Tuesday 18 May 2021

எங்கள் கி.ரா.வே....

 எத்தனை 

எழுத்து விளைச்சல்கள்...

எத்தனை 

எழுத்து உழவர்கள்....

கரிசல் காட்டு மண்ணில்...


கடலை மிட்டாய்க்குப் 

பெயர் பெற்ற

கோவில்பட்டி வட்டாரம்

கதை சொல்லலுக்கும்

பேர் பெற்றது உன்னால் அன்றோ....

உனது பரம்பரையாய்

தொடர்ந்திட்ட கரிசல் மண்

கதை சொல்லிகளால் அன்றோ...


முன்னெத்தி ஏராய்

முதல் எழுத்து உழுவராய்

ஆழ உழுது விளைவிக்கும்

அற்புத உழவன் போல

உள்மனது உணர்வுகளை

எழுத்து உழவால்

எடுத்து இயம்பிய

இடைச்செவல் 

கிராமத்துப் பெருசே....

.

சிக்மண்ட் பிராய்டைப்

பின்னர்தான் அறிந்தேன்...

முதலில் உன் கதைகள்தான்

பாலியல் உணர்வுகளும்

பசிதான் என உணர்த்தின...


..மழைக்குத்தான் நான்

பள்ளிக்குள் ஒதுங்கினேன்

ஆனாலும் நான் 

மழையைப் பார்த்து

அதிசயத்து நின்றதால்

பள்ளிக்கூடத்தைப்  பார்க்கவில்லை என்றாய்


நீ பள்ளிக்கூடத்தைப் 

பார்க்கவில்லை என்றால் என்ன?

பல்கலைக்கழகங்கள் எல்லாம்

தங்கள் பாடங்களின் வழியே

உன்னைப் பார்த்தது...


ஏழாம் வகுப்பு மட்டுமே

படித்த உனக்கு

உனது படைப்பு 

பேராசிரியர் பதவியை

வாங்கித்தந்தது....

எத்தனை படைப்பாளிக்கு 

கிடைத்தது இந்த அங்கீகாரம்?


இரண்டு மாநிலங்கள் தரும்

அரசு மரியாதையோடு

இறுதி மரியாதை 

நிகழவிருக்கும் படைப்பாளியே!

எங்கள் கி.ரா.வே....

இன்னும் ஓர் ஆண்டில்

உன்னோடு உனது

நூற்றாண்டைக் கொண்டாடுவோம்

என நினைத்தோம்.....

நினைவுகளோடு 

கொண்டாடிக்கொள் என

நீத்தாராய் ஆகிக்கொண்டாய்....


சரி...உன் நினைவுகள்

எல்லாம் உனது

படைப்புகள்தானே!

உடல் நீங்கும்...

நிலைத்து நிற்கும்

உணர்வாய் உனது 

படைப்புகள் நிற்கும் என்றும்....


                         வா.நேரு,

                         தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,18.05.2021



.

.


Monday 17 May 2021

பயமுறுத்தப் பழகுவோம்...

கரோனாவின் 

முதல் அலை முழுக்க

முகக்கவசம் அணிய

மறுத்தவர் அவர்....


இயல்பாக இருக்கும்

எதிர்ப்புச்சக்தி

எல்லா வைரசையும்

அழித்துவிடும் விடுங்கள்

என்றார்......

 நான் அன்று

முகக்கவசம் அணியச்

சொன்ன போது....


இரட்டை முகக்கவசம்

அணிந்திருந்தார் இப்போது...

ஏன் இந்த மாற்றம் என்றேன்...

சுற்றி நிகழும் இறப்புகளும்

இடுகாட்டில் வரிசையில்

காத்திருந்து எரிக்க 

நேரிடும் கொடுமையும்

பயமுறுத்துகிறது....என்றார்...


அளவு கடந்த அலட்சியமும்

அதே நேரத்தில் 

அளவு கடந்த பயமும் ஒன்றுதான்...

இரண்டும் எதிர்

விளைவுகளைத்தான் தரும்....


நம்மைச்சுற்றிப் பலர்...

நண்பர்கள் தோழர்கள்

எனப்பலர் சாகின்றனர்

உண்மைதான்...மறுக்கவில்லை...

நம் இதயத்தைப் பிழியும் 

இறப்புகள் பல

நமது துன்பத்தைக் கூட்டுகின்றன,,,,

ஆனாலும் இதனை நினைத்து

அஞ்சி நடுங்கினால்

ஆபத்து நீங்காது...கூடும்..


அறிகுறிகள் தென்பட்டும்

தெரிவிக்கப் பயந்து

திணறிப் பயந்து ஒளிந்து

பின்பு முற்றியபின்பு

முறையிடும் மனிதர்கள்

பலர் மாட்டிக்கொள்கின்றனர்

கொடும் கரானாவிற்கு...


அச்சமின்றி இருப்பதும்

தடூப்பூசி போடுவதும்

கரோனா அறிகுறிகள் 

ஏதும் தென்பட்டால்

உடனடி மருத்துவமும்தான்

இன்றைய தேவை....

அச்சம் அல்ல,,,,

பயத்தை நாம் 

பயமுறுத்தப் பழகுவோம்...


                     வா.நேரு, 17.05.2021    




Sunday 16 May 2021

கல்வி நிலை : கல்வியும் மாநிலங்களும்.....

