Thursday 21 March 2024

ஆடம்பரத் திருமணம்…ஓர் ஈரோட்டுப் பார்வை ! – முனைவர் வா.நேரு

 

                                                                   


ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்காக ஓர் ஒப்பந்தம் தேவைப்படுகிறது. சுயமரியாதைத் திருமணங்களில் மணமக்கள் ஏற்கும் உறுதிமொழியைப் போல ‘வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் சமபங்கு வகிக்கும் உற்ற நண்பர்களாய், என்னிடமிருந்து நீங்கள் என்னென்ன உரிமைகளை எதிர்பார்க்கிறீர்களோ, அதே உரிமைகளை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்க உரிமை உண்டு என்னும் ஒப்பந்தத்தின் பேரில் இந்த மலர் மாலையினைத் தங்களுக்கு அணிவிக்கிறேன்’ என்று சொல்வதைப் போல வாழ்வில் இணையும் ஓர் ஆணும் பெண்ணும் உற்ற நண்பர்களாய் வாழ்வதற்கு இந்தத் திருமண ஒப்பந்தம் தேவைப்படுகிறது, அந்த ஒப்பந்தத்தைச் செய்து கொள்கிறார்கள் அல்லது செய்து வைக்கப்படுகிறார்கள் என்ற வகையில் நம்மைச்சுற்றி திருமணங்கள் நடைபெறுகின்றன.

எந்த மாநிலத்திலும் இல்லாத தனித்தன்மையான சுயமரியாதைத் திருமண முறையைத் தமிழ்நாட்டில், அன்றைய சென்னை மாகாணத்தில் 1928இல் அறிமுகப்படுத்திய தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதைத் திருமண மேடைகளில் எல்லாம் திருமணத்தில் சிக்கனத்தின் தேவையை மிக அதிக அளவில் வற்புறுத்தினார். அவரைத் தொடர்ந்து திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பு ஏற்ற அன்னை மணியம்மையாரும் அவருக்குப் பின்னால் திராவிடர் கழகத்தை வழி நடத்தி வரும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் தாங்கள் நடத்தி வைக்கும் சுயமரியாதைத் திருமண நிகழ்வுகளில் எல்லாம் சிக்கனமாகத் திருமணத்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்கள்.அதன்படியே பல திராவிடர் கழகத்தோழர்கள் சுயமரியாதைத் திருமண நிலையத்தில், திராவிடர் கழகப் பொதுக்கூட்ட மேடைகளிலும், மாநாட்டு மேடைகளிலும் தங்கள் திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள், நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இதற்கு மாறான புராண அடிப்படையிலான திருமணங்கள் சில மிகப்பெரும் செலவோடு நடத்தப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.அண்மையில் ரிலையன்ஸ் நிறுவனர் முகேசு அம்பானி-நீடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் வாரிசான ராதிகா மெர்செண்டுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் 1, 2024 முதல் மார்ச் 3, 2024 வரை நடைபெற்றது.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அம்பானியின் சொந்த ஊரில் கட்டமைக்கப்பட்ட ரிலையன்ஸ் பசுமை வளாகத்தில் நடைபெற்ற இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆன செலவு ரூ.1000 கோடியைத் தாண்டியிருக்கும் எனப் பத்திரிகைகள் எழுதியுள்ளன. முதல் நாளில் உலகப் புகழ்பெற்ற பாடகி ரிஹன்னாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் மணமகனான ஆனந்த் அம்பானி கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு சுமார் ரூ. 14 கோடி எனவும் அதனைப் பார்த்து முகநூல் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரெசில்லாசான் ஆகியோர் வியப்படைந்து விசாரித்ததாகவும் ‘தினமணி ‘நாளிதழ் எழுதுகிறது. உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள் பலர் கலந்து கொண்டதாகவும், நடிகைகள், நடிகர்கள், தொழில் அதிபர்கள் மட்டுமல்ல; ஜக்கி வாசுதேவ் போன்ற கார்பரேட் சாமியார்களும் கலந்து கொண்டதாக பத்திரிகைச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

