Sunday 13 June 2021

மனு தர்ம நூலில் 'திராவிடம்' என்னும் சொல்....

 திராவிடன் மாடல் ..புத்தக விமர்சனம்.....அய்யா ஆசிரியர் கி.வீரமணி

            (வாருங்கள் படிப்போம்...2  அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரை தொடர்ச்சி)

வர்ணம் பிறவி அடிப்படையிலே நிர்ணயிக்கக்கூடியது.வகுப்பகளிலிருந்து வெளியேறலாம்.உள்ளே போகலாம்.முன்னேறலாம்.கீழ்பபடி நிலைக்கு வரலாம்.ஆனால் வர்ணம் என்பது இருக்கிறதே,ஒரு முறை அந்த ஜாதியிலே பிறந்துவிட்டால், மதங்கள் மாறுவதற்கு கூட உரிமை உண்டு,ஜாதி மாறுவதற்கு உரிமை கிடையாது.அந்த ஜாதியிலே உயர் ஜாதிக்காரனுக்கு வசதி உண்டு,அந்த ஜாதியின் காரணமாக தாழத்தப்பட்டு,பிற்படுத்தப்பட்டு,ஒடுக்கப்பட்டு,அடிமைப்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய மற்றவர்காளுக்கு அந்த வருண தர்மம் எனபதிலே எது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ,அதிலிருந்து அவர்கள் நகரக்கூடாது. என்று ஒரு காலங்காலமாக நிலைந்த ஒரு சமூக அநீதியை எதிர்த்துத்தான் சமூக நீதி என்ற போர்க்கொடி தூக்கப்பெற்றது.அந்த சமூக நீதிக்கொடியை உயர்த்திய இயக்கம்தான் திராவிடர் இயக்கம்.அந்த திராவிடர் இயக்கத்தின் முன்னனி என்பது இருக்கிறதே அது மிக முக்கியம்.

இங்கு 1967-லிருந்து 50 ஆண்டுகளை ஆய்வு செய்திருக்கிறார்கள்.அதற்கு அடுத்த தலைப்புகளையும் சொல்லிவிட்டு அடுத்த செய்திகளுக்குச்செல்லலாம் .நேரம் குறுகிய காலம்.அடுத்தது “Broadening Growth and Democratising Capital “.அதே மாதிரி வளர்ச்சி என்பது இருக்கிறதே அது ஒரு பக்கத்திலே மட்டும் வளர்ச்சியடைந்தால் அது வளர்ச்சி அல்ல,அது வீக்கம்.அதைப் பரவலாக்க வேண்டும்.வளர்ச்சி வேறு.வீக்கம் வேறு.அதுதான்.பணமே-அது அதிக அளவிற்கு வரும்போது பணவீக்கம்,.Inflation  என்பதற்கு   என்ன சொல்லைத் தமிழிலே பயன்படுத்துகிறோம் என்றால் பணவீக்கம் என்றுதான் சொல்கின்றோம்.பண வளர்ச்சி என்று அதற்குப் பொருள் அல்ல.Growth என்பது வளர்ச்சி.வீக்கம் என்பது இருக்கிறதே அது வித்தியாசமானது.உடல் முழுவதும் வளர்ந்தால் அது வளர்ச்சி.ஒரு குறிப்பிட்ட பாகம் மற்றும் வளர்ந்தால் அது வீக்கம்.ஆகவேதான் அதனை தெளிவாகச்சொல்லி ,வளர்ச்சி வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்,என்ன செய்திருக்கிறார்கள்,என்பதற்கு அடையாளமாக பல்வேறு மாநிலங்களை ஒப்பிட்டு,மிக அருமையான அளவிற்கு சொல்லுகிற தலைப்பு "Broadening Growth and Democratising Capital " என்பதாகும்..

அடுத்தபடியாக நமது நாட்டிலேயே நகரம்,கிராமம் வேறுபாடு.இதைக்கூட தந்தை பெரியார் கிராம சீர்திருத்தம் என்ற அற்புதமான ஒரு சிறிய நூலிலே தெளிவாகச்சொன்னார். நகரம்,கிராமம் என்ற பேதம் இருக்கிறதே அது பிராமணன் ,சூத்திரன் என்ற பேதம் இருக்கிறதே அது மாதிரியானது,உயர்ந்தவன் ,தாழ்ந்தவன் என்ற பேதம் மாதிரியானது ,ஒருவர் உழைப்பிலே இன்னொருவர் வாழக்கூடிய அந்தச் சூழல் என்பது தவறு,எனவேதான் இந்த பேதமே நகரம்,கிராமம் என்ற பேதமே இருக்க்க்கூடாது என்று மிக  நீண்ட காலத்திற்கு முன்னரே பெரியார் இந்தத் தத்துவத்தை எடுத்துச்சொன்னார்.எனவே “Transforming Rural Relations”,என்பது,அதனை மாற்றிக்காட்டவேண்டும் சமுதாய அடிப்படையிலே என்று எடுத்துக்காட்டுவதுதான் இந்த இயல்..

ஏழாவது  இயல் "Popular Interventions and Urban Labour "….அதன் மூலம் எப்படியெல்லாம் இடையூறுகள் ஏற்பட்டு ,மிக முக்கியமான மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கின்றன என்று சொல்லி அதிலே எப்படிப்பட்ட சூழல்கள் ஏற்படக்கூடும் .இடையூறுகள் அல்லது அளவீடுகள் அதற்கு எல்லைக்கோடுகள் இவைகள் எல்லாம் என்னென்ன நிகழ்வுகள்,வரக்கூடிய வாய்ப்புகள் இவைகளை எல்லாம் கடைசியாக @Fissures,Limits and Possible Futures  என்று எட்டாவது தலைப்பிலே எழுதியிருக்கிறார்கள்.

எனவே  நண்பர்களே,இதிலே மிக முக்கியமானது,சுட்டிக்காட்ட வேண்டிய செய்திகளை எல்லாம் எடுத்துச்சொல்லியிருக்கிறார்கள் என்றாலும்,இந்த நூலை இங்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த நூல் ஏற்கனவே அறிமுகமாகியிருக்கிறது அறிமுகம் என்பதன் மூலமாக ஒரு தொடர்பைக் காட்டுகிறோம். எனவே நூலுக்குள்ளே போய் ஒவ்வொன்றாக ஆய்வு  செய்வதென்றால் அவ்வளவு ஆழமான செய்தி இருக்கிறது.நீங்கள் இந்த நூலை வாங்கிப் படிக்கவேண்டும். ஆங்கில அறிவும் வாய்ப்பும் உள்ளவர்கள் படிக்கவேண்டும்..நிச்சயமாக இது தமிழிலே வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.விரைவில் இது தமிழில் கிடைக்கும்.கிடைக்க வேண்டும்.அதற்கு வேண்டிய முயற்சிகளைச்செய்யவேண்டும். என்பதும் என்னுடைய அன்பான  வேண்டுகோள் ஆகும்.

அருமை நண்பர்களே,முதலில் ஒரு செய்தியைச்சொல்லவேண்டும்.அது என்ன..திராவிடியன் மாடல்..முதல் கேள்வியே அதுதான் இந்தப்புத்தகத்தில்.திராவிடியன் மாடல் என்னும் பெயர் ஏன் வந்த்து?ஏப்படி வந்தது?.திராவிட மாடல் என்றால் அப்போது இன்னொரு மாடல் என்ன என்று வருகின்றபோது நண்பர்களே,வித்தியாசம் இருக்கிறது.நம்முடைய நாட்டிலே திராவிட என்ற பெயரைக்கேட்டாலே சில பேருக்கு ஒவ்வாமை.சில பேருக்கு அவசரம்.சில பேர் அதனை திசை திருப்புவதற்கு.காலம் காலமாக நமது பாரம்பரியம் நாகரிகம் எல்லாம் திராவிடம்தான்..பார்ப்பனரல்லாதார் இயக்கம்  முதலில் சவுத் இந்தியன்  லிபரேசன்பெடரேசன் என்று 1916களில் அந்த அமைப்பு நடந்தபோது,அந்த  அமைப்பு நடத்திய ஒரு பத்திரிக்கை ‘ஜஸ்டிஸ்’.அந்தப் பத்திரிக்கை பெயரிலேயே நீதிக்கட்சி..நீதிக்கட்சி என்னவென்றால் திராவிடர் கட்சி.அதற்கு முன்னாலேயே அதனை உருவாக்கியவர்கள்.காலங்காலமாக கல்வியிலே அதன் மூலமாக அரசுப்பணிகளிலே ,மற்ற இடங்களில் எல்லாம் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அதன் மூலம் பொருளாதாரத்திலே அவர்கள் ஒரு சிறப்பான வாழ்க்கையைப் பெறமுடியாதவர்களாக ,பெரும்பாலான மக்கள்,அதுவும் இந்த மண்ணுக்கு உழைக்கின்ற மக்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து,அவர்களுக்கு கல்வியைக் கொடுப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதற்காக முன்னோடிகளாகத் துவக்கியவர்கள்.

