Monday 18 January 2021

திருவள்ளுவர் நாள் சிந்தனை

                                திருவள்ளுவர் நாள் சிந்தனை                                                                                                                முனைவர் வா.நேரு


உண்மை வாசகர்கள் அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு,பொங்கல் திருநாள்,திருவள்ளுவர் தின வாழ்த்துகள். உலகமெங்கும் இருக்கும் திராவிடர்கள் மனமகிழ்ந்து,தங்களின் சாதி,மதங்களை மறந்து கொண்டாடும் தமிழர்திருநாளைக் கொண்டாடும் அதே வேளையில் ஜனவரி-15 ஐ திருவள்ளுவர் நாளெனக் கொண்டாடுகிறோம். டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது, 1971-ஆம் ஆண்டு முதன் முதலாக திருவள்ளுவர் தினம் அறிவிக்கப்பட்டது.பொங்கல் பண்டிகையை ஒட்டி,திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் நாம் ,இன்று திருக்குறளை நமது பரம்பரை எதிரிகளிடமிருந்து காப்பாற்றவேண்டிய காலத்தில் இருக்கிறோம்.


திருவள்ளுவர் திடீரென்று தமிழ் நாடு அரசு நடத்தும் கல்வி சேனலில் காவி நிறத்தில் தோன்றுகின்றார். திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி,திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர்  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் கண்டனத்திற்குப் பிறகு அது நீக்கப்படுகிறது.சென்ற ஆண்டு திருவள்ளுவர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த இந்திய துணைகுடியரசுத்தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் தனது வாழ்த்துச்செய்தியோடு வெளியிட்ட படத்தில் காவி நிறத்தில் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டார்.பின்பு நீக்கினார். சில இந்து மதவெறி அமைப்பினைச் சார்ந்தவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு விபூதியைப் பூசினர்.திருவள்ளுவர் இந்துதான் என்று சில வலதுசாரி ஊடகவியல்காரர்கள் ,பிகாரைப் பிறப்பிடமாகக் கொண்ட ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள்,திருக்குறளில் இருக்கும் சில சொற்களைச்சுட்டி  தொடர்ச்சியாகப் பரப்புரை செய்கிறார்கள்...இந்தியப் பிரதமர் செல்லும் இடமெல்லாம் திருக்குறளைச்சொல்கிறார்,இவையெல்லாம் தவறா என்றால் இல்லை,முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சொல்லியிருக்கிறார்.டாக்டர் அப்துல்கலாம் உள்ளிட்ட இந்தியக் குடியரசுத்தலைவர்களாக இருந்தவர்கள் மிகச்சிறப்பாக திருக்குறளைப் பற்றிச்சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் சொன்னதிற்கும் இன்றைய பிரதமர்,நிதியமைச்சர் ஆகியோர் திருக்குறளைச்சொல்வதற்கும் வேறுபாடு இருக்கிறது.இவர்களின் நோக்கம் வேறு. இந்தியத் துணைக் குடியரசுத்தலைவரே,காவி நிறத்தில் திருவள்ளுவர் படத்தினப் பதிவு செய்வது ஒன்றே போதும் இவர்களின் நோக்கம் என்ன என்பதனைத் தெளிவாக அறிவதற்கு...

செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு அள்ளி அள்ளிக்கொடுக்கிறது.செம்மொழித் தமிழ் நிறுவனத்தை ஒரு பல்கலைக்கழகத்தோடு இணைத்து அழிக்கப்பார்க்கிறது..அப்படிப்பட்டவர்கள் திருக்குறளை கையில் எடுப்பதற்கு என்ன காரணம்?


திருக்குறள் என்பது திராவிட இயக்கத்திற்கு மட்டும் சொந்தமானதா? நாங்கள் சொல்லக்கூடாதா  என்று ஒருவர் தொலைக்காட்சி விவாதித்தில் சீறுகிறார்.திருக்குறள் எந்த இயக்கத்திற்கும்,எந்த மதத்திற்கும் சொந்தமானதல்ல ஆனால் .200 வருடங்களுக்கு முன்னால் ஆங்கிலேயரால் சூட்டப்பட்ட 'இந்து மதம்' என்ற பெயரைக் கொண்ட ஒரு மதத்திற்கு சொந்தமானது என்று ஆக்குவதற்காக  சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள்....ஆரியர்களின் நரித்தனத்தை அம்பலப்படுத்துகிறோம்.உங்கள் நோக்கத்தில் பிழை இருக்கிறது என்பதனைச்சுட்டுகிறோம்.


திருக்குறளை முதன்முதலில் படிப்பவர்கள் திகைப்பார்கள்.அரிய கருத்து பொற்குவியலைக் கண்டுபிடித்த பெருமை அடைவார்கள்.படித்து அதன் கருத்தினை சுவைத்து அறிந்தவர்கள் செல்லும் இடமெல்லாம் திருக்குறளைக் கொண்டு செல்வார்கள்.அதன் பொருளை, பொருத்தப்பாட்டை,வாழ்வியலை சொல்லி சொல்லி மகிழ்வார்கள்.தமிழ் அறியாத பலரும், வெளி நாட்டைச்சார்ந்தவர்கள் பல மதத்தினைச்சார்ந்தவர்கள்,மதத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் என அனைவருக்கும் பொதுவான நிலையில் இருக்கும் ஒரு நூல் திருக்குறள்.இப்படிப்பட்ட தனித்தன்மையான நூல், உலகத்தில் வேறு எந்த நூலும் இல்லை.ஒரு மதத்திற்கு உரிய நூலை அந்த மதத்தைச்சார்ந்தவர்கள் போற்றுவார்கள்.அடுத்த மதத்தினைச்சார்ந்தவர்கள் அந்த நூலைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.ஆனால் திருக்குறள் நூலினை எவர் படித்தாலும் தனக்கான நூலாக உணர்கிறார்கள்.தங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் உன்னதமான நீதி நூல் என்று போற்றுகிறார்கள்.இப்படிப்பெருமைக்கு உரிய திருக்குறளை ஒரு கூட்டம் நம்மிடமிருந்து களவாண்டு, தங்களுக்கு உரியது என்று முத்திரை இடப்பார்க்கிறது.அப்படிச்செய்வதன் மூலமாக,ஒரு மதத்திற்கு உரியதாக ஆக்கி.கொஞ்ச நாளில் மறக்கடித்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.


நாகசாமி என்று ஒருவர்.அவருக்கு பத்ம பூசன் விருதினை இந்திய அரசு கொடுக்கிறது.யார் இவர்?திருக்குறள் என்பது வடமொழியான சமஸ்கிருத நூல்கள்,மனுதர்மம் போன்ற நூல்களின் கருத்துக்களின் அடிப்படையில் அமைந்தது என்னும் ஒரு அபத்தமான நூலை (Thirukkural- Am Abridgement of Shaatras) எழுதியவர்.பேட்டி கொடுக்கும்போது கூட,இணையத்தில்பேசும்போது கூட சட்டை அணியாமல்,பூணூலோடு பேட்டி கொடுப்பவர்.தினமணி நாளிதழ்-திருக்குறளைத் தடை செய்யவேண்டும் என்று ஒரு கட்டுரை வெளியிடுகிறது.மனுநீதி நூலைத் தடை செய்ய வேண்டும் என்று சொன்னால் அதைப் போன்ற நூலான திருக்குறளைத் தடை செய்ய வேண்டுமென எழுதுகிறார் அதை.வாசிக்கும் நம்மைப் போன்றவர்களின் இரத்தம் கொதிக்கிறது. திருக்குறளும் மனு நீதியும் ஒன்றா?..

'பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் " எனக்கூறும் திருவள்ளுவரின் கருத்து எங்கே?.."பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும்,பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததனாலும்,மற்ற எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்குவதற்குரிய தலைவனாகிறான்(மனு.த.சாத்.அத்.1.சுலோகம் 100) என்றும்,"சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால் ,அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால்,அவனது நாக்கை அறுக்க வேண்டும்."(மனு.த.சாத்.அத்.8,சுலோகம்.270)என்றும்,"பிராமணனுக்கு மங்கலத்தையும் ,சத்திரியனுக்கு வலுவையும்,வைசியனுக்குப் பொருளையும்,சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிற பெயரை சூட்டவேண்டும்."(மனு.த.சாத்.அத்.2.சுலோகம் 31)--(திருக்குறள் நாவலர் உரை..பக்கம் 24) என மனிதர்களைக் கூறுபோட்ட மனு(அ) நீதி எங்கே?நாவலர் அவர்கள் மிகச்சிறப்பாக திருக்குறளுக்கும் மனு நீதிக்கும் உள்ள 14 வேறுபாடுகளை மிக அழகாக சுட்டிக்காட்டுவார். பரிமேலழகர் தொடங்கி இன்றைய நாகசாமிகள்,நடராஜன்கள் வரை திருக்குறளைப் போற்றுவது போல் போற்றி,தங்கள் ஆரியக் கருத்துக்களை திணிக்கிறார்களே ஏன்?

ஆரியர்களின் வர்ணக் கோட்பாட்டை தகர்த்தெறியும் கருத்து அணுகுண்டு திருக்குறள். அணு அளவில் சிறியது என்றாலும் அதில் உள்ளே இருக்கும் ஆற்றல் எவ்வளவு பெரியது.அதனைப் போலத் திருக்குறளின் கருத்துகள் ஆரியத்தை அடியோடு வேரறுக்கும் தன்மை கொண்டது.அதனால் அணைத்து அளிப்பது போல திருக்குறளைப் போற்றி ,அதன் கருத்துகளை சிதைத்து அழிக்க விரும்புகிறார்கள்.தமிழர்கள் இதனை அனுமதிக்க மாட்டார்கள்.தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, பூமிப்பந்தின் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் தங்கள் கடவுச்சீட்டை(விசா) கொண்டு போவது போலவே 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 'என்னும் தத்துவம் கொண்ட ஒப்பற்ற இலக்கியமான திருக்குறளையும் சுமந்து சென்றிருக்கிறார்கள்.செல்கிறார்கள்.அவர்களில் பலர் தெய்வ நம்பிக்கை உடையவர்கள்.பல மதத்தினைச்சார்ந்தவர்கள்.தமிழர்களாகிய அவர்களின் உள்ளங்களிலே திருவள்ளுவர் தனது உயர்ந்த கருத்துகளால் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்.உலகில் எங்கு சென்றாலும் தாங்கள் படிப்பது மட்டுமல்ல, தங்கள் அடுத்தடுத்த தலைமுறை படிக்க திருக்குறளைப் பல வடிவங்களில் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

சிகோகா டாக்டர் சரோஜா இளங்கோவன் திருக்குறளைக் கதைகளின் வழியே ஆங்கிலத்தில் எழுதுகிறார்.புதுச்சேரிக்கு அருகில் ஒரு உணவு விடுதிக்காரர் 200 குறளுக்கு மேல் ஒப்புவித்தால் ,அருமையான அசைவ உணவு பரிசாக சாப்பிட்டுச்செல்லலாம் என்கிறார்.மதுரையைச்சார்ந்த ஓய்வுபெற்ற பொறியாளர் க.ச.அகமுடை நம்பி வருடந்தோறும் தன் கைப்பணம் செலவழித்து திருக்குறள் கருத்தரங்குகளை நடத்தி, அதில்வரும் கட்டுரைகளைப் புத்தகமாக வெளியிடுகின்றார்.இப்படி உலகெங்கும் உள்ள தமிழர்கள் திருக்குறள் நூலின்பால் செலுத்தும் கவனமும்,பங்களிப்பும், அர்ப்பணிப்பும் அளவிடற்கரியது.இதனை ஆரியர்களால் தாங்க இயலவில்லை.பகவத் கீதை என்னும் தங்கள் நூலை விட ,கடவுளைக் கும்பிடுகிறவர்கள் கூடத் திருக்குறளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பார்ப்பனர்களுக்கு உறுத்துகிறது.ஆதலால், அதுவும் இந்து மத நூலே என்னும் பொய்யை இட்டுக்கட்டி,அரசு அதிகாரத்தின் மூலம் மெய்ப்படுத்தி,அதன் உண்மையான கருத்தினை சிதைத்து , மற்றவர்கள் அதனை நாடாத ஒரு நிலையை ஏற்படுத்த நினைக்கிறார்கள்.

படித்தவர்களின் பரணியிலே இருந்த திருக்குறளைப் பாமரர்களிடம் கொண்டு சேர்த்தவர் தந்தை பெரியார். கொண்டு சேர்த்தது திராவிடர் இயக்கம்.கிராமங்கள் தோறும் மகாபாரதத்தை அந்தக் காலத்தில் சாவடிகளில் உட்கார்ந்து வாசித்தார்களே, ஏன் திருக்குறளை வாசிக்கவில்லை?.திருக்குறளுக்கு என முதன் முதலாக திருக்குறள் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்தானே,குறைந்த விலையில் திருக்குறளைத் தெருத்தேருவாக விற்றது தந்தை பெரியார்தானே,அவரது இயக்கம்தானே...   திராவிட இயக்கம் வந்த பின்பு, திராவிட இயக்க படிப்பகங்கள்,பத்திரிக்கைகள்,சொற்பொழிவுகள் வாயிலாகத்தானே திருக்குறள் பரவியது,திராவிட இயக்கம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பின்புதானே,கடந்த 50 ஆண்டுகளில் பட்டி தொட்டி எங்கும் திருக்குறள் பரவியது.பாடத்திட்டத்தில் திருக்குறள்,பேருந்துகளில் திருக்குறள்,குமரியில் திருவள்ளுவருக்கு சிலை,சென்னையில் வள்ளுவர் கோட்டம் எனத் திருவள்ளுவரை,திருக்குறளை உள்ளத்தில் ஏந்தி செயல்பட்டது திராவிட இயக்க ஆட்சியில்தானே...

