Saturday, 29 March 2014

நிகழ்வும் நினைப்பும்(20) வாழும் படைப்பாளியை அவர் வாழும் காலத்திலேயே பாராட்டுவது

           நிகழ்வும் நினைப்பும்(20)  வாழும் படைப்பாளியை  அவர் வாழும் காலத்திலேயே பாராட்டுவது :


                                         புதுச்சேரியில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80-ம் ஆண்டு  பிறந்த நாள் விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை 23.3.2014 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. எழுத்து. காம் இணையதளத்தில் எழுதக் கூடிய பல தோழர்களை, தோழியர்களை சந்திக்கும் வாய்ப்பினை புதுச்சேரி தோழர் அகன் என்னும் தி.அமிர்த கணேசன் ஏற்படுத்தித் தந்திருந்தார்.  80 படைப்பாளிகளுக்கு விருது அளிக்கப்பட்டது,9 நூல்கள் வெளியிடப்பட்டன.அதில் சூரியக் கீற்றுகள் என்னும் என்னுடைய கவிதைத் தொகுப்பும் ஒன்று. தொடர்ந்து இயங்கும், தன்னுடன் இருப்பவர்களை இயக்கும் பல்துறைக் கவிஞர் அய்யா கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களால் என்னுடைய கவிதை நூல் வெளியிடப்பட்டது மகிழ்ச்சி தந்தது.

                                                        புதுச்சேரி சென்று அடைந்தவுடனேயே, புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் அய்யா சிவ.வீரமணி அவர்கள் ரெயில் நிலையத்திற்கே வந்து வரவேற்றார்கள். அன்று முழுவதும் அவரோடு சில மணி நேரங்கள் இருப்பதற்கும், உரையாடுவதற்கும்,சிற்றுண்டி அருந்துவதற்குமான வாய்ப்பாக அமைந்தது. திராவிடர் கழகத் தோழர்களுக்கு உரித்தான எவ்வளவு வ்சதி வாய்ப்புகள் இருந்தாலும், உயர் பணியில் இருந்தாலும் தோழமை கலந்த நட்பும் மரியாதையும் வியப்புத் தருவது. அந்த வகையில் அய்யா சிவ.வீரமணி அவர்களின் இல்லத்தில் இருந்து காலையில் குளித்துவிட்டு, உணவ்ருந்திப் பின்பு பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் அய்யா புதுச்சேரி மு. ந. நடராசன் அவர்களோடு சேர்ந்து நிகழ்வு நடைபெறும் விவேகானந்தா பள்ளியைச்சென்று அடைந்தோம்.தோழர்கள் கடலூர் பகுத்தறிவாளர் கழக மாவட்டத்தலைவர்  ஜெயக்குமார், பொறியாளர் சிவக்குமரன் ஆகியோரும் வந்திருந்தனர். தோழர் புதுச்சேரி பழனி எங்கிருந்தோ வந்து தங்களின் படைப்பாக்கத்திற்கு வாழ்த்துக்கள் என்று சொல்லி பொன்னாடையப்  போர்த்தி விட்டு போனார்.

                                                             பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் நட்பு போல தொலைபேசி வாயிலாகவும், கணினி வாயிலாகவும் நான் அறிந்த தோழர் அகன் அவர்களைச்சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 60 வயது என நம்ப்முடியாத 35, 40 என எண்ணத்தோன்றும் தோற்றம். உற்சாகமான வரவேற்பு அளித்த தோழர் அகன் நான் நினைத்ததைவிட அதிகமாகவே நெற்றிக் குறிகளோடு இருந்தார். அதனை கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் பேசும்போது, என்னுடைய மூத்தமகனைப் போன்றவர்  அகன்  , நான் நாத்திகன், நான் வேண்டாம் என்று சொல்ல சொல்ல, இல்லை வேண்டும் என்று சொல்லி இத்தனை ஏற்பாடுகளையும் செய்த அகன் ஆத்திகன் என்று சொன்னபோது அரங்கம் அதிர்ந்தது.  எந்த இடத்திலும் நான் நாத்திகன் அல்லது ஆத்திகன் என்று தன்னை வெளிப்படையாக வெளிப்படுத்திக் கொள்வது , மாற்றுக் கருத்து உள்ளவரிடமும் அன்பு செலுத்துவது வரவேற்புக்குரியதுதான். பாராட்டுக்குரியதுதான்.

                                                     சில்ம்பொலி செல்லப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உரையரங்கம் நன்றாக் இருந்தது. முனைவர் க. பஞ்சாங்கம், முனைவர் மணிகண்டன் போன்றோரின் உரைகள், கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் இலக்கியப் படைப்புகளின் மேன்மையையும், தனித்தன்மையையும் தெளிவு படுத்தின, தொடர்ந்து தமிழகத்தின் மிகப்பிரபலமான கவிஞர்கள் யுகபாரதி, கருணாநிதி, இளம்பிறை உள்ளிட்டோரின் கவியரங்கம் நடந்தது. தொடர்ந்து கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் அருமையானதொரு ஏற்புரையை நிகழ்த்தினார். எனக்குப் பிடித்த கவிஞர்களில் ஒருவரான இளம்பிறை அவர்களைச்சந்திக்கும் வாய்ப்பும் ,உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. தோழர் பொள்ளாச்சி அபி , அகனோடு சேர்ந்து ஒத்துழைத்துக்கொண்டிருந்தார்.

                                    முழுக்க, ,முழுக்க இலக்கிய நிகழ்வாக, அரசியல் கடந்து , மதம் கடந்து நிகழ்ந்த நிகழ்வாக மிகச்சிறப்பாக அய்யா கவிஞர்  ஈரோடு தமிழன்பன் அவர்களின் விழா நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது. வாழும் படைப்பாளியை, அவர் வாழும் காலத்திலேயே பாராட்டுவது, அவருக்கு விழா எடுப்பது, எடுக்கும் விழாவையும் இலக்கியப் படைப்பாக்கத்திற்கான ஒரு களமாக ஆக்குவது, புதிய புதிய தோழர்களை ஊக்குவிப்பது, அவர்களின் படைப்பாக்கத்திறனை வெளிப்படுத்தும் நிகழ்வாக அந்தப் பாராட்டு விழாவை ஆக்குவது, எந்த விதப் பிசிறும் இல்லாமல் நிகழ்ச்சிகளை திட்டமிட்டு நடத்தியது, செவிக்கு உணவு மட்டுமல்லாது ஒரு நல்ல விருந்தினை அளித்தது என அத்தனையும் அகம் குளிர நடந்தது. அத்தனைக்கும் காரணமான தோழர் புதுச்சேரி அகன் என்ற தி.அமிர்த கணேசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

                                  
                                                        




பு

Friday, 7 March 2014

நிகழ்வும் நினைப்பும் :(19) திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் முதல்வர்-டாக்டர் இரா.கனகசபாபதி


 நிகழ்வும் நினைப்பும் :(19)
2003 மார்ச்  8 வரை  மார்ச்-8  எனபது மகளிர் தினம் மட்டுமே என்பது போய் எனது வாழ்வின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரை இழந்த தினமாகவும் ஆகிப்போனது. எத்தனைதான் நாம் நேர்மையை, ஒழுக்கத்தை, மேன்மையை புத்தகங்களில் படித்தாலும், நேரிடையாக அப்படி வாழ்பவர்களைப் பார்க்கும்போதுதான் நமக்கு உந்துதலும் உத்வேகமும் கிடைக்கிறது என்பது உண்மை . அப்படி என் வாழ்வில் சந்தித்தவர்களில் மிக முக்கியமானவர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் முதல்வர் எங்கள் பிரின்ஸ்பால் திரு. டாக்டர் இரா.கனகசபாபதி அவர்கள்.

1981-முதல் 1984-வரை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்தபோது எங்களின் கல்லூரி முதல்வராக இருந்தவர் திரு. இரா.கனகசபாபதி அவர்கள். அப்படி ஒரு மரியாதை கலந்த பயம் மாணவர்களுக்கு அவரிடம் இருந்தது. ஆசிரியர்கள், பணிபுரிபவர்கள் எல்லோருக்கும் அப்படித்தான் அவரிடம். மிக அதிகமாகப் பேசமாட்டார். மிகத் தெளிவான முடிவுகளை எடுப்பார். மனித நேயத்தோடு மாணவர்களை அணுகுவது,உதவுவது  என்பது அவரின் பிறவிக் குணமாக இருந்தது.

                                  முதலாம் ஆண்டு , முதல் செமஸ்டரில் நல்ல மதிப்பெண் எடுத்தவுடன் அவரது அறைக்கு அழைத்தார். எனது குடும்ப விவரங்களையெல்லாம் கேட்டுக்கொண்டார். வீட்டில் நாங்கள் 5 பேர். அம்மா மட்டும்தான் ஆசிரியராக இருக்கின்றார்கள். அப்பா இறந்து விட்டார் என்பதையெல்லாம் அறிந்து கொண்ட அவர், எந்த ஹாஸ்டலில் இருக்கின்றாய் என்றார். ' காந்தி விடுதி ' என்றேன். நல்லது , அங்கேயே இருந்து தொடர்ந்து படி என்றார். பகுதி நேரமாக வேலை பார்க்கின்றாயா? ஹாஸ்டலில் பணம் கட்டுவதற்கு வசதியாக இருக்கும் என்றார். சரி என்றேன். முதல் முதலில் எனக்கு உழைப்பின் மூலம் கிடைத்த பணம் , சம்பளம் என்பது திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நூலகத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்துக் கிடைத்துதான். கல்லூரி 4 மணிக்கு முடியும். மாலை 4 முதல் 6 மணிவரை கல்லூரி நூலகத்தில் வேலை. மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டுவரும் புத்தகங்களை பதிவது, புத்தகங்களை அடுக்கி வைப்பது, பிரித்து அடுக்குவது போன்ற வேலைகள். கல்லூரிக் காலத்தில் நூலகத்தில் இருந்ததும், நூல்களை அடுக்கியதும் .அந்த வேலைகள் மூலமாக கல்லூரிக்கு பணம் கட்டியதும் டாக்டர் இரா,கனகசபாபதி அவர்கள் இல்லையென்றால் இல்லை.

                                            காந்தி ஹாஸ்டல் என்றும், மெயின் ஹாஸ்டல் என்றும் இரண்டு ஹாஸ்டல் அன்று திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இருந்தது. மெயின் ஹாஸ்டலில் மாத மெஸ் பில் 600 என்றால் காந்தி ஹாஸ்டலில் 200 ரூபாய்தான் வரும் , ஏழை மாணவர்கள் தங்கிப் படிக்க ஓர் அருமையான அமைப்பை கல்லூரி நிர்வாகத்தோடு கலந்து ஏற்படுத்தி இருந்தார். அளவு சாப்பாடுதான் என்றாலும் பணம் நிறையக் கட்ட முடியாதவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக காந்தி ஹாஸ்டல் இருந்தது. அதில் படித்தவர்கள் இன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். ஏழை மாணவர்கள் தங்கள் ஏழ்மையை உணர்ந்து படிப்பதற்கான இடமாக் அன்றைக்கு அந்த ஹாஸ்டல் இருந்தது,ஹாஸ்டலில் கண்டிப்பு இருக்கும் , ஆனால் கெடுபிடிகள் இருக்காது. 

                                 முதலாம் ஆண்டின் முடிவில்  விடுமுறை இரண்டு மாதங்கள். வகுப்பில் முதல் இரண்டு,மூன்று இடங்களுக்கு மார்க் எடுத்தவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது,.அது தினத்தந்தி அலுவலகத்தில் வேலை பார்ப்பது. எனக்கு மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் வேலை பார்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. மூன்று நேரமும் தினத்தந்தி அலுவலகத்தில் சாப்பிட்டுக் கொள்ளலாம். அப்போது இரண்டு மாதம் வேலை பார்த்தற்கும் ஒரு சம்பளம் போட்டுக் கொடுத்தார்கள், மீண்டும் அது படிப்புச்செலவுக்கு உதவியது. இது எனது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள். இப்படி ஏழ்மையோடு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்த ஒவ்வொரு மாணவர் வாழ்வு உயர்விலும் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் பங்களிப்பு என்பது மகத்தானது. மறக்க முடியாதது. எனது கல்லூரி வாழ்வில் ,பெரியாரியலை எனக்கு முறையாக அறிமுகப்படுத்திய பேரா.கி.ஆழ்வார் அவர்களின் பங்களிப்பும் மகத்தானது.டாக்டர் இரா.கனகசபாபதி அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர். ஆனால் பேரா.கி.ஆழ்வார் அவர்கள் பெரியாரிஸ்ட். ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒருவருக்கொருவர் அவ்வளவு மரியாதையும், அன்பும் இருந்தது.

