Thursday, 24 January 2013

உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே


மனு காலம் தொடங்கி
மக்களாட்சி காலம்வரை
அடிமாட்டுக்கென அழைத்துச்செல்லும்
மாடுகளைப் பார்க்கும்
மனப்பான்மையில் உழவர்களை
அதிகாரவர்க்கம் பார்க்கிற‌தே !

ஏர் பின்னது உலகம்
வள்ளுவரின் வார்த்தையை
மதிப்பிழக்கச்செய்தவர்களின்
அரசியலை அறியாது தடுக்க இயலுமோ
உழவர்களின் த்ற்கொலையை ?

வர்ணப் படிக்கட்டுகளில்
கீழ்த்தட்டில் அமர்த்தப்பட்டார்க்கு
உரியதாய் உழவு ஆனதால்தானே
அதிகாரவர்க்க‌த்தின் அலட்சியப் பார்வை?

கலப்பையை பிடித்தவாறு
ஏதேனும் கடவுள்கள் படம் இருக்கிறதா ?
நினைத்துப்பாருங்கள் !
நிற்கதியாய் உழவும் உழவனும் நிற்கும்
காரணம் புரியும் எளிதாய்

அதிகார மையங்களை உழவர்களின் மகன்கள்
கைப்பற்றி மாற்றும்போது மாறலாம்
அதுவரை உழவும் உழவனும்
மரணத்தின் விளிம்பிலே 

வா. நேரு  .

எழுத்து இணைய தளத்தில் நடைபெற்ற போட்டிக்காக அனுப்பப்பட்ட கவிதை- பரிசு பெறவில்லை. நண்பர்களின் பார்வைக்காக எனது வலைத்தளத்தில்

 

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி .




பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .

விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

மானமிகு பதிப்பகம் 3/20 A.ஆதி பராசக்தி நகர் ,திருப்பாலை ,மதுரை .14.
விலை ரூபாய் 60.

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .B.S.N.L நிறுவனத்தில் பணி
புரிந்துக் கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர் .விடுதலை, உண்மை பத்திரிக்கைகளில் படைத்தது வரும் படைப்பாளி .முனைவர்
வெ .இறையன்பு அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். .முனைவர் பட்டநெறியாளர் பேராசிரியர் கலைமாமணி
கு .ஞானசம்பந்தன் .தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற முனைவர் பட்ட தகுதித் தேர்வு அன்று சென்று இருந்தேன் .பலரும் பாரட்டினார்கள் நூல் ஆசிரியர் வா.நேருவை .

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு என்னுரையில் மிக வித்தியாசமாக எழுதி உள்ளார் .
" நான் பிறவிக் கவிஞன் அல்ல .சரஸ்வதி நாவில் வந்து குடியேறினால்தான்
கவிதை வரும் என்று நம்புபவனும் அல்ல .என்னைப் பாதித்த ,எனக்கு
சரிஎனப்பட்ட  கருத்துக்களைக் கூற இக்கவிதை வடிவத்தை எடுத்திருக்கிறேன்..கொடுத்திருக்கிறேன் ."

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூலின் தலைப்பே வித்தியாசமாக
உள்ளது .நூலின் தலைப்பில் உள்ள கவிதையில் ஊரில் திருவிழா  என்றால்
வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரம் வீடுகளில் வசூல் செய்து
கரகாட்டம், பட்டிமன்றம் ,டாஸ்மாக் என்று தட  புடலாக செலவு செய்வார்கள்
.ஆனால் ஊரில் உள்ள   பள்ளியை கண்டு கொள்ள மாட்டார்கள் .அதனை உணர்ந்து எழுதியுள்ள கவிதை நன்று .

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !

ஊரில் உள்ள
ஒரே ஒரு பள்ளிக்கூடம்
கரும்பலகையும்
இல்லாமல்
ஒழுகும் கூரையோடு
கேட்பாரற்றுக் கிடக்கிறது
ரொம்ப நாளாய் !

இறுதி மூச்சு உள்ளவரை மனித சமுதாயத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் தந்தை பெரியார் பற்றிய கவிதை மிக நன்று .

மனிதருக்கெல்லாம்  மாமருந்தாய் !

ஈரோட்டுப் பூகம்பமே !
நீ மறைந்து ஆண்டுகள் பல ஆனாலும்
நீ ஏற்படுத்திய அதிர்வலைகள்
கடல் அலைகளாய்
ஓயாமல் உலகெங்கும் !

நூல் ஆசிரியர்  வா .நேரு  பகுத்தறிவாளர் கழகத்தில் மாநிலத் தலைவராக  உள்ள பகுத்தறிவாளர் என்பதால் ,சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்ட கருத்துக்களை துணிவுடன் புதுக் கவிதையாக வடித்துள்ளார் .எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி ? எங்கு? எதனால் ?என்று தந்தை பெரியார் வழியில்  சிந்தித்த காரணத்தால் நன்கு படைத்துள்ளார் .

அறிஞர் அண்ணா  பற்றிய கவிதை நன்று .

உனது நூல்களே முறியடிக்கும் !

தந்தை பெரியாரின் தலைமகனே பிரிந்து விட்டார் !
தந்தையும் மகனும் அய்யாவின் கொள்கைக்கு கொள்ளி  வைப்பார் !
என்று எதிர்பார்த்த மூதறிஞர்களின் எதிர்பார்ப்பில்
மண்ணை அள்ளிப் போட்ட மகத்தான சரித்திரமே !

அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானதும் எனது ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை என்று சொல்லி பெரியாரின் கொள்கைகளை சட்ட வடிவமாக்கியவர் .சுய மரியாதை திருமணத்திற்கு சட்ட வடிவம் தந்தவர் அறிஞர் அண்ணா.அறிஞர் அண்ணாபற்றிய மதிப்பீடு மிக நன்று .

மூட நம்பிக்கைகளை சாடி பல கவிதைகள் உள்ளது .பதச் சோறாக சில மட்டும்
உங்கள் பார்வைக்கு !

ஒரு பக்கம் சந்திரனைச் சென்றடைந்த
சந்திரயான் விண்கலம் !
மறு பக்கம் இருபத்தி எழு பெண்டாட்டி வீடுகள்
அதில் ஒரு வீடான தனுசுவிலிருந்து
இன்னொரு வீடான மகரத்திற்கு
குரு  பகவான்
போகின்றார் .
குரு  பெயர்வது கிடக்கட்டும்
இவர்களின் புத்தி பெயர்வு
எப்போது ?

மாணவர் தேர்வில் ராம ஜெயம் எழுதியதைக் கண்டு எழுதிய கவிதை ஒன்று !

நம் மூளையில் திணிக்கப்பட்டுள்ளது
திணிக்கப்பட்ட குப்பைகளை தூக்கி
வீசாமல்
முன்னேற்றம் என்பது
முயற்கொம்பே !

காதலைப் பாடாமல் கவிதை நிறைவு பெறாது .நூல் ஆசிரியர்  வா .நேருவும்
காதலைப் பாடி உள்ளார் .

ஆதலினால் காதலிப்பீர் !

காதல் வலு சேர்க்கும் !
காதல் சமூகத்தின்
சாதி நோய் போக்கும் !
காதல் சமூகத்தின்
மதப் பொய்மை நீக்கும் !
ஆதலினால் காதலிப்பீர் !

தீபாவளி  மூட நம்பிக்கை கதையைச் சாடி உள்ளார் .கவிதைகள் வசன நடையில் இருந்தாலும் சிந்திக்க வைத்து வெற்றி பெறுகின்றது.பாராட்டுக்கள்.

பிள்ளையார்  (சுழி ) அழி !

பிள்ளையார்  சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு  !
என நம்மை ஏமாற்றி
என்றும் ஏதுமறியா
சுழியன்களாய் நம்மை
வைத்திருக்க சூது செய்யும்
பிள்ளையார் ஊர்வலச்
சதி அறிவோம் !

என் கை பட்டால் நோய்கள் குணமாகும் என்று சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கும் சாமியார்களின் மோசடிகளை தோலுரிக்கும் விதமாக ஒரு கவிதை இதோ !

பக்தி வியாபாரிகள் !

அறிவியல் மருந்துகளை
மறுத்து வெறும் பிராத்தனையால்
ஓடி விடும் ! நோய்கள் !
என மன நோயாளிகளாய்மனிதர்களை மாற்றிவிடும்
அயோக்கியத்தனம் !

மூட நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் சமுதாயம் திருந்தும் கவிதைகள் படைத்த நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு அவர்களுக்கு பாராட்டுக்கள்..தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .இந்நூலை தரமாக அச்சிட்டு  மானமிகு பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வெளியிட்ட பகுத்தறிவாளர் நண்பர்  பா .சடகோபன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

-----------------
எனது கவிதை நூலை  விமர்சனம் செய்து இணையதளத்தின் வழியாக பலருக்கும்  சென்று அடையக்கூடிய  பணியை எனது இனிய நண்பர், ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொறுப்பில் என்னோடு சக பொறுப்பாளராய் பணியாற்றிய, இன்றும் எங்கும் நான் ஒரு பெரியார் கொள்கை வாழ்வியல் வழி நடப்பவன், கடவுள் மறுப்பாளன் என்பதனை அழுத்தம் திருத்தமாக சொல்லும்  , தொடர் உழைப்பின் வெற்றிக் குறியீடாய் , மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக  விளங்கும் ,  கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு எனது நன்றிகள்.   - வா. நேரு - 24-01-2012

Saturday, 12 January 2013

அணமையில் படித்த புத்தகம் : பள்ளிக்கூடத்தேர்தல் -பேரா. நா.மணி

அணமையில் படித்த புத்தகம் : பள்ளிக்கூடத்தேர்தல் -பேரா. நா.மணி

நூலின் தலைப்பு : பள்ளிக்கூடத் தேர்தல்- நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள்
ஆசிரியர்                : பேரா. நா.மணி
பதிப்பகம்               :  பாரதி புத்தகாலயம்,சென்னை-18.
முதல் பதிப்பு       : செப்டம்பர்-2010
விலை                   : ரூ 20/ - பக்கங்கள் -48

