Wednesday, 13 March 2013

மயங்கிய அந்த முதிய உயிர் !

எங்கள் ஊரில்
இன்றும் ஒரு
முதிய உயிர்
அரளிக் கொட்டையை
அரைத்துக் குடித்து
அகாலமாய்
விடை பெற்றிருக்கிறது !

நாற்பது வருடங்களுக்கு
முன்னால் கணவனை இழந்த கிழவி !
பிள்ளைகளே உலகம் என
உதிரத்தைக் கொடுத்து
அவர்களை வளர்த்த கிழவி !

பெற்ற இரண்டு
பிள்ளைகளும்
மனைவி சொல்லைத்
த்ட்ட முடியாமல்
பெற்றவளை
முறை வைத்து
மாற்றி மாற்றி
அலைக்கழித்தபோது
சொல்லி அழுத
அந்த முதிய உயிர்
யாரிடமும் சொல்லாமல்
கொள்ளாமல் விடை
பெற்றிருக்கிறது விரக்தியால் !

ஆளுக்கொரு மாதம்தானே
எதற்கு அவள் அதற்குள்
அவள் வீட்டில்
இருந்து வந்தாள் ?
என்று தான் கட்டிய
வீட்டிற்குள் தன்னை
விட மறுத்து இளையவள்
அடம் பிடித்த போது
அரண்டுதான் போனாள் கிழவி பாவம் !
ஆற்றாமையால் நொந்து அழுதாள் !


வெளியூர் போன மூத்த மகனோடு
போகப் பிடிக்கவில்லை என்றாள் கிழவி
எங்கேயாவது போய் அவளை
இருக்கச்சொல்
அல்லது ஏதேனும்
முதியோர் இல்லத்தில்
அவனைச்சேர்க்கச்சொல் !

அவள் இங்கு வந்தாள்
நான் எனது அப்பா வீட்டுக்குப்
போய் விடுவேன்
நீயுமாச்சு ,நீ பெத்த மூணு
பிள்ளையாமாச்சு என்று
அவள் கணவனை
மிரட்டியபோது
தான் கட்டிய வீட்டை
விட்டு வெளியில் வந்து
தெருக்களில் திரிந்த
அந்த முதிய உயிர்
அரளிக் கொட்டையைத் தின்று
அகாலமாய் விடை பெற்றிருக்கிறது !

இளையவள் வீட்டில்
நாயுண்டு நான் பார்த்திருக்கிறேன் !
நாலு வேளைச்சோறுண்டு
அதற்கு அவள் வீட்டில் !

ஒரு வேளைச்சோற்றை எவரிடம்
கேட்க என மானத்திற்கு அஞ்சி
மயங்கிய அந்த முதிய உயிர்
அரளிக்கொட்டை தின்று
சோறு கேட்கா நிலை
எய்துள்ள கொடுமையை
நான் என் சொல்ல !
எவரிடம் சொல்ல !
--------------------------------

எழுதியவர் :வா. நேரு
நாள் :2013-03-11 12:19:45
நன்றி : எழுத்து.காம்

Sunday, 10 March 2013

அண்மையில் படித்த புத்தகம் : வெற்றிக்கு சில புத்தகங்கள்

அண்மையில் படித்த புத்தகம் : வெற்றிக்கு சில புத்தகங்கள்

நூலின் தலைப்பு : வெற்றிக்கு சில புத்தகங்கள்
நூலின் ஆசிரியர் : என். சொக்கன்
பதிப்பகம்         : மதி நிலையம் , சென்னை 86
மொத்த பக்கங்கள்: 184, விலை ரூ 120

                                   குமுதம் இதழில் வெளிவந்த ;வெற்றிக்கு ஒரு புத்தகம் ' என்னும் தொடரின் சில கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல் என்று நூலின் பின் அட்டையில் அச்சிட்டுக் கொடுத்திருக்கின்றார்கள். 32 நூல் அறிமுகங்களின் தொகுப்பு இந்த நூல் என்றாலும், தமிழில் அறிமுகம் செய்ய்ப்பட்டுள்ள அனைத்து நூல்களும் ஆங்கில நூல்கள். ஆங்கில நூல்களில் நல்லவற்றை , பயனுள்ள நூல்களைத் தேர்ந்தெடுத்து, அதனை முழுவதுமாக உள்வாங்கி, அந்த நூல் சொல்லும் கருத்தை சுருக்கமாகவும் , மனதில் நன்றாகப் பதியும் வண்ணமும் என்.சொக்கன் சொல்லியிருக்கின்றார். பாராட்டத்தக்க பணி.

                                     சுய முன்னேற்ற நூல்கள் தமிழிலும் வருகின்றன, ஆங்கிலத்திலும் வருகின்றன, ஆங்கில நூல்கள் வெறும் அறிவுரைகளின் கோர்வையாக இருப்பதில்லை, ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு அந்தப் பிரச்சனையை அக்கு வேறாக, ஆணி வேறாகப் பிரித்து அலசி பின்பு பிரச்சனைக்கு இப்படி , இப்படி தீர்வு எனச்சொல்வது போல பல ஆங்கிலப்புத்தகங்கள் அமைகின்றன, அப்படிப்பட்ட பல புத்தகங்களை எடுத்துக்கொடுத்திருக்கின்றார் திரு.என்.சொக்கன் அவர்கள்.

                            " The Houdini solution, Monkey Business, 8 Patterns Of Highly Effective Entrepreneurs, Juggling Elephants, The One Minute Sales Person, The Secret Monkey Business, The Family Wisdom, The Last Lecture, Every Child has a Thinking Style, SUMO, Imagining India, Why So Stupid, Outliers, The one minute apology, Drop the Pink Elephant, The Case of the  Bonsai Manager, A Better India- A Better World, Peaks and Valleys, The Leader in Me, Whale Done, How Full is Your Bucket, Sandbox Wisdom,Fish for Life, The 7 Levels of Change, The Magic Of Thinking Big, Sway, Made to Stick, The Shark and the Gold Fish, Say it Like Obama, The Aladdin Factor, The Dip " மேலே சொல்லப்பட்டிருக்கும் 32-ம் நூல் மதிப்புரையில் இடம் பெற்றிருக்கும் புத்தகத்தின் தலைப்புகள். யார் நூலின் ஆசிரியர், எந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது, இந்த நூலின் ஆசிரியர் எந்த நூலால் புகழ் பெற்றவர் ( The Family Wisdom - ஆசிரியர் ராபின்சர்மா The monk who sold his Ferrari என்னும் நூலால் புகழ்பெற்றவர்) போன்ற பல செய்திகளைச்சொல்லி, அந்த நூல் சொல்லும் முக்கியமான கருத்துக்களைக் கொடுத்துள்ளார். வெற்றிக்கு சில புத்தகங்கள் என்னும் இந்த நூலில் அவர் சொல்லும் நூலை மட்டுமல்ல , அந்த நூலின் ஆசிரியர் எழுதியுள்ள புகழ்பெற்ற நூலையும் படிக்கத்தூண்டும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

                             வேல் டன் என்னும் புத்தகத்தின் மதிப்புரை அருமையாக உள்ளது. திமிங்கலத்தைப் பழக்கப்படுத்தும் முறையும் அதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் என்னும் முறையில் 'நம்பிக்கை முக்கியம் ' என்று அழுத்தம் திருத்தமாகச்சொலவது அருமை. நம்பிக்கை இல்லா உறவோ, நட்போ வேதனையைத்தான் தருமே தவிர சாதனையைத் தராது  என்பது உண்மைதானே .

                          நீ எந்தத்துறையில் சாதனை புரிய நினைத்தாலும் குறைந்த பட்சம் பத்து ஆயிரம் மணி நேரம் உழைக்க வேண்டும் என்பதனைச்சொல்லும் Outliers புத்தக விமர்சனம் , உழைக்காமல் உட்கார்ந்துகொண்டு பொத்துன்னு நமக்கு மேன்மை வந்துடும் என்று ஜாதக நோட்டைத் தூக்கிக்கொண்டு அலைந்தால் ஒன்றும் கிடைக்காது என்பதனை மறைமுகமாகச்சொல்கிறது எனலாம்,

                           ராண்டி பாஷ் என்னும் பேராசிரியர் கொடுத்த The Last Lecture , அது சொல்லும் செய்தி , இறக்கப்போகிறோம் என்று தெரிந்த நிலையில் ராண்டி பாஷ் அவர்கள் கொடுத்த அந்த நம்பிக்கையூட்டும் பேச்சு, மற்றவர்களுக்கு கொடுத்த தன்னம்பிக்கை , வழிகாட்டுதல் பற்றிய விவரம் அந்தப்புத்தகத்தைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக்கொடுத்திருக்கின்றது. 

                                                         ஸ்டீபன் கவே அவர்கள் எழுதிய The Leader in Me என்ற புத்தகத்தைக் குறிப்பிட்டு ' The Seven Habits of Highly effective People '  பற்றியும் கொடுத்துள்ளார் என்.சொக்கன் அவர்கள் . வாழ்வியல் சிந்தனைகள் நூலில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட புத்தகம்  , நான் தேடி  வாங்கி பல பேருக்கு  படிக்கவும் , சில பேருக்கு பரிசாகவும் கொடுத்த நூல். உண்மையிலேயே  இந்தப் புத்தகத்தைப் படித்தால் உன்னிடத்தில் உறுதியாக மாற்றம் நிகழும் என்று நம்பிக்கையோடு நண்பர்களிடம் நான் சொல்லும் புத்தகம்.

                                                             படிக்கும் நமது பிள்ளைகள் ஆங்கிலத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஆங்கில நூல்களைப் படிக்கச்சொல்கின்றோம். அவர்களும் இர்விங் வாலஸ், ஜேம்ஸ் காட்லி சேஸ் என்று வாசிக்கின்றார்கள். வெறும் துப்பறியும் கதைகளாக அவை முடிந்து போகின்றன. அதற்கு மாற்றாக இந்த நூலின் ஆசிரியர் திரு.சொக்கன் அவர்கள் கொடுத்துள்ள நூல்களில் ஒன்றை வாசிக்கச்சொல்லலாம். பரிசாக கொடுப்பதற்கு ஆங்கில நூல் வேண்டுமென்றால் துணிந்து இவர் கொடுத்துள்ள பட்டியலில் இருந்து ஒன்றை வாங்கிக் கொடுக்கலாம். நூல்களின் தலைப்பைக் கொடுத்தாலே ,கூகிள் தேடுதளம் பல செய்திகளை நமக்கு அந்தந்த  நூல்களைப்  பற்றித் தருகின்றது. பயன்படுத்தலாம். எம்.பி.ஏ. போன்ற பாடங்கள் படிக்கும் நமது மாணவர்கள் மனித வள மேம்பாட்டுத்துறையில் சிறக்க, வாழ்வில் தன்னம்பிக்கையோடு முன்னேற இந்த நூலையும், நூலில் சொல்லியுள்ள நூல்களையும் பயன்படுத்தலாம்.
                              
