில் இரு முறை விடுதலையில் அவரின் வாசகர் கடிதம் வந்தது. நேற்று (விடுதலை வெளியூர் 04.07.2020) வந்த கடிதத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி ! என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார். தனது வாழ்வில் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு இறுதியாக அவர் சொல்லும் நன்றி என்பது நமக்கு தெரியாமல் போயிற்று.நேற்று(04.07.2020) மாலை நடைபெற்ற அய்யா ஆசிரியர் அவர்களின் ஒப்பற்ற தலைமை உரையை கேட்டுக்கொண்டு ,கம்பீரமாய் உசிலம்பட்டியில் அவரது இல்லத்தில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். இன்று அவர் இல்லை.ஒப்பற்ற ஒரு தோழரை இழந்திருக்கிறோம்.
வீரவணக்கம் எங்கள் தோழனே! அய்யனார் குளம் பவுன்ராசாவே! ஆற்றல் மிகு மதுரை மண்டலத்திராவிடர் கழகத்தலைவரே!..டவுசர் போட்ட காலம் முதல் இறக்கும் நொடி வரை ஒரே தலைவர்,ஒரே கொடி,ஒரே இயக்கம்-திராவிடர் கழகம் எனப் பாடுபட்ட எங்கள் தோழனே ! வீரவணக்கம். வீரவணக்கம்.

Sunday 31 May 2020

செய்ய வேண்டியன செய்தலுக்காய்....

அய்ம்பத்து ஆறு
ஆண்டுகள் ஓடி
மறைந்திருக்கிறது...
அய்ம்பத்து ஏழு இன்று
பிறந்திருக்கிறது....

அய்ம்பத்து ஆறில் வாழ்வில்
நிகழ்ந்த பெரும் நிகழ்வு
விருப்ப ஓய்வு எனும் நிகழ்வு...

சென்ற வருடப் பிறந்த நாளில்
துளி கூட எண்ணமில்லை...
அடுத்த பிறந்த நாளில் நாம்
விருப்ப ஓய்வில் இருப்போமென்று...

மறைமுக அரசின் அழுத்தங்களும்
பணிச்சுமை தந்த அழுத்தங்களும்
இணைந்து விருப்ப ஓய்வு எனும்
முடிவினைத் தந்தது....எனினும்
மகிழ்ச்சி தரும் முடிவே இது....

இருக்கும் வாழ்வை
குடும்பத்தினருக்கு கூடுதல் நேரமும்
இயக்கத்திற்கும்
வாசிக்க எழுத என
உள்ளத்திற்கு உகந்தவை
அனைத்தும் செய்திட விருப்பம்....

முப்பத்தாறு ஆண்டுகள் பணியை
முழுவதாய்ச்செய்ததாக மன நிறைவு...
எத்தனை மனிதர்கள்..
எத்தனை தொழில் நுட்பங்கள்...
ஒரு நாவலுக்குள் அடக்கமுடியாத
அத்தனை அத்தியாயங்களும்
மனதுக்குள் ஓடும் பணி நிகழ்வுகள்...

சிறந்த ஊழியன் எனப் பெற்ற
தங்கப் பதக்கம் சான்றிதழைவிட
மனதார வாழ்த்திய வாடிக்கையாளர்களால்
நிறைவாக பணிக்காலம் முடிந்தது...

சராசரி இந்தியனின் வாழ்விற்கு
சில வருடங்களே இன்னும் பாக்கி..
அதற்குள் செய்ய வேண்டியன
செய்தலுக்காய் திட்டமிடலும்
செயல்படுத்தலுமே மீத வாழ்க்கையாய்..
                                                                         வா.நேரு...31.05.2020



Monday 25 May 2020

நானும் புத்தக வாசிப்பும்.....வா.நேரு

நானும் புத்தக வாசிப்பும்
Posted on : Friday 22nd May, 2020

எனக்கு வயது இப்போது 55. புத்தக வாசிப்பின் மீதான ஈர்ப்பு என்பது 6-வது 7-வது படிக்கும்போதே ஆரம்பித்தது எனக்கு. நான் 9-ஆம் வகுப்பு படிக்கும்போது கல்கியின் ‘பொன்னியன் செல்வன்’ புத்தகத்தை எடுத்துக்கொண்டு, சாப்டூரில் எங்கள் வீட்டு மெத்தில் உட்காரந்து காலை 7 மணி முதல் படித்துக்கொண்டிருக்க, 11 மணியளவில் சாப்பிடுவதற்கு நேருவைக்காணாம் என்று வீடே தேட, மெத்திற்கு வந்த எனது மூத்த அண்ணன் ஒரு அடி அடித்து, சாப்பிடாமக் கூட கதைப்புத்தகம் படிக்கிறியா என்று கண்டித்தது நினைவில் இருக்கிறது.

உயர் நிலைப் பள்ளி படிக்கும் காலத்தில், எனது அம்மாவிற்கு சாப்டூர் கிளை நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை எடுத்துவர நான் தான் செல்வேன். புத்தகங்களைத் தேடுவது, படிப்பது என்பது அப்போதிருந்து ஆரம்பித்தது. ஜெயகாந்தன் புத்தகத்தை அப்படி ஒரு விருப்பத்தோடு ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் எனது அம்மா படித்தது, வாசிப்பின் மீதான ஆவலை அதிகரித்தது. ஒரு பத்து நிமிடம் நேரம் கிடைத்தால் கூட பையில் இருக்கும் ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துப்படிப்பது என்பது இன்றுவரை தொடர்வதற்கு அத்தனை வேலைகளுக்கும் நடுவிலும் எனது அம்மாவிற்கு கிடைத்த வாசிப்பு மகிழ்ச்சியே அடித்தளம் எனலாம்.

கல்லூரி படிக்கும் காலத்தில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்துக்கொண்டே நூலகத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அதனால், அப்போது மெஸ் கட்டணம் கட்ட பணம் கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பு.  சில பேராசிரியர்களும், மாணவர்களும் விரும்பி மீண்டும் மீண்டும் வந்து ஒரு சில புத்தகங்கள் வந்துவிட்டதா என என்னிடம் கேட்டபோது அப்படி ஒரு விருப்பம், இவர்களுக்கு புத்தகத்தின் மேல் ஏன் எனும் வினா எழுந்ததும் வாசிப்பின் மேல் நாட்டம் கொள்ள வைத்தது. 1983-& 84-ல் பெரியாரியல் பட்டயப் பயிற்சிக்காக எனது பேரா.கி. ஆழ்வார் அவர்கள்  மூலமாக கிடைத்த சில புத்தகங்கள் புதிய வெளிச்சங்களைக் காட்டியது. பெரியாரியல் பாடங்களை அனுப்பிய அய்யா கரந்தை புலவர் ந. இராமநாதன் அவர்களை நேரிடையாகச் சந்தித்ததும், புரட்சிக்கவிஞர் எழுதிய பாடல்களை அவரின் வாயிலாக ‘செவியுணர்வுச் சுவையுணர்வோடு ‘சுவைத்ததும் வாழ்வில் மறக்க இயலாதவை.  தடை செய்யப்பட்ட புத்தகமான காந்தியைக் கொன்ற கொலைகாரன் கோட்சே எழுதிய ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’ என்னும் புத்தகத்தை படித்ததும் அக்காலங்களில் நிகழ்ந்தது. படித்து முடித்தபொழுது காந்தியாரின் மேல் இருந்த மரியாதை கூடியதே ஒழிய குறையவில்லை.