                              மூன்றாம் ஆண்டு , கடைசி செமஸ்டர் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன. எனது அண்ணன் திரு வா.ஜெயராஜூ அவர்கள் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை கிடைத்திருக்கும் கடிதத்தோடு நேரிலே வந்து கொடுத்து , வேலையில் போய்ச்சேர். உன்னை விட மூத்தவர்கள் ,இரண்டு பேர் இருக்கின்றோம். எங்களுக்கு அரசு வேலை கிடைக்கவில்லை, உனக்கு கிடைத்திருக்கிறது,போய்ச் சேர்ந்தால் நல்லது , ஆனால் நீ மூன்று வருடம் படித்த படிப்பிற்கு , டிகிரி வாங்க முடியாதடா என்றார். நேரே போய் பிரின்ஸ்பாலைப் பார்த்தேன். அரசு வேலை வந்திருக்கின்றதா, வேலை கிடைப்பது அரிது, நீ நல்லாப் படிக்கிற, எம்.எஸ்.ஸி படிச்சு, போட்டித்தேர்வுகள் எல்லாம் நீ எழுதினால் வெற்றி பெறுவாய். ஆனால் உனது குடும்பம் இப்போ இருக்கிற நிலைமையில், நீ வேலைக்குப்போவது உனக்கு மட்டுமல்ல, உனது குடும்பத்திற்கும் நல்லது என்று சொல்லி, போய் அட்ட்ண்டன்ஸ் ரிஸிஸ்டரை வாங்கி வா என்றார். வாங்கி வந்தேன் . 45 நாள் கல்லூரி நடந்திருந்தது,45 நாளும் நான் வந்திருந்தேன்.  90 நாள் கல்லூரி நடக்கும், அதில் 45 நாள் வந்திருந்தால் பரீட்சை எழுதலாம் . போ, போய் வேலையில் சேர், அங்கு போய் உட்கார்ந்து படி. வந்து கெமிஸ்டரி பிராக்டிகல் பரீட்சையையும் , செமஸ்டர் தேர்வையும் எழுதிச்செல் என்றார் அப்படித்தான் , நான் பி.எஸ்.ஸி கெமிஸ்டரியை  நல்ல மதிப்பெண்கள் பெற்று , முடித்தேன். வேலைக்குப் போனாலும் தொடர்ந்து படித்துக்கொண்டே இரு என்றார். 1984-முதல் 1998 வரை  நெருங்கிய தொடர்புகள் இல்லை.

                               மதுரை தொலைதொடர்புத் துறையில் வேலை பார்த்துக்கொண்டிருநதபோதுதான், 1996-ல்  பிரின்ஸ்பால், மதுரையில் ஸ்பார்க் செண்டர் பார் ஐ.ஏ.எஸ். என்னும் நிறுவனத்தை அற்க்கட்டளை நிறுவி நடத்தப்போகின்றார் என்று தெரியவர, நானும் தொலைபேசித்துறையில் வேலை பார்த்த நண்பர் இரா.சீனிவாசனும் அவரைப் போய் பார்த்தோம். மதுரையில் இருந்த திருச்செந்தூர் கல்லூரி பழைய மாணவர்கள் பல் பேரைச்சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மதுரை பெயிண்டிங் கம்பெனி உரிமையாளர்-திருச்செந்தூர் கல்லூரியின் முன்னாள் பேரா. திரு. டி.கல்யாணசுந்தரம், பேரா. திரு,மச்சக்காளை, பேரா.திரு. ஆண்டியப்பன், திரு.சுடலை போன்றவர்களின் நட்பும், தொடர்பும் கிடைத்தது.எனக்கு கற்றுக்கொடுத்த கணிதப்பேராசிரியர் சேகர் சார்,தமிழ்ப்பேராசிரியர் அய்யா இராமச்சந்திரன்,இயற்பியல் பேராசிரியர் இராமசேகரன் சார் எனப் பழைய பேராசிரியர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது.  தொடர்ந்து திரு.இரா,கனகசபாபதி அவர்களின் மாணவன் நான் என்று அறிமுகம் செய்து கொள்வதில் பெருமை கொள்பவனாகத் தொடர்கிறது வாழ்க்கைப் பயணம்.

                            பெரியாரியல் அடிப்படையில் நான் இணையரை அமைத்துக்கொண்டதும், நல்ல நிம்மதியான வாழ்க்கை நடத்திக் கொண்டுவருவதும் மிக்க மகிழ்ச்சி அவருக்கு. எனது குழந்தைகளை பேரன் அன்புமணி என்ன செய்கிறான், பேத்தி அறிவுமதி என்ன செய்கிறாள் என்றுதான் கேட்பார். அப்படி ஒரு பிரியம் தன்னுடைய மாணவர்களின் பிள்ளைகள் மீது. நண்பர் இரா.சீனிவாசன் , அவனது மகள் பாரதி மீதும் அதேமாதிரியான பாசம் பொழிந்தார் ,மதுரையில் வசித்த காலங்களில்.

                      மதுரை ஸ்பார்க் செண்டர் பார் ஐ.ஏ.எஸ். சார்பாக நானும்,மற்ற நண்பர்களும் இணைந்து பல கல்லூரிகளில் சென்று பேசியிருக்கின்றோம். எங்களுக்கு எல்லாம் பயிற்சி கொடுக்கும் ஆசிரியராக அவர் திகழ்ந்தார். கல்லூரி மாணவ், மாணவிகளிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது, அவர்களிடம் இருக்கும் சோர்வை, அறியாமையை எப்படி நீக்குவது, போட்டித்தேர்வுகள் எழுதுவதை எப்படி அவர்களிடம் ஊக்கப்படுத்துவது போன்ற பல செய்திகளைச்சொல்லுங்கள் என்பார்.சொன்னதன் அடிப்படையில் மாணவ, மாணவியர்கள் கொடுக்கும் மறுமதிப்பீடை( பீட்பேக்), ஒவ்வொரு தாளாகப் படித்து எங்களுக்கு ஆலோசனைகளை, பாராட்டுக்களைச்சொல்வார்.  மாணவ, மாணவியர்கள் நலனில் தனது கடைசி மூச்சுவரை பாடுபட்டவர் அவர். அவரது மாணவர்களில் மச்சேந்திரநாதன் போன்ற ஐ.ஏ.எஸ்.கள். மகாலிங்கம் போன்ற ஐ.ஆர்.எஸ்.கள், பேராசிரியர்கள், பல்கலைக் கழ்க ஊழியர்கள் என்று பரந்து விரிந்து இருக்கின்றார்கள். . பல பொறுப்புகளில், பல நாடுகளில் இருக்கின்றார்கள்.அவரிடம் படித்த ஒவ்வொருவரின் முன்னேற்றத்திலும் அவரது பங்களிப்பு நேரடியாக  இருக்கும்.

                                         நானும் நண்பர்களும், சார் , உங்கள் அனுபவங்களை ஒரு புத்தகமாகப் பதிவு செய்தால் என்ன என்று கேட்டபோது ,முதலில் மிகவும் தயங்கினார். சரி என்று முடிவுசெய்து ,அவர் தன்னுடைய அனுபவங்களை எழுத ஆரம்பித்தபொழுது அசந்து போனோம். அத்தனை பைல்கள். தான் பிரின்ஸ்பாலாக வேலை பார்த்த 26 ஆண்டுகளின் அனுபவங்களையும் பைல்களாக, தனித்தனி பதிவுகளாக வைத்திருந்தார். அவற்றையெல்லாம் இணைத்து ' How to develop a college in a rural area "  என்று ஒரு புத்தகமாக கொண்டு வந்தார். அற்புதமான புத்தகம். பல கல்லூரிகளில் ரெபரென்ஸ் புத்தகமாக உள்ள புத்தகம். மாணவர்கள் உள்ளம், அவர்க்ள் புறச்சூழல் அதன் விளைவாக அவனுக்கு இருக்கும் அகச்சூழல், பிற்படுத்தப்பட்ட தன்மை என்பது எப்படி அவனது மூளைக்குள் இருக்கின்றது, அதனை எப்படி நீக்குவது, ஆசிரியர்கள் கடமை என்ன, நிர்வாகத்தின் கடமை என்ன, பெற்றோர்களின் கடமை என்ன என்று தனது அனுபவத்தை எல்லாம் இணைத்து அந்த நூலைக் கொண்டு வந்தார். மறுபதிப்பு கொண்டு வரவேண்டும், அதனை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று பழைய மாணவர்களின் நினைப்பு இன்னும் நினைப்பிலேயே இருக்கின்றது.

                                          மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினராக இருந்து பல மாற்றங்களுக்கு காரணமாக இருந்தார். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ஒரு நாள் அவர் ஆவார் என்பது எங்கள் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.  மார்ச்-8 என்பது எங்கள் பிரின்ஸ்பால் திரு.டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின்  நினைவு நாள்:, அவரது இறுதி அடக்கத்தில் குலையன்கரிசலில் நேற்றுத்தான் கலந்து கொண்டது போல் இருக்கின்றது. 11 ஆண்டுகள் ஓடிவிட்டது. ஆம் அவர் மறைந்த நாள் மார்ச்-8 , 2003 . திருச்செந்தூர் என்ற பெயர் கண்ணில் பட்டாலே எனது நினைவுகளில் ஓடுவது டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் நினைவுகள்தான்.  மண்ணில் வாழ்ந்த மகத்தான மனிதர்கள் புத்தகங்களில் மட்டுமல்ல, நம்மைச்சுற்றியும் இருக்கின்றார்கள், இருந்தார்கள்...இருப்பார்கள்.                           

Sunday, 2 March 2014

அண்மையில் படித்த புத்தகம் : ஜெயிப்பது நிஜம் - இன்ஸ்பயரிங் இளங்கோ

அண்மையில் படித்த புத்தகம்  : ஜெயிப்பது நிஜம்
ஆசிரியர்                                          :   இன்ஸ்பயரிங் இளங்கோ
பதிப்பகம்                                         :    கிழக்கு பதிப்பகம்- சென்னை-14. 044-42009601
முதல் பதிப்பு                                 :    ஜனவரி  2014 ,144 பக்கங்கள், விலை ரூ 100.

                                                               அனைத்திலும் இருந்து மாறுபட்ட புத்தகம் என்று கொடுத்திருக்கின்றார்கள். உண்மைதான். மற்ற சுய முன்னேற்ற நூல்கள் போல் இல்லாமல் மாறுபட்டதாக இந்தப் புத்தகம் அமைந்ததற்குக் காரணம் இது இன்ஸ்பயரிங் இளங்கோவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு என்பதால் மட்டுமல்ல , புத்தக வரிகளுக்குள் புதைந்து கிடக்கும் உண்மையாலும்தான் எனலாம்..

                                 நான் மாற்றுத் திறனாளி அல்ல சிறப்புத்திறனாளி எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் இளங்கோவின் தன்னம்பிக்கை , இந்த நூல் முழுவதும் விரவி  வாசிப்பவர்களைத் தன் வசம் ஆக்கிக் கொள்கிறது. அறிஞர் அண்ணாவின் மேற்கோளை உதாரணம் காட்டி , வாழ்தல் வேறு, இருத்தல் வேறு என்பதனை முன்னுரையில் விளக்கும் இளங்கோ, வாழ்தல் எப்படி என்பதனை தன் வாழ்வின் வெற்றிப்படிக்கட்டுகளில் இருந்து விளக்கிச்செல்வது எதார்த்தமாகவும், இயல்பாகவும் இருக்கிறது.

                               முதல் அத்தியாயத்தில் தன்னை ராக்கிங் செய்யும் ராபர்ட் என்னும் சீனியர் மாணவனை, இளங்கோ எதிர்கொண்டவிதம் அருமை. எதிராளியை நிலைகுலைய வைக்கும் ராபர்ட்டை நிலைகுலையச்செய்த அவரின் அணுகுமுறை மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டியது . "என்ன அப்பா, இவ்வளவு ஆர்வமா இந்தப் புத்தகத்தை படிச்சிக்கிட்டு இருக்கீங்க", என்று தன் கையில் வாங்கிய என் மகள் அறிவுமதி முழுவதுமாக படித்து விட்டுத்தான் என் கையில் கொடுத்தார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் 20 நாளில் இருக்கும் நிலையில், பாடத்தை மறந்து அவரைப் படிக்கத்தூண்டியதாக இந்தப் புத்தகம் அமைந்தது. படித்து முடித்து சில பகுதிகளைத் தன் தாயாரிடமும், தன் அண்ணனிடமும் படித்துக் காண்பித்துக்கொண்டிருந்ததைப் பார்த்ததும், இந்தப் புத்தகம் செய்யும் வேலை எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த அளவிற்கு ஈர்ப்பும், உண்மையுமாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. சூப்பர் இன்ஸ்பயரிங் புத்தகம்தான்., ".' வாழ்ந்து காட்டுவதை விட பழிவாங்கும் செயல் எதுவுமில்லை ' என்பதை அழுத்தந்திருத்தமாக நம்புகிறவன் நான் , எனவே வாருங்கள் வாழ்ந்து காட்டுவோம் " என்று இளங்கோ கூறுவது , சின்னச்சினன சொற்களுக்குக்கூட உடைந்து போகும் இன்றைய இளையதலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

                                            தன்னை மேம்படுத்திய ஆசிரியரையும்(டிசில்வா), தன்னை சிறுமைப்படுத்திய ஆசிரியரையும்(கணக்கு வாத்தியார்) இந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். மற்ற மாணவர்கள் மத்தியில் சிரிப்பு ஒலி எழுப்புவதற்க்காக தன்னை கேலி செய்யும் ஆசிரியரை, மதிப்பெண் எடுத்துக்காட்டி எதிர்கொண்ட விதம் -நயத்தக்க நாகரீகம். தொலைபேசியில் பேசும்போது கவனிக்க வேண்டியவை, உடை அலங்காரத்தில் கவனிக்க வேண்டியவை, உடற்பயிற்சியின் முக்கியத்துவம், அடுத்தவர்களின் நேரத்தை மதிப்பது, உறவுகளை எப்படிப் பேணிப்பாதுகாப்பது போன்ற பல நடைமுறைச்சிக்கல்களையும், அதன் தீர்வாக அவர் வாழ்க்கையில் கைக்கொண்ட வழிமுறைகளையும் அதனால் பெற்ற நன்மைகளையும் இயல்பாகச்சொல்லிச்செல்கின்றார்.

                                                 ஒரு விரலால் ஜெயித்த மாலினி சிப் போலத் தன் வாழ்வில் ஏற்பட்ட  குறைபாடு தன்னை சுய பச்சாதபம் ஏற்பட வைக்காமல், நான் வெற்றி பெறப்பிறந்தவன் என்னும் மனப்பான்மையோடு வெற்றி பெற்ற வரலாறும், இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியானவன் தான் என்னும் மனப்பான்மையும் , இளங்கோ பார்வையற்றவர் என்னும் குறைபாடே இல்லாமல் மனதளவில் வாழ்வதும் படிப்போரை ஈர்க்கும்.ஆங்கிலத்தில் Ph.D, பல விருதுகள், பல பேருக்கு வேலை கொடுக்கும் இளங்கோ, பல ஆயிரக்கணக்கானோர் மத்தியில் சிறப்புரை ஆற்றும் இளங்கோ என அவரின் சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன, எனக்கு sight இல்லாமல் இருக்கலாம். அதற்காக நான் வருத்தப்படவில்லை, உட்கார்ந்து அழுது கொண்டிருக்கவில்லை. எனக்கு இருக்கும் vision-ல் இந்த உலகத்தை வியப்படைய வைக்கிறேன் என்று வியப்படைய வைத்திருக்கின்றார் இளங்கோ.  மிகச் சிறந்த தன்னம்பிக்கை அளிக்கும் புத்தகம் . வாங்கிப் படிக்கலாம், படிக்கும் மாணவர்களுக்குப் பரிசாக அளிக்கலாம். இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசச்சொன்னால், 144 பக்கம் உள்ள இந்தப் புத்தகம் பற்றி ஒரு மணி நேரம் பேச நான் ரெடி. ...

Tuesday, 18 February 2014

கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு வாழ்த்து -

ஈரோட்டுச்சூரியனின்
வெம்மையை
வார்த்தை கூடுகளுக்குள்
குவித்து வைத்த கவிஆடியே !

ஈரோட்டுத் தந்தையையும்
தமிழையும்
இரு கண்களாய்
கவி புனைந்த
புரட்சிக் கவிஞரின்
வழி என்பதாலோ
நீ உனை
ஈரோடு தமிழன்பன்
என அழைத்துக்கொண்டாயோ ?

வண்ணங்களில்
வர்ணம் தீட்டும்
வித்தை கற்றதாலோ
வார்த்தைகளில்
சிற்பம் கட்டும்
வல்லமை பெற்றாயோ?

எத்தனை புதுமைப்
பூக்களை பூக்கவிடும் முய்ற்சி
உன் கவிதைத் தடாகத்தில்
ஹைக்கூ என்றாய்
கற்றுக் கொண்டோம்
சென்ரியூ என்றாய்
அறிந்துகொண்டோம்
லிமரைக்கூ என்றாய்
தெரிந்து கொண்டோம்
வினாக்களால் கவிதை என்றாய்
விடைகளைத் தேடுதல்
வினாக்களால் மட்டுமே
சாத்தியம் எனப் புரிந்து கொண்டோம் !

தமிழ் இலக்கியத்தின்
பக்கங்களில்
பாப்லோ நெருடோவை
அமரவைத்தாய் !
இளைப்பாறுதல் இல்லா
'இலக்கியப் படைப்பாளியே !
எண்பதுகளில் அடிவைக்கிறாய்!
இறுமாப்பு எய்துகிறோம்
உன் படைப்புகளால் !
வாழிய ! வாழிய !
உன் புகழ் வாழிய !


                        வா. நேரு -
நன்றி : எழுத்து.காம்- 18.2.2014

Tuesday, 11 February 2014

அண்மையில் படித்த புத்தகம் : ஆழத்தை அறியும் பயணம்-பாவண்ணன்

அண்மையில் படித்த புத்தகம் : ஆழத்தை அறியும் பயணம்
ஆசிரியர்                                          :  பாவண்ணன்
பதிப்பகம்                                         : காலச்சுவடு
முதல் பதிப்பு                                  : டிசம்பர் 2004 , 242 பக்கங்கள், விலை ரூ 140
மதுரை மாவட்ட மைய நூலக எண்: 167300

                                                                    படித்து முடித்தவுடன், கட்டாயம் விலைக்கு வாங்கி வீட்டில் வைக்க வேண்டும் என்று நினைத்த புத்தகம். தான் படித்த, தன் மனதைப் பாதித்த ஒரு எழுத்தாளரின் சிறுகதை, அச்சிறுகதையோடு தொடர்புடைய தன்னுடைய வாழ்வில் நிகழந்த நிகழ்வு, இரண்டையும் இணைத்து  ஓர் ஆழமான இலக்கியத் தேடல் பயணமாக இந்த நூலைக் கொடுத்துள்ளார் பாவண்ணன். நல்ல முயற்சி, அருமையான சிறுகதைகளின் கதைச்சுருக்கமும், அக்கதைகளை எழுதிய ஆசிரியர் பற்றிய குறிப்புகளும் , அந்தச் சிறுகதைகள் சொல்லும் சேதியை தன் வாழ்வோடு  பொறுத்திப்பார்க்கின்றபோது எழும் சிந்தனைகளும், அதை நேர்த்தியோடு சொல்லும் விதமும்  அருமை, அருமை, பாவண்ணன், அருமை.

                                               தமிழகத்தைச்சேர்ந்த 25 எழுத்தாளர்களின் கதைகள், அயல் தமிழ்ச்சிறுகதைகள் எனத்  தமிழ் ஈழம்-இலங்கையைச்சேர்ந்த 8 எழுத்தாளர்களின் கதைகள், பிறமொழிக் கதைகள் என இந்தியாவின் பிற மாநில மற்றும் அயல் நாட்டைச்சேர்ந்த 10 எழுத்தாளர்களின் கதைகள் என மொத்தம் 43 கதைகள். பொறுக்கி எடுக்கப்பட்ட கதைகளாக உள்ளன. ' சிறுவனாக இருந்த காலம் முதல் இன்றுவரை படிப்பதில் என் ஆர்வம் தணியாத ஒன்றாகவே இருக்கிறது. படிப்பதை அசைபோடும் தருணங்களில் ஒன்றை இன்னொன்றுடன் இணைத்தும் வேறொன்றுடன் மாறுபடவைத்தும் யோசிப்பதும்கூடப் பழகிவிட்டது' என்று தன் முன்னுரையில் பாவண்ணன் கூறுகின்றார். ஆனால் அவரின் பழக்கம், பதிவாகி ,புத்தகமாகி கையில் வந்தபோதுதான் அது எவ்வளவு பெரிய நல்ல பழக்கம் எனப்புரிகின்றது.

                                                          ஜாதி உணர்வை விடமறுக்கும் மனிதர்களைப் பற்றிய கதையான அ. .மாதவையரின் 'ஏணியேற்ற நிலையம்' பற்றிச்சொல்லி வெட்ட வெட்ட முளைக்கும் புல், களை போலவே மனிதர்களின் மனங்களில் ஜாதி உணர்வு இருப்பதைச்சுட்டுகின்றார். பி.எஸ்,இராமையாவின் 'நட்சத்திரக் குழந்தைகள்'  கதையோடு தன் மகனுக்கும் தனக்கும் நடந்த்  கடவுள் பற்றிய உரையாடலை பாவண்ணன் காடுகின்றார். த. நா. குமாரசாமியின் 'சீமைப்பு ' கதைக் கருவோடு தன் நணபர் கிராமத்தில் வாங்கிய ஒரு ஏக்கர் நிலத்தையும் அதனைப் பார்த்துக்கொள்ள குடிசையோடு அமர்த்தப்பட்ட அவரின் தம்பியையும் ஒப்பிடுகின்றார். இப்படி ஒவ்வொரு கதையைப் பற்றியும் அவரின் விவரிப்பும் ஒப்பிடலும் மிக இயல்பாக உள்ளன். படிக்கும் நமக்கும் , நாம் படிக்கும் ஒவ்வொரு கதையையும் நமது வாழ்வோடு ஒப்பிட்டு, மேலும் உணர்வதற்கும் பிறருக்கு உணர்த்துவதற்கும் தூண்டுகின்றன.

                                                            ஒவ்வொரு சிறுகதையையும் விவரித்துச்சொல்ல ஆசைதான் . மொத்தம் 43 பாராக்கள் ஆகிவிடும்.  உண்மையிலேயே 'ஆழத்தை அறியும் பயணம்'தான் இந்தப் புத்தகம். வாங்கிப் படிக்கலாம். படித்து படித்து இரசிக்கலாம். வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தையும் பாராட்ட வேண்டும்.

Sunday, 9 February 2014

நிகழ்வும் நினைப்பும் (18) :இறையன்புவின் படைப்புலகம்

மதுரையில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் 'இறையன்புவின் படைப்புலகம் '; என்னும் தலைப்பில் நிகழ்ந்த ஆய்வரங்க நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வாழும்போதே படைப்பாளி, தனது படைப்புகள் குறித்த பாராட்டுக்களையும் , விமர்சனங்களையும் நேரிடையாக்க் கேட்பது அரிது. அதிலும் யூ.சி.ஜி. யும் , ஒரு கல்லூரியும் இணைந்து, படைப்பாளியின் படைப்புகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஆய்வரங்கம் நடத்துவது அரிது, அரிது. எனக்குத் தெரிந்து சில ஆண்டுகளுகளுக்கு முன்னால் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் படைப்புகள் பற்றி நடந்தது. அதனைப்போல திரு. வெ.இறையன்பு அவர்களின் படைப்புகள் பற்றி 8, 9 நாட்களில் நடந்த ஆய்வரங்கம் குறிப்பிடத்தக்க நிகழ்வு.

                                        சென்னையில் 8.2.2014 அன்று நடந்த கருத்தரங்கில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கலந்து கொண்டு  தொடங்கி வைத்திருக்கின்றார். ம்துரையில் திரு. பொன்னம்பல அடிகளார் அவர்கள் தலைமையேற்று ஆய்வரங்கத்தை முடித்து வைத்தார்கள். காலை 10 மணிக்கு திரு.வெ.இறையன்பு அவர்கள் 'வையத் தலைமை கொள் ' என்னும் தலைப்பில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பயிலும்  மாணவ மாணவிகளுக்கு  அருமையான உரையை நிகழ்த்தினார். தலைமைப் பண்பு என்றால் என்ன. ஒரு நிர்வாக்த்தில் தேவைப்படும் தலைமைப்பண்பு, புதிதாகக் கண்டு பிடித்தவர்கள் எல்லோருமே 35 வயதிற்குள்தான், நிறுவனங்கள் இன்று அனுபவசாலிகள் தேவை என்று கேட்பதில்லை, அனுபவசாலிகள் புதிதாக சிந்திப்பதில்லை, மாற்றி யோசிப்பதில்லை என்பதையெல்லாம் குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார். பின்பு மாணவ , மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஒரு மாணவன் தேர்வில் இப்படிக்கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள் என்று ஒரு புதிரைக் கேட்க, புதிரெக்கல்லாம் பதில் சொல்லி , தேர்வாகி வந்து விட்டோம் , அய்.ஏ.எஸ்.தேர்வு குறித்து , படைப்புகள் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேளுங்கள் என்றார். உண்மைதான், என்ன கேள்வி கேட்பது என்பது புரிந்தாலே , பல விசயங்கள் எளிதாகப் புரிந்து விடும். நான்கு அறைகளில், கட்டுரையாளர்கள் 'இறையன்புவின் படைப்புகள்' பற்றி
 கட்டுரைகள் வாசித்தார்கள். மொத்தம் 190 கட்டுரைகள், மூன்று பாகங்களாக புத்தகங்கள் 'இறையன்புவின் படைப்புலகம்' என்னும் தலைப்பிலே வெளியிடப்பட்டது.

                                    190 கட்டுரையாளர்கள், பல துறை சார்ந்தவர்கள், பல்வேறு இயக்கங்கள் சார்ந்தவர்கள். திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணை வேந்தர் மதிப்பிற்குரிய நல்.ராமச்சந்திரன் அவர்கள். , கவிஞர் வைரமுத்து அவர்கள், பேரா. டாக்டர். கு.ஞானசம்பந்தன் அவர்கள்,முன்னாள் நீதிபதி சந்துரு    போன்றவர்கள் இறையன்புவின் படைப்புகள் குறித்து தங்களது கருத்துக்களைப் பதிந்துள்ளார்கள். 190 கட்டுரையாளர்களில் நானும் ஒருவனாக எனது கருத்தினைப் பதிந்து, கட்டுரையாகக் கொடுத்துள்ளேன். அந்த வகையில் சார்பாளராகவே கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. பேரா. டாக்டர். கு.ஞானசம்பந்தன் அவர்கள், தனது கட்டுரையில் எனது முனைவர் பட்ட ஆய்வினை, 'இறையன்புவின் படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும் ' என்னும் தலைப்பில், அவரது நெறியாளுகையில் மேற்கொண்டதைக் குறிப்பிட்டிருந்தார்.

                                            திரு.பொன்ன்மபல அடிகளாரின் உரை ஆற்றொழுக்காய், ஆழ்ந்து இறையன்புவின் படைப்புகளை படித்து உள்வாங்கியதன் அடையாளமாய் அருமையாக அமைந்தது. தமிழ்ப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் ம.திருமலை அவர்கள், எழுத்தாளர் ந.முருகேச பாண்டியன்  போன்றோர் அவர்களுக்கே உரித்தான பாணியில் தங்கள் உரையைத் தந்தனர்.முனைவர் ம.திருமலை அவர்கள், இந்த நிகழ்வுக்குக் காரணம் பேரா. நம்.சீனிவாசன் அவர்கள் என்பதனையும், அவரின் தனித்தன்மையையும் மிக அருமையாக பதிவு செய்தார்.

                                    பேரா. நம்.சீன்வாசன் அவர்கள் தனித் தன்மை வாய்ந்தவர். நேர்மையின் வடிவமாகத் திகழ்பவர். தன் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவர்களின் அன்பினைப் பெற்றவர்(அரங்கில் நம்.சீனிவாசன் என்றவுடன் எழுந்த கைதட்டல இதனை நிருபித்தது).திராவிடர் கழகத் த;லைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். எதைச்செய்தாலும் முழுமையாகச்செய்ய வேண்டும் என மெனக்கிட்டுச் செய்பவர். மிக அபூர்வமான ,ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகள் மன்னர் கல்லூரியில் நடைபெறக் காரணமாக இருப்பவர். கல்லூரி நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்பினை தனது அணுகுமுறையால் பெற்றுக் கொள்பவர். கல்லூரியின் செயலாளர் அய்யா விஜயராகவன், மற்றும் மற்ற  நிர்வாகிகளின் மதிப்பினைப் பெற்றவர்.  நிகழ்வு சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதிலேயே முனைப்பாக இருந்து, தனது பெயர் இருந்தாலும் ,இல்லையென்றாலும் கவலைப்படாதவர். மிக அருமையான தமிழ்ப்பேராசிரியரை, தமிழ்ப்பல்கலைக் கழக்த்தின் துணைவேந்தர் முனைவர் ம.திருமலை அவர்கள் உளமாற , மனதர்ரப் பாராட்டியது மகிழ்ச்சி அளித்தது. பெரியாரியலை வாழ்வியலாகக் கடைப்பிடிக்கும் பேரா. நம்.சீனிவாசன் அவர்களுக்கு கிடைக்கும் பாராட்டு , நம் எல்லோருக்கும் கிடைக்கும் பாரட்டுதானே!. முடிவில் திரு வெ.இறையன்பு அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.  உணர்ச்சியும் எழுச்சியுமாக , அவர் ஆற்றிய உரை , கேட்டவர்களின் மனதில் ஆழமாய்ப் பதிந்த உரை. முழு நாள் முழுவதும் மதுரை ஆடிட்டர் திரு சண்முகசுந்தரம் அவர்கள், கோடைப் பண்பலை வானொலி இயக்குநர் திரு.சுந்தர.ஆவுடையப்பன் அவர்கள் , தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் திரு.பசும்பொன் அவர்கள், திராவிடர் கழக மண்டலச்செயலாளர் திரு.மீ.அழகர்சாமி மற்றும் நண்ப்ர்களோடு .ஒரு மாறுபட்ட அனுபவமாக அமைந்த நிகழ்வாக , எனக்கு  இந்த நிகழ்வு அமைந்தது.

Wednesday, 5 February 2014

நிகழ்வும் நினைப்பும்(17):மாட்டுக் கொட்டகை பள்ளிக்கூடத்தில் படித்த துணைவேந்தர்

மதுரையில் எனது மகன் சொ.நே.அன்புமணி படித்த பள்ளியின்(சி.இ.ஓ.ஏ) ஆண்டு விழா இன்று (5.2.2014) நடைபெற்றது. அந்தப் பள்ளியில் படித்து மாநில, மாவட்ட ரேங்க்(+2, 10) எடுத்தவர்கள், பாடங்களில் 100க்கு நூறு எடுத்தவர்களுக்கு ரொக்கப்பரிசுகளை அந்தப் பள்ளியில் வழங்கினார்கள். ஏறத்தாழ 20 ல்ட்சம் ரூபாய் வழங்கினார்கள். எனது மகன் பெற்ற பரிசை வாங்க நான் போயிருந்தேன்.    நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தஞ்சை பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் திருமலை அவர்கள் கலந்து கொண்டார். தன்னுடைய உரையில் தான் படித்த காலத்திற்கும் இன்றைக்கும் இருக்கின்ற பள்ளிக்கூட கட்டமைப்பு வசதிகள் பற்றிக் குறிப்பிட்டார். மதுரையில் இவ்வளவு பெரிய நிலப்பரப்பில், பெரிய பெரிய கட்டங்களோடு இந்தப் பள்ளி இயங்குகிறது. 50,60 ஆண்டுகளுக்கு முன்னால், அருப்புக்கோட்டை அருகில் உள்ள பந்தல் குடியிலிருந்து எங்கள் ஆசிரியர் , எங்கள் கிராமத்திற்கு வருவார். அவர் பெயர் தெரியாது, ஆனால் எல்லோரும் பந்தல்குடி வாத்தியார் என்றுதான் அழைப்பார்கள். எங்கள் ஊரின் செல்வந்தர் ஒருவர் , தன்னுடைய மாட்டுக் கொட்டகையின் ஒரு பகுதியை பாடம் நடத்த, பள்ளிக்கூடமாக அனுமதித்திருந்தார். பள்ளிக்கூடம் தொடங்கும் வரை மாடுகள் இருக்கும். மாணவர்கள் வந்தவுடன், மாடுகள் மேயப்போய் விடும்,மாலையில் மாணவர்கள் போனவுடன் மாடுகள் வந்து விடும். மழை வந்து விட்டால், மாடுகள் மேயப்போகாது, நாங்களும்(மாணவர்களும்) , மாடுகளும் ஒரே இடத்தில்தான் இருப்போம் ,ஆனால் பாடம் நடக்கும். அப்படிப்பட்ட நிலைமை அன்றைக்கு இருந்தது. இன்றைக்கு இருக்கும் மாற்றத்தை நினைக்கின்றபோது பெருமிதமாக இருக்கிறது. இன்றைக்கு படிக்கும் மாணவர்களுக்கு எவ்வளவு வசதி, வாய்ப்புக்கள் இருக்கின்றது  என்றார்.

அன்று ஒவ்வொரு வீட்டிலும் சில குழந்தைகள் சாகும். சாதாரணமாக ஒரு பெண்ணிடம் , உனக்கு எத்தனை குழ்ந்தைகள் என்றால், ஒரு நாலு குழந்தை செத்துப்போச்சு, மீதம் 8 இருக்கு என்பார்கள். 6-வது குழ்ந்தை பெயர் என்ன்வென்றால் , பட்டென்று சொல்ல மாட்டார்கள். யோசித்துத்தான் சொல்லுவார்கள். அப்பாவிடம், உனது 6-வது பிள்ளை எத்தனாவது வகுப்பு படிக்கிறது என்று கேட்டால், தெரியாது என்பார்கள். என்னமோ, ப்ள்ளிக்கூடம் போறான், வர்றான், என்ன படிக்கிறான் என்றெல்லாம் தெரியாது என்பார்கள்.குழ்ந்தை பெற்றுக்கொண்டே இருப்பார்கள். கேட்டால் கடவுள் கொடுக்கிறான் என்பார்கள் . இன்றைக்கு அப்படி இல்லை. பையனின், பெண்ணின் படிப்பைப் பற்றி பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்றார். சாதாரண கிராமத்தில் பிறந்து , பகுதி நேர மாட்டுக் கொட்டகை பள்ளிக்கூடத்தில் படித்த நான், தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக, படிப்பால்,உழைப்பால் உயர்ந்திருக்கிறேன் என்றால், நீங்கள் எல்லாம் இவ்வளவு வசதி இருக்கும் காலத்தில் உழைத்தால் எவ்வளவு தூரம் உயர முடியும் என்பதனை உணருங்கள் என்றார். மிக எதார்த்தமான உரையாக, ஆனால் மாணவர்களின் மனதில் சுருக்கெனத் தைக்கும் உரையாக அவரின் உரை இருந்தது.

Monday, 3 February 2014

நிகழ்வும் நினைப்பும் (16) நமது தோழர்கள் தங்கள் உடல் நலத்தில் கவனம்

01.02.2014   இரவு  9 மணியளவில் , திராவிடர் கழக மாணவரணி மாநிலச்செயலாளர் தோழர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்கள் அலைபேசியில் அழைத்தார். அய்யா, கூட்டத்திற்கு சென்ற இடத்தில், ஒட்டன்சத்திரம் அருகில் தலைமைக் கழகப்பேச்சாளர் பெரியார் செல்வம் அவர்களுக்கு, உடல் நிலை சரியில்லை, மாரடைப்பு என்று சொல்கின்றார்கள், மதுரைக்குத் தான் கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள். கொஞ்சம் என்னவென்று பாருங்கள் என்றார். பதற்றம் தொற்றிக் கொண்டது.  திராவிடர் கழக் மாநில அமைப்புச்செயலாளர் வே.செல்வம் அவர்களிடம் பேசினேன். அண்ணன், திண்டுக்கல் வீரபாண்டி பேசினார், முதல் உதவி சிகிச்சை ஒட்டன்சத்திரத்தில் செய்திருக்கின்றார்கள், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள் , அங்குதான் நான் போய்க் கொண்டிருக்கின்றேன் என்றார்.

                                            இன்று(2.2.2014)  ஆஞ்சியோகிராம் செய்து பார்த்ததில் , 3 அடைப்புக்கள் இருக்கின்றன, அதிலும் மாரடைப்பு வரக்காரணமான ஒரு அடைப்பிற்கு ஆஞ்சியோ பிளாஸ்டிரி செய்ய வேண்டும் என்று மருத்துவனை மருத்துவர்கள் சொல்ல், ஆஞ்சியோ பிளாஸ்டிரி செய்யப்பட்டு, இப்போது நலமாக மருத்துவமனையில் இருக்கின்றார். தோழர் பெரியார்செல்வத்தின் அம்மா, துணைவியார் மற்றும் உறவினர்களோடு திராவிடர் கழகத் தலைமைக் கழகச்சொற்பெருக்காளர் முனைவர் அதிரடி அன்பழகன், அண்ணன் வே.செல்வம்,  மதுரை புற நகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மா.பவுன்ராசா, பா.சடகோபன் க.அழகர்,.அ.வேல்முருகன் மற்றும் பல தோழர்கள் வநது பார்த்த வண்ணமும் அருகிலும்  உள்ளனர். தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்திருக்கின்றார். கழகப் பொதுச்செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். திராவிடர் கழகத்தின் தலைமைக் கழக உறுப்பினர் அய்யா தே.எடிசன்ராசா அவர்கள், தோழர்கள் பெரியார் செல்வத்திற்கு செய்யும் உதவி, இப்போது அவரைத் தொந்தரவு படுத்தாமல் இருப்பதே,தய்வு செய்து அவரை ஓய்வு எடுக்க விடுங்கள்  என்றார். உண்மைதான். ஓய்வு எடுக்க வேண்டிய நேரம் இது.

                                            தோழர் பெரியார் செல்வன் பேசாத திராவிடர் கழகக் கிளை உள்ள ஊர் தமிழகத்தில் கிடையாது என்ற அளவிற்கு சென்ற 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேசி வரும் தோழர். ஆளே கூடாத  இடத்தில் பேசச்சொன்னாலும், தன்னுடைய பேச்சால் போவோர் , வருவோரை எல்லாம் நிறுத்தி , 500 1000 மென ஆட்களை சேர்த்து, தான் சொல்லும் கருத்தை கேட்க வைக்கும் அருமையான பேச்சாற்றல் உள்ள தோழர். எடுத்துக்கொண்ட கருத்தை சொல்வதற்கு பல்வேறு உதாரணங்களை அடுக்கடுக்காக அடுக்கும் தோழர். பள்ளிகளில், கல்லூரிகளில் சென்று மாணவ மாணவிகளுக்கு அவர் சொல்லும் அறிவுரை சார்ந்த பகுத்தறிவுக் கருத்துக்கள் தனித் தன்மை உடையவை.    தொடர் சுற்றுப் பயணத்தில் இருப்பவர்.மதுரையில் 3 நாள் தொடர் கூட்டங்கள் என்றாலும், முதல் நாள் பேசிவிட்டு இரவு பத்தரை மணிக்கு சாப்பிட்டு விட்டு, தஞ்சாவூருக்கு பேருந்தில் போய் 3, 4 மணிக்கு வீட்டுக்குப் போய் மறுபடியும் பயணம் செய்து மதுரை வந்து பேசிவிட்டு மறுபடியும் தஞ்சாவூர் போய் வந்து கொண்டிருப்பார். இயக்கப் பேச்சாளராகவும்  அதே நேரத்தில் குடும்பத் தலைவராகவும் தனது பணிகளைச்சரியாகச்செய்ய வேண்டும் என நினைக்கும் தோழர்.கூட்டத்தில் தனது பேச்சை முடிக்கும் நேரத்தில் , ஒரு ஐந்து மணித்துளிகள் உச்ச கட்ட குரலில், உரத்த குரலில்  தொகுத்து உணர்ச்சி பிழம்பாய் மாறி  தனது பேச்சை முடிப்பார் .

                                    கொஞ்ச காலம் ஓய்வு எடுத்து விட்டு, மறுபடியும் பேச வருவார் பெரியார் செல்வம். . தமிழர் தலைவர், அய்யா ஆசிரியர் அவர்கள், 40 வயதில் செய்ய் வேண்டிய மருத்துவ பரிசோதனைகளை , வரிசையாக வாழ்வியல் சிந்தனைகளில் எழுதி இருக்கின்றார். 'இதயம் காப்போம் ' என்று தனி நூலே எழுதியிருக்கின்றார். அவர் காட்டும் வழியில் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஊர் ஊராகச்சொல்லும் ஆற்றல் மிக்க பேச்சாளர் இவர். ஆனால் உடல் பரிசோதனை எதுவும் செய்ததில்லை போலும். 50 வயதிற்கு கீழேதானே என்று இருந்திருக்கின்றார். உடனடி மருத்துவ வசதியால் மிகப்பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டிருக்கின்றது. பெரியார் செல்வத்தின் துணைவியாரிடம் , மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இதற்கு முன் தெரிந்ததா எனக் கேட்டபோது , இல்லை அய்யா என்றார். அவரே ஒரு செவிலியர். நமது தோழர்கள் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். முறையாக சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டால், ஆபத்துக்களைத் தவிர்க்கலாம் . . வருமுன்ன்ர் இன்னல்களைத் தவிர்க்கலாம்.
 

Saturday, 1 February 2014

நிகழ்வும் நினைப்பும்(15) : எங்கள் ஊரின் நடமாடும் முரசொலி ...

நிகழ்வும் நினைப்பும்(15) : எங்கள் ஊரின் நடமாடும் முரசொலி ....

                                 மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சாப்டூர் திராவிட முன்னேற்றக்கழகக் கிளையின் அவைத் தலைவர், அருமைக்குரிய அய்யா ஜோதி(நாடார்) அவர்கள் இன்று(31-1-2014) மறைந்தார். தி.மு.க. ஆரம்பித்த 1949 முதல் தி.மு.க.வின் உறுப்பினர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் போன்ற தலைவர்களின் மேல் வற்றாத பாசம் கொண்டவர். சின்னக் கிராமத்தில் நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து இன்றுவரை , தி.மு.க. என்னும் கட்சியை சாப்டூரில் வளர்ப்பதற்கும், காப்பதற்கும் ஒரு தீரராய் , ஒரு தனி இராணுவம் போல  செயல்பட்டவர் திரு. ஜோதி அவர்கள்.

                                 ஆரம்ப காலப் பேச்சாளராக இருந்த காலத்தில்  நாஞ்சில் சம்பத் பலமுறை சாப்டூரில் வந்து பேசியிருக்கின்றார். வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம், கண்மணி தமிழரசன், கோவை மு,.இராமநாதன் போன்ற தி.மு.க.வின் முக்கிய பேச்சாளர்களையெல்லாம் வரவழைத்து, அவர்களைப் பேச வைத்து, கிராமத்தில் தி.மு.க.வை வளர்த்தவர். வருகின்ற பேச்சாளர்களைத் தன் வீட்டில் உணவளித்து, கூட்டம் முடிந்த பின் திரும்பிச்செல்ல பேருந்து இல்லாமல் போவதால் அவர்களை தனது வீட்டில் தங்கவைத்து மறு நாள் காலை வழிச்செலவிற்கு பணம் கொடுத்து உபசரித்து அனுப்பும் வழக்கம் உள்ளவர்.
திரு. சேடபட்டி முத்தையா அவர்கள் அ.தி.மு.க.வில் சபாநாயகராக இருந்த காலத்தில்,ஊரில் இருந்த பெரும்பாலோர் அவருக்கு ஆதரவாக இருந்த நிலையிலும், இரும்பு போன்ற உறுதியோடு இயக்கம் காத்தவர், தி.மு.க.வை வளர்த்தவர்.

                           பத்திரிக்கையின் வாயிலாகத்தான் கருத்துக்களை கொண்டு செல்ல முடியும் என்று உணர்ந்ததாலோ என்னவோ, கையில் முரசொலி பத்திரிக்கையை வைத்துக்கொண்டு, ஊரில் உள்ள நாலைந்து டீக்கடைகளில்,முக்கிய இடங்களில் எல்லாம் முரசொலியை ஒவ்வொருவரிடம் கையில் கொடுத்து படிக்கச்சொல்லி, அதில் வந்திருக்கும் முக்கியமான செய்திகளை, கட்டுரைகளை எல்லாம் விவாதிக்கும் இடமாக அந்த இடத்தை மாற்றி , நடமாடும் முரசொலியாக திகழ்ந்தவர் திரு.ஜோதி அவர்கள். மறைந்த பண்பாளர் அய்யா பி.டி.ஆர் பழனிவேல்ராசன் போன்றவர்கள் எல்லாம், இவரைப் பார்த்தவுடன் 'என்ன ஜோதி நன்றாக இருக்கின்றீர்களா ' என்று கேட்கும் அளவுக்கு மூத்த தலைவர்கள் அனைவரிடமும்  அறிமுகமானவர்.ஆனால் அதனை வைத்து தனக்கென எதுவும் வாங்கிக்கொள்ளாதவர். 

                      தேர்தல் நேரத்தில் அவரின் பணி தனித்தன்மையாக இருக்கும் . ஊரின் வோட் லிஸ்ட்டை மனப்பாடமாக வைத்திருப்பார். அந்த லிஸ்டில் தி.மு.க. வோட் எது, எது என்று  தெளிவாகத் தெரியும். முதலில் ஒவ்வொரு வார்டாக, தி.மு.க. வின் வோட் எல்லாம்  பதிவாகி விட்டதா என்று பார்ப்பார். விடுபட்ட பெயர்களை கட்சிக்காரர்களிடம் சொல்லி, அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்று பார், காட்டில் இருந்தால் வந்து ஓட்டுப் போட்டு போகச்சொல் என்று ஒவ்வொரு ஓட்டையும் பதியச்செய்வார். ஊரில் 4000 ஓட்டு இருக்கிறது, அதில் தி.மு.க.வின் ஓட்டு 1600 என்றால், முதலில் அந்த 1600 ஓட்டையும் தி.மு.க. வேட்பாளருக்கு விழவைக்க வேண்டும் என்று திட்டம் இருக்கும். அதற்கு மேல் வரும் ஓட்டு நமக்கு வாய்ப்பு, ஆனால் உறுதியாகத் தெரிந்த ஓட்டு , பதிவாகாமால் போகக்கூடாது என்பதே அவரின் முதல் நோக்கமாக இருக்கும்.

                       தி.மு.க. நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்குப் போயிருக்கின்றார். மதுரை திராவிடர் கழகத்தைச்சேர்ந்த அய்யா பாடகர் துரைராசு அவர்களோடு சிறையில் இருந்தபோது கிடைத்த அனுபவங்களை எல்லாம் நகைச்சுவையாகச்சொல்வார். தத்துவார்த்த அடிப்படையில் திராவிடர் கழகக் கூட்டம் எவ்வளவு அதிகமாக நடக்கின்றதோ, அவ்வளவு தி.மு,.க.விற்கு நல்லது என்ற எண்ணம் அவருக்கு இருந்தது.  ஆதலால்  அடிக்கடி தி.க. கூட்டம் ஊரில் போடுங்கடா என்பார் எங்களிடம். மேடையில் நிறையப் பேசமாட்டார். ஆனால் களப்பணி, களப்பணி, அப்பப்பா...

                       எனது அம்மா மறைந்த திருமதி. முத்துக்கிருஷ்ணம்மாள் அவர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர். எளிதாக யாருக்கும் நன்கொடை கொடுக்க மாட்டார். கோவில் என்று கேட்டு வந்தால் இல்லை என்று சொல்லி விரட்டி விடுவார். ஆனால் திரு. ஜோதி அவர்கள் வந்து கேட்கும் போதெல்லாம் , மாநாடு போன்றவைகளுக்கு மறுக்காமல் கொடுப்பார். "டேய், ஜோதி அண்ணனே வந்து கேட்டு விட்டாரடா, இல்லை என்று எப்படி சொல்ல முடியும்"என்பார் எனது அம்மா. (எங்கள் குடும்பத்திற்கும் அவரின் குடும்பத்திற்கும் மிக நெருக்கம் உண்டு. எனது அம்மாவும் , திரு.ஜோதி அவர்களின் இணையர் திருமதி சரசு அவர்களும் வகுப்புத் தோழிகள். அதனைப் போல எனது மூத்த அண்ணன் ஜெயராஜூ-ம் அவரின் மூத்த மகன் அண்ணன் மதிவாணன் அவர்களும் வகுப்புத் தோழர்கள். எனது இரண்டாவது அண்ணன் தமிழ்ச்செல்வனும், அவரின் மகள் அக்கா தமிழ்ச்செல்வியும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். நானும் அவரது 3-வது மகன் இராஜேந்திரனும் வகுப்புத் தோழர்கள். எனது தங்கை சாராதாவும், அவரது 4-வது மகன் கருணாநிதியும் ஒரே வகுப்பு, எனது தம்பி சிவக்குமாரும் அவரது 5-வது மகள் தங்கை பூங்கோதையும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். எல்லோரும் எங்கள் கிராமத்தில் ஒன்றாக, ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பதால் மிக நன்றாக எங்களை அறிந்தவர். தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்க்கையிலும் நாங்கள் உயர வேண்டும் என்று விரும்பியவர். அவரின் இழப்பு தனிப்பட்ட முறையிலும் மிகப்பெரிய இழப்பே.  )

                      நேற்று பெய்த மழையில் முளைத்த விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம், திராவிட இயக்கத்தை ஒழிப்போம் என்று கனவு கண்டு பிதற்றிக் கொண்டிருக்கும் வேளையில், தி.மு.க. அழிந்து போகும் என்று சு.சாமி போன்ற ஆட்கள் எல்லாம் உளறிக்கொண்டிருக்கும் வேளையில் , தன்னை முன்னிறுத்தாத ஆனால் இயக்கத்தை , இயக்கத்தின் கொள்கையை முன்னிறுத்தி அதற்காக தனது உழைப்பை, உதிரத்தை, எண்ணத்தை  செல்வழிக்கும் ஆயிரக்கணக்கான ஜோதிகள் ஊர்தோறும், தமிழகம் தோறும் இருக்கின்றார்கள்.அவர்கள்தான் திராவிட இயக்கத்தின் விழுதுகள், வேர்கள்.. எல்லாம்.   திராவிட என்று தனது கட்சியில் பெயரை வைத்துக்கொண்டு, திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு , வேரில் நீர் ஊற்ற நிறையப் பேர் கிளம்பி இருக்கின்றார்கள். காணாமல் போவார்கள் விரைவில் உறுதியாய்.  காசு கொடுத்து வளர்ந்த இயக்கம் அல்லடா திராவிட இயக்கம். உதிரத்தில், உணர்வில் கலந்த கொள்கை உத்வேகத்தில் உண்ணாமல், உறங்காமல் உழைத்த,உழைக்கும்  தீரர்களின் கூடாரமடா திராவிட இயக்கம்.


 

                             வீர வணக்கம்! வீர வணக்கம். எங்கள் ஊரின் நடமாடும் முரசொலியாய் திகழ்ந்த  அய்யா ஜோதி அவர்களுக்கு வீரவண்க்கம்.

Thursday, 30 January 2014

புத்தகப் பார்வை -1

புத்தகப் பார்வை என்னும் பகுதியில் "நுனிப்புல்லர்களுக்கு ஆதாரங்கள் தரும் ஆய்வு நூல் " என்ற தலைப்பில்  பிப்ரவரி -1-15, 2014 -இதழில் வெளியிட்ட உண்மை மாதம் இருமுறை இதழுக்கு என் நன்றி .  


நூலின் தலைப்பு : திராவிடர் கழகம் கட்சி அல்ல ஒரு புரட்சி இயக்கமே !
                   தந்தை பெரியார் கருத்துகள் பற்றி  ஓர் ஆய்வு
நூல் ஆசிரியர்     :   சு.அறிவுக்கரசு
வெளியீடு             :    விழிகள் பதிப்பகம், சென்னை-41 -9444265152/9444244017
முதல் பதிப்பு       :    2013      பக்கங்கள்           :     256  விலை ரூ 160 

                              

       திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்களால் எழுதப்பட்டுள்ள தந்தை பெரியாரின் வரலாறு- ஒரு புதிய நோக்கு என இந்த நூலைசொல்லலாம். நூலின் உள்ளடக்கம் பதிமூன்று தலைப்புகளில் உள்ளது. 'திராவிடர் ' என்னும் பெயரைத் தந்தை பெரியார் தேர்ந்தெடுத்ததன் காரணத்தை 'தொடங்கும் முன்' விளக்கும் இந்த நூலாசிரியர் முதல் ஆயிரம் ஆண்டுகளில் தமிழர்களிடம் மண்டிக் கிடந்த அறியாமைகளை, மூட நம்பிக்கைகளை விளக்கமாக் எடுத்துரைத்து, சகுனம் பார்ப்பதான நிமித்தம் முதல் பூதம், பேய் நம்பிக்கை வரை  தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் இவை சுட்டப்பட்டுள்ளன என்பதனைப் பட்டிய்லிடுகின்றார். 'தமிழர்தம் அடையாளத்தை, பண்பாட்டை , பழக்கவழக்கங்களை மீட்டெடுக்க வேண்டாமா? ' அதற்கான முன்முயற்சிதான் பெரியார் கண்ட திராவிடர் கழகம் (பக்கம் 56 ) என்பதனை நிறுவுகின்றார். அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றை  ,மொழியின் தாழ்ச்சியை, இனத்தின் வீழ்ச்சியை  'தமிழர் வீட்டு வாழ்க்கை நிகழ்வுகளில் ,திருமணம் ,நினைவு நாள் போன்றவற்றில் தமிழ் இடம் பெறா நிலை '  எப்படி ஏற்பட்டது என்பதனை ஆய்வு நோக்கில் எடுத்து வைக்கின்றார்.
                                 வீழ்ச்சி அடைந்த தமிழ் இனம், தனது மொழியையே தாழ்ச்சியாக நினைத்த தமிழ் இனம் தந்தை பெரியாரின் வருகையால் எப்படி திருப்பம் அடைந்தது என்பதனை 'திருப்பு முனை ' என்னும் அத்தியாயத்திலும், தந்தை பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பிரித்து ' பார்ப்பனரல்லாதாருக்காக, சுயமரியாதைச் சமதர்மக்காரராக, நீதிக்கட்சிக்காரராக, திராவிடராக ' எப்படியெல்லாம் அவரின் கொள்கை நோக்கும் அதற்கான நடைமுறை ஆதரவும் எதிர்ப்பும்  அமைந்தது என்பதனை ஆதாரப்பட்டியல்களோடு அடுக்குகின்றார், விளக்குகின்றார் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள். காமராசர் ஆட்சிக்கு தந்தை பெரியார் கொடுத்த ஆதரவை , அன்றைய நிலைமையை 'முதல் எட்டு ஆண்டுகளில்' என்னும் தலைப்பில் விளக்குகின்றார். 'அண்ணாவின் வெற்றி' என்னும் தலைப்பில் 'தேனிலவு முடிந்து விட்டது' என்று ராஜாஜி சொன்னதையும். 'ஆம்,குடும்ப வாழ்க்கை தொடங்கிவிட்டது ' என்று அண்ணா சொன்னதையும் குறிப்பிட்டு , அண்ணாவிற்கு தந்தை பெரியார் தந்த ஆதரவை, அன்றைய நிகழ்வுகளை விரிவாகக் கொடுத்து, இன்றைய தலைமுறைக்கு ஆவணங்களாகக் கொடுத்துள்ளார். 'பொது வாழ்க்கையில் எந்தக் கொள்கைகளுக்காக 1917-ல் நுழைந்தாரோ அந்தக் கொள்கைகளைக் (Principles) கடைசி வரையில் கைவிடாமல் உழைத்தவர், கழகத்தவரை உழைக்கச்செய்தவர் பெரியார். அந்தக் கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தமது நடைமுறைகளை ,அணுகுமுறைகளை,செயல்திட்டங்களை(Polices) சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைத்துப் போராடியவர் பெரியார். அன்றைய தமிழ்ச்சமூகத்தின் நிலையை உயர்த்திட இந்தத் தந்திர உபாயங்களைக் கயாண்டார் . சமூக நீதிக்காக- பார்ப்பனர் அல்லாதார் சமுகத்தின் நிலையை உயர்த்துவதற்காக அவர்தம் செய்ல்முறைகள் மாற்றப்பட்டனவே தவிர - உயர்வுகளை நோக்கிப் பார்ப்பனர் அல்லாத திராவிடர்களை அழைத்துச்செல்வதற்காக மாற்றினாரே தவிர- அவர் மாறவே இல்லை! " பக்கம் 239 -ல் நூலாசிரியர் சொல்லும் உண்மையை விளக்கும் நோக்கத்தில் அமைந்த அற்புதமான ஆய்வேடாக, கருத்துப்பெட்டகமாக  இந்த நூல் அமைந்துள்ளது. பின் இணைப்பாக சுதந்திரம் பெற்றதாக சொல்லப்படும் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்களும், மத்திய திராவிடர் கழக நிர்வாகக் கமிட்டி தலைவர் வேதாசலம் அவர்களும் விடுவித்த அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கைகளின் உண்மைத் தன்மை, இன்று 67 ஆண்டுகளுக்குப் பின்னாலும் படிப்பவர்களையும் சுடுகின்றது. 
                              'திராவிடர் கழகம் ஆட்சிக்கு வருபவர்களையெல்லாம் ஆதரிக்கும் ஒரு கட்சி ' என்று நுனிப்புல் மேய்வோரின் குற்றச்சாற்றுகளை மறுதலித்து , தந்தை பெரியார் இலட்சிய இலக்கிலேயே குறியாய்க் கொண்டதன் விளைவாகத்தான் ,இரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சி அறிவுப் புரட்சியாகி ,ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மனித சமூகம் நம் நாட்டில் மனிதத்தன்மை, மனித உரிமைகளைப் பெற்றுத் தலை நிமிர்ந்தனர் என்பதைப் பல்வேறு கடந்த கால- மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய தகவல்களை அடுக்கடுக்காகத் தந்து வாசகர்களை மிகவும் சிந்திக்க வைக்கிறார் என்றால் அது மிகையாகாது. அவரது ஆழ்ந்த ஆய்வுப்பார்வை தெளிவான வெளிச்சத்தை,,குழப்புவர்களுக்கும் கும்மிருட்டில் தடுமாறுவோர்க்கும்  தருவதாக அமைந்துள்ளது......

                         படித்துப் பயன்பெற வேண்டியவர்கள் இன்றைய இளைஞர்களும் , இனி வரும் தலைமுறையும்.
சிறப்பாகப் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி, திராவிடர் சமுதாயத்தின் நோய் நாடி, நோய் முதல் நாடி, அதற்குப் பெரியாரின் சிகிச்சை எந்தெந்தக் காலகட்டத்தில் எப்படியெல்லாம் நடைபெற்றுள்ளது என்பதை மிக அருமையாக விளக்கும் தொண்டுக்கு நூலாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ' என்று திராவிடர் கழகத்தின் தலைவர் , அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்த நூலின் முன்னுரையில் வைரக்கற்களாய் பதித்துள்ள சொற்கள் ,நூலின் மேன்மையை, நூலாசிரியரின் தொண்டினை சிறப்பிக்கின்றன.

                             'யானை பள்ளத்தில் விழும்போது தவளை கூட ஓர் உதை உதைக்கும் ' என்றார் இங்கர்சால். திராவிடர்கள் என்னும் யானை பார்ப்பனர்கள் விரித்த  மூடப்பள்ளத்தில் விழுந்ததால் மொழியால், இனத்தால் வீழ்ச்சியுற்று, பார்ப்பனத்தவளைகள் எல்லாம் உதைக்கும் ஓர் இனமாய் , ஏமாற்றப்படும் இனமாய் இருந்தோம்.. இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் , நாம் யானை பலம் கொண்டவர்கள் என்பதனை உணர்த்திய தந்தை பெரியாரின் உழைப்பை, உண்மையை, அர்ப்பணிப்பை,தியாகத்தை, எதற்கும் அஞ்சாமல் பணியாற்றிய அடலேறுத் தன்மையை   இன்றைய்  தலைமுறை உணர்ந்து கொள்ளும். . இன்றைய தலைமுறையும் ,இனிவரும் தலைமுறையும் தந்தை பெரியாரின் இயக்கத்தை, திராவிடர் கழகத்தை  உணர்ந்து கொள்ள உதவும் ஆய்வேடு இந்தப் புத்தகம். படியுங்கள், பரப்புங்கள் தோழர்களே.

Saturday, 25 January 2014

எங்கே கடவுள் ?

                                        எங்கே கடவுள் ?

ஆத்திகர்களாய் அடையாளம்
காட்டிக் கொண்டவர்களின்
கைகளில் கடப்பாரைகளும்
கத்திகளும்.....

இடித்தே தீருவோம்
உடைத்தே தீருவோம்
கட்டியே தீருவோமென்னும்
உறுதி மொழிகள்

எனது கடவுளே பெரிது
இடிக்கப்பட்டன்
புத்தர் சிலைகள்
தகர்க்கப்பட்டது மனித நாகரீகம்
ஆப்கானில் .........

எனது கடவுளே பெரிது
உனது வழிபாடு இருந்த
இடத்தில்தான் கட்டவேண்டும்
எனது வழிபாட்டுத்தலம்
இராம ஜென்ம பூமியா?....
பாபர் மசூதியா ?.....
வெறிபிடித்த கோஷங்களோடு
வளையவரும் மத-மனிதர்கள்...

மூன்று வய்துக்
குழந்தையின் முகத்தில் கத்தி
பாய்ச்சும் ஆத்திகர்கள்...
மொத்தமாய் ரெயிலுக்குத்
தீவைத்து பொசுக்கும்
மிருக எண்ணங்கள் !   ....

எரிக்கப்படும் உயிர்கள்.....
தகர்க்கப்படும் மனித நேயம்....
சிதைக்கப்படும் மனித உடல்கள் !...
அனைத்தும் ஆண்டவனின் பெயரால்....

எந்தக் கடவுள் பெரிது ?
எங்களுக்குத் தெரியவில்லை..
கடவுள் இருப்பது உண்மையெனில்
ஏதாவது ஒரு கடவுள்
இங்கே வாயேன்....
எதிரிகளிடம் சென்று
நானிருக்கும் இடமென்று
சொல்லித் தொலையேன்
                                                        - வா. நேரு-

தோழர் ந,முருகன் அவர்கள் நடத்திய 'புதிய காற்று' தனிச்சுற்றுப் பத்திரிக்கையில் 2002-ல் எழுதியது.

Thursday, 23 January 2014

நூல் அறிமுகம் : குடும்பம் (ஒரு சீன நாவல்)

 நூலின் தலைப்பு : குடும்பம் (ஒரு சீன நாவல்)
நூல் ஆசிரியர்      : பா. ஜின்
தமிழில்                   : நாமக்கல் சுப்பிரமணியம்
பக்கங்கள்             : 272  விலை ரூ 85
வெளியீடு             : அலைகள் வெளியீட்டகம், சென்னை-24

                                  குடும்பம் எனும் அமைப்பு எவ்வாறெல்லாம் அதன் உறுப்பினர்களின் உணர்வுகளை சிதறியடிக்கிறது, மழுங்க வைக்கிறது, பத்தாம் பசலித்தனமான எண்ணங்களும் நடவடிக்கைகளும் எவ்வாறு திணிக்கப்படுகிறது என்பதனை விளக்கும் சீன நாவல். காவோ குடும்பம் -அதன் உறுப்பினர்கள், வேலைக்காரர்கள் என்னும் பாத்திரப்படைப்புகள் மூலம் விரிவாக சித்தரிக்கின்றது.

                              மீ-பெங் அடிமைப்பெண் இளைய முதலாளி ஜீகுவால் காதலிக்கப்படுகிறாள். இளைய முதலாளி இவளை மனைவியாக ஏற்றுக்கொள்ள இயலாத சமூக சூழல். ஒரு கிழவனுக்கு வைப்பாட்டியாக வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்படும்போது , அதனை விட சாவதே மேல் என ஏரியில் விழுந்து சாகின்றாள்.

                             மீ - உறவுப்பெண்ணை காதலிக்கிறாள். ஒரே வகுப்பு- ஆனால் ஜாதகப் பொருத்தம் சரியில்லையென்று வேறொருவனுக்கு மூத்தவர்களின் கட்டாயத்தால் கட்டி வைக்கப்படுகின்றாள். கொஞ்ச நாளில் கணவனை இழந்து , பின் மடிகிறாள்.

                              இதைப் போல ருஜீ என்னும் பெண். சமீபத்தில் ஒருவர் இறந்திருக்கும் வீட்டில் , பிரசவம் பார்க்கக்கூடாது என்னும் மூட நம்பிக்கை அடிப்படையில் ,ஊருக்கு வெளியே அனுப்பப்படுகிறாள். பிரசவ வசதி இல்லாமல் சாகின்றாள். மூன்று பெண்களின் இறப்புகள்- அதைச்சொல்லும் விதம்- பாத்திரப்படைப்பு மிக வலிமையாக இருக்கிறது. அதைப்போல ஜீக்சன்,ஜீமின், ஜீகு என்னும் ஆண் பாத்திரப்படைப்புகளும் நினைவில் நிற்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. " நான் கலைஞன் அல்லன். எழுதுவது என் வேலையுமல்ல. என் வாழ்க்கையில் முரண்பாடுகள் இருந்தன.படைப்பிலும் முரண்பாடுகள் உண்டு. அன்புக்கும் ,வெறுப்புக்கும் இருப்பதைப்போல், அறிவுக்கும் ஆத்திரத்திற்கும் இருப்பதைப்போல் , நினைவிற்கும் நடப்புக்கும் இருப்பதைப்போல், என் வாழ்வும் எழுத்தும் ஒரு துயரமான போராட்டம். என் எழுத்துக்களில் வித்தியாசமான நடைகளும் கோணங்களும் இருக்கலாம். ஆனால் அவற்றின் சாரம் ஒன்றாகவே இருக்கும். தொடக்க காலத்திலிருந்தே என் எதிரிகளைத் தாக்காமல் நான் எழுதியதே இல்லை. என் எதிரிகள் யார் ? காலங்கடந்த பழைய சிந்தனைகள். சமுதாய முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக நிற்கும் மடமைகள். மனித நேயத்தை அழிக்க முயலும் அனைத்தும் என் எதிரிகள் " என்கிறார் இந்த நூலின் முல ஆசிரியர் பா-ஜின். தனது கூற்றை நாவல் முழுக்க மெய்ப்படுத்தியிருக்கின்றார்.

                             இந்த நாவல் தமிழில் வரத்தூண்டு கோலாக இருந்த கு.சின்னப்பபாரதி அவர்கள் " இந்த அற்புதமான நாவல் , தமிழ் வாசகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் பல படிப்பினைகளை வழங்கக்கூடியதென நான் கருதுகிறேன் " என்கிறார் முன்னுரையில் -உண்மை.

                        இந்த நாவலை தமிழாக்கியவர் நாமக்கல் சுப்பிரமணியம். தமிழ் இலக்கிய உலகின் சார்பாக மனதார,உளமாரப் பாரட்டப்படவேண்டியவர். சுந்தர ராமசாமி மொழி பெயர்த்த 'செம்மீன் 'போல, இளையபாரதி மொழி பெயர்த்த 'மய்யழிக்கரையொரம் ' போல, ஒரு அற்புதமான நாவலின் உயிரோட்டமான மொழி பெயர்ப்பு. நமது வீட்டு நூலகங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய மொழி பெயர்ப்பு நாவல்.


நன்றி : தோழர் ந.முருகன் அவர்கள் நடத்திய 'புதிய காற்று ' இதழில் நூல் அறிமுகம் என்னும் தலைப்பில் என்னால் எழுதப்பட்டது.

Sunday, 19 January 2014

நிகழ்வும் நினைப்பும்(14) : நம்புகிறார்களா? நம்புவது போல நடிக்கின்றார்களா?

"சிறார் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் வத்திக்கான் திருச்சபை தலைமை பீடத்தால் மதபோதகர் அந்தஸ்து பறிக்கப்பட்ட கத்தோலிக்க பாதிரியரின் எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட், 2011-ம், 2012-ம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 பாதிரியரை மதபோதகர் பொறுப்புகளிலிருந்து நீக்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
தொடர்புடைய விடயங்கள்

    துஷ்பிரயோகம்,
    கத்தோலிக்கம்,
    ஊழல்,
    மனித உரிமை,
    ஒருபாலுறவு

கடந்த ஆண்டுகளில் மதகுரு பொறுப்புகளிலிருந்து தடைசெய்யப்பட்ட பாதிரிமாரிலும் பார்க்க இந்த எண்ணிக்கை மிகப் பெரிய அதிகரிப்பு என்று கருதப்படுகிறது.

ஜெனீவாவிலுள்ள ஐநா ஆணையத்தின் முன்பாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஆஜரான வத்திக்கான் அதிகாரிகள் சமர்ப்பித்திருந்த ஆவணங்களிலேயே இந்த புள்ளிவிபரங்கள் தெரியவந்துள்ளன.

பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான சம்பவங்களை மட்டுமே வத்திக்கான் திருச்சபை இதுவரை அறிக்கையிட்டுள்ளது.

பாதிரிமாரின் பாலியல் துஷ்பிரயோக விவகாரங்களை கத்தோலிக்க திருச்சபை தலைமை மூடிமறைத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் இருந்துவருகின்றன.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிவில் அதிகாரிகளுக்கு முறையிடாமல், சம்பந்தப்பட்ட பாதிரிமாரை வேறு கத்தோலிக்க பங்குப் பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்துள்ளமை தொடர்பில் வத்திக்கான் மீது விமர்சனங்கள் உள்ளன"
பி.பி.சி.செய்தி 18.1.2014

 கத்தோலிக்கப் பாதிரிமார்களின் இத்தகைய செயல்களை மதவாதிகள் எப்படி நியாயப்படுத்துவார்கள் எனத் தெரியவில்லை. பாலியில் உணர்வு என்பது வயது வந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இயல்பான ஒன்று. அதனை முறைப்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள் வாழ்வியலில் நிறைய உள்ளன. அதனை விடுத்து விட்டு நான் முற்றும் துறந்தவன், திருமணம் செய்து கொள்ள மாட்டேன், கடவுளின் தூதுவர் சொன்ன செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் தூயவர்கள் நாங்கள் என்று சொல்லிக்கொண்டு, சிறுவர்களிடம் இத்தகைய சேட்டைகள் பண்ணுவது எவ்வளவு பெரிய அநியாயம்? எவ்வளவு பெரிய அநாகரிகம்? அப்படி ஒரு கடவுள் உண்மையாகவே இருந்தால், தப்பு செய்யும் பாதிரியாரை அந்த நேரத்தில் படாரென்று அறைய மாட்டாரா? பார்த்துக்கொண்டு சும்மாவே இருப்பார் ? பிஞ்சுகளிடம் வம்பு செய்யும் பாதிரியார்கள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் திரிகிறார்கள் என்றால் கடவுள் என்று ஒருவர் இல்லை என்று தானே அர்த்தம் ?  இந்து மதக் கடவுள்களின்  ஏஜெண்டுகள் பண்ணும் அநியாயமும்  தாங்கமுடியவில்லை. ஒரு சாமியார் ? திடீரென்று பிரச்சனைக்கு உரிய நடிகையையும் சாமியாராக ஆக்கி விட்டேன் என்று சொல்லி விட்டார். தீட்சை பெற்றார், சாமியாராகி விட்டார் என்று  செய்தி கொடுத்து விட்டார். இதையெல்லாம் பார்த்தபிறகும் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறார்கள் என்றால் உண்மையிலேயே நம்புகிறார்களா? நம்புவது போல நடிக்கின்றார்களா? ஆத்திகர்களுக்கே வெளிச்சம்.

Saturday, 18 January 2014

நிகழ்வும் நினைப்பும் (13) : நாத்திகர் என்பதற்காக அகதித் தஞ்சம்

"நான் ஒரு நாத்திகனாகிவிட்டேன், நாடு திரும்பினால் கொல்லப்படுவேன் என்று அச்சம் தெரிவித்த ஆப்கன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பிரிட்டன் அகதித் தஞ்சம் அளித்துள்ளது.

ஆப்கனில் நாளாந்த வாழ்க்கையில் மதம் மிக அதிக அளவில் கலந்துள்ளது என்றும், இந்த நபரால் தனது நாத்திக நம்பிக்கைகளை முற்றாக மறைத்து வாழ முடியாது என்று அவரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

நாத்திகர் என்பதற்காக ஒருவருக்கு பிரிட்டனில் அகதித் தஞ்சம் அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது. சம்மந்தப்பட்ட நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. ஆப்கனில் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த இவர், 16 வயதில் பிரிட்டனுக்கு வந்தார். இங்கு அவர் நாத்திகரானார்.

இந்த குறிப்பிட்ட வழக்கு குறித்து கருத்துக் கூற உள்துறை அலுவலகம் மறுத்துவிட்டது. தேவைப் படுவோருக்கு அடைக்கலம் அளிக்கும் சிறப்பான பாரம்பர்யம் கொண்ட நாடு பிரிட்டன் என்று அது கூறியுள்ளது."
பி.பி.சி.செய்தி 14.1.14

நல்ல செய்தி. வரவேற்கப்படவேண்டிய செய்தி. உலகில் இன்னும் சில நாடுகளில் கடவுளை மறுப்பது என்பது, கடவுள் இல்லை என்னும் உண்மையைச்சொல்வது தண்டனைக்குரியது, அதுவும் மரணதண்டனைக்கு உரியது என்பது கொடுமையானது. ஒரு பக்கம் 21 ஆம் நூற்றாண்டு, செவ்வாய் கிரகத்திற்குப் போகப் போகின்றோம், வான வீதியில் வீடு அமைத்து வாழப்போகின்றோம், வான வீதியில் சுற்றுலா போகப்போகின்றோம் என்று சொல்லப்படுகின்ற நிலையில், இன்னொரு பக்கம் அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளை வைத்துக்கொண்டு, அதனைச சந்தேகப்பட்டால் கூட தண்டனை என்பது கொடுமை. கடவுள் காப்பாற்றப்படுவது கடுமையான தண்டனைகளால் என்பது அந்தக் கடவுள் எனும் கருத்துக்கு பெருமை அளிப்பதா ? அளவற்ற அருளாளன், தான் இல்லை என்று ஒருவன் சொல்கிறான் என்றால் நேரில் வந்து இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டுப் போவதை விட்டு விட்டு, கொல்லச்சொல்வாரா? அப்படிச்சொனனால் அவர் அருளற்ற அருளாரா? இப்படியெல்லாம் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்குத்தான்  கடுமையான தண்டனை என்று மதவாதிகள் அச்சுறுத்துகின்றார்கள் போலும். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் , க்டும் கோட்பாடு கொண்ட மதவாதிகளிடம் சிக்கித் தவிக்கும் நாத்திகர்கள், பிரிட்டனில் தஞ்சம் அடையட்டும். கடவுள் என்னும் பெயரால் தங்கள் நாடுகளில், பகுதிகளில் நடக்கும் கொடுமைகளை பட்டியலிடட்டும். அது ஒரு புதிய பார்வையை, புதிய வெளிச்சத்தை உலகத்திற்கு அளிக்கும். கடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்னும் புத்த்கத்தில் ரிச்சர்டு டாக்கின்ஸ் சொன்னதைப் போல ஒரு மத நம்பிக்கையிலிருந்து விடுபடலாம், மாறலாம் என்பதே தனக்குத் தெரியாதே எனத் தன் துணைவியார் சொன்னதாக சொன்னது போல , மத நம்பிக்கையிலிருந்து விடுபடலாம், நாத்திகராக வாழலாம், இன்னும் நலமாக பிரிட்டனில் சென்று உழைத்து வாழலாம் என்பது நம்பிக்கைகுரிய செய்தியாக அந்த நாட்டில் வாழ்பவர்களுக்கு, நாத்திகர்களுக்கு  அமையும். உலகில் இத்தகைய அகதி முறையை முதன்முதலில் அமுல்படுத்தியிருக்கும் பிரிட்டனுக்கு பாராட்டுக்க்ள்.

Tuesday, 14 January 2014

நிகழ்வும் நினைப்பும் (12) : அயல் நாட்டு அனுபவங்கள்

மதுரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் 12.1.2014 நடைபெற்ற கூட்டத்தில் 'அயல் நாட்டு அனுபவங்கள் ' என்னும் தலைப்பில் , மதுரை  மாநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சே.முனியசாமி சிறப்புரையாற்றினார். இளமையில் மிகவும் வறுமை நிலையில் இருந்த தான் வளர்ந்த நிலையையும் , வாழ்வில் உயர்ந்த நிலையையும் விவரித்துப் பேசுவதென்றால் 10 மணி நேரம் ஆகும் என்றார். உண்மைதான், அவ்வளவு அனுபவ்ங்கள், துயரங்கள் அவரின் வாழ்க்கையில் உள்ளது. அவருடைய அனுபவங்களை என்னிடம் (விஜயவாடா, நாக்பூர் போன்ற வெளிமாநிலங்களில் உள்ள இடங்களுக்கு சென்ற நேரங்களில்) விவரித்திருக்கின்றார். 3, 4 நாவல்களுக்கு உரிய கதைக்கரு உங்களிடம் இருக்கிறது என்று நான் அவரிடம் சொல்லியிருக்கின்றேன்.

                    அய்யா முனியசாமியின் வய்து 65. தன்னுடைய பிள்ளைகளை எல்லாம் ஆளாக்கி, அவரவர்க்கு வருமானம் வருவதற்கான கடை முதலிய ஏற்பாடுகளைச்செய்து நிம்மதியாக இருப்பவர். தன்னுடைய 50 வய்து வரை ஆத்திகராக இருந்தவர். 50 வயதிற்குப்பின்புதான், தந்தை பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக, திராவிடர் கழக உறுப்பினரானவர். செம்மையாக இருக்கும் அவர், 2010-ல்தான் வெளி நாடு போக ஆரம்பித்திருக்கின்றார். இதுவரை 14 நாடுகள் போய் வந்திருக்கின்றார். இந்த ஆண்டு 6 நாடுகள் போகப்போகின்றார். தான் பார்த்த சீனா, எகிப்து, ம்லேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் போன்ற நாடுகளைப் பற்றி மிக விரிவாக தனது அனுபங்களை, நிழற்படங்களின் துணையோடு பேசினார். இந்தியாவையும் ,தான் பார்த்த நாடுகளையும் ஒப்பிட்டும், வேறுபடுத்தியும் ,பெரியாரியலோடு தொடர்பு படுத்தியும் அவர் பேசியது சிறப்பாக இருந்தது. பேச்சாளர் என்பதை விட, கருத்தாளராக தனது கருத்துக்களை எடுத்து வைத்தது சிறப்பாக இருந்தது.

                     சீனாவில் எல்லா இடங்களிலும் வெள்ளாமை(விவசாயம்) செய்கின்றார்கள். விவசாயம் செய்யப்படாத வெறும் நிலத்தையே பார்க்க முடியவில்லை. நம் நாட்டில் கிராமத்தில் ஒருவர் நெல் நாத்தைப் போட்டுக்கொண்டு இருப்பார்.பக்கத்து காட்டுக்காரர் 2 மாத நெல் பயிருக்கு களை எடுத்துக்கொண்டு இருப்பார். இன்னொருவர் நெல்லை அறுத்துக்கொண்டிருப்பார். ஒரு ஒழங்கற்ற நிலை , அவரவர் விருப்பத்திற்கு பயிரிடுகின்றார்கள். ஆனால் சீனாவில் ஒரு 400 கி.மீ தூரம் முழுமைக்கும் 2 மாத பயிர் என்றால் ஒன்று போல 400 கி.மீ தூரமும் 2 மாதப் பயிராக இருந்தது. விதைப்பது, வளர்ப்பது,அறுப்பது என்பது ஒன்று போல இருக்கின்றது அதிசயமாக இருக்கிறது என்றார். பக்கத்தில் இருந்த ஒருவர், விவசாயம் அந்த நாட்டில் அரசின் வழிகாட்டுதலில் என்றார். ஹாங்காங் நகரத்தின் அதிசயங்களை, மக்களின் உழைப்பை, வானுயர்ந்த கட்டிடங்களை விவரித்தார். வெறும் கடலும், மலையும் மட்டுமே உள்ள நகரம் அது , எப்படியெல்லாம் நவீன மயத்தைப் பயன்படுத்தி கட்டிடங்களை கட்டுகின்றார்கள், மலையைத் தகர்த்து அந்த இடத்தில் விவசாயம் செய்கின்றார்கள் என்பதையெல்லாம் விவரித்தார்.

                     எகிப்து என்னும் நாடு நைல் நதி இல்லையென்றால் அந்த நாடு இல்லை. மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. சுத்தம் இல்லை, உண்மை இல்லை. நாட்டில் உள்ள பல கோயில்கள் , பழமையான கோயில்கள், நமது நாட்டில் உள்ளது போல் இருக்கிறது என்றார். அந்தப் படங்களைக் காட்டினார். சுற்றுலாப்பயணிகளை ஏமாற்ற முயற்சிக்கின்றார்கள், எகிப்தில், விழிப்பாக இல்லையேல், பணத்தை இழக்க நேரிடுகிறது என்றார்.
அதனைப் போல சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளைப் பற்றியும் விவரித்தார்.

                       கூட்டத்தின் ஆரம்பித்தில் 'பெரியார் பேழை' என்னும் தலைப்பில், பா.சடகோபன் பேசினார். ' தானாகப் பிறக்காத  மனிதன், தனக்காக மட்டும் வாழக்கூடாது ' என்னும் தந்தை பெரியாரின் கருத்தை எடுத்துக்கொண்டு அதனை விளக்கிப் பேசினார். பேழை என்பது மிகுந்த மதிப்பு வாய்ந்த பொருளை பாதுகாக்கப் பயன்படும் ஒரு பெட்டி என்பதனைக் குறிப்பிட்டு, அதனைப் போன்றதுதான் தந்தை பெரியாரின் பொன்மொழிகள் என ஒப்பிட்டுப் பேசினார்.

                          மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் சுப.முருகானந்தம் அவர்கள் 'இம்மாத விடுதலை சிந்தனை ' என்னும் தலைப்பில் பேசினார். ஒரு இருபது நிமிடம், ஒரு மாதத்தில் வந்த விடுதலை நாளிதழின் முக்கியமான செய்திகளை தொகுத்து ஒருவர் உரையாற்றும் இந்தப் பகுதி முக்கியமானது. 75 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவரும் , உலகத்தின் ஒரே நாத்திக தினப்பத்திரிக்கையான விடுதலையின் சிறப்பை, தனித்தன்மையை புதிதாக வருபவர்கள் தெரிந்து கொள்ள உதவும் உரை இந்த உரை. அருமையாக இதனைக் கொடுத்தார் அண்ணன் சுப.முருகானந்தம் அவர்கள். விடுதலையில் மின்சாரம் அவர்களின் மோடி யார் ? என்பதனை வெளிப்படுத்தும் கட்டுரை, ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள், மறைந்த சிவகங்கை சுயமரியாதைச்சுடரொளி அம்மா இராமலக்குமி அவ்ர்களின் வரலாறு, இயக்கத் தொண்டு , விடுதலையில் ஒரு மாதத்தில் வந்த தலையங்கங்கள், ஒற்றைப்பத்தி, ஊசி மிளகாய் விமர்சனம் என அனைத்தையும் தொட்டு சுப.முருகானந்தம் மிக இயல்பான தன்மையில் உரையாற்றினார்.

                              நிகழ்வுக்கு தலைமையேற்ற முன்னாள் நீதியரசர் பொ. நடராசன், சிறப்பு பேச்சாளரை அறிமுகப்படுத்திய அய்யா அ.வேங்கைமாறன், உரையாற்றிய மூவர் என அனைவருமே மதுரைக்காரர்கள், இயக்கத் தோழர்கள். குறிப்பிட்ட நேரமும், குறிப்பிட்ட தலைப்பும் கொடுத்து அவர்களைப் பேச வைத்தபோது, ஒவ்வொருவரின் தனித்திறமையும், உரை ஆற்றலும், கருத்தை கேட்பவர் இனிக்க சொல்லும் ஆற்றலும் வெளிப்பட்டன.