பொது மக்களுக்கு, பணக்காரர் வீட்டுத் திருமணம். அவரிடம் பணம் இருக்கிறது, அவர் 1000 கோடி என்ன? 10000 கோடி கூடச் செலவழித்து விட்டுப்போகட்டும், அதனால் நமக்கு என்ன? என்று தோன்றலாம். இதைப் பற்றி நாம் எழுதவேண்டிய,, பேசவேண்டிய தேவை என்ன என்று கூடத் தோன்றலாம். திருமணத்தில் சிக்கனம் வேண்டும் என்பதற்கு மாற்றான திருமணம் என்பது மட்டுமல்ல, நம் ஊரில் மிகுந்த அளவு கடன் வாங்கி வைத்திருக்கும் ஓர் ஆள் மிக ஆடம்பரமாகத் தன் மகனுக்குத் திருமணம் செய்தால் எப்படிச் சுட்டிக் காட்டுவோமோ அப்படிச் சுட்டிக் காட்டப்பட வேண்டிய திருமணமும் கூட இந்தத் திருமணமும் வரவேற்பும்..
ஏனெனில், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மட்டுமல்ல முகேசு அம்பானி, இந்தியாவின் வங்கிகளில், பல நாட்டு வங்கிகளில் மிகப்பெரும் கடன்களை வாங்கி வைத்திருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய கடன்காரரும் முகேசு அம்பானி ஆவார்.” கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய சிண்டிகேட் கடன் வாங்கியவர் என்ற பெயரை உருவாக்கி இருக்கிறார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. வெவ்வேறு வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து இரண்டு தவணைகளில் அய்ந்து பில்லியன் டாலர்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளிநாட்டு நாணய கடன்கள் வடிவில் பெற்றுள்ளது. சிண்டிகேட் கடன் என்பது வங்கிகள் நிதி நிறுவனங்களின் குழுமத்தில் இருந்து வாங்கப்படும் கடன் ஆகும்” ஏப்ரல் 6, 2023 பத்திரிகை செய்தி இது.

நமது நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் முகேசு அம்பானி பெற்றிருக்கும் கடன்கள் எல்லாம் ஏழை எளிய இந்திய மக்கள் தங்கள் சேமிப்புகளாகப் போட்டு வைத்திருந்த பணம். ஊதாரித்தனமாக பல ஆயிரம் கோடிகளைத் திருமண வரவேற்பு என்ற பெயரில் செலவழிக்கும் இந்த முகேசு அம்பானி போன்றவர்களின் பல இலட்சம் கோடிக் கடன்களை ஒன்றிய இந்திய அரசாங்கம் தள்ளுபடி செய்திருக்கிறது. அதனால் பல பொதுத்துறை வங்கி நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன.

இந்த ஆடம்பரத் திருமண நிகழ்விற்காக குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக சில நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் திருமண வரவேற்பு நிகழ்வுக்காக நிகழ்த்தப்பட்ட சட்ட விதிமீறல்கள், கோயில்களின் ஆகம விதிமீறல்கள் பற்றியெல்லாம் செய்திகள் நிறைய வருகின்றன. ஓர் ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் இணைவதற்காக நடத்தப்படும் இந்த விழாவிற்காக இத்தனை விதிமீறல்களும் இத்தனை ஆடம்பரங்களும் தேவைதானா? என்னும் கேள்வியை ஊடகங்கள்,பத்திரிகைகள் எழுப்பவில்லை. மாறாக பக்கம் பக்கமாக அதனை விவரித்து எழுதிக்கொண்டும் புகழ்ந்து பேசிக்கொண்டும் இருக்கும் கொடுமையைப் பார்க்கின்றோம்.