படித்து முடித்து, திண்டுக்கல் தொலைத்தொடர்புத்துறையில் பணியில் சேர்ந்தபொழுது, வாசிக்கும் பழக்கமுடையோர் பலரும் பக்கத்து நாற்காலிகளில் உட்காரந்து வேலை செய்துகொண்டிருந்தனர். குறிப்பாக தொலைபேசி ஆப்ரேட்டராக இருந்த பலரில் அக்கா மீனாட்சி நிறைய வாசிப்பார். 1984 & 85-களில் பாலகுமாரின் இரும்புக்குதிரையை கையில் வைத்து விடாமல் படித்துக்கொண்டிருந்தபொழுது, ஏய் – தம்பி, பாலகுமாரன் என்ன எழுதுகிறார் என்பதை புரிந்துகொண்டுதான் படிக்கிறாயா? என்றுசொன்னதோடு பல கேள்விகளை எழுப்பியவர். கேள்விகள் இல்லாமல் எல்லாவற்றையும் வாசிப்பது என்பது அப்போது முடிவுக்கு வந்தது. திண்டுக்கல்லில் இருந்து உசிலம்பட்டிக்கு விருப்ப மாற்றலில் வந்தபொழுது, உசிலம்பட்டியில் இருந்த பொன்னுச்சாமி, சு.கருப்பையா ஆகியோர் வாசிக்கும் பழக்குமுடையவர்களாக இருந்தனர். நானும் வாசிக்கும் குழுவில் இணைந்தேன். கருப்பையா அண்ணன் சரித்திரக்கதைகளை விடாமல் படிப்பவர். பொன்னுச்சாமி சுந்தரராமசாமியைப் படிப்பார். இருவருக்கும் சண்டை இலக்கியரீதியாகவும் நடக்கும். பின்னர் மறுபடியும் திண்டுக்கல் வந்தபொழுது ஒரு வாடகை நூலகத்தில் இணைந்து ஆங்கிலத்தை மேம்படுத்த என ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் கதைகளை, 50-க்கும் மேற்பட்ட நூல்களை வாசித்ததும், இர்விங் வாலஸ் போன்றவர்களை வாசித்ததும் அந்தக்காலத்தில்தான். 1989-ல் பெரியகுளத்திற்கு வந்தபொழுது தோழர் விஜயரெங்கன் நிறைய வாசிப்பவராக இருந்தார்.

1991-ல் மதுரைக்கு மாறுதல். மதுரையில் தோழர் ந.முருகன் அவர்களோடு ஏற்பட்ட தொடர்பு பல புதிய புத்தகங்கள் வாசிப்பிற்கு துணைபுரிந்தது. ‘புதிய காற்று ‘ எனும் சிற்றிதழை நடத்திய அவரின் தூண்டுதல்  கவிதை,சில நூல்கள் அறிமுகம் என எனது எழுத்துப்பணி ஆரம்பமானது. ந.முருகன் வீடு முழுக்க புத்தகங்களால் நிரப்பியிருந்தார். நாலைந்து நண்பர்கள் இணைந்து புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தோம். குழுவில் உள்ள ஒருவர் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப ரூ1000-க்கு புத்தகங்கள் வாங்குவார். குழுவில் உள்ள அனைவரும் படிப்பதற்காக சுற்றில் வரும். கடைசியில் யார் வாங்கினார்களோ அவருக்குப் போய்விடும். பல கண்ணோட்டமுள்ளவர்கள் குழுவில் இருந்தனர். இப்படி பல கண்ணோட்டமுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கும்  புதிய புத்தகங்களைப் படிப்பதற்கு ஒரு வாய்ப்புக்கிடைத்தது.

மதுரைக்கு வந்த பின்னர், காரமுகில் என்னும் வாடகை புத்தக நிலையத்தில் வாடிக்கையாளரானேன். 20 நூல்கள் எடுத்தபின்பு, ஒரு நாள் அதன் நிறுவனர் தோழர் பாண்டியன் பேசினார். நான் என்னைப்பற்றி அறிமுகப்படுத்துவதற்கு முன்னாலேயே நீங்கள் 20 புத்தகம் என்ன எடுத்திருக்கிறீர்கள் என்று பார்த்துவிட்டேன், அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன் என்றார்.என்ன புத்தகம் எடுத்திருக்கிறோம்-படித்திருக்கின்றோம் என்பதனை வைத்து, நம்மை முடிவு செய்வது என்பது அவரின் பாணியாக இருந்தது.’ ‘ஸ்பார்ட்டகஸ்’ போன்ற அருமையான புத்தகங்களை அங்கு படித்ததும், பின்பு அங்கு படித்த நல்ல புத்தகங்களை பதிப்பகங்களின் மூலமாக விலைக்கு வாங்கி வைப்பதும் தொடர்ந்தது.

திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புத்தகங்களை விரும்பிப்படிப்பவர். சால்வைக்குப் பதிலாக புத்தகங்கள் அளித்தால் அளவிட இயலா மகிழ்ச்சி அடைபவர். சில அரிய புத்தகங்களைப் படித்து முடித்தவுடன் அய்யா ஆசிரியர் அவர்கள் மதுரைக்கு வரும்போது கொடுப்பதற்கு என எடுத்துவைப்பதும், அவரைப்பார்க்கும்போது கொடுப்பதும் தொடர்கிறது. அம்மா மோகனா வீரமணி அவர்கள், ‘நேரு, நீங்கள் கொடுக்கும் புத்தகங்களை நானும் விரும்பி படித்து விடுகின்றேன்’  என்று சொல்லிப்பாராட்டியதும், வாழ்வியல் சிந்தனை தொகுப்புகளில் அய்யா ஆசிரியர் அவர்கள் நான் கொடுத்த புத்தகங்களைப் பதிந்ததும் மறக்க இயலா நினைவுகள் புத்தகங்களால்.

 திராவிடர் கழகச்செயல்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் மிகப்பெரிய புத்தக விரும்பி. வீட்டில் மாடி முழுக்க ஆங்கில மற்றும் தமிழ் புத்தகங்களால் நிரப்பியிருப்பார். ஒரு எதிர்வினையாக ‘படித்த பார்ப்பன நண்பரே’ என்னும் கவிதையை விடுதலைக்கு அனுப்ப, படித்து பாராட்டிய அவர் அந்தக் கவிதையை விடுதலை ஞாயிறு மலரில் வெளியிட்டார். தொடர்ந்து வெளிவந்த கவிதைகள் எனது முதல் கவிதைத் தொகுப்பாக ‘பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்’ என்னும் பெயரில் பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் அய்யா சோம.இளங்கோவன் அவர்களால் மதுரையில் வெளியிடப்பட்டு வெளிவந்தது.

பழனி இயக்கத்தோழர் தமிழ் ஓவியா புத்தகங்களைப் பாதுகாப்பதற்காகக் கட்டியதுபோன்றே வீட்டைக் கட்டினார். புத்தகங்களை கண்ணாடிப்பெட்டகங்களுக்குள் அடுக்கினார். பட்டியலிட்டார். எவருக்குக் கொடுத்தாலும் எழுதி வைத்தார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய புத்தகங்கள் இவரிடம் உறுதியாகக் கிடைக்கும் என்னும் வகையில் நூலகத்தை செழுமைப்படுத்தினார்.   மதுரையில்  எனது இயக்கத் தோழர் பா.சடகோபன் பல ஆண்டுகளாக நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துவதையே தனது வாழ்க்கையாகக் கொண்டிருக்கின்றார். ‘புத்தகத் தூதன்’ எனும் பெயரில் தெருத்தெருவாக நல்ல புத்தகங்களை  விற்று பெருமை சேர்த்தவர். மறைந்த அண்ணன் வழக்கறிஞர் கி.மகேந்திரன் தேடித்தேடி படித்தவர்.ஓய்வு பெற்ற நீதிபதி பொ.நடராசன்,வழக்கறிஞர் நா.கணேசன், க.அழகர், அழகுபாண்டி, மருத்துவர் அன்புமதி, சுப.முருகானந்தம், பெரி.காளியப்பன், அ.முருகானந்தம் எனப்புத்தக விரும்பிகள் பலரும் இயக்கத் தோழர்களாக இருக்கின்றனர்.