ஒரு உதாரணத்தை,புத்தகத்தின் உள்ளே மிக அழகாக எடுத்து சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.1912-லே நீதிக்கட்சி ஆரம்பிப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னால்,டாக்டர் சி.நடேசனார் திராவிடன் ஹோம்,திராவிடன் இல்லம் என்று ஒன்றை ஆரம்பித்தார்.திராவிடர் இல்லம் என்பது ஒரு விடுதி.திருவல்லிக்கேணியிலே ஆரம்பிக்கப்பட்டது. .அதிலே வாய்ப்பு இல்லாதவர்கள் எல்லாம் தங்கிப் படித்தார்கள்.சர்.ஆர்.கே.சண்முகம் போன்றவர்கள் அங்கே இருந்தார்கள்.பிற்காலத்திலே உலகம் புகழும் பொருளாதார நிபுணராக வந்தவர் ஆர்.கே.சண்முகம்.அப்படிப்பட்டவர்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலே இருந்து வரக்கூடியவர்கள்,படிக்கக்கூடாதவ்ரகள் என்று சொல்வதற்கு டிப்படை  மனுதர்மம்.மனுதர்மத்தின் அடிப்படையில் வரக்கூடியது.எனவேதான் ஜாதி என்னும் அடிப்படையில் ஏன் என்பதனை முதலிலேயே இந்த நூலில் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.ஜாதி அடிப்படையில் ஒரு சமுதாயம் ஏற்கனவே இருக்கிறது..திராவிட மாடலுக்கு எதிரான ஒன்றைச்சொல்லவேண்டுமென்றால் அது மனு.திராவிட மாடல் சமதர்மம்,அது குல தர்மம்.இதுதான் மிக முக்கியமானது.குலம் என்று சொல்கின்ற நேரத்திலே ,அதனை நாம் உருவாக்கவில்லை.திராவிட்த்திற்கு அது நேர் எதிரானது.இதிலே நாம் திராவிடம் என்று சொல்கின்றபோது சில பேர் ஒவ்வாமை கொண்டவர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள்,?.அது என்ன்ங்க திராவிடம் என்பது ,ஒரு கிறித்துவர் வந்தாரு,கால்டுவெல் வந்தாரு,அவரு திராவிடம் என்ற பெயரைக் கொடுத்தார் ,அதைப் பிடிச்சுகிட்டு இவங்க திராவிடம்,திராவிடம் என்று சொல்கிறார்கள் என்று இங்கு இருக்கும் சிலர்,புரியாமல் குழப்பவாதிகள் சொல்கிறார்கள்.

திராவிடம் என்பது வெறும் இனப்பெயர் என்று மட்டும் நினைக்கக்கூடாது.மொழி,பண்பாடு,கலாச்சாரம்,உரிமை வேட்கை,சமூக நீதி,சமுத்துவம் இவை.எல்லாவற்றையும் உள்ளடக்கியது திராவிடம்.எனவே இது திடீரென்று யாரோ கொடுத்த பெயர் அல்லது பெரியார்  கொடுத்த பெயர் என்று நினைத்துக்கொண்டு,பெரியார் மீது இருக்கிற கோபத்திலே இதைப் பேசுகிறார்கள்.அல்லது திராவிட இயக்கத்தின் மீது ,அறிஞர் அண்ணாவின் மீது அல்லது மற்றவர்கள் மீதோ இருக்க்க்கூடிய அந்த வெறுப்பிலோ,கோபத்திலோ,எரிச்சலிலோ சொல்கிறார்கள்.அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் திராவிட மாடல் என்ற ஒரு அருமையான தலைப்பை எடுத்து மிகச்சிறப்பான வகையிலே கொடுத்திருக்கிறார்கள்.தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களே,அதற்குத்தான் சொன்னேன்,துணிவு வேண்டும் என்று.

தகவலுக்காகச்சொல்கின்றேன்,ஏனென்றால் பலபேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.திராவிடம் என்ற சொல்,முதன்முதலில் கால்டுவெல் அவர்களால்தான் சொல்லப்பட்ட்து என்று சொல்கிறார்களே,அந்தக் கூற்று உண்மையா?.அருள் கூர்ந்து புரிய வேண்டும்.திராவிட மாடல் என்று சொல்வதற்கு முதலில் திராவிடம் என்று சொல்கின்றபோது  மொழி,பண்பாடு,கலாச்சாரம்,நாகரிகம்,சமூக அமைப்பு என்று எல்லாமே இருக்கிறது என்றாலும் இந்தத் திராவிடம் என்ற சொல் வரலாற்று ரீதியாக இருக்கிறது.அதுதான் தந்தை பெரியார் சொன்னார்.பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று  சொல்லப்பட்ட அந்த நேரத்திலே பெரியார் தான் சொன்னார்.அது என்னய்யா ,100க்கு 3 பேரா பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்,அதனை ஏன் நாம் நெகட்டிவ்  டெபனிசனாக  கொடுக்கவேண்டும்.பெரும்பான்மையான மக்களுக்கு என்று ஒரு முகவரி இல்லையா?..அதனுடைய ஆழமான கருத்து என்னவென்றால் பண்பாடு,கலாச்சாரம்,நாகரிகம்-சிந்து வெளி நாகரிகத்திலிருந்து திராவிட நாகரிகம்,திராவிட மொழிக்குடும்பம், என்று மொழி பண்பாடு என்று எல்லாவற்றிலுமே இருக்க்க்கூடிய அந்த வாய்ப்புகள் பெற்றிருக்கிறது என்பதற்கு அடையாளமாகத்தான் இருக்கிறது என்பதைச்சொல்லிவிட்டு தந்தை பெரியார் சொன்னார்.திராவிடம் என்பது வெறும் வரலாற்றில் மட்டுமல்ல,நீங்கள் எழுதிவைத்திருக்கிற புராணத்திலும் மனு தர்மத்திலுமே இடம் பெற்றிருக்கிறதே என்று சொன்னார்.இது பலபேருக்குத் தெரியாது.

இதோ என் கையில் இருப்பது மனுதரும சாஸ்திரம்.இந்த நூல் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் வந்தது.1919-ல் வெளிவந்த நூல்.102 ஆண்டுகள் ஆகிவிட்ட்து.அதனை அப்படியே எடுத்து அசல் மனுதர்ம்ம் என்ற பெயரிலே வெளியிட்டு இருக்கிறோம்.பல பதிப்புகள் கண்ட நூல் இது.இந்த அசல் மனுதர்ம்ம் நூலிலே இருக்கக்கூடிய 10-வது அத்தியாயத்தில் 44 சுலோகத்திலே  சொல்கின்றார்கள்.

"பெளத்திரம்,அவின்றம்,திரவிடம்,கம்போசம்,யவனம்,சகம்,பாரதம்,பால்தீகம்,சீனம்,பிராதம்,கஷ்டம் ..என்று.மேற்கண்ட தேசத்தில் ஆண்டவர்கள் எல்லோரும் சூத்திர்ர்கள் என்று ஆகிவிட்டார்கள் என்று சுலோகம் சொல்கிறது.ஆகவே இது  மனுதர்ம காலத்திலிருந்து வந்திருக்கிறது.மனு எப்போது ஆரம்பித்து வந்தது என்பதற்கு அவர்களே பதில் சொல்லட்டும்.ஆகவே இதை எதற்காகச்சொல்கிறேன் என்று சொன்னால் யாரையும் சங்கடப்படுத்த அல்ல.திராவிடம் என்பது வரலாற்று ரீதியாகவும் இருக்கிறது.புராண ரீதியாகவும் இருக்கிறது.இன்னும் கேட்டால் பாகவத புராணங்கள் போன்றவற்றில் திராவிடம் என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது.இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.

இந்தத் திராவிட மாடல் என்று சொல்கிறபோது ,அதற்கு என்ன தனித்தன்மை?.”அனைவர்க்கும அனைத்தும் “ அதுதான் தனித்தன்மை.இதிலே பிரிப்பது இல்லை.’பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’,’யாதும் ஊரே,யாவரும் கேளிர்’, எல்லோரும் உறவினர்,அந்த உறவு,இதிலே பேதப்படுத்துவதில்லை.பேதப்படுத்துவதற்கு,வேற்றுமைப்படுத்துவதற்கு இடமேயில்லை.இப்போது எல்லாம் மிக நாகரிகமாக ,அறிவார்ந்து பேசக்கூடிய ஆங்கில புலமை படைத்தவர் என்று சொல்கிறபோது,வளர்ச்சி என்று சொல்கின்றபோது inclusive growth, exclusive growth என்று இரண்டைச்சொல்கிறார்கள்.அதாவது எல்லோரையும் ஒருங்கிணைத்து,அரவணைத்து செல்லக்கூடிய ஒரு வளர்ச்சி.அது inclusive growth. மக்களைப் பிரித்து ,மக்களை ஜாதிகளால்,மதத்தால்,மற்றவைகளால் பிரித்து,பிரித்து அதன் மூலம் கிடைக்க்க்கூடிய வளர்ச்சி அது exclusive growth. Dravidian model is an inclusive philosophy.Dravidian growth itself is a humanist.Human approach,humanisation.இதிலே யாரும் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் என்று இல்லை. ‘எல்லோருக்கும் எல்லாமும்’.Equal Opporunity,Equality..சமத்துவம் என்பதுதான் திராவிடத்தத்துவம்.அந்த சமத்துவத்தை அடிப்படையாக்க் கொண்டு செயல்பட்ட்து திராவிட மாடல்.இதற்கு முன்னால் இருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை.அதுக்கு பெரிய அளவிற்குப் போகவேண்டாம்.இந்தப் புத்தகத்தில் இருக்கிற இரண்டே இரண்டை எடுத்துக்கொள்ளலாம் நேரத்தைக் கருதி.