                                   

                          

Tuesday, 5 March 2013

அண்மையில் படித்த புத்தகம் : வி.ஸ. காண்டேகர் கதைகள்

நூலின் தலைப்பு    : வி.ஸ. காண்டேகர் கதைகள்  தொகுதி ஒன்று
தமிழ் வடிவம்          : கா.ஸ்ரீ.ஸ்ரீ.
பதிப்பகம்                  :   அல்லயன்ஸ் பதிப்பகம்
இரண்டாம் பதிப்பு :  டிசம்பர் 2004
மொத்த பக்கங்கள்: 216 விலை ரூ 50.00
மதுரை மைய நூலக எண் : 160859


                                          இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான காண்டேகரின் சிறுகதைத் தொகுப்பு இந்தப் புத்தகம் . காண்டேகரைப் பற்றி 'காண்டேகர் என்னும் சூறாவளி' என்னும் தலைப்பில்(பக்கம் 5-9 )  1940 முதல் 1970 வரை தமிழ் வாசகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர் என்பதனைக் கூறியிருக்கிறார்கள். 'திலீபன் ' என்னும் பெயர் தமிழர்களால் மறக்க முடியாத பெயர். இன்றைய இளம் பருவத்தினர் பலருக்கு திலீபன் என்னும் பெயர் இருப்பதைக் காண முடியும். தமிழ் ஈழப்போராட்டத்தில் தண்ணீர் கூட அருந்தாது, அகிம்சை வழியில் உயர் நீத்த மாவீரனின் பெயர் அது . ஆனால் ஒரு 60 , 70 வயதில் இருப்பவருக்கும் 'திலீபன் ' என்று பெயர் இருக்கிறதே என்று பார்த்தால் அது காண்டேகரின் கதாபாத்திரமான 'திலீபன் ' என்னும் பெயர் என்பது இதில் சுட்டப்பட்டிருக்கிறது.

                                கற்றவர்கள் பார்வையில் காண்டேகர் என்னும் தலைப்பில் பலரின் கருத்துரைகளை அடுத்து பக்கங்களில் (10-14)  கொடுத்திருக்கின்றார்கள் . பேரறிஞர் அண்ணா " சமூக அமைப்பு முறையிலே மிகப் புரட்சிகரமான மாறுதல் வேண்டும் என்பதற்கான போர் முரசு காண்டேகரின் கதைகள் " என்று சொல்லியிருக்கின்றார். " ,,, எழுதுகோலால் உலகை வாழ வைக்கும் உத்தமர்களில் காண்டேகர் ஒருவர் " என்று டாக்டர் மு.வ. , என்ப பலரும் , பல பத்திரிக்கைகளும் காண்டேகரின் எழுத்தைப் பாராட்டியதை பட்டியலிட்டுக் கொடுத்திருக்கின்றார்கள்,

                                     அதனைத் தொடர்ந்து தமிழ் மொழிபெயர்ப்பாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.," காண்டேகரும் நானும் " என்னும் தலைப்பில் தன்னுடைய கருத்துக்களைக் கூறியிருக்கின்றார்(பக்கம் 15-16) . மொழி பெயர்ப்பு நூலின் வெற்றிக்கு மூல் நூல் எவ்வளவு நல்லதாக இருந்தாலும் , அதனை வெற்றி நூலாக ஆக்குவதில் மொழி பெயர்ப்பாளரின் பங்கு என்பது மிக இன்றியமையாதது. கா.ஸ்ரீ.ஸ்ரீ -யின் மொழி பெயர்ப்பு எப்பொழுதுமே வேற்று மொழி நூல் என்று காட்டாது. அமையும் அருமையான மொழி பெயர்ப்பு.

                                      காண்டேகரின் கதைகள் எப்பொழுதுமே அமைதியாகப் பேசும் , ஆனால் ஆழமாகப் பேசும் வல்லமை உடையவை. மனிதர்களின் மனங்களின் ஊடாகப் பயணித்து, அவனுக்குள் நீர்த்துப்போயிருக்கும் மனிதத் தனமைகளை எடுத்துக்காட்டும் வல்லமை வாய்ந்தவை . இந்த நூலின் முதல் சிறுகதை ; கறுப்பு ரோஜா " அப்படித்தான் உள்ளது. இரண்டு தம்பதிகள். ஒரு தம்பதிக்கு பணம் இருக்கிறது, பதவி இருக்கிறது, ஆனால் குடும்பத்தில் அமைதி இல்லை, ஆனால் இன்னொரு தம்பதிக்கு படிப்பு மிக அதிக அளவில் இல்லை, பதவி பெரிய அளவில் இல்லை ,ஆனால் ஆழமான புரிதலின் காரணமாக தம்பதிகளுக்கு இடையே அன்பு இருக்கிறது. இதனை மிக அழகாக சுட்டிக்காட்டும் கதை, சிவப்பு ரோஜா, கறுப்பு ரோஜா என ஒப்பிட்டு. 

                                    'சித்தப்பாவின் உயில் ' என்னும் சிறுகதை உறவுகளுக்கு இடையே நிலவும் மனித நேயமற்ற தனைமையை சுட்டிக்காட்டும் சிறுகதை. 'சுதா' என்னும் பாத்திரம் பேராசைக் கணவனுக்கும் , பேராசை பிடித்த அப்பாவுக்கும் இடையே மாட்டிக்கொண்ட பெண் . கொடுத்தால்தான் அழைத்துப்போவேன் என அடம் பிடிக்கும் கணவன், எப்படியாவது எதனையாவது கொடுத்து கணவ்னோடு சுதாவை அனுப்பிவிடத் துடிக்கும் தந்தை என்று கதாபாத்திரங்களை விவரிக்கின்றார் காண்டேகர். சுதாவின் சித்தப்பா திடீரென்று இற்ந்து போகின்றார், சித்தப்பாவின் மகன் சிறுவன் சந்திரகாந்தன் சுதாவின் வீட்டிற்கு அடைக்கலமாக வருகின்றான். சுதா அவனிடம் அன்பு காட்டுகிறாள். அப்பாவும் , கணவனும் சேர்ந்து சித்தப்பாவின் சொத்தை அபகரிக்கத் திட்டம் போட , சுதா அதனை எதிர்த்து சந்திரகாந்தனோடு வீட்டை விட்டு வெளியேறுகிறாள் என்பது கதை. உறவுகளுக்கு இடையே இருக்கும் பண ஆசையை மிக நுட்பமாக எதார்த்தமான நடையில் சுட்டுகின்ற சிறுகதை இது.

                                   'இருபது ஜீன் ' என்னும் கதை,ஆசிரியராக வேலை பார்க்கும் குடும்பம் இல்லாத் ஒரு பெண்மணி, சிந்துவின் மன ஓட்டத்தைப் பற்றியது. ஒரே மாதிரியான வேலை, பொழுது எனப் போரடிக்கும் வாழ்க்கையாக தன் வாழ்க்கையை உணர்கின்றாள். தன்னுடைய தோழி குந்தம் என்பவளை சந்திக்கின்றாள். குழந்தை இல்லாது, மிக அன்பு செலுத்தும் கணவனோடு வாழ்பவள். அவள் வாழ்க்கையில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று நினைக்கின்றாள். ஆனால் குந்தம் தனக்கு முழு மகிழ்ச்சி குழ்ந்தை இன்மையால் இல்லை என்றும் தனது தங்கை மஞ்சு இரண்டு குழந்தைகளோடு மிக மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்றும் , அவள் பாக்கியம் செய்தவளென்றும் சொல்கின்றாள். மகிழ்ச்சியாக இருப்பதாகச்சொல்லப்படும் மஞ்சுவை சந்திக்கின்றாள், சிந்து. மஞ்சுவின் மூலமாக குடும்பம் என்ற அமைப்பைப் பற்றி ஆழமான கேள்விகளை முன் வைக்கின்றார் காண்டேகர் . இதோ அவரின் எழுத்துக்களிலேயே

                                "சிறிது நேரம் கழித்து மஞ்சு பேசினாள் " காலேஜில் படித்த நாளில் நானும் எப்போதும் மனக்கோட்டை கட்டி வந்தேன். பட்டம் பெற்றதும் வாத்தியாரம்மா ஆகவேண்டும் , ஆண்களைப் போலச்சுதந்திரமாக வாழவேண்டும், குழ்ந்தைகளுக்குக் கல்வி புகட்டும் தூய செயலைச்செய்யவேண்டும் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் --- "
                               அவள் தயங்கிப் பேச்சை நிறுத்தினாள். அவளுடைய அழகிய கண்களில் சோர்வு பரவுவதை சிந்து நன்றாகக் கவனித்தாள். அவளுக்கு ஆறுதல் கூறுவதற்காக . "நாற்பது குழந்தைகளுக்கு வாத்தியாரம்மாவாக இருப்பதைவிட, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருப்பதில் மிகுந்த சுகம் இருக்கிறது, மஞ்சு " என்றாள்

                               " சுகமாவது? குடும்பமும்,மலையும் தூரத்திலிருந்து பார்க்கத்தான் அழகானவை, சிந்து அம்மா! உலகத்தார் நான் சுகமாக வாழ்வதாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையைச்சொல்லப்போனால் , எரிமலை உள்ளுக்குள்ளே குமுறுவதுபோல என் நிலைமை இருக்கிறது; கணவருடைய அன்பு இருக்கிறது.இரண்டு குழ்ந்தைகளும் இருக்கின்றன. ஆனால் ..."

                                 " சிந்து அம்மா, நான் காலேஜில் இருந்தபோது பிரசங்கப்போட்டியில் பொற்பதக்கம் பெற்றேன். இப்பொழுது ' காபி கொண்டு வரட்டுமா? ' என்று அவரைக் கேட்பதைத்தவிர என் பிரசங்க வன்மைக்கு எவ்விதப்பயனும் இல்லை. நான் கு வருசங்களில் இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டன. உலாவப்போவதோ, கூட்டத்துக்குப் போவதோ -எதுவுமே என்னால் செய்ய முடியவில்லை. கைக்குழந்தையைக் கூட்டத்துக்கு அழைத்துப்போனால் அங்கே அது அழுகிறது.எல்லோரும் நம்மை வெறுப்போடு பார்க்கிறார்கள்.ஒன்று மாற்றி ஒன்று, குழ்ந்தைகள் நோயாளிகளாக இருக்கின்றன. கவலையும் கண்விழிப்பும் ஓய்வதில்லை. குழந்தைகள் மலர்கள் என்று சொல்லும் கவிகளைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குத்தான் அனுப்ப வேண்டும். குழ்ந்தை என்பது தென்னை மரம். பத்துப் பன்னிரெண்டு வருடங்கள் கஷ்டபட்டு வளர்த்தால் ஒரு குழந்தை பெரிதாகும் ...." பக்கம் (156&157).

                         என்னைச்சுற்றி இருக்கும் பெண்களைப் பார்க்கிறேன். எனக்கு தெரிந்த ஒரு பெண், +2 -வில் அவ்வளவு துன்பப்பட்டு, உயர் மதிப்பெண் பெற்று மருத்துவக்கல்லூரியில் படித்து டாக்டரானாள். திருமணம் செய்ய வந்த மாப்பிள்ளை வீட்டார் மிகப்பெரிய பணக்கார இடம், அவர்கள் போட்ட் ஒரே  கட்டுப்பாடு, பெண் வேலைக்குப் போக வேண்டியதில்லை, பெண் வீட்டார் ஒத்துக்கொள்ள, அந்தப் பெண் திருமணம் முடிந்து போய்விட்டாள்,. தன்னுடைய பிள்ளைகளுக்கு மருந்து , மாத்திரை கொடுப்பதோடு சரி, எவ்வளவுதான் வாய்ப்பு, வசதிகள் இருந்தாலும் இளம் வய்தில் இருந்து தான் கண்ட கனவுக்காக உழைத்து, உயர் பட்டம் பெற்ற ஒருவரின் கனவு இப்படி கல்யாணம் மூலம் பறிக்கப்படலாமா? ஒரு ஆண் டாக்டரிடம் இப்படிச்சொல்ல இயலுமா? நிறைய சாப்ட்வேர் பொறியாளர்களின் நிபந்தனை, பெண் படித்திருக்க வேண்டும், ஆனால் வேலைக்குப் போகக்கூடாது, வீட்டில் இருந்து சாப்பாடு ஆக்கிப்போட்டாள் போதும் என்பதாகத்தான்  இருக்கிறது.  படிக்க வைக்கின்றோம், படிக்க வைத்த பின் நம்முடைய பெண் பிள்ளைகளின் மன ஓட்டத்திற்கு ஏற்ப அவர்களை வேலை பார்க்க அனுமதிக்கின்றோமா? என்பதுதான் இன்றைய உலகத்தின் கேள்வி. காண்டேகர் கேட்கின்றார் 80 ஆண்டுகளுக்கு முன்னால், தந்தை பெரியார் கேட்டது போலவே தன் எழுத்துக்களால் இன்றைய பெண்களின் கேள்வியை.

