Showing posts with label தமிழ் கவிதை. Show all posts
Showing posts with label தமிழ் கவிதை. Show all posts

Monday, 29 April 2024

உலகத் தமிழ்நாள்

 

 உலகத் தமிழ்நாள்

 

உலகத் தமிழரெல்லாம்

ஒன்றாய்க் கூடுவோம்..

உலகத் தமிழ் நாளாம்

ஏப்ரல் இருபத்து ஒன்பதை

எழுச்சியாய்க் கொண்டாடுவோம்..

 

எந்தக் கவிஞர் தமிழில்

புரட்சிக் கவிஞருக்கு இணையாய்?

உலகில் எந்தக் கவிஞர் பாடினார்?

புரட்சிக்கவிஞர்போல் தம் தாய்மொழியை..

எங்கள் வளமும் எங்கள் வாழ்வும்

மங்காத தமிழ் என்று

சங்கை முழங்கிய பிற கவிஞர் யார்?

 

எக்கவிஞரை நினைக்கையிலே

உள்ளத்தில் உணர்ச்சி கூடுகிறது?

எவர் கவிதையைப் படிக்கையிலே

அநீதிக்கு எதிராய்

அணிதிரளும் படையில் நாமும்

இணையவேண்டும் எனும்

எண்ணம் உதிக்கிறது?


அடுக்கடுக்காய் ஆசிரியர் பணியில்

தண்டனைகள் கொடுத்தபோதும்

அஞ்சாமல் கண் துஞ்சாமல்

களப்பணியில் நின்று

பாரதிதாசன் போல் பணியாற்றிய

பிற கவிஞர் எவர் தமிழ்நாட்டில் ?

 

சங்க காலத்திற்குப் பின்னே

இயற்கையின் எழிலை தமிழில்

இவர் போல் எடுத்து இயம்பியவர் யார்?

 

‘சுயமரியாதை உலகைச்’ சமைக்க

உந்துதல் தரும் கவிதை எவரின் கவிதை?

சாதி மத இருட்டறையில் உள்ள

உலகத்தின் செவிட்டில்

கவிதைகளால் அறை கொடுத்த

வேறு கவிஞர் யார் உலகில்?

 

‘பாரடா உனது மானுடப்பரப்பை’

என உலக மக்களெல்லாம் ஒன்று

என உணர்த்தும் கவிதை எவரின் கவிதை?

பேத உலகினைப் பெயர்க்கும் கடப்பாரையாய்

வந்த கவிதைகள் எவரின் கவிதைகள்?

 

இளையோர் காதலை எழுதிக் குவித்த

கவிஞர்கள் உலகமெலாம் உண்டு..

முதியோர் காதலைக் கவிதையில்

கொண்டு வைத்த பிற கவிஞர் எவர் உலகில்?

 

நாற்பதானாயிரம் வரிகள் கவிதைகளாய்..

எளிய தமிழில்   புரியும் வகையில்

இத்தனை பா வகையில்

பாடிய பிற  கவிஞர் யார்?



 

உரக்கச்சொல்வோம்..

உணர்ச்சியோடு சொல்வோம்..

உலகத் தமிழர் எல்லோரும்

ஒன்றாய் இணைந்து சொல்வோம்..

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

பிறந்திட்ட ‘ஏப்ரல் இருபத்து ஒன்பதே’

உலகத் தமிழ் நாள்…

                       முனைவர் வா.நேரு

                        29.04.2024

 

 

 

 

 

 

 

 

 

Wednesday, 19 December 2012

சாகப்போகும் விவசாயிகளே!


கடன் வாங்கி
நாத்து விதைத்து
மீண்டும் கடன் வாங்கி
நாத்தை நட்டு
பயிராகிப் பார்த்தவேளை
பருவ மழை பொய்த்துப்போனது !

