Thursday, 22 May 2025

திராவிடர் கழகப்பொருளாளர் வீ.குமரேசன் அவர்களின் உரை…

 

 

மதுரையில் 27-04-2025 ஞாயிறு மாலை 5-30 மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கில் நடைபெற்ற அய்யா பொன்.முத்துராமலிங்கம் அவர்களின் 85-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகப்பொருளாளர் வீ.குமரேசன் அவர்களின் உரை

 

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தமட்டில் மட்டுமல்ல, திராவிட இயக்கத்தின் மூத்த ஆளுமை அண்ணன் பொன்.முத்துராமலிங்கம் அவர்கள். ஆளுமை என்று சொல்கின்ற பொழுது ஏதோ மதுரைப் பகுதியை மட்டும் சார்ந்த ஆளுமை என்று எடுத்துக் கொள்ள முடியாது, திராவிட இயக்கம் என்பது மதுரையைத் தாண்டியது, தமிழ்நாட்டைத் தாண்டியது, உலகமெல்லாம் பரவி இருக்கக்கூடியது. அந்த இயக்கத்தின் மூத்த ஆளுமை , வயதால் மட்டுமல்ல கொள்கைவாதியாகத் திராவிட இயக்க கொள்கையில் ஊறித் திளைத்தவராக இருக்கக்கூடிய அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அண்ணன் அவர்களுக்கு, இந்த 85 ஆம் ஆண்டுப் பிறந்தநாள் விழாவிற்குத் தாய்க்கழகம் எடுக்கின்ற இந்த விழாவிற்குத் தலைமை ஏற்று இருக்கக்கூடிய திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம் அவர்களே, இந்த நிகழ்வுகளைத் தொடக்கம் முதலே மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து, நேர்த்தி என்று சொன்னாலே செல்வம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் செல்வம் அவர்களே”,என்று குறிப்பிட்டு அனைவரையும் விளித்தார்.தொடர்ந்து,

 

இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டதைப் பற்றிச் செல்வம் அவர்கள் குறிப்பிட்டார்கள் பொதுவாகத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்னையில் இருந்தார் என்றால் அவர் திடலுக்கு வராமல் இருந்தது இல்லை. சென்னையில் இருந்தால் காலை அல்லது மாலை உறுதியாக வந்து விடுவார்., அதுதான் அவரது வழக்கம்.ஆனால் சென்ற வாரத்தைப் பொறுத்த அளவிலே, அண்மையிலே அவர் ஆஸ்திரேலியாவிற்குச் சென்று தட்பவெப்ப நிலை முற்றிலும் மாறுபட்ட நிலையில் ஆனால் தமிழ்நாட்டை விட மிகச் சுறுசுறுப்பாக அங்கு அவர் பணியாற்றி வந்த பிறகு அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அதனால் மூன்று நாட்கள் அவர் வீட்டில் ஓய்வெடுத்தார். அப்படிப்பட்ட நிலையில்தான் செல்வம் அவர்கள் அய்யா ஆசிரியர் அவர்களைத் தொடர்பு கொண்டு, இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கூறியிருக்கிறார். ஓய்வுக்குப் பிறகு அவர் திடலுக்கு வந்தபின் அதனை நினைவூட்டி, நான் ஆசிரியரிடம் கேட்டபோது கொள்கையாளருக்குத் தாய்க்கழகம் எடுக்கின்ற விழா, எனவே தலைமை நிலையத்தின் சார்பாக நீங்கள் சென்று கலந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசிரியர் அவர்கள் கட்டளையிட்டார். அதோடு ஒரு வாழ்த்து மடலையும் என்னிடம் கொடுத்து அனுப்பினார்.

 

அங்கிருந்து வரும்போது  நான் தலைமைக் கழகப் பொறுப்பாளராகத்தான் வந்தேன். ஆனால் இங்கு வந்து மதுரை முகங்களை எல்லாம் பார்த்த பிறகு, நான் இங்கு மதுரைக்காரனாகத்தான் பேசப்போகிறேன். அண்ணன் பொன்முத்து அவர்களைப் பற்றி அரசியலில் அவரோடு பயணித்தவர்கள்,அய்யா துரை எழில்விழியன்,அய்யா குழந்தைவேலு,அய்யா வேலுச்சாமி போன்றவர்கள் எல்லாம் அவருடைய ஆற்றலைப் பற்றி அருமையாக எடுத்துரைத்தார்கள். என்னைப் பொறுத்த அளவில் நான் தூரத்தில் இருந்து அவரைப் பார்த்தவன். நான் அரசுப் பணியில் இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றதற்குப் பிறகு முழு நேரப் பணியாளராகத் திராவிடர் கழகத்திற்கு வந்தவன். 40 ஆண்டுகளாக இயக்கத் தொடர்பு இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளாகத்தான் முழுநேரப்பணி என்பது. திராவிடர் கழகத்திற்கு நான் வருவதற்கு முன்னாடி இருந்த காலகட்டத்தைப் பற்றித்தான் நான் இப்போது பேசப் போகிறேன். இது என்னுடைய சுயபுராணம் என்று தயவு செய்து எண்ண வேண்டாம் .இது இயக்கம் சார்ந்ததுகொள்கை சார்ந்தது.