“சுமார் 2,500 வகையான உணவுகள் பரிமாறப்பட்டனவாம்! இதற்காக மட்டும் சுமார் 130 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார் அம்பானி. இந்தியாவில் மட்டும் இன்றி சர்வதேச அளவில் அம்பானி இல்லத் திருமண விழா வைரல் ஆனது. சமூக வலைத்தளங்களில் திருமண விழா குறித்த பதிவுகளும் புகைப்படங்களும் டிரெண்டிங்கில் இருந்தன.

ஜாம்நகரில் உற்சாகமாக நடைபெற்ற இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மட்டும் முகேஷ் அம்பானி ரூபாய் 1,250 கோடி செல்வு செய்துள்ளாராம். திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியே இவ்வளவு பிரமாண்டமாக நடைபெற்றது என்றால், திருமணத்தை எப்படி நடத்தப் போகிறாரோ?.. என நெட்டிசன்கள் இப்போதே வியந்து பார்த்து வருகின்றனராம்.” இது ஒரு பத்திரிகையில் வந்த செய்தி.

இந்தியா போன்ற சமதர்ம சமத்துவமற்ற சமுதாயத்தில் நிகழும் இந்த மாதிரியான திருமண நிகழ்வுகள் மக்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தவேண்டும் n.

நன்றி: உண்மை  மார்ச்-16-31,2024.


Friday 15 March 2024

அன்னையே! உங்கள் வழியில்....

 


அன்னையே! உங்கள் வழியில்



இடியாய் முழங்குகிறார்
எரிமலையாய்ப் பொங்குகிறார்…
தமிழர்களின் விடிவுக்கு
தேவை இவர் என உணர்ந்து
தன் வாழ்வைப் பலிகொடுத்து
தந்தை பெரியாரின் வாழ்க்கையை
நீட்டித்தந்த எங்கள் அன்னையே!

நேற்று வரை உடன் இருந்தோர்
அவதூறுகளை அள்ளிவீசியபோதும்
அமைதிக் கடலாய்
இடதுகையால் தள்ளிவிட்டுக்
கடந்து செல்வதுபோல்
அவர்… இவர்… என எல்லோரையும்
கடந்து சென்ற எங்கள் தாயே!

அய்யாவின் சொத்துகளை
இவர் பாதுகாப்பாரா? என
அய்யமுற்ற அனைவருமே
மூக்கில் விரலை வைத்து
வியக்கும் வண்ணம்
அய்யாவின் அறக்கட்டளைச்
சொத்துக்களை பன்மடங்காக்கி
தனக்குக் கிடைத்த பரம்பரைச்
சொத்துகளையும்
அறக்கட்டளையாக்கி
பொதுமக்களுக்கு பயன்பெறும்
வண்ணம் தந்து சென்ற
எங்கள் தாயே!
அன்னை மணியம்மையாரே!

அறிவிலிகள் சிலர்..
யாரால் பலன்பெற்றோம்
என அறியாத…
படித்த
தற்குறிகள் சிலர்…
அவதூறாய் தங்களை
ஊடகங்களில் பதியும்போது
உள்ளமெலாம் கொதிக்குதம்மா!
உலையில் போட்ட அரிசிபோல
வெந்து நொந்து மனம் வேகுதம்மா..

ஆனாலும்
அவதூறுகளைப் புறந்தள்ளி
அய்யாவின் கொள்கைகளைப்
பரப்பும் வழியைத்
தந்து சென்ற எங்கள் அன்னையே!
தாங்கள் காட்டிய வழியில்
அய்யாவின் கொள்கை பரப்பும்
அய்யா ஆசிரியர் அடிச்சுவட்டில்
நாங்கள் தொடர்கிறோம்..
தந்தை பெரியாரின் பணிமுடிப்போம்.
எதையும் எதிர்பாரா.
அன்னையே ! உங்கள் வழியில்..