கண்மாய் பெருகிவிடும்
கன மழை பெய்துவிடும்
பயிரெல்லாம் நெல்லாகி
அம்பாரம் குவிந்துவிடும்
அடைத்து விடலாம்
கடனை என்றெண்ணி
நம்பி விதைத்த பயிரெல்லாம்
சருகாகி காய்ந்து போக‌
வானம் பார்த்த விவசாயம்
வயிற்றைக் காயப் போட்டதடா !

கண்மாயில் தண்ணியில்லை
பக்கத்து கிணத்து மோட்டாரிலே
இன்னும் கொஞ்சம் கடனை
வாங்கியாவது காப்பாத்திடலாம்
பயிரையென்னு
விடிய விடிய உட்கார்ந்திருந்தும்
வீணாப்போன கரண்ட் இல்லே

கரண்டில்லை ,தண்ணியில்லை
அன்பார்ந்த விவசாயிகளேன்னு
அகில இந்திய வானொலி
காலையிலே கொட்டி முழக்கும்
கூத்துக்கு மட்டும் குறைவில்லே!

சேற்றில் நெட்டியைப் போட்டு
மிதித்தற்கு காசு வேணாம்
வரப்பு வெட்டி வாய்க்கால் வெட்டி
ஒத்தாசையா நின்னு
உழைத்ததுக்கு காசு வேணாம்
இராப் பகலா
மோட்டை அடைச்சு
தண்ணீர் பாய்ச்சி
நாத்தை வளர்த்ததற்கு காசு வேணாம்

செத்துப் போன
பிள்ளையைப் பார்த்து
கதறி அழும் பெத்தவன் போல‌
கருகின பயிரைப் பார்த்து
மனதுக்குள் கதறி அழும்வேளை
வட்டிக்கு கடன் கொடுத்த
பணக்காரன் வாறானே !
அவனுக்கு கொடுக்க காசு வேணுமே
என்ன செய்ய ?

பாறைக்குள்ளிருக்கும்
தண்ணியெடுத்து
பயிரை விளைய வைக்கிறோம்ன்னு
இத்தாலிக்காரன் சொல்லுகிறான்

இருக்கிற தண்ணியை
பகிர்ந்து கொடுக்க வக்கில்லே!
இல்லாத பகுதிக்கு
தண்ணி வர வைக்கிற‌
திட்டம் ஏதுமில்லே!

பின்னே எதுக்கு
அன்பார்ந்த விவசாயிகளே!
இனிமே சொல்லுங்கடா
அரசாங்க வானொலியில்
சாகப்போகும் விவசாயிகளே!
                                                      வா. நேரு .

எனது கவிதையை வெளியிட்ட எழுத்து.காம் -ற்கு நன்றி .

Sunday, 16 December 2012

உலகம் அழியும் நாளில் ...?

பால் குடித்தார்
பிள்ளையார்
ஒரு நாள் புரளி
ஓரிரு நாளில் முடிந்தது

அழியப் போகிறது
உலகம் !
சில நாளாய்
புரளி கொடி கட்டிப்பறக்கிறது!

உலகம் அழியும் நாளில்
நாம் அழியாமல்
தப்பிப்பது எப்படி ?
பிரார்த்தனை வகுப்புகள்
ஒரு மதத்தால்

உலகம் அழியும் நாளில்
தப்பிக்க
பரிகாரங்கள்
பட்டியலிடும்
இன்னொரு மதத்து
ஜோதிடர்கள் !

பியூஸ் வயர் போட்டால்
சரியாகும் மின்சாரமா
உங்கள் கடவுள் ?
பிரார்த்தனையும்
பரிகாரமும் பியூஸ் வயரா?

அழியாது ! அழியாது என
உரத்துச் சொன்னாலும்
கேட்காத இவரெல்லாம்
இருபத்தி இரண்டு தேதியில்
தற்கொலை செய்து கொள்வாரோ!

இல்லை தன்னிடத்தில்
உள்ள சொத்தையெல்லாம்
இருபதாம் தேதியே
ஏழைகளுக்கு கொடுத்து விடுவாரோ!

கொள்ளை சிரிப்பு வருகுதே!
இந்தக் கோமாளித்தனங்களைப்
பார்த்து ! பார்த்து !