 

 இன்று சென்னையிலிருந்து ரயிலில் வந்த பொழுது ஓர்  ஆங்கிலப் புத்தகத்தினைப் படித்துக் கொண்டு வந்தேன் அந்த ஆங்கிலப் புத்தகத்தின் தலைப்பு Why we’re getting poorer-A Realist’s Guide to the Economy and How We Can Fix it,authored by Cahal Moran.’. நாம் ஏன் ஏழைகளாக இருக்கிறோம் என்பதுதான் அதனுடைய தலைப்பு. உலகமயமானபோது எல்லா மக்களும் பணக்காரர்கள் ஆகி விடுவார்கள் என்ற மாயையை உண்டாக்கினார்கள். ஆனால் அந்தக் கற்பனை உடைக்கப்பட்டு விட்டது. அந்த உலகமயம் என்பது பெரும் பணக்காரர்களுக்கு மட்டும்தான். அது ஒரு சில பணக்காரர்களை மட்டும் உருவாக்கி இருக்கிறது .ஆனால் பெரிய அளவில் ஏழைகளை மேலும் ஏழைகளாக ஆக்கி இருக்கிறது என்பதுதான் அந்தப் புத்தகத்தின் சாரம். இந்தப் புத்தகத்தை எழுதியவர் லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ்ஸில் படித்த ஒரு ஆங்கிலப் பொருளாதார நிபுணர். அவரது பெயர் மோரான். இந்தப் புத்தகத்தில் ஒரு வரலாற்று ஆசிரியரின் குறிப்பை நினைவுபடுத்துகிறார். அந்த வரலாற்று ஆசிரியரின் பெயர் யங். ஒருவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அவர் 20 வயதாக இருக்கும் போது அவரைச் சுற்றி இருந்த உலகம் எப்படி இருந்தது என்பதைப் புரிந்து கொண்டால் அவரைப் புரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடுகிறார் இதை இன்னொரு வகையில் சொல்வதென்றால் ஒருவர் 20 வயதில் என்ன சூழலில், என்ன கொள்கையில் இருக்கிறாரோ அதுதான் அவரை வளர்த்தெடுக்கும்   என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

 

அப்போது எனக்கு வயது 18 1971 ஆம் ஆண்டு, கல்லூரிப்  படிப்பு படிப்பதற்காக, தேனியிலிருந்து நான் மதுரைக்கு வந்தவன். படித்து முடித்து வேலை என்று மதுரையிலேயே தங்கி விட்டேன். ஒத்தக்கடை அருகிலுள்ள வேளாண்மை  கல்லூரியில்தான் நான் பட்டப்படிப்பை படித்தேன். அடிப்படையில் எங்கள் குடும்பம் என்பது காங்கிரஸ் குடும்பம், தீவிரமான காங்கிரஸ் குடும்பம். தேனியில் இருந்த என் ஆர் தியாகராஜன் என்பவர் எங்கள் உறவினர். காங்கிரஸ் கட்சிக்காரர். எனது தந்தை அவரின் ஆத்மார்த்தமான சீடர். நான் காங்கிரஸ் உணர்வோடு இளம் வயதில் இருந்தவன். 1967 தேர்தல் காங்கிரஸ் தோற்று திமுக வெற்றி பெற்றுவிட்டது.  1968 ல் ஓர் இடைத்தேர்தல் வருகிறது. அந்தத் தேர்தலில் திருமங்கலம் என்று நினைக்கிறேன்.அதில் காங்கிரசு வெற்றி. அப்போது தினத்தந்தியில்  கார்ட்டூன் போடுவார்கள். காங்கிரஸ்காருக்கு ஒரு பெரிய தொந்தியைப் போட்டு ,ஒரு கதர் குல்லாயைப் போட்டு, குளத்திலே வலைவீசிப் பிடிக்கும்போது ஒரு மீன் கிடைச்சிருச்சு, அப்படிங்கிற மாதிரி ஒரு கார்ட்டூன் போட்டாங்க.