                            அதனைப் போலவே 'கல்லும் கரையும் ' என்னும் கதை ஒரு அரசனின் இறுமாப்பை தொண்டுள்ளம் கொண்ட நாட்டியக்காரி அகற்றி அவனைப் போர்க்களத்தில் அழவைக்கும் கதை.'திருட்டுத் தெய்வம் ' என்னும் கதை தலைப்பைப் பார்த்தவுடன் சிலர் கோபிக்கக்கூடும்,இரண்டு பிச்சைக்காரர்களைப் பற்றிய கதை. பிச்சை எடுக்கும் நிலையிலும் போகாத ஈகோ, மற்றவன் துன்பப்பட வேண்டும் என்பதே ஒருவனின் இலக்காக இருப்பதைச்சொல்லும் கதை.

                          'முதற்காதல் ' என்னும் சிறுகதையும் மிகவும் நன்றாக இருக்கிறது. காதல் என்பதை மிகவும் இயல்பாக எடுத்துக்கொண்டு பேசும் சிறுகதை, முதற்காதல் என்னும் நாவல் மிக நன்றாக விற்றுத் தீர்ந்து விட்டாலும் அதனை மீண்டும் பதிப்பிக்காமல் இருக்கும் நாவல் ஆசிரியரைச்சந்தித்து பேசும்போது முதல்காதலுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை, அது ஒரு வித இனக்கவர்ச்சி என்பதாகவும் அடுத்தடுத்து காதல் வரும் எனவும் கூறுவதாக விவரிக்கின்றார். இந்த சிறுகதையைப் பேசினால் 4,5 பக்கம் விரிவாகப் பேசலாம்.

                          " இப்பொழுதும் இவருடைய (காண்டேகருடைய ) புத்தகங்கள் அனைத்தையும் ஒருமுறை ஊன்றிப் படிப்பது எழுத்தாளர்களுக்கு எழுத்து வன்மையைக் கூட்டும் " என்று வலம்புரி சோமனாதன் என்பவர் குறிப்பிட்டிருப்பதை பக்கம் 10-ல் குறிப்பிட்டிருக்கின்றார்கள். உண்மைதான் , தமிழில் எழுத விரும்புகிறவர்களும், எழுத்தை விரும்புகிறவர்களும் கட்டாயம் காண்டேகரையும் படிக்கவேண்டும் என்பதே எனது கருத்தும்.

Saturday, 2 March 2013

அடிக்கடி நடுங்குகின்றாய் நிலமே !

அடிக்கடி
நடுங்குகின்றாய் நிலமே!
இருப்போரை அச்சமூட்டி
எந்த நேரம் சுனாமியோ !
நில நடுக்கமோ என மக்கள்
நடுங்கும் வண்ணம்
அடிக்கடி நடுங்குகின்றாய் நிலமே !

மங்கைகள் பெயரையெல்லாம்
மா நதிகளுக்குச் சூட்டிவிட்டு
மண்ணில் மங்கையர்கள்
படும் இன்னல் கண்டு
நடுங்குகின்றாயோ நிலமே !

உழைப்போர் பசித்திருக்க
மண்ணில் உழையாதார்
அறுசுவை உண்டு
களித்திருப்பதைக் காண
முடியாமல் நடுங்குகின்றாயோ நிலமே !

அபார்ட்மெண்ட் என்று சிலர்
உன்னில் ஆழமாய்த் துளை போட
சுற்றியிருப்போர் எல்லாம்
தண்ணீருக்கு அலையும் நிலை
கண்டு நாணி நடுங்குகின்றாயோ நிலமே !

விளை நிலமெல்லாம்
வீடு கட்டும் பிளாட்டாக
மாறி வரல் கண்டு
எப்படிப் பிழைத்திருப்பாய் மனிதா !
செத்துத் தொலை எனச்
சீற்றம் கொண்டு நடுங்குகின்றாயோ நிலமே ?

ஏற்றத்தாழ்வு என்றும்
நிலைத்திருக்கும் ஏணிப்படிகள்
அமைப்பாம்
சாதி எனும் சதியால்
மக்கள் சாகும் நிலை
கண்டு நடுங்குகின்றாயோ நிலமே !

காணாத கடவுளுக்காய்
கலகம் மூட்டி
கடவுள் பெயர்சொல்லி
மக்களைக் கழுத்த்றுக்கும்
கொடுமை கண்டு
இந்த மனிதர்கள் இருந்தாலென்ன
செத்தாலென்ன என
நினைத்து நடுங்குகின்றாயோ நிலமே !

இய்ற்கை சீறினால்
இருப்பதெல்லாம்
ஒரு நொடியில் அழியும் !
உன்னைக் காப்பாற்ற
சுற்றுச்சூழலைக் காப்பாற்று
என அறிவுறுத்த
அடிக்கடி நடுங்குகின்றாயோ நிலமே !

எழுதியவர் :வா. நேரு

நாள் :2013-02-25 14:49:01

nantri : eluthu.com

போகிறபோக்கில்…-1-பொள்ளாச்சி அபி.

ஒரு எழுத்தாளரின் பாராட்டுரை - எழுத்து இணைய தளத்தில் எனக்கு.   வந்து 7, 8 மாதங்கள் ஆனபோதிலும் இதனை எனது வலைத்தளத்தில் பதிவிடுவதில் ஒரு தயக்கம் இருந்தது எனக்கு. பொள்ளாச்சி அபி என்னும் கவிஞரின் அறிமுகம் எழுத்து தளத்தில் மட்டும்தான். அவர் யார்? ஏதும்  இயக்கம் சார்ந்தவரா? இல்லையா? என்பது தெரியவில்லை. என்ன தொழில் செய்கின்றார் ? என்ன வயது ?  என்பதெல்லாம் தெரியவில்லை. நேரடியாகவோ, தொலைபேசி வழியாகவோ அவரிடம் தொடர்பு இல்லை.
தனக்குத் தானே பாராட்டுரைகள் எழுதிக்கொள்ளும் இந்த யுகத்தில் , வந்த பாராட்டைப்  பதிவிடுவதில் என்ன தயக்கம் என்றார் நண்பர்  ஒருவர். முகம் தெரியாத தோழரின் கருத்துக்கள் என் கவிதை பற்றி, நண்பர்களின் பார்வைக்காக !



28.5.12 .போகிறபோக்கில்…-1-பொள்ளாச்சி அபி.

கடந்த ஒரு வருடத்தில்,இந்தத்தளத்தில் எழுபத்தைந்து கவிதைகளைப் பதிவு செய்திருக்கிறார் வா.நேரு எனும் கவிஞர்.அதிலென்ன விசேஷசம்.? என்றா கேட்கிறீர்கள்..?
சமூகமாற்றத்திற்கான விருப்பத்தையும்,சமூகத்தில் நிலவும் கேடுகெட்ட பல்வேறு விஷயங்களையும் தனது கவிதைப் பொருளாகக் கொண்டு தனது கவிதைகளைப் படைத்திருக்கிறார் அவர்.சமூக சீரழிவுகள் அனைத்தையும் கேள்விகளால் துளைக்கிறது அவர் கவிதை.அவருடைய படைப்புகளை எங்கிருந்து பார்த்தாலும்,எந்த வகையில் விவாதித்தாலும் அவர் வெற்றிக்குரிய கவிஞராகவே மிளிர்கிறார்.
ஆனால் அவருடைய கவிதைகள் இந்தத் தளத்தில் 99 சதவீதம் கண்டுகொள்ளப்படவே இல்லை என்பது மிக வருத்தமான செய்தி.!.
ஆனாலும் அவர் அதனை எதிர்பார்க்காமல் என் பணி கவிதை செய்து கிடப்பதே என்று செயல்பட்டு அற்புதமான படைப்புகளை நமக்கு அளித்தே வந்திருக்கிறார்.
நல்ல கவிதைகளைத் தேடிப்பிடித்தேனும் படைக்கவேண்டும் என்ற ஆவல் யாருக்கு இருந்தாலும் வா.நேருவின் கவிதைகளை நிச்சயம் படிக்கவேண்டும்.
யாருடைய அங்கீகாரத்திற்கும் காத்திருக்காத அவருடைய மனப்போக்கிற்கு அவரின் படைப்புகளுக்கான சிபாரிசு அவருக்கு தேவையே இல்லாமலிருக்கலாம்.
ஆனால் நல்ல வாசகர்கள் என்ற முறையில் நாம் அப்படி விட்டுவிட முடியாதல்லவா.?.இத்தனை நாளும் அதனைப் பார்வையிடத் தவறிவிட்டோமே என்று இப்போது நான் உணரும் வேதனையை நீங்களும் அனுபவிக்கலாமா.?.
இந்தத் தளத்தில் உள்ள இன்னும் இதுபோல நல்லகவிதைகளைப் பார்வையிடும் நண்பர்கள் அதுகுறித்து அனைவருக்கும் தெரிவிக்கலாமே.!.
நல்லவற்றைப் படிப்பதன்மூலம்,நல்ல சிந்தனைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ள நமக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம்.அதற்கான தீனியும்,திராணியும் கவிஞர் வா.நேருவிடம் நிச்சயம் இருக்கிறது.இவர் ஒரு பத்திரிகையாளர் என்றும் தெரிகிறது.!
உதிப்பதும் உயர்வதும் ஓய்வெடுப்பதும் எனது பணி.இதில் பயன்பெறுவதும் பதுங்கிக் கொள்வதும் உனது விருப்பம் என்றபடி வந்துகொண்டேயிருக்கும் சூரியன் போல எனக்குத் தெரிகிறார் இந்தக்கவிஞர்.
அன்புடன் பொள்ளாச்சி அபி.

நன்றி : எழுத்து.காம்

Tuesday, 26 February 2013

தடுக்க இயலுமோ ?

முணு முணுப்புகள்
கேட்டுக் கொண்டேயிருக்கின்றன‌
மதத்திற்குள்ளும்
மதத்திற்கு வெளியிலும்
மதங்களின் பெயரால்
நடக்கும் கொலைகள்பற்றி

சத்தம் பெரிதானால்
குரல்வளை அறுக்கப்படுமோ
எனும் அச்சத்திலேயே
பெரும் சத்தமாய்
சத்தமிட எத்தனிப்பவர்கூட‌
பூனைகளைக் கண்டு
பதுங்கும் எலிகள்போல‌
பம்மி பம்மியே
முணு முணுக்கின்றனர்

இளைய சமூகம்
மூத்த சமூகத்தின்
மூதுரைகளை ஏற்க‌
மறுப்பதுவும்
கடவுள் படைத்த உலகம் பற்றி
எதிர் கேள்விகள்
கேட்பதுவும்
பரிணாம வழியில்
சிந்திப்பதும்
பெரும் கோபத்தைக்
கிளப்புகின்றன மதவாதிகளுக்கு !