 உண்மை -இணையதளத்திற்குள் சென்று வண்ணப்படங்களுடன் படிக்க ;;;இணைப்பை கிளிக் செய்க

http://www.unmaionline.com/index.php/6059-kalviyum-manilangalum.html


திராவிடம் வெல்லும்’ என்னும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கூற்று மெய்யாகியிருக்கிறது. தேர்தலில் வென்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது. தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் அவரது தலைமையில் பதவி ஏற்றிருக்கும் அமைச்சரவைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

100 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் திராவிட இயக்கத்தின் ஆணி வேர் கல்வி. “எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு கல்வியைக் கொடுக்காதே” என்னும் நயவஞ்சகத்தால் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு தடுக்கப்பட்ட கல்வியை வழங்குவதற்காகத் திராவிட இயக்கம் தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை அந்தப் போராட்டம் தொடர்கிறது. ஒரு நூற்றாண்டு காலப் போராட்டம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி பெறுவதற்காக திராவிட இயக்கம் பட்ட பாட்டை, எடுத்துக்கொண்ட முயற்சியை, இடையில் இந்திய ஒன்றிய அரசு ஏற்படுத்தியிருக்கும் தடைகளை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தன் வயதில் இருக்கும் மற்ற இளைஞர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

திராவிடர் கழகத்தின் சார்பாக வெளியிடப்படும் புத்தகங்கள் காலத்தின் தேவையாகவும், கலங்கரை வெளிச்சத்தை மக்களுக்குக் கொடுப்பதாகவும் அமைகின்றன. கல்வியில் புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, நீட் தேர்வினால் அனிதா போன்றவர்களின் இழப்பு என்று கடந்த சில ஆண்டுகளாக நாம் படும் துன்பங்கள் பல. தந்தை பெரியாரும் இன்றைய திராவிடர் கழகத்தலைவரும் ஒரு பிரச்சனையின் ஆணிவேரை ஆராய்ந்து, அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைச் சொல்பவர்கள், செய்பவர்கள். அந்த வகையில் கல்வியில் இன்றைக்கு நமக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளுக்கான காரணம், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, வஞ்சகமாக பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதுதான். அதனை 2011இல் காங்கிரசு மத்திய அரசாக இருந்த காலத்திலேயே சுட்டிக்காட்டி, அதற்காக ஒரு மாநாட்டினை (25.09.2011) நடத்தி, என்ன செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அந்த மாநாட்டில் உரையாற்றிய சிறப்பு அழைப்பாளர்களின் உரைகளை யெல்லாம் தொகுத்து திராவிடர் கழகம் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் ‘மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?’ என்பதாகும்

100 ஆண்டுகளுக்கு முன், திராவிட இயக்கம் தோன்றுவதற்கு முந்தைய நமது கல்வி நிலையைப் பற்றிய புள்ளி விவரங்களை நமது இளைஞர்கள் இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இன்றைக்கும் வட இந்திய மாநிலங்கள் கல்வியில் பின் தங்கியிருக்க, அன்று மதராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பகுதிகள் கல்வியில் சிறந்து இருப்பதற்கான காரணம் என்ன என்பதனை உணர வேண்டும். நீதிக்கட்சி ஆட்சியில், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க உணர்வால் எழுந்த மாற்றங்களை உள்வாங்க வேண்டும். கதர் சட்டைக்குள் ஒரு கருப்புச்சட்டை என்று ஆனந்த விகடனால் அடையாளம் காட்டப்பட்ட பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், அவரைத் தொடர்ந்த திராவிட ஆட்சிகளில் கல்விக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டங்கள், திட்டங்கள் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும். வட இந்திய மாநிலங்கள் போல் அல்லாமல் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்ததற்கும், இன்று உலகம் முழுக்க மென்பொருள் போன்ற துறைகளில் பல தமிழர்கள் சாதனை புரிவதற்கும் அடிப்படை கல்வியே ஆகும். ‘கேடில் விழுச்செல்வம் கல்வி’  எனத் தேடித்தேடிப் படிப்பதற்கான வசதிகளை, வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம் ஆகும்.


ஆனால் இன்றைக்கு இந்திய அரசின் ‘புதிய கல்விக் கொள்கை’ போன்ற கொள்கைகளால் மிகப் பெரும் ஆபத்தினை எதிர் நோக்கியிருக்கிறோம். கழுத்துக்கு மேல் தொங்கும் கத்தி போல எந்த நேரமும் நம்மைப் போன்றோர் பெற்ற கல்வி வாய்ப்பினை நமது அடுத்த, அதற்கடுத்த தலைமுறை பெறமுடியுமா? என்னும் பெரும் கேள்விக்குறி நம்முன் நிற்கிறது. 3ஆவது வகுப்பில் தேர்வு, 5ஆம் வகுப்பில் தேர்வு, 8ஆம் வகுப்பில் தேர்வு, 10,11,12ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என மத்திய ஆட்சியாளர்கள் அச்சுறுத்துகின்றனர். உலகமெங்கும் மாணவ, மாணவிகளைத் தேர்வில் தோல்வியென்று சொல்லி, தேர்ச்சி பெறாமல் ஆக்குவது குற்றம் என்னும் கொள்கை வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் அதற்கு நேர் எதிரான மனப்பான்மை கட்டி அமைக்கப்படுகிறது. வடிகட்டி, வடிகட்டி மாணவர்களை, மாணவிகளைக் கல்வி பெறுவதில் இருந்து தடுத்து அவர்களை மீண்டும் குலத்தொழிலுக்கு அனுப்ப வேண்டும் என்பதே இத்தனை தேர்வுகளுக்கான அடித்தளம் என்பதாகும். கொசுவை ஒழிக்க வேண்டுமென்றால், கொசு உற்பத்தியாகும் இடத்தை அழிக்க வேண்டும். சுத்தம் செய்ய வேண்டும் என்பது போல, பார்ப்பனியத்தை உள்வாங்கிய மத்திய அரசின் இத்தகைய போக்குகளை அழிப்பதற்கு, ஒழிப்பதற்கு, கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டும்.