                                                      'நல்லாசிரியர் விருது ' என ஆண்டுதோறும் அரசு , ஆசிரியர்களுக்கு விருது வழங்குகிறது. ஆனால் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் உண்மையிலேயே நல்ல ஆசிரியர்கள்தானா? சிலர் எப்படி இந்த விருதினைப் பெறுகின்றார்கள் என்னும் எதார்த்தத்தினை விளக்கி, மாணவர்களே நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுத்தால் எப்படி இருக்கும் என்னும் சிந்தனையைச் செயல்படுத்திய அனுபவமே இந்தப் புத்தகம் . கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் , தாங்கள் படித்த 12-ஆம்  வகுப்பு வரையிலான படிப்பில் நல்ல ஆசிரியர்கள் யார் என்ப் பட்டியலிடுகிறார்கள், ஏன் அவர்கள் தங்களுக்கு நல்ல ஆசிரியர் என்பதனை விளக்கி எழுதிக் கொடுக்கின்றார்கள். எப்படி எல்லாம் அந்த ஆசிரியர்கள் , தாங்க்ள் முன்னேற உதவி புரிந்தார்கள் என்பதனை மாணவ, மாணவிகளே விவரிக்கும் விதத்தை ஒரு அத்தியாயமாக இந்த நூலின் ஆசிரியர் பேரா. ந.மணி குறிப்பிட்டிருக்கின்றார்.

                                                     மாணவர்களால் தேர்ந்த்டுக்கப்பட்ட நல்லாசிரியர்களை தான் வேலை பார்க்கும் கல்லூரிக்கு வரவழைத்து, அவர்களிடம் படித்த மாணவ, மாணவிகளால் சிறப்பு செய்ய்ச்சொல்லி, நினைவுப்பரிசினை அளிக்கின்றார்கள், அந்த ஆசிரியர்களின் நெகிழ்ச்சி, அந்த மாணவ மாணவிகளின் வார்த்தைகளை அந்த ஆசிரியர்கள் எவ்வளவு பெருமையாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதனை விவரிக்கின்றார். பின்னர் அவர்களைப் பேட்டி எடுக்கின்றார். கல்வி சம்பந்தப்பட்ட ,புகழ்பெற்ற புத்தகங்களைப் படித்தவர்கள் அல்ல அவர்கள், ஆனால் டோட்டாசான், எனக்குரிய இடம் எங்கே ,பகல் கனவு, ஏன் டீச்சர் என்னைப் பெயிலாக்கினீங்கே போன்ற கல்வி குறித்த நூல்களைப் படித்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கின்றார்கள், பேரா. ந,மணியும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச்சேர்ந்த பொறுப்பாளர்களும் .நிறையத்  தலைமை ஆசிரியர்கள் கலந்துகொள்ளும்  ஒரு கருத்தரங்கத்தில் கல்வி சம்பந்தப்பட்ட நூல்களின் கண்காட்சியை வைக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான நூல்கள் விற்கும் என்று நிறையச்செல்வு செய்து வைத்த கண்காட்சியில் வெறும் 54 ரூயாக்கு புத்தகங்கள் விற்கின்றது. நொந்து போகிறார்கள்  பேரா. ந.மணியும் ,மற்ற பொறுப்பாளர்களும்.

                                                 இன்றைய ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள் , நன்றாகப் பாடம் நடத்துபவர் மட்டுமே நல்லாசிரியரா? உலக விசயங்களை, நாட்டு நடப்புகளை, நல்ல புத்தகங்களை மாணவர்கள் மத்தியில் சொல்ல் வேண்டாமா? போன்ற கேள்விகளை எழுப்புகின்றார். சமூக அக்கறையில்லாமல் ஆசிரியர்கள் இருக்கும் காரணம் என்ன? அதை எப்படி மாற்றலாம் போன்ற கருத்துக்களை பேரா. ந. மணி குறிப்பிட்டிருக்கின்றார்.

                                                சிறிய புத்தகம் , 48 பக்கம் உள்ள புத்தகம்தான் இது, ஆனால் மிக ஆழமான புத்தகம். மாணவர்களை, ஆசிரியர்களை உளவியல்ரீதியாக ஆராய்ந்துள்ள புத்தகம்.மிகப் பொறுப்போடு சமூக அக்கறையோடு எழுதப்பட்டுள்ள புத்தகம்.  கல்வி சம்பந்தப்பட்ட சில நூல்களை புத்தகத்தில் குறிப்பிடுகின்றார் ஆசிரியர். அவற்றில் டோட்டாசான், எனக்குரிய இடம் எங்கே போன்ற புத்தகங்களெல்லாம் நான் மிகவும் நேசிக்கும் புத்தகங்கள். அதிலும் குறிப்பாக டோட்டாசான்.  எனது நண்பன் இரா.சீனிவாசனும், நானும் மதுரை ஸ்பார்க சென்டர் பார் ஐ.ஏ.எஸ். ஸ்டடிஸ் சார்பாக பல கல்லூரிகள், பள்ளிகளில் மாணவ , மாணவிகளுக்கு வழகாட்டுதல் வகுப்புகள் நடத்தியிருக்கின்றோம். ஒருமுறை சீனி சொன்னான்,நேரு, நீ எந்தத் தலைப்பில் பேசினாலும், டோட்டாசான் புத்த்கத்தைத் தொடாமல்  ,அதைப்பத்திப் பேசாமல் நீ பேச நான் பார்க்கவில்லை என்றான். அந்த அளவிற்கு என்னை மிகவும் ஈர்த்த புத்தகம் .மாணவ, மாணவிகள் மத்தியில் ,ஆசிரியர்களிடத்தில் பேசுகிறேன் என்றால் கட்டாயம் டோட்டாசான் என் பேச்சில் இருக்கும். முத்ல் சில பக்கங்களில், ஒரு ரவுடியைபோல நான் மாணவர்களை அடக்கி வந்திருக்கிறேன் என்னும் பேரா.நா.மணியின் சுய விமர்சனம் படிக்கும் எந்த ஒரு ஆசிரியரையும் யோசிக்க வைக்கும்.20 ரூயாயில் மாற்றி யோசிக்க வைக்கும் புத்தகம், வாங்கிப் படித்துத்தான் பாருங்களேன்.

Wednesday, 2 January 2013

ஜாதியும் ஜாதகமும்

                         

படிக்காத அப்பாவும்
படித்த மகனும்
சேர்ந்தே
தூக்கிக்கொண்டு
அலைகிறார்கள்
ஜாதகத்தை
வெகு காலமாய் !

இருபத்து ஐந்து வயதில்
மகனுக்கு பெண்ணைப்
பார்க்க ஆரம்பித்த அப்பா
அவனுக்கு வயது
முப்பத்தைந்தைக் கடந்த பின்பும்
ஒவ்வொரு ஜோதிடனாய்
பார்த்து பார்த்து
கேட்டு கேட்டு எழுகின்றார்
மகனுக்கு இன்னும்
பெண் அமைந்தபாடில்லை!

வசதி இருக்க
படிப்பு இருக்க
நன்றாய் வாழும்
வாய்ப்பு இருக்க
பாழாய்ப்போன
ஜாதக நோட்டைத்
தூக்கிக்கொண்டு
அலைகின்றார்
பரிதாபத்திற்குரியவர்களாய் !

போகும் இளமை
வருமா எனும் சிந்தனையில்லை !
பொன்னான வயதை
இழக்கின்றோமே எனும் புரிதலில்லை !
அடுத்தவர் உழைப்பில்
அள்ளிப்போடும்
பணத்தால் வாழும்
ஜோதிடர் சொல்படியே
ஆடுகின்றார் !
அவன் சொல்லும் சொல்லுக்கெல்லாம்
பரத நாட்டியம் போல்
மூட நம்பிக்கை நாட்டியம்
ஆடுகின்றார்!

மூளைக்குள்
ஏற்றிக்கொண்ட
மூட நம்பிக்கை
விலங்கினை
நொறுக்கத் துணிவின்றி
நொந்தும் வெந்தும்
புலம்பியே அலைகின்றார்
கோவில் கோவிலாய்
பரிகாரம் -தோசமென

பெண் கருப்போ
சிவப்போ பரவாயில்லை !
ப்ண் படித்தவளோ
படிக்காதவளோ பரவாயில்லை !
நம்ம பையனுக்கு
வயதாகி விட்டது பாருங்கள் !
ஜாதகம் மட்டும்
பொருந்தினால் போதும்
ஜாம் ஜாம் என நடத்திடலாம்
கல்யாணத்தை எனப்
பிதற்றினார் என்னிடத்தில்

தூக்கி தீயில் போடு
உனது மகன் ஜாதகத்தை !
ஜாதியும் ஜாதகமும்
தேவையில்லை எனத் துணிந்துசொல் !
அடுத்தவருடம் பேரப்பிள்ளையை
கொஞ்சும் சுகம்
உனக்கு உண்டு என்றேன் !

எழுதியவர் :வா. நேரு
நாள் :2012-12-30 06:33:13
Nantri : eluthu.com
கவிதைக்கு வந்த சில எதிர்வினைகள் உங்கள் பார்வைக்கு
இருபத்து ஐந்து வயதில்

மகனுக்கு பெண்ணைப்

பார்க்க ஆரம்பித்த அப்பா

அவனுக்கு வயது

முப்பத்தைந்தைக் கடந்த பின்பும்

ஒவ்வொரு ஜோதிடனாய்

பார்த்து பார்த்து

கேட்டு கேட்டு எழுகின்றார்

மகனுக்கு இன்னும்

பெண் அமைந்தபாடில்லை!