                    (தொடரும்)


தொகுப்பு : மதுரை வா.நேரு

நன்றி விடுதலை 31.05.2021



 


Saturday 12 June 2021

வாருங்கள் படிப்போம்..... அய்யா ஆசிரியர் அவர்கள் உரை (1).....மதுரை வா.நேரு

வாருங்கள் படிப்போம் ' என்னும் வாட்சப் குழு ,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைத்தலைவர் கோ.ஒளிவண்ணன் மற்றும் பேராசிரியர் உமா.மகேஸ்வரி அவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டு, தொடர்ந்து சனிக்கிழமை தோறும் ,மாலையில் நூல் விமர்சனக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் குழுவின் 50-வது வார நிகழ்வுக்கு,சிறப்பு அழைப்பாளராக ,'தி திராவிடன் மாடல்' என்னும் நூல் பற்றி உரையாற்றுவதற்காகத் திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டு,அய்யா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.நிகழ்வின் தொடக்கத்தில் முதல் வாரம் தொடங்கி,49 வாரங்கள் வரை ,விமர்சனம் செய்யப்பட்ட நூல்கள்,நூல் விமர்சனம் செய்த ஆளுமைகள், இந்தக் குழுவிற்கு ஆலோசகர்களாக இருப்பவர்கள்,விமர்சனம் செய்யப்பட்ட நூல்களின் ஆசிரியர்கள் கலந்து கொண்ட நிகழ்வுகள் என்று வெகுசிறப்பாக,கணினி பவர்பாயிண்ட் மூலமாக, இந்தக் குழுவில் உள்ள திருமதி ரேணுகா குணசேகரன் அவர்களின் வடிவமைப்பில் திரையில் காட்டப்பட்டது. தொடர்ந்து இந்தக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உமா.மகேஸ்வரி அவர்கள் தமிழர் தலைவரையும், மற்றவர்களையும் வரவேற்று உரையாற்றினார். தொடர்ந்து அறிமுக உரையினை கோ.ஒளிவண்ணன் நிகழ்த்தினார்.


கோ.ஒளிவண்ணன்


இந்த 50வது ஆண்டு விழாவிற்கு அய்யா ஆசிரியர் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்தால் மிக நன்றாக இருக்கும் என்று இந்தக் குழுவினர் நினைத்தோம். ஒரு மனதாக அய்யா ஆசிரியர் அவர்களை அழைப்பது என முடிவு செய்தோம்.நான் சிறுவயதில் 7,8 வயதாக இருக்கும்போது ,எனது தந்தை கோபாலகிருஷ்ணன் அவர்களோடு பெரியார் திடலுக்குப் போயிருக்கிறேன். அங்கு சிங்கம் போல அமர்ந்திருந்த தந்தை பெரியாரைப் பார்த்திருக்கிறேன். அதற்குப் பின்பு அய்யா ஆசிரியர் அவர்கள்தான் எல்லாம்.ஏதாவது ஒரு கூட்டத்தில் அய்யா ஆசிரியர் பேசுகிறார் என்றால்,5,6 புத்தகங்கள் அவர் பக்கத்தில் இருக்கும். பேசிக்கொண்டு இருக்கும்போதே அந்தப் புத்தகங்களை எடுத்து,ஆதாரங்களைக் காட்டுவார்.பேசிக்கொண்டிருக்கும்போதே புத்தகத்தை எடுப்பது,புத்தகத்தைப் புரட்டுவது,குறிப்பிட்ட பக்கத்தை எடுத்து ஆதாரத்தைக் காட்டி பேசுவது மிக லாவகமாக இருக்கும்.பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.


புத்தகங்கள் மீது எனக்கு காதல் வருவதற்கு எனது தந்தையார் கோபாலகிருஷ்ணன் ஒரு காரணம் என்றால்,அதே அளவிற்கு எங்கள் சமூகத்தந்தை அய்யா ஆசிரியர் அவர்களும் ஒரு காரணம்.அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது மிகவும் சிறப்பு.சென்ற ஆண்டு இதே காலகட்ட்த்தில் பேரா.உமா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஏன்,நாம் வாருங்கள் படிப்போம் என்னும் ஒரு குழுவை ஆரம்பிக்க்க்கூடாது என்பது பற்றிப்பேசினோம்.ஆரம்பித்தில் ஆரம்பித்தபோது மிக்க்குறைவானவர்கள்தான் இருந்தார்கள். நேரு அவர்கள்,குமரேசன் அவர்கள்,சபாரத்தினம் அவர்கள் என்று இப்படித்தான் ஒரு சிறு குழுவாக ஆரம்பித்தோம்.இன்றைக்கு நூறு பேர் இதில் இணைந்துவிட்டு,இன்னும் 50 பேர் இணைவதற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவிற்கு இந்தக் குழு பெரிய அளவில் விரிவடைந்து இருக்கிறது.இதற்கு மிக முக்கிய காரணம் இதன் ஒருங்கிணைப்பாளர் பேரா.உமா அவர்களின் ஈடுபாடும் ஒருங்கிணைப்பும்தான் காரணம்.வாரவாரம் சனிக்கிழமை தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.ஒரு அமைப்பின் மேன்மை அதன் தொடர்ச்சியில்தான் இருக்கிறது என்று சொல்வார்கள்.கோலகலமாக ,சிலர் ஆரம்பிப்பார்கள்,அதனைத் தொடர்ந்து நடத்தமாட்டார்கள்.அந்தவகையில் தொடர்ச்சியாக  ஒரே வகையான பிரிவாக இல்லாமல்,பல்வேறு வகையிலான பிரிவுகளில் எடுத்து,ஜீலை மாதம் வரை திறனாய்வு செய்வதற்கு ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது என்று சொன்னால் பேரா.உமா மகேஸ்வரி அவர்களின் ஈடுபாட்டிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


அய்யா ஆசிரியர் அவர்களையும் புத்தகத்தையும் எப்போதுமே பிரிக்கமுடியாது. எப்போதுமே அவர் புத்தகக் காதலர்தான்.சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து மதுரைக்குப்போனோம். ஒரு 5,6 பேர் போனோம்.நாங்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்னால் எங்களோடு பயணித்த மருத்துவர் ஷாலினி அவர்க்ள் எங்களிட்த்தில் ஒரு புத்தகம் கொடுத்தார். ஆசிரியரிடமும் கொடுத்தார்.’கொஞ்சம் டார்வின்,கொஞ்சம் டாக்கின்ஸ்’ என்னும் புத்தகம்.மருத்துவர் ஷாலினி எனது பக்கத்தில்தான் விமானத்தில் அமர்ந்திருந்தார்.விமானம் புறப்பட்டவுடன் நான் தூங்கி விட்டேன்.மதுரைக்கு வந்தபோதுதான் விழித்தேன்.ஷாலினி அவர்கள் என்ன தோழர் இப்படி தூங்கி விட்டீர்கள் என்றார்.தூங்கினால்தான் புத்துணர்ச்சியாக இருக்கும் என்றேன் அவரிடம்.அவர் சிரித்துக்கொண்டார்.விமானத்தில் இருந்து இறங்கி,வாகனத்தில் பயணித்தபோது,ஆசிரியர் ஷாலினியிடம்,’அம்மா,இந்தப் புத்தகத்தை நான் படித்துவிட்டேன்’என்றார். எனக்கு பெரிய அதிர்ச்சி. அவரோடு ஒப்பிடும்போது நான் சின்னப்பையன்.நம்ம வயதுக்கு நாம தூங்கிட்டு வரணும் என்று நினைத்தோம். அய்யா ஆசிரியர் அவர்கள் இந்த வயதில் படித்துவிட்டு வந்திருக்கிறாரே என்று நினைத்து வெட்கப்பட்டேன்.. படித்த்து மட்டும் இல்லாமல், அந்தப் புத்தகத்தில் குறிப்பு எல்லாம் எடுத்து வைத்திருந்தார்.அதைப் பற்றி விவாதித்தார்.


