Thursday 29 December 2022

உனக்கும் எனக்கும் என்ன ஒட்டு/உறவு?

 .

நமக்கும் 

ஆங்கிலத்திற்கும்

என்ன உறவு...?


நமக்கும் 

ஆங்கிலேயர்களுக்கும்

என்ன ஒட்டு?/உறவு?


ஆங்கிலப் புத்தாண்டை

நாம் கொண்டாடலாமா?

சங்கி ஒன்று

தான் சங்கி 

என்பதைச்சொல்லாமலேயே

உபதேசம் செய்து கொண்டிருக்கிறது..

வாட்சப்பில்...


எங்கிருந்தோ வந்தார்கள்

வெள்ளையர்கள் 

வாணிபம் செய்வதற்கு..

நமக்குள் இருந்த 

ஒற்றுமையின்மையால்...

ஆட்சியைப் பிடித்தார்கள்...

ஒன்றுபட்டோம் போராடினோம்

நாட்டை விட்டு விரட்டி விட்டோம்...


ஆனால் வெள்ளையர்கள்தான்

புத்தாண்டில் 

'ஹேப்பி நியூ இயர் ' 

எனச்சொல்லி எங்கள் தாத்தாக்களின்

கைகளைப் பிடித்துக் குலுக்கினார்கள்...

எங்கள் தாத்தாக்களை

சமைக்கச்சொல்லி

அவர்கள் பரிமாற சாப்பிட்டார்கள்...

கட்டி அணைத்து 

வாழ்த்துகள் சொன்னார்கள்...

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில்..


ஆமாம் ஆரியனே...

உனக்கும் எனக்கும் 

என்ன ஒட்டு/உறவு?


ஆரியனே ...

நீயும் வெளிநாட்டில் இருந்த

வந்த அந்நியன்தான்..

தந்திர மூர்த்திகளே...

தந்திரத்தால் எம் மண்ணை

எம் அரசியலை ஆக்கிரமித்த

கைபர் போலன் கணவாய்

வழியே ஊடுருவிய அன்னிய சக்திகளே... 


ஆரியனே ...

எங்கள் தாத்தாக்களை 

எட்டி நிற்கச்சொன்னாய்...

பார்த்தால் தீட்டு என்றாய்..

நடந்தால் தீட்டு என்றாய்...

படிக்கக் கூடாது என்றாய்...

படித்தால் நாக்கை அறுக்கச்சொன்னாய்

படித்ததைக் கேட்டால் காதில் 

ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச்சொன்னாய்!


அரண்மனைக்குள் புகுந்து

அரசர்களை வசப்படுத்தி

அவர்களின் சட்டங்களாலேயே

எங்களைச்சூத்திரன் என்றும்

பஞ்சமன் என்றும் பிரித்து

மனுவின் பெயரால்

பல நூறு ஆண்டுகள் 

கொடுமைகள் செய்யத்

தூண்டிய ஆரியனே...


எங்கள் தமிழர்கள் புத்தாண்டு

தைமுதல் நாள் என்றால்

இல்லை இல்லை

சித்திரை ஒன்று என

எம் இனத்தவரையே ஏவிவிட்டு\

சொல்லச்செய்யும் ஆரியமே...


எங்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு

தை ஒன்றுதான்...

சாதி ஒழிந்து சமத்துவம் பேணி

உலகின் பல பாகங்களில்

எம் தமிழர் ஏற்றமுடனே வாழத் 

துணை நிற்கும் 

ஆங்கிலம் எமக்கு எதிரி அல்ல!

உலக மாந்தர்களை 

ஒன்றாய்க் காணும்

ஆங்கிலப்புத்தாண்டும்

எமக்கு எதிரி அல்ல !

உரக்கச்சொல்வோம்...

இனிய ஆங்கிலப்

புத்தாண்டு வாழ்த்துகள் !...

விஷ் யூ ஏ ஹேப்பி

நியூ இயர்.....


          வா.நேரு,30.12.2022





Wednesday 21 December 2022

கட்டுரை : மானுட வளர்ச்சிக்கு மதம் மாபெரும் தடை!...முனைவர்.வா.நேரு

 

தந்தை பெரியாரை நினைக்கும் போதெல்லாம் பெருமிதமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 48 ஆண்டுகள் முடிந்து போனது. வரும் டிசம்பர் 24,2022 அவரின் 49ஆம் ஆண்டு நினைவு நாள்.முன் எப்போதும் விட மிக வேகமாகவும் விரைவாகவும் பரவும் தத்துவமாக தந்தை பெரியாரின் தத்துவம்-,கடவுள்,மத மறுப்புத் தத்துவம்- விளங்குவதைப் பார்க்கிறோம்.அண்மையில் பஞ்சாப் மாநிலம் பர்னாலா நகரத்தில் நடைபெற்ற இந்திய நாத்திகக் கூட்டமைப்பு மாநாட்டில், மாநாட்டு விளம்பரங்களில் தந்தை பெரியாரின் படம், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் படத்தோடும் தோழர் பகத்சிங் அவர்களின் படத்தோடும் இணைந்து இடம் பெற்றிருந்தது. ”ஜிந்தாபாத், ஜிந்தாபாத், பெரியார் ஜிந்தாபாத்” என்னும் முழக்கம் பஞ்சாப் மாநிலத் தோழர்களால் எழுப்பப்பட்டது.

தெலங்கானா மாநிலத் தோழர்கள் தந்தை பெரியாரைப் பற்றி தெலுங்கு மொழியில் உணர்ச்சிகரமான பாடலை மேடையில் இசையோடு பாடினர்.அவர்களின் மொழி நமக்குப் புரியவில்லை என்றாலும் உணர்வால் ஒன்றுபட்டு நிற்கும் ஆனந்தத்தை அந்த நிகழ்வு கொடுத்தது. பல மாநிலங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் பலர் கருப்புச்சட்டை அணிந்து இருப்பதைக் காணமுடிந்தது. தந்தை பெரியாரும் கருப்புச்சட்டையும் கடவுள்,மதம்,ஜாதி ஒழிப்புக் குறியீடுகளாக தமிழ்நாட்டைத் தாண்டி இந்திய ஒன்றியத்தின் மற்ற மாநிலத்தவர்களின் மனதில் இடம் பெறுவது மகிழ்ச்சியைத் தருகிறது.

“மதம் என்பது ஒரு கட்டுப்பாடு. மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதைத் தவிர,மற்றபடி அந்த மனிதனுக்கு எந்த விதமான பயனும் ஏற்படப்போவதில்லை.” என்றார் தந்தை பெரியார்.

கடந்த20 ஆண்டுகளில் கணினியால், இணையத்தால் ஏற்பட்ட புரட்சி என்பது மதம் என்னும் கட்டுப்பாட்டைத் தகர்க்கும் புரட்சிஎனலாம்.மதத்தினால் மனிதனுக்கு யாதொரு பலனும் இல்லை என்பதை மனிதர்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் என்பதற்கான எடுத்துக் காட்டுகளை உலகம் முழுவதும் இப்போது பார்க்கின்றோம்..

இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், நாத்திகர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. 37 விழுக்காடு மக்கள் ,நாங்கள் எந்த மதத்தையும் பின்பற்றுபவர்கள் அல்ல, நாங்கள் மதமற்றவர்கள் என்று அறிவித்திருக்கிறார்கள் என்று இங்கிலாந்து நாட்டின் 2021 கணக்கெடுப்பு சொல்கிறது.2011இல் 59.3 விழுக்காடாக இருந்த கிறித்துவர்களின் எண்ணிக்கை 46.2 விழுக்காடாக 2021இல் குறைந்திருக்கிறது.இங்கிலாந்தைப் போன்ற ஜனநாயக உரிமை உள்ள நாட்டில் மக்கள் மதத்தின் மீதான தங்களின் நம்பிக்கையின்மையை வெளிப்படையாக அறிவிக்க முடிகிறது, ஒன்று திரள முடிகிறது.மதம் தேவைதானா? என்னும் கேள்வியை மனதிற்குள் எழுப்புவது போலவே பொதுவெளிகளிலும் எழுப்பி ஒன்றிணைய முடிகிறது.மதத்தின் மீதான கோபங்களையும்,உணர்வுகளையும் வெளிக்காட்ட முடிகிறது.

ஆனால், மதக்கட்டுப்பாடு அதிகம் உள்ள நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் நம்பிக்கையின்மையைக் காட்டினால் பழி வாங்கப்படுவோம், தண்டனை கொடுக்கப்படுவோம் என்ற அச்சத்தினால் அமைதியாக இருக்கிறார்கள். ஈரான் நாட்டில் நடந்துவரும் மதத்தின் அடிப்படையில் அமைந்த ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிரான போராட்டம் மிகப்பெரிய அளவில் நடந்துவருவதைப் பார்க்கின்றோம். ஆண்களும் பெண்களும் பெருமளவில் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்.மதம் என்னும் கட்டுப்பாட்டைக் காப்பாற்றும் நிறுவனங்களாகத்தான் நாடுகளின் அரசுகள் இருந்திருக்கின்றன,- இருக்கின்றன.

“ஒரு மதவாதிக்கு அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுக்குக் கடவுள்- அது எப்படிப்பட்ட கடவுளானாலும் அது செயற்கைக் கடவுளே ஆகும்” என்றார் தந்தை பெரியார்.கடவுள் செயற்கை என்பதை எடுத்துக்காட்டும் நோயாக இந்தக் கொரோனோ நோய் அமைந்ததைப் பார்த்தோம்.கொரோனோ காலத்தில் எல்லா மத வழிபாட்டுத்தலங்களும் அடைக்கப்பட்டன.கடவுள் இருக்குமிடமாகச் சொல்லப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்குள் எந்த மனிதர்களும் அனுமதிக்கப்படவில்லை.எல்லா மதக்கடவுள்களுக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டு,வழிபாட்டுத் தலங்களுக்குள் பூட்டி வைக்கப்பட்டார்கள். நோயின் பயத்தில் தங்களைக் காப்பாற்ற வீடுகளுக்குள் முடங்கிய மனிதர்களுக்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட கடவுள்களைப் பற்றிக் கவலைப்படாத காலமாக கொரோனா காலம் இருந்ததைப் பார்த்தோம்.”ஒரு மதவாதிக்கு மதம் காரணத்தால் ஏற்பட்ட கடவுள், மோட்சம், நரகம், வேதம், மத தர்மம், மதத் தலைவன் என்பனவெல்லாம் அந்த- அதாவது, அவன் சார்ந்து இருக்கிற- மதக் கட்டுப்பாட்டினால் ஏற்பட்டவையே ஒழிய, உண்மைப் பொருளோ, உண்மைத் தத்துவமோ அல்ல என்பதோடு, அவையெல்லாம் செயற்கையே ஒழிய இயற்கையும் அல்ல.” என்றார் பெரியார்.

“மோட்சமும் சுவர்க்கமும் கள்ளு, சாராயக் கடைகளை விட,தாசி, வேசிகள் வீடுகளை விட மோசமானவை என்பதை மக்கள் உணரும்படி செய்யவேண்டும்.மோட்சம், நரகம் என்பது எப்படித் திருடர்கள் பிரயாணிகளை வழிப்பறி செய்வதற்குத் தனி வழியில், ஆள் அடையாளம் தெரியாத வகையில் வேஷம் போட்டுக்கொண்டு வந்து வழிமறித்து, மண்டையை உடைக்க ,தடிக்கம்பையும், ஈட்டியையும் ஆயுதமாகக் கொண்டு பறித்துச்செல்கிறார்களோ,அது போலவே பகல் வழிப்பறிக்காரர்கள் மக்களின் வாழ்க்கைப் பிரயாணத்தில் வழி மறித்துப், பொருள் பறித்துப்போகச்செய்து கொண்ட ஆயுதங்களே. ஆகையால் அதை மனிதன் முதலில் மறந்தாக வேண்டும் “ என்றார் தந்தை பெரியார்.செயற்கையாக உருவாக்கப்பட்ட மதம் என்பது மோசமானது என்பதனை உணர்ந்த காரணத்தால்தான் இங்கிலாந்தில் மதமற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.


மதம் என்னும் கட்டுப்பாட்டை அடித்து நொறுக்கி அதன் பொய்ம்மைகளை மிக எளிதாக மக்களுக்கு எடுத்துச்செல்லும் வாகனங்களாக இன்றைய சமூக ஊடகங்கள் இருக்கின்றன. ஒரு பக்கம் அறிவியலைப் பயன்படுத்தி,அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கையைப் பரப்ப சமூக ஊடகங்கள் பயன்படுகின்றன என்றாலும் கூட, அவர்கள் ஊதிப் பெரிதாக்கும் பலூனை நொடியில் உடைத்து தூள் தூளாக்கும் கூர்மையான ஊசிகளாகவும் சமூக ஊடகங்கள் பயன்படுகின்றன.தந்தை பெரியாருக்குப் பின் அவர்தம் தத்துவத்தை இந்திய ஒன்றியம் முழுமைக்கும்,உலகம் முழுவதற்கும் எடுத்துச்செல்ல,எந்த நாளும் நான் பெரியாரின் மாணவன் என்று சொல்லும் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கையில் எடுத்து இருக்கும் ஆயுதங்களில் மிக முக்கியமானது சமூக ஊடகம் ஆகும்.