முனைவர் வா.நேரு தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

நன்றி : விடுதலை 11.03.2024

Wednesday 6 March 2024

நிகழ்வும் நினைப்பும் 2024(5) -நட்புத் தமிழ் வட்டம் மதுரை

 

நட்புத் தமிழ் வட்டம் என்னும் ஓர் அருமையான அமைப்பு மதுரையில்.ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் அய்யா புலவர் நா. ஆறுமுகம் அவர்கள் அதன் தலைவராக இருக்கிறார்.தொடர்ச்சியான இலக்கிய நிகழ்வுகள்,கல்லூரிகளுக்குச்சென்று பேச்சுப்போட்டி,கட்டுரைப் போட்டிகள் நடத்துதல், பரிசு அளித்தல் எனத் தொடர்ந்து இயங்கும் இயக்கமாக அந்த நட்புத் தமிழ் வட்டம்,மதுரை இருக்கிறது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை,03.03.2024 உழைக்கும் மகளிர் தினவிழா ,அந்த அமைப்பின் சார்பாக மதுரை கே,புதூரில் உள்ள அல் அமீன் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.நட்புத் தமிழ் வட்டத்தின் செயலாளர் நாவினி நாசர் அனைவரையும் வரவேற்று நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.அத்தோடு நிகழ்வு முழுமைக்கும் அழகான,சிறப்பான இணைப்புரை வழங்கினார்.அய்யா நா.ஆறுமுகம் அவர்கள் தலைமையேற்று,இன்றைய நிலையில் பெண்கள் எப்படி இருக்கிறார்கள்,எப்படி இருக்கவேண்டும்,மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம், அது உலக மகளிர் தினம் என மாற்றப்பட்டது ஏன் என்பது பற்றிக் குறிப்பிட்டு உரையாற்றினார்.காலை 11 மணிக்குத் தொடங்கித் தொடர்ச்சியாக மதியம் 2.30வரை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



பள்ளியில் படிக்கும் மாணவிகள் ,மகளிர் தினத்தைப் பற்றிய தங்கள் எண்ணங்களை அவையில் அழகுற எடுத்துவைத்தனர்.முதலில் செயசிறி கணீர்க்குரலில் வெடிப்பேச்சாய் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.தொடர்ந்து மொழினா,தர்சனி,ச.சபரிசா,மகாலெட்சுமி,இராசராசேசுவரி,தாரணி,வினிதாசிறீ, நிரஞ்சனா என மாணவிகள் ஒளவை,திருக்குறள்,சாதனைப்பெண்கள்,பெண்கள் சொந்தக் காலில் நிற்கவேண்டும்,பெண்கல்வி ஏன் தேவை போன்ற பல்வேறு கருத்துகளைக் குறிப்பிட்டு உரையாற்றினர்.இளையவர்களின் கருத்துகள் காதுக்கு இனிமையாக வந்து சேர்ந்தது. .

அடுத்துப் பல்துறை சார்ந்த மகளிர்கள் பேசினர். மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனையில் ஆப்ரேசன் தியேட்டரில் மேலாளராய் இருக்கும் திருமதி ஆ.அமல கலைச்செல்வி வெகு இயல்பாகப்  பட்டறிவினால் பெற்ற படிப்பினைகளை கூட்டத்திற்குக் கடத்தினார். ஆளுமையான குரல் வளத்தோடு கு..சண்முகப்பிரியா ,தே.ஆனந்தவள்ளி, சி.பொய்யாமொழி, பா.சுமதி,பேரா.கிருஷ்ணவேணி,சி.சரிமிளா,தி.லதா ,ந.இராணி யாஸ்மின் ஆகிய ஆளுமைகள் உரையாற்றினர்.முதல் மேடை என்றார்கள் சிலர், ஆனால் உள்ளக்குமுறல்களை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டார்கள் சிலர்.’சும்மாதானே துவைக்கிறோம்,சும்மாதானே சமைக்கிறோம் …” எனச்சும்மா,சும்மா என்று சர்மிளா சும்மா கூட்டத்தைக் கலக்கிவிட்டார்.சகோதரி தி.லதா உணர்ச்சிபொங்கத் ,தான் கிராமத்தில் வளர்ந்ததையும்,சாமியாடி வீட்டுப் பிள்ளை என்பதையும் தான் ஒரு கருப்புச்சட்டைக்காரரை(சுப.முருகானந்தம்) திருமணம் முடித்து  நன்றாக வாழ்வதையும்,தனது கணவர் தனக்கு எப்படி எல்லாம் உதவியாக இருக்கிறார் என்பதையும் மிகுந்த உருக்கமாகப் பதிவு செய்தார்.இதுதான் என்னுடைய முதல் பொதுமேடைப்பேச்சு என்றார் அவர். ஆசிரியர் ந.இராணி யாஸ்மின் அவர்கள் ,பெண்கள் தாங்கள் இரட்டை வேலை ..வீட்டிலும் பள்ளியிலும் வேலை பார்க்கும் நிலைமையை மிக எதார்த்தமாக எடுத்துரைத்தார்.பேரா.கிருஷ்ணவேணி புதிர்க் கேள்விகளும் பதிலுமாய் அரங்கத்தைக் கலகலப்பு ஊட்டினார்.கேட்க,கேட்க நிறைவான,உளபூர்வமான உரைகளாக இருந்தது மகிழ்ச்சி அளித்தது.

