Showing posts with label வா.நேருவின் படைப்புகள் பற்றி. Show all posts
Showing posts with label வா.நேருவின் படைப்புகள் பற்றி. Show all posts

Tuesday, 6 May 2025

கனவு போலத்தான் நடந்தது நூல் பற்றி திரு.இறையன்பு சார் அவர்கள்...












இன்றைக்கு வெளி வந்த ராணி இதழில் ,தமிழ் நாட்டின் மேனாள் தலைமைச்செயலாளர் திருமிகு.வெ.இறையன்பு அவர்கள் எனது நூலான 'கனவு போலத்தான் நடந்தது ' என்னும் நூல் பற்றியும் ,எனது பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.வீரிசெட்டி சார் அவர்களைப் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். மிகவும் நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.மிகப்பெரிய விருது பெற்ற உணர்வும் , நிறைவும் எனக்கு ஏற்பட்டது. திரு வீரிசெட்டி சாரின் மகள் திருமதி மணிமொழி ஆசிரியர் அவர்கள் இன்று(06.05.2025)  பெரியகுளத்தில் இருந்து   செல்போனில் அழைத்து அழுவது  போல உருக்கமாக அவரது அப்பாவைப் பற்றிப் பேசினார்.
 நன்றி தெரிவித்தார்.பலரும் தொலைபேசியில் அழைத்துப்பாராட்டினர்.இந்த நூலை அழகாக அச்சடித்துக்கொடுத்த கீழடி வெளியீட்டகத்திற்கும்,அதன் உரிமையாளர் அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும்,ஓர் அருமையான அணிந்துரையை அளித்த திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் மேனாள் ஆங்கிலத்துறைத் தலைவர் பேரா.கி.ஆழ்வார் சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை இந்த  நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.






 

Monday, 7 October 2024

கனவு போலத்தான் நடந்தது (அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்)...அர்ஷா

 தோழர் அர்ஷா அவர்கள் வாருங்கள் படிப்போம்,வாருங்கள் படைப்போம் குழுவின் மூலமாக அறிமுகமானவர்.மிகத் தீவிரமான வாசகர்.மிக நல்ல நூல் திறனாய்வாளர்.அவர் எனது 7-வது புத்தகமான,கனவு போலத்தான் நடந்தது என்னும் நூலினை வாசித்துவிட்டு, முக நூலில் அவரது கருத்துகளைப் பகிர்ந்து இருந்தார்.ஒரு நூல் ஆசிரியனுக்கு வேறு என்ன பரிசு வேண்டும்? ஒருவர் படித்து தன் கருத்தினைப் பகிர்வதைத் தவிர...நன்றி தோழர் அர்ஷா அவர்களுக்கு... நூல் பற்றிய அவரது கருத்துகள் கீழே... 


முனைவர்


வா. நேரு அவர்களின் கனவு போலத்தான் நடந்தது (அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்)

நூல் மாணவர்களின் வாழ்க்கையில் ஆசிரியர் திரு. வே. வீரி செட்டி அவர்களின் தாக்கத்தை அழகாக விவரிக்கிறது. கீழடி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூல், கற்பித்தல் முறைகளைத் தாண்டி, மாணவர்களிடம் ஆசிரியர் ஏற்படுத்திய ஆழமான மன உறவுகளைப் பற்றிச் சொல்லுகிறது.
திரு. வீரி செட்டி, ஒரு கல்வியாளரைத் தாண்டி, மாணவர்களின் அறிவுத் தாகத்தைத் தூண்டி, ஒரு தந்தையைப் போல் வாழ்வை வழிகாட்டிய ஆசிரியர். அவரது செயல்பாடுகள், ஒரு நல்ல ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரி குறித்து இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்நூல், ஜப்பானிய எழுத்தாளர் சுதூகோ குராயான் எழுதிய "டோட்டோசான்" நூலின் நினைவுகளைப் புத்துயிர்ப்பிக்கிறது. டோட்டோசான் பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறன்களை அன்புடன் வளர்த்தார் என்று அந்த நூலில் விவரிக்கப்படுகிறது. இதை வாசித்தபோது, திரு. வீரி செட்டி அவர்களும் இதுபோல தங்கள் மாணவர்களை வழிநடத்தி, அவர்களின் திறமைகளை வெளிக்கொணர உதவியதை பார்க்க முடிகிறது.
10வது வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களை ஆசிரியர்கள் இல்லாத நேரங்களில் அதனை நிரப்பும் வகையில் தானே சென்று கற்பித்த திரு. வீரி செட்டி, மற்ற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
பள்ளியில் சிறப்பாக படிக்கும் ஒரு மாணவி பள்ளிக்கு வராமல் இருந்தது அவரை கவலைக்குள்ளாக்கியது. பல ஆசிரியர்கள் கவலைப்படாமல் இருந்தபோது, அவர் நேரில் மாணவியின் வீடு தேடி சென்றார். நிலைமையைப் புரிந்து கொண்டு, பெற்றோர்களிடம் நீண்ட நேரம் விவாதித்து, இஸ்லாமிய சமுதாயத்தில் பெண் பிள்ளையைப் படிக்க அனுமதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அவர் பெற்றோர்களுக்கு பெண் கல்வி பற்றி புரிய வைத்து, அம் மாணவியை பள்ளிக்கு அனுப்ப செய்கிறார். அந்த மாணவி தனது உயர்கல்வியை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறாள். இது, இந்த ஆத்மார்த்தமான சமுதாய பணியை தலைமை ஆசிரியரின் பல சேவைகளைக் குறிக்கின்ற புத்தகமாக இது அமைந்திருக்கிறது.
மேலும், மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். மாணவர்களுக்காக விளையாட்டு உபகரணங்களை செல்வந்தர்களிடமிருந்து பெற்று வழங்குகிறார். கிராமப்புறம் வந்த மாணவர்களை கற்றுக்கொள்ளத் தூண்டும் வகையில், அவர் ஒழுங்குகளை ஏற்படுத்தி, பாடத்தை எடுக்கும் பணியையும் செய்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் பல துயரங்களை சந்தித்திருந்தாலும், அவர் மாணவர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்திருக்கிறார். இதனால், அவரது வாழ்க்கை பல துயரங்களை எதிர்கொண்டு, அதையெல்லாம் மீறி, மாணவர்களின் நலன் குறித்து ஒருபோதும் கவலைப்படாமல் உழைக்கிறார்.
இந்த நூல், மாணவர்களின் நலனில் அயராது உழைத்த ஆசிரியரின் உன்னத குணங்களை நமக்கு உணர்த்துகிறது. அவர், மாணவர்களுக்கு ஒரு கல்வியாளர் மட்டுமல்ல, ஒரு முழுமையான வாழ்க்கை வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
இந்த நூல், ஒரு தலைமை ஆசிரியரின் பாத்திரம் எவ்வளவு முக்கியமானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. இந்த அற்புதமான நூலை படைத்த முனைவர் வா. நேரு அவர்களுக்கு நன்றி!
அர்ஷா ❤️

Tuesday, 11 June 2024

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய 'எழுத்தே வாழ்க்கை ' என்னும் நூலைப் பற்றிய மதிப்புரை..

 எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய 'எழுத்தே வாழ்க்கை ' என்னும் நூலைப் பற்றிய மதிப்புரையை 'வாருங்கள் படிப்போம் 'குழுவில் வழங்குவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.எனக்கும் நிறைவான உரையாக அமைந்த உரை இந்த உரை.கேட்டு விட்டுத் தங்கள் கருத்துகளை பின்னோட்டமாகப் பதிவிட்ட  தோழமைகளின் கருத்துகள் கீழே. நிகழ்வின் யூ டியூட் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.வாய்ப்பு இருப்பவர்கள் கேட்டுப்பாருங்கள். நன்றி.

https://www.youtube.com/live/p7egdyU4ecc?si=YgSts25fCX7nmlpE



தோழர் மனம் நிறைந்த வாழ்த்துகள். பல நிகழ்வுகள் புதிதாய் கேட்க பயன்படும். ஒருசில மட்டுமே கேட்டு கற்க பயன்படும். அவற்றில் உங்கள் திறனாய்வு முதன்மையானது. சதாப்தி ரயில் மாதிரி தடையில்லாமல் பயணித்தீர்கள். பல நிகழ்வுகள் என்னோடு ஒன்றியிருந்தது. பழைய புத்தகக்கடை அவற்றில் ஒன்று. நான் திருவல்லிக்கேணியில் எட்டு வருடங்கள் தங்கியிருந்தேன். புத்தகப் புழுவாக இருந்தவனை சிந்திக்க வைத்ததில் இந்த பழைய புத்தகக்கடைக்கு உண்டு. அவ்வளவு பழைய புத்தகக்கடைகளை நீங்கள் எங்கும் பார்க்க முடியாது. அக்காலத்தில் கையில் ஒரு ஐம்பது ரூபாய் இருந்தால் விலை மதிக்க முடியாத புத்தகங்களை சுலபமாக வாங்கலாம். உலக அறிவே அங்கு தெருவில் கொட்டிக் கிடக்கும். தொலைபேசி துறை பற்றி பேசினீர்கள். ஒரு டிரக் கால் போட்டு, அதை இரு தெரு தாண்டி பேசி.... இரவு பகல் பாராமல் எவ்வளவு தொழிலாளர்கள்.... எவ்வளவு உழைப்பு. வசதியை ஏற்படுத்த அரசுத்துறை. வசதி வந்த பிறகு லாபம் ஈட்ட தனியார் துறை.திரு விட்டல்ராவின் வாழ்வின் உன்னதம் மீண்டும் தொலைதொடர்பு துறை வந்தது போலிருந்தது. நயாகரா நீர் வீழ்ச்சியை அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்த ரசித்த விதம் அருமை. புத்தகங்கள் படிப்பதின் பயனை, வீட்டிற்கு ஒரு நூலகம் என்ற முனைப்பும், அதனை 80 வயது மூதாட்டி அம்மையாரின் துணையுடன் சொன்ன விதம் அருமை. பழைய புத்தக வியாபாரின் நேர்மை மனதை தொட்டது. மீண்டும் காத்திருக்கிறோம் உங்கள் திறனாய்வில் கற்க.

எழுத்தாளர் கோபி.சேகர்..

--------------------------------------------------------------------------------------------------------------------------


இப்போதுதான் யூடியூபில் பார்த்தேன். 

எழுதுபவர்களுக்கும், புதிதாக எழுத வருபவர்களுக்கும் நிறைய தகவல்களை கொடுத்துக்கொண்டே போகிறார் அண்ணன் நேரு அவர்கள்.

இரவு பதீனோரு மணிக்கு எழுதுவது, அதிகாலை 4-6 எழுதுவது, அதை தினந்தோரும் கடைபிடிப்பது என்பன பயனுள்ள தகவல்கள்.

எழுதும் முறை பற்றி பேசும்போது ஒளிவண்ணன் அவர்களின் பேச்சுப் பதிவு முறையை குறிப்பிட்டது புதிதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது.

இன்னும் பலர் காகிதத்தில் எழுதி வருவதை குறிப்பிட்டார்.

நான் பல காலமாக லேப்டாபில்தான் எழுதி வருகிறேன் என்பதை நான் நினைத்துப் பார்த்துக்கொண்டேன்.

நல்ல, சரளமான, அலுப்பூட்டாத திறனாய்வு. 