மதுரையில் திரு.வெ.இறையன்பு அய்.ஏ.எஸ் அவர்கள் வந்தபின்பு, அவரின் அறிமுகம் பல புதிய வாசிப்புகளுக்கான தளத்தைக் கொடுத்தது.மதுரை ரீடர்ஸ் கிளப்பில் இணைந்த பின்பு பல வாசிப்பாளர்கள் நண்பர்கள் என்பது போய் பல எழுத்தாளர்களின் நட்பும் அறிமுகமும் கிடைத்தது.திருக்குறளைப் பரப்புவதும்,பகிர்வதுமே தனது வாழ்க்கையாகக் கொண்ட, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பொறியாளர் திரு.க.சி.அகமுடை நம்பி அவர்களின் அறிமுகம் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் கீதா இளங்கோவன், முனைவர் சுந்தர ஆவுடையப்பன்,முனைவர் க.பசும்பொன், சிவில் சர்வீஸ் அதிகாரி திரு.பா.இளங்கோவன், இந்து பத்திரிக்கை மேலாளர் முரளி, துணை ஆசிரியர் அண்ணாமலை  எனப்பலர் அறிமுகமாயினர்.புத்தகங்களை வாசிப்பவர்கள் என்பதை விட உயிராய் நேசிப்பவர்கள் தொடர்பு இதனால் கிடைத்தது எனலாம்….எனது முனைவர் பட்டத்திற்கு நெறியாளராக இருந்த பேரா.முனைவர் கு.ஞானசம்பந்தனின் வீட்டு நூலகம் அரிய புத்தகங்கள் பல அடங்கியது.. வாசிப்பதைக் காதலிக்கும் அவரின் வாசிப்பிற்கு குருவாக அவர் காட்டுவது எழுத்தாளர் தொ.பரமசிவம் அவர்களை…மதுரையில் கணினி பயிற்சியகம் வைத்திருந்த தோழர் ஓவியா, அவரின் கணவர் ஏ.பி.வள்ளிநாயகம் இருவரும் படிப்பாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் இருந்தனர். புதுக்கோட்டை கவிஞர் ந.முத்து நிலவன் அறிமுகம் கிடைத்தது.இப்படி பல திசைகளிலிருந்தும் புத்தகங்களை விரும்பிப் படிப்பவர்கள், படைப்பவர்கள் என அறிமுகமாயினர்.

எழுத்து என்னும் இணையதளத்தில் கவிதைகளைப் பதிவிட ஆரம்பித்தேன். பல கவிதைகளுக்கு பின்னூட்டமே இல்லாமல் இருந்தது. ஆனால் 75 கவிதைகளுக்குப் பின்னால் முன்பின் என்னை அறியாத கவிஞர் பொள்ளாச்சி அபி எனது கவிதைகளைப் பற்றி எழுதிய விமர்சனமும் பாராட்டும் ஒரு புதிய நம்பிக்கையை அளித்தது. பின்னர் அனைவரையும் இணைக்கும் அற்புதமான மனிதர் பாண்டிச்சேரி தோழர் அகனின் முயற்சியால் ‘சூரியக்கீற்றுகள்’’ என்னும் பெயரில் எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வந்தது. பாண்டிச்சேரியில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் பிறந்த நாளில் வெளியிடப்பட்டது.

எனது முதல் சிறுகதைத்தொகுப்பு ‘நெருப்பினுள் துஞ்சல் ‘‘சென்னை எமரால்டு பதிப்பகத்தால் 2019-ல் வெளியிடப்பட்டிருக்கிறது.சிறுகதைகளைப் படித்துவிட்டு பாராட்டுவது, கதைகளைப் பற்றித் தங்கள் கருத்துக்களை நண்பர்கள் தோழர்கள் பதிவு செய்வது மிகப்பெரிய ஊக்க சக்தியாக அடுத்தடுத்து எழுதுவதற்கு துணை செய்கிறது.

எனது தலைமை ஆசிரியராக இருந்த திரு.வீ.வீரிசெட்டி அவர்கள் நல்ல புத்தகங்களை நாடிப்படிப்பதில் அப்படி ஒரு விருப்பம் உடையவர். 80 வயது கடந்தவர்.படித்த புத்தகங்களில் பிடித்தவற்றை எழுதி வைத்த டைரிகள் பல அவரின் வீட்டில் இருக்கின்றன. நான் விரும்பிப்படித்த புத்தகத்தை அவரிடமும், அவர் விரும்பிப்படித்த புத்தகத்தை என்னிடமும் கொடுத்து கொடுத்து படித்துக் கொண்டிருக்கிறோம் சில ஆண்டுகளாய்…

மதுரை பி.எஸ்.என்.எல். நண்பர்கள் வாசிப்போர் களம் என்னும் அமைப்பைத் தொடங்கினர். அண்ணன் சு.கருப்பையா, எழுத்தாளர் தோழர் சங்கையா, எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன், கவிஞர்  சமயவேல் எனப்பலரும் நெருக்கமாயினர். தினந்தோறும்  அலுவலகத்தில் பார்ப்பவர்தான் சமயவேல்  என்றாலும் கவிஞர் சமயவேல் என்பது வாசிப்போர் களத்தினால்தான் தெரிந்தது. நல்ல புத்தகங்களை மாதம்தோறும் அறிமுகப்படுத்துதல் என்பது மட்டுமே நோக்கமாகக்கொண்ட வாசிப்போர் களம் வாசிப்பை இன்னும் தீவிரப்படுத்தியது.

புத்தகம் பற்றிப்பேசுவது, புத்தகத்தை அறிமுகம் செய்வது போன்றவை எனக்கு மிகவும் பிடித்த செயல்கள். மதுரையில் ‘‘காரல் மார்க்ஸ் நூலகம்’’ என்பதை தோழர் பிரபாகரன் நடத்திவந்தார். ‘‘எனக்குரிய இடம் எங்கே’’ என்னும் புத்தகம் பற்றிப்பேச வேண்டும் நான் என்றார்.மிக நல்ல புத்தகம் அது.  45 நிமிடம் நான் அந்தப்புத்தகத்தைப் பற்றிப் பேசியபின்பு, இப்போது புத்தகத்தை விமர்சனம் செய்தவருக்கு ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன் என அந்தப்புத்தகத்தின் ஆசிரியர் பேரா. மாடசாமி அவர்களை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்பு எனக்கு அவர் அறிமுகமில்லை.கூட்டத்தில் அவர் உட்காரந்திருப்பதும் எனக்குத் தெரியாது. பின்பு புத்தக விமர்சனம் பற்றி நெகிழ்ந்து பேரா.மாடசாமி அவர்கள்  பேசினார். வானொலியில் ஒலிபரப்பான பல புத்தக விமர்சனங்களை எனது கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை உடைய தோழர் ஒருவர் எப்போதும் கேட்டு பாராட்டுகின்றார், கருத்துக்கூறுகின்றார். 