  

நான் கல்லூரிக்குப் போகும்போது கதர்ச்சட்டை, கதர் வேட்டிதான் கட்டி இருப்பேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எனது கல்லூரியில் எனக்குச் சீனியராக இருந்தவர் அக்ரி கணேசன். அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். மதுரையில் உள்ள காலேஜ் ஹவுசில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வு. வாங்க குமரேசன்’, என்று என்னை அக்ரி கணேசன் அழைத்தார். நாங்கள் மாணவர்கள் பலர் அந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்வுக்குச்  சென்றோம். அந்தப் புத்தக வெளியீடு என்னவென்று சொன்னால், என்சிபிஹெச் வெளியீடு. இந்து மதம் கிறிஸ்தவ மதம் இஸ்லாமிய மதம் புத்த மதம் என்று ஒவ்வொரு மதத்தைப் பற்றியும் இராகுல் சாங்கிருத்தியாயன் எழுதிய புத்தகங்கள். ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றியும் ஒருவர் பேச வேண்டும் என்று அந்தக் கூட்ட்த்தை  ஏற்பாடு  செய்திருந்தார்கள். அந்தக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர்  மொழிப்போர் தியாகி அண்ணன் எல். கணேசன் அவர்கள்.



 

அண்ணன் பொன்முத்து அவர்களுக்கு  நன்றாக நினைவிருக்கும். அதில் ஒரு புத்தகம் பற்றி அண்ணன் பொன்முத்து அவர்கள் பேசினார்கள். எனக்கு அப்போது 18 வயது. எனக்கு இருந்த புரிதல் எல்லாம் தி.மு..காரர்கள் என்றால் அலங்காரமாகப் பேசுவார்கள்  என்பதுதான். அவ்வளவுதான்  அந்த வயதில் எனக்குப் புரிதல். அந்தப் புரிதலை மாற்றிய பேச்சு என்பது அண்ணன் பொன்.முத்து அவர்களுடைய அன்றைய பேச்சுதான். அது லேசுப்பட்ட புத்தகம் அல்ல. இராகுல் சாங்கிருத்தியாயன் என்பவர் தத்துவஞானி. தத்துவ வித்தகர். அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு,மிக எளிமையாக விளக்கிச் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தி.மு.-விலிருந்து வந்து இப்படி விளக்கி பேசுகிறார்களே என்று. அதுதான் எனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை பெரியாரைப் பற்றிய ஒரு புரிதல் எனக்கு இருந்தது ஆனால் அதற்குப் பிறகுதான் திமுகவிலும் இவ்வளவு ஆழமாகப் பேசுவார்கள் என்பது எனக்குப் புரிந்தது.

 

அந்தக்கூட்டத்தில்  அண்ணன் பொன்முத்து அவர்கள் ஆற்றிய உரையில் கூடுதலாக ஒரு செய்தி. பொதுவாக 20 வயதில் எல்லோரும் கம்யூனிஸ்டாக இருப்பார்கள், அந்தக் கொள்கையெல்லாம் படிக்கும் போது ஓர் ஆர்வம் இருக்கும். ஆனால் அந்த வயதில் கம்யூனிச புத்தகங்களை  நான் படித்த போது அது நம் நாட்டுக்கு ஒத்து வராது என்ற  தயக்கம் எனக்கு இருந்தது.அந்தக் கூட்டத்தில் அந்தப் புத்தகத்தை ஆய்வு செய்கிற போது அண்ணன் பொன்முத்து அவர்கள் பேசும்போது  ஒரு கருத்தைச் சொன்னார்கள்.அந்தக் கருத்து  எனக்குப் பல ஆண்டுகளாகப் புரியாத ஒரு விசயத்திற்கு விடை கிடைத்தது போல இருந்தது. அவர் பேசும்போது சொன்னார்மார்க்சின் கோட்பாடு என்பது ஒரு கையேடு. அதை நேரடியாக எடுத்து நம் நாட்டில் பொருத்த முடியாது. அதை ஒரு வழிகாட்டி நெறிமுறையாக வைத்துக் கொண்டு அதை நம் நாட்டுச் சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம் என்ற  கருத்தைச் சொன்னபோது இன்னும் எனக்கு ஒரு டைமென்சன் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் நம் நாடு என்ற பத்திரிக்கையை வாங்கிப் படிக்கும் பழக்கம் எனக்கு வந்தது .அப்போது அண்ணா அவர்கள் நம் நாடு பத்திரிக்கையை நடத்தவில்லை. அதைச் சிட்டிபாபு அவர்கள் நடத்தினார். எனவே எனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது அண்ணன் பொன்முத்து அவர்களின் பேச்சுதான்.