இந்தப் புத்தகத்தின் தொடக்கத்தில் ஆழ்ந்து படியுங்கள் என்று தலைப்பிட்டு அய்யா ஆசிரியர் அவர்கள் “மாநில அதிகாரங்களைப் பறிப்பது என்பது அரசியல் சட்ட வரைவுக் குழுவினர்களிடமே - அப்போதே மேலோங்கிய எண்ணமாக இருந்திருக்கிறது’’ என்பதனை விரிவாக விளக்கியுள்ளார். “மருத்துவக் கல்லூரிகள் சில மாநிலங்களில் போதுமான அளவில் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குவதற்குத் திட்டங்களை வகுக்க வேண்டுமே தவிர, ஏற்கெனவே மாநில அரசுகள் தங்கள் நிதியில் இருந்து கட்டியுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களைப் பறிப்பது நேர்மையானதுதானா?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இந்தக் கரோனா காலத்தில் உத்தரப் பிரதேசத்திலும் ஏன் தலைநகர் தில்லியிலும் கூட மருத்துவக் கட்டமைப்பு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதனை உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சுகாதாரத்திற்காக 17 சதவிகிதம் தனது பட்ஜெட்டில் அமெரிக்கா ஒதுக்கியிருக்க, இந்திய ஒன்றிய அரசு ஒதுக்கியிருப்பதோ வெறும் 3 சதவிகிதம். அதிலும் கரோனா சம்பந்தப்பட்ட அதிகாரங்கள் அனைத்தையும் தன்னகத்தே வைத்திருந்த நடுவண் அரசு இப்போது, சுகாதாரம்  மாநிலப் பட்டியலில் வருகிறது என்று கூறுவதும், தன்னுடைய பொறுப்பில் இருந்து நழுவுவதும் எவ்வளவு பெரிய கொடுமை. சுகாதாரத்தை அந்தந்த மாநிலங்கள் கவனிக்க வேண்டும் என்று சொல்லும் நடுவண் அரசு கல்வியை அப்படிச் சொல்ல மறுப்பது ஏன்? எனும் கேள்வி எழுகிறது.

இன்றைய பி.ஜே.பி. அரசு, 2014இல் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அவர்களின் தத்துவம் அப்படி. தத்துவத்தில் கோளாறு. ஆனால், கரோனா தொற்று பரவ ஆரம்பித்த சென்ற வருடத்தில், இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கால்நடையாகச் சென்று உழைக்கும் தோழர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள் என்றே அழைக்கப் பட்டார்கள். ஒரு நாட்டிலிருந்து  இன்னொரு நாட்டிற்கு செல்பவர்கள்தாம் புலம் பெயர்ந்தோர் என்று அழைக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட ஒரு வேறுபாடு மாநிலத்திற்கு மாநிலம் காணப்படுகிறது. அய்யா ஆசிரியர் அவர்கள், “டில்லியில் உட்கார்ந்துகொண்டு அனைத்திந்திய அளவில் ஒரே சீரான முடிவு என்பதெல்லாம் எந்த வகையில் சரியாக இருக்க முடியும்? இந்தியாவில் பல இனங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள், பல்வேறு தட்பவெப்ப நிலைகள், பல்வேறு சமூக ஏற்றத் தாழ்வுகள், கல்வி வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வு என்று இருக்கும்பொழுது எப்படி எல்லாவற்றையும் விறகுகளைக் கட்டுவது போல ஒன்றாக இறுக்கிக் கட்டுவது?” என்ற ஆழமான கேள்வியை எழுப்பியுள்ளார். பொதுப் பட்டியல், மாநில அரசுப் பட்டியல், மத்திய அரசுப் பட்டியல்களில் என்னென்ன இருக்கின்றன என்பதையும், எவையெவை மாநில அரசுப் பட்டியலில் இருந்தவை பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது என்பதையும் அய்யா ஆசிரியர் அவர்கள் விரிவாக ஓர் ஆவணமாக இந்த நூலில் குறிப்பிட்டிருக்கின்றார். நமது கழகப் பேச்சாளர்கள் ஆவணமாக இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ‘மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?’ எனும் நூலில் அய்ந்து ஆளுமைகளின் உரைகளின் தொகுப்பு இருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் அவர்கள், தி.மு.க அமைப்புச் செயலாளர் திரு.டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள், மேனாள் துணைவேந்தர் முனைவர் அ.இராமசாமி அவர்கள், தமிழ்நாடு திட்டக்குழு மேனாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் அவர்கள்  என்னும் இந்த அய்ந்து ஆளுமைகளின் உரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ‘மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?’ என்பதற்கான அடுக்கடுக்கான வாதங்களை எடுத்துவைத்து, இந்திய ஒன்றிய அரசிடம் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கல்வியை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