எனக்கு இணையாக எனது இணையர் நே.சொர்ணமும் வாசிக்கின்றார். அவரின் விருப்பம் இரமணிச்சந்திரன், லெட்சுமி, வாசந்தி என நிற்கின்றது.எனது மகன் சொ.நே.அன்புமணி விருப்பமாக எப்போதும் ஆங்கில மற்றும் தமிழப்புத்தகங்களை வாசிக்கின்றான். தனது உணர்வுகளைக் கவிதையாகப் பதிகின்றான். தமிழ் இலக்கியத்தை கல்லூரி முதுகலைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் எனது மகள் சொ.நே.அறிவுமதி எப்போதும் வாசிப்பில் ஆர்வம் காட்டுகின்றார். தொடர்ந்து எனது பிள்ளைகள் வாசிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ‘ நான் கொடுக்கும் உண்மையான சொத்து உங்களுக்கு நான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களே’ என்று சொன்ன நேரத்தில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் அடித்த நக்கல் நினைவிற்கு வருகின்றது. ஆனால், மனதார அதுதான் உண்மையான சொத்தாக,எனது பிள்ளைகளுக்கு நான் அளிப்பது  என நான் நினைக்கின்றேன். அதனை வாசித்து அனுபவிக்கும் உள்ளம் அவர்களுக்கு இருப்பது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது,

மதுரையில் அய்.ஏ.எஸ். அதிகாரி திரு.உதயசந்திரன் அவர்கள் முயற்சியால் புத்தகத் திருவிழா ஆரம்பமாகியது.தொடர்ந்து சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.ஆயிரம் திருவிழாக்கள் மதுரையில் நடைபெற்றாலும் நம்மைப்போன்றவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும் திருவிழா புத்தகத்திருவிழாதான். பல நகரங்களில் தமிழகத்தில் புத்தகத்திருவிழாக்கள் நடைபெறவது மகிழ்ச்சிக்குரியது.

 எப்போதும் கையில் இருக்கும் பையில் சில புத்தகங்கள் இருக்கின்றது. புத்தகங்கள் விரும்பிகள் நண்பர்களாகவோ, இயக்க அல்லது தொழிற்சங்கத்தோழர்களாகவோ, அல்லது நான் பெரிதும் மதிக்கும் பெரியவர்களாகவோ இருக்கின்றார்கள். நல்ல புத்தகங்களைப் பகிர்தல் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. எனது வாழ்நாள் முழுவதும் நடைபெறும். பேருந்துப்பயணம், சில இடங்களில் காத்திருப்பு எல்லாம் கையில் புத்தகம் இருக்கும்போது தித்திக்கத் தொடங்குவிடுகின்றது. பல புத்தகங்களை 15 நாட்களுக்கு ஒருமுறை மதுரை மைய நூலகத்தில் மாற்றச்செல்வதும், புதிது புதிதாகப் புத்தகங்களை இரவலாக வீட்டிற்கு கொண்டுவந்து படிப்பதும் தொடர்கிறது. புதிய புத்தகம் வாங்குவதற்கு எப்போதும் மாதச்சம்பளத்தில் ஒதுக்கீடு இருக்கிறது. நூலகத்தில் எப்போதும் எடுக்கும் 9 புத்தகங்களில் ஒன்று மட்டுமாவது கட்டாயம் கவிதைப் புத்தகமாக இருக்கும். முதல் சிறுகதைத்தொகுப்பு  புத்தகங்களை விரும்பி,விரும்பி படிக்கின்றேன்.முடிந்தால் விருப்பத்தோடு வலைத்தளத்தில் பகிர்கின்றேன். எழுத்தாளரைக் கூப்பிட்டு நாலு வார்த்தைகள் பாராட்டைச்சொல்கின்றேன்.

எனது உரையில் எப்போதும் நான் படித்த சில புத்தகங்களை மேற்கோள் காட்டுகிறேன். கட்டுரைகள் சில புத்தகங்களின் அடிப்படையில் என்று சொல்கிறபோது கடகடவென எழுத்து ஓடுகின்றது.  மிகவும் விருப்பமாகப் படித்த புத்தகங்களை வலைப்பக்கத்தில் பகிர்ந்தால் என்ன என்ற கேள்வியால், எனது வலைத்தளத்தில் (vaanehru.blogspot.in) அண்மையில் படித்த புத்தகம் என்னும் தலைப்பில் பல புத்தகங்களைப் பற்றி எழுதியுள்ளேன். ஒரு பருந்துப்பார்வையாக படித்து எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன் எழுதிய பாராட்டு, தோழர் கவிஞர் ந.முத்துநிலவன், அண்ணன் சு.கருப்பையா போன்றவர்களின் பாராட்டு இன்னும் பல புத்தகங்களைப் பற்றி அண்மையில் படித்த புத்தகம் என்னும் தலைப்பில் எழுத உதவும். பத்திரிக்கைகளில் வெளிவரும் புத்தக விமர்சனம் எப்போதும் என்னை ஈர்க்கிறது. புத்தகக் கடைகளும்தான். நாட்டில் மாற்றம் வருவதற்கு புத்தகங்களே அடிப்படை.புத்தகங்களை நேசிப்போம். வாசிப்பை நேசிப்பாக ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்ற முயற்சிகள் செய்வோம்.

வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.


நன்றி : கைத்தடி 


இந்தக் கட்டுரை 22.05.2020 அன்று கைத்தடி வலைத்தளத்தில் வெளியானது. இதன் பல பகுதிகள் ஏற்கனவே விடுதலையில் வெளியானது,எனது வலைத்தளத்திலும் வெளியானது.படித்ததை மீண்டும் படிப்பதாக தோன்றினால் பொறுத்துக்கொள்க

Tuesday 12 May 2020

முதல் கட்டுரைக்குப் பாராட்டு.... வா.நேரு






விடுதலை 11.05.2020-ல் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத்தலைவர்,கல்வி அதிகாரி அண்ணா சரவணன் அவர்கள் எழுதிய 'சிங்கப்பூரில் தமிழர் தலைவர் ' என்னும் கட்டுரை படித்தேன். மிக நன்றாக இருந்தது. ஆற்றொழுக்கு நடையில், 'படித்ததில் பிடித்தது' என்னும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கு பெற்றபோது, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் இந்தக் கரானோ காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த நிறைய இயக்க புத்தகங்களைப் படியுங்கள், படித்ததோடு நில்லாமல், 'படித்ததில் பிடித்தது ' என்னும் தலைப்பில் விடுதலைக்கு எழுதி அனுப்புங்கள் என்று அறிவுறுத்தியதை திராவிடர் கழகத்தின் பொருளாளர் அண்ணன் வீ.குமரேசன் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார்.அண்ணா சரவணன் அவர்கள் பேசியபோது, 'சிங்கப்பூரில் தமிழர் தலைவர் ' புத்தகம் படித்ததைப் பற்றிப் பேசினார். நானும் அண்ணன் குமரேசன் அவர்களும் அதனை அப்படியே எழுதி விடுதலைக்கு அனுப்புங்கள் என்று அண்ணா சரவணனிடம் வலியுறுத்தினோம்.