----யதார்த்த வரிகள் கோள்களை மனிதன் உற்று நோக்கினால் அறிவியல்

வான சாத்திரம். கோள்கள் தன்னை

நோக்கும் என்று நம்பினால் அது

ஜோதிடம் வாழ்க்கைக்கு வழி காட்டி

அதுவே வரம் தரும் மரம் என்று

நம்பினால் அது மனிதனின் சோம்பேறித்

தனம். ASTROLOGY IS ONLY INDICATIVE .

கோள்கள் ஒளிவீசும் இயற்கையின்

வடிவங்கள் அதன் அடிப்படை தெரியாமல் கண்மூடித்த் தனமாக

பின்பற்றினால் அது மனிதனின் தவறு

கவிதைக்கு நன்று எனும் * வா. நேரு

----அன்புடன்,கவின் சாரலன் என்ற சங்கரன் அய்யா

எதுவும் ஓர் எல்லைக்குட்பட்டே...

எதுவும் விளிம்பின் பீச்சலாய் இருப்பின் தவறே...agan

நல்லதொரு சமுதாய சிந்தனை அய்யா !

ஜோதிடம் என்பது

விஞ்ஞானமா ?

மெய்ஞானமா ?

அஞ்ஞானமா ?

மூன்றிலும் இருக்கும் இந்த ஜோதிட கணிப்பு !

அளவுக்கு மேல் எதையும் / எவரையும் நம்பும் போது தன்னம்பிக்கை தளர்ந்துவிட்டது, சுயஅறிவு சுருங்கிவிட்டது என்பது வெளிச்சமாகிறது !

துஸ்பிரயோகம் என்பது எதாவதொன்றினை அல்லது யாரையாவதொருவரை பிழையான எண்ணங்களில் பயன்படுத்தலைக் குறிக்கிறது.....!

யாரவது ஒருவரால் அல்லது எதாவது ஒன்றினால் தம்மைத் தாமே பிழையாக பயன்படுத்திக் கொள்ள இடம் கொடுப்பது சுய துஷ்பிரயோகமாகிறது !

பலரின் வாழ்க்கை கேள்விக்குறிக்குப் பினால் நிற்கிறது இது போன்ற துஷ்பிரயோகங்களால் !       K.S.Kalai







Saturday, 29 December 2012

அண்மையில் படித்த புத்தகம் : திருப்புமுனைகள் - என்.சொக்கன்

அண்மையில் படித்த புத்தகம் : திருப்புமுனைகள் - என்.சொக்கன்
 
நூலின் தலைப்பு         :  திருப்புமுனைகள் .
ஆசிரியர்             :   என்.சொக்கன்.
பதிப்பகம்                :   மதி நிலையம் , சென்னை-86,
முதல் பதிப்பு         :   டிசம்பர் 2011 , 288 பக்கங்கள்
 விலை               :   ரூ 160
                                      வெற்றி அடைந்த 50 சாதனையாளர்களை எடுத்துக்கொண்டு , அவர்கள் வாழ்க்கையில் நடந்த திருப்பு முனை சம்பவங்களைக் கோடிட்டுக் காட்டுகிற புத்தகம் இந்தப் புத்தகம் .முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தொடங்கி , பாட்டுக்கோட்டையாக தமிழகத்தில் புகழ்பெற்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை வரை பட்டியலிட்டுக் காட்டுகிறது.

             முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர், கபில்தேவ் தன்னுடைய 13-வது வய்தில் கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்து ரசிப்பதற்காக வந்த இடத்தில், விளையாடும் அணியில் ஒருவர் குறைவதால் விளையாட்டை ஆரம்பிக்காமல் இருக்கிறார்கள். சிறுவன் கபில்தேவ் ஏன் விளையாட்டை ஆரம்பிக்க தாமதம் ஆகின்றது எனக்கேட்க, ஒருவர் குறைகிறார், தம்பி நீ விளையாட வருகிறாயா எனக் கபில்தேவிடம் கேட்க , சரி என கிரிக்கெட்  விளையாட்டு மைதானத்தில் இறங்கியதுதான் கபில்தேவ் வாழ்க்கையில் நடைபெற்ற திருப்புமுனை. கிரிக்கெட் விளையாட்டு  என்றால் என்னவென்றே தெரியாத குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய பரம்பரையில் யாரும் விளையாட விளையாட்டில் உலகப்புகழ் பெற்ற கபில்தேவ் வாழ்க்கையில் தானாகக் கிடைத்த வாய்ப்பு, அதனை எப்படி கபில்தேவ் வசப்படுத்திக் கொண்டார் என்பதனை பக்கம் 11முதல் 15 வரை நன்றாக சொல்கின்றார் இந்த நூலின் ஆசிரியர் திரு.என்.சொக்கன்.

                             எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்த சிறுவன் வில்லியம்ஸ், எதை எடுத்தாலும் 'போரடிக்கிறது ' என்று சொல்லி வாழ்க்கையை நொந்து கொண்டிருந்த சிறுவன் வில்லியம்ஸ் வாழ்க்கையில் , அவனது பள்ளியில் வந்து இறங்கிய கம்யூட்டர்கள் திருப்பு முனையாக மாறுகின்றது. புத்திசாலிப் பையனான வில்லியம்ஸ், எந்தப் பாடத்தையும் அதிவேகத்தில் கிரகித்துக்கொள்ளும் வில்லியம்ஸ் கம்ப்யூட்டரைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபின் போரடிக்கிறது என்ற வார்த்தையைக் கூறவில்லை. அலாவுதினின் அற்புத விளக்கைப் போல அற்புதங்கள் பல செய்யும் கருவியாக கண்னியை மாற்றுகின்றான் சிறுவன் வில்லியம்ஸ் , அவர்தான் பில் கேட்ஸ் என்று சொல்லி விளக்கம் கொடுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். " நம்முடைய இலக்கு எது, பாதை எது என்று தெரியும்வரை வாழ்க்கைப் பயணம் போரடிப்பது போல்தான் தோன்றும்.ஆனால் ,பில் கேட்ஸிக்கு கம்ப்யூட்டர் போல் நமது வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் அந்தத் திருப்புமுனை, எப்போது ,எப்படி எதிர்ப்படுமோ தெரியாது. அந்த நேரத்தில், அதைச்சரியாக அடையாளம் கண்டு பயன்படுத்திக்கொள்வது, நம்முடைய சமர்த்து என்று சொல்கின்றார் இந்த நூலின் ஆசிரியர் என். சொக்கன் பக்கம் 19-.

            கோபக்குதிரைகள் என்ற தலைப்பில் அலெக்ஸாண்டரின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனையை புத்தக ஆசிரியர் பக்கம் 35 முதல் 39 வரை விவரிக்கின்றார். யாராலும் அடக்க முடியாத முரட்டுக்குதிரையை அடக்க சிறுவன் அலெக்சாண்டர் அவனது தந்தையிடம் கேட்பது, அவர் அரைகுறை மனதோடு சரி எனச்சொல்வது, கோபக்குதிரையான பூசெபைலஸ் குதிரையிடம் சென்ற அலெக்ஸாண்டர் , தன் நிழலைப் பார்த்து குதிரை பயப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு அதன் நிழல் படியாமல் சூரியனுக்கு நேராக நிறுத்தி, பின் குதிரையில் சவாரி ஏறி குதிரையை அடக்கியது என்னும் நிகழ்வைத் தொகுத்து தந்துள்ளார்.  " நாம் சந்திக்கும் தினசரிப் பிரச்சனைகள் ஒவ்வொன்றும் பூசெபைலஸ் போன்ற கோபக்குதிரைகள்தான். அவற்றை அடக்கி ,ஜெயிக்க விரும்பினால் ,வெறும் வீரம் மட்டும் போதாது. பிரச்சனையின் வேர் எது என்று கண்டறிய வேண்டும், குதிரையின் நிழல்போல, அந்தப் பிரச்சனை வேர்களை வெட்டி எறிந்து விட்டால் , வெற்றி தானாக மடியில் விழும் " என்கின்றார் நூல் ஆசிரியர் பக்கம் 39. ஆம் உண்மைதான், வீரமும் விவேகமும் இணைந்தால் மட்டும்தானே வெற்றி .

                    வெற்றிக்கும் விடாமுயற்சிக்கும் உள்ள தொடர்பை சுட்டிக்காட்டப் பலரும் பயன்படுத்தும் வாழ்க்கை வரலாறு அறிவியல் அறிஞர் தாம்ஸ் ஆல்வா எடிசன் அவர்களின் வரலாறு. அவரது வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை அவரது மனித நேயச்செயல் என விவரிக்கின்றார் நூல் ஆசிரியர் பக்கங்கள் 40 முதல் 45 வரை 'வெளிச்சம் ' என்னும் தலைப்பில் . ரெயில் தண்டவாளத்தில் ஒரு சிறுவன் விளையாடிக்கொண்டிருக்கிறான். அந்தத் தண்டவாளத்தில் ஒரு ரெயில் வருகிறது, அந்தச்சிறுவனை யாரும் கவனிக்கவில்லை. " யாரோ ஒரு பையன் அடிபடப்போகிறான், நமக்கென்ன ? " என்று சும்மா இருந்து விடாமல் , பாய்ந்து சென்று அந்தப்பையனைக் காப்பாறுகின்றார் தாமஸ் ஆல்வா எடிசன். தனது காலில் அடிபட்டு, சிராய்ப்புகள் , சின்ன அடிகள் பட்டாலும் உயிரைப் பயணம் வைத்து அந்தச்சிறுவனைக் காப்பாற்றி விடுகின்றார். அந்தச்சிறுவனின் தந்தை , மோர்ஸ் தந்தி அடிப்பது எப்படி என்பதனை நிறையப் படிக்காது தாமஸிக்கு சொல்லித் தருகின்றார். தந்தி அடிப்பதைக் கற்றுக்கொண்ட தாமஸ் ஆல்வா எடிசன் அதில் வல்லுநராகி, அதில் புதிய தொழில் நுட்பங்களைக் கண்டுபிடிக்கின்றார், அந்த சிறு விபத்தில் அந்தச்சிறுவனைக் காப்பாற்றியதுதான் தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கையில் திருப்புமுனை என்பதனை சுவை படச்சொல்கின்றார் நூல் ஆசிரியர்.
 