அண்ணன் நேரு அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ம.தோல்காப்பியன்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

மிகக் குறுகிய ஒருநாள் இடைவெளியில் சிறப்பான திறனாய்வு..எஸ் ராவின் இலக்கிய வாழ்க்கை குறிப்பாக ஒரு நாளைக்கு 6 மணி நேரம் எழுதுவது,வரும் அத்தனை கேள்விகளுக்கும்,அவர் பதில் அளிப்பது என அவரைப் பற்றிப் பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.வீட்டுக்கொரு நூலகம் முன்னெடுப்பைப் பற்றி அவைநாயகன் அவர்களும் ஒளி வண்ணன் அவர்களும் பேசியது அவசியம் தேவையான ஒன்று...மொத்தத்தில் சிறப்பான நிகழ்வை அளித்த நேரு அண்ணாவிற்கும்,பங்கேற்ற தோழமைகளுக்கும் நன்றி!!
பேரா.உமா மகேஸ்வரி

---------------------------------------------------------------------------------------------------------------------------

மிகவும் அருமையான ,
தகவல்கள் பொதிந்த 
திறனாய்வு. 

எப்போதும் ஆசைபட்டதுண்டு: 
அடுத்த பிறவி என ஒன்றிருந்தால் 
எஸ்.ரா வின் ஜோல்னா பையாக பிறக்க வேண்டும் என. 

சிறப்பான திறனாய்வு எனவும் சொல்லலாம் . 
இளைய சமுதாயத்திற்குத் தேவையான 
பாட உரை எனவும் சொல்லலாம். 

வாழ்த்துகளும் 
வணக்கங்களும் .
-கலா கோபி.

----------------------------------------------------------------------------------------------------------------------------

நேற்றைய நிகழ்வு.. ஒரு திறனாய்வு போல் இல்லாமல்... வாசிப்பு..
புத்தக வாசிப்பை பிள்ளைகளிடம் எப்படி கடத்துவது,
எழுதுவதற்கான நேரம் ஒதுக்குதல்.. 
இப்படி சுய பரீட்சை செய்து பார்த்த நிகழ்வாக இருந்தது..

அதிலும்.. குறைந்த நேரத்தில் தயார் செய்வதில் அழுத்தம் 
அதிகமாக இருக்கும்..

எத்தனை அழுத்தம் இருந்தாலும்..
தன் வாசிப்பை, தன் திறனாய்வின் வழியே அழுத்தமாய் சொன்ன 
நேரு சார் க்கு.. மனதினிய வாழ்த்துகள்...

எழுத்தாளர் வினோத் பரமானந்தன்

----------------------------------------------------------------------------------------------------------------------------

அருமை நேரு சார். வாசிப்பையும் எழுத்தையும் நேசிக்கும் ஒருவரைப் பற்றி சுவையாக எடுத்துரைத்தீர்கள்.  வகுப்பரையில் அமர்ந்து பேராசிரியரின் உரை கேட்பது போல் இருந்தது.

ரெஜினா சந்திரா...

----------------------------------------------------------------------------------------------------------------------------

என்னால் முழுமையாக ஜூம் இணைப்பில் கேட்க முடியவில்லை. யூடியூபில் தான் பார்த்தேன். ஒரு புத்தகம் வெளியிட அதன் பின்னால் எத்தனை பேரின் உழைப்பு திறன் இருக்கிறது. ஆனால் அது எத்தனை பேரால் வாசிக்கப் படுகிறது என்பதை நினைத்தால் வருத்தம் தான் வருகிறது.‌எஸ் ரா அவர்களின் சிறந்த நூல் என்றே சொல்லலாம்.
பாராட்டுக்கள் நேரு அண்ணா.

நூலகர் சுசிலா

-----------------------------------------------------------------------------------------------------------------------------

முழுமையாக உரையை கேட்டு மகிழ்ந்தேன். ஒரு நிமிடம் கூட சேதம் செய்யவில்லை. எழுத வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான திறனாய்வு. நேரு ஐயா அவர்களின் பேச்சு மிகவும் தெளிவாகவும், எளியவர்கள் புரியும் வண்ணம் இருந்தது. எனக்கு இந்த திறனாய்வில் என்னை மாற்றி கொள்ள நினைப்பது பேப்பர் மற்றும் பேனாவில் எழுதுவதை தவிர்த்து கணினியை நேரடியாக பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் எனக்கு தோன்றியது. வாசிக்கும் பழக்கம் நிச்சயமாக வேண்டும் என்பதும் அதே போல் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது. நிகழ்ச்சி அருமை. நன்றி குழுவினருக்கு.
Dr.V.Mohanraj.,Ph.D.

----------------------------------------------------------------------------------------------------------------------------

நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்விலேயே கருத்து தெரிவித்த அண்ணன் கோ​.ஒளிவண்ணன்​, அண்ணன் ​லோ. குமரன்​,அய்யா புலவர்  நா​நா ஆறுமுகம்​ உள்ளிட்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. மறுநாள் காலை ​தொலைபேசியில் அழைத்துப்பாராட்டிய அய்யா  நட்புத்தமிழ் வட்டம் மகாலிங்கம் அவர்களுக்கும் நன்றி.




Sunday, 31 December 2023

மதிப்புரை: கனவு போலத்தான் நடந்தது…….

 

மதிப்புரை:

கனவு போலத்தான் நடந்தது…….

வீரிசெட்டி என்ற சிறப்பான ஆசிரியர் பற்றிய பெருமைக்குரிய செயல்பாடுகள், சீர்மிகு சுருக்கமான வாழ்க்கை வரலாறு,தேவதானப்பட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் பெரிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் .அப்பாவின் வழிகாட்டுதலோடு வாழ்ந்தவர்கள் அந்தக் குடும்பத்தினர்.தாய்மாமனின் உதவியோடு கல்வி கற்று ஆசிரியர் பணிக்கு வந்தவர்.

பண்ணைக்காடு,நத்தம்,தேவதானப்பட்டி,தொண்டி,சாப்டூர்,தெற்குத்தெரு போன்ற ஊர்களில் கணித,ஆங்கில ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ,உயர் பதவிகளான மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாகவும்(C.E.O), I.M.S.ஆகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.




வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை என இறுதிவரை எளிமையாக உடை அணிந்து,ஆசிரியர் பணிக்கு எடுத்துக்காட்டாக,இலக்கணமாகத் திகழ்ந்தவர்.ஆங்கில புலமை அதிகம் உண்டு.கணிதப் பாடம்,ஆங்கிலப்பாடம் கற்பிப்பதில் இவர் ஒரு இமயம்.மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வார்.அவர்களது கல்வி மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சி,இரவு படிப்பு என பல யுத்திகளை கையாண்டுள்ளார்.மாணவர்களைக் கண்டிப்பதிலும்,அவர்களை சீர்படுத்துவதிலும்,மாணவர்களைத் தன் வயப்படுத்துவதிலும் ஆற்றல் கொண்டவர்.மாணவர்கள் இவர் மீது வைத்துள்ள மதிப்புக்கு உதாரணம்தான் இவரிடம் படித்த மாணவர் முனைவர்.வா.நேரு.அவர்கள் எழுதிய இந்தப்புத்தகம்.

கல்விக்கான ஆசிரியர் என்பதால் மட்டும் இவருக்கு இந்தச்சிறப்பு கிடையாது.இவர் ஒரு சமூக ஆர்வலர்,நேர்மையானவர்.தன் இலக்கு நோக்கி தடைகளை உடைத்து நடை போட்டவர்.பல பள்ளிக்கூடங்களுக்கு சிறப்பான கட்டமைப்பை செய்து கொடுத்துள்ளார்.அரசிடம் அனுமதி பெறுவதிலும்,கட்டமைப்புக்கான  நிதி திரட்டுவதிலும்,பொதுமக்கள் முக்கிய பெரிய மனிதர்களை அணுகுவதிலும்,நிதியைக் கையாளுவதிலும் சிறப்பான பங்களிப்பைச்செய்துள்ளார்.உடன் பணியாற்றும் ஆசிரியர்களின் நலனிலும் உடன் பணியாற்றும் ஆசிரியர்களின் நலனிலும் அவர்களுக்கான உரிமைகளைப் பெற்று தருவதிலும் கவனமுடன் இருந்துள்ளார்.இயற்கையிலேயே ஒரு தொழிற்சங்கவாதிக்கான குணத்தை உடையவராகத் திகழ்ந்துள்ளார்.

எதார்த்தமான நிலைபாட்டைக் கையாண்டுள்ளார்.ஆங்கில புலமைக்கு அதிக முக்கியத்துவம்,மாணவர்களிடம் அதிகக் கண்டிப்பு,உயர் அதிகாரிகளுக்கு உரிய மரியாதை,செய்யும் ஆசிரியர் பணியில் அதிக ஈடுபாடு,உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வது என இவர் வாழ்ந்துள்ளார்.அதற்கான பல நிகழ்வுகள் புத்தகம் எங்கும் நிறைந்துள்ளது.

வீரிசெட்டி என்ற ஆசிரியருக்கு புத்தக ஆசிரியர் முனைவர் வா.நேரு மாணவராக அமைந்ததுதான் பெருமைக்குரியது.நேரு என்ற இந்தப் புத்தக ஆசிரியர் இல்லாவிட்டால் வீரிசெட்டி என்ற ஆசிரியரும் பத்தோடு பதினொன்றாக மறக்கப்பட்டிருப்பார்.வீரிசெட்டி அவர்களுக்கு நேரு அளித்த இந்த எழுத்துகள்தான் அவருக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருது.எளிய நடை,சிறப்பான வடிவமைப்பு.

பா.சண்முகவேலு,

தலைவர்,மதுரை வாசகர் வட்டம்,சூர்யா நகர் பகுதி,கே.புதூர்,மதுரை-7.

31.12.2023

மனமார்ந்த ஒரு மதிப்புரையை எனது ‘கனவு போலத்தான் நடந்தது’  புத்தகத்திற்கு அளித்த திரு.பா.சண்முகவேலு அய்யா அவர்களுக்கு எனது நன்றியும் மகிழ்ச்சியும்.

வா.நேரு,31.12.2023

 

Saturday, 10 June 2023

நெருப்பினுள் துஞ்சல்...நூல் விமர்சனம் - க்ரிஷ்பாலா

மதுரை தியாகராசர் கல்லூரியின் மாணவர் க்ரிஷ்பாலா..மாணவப்பருவத்திலேயே ஒரு நாவல் எழுதிய பெருமைக்குரியவர்.தொடர்ச்சியாக மிக ஆர்வமாக வாசிப்பவராக இருக்கிறார். எனது சிறுகதைத் தொகுப்பு பற்றி எழுதி இண்ஸ்டாகிராம் பதிவாகப் பதிவிட்டிருந்தார். நன்றியும் மகிழ்ச்சியும் க்ரிஷ்பாலா.இனி அவரது பார்வையில் ' நெருப்பினுள் துஞ்சல் ' 


நூல் விமர்சனம் - க்ரிஷ்பாலா

நூல் - நெருப்பினுள் துஞ்சல்
ஆசிரியர் - வா.நேரு

• சிறுகதைகளில் எனக்கு பெரிதாக நாட்டம் கிடையாது.காரணம் நான் படித்த சிறுகதை புத்தகங்கள் எல்லாம் என்னை ஏமாற்றவே செய்தன.

 சிறுகதைகளின் மீதான என் ஆர்வத்தை குறைத்தன. அதனாலேயே அதை படிக்காமல் நாவல், குறுநாவல், கட்டுரைகளையே பெரும்பாலும் படிப்பேன்.