அதைப்போல இன்னொரு நிகழ்வு.சில ஆண்டுகளுக்கு முன்னால் பெரியார் பன்னாட்டு மையம் அமைப்பின் சார்பாக ஜெர்மனியில் குளோன் நகரத்தில் ஒரு மாநாடு நடந்தது.அந்த நகரத்தின் பல்கலைக்கழகத்தில் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் நானும் கலந்துகொண்டேன். ஒரு பேப்பரை நானும் பேசி அளித்தேன்.அந்த மாநாடு முடிந்து எல்லோரும் அங்கிருக்கும் நதியில் ஒரு குரூஸ் போகலாம் என்று முடிவுசெய்தார்கள். நானும் சென்றேன்.அய்யா ஆசிரியரும் வந்திருந்தார்.. நாங்கள் போய்விட்டு ஊரையெல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு வரும்போது நேரம்,4,4.30 இருக்கும்.அவ்வளவு அசதி.வந்தவுடன் பார்த்தேன்.அய்யா ஆசிரியர் அவர்கள் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். 8,9 மணி வரை படுத்து தூங்கிவிட்டு,கீழே வந்து பார்த்தால்,ஆசிரியரும் அவரோடு பேசிக்கொண்டிருந்தவரும்,வெளியில் சென்று விட்டு  உள்ளே வருகிறார்கள். நான் கேட்டேன். ‘அய்யா எங்கே போயிருந்தீர்கள் என்று ?”” என்னய்யா, நீங்க வரமாப் போயிட்டிங்க,இங்கே ஒரு அருமையான புத்தக்க் கடை இருக்கிறது. போய்விட்டு வந்தோம்’ என்றார். ஒரு பதிப்பாளர்,எழுத்தாளர் என்ற முறையில் நான் ஆசிரியர் முன்னால் மீண்டும் வெட்கப்பட்டேன். அவர் புத்தகத்தை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதை பலமுறை அறிந்திருக்கிறேன்.அவரின் இளமையின் ரகசியமே,புத்தகங்கள்தான். இண்றைக்கு 88 முடித்து 89 நடந்துகொண்டிருக்கும் வேளையில்,ஒரு 50 ஆண்டுகள் குறைந்த வயதுடைய இளைமையோடு இந்த நிகழ்வுக்கு வந்திருப்பதற்கு மகிழ்ச்சியைத்  தெரிவித்துக்கொள்கிறேன்.இந்தக் குழுவின் 1000-மாவது நிகழ்விலும் அய்யா உற்சாகமாக கலந்து கொள்வார்கள்  “ என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.


அய்யா ஆசிரியர் அவர்கள் உரை:


                  மிகுந்த மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் நடைபெறக்கூடிய ‘வாருங்கள் படிப்போம்’ என்று ஒரு அற்புதமான குழுவினை அமைத்து,ஒவ்வொரு வாரமும் மிகச்சிறப்பான வகையிலே அயர்வில்லாமல்,சோர்வில்லாமல், அதுவும் இந்தக் கொரனா காலகட்டத்திலே மன அழுத்தத்தாலும்,தனியே இருக்கக்கூடிய காலகட்டத்திலும்,மிகச்சிறப்பான ஒரு மாமருத்துவத்தைப் போல,இதனை மிகச்சிறப்பாக செய்துகொண்டிருக்க்க்கூடிய அனைவருக்கும் பாராட்டுகள்.குறிப்பாக தோழர் உமா மகேஸ்வரி அவர்களுக்கும் அதேபோல தோழர் ஒளிவண்ணன் அவர்களுக்கும்,அந்தக் குழுவினைச்சார்ந்த தோழர்களுக்கும் என்னுடைய மனம் உவந்த நன்றியை,மகிழ்ச்சியைப்,பாராட்டினை தெரிவித்துக்கொள்கின்றேன்.


அருமை நண்பர்களே,புத்தகங்கள் நமக்கு புத்தாக்கங்கள்.கற்பது,படிப்பது,வாசிப்பது எனப் பல  நிலைகள் இருக்க்க்கூடிய நிலையிலே நாம் படிக்க்க்கூடிய புத்தகங்களை வாசிப்பதும் சுவாசிப்பதும், அடுத்த கட்ட்த்திலே நாம் படிக்கக்கூடிய புத்தகங்களைக் கற்பதும்,’கற்பவை நிற்க அதற்குத் தக ‘என்பதைப் போல அதைப் பின்பற்றக்கூடிய வகையிலே வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வதற்கும் ,நம்மை நாமே செதுக்கிக் கொள்வதற்கும் புத்தகங்கள் நிச்சயமான ஒரு அறிவு முனைகள்,ஏவுகணைகள். எனவேதான் புத்தகங்களைப் படிக்கிறபோது நமக்கு அயர்வில்லை.சோர்வில்லை.பயணங்களைச்சுருக்கி விடுகிறது.சோர்வுகளை நீக்கி விடுகிறது.உற்சாகத்திற்கு அது புதுவழிவகையை ஏற்படுத்துகிறது.அந்த வகையிலே எனக்கு புத்தகங்களைப் படிக்கிறபோது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.ஏராளமாகச்சொல்லிக்கொண்டு போகலாம்.ஆனால் இங்கு இருக்கிறவர்களுக்குத் தேவையில்லை.இது அறிவார்ந்த ஒரு அவை.இந்த அவையிலே வெளியிலே நின்றுகொண்டும்,பிற இடங்களிலிருந்தும் கேட்டுக்கொண்டிருக்கும் பெருமக்களுக்கு அன்பார்ந்த வணக்கமும் நன்றியும்.


இன்றைக்கு நான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட, புத்தகம் 'தி திராவிடன் மாடல்'.அவர்கள் கேட்டபோது அண்மையிலே ஒரு சிறப்பான முறையிலே ,பொருளாதாரத்திலே  சிறப்பாக வெளியிட்டிருக்கூடிய திராவிடர் இயக்கம் ஆட்சிக்கு வந்த பிற்பாடு ,பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967-லே ஆட்சியியை அமைத்த பிற்பாடு திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்த பிற்பாடு,திராவிடர் ஆட்சி ஒரு மாட்சி என்று சிறப்பாக அமைந்த நேரத்திலே, அதை மையப்படுத்தி ,மிக ஆழமாக,இதுவரை செய்யாத ,ஒரு சிறப்பான ஆய்வினை,மிகச்சிறப்பான வகையிலே நம்முடைய தமிழ் நாட்டிலே இருக்கக்கூடிய சிறப்பான டெவலப்மெண்ட் ஸ்ட்டிஸ் என்று சொல்லக்கூடிய ,அதிலே ஆய்வாளர்களாக இருக்க்க்கூடிய இரண்டு பேராசிரியப் பெருமக்கள் அதிலே இருந்து தயாரித்து கனடா நாட்டினுடைய அந்த சிறப்பிலும் பங்கேற்று அதிலும் ஆய்வு செய்யக்கூடிய  நூலாசிரியர் பேராசிரியர் கலையரசன் அவர்களுக்கு சிறந்த ஆய்வாளர் என்ற வகையிலே நம் நெஞ்சம் நிறைந்த நமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். தோழர் கலையரசன் அவர்கள்,இந்த நூலாசிரியர் அவர்கள் எப்படி சிறப்பான வகையிலே உருவாக்குவதற்கு  அவருக்கு அடித்தளமாக,வழிகாட்டியாக இருக்க்க்கூடிய அருமை பேராசிரியர் விஜயபாஸ்கர் அவர்களும் பாராட்டப்படவேண்டியவர்கள்.இந்த இரண்டு பேரும் இணைந்து இந்த் ‘திராவிடன் மாடல் ‘என்ற அற்புதமான நூலை உருவாக்கி, 16.04.2021 சிறப்பாக ஒரு மாத்த்திற்கு முன்னாலே  இதனை மிக நன்றாக வெளியிட்டபோது ,இந்த அழைப்பிதழை பேராசிரியர் வெங்கடாசலபதி அவர்கள் என்னை அழைத்தபோது மிகுந்த மகிழ்ச்சியோடு ,அந்த நூல் எப்போது கிடைக்கும் என்று சொன்னபோது ,நூல் அன்று மாலையே கிடைத்த்து.அதை விரைந்து படித்தபோது எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.