                                  " குரு " என்ற தலைப்பில் பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனையை சுட்டிக்காட்டுகின்றார் நூல் ஆசிரியர் பக்கம் 51 முதல் 55 வரை . 1935 திருப்பூர் வாலிபர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களோடு நிகழ்ந்த முதல் சந்திப்புதான் அண்ணா அவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனை  என்பதனை விவரிக்கின்றார். " ஒருவர் எத்தனை பெரிய திறமைசாலி, உழைப்பாளியாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களும் கூட , தங்களுடைய முழுத்திறமையை வெளிப்படுத்தி ஜொலிப்பதற்கு ஒரு சரியான ஆசிரியர் ,வழிகாட்டி தேவைப்படுகிறார். தனது வாழ் நாள் முழுவதும் , தந்தை பெரியாரின் தொண்டராகவே வாழ்ந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரையை, தமிழகம் 'அறிஞர் அண்ணா ' என்று அன்போடு அழைக்கிறது. தந்தை பெரியாரையும் , அறிஞர் அண்ணாவையும் இணைத்த அந்த முதல் சந்திப்பு, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி, ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயததுக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனையாகத் திகழ்கிறது " என்று பக்கம் 55-ல் குறிப்பிடுகின்றார்.

                                                               கனவு காணுங்கள் என்று சொல்கின்றோம், ஆனால் காணும் கனவு அவ்வளவு எளிதில் வசப்பட்டு விடுகிறதா என்ன? உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் 'தி மாங்க் கூசோல்டு ஹிஸ் பெர்ராரி " என்னும் புத்தகத்தை எழுதிய ராபின் சர்மாவின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை, காணும் கனவை வசப்படுத்தும் வழிமுறையைச் சொல்கிறது. புகழ்பெற்ற வழக்கறிஞராக , இலட்சக்கணக்கில் வழக்கறிஞர் தொழிலில் பணம் சம்பாதித்த ராபின்சர்மா, எழுத்தாளர் ஆவது என முடிவு செய்து வழக்கறிஞர் தொழிலை விட்டு விடுகின்றார். நிறையப் படிக்கின்றார்.  எழுதத் தொடங்குகின்றார்.'தி மெகா லிவிங் எனப் புத்தகம் எழுதுகிறார், , தானே அச்சடித்து வெளியிடுகின்றார். வாங்க ஆளில்லை, தளராமல் அடுத்த புத்தகம் எழுதுகிறார், தானே பதிப்பிக்கின்றார், விற்கவில்லை, அப்போதுதான் ஒரு நண்பர் பதிப்பகத்தின் மூலம் வெளியிடுங்கள் எனச்சொல்ல, பதிப்பகத்தின் மூலம் வெளியிடுகின்றார். இன்று உலக மொழிகள் பலவற்றில் அவரது புத்தகம்.  புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்த ராபின்சர்மா அதனை விட்டுவிட்டு எழுதுவது என முடிவெடுத்து எழுத்துக் களத்தில் இறங்கியதுதான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை என்பதனை அழகுற பக்கம் 190 முதல் 194 சொல்லுகின்றார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

                பெரும்பாலும் மனிதர்கள் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைவது நல்ல மனிதர்களிடம் ஏற்படும் தொடர்பு அல்லது படிக்கும் நல்ல புத்தகங்கள் எனலாம், அதனை நிருபிக்கும் விதமாக புகழ்பெற்ற மனிதர்கள் , புகழ் பெறுவதற்கு முன்னால் சந்தித்த மனிதர்களால் ஏற்பட்ட திருப்புமுனைகளை பல்வேறு அத்தியாயங்களில் இந்த நூலின் ஆசிரியர் என்.சொக்கன் சுட்டிக்காட்டியுள்ளார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் முதன்முதலாக பாரதியார் அவர்களை சந்தித்த நிகழ்வு , பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் முன்னாள் முதலமைச்சர் திரு எம்.ஜி.ஆர் அவர்களால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பாட வாய்ப்பு பெற்ற நிகழ்வு,முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல்கலாம் அவர்கள் சுவாமி சிவானந்தர் அவர்களைச் சந்தித்த நிகழ்வு, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் இசை அமைப்பாளர் திரு எம்.எஸ்.விசுவநாதன் அவர்களைச் சந்தித்து முதன்முதலாக வாய்ப்பு பெற்ற நிகழ்வு  எனப் பல்வேறு பிரபலங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பு முனைகள் விரிவாக தனித்தனி அத்தியாயங்களாக விவரிக்கப்பட்டுள்ளன. "இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள 50 பேரில் ஒரு சிலரைத் தவிர , மற்ற யாரும் ஏற்கனவே புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தவர்கள் அல்லர். அவர்களுடைய வாழ்க்கையில் , அது குழந்தைப் பருவத்திலோ, இளம் பருவத்திலோ அல்லது முதுமைப் பருவத்திலோ ஏதோ ஒரு தருணத்தில் - ஒரு சிறு பொறி தட்டியது என்று சொல்வார்களே அதுபோல் வாழ்க்கையையே மாற்றிய சம்பவத்தால் இன்று சாதனையாளர்களாக உயர்ந்து நிற்கிறார்கள் ". படித்துப்பார்க்கலாம். இளைஞர்கள், மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கக்கூடிய புத்தகம். வரும் திருப்புமுனைகளைப் புரிந்துகொண்டு வாழ்வில் உயர  , இந்தத் திருப்புமுனைகள் பயன்படும்,

Sunday, 23 December 2012

அண்மையில் படித்த புத்தகம் : மோகினி - டால் ஸ்டாய்

அண்மையில் படித்த புத்தகம் : மோகினி - டால் ஸ்டாய்

நூலின் தலைப்பு : மோகினி (ரஷ்ய நாவல்)
ஆசிரியர்                : டால் ஸ்டாய்
தமிழில்                   : ஆர்.வி.
வெளியீடு              :  தையல் வெளியீடு, சென்னை -12
முதல்பதிப்பு         : 2004
மொத்த பக்கம்     :  64  விலை ரூ 25
மதுரை மைய நூலக எண் : 166368.


                                          உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் டால் ஸ்டாயின் நாவல் இது. மோகினி (The devil)  என்னும் இந்த நாவல் ஒரு ஜமின்தாரைப் பற்றியது. யுஜின் இர்ட்டினேவ் என்னும் அந்தக் கனவான் திருமணத்திற்கு முன்பே ஒரு மணமான பெண்ணிடம் தொடர்பு வைத்திருந்ததும், ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து நல்ல நிலையில் வாழும் போதும், பழைய பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளம் தடுமாறுவதும், பின்பு அது தவறு எனத் தெரிந்து அந்த நினைப்பிலிருந்து மீண்டும் வருவதும் தொடர்கதையாவ்தை அவருடைய பாணியில் சொல்லிச்செல்கிறார். உணர்ச்சிக்கும் நேர்மைக்கும் நடக்கும் போராட்டம். கடைசியில் அந்த நினைப்பிலிருந்து மீள முடியாமல் , குடித்தவன் மீண்டும் மீண்டும் உறுதி மொழி எடுத்தபின்பும் சாராயக் கடைக்கே திரும்பிப்போவது போலத் தன் மனம் மீண்டும் மீண்டும் தடுமாறுவதால் , யுசின் இர்ட்டினேவ் தற்கொலை செய்து கொள்கிறான், அவன் ஏன் இறந்தான் என்பது யாருக்கும் தெரியவில்லை, நல்ல மனைவி, குழந்தை, நல்ல வருமானம், நல்ல அந்தஸ்து போன்றவற்றோடு இருந்த அவன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு  என்ன பிரச்சனை என்பது யாருக்கும் புரியவில்லை, தெரியவில்லை என முடிகின்ற்து. அவனுக்கு ஏதாவது மூளைக் கோளாறு , பைத்தியம் புடித்து விட்டது என்று பேசிக் கொள்கிறார்கள் என முடிக்கின்றார் டால் ஸ்டாய் . "  யுசினுக்கு மூளைக் கோளாறு என்றால் ஒவ்வொருவருக்கும் மூளைக் கோளாறுதான்; பைத்தியந்தான், தங்க்ளிடம் உள்ள பைத்தியக்காரத்தனத்தைத் தெரிந்து கொள்ளாமல் பிறரிடம் அந்தக் குணங்களைக் காண்பவர்கள்தான் பெரும்பாலான பைத்தியக்காரர்கள் " என்று புத்தகம் முடிகின்றது.

                                                " நெறியும் நேர்மையும் முரண்படும்போது உண்டாகும் போராட்டமே இந்தக் கதையின் உரு. புலனடக்கம் இல்லாதவன் இச்சைக்கு அடிமையாகி விடுகிறான். அதிலும் உடல் சம்பந்தமான உறவு வைத்துக்கொள்பவன் , பிசாசு போன்ற மிருக உணர்ச்சிக்குப் பலியாகி விடுகிறான். இதுதான் கதையின் கரு ...டால்ஸ்டாயின் கதைகளும் கட்டுரைகளும் மனித உள்ளத்தை வளப்படுத்தி,உயர்த்தக் கூடியவை; இலக்கியத்தின் நயத்தையும் மேம்பாடுகளையும் உணர்த்தக்கூடியவை " என்று சொல்கின்றார் முன்னுரையில் மொழி பெயர்ப்பாளர் ஆர்.வி.உண்மைதானே ...

Wednesday, 19 December 2012

சாகப்போகும் விவசாயிகளே!


கடன் வாங்கி
நாத்து விதைத்து
மீண்டும் கடன் வாங்கி
நாத்தை நட்டு
பயிராகிப் பார்த்தவேளை
பருவ மழை பொய்த்துப்போனது !