ஆண்டாண்டு காலமாய்
ஆட்சி நடத்திய மதங்கள்
காட்சிப் பொருட்களாய்
மாறிடுமோ எனும் கவலை
கோபத்தைக் கிளப்புவதோடு
மொத்தமாய்
கோபக்குரல் எழுப்பவும்
தூண்டுகின்றன !

அறிவியல் யுகத்தில்
பழைய பஞ்சாங்கங்கள்
கிழிந்து தொங்குவதைத்
தடுக்க இயலுமோ
உன்னாலும் என்னாலும் ?

--------
எழுதியவர் :வா. நேரு

நாள் :2013-02-13 22:44:56

நன்றி : எழுத்து.காம்


Saturday, 23 February 2013

அண்மையில் படித்த புத்தகம் : மாக்ஸிம் கார்க்கி- வாழ்க்கைக்கதை

அண்மையில் படித்த புத்தகம் : மாக்ஸிம் கார்க்கி- வாழ்க்கைக்கதை

நூலின் தலைப்பு : மாக்ஸிம் கார்க்கி- வாழ்க்கைக்கதை
ஆசிரியர்                : எம்.ஏ.பழனியப்பன்
பதிப்பகம்               :  செண்பகா பதிப்பகம் -சென்னை -17
இரண்டாம் பதிப்பு :ஆகஸ்ட் 2012
 மொத்த பக்கங்கள் :  296  விலை ரூ 150.00

                                     மாக்ஸிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாறாய் அமைந்த நூல் இது.    மாக்ஸிம் கார்க்கியின் சுய சரிதை  நூல்களான " எனது குழந்தைப் பருவம்", " யான் பெற்ற பயிற்சிகள் ", " யான் பயின்ற பல்கலைக் கழகங்கள் " என்ற மூன்று நூல்களை இணைத்து , இந்த நூலின் ஆசிரியர் இடை இடையே கொடுக்கும் வர்ணனைகள், கருத்துக்களோடு இணைந்து, படிப்பதற்கு தொய்வு இல்லாமல் , ஆர்வமாக நாம் படிக்க கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு புத்தகம் இந்தப் புத்தகம்.

                               பிறந்த சில வருடங்களிலேயே தந்தையை இழக்கும் கார்க்கி, தந்தை இறந்து விட்டார், இனி வரமாட்டார் என்னும் அறியா வயதிலேயே தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்யும் கார்க்கி, தாய் இன்னொருவரை மணந்து கொண்டு சென்று விட , முரடனான தனது தாத்தாவோடு வாழ்ந்து அடியும்  உதையும் பட்டு வாழ்வைக் கழிக்கும் கார்க்கி, பிச்சைக்காரியின் மகளான தனது பாட்டி சொல்லும் கடவுளர் கதைகளை, பிரார்த்தனைகளை கேட்டு வளரும் கார்க்கி, சூதாட்டக்காரனான தனது இரண்டாவது கண்வனால் கைவிடப்பட்ட கார்க்கியின் தாயும் சிறு வயதிலேயே இறந்து போக, அப்பா- அம்மா இல்லாமல் சாப்பிடுவதற்காக பல நூறு வேலைகள் செய்யும் கார்க்கி என அவரது குழந்தைப் பருவம் நம் கண்களில் நீர் வர வைக்கும் அளவுக்கு கொடுமையானதாய் , இரக்கமற்றதாய் அமைந்ததை இந்த நூல் ஆசிரியர் திரு.எம்.ஏ.பழனியப்பன் அவர்கள் மிகக்கோர்வையாகக் கொடுத்திருக்கின்றார்.

                           தொழில் பயிலும் இளைஞனாய் கார்க்கி, கானகத்தில் சென்று பறவைகளைப் பிடித்து  அதைத் தன் பாட்டியிடம் கொடுத்து அவர் விற்று வருவதால் வயிற்றைக் கழுவும் கார்க்கி, தெருத்தெருவாய் குப்பைகளைப் பொறுக்கி விற்கும் கார்க்கி, குப்பைகளைப் பொறுக்கிவிட்டு குளித்து விட்டு உடை மாற்றி பள்ளிக்கூடம் போனாலும் நாத்தம் அடிக்கிறது என்று சொல்லி மற்ற மாணவர்கள் ஒதுக்கியதால் நொந்து போன கார்க்கி, படிக்கும் வாய்ப்பு குறுகிய காலத்தில் பறி போக மீண்டும் வீட்டு வேலைகளுக்குச்செல்லும் கார்க்கி, கப்பலில் பயணிகள் சாப்பிடும் தட்டைக் கழுவி வைக்கும் கார்க்கி இப்படி பல கார்க்கிகளை நம் கண் முன்னே நிறுத்துகிறார் இந்த நூலின் ஆசிரியர் எம். ஏ . பழனியப்பன்.

                                                         கப்பலில் வேலை செய்யும் போது இரண்டு திருடர்கள் பிடிபடுகிறார்கள். .." உணர்விழக்கும் வரையில் திருடர்கள் அடிக்கப்பட்டு இருக்கின்றனர். அடுத்த துறைமுகத்தில் அவர்களைப் போலிசாரிடம் ஒப்படைத்தபோது , அவர்களால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை.

                                                       ஜனங்கள் உண்மையில் நல்லவர்களா? - கெட்டவர்களா? பணிவானவர்களா?- அச்சுறுத்தக்கூடியவர்களா? என்று ஆச்சரியப்படத்தக்க வேதனை அளிக்கும் இத்தகைய பல நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. ஜனங்கள் ஏன் இப்படிக் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள் ? என்று எனக்குள்  நானே(மார்க்சிம் கார்க்கி) கேட்டுக்கொண்டேன். இதைப் பற்றி நான் சமையல்காரனிடம் கேட்ட பொழுது அவன் என்ன கூறினான் தெரியுமா?
" அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? உனக்கென்ன மனிதாபிமானம் அளவு கடந்து இருக்கின்றதா? ஜனங்கள், ஜனங்கள் தான் ! ஒருவன் சமர்த்தியசாலி ; மற்றவன் முட்டாள், மூளையைக் குழப்பிக் கொள்வதை நிறுத்திவிட்டு , புத்தகங்களைப் படி! உன் கேள்வி சரியானதாக இருந்தால் , அதற்குப் பதில் புத்தகத்தில் இருக்கும் " என்று கூறினான் அவன், அவன் கூறியது என் சிந்தனையைக் கிளறி விட்டது " பக்கம் (130 ) .  மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள புத்தகங்களைப் படி என்று ஒருவன் சொன்னதால் புத்தகங்களைத் தேடிப்படிக்க ஆரம்பிக்கின்றார் கார்க்கி.

                    புத்தகங்களைத் தேடி அலைகின்றார். ஒரு வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்யும் வேலைக்காரனாய் (13 வயது) கார்க்கி இருக்கின்றார். ஒரு தையல்காரரின் மனைவி நல்ல புத்தகங்களை கார்க்கிக்கு கொடுத்துப் படிக்கச்சொல்கின்றார். ஆனால் அதனை படிக்க வேலைக்காரனாய் இருக்கும் வீட்டு எஜமானி அனுமதி மறுக்கிறாள்  வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கின்றார். மெழுகுவர்த்தி செலவு ஆகிறது என்று எஜமானியம்மாள் திட்டுகிறாள். படிக்கக்கூடாது என்பதற்காக மெழுகுவர்த்தியை குச்சியால் அளந்து வைக்கிறாள் . அதனையும் தாண்டி புத்தகத்தைப் படிக்கின்றார். புத்தகம் படிப்பதற்காக கார்க்கி பட்ட இன்னல்களைப் பார்க்கிறபோது, அந்த மாபெரும் எழுத்தாளன் இளமையில் பட்ட துன்பங்களே பின்னாளில் அவரின் மனிதாபிமானம் மிக்க  எழுத்துக்களாய் வந்தது என்பது புரிகின்றது.ஒரு மாதிரியாய் இருக்கும் ஒரு சீமாட்டி நல்ல புத்தகங்களைக் கொடுக்கின்றாள் . அதனை வாங்கிப் படிக்கின்றார். புத்தகத்திற்கும்,  சாப்பாட்டிற்காக உழைத்து விட்டு நேரம் கிடைக்குமா . கொஞ்சம் படிக்க  என அவர் அலைந்த அலைச்சலையும் இன்றைய தலைமுறைக்கு கொஞ்சம் சொல்ல வேண்டும்.

                      வீடு முழுக்க புத்தகங்களால் நிறைத்திருக்கிறார் ஒரு நண்பர். அவரின் வாரிசுகள் அந்தப் புத்தகத்தின் பக்கமே செல்ல மறுக்கின்றன, நொந்து போகும் அவரைப் போன்றவர்களின் பிள்ளைகள் மாக்சிம் கார்க்கி புத்த்கம் படிப்பதற்காக பட்ட பாட்டை படிக்க வேண்டும். கையில் கிடைக்கும் அறிவுப் புதையல்களை அலட்சியப் படுத்துகிறோமே என்னும் உணர்வு வரும்.

                        கார்க்கி சொல்கின்றார். " நான் தொடர்ந்து பல புத்தகங்களைப் படித்து வந்தேன். அவற்றின் மூலம் மனித வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை நான் அறிந்து கொண்டேன். பல தீமைகளிலிருந்து புத்தகங்கள் என்னைக் காத்தன என்பதை என்னால் நிச்சயமாகச்சொல்ல முடியும் . ! குறிப்பாக ,ஜனங்கள் காதலுக்காக எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார்கள் என்னும் தகவல் , விபச்சார விடுதிக்குச்செல்வதிலிருந்து என்னைத் தடுத்தது....சந்தர்ப்பத்தால் ஏற்படும் சூழ்நிலையைப் பற்றின்றி எதிர்க்கும் கலையை புத்தகங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தன . (பக்கம் 170)

                          " நான் புத்தகங்களைத் தேடி அலைந்தேன். கிடைத்த புத்தகங்களில் உள்ள விஷ்யத்தைத் தொழிலாளர்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு அப்புத்தகங்களை அவர்களுக்குப் படித்துக்காட்டினேன். இப்படிப் படித்துக்காட்டிய மாலை நேரங்கள் என் வாழ்வில்  மறக்க முடியாதவை. ....நான் வாசக சாலையில் அங்கத்தினராக இல்லையாதலால் புத்தகங்கள் சேகரிப்பது எனக்குச் சிரமமாக இருந்தது. பிச்சைக்காரனைப் போல் எல்லோரிடமும் கெஞ்சி நான் புத்தகங்களை வாங்கினேன். " பக்கம்(181) 

                          விக்கிரகத் தொழிற்சாலையில் வேலையாளாக சேர்கின்றார். இவரின் சேவையைப் பாராட்டி , பாராட்டு விழா நடக்கின்றது. அவருடைய தொழிலாளி நண்பர் ஸிக்காரெவ் " நீ யார் ? பதின்மூன்றே வயதான அனாதைச்சிறுவன். .எனினும் வாழ்க்கையிலிருந்து தப்பியோடாமல், வாழ்க்கையுடன் மல்லுக்கட்டும் உன்னை,உன்னை விட  4 மடங்கு வயதான நான் புகழ்கிறேன். பாராட்டுகிறேன். இதுதான் சரியான மார்க்கம். சதா வாழ்க்கையுடன் மல்லிட வேண்டும் " என்றான் எனச்சொல்கின்றார் (பக்கம் 184)

                            பல்கலைக் கழகத்தில் சேர்வது. புதிய நட்புகள், புரட்சிக்காரர்களோடு தொடர்பு, அறிவு வளர்ச்சி மன்றத்தில் உறுப்பினராவது, ரொட்டிக் கடையில் வேலை பார்த்துக்கொண்டே தகவல் தொடர்பு பரிமாற்றம் செய்வது, கிராமத்தில் வாழ்வது , நகரத்தில் வாழ்வது, கிராம வாழ்க்கையின் போலித்தனம், முட்டாள்தனம் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் , முதன் முதலில் கவிதைப் புத்தகம் வெளியிடுவது போன்ற செய்திகளும் , கடைசி அத்தியாத்தில் மார்க்சிம் கார்க்கியின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கைக்குறிப்புகள், லெனினுக்கும் அவருக்கும் ஏற்பட்ட தொடர்பு, லியோ டால்ஸ்டாயைச்சந்தித்து, "தாய் " நாவல் மற்றும் அவரது படைப்புகள் பட்டியல் என்று இணைக்கப்பட்டிருக்கின்றது.