ஏனென்றால் மற்றவர்கள் இதுவரை செய்யாத பணி என்பது மட்டுமல்ல,செய்யத் துணியாத ஒரு பணியை,இதன் மூலமாக இதனுடைய ஆசிரியர் ,பொருளியல் அறிஞர் ஆய்வாளர் கலையரசன் அவர்களும்,அவர்களை வழி நட்த்தி சிறப்பான வகையிலே அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்த பேராசிரியர் விஜயபாஸ்கர் அவர்களும் மிகுந்த அளவிற்கு ஒரு அற்புதமான வரலாற்றுப்பூர்வமான ஒரு  நூலை ,இதுவரை இல்லாத அளவிற்கு ,இது பொருளாதார சம்பந்தப்பட்ட நூல் என்று சொன்னாலும் திராவிட இயக்க வரலாற்றை ஆவணப்படுத்தக்கூடிய அளவிற்கு அளித்திருக்கிறார்கள்..அப்படிப்பட்ட நிலையிலே இந்த அமைப்புகளைப் பற்றிப் பொதுவாக பேசிவிட்டுப்போகிறவர்களுக்கு எவ்வளவு பெரிய ஆழமான ஆய்வு அறிஞர் ,இதற்கு முன்னாலே வெளி நாட்டவர்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள்.ஹாட் பிரே சூனியர் என்பவர் திராவிடர்  ஆய்வு என்பதை முதன் முதலில் மிகச்சிறப்பாகச்செய்தார்கள்.அதுபோல ரிஷி கவர்ன்ஸ் செய்தார்.பெரியார் அவர்களைப் பற்றி ஈசா விஸ்வ நாதன் அவர்கள் நம் நாட்டிலே இருந்து ஆஸ்திரேலியா பல்கலைக் கழகத்திலே அதனைச்செய்தார்கள்.அதைப்போல மற்றவர்கள் இப்போது சிறப்பாக செய்துகொண்டு வரும் நேரத்திலே பல செய்திகளை எல்லாம் முன்னாலே எடுத்து இதில் அவர்கள் தொகுத்துச்சொல்லி ஒரு குறிப்பிட்ட செய்திகளை எடுத்து ,ஆழமாகத் தொடுத்து ,ஆதாரபூர்வமாக புள்ளி விவரங்களோடு இந்தச்செய்திகளைச்சொல்கிறார்கள்.இதிலே இந்தப் புத்தகத்தை மதிப்பாய்வு செய்வது,நூல் மதிப்புரை செய்வது ,புத்தக விமர்சனம் செய்வது போல நான் செய்யவில்லை.


இந்தப் புத்தகத்தினுடைய தேவை என்ன? இந்தப்புத்தகத்திற்கு ஏன் அந்த்த் தலைப்பு வந்த்து?அந்த்த் தலைப்பு எவ்வளவு பொருத்தமானது?அந்த்த் தலைப்புக்குப் பின்னால் இருக்க்க்கூடிய இலட்சிய வெற்றிகளும்,போராட்டங்களும்,அதனைநிகழ்த்தியவர்களுடைய சாதனைத் திறன்களும் எப்படிப்பட்ட்து என்பதையெல்லாம் மிகத்தெளிவாகச்சுட்டுக்காட்ட வேண்டும்.இந்த அறிவார்ந்த அவையிலே,இது ஒரு ஆங்கிலப்புத்தகம் என்ற காரணத்தால்,இதிலிருந்து பல பகுதிகளைப் படித்தால் அது நேரத்தையும் எடுத்துக்கொள்ளும்.பலருக்கு சலிப்பும் தட்டும்.எனவேதான் இந்த நூலை அறிமுகப்படுத்துகிறபோது, இந்த அறிவார்ந்த அவையிலே ,இந்த நூலைப் பற்றி பலபேர் அறிந்திருப்பார்கள்.இந்த நூல் எளிதிலே எங்கு கிடைக்கும் என்று சொல்கிறபோது,பெரியார் புத்தக நிலையத்திலே கூட, பெரியார் திடலிலே அதனை வாங்கிப் பரப்பவேண்டும் என்ற எண்ணத்திலே அதனை நாங்களும் வாங்கி அதனை அளித்துக்கொண்டிருக்கின்றோம்.ஆகவே நான் இந்த நூலைப்பொறுத்தவரையிலே அங்கே அந்த வாய்ப்புகள் இருக்கிறது.ஆங்கிலத்திலே படிக்க்க்கூடிய வாய்ப்புள்ளவர்கள் இந்த நூலை வாங்க்க்கூடிய சூழலைப் பெறலாம்.படிக்கலாம்.


அடுத்து நண்பர்களே,இந்த நூலைப்பொறுத்தவரையிலே ,அவர்கள் அமைத்த முறையினை,தலைப்புகளிலேயே ரொம்ப ஆழமான தலைப்புகளை கொடுத்திருக்கிறார்கள்.’தி திராவிடன் மாடல்’ என்று சொல்வது இருக்கிறதே,இதற்கு ஒரு துணிவும் தெளிவும் வேண்டும்.இந்த நூலாசிரியர்கள் தெளிவோடு எழுதியிருக்கிறார்கள்.துணிவோடு அந்த முயற்சியிலே இறங்கியிருக்கிறார்கள்.இதுதான் மிக முக்கியமானது.துணிவு என்று சொல்வதற்கு என்ன காரணம்? புத்தகங்கள் எழுதுவதற்கு என்ன துணிவு என்று கேட்டால்,ஆராய்ச்சியாளர்களுக்கு என்ன துணிவு என்று கேட்டால்,நிச்சயமாக துணிவுதான்.ஆராய்ச்சியாளர்கள் எது சிக்கல் இல்லாத,எது பிரச்சனைக்கு உள்ளாகாத பொருள் என்று எடுத்துக்கொண்டு,அவர்கள் அதனைச்செய்வார்கள்.ஆனால் இதிலே எந்த இட்த்திற்கு மற்றவர்கள் போகவில்லையோ ,போக அஞ்சி இருக்கிறார்களோ,அந்த இட்த்திற்கு இவர்கள் துணிந்து இருக்கிறார்கள்.துணிந்த்து மட்டுமல்ல,அதனை வெற்றிகரமாகச்செய்திருக்கிறார்கள் என்பதுதான் ,நடுவு நிலைமையிலிருந்து எங்களைப் போன்றவர்களின் கருத்தாகும். அந்த இயக்கத்திலே ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களை ஒப்படைத்துக்கொண்டுள்ள ,அந்த இயக்கத்திலே பணியாற்றக்கூடிய எங்களைப் போன்றவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.ஏற்கனவே பல புத்த்கங்களிலே அறிவு ஆசான் தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா,பெருந்தலைவர் காமராசர் ஆட்சி,அதனுடைய விளைவாக வந்திருக்க்க்கூடிய திராவிட மாடல்,அதே போல ஆற்றல்மிகு கலைஞர்,தன்னை ‘மானமிகு சுயமரியாதைக்காரன் ‘என்று ஆக்கிக்கொண்டு 5 முறை சிறப்பாக  முதலமைச்சர் ஆக இருந்து அவர் செய்த சாதனைகள்,இவைகளெல்லாம் அதேபோல எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சி,ஒரு கட்ட்த்திலே அம்மையார் ஜெயல்லிதா அவர்களின் ஆட்சி என்று இப்படி எல்லாவற்றையும் வேகமாக வந்தாலும் திராவிட இயக்கம் என்ற சிறப்புதான் அவர்களுக்கு.


எனவே திராவிடியன்  மாடல் என்று வருகின்றபோது,இந்த 50 ஆண்டுகால வரலாற்றை,அரை நூற்றாண்டு கால வரலாற்றை,நீங்கள் 50வது நிகழ்வை நட்த்துகிறீர்கள். இந்த 50வது நிகழ்விலே,50 ஆண்டுகள் வரலாற்றை சொல்லும் நூலை ஆய்வு செய்வது மிகப்பொருத்தமானது.அந்த வகையிலே அவர்கள்,இந்த நூலை எப்படிப்பிரித்திருக்கிறார்கள் என்பதை மட்டும்,இந்த அவையில் இருப்பவர்கள் ஆங்கிலம் தெரிந்தவர்கள் என்ற காரணத்தால்,இந்த தலைப்புகள் ஒவ்வொன்றையும் மொழிபெயர்க்க வேண்டும் என்று அவசியமில்லை.அந்த வகையில்தான் 8 தலைப்புகளில் சிறப்பாக இந்தக் கருத்துகளை சொல்லியிருக்கிறார்கள்.ஒரு ஆய்வாக இருந்தாலும், அது ஒரு ஆற்றொழுக்காக,வரலாற்றை படிப்பது போல,அதுவும் பொருளாதாரத் த்த்துவங்களை சொல்லக்கூடிய  ஒரு புத்தகம் என்று சொல்கின்றபோது,அந்தப் பொருளாதாரத்த்த்துவங்கள் வாசிப்பாளர்களுக்கு ஒரு சங்கடத்தை ,நெருடலை உருவாக்கும்.ஏனென்றால் எல்லோரும் அந்த ஆய்வு முறையிலேயே கலந்துகொள்ளக்கூடிய நிலையிலேயே வருகின்றபோது,ஏனென்றால் அடிக்கடி அந்த ஆய்வாளர்கள் இடையிலே தங்கள் ஆய்வை நிலை நிறுத்தி ,நாங்கள் தரவுகளோடு எழுதுகிறோம்,தானாக எழுதவில்லை என்று சொல்லக்கூடிய அந்த நிலையை உருவாக்கி காட்டுவது அவர்கள் பணியாகும்.அந்த வகையிலே முதலில் எடுத்தவுடன் ‘The Dravidian Model – An Intoduction “ திராவிட மாடல் ஓர் அறிமுகம் .இரண்டாவதாக ‘Conceptualising Power in Caste Society’..அடிப்படையிலேயே திராவிட மாடலுக்கு மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால்