கண்மாய் பெருகிவிடும்
கன மழை பெய்துவிடும்
பயிரெல்லாம் நெல்லாகி
அம்பாரம் குவிந்துவிடும்
அடைத்து விடலாம்
கடனை என்றெண்ணி
நம்பி விதைத்த பயிரெல்லாம்
சருகாகி காய்ந்து போக‌
வானம் பார்த்த விவசாயம்
வயிற்றைக் காயப் போட்டதடா !

கண்மாயில் தண்ணியில்லை
பக்கத்து கிணத்து மோட்டாரிலே
இன்னும் கொஞ்சம் கடனை
வாங்கியாவது காப்பாத்திடலாம்
பயிரையென்னு
விடிய விடிய உட்கார்ந்திருந்தும்
வீணாப்போன கரண்ட் இல்லே

கரண்டில்லை ,தண்ணியில்லை
அன்பார்ந்த விவசாயிகளேன்னு
அகில இந்திய வானொலி
காலையிலே கொட்டி முழக்கும்
கூத்துக்கு மட்டும் குறைவில்லே!

சேற்றில் நெட்டியைப் போட்டு
மிதித்தற்கு காசு வேணாம்
வரப்பு வெட்டி வாய்க்கால் வெட்டி
ஒத்தாசையா நின்னு
உழைத்ததுக்கு காசு வேணாம்
இராப் பகலா
மோட்டை அடைச்சு
தண்ணீர் பாய்ச்சி
நாத்தை வளர்த்ததற்கு காசு வேணாம்

செத்துப் போன
பிள்ளையைப் பார்த்து
கதறி அழும் பெத்தவன் போல‌
கருகின பயிரைப் பார்த்து
மனதுக்குள் கதறி அழும்வேளை
வட்டிக்கு கடன் கொடுத்த
பணக்காரன் வாறானே !
அவனுக்கு கொடுக்க காசு வேணுமே
என்ன செய்ய ?

பாறைக்குள்ளிருக்கும்
தண்ணியெடுத்து
பயிரை விளைய வைக்கிறோம்ன்னு
இத்தாலிக்காரன் சொல்லுகிறான்

இருக்கிற தண்ணியை
பகிர்ந்து கொடுக்க வக்கில்லே!
இல்லாத பகுதிக்கு
தண்ணி வர வைக்கிற‌
திட்டம் ஏதுமில்லே!

பின்னே எதுக்கு
அன்பார்ந்த விவசாயிகளே!
இனிமே சொல்லுங்கடா
அரசாங்க வானொலியில்
சாகப்போகும் விவசாயிகளே!
                                                      வா. நேரு .

எனது கவிதையை வெளியிட்ட எழுத்து.காம் -ற்கு நன்றி .

Sunday, 16 December 2012

உலகம் அழியும் நாளில் ...?

பால் குடித்தார்
பிள்ளையார்
ஒரு நாள் புரளி
ஓரிரு நாளில் முடிந்தது

அழியப் போகிறது
உலகம் !
சில நாளாய்
புரளி கொடி கட்டிப்பறக்கிறது!

உலகம் அழியும் நாளில்
நாம் அழியாமல்
தப்பிப்பது எப்படி ?
பிரார்த்தனை வகுப்புகள்
ஒரு மதத்தால்

உலகம் அழியும் நாளில்
தப்பிக்க
பரிகாரங்கள்
பட்டியலிடும்
இன்னொரு மதத்து
ஜோதிடர்கள் !

பியூஸ் வயர் போட்டால்
சரியாகும் மின்சாரமா
உங்கள் கடவுள் ?
பிரார்த்தனையும்
பரிகாரமும் பியூஸ் வயரா?

அழியாது ! அழியாது என
உரத்துச் சொன்னாலும்
கேட்காத இவரெல்லாம்
இருபத்தி இரண்டு தேதியில்
தற்கொலை செய்து கொள்வாரோ!

இல்லை தன்னிடத்தில்
உள்ள சொத்தையெல்லாம்
இருபதாம் தேதியே
ஏழைகளுக்கு கொடுத்து விடுவாரோ!

கொள்ளை சிரிப்பு வருகுதே!
இந்தக் கோமாளித்தனங்களைப்
பார்த்து ! பார்த்து !

எழுதியவர் :வா. நேரு
நாள் :2012-12-16 15:10:57
நன்றி : எழுத்து.காம்

உலகம் அழியும் என்று பீதி கிளப்பியவர்கள் கைது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 டிசம்பர், 2012 - 17:02 ஜிஎம்டி
விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட புவிப் படம்
விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட புவிப் படம்
இந்த மாதம் 21 ஆம் தேதியுடன் உலகம் அழியப்போகிறது என்று ஆருடம் சொல்வதற்காக சீனாவின் பல்வேறு ஊர்களில் பொதுச் சதுக்கங்களில் கூடியவர்கள் சிலரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
நாட்டின் மத்தியப் பகுதியிலும் மேற்கு மாகாணங்களிலும் பல இடங்களில் உலகம் அழியப்போகிறது என்று நம்பும் பிரிவினர் கூடினார்கள் என்றும் பொலிசார் இவர்களைக் கலைத்துள்ளனர் என்றும் அரசு ஊடகங்கள் கூறுகின்றன.
மாயா என்ற அழிந்துபோன அமெரிக்க நாகரிகத்தின் ஆரூடத்தின்படி இந்த மாதம் உலகம் அழியும் என்று இந்தப் பிரிவினர் நம்பி இணையத்தில் எச்சரிக்கைகளைப் பரப்பிவருகின்ரனர்.
ஹொங்கொங்கிலும் இந்த காரணத்துக்காக 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
இந்த விடயம் சீனாவில் மட்டுமல்லாத வேறு பல நாடுகளிலும் பயத்தை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான அடிப்படையற்ற தகவல்கள் இணையத்திலும் வேகமாக பரவி வருகின்றன.
nantri - bbc news -tamil -16-12-12

Wednesday, 12 December 2012

அண்மையில் படித்த புத்தகம் : காற்றில் அலையும் சிறகு


நூலின் தலைப்பு : காற்றில் அலையும் சிறகு
ஆசிரியர்             : சுப்ர பாரதி மணியன்
வெளியீடு           :  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்
முதல் பதிப்பு      : டிசம்பர் 2005
மொத்த பக்கங்கள் : 130, விலை ரூ 50

                                          காற்றில் அலையும் சிறகு என்னும் இந்தப் புத்தகம் 16 சிறுகதைகளின் தொகுப்பு.ஆனந்த விகடன், தாய், பாக்யா, குங்குமம் போன்ற பல இதழ்களில் வந்த சிறுகதைகள் நம் கையில் மொத்தமாய், புத்தகமாய். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் , தொலைபேசித்துறையில் உதவிக் கோட்டப்பொறியாளர், இப்போது கோட்டப்பொறியாளர் ஆகியிருக்கக்கூடும் . 6 நாவல்கள், 12 சிறுகதைத் தொகுப்புகள், 2 குறு நாவல் தொகுப்புகள், 2 கட்டுரைத் தொகுப்புகள் என அவர் எழுதியிருக்கும் நூல்களின் தொகுப்புகள் நம்மை மலைக்க வைக்கின்றன. பல பரிசுகளை அவர் இலக்கியத்திற்காகப் பெற்றிருப்பது, அவரது துறையைச் சேர்ந்தவன் என்ற வகையில் பெருமையாக இருக்கின்றது.

                                                                                  16 கதைகள் , ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கின்றன. 'இந்தப் புத்தகத்தின் தலைப்பான காற்றில் அலையும் சிறகு, எப்படி எப்படியோ இருப்பவர்கள் , இப்படி எப்படி ஆனார்கள் என்னும் கேள்வியை எழுப்புவதாக இருக்கின்றது. நிதானத்தை கற்றுக்கொடுக்கும் இரவிச்சந்திரன், ருசிப்பதை, எதையும் ரசிப்பதை கற்றுக்கொடுக்கும் இரவிச்சந்திரனின் மாற்றமும், அவன் கடன் வாங்கி , கடன் வாங்கி  நோயாளியாக மாறுவதையும் கடைசியில்  உணவகத்தில் இரை கண்ட மிருகம் போல அள்ளி அள்ளி சோற்றை விழுங்குவதையும் அழகுற விவரித்துள்ளார் சுப்ரபாரதி மணியன் .இரவிச்சந்திரனைப் பற்றிப் படிக்கும் போது இறந்த போன எனது நண்பன் ஞாபகம் வருகின்றது. ஒரு கதாபாத்திரத்தில் நம்மை ஒன்ற வைப்பதும் அதில் நம்மை இணைத்துப் பார்க்குமளவுக்கு எழுதுவதும்தானே எழுத்தாளனின் வெற்றி.

                                                                பல கெளரவக் கொலைகளுக்கு அடிப்படையான , அண்ணன்களாலும் அப்பாக்களாலும் கொல்லப்பட்ட பல பெண்கள் செய்த தவறு திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாதல்.  ஆனால்   திருமணத்திற்கு முன்னே  கர்ப்பமாகிப் போன தன் பெண்ணை கர்ப்பக்கலைப்பிற்கு அழைத்துப்போகும் அப்பாவின் கதை, இந்த சிறுகதைத் தொகுப்பில்  "வழி". செத்துப்போ என்று சொன்னாலும் , வளர்த்த பாசமும், ஏமாந்து போன தனது மகளின் நிலையும் கடைசியில் "செத்து மட்டும் தொலைச்சுராதே" என்று சொல்லும் அப்பாவின் குரலும் திருப்பூரிலிருந்து ஒலிப்பது எதார்த்தமான குரல்தான். 

                                            பெரிய உணவு விடுதிகளின் முன்னால் பிச்சையெடுக்கும் முதியவர்களைக் கேட்டுப்பாருங்கள், அவர்கள் முன்னால் கிராமத்து கூலி விவசாயிகளாக இருப்பார்கள், அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களாக இருப்பார்கள். காட்டை விட்டுத் துரத்தப்பட்ட ஆதிவாசிகள், பழங்குடியினரைப் பற்றி மறைந்த பிரதேசம் சிறுகதை பேசுகின்றது.