நவீன சமூக ஊடகங்களான வாட்சப்,முகநூல், டுவிட்டர், டுவிட்டர் ஸ்பேஸ், டெலிகிராம், யூ டியூப், இன்ஸ்டாகிராம் என்னும் பல முகங்களிலும் பேசப்படும் ஒரு முகமாகத் தந்தை பெரியார் இருக்கிறார். மிக விரிவாகப் பேசப்படும் தத்துவமாக தந்தை பெரியாரின் தத்துவம் இருக்கிறது.எதிராளிகள் கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி தந்தை பெரியாரின் தத்துவத்தை,கொள்கையை எளிதில் சிதைத்து விடலாம் என்று மனப்பால் குடிப்பதற்கு மாறாக தந்தை பெரியாரின் தத்துவம் இருபால் இளைஞர்களால் தூக்கிப் பிடிக்கப்படுகிறது. மதம் என்பது எதற்கு? மதக் கட்டுப்பாடுகள் எதற்கு? செயற்கையாகப் புகுத்தப்பட்ட மதத்தினால் ஏற்படும் தீமைகளை இந்த உலகம் ஏன் பொறுத்துப் போகவேண்டும்? என்னும் கேள்விகளை இளைஞர்கள் முன்வைக்கிறார்கள். விவாதிக்கிறார்கள்.தீர்வுகளைச் சொல்கிறார்கள்.


ஜாதியற்ற, மதமற்ற, கடவுள்கள் அற்ற மனித நேயம் மிக்க ஓர் உலகத்தைத் தந்தை பெரியார் கனவு கண்டார். ஆணும் பெண்ணும் சமமாக வாழும் சமத்துவ உலகத்தை உருவாக்க தந்தை பெரியார் கனவு கண்டார்.ஏழைகளும்,பணக்காரர்களும் அற்ற எல்லோருக்கும் எல்லாம் என்னும் ஒரு புதிய உலகம் அமையத் தந்தை பெரியார் தன் வாழ்க்கையை ஒரு போராட்ட வாழ்க்கையாக அமைத்துக் கொண்டார்.அவரது நினைவு நாளில்,அவர் வழியில் நமக்கு வழிகாட்டும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில்,அவர் போட்டுத்தரும் பாதையில் எந்த விதமான சபலங்களுக்கும் ஆளாகாமல்,தந்தை பெரியார் நினைத்த,கனவு கண்ட உலகம் சமைக்க நாமும் நமது பங்கை அளிக்க உறுதி ஏற்போம்.


நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ் திசம்பர் 16-31,2022 

Monday 19 December 2022

வியப்புமிகு எழுத்தாளர்.....

                                                                                                    

எழுத்து, உலகின் பல நாடுகளை பழைய நிலையிலிருந்து புதிய நிலைக்கு உயர்த்தி-யிருக்கிறது. மாபெரும் மனிதர்கள் பலரை மாபெரும் நிலைக்கு உயர்த்துவதற்கு உறுதுணையாக புத்தகம் இருந்திருக்கிறது.பொதுவுடைமைத் தத்துவத்தை உலகுக்கு அளித்த தோழர் காரல் மார்க்ஸ், பேரறிவாளர் அண்ணல் அம்பேத்கர், அண்ணல் காந்தியார், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் எனப் பலரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட காரணமாக இருந்தவை புத்தகங்கள் என்பதை நாம் அறிவோம்.உலகத்தின் போக்கை _ கடவுள்தான் உலகத்தைப் படைத்தார் என்னும் மாயப்பிம்பத்தை உடைக்க சார்லஸ் டார்வின் அவர்களின் பரிணாமக் கோட்பாடு புத்தகம்தான் காரணமாக இருந்தது.மாயப்பிம்பங்களை உடைக்கும் மகத்தான கருவிகளாகப் புத்தகங்கள்தான் இருந்தன _ இன்றைக்கும் இருக்கின்றன.



தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றிய நேரத்தில் எல்லாம் தன்னுடைய கருத்துகளுக்கான ஆதாரங்கள் இருக்கும் புத்தகங்களைத் தன்னோடு எடுத்துக்கொண்டு போய்,தான் வாசிப்பது மட்டு-மல்ல,கூட்டத்தில் இருக்கும் எவராவது ஒருவரை அழைத்து, வாசிக்க வைத்து அதன் உண்மைத் தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார் என்பது வரலாறு.

தந்தை பெரியாரின் தத்துவ வாரிசு திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி வீரமணி அவர்களின் 90ஆம் பிறந்த நாள் டிசம்பர் 2.. நாமெல்லாம் கொண்டாடி மகிழும் நாள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பன்முக ஆற்றலில் எழுத்து ஆற்றலை எண்ணி எண்ணி வியக்கத் தோன்றுகிறது. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு எழுத்துப் போராளியாக, பகுத்தறிவுக் கருத்துகளை தந்தை பெரியாரின் எண்ணங்களை, சிந்தனைகளை எழுத்து வடிவில் கொண்டு செல்வதில் அய்யா ஆசிரியர் அவர்களின் பங்கு என்பது மிகப் பெரியது. எண்ணி எண்ணி மகிழத்தக்கது.


இந்தியாவைப் பொறுத்த அளவில், பார்ப்-பனர்களால் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட, இல்லாததை எல்லாம் இருப்பதாகக் காட்டி மக்கள் மத்தியில் மாய வலை வீசப்பட்ட _ வீசப்படும் நூல் பகவத் கீதை. கடவுளால் மனிதனுக்கு உபதேசிக்கப்பட்டது என்று சொல்லி,எளிதாக இந்த நூல் எவருக்கும் புரியாது, எல்லாமே பூடகமாகத் தத்துவங்களாகத்தான் இருக்கும் என்ற மாயபிம்பங்களால் கட்டப்பட்ட, அந்த நூலின் உண்மைத் தன்மையைப் போட்டுடைத்தவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். பல பதிப்புகளைக் கண்டு, இன்றைக்கும் புதிதாக வாசிக்கும் எவருக்கும் பல வியப்புகளைத் தரும் அரிய நூல் ’கீதையின் மறுபக்கம்‘. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள்,நம் பரம்பரை எதிரியான இராம.கோபாலனுக்குப் பரிசாக அளித்த பெருமை பெற்ற நூல்; ‘கீதையின் மறுபக்கம்‘. ஆகும். ’கீதையின் மறுபக்கம்‘ நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அதுவும் பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் இராமாயண ஆராய்ச்சி என்னும் நூலை ஆக்கினார். அது பல மொழிகள் கடந்து இன்றைக்கும் ஆரியர்களை அச்சுறுத்தும் ஒரு நூலாக இருக்கிறது. தந்தை பெரியாரின் தத்துவ வாரிசு அய்யா ஆசிரியர் அவர்கள் மகாபாரத ஆராய்ச்சி என்னும் நூலை ஆக்கிக் கொடுத்திருக்கிறார். ராமாயணம் போலவே மகாபாரதம் எப்படி நம் மக்களை மயக்கப் பயன்பட்டது, பயன்படுகிறது என்பதனை மிகத் தெளிவாக நாம் அறிந்துகொள்ள உதவுகிற நூல்.. ’பிராமணியம்‘ என்னும் தத்துவம் இன்றைக்கும் எப்படி தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களை இழிவாகக் கருதுகிறது என்பதைப் பல்வேறு ஆதாரங்களோடு எடுத்துக்காட்டும் நூல் ‘வெறுக்கத்தக்கதே பிராமணியம்‘ என்னும் நூலாகும்.


தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கர் அவர்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.இந்துத்துவா அமைப்பினர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வீரியமிக்க ஆரிய எதிர்ப்புக் கருத்துகளை மறைத்து, ’இந்துத்துவா அம்பேத்கர்‘ என்னும் பொய்யைப் பரப்பும் இந்த நாள்களில் அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் பற்றிய ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் புத்தகங்கள் பெரிய அளவில் பரப்பப்பட வேண்டியவை.’விசாவுக்காக காத்திருக்கிறேன்’, ’டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்‘, ‘அருண்ஷோரியின் அம்பேத்கர் பற்றிய நூலுக்குப் பதில்’.’டாக்டர் அம்பேத்கர் புத்த நெறியைத் தழுவியது ஏன்’ போன்ற பல புத்தகங்கள் அய்யா ஆசிரியர் அவர்களால் கொடுக்கப்பட்டிருக்கின்றன.


இந்தியாவின் பிற மாநிலங்களில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் வியந்து பார்க்கும் திருமண முறை, தந்தை பெரியாரால் அறிமுகப்

படுத்தப்பட்ட ‘சுயமரியாதைத் திருமணம்‘. இலட்சக்கணக்கான திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன _. நடந்துகொண்டிருக்கின்றன. சுயமரியாதைத் திருமணம் பற்றிய ஓர் ஆவணம் போன்ற புத்தகம் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட ‘சுயமரியாதைத் திருமணம்-தத்துவமும் வரலாறும் ‘ என்னும் நூலாகும்.

குறைந்த விலையில் நிறைந்த கருத்துகள் அடங்கிய சிறு சிறு புத்தகங்களை வெளியிடுவது தந்தை பெரியாரின் பழக்கமாகும். அந்த

வகையில் பல சிறு சிறு புத்தகங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன. ’நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு முட்டுக்கட்டை ஏன்?’, ’தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனை‘, ‘தேவை பாலியல் நீதி’, ’திராவிடர் கழகத்தில் மகளிர் சேரவேண்டும் ஏன்’, ’வர்ணதர்மமும் பெண்ணடிமையும்‘ போன்ற புத்தகங்கள் பெண்ணுரிமை சார்ந்த புத்தகங்கள்.


‘கோயில்கள் கோபுரங்கள் ஏன்?எதற்காக?’ ,’சக்தி வழிபாடு’, ’கல்லூரிகளில் சோதிட நம்பிக்கையா?’ போன்ற பல புத்தகங்கள் மூட நம்பிக்கைகளின் முதுகெலும்பை முறிப்பவை.இது தவிர அய்யா ஆசிரியர் அவர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ள ‘குடிஅரசு’ இதழ்களின் தொகுப்புகள் ‘ போன்றவை பல தொகுப்புகளாக வந்து வரலாற்றை வருங்காலச் சந்ததிகளுக்கு சிறப்பாக எடுத்துக்காட்டும் தொகுப்புகளாக அமைந்துள்ளன.

‘உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? என்னும் புத்தகம், ‘ இருபத்தோராம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே!’ என்னும் புத்தகம், ‘வைக்கம் போராட்ட வரலாறு’, ‘காஞ்சி சங்கராச்சாரியார் யார்? _ ஓர் ஆய்வு ‘காமராஜர் கொலை முயற்சி சரித்திரம்‘ என அய்யா ஆசிரியர் அவர்கள் ஆக்கிக் கொடுத்திருக்கக்கூடிய புத்தகங்களின் எண்ணிக்கை மிக அதிகம்.


எல்லாவற்றிற்கும் மேலாக தந்தை பெரியாரின் தத்துவத்தைப் பத்து வயதில் ஏற்று,மேடை ஏறி உரையாற்றியது மட்டுமல்லாது, கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாகத் தந்தை பெரியாரின் கொள்கை வழியில் அமைந்த வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மற்றவர்க்-கெல்லாம் எடுத்துக்காட்டாக வாழும் அய்யா ஆசிரியர் அவர்கள் கொடுத்திருக்கும் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ இதுவரை 16 தொகுப்புகள் வந்துள்ளன. வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்பை பத்திரிகைகளும் தலைவர்களும் பாராட்டி மகிழ்ந்தனர் _ மகிழ்கின்றனர்.” “‘வாழ்வியல் சிந்தனைகள்‘ நூலை ஆங்கிலத்திலும், இந்தியிலும் மொழி பெயர்க்க வேண்டும்” என்று வி.பி.சிங்கும்,”நாட்டு மக்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடிய, அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய சிறந்த கருத்துகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு”, என்று மு.கருணாநிதியும், “இந்த நூலுக்கு நோபல் பரிசு கொடுக்கவேண்டும்” என்று நீதியரசர் பெ.வேணுகோபாலும், ”என்சைக்ளோபீடியா போல் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் ஆழ்ந்த கருத்துகள்.இது ஒரு பல்கலைக் களஞ்சியம்.இதில் செய்திகள் அதிகம்.