நேற்று(11.05.2020) மாலை விடுதலையில் கட்டுரையைப் படித்துவிட்டு , அண்ணா சரவணனை தொலைபேசியில் அழைத்து பாராட்டினேன். "அய்யா, நீங்களும் அய்யா குமரேசன் அவர்களும் சொன்னீர்கள். ஆனால் மிகுந்த தயக்கத்தோடுதான் விடுதலைக்கு அனுப்பினேன். இதுதான் எனது முதல் கட்டுரை " என்றார். "இது ஏதோ ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதியவர் எழுதியதுபோல அவ்வளவு நன்றாக, கோர்வையாக இருக்கிறது உங்கள் திருப்பத்தூர் மாவட்டச்செயலாளர் அய்யா வி.ஜி.இளங்கோ, அவரது இணையர் கவிதா அவர்களை பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள்.நமது இயக்கத்தோழர்களுக்கு, பொறுப்பாளர்களுக்கு அவர்களைப் பாராட்டி விடுதலையில் வரும் சொற்களுக்கு கூடுதலான பரிசு இந்த உலகத்தில் வேறு என்ன இருக்கிறது ? வாழ்த்துரை அளித்த சிங்கப்பூர் தமிழறிஞர்கள் வை.திருநாவுக்கரசு,டாக்டர் சுப.திண்ணப்பன் ஆகியோரைக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.  இந்தப் புத்தகத்தை அருமையாக கொண்டுவந்த அய்யா சிங்கப்பூர் எம்.இலியாஸ் அவர்களின் உழைப்பை பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள். அவர் முன்னுரையில் அய்யா ஆசிரியர் அவர்களைப் பற்றி குறிப்பிட்டிருப்பதை மிகச்சிறப்பாக வகைப்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப்புத்தகம் கிடைக்கவில்லை. மறுபதிப்பு போடவேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கின்றீர்கள். நானே இந்தப்புத்தகம் படித்ததில்லை. தங்களின் கட்டுரை மூலமாக புதிய பதிப்பில் நாங்கள் எல்லாம் படிக்கும் வாய்ப்பு கிடைக்க இருக்கிறது " எனக்குறிப்பிட்டேன்.

அன்பிற்கினிய தோழர்களே, " தட்டுத்தடுமாறி முதன்முதலாக இப்படி எழுதுகிறேன். " என்று அண்ணா சரவணன் இந்தக் கட்டுரையில் எழுதுகின்றார். அண்ணா சரவணன் போன்ற ஆயிரக்கணக்கான தோழர்கள், எழுதும் ஆற்றல் உள்ளவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்.ஆனால் நாம் எழுதினால் வெளியிடுவார்களா? நம்மால் எழுத முடியுமா என்னும் தயக்கம்தான் பலரையும் தடுக்கிறது. முதலில் இந்தத் தயக்கத்தை தூக்கி வங்களா விரிகுடாக் கடலில் எறியுங்கள். புதுக்கோட்டையைச்சார்ந்த மறைந்த கவிஞர் பாலா அவர்கள் ஒருமுறை சொன்னார்கள். " புதுக்கவிதை எழுத விரும்புகிறவர்கள் எல்லாம் எழுதட்டும். தமிழகத்தில் ஏழரைக் கோடி பேர் இருக்கிறார்கள் என்றால், ஏழைரைக் கோடிப்பேரும் எழுதட்டும். அதனால் என்ன கெட்டு விடும். எது நிற்கிறது, எது கால வெள்ளத்தில் கரைந்து போகிறது என்பதனை காலம் தீர்மானிக்கும். எல்லோரும் எழுதுகிறார்கள், அதனால் நான் எழுதவில்லை என்று சொல்லாதீர்கள். எழுதுங்கள்,எழுதுங்கள் " என்று சொன்னார். அதனைப்போல நமது தோழர்கள் ஒவ்வொருவரும் 'படித்ததில் பிடித்ததை' எழுதி விடுதலைக்கு அனுப்புங்கள். எது வெளியிடத்தகுந்தது என்பதனை விடுதலை முடிவுசெய்து வெளியிடும்.அதனைப் போல ஆங்கிலத்தில் எழுத விருப்பம் உள்ளவர்கள், ஆங்கிலத்தில் எழுதும் ஆற்றல் உள்ளவர்கள் ஒவ்வொரு பக்க கட்டுரையாக கூட தி மாடர்ன் ரேசனலிஸ்டு பத்திர்க்கைக்கு எழுதி அனுப்புங்கள். அண்ணா சரவணன்  " நம் குடும்பத்தலைவர் எல்லா வ்கையிலும் நம்மை பயிற்றுவித்து வருகிறார் என்பதற்கு நானே எடுத்துக்காட்டு ' என்று சொல்வதைப் போல நம் ஒவ்வொருவரையும் ஆங்கிலத்தில்,தமிழில் எழுதுவதை நமது தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் பயிற்றுவிக்கிறார்.முயற்சி செய்ய அழைக்கிறார்.களத்தில் நின்று பணியாற்றுவது போலவே நமது போராட்டங்களை,அனுபவங்களை, எண்ணங்களை காகிதத்தில் எழுதி பதிந்து வைப்பதுவும் மிகவும் முக்கியம்.எழுதுங்கள் தோழர்களே,எழுதுங்கள்.

முனைவர் வா.நேரு,
தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

நன்றி : விடுதலை 12.05.2020...ஆசிரியருக்கு கடிதம்:

Thursday 7 May 2020

மிஸ்டர் இரக்கசாமி.......(சிறுகதை)... வா.நேரு

                                                   மிஸ்டர் இரக்கசாமி....(சிறுகதை)... வா.நேரு

” டேய்,உங்கப்பா முகத்திலே அப்படியே எழுதி வெச்சுருக்குடா ‘ என்றாள் கல,கலவெனச்சிரித்துக்கொண்டே கலா…” கட்டின பாவத்துக்கு நானும் ஒண்ணும் சொல்றதில்லடா,உங்கப்பாவ’ என்றாள் மேலும்….

‘அப்படியாம்மா, அப்பா முகத்திலே அப்படியா எழுதி ஒட்டிருக்கு..முகத்திலே பார்த்தா எனக்கு ஒண்ணும் தெரியலையேம்மா ‘ என்று அம்மாவின் நக்கலுக்கு சரிசமமாய் நக்கலடித்துக்கொண்டே அப்பாவின் முகத்தைப் பார்த்தான் 12-ஆம் வகுப்பு படிக்கும் கென்னடி.

மனைவியும் மகனும் பேசுவதைக் கேட்டுக்கொண்டே ,இடி விழுந்ததைப் போல அமைதியாக உட்கார்ந்திருந்தார் மிஸ்டர் இரக்கசாமி. இரக்கசாமி என்று பெயர் வைத்ததாலோ என்னவோ ,இரக்கப்படுகிறேன் என்று சொல்லி ஏமாளியாகிக் கொண்டிருந்த இரக்கசாமி தனது மனைவியையும் மகனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே பரிதாபமாக முழித்துக்கொண்டிருந்தார்.

மிஸ்டர் இரக்கசாமிக்கு மிகவும் தாராள குணம். எவர் வந்து கேட்டாலும் இல்லை என்று சொல்லக்கூடாது என்று மனதிற்குள் ஒரு பெரிய வைராக்கியம். ஒரு பெரிய பணக்கார வீட்டுப்பிள்ளையாகப்பிறந்து ,பெற்றோர்கள் நிறையச்சம்பாரித்து வைத்து அதனை செலவழிக்கும் ஒரு தாராள மனம் படைத்த பிள்ளையாய் மிஸ்டர் இரக்கசாமி இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை….