                                           வேலையற்ற பட்டதாரி இளைஞனைப் பற்றிப் பேசும் 'எல்லோருக்குமான துயரம் " நமக்கும் துயரத்தை ஏற்படுத்துகிறது. எத்தனை அவமானங்களைச் சகித்துக்கொண்டு அவர்கள் துயருற வாழ்கிறார்கள் எனபதனைப் பேசும் சிறுகதை. ஆம், இந்த நாட்டின் துயரம்தான் இது, படித்தவனுக்கு வேலை இல்லை என்பது...

                                          இதைப் போல ஒவ்வொரு கதையையும் சொல்லமுடியும் என்றாலும் தனி மனித அவலங்களை, சமுக அவலங்களை சுட்டிக்காட்டும் கதைகளாக இக்கதைகள் இருக்கின்றன. துறவி என்று ஆனாலும் குடும்பக்கடமைகள் விடாது துரத்தும் , உறவினர்கள் விடாது பொருளாதார ஆதரவுக்காக துறத்துவர் என்பத்னை துறவி கதை சொல்கின்றது. மகளின் திருமணத்திற்காக சிறுநீரகத்தை பணத்திற்க்காக விற்கப்போய் ஏமாந்து வெறுமனே சிறுநீரகத்தை இழ்ந்து வந்த கதை என்று வாழ்வின் எதார்த்தை சுட்டுவதாக பல கதைகள் உள்ளன.

                                             "கதை எழுதறுதும் ,சாப்பிடறதும் ஒண்ணுதான். நிதானமானது ரெண்டும்." ( பக்கம் 9) .ஆம்,உண்மைதான். சுப்ரபாரதிமணியன் கதைகள் நிதானமாக சாப்பிடும் சாப்பாடாகவே இருக்கின்றன. கதைகளில் மிகப்பெரிய திருப்பங்கள், சஸ்பென்ஸ் அப்படி இப்படி என்றெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் நம்மைச்சுற்றி நிகழும் அவலங்கள் இருக்கின்றன-. ஏன் இந்த அவலங்கள் என்னும் கேள்வியை எழுப்புகின்றன. படித்து , யோசித்து யோசித்து அசை போடும் பல விசயங்கள் சில பக்கங்களில் சிறுகதையாகக் கொடுக்கப்பட்டுள்ளன். படித்து அசை போட்டுப் பாருங்கள். 




Sunday, 25 November 2012

நிரம்பி வழிகின்றன

நிரம்பி வழிகின்றன
உணவு விடுதி மேஜைகள்

வித விதமான
ஆடைகளோடும்
அணிகலன்களோடும்
ஆண்களும் பெண்களும்
யுவதிகளும் கிழவிகளுமாய்
உணவினை
சுவைத்துக்கொண்டும்
ஆர்டர் இட்டுக்கொண்டுமாய்
நிரம்பி வழிகின்றன மேஜைகள்

உணவுக்கு ஆர்டர் கொடுத்து
உண்ணும் போதும்
உண்டு முடித்த பின்பும்
எக்மோர் ரெயில்
நிலையத்தில் கேட்ட குரல்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது
காதுகளில் விடாது

நான் பெத்த பிள்ளைகளா
நான் சாப்பிட
ஒத்த ரூபா போடுங்க ராசா
என்னும் அந்தக்குரலுக்கு
செவிமடுக்காது
தாண்டி வந்த பின்பும்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது
விடாது அந்தக்குரல்

நிரம்பி வழிகின்றன
உணவு விடுதி மேஜைகள்
ஏற்றத் தாழ்வைப்
பார்த்துக்கொண்டே
கடந்து செல்லும்
அரசியல்வாதி போலவே

இல்லாக் கொடுமையும்
இருப்பவனின் ஊதாரித்தனமும்
ஏன் இந்நாட்டில் எனும்
கேள்விகளின்றி
சர்வருக்கு சில
நாணயங்களை வைத்துவிட்டு
நடந்து செல்கிறேன் நானும்....





எழுதியவர் :வா. நேரு

நாள் :2012-10-15
nantri : eluthu.com

அண்மையில் படித்த புத்தகம்-நேசத்துணை-திலகவதி

அண்மையில் படித்த புத்தகம்

நூலின் தலைப்பு : நேசத்துணை
ஆசிரியர்        : திலகவதி
பதிப்பகம்        : அம்ருதா பதிப்பகம்
முதல் பதிப்பு    : டிசம்பர் 2007
விலை          : ரூ 80 , 168 பக்கங்கள்

                                            நேசத்துணை எனபது நாவல். மொத்தம் 24 அத்தியாயங்கள் உள்ளன. தமிழில் நவீன எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் திலகவதி. காவல்துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர். கிரேன்பேடி போல மக்கள் பலரால் தமிழகத்தில் அறியப்பட்டவர். திலகவதியின் இந்த நாவல் நல்ல இல்லறத்திற்கு என்ன தேவை என்பதனை கேள்வியாகக் கேட்டு அதற்கு பதிலாக அன்பு  என்பதனைப் பதிலாக தரும் நாவல் எனலாம்.

                                                  160 பக்கம் கதையைப் போலவே திலகவதியின் முன்னுரையும் அருமையாக உள்ளது. ஜெயகாந்தன் தனது நாவல்களில் முன்னுரைகளில் நிறையப் பேசுவதுபோலவே திலகவதியும் பேசியிருக்கிறார். நாவல் ஆசிரியர்கள் முன்னுரையில் பேசவேண்டும்.

                                                   " பெண் , இன்று ஒரு மட்பாண்டம் இல்லை, யார் உடைத்தும் அவள் சிதறிப் போக மாட்டாள். அவள் இன்று கல்வி பெறுகிறாள், உயர்ந்த தேர்வுகளில் உயர்ந்த இடம் பெறுகிறாள். ...பெண் உயர்வு என்பது மானுட உயர்வு. மானுடம் என்பது அன்பினை ஆதாரமாகக் கொண்ட மன ஊற்று.இரு வேறு மனிதர்களை ஒன்றாய் இணைப்பதில் அன்பெனும் ரசாயனம் ஆகச்சிறந்த பங்கினை ஆற்றுகிறது....மனிதர்கள் சோற்றால் வாழ்வதில்லை. அன்பினால் ஜீவிக்கிறார்கள்.  இப்படியாகத் தங்களை அன்பினால் நிரப்பிக்கொண்ட ஒரு ஜோடியை எனக்கு தெரியும். அவர்களிக்கிடையே படிப்பு வித்தியாசம் இருந்தது. இன்னும் பலப்பல வேறுபாடுகள் இருந்திருக்கலாம், என்றாலும் அனைத்துக்குறுக்குச்சுவர்களையும் இடித்து நிரவி சமன்படுத்தியது இந்தப் புரிதலும் அன்புமேயாகும் " என்று முன்னுரையில் குறிப்பிடும் திலகவதி அந்த ஜோடியை வடிவேலு, நளினி பாத்திரங்களை மிக நன்றாக உருவாக்கி நாவல் முழுவதும் உலவ விட்டிருக்கிறார். வாழ்க்கை இணையர்களின் ஒற்றுமை என்பது ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுப்பதிலும் , ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதிலும்தான் இருக்கிறது என்பது மிக அழுத்தமாக இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது .

                                                   அதனைப் போலவே கஸ்தூரி பாத்திரமும். ஆனால் நளினி பாத்திரம் அளவுக்கு இல்லாமல் கொஞ்சம் செயற்கைத்தனம் இருக்கிறது . வடிவேலு , நளினி. கஸ்தூரி பாத்திரங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, " அவர்கள் ஏற்கனவே பூமியின்மேல் இருந்தார்கள், நான் அவர்களை அறிய நேர்ந்தது. உங்களுக்கு அவர்களை எழுதிக்காட்டியிருக்கிறேன். இப்போது என்னைப் பொறுத்தவரை இலக்கியத்தின் பயன் இதுதான் என்று நம்புகின்றேன் " பக்கம்-7 என்று சொல்கின்றார் திலகவதி. உணமைதான். செம்மைப்படுத்தவும் வாழ்க்கையை செழுமைப்படுத்தவும் ஆற்றுப்படுத்துதல்தானே நல்ல இலக்கியத்தின் நோக்கம்.பாகீரதி பாத்திரம் பெண்ணியவாதிகளை  கேலி செய்யும் விதத்தில் இருப்பது மனதைக் கொஞ்சம் நெருடுகிறது.

                               நாவல் விறுவிறுப்பாகவும் அதே நேரத்தில் இடையில் கொஞ்சம் நகைச்சுவை கலந்தும் ஆசிரியரால் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. நாவலைப் படித்து முடித்தவுடன் எனது மனைவியிடம் நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக அன்பு செலுத்த வேண்டும் என்று தோன்றியது. இந்த நாவலைப் படித்ததன் பயன் எனக்கு இது. நீங்களும் படித்துத்தான் பாருங்களேன்.

                           இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பக்கத்தில் " NESATHUNAI. A collection of short stories in Tamil by G. Tilakavathi " என்று போட்டிருக்கிறார்கள். நாவலை எப்படி சிறுகதைத் தொகுப்பு என்று அச்சிட்டார்கள் எனத் தெரியவில்லை. அடுத்த பதிப்புகளில் திருத்திக்கொள்ளலாம்.