பிறவியினாலே ஒருவன் உயர்ந்தவன்,பிறவியினால் இன்னொருவன் தாழ்ந்தவன் ,பிறவியினால் உயர்ந்தவன் மட்டும்தான் படிக்கவேண்டும்.பிறவியினாலே தாழ்த்தப்பட்டவர்கள் மற்ற உரிமைகள் அற்றவர்களாக,அடிமைகளாக விலங்குகளை விடக்கீழே இருக்கவேண்டும் என்பதைக் காலங்காலமாக ஒரு வர்ண தர்ம்மாக ,பிறவி அடிப்படையில் ஒரு சமுதாயக் கொடுமையை நிலை நாட்டியிருக்க்க்கூடிய ஒரே நாடு,ஒரே சமுதாயம்,நம்முடைய நாடு.இதனை எதிர்த்துத்தான் திராவிட இயக்கமே பிறந்த்து.இந்த உரிமைகளை மீட்டு எடுப்பதற்காகத்தான் திராவிடர் இயக்கம் உருவாயிற்று.அதற்கு அரசியல் அதிகாரம் இருந்தால்தான்,அந்த வாய்ப்புகளைப் பெறமுடியும்,கல்வி உரிமைகளைப் பெறமுடியும் .கல்வியிலே,உத்தியோகத்திலே வாய்ப்புகளைப் பெறமுடியும் என்று கருதிய காரணத்தினால்தான் திராவிடர் இயக்கம் என்ற ஒன்று பிறக்கவேண்டிய அவசியம்,நெருக்கடி ஏற்பட்ட்து.இதை மற்றவர்கள் ஏற்படுத்தினார்கள்.அதற்கு ஈடு கொடுத்தார்கள்.அதை அழகாக இந்த இட்த்திலே ஒவ்வொரு தலைப்பின் ஊடாக ,வெகு லாவகமாக ஏனென்றால் இது ஒரு ஆய்வு நூல்.இது ஒரு பிரச்சாரக் களமல்ல.ஒரு இயக்கத்தின் சார்பாக வெளியிடக்கூடிய நூலோ,மற்றதோ அல்ல.ஆய்வு அறிஞர்கள் வெளியிடக்கூடியது என்று சொல்கின்றபோது அந்த நிலையிலிருந்து கொஞ்சம் கூட வழுவாது,நழுவாது ,மிகத்தெளிவாக இதிலே அவர்கள் செய்திருக்கிறார்கள்.


மூன்றாவதாக “Democratising Education “.கல்வியைப் பொதுமைப்படுத்துவது.எல்லோருக்கும் எல்லோமும்.தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபோது ,தன்னுடைய இயக்கம் எதற்காகத் தோடங்கப்பெற்றது ,அதனுடைய இலக்கு என்ன?,நோக்கம் என்ன? என்று சொல்கின்றபோது இரண்டே சொற்களிலே,சமூக  நீதி ,எல்லா நீதிகளையும் வலியுறுத்தினார்கள்.இரண்டே இரண்டு சொற்கள்.வள்ளுவருடைய குறள கூட ஏழு சொற்கள் வரும்.”அனைவர்க்கும் அனைத்தும்”,அவ்வளவுதான்.இந்த அனைவர்க்கும் அனைத்தும் என்பது இருக்கிறதே அதுதான் Democratising Education. அந்தப் பின்னணியில்தான் இந்த்த் தலைப்புகளைப் பாருங்கள்.”Democratising Care “.மக்கள் நல்வாழ்வு என்பது இருக்கிறதே ,அது கூட வசதி உள்ளவர்களுக்கு,வாய்ப்பு உள்ளவர்களுக்கு ,உயர் ஜாதிக்கார்ர்களுக்கு,அல்லது வேறு சிலகார்ர்களுக்கு என்ற ஒரு சமூக வாய்ப்பிலே இருந்த ஒரு சமுதாயத்திலே அடித்தட்டிலே இருக்க்க்கூடிய மக்களுக்கும் கிடைக்க்கூடிய வாய்ப்புகளை உருவாக்கி கீழ்மட்ட்த்திலே இருக்க்க்கூடிய,மிகப்பெரிய அளவிலே இருக்க்க்கூடிய உயர்ந்த தகுதியிலே இருக்க்க்கூடியவர்கள் என்பது அல்ல, ஏனென்றால் இதிலே அதற்குத்தான் முதலில் எடுத்தவுடன் சொல்கிறார்கள்,மற்ற நாடுகளிலே வகுப்புகள்,அதாவது வர்க்கங்கள் உண்டு.அதாவது கிளாஸ்..ஆனால் நம் நாட்டிலே  வருணம் உண்டு.வகுப்புகள்,வருணம்.வகுப்புகள் பிறவி அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை.

                                                    (தொடரும்)


நன்றி : விடுதலை  29.05.2021


 


 


 

Friday 4 June 2021

அடிமனதின் சொல்லால்......

அவர் இறந்து 

ஒரு மாதம் கழித்துத்தான்

இறந்த செய்தியே தெரிகிறது...




எப்போதும் முகத்தில்

மெலிதாய் ஒரு புன்னகை!

தோளில் கைபோட்டுப்

பழகும் நண்பன் போல

ஊழியர்களிடம் பழகும் பாங்கு..


அவருக்கு கீழே 

வேலை பார்த்தபொழுது

அதிகாரியாய் நான்

பார்த்ததில்லை என்றும்..

எங்களிடம் தன் அதிகாரத்தை 

என்றும் காட்டியதுமில்லை....


நிறைய வேலை செய்திருக்கிறேன்

அவருக்குக் கீழ்...

என்னங்க எவ்வளவு 

வேலை கொடுத்தாலும்

செய்து விட்டு 

அடுத்த வேலை என்னென்ன

கேட்கிற ஆளா இருக்கிறீங்க

என்றார் ஒரு நாள்...


வேலை செய்வதிலும்

வேலை செய்ய வைப்பதிலும்

அப்படி ஓர் ஆனந்தம்

அவருக்கு....


உங்கள் நண்பர்ன்னு

நம்பி வேலையைக் 

கொடுத்துப்போட்டு

அப்பப்பா...வேலையை 

முடிச்சுக்கொடுக்க

வைக்கிறதுக்குள்ள 

படாத பாடு பட்டுப்போனேன்

போங்க...அவரை 

உங்க நண்பர்ன்னு 

நான் சொல்ல மாட்டேன் 

என்றார் ஒரு நாள்...


ஆவேசமாய் கத்திய

ஊழியர் ஒருவரிடம்

'என்னங்க உங்களுக்கு 

எனக்கும் 

வாய்க்காத் தகராறா!

வரப்புத் தகராறா!

என்ன பிரச்சனைன்னு 

சொல்லுங்க...

தீர்க்க முயற்ச்சிப்போம்"

என்று ஆரம்பித்த அவரின்

அன்றைய உரையாடல்

என்றும் நினைக்கும்போதே

புன்னகைக்க வைக்கும்..


ஏதேனும் தேவை என்றால்

எழுதி உடனே 

வாங்கித் தந்திடுவார்...

நன்றாய் வேலை பார்க்கும்

ஊழியருக்கு 

பதக்கம் வாங்கிக் கொடுக்க

பல முறை எழுதிடுவார்..

அவர் எழுதி நல் ஊழியர்

பதக்கம் பெற்றோர் பலர்...


சொல்லில் சுத்தம்

பணியில் 'கை 'சுத்தம்

எல்லோர் மனதிலும்

பதிந்து விட்ட 

எங்கள் மேல்அதிகாரி

ஈஸ்வரமூர்த்தி 

கரோனாவில் கறைந்துவிட்டார்

எனும் செய்தி 

அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது..

அப்பேர்ப்பட்ட மனிதருக்கு

ஓர் அஞ்சலி கூட 

நேரில் செலுத்த இயலவில்லை

என்பது பெருந்துயரமாகத்தான்

இருக்கிறது...

சடங்குத்தனமான 'ஆழந்த இரங்கல்' அல்ல...

அடிமனதின் சொல்லால்

ஆழந்த இரங்கலும் வருத்தமும்...