அதைவிடக் கருத்துகள் அதிகம்’’ என்று இரா.செழியனும், ‘ நல்ல படைப்பு’ என்று டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களும், ‘சிறப்பான நூல்’ என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லெட்சுமணன் அவர்களும், ‘ஞானப்பெட்டகம் என்று குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளாரும், ‘பயனுள்ள கட்டுரை’ என்று முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமியும் , ‘சுத்தமான அறிவு’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களும் பாராட்டுகிறார்கள்” என்று பேரா.நம்.சீனிவாசன் அவர்கள் ‘தமிழர் தலைவர் கி.வீரமணியின் வாழ்வும் பணியும்’ என்னும் நூலில் குறிப்பிடுவார்.அது மட்டுமல்லாது அந்த நூலில் “கி.வீரமணியின் படைப்புகளில் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்த நூல் இதுவாகும். இந்நூலில் உள்ள சில கட்டுரைகள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது அவரது எழுத்தாற்றலுக்குக் கிடைத்த வெற்றியாகும்” என்றும் அவர் குறிப்பிடுவார்.


வாழ்வியல் சிந்தனைகள் வந்துள்ள கட்டுரைகள் பலரின் வாழ்க்கையை மாற்றி அமைத்துள்ளன.வாழ்க்கையைச் செப்பனிட உதவியுள்ளன.கண்மாயில் நிரம்பி இருக்கும் நீர் பல வாய்க்கால்களின் வழியாகப் பாய்வது போல,வாழ்வியல் சிந்தனைகளின் கட்டுரையை அடிப்படையாக வைத்து பல புதிய நூல்கள் வந்துள்ளன.வெண்பா அடிப்படையில் மதுரை சுப.முருகானந்தம் அவர்கள் ‘வாழ்வியல் வெண்பா ‘ என்னும் நூலை வெளியிட்டுள்ளார்.ஆங்கிலத்தில் வாழ்வியல் சிந்தனைக் கட்டுரைகள் மொழி பெயர்க்கப்பட்டு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆங்கில இதழில் மாதந்தோறும் வெளிவருகிறது. புதுக்கவிதை வடிவில் வாழ்வியல் சிந்தனைகள் கருத்துகளை பலர் வடிக்கின்றனர்.இப்படி பல நூல்களுக்கான ஆதாரக் கொள்கலனாக அய்யா ஆசிரியர் அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்புகள் அமைந்துள்ளன.


அய்யா ஆசிரியர் அவர்களின் இந்த 90 ஆண்டுகால வாழ்க்கையில் 80 ஆண்டுகள் பொதுவாழ்க்கைக்காக அமைந்த வாழ்க்கை. சுற்றுப்பயணம் செய்து கொண்டேயிருக்கும் நம் தலைவர் அவர்கள் தீவிரமான வாசிப்பாளர். வாசிப்பைச் சுவாசிப்பவர்.வாசிப்பது மட்டுமல்லாது புத்தகங்களை, கட்டுரைகளை, அறிக்கைகளைப் படைத்துக்கொண்டே இருக்கிறார். அவரின் புத்தகங்கள் காலத்தை வென்று வாழும் சக்தியுடைய புத்தகங்களாக இருக்கின்றன. ஒரு பக்கம் தந்தை பெரியாரின் கொள்கைகளை, திராவிட இயக்கக் கொள்கைகளைப் பறைசாற்றும் புத்தகங்களைப் படைக்கும் அதே நேரத்தில், எல்லோரும் வாழ்வில் நிம்மதியாக வாழவும், வாழும் நாள்களில் மகிழ்ச்சியாக வாழவும், உடல் நலத்தோடு, மன நலத்தோடு வாழவும் வழிகாட்டும் வாழ்வியல் சிந்தனைகளைப் படைத்துக்கொண்டிருக்கும் அய்யா ஆசிரியர் அவர்கள் நமக்கு வியப்புமிகு எழுத்தாளராகவே இருக்கின்றார்.அவர் இன்னும் பல நூறு புத்தகங்கள் படைக்கும் வண்ணம் நீடூழி வாழவேண்டும்! வாழ வேண்டும்! என்று விரும்புகின்றோம்; வணங்குகின்றோம்; வாழ்த்துகின்றோம்.

.....முனைவர்.வா.நேரு......


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் டிசம்பர் 1-15

Tuesday 13 December 2022

கொடுக்கப்படாத சில புத்தகங்கள்

 

திருப்பிக் கொடுக்கப்படாத

சில புத்தகங்கள்

அலமாரிக்குள்

அகப்படுகின்றன…

 

கொடுக்கப்படாத

புத்தகங்களின் வழியாக

புத்தகத்தைக் கொடுத்தவரைப்

பற்றிய நினைவுகள்

நீள்கின்றன….

 

வெகு நேரம்  

ஆழ்ந்து வாசிக்கும்

அவரின் குணத்தை

அவர் கொடுத்த

புத்தகத்தின் வழியாக

சுவாசிக்க முடிகிறது…

 

திருக்குறள் பற்றிய

அவரின் புத்தகம்

திருக்குறள் கட்டுரைகளைப்

பதிப்பிக்க அவர் அலைந்த

அலைச்சலை நினைவுபடுத்துகிறது…

 

புத்தகங்களாய்ப் படித்து படித்து

படித்த புத்தகத்தில் அடிக்கோடிட்டு

அடிக்கோடிட்ட எழுத்துகளை

தனியாக நோட்டுப்புத்தகத்தில்

எழுதிவைக்கும் அவரின் வாசிப்பை

அடிக்கோடிட்ட ஒரு புத்தகம்…

கொடுக்கப்படாத ஒரு புத்தகம்

நினைவுபடுத்துகிறது…

 

புதுமைப்பித்தனை

அழகிரிசாமியை

இன்னும் சில படைப்பாளிகளை

தான் படித்து சிலாகித்ததைச்

சொல்லிச்சொல்லி

என்னை அவர்களைப் படிக்கவைத்த

நண்பரின் புத்தகம் ஒன்றும்

கொடுக்கப்படாத புத்தகமாய்

அலமாரிக்குள் இருக்கிறது…

 

புத்தகத்தைத் திருப்பிக்கொடுத்தால்

அவர்களின் வாரிசுகளில்

யார் இதைப் படிப்பார்?

யார் இதைப் பாதுகாப்பார் ?

னும் கேள்வி எழ

கொடுக்கப்படாத புத்தகங்கள்

கொடுக்கப்படாமலேயே

இருக்கட்டும் எனத் தோன்றுகிறது…

 

                                                 வா.நேரு

                                                  13.12.2022

 

Thursday 8 December 2022

எதிலிருந்து கவிதை எழுகிறது?...

 எதிலிருந்து 

கவிதை எழுகிறது?...


மெளனமாக இருக்கும் 

நேரங்களில் கேட்கும்

ஒலிகளில் இருந்தா?

இடியோசை எனக் 

காதைப் பிளக்கும்

சப்தங்களுக்கு நடுவிலா?...


எதிலிருந்து 

கவிதை எழுகிறது?...

அதிகாலையில் வானத்தில்

அணிவகுப்பு போல

வரிசையாகப் பறந்திடும்

பறவைகளின் ஒழுங்கிலா?...

எவ்வித ஒழுங்கும் இன்றி

அறை முழுவதும்

சிதறிக் கிடக்கும்

பொருட்கள் போல

ஒழுங்கு இன்மையிலா?...


எதிலிருந்து 

கவிதை எழுகிறது?...

இருட்டு அறைக்குள்

பொருளைத் தேடி அலைந்து

உத்தேசமாய்த் தொட்டு

அதுதான் என உணர்ந்து

மகிழும் அக்கணத்திலா?...

பகலைப் போல 

விளக்குகள் ஒளிரும் இரவில்

எங்கு வைத்தோம் 

எனத் தெரியாமல் 

தேடித் திணறி

திகைத்து நொந்து நிற்கும்

அக்கணத்திலா?...


எதிலிருந்து 

கவிதை எழுகிறது?...

ஒன்றுபோல இருக்கும்

பொழுதுகளால்

ஒரு போதும் 

கவிதைகள் வருவதில்லை...

முரண்களோடு நிகழும்

எதிர்பாராத நிகழ்வுகளே

எப்போதும் கவிதைகளுக்கு

'தொட்டணைத் தூறும் மணற்கேணி'


அதிகாலையில் கிழக்கே

உதிக்கும் சூரியன்போல அல்லாது

எப்போது உதிக்கும்...

எப்படி உதிக்கும்...

எனச்சொல்லமுடியாததாய் கவிதை...



                         வா.நேரு

                         08/12/2022


Thursday 24 November 2022

ஆசிரியர்கள் இன்னும் ஒருதாய்

 அறிவு என்னவோ

இது இயற்கைதானே என்கிறது...

ஆனால் மனது என்னவோ

முழுக்க அழுகையால் நிரம்புகிறது...


எங்கள் கிராமத்து பள்ளிக்கு

தலைமை ஆசிரியராகத்தான்

வந்தார் அவர்

40 ஆண்டுகளாய்

எனது பேச்சில்

எனது எழுத்தில்

தொடர்ந்து வந்தார்..


அவரோடு ஏற்பட்ட தொடர்பு

இறுதி மூச்சுவரை தொடர்ந்தது...

சுவாசிப்பதை அவர் நிறுத்தியது

எனக்கு நெஞ்சை

அடைப்பது போல் இருக்கிறது...


மாமனிதர்கள் சிலர்

தங்கள் செயல்களால்

மனதுக்குள்

உட்கார்ந்து விடுகிறார்கள்..

உயரப் பறக்கும் காலெமெல்லாம்

ஏற்றி விட்ட ஏணிகள்

மனதில் நிறைந்து விடுகிறார்கள்...


பேருந்து வசதியில்லாக் காலத்தில்

பள்ளியிலேயே இருந்துகொண்டு

இருக்கும் நேரமெல்லாம்

மாணவர்களுக்கு இலவசமாய்

போதித்த மனது 

எவ்வளவு பெரிய மனது ?


எத்தனைபேரை உயர்த்திய

கரங்கள் இந்த ஆசிரியரின் கரங்கள்

எத்தனை ஊரின் பள்ளிகளை

செழுமைப்படுத்திய

சிந்தனை இந்த ஆசிரியரின் சிந்தனை...


எங்கும் பயமில்லை...

எவர் கேள்விக்கும் பதிலுண்டு...

நேர்மை என்ற ஒன்றால்மட்டுமே

நிமிர்ந்து நின்ற

எங்கள் தலைமை ஆசிரியரே...

வீரி(செட்டி) சாரே..

ஆசிரியர்கள் இன்னும் ஒருதாய்

என்பதற்கு எடுத்துக்காட்டாய்

வாழ்ந்தவரே...

மறைந்து விட்டீர்கள் என்றாலும்

நாங்கள் வாழும் காலெமெல்லாம்

எங்கள் மனதில் வாழ்வீர்கள்!


                                                         வா.நேரு

                                                           24.11.2022




திரு.வீ.வீரி(செட்டி) சார் அவர்கள் தான் கற்பிப்பதை நிறுத்திக்கொண்டார்.

 எனக்கு தலைமை ஆசிரியராக இருந்த திரு.வீ.வீரி(செட்டி) சார் அவர்கள் தான் கற்பிப்பதை நிறுத்திக்கொண்டார்.பள்ளியில் கற்ற கல்வியை விட மதுரைக்கு நான் வந்த பின்பு அவரிடம் கற்ற கல்வி அதிகம்.புத்தகங்களை வாசித்துக்கொண்டே இருந்தார். குறிப்புகளை எடுத்து நோட்டு நோட்டுகளாய் எழுதிக் குவித்துக்கொண்டே இருந்தார்.பல ஊர்களில் ஆசிரியராக,. தலைமை ஆசிரியராகப் பணியாற்றி எங்கள் ஊருக்கு 1979-ல் தலைமை ஆசிரியராக வந்தார்.தன் தனித்தன்மையால் ஊர்மக்கள்,மாணவர்கள்,ஆசிரியர்கள் எல்லோர் மனதிலும் நிறைந்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக(CEO),மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளராக(Inspector Of Matriculation ) பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் மதுரை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்தார்.தனது 75 வயது வரை சைக்கிளில்தான் மதுரை முழுவதும் சுற்றி வந்தார்.கடந்த சில ஆண்டுகளாக சைக்கிள் எடுக்கவில்லை. காலில் அறுவைசிகிச்சை செய்ததால் வீட்டை விட்டு செல்ல இயலாமல் வீட்டிற்குள்ளேயே நடமாடினார்.இடையில் கொரனாவிலும் பாதிக்கப்பட்டு வென்று வந்தார்.இன்று மாலை இறந்துவிட்டார் என்று அவரது மகன் தொலைபேசியில் கூறினார்.நெருக்கமானவரின் இறப்பு துயரத்தைக் கூட்டுகிறது.80 வயதிற்கு மேற்பட்டவர்,இறப்பது இயற்கைதானே என்று அறிவு சொல்கிறது,ஆனால் மனம் முழுக்க துயரம் அப்புகிறது.எனது தாயின் இறப்பைப் போலவே இவரது இழப்பும் ....வருத்தத்தைக் கூட்டுகிறது


Thursday 17 November 2022

கருவியாய் 'கடவுள்'...