                                           

Friday, 16 November 2012

அண்மையில் படித்த புத்தகம் -தோல்விகளைத் துரத்தி அடி

 அண்மையில் படித்த புத்தகம்

நூலின் தலைப்பு : தோல்விகளைத் துரத்தி அடி
ஆசிரியர்                : எழில் கிருஷ்ணன்
பதிப்பகம்               : கிழக்கு பதிப்பகம்
முதல் பதிப்பு       : டிசம்பர் 2008
விலை                    : ரூ 75 , 160 பக்கங்கள்

                                               இது ஒரு சுய முன்னேற்றப்புத்தகம். படிக்கட்டுகள் எனத்தலைப்பிட்டு 8 தலைப்புகளில் கருத்துக்கள் உள்ளன.  வெற்றி பெற்றவர்கள் சிலரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள், ஜென் துறவிகள் சொன்ன சில உண்மைகள், நிகழ்வுகள் என நூல் முழுவதும் பல தகவல்கள், சுய முன்னேற்றக் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ள நூல் இது.கையில் எடுத்தால் படிக்கத்தூண்டுமளவு விறுவிறுப்பாய், பல்வேறு விசயங்களை மாறுபட்ட கோணத்தில் சொல்கின்ற புத்தகமாய் இந்தப்புத்தகம்

                                             ஒரு புத்தகச்சந்தையில் எப்படிப்பட்ட புத்தகங்கள் நிறைய விற்கின்றன என்று ஒரு பதிப்பாளரைக்க் கேட்டபொழுது , நிறைய ஜோதிடப்புத்தகங்கள் விற்கின்றன, அதற்கு அடுத்தாற்போல் சுய முன்னேற்றப்புத்தகங்கள் நிறைய விற்கின்றன என்றார். இரண்டுமே சுய நலம் சார்ந்த புத்தகங்கள் என்றார் பக்கத்தில் இருந்த நண்பர் . எப்படி என்றபோது ஜோதிடம் பொய் , ஆனாலும் நிறையப்பேர் படித்தவர்களே நம்பி ஏமாந்து போகிறார்கள் என்றவர், சுய முன்னேற்றப்புத்தகங்கள் பலவும் கூட நீ மட்டும் ஜெயிக்க என்ன வழி என்று சொல்பவைதான் என்றார்.

                                            தோல்விகளைத் துரத்தி அடி என்னும் புத்தகத்தில் கவனித்த ஒரு விசயம் இவர்களின் நோக்கம் என்ன என்பதனைத் தெளிவாக்கியது . " வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களிடம் சில பொதுப்பண்புகள் இருக்கும். வம்புதும்புக்குப் போக மாட்டார்கள் . அடுத்தவர் பிரச்சனையில் தலையிட மாட்டார்கள். மூக்கை நுழைக்க மாட்டார்கள். தன் வேலையுண்டு , தானுண்டு என்று இருப்பார்கள்.

                                                                                                  கலாட்டா செய்ய மாட்டார்கள்.யூனியன் மீட்டிங் அது ,இது என்று எந்தப்புறக்காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டார்கள். கவனித்துப்பாருங்கள், எந்தப் பெரிய ஆளாக இருந்தாலும் அவன் வேலையத் தவிர எதிலும் சிறு ஆர்வம்கூட காட்டிக்கொள்ள மாட்டான் அப்போதுதான் தன் வேலையில் முழுக்கவனம் செலுத்த முடியும் என்பது புத்திசாலிக்குத் தெரியும் " பக்கம் 83.
                        "அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப்போராடாது, அநீதி களைய முடியாது", "ஒன்று படுவோம், போராடுவோம், வெற்றி பெறுவோம் " என்பது தொழிற்சங்கங்க கூட்டங்களில் , போராட்டங்களில் எழுப்பப்படும் முழக்கங்கள். அமெரிக்கக் கன்வுகளோடு இருக்கும் நமது இளைஞர் கைகளில் தவழும் சுய முன்னேற்றப்புத்தகங்களில் தென் படும் உன் வேலையத் தவிர வேறு எதையும் கண்டு கொள்ளாதே என்பது ஆபத்தானது மட்டுமல்ல, இப்போது இருக்கும் பணக்காரர்களையும் , உயர் ஜாதிக்காரர்களையும் பாதுகாக்கும் வேலை என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.  


                                                    

Monday, 12 November 2012

ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்

                                  அண்மையில் படித்த புத்தகம்

    புத்தகத்தின் தலைப்பு  : ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்
    ஆசிரியர்                           : மாலினி சிப்
     தமிழில்                             : ஐஸ்வர்யன்
     வெளியீடு                        : விகடன் பிரசுரம் ( 628)
     முதற்பதிப்பு                    :  டிசம்பர் 2011
     மொத்த பக்கங்கள்       :    248        
      விலை                             :  ரூ 100

                                                          சுயசரிதையை படிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்த செயல். அந்த வகையில் மாலினி சிப் என்னும் பெண்ணின்  இந்த சுய சரிதை என்பது அற்புதமான ஒரு வாசிப்பு அனுபவமாகவும் , அதே நேரத்தில் சமூக சிந்தனையோடு சுயபரிசோதனை செய்யும் விதமாகவும் அமைந்தது என்றால் அது மிகையில்லை.

                                                     தன் கதையை தானே விவரிக்கும் விதமாக அமைந்த இந்த மாலினி சிப்பின் வரலாறு என்பது படிக்கும் பலருக்கும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடியது. பிறவியில் ஏற்படும் சிறு குறைபாடுகளுக்கே அலுத்துக்கொண்டு வாழ்வில் சலித்துக்கொள்வோர் எல்லாம் அவசியம் படிக்க வேண்டிய கதை இது.

                                                    "செரிப்ரல் பால்ஸி' நோய் என்றால் என்ன்வென்று இந்த நூலைப் படிப்பதற்கு முன்னால் எனக்குத் தெரியாது , ஆனால் இந்தப்புத்தகத்தைப் படித்துமுடித்தபோது அந்த நோய் என்ன செய்யும் , அந்த  நோய் பாதிப்பு ஏற்பட்டால் குடும்பத்தினர் செய்ய வேண்டியது என்ன, சமூகத்தினர் செய்ய வேண்டியது என்ன  போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலும், அப்படிப்பட்ட இயல்பான ஒரு பதிவாக இப்புத்தகம் அமைந்துள்ளது இதன் சிறப்பு.

                                                   இந்தப் புத்தகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி - வேர்கள் என்ற தலைப்பில் 1 முதல் 72 பக்கம் வரை. டாக்டர்கள் சொன்னது பொய்யாப்போச்சு என்னும் முதல் அத்தியாயம் 1966 -ஜீலை மாதம் மாலினி சிப் பிறந்தது, இயல்பான வளர்ச்சி இல்லாததால் , பரிசோதனைகள் மூலம் 'செரிப்ரல் பால்ஸி' என்ற நோய் பாதிப்பு மாலினி சிப்பிற்கு உள்ளது என்பதனை கண்டுபிடித்தது, கடைசிவரை இந்தக் குழந்தை காலம் முழுக்க படுக்கையிலே கிடப்பாள் என்னும் மருத்துவர்களின் கூற்றை மாலினி சிப்பின் பெற்றோர்கள் மனதளவில் மறுத்து மாற்று வழி தேடியது, மாலினி சிப்பின் மருத்துவத்திற்காகவே இவரது பெற்றோர்கள் லண்டனுக்கு சென்றது என்று பல தகவல்கள் கதையாக விவரிக்கப்பட்டுள்ளன.

                                               மாலினி சிப்பின் 6 வயதில் இந்தியாவுக்கு வருகின்றார்கள். லண்டன் பள்ளிக்கும் , இந்தியாவில் கிடைத்த அனுபவத்திற்கும் உள்ள வேறுபாட்டை மாலினி சிப் பக்கம் 34-ல் குறிப்பிடுகின்றார் இப்படி " அந்தப்பள்ளியைச் (லண்டன்) சேர்ந்தவர்கள் , வார்த்தை விவரிக்கு அப்பாற்பட்டு, அன்பாக, இதமாக, உணர்வுபூர்வமாக என்னோடு பழகியதை, எனக்குச் சம உரிமைவழங்கிப் பராமரித்த்தை இன்றளவும் என்னால் மறக்க இயலவில்லை. கண்ட நாள் முதலே அவர்கள் என்னை ஒரு சிறுமியாகத்தான் பார்த்தார்களே தவிர ' ஊனமுற்ற சிறுமி'யாக அல்ல.ஆனால் .இந்தியாவில் கிடைத்த எதிர்மறையான அனுபவமோ சொற்களால் ,வெளிப்படுத்த முடியாத அளவு வலியும் வேதனையும் தந்திருந்தது....முரட்டுத்தனம்,அதிகாரப்போக்கு, அகந்தை, மிரட்டும் போக்கு என சகல கருப்பு அம்சங்களும் நிறைந்திருக்க...அவர்கள் அளித்த சிகிச்சைகள் என்னைக் குணப்படுத்தாமல் காயப்படுத்தின " .

                                                  குழந்தைப் பருவ நிகழ்வுகள், மாலினி சிப்பின் அப்பாவிற்கும் அம்மாவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு, அதனால் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட விவாகரத்து, கணவரைப் பிரிந்த வேதனையை வெளிக்காட்டாமல் அவரது அம்மா அவரை வளர்த்தது, சிறப்புப்பள்ளியில் படித்தது, ஹாஸ்டல் வாழ்க்கை எனத் தன் குழ்ந்தைப் பருவ நிகழ்வுகளை விவரிப்பதாக - வேர்கள் என்னும் இந்த முதல் பகுதி அமைந்துள்ளது. எலெக்டிரிக் நாற்காலி என்னும் அந்த கருவி எவ்வளவு தூரம் அவரது வாழ்க்கையை மாற்றியது என்பதனை விவரிப்பது அருமை.