                     வா.நேரு...04.06.2021 

(மதுரை பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தில் பணியாற்றிய திரு.எஸ்.ஈஸ்வரமூர்த்தி(AGM Rtd) அவர்கள் மறைந்தார் என்னும் செய்திகேட்டு)




சிந்தனைக் கட்டுரை : ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியம்....முனைவர் வா.நேரு

முழுமையாக ,படங்களுடன் வாசிக்க உண்மை இணையதளம்:

http://www.unmaionline.com/index.php/6079-oru-nutrandil-eluthu-satsiyam.html 


தமிழ் எழுத்துலகில் தனக்கென தனி இடம் பதித்த  கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 17.5.2021 அன்று மறைந்திருக்கின்றார். நூறு ஆண்டுகள் தொட்டுவிட ஒரே ஓர் ஆண்டும் சில மாதங்களும்  இருந்த நிலையில் கி.ரா. இயற்கை எய்தியிருக்கிறார்.

திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியம்’ என்று தலைப்பிட்டு, எழுத்தாளர் கி.ரா. அவர்களின் மறைவிற்கு மிகச் சிறப்பான இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார். (‘விடுதலை’ 18.5.2021). புதுச்சேரியில் மறைந்த கி.ரா. அவர்களுக்கு புதுச்சேரி அரசின் சார்பாக அரசு மரியாதை செலுத்தி, உடல் தமிழகத்திற்கு அனுப்பப் பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் முதல்வர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, கி.ரா. அவர்களின் சொந்த ஊரான இடைச்செவல் கிராமத்தில், குண்டுகள் முழங்க, அரசு மரியாதையோடு அவருக்கு இறுதி நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது. அவருக்கு கோவில்பட்டியில்  சிலை அமைக்கப்படும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்ல; “கி.ரா படித்த இடைச்செவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவருடைய நினைவைப் போற்றும் வகையில், அவருடைய படைப் பாளுமையை வெளிப்படுத்தும் விதமாக அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும், பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும்“ என்றும் மாண்புமிகு முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஓர்  எழுத்தாளன் என்கிற வகையில், ஓர் எழுத்தாளர் கி.ரா.விற்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப்பெரிய மனநிறைவை நமக்கு அளிக்கிறது. பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றையும், கி.ரா. அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் ஒப்பிடும் போது சில ஒற்றுமைகளைக் காண்கின்றோம். இருவரும் 35 வயதிற்கு மேல் தாங்கள் எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்கு வந்தவர்கள். தந்தை பெரியார் 1879ஆம் ஆண்டு பிறந்தவர். 1915-களுக்குப் பிறகுதான் பொது வாழ்வுக்குள் வருகின்றார். ஆனால் 95 ஆண்டு காலம் வாழ்ந்து யாரும் எட்ட முடியாத பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராகப் புகழ் பெற்றார். தொண்டு புரிந்தார். மக்கள் மனதில் நின்றார். அதனைப்போலவே 1923-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் பிறந்தவர் கி.ரா. அவர்கள். தன்னுடைய முதல் கதையை 1958இல் தான் எழுதுகிறார். அன்றைய ‘சரஸ்வதி’ இதழில்  வெளிவருகிறது. 1958இல் தொடங்கி தனது இறுதிவரை எழுத்துப் பணியை அவர் நிறுத்தவேயில்லை. தனது பணி எழுத்து என்று எடுத்துக் கொண்டபின், தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருந்திருக்கின்றார். தந்தை பெரியார் தனது இறப்புக்கு முந்தைய சில நாள்களுக்கு முன் கூட எப்படி பேசிக் கொண்டிருந்தாரோ, அதனைப் போலவே எழுதிக் கொண்டும், இலக்கியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்தவர் கி.ரா.  ஆவார்.

தந்தை பெரியார் மூன்றாம் வகுப்புவரைதான் படித்தவர். கி.ரா. படித்தது 4ஆம் வகுப்பு வரை என்றும், ஏழாம் வகுப்பு வரை என்றும் இருவேறு செய்திகள் வருகின்றன. எப்படி இருந்தபோதிலும் அவர் ஏழாம் வகுப்பைத் தாண்டவில்லை என்பது உறுதியாகிறது. தந்தை பெரியார் தன்னைச்சுற்றி இருந்த சமூகத்தைப் படித்தார். இதற்கான காரணம் என்ன என்பதனைச் சிந்தித்தார். இதனைச் சீர்படுத்த பிரச்சாரமும் எழுத்துமே தனது வழி எனத் தீர்மானித்தார். அப்படித் தீர்மானித்த பிறகு தன்னுடன் யார் வருவார், தன்னை விட்டு யார் போவார் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல்  எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்காக இரவும் பகலும் பாடுபட்டார். ‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ நிலைக்குத் தந்தை பெரியார் உயர்ந்தார்.

கி.ரா. அவர்கள் தனது 35ஆம் வயதில் எழுத ஆரம்பிக்கிறார். 99ஆம் வயதில் மறைந்திருக்கும் அவரின் படைப்புப் பட்டியல் நம்மைத்  திகைக்க வைக்கிறது. கண்ணிமை, மின்னல், கோமதி, நிலை நிறுத்தல், கதவு உள்ளிட்ட 24 தலைப்புகளில் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், (சாகித்திய அகாடமி விருது பெற்றது), அந்தமான் நாயக்கர் என்னும் மூன்று நாவல்கள் வெளியிட்டிருக்கிறார். கிடை, பிஞ்சுகள் என்னும் தலைப்பில் குறுநாவல்கள். ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?, புதுமைப்பித்தன், மாமலை ஜீவா. இசை மகா சமுத்திரம். அழிந்து போன நந்தவனங்கள், கரிசல் காட்டுக் கடுதாசி என்னும் தலைப்புகளில் அவரது கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. இது தவிர நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் என்னும் தொகுப்பு, இதனைத் தவிர கரிசல் வட்டார வழக்கு அகராதி என்னும் சிறப்பான அகராதியினைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.


தந்தை பெரியார் படாத உடல் நோவு இல்லை. ஆனால், அந்த உடல் நோயினை உள்ளத்தில் எடுத்துக்கொண்டவர் இல்லை. தனது கடைசிக் கூட்டத்தில், சென்னையில் 19.12.1973 அன்று உடல் நோயினால், வலியினால் துன்பப்பட்டாலும், அந்தத் துன்பத்தை கண நொடியில் தாண்டிவிட்டு, இன இழிவினை ஒழிப்பதற்காக அவர் முழுங்கிய முழக்கம், எம்மைப் போன்று ஒலி நாடாவில் கேட்பவர்களின் கண்களிலேயே கண்ணீரை வரவைத்து, உணர்ச்சி மேலோங்கி நிற்கச் செய்கிறது. தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி போன்றவர்கள், அன்னை மணியம்மையார் போன்றவர்கள், அந்த நிகழ்விலே தந்தை பெரியாரின் உடன் இருந்தவர்கள் உள்ளத்திலே எத்தனை வேதனையை ஏற்படுத்தியிருக்கும். ஆனாலும் கூட நமக்காக அந்த வேதனையிலும் கர்ச்சனை செய்த அந்தப் பகுத்தறிவுச் சிங்கத்தின் குரல் நம்மை “இன்னும் வேலை செய்!’’ என்று அன்புக் கட்டளை இடுவதாகத்தான் எடுத்துக் கொள்கிறோம். உயர்ந்த நோக்கத்திற்காக தனது வாழ்க்கை என்று அமைத்துக் கொண்டவர்களுக்கு நோய் அஞ்சத்தான் செய்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. எழுத்தாளர் கி.ரா. அவர்கள் காச நோயால் மிகவும் அவதிப்பட்டிருக்கிறார். அவருக்கு திருமணமான போது அவருக்கு வயது 19. அவரது துணைவியார் பெயர் கணவதி அம்மாள். 19- வயதில் கி.ரா.வுக்கு திருமணம்  நடந்தபோதே அவருக்கு காச நோய் இருந்திருக்கிறது. காச நோய் உள்ள கி.ரா.வை. தைரியமாக மனமுவந்து திருமணம் முடித்துக் கொண்டதாக கணவதி அம்மாள் தெரிவித்திருக்கிறார். அன்னை நாகம்மையார் தனது கணவர் தந்தை பெரியாருக்கு செய்த பணிவிடைகள் போல கி.ரா.விற்கு கணவதி அம்மாள் பணிவிடைகள் செய்திருக்கிறார். காதலால் கசிந்துருகிக் கவனித்திருக்கிறார். வீட்டுக்கு வந்த விருந்தினர்களை நன்றாகக் கவனித்து  விருந்தோம்பல் செய்திருக்கிறார். தன் கணவர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற நேரத்தில், தனி ஆளாக நின்று சமாளித்து, தனது இரு பிள்ளைகளை வளர்த்திருக்கின்றார். (நன்றி: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்).


தன்னுடைய வாழ்க்கையிலிருந்து, தன்னுடைய இலட்சியத்தை அமைத்துக் கொண்டவர் தந்தை பெரியார். தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தனது வீட்டிற்கு வந்தடையும் பார்ப்பனர் களையும் அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையை, செல்வாக்கை உள்வாங்கிய தந்தை பெரியார் ஏன் எனச் சிந்தித்தார். பின் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளைப் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றார். கி.ரா.வைப் பொறுத்தளவில் அவர் ஒரு விவசாயி. இடைச்செவல் கிராமத்தில் நாற்பது வயதான நிலையில் தனது நிலத்திற்கு வரிகட்ட, தாசில்தார் அலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கு ஒரு கதவு சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இங்கே ஏன் இந்தக் கதவு தனியாக நிற்கிறது என்று கேட்டிருக்கிறார். ஒரு விவசாயி கிஸ்தி (நில வரி) கட்டவில்லை. அதற்காக, அவரது வீட்டில் இருந்து கதவு பிடுங்கப்பட்டு இங்கு வந்து வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது. அதனை வைத்துத்தான், ‘அந்தக் கதவு’ என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அந்தக் கதைக்கான அடித்தளம் வாழ்வில் ஒரு விவசாயிக்கு ஏற்பட்ட நிகழ்வு. தன்னைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையிலிருந்து கதைக் கருவை எடுத்துக் கொண்டவர் கி.ரா. தன்னைச் சுற்றி இருப்பவர்களின் மொழிகளை, தனது கதைகளின் மொழியாக எடுத்துக்கொண்டவர் கி.ரா. அவரது  கதை மாந்தர்கள் கள்ளங் கபடமற்றவர்கள்.  எதார்த்தவாதிகள். பிழைக்கத் தெரியாதவர்கள். ஆனால், பெரிய மனதுக் காரர்கள். வட்டார வழக்கில் எழுதுவது எப்படி என்பதற்கான அகராதி கி.ரா ஆவார். இன்று பலர் வட்டார வழக்கு என்று எழுதுகின்றனர். ஆனால், அவையெல்லாம் கி.ரா.வின் வட்டார வழக்கு எழுத்துக்கு முன்னால் மிகச் சாதாரணமாக இருப்பதைப் படிக்கும்போது உணர்கின்றோம். அவரின் முதல் நாவலான ‘கோபல்ல கிராமம்‘ நாவலைப் படித்து முடித்தவுடன் அந்தக் கதைக்குள் இருந்து நாம் விடுபட நாள்கள் ஆகும். அப்படித்தான் அவரின் ஒவ்வொரு நாவலும் சிறுகதையும். 

இந்தக் கரோனா தொற்றுக் காலத்தில் மூட நம்பிக்கையைப் பரப்புவதிலேயே குறியாய் இருக்கும் சில மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினரே கூட, பி.ஜே.பி.யைச் சார்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர், மாட்டு மூத்திரம் குடித்தால் கரோனா சரியாகிவிடும் என்றும், குஜராத்தில் மாட்டுச் சாணியில் குளியல் எடுத்தால் கரோனா சரியாகி விடும் என்றும் பொய்கள் பரப்பப் படுவதைப் பார்க்கின்றோம். மனிதர்களுக்கு ஏற்படும் கரோனாவைப் போல மாடுகளுக்கு ஏற்படும் தொற்றான கணை நோய் பற்றியும், தங்களுடைய கடவுள் நம்பிக்கைகளைக் கைவிட்டுவிட்டு மாடுகளுக்குத் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடும் மருத்துவர்களை, மனிதர்களைக் கேலி பேசும் அயிரக்கா, தொட்டணன் பாத்திரப் படைப்பும், எப்படி பாதிக்கப்படும் மக்களிடத்தில் மூட நம்பிக்கையைச் சிலர் பரப்புகிறார்கள் என்பதனைக் கதையாகச் சொல்லும் ‘குடும்பத்தில் ஒரு நபர்’ என்னும் கி.ரா.வின் சிறுகதை நினைவுக்கு வருகிறது. இந்தக் கரோனா காலத்தில், கரோனா பாதித்த தாயை வீட்டிற்குள் விடமாட்டேன் என்று சொல்லி, மகளும் மருமகனும் கதவைப் பூட்டிக்கொண்ட செய்தி சில நாள்களுக்கு முன் செய்தித்தாளில் வந்தது. அந்த நிலையில் மனிதர்கள், தாங்கள் வளர்க்கும் விலங்குகளுக்குக்கூட எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள், ‘குடும்பத்தில் ஒரு நபரா’க நினைக்கிறார்கள் என்பதனை விவரிக்கும் கதை ‘குடும்பத்தில் ஒரு நபர்’ என்னும் கதை.

தந்தை பெரியார், “தாகம் எடுப்பது போல, பசிப்பது போல, பாலியலும் ஓர் உணர்வு’’ என்றார். ஒரு உணவு விடுதியில் சென்று சாப்பிடுவது போல அது தனிப்பட்டவரின் விருப்பம் என்றார். கி.ரா. தனது  கதைகளில் பாலியல் என்பதும் ஒரு பசி என்பதனை மிகத் தெளிவாகவும் அதே நேரத்தில் விரசமில்லாமல் மிக நளினமாகவும் எடுத்துச் சொன்னவர். அவரின் ‘வயது வந்தவர்களுக்கு மட்டும் ‘ என்னும் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு இதனை விரிவாகப் பேசும்.


திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தன்னுடைய இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டது போல “தமிழகத்தின் கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் என்னும் கிராமத்தில் பிறந்து, அம்மக்களின் பண்பாட்டை, வாழ்வியலைக் கதைகளாக்கி உலகெங்கும் உலவ விட்டவர். கரிசல் எழுத்துகளுக்கென்று களம் அமைத்தவர். தமிழின் மிகச் சிறந்த படைப்பாளியாகவும், படைப்பாளிகளை உருவாக்கவும், ஊக்குவிக்கவும் பெரும் பங்காற்றியவராகவும் அவரது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். இந்திய விடுதலைப் போராட்டம், இடதுசாரி இயக்கம் என்று அரசியல் பாதைகளிலும் பயணம் செய்தவர். இறுதி வரைக்கும் எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர். ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியமாகத் திகழ்ந்தவர்” என்று சிறப்பாகக் குறிப்பிட்டு, அந்த ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியம் தந்தை பெரியார் பற்றி என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்பதையும் ஆசிரியர் அய்யா அவர்கள் அறிக்கையில் குறிப்பிடுகின்றார். “திராவிட இயக்க எழுத்தாளர்களின் மீதான சிலரின் வன்மைப் பார்வைக்கு பார்ப்பனிய சிந்தனையே காரணம் என்பதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்காதவர். தந்தை பெரியாரின் மனித நேயத்தையும் சமூகப் பணியையும் போற்றி, ‘புதிய வழிகாட்டி’ என்று விளித்து மதித்தவர். மனதில் பட்டதை மறைக்கும் தன்மையின்றி உண்மையை வெளிப்படுத்தக் கூடியவர்” என்று கி.ரா. அவர்களைப் பற்றி புகைப்படம் போல விவரித்திருக்கின்றார்.

சில நாள்களுக்கு முன்னால், கோ.ஒளிவண்ணன் அவர்கள் நடத்திய ‘வாருங்கள் படிப்போம்‘ நிகழ்வில் கலந்து கொண்டு, கி.ரா. அவர்கள் கருத்துகளைத் தெரிவித்தார். அவருடைய ‘கிடை’ குறு நாவல், அவருடைய 96ஆம் வயதில் எழுதப்பட்டது. அதற்குப் பின் அவருடைய ‘மிச்சமிருக்கும் கதைகள்’ நூல் வெளிவந்தது. இப்படி இறுதிவரை இலக்கியம் குறித்து பேசிக் கொண்டும், இலக்கியப் படைப்புகளை அளித்துக் கொண்டும் இருந்தவர் கி.ரா. அவர்கள். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தனக்கு பேராசிரியர் பதவி கிடைத்தபோது, வேண்டாம் என்று மறுத்தார். ஆனால் துணைவேந்தர் நேரிடையாக வந்து கேட்டுக் கொண்ட பின்பு ஏற்றுக்கொண்டு, நாட்டுப்புற இலக்கியம் குறித்து பல மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டினார்.

ஓர் எழுத்தாளரைப் போற்றுவது என்பது, அவரது எழுத்துகளை வாசிப்பது. ஓர் எழுத்தாளரை நினைவில் கொள்வது என்பது அந்த எழுத்தாளரின் படைப்புகளில் சிலவற்றையாவது படித்து மனதில் இருத்துவது. அந்த வகையில் இவ்வளவு சிறப்புப் பெற்றிருக்கும், தன்னுடைய எழுத்தால் ஒரு நூற்றாண்டின் சாட்சியமாகத் திகழ்ந்து மறைந்திருக்கும் கி.ரா. அவர்களின் படைப்புகளைப் படிப்பதோடு, மற்றவர்களுக்கும் அதனை சிறப்பாக எடுத்துக் கூறும் ஆண்டாகவும் இந்த ஆண்டை அமைத்துக் கொள்வோம்.


நன்றி உண்மை 01-06-2021