 எல்லாம் வல்ல 

கடவுளுக்கு

எதிராக எளிய மனிதன்

எப்படிப் பகைமை கொள்ள இயலும்?


உடன் பிறந்தவரோடு

உடன் பழகியவரோடு

உடன் வாழ்ந்தவரோடு

ஓர் இடத்தில் ஒன்றாய்

பயணம் செய்பவரோடு

ஒரு மனிதன் 

பகைமை கொள்ள இயலும்...

எங்கேயுமே காணாத கடவுளோடு

எங்கனம் ஒரு மனிதன்

பகைமை கொள்ள இயலும்?


அவரின்றி ஓர் அணுவும் அசையாது...

ஒரு மனிதன் சிரிப்பதுவும்

அழுவதுவும் 

மனித வாழ்க்கையில் எல்லாமே

அவரின் கருணையால் என்றானபின்

கடவுளைப் பகைமை கொள்வதுவும்

கடவுள் அருள்தானே...

பின் அதற்காக ஒரு மனிதருக்கு

மரண தண்டனை என்பது

எவ் வகையில் நியாயம்?



மனித உரிமை மீறல்கள்

உச்சபட்சமாக நடக்கும்

நாடாக ஈரான் இன்றைய நாளில்...

எப்போதும் அதிகாரம்

செலுத்த நினைக்கும்..

மக்களை வாட்டி வதைக்கும்

கொடுங்கோலர்களுக்கு

நல்ல துணை செய்யும்

கருவியாய் 'கடவுள்'...

அன்றைய காலம் முதல்

இன்றைய காலம்வரை...


                      வா.நேரு,

                      17/11/2022


https://www.bbc.com/tamil/articles/c881qlgyl23o



Monday 7 November 2022

விடை பெற்றீர்கள் தோழரே,கோரா..அவர்களே .வீரவணக்கம்...வீரவணக்கம்.



 விடை பெற்றீர்கள் தோழரே,கோரா..அவர்களே .வீரவணக்கம்...வீரவணக்கம்.


மதுரையில் எனக்கு பல ஆண்டுகளுக்கு முன் இயக்கரீதியாக அறிமுகமானவர் தோழர் கோவிந்தராஜ் என்ற கோரா. மதுரையில் மத்திய அரசு நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவில் வேலை பார்த்தார்.மதுரையில் அந்த அலுவலகத்தில் இருந்த திரு.கீதா இளங்கோவன் ITS அவர்கள் எனக்கு அறிமுகமானவராக இருந்தார். அவருக்கு கீழே வேலைபார்க்கும் அலுவலராக கோரா இருந்தார். நான் மத்திய அரசு நிறுவனமான தொலைபேசித்துறையில் இருந்த நிலையில் இயக்க நிகழ்வுகளுக்கு மட்டும் கறுப்புச்சட்டை போடுபவனாக இருந்தேன்.கோரா அவர்கள் அலுவலகத்தில் ,வெளியில் எப்போதும் கறுப்புச்சட்டைதான்.கறுப்புச்சட்டை என்பது மட்டுமல்ல,கறுப்புச்சட்டையில் சிவப்பு நூலால் நெய்யப்பட்ட NO GOD கடவுள் இல்லை என்னும் வாசகமும் இருக்கும்.மதுரையில் அவர் இருந்தபொழுது ,அவரது குடும்பம் சென்னையில் இருந்தது.அவர் மட்டும் மதுரையில் தங்கி,வெளியில் உணவு சாப்பிட்டுக்கொண்டு அலுவலகப் பணி செய்து கொண்டிருந்தார்.மதுரையில் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கட்டாயம் இருப்பார்.மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டங்கள்,தெருமுனைக் கூட்டங்கள் என்று வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் மதுரையில் திராவிடர் கழகக் கூட்டங்களில் கலந்து கொள்வார்.2005-2010 காலங்களில் மாற்றலாகி சென்னை சென்று விட்டார்.சில ஆண்டுகள் தொடர்பில் இல்லை.


வாட்சப் வந்த பிறகு மீண்டும் தொடர்பில் இணைந்தார்.பல செய்திகளை எனக்கு அனுப்பிக்கொண்டே இருப்பார்.விடுதலையில் நான் கலந்து கொண்ட செய்தி வந்தாலோ அல்லது நான் எழுதிய கட்டுரைகள் வந்தாலோ அழைத்துப்பேசுவார். வெறுமனே பாராட்டு என்பதாக அந்த உரையாடல் இருக்காது.சரியாக இருந்தால் பாரட்டுவார்.தவறு என்று பட்டால் மிகத்தீவிரமாக விவாதிப்பார்.வாதாடுவார்.இருவரும் ஒத்துக்கொள்ளும் பொதுக்கருத்து வரும்வரை அவரின் கருத்து விவாதம் இருக்கும்.ஆனால் விடுதலை,உண்மை என எந்த இதழில் வந்தாலும் முதலில் ஒரு தீவிரமான வாசகராக அதைப் படித்து,தனக்குப் பட்டதை உடனே தெரிவிப்பார்.


தந்தை பெரியார் மீதும் திராவிடர் கழகத்தின் மீதும் அவருக்கு இருந்த பற்று என்பது சொற்களால் விவரிக்க இயலாது.அப்படி ஒரு பற்று.அய்யா ஆசிரியர் அவர்கள் மீது பற்றும்,அவர் சொல்வதை அப்படியே ஏற்று கழகச்செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார்.அவரது வீட்டிற்கு ஒரு முறை தந்தை பெரியார் பிறந்த நாள் சமயம் சென்றிருந்தேன். வீட்டிற்கு முன்னால் கொடிக்கம்பம்.திராவிடர் கழகக் கொடியை ஏற்றச்சொன்னார். கடவுள் இல்லை கல்வெட்டு வீட்டின் முன்னால்.தன்னுடைய இணையர் அம்மா ஹேமமாலினி அவர்களையும்,மகன் புவனன்,மகள் தமிழரசி எனக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.அவரது மகள் தமிழரசி ,தனது தந்தையின் குண நலன்களையும் தங்களைக் கவனித்து வளர்த்த விதத்தையும் மிக அருமையாகவும் நெகிழ்வாகவும் குறிப்பிட்டார்.அது மட்டுமல்ல தனது தந்தையின் பிடிவாதக் குணத்தைப் பற்றியும் பல செய்திகளைச் சொன்னார்.


மதுரையில் இருக்கும்போது நடந்து கொண்டே இருப்பார். பயணித்துக்கொண்டே இருப்பார்.விடுதலை,விடுதலை ஞாயிறு மலர் போன்றவற்றில் அவரின் கட்டுரை வரும்.திடீரென்று அவரது இல்லத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் சென்றபோது ,வீட்டில் ஏதோ முயற்சி செய்தபோது தவறிக் கீழே விழுந்து விட்டார் என்று சொன்னார்கள்.அந்த விழுந்ததன் காரணமாக அவரது பயணம் தடைபட்டது.முதுகுத் தண்டில் பிரச்சனை ஏற்பட்டதால் நிறைய தூரம் பயணம் செய்யக்கூடாது என்று சொல்கின்றார்கள் நேரு என்றார் ஒருமுறை. அதில் ஆரம்பித்து கொஞ்சம், கொஞ்சமாக வெளியில் செல்லவேண்டும் என்றால் இரண்டு மூன்று பேர் துணை இருந்தால்தான் செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது.அப்போதும் தொடர்ந்து படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தார்.


அவருக்கு நன்றாகத் தெலுங்கு தெரியும்.பெரியார் பெருந்தொண்டர் அய்யா வீரபத்திரன் அவர்களும் ,இவரும்(கோராவும்)தான் விசாகப்பட்டினம்  மற்றும் ஆந்திரா தெலுங்கானா தோழர்களோடு திராவிடர் கழகத்தின் தொடர்பாளராக இருந்தவர்கள்.இனி அய்யா வீரபத்திரன் மட்டும்தான்.தெலுங்கான தோழர் சாராய்யா மீது அவ்வளவு அன்பு செலுத்துவார்.அவரும் கோரா மீது மாறாத பாசம் வைத்திருப்பார்.அண்மையில் பஞ்சாபில் நடந்த அகில இந்திய நாத்திக மாநாட்டில் கலந்து கொண்டபோது கூட நானும் சாராய்யாவும் கோரா அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.


சில ஆண்டுகளுக்கு முன் அவர் எனக்கு வாட்சப்பில் அனுப்பிய பல மொழிபெயர்ப்புகளை ஒன்றிணைத்து 'மதம் தேவைதானா? ' என்னும் தலைப்பில் மின்புத்தகமாக வெளியிட்டோம். இளவல்,திராவிடர் கழக மாணவரணித்தலைவர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்களும்,உடுமலை அவர்களும் அந்த மின்புத்தகம் வெளிவருவதற்கு பெரிதும் உதவி புரிந்தனர்.


ஏறத்தாழ ஓர் ஆண்டுக்கு முன் தனக்கு புற்று நோய் வந்திருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.மிக அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.உண்மையான,உரமான ஒரு பெரியார் தொண்டராக அந்த நோயை அவர் எதிர்கொண்டார்.டைம்ஸ் ஆப் இந்தியாவில் வரும் ஆங்கிலச்செய்திகளை தமிழில் மொழி பெயர்த்து எனக்கும் மற்றவர்களுக்கும் அனுப்புவார்.நாத்திகக் கருத்து உடைய தெலுங்குக் கட்டுரைகளை மொழி பெயர்த்து எனக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார்.வாட்சப்பில் அழைப்பார்.குரல் எப்போதும் போல கம்பீரமாகவே இருக்கும்.இரண்டு நாட்களுக்கு முன்னால் அவர் அனுப்பிய செய்திக்கு பதிலாக வணக்கம் போட்டு அனுப்பியிருந்தேன்.(நவம்பர் 4)." வணக்கம் எமக்கு வேண்டாம்;வந்தேறிகள் பார்ப்பனர்களை எதிர்த்து நாணேற்றுக " என்று பதிவு இட்டிருந்தார்.இதுதான் அவர் எனக்கு கடைசியாக கொடுத்த செய்தி. எனது இறுதி மூச்சுவரை அதைச்செய்வேன் தோழா..... அவரின் இணையர் அவர்களும் ,மகன் புவனன் அவர்களும் மருமகள் நிலவழகி அவர்களும்,மகள் தமிழரசி அவரின் இணையர் ,அவரின் பேரப்பிள்ளைகள் என அத்தனை பேரும் அவர் மீது அன்பு மழை பொழிந்து ,நோய் வாய்ப்பட்டு இருந்த நேரத்தில் கவனித்துக்கொண்டனர்.


இன்று(7.11.2022) அதிகாலை இயற்கை எய்தினார் என்ற செய்தி கிடைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது.என்னதான் பகுத்தறிவாதியாக இருந்தாலும் அழுகை வந்தது.உறவுகள் இழப்பை விட தோழமைகளின் இழப்பு கண்ணீரை வரவைக்கிறது.வீரவணக்கம்! வீரவணக்கம் தோழரே! 


மதம் தேவைதானா மின் புத்தகத்தில் இருக்கும் சில குறிப்புகள்


நூலாசிரியர் கோரா பற்றி அவரின் துணைவியார்


'கோரா'வின் நடய்ப் பயணம்: 26.4.1952 இல் சென்னய் மயிலாப்பூரில் பிறந்த கோரா என்கிற‌ கோவிந்த ராஜன், 1971இல் பத்திரிகய்த் தகவல் அமய்வனத்தில் தமிழ்த் தட்டச்சராகச் சேர்ந்தார்: 1976இல் சுருக்கெழுத்தராக விஜயவாடாவுக்கு மாற்றப்பட்டார்; அங்கு அலுவலக நேரத்திற்குப் பிறகு, தனக்குத் தானே எந்தப் பயிற்றுநர்களின் உதவியும் இல்லாமல், தெலுங்கு மொழி பேச ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக அதில் முன்னேறினார்.அவரது முன்னேற்றம் மிகுந்த வியப்பிலாழ்த்தியது; தெலுங்கய் எழுத்துக் கூட்டிப் படிக்கவும் எழுதவும் மட்டுமல்லாமல் மொழி பெயர்த்து எழுதவும் ஆரம்பித்தார்; நமது தாய் மொழியான தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார்.அடுத்து, அய்தராபாதுக்கு மாற்றலானார்,அவர், அலுவலகம் மற்றும் எங்கு சென்றாலும் கருப்புச் சட்டய்தான் அணிந்து செல்வார்; தெலுங்குப் பத்திரிகய்யான 'யோஜனா-வில் சார்-ஆசிரியராக பணியாற்றினார்.இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னய்க்கே மாற்றப்பட்டார்.21 வயது வரய் மூடநம்பிக்கய்யில் இருந்த என்னய், அதிலிருந்து வெளியே கொண்டுவர, பத்து ஆண்டுகள் பெரியாரியலய்ப் போதித்து, தந்தய் பெரியாரின் அறிவுரய்களய் எடுத்துக் கூறி, கடவுள் மறுப்பாளராக மாறினேன் (மாற்றினார்); பிள்ளய்களய் அதே போல் வளர்த்து சுய மரியாதய்த்‌ திருமணங்களும் நடத்தி வய்த்தோம்; அவரது விருப்பமான தந்தய் பெரியாரின் சிலய்யினய் வீட்டில் வய்த்தோம்; இனனும் எழத நிறய்ய விடய்யங்கள்   இருந்தாலும், ஒரு பக்க அளவுக்கே எழுதச் சொன்னதால், இத்துடன் முடிக்கிறேன்! 