ஆனால் மிஸ்டர் இரக்கசாமி பிறந்ததிலிருந்தே அட்ட தரித்திரம். கன்னங்கரேர்ன்னு பிறந்திருக்கான்னு உறவுகள் எல்லாம் பிறந்தவுடனேயே பார்த்து முகத்தைச்சுழிக்க, சுத்தியிருந்த உறவுகள் எல்லாம் பழிக்க படாரென்னு மண்ணில் வந்து விழுந்தவுடனேயே வாங்கிக் கட்டிக்கொண்டவர் மிஸ்டர் இரக்கசாமி. சின்ன வயசிலியே அப்பனை முழுங்கிவிட்டான்… அதற்கு இந்த இரக்கசாமியின் முதுகில் இருக்கும் மொக்கப்பய மச்சமே காரணம்ன்னு ஒரு சோம்பேறி சோசியக்காரப் பயல் சொல்லிவைக்க ,அப்பா இல்லாமல் ஆளாகி வருவதற்குள் படாத பாடு பட்டு வளர்ந்து வந்தவர்தான் மிஸ்டர் இரக்கசாமி.

எவராவது பிரச்சனை என்று சொல்லி கடனாக பணம் கேட்டு வந்து விட்டால் அப்படியே உருகிவிடுவார் மிஸ்டர் இரக்கசாமி.சின்ன வயதில் பணத்திற்காக தான் துன்பப்பட்டது,துயரப்பட்டது, அல்லல்பட்டது,அசிங்கப்பட்டது என அத்தனையும் இரக்கசாமியின் மனதிற்குள் ஓடும்.எவராவது தன்னிடம் பணம் கேட்டு வந்து விட்டால் உடனே தன்னை அந்தப் பணம் கேட்டு வந்தவன் இடத்தில் நிறுத்திப்பார்ப்பார். அய்யோ, இவனுக்கு இந்த நேரத்தில் நாம் உதவவில்லையெனில் மனிதனாகத் தான் பிறந்து, வாழ்ந்து,வளர்ந்து என்ன பயன் என்று எண்ணிப் பணத்தைக் கொடுத்துவிடுவார்.

சில நேரங்களில் சிலருக்கு பணத்தைக் கொடுப்பதற்கு முன்பே இப்ப கொடுக்கும் பணம் திரும்ப வராது என்று தெரியும் மிஸ்டர் இரக்கசாமிக்கு.எழுத்தாளர் பிரபஞ்சன் தனது ‘நேற்றைய மனிதர்கள் ‘சிறுகதைத்தொகுப்பில் எழுதிய ஒரு சிறுகதையின் கதாபாத்திரம் போல, திரும்ப வராது என்று தெரிந்தே கடன் கொடுப்பார் மிஸ்டர் இரக்கசாமி.

இப்படி பவுன் 1000 ரூபாய் விற்கும் காலத்திலேயே 1000,2000 என்று மிஸ்டர் இரக்கசாமியிடம் கடன் வாங்கியவர்கள் பலவகையில் அறிமுகமானவர்கள். உடன் வேலை பார்ப்பவர்கள், உறவுக்காரர்கள் ,இலக்கியவாதிகள் எனப் பெரிய பட்டியலே மிஸ்டர் இரக்கசாமியிடம் உண்டு. பலருக்கு கொடுத்தது வீட்டிற்குத் தெரியும்.சிலருக்கு கொடுத்தது வீட்டிற்குத் தெரியாது.ஆனால் கொடுத்த எவரிடமும் அழுத்தி,அழுத்திப் பணத்தைக் கேட்டு திரும்பி வாங்கும் பழக்கம் இரக்கசாமியிடம் இல்லை.கொடுத்தவரிடம் ஒரு முறை இவர் கேட்கும் தோரணையிலேயே கடன் வாங்கிய ஆளுக்குத்தெரிந்துவிடும் இந்த ஆளுக்கு பணத்தைத் திருப்பிக்கொடுக்கவில்லையென்றாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று.


மிஸ்டர் இரக்கசாமி சில நேரங்களில் தனது தாராள குணத்தால் சிக்கலிலும் மாட்டத்தெரிந்தார் என்றாலும் தனது தயாள குணத்தை அவரால் மாற்ற இயலவில்லை.அப்படித்தான் ஒரு போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களைத் தயார்படுத்தும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது நிகழ்ந்தது.

மிகுந்த உயர்பதவிக்காக மாணவர்களைத் தயார்படுத்தும் நிறுவனம் அது. மிஸ்டர் இரக்கசாமி பெரும் மதிப்பு வைத்திருக்கும் ஒருவர் நடத்திக்கொண்டிருந்தார்.அரசு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மிஸ்டர் இரக்கசாமி,பகுதி நேரமாக அந்த நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்தார். பகுதி நேரம் என்றால் பகுதி நேரம்தான். பத்துபைசா வருமானம் வராத பகுதி நேர வேலை,இருந்தாலும் தான் எப்போதோ படித்ததை,பகிர்ந்து கொள்ளக் கிடைத்த அரிய வாய்ப்பாக எண்ணி ,மிஸ்டர் இரக்கசாமி அந்த நிறுவனத்தில் போய் பாடங்கள் நடத்திக்கொண்டு இருந்தார்.

மிஸ்டர் இரக்கசாமி போலவே அந்த நிறுவனத்தில் ‘வரலாறு ‘ பாடம் எடுக்க திரு.காந்தி வந்து கொண்டிருந்தார்.’காந்தி ‘என்று சொன்னால் அவர் காந்திதான் என்று மிஸ்டர் இரக்கசாமிக்குத் தோன்றியது. எப்போதும் மிக எளிமையான உடையில் வந்து பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அன்றொரு நாள் அந்த நிறுவனத்தில் பாடம் நடத்தும் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரையும் அந்த நிறுவனத்தின் நிறுவனர் உணவு விடுதிக்கு அழைத்துச்சென்றார்.உணவு விடுதியில் வேண்டியதைச்சாப்பிடுங்கள் என்று சொன்னபோது, காந்தி மட்டும் 4 இட்லிமட்டும் போதும் என்று சொல்லிவிட்டார். மிஸ்டர் இரக்கசாமி மற்றும் உடன் இருந்தவர்கள் எல்லாம் ஸ்பெஷல் தோசை,சோளாப்பூரி என்று வித விதமான உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது , காந்தி மட்டும் 4 இட்லி போதும் என்று சொன்னதைப் பார்த்து நெகிழ்ந்து போனார் மிஸ்டர் இரக்கசாமி. ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல காந்தியைப் பற்றிய மதிப்பீட்டில் மிக உயர்ந்த மதிப்பெண்ணைப் போட்டுக்கொண்டார் மிஸ்டர் இரக்கசாமி.

திரு. காந்திக்கு வயது 50க்கு மேல் இருக்கும் . இன்னும் திருமணம் முடித்துக்கொள்ளவில்லை. தூத்துக்குடிக்கு அருகில் சொந்த ஊர் என்றாலும் மதுரையில் தங்கியிருந்தார். மதுரையின் ஒரு புகழ்பெற்ற தனியார் பள்ளிக்கூடத்தில் நிரந்தர ஆசிரியர் வேலை.அந்தத் தனியார் பள்ளிக்கூடத்தில் வரும் சம்பளத்தில் எண்பது சதவீதம் ஏழை மாணவர்களின் கல்விக்காக செலவிட்டு விடுவதாக அன்றொரு நாள் சொல்லிக்கொண்டிருந்தார்.தன்னைப் போலவே மாணவர்களின் நலனுக்காக தனது சொந்தப்பணத்தை செலவழித்து மிஸ்டர் காந்தி வந்து போய்க்கொண்டிருக்கிறாரே என மிஸ்டர் இரக்கசாமி நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.