• வேறு எந்த ஒரு புத்தகமும் புதிதாக படிக்க இல்லாததால் என் அலமாரியில் ஒரு மாதமாக தூங்கிக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை தூக்கத்திலிருந்து எழுப்பும் சூழலுக்கு தள்ளப்பட்டேன்.
 எதார்த்தமாக அதை படிக்கவும் ஆரம்பித்தேன். அதுதான் “நெருப்பினுள் துஞ்சல்”

• மொத்தம் 13 கதைகள் கொண்ட ஒரு சிறுகதை தொகுப்பு தான் இந்த புத்தகம். ஒவ்வொரு கதையையும் படிக்கும் போது தான் உணர்ந்தேன், எப்படி இவ்வளவு அருமையான புத்தகத்தை படிக்க மறந்தேன் என்று. என் வாசிப்பு பயணத்தில், ஒரு சிறுகதை தொகுப்பை படித்துவிட்டு நான் பிரம்மிப்படைந்தது இதுவே முதன்முறை.

• பொதுவாக நான் வாசித்த சிறுகதை தொகுப்புகளில் ஏதாவது ஒன்றிரண்டு கதைகள் தான் நன்றாக இருக்கும். ஆனால் நேரு ஐயாவின் இந்த நெருப்பினுள் துஞ்சல் என்னும் சிறுகதை தொகுப்பில் உள்ள 13 கதைகளும் அருமையாகவும் தெளிவாகவும் இருந்தது.

• “சீர சுமந்து அழிகிற சாதிசனமே” என்ற கதை இத்தொகுப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்த முக்கியமான ஒரு கதை. ஒரு திருமண நிகழ்ச்சிக்கோ அல்லது காதுகுத்து நிகழ்ச்சிக்கோ நாம் செல்லும்போது மொய் வாங்குவதை பார்த்திருப்போம்.

 லட்சக்கணக்கில் வசூலான மொய்ப்பணத்தை வைத்து பல ஆண்டுகள் செல்வ செழிப்பாக வாழ்ந்து கொள்வார்கள் என இவ்வளவு நாட்களாய் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். 
ஆனால் இந்த கதையை படித்த பிறகு தான் தெரிந்தது. மொய்ப்பணம் அனைத்தும் வட்டியில்லாமல் வாங்கும் கடன் என்று. என்றாவது ஒருநாள் திருப்பி அந்த மொய் பணத்தை ஏதாவது ஒரு விழாவில் மொய் செய்தே ஆக வேண்டும் என்றும் அப்படி திருப்பி மொய் செய்ய வழி இல்லாமல் எத்தனையோ பேர் தலைமறைவாகிறார்கள் என்றும் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் இந்த கதை உணர்த்தியது.

• தனக்கு செய்த மொய்ப்பணத்தை விட அதிகமான மொய்ப்பணம் திருப்பி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் போது சமூகத்தில் மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மிக ஆழமாக அழுத்தமாக இந்தக் கதை பேசுகிறது.

• அடுத்ததாக “நெருப்பினுள் துஞ்சல்” என்னும் கதை. 500 ரூபாய் சம்பாதிக்க பல மணி நேரம் அடுப்பில் வேலை செய்யும் புரோட்டா மாஸ்டர் வெற்றி திடிரென உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் படுத்துக் கொள்கிறான். மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்க்கக்கூட வழியில்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் புரோட்டா மாஸ்டர் வெற்றியைப் பற்றியும் அவனது குடும்ப சூழலை பற்றியும் இந்த கதை பேசுகிறது.

எனது அப்பாவும் ஹோட்டலில் வேலை பார்ப்பதால் கதையில் வரும் வெற்றி என்னும் கதாப்பாத்திரத்தை படிக்கும் போது எனக்கு என் அப்பா ஞாபகம் தான் அதிகம் வந்தது. இந்த கதை எனக்கு மிக நெருக்கமான ஒன்றாக இருந்தது.

• அதேபோல “யார் யார் வாய் கேட்பினும்” என்கிற கதையில் பேசப்பட்டுள்ள சமூகப் பிரச்சினையை குறித்து நானும் பலமுறை யோசித்ததுண்டு. இயற்கைக்கு காதல் தெரியும். திருமணம் தெரியாது. திருமணம் என்பது நாம் கட்டமைத்த ஒன்றுதான். அதற்கு ஜாதகம் பார்த்து பத்து பொருத்தமும் பொருந்தினால் தான் திருமணம் என்னும் போது அங்கு உண்மையான காதல் தோற்றுப்போகிறது.ஒருத்தருக்கு ஒருத்தர் நன்றாக புரிந்து கொண்டு உண்மையான காதல் இருந்தால் போதாதா! பத்து பொருத்தமும் இருந்தால் தான் திருமணம் செய்ய வேண்டுமா? என ஜாதகம் பார்த்து திருமணம் நிகழ்வதை குறித்த மூடநம்பிக்கைகளை இந்த கதை மிக ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது.

• அடுத்ததாக “எங்களுக்கு தேவை என்றால்” என்ற கதை. பள்ளி கல்லூரிகளிலும் நமது குடும்பத்திலும் பரப்பப்படும் மதக் கொள்கைகளை பற்றி பேசுகிறது. கதையில் வரும் “மாசறுபொன்” என்னும் சிறுமியின் அப்பாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் ஒரு மாதமாக ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக கிடக்கிறார். சாமிக்கு தினமும் விளக்கு போட்டால் அப்பாவிற்கு குணமாகிவிடும் என்று சாமியார் சொல்வதைக் கேட்டு அம்மாவின் கட்டளையின்படி தினமும் அந்த சிறுமி விளக்கு போடுகிறாள்.

• இன்னொரு பக்கம் அவளின் பள்ளியில் இயேசுவை தினமும் வழிபட கட்டாயப்படுத்துகிறார்கள். மீறினால் பிரம்பால் அடிக்கிறார்கள். இறுதியில் எந்த சாமியின் துணையும் இன்றி அவளின் அப்பா படுத்தப்படுக்கையாகவே கிடக்கிறார்.

"நாங்கள் குழந்தைகள். எங்கள் மீது எந்த கடவுளையும் திணிக்காதீர்கள்” என்ற வசனம் கவனத்தை ஈர்க்கிறது.

• இப்படி இந்த தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் யதார்த்தமான மனிதர்களை அவர்களின் வாழ்வியலை சமூக பிரச்சனைகளை மிக எளிமையாகவும் அழகாகவும் அதே சமயம் ஆழ்ந்த கருத்துக்களையும் ஆழமாக மனதில் பதித்து விடுகிறது.

• இதைத்தவிர நேரு ஐயா கையாண்ட மொழி நடை என்னை மிகவும் கவர்ந்திழுத்து வாசிக்க தூண்டியது.
அதுமட்டுமில்லாமல் அவர் ஒவ்வொரு கதையையும் கதாபாத்திரங்களையும் கூற வரும் கருத்துக்களையும் கட்டமைத்த விதம் அருமையாக இருந்தது.

• 10 பக்கத்தில் எப்படி ஒரு ஆகச் சிறந்த கதையை எளிமையாக சொல்வது கதாப்பாத்திரங்களை எப்படி வடிவமைப்பது விதவிதமான கதைக்களத்தை எப்படி தேர்ந்தெடுப்பது வாசகர்களை கவரும் வண்ணம் எப்படி செம்மையாக கதையை நகர்த்துவது என பல விஷயங்களை சக எழுத்தாளனாக என்னால் கற்றுக் கொள்ள முடிந்தது.




வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் இந்த புத்தகத்தை வாசிக்கலாம். இதில் உள்ள 13 கதைகளும் நம் மூளையை சிந்திக்கச் செய்யும்.

ஆசிரியர் தொடர்ந்து இது போன்ற பல புத்தகங்களை எழுத வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

"நேரு ஐயாவிற்கு க்ரிஷ் பாலாவின்
அன்பும் நன்றியும்"



Tuesday, 7 February 2023

'சங்கப்பலகை' நூல் பற்றி...கண்ணகுமார விஸ்வரூபன்

 எனது அண்மை நூலான சங்கப்பலகை நூல் பற்றி 'தேரியாயணம் 'புகழ்,தேரிக்காட்டு இலக்கியவாதி தோழர் கண்ணகுமார விஸ்வரூபன் அவர்களின் கடிதம்..


அன்புத் தோழருக்கு வணக்கம்!

தங்களது சங்கப் பலகை 

நூலை முழுமையாக வாசித்து முடித்தேன். 

இலக்கிய ஆளுமை ஜெயகாந்தன் அவர்கள் தனது நூலுக்கு தானே முன்னுரை எழுதிக் கொள்வார். 

அந்த முன்னுரைகளெல்லாம் பின்னர் ஒரு தொகுப்பாக வெளிவந்தது.

முன்னுரைகளே ஒரு நூலாக வெளிவந்தது என்றால் அது ஜெயகாந்தனின் முன்னுரைகள் மட்டுமே!

அதைப்போல மதிப்புரைகளே தொகுப்பாக வெளிவருவது என்பது தங்களது சங்கப் பலகை மட்டுமே எனக் கருதுகிறேன். 

கி.ரா, இமையம் போன்ற பிரபலமான எழுத்தாளர்கள் தொட்டு, அறிமுக எழுத்தாளர்கள் வரை அனைவரது நூல்களையும் அருமையாக மதிப்பாய்வு செய்துள்ளீர்கள். 

அதிலும் புதிய படைப்பாளிகளின் படைப்புகளைத் தங்களது சிறப்பான மதிப்புரைகளின் மூலம் துலக்கமாக வெளிச்சப்படுத்தியுள்ளீர்கள். 

மதிப்புரை எழுதுவதென்பது ஒரு மகத்தான கலை!

அது தங்களுக்கு அழகாய்க் கைவந்துள்ளது.

இந்த அருங்கலைப்பணி இனிதே தொடரட்டும்!

இன்னும் பல நூல்களை சங்கப் பலகையில் அருமையாய் அரங்கேற்றுங்கள்.

மதிப்புறு முனைவரான உங்களை மதிப்புரைகளின் முன்னவராகவே காண்கிறேன். 

        என்றென்றும் 

            அன்புடன் 

         கண்ணகுமார 

            விஸ்வரூபன்.




Monday, 29 August 2022

சொற்களின் கூடுகளுக்குள்- வா.நேருவின் நூல் பற்றி வழக்குரைஞர் மதிவதனி அவர்களின் உரை

 



''சொற்களின் கூடுகளுக்குள்'' ஒரு தேடல்! 
 


தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில், மாலை 6:30 முதல் 8 மணி வரை திராவிட இயக்கச் சிந்தனைகள் நிரம்பிய சிறந்த நூல்களைத் தேர்வு செய்து திறனாய்ந்து வருகிறது. பயனுறு இத்தொடர் நிகழ்வின் ஏழாவது கூட்டமாக 12.08.2022 அன்று, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா. நேரு அவர்கள் எழுதிய "சொற்களின் கூடுகளுக்குள்" என்ற கவிதைத் தொகுப்பை  மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் ஆற்றல் மிகு பேச்சாளர் சே. மெ. மதிவதனி மிகச் சிறப்பாக திறனாய்வு செய்தார்.

இதயத்தின் ஒளிபரப்பே...

