Saturday 31 October 2020

நூற்றாண்டு கடந்தும் வாழ்க!

 அய்யா ஆசிரியர் வீரமணிக்கு

அமைந்திட்ட போர்க்கருவி இவர் !

திராவிடர் கழகத்தின் 

பொறுப்புகளில் பலவற்றில் இருந்து

இன்று திராவிடர்கழகத்தின் '

செயலவைத்தலைவர் இவர் !





வானோடையில் தங்கிக் கிடக்கும்

நட்சத்திரங்கள் போல

இவரது நினைவோடைகளில் 

தங்கிக் கிடக்கும்

நினைவுகள் பல பல !

நினைவு படுத்தி அவர்

கொடுக்கும் தகவல்கள்

அரை நூற்றாண்டுக்கும் 

மேற்பட்ட வரலாறு சொல்லும்!

தமிழக வரலாறு முதல்

உலக வரலாறு வரை 

உண்மை வரலாற்றை சொல்லும்

மேடை நட்சத்திரம் இவர் !


இன்றுதான் புதிதாய் 

மேடை ஏறுவது போல

தலைப்புக்கு ஏற்றவாறு

எடுத்த குறிப்புகளோடுதான்

மேடை ஏறுவார்....

அதில் இன்றைய செய்தியும்

நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட

செய்தியும் இணையாய் வரும்!

அரை நூற்றாண்டுக்கும் மேல்

பேசுபவர் என்றாலும்

அவர் எடுக்கும் குறிப்புமுறை

எப்போதும் மேடை ஏறுபோவர்கள்

கற்றுக்கொள்ளும் முறை


தேடித் தேடிப் படிப்பதும்

படித்தவற்றை 

பகுத்தறிவு சொற்பொழிவில்

பயன்படுத்துவதும்

எவர் கேட்பினும் 

இதோ ஆதாரம் என

முகத்துக்கு நேரே 

எடுத்துக்காட்டுவதுமாய்

இவரது உரைகள்!


அரசுப்பதவி முடிந்தபின்புதான்

எழுத ஆரம்பித்தார்

20 ஆண்டுகளில் 

25க்கும் மேற்பட்ட நூல்கள்

ஒவ்வொன்றும் ஆராய்ச்சியே...

பெரியாரின் பன்முகம் தொடங்கி

உலகப்பகுத்தறிவாளர்கள் வரை

இவரது எழுத்துத் தொடாதா

பகுத்தறிவாளரே உலகில் இல்லை

பகுத்தறிவுக்கருத்துக்களே இல்லை

எனும் அளவில்

சுருக்கெனத்தைக்கும் 

எழுத்தாய் விரிகிறது 

இவரது எழுத்துலகம்....


தொழிற்சங்கப் பணியில்

உயர்பொறுப்புவரை

வகித்த தலைவர் இவர்!

அப்பணியில் கிடைத்திட்ட

விழுப்புண்ணும்

டாக்டர் கலைஞர்

மருத்துவமனையில் வந்து

விசாரித்ததும்...

இழப்பதற்கு தயாராக

இவர் திராவிடர் கழகத்தில்

தொழிற்சங்கத்தில் 

பணியாற்றிய வரலாறு சொல்லும்.....


வெகுண்டு எழுவார்

சில நேரம்

புரட்சிக்கவிஞரை நேரில்

பார்த்தது போல் இருக்கும்

பின்பு குளிர்ந்து

அன்பு செலுத்துவார்

அய்யா பெரியாரைப் 

பார்த்தது போல இருக்கும்....


அப்பா,

அறிவுக்கரசு தாத்தாவின் குரல்

ஒலி நாடாவில் கேட்கும்

தந்தை பெரியாரின் குரல்

போலவே இருக்கிறது

என்றாள்  மகள்....

உண்மைதான் 

குரல்மட்டும் அல்ல....

கருத்தும்கூட அப்படியே

தந்தை பெரியார்போல

ஒளிவு மறைவு ஏதுமின்றி

உள்ளத்தில் உள்ளதை

மக்களின் நன்மைகருதி

அப்படியே சொல்வது என்றேன்...

அப்படியா என்று அதிசயத்தாள் மகள்...


இடித்துரைப்பதில் 

இவருக்கு இணை இவர்தான்!

எதிரிகளை  மட்டுமல்ல 

சில நேரங்களில் தனது

தோழர்களையும் 

வறுத்தெடுப்பவர் இவர் !

வழி நடத்தும் செயலென

புரிந்துகொண்டார்க்கு 

இவரது சொற்கள்

'உற்ற நோய் நீக்கி 

உறாமை முற்காக்கும் "

சொற்கள் என்பது புரியும்..


வெறுக்க கற்றுக்கொள்பவனே

வெற்றி பெறுவான்

எல்லோருக்கும் நல்லவராய்

இருத்தல் இயலாது...

வெறுக்க வேண்டியவர்களை

வெறுக்க கற்றுக்கொள்

என்பார் என்னிடம்...


சில தோழமைகள் அற்புதமாய்

அமைகின்றன வாழ்வில்...

அப்படி எனக்கு கிடைத்திட்ட

பெரும் தோழமை

பெரியார் வழி தோழமை

அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள்...


எண்பது வயது கடந்து

இன்றைய நாளில்

எண்பத்தொன்று வயதில்

அடி எடுத்து வைக்கும்

அய்யா சு,அறிவுக்கரசு 

நூறையும் கடந்து வாழ்க !

நூற்றாண்டு கடந்தும் வாழ்க!

                         வா.நேரு, 01.11.2020




Wednesday 28 October 2020

திதி பார்த்து திவசம் செய்தல்.........வா.நேரு

 நினைவலைகள் 

எப்போதும் நீள்கிறது...

நீத்தார் நினைவுகளோடு....


அப்பா இறந்து 

அரை நூற்றாண்டுகள்

ஓடிப்போனது...

ஆனாலும் அவரின்

நினைவலைகள்  தொடர்கிறது...


அப்பாவிடம் வண்டப்புலியில்

படித்தவர்கள்...

அப்பாவிடம் சாப்டூரில் 

படித்தவர்கள்....

அப்பாவோடு கைப்பந்து 

விளையாடிவர்கள்...

அதற்காக ஊர் ஊராய்

சென்று வென்றவர்கள்...

கதை கதையாகச்சொல்கிறார்கள்

அப்பாவின் உயர்குணம் பற்றி...


அறியா இளம்வயதில்

அப்பாவைப் பறிகொடுத்த எனக்கு

நினைவலைகள் 

எப்போதும் நீள்கிறது...

அவரோடு இருந்தவர்கள் 

சொல்லும் அத்தனை 

நினைவுகளோடும் 

அப்பாவின் நினைவும் தொடர்கிறது... 


எப்போதும் போல 

அப்பாவின் நினைவு நாள்

முதியோர் இல்லத்தோடும்

அக்னி சிறகுகள் 

அறக்கட்டளையோடும் தொடர்கிறது...

விளம்பரம் போல இதனை

வெளிப்படுத்துவது மனதுக்குள்

உறுத்துகிறது என்றாலும்


இறந்தவர்களுக்கு திதி பார்த்து

திவசம் செய்தல் என்பது 

ஊறிப்போய்க்கிடக்கிறது 

நமது மக்கள் மூளைகளில்


அதீத சக்தி வாய்ந்தது

தர்பைப்புல்! அட!

தர்ப்பைப்புல் 

மூன்றை வைத்து

இறந்து போன உங்கள்

பெற்றோரை வரவழைக்கலாம்

என்று உழைக்காமல்

உண்ணுகின்ற பார்ப்பனர்கள்

கூறுவதை நம்புகின்ற

நம் மக்கள்


பெற்றோரின் நினைவாக

பார்ப்பனருக்கு 

அரிசி,காய்கறி..

பணம் அளித்து 

ஆசி பெற வேண்டும் என

எவனோ சொல்லிவைத்ததை

பெற்றோருக்கு செய்யும்

பெருங்கடமையாய்

படித்தவரும் கூட

செய்கின்ற இந்த நாளில்


பெற்றோர்களின் நினைவு நாளில்

இல்லாது இருப்போருக்கு உதவுங்கள்

இணைந்து ஏதேனும் நல்லது

செய்வோருக்கு துணை நில்லுங்கள்

என்னும் சொல்லை 

சொல்ல வேண்டும் என்னும் 

செய்கையே தவிர வேறில்லை...


                       வா.நேரு

                       28.10.2020

நண்பரே, இந்தக் கவிதையையும் சேர்த்து படித்துவிட்டுப்போங்கள்

https://vaanehru.blogspot.com/2014/10/blog-post_27.html

நன்றி