என்றும் கோராவின் அன்பு துணய்வி (காதலி) வே. ஹேம மாலினி


நூலாசிரியர் கோரா பற்றி அவரின் மகள்


அப்பா... ன்னா  பெரியார் பித்தன்; வெளிப்படை ; சுயமரியாதை; ஏடாகூடம் (இதுதான் சரி இப்படித் தான் செய்யணும் னு சொன்னா கண்டிப்பா ஏறுக்கு மாறாக செய்வதில் வல்லமை பெற்றவர்.) ; நாத்திகம் பேசுவதற்கு அஞ்சாதவர்; அதுவும் மத்திய அரசில் வேலை பார்த்துக்கொண்டு பாப்பானுக்கு எதிரே (Single Man Army) கருப்பு சட்டையில் சிகப்பு நிறத்தில் " NO GOD" னு போட்டு உட்காருவார்.  


எந்த வெயிலிலும் வெப்பத்திலும் நிறம் மாறாத கருஞ்சட்டைக்கு சொந்தக்காரர்.   யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத தன்மானத்தின் எடுத்துக்காட்டு. 


அப்பா கொஞ்சியதில்லை (பேரப் பிள்ளைகள் வரும் வரை )

ஏசியதில்லை, அதிர்ந்து பேசியதில்லை, முறைத்ததில்லை,

சோறு ஊட்டியதில்லை ஆனால் நாத்திகத்தை என்னில் ஊற வைத்த ஊற்று அவர். 


நான், நானாக சுயமரியாதையுடன் வாழ பெரியாரியத்தை புகுத்தாமல், வாழ்க்கை முறையில் சொல்லித்தந்த என் பெரியார் .


என்னை பார்த்தும், என் அப்பாவைப் பார்த்து வியந்தும், என் நண்பர் ஒருவர் பகுத்தறிவுவாதியாக மாறி இன்று தன் மனைவிக்கும்  பிள்ளைகளுக்கும்  பெரியாரையும், நாத்திகத்தையும் கொண்டுசேர்த்து  வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்கிறார் என்று எண்ணும் போது, நான் அப்பா பொண்ணுதான்ப்பா... என்று பெருமையுடன் மார்தட்டி கொள்ளலாம்.


அப்பா அளவுக்கு அறிவும், சொற்களை கையாளும் திறமையும், இல்லனாலும் அப்பாவோட இந்த ,மொழிபெயர்ப்புக்கு தட்டச்சு உள்ளீடு செஞ்சதுல பெருமகிழ்ச்சி எனக்கு. 

அப்பாவுடன் சேர்ந்து நானும் மணக்கிறேன். 😉😇


கோரா. தமிழரசி சோபன்


நூலாசிரியர் கோரா பற்றி அவரின் மகன்

 

அவர்தான் கோரா

வெண்தாடி வைத்தபயிர் பகுத்தறிந்து வளர்ந்தார்

வெண்டூவி வைத்தமயிர் மைதீட்டலை விரும்பார்

வெண்டாவி மடைமைதனை இடித்துரைக்க மரவார்

வெண்சாரைத் துவையலொக்க மனக்கறையைத் துடைப்பார்


கருத்துகளைத் துணிவுடனே எடுத்துரைக்கும் மவ்வம்

கருங்காலி உருதியினால் இலனென்னும் எவ்வம்

கருந்தோலின் உழைப்பதனை பூநூலது தெவ்வும்

கருந்துகிலன் கண்டதுமே திருமண் மண்கவ்வும்

- கோரா புவன்




புத்தகத்திற்குள்  புகுவதுற்கு முன்,

                                 வணக்கம்.

பெரியாரியலை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டவர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையின் மூலம் எனக்கு வியப்பையும் , ஒரு நேர்மறையான அணுகுமுறைக்கான வாழ்க்கை முறையையும் அளித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.அந்த வகையில் சென்னையில் வாழும் திரு.தி.கோரா என்னும் கோவிந்தராசன் அவர்கள் தான் மட்டும் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவராக மற்றும் அல்ல , தனது குடும்பத்தையே பெரியாரியலை ஏற்றுக்கொண்டவர்களாக மாற்றியிருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. எந்த வித சபலங்களுக்கும் ஆளாகாமல் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பீடு நடை போடும் பெரியாரியல் குடும்பம் அவரது குடும்பம்.ர். எனக்கு மதுரையில் கிடைத்த அருமையான நண்பர் திரு.கோரா அவர்கள்.சில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் மத்திய அரசுத்துறையில் , பத்திரிக்கை நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.மத்திய அரசுப்பணியில் இருக்கும்போதே எப்போதும் கருப்புச்சட்டைதான் போட்டிருப்பார்.மத்திய அரசுப்பணி என்பதே பெரும்பாலும் பார்ப்பனர்களை அதிகாரிகளாகக் கொண்டிருக்கும் பணி. அந்தப் பணியில் கருப்புச்சட்டை மட்டுமல்ல, கருப்புச்சட்டையில் கடவுள் இல்லை " NO GOD " என்னும் வாசகம் எழுதிய கருப்புச்சட்டையோடுதான் வலம் வருவார்.



மதுரையில் இருந்து சென்னைக்குப் போய் பணி நிறைவு பெற்றார்.பணியில் இருந்தபோதும் சரி,ஓய்வுக்குப்பின்னும் சரி பெரியாரியல்தான் வாழ்க்கை.பேச்சு,மூச்சு எல்லாம் அய்யா பெரியாரும்,ஆசிரியர் அய்யா வீரமணியும்தான்.இவர் பிறப்பால் தெலுங்கு பேசும் வாய்ப்பு  பெற்றவரல்ல, ஆந்திராவில் வேலை பார்த்தபொழுது தெலுங்கைகத் தானாகக்  கற்றிருக்கிறார்.தெலுங்கினைப் பேசவும் எழுதவும் அதன் மூலம் பயிற்சி பெற்றிருக்கிறார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள நாத்திகர்கள், பகுத்தறிவாதிகள் பல பேரை தெலுங்கு மூலம் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்.


வாழ்க்கையில் சில தவிர்க்க முடியாத நிகழ்வுகள் ஏற்படும்போது தந்தை பெரியாரின் தொண்டர்களைப் பொறுத்த அளவில் அப்படியே இடிந்து உட்கார்ந்து விடுபவர்கள் அல்ல. அதற்கு மாற்றாக தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சொன்னது போல 'தவிர்க்க இயலாததை ஏற்றுக்கொண்டு ' தொடர்ந்து உற்சாகமாக பயணிப்பவர்கள்.சமூகத்திற்கு பயனளிப்பவர்கள்.  



இந்த மின் புத்தகம் கோரா என்னும் கோவிந்தராசன் அவர்கள் தெலுங்கிலிருந்து  தமிழில் மொழி பெயர்த்த தொகுப்புகள். இந்த மொழி பெயர்ப்பில் கவிதைகள் இருக்கின்றன. ஒரு சிறுகதை இருக்கிறது. பல தலைப்புகள் குறித்து கட்டுரைகள் இருக்கிறது.தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இருக்கிறது.எல்லாமே தெலுங்கு இதழ்களில் கடந்த சில மாதங்களாக வெளிவந்தவை.திடீரென உடல் சீர்கெட்டது.படுத்த படுக்கையாகவே நீண்ட நேரம் படுத்திருக்க வேண்டிய சூழல்.அவரது அன்பு இணையர் திருமதி ஹேமா கோரா அவர்கள் மிக நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.தடைகள் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல தந்தை பெரியாரின் தொண்டர்கள்.மாறாக தங்கள் மன உறுதியின் மூலம் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கக்கூடியவர்கள் பெரியார் இயக்கத்தவர்கள் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு திரு.கோரா அவர்கள்.படுத்த படுக்கையாக இருந்தாலும் தொடர்ச்சியாக தெலுங்கில் இருந்து  மொழி பெயர்த்து அதனை தனது மகள் தமிழரசியிடம் தட்டச்சு செய்யச் சொல்லி, அதனை வாட்சப்பில் எனக்கு  அனுப்பிக்கொண்டிருக்கிறார். பல நாட்களாக எனக்கு வந்த பின்பு இதனை ஒரு தொகுப்பாக ,புத்தகமாக ஆக்கினால் என்ன ? என்னும் கேள்வி பிறந்தது. அருமைத்தோழர் பிரின்சு என்னாரசு பெரியார் அவர்களிடம் அந்தக் கேள்வியைப் பகிர்ந்து கொண்டபோது அவரும், பெரியார் திடல் தோழர் எழுத்தாளர் உடுமலை அவர்களும் உற்சாகமாக மின் புத்தகமாக இதனைக் கொண்டுவரலாம் என்று உற்சாகம் அளித்தனர்.அதன் விளைவாக இந்த மின் புத்தகம் தங்கள் கைகளில்........


பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் என்ற வகையில் இவரது மொழிபெயர்ப்புகள் மிகப்பெரிய மகிழ்ச்சியை எங்களுக்கு கொடுக்கின்றன.தான் யாருடைய கட்டுரையை,கருத்தை மொழியாக்கம் செய்கின்றேன் என்பதனை கட்டுரையின் துவக்கத்திலேயே மொழி பெயர்ப்பாளர் கோரா அவர்கள் கொடுத்து விடுகின்றார். இடை இடையே தனது கருத்துக்களை அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கின்றார்.புத்தகத்தை அச்சிடாமல ,அதே நேரத்தில் விரும்புகிறவர்கள் படிக்கும் வண்ணம் இந்த மின் புத்தகம் என்னும் ஆக்கம் அமைந்திருக்கிறது.இந்த நூற்றாண்டின் கணினியால் வந்த விளைச்சல் இது. படித்து தாங்களும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கலாம்.


                                                                                                                                                                        அன்புடன்

                                                                                                                                                                        வா.நேரு,11.08.2019 




 



 


Sunday 6 November 2022

கனடா நாட்டு சுற்றுப்பயணம்.(1)

 


சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தாம்பரம் மாவட்டத்தலைவர் அய்யா ப.முத்தையன்,பொறுப்பாளர் மோகன்ராஜ்,பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர் அய்யா நாத்திகன்,கழகச்சொற்பொழிவாளர் காரைக்குடி தி.என்னாரெசு பிராட்லா,பெரியார் திடல்-மாநில இளைஞரணி பொறுப்பாளர் சோ.சுரேசுஅன்புச்செல்வன்,வலைக்காட்சி தோழர்கள் அன்பரசன்,மகேசு உள்ளிட்ட தோழர்களோடு ,

கனடா மாநாட்டிற்கு பயணம் சென்ற 16 தோழர்களும் அய்யா ப.முத்தையன் அணிவித்த பொன்னாடைகளோடு..



Thursday 20 October 2022

திராவிடப்பொழில் (ஜீலை-செப்டம்பர் 2022) இதழின் ஆய்வுக்கூட்டம்....