முன்னதாக எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் துணைத் தலைவர் பகுத்தறிவுப் பாவலர் சுப‌. முருகானந்தம் அவர்கள், தமக்கென்று உரிய தனிச் சிறப்பாக தம்பாக்களின்  வழியே, ஒவ்வொருவரையும் சிறப்பித்துக் கூறி, வருகை தந்திருந்த அனைவரையும் விளித்து வரவேற்புரை ஆற்றினார். சொல் ஒன்று செயல் ஒன்று; பேசுவது ஒன்று எழுதுவது ஒன்று அல்லாமல் இந்தக் கவிதைத் தொகுப்பு என்பது முனைவர் வா. நேரு அவர்களின் இதயத்தின் ஒளிபரப்பே என்றும், சொல்லோடு நிற்காமல் சொன்னதெல்லாம் தொண்டறமாய் வாழ்ந்து காட்டும் பண்பினர் என்றும், ஒவ்வொருவரையும் நீங்களும் எழுதுங்க நீங்களும் பேசுங்க என்று ஊக்கப்படுத்திக் காட்டும் ஒருவர் தான் நூலாசிரியர் என்றும் கவிதை நடையில் குறிப்பிட்டுக் காட்டினார்.

இந்நிகழ்வில்  பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன், பகுத்தறிவு ஊடகப் பிரிவு தலைவர் மா. அழகிரிசாமி, பகுத்தறிவு ஆசிரியரணித் தலைவர் தமிழ் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் வேண்மாள் நன்னன், முனைவர் சேதுராமன், முனைவர் மு.சு. கண்மணி, அறிவு வழி காணொலி பொறுப்பாளர்கள் சேரலாதன், தாமோதரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மனிதர்கள் சிறக்க சிந்தனைகள் வேண்டும்

தொடர்ந்து பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத் தலைவர் ம. கவிதா தமது தலைமை உரையில், பறவைகள் உயரே பறக்கச் சிறகு வேண்டும், மனிதர்கள் சிறக்க சிந்தனைகள் வேண்டும் என்ற முகநூல் பதிவை எடுத்துக்காட்டி, அந்தச் சிந்தனைகள் என்பது தன்னையும் உயர்த்திக் கொண்டு தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் கைபிடித்து உயர்த்துகிற சிந்தனைகளாக இருக்க வேண்டும் எனும் போது, அத்தகைய ஒரு கவிதைத் தொகுப்பைத் தான் இன்றைக்கு எழுத்தாளர் மன்றம் திறனாய்வுக்கு எடுத்திருக்கிறது என்றார். எப்போதும் நூல்களோடு பயணித்து, தன் குடும்பத்தினரையும் நூலக உறுப்பினர்களாக்கி வைத்திருப்பவரும், எதை எழுதினாலும் பேசினாலும் திறனாய்வு செய்தாலும் இந்தச் சமூகத்திற்கு தேவையான ஒரு செய்தியை விதைத்து விட்டு வரும் மிகச் சிறந்த தொண்டற எழுத்தாளருமான இந்நூலாசிரியர் பாடுபட்டுக் கட்டிய இந்தக் கூடு படிக்கும் அத்தனை பேருக்கும் பலன்மிக தரக்கூடியதாகும் என்றார்.

உண்மைதான் அழகு 

நூலைத் திறனாய்வு செய்த மதிவதனி அவர்கள், எடுத்த எடுப்பிலேயே கொடுந்தமிழ், செந்தமிழ், கோனார் நோட்ஸ் என்றெல்லாம் தேவையில்லாமல் பெரியார் போன்று மக்கள் மொழியில் தமிழில் உள்ள எழுத்துகள் புரிபவர்கள் இதை வாசிக்கலாம் என்ற அளவில் எல்லோருக்குமான நூலை 120 பக்கங்களில் 35 கவிதைகளாக கொடுத்திருக்கிற நூலாசிரியர், மூன்று தளங்களில் தான் பெரியாரியளாளர் என்பதை மெய்ப்பித்துள்ளார். ஒன்று,  பெண்கள் இருவரை வைத்து அவர் இந்த நூலுக்கு அணிந்துரையை தந்துள்ளார். இரண்டாவதாக கவிதைக்கு பொய் அழகு என்ற கட்டமைப்பை உடைத்து, உண்மைதான் அழகு என்று பதிய வைத்திருக்கிறார். மூன்றாவது நானே சொல்லியிருந்தாலும் நம்பாதே என்ற பெரியார் வழியில், "கவிதை நூலை வாசித்து முடித்தப் பின் உங்கள் மனதில் தோன்றும் எண்ணமே வலிமையானது" என்கிறார் என தன் கருத்துக்கு வலு சேர்த்தார். 

தொடர்ந்து உறவுகள், சமூகம், பெண்கள், அரசியல், கவிஞர்கள் என்று கவிதைகளைப் பிரித்துப் பிரித்து திறனாய்வு செய்தார் உறவுகளில் முதல் கவிதையாக  "ஒன்ற இயலுவதில்லை!" என்ற கவிதையை ஆய்வு செய்தார்‌.

வாழ்வியலை உணர்த்துகிறது

'சுட்ட மண்பாண்டங்கள் களிமண்கள் ஆவதில்லை; மனவிரிசல்கள் உண்டானப் பின் என்னதான் ஓரிடத்தில்  ஒன்றாய் நின்றாலும் பழைய நிலையில் ஒன்ற இயலுவதில்லை!' ‌ என்ற வரிகளை எடுத்துக்காட்டி அறிவியலில் மீள் மாற்றம்- மீளா மாற்றம் என்று இரண்டு உண்டு. காகிதத்தை எரித்தால் அது மீளா மாற்றம். அப்படித்தான் ஒருமுறை மனவிரிசல் ஏற்பட்டு விட்டால் மீண்டும் பழைய நிலைக்கு அந்த உறவு திரும்புவது இயலாது என்பதால் ஒன்று அத்தகைய விரிசல்களைத் தவிர்க்க வேண்டும் அல்லது ஏற்பட்டு விட்டாலும் வெறுப்பு வயப்படுவதில் இருந்து விலகி விட வேண்டும் என்ற வாழ்வியலை இந்த கவிதை நமக்கு உணர்த்துகிறது என்றார்.

அர்த்தமற்ற சடங்குகளை...

அடுத்து, தன்தந்தையின் நினைவு நாளில் தம் பிள்ளைகளுக்கு சொல்கின்ற அறிவுரையாக, "ஆண்டுதோறும் திதியென்றும் திவசமென்றும்  உழைக்காதவர்கள் உண்பதற்கு #இழவுவரி அளிக்கும் ஏற்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. தாத்தாவின் நினைவு நாளில் அப்பாவின் கோரிக்கை, எதிர்காலத்தில் என் வழியைப் பின்பற்றுங்கள். அர்த்தமற்ற சடங்குகளை ஆழக்குழித் தோண்டி புதையுங்கள். அந்நாளில் எளியோருக்கு உதவுங்கள்" என்ற வரிகளை எடுத்துக்காட்டுகின்றார். தந்தையை இழந்தவர்களின் வலி அவருக்குத் தெரியும்.அவர் அனுபவித்த வலியையே மற்றவர்களுக்கு பாதையாக்கி கொடுக்கிறார், இழவு வரி என்று ஒரு புதுச்சொல்லை அறிமுகப்படுத்துகிறார். ஏற்கெனவே தந்தையை இழந்திருப்பவர்களிடம் இப்படி சுரண்டுகின்ற ஒரு மோசடியை ஏற்கக் கூடாது என்று அறிவுறுத்துகின்றார். இந்த அறிவுரை ஒட்டுமொத்தக் கருஞ்சட்டைக்காரர்களுக்கும் தேவையான ஒன்று. இல்லையென்றால் நாம் இறந்த பின் நம் நெற்றியில் பொட்டு வைத்து விடும் நிலைமை ஏற்படும் என்பதையும் இக்கவிதையோடு இணைத்துப் பேசினார் மதிவதனி.

புரட்சியாளர் அம்பேத்கர்

பொதுவாக தன் மனைவியைப் பாராட்டும் போது அவர்கள் செய்கிற வேலையைப் பாராட்டுவார்கள். இன்னும் வேலை வாங்கலாம் என்ற உட்பொருளில் கூட அவ்வாறு செய்வார்கள். தனக்குப் பணி செய்வது தான் அவர்களுக்கு விதிக்கப்பட்ட விதி என்பது போல் இன்னும் சிலர் நினைப்பார்கள்.
ஆனால் பகுத்தறிவாளரான இந்நூலாசிரியர் மிகைப்படுத்தல் கவர்ச்சி என்று ஏதுமின்றி ஆகா- ஓகோ சொற்களின்றி  தனக்கு நேர்ந்த இதய அறுவைச் சிகிச்சையில் துணை நின்ற தன் இணையருக்கு நன்றி சொல்லி "அன்பெனப்பட்டதே இல்வாழ்க்கை" என்ற  கவிதையை எழுதியதன் மூலம் படிக்கும் எவருக்கும் அவரவர் துணைக்கு நன்றி காட்டும் உயர் பண்பை ஊக்குவிக்கிறார் என்றார்.

உறவுகளில் நட்பைப் பற்றி குறிப்பிடும் பொழுது வெறும் கேளிக்கைக்காக அல்லாமல்" உயிர் வாழ்வதலுக்கான ஆக்சிஜன் காற்றாய் இருப்பது நட்பு" என்கிறார். 
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தன் வாழ்நாளில் நான்கே முறை தான் ஊர்சுற்ற சென்றிருக்கிறார்; இரண்டு முறை தான் திரையரங்கிற்குப் படம் பார்க்கச் சென்று அதுவும் படித்து முடிக்காமல் வைத்தப் புத்தகம் நினைவுக்கு வர பாதியிலேயே வீடு திரும்பியிருக்கிறார் என்பதையும் இங்கு  இடைச்செருகலாக நினைவூட்டினார் மதிவதனி.

பசியால் பட்டறிவு 

"பசியால் பட்டறிவு" என்ற கவிதையில், பக்கத்தில் கடை இருந்தாலும், கையில் பணம் இருந்தாலும் மருத்துவமனையில் இருக்கும் மகளை விட்டு ஒரு அடி கூட வைக்க இயலாத நிலையில் வயிற்றைக் கடித்த பசியால் பட்டறிவு கிடைத்தது என்று சொல்லி, உறவினர்கள் இந்த நேரத்தில்  அதிக நேரம் ஒதுக்கி உடனிருந்து உதவ வேண்டும், நம்  உறவினர்களுக்கு இப்படி ஒரு சூழல் ஏற்படும்போது நாம் இதை செய்ய வேண்டும் என்ற தன் எண்ணத்தைக் கவிதையாக்கி இருக்கிறார் என்றார்.


"கொரோனா காலத்தில் உங்களை!" எனும் கவிதையில் கொத்துக்கொத்தாக மக்கள் மரணிக்கிற பொழுது அவரவர் கடவுள் நம்பிக்கைகள் அவரவர்க்குத் தானாகவே தகர்ந்து தவிடு பொடியாகிறது  என்றாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக "காப்பார் கடவுள்" என்று கதை சொல்கிறார்கள். "இருப்பது கடவுள் அருளால் என்றால் செத்தவர் எல்லாம் எவரருளால் செத்தார்கள்?" என்று நாம் கேட்டால் எக்குத் தப்பாக பேசாதே என்கிறார்கள்; அனைத்தையும் கேள்வி கேள் என்று சொன்ன அய்யா பெரியாரையே இப்பொழுது நினைவில் கொள்கிறோம் என்ற வரிகளை எடுத்துக்காட்டினார்.