  , பெண் ஆளுமைகள் விருது பேரா.அனார்கலி அவர்களுக்கும் ,பெண்ணிய எழுத்தாளர்,திராவிடர் கழகத்தின் மகளிரணியைச்சார்ந்த தோழர் குடியாத்தம் ந.தேன்மொழி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.வாழ்த்துரையை நானும்,அல் அமீன் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஷேக் நபி அவர்களும் வழங்கினோம். தலைமை ஆசிரியரின் உரை எதார்த்தமாகவும் மிகச் சிறப்பாகவும் அமைந்தது

நிறைவாகப் பேரா.அனார்கலி அவர்களும் தோழர் ந.தேன்மொழி அவர்களும் ஏற்புரை நிகழ்த்தினர்.விழாவின் நிறைவாக வழக்கறிஞர் ஆசைத்தம்பி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.வரவேற்பாளர்களாக இளம்தோழர்கள் மகிழ்நன்,அமிழ்தன்,இனியன்,பொன்அரீஷ் ஆகியோர் ஓடி ஓடி வரவேற்றனர்.வேலைகள் செய்தனர்.



உரையாளர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.பெண் ஏன் அடிமையானாள் ?’ என்னும் புத்தகம் விரும்பியவர்களுக்கு வழங்கப்பட்டது.. நட்புத்தமிழ் வட்டத்தின் உறுப்பினர்கள் மட்டுமே மிகப்பெரிய அளவிற்குச் செலவுகள் செய்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் அவர்களின் முயற்சியால் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு இப்போது கிடைக்கிறது.முக நூலில் நேரலையாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நிகழ்வில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் அண்ணன் பாவலர் சுப.முருகானந்தம்,அவரது இணையர் சகோதரி லதா,திராவிடர் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் இரா.லீ.சுரேசு,அவரின் மகள்கள்,தி.மு,.க.பொறுப்பாளர் தோழர் அன்புமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்வுக்கு தலைமை வகித்த அய்யா புலவர் நா.ஆறுமுகம் அவர்கள் நிகழ்வில் அவ்வப்போது அருமையான உரைகளை நிகழ்த்தினார்.அவரின் இணையரோடு வந்திருந்தார்.பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தது  நிகழ்வுக்குச் சிறப்புச் சேர்த்தது.