பெரியார் பன்னாட்டு அமைப்பு ,தந்தை பெரியாரின் கொள்கைகளை ,தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலோடு உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகின்றது.பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்கா சார்பாக திராவிடப்பொழில் (ஜீலை-செப்டம்பர் 2022) இதழின் ஆய்வுக்கூட்டம் 22.10.2022 சனிக்கிழமை இந்திய நேரம் இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.தோழர்.கோதை ஜெயராஜ் அவர்கள் நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்கின்றார். தமிழ் ஆய்வாளர்,தமிழ் உலகம் நன்றாக அறிந்த,மதிப்பிற்குரிய முனைவர் சுபாஷினி அவர்களின் கட்டுரையை அமெரிக்காவில் இருக்கும் எழுத்தாளர்,சிறந்த பேச்சாளர் தோழர்.ஜெயமாறன் அவர்கள் பேச இருக்கின்றார்.சொ.நே.அன்புமணி கல்வி பற்றிய எழுதிய கட்டுரையைப் பற்றி பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் பேச இருக்கின்றார். இளைஞர்களைத் தட்டிக் கொடுத்துப் பாரட்டி,அவர்களைத் தன் அன்பாலும் அணுகுமுறையாலும் ஈர்ப்பதில் வல்லவர் அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள்.அவரின் உரையும் இருக்கிறது. திராவிடர் கழகத்தின் பொருளாளர் அண்ணன் மானமிகு வீ.குமரேசன் அவர்கள் நன்றியுரை ஆற்றவும், ஏற்புரையை கட்டுரையாளர்கள் முனைவர் சுபாஷினி அவர்களும்,சொ.நே.அன்புமணியும் கொடுக்க இருக்கின்றார்கள். வாருங்கள் நண்பர்களே,தோழர்களே...உங்கள் வருகையால் நிகழ்வு இன்னும் சிறக்கட்டும்...

Tuesday 18 October 2022

தேரியாயணம் நாவல்.... நூல் மதிப்புரை

 








நன்றி : வல்லினச்சிறகுகள் செப்டம்பர் 2022


வல்லினச்சிறகுகள் இதழை முழுமையாகப் படிக்க,இதழில் என் கட்டுரையைப் படிக்க கீழே சொடுக்குங்கள்











Monday 10 October 2022

சொ.நே.அறிவுமதியின் 'ஆழினி 'நகைச்சுவை நாவல் அட்லண்டா நகரில் வெளியீடு

எனது மகள் சொ.நே.அறிவுமதியின் 'ஆழினி 'நகைச்சுவை நாவல் அமெரிக்காவில் உள்ள அட்லண்டா நகரில் நேற்று 9.10.2022 அன்று திருமிகு.முனைவர் வெ.உதயகுமார் அவர்கள் வெளியிட திருமிகு.கண்ணப்பன் அவர்கள் பெற்றுக்கொண்டிருக்கிறார். வல்லினச்சிறகுகள்-மின் இதழின் நிறுவனர்,கவிஞர் தோழர் அகன் அவர்கள் நூலைப்பற்றி அறிமுகப்படுத்துகிறார்.ஒரு மாணவியின் முதல் நாவல் என்பதற்காக மிகுந்த அக்கறை எடுத்து ,அயல்நாட்டிற்கு நூலைச்சுமந்து சென்று வெளியீடும் நடத்தியிருக்கும் அன்புத்தோழர் அகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் வணக்கங்களும். வல்லினச்சிறகுகள் இதழின் ஆசிரியர் எழுத்தாளர் இராஜி இராமச்சந்திரன்,அமெரிக்காவில் இருக்கும் மதுரையின் மாபெரும் சொத்து,தன் பேச்சால் கேட்கும் எவரையும் கட்டிப்போடும் ஆற்றல் வாய்ந்த சொற்பெருக்காளர், பன்முக ஆற்றலாளர்,எழுத்தாளர் ஜெயாமாறன்,புதுக்கோட்டை கவிஞர்  கிரேஸ் பிரதிபா,கலந்து கொண்டு முக நூலில் பகிர்ந்த திருமிகு.சுவாமிநாதன் என நம் இலக்கியச்சொந்தங்கள் எல்லாம் இணைந்து நடத்திய விழாவில் அறிவுமதியின் நாவலும் வெளியிடப்பட்டிருக்கிறது. நிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் நன்றியும் மகிழ்ச்சியும்...வா.நேரு. 

https://m.facebook.com/groups/atlantatamilmakkal/permalink/5466670756779449/?mibextid=fBA1Bh 









Saturday 8 October 2022

சிவப்பு நிறத் திரவம்....சிறுகதை....வா.நேரு

                                        சிவப்பு நிறத் திரவம்....சிறுகதை

                                          (வா.நேரு)


திருவனந்தபுரம் வியப்பை ஊட்டும் ஊராக இருந்தது. மேடும் பள்ளமுமாய் இருக்கும் சாலைகள்,எவ்வளவு மழை பெய்தாலும் சாலையில் தேங்கி நிற்காமல் கண நேரத்தில் ஓடி விடும் மழை நீர்.தமிழில் நாம் பேசினாலும் அவர்கள் அதனைப் புரிந்து கொண்டு ,கடைகளில் பொருட்களை எடுத்துக்கொடுக்கும் நேர்த்தி என குமணனுக்கு வியப்பாகவே இருந்தது. இன்றோடு திருவனந்தபுரத்திற்கு வந்து ஐந்து நாட்கள் ஆகியிருந்தது.திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் பாதையில் குமணன் பயிற்சி எடுக்கும் அந்தப் பொதுத்துறை நிறுவனத்தின் பயிற்சி நிலையம் இருந்தது.குமணனோடு அவனது ஊரைச்சார்ந்த மூன்று அதிகாரிகளும் அந்தப் பயிற்சி நிலையத்திற்கு வந்திருந்தனர்.


பயிற்சி நிலையத்தில் ஒரே அறையில் தங்கியிருந்த நால்வரும், காலையில் பயிற்சி,இரவில் மறு நாள் பயிற்சிக்கான சில வேலைகள் என்று தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருந்தது.அன்று சனிக்கிழமை மாலை. மறு நாள் விடுமுறை. இன்னும் ஒரு சில நாளில் பயிற்சி முடிவடைய இருந்த நிலையில் இரவு உணவுக்கு முன் அறையில் கூடியிருந்தனர். குமணினின் நண்பன் நடராஜன் மெல்ல ஒரு பையில் இருந்த அந்தப் பாட்டிலை எடுத்து வெளியில் வைத்தான். நாம் இந்த நாளை இனிமையாகக் கொண்டாடப்போகிறோம். இதனைச்சாப்பிட்டு விட்டு இரவு சாப்பாட்டிற்கு போகலாம் என்று சொல்லிவிட்டு , நாலு கண்ணாடிக் குவளைகளில் அந்த மதுவை பாதி,பாதியாய் ஊற்றினான்.

அவன் ஊற்றுவதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த குமணன் அந்த இடத்தை விட்டு வெளியில் செல்ல நினைத்து எழுந்தான்.

குமணன் கையைப் பிடித்த நடராசன்'உட்காருங்கள்: நண்பரே,இது வெறுமனே ஒரு நட்பின் பரிமாற்றம். கொஞ்சமாகக் கூட குடியுங்கள்.தப்பில்லை.வெளியில் போகவேண்டாம்' என்றான்.

குமணன் ' இல்லை நடராசன்,எனக்கு இது பிடிக்காது,நீங்களும் குடிக்கக் கூடாது என்று விரும்புவன் நான் .இந்தப் பழக்கம் கொடுமையானது " என்ற போது

கடகடவென சிரித்த் நடராசன் ' என்னங்க, சின்னப் பிள்ளைகள் எல்லாம் குடிக்கிறது. நீங்க முக நூலில் எல்லாம் பார்ப்பது இல்லையா ,இவ்வளவு வயதாகிறது,குடிப்பது பிடிக்காது,குடிக்க மாட்டேன்  என்று சொல்கிறீர்கள் " என்றான்.

அந்தப் பக்கம் உட்கார்ந்திருந்த குரு ,சிறிய புன்னகையோடு ' மாமா,இதுவெல்லாம் ஒரு உணவுப் பழக்கம் மாமா,பழகாத வரைக்கும் ஒரு மாதிரியா இருக்கும்,பழகிவிட்டால் உங்களுக்கே கொஞ்ச நேரம் அப்படியே ஆகாயத்தில் பறப்பது போல் இருக்கும். நாற்பது வயதாகிறது உங்களுக்கு,இந்த ஊரில் ய நமக்குத் தெரிந்தவர்கள்.யாரும் கிடையாது. நம்மைக் கண்காணிப்பவர்கள் யாரும் இல்லை.நாம் தான் இங்கு இராஜா,கொஞ்சமாக கம்பெனி கொடுங்கள் ,வாங்க ' என்றான்.


பேசாமல் இருந்த குமணன் மனதிற்குள் தன்னுடைய இளமைக் கால நண்பன் இராமசாமி நினைவு ஓடியது.


குமணனோடு 1- ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உடன் படித்த நண்பன் இராமசாமி.எப்போதும் துறு துறுவென இருப்பான். 6-ம் வகுப்பு படிக்கும்போது கபடி விளையாட்டு விளையாட ஆரம்பித்தான்.

அவன் கபடிக் கபடி என்று பாடி வருவதே அழகாக இருக்கும். குமணன் பாடிப்போனால் இரண்டு நிமிடத்திற்கு மேல் பாட முடியாது. 'கபடி,கபடி ' எனப் பாடி ஓடு வருவதிலேயே குறியாக இருப்பான். இராமசாமி அப்படி இல்லை. 5பல நிமிடங்கள் நிறுத்தி கபடி,கபடி எனப் பாடிக்கொண்டே இருப்பான். எதிர்தரப்பினர் நிற்கும் மைதானத்திற்குள் நின்று கபடி கபடி எனப்பாடிக்கொண்டே இருப்பான். சுற்றி சுற்றிப் பார்த்து அவன் பாடும் விதமும், ஏறிப் பிடிக்க வருபவர்களை தொட்டு விட்டு அவன் நடுக் கோட்டை வந்து தொடுவதும் மிக வியப்பூட்டவதாக இருக்கும்.

அப்படித்தான் ஒருமுறை குமணன் இராமசாமிக்கு எதிர் தரப்பில் இருந்தான். இராமசாமி பாடி வரும்போது எப்படியும் பிடித்து அமுக்கி விடவேண்டும் என்னும் ஆசை இருந்தது குமணனுக்கு.பககத்த்ல் இருப்பவர்களிடம் சொல்லி இருந்தான் குமணன். கபடி,கபடி எனப் பாடி வந்த இராமசாமியை வளைத்துப் பிடிக்க நெருங்கி வரும்போது, கபடி கபடி எனப் பாடிக்கொண்டே ஒரு காலை தரையில் நன்றாக அழுத்தி வைத்துக்கொண்ட இராமசாமி,இன்னொரு காலால் குமணினின் நெஞ்சுக்கு மேலே கழுத்தை ஒட்டி காலால் எத்தினான். பிடிக்க வந்த குமணனன், கழுதை உதைத்தது போல இராமசாமி உதைத்த உதையால் கீழே விழுந்து விட்டான். கபடி,கபடி எனப் பாடிப்போய் ,கோட்டைத் தொட்ட இராமசாமி,மறுபடியும் குமணன் விழுந்த இடத்திற்கு ஓடி வந்தான். அதற்குள் எழுந்து விட்ட குமணன், பக்கத்தில் வந்த இராமசாமியை அடிக்க கபடி விளையாட்டு கொஞ்சம் களவரமாகி விட்டது.


இப்படித்தான் இராமசாமி அபாரமான விளையாட்டுத் திறமை உள்ளவனாக இருந்தான். கபடி விளையாட்டில் மண்டல அளவில் நடந்த போட்டியில் குமணன் படித்த அரசுப்பள்ளிக்கே முதல் பரிசு கிடைத்தது.அதற்கு முழுமுதற்காரணம் இராமசாமிதான். குமணன் மற்றும் பலர் அந்த அணியில் இருந்தாலும் அனைவரும் இராமசாமியால் தான் போட்டியில் வெற்றி பெற்றோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.

பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து குமணன் வெற்றி பெற்றிருந்தான். இராமசாமி குறைவாக  மதிப்பெண் எடுத்திருந்தான். இரண்டு பேரும் பக்கத்து ஊரில் இருக்கும் மேல் நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர்ந்தனர். அங்கு சேர்ந்த இராமசாமியை அந்தப் பள்ளி மிக நன்றாகப் பயன்படுத்தியது. மாநில அளவில் நடைபெற்ற கபடி போட்டிகளில் எல்லாம் அந்தப் பள்ளி வெற்றி பெற்று கோப்பைகளை வாங்கி வந்தது.அதற்கு முக்கியமான காரணமாக இராமசாமி இருந்தான்.குமணன் படித்த பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமல்ல அந்த வட்டார அளவில் படித்தவர்கள் அனைவருக்கும் இராமசாமியைத் தெரிந்திருந்தது கபடி விளையாட்டால்.