"குறளுக்குள் கடவுள்,மதம்,ஜாதி,மோட்சம்,முன் ஜென்மம் என்பன போன்ற சொற்கள் இல்லை.","ஆரியத்தை -மூட நம்பிக்கையை எதிர்த்துப் போராட வள்ளுவரின் குறள் நமக்குக் கேடயமாக இருக்கிறது ","திராவிடர்களுக்கு நீத் நூல்,ஒன்றே ஒன்றேதான் உண்டு.அது திருக்குறள் தவிர வேறில்லை என்பதாக உறுதி கொண்டு,ஆரிய மத புராண இதிகாச நூல்களாகிய ராமாயணம்-கீதை-பாரதம்-புராணம் ஆகிய வைணவ சைவ மத நூல்கள் ஆகியவைகளை அறவே ஒழித்து விடவேண்டும்...",'ஆரியப் பித்தலாட்டத்திற்கு சரியான மருந்து,சரியான மறுப்பு திருக்குறள்தான்"," என்ன மதத்தினர் என்று கேட்டால் "வள்ளுவர் மதம் " என்று சொல்லுங்கல்.உங்கள் நெறியென்னவென்றால் 'குறள் நெறி" என்று சொல்லுங்கள்.குறள் நெறி என்று சொல்வீராயின் ,உங்கள் முன் எந்த பிற்போக்குவாதியும் ,எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனும் முன் நிற்கக் கூசி ஓடி விடுவான்.குறளை எவனாலும் மறுத்துக்கூற முடியாது.அவ்வளவு இயற்கைக்கும் ,அறிவுக்கும் இயைந்ததாக இருக்கிறது அது.எனவே குறளைப் படியுங்கள்.அதன் வழிப்படி நடவுங்கள்.அதையே எங்கும் பிரச்சாரம் செய்யுங்கள்.உங்களுக்கு மனந்தூய்மை ஏற்படும்.முன்னேற்ற அறிவில் ஆசையும்,நம்பிக்கையும் ஏற்படும்.(தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்-கி.வீரமணி ..பக்கம் 113-115) என்று தந்தை பெரியார் கூறியிருப்பதை உள்வாங்கிக் கொண்டு இன்றைய பார்ப்பனர்களின் செயல்பாட்டைப் பார்த்தால் எப்படி திருக்குறளை அரவணைத்து அழிக்கப்பார்க்கின்றார்கள் என்பது புரியும்.

திருக்குறள் மீது வெறுப்பு என்பது அவாளின் அடிப்படை.  "தீக்குறளை சென்று ஓதோம் " என்னும் ஆண்டாளின் பாடலிற்கு 'திருக்குறளை ஓதவேண்டாம் " என்று பொய்யுரை சொன்னவர்தானே மூத்த சங்கராச்சாரியார்.மிகப்பெரிய மனது பண்ணி, திருக்குறளின் முதல் 10 குறள்களை மட்டுமானால் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அனுமதித்த்வர்தானே 'பெயில்','ஜெயில்' புகழ் ஜெயந்திரே சங்கராச்சாரி.எனவே அவாளின் வெறுப்பு நாம் அறிந்ததே. ஆனால் திருக்குறள் மீது விருப்பு என்பது திராவிடர்களின் ,தமிழர்களின் அடிப்படை.  அந்த வகையில் நமது மிகப்பெரிய இலக்கியச்சொத்தான திருக்குறளை,அதன் உண்மையான வடிவத்திலேயே நிலைத்திருப்பதற்கு, நீடிப்பதற்கு நாம் உறுதி எடுத்துக்கொள்வோம். திருக்குறள் தின வாழ்த்துகள் அனைவர்க்கும் மீண்டும்.திராவிடம் வெல்லும்...அதனைத் திருக்குறள் இன்னும் 1000 ஆண்டுகள் கழித்தும் சொல்லும்..

நன்றி : உண்மை இதழ் ஜனவரி 16-31



 


Friday 15 January 2021

வள்ளுவரே ! உன்னோடு உரையாட....வா.நேரு

   


வள்ளுவரே ! உனது நாளில்

உனக்கு என் வணக்கம்!                       

உன்னோடு உரையாட

இந்த நாளில் எனக்கு விருப்பம்..


உலகம் பழித்ததை

ஒழிக்காத

கார்பரேட் சாமியார்கள்

நீளமான தாடியோடு

மழித்தல் வேண்டாம்

எனும் உனது 

அறிவுரையைப் 

பின்பற்றுகிறார்கள்....


'கூத்தாட்டு அவைக்குழத்து

அற்றாய்'

கொரானாவில் 

மடிந்து போயினர் மக்கள்..

'அல்லவை செய்து ஒழுகும்'

அரசால் 

நடந்து நடந்து 

மடிந்து போயினர் 

புலம் பெயர் தொழிலாளிகள்..


'உழுவார் உலகத்தார்க்கு

ஆணி ' என்றாய்

'உழுதுண்டு வாழ்வாரெல்லாம்'

ஓர் அணியாய் நிற்கின்றார்

கொட்டும் பனியில்

மாதக்கணக்காய்

தில்லி முகப்பில்...

'தீவினையார் அஞ்சார்'

திரும்பிப் பார்க்க மறுக்கிறார்.


எதிலும் உன் அறிவுரையை

ஏற்காத ஒரு கூட்டம்

எங்களுக்கு உரித்தானவர் 

வள்ளுவர் என உன்னை உரிமை

கொண்டாடப்பார்க்கிறது..


உனது சிலைக்கு

காவிக்கலர் பூசுகிறது...

உனது சிலைக்கு

விபூதிப்பட்டை அடிக்கிறது...

அதிகாரம் இருக்கும் திமிரில்

'கொலை மேற்கொண் டாரின் 

கொடிதாய்' ஆட்டம் போடுகிறது...

'காலம் பார்த்து

உள்வேர்த்து' காத்திருக்கிறோம் நாங்கள்..


நீ எழுதிய திருக்குறளுக்கு

பொருந்தா உரை

பலவற்றை வலிந்து

எழுதுகிறார் சிலர்....

நாகமென விசம் கக்கும் 

சாமிகளுக்கு 

விருது அளித்து

உன்னை நிந்தனை 

செய்கிறது மய்ய அரசு..


ஒரு குலத்துக்கு ஒரு நீதி

சொல்லும் மனு(அ) நீதியும்

நீ எழுதிய குறளும் ஒன்றாம்

அதனைத் தடைசெய்தால்

குறளையும் தடை 

செய்தல் வேண்டுமாம்..

தமிழ் வேடம் போட்டு 

நரி ஒன்று நாளிதழில்

இடம் கொடுக்கிறது எழுத...


'கண் 'என்றாய் கல்வியை...

கற்றால்தான் உனக்கு 

இருப்பது கண்கள்..

இல்லையெனில் 

வெறும் புண்கள் என்றாய்.

கற்பவை கற்கச்சொன்னாய்

கசடறக் கற்கச்சொன்னாய்

'கேடில் விழுச்செல்வம்

கல்வி 'என்றாய் வள்ளுவ.


அய்யகோ! சூத்திரனா 

வில்வித்தை கற்றான் என

ஏகலைவன் கட்டைவிரலை

காவு வாங்கிய

கயவர் கூட்டம்

நாங்கள் படிப்பதைப் 

பல நூற்றாண்டாய்

தடை செய்த கூட்டம்

இரண்டும் ஒன்று என

இறுமாப்பாய் பேசுகிறது..


ஆரியக் கருத்துகளை

அடியோடு எடுத்து எறி

என்பதையே

இரண்டு இரண்டு வரியாய்

அழகிய உவமைகள் ததும்ப

வாழ்வியலாய் எடுத்துச்

சொன்னாய் நீ! 


குஜராத்தில் பிறந்த

உத்தமராம் காந்திக்கு

இருசியாவில் பிறந்த

டால்ஸ்டாய் உணர்த்திட்ட...

இன்னா செய்தார்க்கும்

இனியவை செய்யச்சொல்லும்...

உன்னதக் கருத்துகளை

உரைத்துச்சென்றாய் நீ !


மதத்தால் பிரிந்தவர்களை

இனத்தால் பிரிந்தவர்களை

நாட்டால் பிரிந்தவர்களை

மொழியால் பிரிந்தவர்களை

உன் கருத்தின் 

ஈர்ப்பால்

இணைக்கின்றாய் !

தமிழ் பேசும் எங்களை

தமிழ்நாட்டார் எங்களை

தலை நிமிர்ந்து 

நிற்கச்செய்கிறாய் !


உன்னை அறிந்ததால்

மேலும் மனிதர்களானோம்

நாங்கள்...

உலகப்பொதுமறை தந்த

உன்னை 

ஒரு மதக்கூண்டுக்குள்

அடைக்கப்பார்க்கிறார் சிலர்...


உனது நாளில் 

சூளுரைக்கிறோம் நாங்கள்!

'மனத்தது மாசாக'

வஞ்சகம் செய்யும்

பொய்மைகளைத் தோலுரிப்போம்!

இன்னும் இரண்டு ஆயிரம்

ஆண்டுகள் ஆனாலும்

அழியாத நீ எழுதிய

குறளின்  பெருமைகளை

உள்ளது உள்ளபடி

உலகிற்குக் கொண்டு சேர்ப்போம்..


                         வா.நேரு, 15.01.2021










 








Sunday 10 January 2021

நூல் மதிப்புரை .....பெண்ணும் ஆணும் ஒண்ணு ...ஓவியா

 

வல்லினச்சிறகுகள் 2021 ஜனவரி இதழ் மிகச்சிறப்பாக வெளிவந்திருக்கிறது. வண்ண வண்ணப்புகைப்படங்கள், அமெரிக்காவில் வசிக்கும் பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் மருத்துவர் அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களின் இணையர் மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்களின் விரிவான பேட்டி,நான் எழுதிய நூல் அறிமுகம்அமெரிக்கப் பெண் கவிஞர் பற்றி புதுக்கோட்டைக் கவிஞர் மு.கீதா அவர்களின் கட்டுரை,கவிதைகள்,நேர்முகம்,கட்டுரைகள் எனப் பன்முகம் கொண்ட பெண் ஆளுமைகளின் பங்களிப்போடு வெளிவந்திருக்கும் இதழை முழுமையாக வாசிக்க இந்தச்சுட்டியை சுட்டுக.

https://tinyurl.com/yy6v9vou


சங்கப்பலகை

         நூல் மதிப்புரை .....பெண்ணும் ஆணும் ஒண்ணு  ...ஓவியா

                     முனைவர் வா.நேரு

நூல்  : பெண்ணும் ஆணும் ஒண்ணு

நூல் ஆசிரியர் : ஓவியா

வெளியீடு : நிகர் மொழி பதிப்பகம் சென்னை-73 பேச:8428477477

மொத்த பக்கங்கள் : 152 விலை ரூ 110

பெண்ணிய சிந்தனையாளர்,பெரியாரிய செயல்பாட்டாளர் ஓவியா அவர்களின் 31 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.இந்தக் கட்டுரைகள் ‘தமிழ் இந்து ‘நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்தவை.” இந்தக் கட்டுரைகள் ஒரு பெண்ணின் பிறப்பில் இருந்து முதுமைவரை அவளுடைய வாழ்க்கை இந்த சமூகத்தால் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அதனுடைய போலித்தனம் ,சூழ்ச்சி,அறியாமை இவற்றை இந்த நாட்டின் வெகுமக்கள் திரளுக்கு அவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப்பார்க்கும் வண்ணம் சொல்லவேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் எழுதப்பட்டவை “ என்று என்னுரையில் ஓவியா குறிப்பிடுகிறார்.உண்மைதான்.

‘வல்லினச்சிறகுகள்’ என்னும் இந்த இதழில் உலகம் முழுவதும் இருக்கிற தமிழ்ப்பெண்கள் ஆசிரியர் குழுவில், இதழின் பங்களிப்பில், வாசிப்பில் இருக்கிறார்கள். பெரும்பாலோர் தமிழ் நாட்டில் பிறந்து,வளர்ந்து வெளி நாட்டிற்குச்சென்று வாழ்பவர்கள். அவர்களுக்கு மேல் நாடுகளில் இருக்கும்,மேல் நாட்டு பெண்களின் வாழ்க்கைக்கும் ,தமிழகத்தில் இருக்கும் பெண்களின் வாழ்க்கைக்குமான வேறுபாடு மிக எளிதாகப்புரியும். அம்மா டாக்டர்.சரோஜா இளங்கோவன் போன்றவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருப்பவர்கள்.பொதுத்தொண்டினை தனது இணையர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களோடு இணைந்து செய்யக்கூடியவர்கள்.அப்படிப்பட்ட, வல்லினச்சிறகுகளில் இருக்கும் பெண் ஆளுமைகளின் தொடர் கருத்து உரையாடலுக்கு அடிப்படையாக இந்த நூல் அமையும் என்ற நோக்கில் இந்த ‘பெண்ணும் ஆணும் ஒண்ணு’ என்னும் புத்தகத்தை அறிமுகப்படுத்த நினைத்தேன். வாய்ப்பு உள்ளவர்கள் இந்த நூலைப் படித்து தங்கள் கருத்துகளைப் பதிவிட வேண்டுகிறேன்.

