அண்மையில் படித்த புத்தகம் “ லவ்
யூ சென்னை ‘( நாவல்)
ஆசிரியர் : கோ.ஒளிவண்ணன்
பதிப்பகம் “ எழிலினி பதிப்பகம்
சென்னை-7 பேச: 9840696574
முதற்பதிப்பு : ஜனவரி 2025,மொத்த
பக்கங்கள் 144 விலை ரூ 300
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலப்பொறுப்பில் என்னோடு உடன் பணியாற்றுபவர்
அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்கள்.அவரது தந்தை அய்யா கோபாலகிருஷ்ணன் அவர்கள் மிகச்சிறந்த
பெரியாரிஸ்ட்.ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதியவர்.பதிப்பகத்தை நிறுவி திறம்பட நடத்தியவர்.அவரின்
வழித்தோன்றலான அண்ணன் ஒளிவண்ணன் பதிப்பாளர்,எழுத்தாளர்,ஆங்கிலத்திலும் தமிழிலும் பேச்சாளர்.ரோட்டரி
சங்கத்தில் மிகப்பெரிய பொறுப்புகளை வகித்தவர்.பல ஆளுமைகளோடு மிக நெருங்கிய தொடர்பு
உடையவர்.2015 வெள்ளம்,கோவிட் போன்ற காலங்களில் பலரோடு இணைந்து நிவாரணப்பணிகளைச் செய்தவர்.
கோவிட் காலத்தில் சிறுகதை எழுதத் தொடங்கி,இரண்டு அருமையான சிறுகதைத் தொகுப்புகளை கொண்டுவந்தவர்.தற்போது
‘ லவ் யூ சென்னை ‘ என்னும் நாவலைக் கொண்டு வந்திருக்கிறார்.
காரைக்குடி சுபா ‘சென்னையின் உயிர் ஓசை ‘என்னும் தலைப்பில் அணிந்துரையும் ‘ச.தமிழ்ச்செல்வன்’
நவீன காலத்து நாவல் ‘ என்னும் தலைப்பில் வாழ்த்துரையும் இந்த நூலுக்கு வழங்கியுள்ளனர்.
கதிரவன்,சந்தியா,தமயந்தி என்னும் மூன்று கதாபாத்திரங்கள்.மூவரின் பின்புலமும்
வெவ்வேறு.மிகச்சோகமான பின்புலத்தைக் கொண்ட மூவரும் ஒரு மிகப்பெரிய ஐ.டி. நிறுவனத்தில்
வேலைக்குச் சேர்கிறார்கள். மூன்று பேரும் ஒரே வீட்டில் வாடகைக்கு வீடு பிடித்து தங்குகிறார்கள்.‘ லவ் யூ சென்னை’ புத்தகத்தை எடுத்து 10 ,15 பக்கங்கள்
தாண்டிய பின்பு புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை. அவ்வளவு விறுவிறுப்பாகவும்
பல்வேறு திருப்பங்களோடும் எழுதப்பட்டுள்ள கதை. உண்மையிலேயே மிகுந்த
மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது.
பல்வேறு மாநகரங்கள், நாடுகளைப் பற்றிய வர்ணனைகள், இந்த சைபர் கிரைம் எப்படி ஏமாற்றுகிறார்கள்?, அதற்கு எப்படி
எல்லாம் வேடம் போடுகிறார்கள், சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கக்கூடிய மெத்தப் படித்த மூன்று பேரும் எப்படி
ஏமாறுகிறார்கள் என்பதை ,அவர்கள் ஏமாந்து விட்டார்கள் என்பதை வாசிக்கும் போதுதான் நானும் உணர்ந்தேன்.அதுவரை அதற்கான அறிகுறி எங்கும் கதையில் இல்லை.
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு,பக்கத்து பிளாட்டில் குடியிருக்கும் தேவகி
என்னும் கதாபாத்திரம்,மிகப்பெரிய படிப்பினை.சில நேரங்களில் கேட்பவர்களுக்கு நாம் விரும்பி கொடுப்பது என்பது வேறு.ஆனால் நம்பி,ஏமாந்து
விட்டோம் என்பது தெரிகிறபோது வரும் வலி என்பது கொடுமையானது.அதனை மிக நன்றாக எழுத்தாக்கி
அண்ணன் ஒளிவண்ணன் அவர்கள் கொடுத்திருக்கிறார்.சினிமாப்படம் எடுப்பதற்கு மிக உகந்த கதை இந்தக் கதை. நல்ல முயற்சி.
அருமையான நடை. மிகச் சிறப்பாக வந்துள்ளது, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
முனைவர் வா.நேரு,
தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
ஆசிரியர் குழு,திராவிடப்பொழில் ஆராய்ச்சி இதழ்
No comments:
Post a Comment