அன்றைக்கு குமணனும் ,இராமசாமியும் ஊரில் இருந்து கொண்டு வந்திருந்த மதியச்சாப்பாட்டை சாப்பிட போகும் நேரத்தில்தான் அந்தப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் பாரி இராமசாமியை அழைத்தார். குமணனும் உடன் சென்றான். இராமசாமியிடம் ஆசிரியர் பாரி ' இராமசாமி,உன்னை மாதிரி கபடி விளையாடுகிற ஒரு கபடி ஆட்டக்காரனை என்னுடைய 30 வருட ஆசிரியர் அனுபவத்தில் பார்த்ததில்லை.அவ்வளவு அருமையாக விளையாடுகிறாய்.இந்த 12-ஆம் வகுப்பில் மட்டும் தேர்ச்சி ஆகிவிடு. தேர்ச்சி ஆகிவிட்டால்,விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு கல்லூரியில் சேர். கல்லூரியில் நீ விளையாடி பல்கலைக்கழக விளையாட்டு வீரராகி விடுவாய். தமிழ் நாடு, அகில இந்திய அளவில் கூட கபடி விளையாட்டில் தேர்வு ஆகுவதற்கான வாய்ப்பு உண்டு " என்று பாரட்டி சில கல்லூரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டார்.


மேல் நிலைப்பள்ளி வந்து இரண்டு மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருந்தது.பாடங்கள் மிகவும் கடினமாக இருந்தன குமணனுக்கே.இராமசாமிக்கு ஆங்கிலப்பாடம்தான் மிகக் கடினமாக இருந்தது. 10-ஆம் வகுப்பில் நூற்றுக்கு 35 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றிருந்தான். 12-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெற வேண்டும் என்னும் கவலை குமணனுக்கு இருந்தது. தான் செல்லும் கல்லூரிக்கே இராமசாமியையும் அழைத்துச்செல்லவேண்டும் என்று குமணன் நினைத்திருந்தான். விளையாட்டுக்கும்,படிப்புக்கும் முன்னுரிமை கொடுக்கும் சில கல்லூரிகளைப் பற்றிய விவரங்களை எல்லாம் குமணன் சேர்த்து வைத்திருந்தான்.


12-ம் வகுப்பு தேர்வு முடிவு வந்தபோது, குமணன் வெற்றி பெற்றிருந்தான். ஆனால் அவன் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. இராமசாமி ஆங்கிலப்பாடத்தில் 3 மதிப்பெண்கள் குறைவாக எடுத்து தோல்வி அடைந்திருந்தான். இராமசாமியின் வீட்டிற்குச்சென்ற குமணன் அவனுக்கு ஆறுதல் கூறினான். 'வெற்றி,தோல்வி எல்லாம் விளையாட்டு வீரனுக்கு மிக இயல்பானதுதானே ' என்றெல்லாம் இராமசாமியிடம் சொல்லிப்பார்த்தான் குமணன். ஆனால் இராமசாமி மிக இறுக்கமாக இருந்தான். தொடர்ந்து பல கல்லூரிகளுக்கு விண்ணப்பம் போட்டிருந்த நிலையில் ஒரு கல்லூரியில்,தூரம் அதிகம் இருந்தாலும் குமணன் கேட்ட பாடப்பிரிவு கிடைத்தது. குமணன் போய்ச்சேர்ந்து பாடம்,படிப்பு என்று போய் விட்டான்.


முதலாம் ஆண்டு முடித்து,விடுமுறையில் இருந்தபோது, இராமசாமி மீண்டும் 12-ம் வகுப்பு ஆங்கிலப்பாடம் மட்டும் மறுபடியும் எழுதியிருந்தேன். குமணன் ஊரில் இருந்தபொழுதுதான் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்திருந்தது. மாலை முரசில் பார்த்தபொழுது இந்தமுறையும் இராமசாமியின் எண்ணைக் காணோம். மறுபடியும் தோல்வி.குமணன் மறுபடியும் இராமசாமியிடம் தேர்வு எழுதச்சொன்னபோது ,பார்ப்போம், நான் விவசாயத்தை முழுமையாகப் பார்க்கப்போகிறேன் என்றான்.


7,8 ஆண்டுகள் கழித்து ஒரு திருமண வீட்டில் இராமசாமியைச்சந்தித்தான் குமணன். திருமணத்திற்கு முந்தைய இரவு. நண்பர்களுக்கு விருந்து என்று திருமணம் முடிக்கப்போகும் மணமகன் அழைத்திருந்தான். பள்ளித்தோழன் என்ற முறையில் குமணன் போயிருந்தான். இராமசாமியும் வந்திருந்தான். அன்றுதான் இராமசாமி குடிப்பதைக் குமணன் பார்த்தான்.'என்ன இராமசாமி,இதை எப்பப் பழகின...விளையாட்டு வீரனடா நீ ' என்ற போது 'பழசய,பேசிக்கிட்டிக்கிட்டு இருக்காதே 'என்றான் குமணன்


பல ஆண்டுகள் கழித்து தனது சொந்த ஊருக்குச்சென்ற குமணன், தன்னுடைய செவக்காட்டிற்குப் போவதற்காக அதிகாலையில் கிளம்பினான். காலையில் செவக்காட்டிற்குப் போவது என்பது குமணனுக்கு மிகவும் பிடித்தது.புளிய மரங்கள் அடர்த்தியாக இருக்கும் அந்தச்சாலையில் காலையில் 6 மணி அளவில் சென்றபோது , ஒரு மரத்திற்குக் கீழ் இராமசாமியைப் பார்த்த குமணன் திடிக்கிட்டான். கண்கள் எல்லாம் சிவந்து, கையில் மதுக்குப்பியோடு அதிகாலையில்; பார்த்த குமணன் அரண்டு போனான்.

'என்னடா, இராமசாமி இந்த நேரத்தில் கையில் மதுக்குப்பியோடு ' என்றபோது

அமைதியாக குமணனை உற்றுப்பார்த்த இராமசாமி' குமணனா,நீ எப்படா வந்த...' என்று மெல்லியதாக விசும்பதுபோலக் கேட்டபோது குமணனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

'குமணா,போட்டது சரியா விளையல,கடன் இருக்கு, எனக்கு சாராயம் இல்லாமல் இருக்க முடியலடா, இராத்திரி,பகல் எப்ப என்றாலும் திரும்பத் திரும்ப குடிக்கணும் போல இருக்கு ' என்ற போது,

அவனையும் அழைத்துக்கொண்டு அவனுடைய வீட்டிற்குப் போனான் குமணன்.

குமணினிடம் இராமசாமியின் மனைவி ஒரு பாட்டம் பாடி முடித்தாள் ' நல்லாத்தானே இருந்தாரு, எப்ப இந்தச்சாராயத்தைக் குடிச்சு பழகுனாரா,இப்படி ஆயிட்டாரு...' என்று அழுது அழுது தன்னுடைய வேதனைகளை எல்லாம் குமணனிடம் கொட்டித்தீர்த்தாள்.

இராமசாமியின் 5 வயது மகள் குமணனின் பக்கத்தில் வந்து நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் "குடுச்சுப்போட்டு வந்து அம்மாவை அப்பா அடிக்கிறாரு " என்றாள் அந்த சின்னப்பெண் குமணனிடம்...


குடிப்பழக்கத்தை விடுவதற்கு மருத்துவமனையில் சேர்க்கலாம் என்று சொல்லி ஒரு மருத்துவமனையில் சேர்த்து விடுவதற்கும் ஏற்பாடு செய்துவிட்டு மீண்டும் தான் வேலை பார்க்கும் ஊருக்குத் திரும்பிவிட்டான் குமணன்.

சில மாதங்கள் கழித்து ஊருக்குப் போனபோது இராமசாமியின் வீட்டிற்குப் போனான் குமணன். 'அந்த மருத்துவ மனைக்கு போய் விட்டு வந்து ஒரு மாதம் குடிக்காமல் இருந்ததாகவும், இப்போது மீண்டும் குடிக்க ஆரம்பித்து விட்டார் ' என்றும் சொல்லி 'காலையில் வீட்டை விட்டுப்போனார்,இன்னும் காணவில்லை ' என்று சொன்னபோது நேரத்தைப் பார்த்தான் குமணன். காலை 11 மணி.இதுவரை வீட்டில் சாப்பிடாமல் எங்கு குடித்து விட்டு படுத்துக்கிடக்கிறாரோ என்று சொன்னபோது இராமசாமியைத் தேடிப்போனான் குமணன்.


ஊரின் தெற்குப் புறத்தில் இருந்த அந்தக் கோயிலுக்கருகில் படுத்துக்கிடந்த இராமசாமியைப் பார்த்தபொழுது, நல்ல குடிபோதையில் இருந்தாலும் குமணனைக் கண்டு கொண்டான் இராமசாமி. 'மாப்ள,எல்லாம் முடிஞ்சு போச்சு. சாராயம்தான் இப்போ சாப்பாடு. இன்னும் கொஞ்ச நாளில் நான் செத்துப்போவேன். சொல்லி விடுவாங்க...முடிஞ்சா வந்து விட்டுப் போ ' என்றதும் தூக்கி வாரிப்போட்டது குமணனுக்கு.எப்படி இவனை பழைய நிலைமைக்கு கொண்டுவருவது என்று விழித்தான் குமணன்.


ஆறு மாதத்தில் அதே மாதிரி இராமசாமி செத்துப்போனான் என்று செய்தி வந்த போது ,சொல்லண்ணாத்துயரம் நெஞ்சை அடைத்தது. அவனது இறுதி ஊர்வலத்தில் நடந்தபோது ,அவனது கபடி விளையாட்டும் திறனும் மீண்டும் மீண்டும் கண்ணுக்குள் வந்து கொண்டே இருந்தது.


சிந்தனையில் இருந்த குமணனை நடராசனின் குரல் கலைத்தது. " நாங்கள் இரண்டு குவளை குடித்து முடித்து விட்டோம்.நீங்களும் வாருங்கள் என்றால் ஏதோ பித்துப்பிடித்தது போல அமர்ந்திருக்கிறீர்களே ' என்று நடராசன் சொன்ன போது மவுனமாக அவர்களைப் பார்த்த குமணன்,

'நீங்கள் கண்ணாடிக் குவளைக்குள் ஊற்றி வைத்திருக்கிற அந்த சிவப்பு நிறத் திரவம், எனது நண்பன் இராமசாமியின் இரத்தமாகவே எனக்குத் தோன்றுகிறது. நான் எங்கே இருந்தாலும் என்னால் குடிக்க இயலாது ' என்று சொல்லிக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தான் குமணன்

Sunday 2 October 2022

சிந்தனை : இந்திய மொழிகளில் தந்தை பெரியார் சிந்தனைகள்! முனைவர் வா. நேரு

எல்லோருக்கும் எல்லாம்’ என்னும் தந்தை பெரியாரின் தத்துவம் தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் பேசப்படுகிறது. தந்தை பெரியாரின் தேவை இன்று உலகம் முழுவதும் உணரப்படுகிறது, அதிலும் மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
அண்மையில் எனது சொந்த வேலை காரணமாக திருவனந்தபுரம் சென்று இருந்த போது திருவனந்தபுரம் ஸ்டேச்சு பகுதியில் உள்ள ஸ்பென்சர் சந்திப்பில் உள்ள மைத்திரி புத்தக நிலையம் சென்று இருந்தேன். அந்தப் புத்தகக் கடை நிறையப் புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடையின் ஒரு பகுதியில் ‘பெரியார் கார்னர்’ என்னும் பெயர்ப் பலகை தொங்கியது.





‘பெரியார் கார்னர்’ பகுதியில் நின்று பார்த் தால் அந்தப் பகுதி முழுவதும் மலை-யாள மொழியில் பெயர்க்கப்பட்ட தந்தை பெரியாரின் புத்தகங்கள் இருந்தன. அங்கு தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் என்னும் நூல் மலையாள மொழியில் வரவேற்றது.
அதைப்போல வைக்கம் சத்தியாகிரகம், இந்து மதமும் திராவிடமும், பெரியாரின் ஒளி முத்துக்கள், ராமாயணம் ஒரு கட்டுக்கதை, மனுஸ்மிருதி பற்றி பெரியாரின் சிந்தனைகள், ஜாதி ஒழிப்பின் அவசியம், பகுத்தறிவு, பெண் ஏன் அடிமையானாள்?, இந்தி இணைப்பு மொழியா?, மதமும் மனிதனும், இந்து விழாக்கள், இனிவரும் உலகம், சுயமரியாதைத் திருமணம், தந்தை பெரியாரின் சுயசரிதை, புராணம் ஒரு கட்டுக்கதை போன்ற பல நூல்கள் மலையாள மொழியில் பெயர்க்கப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும், பேரறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதிய அர்த்தமற்ற இந்து மதம் போன்ற நூல்களும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெரியார் கார்னரில் வைக்கப்பட்டிருந்தன.