புள்ளி விவரப் பட்டியல் அடிப்படையில் பெண் கல்வி என்று எடுத்துக் கொண்டால், இந்தியாவில் முதன்மை மாநிலங்களாக கேரளா, தமிழ்நாடு வருகிறது. மிக மோசமாக பெண் கல்வி உள்ள மாநிலமாக பிகார் உள்ளது. அதைப்போல ஆண்கள் கல்வி மிக மோசமாக உள்ள மாநிலமாக இராஜஸ்தான் உள்ளது. வட மாநிலங்கள் கல்வியில் முன்னேறி வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பெண்களுக்கான கல்வி என்பது மிக மோசமாக வட மாநிலங்களில் உள்ள நிலைமையில் அவர்களை முன்னேற்றுவதற்குப் பதிலாக, கல்வியில் நல்ல நிலைமையில் உள்ள தமிழ் நாட்டினைப் போன்ற மாநிலங்களைப் பின்னே இழுக்கும் வேலையை இந்திய ஒன்றிய அரசு செய்கிறது. இதனைத் தடுப்பதற்கு  மாநிலப் பட்டியலுக்கு கல்வி வரவேண்டியது மிகவும் அவசியமாகும்.

கல்விதான் முன்னேறுவதற்கான ஏணிப்படி என்பதனை திராவிட இயக்கம் உணர்ந்து செயல்படுத்தியது. ஜாதி ஒழிப்பிற்கான முதன்மை வழியாக சமூக நீதியை நடைமுறைப்படுத்தியது. கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதை அடிப்படையாக வைத்து சமூக நீதியையும், அனைவருக்கும் தரமான கல்வி என்பதையும் குழிதோண்டிப் புதைக்கும் வேலையில், ‘புதிய கல்விக்கொள்கை’ என்பதனை இந்திய ஒன்றிய அரசு எடுத்திருக்கிறது. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்பது தி.மு.கழகத்தின் கொள்கையாகும். ஆகஸ்ட் 1, 2020இல் இன்றைய முதல்வர், தி.மு.க.வின் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடைபெற்ற  மாவட்டச் செயலர்கள், எம்.பி.,- எம்.எல்.ஏ.க்கள், உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இன்றைக்கு தமிழ்நாட்டின் தேர்தல் முடிவும், மேற்கு வங்காளம், கேரளா தேர்தல் முடிவும் இந்தியக் கூட்டாட்சி தத்துவத்திற்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அகில இந்தியாவிற்கும் வழிகாட்டும் தலைவராக உயர்ந்து நிற்கின்றார். அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் ஒத்த கருத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து ‘கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர ‘முயற்சிகள் எடுப்பார் என்னும் நம்பிக்கை நமக்கு இருக்கிறது. திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இந்தியாவின் பல மாநிலத் தலைவர்கள், ஆட்சியாளர்கள் அழைக்கப்பட்டு, 2011இல் நிகழ்த்தியது போலவே ‘மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?” என்னும் மாநாடு ஆங்கிலத்தில் நடத்தப்படலாம். அதன் மூலம்  “திராவிடம் வெல்லும்! அதனை எதிர்காலமும் சொல்லும்!’’ என்பதனை உணரலாம். 


நன்றி :உண்மை மே-1-15,2021














Friday 14 May 2021

அண்மையில் படித்த புத்தகம் : மிட்டாய் பசி ( நாவல்)....ஆத்மார்த்தி

 அண்மையில் படித்த புத்தகம் : மிட்டாய் பசி ( நாவல்)

 நூல் ஆசிரியர்              : ஆத்மார்த்தி

வெளியீடு                   :  தமிழினி ,சென்னை-51

முதல் பதிப்பு               : டிசம்பர் 2020

மொத்த பக்கங்கள்          :  184 , விலை ரூ 180            


இந்த மிட்டாய்பசி,ஒருவனின்  கால் நூற்றாண்டுக் கால  வாழ்க்கையைச்சொல்லும் நாவல். நாவல் என்னும் வடிவத்தின் சிறப்பே கால் நூற்றாண்டு,அரை நூற்றாண்டுக் கதைகளைச்சொல்ல முடியும் என்பதுதான்.அந்த வகையில் இந்தக் கதையின் நாயகன் ஆனந்திற்கு நடக்கும்  நிகழ்வுகளின் விவரிப்புத்தான் இந்த நாவல். துன்பங்கள்  எப்படி ஏற்படுகிறது,எதனால் ஏற்படுகிறது என்பது அவனுக்கே புரியாத நிலையில் நடப்பதும்,அதனால் அவன் நலிவதும் மீள்வதுமான வாழ்க்கையின் கண்ணாமூச்சி விளையாட்டுத்தான் இந்த நாவல்.இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டை அழகாக நாவலாக ஆக்கி நம் கையில் கொடுத்திருக்கிறார் நூல் ஆசிரியர் ஆத்மார்த்தி..

உடலால்,சொற்களால் நிகழும் வன்முறைகளுக்கு முன்னால் ,அந்த வன்முறை நிகழ்த்துபவனின் மனதுக்குள் நிகழ்கிறது.உடனடி கோபத்தினால் விளையும் வன்முறை அந்தக் கணத்தில் நிகழ்ந்துவிடும். கோபமும் குறைந்துவிடும். ஆனால் மனதுக்குள் ஏற்படும் வன்மம்,காலம்,இடத்திற்காகக் காத்திருக்கிறது,மனதுக்குள் மீண்டும் மீண்டும் நிகழப்போகும் வன்முறையை ஒத்திகை பார்த்துக்கொண்டே இருக்கிறது.