அன்றொரு நாள் அந்த நிறுவனத்தில் பாடம் நடத்திவிட்டு வெளியில் வந்த போது , திடீரென மிஸ்டர் இரக்கசாமிக்கு முன்னால் வந்து நின்றார் காந்தி. அவசரமாக ஒரு 20,000 ரூபாய் கடன் வேண்டும் என்றார் மிஸ்டர் இரக்கசாமியிடம் .உடனே இரக்கசாமி ‘ எதற்காக உங்களுக்குப் பணம் கடனாக வேண்டும் ? ‘ என்று கேட்டார்.

‘கிறிஸ்துமஸ் பண்டிகை சீக்கிரம் வரப்போவதையும், தனக்கு குடும்பம் இல்லை என்றாலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு எப்போதும் தூத்துக்குடியில் இருக்கும் தனது தங்கையின் வீட்டுக்கு கிறிஸ்துமஸ்ஸிற்கு போவதாகவும், போகும்போது எப்போதும் தங்கையின் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாடைகள், இனிப்பு வாங்கிச்செல்வது வழக்கம் என்றும், இந்த வருடம் பணத்திற்காகப் பள்ளியின் மூலம் ஜி.பி.எப். பணத்திற்கு விண்ணப்பம் கொடுத்ததாகவும், அது வர தாமதமாகிறது, ஆனால் கிறிஸ்துமஸ் வரப்போவதால் பணம் தேவைப்படுகிறது என்றும்,ஜி.பி.எப். பணம் வந்தவுடன் ஓரிரு வாரத்தில் கொடுத்துவிடுவதாகவும் மிகவும் கவலை தோய்ந்த முகத்தோடு மிஸ்டர் இரக்கசாமியிடம் கோரிக்கை வைத்தார் காந்தி.

மிஸ்டர் இரக்கசாமி உடனே தன்னைக் காந்தியின் இடத்தில் வைத்துப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். ஆனாலும் மிஸ்டர் இரக்கசாமியிடம் பணம் இல்லை. தன்னிடம் பணம் இல்லையென்றும், உடனடியாக ரூ 20,000 தருவது தன்னால் இயலாத காரியம் என்பதையும் காந்திக்கு மிஸ்டர் இரக்கசாமி எடுத்துச்சொன்னார்.ரூ 10,000 மாவது தரும்படி காந்தி மறுபடியும் கேட்க, தன்னிடம் ரூ 500 கூட இப்போது இல்லை என்றும் ,ரூ 10,000 என்பது பெரிய தொகை, தன்னால் இயலாது, தன்னை மன்னிக்கும்படியும், உதவ வேண்டிய நேரத்தில் உதவி செய்ய முடியாமல் போன காரணத்தையும் மிஸ்டர் இரக்கசாமி காந்தியிடம் விளக்க முற்பட்டார்.

காந்தி உடனே மிஸ்டர் இரக்கசாமியின் பேச்சினை இடைமறித்தார். யாரிடமாவது வட்டிக்குக்கூட ரூபாய் 10,000 வாங்கித்தரும்படியும் ,ஓரிரு வாரத்தில் வட்டிப்பணத்தைத்தருவதோடு அசலையும் தானே கட்டிவிடுவதாகவும் தனக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டுமென்றும் , சமூகத்தில் நல்ல நிலைமையில் உள்ள தன்னால் கீழே இறங்கிச்சென்று கடன் வாங்க இயலவில்லையென்றும் , தான் கடந்த 20,25 வருடங்களாக தனது தங்கைக்கும் அவளது வீட்டிற்கும் கிறிஸ்துமஸ் விழாவிற்குச்செய்யும் உதவியைத் தொடர உதவி செய்யும் படியும் மிகவும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார் காந்தி. சரி,நான் கேட்டுப்பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு தனது அலுவலகத்திற்கு வந்தார் இரக்கசாமி.

மிஸ்டர் இரக்கசாமி வேலை பார்க்கும் இடத்தில் ஒருவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டிருந்தார். சில ஆண்டுகளாக அந்த அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் அவரிடமிருந்து தள்ளியே இருந்தார் மிஸ்டர் இரக்கசாமி. காந்திக்கு எப்படியாவது உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் அலுவலகத்தில் ஓடிக்கொண்டேயிருந்தது மிஸ்டர் இரக்கசாமிக்கு. சரி, வட்டிக்கு கொடுப்பவரிடம் கேட்டுப்பார்த்தாவது காந்திக்கு உதவி செய்ய வேண்டும் என்று இரக்கசாமிக்கு தோன்றியது.

மிஸ்டர் இரக்கசாமி வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கும் சந்திரனிடம் சென்று, இப்படித்தனக்கு தெரிந்தவர் மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் ,ஜி.பி.எப். பணம் வரவேண்டியது பாதித் தூரத்தில் நிற்பதாகவும்,வந்த உடன் அவர் கொடுத்து விடுவார் என்றும் அவருக்கு ரூபாய் 10,000 கொடுத்து உதவ வேண்டும் என்றும் கேட்டார். சந்திரன் மிகத்தெளிவாக, காந்தியைத் தனக்குத் தெரியாது என்றும், உங்களை நம்பி வேண்டுமென்றால் நான் தருகின்றேன், நீங்கள்தான் எனக்கு வட்டி கட்டவேண்டும், அசல் கட்டவேண்டும், நோட்டும் நீங்கள்தான் எழுதிக்கொடுக்க வேண்டும் என்றும் சொன்னபோது, மிஸ்டர் இரக்கசாமி மற்றவற்றிற்கு ஒப்புக்கொண்டு, நோட்டு மட்டும் காந்தியையே எழுதித்தரச்சொல்கிறேன் என்றார்.சந்திரன் மறுத்துவிட்டார். வேண்டுமென்றால் காந்தியிடம் உங்கள் பெயருக்கு ஒரு நோட் எழுதி வாங்கிக்கொள்ளுங்கள். நான் பணம் கொடுப்பது உங்களிடம்தான். எனக்கு நீங்கள்தான் நோட்டு எழுதிக்கொடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்.

மறு நாளே, அலுவலகத்திற்கு வந்த காந்தியை சந்திரனிடம் மிஸ்டர் இரக்கசாமி அறிமுகப்படுத்தினார். சந்திரன் கண்டுகொள்ளவில்லை.அவருக்கு முன்னாடியே சந்திரனின் மனைவி பெயருக்கு மிஸ்டர் இரக்கசாமி ரூ 10,000 க்கு நோட் எழுதிக்கொடுத்தார். மிஸ்டர் இரக்கசாமி பெயருக்கு,அலுவலக முகவரிக்கு ரூ 10,000 க்கு நோட்டை காந்தி எழுதிக்கொடுத்தார். சந்திரன் ரூ 10,000த்தில் முதல் மாத வட்டி 300 ரூபாயை எடுத்துக்கொண்டு ,மீதம் 9,700 ரூபாயை மிஸ்டர் இரக்கசாமியிடம் கொடுத்தார். இரக்கசாமி அந்தப்பணத்தை அப்படியே காந்தியிடம் கொடுத்தார்.மிக்க நன்றி,மிக்க நன்றி,வாழ்க்கையில் இந்த உதவியை மறக்கவே மாட்டேன் என்று சொல்லிக்கொண்டே காந்தி மிஸ்டர் இரக்கசாமியிடம் விடை பெற்றுக்கொண்டார்.மிஸ்டர் இரக்கசாமிக்கு மிகப்பெரும் நிறைவு காந்திக்கு உதவி செய்தது குறித்து