 

எனக்கு அது மிகப் பெரிய திருப்புமுனையாக, ஈர்ப்பாக இருக்கலாம் ஆனால் அண்ணனைப் பொறுத்தளவில் அது இயல்பான ஒன்று. .அவருடைய பேச்சால் என்னைப்போல  மாற்றம் ஏற்பட்டவர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள். எனவே பேசும்போது கருத்து அடிப்படையில் பேசக்கூடிய ஓர் ஆற்றல் மிக்கவர் அண்ணன் பொன்முத்து அவர்கள். தந்தை பெரியார் அவர்களை அழைத்துப் பதவி ஏற்றது பற்றி இங்குச் சொன்னார்கள். 1971-ல் அண்ணன் அவர்கள் இரும்பாடி ஊராட்சி மன்றத் தலைவர், வாடிப்பட்டி யூனியன் சேர்மன். அந்தக் காலத்தில் சேர்மன் பதவி என்பது சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட அதிகாரம் மிக்கது. அதாவது ஆசிரியர் அவர்கள் சொன்னார்கள், பாருங்கள், ஒரு கொள்கைவாதிக்குத் தாய்க்கழகம் எடுத்து நடத்துகின்ற விழா என்று வாடிப்பட்டி சேர்மன் பதவியில்  ஆரம்பித்துப் பல்வேறு உயர் பதவிகளுக்கு அவர் வந்திருக்கிறார். அதிகாரம் மிக்கப் பதவியில் இருந்திருக்கிறார். ஆனால் கொள்கைவாதி என்று வருகின்றபொழுது, அதிகாரத்திற்கு வருகின்றபொழுது, கொள்கை கரைந்து போகக் கூடிய அளவிற்கு நிறையப் பேர் இருப்பார்கள் அண்ணனைப் பொறுத்தளவில் அந்தக் கரைப்பு என்பது அண்டக்கூட முடியவில்லை. அன்றைக்கு எப்படித் தொடங்கினாரோ, அதேபோல இன்றைக்குவரை அதிகாரம் வரும் போகும்,கொள்கைதான் நமக்கு நிரந்தரம் என்று இன்றுவரை கொள்கைவாதியாக வாழ்ந்து கொண்டிருப்பவர் அண்ணன் பொன் முத்து அவர்கள்.

அடுத்து ஒரு நிகழ்வு அவருடைய நன்றி உணர்வு எப்படிப்பட்டது என்பதற்கு. மதுரை

தல்லாகுளத்திலிருந்த பெரியார் மாளிகையில் அய்யா ஆசிரியர் அவர்கள் தலைமையிலே ஒரு கலந்துரையாடல் கூட்டம். அப்போதெல்லாம் நான் கூட்டங்களிலே கலந்து கொள்ள ஆரம்பித்து விட்டேன் . அப்போது அண்ணன் பொன்முத்து  வந்திருக்கிறார் அப்போது முத்து அண்ணனும் அங்கு வந்திருக்கிறார். அப்போது அவர் அதிமுகவுக்குப் போய்விட்டார் ,ஆசிரியர் அவர்கள் மற்றும்  எல்லோரும் கலந்து கொண்டிருக்கும்பொழுது,மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க.செயலாளராக இருந்த  தாவுது அவர்கள் பேசும்போது எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கிய  அன்றைய ஆசான் முத்து அண்ணன் என்று ஆரம்பித்தார். உடனே முத்து அண்ணன்  என்ன சொன்னார் என்றால்,’ ஏண்டா அன்னைக்கு  நான் ஆசான் என்றால், இன்னைக்குக் கிடையாதா?” என்று கேட்டார். அவருக்கே உரிய பாணி அது அடுத்து அண்ணன் பொன் முத்து அவர்கள்  பேசும் பொழுது,’ எங்கு இருந்தாலும் எங்களுக்கு ஆசனாக இருக்கக்கூடிய அண்ணன் முத்து என்று ஆரம்பித்தார். இது ஒரு மிகப்பெரிய மாண்பு. அமைப்பு ரீசியாக அவர் வேறு இடத்தில் இருக்கலாம், ஆனால் வளர்த்து விட்டவரை, அந்தப் பண்பைக்  குறிப்பிட்டு சொல்வது இது அண்ணனிடம் நான் கண்டது, கற்றுக் கொண்டது. நிறைய இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் .