                            தாய் நாவல் நான் பத்து ,இருபது ஆண்டுகளுக்கு முன்னால் படித்தது. அவரது சிறுகதைத் தொகுப்பையும் வாசித்திருக்கிறேன், ஆனால் அவரது துயரமிக்க குழந்தைப்பருவ, இளைமைப்ப்ருவ வாழ்க்கையை நான் அறிந்ததில்லை. ஒரு மாபெரும் எழுத்தாளன் எப்படி சோதனைகளை எல்லாம் கடந்து அன்பே பிரதானம் என்று நம்பியதால் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியோடு வாழ்ந்தான் , இரசியா என்னும் நாட்டின் மபெரும் மாற்றத்திற்கு எப்படி பங்களித்தான் என்னும் சரித்திரத்தை இந்தப் புத்தகத்தின் மூலம் அறியலாம். ஆனால் மார்க்சிம் கார்க்கி என்னும் எழுத்தாளனின் 30,35 வய்துக்கு மேற்பட்ட எழுத்தாளர் வாழ்க்கை இப்புத்தகத்தில் விரிவாக இல்லை. அப்படி ஏதேனும் புத்தகம் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே, நானும் படித்துக்கொள்கின்றேன்.



Tuesday, 5 February 2013

அண்மையில் படித்த புத்தகம் : மிட்டாய் கதைகள் -கலீல் கிப்ரான்

அண்மையில் படித்த புத்தகம் : மிட்டாய் கதைகள் -கலீல் கிப்ரான்

நூலின் தலைப்பு : மிட்டாய் கதைகள்
ஆசிரியர்                : கலீல் கிப்ரான்
தமிழில்                  : என்.சொக்கன்
பதிப்பகம்               : கிழக்கு
முதல் பதிப்பு        : செப்டம்பர் 2005
பக்கங்கள்               :  94, விலை ரூ 40

                          " கிப்ரானின் கவிதைகளையும் , சின்னச்சின்ன பொன்மொழிகளையும் ஆங்காங்கே வாசித்திருக்கிறேன். பளிச்சென்ற கருத்துக்களை எளிய மொழியில் சொல்லும் அவரது பாணி, நேரடியானது. அதே சமயம் விஷ்ய கனத்தை சமரசம் செய்து கொள்ளாதது. " என்று முன்னுரையில் சொல்லும் இந்த் நூலின் மொழி பெயர்ப்பாளர் , என். சொக்கன் கதை சொல்லியாக கிப்ரான் தன்னைக் கவர்ந்த தன்மையை விவரித்திருக்கிறார். கிப்ரானின் பல நூல்களிலிருந்து இவற்றைத் தேடித் தொகுத்ததாக குறிப்பிட்டிருக்கின்றார். உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய பணி. ஆங்காங்கே பரவிக் கிடந்த முத்துக்களைத் தொகுத்து நல்ல ஆபரணமாய்  இந்த நூலைக் கொடுத்திருக்கின்றார் என்.சொக்கன் எனலாம்.
      
                            மொத்தம் 50 கதைகள். சின்னச்சின்ன கதைகள் .ஆனால்  சொல்லும் கருத்து பல நாள் சிந்தனையை அடைத்துக்கொள்ளும் அளவிற்கு வலிமையாய். சில எடுத்துக்காட்டுக்கள் மட்டும் இங்கு.

                           கதை 17. தலைப்பு : கைதிகள் . " என் அப்பாவின் தோட்டத்தில் இரண்டு கூண்டுகள் இருந்தன. ஒரு கூண்டில் , அப்பாவின் அடிமைகள் பிடித்து வந்த ஒரு சிங்கம் அடைக்கப்பட்டிருந்தது. இன்னொரு கூண்டில் , ஒரு சிறு குருவி இருந்தது. தினந்தோறும் பொழுது விடியும்போது, இந்தக் குருவி , வலிமையான அந்தச்சிங்கத்தை கை சொடுக்கி அழைத்து, ' என் சக கைதியே, குட்மார்னிங்' என்று சொல்லும் "

                        கதை 49 : தலைப்பு : தேவதைகளும் சாத்தான்களும். " தேவதைகளும் சாத்தான்களும் என்னைப் பார்ப்பதற்கு வருகின்றன. ஆனால், அவற்றை விரட்டுவதற்கு நான் ஒரு வழி கண்டு பிடித்துவிட்டேன்.
தேவதைகள் என்னைத் தேடி வந்தால், பழைய பிரார்த்தனைப் பாடல் ஒன்றைப் பாடுகிறேன். அவை சலிப்படைந்து , வெளியேறி விடுகின்றன.
சாத்தான்கள் என்னைப் பார்ப்பதற்கு வந்தால், பழைய பாவம் ஒன்றைச்செய்கிறேன். அவையும் சலிப்படைந்து ஓடிப்போய்விடுகின்றன. "

                         நிறையக் கதைகள், மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றன. படித்துப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, மேடைகளில் கதை சொல்ல, தத்துவம் சொல்லப் பேச்சாளர்களுக்கு பயன்படும் நூல் . மற்றவர்கள் படித்து, ரசிக்கலாம், சில கதைகளைப் படித்து விட்டு சிரிக்கலாம். 

Saturday, 2 February 2013

ஏய்த்துப்பிழைக்கும் தொழிலே -சரிதானா (3)

                                 ஏய்த்துப்பிழைக்கும் தொழிலே -சரிதானா (3)   
     
                    இனி ராக்கெட்டையும் விண்கலத் தையும் பார்ப்போம். ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையத் தாண்ட வேண்டுமானால் ஒரு வினாடிக்கு குறைந்தது 11.2 கிலோமீட்டர் அல்லது எட்டு மைல் வேகத்தில் அந்த ராக்கெட் போக வேண்டும். அப்போதுதான் பூமியின் ஈர்ப்பு விசையை (நுளஉயயீந எநடடிஉவைல)  மீறமுடியும். துல்லியமான கம்ப் யூட்டர் கணக்குகளில் ஒரு இம்மி பிசகானாலும் ராக்கெட்டோ விண்கலமோ அதன் இலக்கிலிருந்து பல கோடி மைல்கள் தள்ளிப் போய்விடும் .அல்லது புறப்பட்டவுடனே விழுந்துவிடும். பெரிய விண்கலம் ஆக இருந்தால் கூடுதல் எரிபொருளும் பெரிய ராக்கெட்டும் தேவைப்படும். கால நிலை முதலிய வற்றைக் கணக்கில் கொண்டு (டுயரஉ றனேடிற) ஒரு கால அட்ட வணை தயாரிக்க வேண்டும்.செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பப்பட்ட பெரும்பாலான விண் கலங்கள் தோல்வியில் முடிந்தன. பல தோல்விகளுக்கு என்ன காரணம் என்று இன்னும் ஆராய்ந்து வரு கிறார்கள்.

                         இப்போது இதையே விசேஷ பிரார்த்தனையுடன் ஒப்பிடுங்கள். எப்படி ஈர்ப்பு விசையைத் தாண்ட வினா டிக்கு எட்டு மைல் வேகம் தேவையோ அப்படி நம்முடைய அகங்காரம், மமகாரம், தீய எண்ணங்கள், கோபம் தாபம் ஆகிவற்றைத் (ழுசயஎவைல) தாண்ட தீவிர பிரார்த்தனை வேண்டும்.
எப்படி சில நாட்களில் ஏவினால் கிரகங்களின் உந்துவிசை பயன்படு கிறதோ (ழுசயஎவையவடியேட ளடபேளாடிவ)  அப்படி விசேஷ நாட்களில் பிரார்த் தனை செய்தால் பிரார்த்தனைக்கு உந்து விசை கிடைக்கும். அப்போது நூறு முறை நாம ஜபம் செய்தாலும் அது பல்லாயிரம் மடங்காகும்.எப்படி குறிப்பிட்ட நாட்களில் (டுயரஉ றனேடிற) ஏவினால்தான் ராக்கெட்டுகள் எளிதாக இலக்கை அடையுமோ அப்படி பண்டிகை அல்லது கிரகண காலங்களில் செய்தால் எளிதில் நினைத்ததை அடைய  லாம்.

                    எப்படி குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து இலக்கை நோக்கி ஏவுகிறோமோ அப்படி குறிப்பிட்ட நேரத் தில் குறிப்பிட்ட இடத்தில் பிரார்த்தனை  செய்தால் பிரார்த்தனையின் முழுப் பலனும் கிடைக்கும்.
எப்படி பெரிய ராக்கெட்டுக்கு நிறைய எரிபொருள் தேவைப்படுகிறதோ அப்படி நம்முடைய பெரிய வேண்டுகோளுக்கு நிறைய பிரார்த்தனை தேவைப்படும். ஆனால் சில நாட்களில் கிரகங்கள் (செவ்வாய், சனி) அருகில் இருந்தால் அதன் ஈர்ப்புவிசை (ழுசயஎவையவடியேட ளடபேளாடிவ ) பயன்படுவது போல நமக்கு குறைந்த பிரார்த்தனைக்கு நிறைந்த பலன் கிடைக்கும்.ஆதி சங்கரர், சம்பந்தர் போன்றோ ருக்கு இந்த கணக்குகள் எல்லாம் ஞானக் கண்களால் தெரியும். ஆதலால் அவர்கள் நினைத்ததை முடிக்கிறார்கள். அவர்கள் கூறியது போல நாமும் பண்டிகை நாட்களில் ஒரே எண்ணத் தோடு ராக்கெட் போல குறி இலக்கு நிர்ணயித்தோமானால் எளிதில் பலன்கள் கிட்டும். நம்முடைய பிரார்த்தனைக்கும் ஒரு லாஞ்ச் விண்டோ தேவை." மேலே கண்ட செய்தியினை , தமிழும் வேதமும் என்னும் வலைத்தளத்தில் பதிந்திருக்கின் றார்கள்."

             ஏமாற்றுவதற்கு எப்படி அறிவியலையும், கடவுள் கதைகளையும் ஒப்பிடுகின்றார்கள் பாருங்கள். ஆதிசங்கரர், சம்பந்தர் போன்றோ ருக்கு ஞானக் கண்கள் இருந்ததாம், தெரிந்ததாம். நமக்கு இல்லையாம், ஆனாலும் நிறைய பிரார்த்தனை,அதீத பிரார்த்தனை செய்தால் பலன் கிட்டுமாம். இதனை நம்பக்கூடியவர்களும் நாட்டில் இருக்கின்றார்கள் என்பதனை நம்மைப் போன்றவர்கள் கணக்கில் எடுத்துக்  கொள்ள வேண்டும். பிரார்த்தனை வலிமையானது என்று சொல்கின்றார் கள். தீவிர பிரார்த்தனை , விசேச்  நாட் களில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சொல்கின்றார்கள்.