மொத்தம் 31 கட்டுரைகள். அனைத்துமே ஆழ்ந்த பெண்ணியப்புரிதல் நோக்கில் எழுதப்பட்டவை.சமூக ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்காகப் பாடுபட்ட தந்தை பெரியார்,அண்ணல் அம்பேத்கர்,தோழர் காரல்மார்க்ஸ்,ஏங்கல்ஸ் ஆகியோரை நினைவுபடுத்தியே முதல்கட்டுரை தொடங்குகிறது.ஏற்றத்தாழ்வுகள் வேண்டும் என்று வாதிட்ட நீட்சே,ஹிட்லர் போன்றவர்களையும் இக்கட்டுரை நினைவுபடுத்துகிறது. நாம் எல்லாம் பெண்ணும் ஆணும் ஒண்ணு என்று சொல்லும்போது இல்லை,ஆண்களுக்காகவே பெண்கள் படைக்கப்பட்டவர்கள் என்று இன்றும் மதவாதிகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பெண்களை இழிவுபடுத்தும் மனு நீதி போன்ற நூல்களைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.இந்த நிலையில் “’சம்மாக ‘இருப்பதற்கு ‘ஒரே மாதிரியாக’ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நாம் வேறுபாடுகள் உள்ளவர்களாக ,வேறுபட்டவர்களாக இருக்கலாம்.ஆனால் சமமானவார்கள் .” என்பதனைச்சுட்டும் ஓவியா நூல் முழுக்க பெண் எப்படியெல்லாம் சமம் இல்லாமல் நட்த்தப்படுகிறாள் என்பதனை  விவரிக்கின்றார்.

“பாலின சமத்துவ்த்தின் முதல் சவால் அதன்மீதான பொது மனிதரின் நம்பிக்கையின்மை.”ஆணுக்கு எப்படி பெண் சம்மாக முடியும் ? என்ற கேள்வி தவிர்க்கவே இயலாமல் அனைவர் மனதிலும் படிந்து கிடக்கிறது”. என்பதனைச்சுட்டும் ஓவியா “கல்வி,அறிவியல்,அறிவு இவற்றியெல்லாம் மீறி பெண்ணின் பிறப்பு என்பது அந்தப்பெற்றோருக்கு ஆறுதல் சொல்லவேண்டிய ஒரு சம்பவமாக ஏன் இன்னும் தொடர்கிறது என்கின்ற கேள்வியை ஒவ்வொருவரும் கேட்டுப்பார்க்கவேண்டும் “. என்று கேள்வி எழுப்பச்சொல்கிறார். கள்ளிப்பால் கொடுமை இன்னும் நடந்துகொண்டுதானே இருக்கிறது பல வடிவங்களில்.”கறுத்த மாப்பிள்ளையும் சிவத்த பொண்ணைத் தேடும் நாடு இது “ என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர் “நிறப்பாகுபாட்டின் கொடுமையைப் பேசாமல் பெண் விடுதலையைப் பேச முடியாது “ என்பதனை அடித்துச்சொல்கிறார்.”எல்லோருடைய உடலும் அழகானததுதான் என்பதைக் குழந்தைகளுக்குப் பயிற்றுவித்த “டோட்டாசான் “ புத்தகத்தின் தலைமையாசிரியரை சுட்டிக்காட்டி  நீச்சல் உடை உள்ளிட்ட ஆண்,பெண் உடை வேறுபாடுகளைச்சுட்டுகிறார்.அது மட்டுமல்ல ஆடைகள் தேர்வில் நமது மனதுக்குள் இருப்பதை வெளிப்படுத்தி “ஆசை கொள்ள வைக்கும் சிறுமியர்க்கான உடைகள்தான் அவர்களை ஒடுக்கும் முதல் ஆயுதம் என்பதை உணர்த்துவது உண்மையிலேயே சவாலான பணிதான்” என்று சொல்கின்றார்.இக்கட்டுரையைப் படித்து முடிக்கும்போது நமது ஆழ்மனது அழுக்குகளை நாமே அறிந்து துயரப்படலாம்.

தமிழ் எழுத்துலகம் பெண் குழந்தைகளுக்கென தனித்துக்கண்ட முதல் பாட்டான புரட்சிக்கவிஞரின் “ஆராரோ ஆரிரோ “ பற்றி விவரிப்பத்தைப்போன்ற இலக்கிய வரலாறு இந்த நூலில் இருக்கிறது.பல திரைப்படங்கள்,சிறுகதைகளோடு ஒப்பிட்டு பெண்களின் துன்பத்திற்கான காரணங்களை மனதில் பதிய வைக்கிறது.”உன்னை கட்டிக்கொள்ள ஓர் ஆண் வராவிட்டால் உன் கதி என்ன? என்ற கேள்வி அவள் மனதை நிரந்தர ஊனமாக்குகிறது.அவள் காலை பாவடை தடுக்கிறது .மனதை தாயின் வார்த்தைகளே தடுக்கின்றன” என்று தாயே மகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை இந்த நூல் பேசுகிறது.

கேலியோடு இணைந்த விவரிப்பும் இந்த நூலில் வெளிப்படுகிறது.தாய் வீட்டிலிருக்கும் காலம் ,பெண்ணுக்கு என்ன காலம்? காத்திருப்பு காலம்? எதற்காக்க் காத்திருப்பு ? ஓவியாவின் மொழியிலேயே பார்ப்போம்.”தன்னைக் காப்பாற்ற ,தான் பணிவிடை செய்ய வேண்டிய அந்த இராஜகுமாரனின் குதிரைக் குளம்பொலி சத்த்துக்காகக் காத்திருக்கும் காலமே அவர்கள் தாய் வீட்டிலிருக்கும் காலமாக இருக்கிறது.” வரலாற்று அடிப்படையில் ஆண் கடவுள்கள் எப்படி பெண் கடவுள்களின் இட்த்தைக் கைப்பற்றினார்கள்? என்பதையும் பெண்கள் ஏன் கடவுள் மறுப்பைக் கைக்கொள்ள வேண்டும் என்பதற்கு “ வாழ்க்கை முழுவதும் கடவுள் மீதான ஆராதனை என்பது உண்மையில் சமுதாயத்தில் ஆண் தலைமை மீதான ஆராதனையாகவே தொடர்கிறது “ என்னும் உண்மையை எடுத்துப்போட்டு உடைக்கிறார் நூல் ஆசிரியர்.

பாட்த்திட்ட மாற்றங்கள் ஏன் தேவை? எப்படிப்பட்ட மாற்றங்கள் தேவை என்பதனை,பள்ளிகளில் கழிப்பறைகளின் நிலைமை -அதனால் பெண் குழந்தைகள் படும் பாடு,பெண்ணின் மூளைக்கு போடப்படும் முதல் விலங்காய் அமையும் வீட்டு வேலைகள்,பெண் குழந்தைகள் சாமியாடுவது…,மாதவிடாய்-அதனால் ஏற்படும் அக-புற வேதனைகள் பற்றிக்கூறி “எந்த ஒரு காரணத்தை வைத்தும் என்னைப் புனிதமற்றவள்,தீட்டானவள் என்று சொல்கின்ற உரிமை இந்த சமுதாயத்துக்குக் கிடையாது என்று பெண் நினைக்கவேண்டும்.அந்தத் தன்மானம்தான் பெண் விடுதலைக்கான முன் நிபந்தனை “ என்று தெளிவாக்க் குறிப்பிடுகின்றார்.

திருமணத்துக்கு முன்பு பாலுறவு அல்ல பாலுணர்வே தவறு என்று கருதுகிற சமுதாயத்தில் வாழ்கிறோம் என்னும் எதார்த்த நிலைமையை சுட்டிக்காட்டி பாலியல் அறிவு பற்றி,குழந்தைத் திருமணங்கள் இன்னும் நின்றுவிடவில்லை என்பதைப் பற்றி,காதல் பற்றி,பெண்களுக்கு சம வாய்ப்பும் ,சம ஊதியமும் பற்றிப் பேசும் ஓவியா எழுப்பும் கேள்விகள்,அதற்கான பதில்களை எதிர் நோக்கிக் காத்திருக்கின்றன.

திருமணம் என்னும் விசித்திரமான சந்தையை விளக்கமாகவே விவரித்து கேள்வி எழுப்புகிறார்.வாழ்நாள் முழுக்க இறுக்கும் சங்கிலியாய் வரதட்சணை இருப்பதைக் குறிப்பிட்டு என்ன தீர்வு என்பதனை நம்மைச்சிந்திக்க சொல்கிறார்.புகுந்த வீட்டின் மீதான வெறுப்பு,தனிக்குடித்தனம்,பெரியார் முன்வைத்த ‘வீட்டுக்கொரு அடுப்படி என்பதை ஒழிக்கவேண்டும் ‘என்னும் தீர்வு,இணையர்களைப் பாடாய்ப்படுத்தும் ‘சந்தேக நோய்’,திருமண உறவுக்குள் பாலுறவு நிர்ப்பந்தம்,பெண்களை முன்னேற விடாமல் தடுக்கும் தடைக்குரல்கள்,பெண்களுக்கு இன்னும் கிடைக்காத பொருளாதாரச்சுதந்திரம்,மணமுறிவு,விதவைத்தன்மை,மறுமணம்,எனப்பேசும் இந்த நூல் முடிவாக ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்று தீர்வுகளை முன்வைக்கிறது.

இந்த நூலின் 31-வது கட்டுரை ‘தமிழ் இந்து’வில் வராமல் இணைத்தது என்று நினைக்கிறேன்.தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை முன்வைத்து தனது கருத்துக்களை ஓவியா தொகுத்துத் தருகின்றார்.

நூலின் பதிப்புரையை நூலைப் பதிப்பித்த நிகர்மொழி  பதிப்பகத்தின் பிரபாகரன் அழகர்சாமி,ஜோன்சன் ஜெய்சிங் கொடுத்துள்ளனர்.முதல் வெளியீடாக இந்த நூலைக்கொண்டு வந்துள்ள அவர்கள் “சமத்துவ சிந்தனையையும் அறிவியல் மனப்பான்மையையும் வளர்க்கக்கூடிய வெளியீடுகளை வெகுமக்களிடம் பரவலாக்க் கொண்டு சேர்க்கவேண்டும் “ என்பதே தமது பதிப்பகத்தின் முதன்மையான நோக்கம் எனக்குறிப்பிட்டுள்ளனர்.வளர நமது வாழ்த்துகள்.

நூலாசிரியர் அறிமுகம் சிறப்பாக உள்ளது.’வரலாற்றின் புது வரவு’ எனப்பேராசிரியர் அய்யா சுப.வீரபாண்டியன் அவர்கள் நட்புரை கொடுத்துள்ளார்.” இந்நூலை முழுமையாகப் படித்து முடித்தபோது ,பல செய்திகளைப் புதிதாய் அறிந்து கொண்ட மாணவனைப் போல மகிழ்ச்சியும் ஊக்கமும் பெற்றேன்,நன்றி ஓவியா “என்று குறிப்பிட்டுள்ளார்.அணிந்துரைகளை மூத்த பத்திரிக்கையாளர் இரா.ஜவஹர்,சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் சரசுவதி ,பத்திரிக்கையாளர் பிருந்தா சீனிவாசன் ஆகியோர் மிகச்சிறப்பாக கொடுத்துள்ளனர்.

“தன் கருத்தோடு உடன்படுகிறவர்களை மட்டுமல்ல,மாற்றுக்கருத்து சொல்கிறவர்களையும் ஒருங்கிணைத்துப்பயணப்பட நினைக்கிற மிகச்சிலரில் ஓவியாவும் ஒருவர்…’’பெண்ணியம் ‘என்பதே மிகச்சிக்கலானதாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் இந்த நாளில் பெண்களைப் பிணைத்திருக்கும் அடிமைச்சங்கிலிகளை உடைத்தெறிவது சவால் நிறைந்தது.அதிலும் பெண்கள் தங்களுக்குத் தாங்களே விரும்பிப் பூட்டிக்கொண்டிருக்கும் விலங்குகள் ஏராளம். அவை அடிமைத்தளைகள் என்பதைப் புரியவைக்கப் பொறுமையும் அனுபவமும் அவசியம்.இவை இரண்டும் கைவரப்பெற்றிருக்கிறார் ஓவியா “ என்று பிருந்தா சீனிவாசன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.உண்மைதான்.தன்னுடைய வாழ்க்கை முழுவதும் சந்தித்த பெண்களின் பிரச்சனைகளைப் பேசுவது மட்டுமல்லாது,அதற்கான தீர்வுகளை பெண்ணிய நோக்கில்,முழுமையான பெரியாரியல் புரிதலோடு முன்வைத்திருப்பது இந்த நூலின் சிறப்பாகும்.பெண்கள் மட்டுமல்ல,ஆண்களும் படிக்க வேண்டிய நூல்.உள்ளடக்கக் கருத்துக்களைப் பற்றி  பெரிய அளவில் விவாதிக்கப்படவேண்டிய நூல்.