மதுரை மூன்று மாவடியில் வசிக்கும்,பெரிய ஆதரவு எதுவும் இல்லாத,அப்புராணியாய் வளரும் செல்லம்மா,மாரிஸ் என்பவனால் ஈர்க்கப்படுகிறாள்.செல்லம்மாவின் தோழி ஜெகா,செல்லம்மா-மாரீஸ் திருமணம் நடைபெறக் காரணமாக இருக்கிறாள். இவன் தான் இனி நம் உலகம் என மாரீஸிடம் முழுமையாக செல்லம்மா தன்னை ஒப்படைக்கிறாள்.ஆனால் மாரீஸ் அப்படி இல்லை,அவனுக்கு ஜெகாவிடம் தொடர்பு இருக்கிறது என்பதனை அறிந்தபோது,ஏமாற்றமடைந்த செல்லம்மாள் தன் கணவன் மாரீஸ் மேல் வன்மம் கொள்கிறாள். மனம் முழுவதும் படர்ந்திருக்கும் வன்மத்தோடு மாரீஸோடு குடும்பம் நட்த்துகிறாள். அழகான ஆண்குழந்தை,கணவனைப் போலவே பிறக்கிறது. கணவனிடம் இருக்கும் வன்மம்  ,அவனைப் போலவே இருக்கும் மகன் ஆனந்திடமும் பரவுகிறது.




கணவனை இழந்த மாரீஸின் அக்கா திலகா, செல்லம்மா குடும்பத்தோடு இருக்கிறாள்.செல்லம்மா கவனிக்காத அவளது குழந்தை ஆனந்தை ,திலகா கவனிக்கிறாள்.செல்லம்மாவின் வன்மம் அறியாத திலகா,ஏன் தன் தம்பி மனைவி ,அவளது குழந்தையின் மேல் அன்பு செலுத்த மறுக்கிறாள் என யோசிக்கிறாள்.ஒரு விபத்தில் செல்லம்மாவின் கணவன்,மாரீஸ் இறந்து விடுகின்றான்.கணவன் இறந்தபின்பும்,அவன் மேல் இருந்த வன்மம்  மகனின் மேல் செலுத்தும்  வன்மமாகத் தொடர்கிறது.

சிறுவன் ஆனந்திற்கு ,தனது அம்மா ஏன் தன் மீது அன்பு செலுத்த மறுக்கிறாள் என்பது புரியவில்லை. அன்புக்கு ஏங்குகிறான்.புதூரில் இருக்கும் அலோசியஸ் பள்ளிக்குச்செல்கிறான்.. தன் நண்பன் சபரிக்காக,இன்னொரு மாணவன் மகேசை ஆனந்த் அடிக்கிறான். மனதிற்குள் வன்மம் வைத்து,இன்னும் இரண்டு மூன்று மாணவர்களை வைத்து ஆனந்தை வம்புக்கு இழுத்து,ஆசிரியரிடம் மாட்டவைக்கிறான் மகேசு. பள்ளிக்கு வரும் செல்லம்மா,தன் மகனைத்திட்டுகிறாள்.டி.சி.கொடுத்துவிடுவேன் எனத் தலைமை ஆசிரியர் மிரட்டுவதற்காகச்சொல்ல, செல்லம்மா டி.சி.யைக் கொடுத்துவிடுங்கள் என்று வாங்கிக்கொள்கிறாள்.” இந்த அம்மா ஏன் இப்படி இருக்கிறாள்? எங்கே என்ன நடந்தாலும் தன்னை இகழ்ந்தபடி இப்படியா இருப்பாள்?” என்று ஆனந்த பொருமுகிறான்.அம்மாவை அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று ஆகிறது.

மகன் ஆனந்தை ,மதுரையில் இருக்கும் தூய வளனார் மேல் நிலைப்பள்ளியில் சேர்த்துவிடுகிறாள் செல்லம்மா.பிரமாண்டமாக இருக்கும் புதிய பள்ளி,ஆனந்திற்குப் பிடிக்கவில்லை. அங்கு  இருக்கும் சூழலும்,ஆசிரியர்களும் ஆனந்திற்குப் பிடிக்கவில்லை.தன்னை இந்தப்பள்ளியில் சேர்த்துவிட்ட,தனது அம்மாவின் மீது வன்மம் கொள்கிறான் ஆனந்த்.  அம்மாவுக்கும் பிள்ளைக்குமாக ஏற்படும் இந்த வன்மத்தை இப்படிச்சொல்கிறார் நாவல் ஆசிரியர்.