ஜாதி என்னும் சதியால்...

"எதிர் வண்ணங்களால் தீட்டப்பட்ட சுவர்கள்" என்ற கவிதையில் தூங்குபவர் யார் தூங்குபவர் போல நடிப்பவர் யார் என்றுணர்ந்து  எதிர் கருத்துள்ளவர்களை நாம் அணுக வேண்டும், அவர்களிடம் வாதம் வைக்க வேண்டும்; சுவர்களைப் போல இருப்பவர்களிடம் எவ்வளவு வைத்தாலும் அது வீண் தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

"நடுங்குகின்றாய் நிலமே!" என்ற கவிதையில் புதிய கோணத்தைக் காட்டுகிறார்."இருப்போரை அச்சமூட்டி எந்த நேரம் சுனாமியோ நிலநடுக்கமோ என மக்கள் நடுங்கும் வண்ணம் அடிக்கடி நடுங்குகிறாய் நிலமே, ஏற்றத்தாழ்வு என்றும் நிலைத்திருக்கும்  ஜாதி என்னும் சதியால் மக்கள் சாகும் நிலை கண்டு நடுங்குகின்றாய் நிலமே... காணாத கடவுள்களால் கலகமூட்டி மக்களை கழுத்தறுக்கும் கொடுமைக் கண்டு இந்த மனிதர்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன என்று நினைத்து நடுங்குகிறாயோ நிலமே..?" எனும் வரிகள் மூலம்
இயற்கைச் சீற்றத்திலும்  தற்காத்துக் கொள்ள முடியும், இந்தச் செயற்கையான சீற்றம் மிகவும் ஆபத்தானது அதனால் அழித்தொழிக்க வேண்டும்  என்பதை புதுக்கோணத்தில் நிலமே மனிதர்களைப் பார்த்து நடுங்குவதாகக் குறிப்பிடுகிறார்.

ஆன்மிகம் மறு! அச்சம் தவிர்!

"நன்கொடை என வாருங்கள்!"  இந்தக் கவிதையைப் பற்றி குறிப்பிடும் போது,
"கிராமத்து தெருக்களில்  வெளிச்சத்தோடு வரும் வண்டிகளுக்கு எழுந்து எழுந்து பின் அமர்ந்து அமர்ந்து கழிக்கும் அவலம் பெண்களுக்கு இருக்கும் நிலையில் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வசூல் செய்ய கையில் நோட்டுப் புத்தகத்தோடு வருகின்ற பெரியோர்களே, ஊருக்கு மூன்று கழிப்பறைகள் கட்டி அதை அன்றாடம் தூய்மையாக வைக்க நன்கொடை கேட்டு வாருங்கள்!" என்று சொல்லுகிற நூலாசிரியரின் தாயுமான உள்ளத்தை எடுத்துக்காட்டுகிறார்.

"ஆன்மீகம் மறு! அச்சம் தவிர்! எங்களுக்கு மட்டும் ஏன் இந்த விதிமுறைகள்? எங்களுக்கு மட்டும் ஏன் இந்த கட்டுப்பாடுகள்? எங்களுக்கு மட்டும் ஏன் விதிமுறைகள் மீறினால் இத்தகைய வன்முறைகள்? என்று கேள்வி கேட்கப் பழகுங்கள் பெண்களே!" என்கிறார் மற்றொரு கவிதையில்.

உரிமை கோரிக்கைகள்

மகளிர் நாள் என்பது கேளிக்கை நாளல்ல 'உரிமை கோரிக்கை நாள்' என்று உச்சரிக்கும் போதே அதன் வலிமையையும் உண்மையையும் உணர்த்தி விடுகிற பெயரைச் சூட்டுகிறார் கவிதை ஆசிரியர் என்றார்.

 இந்த அளவிற்கு பகுத்தறிவாளராக தன்னை வார்த்தெடுத்த தன் தாய் முத்துக்கிருஷ்ணன் அம்மாள், கிடைக்கும் சில நிமிடங்களிலும் நூல்களில் மூழ்கி எழும்  புத்தக வாசிப்பாளர், சாமி வந்தாடும் சொந்தக்காரப் பெண்களிடம் நேருக்கு நேராய் நின்று "சாமியாடிக் கிட்டே போய் அந்த கரண்ட் கம்பியைப் பிடிங்க பார்ப்போம்" என்று சொல்லுகிற புரட்சித்  தாய் என்பதையும் அவர் கவிதைகள் வழி அறிய முடிகிறது என்றாய்ந்தார் மதிவதனி.

முனைவர் வா.நேரு அவர்கள் உள்ளூர் அரசியல் முதல் அமெரிக்க அரசியல் வரை தம் கவிதைகளில்  பேசி இருக்கிறார். 2021 ஜனவரி 6 ட்ரம்ப் தோல்வி அடைந்து ஜோபைடன் வெற்றிபெறும் போது "வலதுசாரி தத்துவத்தின் அமெரிக்க குறியீடு" என்று ட்ரம்பை வர்ணிக்கிறார். இதுவரை இதுபோல அவரை யாருமே குறித்தது கிடையாது என்கிறார் திறனாய்வாளர்.

கழுதைதான் முன்னேற்றும்

உள்ளூர் அரசியலைப் பற்றி பேசும்போது, "உடைவெளுக்கும் தோழரை கடவுள் முன்னேற்றுமா? கழுதை முன்னேற்றுமா என்றால் கழுதை தான் முன்னேற்றும். கடவுள் பெயரால் கலகம் செய்து ஆட்சியைப் பிடித்தவர்கள் வெறும் காட்சியாளர்கள் தான்" என்கிறார் நூலாசிரியர். தகுதி உள்ளவை தான் தப்பிப் பிழைக்கும். மாட்டு கோமியத்தை நம்பினால் மண்ணில் மட்கித்தான் போவார்கள் என்று தம் கவிதைகளில்  கடுமையாக சாடுகிறார்.

சதுரகிரி மலை அடிவாரத்தில் பிறந்தேன் எனினும், என் அண்ணன் அமாவாசை தோறும் மலையேறிக் கொண்டிருந்தாலும் எனக்கோ இளவயது முதலே பெரியார் திடலே  பிடித்துப் போயிற்று என்று  தன் கவிதைகளில் அவர் எழுதி இருப்பதில் தான் யார் என்பதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் என்பது பெருமைக்குரியது என்றார்.

இறுதியாக கவிஞர்கள் பற்றி குறிப்பிடுகிறார். முதலாவதாக புரட்சிக் கவிஞரைப் பற்றியும் இரண்டாவதாக கரிசல் இலக்கியத் தந்தை கி. ரா. அவர்களைப் பற்றியும் எழுதுகிறார். "சிக்மன்ட் பிராய்டை பின்னர் தான் அறிந்தேன். முதலில் உன் கதைகள் தான் பாலியல் உணர்வைப் பசி என்று உணர்த்தின" என்கிறார் கி.ரா.வைப் பற்றி எழுதுகையில்.

ஈரோட்டுச்சூரியனை...

மூன்றாவதாக "ஈரோட்டுச்சூரியனின் வெம்மையை சொற்களின் கூடுகளுக்குள் குவித்துத் தந்தவர்" என்று கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களைப்பற்றி  குறிப்பிட்டது தான் இந்த நூலின் தலைப்பாகவே இருக்கிறது என்று சொல்லி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக இருக்கக்கூடிய அய்யா அவர்களின்  இந்தக் கவிதை தொகுப்பு பின்னாளில் என்னென்ன அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே சுனாமியை உணரும் பறவைகளைப் போல அவரும் உணர்ந்திருப்பார் என்று முத்தாய்ப்பாக முடித்தார் மதிவதனி.




ஏற்புரையில்...

நூலாசிரியர் முனைவர் வா. நேரு அவர்கள் தனது ஏற்புரையில் தம்முடைய நூல்கள் வெளிவர  தோன்றாத் துணையாக இருந்த தோழர்கள் 'ஒரு துளி கவிதை'  தோழர் அகன்,  பாவலர் சுபமுருகானந்தம், கருப்பையா ஆகியோருக்கும்  இந்நிகழ்வில்  கனடாவில் இருந்து இணைந்த பெர்னாட்ஷா, இலண்டனிலிருந்து சங்கையா, கருநாடக மாநிலத்திலிருந்து முத்துமணி நன்னன் என்று வெளி நாடுகளிலும் மாநிலங்களிலும் இருந்து இணைந்திருக்கிற தோழர்கள் அனைவருக்கும் தன் நன்றியை வெளிப்படுத்திக் கொண்டார். மனதிற்குப் பட்டதை சரியெனப் பட்டதை தான் கவிதையாக்கியதாகக் கூறிய அவர், மரபுக்கவிதை- புதுக்கவிதை- சிறுகதை -கட்டுரை என எந்த வடிவத்தில் இருந்தாலும்  எழுத்துகளை நாம் பதிய வைக்க வேண்டும், 

தொண்டற நோக்கத்தோடு 

தமிழ்நாடு முழுவதும் நம்முடைய எழுத்தாளர்கள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி தொண்டற நோக்கத்தோடு நிறைய எழுதுகிறார்கள், அத்தகு நூல்களை எல்லாம் நாம் திறனாய்வு செய்ய வேண்டும், நம்மைப் பற்றி நாமே பேச வேண்டுமா என்று தயக்கம் வரும் ஆனாலும் அந்த தயக்கம் தேவையில்லை, ‌. வாழக்கூடிய எழுத்தாளர்களை- அவர்களுடைய புத்தகங்களை நாம் தொடர்ந்து  வாராவாரம் பேசுவோம்; அவர்களையும் சிறப்பிப்போம் என்றார். கொரோனா காலகட்டங்களில் இறந்தவர்களின் உடல்களை கல்லறைகளில் அடக்கம் செய்ய முடியாமல் இருந்த கடினச் சூழ்நிலைகளில், பொது இடத்தில் எரித்து மீண்டும் கல்லறைக்குச் சாம்பலைக் கொண்டு வருவார்கள்.  'உயிரோடு எழும்புதல்' என்ற அவர்களின் தத்துவமே அப்போது அடித்து நொறுக்கப்பட்டாலும் கூட மக்கள் அதையெல்லாம் ஏற்க மறுத்து கடவுள் இருக்கிறார் என்பார்கள். இந்தச் சூழ்நிலைகளை எல்லாம் பார்க்கும் பொழுது நாம் எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்றார். குடந்தை மாவட்ட தொண்டறச் செம்மல் க.குருசாமி அவர்களினுடைய 'விடுதலையால் விடுதலை' நூலை திறனாய்வுக்கு பிறகே தான் படித்ததாகவும் எந்த அளவிற்கு துன்பமான சூழ்நிலையில் இருந்து அவர் அடைந்திருக்கிற உயரத்திற்கு விடுதலை இதழ் பாதையை அமைத்து தந்தது என்பதையும் அறிந்து  நெகழ்ச்சி உற்றதாகவும், எனவே தொடர்ச்சியாக இப்பணியை நாம் முன்னெடுப்போம் என்றும் அழுத்தமாக பதிய வைத்தார்.

மனித நேய பயணத்திற்கான....