                பிரார்த் தனை பற்றி புகழ்பெற்ற கதை ஒன்று, கலீல் கிப்ரான் அவர்களின் கதை ஒன்று உள்ளது  அவரவர் கதை என்னும் தலைப்பில் தமிழில் மொழி பெயர்க் கப்பட்டுள்ளது. "ஒரு பூனை, நாயிடம் சொன்னது - 'நண்பா, நீ முழு மனத் துடன் பிரார்த்தனை செய். தொடர்ந்து நீ இப்படி கடவுளைப் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தால், ஒரு நாள் ஆண்டவன்  உனக்கு அருளுவார். இதில் எந்த சந்தேகமும் இல்லை . கடவுளின் கருணைப் பார்வை உன்மேல் பட்டு விட்டால் போதும். வானத்தில் இருந்து எலிகளாகப் பொழியும். நீ விருப்பமுள்ள அளவுக்கு அள்ளித் தின்னலாம். இதைக் கேட்ட நாய் , விழுந்து விழுந்து சிரித்தது. - 'ஏ முட்டாள் பூனையே, எனக்கு ஒன்றுமே தெரியாது என்று முடிவு கட்டி விட்டாயா?என் வீட்டிலும் பெரிய வர்கள் இருக்கிறார்கள். அவர்களும் என் முன்னோர்களும், எங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள்- மனம் உருகிப் பிரார்த்தனை செய்தால், எலி மழை பொழியாது, எலும்பு மழைதான் பொழியும். அதை நாம் ஆசை தீரக் கடித்து மகிழலாம்" (மிட்டாய் கதைகள், கலீல் கிப்ரான், தமிழில் என்.சொக்கன், கிழக்கு பதிப்பகம், பக்கம்-68) .  இன்னும் நாம் எலி மழை பொழியும் , பிரார்த்தனை செய்தால் என்று நம்பும் நிலைமையில் தான்  இருக்க வேண்டுமா?

                    யோசித் துப்பாருங்கள்.  நம்மை ஏய்த்துப் பிழைப்போருக்கு பலிகடாவாக ஆகத்தான் வேண்டுமா?"நடவு செய்த தோழர் கூலி நாலணாவை ஏற்பதும் உடல் உழைப்பு இலாத செல்வர் உலகை ஆண்டு உலாவலும் கடவுள் ஆணை என்றுரைத்த கயவர் கூட்டம்" என்று புரட்சிக் கவிஞர் குறிப்பிட்டாரே அப்படி கடவுளாணை என்று சொல்லி இன்னும் நமது மக்களை கல்லாமையில், அறியாமையில் , மூட நம்பிக்கையில் ஆழ்த்தி வைத்திருக்க அவர்களின் கையில் உள்ள ஆயுதம் 'பிரார்த்தனை'. அந்த மோசடியின் பல்வேறு வடிவங் களைத் தோலுரிப்போம், வாருங்கள் தோழர்களே, தோழியர்களே.

நன்றி : விடுதலை - 1-02-13 


ஏய்த்துப்பிழைக்கும் தொழிலே -சரிதானா (2)

                                            ஏய்த்துப்பிழைக்கும் தொழிலே -சரிதானா (2)

திரு விளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு என்ன கிடைக்கும்? அது கிடைக்கும், இது கிடைக்கும் என்று விளம்பரத்தை அள்ளி விடுகின்றார்கள். உண்மையா, திருவிளக்குப் பூஜை செய்து, பிரார்த் தனை செய்தால் எல்லாம் கிடைத்து விடுமா? + 2, மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நெருங்குகின்றன, சில  ஊடகங்கள் திட்டமிட்டு , தேர் வில் அதிக மதிப்பெண் பெற அந்தக் கடவுளுக்கு பிரார்த்தனை செய் யுங்கள், இந்தக் கடவுளுக்கு பிரார்த் தனை செய்யுங்கள் என்று மாணவ, மாணவிகளுக்கும், அவர்தம் பெற்றோ ருக்கும் உபதேசம் செய்கிறார்கள், அதனைப் போலவே மற்ற மதத்தினைச் சேர்ந்தவர்களும், தேர்வு நேர சிறப்பு பிரார்த்தனை கூட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள்.

                  நம்மைச்சுற்றிலும் ஒரே பிரார்த்தனை மயமாக இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு புத்தகங் களைப் படித்தேன். அதனை உங்க ளோடு பகிர்ந்து கொள்கின்றேன், ஒரு நூல் திராவிடர் கழகத் தலைவர் , ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்  "பிரார்த்தனை மோசடி" என்னும் நூல் ஆகும். இது ஒரு திராவிடர் கழக வெளியீடு ஆகும், தந்தை பெரியார் அவர்களின் 'பிரார்த்தனை ' என்னும் கட்டுரைக்கு பொழிப்புரையாக, விரிவுரையாக வந்துள்ள நூல் இந்த நூல்." பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும் அவர் சர்வவல்லமையும் , சர்வ வியா பகமும் சர்வமும் அறியும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக்கடவுளை வணங்குவதால் ஒரு வனுக்கு வேண்டிய சகல காரியத்திலும் சித்தி பெறலாம் என்பதுமானைவை தான் கருத்தாயிருக்கிறது" என்று தந்தை பெரியார் தன் கட்டுரையில் கூறுவதைக் குறிப்பிட்டு விளக்கம் கொடுக்கின்றார் ஆசிரியர்.
                            பிரார்த் தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப்பெயர் சொல்ல வேண்டு மானால் 'பேராசை ' என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது, படித்துப்பாஸ் செய்ய வேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என் றால், பணம் வேண்டியவன் , பிரார்த் தனையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால், 'மோட்சத்துக்கு' போக வேண்டும் என்கிறவன் பிரார்த் தனையில் மோட்சத்துக்குப் போக வேண்டும் என்றால், இவைகளுக்கெல்லாம் பேராசை என்று மட்டும் சுருக்கமாகச் சொல்வ தோடு இல்லாமல் , வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித்தனமும் மோசடியும் ஆகும் என்று சொல்லுவது தான் மிகப்பொருத்த மாகும். பேராசையும், சோம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்மை யும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமே இல்லை - (பக்கம் 11) என்று பிரார்த்தனை என்பதன் அடித்தளத்தை நமக்கு கோடிட்டு காட்டி அதற்கு பல் வேறு எடுத்துக்காட்டுகளை மேற்கண்ட புத்தகத்தில் கூறுகின்றார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 
                       பிரார்த் தனை என்பதனை சிலர் முழு ஈடு பாட்டுடன் கடவுளிடம் வேண்ட வேண்டும். அப்பொழுதுதான் அது நடக்கும் என்று சொல்கின்றனர். இது எவ்வளவு பெரிய ஏமாற்றும் தன்மை என்பதற்கு இணைய தளத்தில் ஒரு ஆதாரம் கிடைத்தது. இதோ, அது "ஆதி சங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் செய்தால் ஏழை வீட்டில் தங்க மழை பெய்கிறது. முத்துசாமி தீட்சிதர் அமிர்தவர்ஷனி ராகத்தில் அம்பாளைப் பிரார்த்தித்தால் வறண்ட பூமியில் மழை பெய்கிறது. ஞான சம்பந்தர் பதிகம் பாடினால் இறந்துபோன பெண் அஸ்திக் கலச சாம்பல் எலும்பிலிருந்து எழுந்து வருகிறாள். நாமும் அதே ஸ்தோத்திரம் , பதிகம் பாடினால் ஏன் நமது பிரார்த்தனைகள் நிறைவேறு வதில்லை?
இதோ, கீழே இதற்கான விடை உள்ளது.
கிரகண நாட்களில் பிரார்த்தனை செய்தால் ஏன் பலன் பன் மடங்கு அதி கரிக்கிறது? சிவ ராத்திரி, வைகுண்ட ஏகாதசி, பிள்ளையார் சதுர்த்தி, துர்காஷ் டமி, ஜன்மாஷ்டமி, ராமநவமி ஆகிய நாட்களில் பூஜை செய்தால் ஏன் பல மடங்கு பலன் கிடைக்கும் என்று நமது மத நூல்களும், ஆச்சார்யர்களும் கூறுகிறார்கள்?
இதோ கீழே இதற்கான விடை உள்ளது.
இந்திய விண்கலம் சந்திரனுக்குச் சென்றதை எல்லோரும் அறிவர். அமெ ரிக்க ரஷிய விண்கலங்கள் செவ்வாய், சனி கிரகங்களுக்கு அவ்வப்போது ஏவப் படுகின்றன. பல விண்கலங்களும் பாதியில் கோளாறு ஆகி விழுகின்றன. ஏன் சில போயின, சில வெடித்து விழுந்தன? தவறான நேரம் அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு விண்கலம் ஏவப்படும் முன்பாக பல ஆண்டுகள் திட்டமிடுவார்கள். என்ன என்ன ஏற்பாடுகள் தேவை தெரியுமா?
ஒரு ஏவுதளம் வேண்டும். இது கடலுக்கருகில் அல்லது மனித நடமாட் டம் இல்லாத பாலவனத்தின் பக்கத் தில் இருக்க வேண்டும். அதுவும் நில நடுக் கோட்டுக்குப் பக்கத்தில் இருக்க வேண்டும். இதற்குப் பின் எந்த கிரகத்துக்கு அனுப்புகிறோமோ அதன் பாதை, வேகத்தைக் கவனித்து, அது பூமிக்கு அருகில் வரும் போது ஏவ வேண்டும். விண்வெளியில் அதிக எரிபொருள் செலவில்லாமல் பயணம் தொடர ஒவ்வொரு கிரகத்தின் ஈர்ப்பு உந்து விசையைப் (ழுசயஎவையவடியேட ளடபேளாடிவ) பயன்படுத்த உரிய தருணத்தில் அனுப்ப வேண்டும். இது தவறினால் சில நேரம் ஆண்டுக் கணக்கில் கூட காத்திருக்க வேண்டும்.....(தொடரும் )

நன்றி : விடுதலை (31-1-13)

ஏய்த்துப் பிழைக்கும் தொழிலே - சரிதானா?(1)

  ஏய்த்துப் பிழைக்கும் தொழிலே - சரிதானா?(1)
      (முனைவர் வா. நேரு தலைவர், மாநிலப் பகுத்தறிவாளர் கழகம்)

ஒரு விபத்து, உடன் வேலை பார்க்கும் ஒருவரின் பையன் இரு சக்கர வாகனத்தில் சென்று விபத்தில் அடிபட்டு, மருத்துவமனையில் இருந் தான் . நானும் என் துணைவியார் சொர்ணமும் பார்க்கச் சென்றிருந் தோம். மருத்துவமனையில் அடிபட்ட பையனோடு அவனது தாயார் இருந்தார். தைரியம் சொன்னோம், நமது கொள்கை பற்றி அறியாத அவர், என் மகன் மிகுந்த ஆபத்தில் இருக்கிறான், கடவுள்தான் அவனைக் காப்பாற்ற வேண்டும், தொடர்ந்து கடவுளைப் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கின்றேன், கடவுள் என் மகனை எப்படியும் காப்பாற்றி விடுவான் என்றார். உடன் வந்திருந்த சிலர் நாங்களும் எங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறோம், சின்ன வயது, கடவுள் காப்பாற்றி விடுவான் என்றனர். நானும் என் துணைவியாரும் மனிதம் கருதி அந்த இடத்தில் ஒன்றும் விவாதம் செய்ய வில்லை.

பிரார்த்தனை செய்தால் கடவுள் காப்பாற்றி விடுவான் என்றால் மருத் துவமனைக்கே கொண்டு வரவேண்டிய அவசியமில்லையே, கசிந்துருகி கண்ணீர் மல்க பாட்டுப்பாடி பிரார்த் தனை செய்தே காப்பாற்றி விடலாமே என்று அந்த இடத்தில் கேட்கத் தோன் றவில்லை. மிகப்பெரிய இக்கட்டில் இருக்கும் சகோதரி தன்னுடைய ஆற்றாமையைத் தணிப்பதற்காக ஏதோ கடவுள் என்று கதைக்கிறாள் என்று வந்து விட்டோம். மருத்துவமனையில் இருந்த அந்தப் பையன் இறந்து விட்டான். சென்று வந்தோம். சில மாதங்களுக்குப் பின் அந்த பையனின் தாயாரைப் பார்க்க நேர்ந்தது.
பக்தி மார்க்கத்தின் மொத்த உருவமாக இருந்தார். பிரார்த்தனை செய்து, அந்தக் கடவுள் ஒன்றும் செய்ய வில்லையே, (ஏனெனில் கடவுள் இருப் பதாக நம்புகிறவர்கள் அவர்கள்)- கடவுள் மீது மொத்தக் கோபம் வந்து பக்தி மார்க்கத்தை கழற்றி வீசி எறிந்திருப்பார் என நினைத்ததால் இப்படி இருக்கிறாரே எனப் பேச்சுக் கொடுத்தேன். கடவுள் என்னை ரொம்பச்சோதிக்கிறான் சார், அதனாலே விடாமல் அவனைத் துதித்து, சோதனையக் குறைக்க வேண்டுகிறேன் என்றார். எனக்கு அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை- அவரது அறியாமையை நினைத்து.

நல்லது நடந்தால் பிரார்த் தனைக்கு பலன் கிடைத்து விட்டது, கெட்டது நடந்தால் கடவுள் சோதிக் கிறான், அட எப்படி என்றாலும் கடவுள் என்னும் கருத்துக்கு பங்கம் வராமல் நமது மக்கள் மூளையில் ஏற்றி வைத்திருக் கிறார்களே என்னும் எண்ணம் ஓடியது.         அலுவலகத்தில் தனிப்பட்ட முறையில் உடல் பிரச்சனை, குடும்பப்பிரச்சனை என்று பேசமுடியவில்லை என்றார் நண்பர் ஒருவர். ஏதாவது பிரச்சனை என்று சொன்னாலே இந்த ..... பிரிவு ஆட்கள் வந்து விடுகிறார்கள் சார். உங்கள் பிரச்சனை உடனே தீர்ந்து விடும், பிரார்த்தனைப் பெருவிழா அங்கு நடக்கிறது, இங்கு நடக்கிறது வாருங்கள், குடும்பத்தோடு வாருங்கள் என்று கூப்பிடுகிறார்கள்,நாம் வரவில்லை என்று சொன்னாலும், மறு நாள் வந்து எங்கள் கூட்டத்தில் உங்கள் பிரச்சனையைக் குறிப்பிட்டு, பிரார்த்தனை செய்தோம், எங்கள் பிரார்த்தனை மூலமாக உங்கள் பிரச்சனை முடிந்து விடும் என்று சொல்லி, ஒருவர் இருவர் அறிந்திருந்த பிரச்சனையை அலுவலகம் முழுக்க அறிந்த பிரச்சனையாக ஆக்கி விடு கிறார்கள் என்றார். அவர்களுக்கு எல்லாம் பிரேயர்தான். பக்கத்தில் இருந்த நண்பர் ஒருவர், நான் ஒரு நாள் இவர்களின் பிரேயர் கூட்டத்திற்குப் போயிருந்தேன், எதை, எதையோ உளறி விட்டு அந்நிய மொழியில் பேசினேன் என்று சொல்கிறார்கள் .என்றார்.

 சார், அலுவலகத்தில் இருந்த ஒரு நோட்டைப் பத்து நாளாக் காணாம். எங்கே, எங்கே என்று தேடினோம் , காணாம், திடீரென்று சிலர் , நாங்கள் சேர்ந்து பிரார்த்தனை செய்தோம், நோட்டைக் கண்டுபிடித்தோம் என்று சொல்கிறார்கள், என்றார் நண்பர்.  என்னத்ததான் இவர்கள் எம்.எஸ்.ஸி, எம்,இ, பி.இ. படித்தார்களோ தெரிய வில்லை என்றார், செவிடர்கள் கேட்கிறார்கள், குருடர்கள் பார்க் கிறார்கள், நடக்க முடியாதவர்கள் நடக்கிறார்கள் என்று கூசாமல் பொய்யைக் கதைக்கிறார்கள். ஆனால் ஒரு பெருங்கூட்டம் அவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறதே, தான் படித்த அறிவியல் உண்மை களோடு ஒப்பிட்டுப் பார்க்க மறுக்  கிறார்களே, மெத்தப்படித்தவர்கள் கூட என என் மனம் எண்ணியது.

வீடு வாங்கணுமா? பிரார்த்தனை பண்ணுங்கள், காடு வாங்கணுமா? பிரார்த்தனை பண்ணுங்கள், உடல் நலம் பெற வேண்டுமா? பிரார்த்தனை பண்ணுங்கள் என்னும் சத்தம் நம்மைச் சுற்றி கேட்டுக்கொண்டேயிருக்கிறது. "திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு- திருவத்திபுரத்தில் உள்ள ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில், 13.3.12 அன்று சக்தி விகடனும், தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தி வரும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடந்தது. சக்தி விகடனின் 82 ஆவது திருவிளக்கு பூஜையாம் இது! இந்தப் பக்கம் சென் னையில் இருந்தும் அந்தப் பக்கம் திருநெல்வேலியில் இருந்தும் என... பல ஊர்களில் இருந்தும் வாசகியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ''சக்தி விகடன் நடத்தும் விளக்கு பூஜையில் நான் கலந்து கொள்வது, இது 6 ஆவது முறை. வீடு வாங் கணுங்கற பிரார்த்தனை முதல் எல்லாமே நிறைவேறிருக்கு'' என்றார் சென்னை வாசகி லீலாவதி. "இது பத்திரிக்கையில் வந்த செய்தி. சக்தி விகடனுக்கு பத்திரிகை விற்கும், எண்ணெய் நிறுவனத்திற்கு எண் ணெய் விற்கும்.......(தொடரும்) 

 நன்றி - விடுதலை ( 30-1-2013)



Thursday, 24 January 2013

உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே


மனு காலம் தொடங்கி
மக்களாட்சி காலம்வரை
அடிமாட்டுக்கென அழைத்துச்செல்லும்
மாடுகளைப் பார்க்கும்
மனப்பான்மையில் உழவர்களை
அதிகாரவர்க்கம் பார்க்கிற‌தே !

ஏர் பின்னது உலகம்
வள்ளுவரின் வார்த்தையை
மதிப்பிழக்கச்செய்தவர்களின்
அரசியலை அறியாது தடுக்க இயலுமோ
உழவர்களின் த்ற்கொலையை ?

வர்ணப் படிக்கட்டுகளில்
கீழ்த்தட்டில் அமர்த்தப்பட்டார்க்கு
உரியதாய் உழவு ஆனதால்தானே
அதிகாரவர்க்க‌த்தின் அலட்சியப் பார்வை?

கலப்பையை பிடித்தவாறு
ஏதேனும் கடவுள்கள் படம் இருக்கிறதா ?
நினைத்துப்பாருங்கள் !
நிற்கதியாய் உழவும் உழவனும் நிற்கும்
காரணம் புரியும் எளிதாய்

அதிகார மையங்களை உழவர்களின் மகன்கள்
கைப்பற்றி மாற்றும்போது மாறலாம்
அதுவரை உழவும் உழவனும்
மரணத்தின் விளிம்பிலே 

வா. நேரு  .

எழுத்து இணைய தளத்தில் நடைபெற்ற போட்டிக்காக அனுப்பப்பட்ட கவிதை- பரிசு பெறவில்லை. நண்பர்களின் பார்வைக்காக எனது வலைத்தளத்தில்

 

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி .




பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .

விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

மானமிகு பதிப்பகம் 3/20 A.ஆதி பராசக்தி நகர் ,திருப்பாலை ,மதுரை .14.
விலை ரூபாய் 60.

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .B.S.N.L நிறுவனத்தில் பணி
புரிந்துக் கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர் .விடுதலை, உண்மை பத்திரிக்கைகளில் படைத்தது வரும் படைப்பாளி .முனைவர்
வெ .இறையன்பு அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். .முனைவர் பட்டநெறியாளர் பேராசிரியர் கலைமாமணி
கு .ஞானசம்பந்தன் .தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற முனைவர் பட்ட தகுதித் தேர்வு அன்று சென்று இருந்தேன் .பலரும் பாரட்டினார்கள் நூல் ஆசிரியர் வா.நேருவை .

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு என்னுரையில் மிக வித்தியாசமாக எழுதி உள்ளார் .
" நான் பிறவிக் கவிஞன் அல்ல .சரஸ்வதி நாவில் வந்து குடியேறினால்தான்
கவிதை வரும் என்று நம்புபவனும் அல்ல .என்னைப் பாதித்த ,எனக்கு
சரிஎனப்பட்ட  கருத்துக்களைக் கூற இக்கவிதை வடிவத்தை எடுத்திருக்கிறேன்..கொடுத்திருக்கிறேன் ."

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூலின் தலைப்பே வித்தியாசமாக
உள்ளது .நூலின் தலைப்பில் உள்ள கவிதையில் ஊரில் திருவிழா  என்றால்
வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரம் வீடுகளில் வசூல் செய்து
கரகாட்டம், பட்டிமன்றம் ,டாஸ்மாக் என்று தட  புடலாக செலவு செய்வார்கள்
.ஆனால் ஊரில் உள்ள   பள்ளியை கண்டு கொள்ள மாட்டார்கள் .அதனை உணர்ந்து எழுதியுள்ள கவிதை நன்று .

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !

ஊரில் உள்ள
ஒரே ஒரு பள்ளிக்கூடம்
கரும்பலகையும்
இல்லாமல்
ஒழுகும் கூரையோடு
கேட்பாரற்றுக் கிடக்கிறது
ரொம்ப நாளாய் !

இறுதி மூச்சு உள்ளவரை மனித சமுதாயத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் தந்தை பெரியார் பற்றிய கவிதை மிக நன்று .

மனிதருக்கெல்லாம்  மாமருந்தாய் !

ஈரோட்டுப் பூகம்பமே !
நீ மறைந்து ஆண்டுகள் பல ஆனாலும்
நீ ஏற்படுத்திய அதிர்வலைகள்
கடல் அலைகளாய்
ஓயாமல் உலகெங்கும் !

நூல் ஆசிரியர்  வா .நேரு  பகுத்தறிவாளர் கழகத்தில் மாநிலத் தலைவராக  உள்ள பகுத்தறிவாளர் என்பதால் ,சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்ட கருத்துக்களை துணிவுடன் புதுக் கவிதையாக வடித்துள்ளார் .எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி ? எங்கு? எதனால் ?என்று தந்தை பெரியார் வழியில்  சிந்தித்த காரணத்தால் நன்கு படைத்துள்ளார் .

அறிஞர் அண்ணா  பற்றிய கவிதை நன்று .

உனது நூல்களே முறியடிக்கும் !

தந்தை பெரியாரின் தலைமகனே பிரிந்து விட்டார் !
தந்தையும் மகனும் அய்யாவின் கொள்கைக்கு கொள்ளி  வைப்பார் !
என்று எதிர்பார்த்த மூதறிஞர்களின் எதிர்பார்ப்பில்
மண்ணை அள்ளிப் போட்ட மகத்தான சரித்திரமே !

அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானதும் எனது ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை என்று சொல்லி பெரியாரின் கொள்கைகளை சட்ட வடிவமாக்கியவர் .சுய மரியாதை திருமணத்திற்கு சட்ட வடிவம் தந்தவர் அறிஞர் அண்ணா.அறிஞர் அண்ணாபற்றிய மதிப்பீடு மிக நன்று .

மூட நம்பிக்கைகளை சாடி பல கவிதைகள் உள்ளது .பதச் சோறாக சில மட்டும்
உங்கள் பார்வைக்கு !

ஒரு பக்கம் சந்திரனைச் சென்றடைந்த
சந்திரயான் விண்கலம் !
மறு பக்கம் இருபத்தி எழு பெண்டாட்டி வீடுகள்
அதில் ஒரு வீடான தனுசுவிலிருந்து
இன்னொரு வீடான மகரத்திற்கு
குரு  பகவான்
போகின்றார் .
குரு  பெயர்வது கிடக்கட்டும்
இவர்களின் புத்தி பெயர்வு
எப்போது ?

மாணவர் தேர்வில் ராம ஜெயம் எழுதியதைக் கண்டு எழுதிய கவிதை ஒன்று !

நம் மூளையில் திணிக்கப்பட்டுள்ளது
திணிக்கப்பட்ட குப்பைகளை தூக்கி
வீசாமல்
முன்னேற்றம் என்பது
முயற்கொம்பே !

காதலைப் பாடாமல் கவிதை நிறைவு பெறாது .நூல் ஆசிரியர்  வா .நேருவும்
காதலைப் பாடி உள்ளார் .

ஆதலினால் காதலிப்பீர் !

காதல் வலு சேர்க்கும் !
காதல் சமூகத்தின்
சாதி நோய் போக்கும் !
காதல் சமூகத்தின்
மதப் பொய்மை நீக்கும் !
ஆதலினால் காதலிப்பீர் !

தீபாவளி  மூட நம்பிக்கை கதையைச் சாடி உள்ளார் .கவிதைகள் வசன நடையில் இருந்தாலும் சிந்திக்க வைத்து வெற்றி பெறுகின்றது.பாராட்டுக்கள்.

பிள்ளையார்  (சுழி ) அழி !

பிள்ளையார்  சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு  !
என நம்மை ஏமாற்றி
என்றும் ஏதுமறியா
சுழியன்களாய் நம்மை
வைத்திருக்க சூது செய்யும்
பிள்ளையார் ஊர்வலச்
சதி அறிவோம் !

என் கை பட்டால் நோய்கள் குணமாகும் என்று சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கும் சாமியார்களின் மோசடிகளை தோலுரிக்கும் விதமாக ஒரு கவிதை இதோ !

பக்தி வியாபாரிகள் !

அறிவியல் மருந்துகளை
மறுத்து வெறும் பிராத்தனையால்
ஓடி விடும் ! நோய்கள் !
என மன நோயாளிகளாய்மனிதர்களை மாற்றிவிடும்
அயோக்கியத்தனம் !

மூட நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் சமுதாயம் திருந்தும் கவிதைகள் படைத்த நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு அவர்களுக்கு பாராட்டுக்கள்..தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .இந்நூலை தரமாக அச்சிட்டு  மானமிகு பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வெளியிட்ட பகுத்தறிவாளர் நண்பர்  பா .சடகோபன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

-----------------
எனது கவிதை நூலை  விமர்சனம் செய்து இணையதளத்தின் வழியாக பலருக்கும்  சென்று அடையக்கூடிய  பணியை எனது இனிய நண்பர், ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொறுப்பில் என்னோடு சக பொறுப்பாளராய் பணியாற்றிய, இன்றும் எங்கும் நான் ஒரு பெரியார் கொள்கை வாழ்வியல் வழி நடப்பவன், கடவுள் மறுப்பாளன் என்பதனை அழுத்தம் திருத்தமாக சொல்லும்  , தொடர் உழைப்பின் வெற்றிக் குறியீடாய் , மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக  விளங்கும் ,  கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு எனது நன்றிகள்.   - வா. நேரு - 24-01-2012

Saturday, 12 January 2013

அணமையில் படித்த புத்தகம் : பள்ளிக்கூடத்தேர்தல் -பேரா. நா.மணி

அணமையில் படித்த புத்தகம் : பள்ளிக்கூடத்தேர்தல் -பேரா. நா.மணி

நூலின் தலைப்பு : பள்ளிக்கூடத் தேர்தல்- நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள்
ஆசிரியர்                : பேரா. நா.மணி
பதிப்பகம்               :  பாரதி புத்தகாலயம்,சென்னை-18.
முதல் பதிப்பு       : செப்டம்பர்-2010
விலை                   : ரூ 20/ - பக்கங்கள் -48

                                                      'நல்லாசிரியர் விருது ' என ஆண்டுதோறும் அரசு , ஆசிரியர்களுக்கு விருது வழங்குகிறது. ஆனால் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் உண்மையிலேயே நல்ல ஆசிரியர்கள்தானா? சிலர் எப்படி இந்த விருதினைப் பெறுகின்றார்கள் என்னும் எதார்த்தத்தினை விளக்கி, மாணவர்களே நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுத்தால் எப்படி இருக்கும் என்னும் சிந்தனையைச் செயல்படுத்திய அனுபவமே இந்தப் புத்தகம் . கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் , தாங்கள் படித்த 12-ஆம்  வகுப்பு வரையிலான படிப்பில் நல்ல ஆசிரியர்கள் யார் என்ப் பட்டியலிடுகிறார்கள், ஏன் அவர்கள் தங்களுக்கு நல்ல ஆசிரியர் என்பதனை விளக்கி எழுதிக் கொடுக்கின்றார்கள். எப்படி எல்லாம் அந்த ஆசிரியர்கள் , தாங்க்ள் முன்னேற உதவி புரிந்தார்கள் என்பதனை மாணவ, மாணவிகளே விவரிக்கும் விதத்தை ஒரு அத்தியாயமாக இந்த நூலின் ஆசிரியர் பேரா. ந.மணி குறிப்பிட்டிருக்கின்றார்.

                                                     மாணவர்களால் தேர்ந்த்டுக்கப்பட்ட நல்லாசிரியர்களை தான் வேலை பார்க்கும் கல்லூரிக்கு வரவழைத்து, அவர்களிடம் படித்த மாணவ, மாணவிகளால் சிறப்பு செய்ய்ச்சொல்லி, நினைவுப்பரிசினை அளிக்கின்றார்கள், அந்த ஆசிரியர்களின் நெகிழ்ச்சி, அந்த மாணவ மாணவிகளின் வார்த்தைகளை அந்த ஆசிரியர்கள் எவ்வளவு பெருமையாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதனை விவரிக்கின்றார். பின்னர் அவர்களைப் பேட்டி எடுக்கின்றார். கல்வி சம்பந்தப்பட்ட ,புகழ்பெற்ற புத்தகங்களைப் படித்தவர்கள் அல்ல அவர்கள், ஆனால் டோட்டாசான், எனக்குரிய இடம் எங்கே ,பகல் கனவு, ஏன் டீச்சர் என்னைப் பெயிலாக்கினீங்கே போன்ற கல்வி குறித்த நூல்களைப் படித்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கின்றார்கள், பேரா. ந,மணியும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச்சேர்ந்த பொறுப்பாளர்களும் .நிறையத்  தலைமை ஆசிரியர்கள் கலந்துகொள்ளும்  ஒரு கருத்தரங்கத்தில் கல்வி சம்பந்தப்பட்ட நூல்களின் கண்காட்சியை வைக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான நூல்கள் விற்கும் என்று நிறையச்செல்வு செய்து வைத்த கண்காட்சியில் வெறும் 54 ரூயாக்கு புத்தகங்கள் விற்கின்றது. நொந்து போகிறார்கள்  பேரா. ந.மணியும் ,மற்ற பொறுப்பாளர்களும்.

                                                 இன்றைய ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள் , நன்றாகப் பாடம் நடத்துபவர் மட்டுமே நல்லாசிரியரா? உலக விசயங்களை, நாட்டு நடப்புகளை, நல்ல புத்தகங்களை மாணவர்கள் மத்தியில் சொல்ல் வேண்டாமா? போன்ற கேள்விகளை எழுப்புகின்றார். சமூக அக்கறையில்லாமல் ஆசிரியர்கள் இருக்கும் காரணம் என்ன? அதை எப்படி மாற்றலாம் போன்ற கருத்துக்களை பேரா. ந. மணி குறிப்பிட்டிருக்கின்றார்.

                                                சிறிய புத்தகம் , 48 பக்கம் உள்ள புத்தகம்தான் இது, ஆனால் மிக ஆழமான புத்தகம். மாணவர்களை, ஆசிரியர்களை உளவியல்ரீதியாக ஆராய்ந்துள்ள புத்தகம்.மிகப் பொறுப்போடு சமூக அக்கறையோடு எழுதப்பட்டுள்ள புத்தகம்.  கல்வி சம்பந்தப்பட்ட சில நூல்களை புத்தகத்தில் குறிப்பிடுகின்றார் ஆசிரியர். அவற்றில் டோட்டாசான், எனக்குரிய இடம் எங்கே போன்ற புத்தகங்களெல்லாம் நான் மிகவும் நேசிக்கும் புத்தகங்கள். அதிலும் குறிப்பாக டோட்டாசான்.  எனது நண்பன் இரா.சீனிவாசனும், நானும் மதுரை ஸ்பார்க சென்டர் பார் ஐ.ஏ.எஸ். ஸ்டடிஸ் சார்பாக பல கல்லூரிகள், பள்ளிகளில் மாணவ , மாணவிகளுக்கு வழகாட்டுதல் வகுப்புகள் நடத்தியிருக்கின்றோம். ஒருமுறை சீனி சொன்னான்,நேரு, நீ எந்தத் தலைப்பில் பேசினாலும், டோட்டாசான் புத்த்கத்தைத் தொடாமல்  ,அதைப்பத்திப் பேசாமல் நீ பேச நான் பார்க்கவில்லை என்றான். அந்த அளவிற்கு என்னை மிகவும் ஈர்த்த புத்தகம் .மாணவ, மாணவிகள் மத்தியில் ,ஆசிரியர்களிடத்தில் பேசுகிறேன் என்றால் கட்டாயம் டோட்டாசான் என் பேச்சில் இருக்கும். முத்ல் சில பக்கங்களில், ஒரு ரவுடியைபோல நான் மாணவர்களை அடக்கி வந்திருக்கிறேன் என்னும் பேரா.நா.மணியின் சுய விமர்சனம் படிக்கும் எந்த ஒரு ஆசிரியரையும் யோசிக்க வைக்கும்.20 ரூயாயில் மாற்றி யோசிக்க வைக்கும் புத்தகம், வாங்கிப் படித்துத்தான் பாருங்களேன்.