.’எல்லாவற்றின் முன்பாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட உபவழியாக வன்மம் இருந்துகொண்டே இருக்கிறது.பசியும் தாகமும் சோர்வும் தளர்ச்சியுமாக வீழ்ந்து போய்ப் பாதியில் மடிந்து முடிந்துபோயிருக்கவேண்டிய பல பிரயாணங்களைக் கடைசிவரைக்கும் உயிர்ப்புடன் வழி கூட்டிச்செல்வதன் பெயர்தான் வன்மம்.ஓயாத மேஸ்திரியாகத் தன் கைச்சவுக்கைக் கீழிடாமல் முன்னால் செல்வதைக் கடைசிவரைக்கும் கருணையின்றிச்செலுத்துவது வன்மத்தின் வெளிப்பாடு …சின்ன்ஞ்சிறிய வயதில் எந்த முகாந்திரமும் இன்றி அங்கே ஒரு பகை உருவானது.ஒரு புறம் பெற்றவள்.இன்னொரு பக்கம் ஒரே மகன்….தாய் மகன் என்பதை மறந்து அங்கே ஒரு ஆட்டம் நிகழத் தொடங்கியிருந்தது”.(பக்கம் 46)

தாயின் மீது ஏற்பட்ட வன்மத்தால்,பிடிக்காத பள்ளிக்கூடத்தை மிகவும் பிடித்ததாகத் தன் தாயிடம் கூறுகின்றான்.அந்தப் பள்ளியில் வகுப்பு லீடராக இருக்கும் ராஜீ என்பவன் ஆனந்தின் மீது வன்மம் கொள்கின்றான். அவனை அஞ்சாமல் எதிர்க்கும் ஆனந்த் சண்டைக்கு அழைத்து அவனது ஆணவத்தைக் கொல்கிறான். ,அவர்களின் ஒத்தைக்கு ஒத்தை சண்டையைப் பற்றி விவரிக்கும் அத்தியாயம் 10 எனக்கு மிகப் பிடித்திருந்த்து.மிகவும் இரசித்து வாசித்த பகுதி இது.ஆனந்தின் அம்மா செல்லம்மா,ஒரு கட்ட்த்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு ,மும்பைக்கு சென்று விடுகின்றாள்.அவள் ஆனந்திற்கு என்று பணத்தை வங்கியில் போட்டு விட்டுச்செல்கின்றாள்.இப்போது அத்தை திலகா மட்டுமே ஒரே ஆதரவு ஆனந்திற்கு.

இந்த மாணவன் இப்படிப்பட்டவன்,இவன் தவறு செய்யக்கூடியவன் என்று முன் முடிவு எடுக்கும் ஆசிரியர்களால் நிரம்பியிருக்கிறது ஆனந்த் படிக்கும் பள்ளி.ஆனந்த அவதியுறுகிறான்.ஒரு கட்ட்த்தில் தேறி, படிப்பது என்று முடிவெடுத்து படிக்க ஆரம்பிக்கிறான்.இவனது ஆசிரியர் அருள் ஜெபத்துரை. நல்லவர். நன்றாகப் பாடம் நடத்துபவர்.அவர் மீது ராம்பிரபு என்னும் பணக்கார வீட்டு மாணவன் வன்மம் கொள்கிறான்.ஆசிரியரைச்செங்கலால் மறைந்திருந்து ராம்பிரபு தாக்க முனைகிறான்.செங்கல் தவறி,ஆசிரியருக்குப் பின்னால் சென்ற ராஜீ மீது பட்டு,மண்டை உடைந்து ராஜீ விழுகின்றான்.ஆசிரியர் மேலே பார்க்கும் நேரம் ராம்பிரபு மறைந்துகொள்ள,ஆனந்த் கண்ணில் படுகின்றான். அருள்ஜெபத்துரை ஆனந்துதான் எறிந்திருக்கிறான் என்று சொல்ல,வாட்ஸ்மேன் சாட்சி சொல்ல,உண்மையான குற்றவாளிக்குப் பதிலாக கொலை செய்த்தாக ஆன்ந்த சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுகின்றான்.உண்மைக்குற்றவாளியான ராம்பிரபு மீது ஆனந்திற்கு வன்மம் படர்கிறது. சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் இருக்கும் தயா,ராம்பிரபுவின் கழுத்தை அறுக்கவேண்டும் ,அதற்கு நான் துணை நிற்கிறேன் என்று சொல்கின்றான்.

சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து விடுதலையாகும் ஆனந்த்,ராம்பிரபுவை வஞ்சம் தீர்க்க வழி தேடி அலைகின்றான். உதவுவதாகச்சொன்ன தயா,வெறி நாய் கடித்து  பொசுக்கென்று இறந்து போய் விடுகின்றான்.திக்கற்று நிற்கும் ஆனந்த் ,கால் போன போக்கில் அலைகின்றான்.. கேரளா,சென்னை,மும்பை ,டில்லி என்று ஒவ்வொரு இடமாகச்சென்று ஆனந்த வேலை பார்ப்பது ,அங்கு அவனின் அனுபவங்கள் என இந்த நாவல் விரிகிறது.  ஒரு 184  பக்கங்களுக்குள் நூல் ஆசிரியர் காட்டும் வெவ்வேறு களங்களும்,வெவ்வேறு வகையான மனிதர்களைப் பற்றிய விவரிப்புகளும் இப்படியான மனிதர்களுக்குள்தான் இந்த உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதனை உணர்த்துகிறது.