இறுதியாக நன்றியுரை ஆற்றிய பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர் மாரி. கருணாநிதி, இது கவிதை நூல் மட்டுமன்று, ஒரு சிறந்த மனிதரின் வாழ்க்கை விவர நூல், மனித நேயப் பயணத்திற்கான ஒரு சாரம், சனாதனம் போற்றுவோருக்கு இது  வெப்ப விரவல் ஏற்படுத்தும் என்று புகழாரம் சூட்டி, சமுதாயத்தை யாரெல்லாம் மாற்றி அமைக்க நினைக்கிறார்களோ அவர்களே இதை எழுதியதாக  உணர்வார்கள்; நானும் அப்படித்தான் இந்த கவிதைகளில் என்னையே பார்க்கிறேன். இத்தகு சிறப்புமிக்க இந்த நூல் திறனாய்வு இனி நம் எல்லோரையும் எழுதத் தூண்டும் என்றார். வந்திருந்த அனைவருக்கும் நன்றி சொன்னதோடு நம் தோழர்கள் பலரின் தனித்திறமைகளை வளர்த்து விட்ட கொரோனாவுக்கும் சேர்த்து நன்றி சொல்லி  நிகழ்வை முடித்தார்.

தொகுப்பு : ம.கவிதா

நன்றி : விடுதலை 29.08.2022









Sunday, 13 March 2022

ஒரு பரிசு எனக்கு ஒருவரிடமிருந்து இன்று கிடைத்தது....

 ஒரு நூலை எழுதியவனுக்கு மிகச்சிறந்த பரிசு ,அந்த நூலைப் படித்துக் கருத்து கூறுவது. குறை நிறைகளைச்சுட்டிக்காட்டுவது.அதுதான் எழுதுபவனுக்கு கிடைக்கும் சத்து டானிக். அப்படி ஒரு பரிசு எனக்கு ஒருவரிடமிருந்து இன்று கிடைத்தது. அவர் வாருங்கள் படிப்போம் குழு உறுப்பினர்களில் ஒருவரான திரு.அர்ஷா மனோகரன் அவர்கள்.அவர் .சிறுகதைகளைத் திறனாய்வு செய்வதில் அப்படி ஓர் ஆற்றலும் விருப்பமும் உள்ளவர். எனது சிறுகதைத் தொகுப்பு நூலைப் படித்து,ஒரு விரிவான விமர்சனத்தை வாட்சப்பில் பகிர்ந்திருந்தார்.அன்பும் நன்றியும் தோழர் அர்ஷா மனோகரன் அவர்களுக்கு...


நெருப்பினுள் துஞ்சல்

முனைவர் வா.நேரு

எழிலினி பதிப்பகம்

120/-


"நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது" 

அட்டைப் படமும் நூலின் தலைப்பும் மேற்கண்ட குறளை நினைவூட்ட நூலுக்குள் நுழைந்தேன். தெருக்கோடி மனிதர்களுக்கிடையே ஊடுருவி அவர் துன்பத்தின் வலி கண்ட  ஓர் உள்ளத்தின் குமுறல்களின் வெளிப்பாடே இச்சிறுகதைத் தொகுப்பு.

முதலாவது சிறுகதை

1.அடி உதவுற மாதிரி......

கிராமத்து வாழ்க்கை முறைகளையும் அங்குள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,  கல்வியைத் தொடர தடை நிற்கும் அகப் புறக் காரணிகள்,  அவற்றைத் தகர்த்து  வெற்றி காணும் சிலர்,  சிக்கி சின்னாபின்னமாகும் சிலர்,  பள்ளி தலைமை ஆசிரியர்களின் மனப்போக்கு அவர்கள் ஏற்படுத்தும்  மிகப்பெரிய மாற்றங்கள்.  கல்வி கற்பதும் கல்விசார் பதவிகளும் அவர்களின் எட்டாக்கனி என்ற எண்ணம்

ஒரு  புறம். அப்போக்கை மாற்றுவதற்குக் கையாளப் படுகின்ற இரு வேறு வகையான யுத்திகள் எது வெற்றி பெறுகிறது என்று மிகச் சிறப்பாக இக்கதை நகர்கிறது. சீரான ஓட்டத்தில் சிறந்த தமிழ் பெயர்களோடு கிராமத்துப் பின்னணியில் உருவான இச்சிறுகதை  சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும்  கல்வியைத் தவிர வேறென்ன இருக்க முடியும் என்ற சீர்மிகு கருத்தையும் எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என்ற உளமார்ந்த ஆசையையும் வெளிப்படுத்துகின்றது.

கிணற்றில் விழுந்து சாகப் போனவனுக்குப் பிடிக்க ஒரு மரக்கிளை கிடைத்தது போல...

கைநிறைய வேப்பம் கொழுந்தை வாயில் விட்டுக்கொண்டு அமர்ந்திருப்பவரைப் போல என்ற உவமைகள் கதைமாந்தர்களின் உணர்வுகளை வாசகனுக்குள் மேலும் சிறந்த முறையில் தெளிவாகக் கடத்த உதவுகிறது.

அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்கின்ற பழமொழி பொய்த்துப்போனது முத்துவின்

அன்பான அறிவுரைகளால். 

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.  


திருவள்ளுவரின் குறள் மெய்த்துப்  போனதை இக்கதை சொல்கிறது.


2.) சீர் சுமந்து அழிகிற சாதி சனமே....

மிகவும் அருமையான சமூக விழிப்புணர்வோடு கூடிய அற்புதமான படைப்பு. 

மனிதனின் மனநிலையை ஒரு கட்டத்துக்குள் கொண்டு வருவது அத்தனை சுலபமல்ல எத்தனை மனிதர்கள் இவ்வுலகில் அத்தனை மனங்களால் தான் பூமி சுழன்று கொண்டிருக்கிறது. 

எதனால் இத்தகைய மனோநிலை என்றெல்லாம் ஒவ்வொருவரையும் யாராலும் கணிக்கவும் அல்லது வரையறுக்கவும் முடியாது ஒவ்வொருவரின் திட்டமிடலும் அவரவர் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப அனுபவத்திற்கு ஏற்ப அமைகிறது. அந்த வகையில் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு மொய் பணமும் பெரும்பங்கு கிராமங்களில் வகிக்கிறது என்பது நகர்ப்புற வாசிகளுக்கு புதிய செய்தியாகக் கூட இருக்கலாம்.  ஆனால் ஒரு பொது பழக்கத்தின் கீழ் நலன் பெறுவதும் அது சரியாகப் பயன்படுத்துவதும் அவரவர் சாமர்த்தியம் என்று தான் சொல்ல வேண்டும்.

பொதுவாக குடும்ப விழாக்கள் அதீத பொருள் விரயத்தோடு நடத்தப்படுவதை நான் விரும்புவதில்லை. ஆடம்பரத்தையும் தாண்டி பொறுப்புணர்ச்சி இல்லாத தனம் என்பதுதான் எனது பார்வை. 

மொய் பணம் உயிர் பறிக்கும் விஷம் நிறைந்தது என்பதைப் புரிந்துகொள்ள வைப்பதாக அமைந்திருக்கிறது.


நூலாசிரியரின் சமூகத்தின் மீதான அதீத அக்கறையும் இச்சமூகம் உழன்று கொண்டிருக்கும் சில தவறான பழக்கவழக்கங்களையும் மனக் குமுறலோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.


3 தீவிர சிகிச்சைப் பிரிவு

"நீங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் நீங்கள்

 எங்களுக்குக் கொடுக்கும் பரிசு"

என்ற மருத்துவமனை வாசகத்தோடு ஆரம்பிக்கிறது தீவிர சிகிச்சைப் பிரிவு.

 எழுத்தாளர் வாசகனின் மதநம்பிக்கைகளையும் நடைமுறை சிக்கல்களையும் நாசுக்காய் சுட்டிக் காட்டி வாசிப்பின் முடிவில் நம்பிக்கை சார்ந்த உணர்ச்சிகள் அடிப்படையில் கட்டுண்டு கிடக்கின்ற மூளைக்குள் இருக்கின்ற கற்பனை கடவுளுக்கும்  நம்பிக்கைகளுக்கும்  அறுவை சிகிச்சை செய்து சமூகத்தின் குறைகளை வாசகனுக்கு சுட்டிக்காட்டுகிறார். தெளிவான சிந்தனையை தூண்டி  வாசகனின்  சிந்தனையை சீரமைத்து அதையே பரிசளித்து   அனுப்பி வைக்கிறார். 


கதையின் நாயகன் முத்து...கடவுள் நம்பிக்கை மீதான தன் ஆதங்கத்தை வாழ வேண்டியவர்கள் ஏன் சாக வேண்டும் மருத்துவமும் காப்பாற்றாது நம்பிக்கையும் காப்பாற்றாது என்றான பிறகு சிலைகளும் சித்திரங்களும் பூஜைகளும் வேண்டுதல்களும் ஆரத்தி ஆராதனைகளும் எதற்கு என்ற சாமானியனின் பிரதிநிதியாகிறான். 


தனியார் மருத்துவமனைகளின் தேவையற்ற வசதிகளும் தேவைக்கதிகமான கட்டணங்களையும்,  முடிவில் அவர்களது கையறு நிலையும் நிச்சயமற்ற உத்தரவாதமற்ற சிகிச்சையும் ஒரு சாமானியனின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அது என்ன தொழில் கூடமா பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய உயிர்களைக் காப்பாற்ற நம்பி வருகின்றவர்களின் வாழ்க்கை அதன்பின் அடங்கி இருப்பது  ஒரு குடும்பத்தின் கண்ணீர்

 குறிப்பிட்ட நபரின்  குடும்பத்திற்கான முக்கியத்துவமும் என எத்தனை எத்தனை நுணுக்கங்கள் உள்ளடக்கிய இந்த வாழ்க்கையில் சர்வசாதாரணமாகக் கட்டணங்கள் நியமிக்கப்பட்டு உயிர்களோடு விளையாடும்  தனியார் மருத்துவ மனைகள் எங்கே போய்க்கொண்டிருக்கிறன.

 எல்லோரும் தனியார் மருத்துவமனையை நோக்கி விரைகிறோம் அப்படியென்றால் அரசின் ஒதுக்கீடுகளும் அரசு மருத்துவமனைகளும் என்ன செய்து கொண்டிருக்கின்றன ஏன் நாம் அங்குச் செல்வதில்லை என்ற எண்ணங்களும் பல்வேறு கேள்விகளை மனம் கேட்கத் தொடங்க  சிந்தனைகள் வேறு திசை நோக்கி விரியத் தொடங்கி விட்டது. 

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு என்று தனி மருந்தக பிரிவு இருக்கக் கூடாதா என்பதில் நாம் அன்றாடம் பார்க்கக் கூடிய மருத்துவமனைகளின் நெருக்கடிகளையும் நமது பதட்டத்தைப் புரிந்து கொள்ளாத எதிராளியின் குணத்தையும் சிறப்பாகச் சித்தரித்துள்ளார்.

எல்லா மனிதர்களும் தனக்கு ஏற்படுகின்ற பயம் சுயநலம் இவற்றால்தான் இறைவனைத் தேடுகிறான் அதில் மாற்றுக்கருத்தில்லை. அதையே எழுத்தாளரும் சுட்டிக்காட்டுகிறார்.

மருத்துவமனைகளும் மருத்துவ கட்டணங்களும் அவை வெறும் தொழிற்சாலை கூடங்களே.

ஒரு ரயில் பெட்டியைப் போல் மருத்துவமனையும் பல்வேறு மனநிலையில் உள்ள மனிதர்களைச்  சுமக்கிறது. புதிய வரவு மகிழ்ச்சியையும் ஒரு உறவின் மறைவு துன்பத்தையும் தருகிறது இந்த இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையில் மனிதன் படுகின்ற அல்லோலங்கள் தான் எத்தனை எத்தனை? 

