Sunday, 19 October 2014

அண்மையில் படித்த புத்தகம் : அக்னி மூலை-பா.செயப்பிரகாசம்

அண்மையில் படித்த புத்தகம் : அக்னி மூலை
நூலின் ஆசிரியர்                         :  பா.செயப்பிரகாசம்  (தேர்ந்தெடுக்கப்பெற்ற கதைக் களஞ்சியம்)
வெளியீடு                                       : தோழமை வெளியீடு , சென்னை-78 கைபேசி : 9444302967
முத்ற்பதிப்பு                                   : ஜீலை 2008, 184 பக்கங்கள், விலை ரூ 100 /= பதிப்பாளர் :கு.பூபதி
மதுரை மத்திய நூலக எண்       :   184486

                                                       பா.செயப்பிரகாசம் அவர்களின் சிறுகதைகள் இவை. கட்டுரை, கவிதை எழுதுவதை விட சிறுகதை, நாவல் எழுதுவது என்பது கடினமானது. கவிதையைப் போல சிறுகதையின் மொழியும் மிக முக்கியமானது. நடந்த ஏதோ ஒரு நிகழ்வையோ அல்லது நிகழ்வுகளையோ வைத்துக்கொண்டு, தான் சமூகத்திற்கு சொல்லவேண்டும் என்று நினைக்கும் கருத்தை கதை விரிப்பாக சொல்லுவது என்பது எல்லோராலும் இயலக்கூடிய காரியமாக இல்லை. சில்பேரின் கதைகள் வெறும் நிகழ்வுகளின் தொகுப்பாக நின்று போய்விடுகின்றது. சிலரின் கதைகளோ என்ன சொல்லவருகிறார்கள் என்பதை விட அவர்கள் சொல்லிச்செல்லும் மொழியே ஆக்கிரமித்துக்கொள்கிறது , திரைப்படப்பாடல்களில் பாடலை விட இசை ஓங்கி ஒலிப்பது  போல. ஆனால் நிகழ்வும், மொழியும் , சமூகத்திற்கு சொல்ல்வேண்டும் என்னும் மனத்தூண்டுதலின் கருத்து விளைவும் இணைந்த கதைகளாக ஆக்குவதற்கு சிலரால்தான் இயல்கிறது. அப்படிப்பட்ட ஒருவராக இந்தக் கதைத்தொகுப்பின் ஆசிரியர் பா.செயப்பிரகாசம் திகழ்கின்றார்.

             1972-ல் எழுதியது முதல் 2002-வரை எழுதியதுவரையிலான , தேர்ந்தெடுக்கப்பட்ட 14  சிறுகதைகளின் தொகுப்பாக ,ஏறத்தாழ ஒரு நூற்றாண்டின் மூன்றில் ஒரு பகுதி காலத்தில் எழுதப்பட்ட கதைகள் இவை. 1972-ல் வெளியான 'ஒரு ஜெருசலேம்' கதை அம்மாவை இழந்த ஒரு சிறுவனின் கதை. அம்மா இறக்க காரணமாக இருக்கும் அப்பா, தன் மூத்த மகளை சில நாட்களுக்கு முன் இழந்து விட்டு இரண்டாவது மகளையும் மரணப்படுக்கையில் பார்க்கும் அம்மா வழிப்பாட்டி எனச் சூழல் விவரிப்பும் பாத்திரங்களும் மிகக் கனமாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு பையை எடுத்துக்கொண்டு போ என டீச்சரால் அனுப்பப்பட்டு அம்மாவின் மரணத்திற்கு வீட்டுக்கு போகும் குமாரசாமி, தாயின் இறுதிச்சடங்குகளில் குமாரசாமி, பின் பஞ்சத்திற்கு கோரப்புல்லைப்பிடிங்கி அதன் அடியில் உள்ள கிழங்கைப் பறித்து தின்னும் சிறுவர்களில் ஒருவனாக குமாரசாமி , தன் தாயின் சமாதியில் முளைத்த கோரப்புல்லைப் புடுங்கும் மந்தி ராமசாமியை அடித்து நொறுக்கும் குமாரசாமி என அம்மாவின் சாவினை வைத்தே நகரும் கதையாக இந்தக் கதை உள்ளது.

                                   முப்பது , நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட சிறுகதைகள், அன்றைய எதார்த்த வாழ்வின் எச்ச சொச்சங்களை தொடர்ந்து வரும் தலைமுறை உணர்ந்து கொள்ளும் வகையில் படைக்கப்பட்ட கதைகளாக இருக்கின்றன. பேராய்ப் பிழைத்த அம்பலகாரர் வீட்டிற்கு உடுக்கையோடு வரும் சாமியாடி , வீட்டின் நிலமையைப் பார்த்து தான் சேகரித்த தானியத்தையும் , ரூபாயையும் தனது காணிக்கையென தேவியின் கையில் கொடுத்துச்செல்லும் 'அம்பலகாரர் வீடு ' , அரசாங்க சம்பளத்திற்காக ஆறு நாட்களும் மேலதிகாரியின் கொடுமையில் வாழும் நிலை சொல்லும் அரசாங்க வேலைக்காரன்- நாண்ம்மாவின் கணவன் பற்றிச்சொல்லும் 'ஆறு நரகங்கள் '  ரிக்கார்டு டான்ஸ் ஆடும் விஜயா, சாரு என அவர்களின் உணர்வுகளையும் ,சமரசங்களையும் சொல்லும் 'வேரில்லா உயிர்க்ள் ' போன்ற கதைகள் எல்லாம் 1972-முதல் 1974 வரை படைக்கப்பட்ட கதைகளாக இருக்கின்றன. வீரியமிக்க கதைகளாக இருக்கின்றன.

                                  தன் வீட்டுப்பெண்கள் அந்த ஊரின் பெரிய ஜாதிக்காரர்களால் சீரழிக்கப்பட்டபோது , நியாயம் கேட்டு வீடு வீடாகப் போய் " ஊர்க்கூட்டம் வச்சிருக்கு, வாங்க முதலாளி " என்று சொல்லி, ஒருவனும் வரவில்லை என்றவுடன், " ஊர்க்கூட்டம் வச்சிருக்கு, வரலையா முதலாளி " என்று கேட்டு கேட்டு பின்பு இரவில் மறைந்து போகும் மொட்டையாசானாரி பற்றிச்சொல்லும் 'காடு ' சிறுகதையின் முடிவு தனக்கே உறுத்தலாக இருந்திருக்குமோ அதனாலேயே வேறு ஒரு முடிவைக் காட்டும் ' அக்னி மூலை' சிறுகதையின் சாமியாடி , அக்னி மூலைக்கு காவு கொடுக்கப்போகும் சென்னையனை காவு கொடுப்பதாக முடித்தாரோ என எண்ண வைக்கின்றது. ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையானராக வாழும் ஜாதியினர் வீட்டுப்பெண்களிடம்  நாய்க்கர்,ரெட்டியார் ஜாதியின் ஆண்களின் பார்வையும் அத்துமீறலும் ,வசப்படுத்தலும் பல கதைகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.

                                        1977-ல் 'இருளுக்கு அழைப்பவர்கள் ' என்னும் சிறுகதையை எழுதியிருக்கின்றார். கற்பழிக்கப்பட்ட பழங்குடியினர் பெண்களிடம் எப்படிக் கற்பழித்தார்கள் என்று வக்கீல்கள் வினவுவதை , நீதிமன்றத்தின் போக்கை எழுதிச்செல்வது சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த வாச்சாத்தி போன்ற சம்பவங்களை மனக்கண் முன் நிறுத்துகிறது. முடிவில் " எதிரே நின்றவர்களைப் பார்த்தபடி அக்கா 'தூ' என்று காரித்துப்பினாள்:. அது அந்த நீதிமன்றத்தின் மேலும் பட்டது " பக்கம் 117 . நேரடிச்சாட்சியங்கள் இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்காததை மிக அப்பட்டமாகக் காட்டும் கதை.

                                     இந்தத் தொகுதியின் முதல்கதையான 'வளரும் நிறங்கள் 'கதை ,பம்பையத் தாத்தா என்னும் கதாபாத்திரத்தின் மூலம் " சாகிறது சாகப்போறம். எதையாவது செய்திட்டு சாகவேண்டியதுதானே " என்னும் கருத்தை மிக அழுத்தமாக படிப்பவர் மனதில் விதைக்கிறது. ஒரு ஆலையின் 25 ஆண்டுகால வரலாறு, நடப்பு வரலாற்றைச்சொல்வதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இரண்டு சாதிகளின் சண்டை எப்படி கிராமத்தில் உருவாக்கப்படுகிறது, வளர்கிறது, சாதாரண மக்களின் உயிரை மாய்க்கிறது என்பதனைச்சொல்லும் 'சாதி ' போன்ற கதைகள் மிக எளிமையான வார்த்தைகளால் மிக அழுத்தமாகச்சொல்லப்பட்டிருக்கிறது.

                    " சில்லு சில்லாய் ஓடிய சிதறு தேங்காயைப் போல் தாயம்மா வெடித்துக்கொண்டிருந்தாள். குவித்து வைத்த மண் குமிகள் போல் குழந்தைகள் மூலைக்கொன்றாய் பயத்தில் முடங்கிக் கிடந்தார்கள். ஒவ்வொரு நாளும் இந்தச்சத்தமும் , இந்தக் காட்சியும் இல்லாமல்; பொழுது புரண்டதில்லை. வீட்டிற்குள் தினமும் நடக்கிற இந்த பாரதத்துக்கு வெளியே ஒரு சின்னக்கூட்டம் கூட கூடியதில்லை. அது அவர்கள் மேல் திரும்பிப்பாயும் என்பது அவர்களுக்குத் தெரியும் " பக்கம் 132. 'கோபுரங்கள்' என்னும் சிறுகதையில் தாயம்மா என்னும் பாத்திரத்தைப்பற்றி விவரிக்கும் வரிகள் மேலே சுட்டிக்காட்டியவை. வார்த்தைகளால் ,நிகழும் சம்பவங்களை அப்படியே கண்முன்னால் காட்டும் வித்தை அறிந்தவராக பா.செயப்பிரகாசத்தை இந்தத் தொகுதியில் அறிய முடிகின்றது. முடிவாக் இருக்கும் 'எதையும் செய்வீர்' என்னும் கதை 2001-ல் வெளியானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 70-க்ளில் வந்த பா.செயப்பிரகாசம் அவர்களின் கதைக்கும் , 2001-ல் வந்தத்துக்குமான வேறுபாட்டை வாசகனே புரிந்துகொள்ளட்டும் என்று கொடுக்கப்பட்ட கதை போல உள்ளது. கதையின் உயிர்ப்பு, துடிப்பு, மொழி அனைத்துமே குறைந்து விட்டது என்பதைக் காட்டுவது போல 'எதையும் செய்வீர்' என்னும் கதை உள்ளது. வாசித்துப் பார்த்தால் , யோசிக்க வைக்கும் கதைத் தொகுப்பாக பா.செயப்பிரகாசம் அவர்களின் 'அக்னி மூலை ' கதைத் தொகுப்பு உள்ளது. வாசித்துப்பாருங்கள்.


Wednesday, 15 October 2014

அவரவர் வழியில்.......வா. நேரு

                                    
அவரவர் வழியில் 
அவரவர் 
எவரெவரோ எதிரில் 
வருவாரெனினும் 
அவரவர் வழியில் 
அவரவ்ர் 

முகம் சுருக்கி 
கூரிந்து நோக்கி 
முன் பகையை 
மனதில் நிறுத்தி 
முகத்தில் மட்டும் 
புன்னகையோடு 
வணக்கம் வைப்பவர் 
வரக்கூடும் எதிரில் 

உனக்கும் அவனுக்குமான 
என்றோ முடிந்த 
பகையை இன்றைக்கும் 
கிளறி விட்டுத் 
திகுதிகுவெனத் 
தீயாய் இனி எரிய 
பழைய நெருப்பின் 
புகை ஏதும் இருக்கிறதா 
என்று வாயைக் 
கிண்டிப்பார்ப்பவர் 
வரக்கூடும் எதிரில் 

அதிகாரப் பதவியில் 
அச்சடித்த பொம்மையாய் 
ஆமாம் சாமி போட்டுவிட்டு 
வீட்டுக்கு போனபின்பு 
அது செய்ய வேண்டும் 
இது செய்ய வேண்டும் 
என அடுக்கி 
துணைக்கு வா நீயென 
அழைப்பவர் 
வரக்கூடும் எதிரில் 

நெய் ஊற்றிச் 
சோறிட்டாலும் 
எவ்வளவு வெண்ணெயில் 
உருக்கியது இது 
எனக் கேள்வி கேட்டு 
இன்னும் கொஞ்சம் 
அதிகமாக நெய் உருக்க 
கற்றுக் கொடுத்திருப்பேன் 
விபரம் பத்தவில்லை 
உனக்கு இன்னும் 
எனக் குறை தேடிச்சுட்டுபவர் 
வரக்கூடும் எதிரில் 

எவனையும் என் 
வலைக்குள் எளிதில் 
வீழ்த்திட இயலும் 
என இறுமாப்பாய் 
வண்ணத் தோலும் 
வர்ணப்பூச்சும் 
மயக்கும் மொழியும் 
பேசுவோர் எவரேனும் 
வரக்கூடும் எதிரில் 

எவரெவர் எதிரில் 
வரினும் 
எதற்காக அவர் உன் 
அருகில் வருகின்றார் 
எனும் தன்மை 
அறியும் தகுதி 
உனக்கு இருப்பின் 
அவரவர் வழியில் 
அவரவர் !