மும்பையில் இருக்கும்போது தன் தாய் செல்லம்மாவைப் பார்க்,கின்றான்.அவள் இவனைப் பார்க்கவில்லை. அவள் போக்கில் அவள் வாழட்டும் என்று ஆனந்த் விட்டுவிடுகின்றான்.அம்மாவின் மீதான வன்ம்ம் இப்போது இல்லை,பக்குவப்பட்டிருக்கிறான்.டில்லியில் ஒரு  நட்சத்திர ஓட்டலில் 5 வருடங்களாக ஆனந்த் வேலை பார்க்கிறான்.அவனுக்கு கேரளாவும்,மும்பையும்,டில்லியும் நிறையக் கற்றுக்கொடுக்கிறது.டில்லியில் வேலை பார்க்கும் இடத்தில் நம்பிக்கைக்கு உரியவனாகவும்,மதிப்பிற்குரியவனாகவும் மாறியிருக்கிறான் ஆனந்த். அந்த நேரத்தில் இவன் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு செல்வதற்குக் காரணமாக இருந்த ராம்பிரபு ,ஆனந்த் வேலை செய்யும் ஓட்டலில் வந்து தங்குகிறான்.’ அவனது கழுத்தை அறு ‘என்று ஆனந்துக்கு தயாவின் குரல் உள்ளத்திற்குள் கேட்கிறது. ஆனாலும் ஆனந்த் பேசாமல் இருக்கிறான். ராம்பிரபு ஆன்ந்திடம் வந்து ‘என்னை மன்னித்து விடு ‘ என்று கேட்கிறான்.அவனிடம் ஆனந்த் ‘இந்தா பார் ராம், நான் உன்னை மறக்கலை.நீ செஞ்சதெதுவுமே மன்னிக்கவே முடியாதுன்றதும் உனக்குத் தெரியும் ….” என்று சொல்லும் கடைசிப்பக்கமும் ,அதற்கு முந்தைய பக்கமும் இந்த நாவலின் மிக முக்கியமான பக்கங்கள்.

தான் அறிந்த மதுரையை மிக விரிவாகவே இந்த நாவலில் ஆத்மார்த்தி கொடுத்திருக்கிறார்.மூன்று மாவடி,புதூர்,புதூர் அலோசியஸ் ஸ்கூல்,தூய வளனார் மேல் நிலைப்பள்ளி என அவை பற்றிய விவரிப்புகளோடு கதையும் நகர்ந்து செல்வது படிக்கத்தூண்டுவதோடு மதுரையில் வசிக்கும் எனக்கு மிக  நெருக்கமாகவும்  தோன்றுகிறது.சென்னை,மும்பை,டில்லி,கேரளா பற்றிய விவரிப்புகளும் இப்படியே  இருக்கக்கூடும். அந்த ஊர்களில் வசிப்பவர்கள் இன்னும் கூடுதலாகச்சொல்ல முடியும்.

இந்த நாவலின் சிறப்பாக நான் கருதுவது,நாவலுக்கு இடையே சொல்லப்படும் கருத்துகள் என்பவைதான். பயிர்களுக்கு இடையே விதைக்கப்படும் ஊடுபயிர் போல, நாவலின் கதை ஓட்டத்திற்கு மட்டுமல்ல,படிப்பவனின் சிந்தனைக்கும் கூட இந்தக் கருத்துகள் வளம் சேர்க்கின்றன.  ‘சின்னதொரு பார்வை பல்லாயிரம் உளிகளுக்குச்சமம்…வெற்றி  தோல்வியற்ற சம நிலை எந்த இடத்திலும் நன்மை பயக்காது.சொல்லப்போனால் தோல்வி கூட மனதை  ஆற்றிவிடும்.வெற்றி தரவேண்டிய சமாதானத்தை ஒரு போதும் சம நிலை அளிக்காது.மாறாக இதற்கு நீ தோற்றே இருக்கலாம் என்றுதான் கூக்குரலிடும்.சம நிலை என்பது இருபுறமும் தோல்வி என்றால்கூடப் பொருந்தும்’ என்று சொல்லிவிட்டு ‘செல்லம்மா மற்றும் ஒரு பெண்ணாகத் தன் மனத்தைக் கொன்றாள்.அவளுக்கென்று இருந்த குறிப்புகளற்ற கனவுப்பாடல் ஒன்றின் எல்லாச்சொற்களையும் கண நேரத்தில் கிழித்தெறிந்தாள்…’(பக்கம் 17) என்று நாவல் ஆசிரியர் சொல்லிச்செல்வது கவித்துவமாகவும்,தத்துவமாகவும்,கதையை நகர்த்தும் உத்தியாகவும் பயன்படுகிறது. இப்படியான உத்திதான் இந்த நாவல் முழுக்கக் காணப்படுகிறது. நிறையத் திருப்பங்களோடு நல்ல வாசிப்பு அனுபவம் தந்த நாவல் இது. படித்துப்பாருங்கள்

Wednesday 12 May 2021

மாட்டுக்கும் கீழாய் ஆக்காதீர்

காற்றில் நஞ்சினை

உமிழும் நாகமாய்

நாட்டில் கரோனாத்

தொற்று நடமாட்டம்...


ஒன்றாம் அலை 

இரண்டாம் அலையென

அலை அலையாய்

மனித உயிர்களை

அள்ளிச்செல்கிறது.கரோனா


திகைத்து நிற்கிறது தேசம்...

அறிவியல் வழியாய்

தீர்வுகளை முன்வைக்கும்

அறிஞர்களின் சொல்படி 

நடக்க நாடு முனைகிறது.....


ஆனால் ..என்ன சொல்ல?

விஞ்ஞானிகளுக்கு

எதிராக அஞ்ஞானிகள்

அணிவகுத்து நிற்கிறார்கள்....


அரசியலில் நஞ்சினைக்

கலப்பது போல

மதத்தினைக் கலந்தவர்கள்...

அறிவியல் வழிமுறைக்கு

எதிராகவும் மதத்தினைக்

கலக்குகிறார்கள்....