வாழ்ந்து விட வேண்டும் என்ற ஒன்றைத் தவிர மருத்துவமனைக்கு வர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 

வயது வித்தியாசமின்றி போராடும் நோயாளர்கள் அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில்  குடும்பத்தார். முயற்சிக்குத் தடை நிற்கும் மருத்துவமனை கட்டணங்கள். எல்லாவற்றையும் கடந்து நிற்கும் கடவுள் நம்பிக்கை. கடைசியில் கைவிட்ட கடவுள்கள் என் ஆசிரியரின் ஆதங்கம் நம்மைத் தொற்றிக் கொள்கிறது. 

கல்வியும் மருத்துவமும் அனைத்து சாமானியர்களுக்கும் குறைவின்றி கிடைக்க வேண்டும் அதில் எந்த பாகுபாடும் ஏற்றதாழ்வும் இருக்கக்கூடாது.  பிறந்த எல்லா உயிர்க்கும் வாழும்  உரிமை உண்டு அவ்வுரிமை பணத்தால்  நிர்ணயம் செய்யப் படக்கூடாது. 

வீட்டைவிற்று காட்டைவிற்று இறுதியில் பயனற்றுப் போன மருத்துவமும்  செலவழித்த பணமும் நெஞ்சைப் பிழிகிறது.

மருந்துகளும் மருத்துவரும் இருக்கின்ற இடத்தில் கண்ணுக்குத் தெரியாத கடவுள் எதற்கு அவரால் மட்டும் எப்படிக் காப்பாற்ற முடியும் மருத்துவமனைக்குள் மத வழிபாட்டுக் கூடங்கள் எதற்கு? 

இப்படி  மனித உணர்வுகளோடு விளையாட உன்னதமாகக் கட்டமைக்கப்பட்டுத் திட்டமிட்டுத்  திருடும் கூட்டங்கள் கையில் அல்லவா மருத்துவமும் கல்வியும் இன்று சிக்கி  தவிக்கிறது. 

ஒரு இடத்தில் கூட கதையை வாசிக்கின்றோம் என்ற எண்ணம் வரவில்லை. 

 ஒரு மருத்துவமனையில் உட்கார்ந்து அனுபவித்த காட்சிகளாகவே உணரமுடிந்தது கதையின் இறுதிக் காட்சி நம்மை ஒரு சில நிமிடங்கள் உலுக்கிவிட்டது அந்த குழந்தைச் சாமி படத்தை விட்டு தந்தை பின் கதறிச் செல்லும் காட்சி மனம் கனத்தது.    கண்முன் விரித்த அத்தனை காட்சிகளும் உண்மைக்குச் சாட்சிகளே. அருமையான வாசிப்பு அனுபவமும் சமூக கல்வியையும் போதித்தது இச்சிறுகதை. 

4.முட்டுச்சுவர்.

பல நேரங்களில் செய்தி தலைப்புகள் நம்மை நாள் முழுவதும் வலி நிறைந்த மனநிலையிலிருந்து நகர விடுவதில்லை. பிரேக்கிங் செய்தி என்ற தலைப்பு செய்தியும் அதோடு சேர்ந்து ஒலிக்கின்ற பின்னணி இசையும் அப்பப்பா ஒரு கணம் இதயத்துடிப்பை நின்றுவிடச் செய்யவோ அதிகரிக்கவும் செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது. 

அப்படித் திணறவைக்கும் செய்திகளில் முதன்மையானது பள்ளி மாணவர்களின் தற்கொலை செய்திகள். பல காரணங்கள் இருக்கலாம் அவற்றைத் தனித்தனியாக நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்பவில்லை.  ஆனால் மாணவர்களின் மன உளைச்சல் பிரதான காரணம் என்பது மறுக்க முடியாத ஒன்று மன உளைச்சலுக்கு யார் காரணம்?  என்ற கேள்விக்கு இருவரைச் சுட்டிக்காட்ட முடிகிறது ஒன்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள். 

உலகம் முழுவதும் தற்கொலைகள் நடைபெற்றுக் கொண்டே இருந்தாலும் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகம் தான் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது என்பது கசப்பான உண்மை. 

தன்னால் நிறைவு செய்ய முடியாத ஆசைகளை தன் குழந்தைகள் மூலம் நிறைவு செய்து கொள்ளத் துடிக்கும் பெற்றோர்கள் அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதும் பள்ளியின் நற்பெயரைக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு நூறு சதவிகித தேர்ச்சியும் புள்ளிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும் ஆசிரியர்களும் மாணவர்களின் தற்கொலைக்குக் காரணம் ஆகின்றார்கள். 

மாணவர்கள் தமது குடும்பச் சூழல் எதிர்காலம் குறித்த சரியான புரிதல் தனக்கான சரியான கல்வி எது என்ற விழிப்புணர்வோடு  தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டியது தலையாய கடமை. 

இவற்றையெல்லாம் உணர வைக்கின்ற இக்கதை தளம் கதைமாந்தர்கள் அவர்களுக்கிடையேயான உரையாடல்கள் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அரசு போன்றோரின் காத்திரமான பாத்திரப் படைப்பும் கதைக்கு மெருகூட்டுகிறது. 

பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கதை. 

சாதாரணமாக உங்கள் கதை வாசிப்பு அரசு மட்டுமல்ல வாசிப்பவர்களை உறங்க விடாமல் கொள்ளும்.

5. இட்லி மாவு....

கதையின் தலைப்பு நம்மைக் கதைக்குள்  வேகமாக இழுத்துச் செல்ல ,  அன்றாடம் நமைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அப்படியே கோர்வையாகத் தொடுத்து அவற்றை சமூக நலனோடு சொல்வதைத் தவிர்த்து எழுத்தாளருக்கு வேறு நோக்கம் எதுவும் இல்லை என்பது புலனாகிறது. 

மிகச்சிறிய கதைக்குள் குறைந்தளவு கதாபாத்திரங்களைக் கொண்டு பாட்டாளிகளின் அன்றாடம் பிழைப்பு அதனுள் இருக்கக்கூடிய  வெற்றிக்கான ரகசிய வழிகளையும் அவர்களது  வலிகளையும்  உரக்கப் பேசுகிறது இட்லி மாவு.

இதுவரை சாதாரண இட்லி மாவு கடை என்று கடந்து சென்ற நாம் இக் கதையைப் படித்த பின் கண்டிப்பாக ஒரு நிமிடம் நின்று கடையைபார்த்துவிட்டுத்தான் செல்வோம்.  என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. 

போட்டியில்லாத வியாபாரத்தில் தரம் கிடைக்காது அதேபோல்

நல்ல வாடிக்கையாளரே சிறந்த  விளம்பரதாரர் என்ற அடிப்படை புரிந்துவிட்டால் அத்தனை தொழிலும் வெற்றித் தொழிலே. கதைக்கு மெருகூட்டும் கருத்துக்கள்.


6.உடையார் முன் இல்லார் போல்.....

"உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர்."

என்ற குறள் சொல்லும் பொருளே இக்கதை. 

இந்த சமூகத்தில் குணசேகரன் போன்றவர்கள் இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பெரும் மகிழ்ச்சியாகவும் கோயெல்  போன்ற குழந்தைகள் தான் பொறுப்புணர்ச்சியோடு மாணவப் பருவத்தை முறையாகக் கற்கையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி  கசடற கற்று இச்சமூகத்தின் சிறந்த பிரஜைகளாக உருவெடுக்க வேண்டும் என்ற அக்கறையும் பொறுப்புணர்ச்சியும் கதையாசிரியர் வாசகன் மனதில் கடத்தி விடுவதன் மூலம் இச்சிறுகதை பள்ளி மாணவர்களுக்குச் சொல்லவேண்டிய முக்கிய செய்தி நிறைந்த கதை என்று உணர முடிகிறது..


7. எங்களுக்குத் தேவை என்றால்.....

ஆரம்பம் முதல் இறுதிவரை சிரித்துக்கொண்டே படித்து முடித்த சிறுகதை. 

மாசறுபொன் அழகிய தமிழ்ப் பெயர். இப் பெயரை இரண்டாவது கதையில் பாரக்கிறேன்.  குழந்தைகளிடம் திணிக்கப்படும் பல்வேறு இனிப்புகளில் ஜாதியும் மதமும் பிரதானமானது. மதத்தையாவது மாற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது,  சாதிக்கு அதுவுமில்லை. அந்த அளவிற்கு மதத்தை விடச் சாதி பெரியது என்று நினைக்கையில் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. 

தனக்குச் சுமையாக இருந்த சுமையிலிருந்து விடுபட்டு, தனது குழந்தைக்கு அச்சுமையைத் தராமல் இருந்திருப்பாள் என்று பார்த்தால்,  அவளது மகள் மேடையில் பேசுவதை வைத்து மாசறு பொன் தன் குழந்தைக்குள்  எந்த மதத்தைத் திணித்தாளோ   தெரியவில்லை எதுவாக இருந்தாலும் தெரிவு அவள் மகள் உடையதாக இருக்கும் பட்சத்தில் புதிய தலைமுறை புதிய பாதையில் செல்கிறது என்று திருப்தி கொள்ளலாம்.

8.தீதும் நன்றும்.. 

மிக அழகான சித்தரிப்புகள் ஓரளவிற்கு மதுரையை செலவின்றி சுற்றி பார்க்க முடிந்தது.  தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற அர்த்தத்தில் முடிகிறது கதை. 

 அறிவுரைகளை அள்ளித் தெளிக்கிறது கதை. நாசுக்காய் பட்டும்படாமலும் சில இடங்களில் மட்டும் சில ஆழமான நுட்பமாக பேசப்பட வேண்டிய கருத்துக்களை எழுத்தாளர் கையாள்வதில் சற்று குறை இந்த கதையில். சமூக அக்கறையில் அறிவுரைகள் அவசியமானவைதான் ஆனால் மிதமிஞ்சி போகும்போது அவை சலிப்படைய கூடியவை என்பது எழுத்தாளர் கவனத்திற்கு..


9.யார் யார் வாய்க் கேட்பினும்

இந்த கதை எனக்கு மிகவும் மனதை நெருடிய வலிக்கச் செய்த கதை என்பேன். 

இந்தியச் சமுதாயத்தில் இவையெல்லாம் அத்தனை சீக்கிரம் மாறக்கூடியவை அல்ல புதிது புதிதாக சில இணை பழக்கவழக்கங்களும் தொலைக்காட்சி தொடரும் திரைப்படமும் பட்டிதொட்டி வரை பரப்பிக் கொண்டிருக்கின்றது.  அந்த வகையில் ஆரம்பித்த எத்தனையோ புதிய புதிய கொண்டாட்ட நாட்களை நாம் பார்க்க முடிகிறது.

அவற்றைக் களைய வேண்டிய பொறுப்பும் நம்பிக்கை என்ற பெயரில் எவ்விதமான ஆதாரமற்ற இதுபோன்ற நம்பிக்கைகளில் மனிதன் இன்னும் உழன்று கொண்டிருப்பது உதவாக்கரையான போக்கை மட்டுமே உணர்த்துகிறது.

செல்வியின் தற்கொலையை ஒத்த தோழி ஒருவரின் தற்கொலையை கண்முன்னே பார்த்தவள் நான். அந்த நிஜக் கதைக்கும் இந்த சிறுகதைக்கும் எந்த வேறுபாடும் இருக்க வில்லை, பெயரைத் தவிர.  எனக்குள் ஒரு பெரிய காயத்தை ஏற்படுத்தியது. 