  • எழுதியவர் : வா. நேரு
  • நாள் : 12-Sep-14, 8:58 pm
  • Nantri: Eluthu.com

Tuesday, 14 October 2014

அண்மையில் படித்த புத்தகம் : கப்பலில் வந்த நகரம்-ம. காமுத்துரை

அண்மையில் படித்த புத்தகம் : கப்பலில் வந்த நகரம்-சிறுகதைத் தொகுதி
ஆசிரியர்                                         : ம. காமுத்துரை
பதிப்பகம்                                        :  சந்தியா பதிப்பகம், சென்னை
முதல்பதிப்பு                                  :  2006                    பக்கம் :128                  விலை:ரூ 60
மதுரை மைய நூலக எண்                                                    : 168518

                                                    ம.காமுத்துரை அவர்கள் எழுதிய 14 சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல் . முன்னுரையை 'ஒரு கடிதம் ' என்னும் தலைப்பில்  10 பக்கங்களுக்கு எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் கொடுத்திருக்கின்றார். முன் நடத்தும் தடங்கள் என இக்கதைகளை நோக்கும் பா.செயப்பிரகாசம் " எந்தப் பேனாவுக்கும் கொஞ்சமும் உயரம் குறையாத எழுத்தைக் கைவசம் கொண்ட காமுத்துரை" என்று குறிப்பிடுகின்றார்.

                            புதுச்சேரிக்கு போன அனுபவத்தையும் எல்லோரையும் போல பாட்டிலுக்கு பெயர் போன புதுச்சேரியை நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் புத்தகத்திற்கும், படைப்பாளிகளுக்கும் பெயர் போனதும் புதுச்சேரி என்பதனை ஞாபகப்படுத்தும் விதமாக- முடிவைக் கொண்டு ' கப்பலில் வந்த நகரம் ' சிறுகதை அமைந்திருக்கிறது. மாட்டுத்தரகர்களிடம் மாட்டிக்கொண்ட ஆட்டோக்காரரான சுப்புராசு படும் பாட்டை நையாண்டி கலந்த கதைச்சொல்லலில் சொல்லும் 'கிடரி', பழைய துணி தைத்தற்காக கொடுத்த ஒத்த ரூபாயை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, வீட்டின் நிலமையில் அந்த ஒத்த ரூபாயைக் கேட்பதற்கு போகும் வழியில் மனதில் ஏற்படும் எண்ணங்களை வடித்துக்கொட்டியிருக்கும் 'ஒரு ரூபாய் ' எனப் பல கதைகள் நெஞ்சைத் தொடுகின்றன.

                           சைக்கிளை வாடகைக்கு எடுத்துவிட்டு டிமிக்கி கொடுக்கும் பெயிண்டரைப் பற்றிய கதையான 'வருகை'  ஒரு காலத்தில் வேலை நிறுத்தம் செய்ததற்காக தன்னை வேலையை விட்டு நீக்கிய முதலாளியே இன்று அவரது மில்லிலேயே காண்டிராக்ட்காரராக மாறிப்போன கதை சொல்லும் 'சேர்மானம்' லாட்டரிச்சீட்டு பைத்தியமான பண்ணையார் எப்படி ஏழைக்கு பரிசு கிடைக்கக்கூடாது என்னும் மனநிலையில் இருக்கிறார் என்பதையும், கிழித்துப்போட்டு மறுபடியும் குப்பையிலிருந்து எடுத்துப்போய் பரிசுப்பணத்தை வாங்க எண்ணும் பணக்காரக் குப்பைத்தனத்தை சொல்லும் 'பண்ணை வீடு ' , சாண்டக்ஸ் செருப்பு வாங்க தேனியில் கடைக்கு நடந்துசென்று மாசமாயிருக்கும் தன் மகளுக்கு கறிக்கஞ்சி ஊத்தவேண்டும், மாடு மேய்க்கப்போகும் மகனுக்கு ஒரு செருப்பு வாங்கித்த்ரவேண்டும் என நினைப்பு வர 'பிறகு வந்து எடுத்துக்கிறேன் ' என்று சொல்லி செருப்புக்கடையை விட்டு வெளியே வரும் அவனைப் பற்றிச்சொல்லும் 'சாண்டக்ஸ் ' என்னும் கதைகள் வாழ்க்கையின் சாதாரணமானவர்கள் ப்டும் அவலங்களை கண் முன் நிறுத்துகின்றன.

                           ஆனால் இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதை ஒன்று படித்து முடித்தவுடன் கண்களில் கண்ணீர் வரவைத்தது. படித்து முடித்த பின்பு கொஞ்ச நேரம் மவுனமாய் இழவு வீட்டில் உட்கார்ந்திருப்பதைப் போல உட்காரவைத்தது. தெருக்கள் தோறும் சின்னச்சின்ன கடைகளாய் வாழ்வாதார தூண்களாய் பல பேர் வாழ்ந்த நிலை போய் , பகுதிக்கு ஒன்றாய் வந்து உட்கார்ந்திருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளைப் பற்றி யோசிக்க வைத்தது. அந்தக் கதை காற்றில் நிறைந்த கவிதை.

                        கடன் தொல்லை தாங்காமல் கணவன் ஓடிப்போக, மூன்று பெண்  பிள்ளைகளை வைத்துக்கொண்டு , கடின் உழைப்பு இருந்தாலும் அவதிப்படும் தமிழ்ச்செல்வி. விகடனில் வந்த கதையைப் படித்து ' கதையிலே மொழி அற்புதமாச்செஞ்சிருக்கீங்க ' என்று பாராட்டிய தமிழ்ச்செல்வி, டெலிபோன் பூத்தில் வேலை செய்து அப்பளம் மோதிர அப்பளம் செய்து கடன் இல்லாமல்; பிள்ளைகளை வளர்க்க கஷ்டப்படும் தமிழ்ச்செல்வி, வாடகை குறைவு என்று ஊருக்குத் தள்ளி குடியிருக்கும் தமிழ்ச்செல்வி , க்டைசியில் கடனை அடைக்க வழியில்லாமல் தனது பிள்ளைகளான முத்துச்செல்வி, அன்புச்செல்வி,அறிவுச்செல்வியோடு  குடிசைக்கு தீ வைத்து மொத்தமாய் குடும்பத்தோடு கருகிக் போகும் தமிழ்ச்செல்வி என அந்தப் பாத்திரம் நினைவுகளில் வாழும் வண்ணம்  உலவவிட்டிருக்கின்றார், க்டைசியில்
" கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லையாம் !
  இணைத்துக்கொள்ளுங்கள்...
கடனை அடைக்கும் சக்தியுமில்லை " என்று தமிழ்ச்செல்வியின் கவிதையோடு கூடிய கடிதம் கையில் கிடைத்திருப்பதாக முடித்திருக்கின்றார்.

                                 ஒரு பக்கம் குடிகாரனாக,கடன்காரனாக  கணவன். வாழ்வுக்கான போராட்டங்களை , வயிற்றுப்பிழைப்புக்கான போராட்டங்களை நடத்திக்கொண்டு நித்தம் நித்தம் செத்து செத்துப் பிழைக்கும் தமிழ்ச்செல்விகள் எத்தனை ? பன்னாட்டு மூலதனம் - இருகை கூப்பி வரவேற்பு. உள் நாட்டு , வெளி நாட்டு முதாலாளிகளின் பகாசுரக் கம்பெனிகள் அழித்தொழிக்கும் சிறு கடைகள் எத்தனை ? எத்தனை ? அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து, ஒழித்து என்ன வசந்த காலத்தை கொண்டு வந்து விடப்போகின்றார்கள் இந்த வெங்காயங்கள் ஏழைகள் வாழ்வில் ? குமுறல்களை கொட்ட தூண்டுகோலாய்  அமையும்  கதையாய் இந்த 'காற்றில் நிறைந்த கவிதை ' என்னும்  கதை .

                         இந்தத் தொகுப்பில் ஒட்டாத கதையாக ' களவாடிய இரவு ' என்னும் கதை இருக்கிறது. மற்ற கதைகளில் இருக்கும் தெளிவும் , புரிதலும் இக்கதையில் இல்லை. பின் நவீனத்துக கதை எழுத முயற்சி செய்தது போல் இருக்கிறது. நமக்கு அது தேவையில்லை.

                            தேனியைச்சார்ந்தவர் இந்த எழுத்தாளர் ம.காமுத்துரை என்று தெரிகின்றது. இவரின் கதைகளை இத்தனை நாட்களும் வாசிக்காமல் எப்படி இருந்தேன் என்று தெரியவில்லை.  " அறியப்படாதவர்களின் வரிசையில்தானே நாம் இன்னும் நிற்கிறோம். " என்று பா.செயப்பிரகாசம் முன்னுரையில் குறிப்பிடுவது உண்மைதான். ஆனால் ம.காமுத்துரை போன்ற சிறுகதை எழுத்தாளர்கள் கட்டாயம் அறியப்படவேண்டும். அறியப்படுத்தப்படவேண்டும்.                                                   

Monday, 13 October 2014

நிகழ்வும் நினைப்பும்(24) :உற்சாகமிக்க வாசிப்பும், கொண்டாட்டமான பகிர்வும்

நிகழ்வும் நினைப்பும்(24) :உற்சாகமிக்க வாசிப்பும், கொண்டாட்டமான பகிர்வும்
                                                   "பெண் குழ்ந்தைகளைக் கொண்டாடுவோம்" என்னும் கட்டுரை  தமிழ் இந்துவில் வ்ந்தது. கட்டுரை நன்றாக இருந்தது.  தமிழ் இந்துவில் ஒரு பின்னோட்டம் இட்டேன், அதனை எழுதிய எழுத்தாளர் எஸ்.வி. வேணுகோபால் அவர்கள் நன்றி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பதிலுக்கு  செல்பேசி எண்ணும் , என் வலைத்தள முகவரியும் அனுப்பியிருந்தேன்.   எனது வலைத்தளத்தில் உள்ளே சென்று பார்த்துவிட்டு, அலைபேசியில் அழைத்து மிக நெருக்கமான நண்பரிடம் பேசுவதுபோல பல் செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். டாக்டர் எஸ்.மணிவாசகம் அவர்கள் எழுதிய 'தூங்காமல் தூங்கி ' என்னும் நூலின் விமர்சனத்தைப் படித்தேன் என்றார். டாக்டர் மணிவாசகம் இப்போது உயிரோடு இல்லை, அறிவீர்களா என்றார். இல்லை என்றேன். அவர் புத்தகத்தின் இரண்டாம்ப்திப்பு வரும் போதே இறந்துவிட்டார் என்பதனைக் கூறினார். வருத்தமாக இருந்தது. எனது  வலைத்தளத்தின்  அண்மையில் படித்த புத்தகங்கள் விமர்சனங்களைப் படித்துவிட்டுத் தனது  கருத்தினை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். படித்தவுடன் மனதில் உற்சாகம் ஊட்டக் கூடிய வார்த்தைகள். தோழர் பொள்ளாச்சி அபி அவர்கள் எனது கவிதைகளைப் படித்துவிட்டு , நான் யாரென்று தெரியாத நிலையில்  கவிதைகளுக்காகப் பாராட்டியதுபோல , திரு எஸ்.வி.வேணுகோபாலின் பாராட்டு அமைந்துள்ளது. நிறைவுதான் மனதிற்கு. தொடர்ந்து செய்யும் ஒரு பணிக்கு , எங்கிருந்தோ- தெரியாத இடத்திலிருந்து அதுவும்   நாளிதழில் தொடர்ந்து எழுதும் எழுத்தாளரிடமிருந்து வந்த பாராட்டு மனதிற்கு நிறைவுதான். இதோ அவரின் மின்னஞ்சல் தங்களின் பார்வைக்கு.

அன்பின் முனைவர் வா நேரு அவர்களுக்கு


வணக்கம்....இன்று மிக தற்செயலாக தமிழ் இந்து ஆன் லைனில் பார்த்த உங்கள் கருத்தும், பாராட்டும் என்னை மிகவும் நெகிழ வைத்தது....அதிலிருந்து உங்கள் பெயரை கூகிள் சர்ச்சில் தேடி எடுத்ததும், உங்களுக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய மின்னஞ்சலுக்கு நீங்கள் விரைவாய் அனுப்பி வைத்த பதிலில் கிடைத்த உங்கள் வலைப்பூ முகவரி......

http://vaanehru.blogspot.in

ஆஹா...எப்பேர்பட்ட புத்தகக் காதலரை நான் இன்று அடையாளம் கண்டு கொண்டேன்...
வாழ்க உங்கள் வாசிப்பு அனுபவங்கள்....

பின் தேதியிட்டுப் போய் ஒரு வேகமான புரட்டலில் உங்களது இந்த மூன்றாண்டு பதிவுகளை பார்வையிட்டுக் கொண்டே வந்தேன், பத்து பதினைந்து நிமிட நேரத்தில்....
ஒரே மலைப்பு...
எத்தனை எத்தனை விதமான மனிதர்களின் வண்ணமய நூல்கள் குறித்த உங்கள் கருத்துக்கள், காய்தல் உவத்தல் இன்றி முன் வைக்கும் உங்கள் விமர்சனப் போக்கு, உச்சி முகந்து கொண்டாடும் பண்பாக்கம், சமரசமற்ற கொள்கையின் குரல்.....

இரா நடராசனின் ஆயிஷா
டாக்டர் மாணிக்கவாசகம் அவர்களது தூங்காமல் தூங்கி
பாலாஜியின் மதமும் அறிவியலும்
திருச்சி பள்ளி முதல்வர் துளசிதாசன் அவர்கள் தொகுத்த கனவு ஆசிரியர்

ஆஹா...அஹா...எத்தனை அருமையான நூல்கள்....

மொழிபெயர்ப்பு நூல்கள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரை தொகுப்பு எது கையில் வாசிக்கக் கிடைத்தாலும் அவை குறித்த நேரடியான பார்வை...வேகமாக பலவற்றை வாசித்தேன்...நெகிழ்ந்தேன்.