நிகழ்வு சிறக்க மகாராணி செல்வராசு,அட்சயா சிவகாமேஸ்வரன்,செ.காவ்யா,நிர்மலாதேவி ஆறுமுகம்,வனிதா நாகராசன்,சாந்தி சிறீராம்,மகாலெட்சுமி வரதராஜ்,இராசபீர்த்தி ஆகியோர் உதவியிருக்கின்றனர்.முடிவில் வந்திருந்த அனைவருக்கும் சுவையான உணவும் அளிக்கப்பட்டது.5 வயது சிறுவர்,சிறுமி முதல் 70 வயதைக் கடந்தவர்கள்வரை,எல்லா வயதினரும் துடிப்பாய் இணைந்து வேலை செய்து  நடத்திய கூட்டமாய் ,மிகுந்த நம்பிக்கையைத் தந்த கூட்டமாக இந்தக் கூட்டம் அமைந்தது.மிகுந்த மகிழ்ச்சியை,ஊக்கத்தைத் தந்த நிகழ்வு இது.நட்புத் தமிழ் வட்டம் மென்மேலும் வளரட்டும்.அதன் இலக்கிய சேவைத் தொடரட்டும்.

 

 

Saturday 2 March 2024

மூளைக்குள் கருவி....முனைவர் வா.நேரு

                          மூளைக்குள் கருவி

                             (முனைவர் வா.நேரு)

உலகம் மாறி இருக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதன் இன்று உயிர் பெற்று வந்தால், இன்றைய உலகம் அவனுக்குப் புரியாது. அவ்வளவு புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகத்தை மாற்றி இருக்கிறது.



1847 மார்ச் 3, தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல் அவர்களின் பிறந்த நாள். 177 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். இன்று செல்பேசியை, தொலைபேசியை உபயோகிக்கும் பலருக்கு இவரின் பெயர் தெரியாது. ஆனால், உலகத்தின் மாற்றத்தில் மிகப்பெரும் பங்கு இவருக்கு இருக்கிறது. அலெக்சாண்டர் கிரகாம் பெல்லின் மனைவிக்குக் காது கேட்காது. அவரின் தாயாருக்கும் காது கேட்காது. காது கேட்காத தனது மனைவி மற்றும் தாயாரின் காரணமாகச் செவிப்புலன் பற்றியும், பேச்சைப் பற்றியும் காது கேட்காமல் இருப்பவர்களை எப்படியாவது கேட்கவைக்க முடியுமா என்பது பற்றியும் தனது வாழ்க்கையின் பெரும்பகுதி நேரத்தைச் செலவு செய்து ஆராய்ச்சிகள் செய்தார். அந்த ஆராய்ச்சியில் தற்செயலாக 1876இல் தொலைபேசியைக் கண்டு பிடித்தார். 1877இல் பெல் என்னும் தொலைபேசி நிறுவனத்தை நிறுவினார். உலகம் முழுவதும் தொலைபேசி நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தார். பல இலட்சம் பேர் அதன் மூலம் வேலை வாய்ப்புப் பெறக் காரணமாக இருந்தார். அதற்கான அடிப்படை ஆராய்ச்சி மனப்பான்மை,அறிவியல் துணை கொண்டு தேடுதல். அலெக்சாண்டர் கிரகாம் பெல் அவர்களின் மூலமாக இன்றைய உலகம் மாறி இருப்பது கண்கூடு.



மருத்துவத்தில் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. சில பத்தாண்டுகளுக்கு முன்பு இதய வால்வுகள் பழுதுபட்டால் மாற்று இல்லை. ஆனால், இன்றைக்கு இதய வால்வுகளை மாற்றும் மருத்துவம் வந்திருக்கிறது. இதய அடைப்புகள் ஏற்பட்டால் ஸ்டென்ட் என்பதன் மூலமாக அந்த அடைப்புகளை எடுத்துவிட்டு, அவர்களை நலமாக வாழவைக்கும் முறை வந்திருக்கிறது. பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் பல இலட்சம் பேரை நலமாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
எத்தனையோ கண்டுபிடிப்புகள்,உறுப்பு மாற்று சிகிச்சைகள் வந்தாலும் மூளையில் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்வதற்கான வழிமுறை மிகக் குறைவாகவே இருந்தது. கடந்த 10,15 ஆண்டுகளில் மூளையைப் பற்றிப் பல ஆராய்ச்சிகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.

ஆனால் பக்கவாதம், வலிப்பு போன்ற நோய்கள் மூளையின் பாதிப்பால், மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுபவை.
அண்மையில் எலான் மஸ்க் என்பவரின் ‘நியூராலிங்க் ஸ்டார்ட்அப்’ பற்றி நிறையச் செய்திகள் வருகின்றன. நியூராலிங்க் என்பது மூளையையும் கணினியையும் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம்(Brain-computer interfaces (BCIs).மூளைக்குள் ஏற்படும் மின்னியல் சமிஞ்கைகளைப் புரிந்து கொண்டு அதனைக் கணினி கொண்டு இயக்குவதாகும். நான் இப்போது மூளையைப் பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்றால் என் மூளைக்கு நான் மூளையைப் பற்றி எழுதவேண்டும் என்ற கட்டளையைக் கொடுக்கிறேன். என் கைகள் சரியாக மூளையின் கட்டளையைப் பின்பற்ற முடிவதால் நான் சிந்திப்பதை இப்போது எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

இன்னொருவர் மூளையைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், அவருக்குப் பக்கவாதம். அவரது மூளை சிந்தனை செய்வதையும், சொல்வதையும் கைகளால் செயல்படுத்த முடியாது. இந்த இடத்தில் நியூராலிங்க் தொழில்நுட்பம் அவரது மூளை என்ன நினைக்கிறது, சொல்கிறது என்பதை மூளையோடு இணைக்கப்பட்டிருக்கும் கணினிக்கு அனுப்புகிறது. உடனே அந்தக் கணினி அந்தக் கட்டளையை எடுத்துக்கொண்டு ‘இதனை எழுதி அனுப்பு’ என்று செயல்படுத்துகிறது.

நான் எனது கால்களை நடக்கச்சொல்கிறேன் என்று மூளை கட்டளை இடுகிறது. கால் நடக்கிறது.இன்னொருவருக்கு கால் நன்றாக இருக்கிறது. ஆனால், காலை நடக்கச்சொல்லும் கட்டளையை மூளை பிறப்பித்தால் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் உடல் இல்லை. எனவே காலை நடக்கச் சொல்லவேண்டும் என்று மூளை சொன்னவுடன் அதனோடு இணைக்கப்பட்டிருக்கும் கணினி அந்தக் கட்டளையை எடுத்துக்கொள்கிறது. பின்பு காலுக்கு அந்தக் கட்டளையைக் கணினி கொடுக்கிறது. கால் நடக்கிறது.

“மூளை என்று பொதுவாகச் சொன்னாலும் அது ஒற்றை உறுப்பு அல்ல. அது ஒரு பன்மைக் கூட்டமைப்பு. கை என்று சொன்னாலும் அது விரல்களும், உள்ளங்கையும், மணிக்கட்டும் சேர்ந்த பகுதியே என்பதைப் போலவே மூளையும் பொதுவாகச் சுட்டப்படும் பெயர். பெருமூளை, சிறுமூளை, முதுகுத்தண்டு, தண்டுவடம், மூளை நடுப்பகுதி என்று அய்ந்து முக்கியப் பகுதிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. தண்டுவடம் வரிசையான எலும்பு வளையங்கள் குருத்தெலும்புகளால் பிணைக்கப்பட்ட பகுதி. கழுத்தின் மேற்புறத்தில் அது மண்டையோட்டின் பெரிய துவாரத்தின் வழியாகச் சென்று மூளையாக மருவுகிறது.”(மூளைக்குள் சுற்றுலா, வெ.இறையன்பு, பக்கம் 61) தண்டுவடத்தில் ஒரு பிரச்சனை என்றால் மூளை இடும் கட்டளை கால்களுக்குச் சென்று சேர்வதில்லை. இந்த இடத்தில் நியூராலிங்க் ஸ்டார்ட் அப், கணினியின் மூலமாக மூளையின் கட்டளையைத் தண்டுவடத்திற்குப் பதிலாகக் கால்களுக்கு கடத்தும் வேலையைச் செய்து கால்களை இயங்க வைக்கும்.