 யார் யார் வாய்க் கேட்பினும்..

சமூகத்தின் அத்தனை இழி நிலைகளையும் எழுத்துக்குள் கொண்டுவந்த எழுத்தாளருக்கு எனது சல்யூட்.


நெருப்பினுள் துஞ்சல்

தலைப்பு ஓரளவிற்கு நமக்கு கதையின் வலியை உணர்த்தி விடுகிறது. முதலில் நான் ஒன்றை சொல்ல வேண்டும் இது ஒரு சிறுகதை தொகுப்பு என்பதனால் மட்டுமே நான் கதை என்ற வார்த்தையை பயன் படுத்தி இருக்கிறேன்.  நூலுக்குள் எந்த கதையும் இல்லை எல்லாமே நிகழ்வுகளின் சித்தரிப்புகளே.  நூலாசிரியர் தன்னைச்சுற்றி கண்ட பேருண்மைகளை தன்னால் இயன்றவரை பொருத்தமான உரையாடல்கள் காட்சி அமைப்புகளோடு கதைகளாக நம்மிடம் திருப்பி தந்திருக்கிறார்.

 இவை அனைத்தும் இங்கிருந்து தான் எடுக்கப்பட்டது இவை அனைத்தும் நம்மை பற்றியது  நம் சக நண்பர்களை நம் உறவுகளை பற்றியது ஏதோ ஒரு தவறை நாம் எல்லோரும் செய்து கொண்டே இருக்கிறோம் அது ஒருவேளை நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கண்டும் காணாமல் இருக்கின்ற தவறாக கூட இருக்கலாம். 

இந்த வாழ்க்கையில் ஒருவரின் ஆடம்பரம் இன்னொருவனின் அத்தியாவசியம்.  ஒருவனின் பொழுதுபோக்கு இன்னொருவனின் தொழில். ஒருவனின் தேவை முடிவடையும் போது மற்றவனுக்கு தேவை ஆரம்பிக்கிறது எத்தனை ஏற்றத்தாழ்வுகள் இத்தனை வேறுபாடுகள் இவற்றையெல்லாம் கடந்து  சமநிலை பெற வேண்டும் என்பது அத்தனை சீக்கிரம் நடந்து விடக்கூடிய ஒன்றா என்ன இருப்பினும் அரசு தம்மால் இயன்ற அளவு தம் மக்களை காப்பாற்றுவதற்காக அமுல்படுத்தும் சில பயனளிக்கும் திட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டி இருப்பது சிறப்பு. 

 இந்நூல் வாசித்துவிட்டு பின்னர் நம்மை சுற்றி நடக்கும் அவலங்கள் அதற்கு ஏதேனும் ஒரு சிறு துளி பங்களிப்பை செய்து சமுதாயத்தின்  வளர்ச்சியில் நூல் அளவு பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது . இன்னும் பலநூறு கேள்விகளை உள்ளுக்குள் கேட்ககறது. 

பல்வேறு பொருத்தமான  திருக்குறள்களையே கதைக்குத் தலைப்பாகவும் சிறந்த நூல்களையும் கதைகளுக்கு இடையில் சுட்டிக்காட்டி அவையும் பலரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டு இருப்பதாகவே நான் புரிந்து கொள்கிறேன். 


மீண்டும் மீண்டும் கதைகள் முழுவதும் வலியுறுத்தப்படுவது விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வி அறிவு என்பது இன்றியமையாதொன்று என்பதை இளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.  அவர்களுக்கான வாழ்க்கைப் படிகளில் அரசும் தன் பார்வையை செலுத்த வேண்டும்.  இந்தப் படைப்பு பலரையும் சென்றடைய வேண்டும், எழுத்தாளரின் எண்ணம் நிறைவடையும் வரை. 


அன்பும் பாராட்டுகளும்.

Sunday, 6 February 2022

சூரிய கீற்றுகள் - வா.நேரு......வாசுகி தேவராஜ்

 சூரிய கீற்றுகள் - வா.நேரு

*********************************
கவித்துவமான தலைப்புகளைக் கொண்ட 51 சூரிய கீற்றுகளை உள்ளடக்கிய நூல் இது!!
முதல் கீற்றே வயிற்றிலிருந்து ரத்தம் சொட்ட சொட்ட காதர் மைதீனை தேடவைத்தது.
"ஓடும் வாழ்க்கை" வாழ்வின் யதார்த்தத்தை சொல்லும் கீற்று. Do or die என்று சொல்லாமல் சொல்லும் கவிதை!!
சராசரி தேவையை கூட போராடித்தான் பெற வேண்டியிருக்கு என்ற உண்மை நிலையை உணர்த்தும் கவிதை "மறியலின் மாண்பு"
எத்தனை பெரிய எழுத்துகளை விடவும் "வாழ்ந்து காட்டுதல்" தான் சரியான வழிகாட்டுதல் என சொல்லும் கவிதை "அந்தக் கிழவி"
"ஒழுங்குபடுத்தலும் உழைப்பதுமே வாழ்க்கை" - ஒரு நச் வரி.
"தேவை அல்ல. மனத்தெளிவே" இலஞ்சத்தை ஒழிக்கும் ஆயுதம் என்று அழுத்தமாய் சொல்லும் கவிதை!!
"கெஞ்சியும் குழைந்தும்" பதவிக்கு வருவதற்கான காரணம்... சுளீர் சூடு! சொரனையுள்ளவர்கள் உணரட்டும்!!
"அன்றொரு நாள் கிடைத்த" செறிக்க மறுக்கும் உணவு சாதிய கெளரவ பேய் பிடித்த பெரிய மனிதர்களின் செயல்பாடுகளை உணர வைப்பது!!
"பள்ளிக்கு போகிறேன் நான்
என ஆசைப்படல் வேண்டும்!"
இன்றைய கல்விமுறையில் சாத்யப்படும் காரியமா இது என்று எண்ணுகையில்...
"சர்க்கஸ் கூடாரங்களாய்
கல்வி நிலையங்கள்
வேண்டாம்! வேண்டாம்!!"
உண்மை உமிழும் வரிகள்!!
எவ்வளவு தைரியமான பெண்ணாக இருந்தாலும் சமூகத்தின் ஏளன தூற்றலுக்கு பலமிழந்து தான் போகிறாள். எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் மூடநம்பிக்கைகளுக்கும் உடன்படுவது கொடுமைதான்!!
"அவளா இவள்"
"ஆவணி மாதம் வளர்பிறை முகூர்த்த நாள்
மற்ற நாட்கள் அனைத்தையும் ஆணமையற்ற நாட்களாக்கி விட்டதோ?"
எள்ளல் தொனி கேள்விக்கு பதில் தான் இல்லை!!
நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கும் நபர்களிடம் கூட நேரம் ஒதுக்க முடியாத விசேச நாட்கள் சலிப்புத்தான்!
"சே! விசேச நாட்கள்!"
"படிப்படியாய் முன்னேறினால்
சிப்பாய் கூட
சிம்மாசானம் அடையலாம்"
என்று சொல்லித்தரும் செஸ் விளையாட்டு "யானை கூட வெட்டப்படலாம்" என்று எச்சரிக்கையும் செய்வது அபாரம்!!




"வலிமையாக ஓடி கொல்ல முடியாமல்
வஞ்சகமாய் வீழ்த்திவிட்டாயடா மனிதா"
எலியின் நிலையிலிருந்து மனிதனிடம் கேட்கும் கேள்வி.
நாட்டில் இருக்கும் பெருச்சாளிகளை பிடிக்க "பெருச்சாளி பேடு" செய்ய இயலுமா எனவும் கேட்பது அரசியல் நையாண்டி!
வார்த்தைகள் கொல்லும் என சொல்லும் "ஏன் திட்டினாய் தம்பி?"
பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு வீடியோ காலில் பேசி மகிழ்ந்தாலும் பிள்ளைகள் அருகில் இல்லாத வெறுமையை வேதனையோடு படம் பிடித்து காட்டும் கவிதை "கருவி ஏதும் வருமா?"
வெளிநாட்டிலிருந்தே எரியூட்டவும் கருவி ஏதும் வருமா? என ஏங்குவது வேதனையின் உச்சகட்ட வெளிப்பாடு!!
கடவுளை அழைத்து, "நான் இருக்கும் இடம் இதுவென சொல்லித்தொலையேன். என் மனிதர்கள் கொஞ்சம் நிம்மதி கொள்ளட்டும்" என கடவுளை பகடி செய்யும் கவிதை "எங்கே கடவுள்"
விழா நாட்களில் கூட எல்லா மனிதர்களுக்கும் மகிழ்வை அளிப்பதில்லை என்று சொல்லும் யதார்த்த கவிதை "ஒலிக்கும் வெடிச்சத்தங்கள்"
White collar வேலையில் இருக்கும் மனிதர்களின் குணத்தை பொருட்படுத்தாமல் கொண்டாடும் சமூகம் கீழ்நிலை மனிதர்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை என்று வேதனையில் வெளிபட்ட "என்று மாறும் இந்நிலை" படித்துவிட்டு தலைகுனியத்தான் வேண்டியிருக்கு!!
"திணிக்காதீர் உங்கள் கனவுகளை உங்கள் பிள்ளைகளின் மேல்!"
இன்றைய கல்வி முறையை சாடும் கனமான கவிதை "மாணவனை மறைமுகமாய் கழுவேற்றி..."
வெளிப்பகட்டு வேண்டாம் என்று சொல்வதற்கும் துணிவு வேண்டும். அப்படி துணிந்து சொல்வது தான் "சொல் போதும் எனக்கு"
அம்மாவுக்காக இதயம் தொடும் கவிதை "நிறைந்திருக்கிறாய் அம்மா"
"நிரம்பி வழிகின்றன" நாட்டின் ஏற்றத்தாழ்வு அவலங்களை சொல்லும் கவிதை.
"உலகில் பசிக்கும் குழந்தைகளெல்லாம் என் குழந்தைகள் என மதம் தாண்டி
நாடு தாண்டி
பாலூட்டும் சோறூட்டும் நாள்!"
பசியால் உலர்ந்து - சிலிர்ப்புடன்
தான் அடிமைப்பட்டு கிடக்கிறோம் தம் உணர்வுகள் நசுக்கப்படுகின்றன் என்ற அளவில் கூட புரிதல் இல்லாமல் இருக்கும் பெண்களுக்கான கவிதை "பெண் ஏன் அடிமையானாள்?"
"பொய்மை ஆடைகள்" கலைத்து நிர்வாணத்தை நேசிக்கும் நிதர்சனம் இவர் கவிதைகள்!!
"Fuse wire போட்டால் சரியாகும் மின்சாரமா உங்கள் கடவுள்?" என பகடியாக பகுத்தறிவை வித்தைக்கும் கவிஞர், ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் மூடநம்பிக்கையை ஒழிக்க என்ன விரதம் என்று கேட்கிறார்.
பாம்பு அழகாய் படமெடுத்தாலும் கொட்டப்போவதென்னவோ நஞ்சுதான்!!
"உள் மனதின் குரலே பல நேரங்களில் என் கவிதை என்று சொல்லும் இவரின் ஒவ்வொரு கவிதையும் சூரிய கீற்று தான்!!
வாழ்த்துகள் நேரு சார்!!
நேசமுடன்
வாசுகி தேவராஜ்