எழுதியவர் :வா. நேரு
நாள் :2012-12-16 15:10:57
நன்றி : எழுத்து.காம்

Sunday, 22 January 2012

ஏடெழுதும் பார்ப்பனர்களே!

ஏடெழுதும் பார்ப்பனர்களே!
ஏதேனும் ஒருநாளிலாவது
இதயத்தின் ஓரத்திலாவது
உண்மையை எழுதுதல் வேண்டும்
எனும் எண்ணம் உண்டா ?

சிறீரங்கநாதர் சொர்க்கவாசல்
திறப்பன்று விரஜாநதி மண்டபத்தில்
பட்டர்களின்
வேத விண்ணப்பங்களை
கேட்டாராம் !

சொர்க்க வாசல்
திறப்பு பற்றி
பக்கம் பக்கமாய்
பத்திரிகைகளில்
டவுட் தனபாலுக்கு
எந்தவித டவுட்டுமில்லே

தினமணியில்
இது உண்மையா?
சரிதானா? நியாயம்தானா?
இது உங்கள்
கடிதத்திலும் இல்லை!
தலையங்கத்திலும் இல்லை!

சொர்க்க வாசலா!
திறப்பா ! அப்படியா?
என்று மாமிகள் எல்லாம்
செய்தி மட்டும்
விசாரித்துக் கொண்டிருக்க
உண்மைதான் என்று
நம்பி
நாலு மணிக்கு எழுந்து
ஏழு மணி நேரம்
வரிசையில் நின்னு
சொர்க்கவாசல் பார்க்க
கோவிலுக்குப் போய்வந்த
எங்க சின்னாத்தா
காலு ஒடிஞ்சு கிடக்கா
கூட்டத்திலே
மிதிபட்டு

படிக்காத பாமர ஜனங்க மண்டையிலே
ஏத்திட்டிங்கே
எங்க மக்களையெல்லாம்
மரமண்டையா ஆக்கிட்டீங்க

உனது நம்பிக்கை
என்கிறாய்
உருக்குலைக்கிறதே
எனது உறவுகளை
உடலால் உள்ளத்தால்
எப்படி பார்த்துவிட்டு
அது உனது நம்பிக்கை
என நான் எட்டிச் செல்வது

நாங்களும் சொல்லிப்
பார்க்கிறோம்
விடாமல்தான்
அவங்க காதுக்கு
எங்க செய்தி
போகுமுன்னே
எட்டுக் கால் பத்தியிலே
கூசாமல் புளுகுறீங்க !
முதியவர்கள் அப்படியே
வளர்ந்துவிட்டார்கள் !

மூளையிலே ஊனமாகி
விட்டார்கள் !
வருகுது பார் !
இளையோர் பட்டாளம் !
இணையத்திலும்
பேஸ் புக்கிலும் உங்களது
பொய்மைகளை நொறுக்கி!

பெரியார் வழிப்
பேரப்பிள்ளைகள் வருகிறார்கள் !
கைகளில் கணினியோடும்
கண்களில் பொய்மை
கண்டு பொங்கும்
வெறியோடும்!
உங்கள் சொர்க்கவாசல்
புரட்டும் இனி
ரொம்ப நாள் தாங்காது !

- வா.நேரு நன்றி - விடுதலை நாளிதழ் -14-1-12

Tuesday, 25 October 2011

உதைக்கும் கழுதையின்

பூமாதேவி
ஒரு கடவுள்
பன்றி
ஒரு கடவுள்
பன்றியும்
பூமாதேவியும்
போகம் செய்ததால்
நரகாசுரன் பிறந்தானாம்

கதை சொன்னேன்
இந்தக் கதை
எல்லாம் யார்
நம்புகிறார் என்றான்

எந்தக் கதையை
வைத்து சேது
சமுத்தரத் திட்டம்
தடுக்கப்பட்டது
நிறுத்தப்பட்டது என்றேன்