நன்றி : வல்லினச்சிறகுகள்  ...ஜனவரி 2021



 


 


 


 


 


 


Saturday 9 January 2021

அண்மையில் படித்த புத்தகம் : கடுகு வாங்கி வந்தவள் (ஒரு அனுபவக் கதை)...பி.வி. பாரதி

 அண்மையில் படித்த புத்தகம் : கடுகு வாங்கி வந்தவள் (ஒரு அனுபவக் கதை)

நூல் ஆசிரியர் கன்னடத்தில்  :  பி.வி. பாரதி

மொழி பெயர்ப்பு தமிழில்     :  கே.நல்லதம்பி

வெளியீடு                   :  நியூ செஞ்சுரி புக்  ஹவுஸ்(பி) லிமிடேட்,சென்னை-98

முதல் பதிப்பு                : ஜீலை 2015,மொத்த பக்கங்கள் 121, விலை ரு 100

கற்பனைகளை விட உண்மை நிகழ்வுகள் எப்போதும் உற்சாகம் தரும். அதுவும் மரணம் தனக்கு வரப்போகிறது என்று நினைத்து பயந்த நேரத்தில்,சரியான மருத்துவ சிகிச்சையின் மூலம் மரணத்தை வென்ற கதை என்றால் ,எவருக்கும் படிக்கும் ஆசை வரும்.அதுவும் இந்தக் கொரனா நேரம்,மனிதர்கள் பலர் பயந்து போய் இருக்கும் நேரம்.நிலையாமையை ஒவ்வொருவரும் உணரும் நேரம். ஆனால் மனித குல வரலாற்றை அறிந்தவர்கள் இதனைப்போல ஆயிரக்கணக்கான கொள்ளை நோய்களைக் கண்டு,கடந்துதான் மனித இனம் இன்று நிலைத்து இருக்கிறது,நாளையும் நிலைத்து நிற்கும் என்பதனை அறிவார்கள்.

மொத்தம் 121 பக்கங்கள் மட்டுமே உள்ள இந்த நூல் ஒரு தன் அனுபவப் பகிர்வு நூல். உண்மையை அப்படியே சொல்லிச்செல்வதால் வலிமையான நூலாக இந்த நூல் விளங்குகிறது.

சமர்ப்பணம் என்று "புற்று நோய் போராளிகளுக்கும், அவர்களின் போராட்டங்களுக்கும்,உறுதுணையான டாக்டர்களுக்கும்,எல்லா வகையான மருத்துவ உதவியாளர்களுக்கும் " என்று குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்தவுடனேயே இது ஒரு வேறுபட்ட நூல் எனத்தோன்றியது.உண்மைதான்,மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அதனை எதிர்த்து சிகிச்சையின் மூலம் வெற்றி பெற்ற பி.வி.பாரதியே இந்த நூலின் ஆசிரியர். ஆதலால் தனது அனுபவத்தை, தனது வேதனையை, தன்னைச்சுற்றி இருந்தவர்கள் செலுத்திய அன்பை,மருண்டு ஓடியவர்களின் பயத்தை,ஆறுதலாய் தாய் மடியாய் ஆதரித்த தோழி ஜோதியை எனத் தனக்கு ஏற்பட்ட 2 வருட கடுமையான,கொடுமையான அனுபவத்தை விவரிக்கும் நூலே இந்த நூல்,


" வாழ்வின் படிப்பினைகளைப் பெற பலரும் பல இடங்களைச்சுட்டுவர். சிறைச்சாலையை அனுபவமளிக்கும் ஆசான் என்பார்கள்.ஆனால் எல்லாவற்றையும் விட வாழ்வைச்செதுக்குமிடம் மருத்துவமனைகள்தாம்....வாழ்வை எழுதலாம். ஆனால் மரணத்தை எழுதுதல்  இயலாது. 'கடுகு வாங்கி வந்தவள்' மரண வாயிலின் நுனியை உணர்த்தும் சாகசம்" எனத் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகப்பேராசிரியர் இரா.காமராசு குறிப்பிடுகிறார்.மருத்துவமனை கொடுக்கும் வாழ்வின் படிப்பினைகள் பல.தனக்கு மட்டுமே ஒரு நோய் வந்ததாகக் கருதிக்கொண்டு மருத்துவமனையில் சேர்ந்தபின்பு, தன்னைப்போன்ற பலரைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வை பாரதி அழகாக சித்தரித்துள்ளார். தனக்கு வந்த நோயை மிக இலகுவாக எடுத்துக்கொண்டு, மகிழ்ச்சியாகக் கடந்து செல்லும் மனிதர்களை முதன்முதலாகப் பார்த்தபொழுது ஏற்பட்ட அதிர்ச்சியை பதிவு செய்திருக்கிறார்.


தனித்தனி அத்தியாயங்கள் இல்லை. நிறைய வர்ணனைகள் எல்லாம் இந்த நூலில் இல்லை. இயல்பான ஆனால் மனதில் நம்பிக்கை ஊட்டும் மனப்பான்மையோடு இரண்டாவது கட்டத்தில் இருந்த புற்று நோயை வென்ற கதை. புற்று நோயைக் குணப்படுத்துவதற்காக தான்  8 முறை எடுத்துக்கொண்ட கிமோ சிகிச்சை அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வலிகள்,வேதனை போன்றவற்றை நகைச்சுவையோடும் எதார்த்தத்தோடும் விவரித்திருக்கின்றார்.தனது கணவர்,தனது அப்பா,அம்மா,மகன் என அனைவரும் அன்போடும் அதே நேரத்தில் மாற்றங்களோடும் தன்னைக் கவனித்துக்கொண்டதை நன்றாகவே விவரித்திருக்கின்றார்.நோயால் பாதிக்கப்பட்ட நேரத்திலும் தான் சினிமா,டிராமா எனக் கலந்து கொண்டதை எழுதியுள்ளார்.


நோய் வாய்ப்பட்டதற்காக ஒரு சமையல்கார அம்மாவை பணியில் அமர்த்த,சமைக்கவே பழகாத அந்த அம்மாவின் சமையலைப் பற்றிய விவரிப்பும், தனது கணவர் அதற்குப் பின்பு பெண்கள் மீதிருந்த பொதுவான அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கும் பகுதி நல்ல நகைச்சுவையோடு அமைந்த பகுதி.தான் ஒரு ஆரியர் வீட்டுப்பெண் என்பதனைக் குறிப்பிடும் அவர் " இது போலான நிகழ்வுகள் நடக்கும் போதெல்லாம், மேல்பார்வைக்கு சிரிப்பாக தெரிந்தாலும் ,உள்ளுக்குள்ளே 'நான் ஹிந்து மதத்தவளாக இல்லாமலிருந்தால் எப்படி இருக்கும்? என்னும் விஷயம் வருத்தப்படச்செய்தது.நாம் மனிதர்களை,சாதி,மத அடிப்படையில் அளக்கிறோமே,அப்போது அவர்களுக்கு உள்ளுக்குள்ளே எவ்வளவு வலிக்கும் என்று யோசித்தபோது கவிஞர் நிஸார் அகமத் அவர்களின் 'உங்களோடு இருந்தும் உங்களைப் போலாகாமல் ; என்ற கவிதை நினைவுக்கு வந்து ஏனோ மனது கலங்கியது "(பக்கம் 84)  என்றும் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.


தான் சந்தித்த சில கொடுரமான மனிதர்களைப் பற்றியும் பி.வி.பாரதி எழுதியுள்ளார், " உண்மையாகவும் மனிதருக்குள் இத்தனை கொடூரம் இருக்கும் என்று நான் அறிந்து கொண்ட தருணம் அது. "கேன்சர் வந்தவர்கள் எல்லாம் இறந்துவிடுவார்கள் என்று நினைத்தால், நீங்கள் இந்த நோயைப் பற்றி இன்னும் அப்டேட் ஆகவில்லை.இப்போது விஞ்ஞானம் மிகவும் முன்னேறி விட்டது " என்றேன் " என்று குறிப்பிடுவதைப் போல ,பலர் வேண்டுமென்றே சுட்டிக் காட்டி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலப் பேசியதைப் பதிவு செய்கிறார்.பின்பு ஒரு வேண்டுகோள் வைக்கிறார். " ஒரு கேன்சர் நோயாளிக்குத் தன் நோயைப் பற்றிய எல்லா விவரங்களும் தெரிந்திருப்பதால்,எங்கயோ பார்த்த,கேட்ட அர்த்தமற்ற பேச்சுகளைச்சொல்லியே ஆகவேண்டும் என்கின்ற பிடிவாதம் வேண்டாம்.நீங்கள் அங்கே இங்கே கேட்டதை எல்லாம் நாங்கள் சுயமாக அனுபவித்து முடித்திருப்போம்.அதனால் எங்களுக்கு உங்களை விடவும் அதிகமாகவே தெரியும்.ஏன் என்றால் இது உங்களுக்கு வெட்டிக்கதை.எங்களுக்கோ வாழ்வு-சாவின் பிரச்சனை.எங்களை எங்கள் தைரியத்துடன் வாழவிடுங்கள்.தயவுசெய்து எங்களை எச்சரிக்கையுடன் கையாளுங்கள்.நாங்கள் மென்மையானவர்கள் "என்று சொல்லி முடிக்கின்றார். மொழி பெயர்ப்பினைச்செய்த திரு.கே.நல்லதம்பி அவர்களைப் பாராட்டவேண்டும்.புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்த நான், முடித்த பின்புதான் புத்தகத்தை வைத்தேன். அந்த அளவிற்கு நீரோட்டமாக ஓடிய நடை.  


விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்த நான் இரண்டு ஆளுமைகள் இந்த நூல் பற்றிய எழுதிய மதிப்புரையைப் படித்தேன்.ஆதலால் சுருக்கமாக எழுதிவிட்டு அவர்களின் கட்டுரையையும் இணைத்துள்ளேன்.விருப்பமுள்ளவர்கள் அதனையும் படிக்கலாம்.

http://writerpaavannan.blogspot.com/2016/11/blog-post.html


https://www.hindutamil.in/news/supplements/penn-indru/55848-.html

Friday 8 January 2021

புற நானூறு தமிழரின் பேரிலக்கியம்- முனைவர் நா.நளினிதேவி

 

வண்ணத்தில் ,இதழிலேயே படித்திட பக்கம் 28 முதல் 32 வரை

இணைப்பு :https://tinyurl.com/yy6m8ryn

சங்கப்பலகை

               புற நானூறு தமிழரின் பேரிலக்கியம்.

                        நூல் மதிப்புரை

                        முனைவர் வா.நேரு



                            ஆராய்ச்சிக்கும் எழுத்திற்கும் ஓய்வு வயது என ஒன்று உண்டா? இல்லை என்பதனை தன் எழுத்துக்களால் ,ஆராய்ச்சிகளால் மெய்ப்பிக்கும் முனைவர். நா,நளினிதேவி நம்மை உற்சாகப்படுத்துகிறார் ஓய்வு பெற்ற பேராசிரியரான நா.நளினிதேவி தனது .75 வயதில். 20களில் 30களில் இருக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல 70,80 களில் இருக்கும் பெண்களையும் எழுதுவதற்கு வழிகாட்டுகிறார்.அவரால் எழுதப்பட்ட '  புற நானூறு-தமிழரின் பேரிலக்கியம்' என்னும் இந்த நூல் ஓர் ஆய்வு நூலாகும். புற நானூற்றை ஆழமாக ஒவ்வொரு பாடலையும்  படித்து, பாடலின் கருத்தினை உள்வாங்கி, உள்வாங்கிய கருத்தினை இன்றைய நடைமுறையோடு ஒப்பிட்டு புற நானூறு எப்படி தமிழரின் பேரிலக்கியம் என்பதனை நிறுவுகின்ற ஒரு நூலாக இந்த நூல் இருக்கிறது.திருக்குறளில் படித்து ஆராய்ந்து அதன் ஒவ்வொரு குறளுக்கும் பொருள் கூறும் தமிழ் அறிஞர்களை நான் அறிந்திருக்கிறேன்,பழகியிருக்கிறேன். 


நூல்                 : புற நானூறு -தமிழரின் பேரிலக்கியம் - 

நூலின் ஆசிரியர்     : முனைவர் நா.நளினிதேவி

வெளியீடு           : புதுப்புனல்,சென்னை--5 பேச : 9884427997

மொத்த பக்கங்கள்    : 342  விலை ரூ 360 /-


ஆனால் புற நானூறு முழுவதையும் ஆய்ந்து கூறும் ஒருவரை நேரிடையாக அறிவது இதுவே முதல்முறையாகும். தனது ந்ன்றியுரையில் 'ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் என்னுள்ளத்தே நடமாடி என்னை உயிர்ப்பிக்கும் வகையில் உரையாடி உறவாடும் பழந்தமிழ்ப் புலவர்கட்கு என்னென்று நன்றி நவில்வது ' என்று கூறியிருக்கிறார். உண்மைதான் இவர் உள்ளத்தே நடமாடி,உரையாடிய புலவர்களின் புலமையை,வலிமையை இன்றைய நாளுக்கு ஏற்ற வகையில் எடுத்து எழுதியிருப்பதே இந்த நூலின் சிறப்பு.