இரண்டு மாதம் சரியாக 2-ந்தேதி வட்டிப்பணத்தைக் கொடுத்தார் காந்தி.அப்படியே அந்தப்பணத்தை வாங்கி அலுவலகத்தில் சந்திரனிடம் கொடுத்து வந்தார் மிஸ்டர் இரக்கசாமி. ஜி.பி.எப். பணம் வந்துவிட்டதா என்று ஒரு வார்த்தை மிஸ்டர் இரக்கசாமி கேட்பதற்கு முன்பே ஜி.பி.எப். இன்னும் சில நாட்களில் வந்து விடும் என்று காந்தி சொல்லிக்கொண்டிருந்தார்.. மூன்றாவது மாதம் இரண்டாம் தேதி காந்தி வரவில்லை. 10-ந்தேதி வரை அவர் வரவில்லை. சந்திரனுக்கு வட்டிப்பணத்தை மிஸ்டர் இரக்கசாமியே கொடுத்துவிட்டார்.அந்த மாதம் முழுவதும் காந்தியைப் பார்க்கமுடியவில்லை.போட்டித் தேர்வுக்கு பாடம் நடத்தும் நிறுவனத்திற்கே காந்தி வரவில்லை.தொடர்பு கொள்ளவே முடியவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே இருக்கும்போதே மூன்று மாதங்கள் வட்டிப்பணத்தை சந்திரனுக்கு மிஸ்டர் இரக்கசாமி கட்டியிருந்தார்.

காந்தி போட்டித்தேர்வு பயிற்சி நிறுவனத்திற்கு மூன்று மாதங்களாக வரவில்லை என்றதும் ஏதோ தப்பாகப்போவது போல தெரிந்தது மிஸ்டர் இரக்கசாமிக்கு. அங்கிருந்த காந்தி வேலை பார்த்த பள்ளியின் முகவரியை எடுத்துக்கொண்டு காந்தி வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்திற்கு மிஸ்டர் இரக்கசாமி போனார். அங்கிருந்தவர்களிடம் காந்தியைப் பற்றிக் கேட்டவுடனேயே , நீங்கள் ஏதும் கடன் கொடுத்து இருக்கிறீர்களா? எனக்கேட்டவுடன் திடுக்கிட்டுப் போனார் மிஸ்டர் இரக்கசாமி. அவர்கள் காந்தியைப் பற்றி சொல்லச்சொல்ல கிறுகிறுப்பு வந்தது போல ஆகிவிட்டது மிஸ்டர் இரக்கசாமிக்கு...

காந்தி தன்னுடன் வேலை பார்க்கும் 20-க்கு மேற்பட்டவர்களிடம் இப்படி 10,000ம் 20,0000ம் என்று கடன் வாங்கியிருக்கிறார். ஒருவரிடம் வாங்கியது அடுத்தவருக்குத் தெரியாமலேயே கைமாத்து,அவசரம், மருத்துவம் எனப் பல பொய்களைச்சொல்லி பணம் வாங்கியிருக்கிறார். வேறு கெட்ட பழக்கம் இல்லாதவரே என்று ஆசிரியர்கள் தீர விசாரித்தபோது, மதுரையில் பெரிய பணக்காரர்கள் பலர் விளையாடும் சீட்டாட்டக்கிளப்பில் மெம்பராக இருப்பதும்,சீட்டு விளையாட்டில் பயங்கர மோகம் கொண்டு பணம் கட்டி இழப்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆசிரியர்கள் மாற்றி மாற்றி கடனைக் கேட்டபோது, ஒன்றுமே சொல்லாமல் பள்ளிக்கும் வராமல் இரண்டு மாதங்களாக பள்ளிக்கூடத்திற்கும் வராமல் இருப்பது தெரியவந்தது. எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் வராததை,மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்ததன் அடிப்படையில் அவர் தற்காலிக பணி நீப்பில் இருக்கிறார் என்பது தெரிந்தது.

என்ன செய்வது என்று தெரியவில்லை மிஸ்டர் இரக்கசாமிக்கு. ரூபாய் 300 மாதாமாதாம் வட்டி கட்டுவதை வீட்டில் மனைவியிடம் சொல்லவில்லை. அவராகவே சமாளித்துக்கொண்டிருந்தார். ஆனால் எவ்வளவு நாள் பணம் கட்டுவது? சந்திரனுக்கு அசலும் வட்டியும் கட்டினால்தான் புரோ நோட்டைத் தருவார் …என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே அலுவலகத்திற்கு போய் வந்து கொண்டிருந்தார். வட்டிப்பணத்தை மட்டும் சந்திரனுக்கு கட்டி வந்தார்.

திடீரென்று ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும்போது மிஸ்டர் இரக்கசாமிக்கு தூத்துக்குடியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘மிஸ்டர் இரக்கசாமியா?’ என்று வினவியவரிடம் ‘ஆமாம் ‘என்றார். தான் காந்தியின் வக்கில் என்றும் அவர் நிறையக் கடன் பட்டு வாழ்க்கையில் நொந்து விட்டார் என்றும்,விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, சொத்துக்கள் ஏதும் இல்லாததால் மஞ்சள் கடிதாசி கொடுத்துவிட்டார் என்றும் ,உங்கள் வீட்டு முகவரி வேண்டும் சில தகவல்கள் அனுப்ப என்றும் கேட்டபோது வீட்டு முகவரியை மிஸ்டர் இரக்கசாமி தொலைபேசியிலேயே கொடுத்தார்.

மறு நாள் வீட்டிற்கு வந்தவுடன் மனைவி கலா அந்தக்கடிதத்தைக் கொடுத்தவுடன் படித்துப்பார்த்து அரண்டு விட்டார் மிஸ்டர் இரக்கசாமி. “மிஸ்டர் இரக்கசாமி, நீங்கள் அரசு வேலை பார்க்கிறீர்கள் ? எப்படி வட்டிக்கு பணம் கொடுத்தீர்கள்?” என்று விளக்கம் கேட்டு காந்தியின் வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பி இருந்தார். மனைவி கலாவிடமும்,மகன் கென்னடியிடமும் முழுக் கதையையும் சொன்னார் மிஸ்டர் இரக்கசாமி. முதலில் கோபப்பட்ட கலா பின்பு கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள்.

” இளிச்சவாயென்னு ” …” டேய்,உங்கப்பா முகத்திலே அப்படியே எழுதி வெச்சுருக்குடா ‘ என்றாள் கல,கலவெனச்சிரித்துக்கொண்டே கலா…” கட்டின பாவத்துக்கு நானும் ஒண்ணும் சொல்றதில்லடா,உங்கப்பாவ’ என்றாள் மேலும்….

‘அப்படியாம்மா, அப்பா முகத்திலே அப்படியா எழுதி ஒட்டிருக்கு..முகத்திலே பார்த்தா எனக்கு ஒண்ணும் தெரியலையேம்மா ‘ என்று அம்மாவின் நக்கலுக்கு சரிசமமாய் நக்கலடித்துக்கொண்டே அப்பாவின் முகத்தைப் பார்த்தான் 12-ஆம் வகுப்பு படிக்கும் கென்னடி.

மனைவியும் மகனும் பேசுவதைக் கேட்டுக்கொண்டே ,இடி விழுந்ததைப் போல அமைதியாக உட்கார்ந்திருந்தார் மிஸ்டர் இரக்கசாமி. இரக்கப்படுகிறேன் என்று சொல்லி ஏமாளியாகிக் கொண்டிருந்த இரக்கசாமி தனது மனைவியையும் மகனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே பரிதாபமாக முழித்துக்கொண்டிருந்தார்.

நன்றி : எனது சிறுகதையை வெளியிட்ட சிறுகதைகள்.காம்(sirukathaigal.com) இணையதளத்திற்கு