                                                  நூலின் இரண்டாம் பகுதியான வளர் பருவத்தில் (பக்கம் 73 முதல் 132 வரை )  மாலினி சிப்பின் இளமைக்காலமும் படிப்பும் விவரிக்கப்பட்டுள்ளது. பம்பாயின் புனித சேவியர் கல்லூரியில் பி.ஏ. படித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றார். " பொதுவாகப் பத்திரிக்கைக்காரர்கள் திரும்ப திரும்ப கேட்ட ஒரு கேள்வி, கல்லூரியில் படித்த காலத்தில் நான் மற்றவர்கள் மத்தியில் வித்தியாசமாக உணர்ந்தேனா என்பதே. நிச்சயமாக உணர்ந்தேன். செயிண்ட் சேவியர் கல்லூரிக் காலத்தில்தான் அந்த வித்தியாசம் நேரடியாக என்னைத் தாக்கிற்று. " பக்கம் -75  எனக்குறிப்பிடும் மாலினி சிப் மேலை நாட்டுப்படிப்பையும் நமது நாட்டுப் படிப்பையும் ஒப்பிடுகிறார். மிகவும் நன்றாகப் பாடம் நடத்தும் உமா என்னும் ஆசிரியர் இறுக்கமாக மாணவிகளிடம் நடந்து கொள்ளும் தன்மையை சொல்லும் விதம் நன்றாய் உள்ளது. ஒயினை ருசித்ததைப் பற்றித் தனி அத்தியாயமே உள்ளது. கன்னிப்பருவத்திலே என்னும் தலைப்பில் அமெரிக்கா சென்றிருந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றார் மாலினி சிப். " எனது அமெரிக்கப் பயணமே எனது கண்களைத் திறந்த பெருமைக்கு உரியது. தங்களுக்கென ஒரு வாழ்க்கையை கவுரமாக வாழும் அத்தனை மாற்றுத்திறனாளிகளை நான் அமெரிக்கபயணத்துக்கு முன் சந்தித்தே இல்லை " என்று சொல்லும் அவர் மாற்றுத் திறனாளிகள் பற்றிய சமூகப் பார்வையைச் சொல்கின்றார். " மாற்றுத் திறனாளிகள் எப்போதுமே அடுத்தவரைச் சார்ந்தவர்கள் என்றும், வேறு கதி இல்லாதவர்கள் என்றும்தான் நமது சமுதாயம் குறுகிய பார்வை கொண்டிருக்கிறது. அது நியாயமா ? முதலில் நாங்களும் மனிதர்கள். அப்புறம்தான் மாற்றுத்திறனாளிகள் . ஆனால்,பெரும்பாலோர் கண்ணுக்கு மாற்றுத்திறனாளிகளின் குணங்கள் கண்ணுக்குத் தெரிவதற்குமுன்  அவர்களின் அங்கக் குறைபாடுதான் கண்ணுக்குத் தெரிகிறது" பக்கம் -114.
இதனைப் போன்ற பல்வ்று தன்னுடைய  மன் ஓட்டங்களை இந்த நூலில் பதிந்திருக்கின்றார் மாலினி சிப்.

                                                 நூலின் மூன்றாம் பகுதியான சுதந்திரக்காற்றில் , மறுபடியும் லண்டன் சென்றதைப் பற்றி எழுதியுள்ளார். பேசுவதிலும் எழுதுவதிலும் தனக்கு இருந்த பிரச்சனையை சரிசெய்யப் பயன்பட்ட கருவிகளைச் சொல்கின்றார். " இமெயில் வசதி என் வாழ்க்கையில் பெரும் புரட்சியையே ஏற்படுத்திவிட்டது எனலாம் . அனைவருடனும் என்னால் சுயமாகவே தொடர்புகொள்ள முடிந்தது" - (பக்கம் 151) எனச்சொல்லும் மாலினி சிப் இணையமும் , எழுது உபகரணமும்  தன் வாழ்வில் ஏற்படுத்திய மாற்ற்த்தை விவரிக்கும் விதம் அருமை. 'சொந்தக் காலில்'  நிற்கும் திறனையும் துணிச்சல்காரியாக மாறியதையும் சொல்கின்றார். வாகை சூடினேன் என்னும் தலைப்பில் " அந்த ஒற்றைச் சிறு விரல்  எனது வல்லமையின் பொக்கிஷமாக இருந்தது. சிரமமின்றி இமெயிலை உபயோகித்தேன் . " எனக்குறிப்பிடும் மாலினி சிப், எழுத்தாளர் ஜென்ஸி மோரிஸின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டதை விவரிக்கின்றார். அவரை " மாற்றுத் திறனாளிப்  பெண் ஒருத்தி அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளப்போராடிக் கொண்டே , புற உலகோடும் இணைந்து செய்ல்படும்போது சந்திக்க நேரிடும் சிரமங்களை விளக்கமாகச்சொல்லி, பெரியதொரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார் " (பக்கம் 182) எனக்குறிப்பிடுகின்றார்.

மாற்றுத்திறனாளிகள் செக்ஸ் ரீதியாக புறக்கணிக்கப்படுவதை மிக விரிவாக எழுதும் மாலினி சிப், "நீ ஊனமுற்றவள், உனக்கு செக்ஸ் கிடையாது " என்னும் தன் கட்டுரையின் தாக்கம் பற்றியும் விவரிக்கின்றார். ' பெண்ணியம் பற்றி தெரிந்தால்தான், நமது அன்றாட வாழ்வை அலசி ஆராய்ந்தால்தான் பெரிய அளவிலான பெண் அடக்குமுறையை எதிர்த்துப்போராட முடியும் எனும் விழிப்பு உணர்வு எனக்கு ஏற்பட்டது " (பக்கம் - 188) எனச் சொல்கின்றார் .என்னாலும் வாழமுடியும் என்று தன்னம்பிக்கை பெற்றதையும் , இன்னொரு எம்.ஏ.பட்டம் பெற்றதையும் விவரிக்கின்றார். தன்னுடைய துன்பத்தையும் குறிப்பிட்டுச்சொல்கின்றார். " மற்றவர்களுக்கெல்லாம் ஒரு மணி நேரமே ஆகக்கூடிய ஒவ்வொரு பணியும், ஒற்றை விரலைக்கொண்டு செய்து முடிக்க எனக்கு ஒரு நாள் ஆகிவிடும் " என்பதைச் சொல்கின்றார் . தனக்கு மும்பையில் வேலை கிடைத்த்தையும் , ADAPT ( Able Disabled All People Together) என்னும் அமைப்புக்கு உயிரூட்டியதையும் அதில் வேலை செய்து மாற்றுத் திறனாளிகளை ஒன்றிணைத்தையும் குறிப்பிடுகின்றார்.
                 2004-ல் மும்பை மராத்தான் ஓட்ட பந்தயத்தின் பந்தய விதிமுறைகளில் " சக்கர நாற்காலிகளுக்கும் நாய்களுக்கும் அனுமதி இல்லை " எனும் குரூரமான வாசகமும் அதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை ஒருங்கிணைத்ததை, போராடியதை மாலினி சிப் பதிந்துள்ளார்.

                தனக்கு ஏற்பட்ட அவமானங்களை, அவமதிப்புக்களை, ஒதுக்கப்பட்டதை மிக நுட்பமாக நூல் முழுவதும் பதிந்துள்ளார் மாலினி சிப். " ஒருவருக்கு  மட்டுமே தனிப்பட்ட முறையில் நிகழ்வு நிகழ்ந்ததுகூட சக்தி மிக்க ஆயுதமே . அதை மறைப்பதும் ,புதைப்பதும் கூடவே கூடாது. அது மக்கள் மத்தியில் பேசப்பட்டு, ஆதரவு திரட்டப்படும் பட்சத்திலேயே பின்னாளில் அது போன்ற அவலம் நிகழாமல் தவிர்க்க இயலும்" (பக்கம் 234 ) . ஆம் உண்மைதான், இந்த நூலின் நோக்கத்தை விளக்கும் பகுதி இது எனலாம்.

                                                      மாற்றுத் திறனாளிகள் மற்ற நாடுகளில் மனித நேயத்தோடு அணுகப்படுவதற்கும் , நமது நாட்டில் அவ்வாறு அணுகப்படாமைக்கும் என்ன காரணம் என்பதனை மாலினி சிப் சொல்லும் விதம் சிந்திக்கத்தக்கது, மிகவும் தீவிரமாக விவாதிக்கப்படவேண்டியதும்கூட " ஒழுங்கற்ற எங்கள் உடல்களை மட்டும் பார்த்து மதம் சார்ந்த நம்பிக்கையாக முற் பிறப்புப் பாவங்களின் சின்னமாகவே எங்களைக் கணிக்கிறார்கள். பல தடவை ' நான் அப்படி என்ன பாவம் செய்து விட்டேன் ? ' என்று நிஜமாகவே  நான் யோசித்தது உண்டு " பக்கம் - 244. இந்த்  நாட்டில் மாற்றுத் திறனாளிகள் ஏன் மனிதாபிமானத்தோடு நடத்தப்படுவதில்லை என்றால், இவர்கள் முற்பிறவியில் பாவம் செய்தவர்கள், அதனால் இப்படி இருக்கின்றார்கள் என்னும் மன்ப்பான்மை ஊறிப்போயிருக்கிறது என்கின்றார். ஒரு கொலைகாரனுக்கு தண்டனை கிடைத்தால்  எப்படி மக்கள் அவன் செய்த செயலுக்கு தண்டனை என்று நினைக்கின்றார்களோ , அதைப்போல மாற்றுத்திறனாளிகள் என்றால் அவர்கள் முற்பிறப்பில் கொடுமை செய்தவர்கள் என்ற நினைப்பு மக்கள் மத்தியில், மதத்தின் அடிப்படையில் இருக்கிறது என்கின்றார்.

                                                                        இந்த நூல் என் அம்மாவுக்கு என்று மாலினி சிப் காணிக்கையாக்கியுள்ளார். மாலினி சிப்-ன் வெற்றிக்கு அவரது அம்மா எவ்வளவுதூரம் உறுதுணை என்பதனை படித்துப்பாருங்கள் , புரியும்.இப்படி அம்மாக்கள் வாய்த்தால், எந்த மாற்றுத்திறனாளியும் மனம் கலங்க மாட்டார்கள். படிக்க வேண்டிய புத்தகம், மற்றவர்களையும் படிக்கச்சொல்ல வேண்டிய புத்தகம். ஒரு நல்ல புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்த ஐஸ்வர்யனுக்கும், சிறப்பாக வெளியிட்டுள்ள விகடன் பிரசுரத்திற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.