 

நான் கடந்த 20 வருடங்களாகத்தான் சென்னை போய் விட்டேன் அதற்கு முன்பு மதுரைதான், திருப்பரங்குன்றம் பகுதியில்தான்  நான் இருந்து கழகப்பணி ஆற்றினேன். அப்போது எங்களுக்கு ஓர் ஆசை திருப்பரங்குன்றத்திலே, தந்தை பெரியார் சிலையை நிறுவ வேண்டும் என்பது.  எந்த இடம் என்பதைக் கூட நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறோம். திருமங்கலத்தில் இருந்து வரக்கூடிய வழியில்,திருப்பரங்குன்றத்தில் அந்தப் பூங்காவிற்குப் பிரிகிற இடத்தில். அந்தச் சமயத்தில் நாங்கள் எடுத்த முயற்சி எல்லாம் செல்வம் அவர்களுக்கும் அண்ணன் எடிசன் அவர்களுக்கும் தெரியும். திருப்பரங்குன்றம் நகராட்சி கூட்டத்திலும் தந்தை பெரியார் சிலை அமைக்க அனுமதி கொடுத்து  ஒரு தீர்மானம்  நிறைவேறி விட்டது.

 

அண்ணன் பொன்முத்து அவர்களின்  ஆற்றல், செயலுக்கு எல்லாம் ஒரு சவாலாக இருக்கக்கூடிய ஒரு கோரிக்கையைத் தலைமைக் கழகத்தின் சார்பாக நான் இந்த நேரத்தில் வைக்கிறேன்.தந்தை பெரியார் அவர்களுக்குத் திருப்பரங்குன்றத்தில் ஒரு சிலையை வைக்க வேண்டும். . உங்கள் காலத்தில் அந்தச் சிலை நிறுவப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்லி நிறைவு செய்கிறேன் .கொள்கைவாதியாக இவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார், இவருக்குப் பின்னாடி பிள்ளைகள் என்ற ஒரு கேள்வி வரும். பிள்ளைகளையும் கொள்கைவாதிகளாகத்தான் வளர்த்திருக்கிறார்.

 

அண்ணனின் மகள் பேரா தேன்மொழி அவர்கள் இங்கே பேசினார்கள் அவர் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருக்கிறார். திராவிட இயக்க கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளராக இருக்கிறார். அது மட்டுமல்ல ஆசிரியர் அவர்களைப் புரவலராகக் கொண்டு  இயங்கும் திராவிட வரலாற்று ஆய்வு மையம் என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. வரலாற்றுப் பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் எல்லாம் பொறுப்பாளராக இருக்கக்கூடிய அந்த அமைப்பின் இணைச் செயலாளராக இருந்து, திடலுக்கு வந்து ஆசிரியர் அவர்களைச் சந்தித்துப் போகக் கூடியவராகப் பேராசிரியர் தேன்மொழி அவர்கள் இருக்கிறார். அப்படிப்பட்ட ஓர் அருமையான வாரிசையும் அண்ணன் அவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையிலே முழுக் கொள்கைவாதிக்காக  நடத்தப்படுகின்ற விழா இந்த விழா. அண்ணன் அவர்கள் நிச்சயமாகக் கொள்கைவாதியாக வாழ்கிறார் என்பதற்கு   இந்த விழாவின் அழைப்பிதழின் கடைசி பக்க அட்டையே போதும்.அய்யாவோடு இருந்த படம், அண்ணாவோடு இருந்த படம், கலைஞரோடு இருந்த படம், இன்றைக்கு ஆசிரியர் அவர்களோடு அதே மாதிரி  முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களோடு இருக்கக்கூடிய படம்.அருமையாக உள்ளது. இப்படி எல்லாக் காலகட்டத்திலும் கொள்கைவாதியாக இருக்கக்கூடிய ஓர் ஆளுமை என்பது மிக மிக அபூர்வமானது. இப்படிப்பட்ட ஒரு மாபெரும் மனிதருக்கு, கொள்கை வீரருக்கு,பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்த  பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தலைமைக் கழகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்து அண்ணன் பொன்முத்து  அவர்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். இந்த இயக்கத்தின் பிதாமராக இருக்கக் கூடிய தந்தை பெரியாரின் வாழ்நாளையும் தாண்டி வாழ வேண்டும். நூறாண்டையும் கடந்து வாழ வேண்டும் அதனால் சமுதாயம் பலன் பெறவேண்டும்  என்று கூறி விடைபெற்றுக் கொள்கிறேன் “ என்று உரையாற்றினார்.

 


No comments: