Saturday 12 July 2014

முட்டுச்சுவரு - வா. நேரு

                                        முட்டுச்சுவரு  - வா. நேரு

அழுது அழுது மாரியின் கண்கள் எல்லாம் வீங்கி இருந்தன. அறுபது வயதைக் கடந்தவர் , இப்படி அழுகை கோலத்தோடு அவரைப் பார்த்தபொழுது தூக்கி வாரிப்போட்டது அரசுக்கு. " ஏன் இப்படி , இந்த நேரத்தில் , என்ன நிகழ்ந்தது ? " என்று அடுக்கடுக்காக அவரிடம் கேள்விகளைக் கேட்டான் அரசு. " ஏமாந்து விட்டேன் அரசு, ஏமாந்து விட்டேன் , பெத்த பிள்ளைகிட்டயே ஏமாந்திட்டேன், என் தலையிலே மண்ணை வாரிப்போட்டுட்டான் " என்ற போது அவரின் ஒரே மகன் வாசு எவளையும் காதலித்து , திருமணம் முடித்து விட்டானோ என்று அரசு எண்ணினான். காதல் திருமணம் என்றால் நாம் ஆதரவு தரும் ஆள் என்று எல்லோருக்கும் தெரியுமே, அப்படி ஒரு செய்தி என்றால் நம்மிடம் வரமாட்டாரே என்று நினைத்துக்கொண்டு " முதலில் அழுகையை நிப்பாட்டுங்கள், அப்புறம் சொல்லுங்கள் , எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம், இழவு வீட்டில் அழுவது போல் தயவு செய்து அழுகாதீர்கள் " என்றான் அரசு.

கொஞ்ச நாட்களுக்கு முன்னால்தான் பணி ஓய்வு பெற்றார் அரசுவோடு வேலை பார்த்த மாரி. அரசுக்கு மாரி பக்கத்து ஊர்க்காரர். ஒரே அலுவலகத்தில் உடன் இருந்தவர். . மாரி மிகப்பெரிய பதவி வகித்தவரல்ல. அலுவலகத்தில் கடை நிலை ஊழியராக வேலை பார்த்தவர். ஆனால் தான் கடை நிலை ஊழியர் என்றாலும் பிள்ளைகள் முதல் நிலை ஊழியராக வரவேண்டும் என்று படிக்கவைத்தார். ஒரு மகன், ஒரு மகள் என்றாலும் மகளை விட மகன் படிப்பில் மிகவும் அக்கறை காட்டினார். எல்.கே.ஜி-க்கே பல ஆயிரம் கட்டி மகனைப்படிக்கவைத்தார். அரசு தன் பிள்ளைகளைத் தாய்த்தமிழ்ப் பள்ளியில் மொட்டு, மலர் என்று சேர்த்து விட்டிருந்தார். ஒரு நாள் அரசுவிடம் மாரி,"உன் மகனுக்கு எவ்வளவு வருடக் கட்டணம் ? " என்றபோது அரசு "என் மகன் மொட்டு வகுப்பு படிக்கிறான் , அவனுக்கு வருடக்கட்டணம் ரூ 2000-" என்றபோது அரண்டு போனார். " என்ன, என் பிள்ளையை வருடக்கட்டணம் இருபத்தி ஐந்தாயிரம் கொடுத்து படிக்கவைக்கிறேன், நம்ம சுந்தரு வருடத்துக்கு 65000 பணம் கட்டி எல்.கே.ஜி.யில் படிக்க வைக்கிறார். என்னைவிட அதிகம் சம்பளம் வாங்குற ஆள் நீ, ஏன் இப்படி ? "என்றார். "எனக்கு அதிகக் கட்டணம் கொடுத்து படிக்க வைத்தால்தான் , நல்ல படிப்பு என்பதில் நம்பிக்கை இல்லை. நல்ல பள்ளிக்கூடம் என்பது கட்டணத்தில் இல்லை " என்றபோது மாரி அரசுவிடம் " போப்பா, இப்படித்தான் ஏதாவது ஏட்டிக்கு பூட்டியா ஏதாவது நீ சொல்லுவே, செய்யுவே " என்றார்.

மாரி தன் பிள்ளையின் படிப்பிற்காகப் பட்டபாட்டையெல்லாம் அரசு நன்றாக அறிவான். எல்.கே.ஜி.படிக்கும்போது அவனுக்கு ஆரம்பித்த செலவு கடந்த வருடம்தான் முடிந்தது. எல்.கே.ஜி. படித்த பள்ளிக்கூடத்திலேயேதான் வாசு பத்தாம் வகுப்புவரைக்கும் படித்தான். அவன் பத்தாம்வகுப்பு படிக்கும்போது அவனுக்கு பள்ளிக்கட்டணம் ஆயிரக்கணக்கில் கட்டிவிட்டு, டியூசனுக்கு என்று ஏகப்பட்ட பணத்தை செலவழித்தார். பின்பு பத்தாம் வகுப்பு விடுமுறையின்போதே, பதினொன்றாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு டியூசனுக்கு போகச்செய்தார்.பத்தாம் வகுப்பில் 70 சதவீதம் எடுத்த மகனை , அந்த நகரத்திலேயே மிகப்பெருமையாகப் பேசப்படும் மற்றொரு பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். அந்தப் பள்ளிக்கூடம் மாணவ், மாணவிகள் மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் என வருடந்தோறும் முதல் மூன்று ரேங்குகளுக்குள் வந்து கொண்டிருந்தார்கள். முதலில் க்ட்டிட நிதி என்று 10 ஆயிரம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் வாசு படித்த காலத்தில் ஒரு இல்ட்சம் என்று மாற்றி விட்டார்கள் . ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடையாகக் கொடுத்து அந்தப் பள்ளிக்கூடத்தில் போய் மாரி, மகனைச் சேர்த்து விட்டார். +2 -வில் மதிப்பெண் அடிப்படையில் நல்ல கல்லூரி கிடைக்கவில்லை என்று தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டு இலட்சம் பணம் கொடுத்து , பின்பு சுய நிதிக்கல்லூரி பிரிவில் அதிகமாகப் பணம் கட்டி சேர்த்து விட்டார். கோவைக்கு அருகில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த மகனின் வங்கிக் கணக்கிற்கு அடிக்கடி பணம் அனுப்பிக்கொண்டே இருப்பார். "ஏன் இவ்வளவு பணம் அடிக்கடி அனுப்பிகின்றீர்கள்" என்று கேட்டதற்கு " விடுதி பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டான். நாலைந்து பையன்களோடு இணைந்து ரூம் எடுத்து வெளியில் சாப்பிட்டுக்கொண்டு படிக்கின்றான். கோயம்புத்தூர் சும்மாவே நிறைய பணம் புழங்குமிடம், விலைகளும் மற்ற ஊர்களை விட அதிகம். என் பிள்ளை அங்கே துன்பப்படக்கூடாதல,அதனாலதான் பணம் அடிக்கடி அனுப்புகின்றேன்" என்பார். திடீர் திடீரென்று பி.எஃப் பணத்தை சேமிப்பிலிருந்து எடுப்பார். கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடனை வாங்குவார். சில நேரங்களில் அலுவலங்களில் , வெளியிடங்களில் வட்டிக்கு கொடுப்பவர்களிடம் கடன் வாங்குவார். மாரி தன் வாழ்க்கையில் என்றும் ஆடம்பரமாக, தேவையில்லாமல் செலவழித்தாக ஞாபகம் இல்லை. பார்த்து , பார்த்துச்செலவழிப்பார். ஆனால் பிள்ளைகள் படிப்பு என்று வந்தால், அதுவும் மகனின் படிப்பு என்றால் கடன் வாங்கியாவது படிக்க வைத்துக்கொண்டிருந்தார்.சில வருடங்களுக்கு முன் சில நேரம் அவரின் செயல்கள் கிறுக்குத்தனமாகத் தோன்றும். அலுவலகத்தில் வேலை மும்மரமாகப் பார்த்துக்கொண்டே இருப்பார்,திடீரென்று மகன் ஞாபகம் வந்து விடும். மகனை டியூசனுக்கு அழைத்துச்செல்லவேண்டும் என்று சொல்லி, மேலதிகாரியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு பறந்து பறந்து போய் வருவார்.ஏற்கனவே அவருக்கு உடலில் சில பிரச்சனைகள் இருந்தன. மருத்துவரிடம் காண்பித்து மாத்திரை வாங்கிக் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

சென்ற வருடம் பணி ஓய்வு விழாவிற்கு அவரது மனைவி, மகன், மகள், மகளின் கணவன் என வந்திருந்தனர். மகனைக் காண்பித்து அரசுவிடம் பெருமையாகச்சொன்னார். எனது மகன் டிரிபில் ஈ பாடம் எடுத்து தொன்னூறு சதவீதம் எடுத்து பாஸ் செய்திருக்கிறான். தற்சமயம் ஒரு சின்ன வேலையில் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறான். நானும் அனுபவம் கிடைக்கிட்டும் என்று அனுப்பி வைத்திருக்கிறேன். அனுபவம் கிடைசசு , நல்ல கம்பெனிக்கு வேலைக்கு போயிருவான். வேலைக்கு போயிட்டா வெளி நாடுகளுக்கெல்லாம் போற வாய்ப்பு கிடைக்கும். நானும் கூட பாலு சாரு மாதிரி வெளி நாடு போறதெக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இவர்களோடு வேலை பார்த்த பாலுவின் மகன் அமெரிக்காவில் வேலை பார்க்கின்றான். காடு ஆறுமாதம், நாடு ஆறு மாதம் என்பது போல பாலு தமிழ் நாட்டில் ஆறுமாதம், அமெரிக்காவில் ஆறுமாதம் என்று அலைந்து கொண்டிருந்தார். நன்றாக போட்டோ எடுக்கக் கூடியவர் பாலு. அமெரிக்கா சென்றது, அங்கே தங்கியது, ஒவ்வொரு நாடாக விமானத்தில் இறங்கி, இறங்கி மாறி அமெரிக்கா போனது என்று வித விதமான கலர் படங்களைக் கொண்டு வந்து பாலு அலுவலகத்தில் அசத்திக் கொண்டிருந்தார். அரசுவுக்கு பாலு போலத் தானும் தன் மகனால் அமெரிக்காவிற்கு செல்லப்போகிறோம் என்று நம்பிக்கை இருந்தது. படாத பாடுபட்டு , நிறையச்செலவழித்து தன் மகனை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டுவந்து விட்டோம் என்ற தெம்போடு இருப்பவராக மாரி இருந்தார்

அப்படிப்பட்ட மாரிதான் " நான் மோசம் போயிட்டேன், நான் மோசம் போயிட்டேன், பெத்த பிள்ளையால மோசம் போயிட்டேன் " என்று அரசுக்கு முன்னால் அழுதுகொண்டிருந்தார். " என்னண்ணே நடந்தது " என்ற அரசுவிடம் மாரி விளக்கியபோது அரசுவே கதிகலங்கிப் போனான். மாரியின் மகன் வாசு பொறியியல் பாடத்தில் தேர்ச்சி பெறவேயில்லை. ஏகப்பட்ட பாடங்கள் இன்னும் அரியர்ஸ் வைத்திருக்கிறான். மொத்தம் உள்ள 48 பாடங்களில் 10 பாடங்களில் அவன் தேர்ச்சி பெறவேயில்லை. ஊரிலிருந்து வந்த மாரியின் அண்ணன் மகன் , எத்தனை மதிப்பெண் , என்ன கூட்டுத்தொகை, எவ்வளவு சதவீதம் என்றெல்லாம் கேட்டபோது வாசு மழுப்பியிருக்கிறான். சந்தேகமடைந்த மாரியின் அண்ணன் மகன் மாரியிடம் சொல்ல, இரண்டு பேரும் வாசு இல்லாத நேரத்தில் அவனது பெட்டியை எடுத்துப் பார்த்தபொழுதுதான் அந்த அதிர்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. ஏற்கனவே 90 சதவீதம் எடுத்து வெற்றி பெற்றதாகச்சொன்ன சான்றிதழ்களும் , உள்ளே இருந்த சான்றிதழும் ஒன்று போல இருக்க, மதிப்பெண்கள் மட்டும் மாறியிருந்திருக்கின்றது. மாலையில் வந்த வாசுவிடம் கேட்க, கையோடு பிடிபட்ட கள்வன்போல ஆமாம் என்று சொல்லியிருக்கின்றான். இருதய வலி வந்து விடும் அளவுக்கு கத்திக் குமித்த மாரி, வீட்டை விட்டுத் தாண்டி ஓடி வந்து அரசுவிடம் வந்து நின்று இப்படி புலம்பிக்கொண்டிருக்கின்றார்.

அரசு அறிந்த வரையில் வாசு தெரிந்து தவறு செய்யக்கூடிய பையன் அல்ல, திட்டமிட்டுச்செய்யும் கிரிமினலும் அல்ல. ஏதோ , எங்கோ சிக்கல் இருக்கிறது என்று புரிந்த அரசு, "இப்போ வாசு எங்கே" என்றான் மாரியிடம் . "தா.... மகன் எங்கோ இருக்கானோ, என்ன திருட்டுத்தனம் பண்ண திட்டம் போட்டிருக்கானோ "என்று மாரி குமுறினார். " இல்லை, என் கூட வாருங்கள் " என்று மாரியையும் அழைத்துக்கொண்டு மாரி வீட்டுக்கு விரைந்தான் அரசு.

மாரியின் மனைவி ஒரு பக்கம் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அவரிடம் " வாசு எங்கே " என்ற போது உள்ளே கையைக் காட்டினார். விறு விறுவென்னு மாரியைக்கூட எதிர்பார்க்காமல் உள்ளே நுழைந்த அரசுவைக் கண்டதும் பரக்க, பரக்க முழித்த வாசு , ஏதோ ஒரு பாட்டிலை எடுத்து ஒளித்துவைப்பதை அரசு பார்த்து விட்டான். நேரே போய் அரசு அதை எடுத்துப் பார்த்தான் , நஞ்சு மருந்துப் பாட்டில். " ஏண்டா, செய்வதையெல்லாம் செய்துவிட்டு, கேவலப்படுத்தனது எல்லாம் போதாதுன்னு இனி விஷ்ம் குடித்து செத்து வேற கேவலப்படுத்த போறயா? எப்படிடா உங்கப்பாவை ஏமாத்த உனக்கு மனசு வந்துச்சு ? என்னென்ன பண்ணினாரு மனுசன் உனக்கு, எப்படி எப்படி எல்லாம் உன்னைப் பொத்தி பொத்தி வளர்த்தாரு, " என்ற அரசு " ஏண்டா இப்படி செஞ்ச ? " என்றான் கோபமாக.அரசுவின் ஆங்காரத்தை, அழுகையை, கோபத்தைக் கண்ட வாசு என்ன நினைத்தானோ " அங்கிள் , என்னை மன்னிச்சிடுங்க" என்று சொல்லிக் கொண்டே படாரென்று நெடுஞ்சாங்கிடையாக அரசுவின் காலில் விழுந்தான்.

" அங்கிள், எப்பயுமே அப்பா, என் கிட்ட அதிகமாக எதிர்பார்த்தாரு, சின்னப் பிள்ளையில் இருந்தே என்னையை பெரிய பெரிய பள்ளிக்கூடத்திலே சேர்த்தாரு, மத்த பிள்ளைகள் எல்லாம் கார்ல் வந்து இறங்கும்போது, நான் மட்டும் அப்பாவின் சைக்கிளில் போய் இறங்குவேன்,அந்த படிப்பு எனக்கு தன்னம்பிக்கையை வளர்க்கிறது பதிலாக, ஒரு இன்பிரியாரிட்டி காம்பளக்ஸ் மனப்பான்மையைத்தான் ஏற்படுத்துச்சு. பத்தாவது வரைக்கும் கொஞ்சம் என்னால் முடிந்த அளவு படித்தேன். 11-ஆம் வகுப்பு வேற பெரிய பள்ளிக்கூடத்திலே போய் சேர்த்தாரு, அந்தப் பள்ளிக்கூடத்திலே பதினொன்றாம் வகுப்பு பாடமே நடத்தல. 11-ஆம் வகுப்பு தொட்க்கத்திலே இருந்து 12-ஆம் வகுப்பு பாடத்தைத்தான் நடத்துனாங்க. மனப்பாடம் பண்ண வச்சு , பண்ண வச்சு பேப்பரிலே எழுதவச்சாங்க, நானும் சாப்பிட்டு சாப்பிட்டு வாந்தி எடுக்கிற மாதிரி படிச்சு படிச்சு பேப்பர்ல் கக்குனேன். செரிக்கலை எனக்கு அது. மனசுலே அது என்னன்னு விளங்கலை.கணக்கையே மனப்பாடம் பண்ண வச்சாங்க. சில பதில்களை, பாடப்பகுதிகளை குருட்டு மனப்பாடம் பண்ண வச்சாங்க, நானும் ஏதோ என்னால முடிஞ்ச அளவு மார்க் எடுத்து +2 முடிச்சேன் " என்றவன் கேவிக் கேவி அழுதான் பின்பு தொடர்ந்தான்

" அப்பா சேர்த்து விட்ட் பொறியியல் கல்லூரியும் பெரிய கல்லூரி. ஆனால் அங்க போனதும் 11-ஆம் வகுப்பு பாடம்தான் அடிப்படை , அதை வைத்துத்தான் பாடத்தை புரிஞ்சுக்கிறனும் அப்படினாங்க. சில வாத்தியார்கள் கொஞ்சம் சைக்கோ டைப்பிலேயே இருந்தாங்க. அவங்களைப் புரிஞ்சு , நான் தயார் ஆகுறதுக்குள்ள முதல் செமஸ்டர் வந்திருச்சு. ஆறு பாடத்துக்கு நாலு பாடத்திலே பெயிலு. அப்பா கிட்ட வந்து நான் பெயிலுன்னு சொல்ற வர்றதுக்குள்ள , எங்க அப்பா என் மேல் அளவுகடந்த நம்பிக்கை வைத்து 90 மார்க்கா, 95 மார்க்கான்னு கேட்டாரு. 90 மார்க்குன்னு பொய் சொன்னேன். உள்ளுக்குள்ளே உறுத்தினாலும் , சொன்ன பொய்யை மறைக்கிறதுக்காக போலி மார்க் சர்ட்டிபிகேட் வாங்கினேன். எங்க கல்லூரிக்குப் பக்கத்திலேயே ஒரு கம்ப்யூட்டர் செண்டர் இருக்கு. 500 ரூபா கொடுத்தா வேற மார்க் சீட், அதிகமாக மார்க் போட்டுக் கொடுத்துருவாங்க. . முதல் செமஸ்டரில் பெயிலானாலே, கேம்பஸ் இண்டர்வியூவிக்கு தகுதி இல்லைன்னு சொல்லிட்டாங்க. அப்பவே அப்பாவின் வெளி நாட்டுக் கனவு நிறைவேறாதுன்னு தெரிஞ்சு போச்சு. பக்கத்து ரூம்ல் இருந்த பையன் முதல் செமஸ்டரில் 4 பாடத்தில பெயில் ஆனவுடன் தற்கொலை பண்ணிக்கிட்டான். எனக்கு அப்படி பண்ணிக்கிறலாமுன்னு தோனுச்சு. ஆனா அப்பா என்ன பாடுபட்டு என்னைப் படிக்கவைக்கிறார்ன்னு நினைச்சுப்பார்த்தேன். அந்த மனுசர் ஓய்வு பெற்றவுடன் நான் சம்பாரிச்சு அவருக்கு நல்ல சாப்பாடு போடணும்ன்னு நினைச்சேன். முதன் முதலில் தேர்வில் தோல்வி, வகுப்பில் பெயிலானவங்க 20 பேரில் நானும் ஒருத்தன் என்பது என்னை ரொம்பவுமே பாதிச்சது. அந்த வெறுப்பிலேயே படித்தும், படிக்காமையும் நாள் ஓடிப்போச்சு. நான் பண்ணியது தப்புத்தான், மகா தப்புத்தான், எங்க அப்பா என்னை எப்படி துயரப்பட்டு படிக்கவச்சாருன்னு எனக்குத் தெரியும், அவரை மனசளவில துன்பப்பட வைக்கக்கூடாதுன்னுதான் நான் இப்படி பண்ணினேன். ஏற்கனவே இருதயத்திலே அடைப்பு இருக்கு, பைபாஸ் பண்ணனும்ன்னு அப்பாவுக்கு சொல்லியிருக்காங்க. அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்க வேண்டாம்ன்னு நினைச்சேன். ஏதோ ஒரு வேலைக்குப் போய்கிட்டே மீதப்பாடத்தை முடிச்சு, பொறியியல் பட்டத்தை வாங்கி விடுவோமுன்னு இந்த இரண்டுவருடமா தேர்வு எழுதிக்கிட்டு இருக்கேன் , முடிக்க முடியலையே மாமா, முடிக்க முடியலையே " என்று சுவரில் போய் நங்கு நங்கு என்று முட்டினான்.

அவனைப் பார்க்கவும் பரிதாபமாக இருந்தது அரசுக்கு. மகனுக்கு தன் துன்பம் தெரியக்கூடாதென்று மாரி துன்பப்பட்டு பணம் அனுப்பியதுபோலவே, படிக்கும் இடத்தில் தனக்கு இருக்கும் துன்பம் தன் தந்தைக்கு தெரிய வேண்டாம் என்று வாசு நினைத்திருப்பான் போலும். என்ன இருந்தாலும், போலி மதிப்பெண் சான்றிதழ் காட்டியது எவ்வள்வு பெரிய தவறு என்பதனை வாசுவுக்கு அரசு விளக்கிக்கொண்டிருந்தான். " படிப்பு என்பது ஒன்றும் வாழ்க்கையை விட பெரிசு இல்லே, ஒத்துப்போகலைன்னா , தலைமுடி போச்சுன்னு போயிரனும்.ஒரு பாதையில போறோம், முட்டுச்சுவரு , இதற்கு மேல போக முடியாதுன்னு உணர்ந்து திரும்பிவந்து , வேற பாதையில போறது இல்லையா, அது மாதிரிதான் படிப்பும். ஒரு படிப்பு புடிக்கலேன்னா, போகுது கழுதைன்னு விட்டுட்டு வேற படிப்பை படிக்க வேண்டியதுதானே, முதல் வருடம் விட்டுட்டு, ஏதாவது வேறு ஒரு பட்டப்படிப்பை படித்திருந்தால் அவருக்கும் நிம்மதி, உனக்கும் நிம்மதி. நீ ந்டிச்சு, நீயும் உருப்படாம, அவரையும் இப்படி உருக்குலைச்சிட்டேயே , விடு, வேலைக்கு போய்கிட்டே அஞ்சல் வழியில் ஏதாவது ஒரு பாடத்தைப் படி " என்ற அரசு "என்ன பாடம் உனக்குப் பிடிக்கும் "என்றான். " ஆங்கில வழியிலேயே படித்தது, ஆங்கிலப்பாடம் பிடிக்கும்" என்றான் வாசு. மாரியை அருகில் அழைத்த அரசு வாசுவை அஞ்சல் வழியில் இளங்கலை ஆங்கிலப் பட்டப்படிப்பு படிக்கச்சொல்லுங்கள். அவன் சம்பாரிக்கும் காசிலேயே அவனைப் பணம் கட்டச்சொல்லுங்கள். படிக்கட்டும் , பணத்தைக் கட்டட்டும் . புரிதல் இல்லாமல் நன்றாக ஆக்குகிறேன் என்று சொல்லி ஒருவரை ஒருவர் சாகடித்து விடாதீர்கள் என்று சொல்லி அவர்களை சமாதானப்படுத்தி , சாப்பிட வைத்து விட்டு வந்த அரசுவிடம் அவரது மனைவி சாப்பிட வாருங்கள் என்று சொன்னபோது " இல்லைப்பா, எனக்கு சாப்பிட பிடிக்கல, மனசு சரியில்ல, கொஞ்ச நேரம் தூங்கப்போகிறேன் " என்று சொல்லிவிட்டு படுக்கைக்கு வந்த அரசு, மாரிக்கு அவன் மகன் செய்த நம்பிக்கைத்துரோகத்தை தாங்கமுடியாமல் படுக்கையில் உருண்டு உருண்டு புரண்டு கொண்டிருந்தான் .மாரி சமாதானம் ஆனாலும் அரசுவால் சமாதானம் ஆகமுடியவில்லை, படுக்கையில் உருண்டு கொண்டிருந்தான்

சிறுகதையை வெளியிட்ட எழுத்து. காம் - இணையதளத்திற்கு நன்றி . வா. நேரு

Wednesday 9 July 2014

சாப்பிடலாம் வாங்க ......

                                                         சாப்பிடலாம் வாங்க ......
                                                                (வா. நேரு )

அதிகாலைப் பொழுது. பொழுது புலரப்போவதை அறிவிக்கும்வண்ணம் பறவைகள் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன. வித விதமான பறவைகள், விதவிதமான ஒலிகள், வாழ்வில் சந்திக்கும் விதவிதமான மனிதர்கள் அவர்களின் பிரச்சனைகள் போலவே. ஒலி எழுப்பும் ஒரு பறவையைப் பார்த்த மணி , அதன் குரலைப் போலவே ஒலி எழுப்ப முயன்றான்.முடியவில்லை, போலச்செய்தல்-எப்போதும் முடிவதில்லை மணிக்கு. தனது குரலுக்கும், பறவையின் குரலுக்குமான வேறுபாடு மணிக்கு வெட்கத்தை அளித்தது. பக்கத்துவீட்டுக்காரர்கள் யாரும் தான் ஒலி எழுப்புவதைப் பார்த்தார்களா என சுற்றுமுற்றும் பார்த்தான். ஒருவரையும் காணவில்லை. அந்தப் பறவைகளின் ஒலியும் , அதிகாலைப் பொழுதின் இளங்காற்றும் ஓர் உற்சாகத்தை மணிக்கு அளித்தன. மெல்ல சீட்டி அடித்துக்கொண்டே, சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்து சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான் மணி.

மதுரை கற்பக நகர் வீட்டிலிருந்து ,நெல்பேட்டை வரை சைக்கிளில் செல்லவேண்டும். மெல்ல வீட்டிலிருந்து அழகர்கோயில் மெயின்ரோட்டை வந்தடைந்து , தெற்கு நோக்கிச் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். அந்த அதிகாலைப் பொழுதிலேயே அழகர்கோயிலுக்குச்செல்லும் பேருந்துகள் பெரியாரிலிந்து போய்க்கொண்டிருந்தன. அழகர் கோயில் செல்லும் ரோடு, ரோட்டில் செல்லும் வித விதமான மனிதர்கள், அவர்களின் அதிகாலைப் பரபரப்பு எனப்பார்த்துக்கொண்டே வந்து கொண்டிருந்தான் மணி. புதூர் பேருந்து நிலையம், புதூர் மார்க்கெட், தமிழ்நாடு ஹோட்ட்ல், தல்லாகுளம், கோரிப்பாளையம் எனக் கடந்து நெல்பேட்டை அலுவலகத்திற்குள் உள்ளே நுழைந்தான் மணி. உள்ளே நுழைந்து சைக்கிளை நிறுத்துவிட்டு நேரத்தைப் பார்த்தான் . மணி 6.30 . டூட்டிக்கு இன்னும் 10 நிமிடம் இருக்கிறது . விட்டல் ராவ் ஒரு கதையில் தனக்கு 16.40 டூட்டி எனச்சொல்லியிருந்தார். சொல்லிவிட்டு, இது யாருக்கு புரிகிறதோ , இல்லையோ தொலைபேசி அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு, அவர்களது உறவுகளுக்கு எளிதாகப் புரியும் எனச்சொல்லியிருந்தார். அப்படித்தான் இந்த 6.40 டூட்டி என்பது உங்களுக்கும்.காலையில் 6.40 க்கு வேலைக்கு வரவேண்டும் . 1.30 மணிக்கு வேலை முடிந்து விடும் . அப்புறம் மறு நாள் காலையில் 6.30க்கு வந்தால் போதும். எப்போதும் மணிக்கு இந்த அதிகாலை டூட்டி பிடிக்கும். மற்றவர்கள் அரை நாள் விடுமுறை எடுத்து செய்வதை மணி மதிய வேளைகளில் எளிதாகச்செய்து விடுவான்.

சைக்கிளை நிறுத்திவிட்டு மேலே பார்த்தான் .ஏட்டு. அவர் இய்ற்பெயர் வேறு என்றாலும் , அலுவலகத்தைப் பொறுத்தளவில் அவர் எல்லோருக்கும் ஏட்டுத்தான் . எல்லோரும் அவரை ஏட்டு என்று அழைக்க, அவரும் பார்க்கும் அனைவரையும் ஏட்டு என்றுதான் அழைப்பார். வணக்கம் ஏட்டு என்று சொல்லிக்கொண்டே உள்ளே போய்க்கொண்டிருந்தார். மணியை விட 30 வருடம் மூத்தவர். இவனும் பதிலுக்கு வணக்கம் ஏட்டு சார் என்று சொல்லிக்கொண்டே உள்ளே போனான். வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை, கையில் வைத்திருக்கும் கர்சீப் கூட வெள்ளைதான் . உடை வெள்ளையை விரும்பவதாலோ என்னமோ, உள்ளமும் வெள்ளை. அவ்வளவு வெகுளியாக இருப்பார். அவர்தான் சூபர்வைசர் இன்றைக்கு, படிகளில் தாவித்தாவி , இரண்டு இரண்டு படியாய்ப், போனான். இவனுக்கு முன்னால் மேலே ஏறிக்கொண்டிருந்த முனியாண்டி," ஏய் மணி, பார்த்துப்போப்பா, இள ரத்தம் தாவித்தாவி போகத்தூண்டுது, அடியேய், நாங்களும் இப்படி 30 வருடத்துக்கு முன்னாடி போனவங்கதான், இப்போ ஒவ்வொரு படியா நின்னு நின்னு போய்க்கொண்டிருக்கோம், பார்த்துப்போ " என்றார். சரி, சரி என்று தலையாட்டிக்கொண்டே நடக்காமல் தாவித்தாவி மேல் மாடியை அடைந்தான் மணி.

வருகைப் பதிவேட்டில் கையெழுத்தைப் போட்டுவிட்டு , தனது போர்டில் அமர்ந்தான் மணி. பக்கத்துப்போர்டில் அந்தோனி சார் இருந்தார். அவர்தான் மணி இந்த அலுவலத்திற்கு வந்தவுடன் வேலைகள் எல்லாம் சொல்லிக் கொடுத்தவர். ஏதோ எர்த் ஏ, எர்த் பி, டி பாரின் என்றெல்லாம் சொல்லப்படும் வார்த்தைகளை கண்டு மிரண்ட மணியை , அழைத்து ஒவ்வொன்றாய் சொல்லிக் கொடுத்தார். ஏங்க, மணி தொலைபேசிக் கம்பி எப்படிப்போகும் என்பார், சார் ரெண்டு வயர் போகும் சார் என்றான் மணி, இரண்டு வயரும் ஒன்றை ஒன்றைத் தொட்டுக்கொண்டால் டி பாரின் என்பார் , இப்படி தொலைபேசி சம்பந்தப்பட்ட பல விசயங்களை சொல்லிக் கொடுப்பவர் அவர். நேரம் 6.40 ஆனதும் அனைத்துப் போர்டுகளிலும் ஊழியர்கள் உட்கார்ந்திருந்தனர்.

ரொட்டின் டெஸ்ட் எல்லாம் 20, 25 நிமிடங்களில் முடிந்தது.நேரத்தைப் பார்த்தான் . 7.30 ஆகி இருந்தது . இனி லைன்மேன்கள் வந்த பின்புதான் வேலை. 8 மணிக்குத்தான் ஒவ்வொருவராக அழைப்பார்கள். இரண்டாவது போர்டில் பாலன் உட்கார்ந்திருந்தார். சூபர்வைசர் ஏட்டு முதல் ரிலீப் போற ஆள் போங்க , போய் சாப்பிட்டு வாங்க என்றார். பாலன் , அகமது, கனி, தீரன், என்று 4, 5 ப்ர் கேண்டினில் காலைச்சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு ஓய்வறைக்கு வந்தனர். ." பாலா, ஏதாவது பாட்டு பாடுங்க" என்றார் கனி. . "அப்படியா", என்று யாராவது சொல்லட்டும் என்று காத்திருந்தவர் போல பாலா ' கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் " என்று பாட ஆரம்பித்தார். பாலாவுக்கு அப்படி ஒரு குரல் . டி.எம்.எஸ். போல, எஸ்.பி. போல பாடக்கூடியவர்.இசையில் அவ்வளவு ஆர்வம், அவ்வளவு ஈடுபாடு. அவர் பாட ஆரம்பிக்க அவருக்கு அகமது மெல்ல தாளம் போட ஆரம்பித்தார். இரண்டு மூன்று பாடல்கள் பாடிய பாலன் அடுத்து 'இறைவனிடம் கையேந்துங்கள், அவர் இல்லையென்று சொல்லுவதில்லை " எனும் பாடலைப் பாடி முடித்தார்.பாட்டைக் கேட்டுத்தாளம் போட்டுக் கொண்டிருந்த மணி, "ஏன் இப்படி ஆல் இண்டியா ரேடியா மாதிரி ஒவ்வொரு மதப்பாட்டாப் பாடிக்கிட்டு இருக்கேங்க அண்ணே, நெஞ்சமுண்டு, நேர்மையுண்டுன்னு தத்துவப்பாட்டைப்பாடுங்க, இல்லையென்றால் டூயட் பாட்டைப் பாடுங்க, எல்லா மதத்துக்காரர்கள், நாத்திகர்கள் எல்லோரும் கேட்கலாம் "என்றான். உடனே கனி அதனை மறுத்து பக்திப்பாட்டையே பாடுங்க என்றார். . "என்ன இருந்தாலும், இன்னும் கல்யாணம் முடிக்காத பையன், டூயட் பாட்டு கேட்கிறார், பாடுகிறேன்" என்று சொல்லி விட்டு டூயட் பாட்டு இரண்டைப் பாலன் பாடினார். சிரிப்பொலி, மகிழ்ச்சி , பாடல் என நேரம் கழிந்திருந்தது. . கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த சுந்தரம் மட்டும் இந்த சிரிப்பொலி, பாட்டு , மகிழ்ச்சி எதிலும் கலந்து கொள்ளாமல் தனியாக் உட்கார்ந்து ரொம்ப நேரமாக சாப்பிட்டுக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் அமர்ந்திருந்தார்.

காலையில் எழுந்து வந்த உற்சாகமும் பின்பு இசை கேட்ட உற்சாகமும் காலை 8 மணி முதல் பிடித்துக்கொண்டது. வரிசையாக வந்த போன் பழுதான அழைப்புகள், அந்த அழைப்புக்களை லையனில் செல்லும் லைன்மேன்களுக்கு ஆர்டர் கொடுத்து சரி செய்வதென தொடர்ச்சியான வேலை. காலை சாப்பாடு சாப்பிட்டுவந்து இப்போதுதான் அமர்ந்ததுபோல் இருக்கிறது. நேரம் ஓடிவிட்டது. மாமுண்டி ஒரு லைன்மேனோடு தொலைபேசியில் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். "நீ சொல்வதற்காக எல்லாம் பால்ட்டை குளோஸ் பண்ண முடியாது, போன் வாடிக்கையாளரைப் பேசச்சொல்" என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். நன்றாக வேலை பார்க்கும் 10 பேரையும் சமாளித்து வேலை வாங்கி, நாமும் வேலை செய்து விடலாம், ஆனால் ஒரு ஆள் எக்குத்தப்பாக மாட்டினால் தொலைந்தோம். அவரோடு சத்தம் போட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். வந்த புதிதில் மணிக்கு ஒன்றும் புரியவில்லை. வந்த மூன்றாம் நாள் , மேலதிகாரி அழைத்து விட, அவரது அறைக்குள் சென்று வணக்கம் தெரிவித்தான். "வாங்க சார், இந்தப் பழுதை நீங்கள்தான் குளோஸ் செய்தீர்களா" என்றார் . "ஆமாம்" என்றான். "வாடிக்கையாளர் போன் பழுது சரியாகாமல், சரியானதாக குளோஸ் செய்து விட்டார்கள் என்று புகார் கொடுத்திருக்கிறார்" என்றார். இவன் அப்பாவியாக " சார், லைன்மேன் சரியாகிவிட்டது என்று போனில் சொன்னார், நான் கம்யூட்டரில் குளோஸ் செய்தேன் " என்றான். சிரித்த அவர், "இது முதன் முறை என்பதால் உங்களுக்கு மெமோ இல்லை, லைன்மேன் சொல்வதால் பழுதை நீங்கள் குளோஸ் பண்ணக்கூடாது, டெஸ்ட் செய்து பார்த்து சரியா என்று பார்க்கவேண்டும். வாடிக்கையாளரை அழைத்து போன் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும் . அவர் திருப்தி என்று சொன்னால்தான் குளோஸ் செய்ய வேண்டும்.சீனியர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள் " என்றார். இது என்னடா வம்பா போகிவிட்டது என்று வெளியில் வந்தான், இந்த 6 மாதத்தில் பழகிவிட்டது ..

சீனியர்கள் பலர் வெகு திறமைசாலிகளாக இருந்தார்கள். டேவிட் சார் டையல் டெஸ்ட் எடுத்தால், 30 கி.மீ தூரம் செல்லும் எல்.டி. வயரில் எந்த இடத்தில் பால்ட் என்று கண்டுபிடித்து விடுவார். அவரிடம் டிமிக்கி கொடுக்கும் லைன்மேன் வேலையெல்லாம் செல்லுபடியாது .ஆனால் பால்ட் பார்ப்பவர்கள் ஒவ்வொரு பாயிண்டாக டெஸ்ட் கொடுக்க, கொடுக்க இந்தப் பக்கம் பால்ட் இல்லை, அந்தப் பக்கம் இன்னும் போங்கள், போங்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பார். ஜோசப் தன்னுடைய ஆங்கிலம் கலந்த தமிழ் பேச்சில் அவ்வளவு தோழமையாய், ஆனால் அதே நேரத்தில் வெகு நேர்த்தியாய் வேலை செய்து கொண்டிருப்பார். .வியப்பாக இருக்கும். பெரிய அளவு படிப்பெல்லாம் இல்லை. பெரும்பாலும் 11-ஆம் வகுப்பு படித்தவர்கள், பழைய எஸ்.எஸ்.எல்.சி. ஆனால் அவர்களின் வேலைத்திறனும், கமிட்மெண்டும், ஆங்கிலத்தில் எழுதுவதும் இன்றைய எம்.ஏ.க்களிடம் கூட கிடைப்பது அரிது.

மணி நேரத்தைப் பார்த்தான். மணி ஒன்று . இன்னும் அரைமணி நேரத்தில் வேலை முடிந்துவிடும். கொஞ்ச நாள் அம்மா கூட இருந்து சாப்பாடு ஆக்கிப் போட்டார்கள். இப்போது கிராமத்திற்குப் போய்விட்டார்கள். இவனாக சில நாள் சமைத்துப் பார்த்தான் . சரியாக வரவில்லை. சாப்பாடு ஆக்குவது கூட பெரிதாகத் தெரியவில்லை.சமைத்த பிறகு பாத்திரங்களைக் கழுவுவது தான் பெரிய பிரச்சனையாக இருந்தது. ஏற்கனவே கொஞ்சம் சமைத்துப் பழகியிருந்தான். மணியின் தாய்மாமா மிக நன்றாக சமைப்பார். ஒரு தடவை நக்கலப்பட்டியில் வாத்தியார் வேலைபார்த்த மாமாவைப் பார்க்கப் போயிருந்தான் . சாம்பாரும் ரசமும் மண மணக்க சமைத்துப் போட்டார். சாப்பிடும் போது சிரித்துக்கொண்டே சொன்னார், வெளியூரில் போய் வேலை பார்க்க வேண்டியிருக்கும், சில நேரம் திருமணம் முடித்தபிறகுகூட ஏதோ சண்டையில் திடீரென்று பெண்டாட்டிகாரி 2, 3 நாள் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப் போய்விட்டால், சாப்பாடு நமக்கு திண்டாட்டமாகிவிடும். ஆம்பளையும் நல்லா சமைக்க கத்துக்கறனும் என்றார். மணியும் கொஞ்சம் பழ்கி வைத்திருந்தான். கஞ்சி வைப்பது, வெறும் சோற்றை வடித்து தயிர் வாங்கி வந்து ஊத்துவது, ரசம் வைப்பது தாண்டி சமையல் போக மறுக்கிறது. அதுவும் மதுரைக்கு வந்த பின்பு அலுவலகத்தை சுற்றிச்சுற்றி இருக்கும் ஹோட்டல் எல்லாம் அப்பப்போ சுண்டி இழுத்தது. அதனால் பெரும்பாலும் மதியச்சாப்பாடு என்பது உணவு விடுதிகளில் சாப்பிடுவதாகவே போய்க்கொண்டிருந்தது.

இன்றைக்கு எந்த ஹோட்டலில் சாப்பிடுவது என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தான். பக்கத்து தெருவில் இருக்கும் ஹோட்டலில்தான் இன்று சாப்பாடு. மதுரையில் மிகப்பிரபலமான அசைவ ஹோட்டல். ஏற்கனவே அசைவ உணவு பிடிக்கும் அவனுக்கு, அந்த உணவு விடுதியின் சாப்பாடும் ,ருசியும் மிகவும் பிடித்துப்போய்விட்டது. ஆனால் பெரும்பாலும் சாப்பிடப் போகும் போது தனியாகப் போவதில்லை, கூட எவரையாவது அழைத்துப்போய் அவர்களுக்கும் பிரியாணி வாங்கித்தந்து தானும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான் மணி.

காலையில் அருமையாகப் பாடிய பாலன் சாரை அழைத்துப்போக வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். மணி 1.30 ஆனதும் , 1.30 டூட்டிக்காரர்கள் வேலைக்கு வந்து கையெழுத்துப் போட ஆரம்பித்தவுடன், ஆப் டூட்டியில் கையெழுத்துப்போட்டு விட்டு, பாலன் சார் கையெழுத்துப்போடும் வரை காத்திருந்தான். வெளியில் பாலன் சார் வந்தவுடன் , "சார் வாங்க இன்றைக்கு ஹோட்டலில் சாப்பிடலாம்" என்றான்.ஏற்கனவே இரண்டு நாளுக்கு முன்னால் சார், நாம் இரண்டு பேரும் போய் ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று சொல்லியிருந்தான். பார்ப்போம், பார்ப்போம் என்று அன்றைக்கு சொல்லியிருந்தார். எனவே அழுத்தமாக சார் இன்றைக்கு நாம் ஹோட்டலுக்கு போறோம் என்றான். "இல்லை மணி, நீங்கள் போய் சாப்பிடுங்கள், நான் வீட்டிற்குப் போய் சாப்பிட்டுக் கொள்கின்றேன் " என்ற பாலனிடம் , பணம் யார் கொடுப்பது என்று யோசிக்கின்றாரோ என்று நினைத்த மணி " சார், நான் பணம் நிறைய வைத்திருக்கின்றேன், நான் பணம் கொடுத்து விடுகின்றேன் , வாருங்கள் அசைவ உணவு அந்த ஹோட்டலில் மிக நன்றாக இருக்கும் ,வாருங்கள் " என்றான்.

"இங்கே வாங்க மணி" என்று தனியாக அழைத்துச்சென்ற பாலன் , " மணி, நான் விரும்பி சாப்பிட வேண்டும் என்று அழைக்கின்றீர்கள், அந்த ஹோட்டலில் சுவையாக இருக்கும் என்று நானும் கேள்விப்பட்டு இருக்கின்றேன். இன்றைக்கு நீங்கள் பண்ம் கொடுப்பீர்கள், இன்னும் 4, 5 நாள் கழித்து அங்கு போய் சாப்பிட வேண்டும் என்று நான் நினைத்தால், யார் பணம் கொடுப்பார்கள் ? " என்றார்.
என்ன சொல்ல வருகிறார் என்று தன்னை குழப்பமாகப் பார்க்கும் மணியிடம் தொடர்ந்தார் பாலன் " என் குடும்பத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. நான் மட்டும்தான் வேலை பார்க்கின்றேன். எனது மனைவி, என் தந்தை, என் அம்மா வீட்டில் இருக்கின்றார்கள், மூன்று பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஒன்றாம் தேதி சம்பளம் வாங்கி, உப்பு எவ்வளவுக்கு, புளி எவ்வளவுக்கு, பிள்ளைகள் படிப்பு எவ்வளவுக்கு, மருத்துவச்செலவுக்கு எவ்வளவு என்று பட்டியல் போட்டுத்தான் செலவு செய்கிறேன் " என்றார். மேலும் ' உங்களைப் போல நான் தனிக்கட்டை இல்லை, குடும்பம் இருக்கிறது " என்றார். " சார், எனக்கும் அம்மா, இருக்கின்றார்கள், கூடப்பிறந்தவர்களெல்லாம் இருக்கின்றார்கள். நானும் சம்பளம் வாங்கி பணத்தை அம்மாவிடம் பாதி கொடுக்கின்றேன் " என்றான் மணி.

                                                    கூட வாங்க சாப்பிட என்றால் மனுசன் என்னென்னமோ பேசுகிறாரே என்று நினைத்துக்கொண்டு இருந்த மணியிடம் " மதுரையில் ஒரு இலட்சம் ரூபாயை ஒரு நாளில் செலவழித்து விடலாம் , அதற்கான இடங்கள் இருக்கின்றன. சூது ஆடும் இடமும், குடிக்கும் இடமும் இன்னும் பல பல இடங்களும் இருக்கின்றன். மதுரை போன்ற இடங்களில் கெட்டுப்போவதற்கான சூழல்கள்தான் நிறைய நம்மைச்சுற்றி இருக்கின்றன. இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டியிருக்கிறது. என் குடும்ப சூழலில் பிரியாணியும் கூட எனக்கு ஆடம்பரம்தான். ஒரு நாள் ஓசியில் சாப்பிட்டால் , நாலு நாள் கழித்து எனக்கு சாப்பிட வேண்டும் போல் தோன்றும். இப்படி மாதத்திற்கு நாலு, ஐந்து நாள் போனால் நானும் கடன் வாங்க வேண்டும். பின் சுந்தரம் சார் போல ஒளிந்து ஒளிந்து வாழ வேண்டும் " என்றார்" ஏன் சார், ஒரு நாள் வந்து சாப்பிடுவதாலா நீங்கள் கடன் காரராகப் போய்விடுகிறீர்கள் ? " என்றான்
.
                      " இல்லை தம்பி, சில வரைமுறைகள் தேவைப்படுகின்றன, இப்போதுதான் உங்களுக்கு இருபது வயது ஆகிறது. உலகம் உங்களுக்குத் தெரியாது. சுந்தரம் சார் இருபது வருடங்களுக்கு முன்னால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் தெரியுமா ? "எங்களையெல்லாம் விட மகிழ்ச்சியாக இருந்தார், மிக நல்ல மனிதர், யாருக்கும் ஒன்று என்றால் ஓடிப் போய் செல்வு செய்வார், பணத்தைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார். வீடு கட்டுகிறேன் என்று கடன் வாங்க ஆரம்பித்தார். பின்பு அதனைக் கட்ட முடியாமல், வட்டி கட்டுவதற்கு வட்டிக்கு வாங்கி , வட்டி கட்டி கட்டியே , இப்படி ஆகிப்போனார். இப்போது யாரிடமும் பேசுவதில்லை, தனித் தீவாக வந்து கொண்டிருக்கின்றார். சில நேரம் கடன் வாங்கியவன் வந்து விட்டால், ஒரு மணி நேரம் , 2 மணி நேரம் ஆபிசை விட்டு வெளியில் போகாமல் உள்ளேயே பதுங்கிக் கொண்டிருப்பார் . பாவம். சில வரைமுறைகள் இல்லாததால் இவ்வளவு துன்பப்படுகின்றார். அப்படி நான் ஆக விரும்பவில்லை " என்றார்.

" மனிதன் பணத்தைக் கண்டுபிடித்தான் . ஆனால் அந்தப் பணத்தால் அவனுக்கு ஏற்படும் அவமானங்கள் உனக்குத் தெரியாது தம்பி . பணம் எவ்வளவு பெரிய ஆளையும் கண நேரத்தில் அசிங்கப்படுத்திவிடும், அவமானப்படுத்தி விடும். எனக்குத்தெரிந்த ஒரு மனிதர் பொது நோக்காளர். மிக நல்ல மனிதர் .அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் மூன்று நாட்கள் அவரைத் தனி அறையில் வைத்து வைத்து அடித்தார்கள் தெரியுமா? ஒரு பத்திரத்தை அவரது உறவினர்கள் எடுத்துவந்து , சொத்தை எழுதிக் கொடுத்த பின்புதான் அவரை வெளியில் விட்டார்கள். காவல்துறையையும் மீறி சில விசயங்கள் இருக்கின்றன. நீங்கள் எல்லாம் புதியவர்கள். கை நிறையச்சம்பாதிக்கிறோம் என்று நினைத்து கண்டபடி செலவழிக்காதீர்கள். சின்னச்சின்ன செலவுகள்தான் பிறகு பெரிதாகி நம்மை கடனாளி ஆக்கி விடும். கொஞ்சம் மிச்சம் பிடித்து ப்ழகுங்கள். வாழ்க்கையில் கடனே இல்லாமல் வாழ்ந்து விட்டால் நீங்கள்தான் இராஜா, இல்லையென்றால் சிக்கல்தான் " என்றவரிடம் மணி " சார் ,நீங்கள் என்னோடு சாப்பிட வ்ரவேண்டாம் , வீட்டிற்குச்சென்று சாப்பிடுங்கள், நானும் கூட ஏதாவது சின்னக் கடையில் இன்று சாப்பிட்டு விட்டு , நாளை முதல் சமைக்க முயற்சி செய்யப்போகிறேன் " என்று சொல்லிவிட்டு நடந்து கொண்டிருந்தான் மணி

நன்றி : எழுத்து.காம்