ஊடே ஊடே உங்களது கவிதைகள்
உங்களது சூரியக் கீற்றுகள் குறித்து பொள்ளாச்சி அபி விமர்சனம்
வானொலியில் விமர்சனமாக வாசித்த உங்கள் கட்டுரைகள்...

அடடா..அடடா...அற்புத வேலைகளைக் குவித்துக் கொண்டே இருக்கின்றீர்கள்....

உற்சாகமிக்க வாசிப்பும், கொண்டாட்டமான பகிர்வும் இன்றைய இறுக்கம் மிகுந்த உலகைத் தளர்த்திக் கொடுத்து, கொஞ்சம் சிந்தனையைத் தூண்டி, வாழு-வாழவிடு என்று பேசும் திறன் மிக்கவை....

கொள்கைகள் எப்போதும் விவாதித்துக் கொள்ளக் கூடியவை...ஆனால், அவற்றின் அடிநாதமாக தோழமை நேயம் கேழுமினால் நிச்சயம் மானுடம் வெல்லும்...

வாழ்த்துக்கள்....

எஸ் வி வேணுகோபாலன் 

Thursday, 9 October 2014

அண்மையில் படித்த புத்தகம் : மதமும் அறிவியலும் -கே.ஆர்.பாலாஜி

அண்மையில் படித்த புத்தகம் : மதமும் அறிவியலும்
ஆசிரியர்                                          :  கே.ஆர்.பாலாஜி
வெளியீடு                                         : ராம் பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், சென்னை-14
முதல்பதிப்பு                                    : 2014, மொத்த பக்கங்கள் : 104, விலை ரூ 65

                                                                      ' மதமும் அறிவியலும்' என்னும்  இந்தப்புத்தகத்தை மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் த்லைவர் அண்ணன் சுப.முருகானந்தம் அவர்கள் கொடுத்து    படிக்கச்சொன்னார். படித்து முடித்து விட்டு , எனக்கு இந்த நூலில் சில விமர்சனங்கள் இருக்கின்றன, நான் அதனை பதியப் போகிறேன் என்றேன். தாராளமாகப் பதியுங்கள் என்றார்
.
                        மதம் என்றால் என்ன , அறிவியல் என்றால் என்ன என்பதனை தன் மகனுக்கும் தனக்குமான உரையாடலில் இருந்து ஆரம்பித்து, மிக எளிமையாகக் கதை கூறும் பாணியில் நூலினைக் கொண்டு செல்கின்றார் பாலாஜி. மதம் என்றால் என்ன, மத வழி அணுகுமுறைகள் எவையெவை என்பதனையும், அறிவியல்-அறிவியல் வழி அணுகுமுறை என்றால் என்ன என்பதனையும் சொல்லிச்செல்கின்றார்.
" கடவுள் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திதான்  பிரபஞ்சத்தைப் படைத்து இயக்கி வருகிறது என்ற நம்பிக்கை, அந்தக் கடவுளை வழிபடுவதற்கான சடங்குகள், இவற்றோடு இணைத்து வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் ஆகியவற்றின் தொகுப்பே மதம் என்ற பொருளில் விக்கிபீடியா என்னும் கலைக் களஞ்சியம் குறிப்பிடுகிறது " பக்கம் 15 எனக்குறிப்பிட்டு மதத்திற்கு ஏங்கெல்ஸ் தரும் விளக்கமும் தருகின்றார். மதங்கள் எப்படி உருவாகின, எப்படி இன்றைய நிலைமைக்கு வந்தன என்பதனைச்சுட்டுகின்றார். இந்துமதம், கிறித்துவமதம், இஸ்லாமிய மதம் போன்ற மதங்களின் தோற்ற வரலாறுகளைக் கூறுகின்றார்.

                             " ஒழுங்காகவும் முறையாகவும் தொகுக்கப்பட்ட அறிவே அறிவியல் " பக்கம் 28 எனக்கூறும் நூலாசிரியர்  அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் பல விளக்கங்களைக் கூறுவதையும், மதம் தோன்றிய காலத்திலிருந்து மாறாமல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வதையும் , அதற்கு எதிராக அறிவியல் அடிப்படையில்  ஆராய்ந்தவர்களைத் துன்பறுத்தியதையும் கூறுகின்றார்.

                           அடுத்தடுத்த பகுதிகளில் பிரபஞ்சத்தின் தோற்றம்-இயக்கம் பற்றியும் உயிர்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றியும் அறிவியல் கூறுவதை மிக எளிமையாகப் புரியும்படி எடுத்துக்காட்டுக்களோடு விளக்குகின்றார். பர்ணாமக் கொள்கைக்கு எதிராக மத நூல்கள் இருப்பதை பக்கம் 50,51 களில் எடுத்துக்காட்டுகின்றார். அடுத்து சமுதாய வளர்ச்சி பற்றியும் , அடிமைகளாக இருந்த மனித இனம் பற்றியும், முதலாளித்துவ, சோசலிச முறைகள் பற்றியும்  இந்த்  நூல் பேசுகின்றது.

                          சமுதாயப் பிரச்சனைகள் என்னும் தலைப்பில் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அலசப்படுகின்றன. மதம் எப்படி எல்லாம் மனிதர்களை மதம் பிடித்தவர்களாக ஆக்குகின்றது என்பது அறிவியல் அடிப்படையில் விளக்கப்படுகின்றது. அடுத்து அறிவியலின் மறுபக்கம் என்னும் பகுதியில் அறிவியல் கருவிகளை கைகளில் வைத்துக்கொண்டு பன்னாட்டுக் கம்பெனிகள் உலக அழிவிற்கான சூழல் கேடுகளை விளைவிப்பதை விளக்குகின்றது.

                      இந்த அத்தியாயம்வரை எளிமையாக விளக்கி வந்த நூலாசிரியர் தீர்வு என்ன என்னும் பகுதியில் சோவியத் நூல்களை மொழி பெயர்ப்பவர் போல மாறிவிடுகின்றார். " மனிதர்கள் ஏற்படுத்திய சமுதாய் சக்திகள், அதாவது உற்பத்திச்சாதனங்களின் தனியார் உரிமை, சந்தைப் பொருளாதாரம், அதனால் ஏற்படும் ஏற்றதாழ்வுகள், பிறகு சாதி மற்றும் மதத்தினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் இன்னும் மனித வாழ்க்கையைத் தொடர்ந்து கட்டுப்படுத்துகின்றன.
                          உற்பத்திச்சாதனங்கள் சமுதாயக் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறைந்து சம்த்துவத்துக்கான பாதையை நோக்கிச்சமுதாயம் திரும்பும். மனிதர்களைக் கட்டுப்படுத்தும் சமூக சக்திகள் சமூகக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் . அப்படி வந்து விட்டால் , புரியாத சக்திகளைப் பற்றிய மனதின் பிரதிபலிப்பு தேவையற்றதாகி விடும். அதாவது ,புரியாத சமூக சக்திகள் எதுவும் இருக்காது.

                            இதயமற்ற ஏறறத்தாழ்வுகளைக் கொண்ட சமுதாயம் , இதயம் உள்ள சமுத்துவம் கொண்ட சமுத்துவமாக மாறும் பொழுது , மதத்திற்கான தேவை  குறைந்து படிப்படியாகச் சாதி மதங்களற்ற சமுதாயமாக மாறிவிடும்  " பக்கம் 102 . மேலே சொன்னவை உடோப்பியா கருத்துக்களாக இருக்கின்றனவே தவிர எதார்த்ததை எதிரொலிக்கும் விதமாக இல்லை. ஒரு அன்னியத்தன்மை வந்து நாம் வாசிக்கும்பொழுதே ஒட்டிக்கொள்கின்றது.  மேலும் பக்கம் 99-ல் " பொதுவாக நாத்திகவாதம் பேசுபவர்கள் மதத்துடன் முட்டி மோதி ஜெயித்து விடலாம் என்றே போராடுகின்றனர். ..."  என்று குறிப்பிடுகின்றார். 21-ஆம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் மதத்தைக் குறித்த மதிப்பீடுகள் வெகுவாக மாறியுள்ளன. மதத்தை விட்டுப் பெரும்பாலானவர்கள் வெளியே வந்து தங்களை மதமற்றவர்கள், கடவுளை நம்பாதவர்கள் என அறிவிக்கின்றனர். ஆனால் நாத்திகவாதம் பேசுபவர்கள் , கொச்சை நாத்திகவாதிகள் என்று 60-களில் பேசிய இடதுசாரிகள் போலவே இந்த நூலின் ஆசிரியரும் பேசுகின்றார்.

                          அண்ணல் அம்பேதகர் 1930-களில் எழுதியபோதே , இந்த நாட்டில் புரட்சி வராது , ஏனெனில் இங்கு  இருக்கும் சாதி அமைப்பு முறை புரட்சி வரவிடாது என்றார்.  ,சாதி  தொழிலாளர்களைப் பிரித்து வைத்திருக்கின்றது. ஒன்று சேரவிடாத ஏணிப்படி சாதித்தட்டுகளில் அமர்ந்திருக்கும் சாதி உணர்வு தொழிலாளர்கள் தங்கள் சாதி மதப்பெருமைகளை பேசிக்கொண்டே இருக்கின்றார்கள்,  80 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய நாட்டில் உள்ள பொதுவுடமை இயக்கங்கள் ஏன் தேய்ந்து கொண்டே இருக்கின்றன என்பதனை இந்த நூலின் கடைசி அத்தியாயம் உணர்த்துகின்றது. ஏதோ இரவல் மொழியில் பேசுவது போலவே 'தீர்வு என்ன' என்னும் கடைசி அத்தியாயம் இருக்கின்றது.

                       இந்த நூலை வாசித்தவுடன் எனக்குத் தோன்றிய உணர்வைப் பதிந்திருக்கின்றேன். நான் பதிந்ததை அப்படியே நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. இந்தப் புத்தகத்தை நீங்களும் வாசித்துப்பாருங்கள்.   உங்கள் கருத்துக்களையும் மறுமொழியாய் பதிவிடுங்கள்.


               

Wednesday, 24 September 2014

அண்மையில் படித்த புத்தகம் : பழஞ்சோறு- சிறுகதைத் தொகுப்பு-அமல நாயகம்

அண்மையில் படித்த புத்தகம் : பழஞ்சோறு - சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்                                :  அமல நாயகம்
பதிப்பகம்                                : அமர பாரதி பதிப்பாளர் மற்றும்                                         விற்பனையாளர் ,திருவண்ணாமலை
                                                                                          ;  9444867023 ,9443222997
முதற்பதிப்பு                             : 2008, மொத்த பக்கங்கள் 179, விலை ரூ 90
மதுரை மைய நூலக எண்                                      : 185214

                                25 சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் பழஞ்சோறு என்னும் நூல்,. எல்லாமே கிராமத்தில் வாழும் மனிதர்கள் பற்றியவை. எந்தப் பூச்சும் இல்லாமல், பகட்டு, பம்மாத்து இல்லாமல், என் இனிய கிராமத்து மக்களே என்னும் விவரிப்பு எல்லாம் இல்லாமல் , கிராமத்தில் உள்ள மனிதர்கள் எப்படி இருக்கின்றார்களோ , அப்படியே படைக்கப்பட்ட படைப்பாக, அவர்களின் உரையாடல் மொழிகளிலேயே படைக்கப்பட்ட படைப்பாக இருப்பது இந்தக் கதைகளின்  நூலின் சிறப்பு.

                             சில்லறை மாத்தப்போறேன்னே பொண்டாட்டி ராமாயி கிட்டே சொல்லிட்டிப்போயி , சில்லரை கிடைக்கலன்னு சாராயக் கடையிலே போயி சில்லறை மாத்தப்போயி, ஒரு கிளாஸாவது சாராயம் வாங்கினாத்தான் சில்லறை கொடுப்பேன்னு கடைக்காரன் சொல்ல, சாராயத்தைக் குடிச்சிட்டு , தெருக்கூத்துப் பாட்டுப்பாடும் தாவீதோட போட்டி போட்டிப் பாட, கூட்டம் கூட, சராயக்கடை களை கட்ட, போலீஸ் வர, மத்தவனெல்லாம் ஓடிப்போக , போட்டிப் பாட்டு பாடிக்கிட்டு இருந்த தாவீதையும் ஏழுமலையையும் போலீஸ் அள்ளிக்கிட்டப்போக, ராமாயி போயி பிறகு ஏழுமலையை போலீசுக்கு இலஞ்சம் கொடுத்து மீட்டு வர்ற கதை. கடைசியிலே பய்ந்துகிட்டே பெண்டாட்டி பின்னால போற ஏழுமலை பத்தி " அவருக்கென்ன தெருவரைக்கும் கொண்டாந்து வுட்டுட்டுப் போயிடுவாரு, ராத்திரி நடக்கப்போற, ராமாயி காளி அவதாரத்தில என்னென்ன நடக்குமோ, உப்பத்தின்னவன் தண்ணிக் குடிச்சுத்தான் ஆவனும்னு மனசை தேத்திக்கிட்டு , நொண்டி வீரன் கோயில்ல வெட்டுப் படபோற ஆடு மாதிரி பின்னாடியே நடக்குறாரு ஏழுமலை " பக்கம் 13

                           காதலித்த சின்னசாமி- மலர்க்கொடியையும் பிரித்துவைத்து, என்னடா கண்டங்கே ? என்று  ஊர்க்காரர்களைக் கேள்வி கேட்கும் சின்னசாமி-,மலர்க்கொடி சிறுகதை, கல்லுளி மங்கனா ,எதிலும் காசு பார்க்கும் சமர்த்தியசாலி, சின்ன சின்ன திருட்டைச்செய்துவிட்டு, திருடிய வீட்லேயே போய் அடமானம் வச்சிருக்கேன், போய்ப் பணத்தை கட்டி வாங்கிக்கொள் என்று சொல்லி , அடித்தவர்களிடமே சட்டப்பிரிவைச்சொல்லி பணம் வாங்கும் ஒட்ட மண்டையன் , மகன் பெத்த பேரப்பிள்ளைக்குத்தான் இந்த சிங்கப் பொம்ம என்று சொல்லி மகள் பிள்ளை பேரனுக்கு கொடுக்க மறுத்து, பின் மருமகள், மகனின் கொடுமை தாங்காமல் மகள் பெத்த பேரனுக்கு வந்து கொடுக்கும் தாத்தாவைப் பற்றிய கதையான சிங்கப் பொம்ம போன்றவை நடப்பை பேசும் கதைகளாக இருக்கின்றன. கிராமத்தில் நான்  வாழ்வில் சந்தித்த சில மனிதர்களை  ஞாபகப்படுத்துகின்றன.

                          கிராமத்திலிருந்து படித்து வேலை பார்க்கும் ஊர்க்காரர்கள் வீட்டில் வேலைக்காரியாக வந்து சேரும் ல்ட்சுமி,  தான் பட்ட வேதனையை தன் தங்கை படப்போகிறாள் என்று தெரிந்தும் தடுக்க இயலாத லட்சுமி, குடிகாரத்தந்தைக்கு குடிக்க கிடைத்தால் போதும்  என்ற எதார்த்த நிலையைச்சொல்லும் 'மஞ்சப்பை' சிறுகதை, அரசியல் கட்சியில் சேர்ந்து அவதியுறும் கிறுக்கன் ராமலிங்கம் பற்றிய கதையான பலி ஆடுகள் சிறுகதை, கிராமத்துப் பள்ளிகள், வாத்தியார் பற்றிய கதையான 'விசாரணை ' போன்ற கதைகள் நினைவில் நிற்கின்றன.

                                விவசாயின் வேதனை சொல்லும் " அதாண்டா மாப்ள சரி, பேரிச்சம் பழம் வித்தவங்கூட இன்னைக்கு பணக்காரனாயிட்டான். வெவசாயம் பார்த்தவன் கடனாளியாத்தான் நிக்கிறான். வூர்ல இருக்கிறவன்ல பாதி பேராவது, இனிமே வெளி வேலைக்குப் போயிடணும். அப்பத்தான் உசுரு பொழைக்கலாம் " பக்கம் 105 - படித்தபோது எங்கள் கிராமத்தில் விவசாயம் செய்தவர்களில் நிறையப் பேர் திருப்பூருக்கும் , சிவகாசிக்கும் பஞ்சம் பிழைக்கப்போய், நன்றாகவே இருப்பது ஞாபகம் வந்தது.

                          பெத்த தாயையும், தந்தையையும் பங்கு போடும் பாகப்பிரிவினைக் கதை வலிக்கிறது என்றாலும் அதுதான் இன்றைய நடப்பு. நடக்காத கற்பனை விசயங்களைக் கற்பனை செய்து அழகுற எழுதுவதை விட, எதார்த்தங்களை சமூக நோக்கோடு விமர்சனம் செய்வதுதான் இன்றைய தேவை, இந்த நூல் ஆசிரியர் அமல நாயக்ம் மிக அருமையாகவே பல கதைகளில் அதைச்செய்திருக்கின்றார்.

                            இந்தத் தொகுப்பிலேயே எனக்கு மிக, மிகப் பிடித்த கதை என்றால் அது 'மாறும் காலம்' என்னும் சிறுகதை.பாவாட முடிவெட்டுறவரு என்று ஆரம்பித்த முடிவெட்டும் தொழிலில் ஈடுபடும் பாவாட, அவரின் மகன், அவரின் பேரன் என்று மாறும் நிலைமைகளை மிக எதார்த்தமாக சித்தரித்துள்ளார். வீடு வீடாகப் போய் சில நேரம் கடன் சொல்லி விரட்டும் ஊர்க்காரர்களுக்கு முடி வெட்டும் பாவட, பயந்து பயந்து சாகும் பாவட , அவரின் மொவன் வீரப்பன் பெங்களூக்குப் போய் வந்து அந்த ஊரில் சலூன் கடை வைத்தபோது ஊரே வியந்து பார்க்கிறது. முதலில் ஒருவரும் வரவில்லை, பின்பு இளைஞர்கள் எல்லாம் கடைக்கு வர, காசு கொடுக்காமல் எவனும் முடிவெட்ட முடியாது என்னும் நிலைமை ஏற்படுகிறது. வீரப்பன் தன் பிள்ளைகளை நல்ல பள்ளிகளில் படிக்க வைக்கிறான் என்று சொல்லி விட்டு,
 " பாவாட முன்னமாதிரி ஊருக்குள்ளே முடிவெட்டப்போறதுல்ல. மொவன் வூட்டுப் பிள்ளைங்கள பள்ளிக்கூடத்துக்கு கூட்டிக்கிட்டுப்போயி, கூட்டிக்கிட்டு வர்றதுதான் வேல.
பேரன் ஒரு நாள் கேட்டான் ,
" லீவு நாளானா, நாங்களும் கடைக்கு வர்றோம் தாத்தா."
" நீங்கல்லாம் கடைக்கு வரக்கூடாது நல்லாப்படிச்சு கையெழுத்துப்போட்டு சம்பளம் வாங்குற வேலைக்குப் போவணும் "
" முடி வெட்டுறங்கல்லாம் கையெழுத்துப்போட்டு சம்பளம் வாங்குற வேலைக்குப் போயிட்டா அப்புறம் யாருதான் தாத்தா முடிவெட்டுறது ? "
" முடி வெட்டுறவன் முடியேதான் வெட்டுணுமா ? முடிவெட்டுறவன் பேரன் கையெழுத்துப்போட்டு சம்பளம் வாங்கற வேலைக்குப் போனா கையெழுத்துப்போட்டு சம்பளம் வாங்குறவன் பேரன் முடிவெட்ட வரட்டுமே "
இந்தப் பெரியார் படத்த பத்திரிக்கையில பாத்ததுக்கே இப்படிப்பேசுறாரே, இவரல்லாம் நாலு எழுத்து படிச்சிருந்தா இன்னும் என்னென்ன பேசுவாரோ.... பக்கம் 172  . மாறும் காலத்தை , பெரியார் ஊட்டிய உணர்வால் மாறும் தலைமுறையை அழகாகப் படம் பிடித்திருக்கும் சிறுகதை 'மாறும் காலம் 'சிறு கதையாகும்.

                     கிராமத்து மொழி, கிராமத்து மாந்தர்கள், கிராமத்து காடு,வயல், முந்திரித்தோட்டம், மனிதர்களின் சண்டைகள் சச்சரவுகள், எல்லாம் தெரிந்தமாதிரி பேசும் எதுவும் தெரியாத சில கிராமத்து மனிதர்கள், கிராமத்தில்தான் சண்டை போட்டார்கள் என்று படிக்கவைத்தால் படித்த பின்பும் மல்லுக்கட்டும் படித்தவர்கள் என  அப்படியே படம் பிடித்ததுபோல சிறுகதைகளின் வாயிலாகப் படம் பிடித்துக்காட்டியிருக்கின்றார் அமல நாயகம்

                        " என் கிராமத்து மனிதர்கள் எளிமையானவர்கள்.இனிமையானவர்கள்; உண்மையானவர்கள்,உணர்ச்சியானவர்கள்; எதை நம்பினார்களோ அதையே வாழ்பவர்கள் எதை வாழ்கிறார்களோ ,அதையே சொல்கிறவர்கள். அவர்களிடம் பொய் முகங்கள் அதிகம் இல்லை. இந்தப் பழஞ்சோறு எம் மக்களைப் பற்றிய மறுபதிவு .உயர்வையும் ,தாழ்வையும், வெற்றியையும் ,தோல்வியையும் , முற்போக்கையும் ,பிற்போக்கையும் விவரிக்கும் வரலாற்று ஆவணம் " என்று முன்னுரையில் இந்த நூலின் ஆசிரியர் அமல நாயகம் குறிப்பிடுகின்றார்.உண்மைதான். நல்ல எதார்த்தமான, கிராமத்து மனிதர்களை சிறுகதை வாயிலாகக் காண விரும்புகிறவர்கள் கட்டாய்ம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பாக இந்தப் 'பழஞ்சோறு ' நூல். இந்த நூல்  வெளிவரக் காரணம் எழுத்தாளர் பவா.செல்லத்துரை, கவிஞர் அறிவுமதி, கரிகாலன், வம்சி புகஸ் கே.வி. ஷைலஜா என நன்றியோடு இந்த நூலின் ஆசிரியர் அமல் நாயகம் குறிப்பிடுகின்றார். அண்ணன் கவிஞர் அறிவுமதியின்  கரங்கள் எப்போதும் உதவி செய்யும் -படைப்பாளிகள் தோழமை கொள்ளும் கரங்களாகவே இருக்கின்றன. கடலூர், மஞ்சக்குப்பம், முகவரியிலிருந்து வந்திருக்கும் இந்த நூல் நம்மைப் போன்ற தோழர்களின் கவனத்திற்குரியது , படிப்பதற்குரியது, பரப்புவதற்குரியது.


   
                               

Sunday, 21 September 2014

அண்மையில் படித்த புத்தகம் : பாஷோவின் கரும்பலகை ஆசிரியர் : வஸந்த் செந்தில்

அண்மையில் படித்த புத்தகம் : பாஷோவின் கரும்பலகை
ஆசிரியர் : வஸந்த் செந்தில்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம், சென்னை -83
முதல்பதிப்பு : 2004  மொத்த பக்கங்கள் 62 விலை ரூ 20
மதுரை மைய நூலக எண : 157863
   
                             நூலகத்தில் இந்தப் புத்தகத்தை எடுக்கலாமா எனப் புரட்டியபோது " சிறிய நூல், பெரிய கருத்து, அரிய் உண்மை, எளிய நடை - வேலன் " என எழுதியிருந்தது. படித்து முடித்த போது அவ்ர் எழுதியிருந்தது உண்மைதான் எனப்புரிந்தது. இந்தப் புத்தகம்  ஜப்பானின் பாஷோவின் கருத்துக்கள் அல்ல, நூல் ஆசிரியர் வஸந்த் செந்திலின் கருத்துக்கள்- அதனை நூல் ஆசிரியரே அறிமுகம் பகுதியில் கூறிவிடுகின்றார்.

                                ஒரு சின்ன கதை, கதை முடிவில் ஒரு கருத்து - கரும்பலகையில் எழுதியிருப்பது போலக் கட்டமிடப்பட்டு. புதிய சிந்தனை, புதிய முயற்சி. உதவி என்னும் தலைப்பில் கதை , அதனை அடுத்து  கரும்பலகையில் " பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட , உதவி செய்யும் கரங்களே சிறந்தவை. நீங்கள் என்ன் கொடுக்கிறீர்களோ அதை மட்டுமே திரும்ப அடையமுடியும் ". என்னும் வாசகங்கள். நம்பிக்கை, மாற்றம், தேவை, நடத்தை, வெற்றி, வெற்றியின் வரையறை, ஆசை, நீங்கள் யார், மூன்று கேள்விகள், பழக்கம் , நேரம், நல்ல வேலை, பற்று, கவனம்,தடை, சிறியதும்- பெரியதும் போன்ற தலைப்புகளில் நிகழ்வுக் கதைகளும் , கரும்பலகை வாசகங்களும் மிக நன்றாக இருக்கின்றன.

                                   நூலின் கடைசியில் பாஷோவின் கரும்பலகையிலிருந்து சில விதிகள் என்று சில விதிகளைக் கொடுத்திருக்கின்றார். வெற்றி வாய்ப்பு விதிகள் - வெற்றி பெற வேண்டுமென்றால் 100 சதவீதம் வேலை செய்தே ஆகவேண்டும். வெற்றிகரமான செயலின் விதிகள் , முன்னுரிமைச்செயல்களின் விதிகள், பணம் சேருவதற்கான விதிகள், மனிதர்களைக் கையாள்வதற்கான விதிகள், விமர்சனங்களை எதிர்கொள்கிற விதிகள், கனவை அடைவதற்கான விதிகள், வெற்றிகரமான காதலின் விதிகள், வெற்றிகரமான பேச்சின் விதிகள், வெற்றிகரமான குறிக்கோள்களின் விதிகள் எனப் பல விதிகளை 5, 6 வரிகளில் கொடுத்திருக்கின்றார்  நூல் ஆசிரியர். அவை நம்மை ஈர்க்கின்றன .

                                        இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டு , நன்றாக இருக்கிறது படித்துப் பார் என்று கல்லூரியில் படிக்கும் எனது மகன் சொ. நே.அன்புமணியிடம் கொடுத்தேன். ஆர்வமாக நூலைப் படித்துவிட்டு, அப்பா , நன்றாக இருக்கிறது, நூலகப் புத்தகம் இது, இந்தப் புத்தகத்தை பதிப்பகத்தில் போன் செய்து வீட்டில் வாங்கி வைக்க வேண்டும் என்றான். உண்மைதான்.வாங்கி வைக்க வேண்டும். நீங்களும் வாங்கிப் படிக்கலாம். 

Thursday, 28 August 2014

இட்லி மாவு.......(சிறுகதை )

                                                         இட்லி மாவு......
                                                                                 -- வா. நேரு
அரைத்தூக்கத்தில் இருந்த அறிவுக்கு இரவே மாசறுபொன் காலையில் இட்லி மாவு வாங்கவேண்டும் என்று சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது.படாரென்று படுக்கையில் இருந்து எழுந்து நேரத்தைப்பார்த்தான். நேரம் காலை 5.50. மாசறுபொன்னும் பிள்ளைகளும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களைத் தொந்தரவு செய்யாமல் சைக்கிளை தூக்கி வீட்டிற்கு வெளியே வைத்தான் . இட்லி மாவு வாங்கும் தூக்குச்சட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். இவன் இட்லி மாவு வாங்கும் இடத்திற்கு போவதற்கும் முன்னால் இட்லி மாவு விற்கும் இடங்கள் மூன்று இருக்கின்றன. இவன் வாங்கும் இடத்திற்கும் முன்னாலும் பின்னாலும் இரண்டு பேர் இட்லி மாவு விற்கின்றார்கள். ஆனால் அறிவு வாங்கும் இடத்தில்தான் இட்லி மாவு வாங்கக் கூட்டம் நிற்கும். ஏதோ வெள்ளைக்காரன் கம்பெனி போல காலை 6 மணி முதல் 6.15 வரைக்கும்தான் அந்த இடத்தில் மாவு கிடைக்கும் . அந்த இடத்தில் மாவைக் கொண்டுவருவதற்கு முன்னாலேயே கூட்டம் வரிசையாக நிற்கத்தொடங்கிவிடும். பின் வந்து இங்கு மாவு இல்லை என்பவர்கள் அடுத்த இடங்களில் வாங்குவார்கள் அல்லது திரும்பிப்போவார்கள். அறிவு எப்போதும் இங்கு மாவு இல்லையென்றால் திரும்பிப்போகும் பட்டியலில் இருப்பான். மாசறுபொன் தெளிவாகச்சொல்லியிருந்தாள், ஒன்று வாங்கினாள் அந்த அம்மாவிடம் வாங்கி வாருங்கள், இல்லையென்றால் சும்மா வாருங்கள், நான் வேறு ஏதாவது காலை டிபன் ஏற்பாடு செய்து விடுகிறேன் என்பாள். வேறு டிபன் என்றால் சப்பாத்தி என்றாலும் , பூரி என்றாலும் மாவை எடுத்து ஊறவைத்து, பின்பு பிசைந்து , உருட்டி, தேய்த்து அடுப்பில் எடுத்து போட்டு எடுப்பதற்குள் நேரம் ஓடி விடும். வீட்டில் பிள்ளைகள் இரண்டு பேரும் காலையில் எட்டுமணிக்குள் பள்ளிக்கூடத்திற்கு ஓடவேண்டும். அறிவும் , மாசறுபொன்னும் அலுவலகத்திற்கு அடுத்து ஓடவேண்டும். அதனாலேயே இந்த இட்லி மாவு வாங்குவது ஒரு காலைக் கடமையாகிவிட்டது அறிவுக்கு.

முதன்முதலில் இந்தப் பகுதிக்கு குடி வந்தவுடனேயே வித்தியாசமாக இருந்தது அறிவுக்கு. நிறைய சின்னச்சின்ன கடைகள். காலையிலும், மாலையிலும் சுடச்சுட பணியாரம், வடை என்று ஒரு சிலர். இட்லி கடை சிலர். இடியாப்பம் , புட்டு என்று சிலர் .சமசோ, கீரை வடை என்று சிலர். முள்ளு முருங்கைக் கீரை வடை, எண்ணெய்க்கடலை என்று சிலர். சின்னச்சின்ன இடங்களில், ஒரு நாளில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் விற்றுக் கொண்டிருந்தார்கள். முள்ளு முருங்கைக்கீரை வடை எல்லாம் இந்தப்பகுதிக்கு வரும் முன் அறிவு சாப்பிட்டதே இல்லை. இப்போது அந்த வடைப் பிரியர் ஆகிவிட்டான். எல்லோரும் சாதாரண உழைக்கும் மக்கள். நெசவுத்தொழில் செய்து கொண்டிருந்தவர்கள். நெசவுத்தொழில் நலிவடைந்த நிலையில் , ஏதோ சின்னச்சின்ன வேலைகளைச்செய்து தங்கள் வயிற்றுப்பாட்டை போக்கிக்கொண்டிருந்தார்கள் .ஆனால் எல்லோருமே , மகிழ்ச்சியாக தங்கள் வாழ்வை கிடைத்த அளவில் மகிழ்ச்சி என்ற மன நிலையில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தார்கள். இட்லி மாவு வாங்கலாம், அல்லது இட்லியாக வாங்கலாம் . நினைத்ததை நினைத்த நேரங்களில் குறைந்த செல்வில் வாங்கிச்சாப்பிட வசதியான பகுதியாக அந்தப் பகுதி இருந்தது, கணவன் , மனைவி இருவரும் வேலைக்குப்போகும் அறிவு குடும்பத்திற்கு மிக வசதியாக இருந்தது.

அதுவும் எஸ்.இராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில் ஒரு பெரிய உணவு விடுதிக்குச்சென்று பிள்ளைகளுக்கு எல்லாம் கண்டபடி வாங்கிக்கொடுத்து, பணத்தைக் காலிபண்ணியதைப் பற்றியும் தான் அங்கு இட்லி சாப்பிட்டு வந்ததைப் பற்றியும், இட்லியும் சாம்பாரும் எவ்வளவு நல்ல உணவு என்று விரிவாக எழுதியிருந்தைப் படித்தபின்பு அறிவு சோம்பேறித்தனம் படாமல் காலையில் போய் மாவு வாங்கி வந்து கொடுத்துக்கொண்டிருந்தான்.வீட்டில் இட்லி மாவு சில நேரம் ஆட்டி வைப்பதுண்டு. இப்போது எல்லாம் மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும் என்று தெரியவில்லை.சில நேரம் பாதி , பாதி மாவை ஆட்டி வைத்துவிட்டு அலுவலகம் ஓடிவந்து விட்டால் மாலையில் போய் அதனை வெளியில்தான் கொட்டவேண்டும். முழுமையாக ஆட்டப்படாத மாவு எதற்கும் பயன்படுவதில்லை. இல்லையென்றால் இரவில் வெகு நேரம் முழித்து மாவை ஆட்டிவைக்க வேண்டும். காலையில் போய் அலுவலகத்தில் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்க வேண்டி வரும். எதற்கடா இந்த வம்பெல்லாம் என்று இட்லி மாவை வாங்கி விடுவான் அறிவு. வீட்டு மாவுக்கும் , அறிவு வாங்கி வரும் இடத்தின் இட்லி மாவுக்கும் ஒன்றும் பெரிய அளவில் வேறுபாடு இருக்காது. வீட்டு மாவு போலவே வெளி மாவும் அமைந்தால் வீட்டில் மாவு ஆட்டும் வேளை மிச்சம்தானே ! கொஞ்சம் நாள் பழகப் பழக , மாவு விற்பவர்கள் குடும்பத்தைப் பற்றியும் அறிந்து கொண்டான்.

கணவர், மனைவி, இரண்டு குழந்தைகள்.மூத்த பெண் 6-ம் வகுப்பும் இளைய பெண் 4-ம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்தனர். குடும்பமே இட்லி மாவு விற்பனையில் . காலை, மாலை இரண்டு வேளை மட்டும் இட்லி மாவு விற்பனை . முதலில் அம்மா ஒரு பெரிய தண்ணீர் வாளியோடு வருவார். பின்னால் அப்பா சைக்கிளில் மாவு கொண்டு வருவார். அந்த ஆறாவது வகுப்பு படிக்கும் பெண் கையில் கரண்டியோடும் ஒரு சின்ன மாவு வாளியோடும் வருவாள். ஒரு தேர்ந்த சிற்பி போல சில வினாடிகளில் இட்லி மாவு விற்பனை நிலையம் ரெடியாகி விடும். 3 சில்வர் அண்டாக்களில் மாவு இருக்கும் . ஒவ்வொன்றாக சைக்கிளில் கணவர் கொண்டு வருவார். அந்த அம்மா கையில் கரண்டியை எடுத்து மாவைக் கலக்கும் விதமே அருமையாக இருக்கும். அவ்வளவு கவனமாக, நேர்த்தியாக ஒவ்வொரு தூக்கு வாளியோ, சட்டியோ வாடிக்கையாளர்களின் பாத்திரங்களில் மாவு நிரப்பப்படும். ஒரு கப் மாவு 15 ரூபாய்.ஒவ்வொரு கப் மாவிற்கும் ஒரு கரண்டி மாவு போனசாக ஊற்றப்படும் 2 கப் மாவு வாங்கினால் அறிவு குடும்பத்திற்கு ஒரு வேளை உணவு சரியாகிப்போகும். சுடச்சுட இட்லியை மாசறுபொன் அவித்துத்தர , பிள்ளைகள் திருப்தியாக பள்ளிக்கூடம் கிளம்பிவிடுவார்கள். ஆனால் ஒரு அண்டா என்பது ஒரு 30 கப் மாவு பிடிக்கலாம். 3 அண்டா மாவு என்றால் 90 கப் மாவு . ஒரு கப் மாவு 15 என்றால் 90 கப் மாவிற்கு 1350 ரூபாய் . அதில் எப்படியும் 200, 300 ரூபாய் இலாபம் கிடைக்க வழி இருக்கிறது. ஆனால் தரமாக கொடுப்பதனால் இலாபம் குறைவாக இருக்கலாம், ஆனால் உணவுப்பண்டம் வந்தவுடன் பறந்து விடுகின்றதே, ஒரு நாள் கூட மாவு விற்காமல் வெகு நேரம் நின்றதாக அவர்களைப் பார்த்ததேயில்லை அறிவு . இட்லி மாவோ, உணவு விடுதியோ இருக்கும் பொருள் நன்றாக அமைந்து விற்று விட்டால் இலாபம்தானே !, மகிழ்ச்சிதானே.

காலையில் மாவு வாங்கும் இடத்தில் இருக்கும் பிரச்சனை கொசுக்கள்தான். விடிந்தும் விடியாமல் இருக்கும் காலைப்பொழுது. கொசுக்கள் எல்லாம் மொத்தமாகப் படையெடுத்து மொய்க்கும். இரண்டு, மூன்று நிமிடத்தில் நாம் மாவு வாங்கும் நேரத்திற்குள்ளேயே இவ்வளவு கொசு கடிக்கிறதே, கால் மணி நேரம், அரை மணி நேரம் என்று இந்த இடத்தில் நின்று கொண்டே வேலை செய்கின்றார்களே என்று அறிவு யோசிப்பான். சில நாட்கள் சில கொசு வத்திகளை பொருத்தி வைத்திருப்பார்கள். மற்ற நாட்களில் கொசு வத்தி இருக்காது. ஒரு நாள் இரவு முழுவதும் மாற்றி மாற்றி கரண்ட் கட் ஆகிக்கொண்டயிருந்தது. இரவு முழுவதும் தூக்கம் இல்லை. இரவில் இவ்வளவு நேரம் மின்சாரம் இல்லையென்றால் எப்படி மாவு ஆட்டியிருப்பார்கள் - மாவு இன்று இருப்பது சந்தேகம்தான் என்று நினைத்துக்கொண்டு அறிவு போனான். மாவு இருந்தது. மாவு விற்கும் பெண்ணிடமே கேட்டுவிட்டான். "இரவு முழுவதும் மின்சாரம் வந்து, வந்து போனதே ? எப்படி மாவை ஆட்ட முடிந்தது ? " என்று கேட்டபோது, " அண்ணே, இரவு முழுவதும் தூங்கவில்லை, மின்சாரம் நின்றதும், மாவை மூடிவைத்து, பின்பு வந்தவுடன் அரைத்து, மறுபடியும் மூடிவைத்து, பின்பு அரைத்து , இப்படித்தான் அரைத்தோம் " என்று சிரித்துக்கொண்டே அந்தப்பெண் சொன்னபோது அறிவினால் ஏனோ சிரிக்கமுடியவில்லை. வருத்தமாக இருந்தது.

இந்த இட்லி மாவு விற்பனை நிலையத்திற்கு எதிர்த்தாற்போல் ஒரு பெண் தனியாக இட்லி மாவு விற்பனை செய்துகொண்டிருப்பார். காலையில் 6 மணியிலிருந்து காலை 8 , 8.30 வரை ஒரே ஒரு பெரிய சட்டியில் கொண்டுவந்து இட்லி மாவு விற்றுக்கொண்டிருப்பார். ஒரு நாள் எப்போதும் வாங்கும் இடத்தில் இட்லி மாவு இல்லையென்று எதிர்த்தாற்போல் இருக்கும் பெண்ணிடம் மாவு வாங்கிக்கொண்டு போனான் அறிவு. வீட்டில் அடி விழுகாத குறைதான். ஏங்க, மாவு கலர் பார்த்தாலே தெரியலையா, ஏதோ மட்டமான அரிசியிலே அரைச்ச மாவு மாதிரி இருக்கே என்று புலம்பிக்கொண்டே அடுப்பில் இட்லியை வைக்க . சுட்டு வைத்த இட்லியைத் திங்கமுடியாமல் திரு திருன்னு அறிவு முழிக்க, நீங்க இப்படி முழிப்பிங்கே, நாம வாங்கிட்டு வந்த மாவு இட்லியை நாமே திங்கமுடியலையே, பிள்ளைகள் எப்படி திம்பாங்கன்னுதானே முழிக்கிறீங்க, எங்கெளுக்கெல்லாம் வெண்பொங்கல் அப்பவே செஞ்சுட்டேன், போய் குப்பையிலே அந்த இட்லியைக் கொட்டிட்டு, வெண்பொங்கல் சாப்பிட வாங்க என்றாள் மாசறுபொன். அன்றிலிருந்து அந்தப் பக்கம் இட்லி மாவு வாங்குவதையே விட்டுவிட்டான் அறிவு .

ஆனால் இந்தப் பொம்பளைக்கு உறைக்காதா? ஒருவரிடம் வந்த 15 நிமிடத்தில் மூன்று அண்டா இட்லி மாவு எல்லாம் காலியாகிவிடுகிறது நம்மிடத்தில் ஒரு வாளி இருப்பது 2 மணி நேரமானாலும் விற்க மாட்டேங்கதே ! தரம்தானே பிரச்சனை. தரமாக கொடுத்தால் நாமும் கொஞ்சம் நேரத்தில் விற்று விட்டுப்போய்விடலாமே என்று நினைக்க மாட்டார்களா என்று அறிவு நினைப்பான். ஒரு தெருவில் பெரிய நிறுவனத்தின் ஜவுளிக்கடை வந்தால், மற்ற ஜவுளி நிறுவனங்கள் எல்லாம் படுத்துவிடும் .ஏனென்றால் புதிய நிறுவனம் விளம்பரத்திற்கு அள்ளித்தெளிக்கும் பணம். விளம்பரத்தின் மூலம் தன்னை நிலை நிறுத்த மற்ற விற்பனை நிலையங்களைப் படுக்க வைத்துவிடுகின்றார்கள். ஆனால் இங்கு அப்படியில்லையே, தரம்தானே விளம்பரம். மக்கள் இன்று தரமாக இருந்தால் தொலைவில் இருக்கும் இடத்தைக் கூடத் தேடி வருகின்றார்களே என்றெல்லாம் அறிவு நினைத்துக்கொண்டிருந்தான். ஏன் நாமும் அவர்களைப் போலத் தரமாக மாவைக் கொடுக்கக் கூடாது என்று நினைக்கமாட்டார்களா என்று நினைத்தான் . " Satisfied Customer is the best advertiser " - திருப்தியடைந்த வாடிக்கையாளரே மிகப்பெரிய விளம்பரதாரர் என்று தான் படித்த சர்ட்டிபிகேட் -விற்பனையாளர் படிப்பில் படித்தது ஞாபகம் வந்தது அறிவுக்கு .


இரண்டு நாளாய் தொடர்ந்து அறிவு வாங்கும் இட்லி மாவு கடை இல்லை. போய் பார்த்து விட்டு , திரும்பி திரும்பி வந்தான் அறிவு. மூன்றாவது நாள் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தான் ." சார், உங்களுக்குத் தெரியாதா, அந்த இட்லி மாவு விற்கும் பெண்ணிற்கு உடம்பு சரியில்லை என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் என்றார்கள். மேலும் நாலு, ஐந்து நாட்கள் வெளியூர் சென்றதால் இட்லி மாவு விற்கும் பக்கம் போகவில்லை. ஒரு நாள் திடீரென்று எப்போதும் அறிவு இட்லி மாவு வாங்கும் இடத்தில், 8 மணி வரைக்கும் இட்லி மாவு விற்கும் எதிர்த்த இட்லிமாவு கடைப்பெண் உட்கார்ந்திருந்தார். என்ன, இந்த அம்மா உட்கார்ந்திருக்கின்றார்களே, எதிர்த்த இடத்திலிருந்து இந்த இடத்திற்கு ஏன் வந்தார் ? என்று யோசித்துக்கொண்டே அந்தப் பெண்ணிடமே விசாரித்தான். எப்போதும் இங்கு இட்லிமாவு விற்பவர்கள் வரவில்லையா?" என்று கேட்டான் அறிவு. ஒரு மாதிரியாக ஏறிட்டு அறிவைப் பார்த்த அந்தப்பெண் " இனிமேல் அவர்கள் வரமாட்டார்கள், நான் தான் இனி இந்த இடத்தில் இட்லி மாவு விற்பேன் " என்றார். "ஏன் வரமாட்டார்கள் ? " என்றான் அறிவு . "நாலு நாளுக்கு முன்னாடி இந்த இடத்திலே இட்லி மாவு விற்கும் பொம்பளை செத்து போச்சு " என்றவுடன் அறிவுக்கு தூக்கி வாரிப்போட்டது. எப்படி, என்ன என்று விசாரித்த அவன் இறப்பு வீட்டிற்கு விசாரித்துச்சென்றான். அந்த 6-ம் வகுப்பு படிக்கும் பெண் , இவனை அடையாளம் கண்டு கொண்டு அவளது தந்தையிடம் சொல்ல, வெளியில் வந்த அவரிடம் , அவரின் மனைவி இறப்பைப் பற்றி அறிவு விசாரித்தான்.

அழுகையும் கண்ணீருமாய் நடந்த நிகழ்வுகளைச்சொன்னார். நாலைந்து நாளில் எல்லாம் தலை கீழாக மாறிப்யோயிடுச்சு சார். இந்தப்பிள்ளைகளை எப்படி நான் மேலே கரை சேர்க்க? கொசு எப்பவும் கடிக்கிற இடம்தான். சில நாள் கொசுவத்திச்சுருள் எல்லாம் காலையில் பொருத்தி வைப்போம்.எப்படி வந்தது , எதனால் வந்தது என்று தெரியவில்லை. மிகுந்த காய்ச்சல் என்று ஆஸ்பத்திருக்குப்போனாம். டெஸ்ட் எல்லாம் எடுத்து விட்டு டெங்கு காய்ச்சல் என்றார்கள். முத்தி விட்டது, முதலில் வந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று சொல்லி டாக்டருகளும் கைவிட்டு விட்டார்கள். பட்டுன்னு போயிட்டாலே சார் இப்படி ? என்று அவர் அழுக, அழுக அறிவுக்கும் அழுகை வந்தது. சேர்ந்து இவனும் அழுதான். அந்த 4-வது படிக்கும் பெண் பக்கத்தில் வந்து அழும் அறிவையே பார்த்துக்கொண்டே இருந்தது. அவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு வெளியில் வந்து வீட்டிற்கு வந்த பின்பும் மனது வலித்துக்கொண்டேயிருந்தது. எப்போதும் துயரம் அதிகமாக இருக்கும் நேரங்களில், ஏதேனும் நல்ல புத்தகத்தை எடுத்து வாசிப்பது அறிவின் வழக்கம். மேசை மேல் எப்போதே வாசித்த ராகுல்ஜியின் 'வால்கா முதல் கங்கை வரை " புத்தகம் இருந்தது. எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.

பழங்கால மனிதர்களின் நிச்சயமில்லாத வாழ்வை சுவை பட விவரித்திருந்தார் ராகுல்ஜி. மனிதர்கள் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்த காலம். இன்றைய சொத்துக்கள், தனி உடமை, பண்ம போன்றவை இல்லாத காலம். மனிதர்கள் மண்ணை எனது , உனது என்று பிரித்துக்கொள்ளாத காலம். தாய்வழிச்சமூகமாய், பெண்கள் மனிதர்களை வழி நடத்திய காலம். ஒரு தாய் தலைமையில் மொத்தமாய் வேட்டைக்கு போய்விட்டு திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில் , திடீரென்று பாய்ந்து வந்த ஓநாய்கள் , குழுவில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணைப் பிடித்துக்கொள்ள, அவளை மிருகத்திடமிருந்து காப்பாற்ற முயன்று மீட்கமுடியாத நிலையில், ஓநாய்கள் அந்தப்பெண்ணின் தசைகளை பிச்சு, பிச்சு திண்ண ஆரம்பிக்க, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அந்த இளம்பெண்ணை அப்படியே விட்டுவிட்டு , குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஓட்டம் ஓட்டமாய் ஓடுவதை சில பக்கங்களில் விவரித்திருந்தார் ராகுல்ஜி. மனக்கண் முன்னால் அந்த நிகழ்வு நிகழ்வதை கற்பனை செய்து பார்த்தான் அறிவு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்கள், இன்றைய நவீன வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் இருந்த மனிதர்கள் , தங்களோடு இருக்கும் ஒரு உயிர் ஓநாய்களிடம் வசப்பட்ட நிலையில் எப்படி தப்பித்து ஓடி தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் .ஓநாய்கள் இளம்பெண்ணைக் கொன்று அவளது தசைகளைத் தின்றுகொண்டிருக்க, பெண்கள், ஆண்கள், குழந்தைகள் அந்த ஓநாய்களிடம் இருந்து தப்பித்து ஓடுவதை, ஒரு சாண் வயிற்றை நிரப்ப படும்பாட்டை விவரித்திருந்தார் ராகுல்ஜி. ஆண்டாண்டு காலமாய் மனிதர்கள் , வயிற்றை நிரப்புவதற்காக படும்பாடு.... அன்றைக்கு காட்டு மிருகங்கள், இன்றைக்கு நாட்டு மிருகங்கள், கொடிய நோய்கள் மனித உயிர்களைப் பறிக்கின்றன என்று நினைத்துக்கொண்டே தூங்கிப் போனான்.

இரண்டு நாளில் மீண்டும் அந்தப் பகுதிக்கு சைக்கிளில் வந்த போது காலை 6 மணி. இறந்த பெண்ணின் கணவர் இட்லி மாவைத் தள்ளிக்கொண்டுவர, அந்தப் பச்சைப் பெண் பிள்ளைகள் இரண்டு பேரும் தண்ணீரும் வாளியும் கொண்டு , அந்த இட்லி மாவு விற்கும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தார்கள். இறந்த ஒரு வாரத்திற்குள் மீண்டும் மாவு விற்க வந்து விட்டார்களே என்று எண்ணிக் கொண்டு அருகில் சென்றான். " அண்ணா, எப்போதும் போல எங்களிடம் மாவு வாங்குங்கள் " என்று மழலைக் குரலில் அந்த சின்னப்பெண் கூற, அவளின் அப்பா " எங்களுக்கு இந்தத் தொழிலை விட்டால் வேறு தெரியாது சார். பெரிய சம்பாத்யம் எல்லாம் ஒன்றுமில்லை. காலையில் மாவு , மாலையில் மாவு விற்பதுதான் தொழில். அதில் கிடைப்பதை வைத்துத்தான் அன்றாடம் சாப்பாடு. முந்தி இடைப்பட்ட நேரத்தில் நெய்வோம். இப்போ அந்தத் தொழிலும் நசிஞ்சு போச்சு. நான் சாப்பிடணும், அதுக்கு மேலே இந்தப்பிள்ளைகள் இரண்டும் சாப்பிடணும். மகராசி, எப்படி இட்லி மாவுக் கடையை நடத்துறதுன்னு சொல்லிக்கொடுத்துப் போயிருக்கா, நாங்க தொடர்ந்து இந்த மாவை வித்தாத்தான் வாழ முடியும்.இந்த இடத்தை வேறு யாரும் பிடித்துக்கொண்டால் நான் போய் சண்டை போடுவதெற்கெல்லாம் சத்தும் இல்லை, மனசில் தெம்பும் இல்லை " என்று சொன்னபோது ராகுல்ஜியின் வால்கா முதல் கங்கை வரை கதைதான் மனதில் ஓடியது. இட்லி மாவு வாங்க இதோ போய் பாத்திரம் எடுத்து வருகின்றேன் என்று சொல்லிவிட்டு வீட்டை நோக்கி சைக்கிளில் வந்து கொண்டிருந்தான் அறிவு

                                 *************************************











நன்றி : எழுத்து. காம்.

Wednesday, 20 August 2014

இந்நாள்: நரேந்திர தபோல்கர் நினவு நாள்


இன்று டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் 10-வது நினைவு நாள். இன்றுவரை அவரைக் கொலைசெய்த இந்துத்துவ தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை கொடுக்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் பகுத்தறிவாளர் கழகம்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி தோழர்கள் இணைந்து 'அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நாளாக கூட்டங்கள் நடத்துகின்றனர். இந்த மாதம் 31வரை இந்தக் கூட்டங்கள் நடக்க இருக்கிறது. 'போராளிகள் புதைக்கப்படுவதில்லை,விதைக்கப்படுகிறார்'.அறிவியல் மனப்பான்மையை வளர்த்தத்தற்காக கொல்லப்பட்ட டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களுக்கு  வீரவணக்கம்.








2014-வருடத்திய எனது பதிவு:

நரேந்திர தபோல்கர்- மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய களப்போராளி. சாமியார்கள் என்ற போர்வையில் நடமாடும் மனிதர்களின் முகமூடிகளைக் கிழித்தெறிய தன் வாழ்க்கையை  அர்ப்பணித்துக்கொண்டவர். அதனாலேயே தன் உயிரை இழந்தவர். இன்று (20.8.2014) அவரின் முதலாம் ஆண்டு  நினைவு நாள். இன்னும் அவரைக் கொன்ற குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அகில இந்திய நாத்திகக் கூட்டமைப்பில்( The Federation Of Indian Rationalist Association) அகில இந்திய உதவித் தலைவராகப் பணியாற்றியவர். சென்னையில்  நடைபெற்ற அகில இந்திய நாத்திக மாநாட்டில் கலந்து கொண்டு பணியாற்றியவர். கொண்ட கொள்கைக்காக இறுதி மூச்சுவரை பாடுபட்ட அவரை சில பிற்போக்குவாதிகள் கொன்றுவிட்டதால், அவரின் கொள்கைகளைப் புதைத்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கின்றார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் போல, இந்தியா முழுமைக்கும் கொண்டுவர பாடுபடுவதே அவருக்கு நாம் செலுத்தும் வீரவணக்கமாக் இருக்கும். ந்ரேந்திர தபோலகர் பற்றிய செய்தியை இன்றைய(20.8.2014) விடுதலையும், ஆங்கில இந்து நாளிதழும் வெளியிட்டுள்ளன. அந்த பகுத்தறிவாளரை நினைவுகூர்ந்த பத்திரிக்கைகளுக்கு நன்றி. 



இந்நாள்: நரேந்திர தபோல்கர் (01.11.1945 - 20.08.2013)



மூடநம்பிக்கைக்கெதிரான போராளி நரேந்திர தபோல்கர் கடந்த ஆண்டு இதே நாளில் அதிகாலை நடைபயிற்சிக்காக சென்று கொண்டு இருந்தபோது துப்பாகியால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்தப் படு கொலை, நம்பிக்கைக்கும் அறிவாராய்ச்சித் திறனுக்கும், பகுத்தறிவு வாதத்திற்கும் இருண்மை வாதத்திற்கும் இடையே, நமது தேசத்தில் தொடரும் யுத்தத்தையே பிரதிபலிக்கிறது. நாகரீகம் தொடங்கிய காலந்தொட்டு ஆளும் வர்க்கங்கள் அந்தந்த காலகட்டங்களில் தங்க ளது எண்ணங்கள் மற்றும் ஒட்டு மொத்த சமுதாய உணர்வு நிலைகள் மூலம் சமூகத்தைக் கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செய்து வருகின்றன.
இச்சவாலை எதிர்கொண்டதன் விளைவாக தபோல்கர், மூடநம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, இருண்மைவாதம் ஆகியவற்றின் மூலம் கொள்ளை லாபம் ஈட்டிய கும்பலின் சீற்றத்திற்கு உள்ளானார்.
தனிநபர் பிரச்சினைகள் முதல் உடல் நலம் குறித்த பிரச்ச னைகள் வரை மூடப்பழக்கங்களே தீர்வுகளின் அடிப்படையாக மாறி விடுகின்றன. இதைப் பற்றி எல்லாம் பெரிதாகக் கண்டு கொள் ளாதவர்கள்  விடுத்லை நாளேடு போன்ற பகுத்தறிவையே முக்கிய நோக்கமாக கொண்டு வெளிவரும் நாளிதழை படித்துப் பார்க்க வேண்டும். நாடு முழுவதிலும் உள்ள மூடநம்பிக்கையில் மோசமான செயல்பாடுகள் குறித்து நன்கு தெரிந்து கொள்ள அது உதவும். ஜாலவித்தைகள் புரியும் வணிகர்கள் எந்த அளவிற்கு சொத்துக்களைக் குவித்து பிரம்மாண்டமான சாம்ராஜ்யங்களை உருவாக்கியுள்ளனர் என்பது குறித்தெல்லாம் அறிந்து கொள்ள முடியும்.

அரசியல் அமைப்பின் பிரிவு 51A (h), அறிவியல் உணர்வு, மனிதநேயம், தேடல் கொண்ட அறிவு மற்றும் சீர்திருத்தப் பாங்கு போன்றவற்றை குடிமக்களிடம் வளர்ப்பது அரசின் கடமை என்று கூறுகிறது. இத்தகு மாண்புகளின் அடிப்படையில் கல்வித் திட்டங்கள் உருவாக்கப்படவில்லை எனில் இந் நாட்டில் எந்த ஒரு குடிமகனும் தன் கட மையைச் செவ்வனே செய்ய இயலாது. ஒரு பல்கலைக்கழகம் என்பது மனிதநேயம், சகிப்புத் தன்மை, அறிவாராய்ச்சி, புதுமையான கருத்துக் களின் எழுச்சி, உண்மையைத் தேடும் இலட்சியம் போன்றவற்றிற்காக செயல் படுதல் வேண்டும். மனித குலத்தை இவற்றைவிட உயரிய இலக்கு களை நோக்கி அழைத்துச் செல்லும் பயணத்திற்கு அவை உதவ வேண்டும்.
நமது கல்விமுறை இவ்வகையில் நுட்ப மாக வடிவமைக்கப் படவில்லை எனில் அறிவியல் கண்ணோட்டத்திலும், பகுத்தறிவாற்ற லிலும் நாம் வெற்றி பெற இயலாது என் பதையே தபோல்கரின் படுகொலை நமக்கு உணர்த்துகிறது.
சமூக சீர்திருத்தங்களுக்கான பிரச்சாரங்களை நடத்துகிற அதே வேளையில், மூடப்பழக்க வழக்கங்கள் பரவுவதற்கு துணை நிற்கும் மக்களின் பின் தங்கிய வாழ்நிலை யினை மேம்படுத்து வதையும் உறுதி செய்ய வேண்டும். இருண்மை வாதம் என்பது, ஒரு சில நல்ல எண்ணம் கொண்டோர் மட்டுமே போராடக்கூடிய சிறிய பிரச்சினை அல்ல. நமது அரசியலமைப்பின் பகுத்தறிவார்ந்த அடித்தளத்தை அது நேரடியாக கேள்விக்குள் ளாக்கும் நிலையில், அதை எதிர்த்துப் போரா டுவது நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும்
நன்றி : விடுதலை -20.8.14

Dabholkar, dissent and democracy

Anti-superstition campaigners will not only pay tribute to Narendra Dabholkar, their acclamation will also be an indictment of the government’s utter failure to find his killers

At 7.20 a.m. on August 20, supporters of the courageous and gritty rationalist Narendra Dabholkar will gather near the Omkareshwar Temple in Pune, where he was gunned down while on a morning walk exactly a year ago. Through street plays and songs, anti-superstition campaigners will pay tribute to one of India’s foremost critics of charlatan godmen and black magic.
The tribute will also be an indictment of the government’s utter failure to find his killers. Dr. Dabholkar’s daylight murder was initially probed by the Congress-Nationalist Congress Party government in Maharashtra and then transferred to the Central Bureau of Investigation (CBI). So far it has yielded nothing.
Ironically, a month ago, Outlook magazine ran an investigation claiming that the Pune police had resorted to planchet and tantriks to trace the killers of the very man who had opposed such forces all his life. The police have denied this and have even threatened a defamation case.
However, there is widespread disillusionment with both the Centre and the State’s inability to push the probe. “It is very distressing. We are hurt and anguished. Are they trying to hide something and shield someone?” asks his son Hamid Dabholkar. “There were groups which had consistently been attacking and defaming him. They had filed many cases against him. The investigation should have focussed on that,” he emphasises.
Dabholkar’s legacy

Dr. Dabholkar was both fearless and relentless in his single-minded drive against blind faith. He had braved vilification and death threats, even physical attacks. His programmes were routinely disrupted.
Yet, he continued to challenge godmen, often on their own turf surrounded by mobs of followers. His targets included the influential Sathya Sai Baba and his claims of producing “miracle ash” out of thin air.
In the late 1990s, Dr. Dabholkar had taken on Ratnagiri’s Narendra Maharaj at his own ashram. The godman, who claimed miracle cures for ailments, arrived with 20,000 followers for a tense face-off with Dr. Dabholkar and his group of 15. Narendra Maharaj finally conceded defeat after a debate monitored by an anxious District Collector.
In 2000, Dr. Dabholkar led a massive campaign demanding the entry of women into the Shani Shingnapur temple trust in Ahmednagar. The issue finally ended up in court.
Hindu right-wing groups were among his fiercest critics, mainly the Hindu Janjagruti Samiti and Sanatan Sanstha. Both organisations have vehemently denied any hand in his murder. However, the Sanatan Sanstha proclaimed in an editorial just a day after the murder that it was “God’s wish.” One member of the organisation was briefly questioned by the police before being let off for lack of evidence.
Dr. Dabholkar’s greatest victory — a law against superstition and black magic — came posthumously, after a dogged 18-year struggle. One day after he was killed, the Maharashtra government cleared an ordinance, and in December 2013, a law against superstitious practices.
The Maharashtra Prevention and Eradication of Human Sacrifice and other Inhuman, Evil and Aghori Practices and Black Magic Act, 2013 is a diluted version of the ambitious draft Dr. Dabholkar had championed. It does not allow third parties to lodge complaints. Only the affected party has that right.
However, the law has already had a massive impact with nearly 80 cases being registered across the State in less than a year. These include cases against human sacrifice, the sexual exploitation of women by local godmen and the fleecing of the gullible by promises of instant wealth. However, the cases have mostly come to the Maharashtra Andhashraddha Nirmoolan Samiti (MANS) set up by Dr. Dabholkar and then been registered with the police.
“In the last year, we have received nearly one such complaint daily,” says MANS working president Avinash Patil. The survival of the organisation, founded nearly three decades ago, has been critical to continuing his campaign.
The deceptively gentle activist had built a robust movement across all the districts in the State, drawing on students and volunteers to propel the battle against superstition. Even today, MANS has nearly 250 branches and 5,000 volunteers. “Sustaining the organisation was a challenge. With his death we lost our security cover. But we have survived and passed the test,” says Mr. Patil.
The perils of activism

Dr. Dabholkar was well aware of the risks he faced by questioning obscurantism in a country steeped in superstition. “In this movement, even expressing a thought is sometimes a fight,” he would say. Indian rationalists have long walked a vulnerable path, even though under our “Fundamental Duties”, citizens are obliged to “develop a scientific temper, humanism and the spirit of inquiry and reform.”
Yet it’s not only rationalists who have the odds stacked against them. Whistle-blowers who have exposed corruption, now increasingly through the Right to Information (RTI) Act, have been targeted, sometimes paying with their lives.
Close to Pune city itself, RTI activist Satish Shetty was murdered in 2010. Last week the CBI filed a closure report in the case saying it had not found evidence against any of those accused of his murder. The probe into his father’s killing, Hamid Dabholkar feels, fits into this larger pattern.
“This is an issue which goes beyond my father. If voices which stand for social causes are silenced and no action is taken against the perpetrators, it is an attack on democracy,” he says. And on simple rational thinking itself.
priyanka.k@thehindu.co.in 

Nantri : THE HINDU

Tuesday, 12 August 2014

அணமையில் படித்த புத்தகம் : தூங்காமல் தூங்கி -டாக்டர் S.மாணிக்கவாசகம்



அணமையில் படித்த புத்தகம் : தூங்காமல் தூங்கி
                                             (ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை)
புத்தக் ஆசிரியர்           : டாக்டர் S.மாணிக்கவாசகம்
பதிப்பகம்                       : சந்தியா பதிப்பகம், சென்னை-600 083
முதற்பதிப்பு                 :  2008
மொத்த பக்கங்கள்    : 96 , விலை ரூ 50
நூலக எண்                  : 172987

                                35 ஆண்டுகள் மயக்க இயல் மருத்துவராகப் பணியாற்றிய மருத்துவரின் வாழ்க்கை நிகழ்வுகள் அவராலேயே சொல்லப்பட்டிருக்கின்றன. சொந்தக் கதை என்றாலும் இலக்கியமும் , தத்துவமும் , வாழ்வியலும் கலந்த இலக்கியக் கதையாகச்சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கை.

                            நானும் 2,3 அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கின்றேன்.. மயக்க இயல் மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை மருத்துவரோடு நிற்பார். ஆனால் அந்த மயக்க இயல் மருத்துவர் எவ்வளவு முக்கியமானவர் என்பது இந்தப் புத்தகத்தைப் படித்தபின்பு மிகத் தெளிவாக விளங்குகின்றது. மருத்துவப்பட்டப்படிப்பில், மதுரையில் படித்த புத்தகங்கள் பற்றிய அவரின் விவரிப்பு வியப்பைத்தருகின்றது. அந்த ஆழ்ந்த புத்தகப்படிப்புத்தான் , பணி ஓய்வுக்குப் பிறகு அமெரிக்காவில் அமர்ந்து இப்படி ஒரு தன் வரலாற்று நூலை எழுத அடித்தளமாக இருந்திருக்கும் போலும்.

                             தூக்கம் வரும் என்னும் பகுதியில் ஒரு மாமி சொல்லும் வார்த்தைகளோடு ஆரம்பித்து, தான் பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு மருத்துவமனையில் , மயக்க இயல் மருத்துவராக சேர்ந்த நிகழ்வைச்சொல்கின்றார், நடுவய்துப்பெண்ணுக்கு ஏற்பட்ட மரணம், மருந்தைக் குடித்த பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மாணவனின் மரணம் போன்ற நிகழ்வுகள் ஆரம்ப கட்டங்களில் எவ்வளவு வேதனையைக் கொடுத்தது, இந்த மருத்துவ தொழிலையே விட்டுவிடலாமா என்று யொசிக்கும் அளவுக்கு தன்னைப் பாதித்த நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளார். இனி பிழைக்க வாய்ப்பே இல்லை என்று எண்ணப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி பிழைத்ததன் மூலம் கிடைத்த மன நிறைவு, மனதையே மாற்றிய நிகழ்வு எனக் குறிப்பிடுகின்றார்.

                                 குடும்பவாழ்க்கையை ஏற்றுக்கொண்டு, மேல்படிப்பையும் முடித்துவிட்டு தான் தொடர்ந்த  மய்க்க இயல் மருத்துவ அனுபவங்களைத்தொடர்ந்து சொல்கின்றார். "Sleep apnoea Syndrome"   உள்ள ஒரு நோயாளியைக் காப்பாற்றிய நிகழ்வையும் , நோயாளியின் தந்தையைப் பற்றியும் விவரித்துள்ள பாங்கு அருமை.

                                குத்தப்பட்ட பெண்ணும், குத்தியவனும் மருத்துவமனையில் சேர்ந்ததையும், அந்த இளம் பெண் இறந்ததையும் அந்த ஆண் பிழைத்ததையும் குறிப்பிட்டு அந்த இரண்டு குடும்பங்களில் நிகழ்ந்த மனமாற்றங்கள், பழிவாங்கும் உணர்வுகள் போன்றவற்றை ஒரு சிறுகதைபோல விவரித்துள்ளார்.

                                                                         தன்னுடைய ஆசிரியரின் மனைவிக்கு மருத்துவம் பார்த்ததை எழுதுகிறபோது , அந்த ஆசிரியரைப் பற்றி விவரிக்கும்போது , எப்படிப்பட்ட ஆசிரியர் எல்லாம் இருந்திருக்கின்றார்கள் என்று உணர்கின்றோம். கணக்கு ஆசிரியர், ஆங்கிலப்பாடங்களில், தமிழ்ப்பாடங்களில் இருக்கும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார். தனக்கு தமிழ் கவிதைகளில் ஆர்வம் வந்ததற்கு அந்த ஆசிரியர்தான் காரணம் என்பதனை " அவனுக்குத் தமிழ்க் கவிதைகளை ரசிக நாக்கில் சீனித் தண்ணி தொட்டு வைத்தவரே அவர்தான். " பக்கம் 57 , இறுதித்தேர்வின்போது, கூடப்படிக்கும் பையனின் தகப்பனார் இறந்துபோக, அவனை அழைத்துச்சென்று தேர்வு எழுதவைத்து, மீண்டும் வீட்டிற்கு அழைத்துவந்ததை, அவர் இன்று பி.ஹெச்.டி பட்டம் பெற்று உயர் நிலையில் இருப்பதையும் அவர் அமெரிக்காவில் இருந்து வரும்போதெல்லாம் அந்த ஆசிரியரைப் பார்ப்பதையும் எழுதி, கடைசியில் அவர் மனைவி இறந்தபோனதையும் ,அது எந்தப் பிழையால் நிகழ்ந்தது என்பதை அறிய முடியாததை அவருக்கே உரித்தான பாணியில் மருத்துவர் மாணிக்கவாசகம் குறிப்பிடுகின்றார்.