மாட்டுச்சாணத்தை 

உடலில் பூசு....

மாட்டுக் கோமியத்தை

மடக்கு மடக்கு என்று குடி....

பூசிய மாட்டுச்சாணத்தை நீக்க

பசுவின் பாலை ஊத்திக்குளி...

கரோனாவை விரட்டிட

இது குஜராத் மாடல்...



பார்ப்பனர்கள் வேதம் ஓத

பதினோரு லிட்டர் பாலை

சிவலிங்கத்தின்மேல் ஊற்றி

அருகம்புல்லை அரைத்துஅதன்

ஐந்து லிட்டர் நீரையும் ஊற்றி

சிவனுக்குப் பூசை செய்து பின்

மாடுகளுக்கு உணவு அளித்து...

கரோனாவை விரட்டிட

இது உ.பி.,மாடல்


உ.பி.மாடலைச்செய்தவர் 

மடத்து அதிபதி என்றால்

அது அவர் விருப்பம் ..

மூட நம்பிக்கை நிகழ்வு

எனச்சுட்டி விட்டுவிடலாம் ...

ஆனால்...செய்தவர் 

மாநிலத்து முதலமைச்சர்.

அனைத்து மக்களுக்குமான

முதலமைச்சராய் உ.பி.யில்

அமர்ந்திருக்கும் சாமியாரின் 

செயல் இது சரிதானா? சிந்திப்பீர்...


கோயிலோ..மசூதியோ...

சர்ச்சோ....

வழிபாட்டுத்தலம் எதுவும்

கரோனா தடுப்புக்கு

வழிகாட்டப்போவதில்லை...


அறிவியல் வழிமுறையாய்

தடுப்பு மருந்துகள்.....

நோய் வந்துவிட்டால் நம்

உயிர்க்காக்கும் மருந்துகள்

என மருத்துவர்கள் 

சொல்வதை மட்டும் கேட்போம்....


நாட்டு மக்களுக்கு 

நன்மை செய நினைத்தால்

மருத்துவக் கட்டமைப்பை

கூட்டுங்கள்..அதற்காக

கூடுதல் நிதி ஒதுக்குங்கள்..

மாடுகள்கூட உண்ணமறுக்கும்

மாட்டுக் கழிவுகளை

உண்ணச்சொல்லி 

மனிதர்களை மாட்டுக்கும்

கீழாய் ஆக்காதீர்....

மத ஆட்சியாளர்களே...


                    வா.நேரு 12.05.2021

Sunday 9 May 2021

துணை நிற்போம் வாரீர் ! வாரீர்!

கூனிக்குறுகி நெளிந்து

குனிந்து தவழ்ந்து

காலில் விழுந்து எழுந்து

பதவிகள் பெற்று

மாநிலத்தின் உரிமையை 

எல்லாம் 

மத்திய அரசுக்கு 

அஞ்சி நடுங்கி 

அடகுவைத்த 

கொடுமையைக்  கண்டோம் 

சில ஆண்டுகளாய்...


இருளை அகற்றப் பிறந்த

சூரிய ஒளியாய்

கைவிரல்களில் வைத்த மையால்

புதிய ஆட்சி உதித்தது...


திறமை மிகு

அதிகாரிகள்

தலைமைப் பதவிகளில்..


நேர்மை மிகு 

அதிகாரிகள்

உயர் பதவிகளில்


உள்ளம் இனிக்கிறது

உவகை பிறக்கிறது

திராவிடத்தின் வெற்றி

திசையெங்கும் ஒலிக்கிறது....


ஓட்டுக்கு பணமா?

ஊகும்....கிடையாது

தொடர்ச்சியாய் 

இருமுறை வெற்றி...

தொகுதிக்கு ஒதுக்கும் பணத்தின்

வரவு செலவுத்திட்டம்

எங்கும் இல்லை இப்படி...

வட நாட்டுப் பத்திரிக்கை

எல்லாம் வியந்து பார்த்த

சட்டமன்ற உறுப்ப்பினர் அவர்...


உலகம் சுற்றிவந்த

பொருளாதார நிபுணர்

உண்மையை எங்கும்

சொல்லஞ்சா மனிதநேயர் அவர்...

எதையும் எதிர்பார

பெருமை மிகு 

குடும்பத்தின் வாரிசு...

இந்த ஆட்சியின் நிதியமைச்சர்...


மெத்தப்படித்தவர்கள்...

மேன்மைமிகு குணமுடையோர்

களப்பணியால் பெருமைபெற்றோர்

கற்றறிந்த சான்றோர் 

அடங்கிய அமைச்சரவை ....

கொடுமையான கரோனாவை

எதிர்கொள்ள

ஏற்றமிகு படையாய்

இணைந்து நிற்கும்

அதிகாரிகளும் அமைச்சர்களும்....

அறிவியலும்

மனிதநேயமும் இணைந்த

அறிவிப்புகள் 

வருகிறது நாள்தோறும்...


"எல்லார்க்கும் எல்லாம்"

திராவிட இயக்கம்

நோக்கம் நோக்கி 

இணைந்து நடப்போம்

வாருங்கள் என அழைக்கிறார்

நம் முதல்வர் ஸ்டாலின்...

வாருங்கள் இணைவோம்...

வளமிக்க தமிழ் நாட்டை 

அமைக்க அவருக்கு

துணை நிற்போம் வாரீர் ! வாரீர்!


                          வா.நேரு...09.05.2021