பதிப்புரையில் 'புதுப்புனல்' பதிப்பாசிரியர் இர.இரவிச்சந்திரன் 'இந்நூலை வாசிப்பதன்மூலம் பல்வேறு ஆய்வு மாணவர்கள் பயன்பெறுவர் என்பது நிச்சயம் " எனக்குறிப்பிடுகிறார்.உண்மைதான்." நான் இந்துவல்ல.நான் தமிழன் என்ற உணர்வு ஏற்பட்ட காலத்தில் கம்பராமாயணம் தமிழர்களின் பேரிலக்கியமாக இருக்க முடியாது.அப்படியானால் தமிழரின் தமிழருக்கான பேரிலக்கியம் என்று எதைச்சொல்வது என்ற தேடலின் விளைவாகவே புறநானூறுதான் தமிழரின் பேரிலக்கியம் என்ற கருத்து என்னுள் எழுந்தது " என்று குறிப்பிடும் கோவைஞானி 'அறத்தின் உய்ர்துடிப்பு ! 'என்னும் தலைப்பில் அணிந்துரையை  கொடுத்துள்ளார்." புற நானூற்றை அங்குல அங்குலமாய் ஆராய்ந்து ,அதன் சிறப்பியல்புகளை இந்த ஆய்வு நூலில் ஆசை ஆசையாகக் கொண்டாடியிருக்கிறார் நளினிதேவி " என்று 'இலக்கியப்பெட்டகம்' என்னும் தலைப்பில் முன்னுரையை ஆருர் தமிழ் நாடன் கொடுத்திருக்கிறார்.அடுத்து என்னுரை என்னும் தலைப்பில் நூலின் ஆசிரியர் நா.நளினிதேவி தனது கருத்துக்களைக் கொடுத்துள்ளார்.


அடுத்ததாக உள்ளடக்கத்தில் 8 தலைப்புகளில் இயல்கள் உள்ளன. புற நானூறே தமிழின் பேரிலக்கியம்','அரசியல் இலக்கியம்',போர் இலக்கியம்'.'நட்பிலக்கியம்','மகளிர் இலக்கியம்',வாழ்வியல் சமுதாய இலக்கியம்,'படைப்பிலக்கியம்','புதுமை இலக்கியம் ' எனும் தலைப்புகளில் உள்ள ஒவ்வொரு இயலும் விரிவாக விரித்துரைக்கத்தக்கன.இவை பக்கம் 24 முதல் பக்கம் 236 வரை இடம் பெற்றுள்ளன.புற நானூற்றுப் பாடல்கள் அடிப்படையில் நூல் ஆசிரியரே படைத்திட்ட கதைகளும் நாடகங்களும் 237 பக்கம் முதல் 276 வரை. இந்தக் கதைகளும் நாடகங்களும் வாசிக்கும்போதே நமக்குக் களிப்பூட்டுகின்றன, புன்னகை வரவைக்கின்றன.முழுப்பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல ஓர் எடுத்துக்காட்டு '(பறம்பு மலை) நான் பேசுகிறேன்' என்னும் தலைப்பில் உள்ளதில் ஒரு பகுதி " புலவர்கள் தமக்குள் மன்னன் பாரியை வஞ்சப் புகழ்ச்சியுடன் பாடிக்களிப்பர்..ஒருவர் ,பாரியைப்போல உலகில் வாரி வழங்குவோர் யாருமில்லை என்று வேண்டுமென்றே தொடங்குவார். மற்றொருவர் இவ்வாறுதான் உலகம் முழுக்கச்சொல்கின்றது.ஆனால் பாரியைப் போல மாரியும் இங்கு உள்ளதே என்பார்.இன்னொரு புலவர்,மாரி சிலபோது பெய்யாமல் போவதுண்டு. ஆனால் பாரி ஒரு போதும் இல்லை என்று கூறாமல் வழங்குபவன் என்பதை அறீவீரா எனத்தொடர்வார் இன்னொருவர் ,இது மட்டுமில்லை.மழை பெய்யாமல் வாடி நின்ற முல்லைக்குத் தன் தேரையே தந்தவன் என்பார்.இப்படியே அவர்கள் பாரியைப் புகழ்வதைத் தமது மனதுக்கு நிறைவாகக் கொள்வதை நான் கண்டும் கேட்டும் எனக்குள் சிரித்துச்சிலிர்ப்பேன் " மலை பேசுவதாகச்சொல்லும் இந்தப் பகுதி கற்பனையையும், புற நானாற்றுப்பாடலையும்  கலந்து நூலாசிரியர் கொடுத்திருப்பது.பிற்சேர்க்கை என்று 277 முதல் 336 வரை பல புற நானூற்றுப்பாடல்களுக்கான விளக்கவுரையை நூலாசிரியர் தனக்கே உரித்தான பாணியில் கொடுத்திருக்கிறார். நிறைவாக நூலாசிரியரின் 4 பக்க நிறைவுரையோடு இந்தப்புத்தகம் முடிவு பெறுகிறது.


புற நானூறே தமிழின் பேரிலக்கியம் என்னும் முதல் இயல் நூலாசிரியரின் தனித்துவமான பார்வையைப் புலப்படுத்துகிறது ."சிலப்பதிகாரம், கம்பராமாயணம் காப்பியங்கள் என்று சொல்லப்படுகின்றன. கம்பராமாயணம் என்பது வடமொழி நூலின் தழுவல் நூல். எனவே அதனை தமிழ்க்காப்பியமாக எடுத்துக்கொள்ள முடியாது. முதல் தமிழ்க்காப்பியம் புற நானூறே என்று கூறும் நூலின் ஆசிரியர் " தமிழின் மூல நூல் என்ற முறையிலும் ,வரலாறு என்பது மன்னர்கள் பற்றியது அன்று மக்களைப் பற்றியது என்ற இன்றைய பார்வையிலும் வாழ்வியல் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்குரிய வழிகாட்டுவதே இலக்கியத்தின் பயன் எனும் இக்காலத்தேவையிலும் தமிழ் இலக்கியங்களை மீள்பார்வைக்குட்படுத்திவோமாயின் இத்தகுதிகளை முழுமையாகப் பெற்றுள்ள புற நானூறே  தமிழின் பேரிலக்கியமாகிறது' பக்கம் 28."ஒருவரே பாடியுள்ள பிற பேரிலக்கியம் ஒவ்வொன்றும் ஒரே ஒரு கனியின் சாறு போன்றது என்றால் ,புற நானூறு பல சுவை மிகு கனிகளிலிருந்து பிழிந்தெடுத்த சாறு எனக்கொள்ளலாம் ' எனச்சொல்கின்றார்.வாழ்ந்து மறைந்த வாழும் மக்களின் இன்ப துன்பங்கள் ,இவற்றுக்கான காரணங்கள்,அக,புறச்சிக்கல்கள்,இவற்றோடு வாழ்க்கையின் வெற்றி தோல்விகளையும் அவர்களின் போராட்டங்களையும் முயற்சிகளையும் கூறுவதே மக்கள் இலக்கியம் " பக் 33."புற நானூறு எந்த வகையிலும் மக்கள் துன்பம் தீர்க்கும் வழியாகக் கடவுளைக்காட்டவில்லை. மனிதன் முயன்றால் தம் துன்பங்களுக்கான காரணங்களைக் களைந்து அவற்றிலிருந்து விடுபட முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்கின்றது. நன்னம்பிக்கை ,எந்தக் குறைபாடுகளையும் தீர்க்க வல்லது.மனிதனின் துன்பத்துக்கு மனிதன்தான் காரணம்,மனிதனால் தீர்க்கமுடியும் என்று மனித ஆற்றலை முன்னிறுத்துகின்றது." என்று குறிப்பிடும் நூலாசிரியரின் ஆய்வுத்திறனை நூல் முழுக்கக்  காண முடிகின்றது.


புற நானூறு அரசியல் இலக்கியம் என்னும் தலைப்பில் நூலாசிரியர் புற நானூற்றுக்கால அரசர்கள் பற்றியும் அவர்களைப் பாடிய புலவர்கள் பற்றியும், அன்றைய அரசியல் நிலைமைக்கும் இன்றைய அரசியல் நிலைமைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை வரிசைப்படுத்தியும் வகைப்படுத்தியும் கொடுத்துள்ளார்.' ஆட்சியின் அடிப்படையும் நோக்கமும் மக்கள் நலனே என்று கொண்டதால் மன்னர்களைப் போற்றிப்பாடும் பாடல்கள் பெரும்பான்மையும் மக்கள் சார்புடையவனாக விளங்குகின்றன....இன்றைய உலகில் மலிந்து காணப்படும் அரசியல் சீர்கேடுகளுக்கும் வாழ்வியல் நெருக்கடிகளுக்கும் உரிய ஆற்றல் வாய்ந்த இயற்கை சார்ந்த கற்பனை கலவாத,கடவுள் இடம் பெறாத தீர்வுகள் கூறும் திறம் புற நானூற்றுக்குரிய தனிச்சிறப்பாகும். காப்பியங்கள் அல்லது பேரிலக்கியங்களின் மையக்கூறு அரசர்களும் ஆட்சி பொறுப்புகளுமே என்ற வகையில் புற நானூறு அரசியல் இலக்கியமாகின்றது என நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.இதனைப்போலவே மற்ற இயல்களும் புற நானூறை உணர்ந்து தெளியும் வகையில் அமைத்திருப்பது இந்த நூலின் சிறப்பு.


நிறைவாக நிறைவுரையில் " புற நானூற்றுப்பாடல் அனைத்தும் எட்டு ஒன்பது வகையான கோணங்களில் கூர்ந்து அணுகப்பெற்று அது தமிழரின் பேரிலக்கியம் என்பதற்கான வலுவான சான்றுகளையும் விளக்கங்களையும் இவ்வாய்வு நூல் உள்ளடக்கியுள்ளது. புற நானூறே தமிழின் முதல் மூலப்பேரிலக்கியமாகும் எனும் புதிய கருத்து தமிழுலகில் அறிமுகமாகிப் பரவி நிலைபெற வேண்டும்.

 இதுவே, இந்நூல் ஆய்வின் அளப்பரிய பயன் ஆகும் " என்று நூலாசிரியர் தனது ஆய்வின் நோக்கத்தைக் குறிப்பிடுகின்றார். 'கரும்பு தந்த தீஞ்சாறே ' என்பார் புரட்சிக்கவிஞர் தமிழைப்..புற நானூறு தரும் கரும்புச்சாற்றைப் பிழிந்து நமது கரங்களில் புத்தகமாய் கொடுத்திருக்கிறார் ,,பேரா.நா.நளினிதேவி.அவரது உழைப்பும் ஆய்வும் போற்றத்தக்கது. புற நானூற்றைப் பருக ,இந்த 'புற நானூறு தமிழரின் பேரிலக்கியம் ;என்னும் நூலைப் படித்திடுவீர்.


நன்றி : வல்லினச்சிறகுகள் -நவம்பர் 2020 இதழ்  


Thursday 7 January 2021

ஜனவரி-6-ம் அமெரிக்காவும்...

 ஜனவரி-6-ம் அமெரிக்காவும்...


அமெரிக்க வீதிகளில்

சில விசித்திரமான

நிகழ்வுகள் நிகழ்ந்ததை

உலகம் வேடிக்கை

பார்த்துக்கொண்டிருக்கிறது....


தேர்தலில் நான் தோற்கவில்லை...

மோசடி செய்து வெற்றியென

இன்றைய அதிபர் ட்ரம்ப் 

கீறல் விழுந்த ரிக்கார்டு போல

சொன்னதையே திரும்பத்திரும்ப

சொல்லிக்கொண்டிருக்கிறார்....


எவ்வளவு பெரிய பொறுப்பு...

கலவரம் செய் எனத்தூண்டும்

பேச்சினைக் கக்கியிருக்கிறார்

ஆதாரவாளர்கள் கூட்டத்தில்...


டிரம்ப் ஒரு கோமாளி எனக் 

கடந்து செல்ல இயலாது...

வலது சாரித் தத்துவத்தின்

அமெரிக்கக் குறியீடு அவர்...


மனது முழுவதும் 

வன்மமும் வெறுப்பும்

தாங்களே பிறப்பால் உயர்வு

எனும் எண்ணமும்

படர்ந்து நிற்கும்

பாசிசக் கூட்டத்தின் 

அடையாளம் அவர்....


பிறப்பொக்கும்  எல்லா

மனிதர்க்கும் என்னும் 

தத்துவத்திற்கு எதிராக

உள் நாட்டுப் போர் புரிந்த

வெள்ளையர்களின் பிரதிநிதி அவர்...


கறுப்பின உயிர்களும் உயிர்களே

என ஆர்த்தெழும் 

உரிமைப் போராட்டங்களுக்கு எதிராக

நெருப்பாய் வெறுப்பைக் கக்கியவர்...

கறுப்பின மக்கள் அடிமைகள்...

அவர்கள் அடிமைகளாகவே 

இருத்தல்  வேண்டும்

என எண்ணுபவர்...

நமது நாட்டில் ஜாதி வேண்டும்

எனச்சொல்லும் 

மன நோயாளிகளை ஒத்த

மனதுடையவர் அவர்....


"எல்லோருக்கும் எல்லாம்'

என்னும் ஒற்றைக்குரலில்

உழைக்கும் மக்கள் எல்லாம்

ஒன்றிணையும் நாள் உலகில்

வெகுதூரம் இல்லை....


நாங்களே உயர்ந்தவர்கள் பிறப்பால்

என்று சொல்லும் 

மந்தைகள் எல்லாம் அன்று

மனிதர்களாக மாறும்...

இல்லையெனில் மண்ணில்

மக்கிப்போகும்.....


                  வா.நேரு,07.01.2020





Wednesday 6 January 2021

தந்தை பெரியாரே.. உங்களை நினைவில் கொள்வது

 தந்தை பெரியாரே..

தத்துவத் தனிச்சுடரே!

இந்தக் கொரனா

காலத்தில் உங்களை

நினைவில் கொள்வது

எவ்வளவு பொருத்தமானது ?


மனிதர்கள் அஞ்சி

அஞ்சியே சாகிறார்கள்!

தாங்கள் சொர்க்கத்துக்கு

போவதற்காக மட்டுமே

பணத்தை செலவழித்தவர்கள்

நேரத்தை ஒதுக்கியவர்கள்

எதற்காக  அஞ்ச வேண்டும்..?


எல்லாம் வல்ல அவனின்

செயல் இது ...சரி சரி விடு.

சீக்கிரம் போவோம் சொர்க்கம் 

எனும் நிம்மதியைக் காணாமே...

எந்தப் பக்தரிடத்தும்


பக்தர்கள் அனைவருக்கும்

நன்றாகவே தெரிந்திருக்கிறது...

இப்பிறப்பு மட்டுமே பிறப்பென்று...

இந்த வாழ்க்கை மட்டுமே வாழ்க்கையென்று...


பிணங்களை அவர்கள்

எரிப்பவர்களில்லை...

என்றோ ஒரு நாள்

தங்கள் கல்லறைகள்

திறக்கப்பட்டு

கடவுளுக்கு முன்னால்

பாவங்கள் கணக்கிடப்பட்டு

சொர்க்கமோ நரகமோ

நமக்கு எனும்

நம்பிக்கையில் இருப்பவர்கள்...


கொரனாவில் இறந்தவர்க்கு

கல்லறை இல்லை 

என்று சொல்லிவிட்டார்களாம்

கல்லறை பாதுகாப்பாளர்கள்..

கதி கலங்கிப் போனார்களாம்

பிணத்தை என்ன செய்வது...

 சுடுகாட்டில் சென்று

சுட்டிட்டு

மிஞ்சிய சாம்பலை

எடுத்து வந்து

பேழைக்குள் வைத்து

கல்லறையில் புதைத்தார்களாம்!

அட உங்கள் பாவமன்னிப்பு

எழுப்புதல் கணக்கு என்ன ஆனது ?


அவரவர் கடவுள் நம்பிக்கைகள்

அவரவர்க்கு தானாகவே தகர்கிறது...

தவிடு பொடியாகிறது..

இருந்தாலும்

மீசையில் மண் ஒட்டாத கதையாக

காப்பார் கடவுள் என்று

கதை சொல்கிறார்கள்..

இருப்பது கடவுள் அருளால் என்றால்

செத்தவர் எல்லாம்

எவர் அருளால் செத்தார்கள் என்றால்

எக்குத்தப்பாய்

பேசாதே என்கிறார்கள்....


அனைத்தையும் கேள்வி கேள்..

என்ற எங்கள் அய்யா பெரியாரே...

கொரனா காலத்தில் உங்களை 

நினைவில் கொள்வது

உண்மையை உணர்ந்து கொள்வது...


                                                  வா.நேரு,   06.01.2021

Monday 4 January 2021

பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்....ஈரோடு தமிழன்பன்

 


https://tinyurl.com/y79sywfs                                 நூல் மதிப்புரை

   நூல் : பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்
   நூல் ஆசிரியர் : ஈரோடு தமிழன்பன்
   வெளியீடு     : சண்முகம் பெரியசாமி,நியூயார்க்,அமெரிக்கா.
   விற்பனை உரிமை : விழிகள் பதிப்பகம்,சென்னை-41.
   மொத்தபக்கங்கள் :196,விலை ரூ 160.            

 நெருப்புத்துண்டாய் தமிழ் உணர்வை,பகுத்தறிவைப் பற்றவைக்கும் புரட்சிக்கவிஞரின் கவிதைகளைப் படித்ததுண்டு.படித்ததை உள்ளத்தில் ஏற்றியது உண்டு.உள்ளத்தில் ஏற்றிய உணர்ச்சிமிகு கவிதையை மற்றவர் மனதில் பதியும்வண்ணம் எடுத்துச்சொன்னது உணடு. ஆனால் அந்த மாபெரும்  புரட்சிக்கவிஞரை நேரில் நான் பார்த்தவனில்லை. அவரோடு பேசியவனில்லை.என்னைப்போன்றுதான் இந்த மதிப்புரையை வாசிக்கும் பலரும். ஆனால் அந்தப்புரட்சிக்கவிஞரை அருகில் இருந்து பார்த்தவர்,அவரின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை உடனிடருந்து கேட்டவர், அவரின் கிண்டலை அருகே இருந்து சுவைத்தவர் அந்த அனுபவங்களைச் சொன்னால்,சொல்லச்சொல்ல நமக்கு இனிக்கும்.  ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சொல்ல நேரம் இன்மையால்,கவிஞர் பெருந்தகை ஈரோடு தமிழன்பன் அவர்கள் ஒரு நூலாக அதனை யாத்து நமக்கு அளித்திருக்கிறார். அந்த நூலின் பெயர் ‘பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்’.

 இந்த நூலினை வெளியிட்டவர் நியூயார்க்கில் வாழும் சண்முகம் பெரியசாமி அவர்கள். அவரை " கண்டியார் குடும்பம் தண்டமிழ் காக்கும் தலைமைக்குடும்பமாக இன்றும் விளங்கி வருகிறது என்பதற்குக் கண்காண் சான்றாக இருப்பவர் திரு.பெ.சண்முகம் " எனக் கதவுரையில் குறிப்பிடும் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் " புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களோடு பழகும் வாய்ப்பு எனக்கு என் கல்லூரி நாள்களிலேயே வாய்த்தது.விட்டுவிட்டு நேர்ந்தாலும் அவ்வாய்ப்பு அவர் மறைவு நாள்வரை தொட்டுத் தொடர்ந்து கொண்டிருந்தது....நான் பழகிய பத்து ஆண்டுகளில் -அவருடைய தமிழாற்றல்-கவிதை மேதமை,தமிழின உணர்ச்சி அழுத்தம்,பாரதி நேயம், அழகியல் ஈடுபாடு எனப் பலவற்றையும் நான் உணரமுடிந்தது- ஒரு பக்கம் எனில் ,கனிந்த மனிதம்,கட்டற்ற வெகுளி,விருந்தேற்கும் விருப்பு,தன்னிரக்கம் என அவருடைய மானுட ஆளுமையின் பல பரிமாணங்களை நுகர முடிந்தது மறுபக்கம் என்று சொல்வேன் " என்று இந்த நூலின் உள்ளடக்கத்தை ஒரு சில சொற்களில் முன் கூட்டியே நூல் ஆசிரியர் கொடுத்து விடுகின்றார்.

பாரதி-பாவேந்தர்,பாவேந்தர்-தமிழன்பன் என இருக்கும் ஒற்றுமைகளை அழகு ததும்ப' பாட்டு இடையிட்ட உரைநடைக்காப்பியம் ' எனும் தலைப்பில் பேரா.வ.ஜெயதேவன் அவர்கள் முன்னுரையாகக்  கொடுத்திருக்கின்றார்.'பாரதியார்..பாரதிதாசன்..தமிழன்பன்' எனத் தலைப்பிட்டு பேரா.சி.அ.சங்கர நாராயணன் அவர்கள் முன்னுரை அளித்திருக்கின்றார்.இந்த நூலினை வெளியிட்ட நியூயார்க் சண்முகம் பெரியசாமி அவர்கள் 'உளமார்ந்த நன்றி ' எனும் தலைப்பில் தன்னுரையைக் கொடுத்திருக்கின்றார்.அதில் "படித்த பின் உணர்ந்தேன்.இது வழக்கமான நூல் அல்ல.இந்நூல் தமிழ் இலக்கியத்தின் தகைமைசால் ஆளுமைகள் இருவர் குறித்த ஓர் ஆவணம் என்பதை உணர்ந்தேன்" என்று நியூயார்க் சண்முகம் பெரியசாமி குறிப்பிடுகின்றார். உண்மைதான்,அந்த உணர்வு எனக்கும் படித்து முடித்தபின் தோன்றியது. இந்த நூல் படிக்கவேண்டிய நூல் மட்டுமல்ல,பத்திரமாக வைத்திருந்து அடுத்த தலைமுறைக்கு அளித்துச்செல்லவேண்டிய நூல் என்று.

இந்த நூலின் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்களைப் பற்றி இருபது ஆளுமைகளின் கருத்துகள் " அறிஞர்கள் பார்வையில் தமிழன்பன் " என்னும் தலைப்பில் இடம் பெற்றிருக்கின்றன." தமிழன்பன் நல்ல தமிழ்க்கவிஞர் வாழ்க,தமிழன்பு மேலும் தழைத்து ." எனப் புரட்சிக்கவிஞரின் கூற்றிலிருந்து ஆரம்பித்து "...தமிழன்பன் கவிதைகள் எல்லாம் வரலாற்றுக்கு முக்கியமானவை. தமிழன்பன் தமிழ் நாட்டுக்கவிஞர் அல்லர்;அவர் உலகத்தமிழ்க்கவிஞர் " என்று குறிப்பிடும் பேரா.முனைவர்.சாச்சா எபிலிங் அவர்களின் கூற்றுவரை இடம் பெற்றிருக்கும் கருத்துகள் நாம் பெருமை கொள்ளத்தக்கவை, தமிழன்பனைத் தமிழ் நாடு ஈண்டு ,உலகத்திற்கு கொடுத்திருப்பதால்...

விழிகள் பதிப்பகத்தின் உரிமையாளர்,எளிமையும் இனிமையும் குடி கொண்டிருக்கும் பதிப்பாளர் தி.நடராசன் அவர்கள் 'உங்களுக்காகப் பழைய பதிவு ' என்று தன்னுடைய கருத்துகளை, முதல் நூலாக தனது பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த நூல் பற்றி, வெளியிட்ட நிகழ்வில் இனமானப்பேராசிரியர் அன்பழகனார் அவர்கள் ஆற்றிய உரை பற்றி,அந்த நிகழ்வில் நூலின் ஆசிரியர் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் உரைபற்றி நெகிழ்வாகக் குறிப்பிட்டுள்ளார்.அடுத்து 2.9.2000-ல் நிகழ்ந்த இந்த நூலின் வெளியீட்டு விழா அழைப்பிதழ்,கவிஞர்கள் புரட்சிக்கவிஞரும்,ஈரோடு தமிழன்பனும் இடம் பெற்றிருக்கும் புகைப்படம்,அந்த வெளியீட்டு விழாவின் புகைப்படங்களின் அணிவகுப்பு என நூலுக்குள் நுழைவதற்குமுன்பே நிறைவு தருகிறது,விருந்தில் சோற்றுக்கு முன்பே வைக்கப்படும் இனிப்புகள் போல... .

தனது பேராசிரியர் அய்யா ந.இராமநாதன் அவர்கள் பற்றி இந்த நூலில் பல இடங்களில் நூல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். 1983-84-ஆம் ஆண்டுகளில் நான் பெரியார் சிந்தனை பட்டயப்படிப்பு படித்த காலங்களில் அய்யா பேரா.ந.இராமநாதன் அவர்கள் தந்தை பெரியார் பற்றியும் புரட்சிக்கவிஞர் பற்றியும் நடத்திய பாடங்கள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன. புரட்சிக்கவிஞர் பாடல்களில் மூழ்கி ,முத்தெடுத்து அவர் கூறிய கருத்துகள் மறக்க இயலாதவை என் வாழ்க்கையில். " எங்கள் பேராசிரியர் ந.இராமநாதன் அவர்கள் என்மீது தாய்மைப்பிரிவு கொண்டவர்.தனி அன்பு காட்டியவர்" என்று சொல்லி அவரைப் பற்றிச்சொல்லும் உரைநடையே கவிதையாய் மிளிர்கிறது." பேராசிரியர் ந.இராமநாதனார்,அன்று 'கரும்பைத்தின்னு' என்று சொல்லவில்லை...'தேன்பாகு உண்க' என்று சொல்லவில்லை...பின் என்ன சொன்னார்?நான் தாம்திரிகிட தாம்திரிகிட...என்று ஆட?...தன்னானா,தன்னானா என்று பாட ?
" புரட்சிக்கவிஞருக்குப் பக்கத்தில் இரு !
 புரட்சிக்கவிஞர் தேவை தெரிந்து நிறைவு செய் !" போதாதா ? மின்மினிகளைத் துரத்திக்கொண்டிருந்தவனிடம் நட்சத்திரங்களை அள்ளிக் கையில் போட்டது போலாயிற்று ! "இது நூலாசிரியரின் உரைநடை மொழி...கவிதை மொழியாய் உரை நடை மொழி. நூலில் பல பக்கங்கள் இப்படி கவிதை மொழியில் ...புரட்சிக்கவிஞரை முதலில் பார்த்த நிகழ்வில் இருந்து ஆரம்பிக்கும் இந்த நூல் பலமுறை நாம் படிக்கவேண்டிய நூல்.

மாணவர் விடுதிக்கு வந்த புரட்சிக்கவிஞர்,கரடிக்கறி,புலிக்கறி தின்ற கவிஞர் என்று புரட்சிக்கவிஞரை புகைப்படம் போல ஒவ்வொரு தலைப்பிலும் அப்படியே படம் பிடிக்கிறார் நூல் ஆசிரியர். "இரு சூரியர்கள் ஒரு வானில் ஒரு பொழுதில் வந்தது போல-மேடையில் தந்தை பெரியாரும் புரட்சிக்கவிஞரும் தோற்றம் கொடுத்தனர்." என இருபெரும் ஆளுமைகள் மேடையில் தோன்றியதைக் குறிப்பிடுகின்றார்.
"இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழனுக்கு தலைவன் இல்லை.இதோ! தலைவன் உங்கள் முன்னால் !இவர் கையில் ஆயுதமாக உங்களை ஒப்படையுங்கள்..நீங்கள் விரும்பும் தமிழ் மீளும்.தமிழ் நாடு வாழும்!முண்டங்களாய்,முட்டாள்களாய் இதுவரை இருந்தது போதும்,இன்னும் அப்படி இருக்க வேண்டுமா?உங்களுக்குள் இருக்கும் தமிழனை மதங்கள்,சமயங்கள்,வேதங்கள்,வியாக்கினங்கள் எல்லாம் அழுத்தி அழுத்தி அவமானச்சேற்றில் புதைத்துவிட்டன.உங்களுக்குள் இருக்கும் தமிழனை,உங்கள் சாதிகளே வீழ்த்திவிட்டன....தமிழனை விடுதலை செய்ய,தமிழனுக்குச் சுயமரியாதையை மீட்டுத்தர இவரை விட்டால் நாதி உண்டா? " "என்று அனலாய் கக்கிய புரட்சிக்கவிஞரின் உரையை நமது மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் தனது நினைவிலிருந்து பதிவு செய்து " அன்று புரட்சிக்கவிஞர் பேசிய பேச்சில் வெளிப்பட்ட கருத்துகள் இன்றும் என்னுள்ளிருந்து புறப்பட்டுப்போகாமல் பதிந்து இருக்கின்றன" என்று குறிப்பிடுகின்றார்..ஆகா, என்ன அருமையான பதிவு. தந்தை பெரியாரின் தலைமை பற்றி,புரட்சிக்கவிஞர் பேசியதை அருகில் இருந்து கேட்ட கவிஞரின் பதிவு,காலத்தால் அழியாத பதிவு.

புரட்சிக்கவிஞரின் பல்வேறு பரிமாணங்கள் நூல் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. "முரட்டுக்கவிஞர் பாரதிதாசன் -குளிரும் பனியாவதும் இனிக்கும் கனியாவதும் ஆகிய அழகிய மனிதப் பரிமாணத்தை என்னைப்போலவே அவருடன் பழகியவர்கள் உறுதியாகக் கண்டறிந்திருப்பர்" என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர்  தனது அனுபங்களை முத்துச்சரங்களாய் தொடுத்துக்கொடுத்திருக்கிறார்.

"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். " என்னும் குறளைப் போல தனக்கு தீமை செய்பவருக்கு கூட நன்மை செய்யும் நயத்தக்க நாகரிகம் உடையவர் புரட்சிக்கவிஞர் என்பதனை, புரட்சிக் கவிஞரின் சொற்களிலேயே இப்படிக்கொடுக்கின்றார்.

" வாய்ப்பு நேர்ந்த போதெல்லாம் பிறரைத்
 தூக்கி விடுவதில் சோர்ந்ததே இல்லை
 படிப்புத் தந்தேன் சோறு தந்தேன், தலை
 எடுக்கச்செய்தேன்..என்தலை தான் அவன்
 அறுக்க முயன்ற போதும் சிரித்தேன்"......

இளைஞராய்,மாணவராய் இருந்த காலத்தில் புரட்சிக்கவிஞரோடு பயணித்த நினைவுகளை தனது மனக்கண் முன்னால் கொண்டு வந்து அதனை உணர்வோடும் நெகிழ்ச்சியோடும் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் பதிவு செய்து  நமக்கு கொடுத்திருப்பது,மிகப்பெரிய வாய்ப்பு நமக்கு. புதியவர்களை ஊக்கப்படுத்துவது,வழிகாட்டுவது அவர்கள் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்துவதற்கு அடிப்படையாக அமையும் என்பதற்கு புரட்சிக்கவிஞரால் ஊக்கப்படுத்தப்பட்ட ,வழிகாட்டப்பட்ட நூல் ஆசிரியர் அவர்களே நமக்கு நல்பெரும் சான்று."உன்னிடம் நல்ல தமிழ் ஆளுமை இருக்கிறது.உபயோகப்படுத்தினால் கதை,கவிதை எதை வேண்டுமானாலும் செய்து வெற்றிபெற முடியும் " என்று ஊக்கப்படுத்தினார்.ஒரு 'தந்தைமை அக்கறை' அவரிடத்தில் அன்று பொங்கி வழிந்தது என்பால் " என்று நன்றியோடு புரட்சிக்கவிஞரை நினைவு கூறுகின்றார் நூல் ஆசிரியர்.
 
"எழுதறவன் எப்போதும் படிக்கிறவனாகவும் இருக்கவேண்டும் ' என்னும் தலைப்பில் இருக்கும் கட்டுரையை இன்று எழுத வருபவர்கள் பலமுறை படித்தல் வேண்டும். அதில் நூல் ஆசிரியரின் அறச்சீற்றமும் புரட்சிக்கவிஞரின் சீற்றத்தோடு இணைந்து பயணிக்கும் கட்டுரை.பாரதி-பாரதிதாசன் பிணைப்பு பற்றி அருமையான தகவல்கள் இந்த நூலில் உள்ளன. புரட்சிக்கவிஞருக்கு ஞானபீட பரிசு கிடைக்காமை-அதில் இராஜாஜி அவர்களின் பங்கு,பிரின்ஸ்டன் கவிதை-கவிதையியல் 'கலைக்களஞ்சியத்தில்' தமிழ்க்கவிஞர்கள் பட்டியலில் புரட்சிக்கவிஞரின் பெயர் இடம் பெறாமை-அதில் சென்னைப்பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத்துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் வே.இராகவன் பங்கு போன்ற சில செய்திகள் இன்றைய தலைமுறை வாசித்து உள்வாங்கி வைக்கவேண்டியவை. அதற்கு எதிர்வினையாக வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் புரட்சிக்கவிஞரை,புரட்சிக்கவிஞரின் கவிதைகளைப் பதிவு செய்ய வேண்டிய உந்துதலைப் பெற வேண்டியவை.

"உங்கள் கவிதைகள் எம்மோடு இருக்கின்றன.போய் வாருங்கள் புரட்சிக்கவிஞரே' என்று கரையில் நின்று கொண்டே ,கையை அசைத்தவர்கள் கண்களிலும் கடல்கள் இருந்தன"...என்று நூல் ஆசிரியர் குறிப்பிடுவதைப் போல படைப்பாளிகள் மறைவதில்லை, அவர்கள் தங்கள் படைப்புகளால் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இனியும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.அதுவும் புரட்சிக்கவிஞர் எப்போதும் தமிழர்கள் உள்ளங்களில், உலக மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பார்.கரும்பின் எந்தப் பாகத்தை இனிப்பு என்று சொல்வது என்று உண்பவர் திகைப்பது போல, இந்த நூலின் எந்தப் பாகத்தை சிறப்பு என்று சொல்வது என்னும் திகைப்பு இருக்கிறது எனக்கு இருக்கிறது.அப்படி ஒவ்வொரு பக்கத்தையும் விவரிக்கலாம்.வரலாற்றோடு இணைத்துச்சொல்லலால். ஒப்பியல் நோக்கில் மற்ற நூல்களோடு ஒப்பிட்டு விவரிக்கலாம்.ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இந்த நூல் வரலாற்றுப்பெட்டகம். இரண்டு மாபெரும் கவிஞர்களின் வாழ்வியல் பெட்டகம். வாங்கி வையுங்கள் வரும் தலைமுறைக்காக, படித்து, படித்து உள்ளத்தில் தேக்கி வையுங்கள், உங்களுக்காக.

நன்றி : வல்லினச்சிறகுகள் ,திசம்பர் 2020.

Sunday 3 January 2021

புத்தாண்டு உறுதிமொழி

       புத்தாண்டு உறுதிமொழி


புத்தாண்டில் ஓர்

உறுதிமொழி என்றார் அவர்..


அவர் ஓய்வு பெற்று ஓர்

இருபது ஆண்டுகள் இருக்கும்..

ஓடி ஓடி உழைத்தவர்..

ஓயாது உறவுகளுக்கு 

செய்து செய்து திளைத்தவர்..

என்ன உறுதிமொழியாக 

இருக்கும் ?....


உடலைப் பேணுவ்தாக இருக்குமோ?

இனிப்பைக் குறைப்பதாக இருக்குமோ?

வங்கியில் போட்டிருக்கும் 

பணத்தைப் பற்றி இருக்குமோ?

என்னவாக இருக்கும் ?

மனதிற்குள் அது இதுவென

ஏதேதோ ஓடியது....


என்ன உறுதிமொழி 

என்றேன் நானும்..

நானாக எவரையும் 

அழைத்துப்பேசுவதில்லை..

எவரேனும் பேசினால்

பேசுவது என்னும்

உறுதிமொழி என்றார்...


எல்லோருமே பிசியாக 

இருக்கிறார்கள்...

அழைத்தால் ஒரு வேலையாக

இருக்கிறேன்...

அழைக்கிறேன் என்கிறார்கள்..

அழைக்க மறக்கிறார்கள்....

மீண்டும் அழைத்தாலும் 

வேக வேகமான 

அவர்களின் பதிலில் 

மனம் வேதனைப்படுகிறது...


இந்த மனத்தொல்லையே

வேண்டாம்...

நாம் வேண்டுமென நினைத்தால்

அழைக்கப்போகிறார்கள்...

நலம் விசாரிக்கப்போகிறார்கள்..

இல்லையெனில் பெத்ததோ

உடன் பிறந்ததோ,நட்போ

ஓடும்வரை அவர்கள் ஓடட்டும்

அவர்கள் அழைக்கும்போது

பேசுவோம் என முடிவெடுத்தேன் என்றார்...


நல்ல முடிவாகத்தான் தெரிந்தது

எனக்கும் கூட...

முக நூலில் வாட்சப்பில் 

செலவழிக்கும் 

நேரம்  குறைத்து 

சில மணி நேரம் 

பேச ஒதுக்கவேண்டும்


யார் யாரோடு பேசல் வேண்டும்

எவ்வளவு நாளுக்கு ஒருமுறை

பேச வேண்டும் என்னும்

பட்டியல் போடவேண்டும்

எனும் எண்ணம் தோன்றியது

எனக்கு..

.உங்களுக்கு?


                  வா.நேரு,

                  03.01.2021

                 


Friday 1 January 2021

புத்தாண்டும் உழவர்போராட்டமும்

                          

புத்தாண்டும் உழவர்போராட்டமும்

                                                                  முனைவர்.வா.நேரு


2020-ஆம் ஆண்டைக் கடந்து 2021-ஆம் ஆண்டில் நுழைகின்றோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.2020-ஆம் ஆண்டு உலகை அச்சுறுத்திய,அச்சுறுத்தும் கொரனா என்னும் கொடுந்தொற்று பரவிய ஆண்டு. பலரைப் பாதிப்புக்கு உள்ளாக்கிய ஆண்டு. மன அளவில் பல மனிதர்களை முடக்கிய ஆண்டு.இதன் கொடுமையை உலகம் முழுவதும் மக்கள் உணர்ந்திருக்கின்றனர். கொரனாவை ஒழிக்க வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் தடுப்பு மருந்துகளை கண்டு பிடித்துக்கொண்டுள்ளனர். தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் கொரானாவை விடக்கொடியது ஆரியம் என்று குறிப்பிட்டார்கள்.கொரனாவின் கொடுமை பலருக்கும் தெரிகிறது,ஆனால் ஆரியத்தின் கொடுமை அனைவருக்கும் புரிவதில்லை.தந்தை பெரியாரின் ஈரோட்டுக்கண்ணாடியை போட்டுக்கொண்டு பார்த்தால் எளிதில் புரியும்.

திசம்பர் மாதக் குளிர் மதுரையிலேயே நம்மை நடுங்க வைக்கிறது. இரவில் போர்வையைத் தேடித் தேடி போர்த்திக்கொள்ளத்தூண்டுகிறது.மதுரையிலேயே இப்படி என்றால் இந்தியாவின் தலைநகர் டில்லியில் குளிரும் பனியும் எத்தனை மடங்கு அதிகம்...சென்றவர்கள் அறிவார்கள்.உறைய வைக்கும் அந்தக் குளிரில்,பனியில் இலட்சக்கணக்கான இந்திய விவசாயிகள் திரண்டு இருக்கிறார்கள்.டெல்லிக்கு செல்லும் சாலைகளில் அமர்ந்து இருக்கிறார்கள். உணர்வு மயமாக ஒன்றாக நின்று  போராடுகிறார்கள்.தில்லியைச்சுற்றி இருக்கும் சாலைகள் எல்லாம் விவசாயிகளின் தலைகளாக இருக்கின்றன. பிரித்து சூழ்ச்சி செய்யும் மத்திய அரசின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு விவசாயிகள் ஒன்றாக நின்று போராடுகின்றனர்.மற்ற நாடுகளில் இருக்கும் ஊடகங்கள் எல்லாம் இந்தப் போராட்ட செய்தியை மிக விரிவாக வெளியிடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் ?..ஊடகங்கள் மவுனம் காக்கின்றார்கள்.ஏன் ?

கொரனாவைப் புரிந்து கொள்வது போல இந்தியாவின் இன்றைய ஆட்சியைப் புரிந்து கொள்ளவேண்டும்.பார்ப்பனர்களைப் புரிந்து கொள்ளவேண்டும்.பார்ப்பனர்களுக்கு உழவு என்றாலும் ,உழவுத்தொழில் என்றாலும் மனதளவில் வெறுப்புதான்,கசப்புதான்.ஏன்? அவாளின் சாஸ்திரமான மனு சாஸ்திரத்தில் உழவுத்தொழில் செய்வது பாவம் என்று எழுதியிருக்கிறது."விவசாயம் செய்வது உயர்ந்த தொழில் என்று சிலர் நினைப்பார்கள்.  ஆனால் நல்லோர் இதை ஏற்கவில்லை கலப்பை மண்வெட்டி போன்றவற்றால் பூமியை விடுவதாலும் பூமியில் உள்ள உயிரினங்களை வெட்டுவதால் இது உயர்ந்த தொழில் அல்ல".சுலோகம் (10 :7).பசுவையையும் குதிரையையும் துடிக்க துடிக்க வெட்டி யாக குண்டத்தில் போட்டு அதனை சுவைத்து சாப்பிட்ட பார்ப்பனர்கள்,நிலத்திற்குள் கலப்பையை,மண்வெட்டியை விடுவதால் உயிரினங்கள் சாகின்றன. அதனால் உழவுத்தொழில் பாவம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதனால் உழவுத்தொழிலில் பார்ப்பனர்கள் யாரும் அன்று முதல் இன்றுவரை ஈடுபடுவதில்லை. நெற்றி வியர்வை நிலத்தில் விழ அவர்கள் யாரும் நிலத்தில் உழைப்பவர்கள் இல்லை.

தில்லியின் எல்லையில் நின்று போராடும் விவசாயிகள் ,தங்களின் போராட்டத்தில் ஒருபகுதியாக கார்பரேட் நிறுவனங்களான அம்பானி,அதானி பொருட்களை பயன்படுத்தாதீர்கள்,புறக்கணியுங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ரிலையன்ஸ் நிறுவனத்தின் செல்போன் சிம்கார்டை பலரும் மாற்றி மற்ற நிறுவனத்திற்கு மாறுகின்றார்கள்.விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் ஏன் இப்படி ஒரு கோரிக்கையை வைக்கின்றார்கள். அவர்கள் வைத்திருக்கும் இந்தக் கோரிக்கை சரிதானா?.செய்தித்தாள்களின் பின்னோட்டங்களில் இதனை ஒட்டி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
 
"உலகத்தொழிலாளர்களே ஒன்றிணையுங்கள். நீங்கள் இழப்பதற்கு கைவிலங்குகளைத் தவிர வேறில்லை,பெறுவதற்குப் பொன்னான உலகம் இருக்கிறது " என்றார் பொதுவுடமை தத்துவத்தை எடுத்துரைத்த காரல்மார்க்ஸ் அவர்கள்.உலகம் முழுவதும் இருக்கும் உழைக்கும் தொழிலாளர்கள் ஒன்றிணைவார்கள்,புரட்சி செய்வார்கள்.அதன் மூலம் மாற்றம் வரும்.என்று நம்பினார்.உலகில் உள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைவார்கள் என்ற காரல் மார்க்ஸ் அவர்களின் எண்ணத்திற்கு மாற்றாக உலகில் உள்ள முதலாளிகள் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.அதுவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று சொல்லக்கூடிய பெரு நிறுவனங்கள் தங்கள் தங்கள் நாட்டில் ஆட்சி யார் நடத்த வேண்டும், யார் நடத்தக்கூடாது என்று தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள்,அப்படிப்பட்ட பெரு நிறுவனங்கள்தான் இந்தியாவில் இருக்கும் அம்பானி மற்றும் அதானி கம்பெனிகள்.

இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் 119 பேர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 100 கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது.100 கோடிக்கு மேல் சொத்து இருப்பவர்களின் எண்ணிக்கை 2000 ஆவது ஆண்டில் 9 ஆக இருந்தது.இன்று அது 119 ஆக உயர்ந்திருக்கிறது.இந்தியாவில் உழைப்பவர்களின் உழைப்பு எல்லாம் இவர்களுக்கு லாபமாக சென்று சேர்கிறது. 2017-ல் இந்தியாவில் கிடைத்த வருமானத்தில் 73 சதவீதம் இந்த 119 பேர்கள் உள்ளிட்ட 1 சதவீத பணக்காரர்களுக்கு போய் இருக்கிறது.மீதம் இருக்கிற 27 சதவீத வருமானம்தான் ஏறத்தாழ 124 கோடி மக்களுக்கு போய்ச்சேர்ந்திருக்கிறது.இந்த 119 பெரும்பணக்காரர்களில் ஒருவர் கூட தாழ்த்தப்பட்டவர் இல்லை, முழுக்க முழுக்க பார்ப்பனர்களும் பனியாக்களும் உயர் ஜாதிக்காரர்களும்தான் இந்தப் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். அதில் முதன்மையாக இருப்பவர்கள் இந்த முகேஷ் அம்பானியும், அதானியும்.மத்தியில் பி.ஜே.பி.ஆட்சி வந்தபின்பு இவர்கள் இருவரின் சொத்து மதிப்பு பல மடங்கு கூடியிருக்கிறது.பெரும் பணக்காரர்கள் மேலும் பெரும் பணக்காரர்கள் ஆகின்றார்கள். ஏழைகள் மேலும் பரம ஏழைகளாக ஆகிக்கொண்டுள்ளார்கள்.

இன்றைய மத்திய அரசு என்பது பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆட்சி என்பது ஒரு பக்கம் என்றால்,இன்னொரு பக்கம் பணக்காரர்களுக்காக பணக்காரர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆட்சியாகவும் இருக்கிறது.இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் அனைவரும் உயர் ஜாதிக்காரர்கள் மட்டும்தான் என்பதனை புரிந்துகொண்டால் எளிதில் விளங்கும்.


இந்தியா என்பது வளர்ந்துவரும் நாடு. இதில் பாதி மக்கள்தொகைக்கு வேலை கொடுப்பது விவசாயமே ஆகும்.500 ரூபாய் நோட்டு, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று இரவில் அறிவித்து ,மத்திய அரசு செய்த கூத்துகளால் சிறு,.குறு வணிக நிறுவனங்கள் எல்லாம் அழிந்து போய் இருக்கின்றன.அதன் மூலமாக வேலை கிடைத்த பல கோடிப்பேர் இப்போது வேலை இல்லாமல் நிற்கிறார்கள்.நோட்டு செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வந்த ஜி.எஸ்.டி. அடுத்து வந்த கொரனா பாதிப்பிற்காக கதவடைப்பு என்று தொடர்ந்து இடி மேல் இடியாக, அடி மேல் அடியாக விழுந்ததால் சிறுதொழில்கள் நசுங்கிவிட்டன.சிறுதொழில் செய்தோர் கதி கலங்கி நிற்கின்றனர்.. ஆனால் இந்தக் காலகட்டத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் லாபத்தை கொட்டி அள்ளியிருக்கிறது.

மருத்துவ செலவு,படிப்பு செலவு, குடிக்கும் தண்ணீருக்கு செலவு,நகரங்களில் வசிப்போர் குளிக்கும் தண்ணீருக்கு வாங்கும் செலவு, பெட்ரோல்  டீசல் உயர்வினால் ஏற்படும் செலவு என்று ஏழைக்குடும்பங்களும், நடுத்தரக்குடும்பங்களும் தத்தளிக்கின்றன.கிராமத்தில் வசிக்கும் ஒரு விவசாயக்கூலி,ஒரு பன்னாட்டுக்கம்பெனியில் இருக்கும் உயர் அதிகாரியின் ஒரு வருட சம்பளத்தைப் பெறுவதற்கு 941 வருடம் உழைக்கவேண்டும் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.விவசாயக்கூலி ஒடுக்கப்பட்டவராக இருப்பதையும்,பன்னாட்டுக்கம்பெனியின் உயர் அதிகாரி பெரும்பாலும் பார்ப்பனர்களாக இருப்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

" பா.ஜ.க. எப்படிப்பட்ட கோட்சே பக்தர்களையும் வருணாசிரமத்திற்கு வக்காலத்து வாங்கும் வன்னெஞ்சர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதற்கு - ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ' என்பது போல இது ஆதாரம் " என்று ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 15.12.2020 விடுதலை நாளிதழ் அறிக்கையில் குறிப்பிட்டதைப்போல " சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் " என்று பொருளிருக்கும்போது சூத்திர்ன் என்றால் ஏன் எதிர்ப்பு,ஏன் கோபம் என்று கேட்கிறார் காவி சாமியாரிணி பிரயாக்சிங் தாக்கூர் " என்னும் தலைப்பில் வந்த அறிக்கையை படிக்கும்போது , இன்றைய பா.ஜ.க. பழைய வருணாசிரம முறையை கொண்டு வருவதற்கு எவ்வளவு துடிக்கிறது என்பதனைப் புரிந்து கொள்ளலாம்."கீழ் ஜாதியில் பிறந்தவன் மேல் வருடத்திற்குரிய குலத் தொழிலை செய்தால் அவன் செல்வத்தை பறித்து நாடு கடத்த வேண்டும் (மனு 10: 85) .சூத்திரன் தன் குடும்பத்தை காப்பாற்றும் அளவுக்கு மேல் பொருள் சேர்த்து வைக்கக் கூடாது" போன்ற மனு நீதியின் சட்டங்களோடு இன்றைய விவசாய சட்டங்களைப் பொறுத்திப் பார்த்தால், நிலம் வைத்திருக்கும் விவசாய சூத்திரர்களிடமிருந்து விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றும் திட்டமே மோடி அரசின் விவசாய சட்டங்கள் என்பது புரியும்.  

விவசாயிகளுக்கு மேம்பட்ட சட்டங்கள் வேண்டுமா என்றால் வேண்டும்.டாக்டர் கலைஞர் அவர்கள் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொண்டு வந்தார்.சட்டம் இயற்றினார்.டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக ஆனவுடன் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தார்.மத்திய மோடி அரசு பதவி ஏற்றவுடன், பெரும் முதலாளிகள் வாங்கியிருந்த ஒரு இலட்சம் கோடிக்கு மேற்பட்ட கடன்களைத் தள்ளுபடி செய்தார்கள்..  தமிழகத்தில் திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில்,இன்றைய திராவிட முன்னேற்றக்கழகத்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சிதுறைத்தலைவராக இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிவகுத்தது. சிறு விவசாயக் கூலிகளாக கிராமங்களில் இருக்கும் மகளிர் இணையவும்,அவர்கள் வங்கியில் கடன்பெறவும் மற்றும் பலவகையில் முன்னேறவும் அந்தக் குழுக்கள் பயன்பட்டன.பயன்படுகின்றன. இது பெரும்பான்மையான மக்களின் நன்மை கருதி கொண்டுவரப்பட்ட திட்டம். ஆனால் இன்று மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள விவசாயிகள்  நலச்சட்டம் என்னும் மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியவை அல்ல. மாறாக கார்பரேட் நிறுவனங்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்டவை.கோடிக்கணக்கான விவசாயிகளைப் பலி கொடுத்து சில நிறுவனங்கள் வாழ்வதற்கும்,வளமாவதற்கும் வழி வகுப்பவை,

திராவிட ஆட்சி  என்பது 'அனைவருக்கும் அனைத்தும்' என்னும் நோக்கம் கொண்டது..அதனைத் தமிழகம் நிருபித்தது.இனியும் நிருபிக்கும். ஆரியம் என்பது 'பார்ப்பனர்களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமே உரிமையும் சலுகையும் 'என்பது.தில்லியில் எல்லையில் நின்று போராடும் இந்தியாவின் பல மாநிலத்தைச்சார்ந்த விவசாயிகள் ஆரிய ஆட்சியின் வஞ்சகத்தைப் புரிந்து கொண்டுள்ளனர். அகிம்சை வழியில் அயராது போரிடுகின்றனர்.அவர்களின் போராட்டம் வெல்லட்டும்,வெல்லட்டும். கொரானாவை ஒழிப்பது,தடுப்பது தடுப்பூசி என்றால்,அதனைவிடக் கொடிய ஆரியத்தை தடுப்பது,ஒழிப்பது திராவிடமே..திராவிடக் கருத்துக்களே என்றும் வெல்லும்,வெல்லும்.ஆம், திராவிடம் வெல்லும்








எழுத நினைக்கும் என் தோழரே..

       

எழுது...எழுது..

எழுத‌ எழுத..

எழுத்து வரும்..

எழுது..எழுது...


ஆகச் சிறந்த 

கதைகளைத்

தேடித் தேடிப்படி..


கதைகளை அவர்கள்

நகர்த்தியிருக்கும்

உத்திகளைக் கண்டுபிடி..


நமது உள்மனதில்

புகுந்து எப்படி

கதைகளால் நம்மை

அழ வைக்கிறார்கள்

என்பதைக் கண்டுபிடி.....


தனிமையில் நம்

மனதை உருட்டும்

எழுத்தின் வலிமையைக் கண்டுபிடி.....


இணையமும் 

கணினியும் இல்லாக்

காலத்திலும்

பல்லாயிரம் பக்கங்கள் அவர்களை எழுத 

வைத்தது எது 

என்பதைக் கண்டுபிடி...





புகழ் வரும்..

பணம் வரும்..

என்பதற்காக 

எழுதியவர்கள்

நிலைக்கவில்லை.....


நிலைத்து நிற்கும்

எழுத்தாய்‌ நான்

எழுத முயல்வேன் என

ஓரிடத்தில் அமர்ந்து

மனதை

ஒருமுகப்படித்தி..


எழுது...எழுது...

எழுத நினைக்கும்

என் தோழரே..

எழுது...எழுது..

                  வா.நேரு..

                  01.01.2021