ஆமாம்ல என்றான்
தீபாவளி என்றால்
தீப ஒளித் திருநாள்
அல்லவோ என்றான்

இல்லை இல்லை
இது ஆரியப் பகட்டு
உடன்பிறப்பே உனக்கே
இது புரியவில்லையே என்றேன்

உதைக்கும் கழுதையின்
காலுக்கு உதை வாங்கியோன்
தங்கத்தால் இலாடம் கட்டுவதும்
ஆட்டை அழைத்து
ஓநாய்க்கு விருந்தளி
எனக் கூறுவதும்
கொட்டும் தேளை
எடுத்து கண்ணில்
ஒத்திக் கொளவதும்
தமிழன் தீபாவளி
கொண்டாடுவதும் ஒன்று
என்றார் அண்ணா!

அறிவாயோ !
உடன்பிறப்பே அறிவாயோ!
அண்ணாவின் படத்தோடு
கட்சி நடத்துவோர்
தீபாவளி வாழ்த்துக்
கூறுகின்றார்
அது ஆரியம்
நுழைந்ததால்
விழுந்த ஓட்டை

உனக்கோ பழைய
வரலாறை நூலை
அறியாததால்
வந்த ஓட்டை என்றேன்


தனக்கு ஏற்பட்ட
இழிவைக் கொண்டாடும்
இனமாய் தமிழனை
தர்ப்பைப்புல்காரன்
ஆக்கி வைத்தான்
தடுமாறலாமா ?
உடன்பிறப்பே தடுமாறலாமா?
தடம் மாறலாமா ?
உடன்பிறப்பே தடம் மாறலாமா?

Friday, 2 September 2011

பசியால் உலர்ந்து....


கொடிது கொடிது
பெற்றோரின் கண்
முன்னால்
பிள்ளைகள் சாவது கொடிது
அதனினும்
பசிக்கிறதே எனக் குழந்தைகள்
அழுக
கொடுக்க எதுவும் இல்லாமல்
நான் அழுக
என் கண்முன்னால்
நான்கு குழந்தைகள்
பசியால் உலர்ந்து
செத்துப்போனார்கள்
எனக் கதறி இருக்கிறார்
சோமாலியா நாட்டுத் தாய் !

எல்லாம் வல்ல !
இறைவனின் பெயரால்
கைகளில் துப்பாக்கியோடு
என் நாட்டுக் குழந்தைகளுக்கு
எதுவும் கொடுக்காதே
என்கிறார்களாம் சிலர் அந்நாட்டில்

உயிருக்குப் போராடும்
குழந்தைக்கு உதவும்
கரங்கள் எந்த மதத்துக்
கரங்களாய் இருந்தாலென்ன?
மதத்தால்
சாகலாமா மனிதம் ?

உலகில்
பசிக்கும் குழந்தையெல்லாம்
என் குழந்தை என
மதம் தாண்டி நாடு தாண்டி
பாலூட்டூம் சோறூட்டூம்
நாளே மனிதர்கள் நாள் !

அதுவரை
உண்டு களித்து
உறங்கி விழித்து
எவருக்கோ என
போய்க்கொண்டிருக்கிறோம்
நீங்களும் நானும்
மனிதர்கள் எனும்
பெயர் தாங்கி !

வா. நேரு

Sunday, 7 August 2011

மகிழ்ச்சியாய் நம்பிக்கையாய்

மகிழ்ச்சியாய் நம்பிக்கையாய்
முகத்தில் அரும்பும்
வியர்வையை
தவழ்ந்து வரும்
இளந்தென்றல்
முகத்தில் படர்ந்து துடைக்கும் !

பறவைகள் தங்கள்
இன்னிசையால் எழுப்பும்
ஓசை உற்சாகத்தை
அள்ளி அள்ளி கொடுக்கும்

மகிழ்ந்து பேசி நடக்க நடக்க
நேற்றைய கவலையெல்லாம்
நம்மை விட்டு விலகி ஓடும

நடைப்பயிற்சியால்
மகிழ்ச்சியாய் நம்பிக்கையாய்
புலரும் காலைப் பொழுது