தொலைபேசியைக் கண்டு பிடித்ததால் ஏற்பட்ட மாற்றங்களைப் போல, உலகத்தில் பல்வேறு அதிசயங்கள் இந்த மனித மூளைக்குள் எலக்ட்ரானிக் சிப் பொருத்துவதால் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

எலான் மஸ்க் மனித மூளைக்குள் எலக்ட்ரானிக் சிப் பொருத்தும் நியூராலிங்க் ஸ்டார்ட் அப் ஆராய்ச்சிக்கு அமெரிக்க அரசாங்கத்திடம் அனுமதி பெற்றார் என்பது சில மாதங்களுக்கு முன் வந்த செய்தி. குரங்குகள் மற்றும் பல விலங்குகளின் மூளைகளில் சிப் பொருத்துவதைப் பற்றிய ஆராய்ச்சிகளை 2014 முதல் இந்த நியூராலிங்க் நிறுவனம் செய்து வருகிறது.
ஜனவரி 2024இல் ஒரு மனித நோயாளிக்கு மூளையில் ஒரு சிப்பை வெற்றிகரமாகப் பொருத்தியதாகவும் அவர் குணமடைந்து வருவதாகவும் இப்போது அது வெற்றிகரமாகி
யிருக்கிறது என்றும் எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார்.

“முன்னேற்றம் நன்றாக உள்ளது, என்றும் நோயாளி முழுமையாகக் குணமடைந்து விட்டதாகவும் தெரிகிறது, நரம்பியல் விளைவுகள் நமக்குத் தெரியும். ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, நோயாளி சிந்திப்பதன் மூலம் ஒரு சுட்டியைத் திரையைச் சுற்றி நகர்த்த முடியும், ”என்று எலான் மஸ்க் சமூக ஊடக தளமான Xஇல் ஒரு ஸ்பேஸ் நிகழ்வில் கூறியிருக்கிறார்.
மேலும் தன்னுடைய அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “முதல் மனித நோயாளி விரைவில் நியூராலிங்க் கருவியைப் பெறுவார். இது இறுதியில் உடல் இயக்கத்தை முழுவதுமாக மீட்டெடுக்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த ஆய்வு ஸ்டீபன் ஹாக்கிங்கிற்குக் கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்” எனவும் பதிவிட்டுள்ளார்.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் கன்னத்தில் இருக்கும் சில தசைகள் தவிர உடல் பாகங்கள் பலவும் அவருக்கு வேலை செய்யாத நிலையில், ஈக்வலைஸர் என்ற கம்ப்யூட்டர் புரோக்ராம் உதவியோடு கன்னத் தசைகளின் அசைவுகள் மூலம் கம்ப்யூட்டர் குரலில் மட்டுமே ஸ்டீபன் ஹாக்கிங் பேசி வந்தார். 2018இல் மறைந்தார். மார்ச் 14 ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் நினைவு நாள்.

இந்த மூளையில் பொருத்தப்படும் சிப் தொழில் நுட்பம் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் அவர்களுக்கு மட்டும் கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள் என்று எலான் மஸ்க் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். ஆம். நியூராலிங்க் கருவி கிடைத்திருந்தால் ஸ்டீபன் ஹாக்கிங் தன் கால்களால் நடந்திருக்கவும், கைகளைப் பயன்படுத்தவும் முடிந்திருக்கும் அல்லவா!

ஆம், மூளைப் பாதிப்பினால் பல்வேறு வகையான நோய்களுக்கு ஆட்பட்டிருக்கும் பலருக்கு இந்த நியூராலிங்க் தொழில் நுட்பம் விடிவு தரும். கண் பார்வையற்றவர்களுக்குப் பார்வை தரும் எனப் பல்வேறு செய்திகள் வருகின்றன. இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளைப் பற்றியும்
பலர் பேசுகின்றனர். ஆனால், நாம் புதிய நியூராலிங்க்
தொழில் நுட்பத்தை வரவேற்போம்.♦

நன்றி: உண்மை இதழ்,01-15 மார்ச், 2024