                            ஒரு வயதான பாட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதையும், அவரைக் கவனிக்க விருப்பமில்லாத பணக்கார மகன்கள் பற்றியும், பாட்டியைக் கவனித்துக்கொண்ட வேலைக்காரப் பெண்மணி பற்றியும் , கடைசியில் அந்தப்பாட்டி இறந்து போனதையும் , அந்தப்பாட்டிக்காக வேலைக்காரப்பெண் மட்டுமே அழுததையும் குறிப்பிட்டு கடைசியில் ,
'இது ஒரு மனிதக் காட்சி சாலை
பால் குடித்த மிருகங்கள் அவ்வப்போது
வந்து போகும்
" என்று முதியோர் இல்லம் பற்றி எழுதப்பட்ட வரிகள் ஞாபத்திற்கு வந்தது என்று முடிக்கின்றார். கடைசி பகுதியில் தன்னுடைய தந்தையின் மரணம் பற்றியும், தன்னுடைய தாயின் மரணம் பற்றியும் விவரிக்கின்றார் இயல்பான நடையில்.

                               முடிவாக 40 ஆண்டுகளுக்கு முன்னால் மருத்துவ மாணவர்களாக இருந்தவர்கள், ஒன்று கூடிய நினைவுகளின் பகிர்வு மிக நன்றாக உள்ளது. காண்டேகர் தன்னுடைய இருமனம் என்னும் நாவலில் குறிப்பிட்ட சுந்தரம் போல கல்லூரிக் காலத்தில் பேசியதிற்கு முற்றிலும் மாறாக வாழும் தன்னுடன் படித்தவர்களைக் குறிப்பிடுகின்றார். முடிவில் தன்னுடைய மனைவியும், குழந்தைகளும் எவ்வளவு தூரம் தங்கள் நேரங்களைத் துறந்தார்கள், ஒத்துழைத்தார்கள் என்பதனைச்சுட்டுகின்றார்.

                                        மருத்துவப்பணியில் நிறைவாக, அடுத்தவர்களின் வாழ்க்கைக்காக உழைத்த உழைப்பை மிக நேர்மையாகவும் , இலக்கியமாகவும் பதிவு செய்திருக்கின்றார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் எஸ். மாணிக்கவாசகம் அவர்கள், 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மருத்துவம் பற்றியும் , இன்று கணினி வந்ததால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் விவரித்திருக்கின்றார். மருத்துவம் என்பது மனம் சார்ந்தது, அதுவும் தொண்டற மனப்பான்மையோடு அணுகினால் எவ்வளவு புகழும், மன நிறைவும் கிடைக்கும் என்பதற்கு இவரின் வாழ்வின் நிகழ்வுகள் எடுத்துக்காட்டு. பல தமிழர்கள் ,இப்படித் தங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைப் பதிய வேண்டும். பல்பேருக்கு அது முன்னுதாரணமாக அமையும். நூலைப் பற்றிய சி.கல்யாணியின் 'அயல் முகங்கள் மீது விழும் மனிதாபிமான நிழல் ' என்னும் அணிந்துரையும் நன்றாக அமைந்துள்ளது.  மிக நல்ல ஒரு புத்தகத்தை வாசித்த மன நிறைவு எனக்கு இன்று
இணையத்தில் பார்த்தபொழுது இரண்டாம் பதிப்பும் கண்டுள்ளது இந்தப்புத்தகம். இன்னும் பல பதிப்புகள் வரக்கூடிய புத்தகம்..

                              

Monday, 11 August 2014

அண்மையில் படித்த புத்தகம் : மண்ணும் பெண்ணும்-பாலு மணிவண்ணன்

அண்மையில் படித்த புத்தகம் : மண்ணும் பெண்ணும்
நூலின் ஆசிரியர்                          : பாலு மணிவண்ணன்
பதிப்பகம்                                         : பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14
முதற்பதிப்பு                                   : டிசம்பர் 2008.
மொத்த பக்கங்கள்                      : 163
மதுரை மாவட்ட மைய நூலகம் எண் : 181541

                            பெண்கள் நிலைமை பற்றிப் பேசும் புத்தகம். பொத்தாம் பொதுவாக இல்லாமல், மிக நுட்பமாக நமது நாட்டில் பெண்கள் நிலைமை குறித்து நிறைய கேள்விகளை எழுப்புகின்ற புத்தகம். 'பெண்ணே நீ ' என்ற இதழில் திரு. பாலு மணிவண்ணன் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்தப் புத்தகம். மொத்தம் 34 கட்டுரைகள், எல்லாக்கட்டுரைகளின் மையப்புள்ளியாக ஏன் இந்த நிலைமை பெண்களுக்கு என்னும் குரல் இருக்கின்றது.
                              பெண் நிலமாக இருக்கிறாள் என்னும் மனுநீதி எப்படி பெண்களுக்கு அநீதியைக் கருத்துக்களால் விளைத்திருக்கிறது என்பதனை முதல் 3 கட்டுரைகளில் குறிப்பிடுகின்றார். "பெண் என்ன கணவனின் உடமையா? 'ஷாப்பிங் கேர்ளா'? பாலியல் பாவையா? உரிமையற்றவளா ? " என்னும் தலைப்புகளில் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணிற்கு ஒரு நீதி என இருப்பதை புளளி விவரங்களோடு சுட்டிக் காட்டுகின்றார்.பெண்களுக்கு 33 சத வீத இட ஒதுக்கீடு பாராளுமன்றத்தில் என்பது இன்னும் கானல் நீராகவே இருப்பதை 8 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியிருக்கின்றார். இன்னும் கானல் நீராகத்தான் இருக்கின்றது.

                        "படைப்பின் சாரம் ஆண்/ ஆணின் சாரம் பெண் / "  என்னும் கவிஞர் அப்துல் ரகுமானின் கவிதை ஆண்களின் கட்டுக்கதைகளுக்கு எப்படித்துணை போகின்றது என்பதனையும், தாய்வழிச்சமூகம் எப்படி ஆண்களின் சூழ்ச்சிகளால் தந்தை வழிச்சமூகமாக மாறியது, அதற்கு மதங்கள் எப்படித் துணை புரிந்தன என்று விவரிக்கின்றார்.
                        திருமணத்திற்காகத் தயாரிக்கப்படும் பொம்மையாகத்தான் பெண்ணின் வளர்ப்பு இருக்கிறது என்பதனையும், குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தில் கூட எப்படி ஆண்கள் தப்பித்துக்கொள்கின்றார்கள் என்பதனை விவரிக்கின்றார். பூப்புனித  நீராட்டு விழா என்னும் சடங்கு ஒரு சிறு பெண்ணை எப்படியெல்லாம் உளரீதியாகக் காயப்படுத்துகிறது, அவமானப்படுத்துகிறது என்பதனைச்சுட்டுகின்றார்.திரைப்படங்கள் எப்படியெல்லாம் பெண்களை இழிவுபடுத்திக் காட்டுகின்றன, ஆணுக்கு ஒரு நீதி , பெண்ணுக்கு ஒரு நீதி எப்படி என்பதனை இரண்டு திரைப்படங்களை எடுத்துக்கொண்டு ஒப்பிட்டு உண்மையைக் கூறுகின்றார்.

                       பெரும்பாலான ஏழைகள்(70 %)  பெண்கள் என்பதையும், அமைப்பு சாரா தொழிலாளிகளில் 85 % பெண்கள் என்பதையும் சுட்டி ஏன் இந்த நிலைமை என்னும் காரணங்களைப் பட்டியலிடுகின்றார். பெண்கள் முன்னேற்றத்திற்கு அமெர்த்தியாசென் காட்டும் 5 வழிகளைக் குறிப்பிடுகின்றார். குடும்பங்கள் பல பெண்களுக்கு வன்முறை நிகழ்த்தப்படும் இடமாக அமைவதையும், புராணங்களில், கதைகளில் பெண்கள் குடும்பம் என்ற பெயரால் கொடுமைகளுக்கு உள்ளானதைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.

                      இப்படிப்பல்வேறு கோணங்களில் பெண்களின் உரிமை பறிக்கப்படுவதைக் கூறும் இந்தப்புத்தகத்தின் ஆசிரியர், பெண் என்ன பாதை தெரியாதவளா என்னும் கடைசி கட்டுரையில் அவருக்கும் அவரது நண்பருக்கும் இடையில் நடக்கும் பெண்ணியம் பற்றிய உரையாடலைக் குறிப்பிடுகின்றார். பெண்ணியத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கும் நண்பரிடம்
1. ஆண் , பெண்களின் மரபு சார்ந்த சிந்தனைகளில் புதிய பார்வையைப் புகுத்த வேண்டும்.
2. ஆண், பெண் உறவுகளில் சமத்துவப்போக்கை வளர்க்க வேண்டும்.
3. குடும்ப அமைப்பை முற்றிலும் ஜன நாயகப்படுத்த வேண்டும்.
4. பெண்ணுக்கு பொருளாதார சுதந்திரமும் அரசியல் அதிகாரமும் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.

                         "சமூகத்தளத்திலும், அரசியல் தளத்திலும் (ஆணும் பெண்ணும் சமம் என்பதனை) அதனை நடைமுறைப்படுத்தி முன்னுதாரணமாகத் திகழ்நதவர் தந்தை பெரியார். 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில், ' கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள் அனைவரும் வருக ' என்று விளம்பரப்பலகை எழுதி வைக்கச்சொன்னார். அது அன்றைய காலகட்டத்தில் ,சமூக அங்கீகாரத்தை சவுக்கால் அடித்து வரவழைத்து, அதனை பெண்களுக்குப் பெற்றுத்தந்த முதல் அடி , மேலும் பெரியார் நடத்திவைத்த சுயமரியாதைத் திருமணங்கள் , ஆண்களிடமிருந்து சம அந்தஸ்தைப் பிடுங்கி பெண்களுக்கு வழங்கிய அதிரடி "  பக்கம் (161) என்று குறிப்பிடும் இந்தப்புத்தகத்தின் ஆசிரியர் பாரதியின் பங்களிப்பு பற்றியும் , பொதுவுடமை இயக்கங்களின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடுகின்றார்.

                       பின் அட்டையில்  ": ஆண்மை என்ற தத்துவம் பெண்களால் அழிக்கப்பட்டாலல்லது 'பெண்மை'க்கு விடுதலையில்லையென்பது உறுதி எனும் தந்தை பெரியாரின் பெண்ணியச்சிந்தனைகளைத் தமது படைப்புகளில் வெளிப்படுத்தி வரும் பாலு மணிவண்ணன் ...: என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மைதான். பெரியாரியல் கண்ணாடியைப் பயன்படுத்தி இந்த நூலைப் படிக்கும்போது ,  எளிமையாக -பெண் ஏன் இன்னும் அடிமையாக இருக்க வேண்டும் ? என்னும் உணர்வை எழுப்பி, பெண்களே ஒன்று சேர்ந்து போராடுங்கள் என்னும் போராட்டக்குரலை ஒலிக்கும் புத்தகமாகவே எனக்கு இந்தப்புத்தகம் தோன்றுகிறது

                        

Sunday, 10 August 2014

கையில் ஒரு கவிதைப்புத்தகம்......

கையில் எப்போதும்
ஒரு கவிதைப்புத்தகம்
இருப்பது வசதிதான் !

பேருந்துக்காக
காத்திருக்கும் வேளைகளில்
சில மனிதர்களோடு
பேச்சினைத் தவிர்க்க
நினைக்கும் நேரங்களில்
கோபத்தால் மனம்
கொந்தளிக்கும் சூழல்களில்
கையில் கவிதைப் புத்தகம்
இருப்பது வசதிதான் !

அவர் எழுதியது
இவர் எழுதியது
தெரிந்தவர் எழுதியது
தெரியாதவர் எழுதியது
என எவரோ, எங்கேயோ
எழுதிய ஒரு
கவிதைப் புத்தகம்
கையில் இருப்பது
வசதிதான் எப்போதும் !

மழைக்குப் பிடிக்கும்
குடைபோல
மனதிற்குப் பிடிக்கும்
இதமான வார்த்தைகள்
சுருக்கென்று தைக்கும்
உண்மைகள்
நறுக்கென்று தைக்கும்
உவமைகள்
வாய்விட்டுச்சிரிக்க
வைக்கும் வசவுகளால்
நிறைந்து இருக்கும்
கவிதைப் புத்தகங்கள்
மட்டுமல்ல

உண்மையும் இல்லாமல்
உவமையும் இல்லாமல்
அவருக்கு நன்றி சொல்லி
இவருக்கு நன்றி சொல்லி
எழவு -இந்தப் புத்தகத்தில்
என்ன இருக்கிறது?
இதையெல்லாம் ஒரு
கவிதைப் புத்தகமாக
வெளியிட்டு விளம்பரம்
செய்யும் வேளையில்
நமது கையில் இருக்கும்
புத்தகம் பரவாயில்லை
என ஆறுதல்படுவதற்காகவாவது
கையில் ஒரு கவிதைப்புத்தகம்
இருப்பது வசதிதான் !!!!!!!!.

  • எழுதியவர் : வா. நேரு
  • நாள் : 10-Aug-14, 12:15 pm
  • நன்றி : எழுத்து.காம்