இதைத் தவிர self respect movement in Tamilnadu, Periyar and Ambedkar, collected works of Periyar, On nationalism by Periyar E V R, Men and religion, Social revolution or social reform by Periyar E.V.Ramasamy போன்ற ஆங்கில நூல்களும் பெரியார் கார்னரில் வைக்கப்பட்டிருந்தன.
தந்தை பெரியாரின் புத்தகங்களை எல்லாம் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அனுமதி பெற்று மலையாளத்தில் மொழி பெயர்த்திருக்கின்றார்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும் என்று மைத்திரி நூலக உரிமையாளர் திரு. லால் சலாம் அவர்களைப் பாராட்டிவிட்டு தந்தை பெரியாரின் புத்தகங்கள் எல்லாம் எப்படி கேரளாவில் விற்பனையாகின்றன எனக் கேட்டேன். “மிக நன்றாக இருக்கிறது; எப்போதும் என் கடையில் அதிகமாக விற்பனையாவது தந்தை பெரியாரின் புத்தகங்களும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புத்தகங்களும்தாம்’’ என்றார்.

தந்தை பெரியாரின் 143ஆம் பிறந்த நாளை ‘சமூக நீதி’ நாள் என அறிவித்து, ‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ என்று தமிழர் தலைவர் அவர்களால் பாராட்டப்பட்ட தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் 21 மொழிகளில் தந்தை பெரியாரின் நூல்கள், கருத்துகள் மொழிபெயர்க்கப்படும் என்று அறிவித்தார்கள். 21 மொழிகளில் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் மூலமாகப் பரப்பப்படும் தந்தை பெரியாரின் நூல்களைப் போன்றே தந்தை பெரியாரின் கருத்துகளை அதன் தேவையை உணர்ந்த பல்வேறு மொழிகளைச் சார்ந்த தோழர்கள் ஜாதி ஒழிய வேண்டும் என்று நினைக்கும் சமத்துவ சிந்தனை உடையோர் பல மொழிகளில் தந்தை பெரியாருடைய கருத்துகளைக் கொண்டு செல்கிறார்கள். அண்மையில் சத்ய நாராயணா, ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., அய்தராபாத் அவர்கள் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் மொழிபெயர்த்திருக்கிறார்.
இன்னும் நமக்குத் தெரியாமலும்கூடப் பல்வேறு மொழிகளில் ஊடகங்கள் வழியாக தந்தை பெரியாருடைய கருத்துகள் போய்க் கொண்டிருக்கின்றன.
என்றாலும், இவையெல்லாம் தொடக்கமே! இன்றைய இந்திய அரசியல் நெருக்கடியில் பெரியார் கொள்கைகள் பெருமளவில இந்தியா முழுமையும் கொண்டு சேர்க்க வேண்டியது கட்டாயமாகும்.


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் செப்டம்பர் 16-30

Saturday 1 October 2022

மீண்டும் மீண்டும் உன்னைச்சுடுகிறார்கள்...

 அன்பிற்கினிய காந்தியே...

ஆத்மா எனும்

சொல்லில் எனக்கு

உடன்பாடில்லை 

ஆதலால் 

மகாத்மா என்னும் சொல்லால்

உன்னை நான் அழைப்பதில்லை...


ஆனால்... காந்தியாரே...

நீங்கள் ஒரு மகத்தான மனிதர்

என்பதில் எனக்கு எந்தவித

மாற்றுக்கருத்தும் இல்லை....


கொள்கையில் முரண்பட்ட

அண்ணலும் அய்யாவும் கூட

தனிமனிதராய் உங்களுக்குத் 

தந்திட்ட மரியாதையும்

மதிப்பும் மிக அதிகம்...


நீ இறந்தும் கூட

75 ஆண்டுகள் ஆகப்போகிறது...

உன்னைக் கொன்றவர்களின்

கூட்டாளிகள்தான் 

இன்றைக்கு ஆட்சிக்கட்டிலில்...


உந்தன் பெயரில் இருக்கும்

நிறுவனங்களில் கூட

கோட்சேகளின் வாரிசுகள்தான்

கோலோச்சுகிறார்கள்...


கோட்சேகளின் வாரிசுகள்

மீண்டும் மீண்டும்

சுடுகிறார்கள் உங்களை...

உங்கள் பெயரில் இருக்கும்

பள்ளிகளில் படித்தவர்கள்கூட

வெறுப்பினை அள்ளிக் கொட்டுகிறார்கள்...


இரத்த வெறி பிடித்து

அலைகிறார்கள்

சனாதனத்தை மீண்டும்

அமைத்தே தீருவோம்

அதற்கு இடைஞ்சலாக இருக்கும்

அரசியல் சட்டத்தை 

மாற்றி அமைப்போம் 

எனக் கொக்கரிக்கிறார்கள்...


இல்லாத கடவுளைக் 

காலமெல்லாம் 

கட்டிக்கொண்டு அழுத

காரணத்தாலோ என்னவோ

நீ கூறிய இராம் இராம்

பெயரைச்சொல்லியே

மீண்டும் மீண்டும் 

உன்னைச்சுடுகிறார்கள்...


உன்னைக் கொன்ற

சித்பவன் பார்ப்பான்

கோட்சேவுக்கு சிலைவைத்துக்

கொண்டாடுகிறார்கள்...

கோளாறு வயப்பட்ட 

சில மாமிகள்

கோட்சே புகழ் பாடுகிறார்கள்...


மதத்தால் மனிதர்கள்

மாற்றி மாற்றி 

வெட்டி சாய்த்து 

குருதி ஓடிய மண்ணில்

நடந்து சென்ற காந்தியே!

அப்போது கூட இந்த மதங்கள்

மனிதர்களுக்குத் தேவைதானா

எனும் கேள்வி 

எழவில்லையா தங்களுக்கு...


பிணங்களால் நிரப்பப்பட்ட

இரயில் பெட்டிகள்

வந்து சேர்ந்து நேரத்திலும்...

இழவைக் கூட்டுவதுதான்

இந்த மதங்கள் என்னும்

நினைப்பு வரவில்லையா தங்களுக்கு...


அடுத்த மதத்துக்காரனின்

பெண்களை வன்புணர்வு

செய்வதே

பழி தீர்க்கும் படலம் என

அவனவன் அவனவனின்

கடவுளின் பெயரால்

செய்த கயமைகள் 

கண்ட போதும் காந்தியே...

கடவுள்களின் கையாலாகாமை

புலப்படவில்லையா தங்களுக்கு...


எத்தனை பரிசோதனைகள்

செய்தாய் உன் வாழ்க்கையில்...

கடவுள் என்று ஒருவன்

இருக்கிறானா? என்னும் கேள்வியோடு

எந்த சோதனையும் நீ 

செய்ததாக எனக்கு நினைவில்லை..


சத்திய சோதனை எழுதிய

தாங்கள்

நான் உணர்ந்த அளவில்

நிகழும் நிகழ்வுகளால்

கடவுள் என்று ஒருவன் இல்லை

இல்லவே இல்லை

என உரக்கக் கூறி இருந்தால்

ஒருவேளை இந்தியா

உருப்பட்டிருக்க வழி பிறந்திருக்குமோ!..


                          வா.நேரு,

                          02.10,.2022.

Saturday 10 September 2022

சொல்லவேண்டிய நாளிது...

                                   



விலங்குகள் எதுவும்

தங்களைத் தாங்களே

மாய்த்துக்கொள்வதில்லை...


இயற்கையாகவோ

இன்னொருவரால் 

செயற்கையாகவோ

உயிர் இழக்கும்வரை 

ஓடித் திரிந்து

உற்சாகமாய் விலங்குகள்

மண்ணில் வாழ்கின்றன...


உலகில் உள்ள பொருட்கள்

அனைத்தையும்

அடித்துச்சுருட்டி

அள்ளி வைத்துக்கொண்டு

உலகத்தின் பணக்கார

மிருகம் நான்தான் என்று

எந்த மிருகமும்

அறிவித்துக்கொள்வதில்லை..

அப்படிப்பட்ட மனநிலை

எந்த விலங்குக்கும்

இருப்பதாகத் தெரியவில்லை...


தினம் தினமும் 

குடித்துக் குடித்து

கொஞ்சம் கொஞ்சமாய்

தற்கொலைக்குத் தயாராகும்

அபத்தங்கள் எதுவும் 

விலங்குகளிடம் இல்லை...


மனிதர்கள் ஏன்

தங்களைத் தாங்களே 

மாய்த்துக்கொள்கிறார்கள்?..

உளவியலும் அறிவியலும்

உச்சகட்டத்தில் இருக்கும்

இந்தக் கணினி யுகத்தில்தான்

தாறுமாறான தற்கொலைகளும்

நம் கண்முன்னால் ...


எனக்கு என் குடும்பத்திற்கு என

அலைந்து திரிந்து 

சேர்த்துவைத்த பலரும்கூட

சொல்லாமல் கொள்ளாமல்

பட்டென்று முடித்துக்கொள்கிறார்கள்

தங்கள் வாழ்க்கையை.


உலகில் நாற்பது நொடிக்கு

ஒருவர்

தன்னைத்தானே மாய்த்துக்கொள்கிறார்

இதில் இளம் வயதில்

இருப்பவர்கள் அதிகமென

புள்ளி விவரங்கள் சொல்கிறது...


மகன் தன்னைத்தானே

மாய்த்துக்கொள்ள

மனதொடிந்த பெற்றோரும்

சில நாட்களில் 

தங்களைத் தாங்களே

மாய்த்துக்கொண்ட செய்தி 

மனதைப்  பல நாளாய்

பிழிந்திட்ட   செய்தி...



எல்லாவற்றையும் விட

உயர்ந்தது உன் உயிர்...

என்பதை மண்ணில் வாழும்

ஒவ்வொரு மனித உயிரிடமும்

விதைக்க வேண்டிய நாளிது..


செல்பேசிகளை 

சில மணி நேரம் 

தூக்கியெறிந்துவிட்டு

நட்புகளோடு 

சிரித்து மகிழுங்கள்..

இன்பமோ துக்கமோ

எது எனினும் 

பகிர்ந்து பழகுங்கள்

என்று நம்மைச்சுற்றி

இருக்கும் இளையவர்களிடம்

சொல்லவேண்டிய நாளிது...


                            வா.நேரு,10.09.2022.
















Wednesday 7 September 2022

பெரியாரும் உலக எழுத்தறிவு நாளும் முனைவர் வா.நேரு


                                                       

உலக அளவில் எழுத்தறிவு நாள் (The World Literacy Day) என்று செப்டம்பர் 8 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. 1965-இல் ஈரான் நாட்டில் உள்ள டெக்ரான் நகரில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றிருக்கிறது. அங்கு கல்லாமையைப் பற்றிக் கவலை கொண்டு, அதற்கென ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து கல்லாமையை உலக அளவில் நீக்கவேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை உலக அளவில் பேச வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். அதை யுனெஸ்கோ நிறுவனத்திற்கு அனுப்பி-யிருக்கிறார்கள். அதனை ஏற்றுக் கொண்டு 1966-ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள் உலக எழுத்தறிவு நாளாக யுனெஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, 1967-ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.


செப்டம்பர் 8 அன்று ஒவ்வொரு நாட்டிலும் கல்வி கற்றவர்கள் எத்தனை சதவிகிதம் பேர், அதில் ஆண்களில் கல்வி கற்றவர்கள் எத்தனை சதவிகிதம், பெண்களில் எத்தனை சதவிகிதம்? உலகிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற நாடு எது? குறைவான எழுத்தறிவு பெற்ற நாடு எது? போன்ற பல புள்ளி விவரங்கள் வெளியிடப்-படுகின்றன. எழுத்தறிவு சதவிகிதத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அரசும் மற்ற அரசு சாரா நிறுவனங்களும் பேசும் நாளாக செப்டம்பர் -8 என்பது அமைகின்றது. இந்த ஆண்டு (2022) புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் கல்வியறிவு சதவிகிதம் 77.7. இதில் ஆண்களில் கற்றவர்கள் சதவிகிதம் 84.7, பெண்களில் கற்றவர்கள் சதவிகிதம் 70.3, நகரங்களில் கற்றவர்களின் சதவிகிதம் 87.7, கிராமப் புறங்களில் கற்றவர்களின் சதவிகிதம் 73.5, அதிகமாகக் கற்றவர்கள் இருக்கும் மாநிலம் கேரளா(96.2), குறைவாகக் கற்றவர்கள் இருக்கும் மாநிலம் ஆந்திரப்பிரதேசம்(67.35) என்று ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.


‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு’’

என்றார் திருவள்ளுவர். கல்வி என்பது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதைத் திருவள்ளுவர் ‘கல்வி’ என்னும் அதிகாரத்திலும் ‘கல்லாமை’ என்னும் அதிகாரத்திலும் மிகவும் வலியுறுத்திக் கூறுவதைக் காணலாம். ஆனால், அதற்குப் பின்னால் இடைப்பட்ட காலத்தில் பார்ப்-பனியத்தால் நம்முடைய கல்வி முடக்கப்-பட்டதும், சென்ற நூறு ஆண்டுகளில் நாம் பெற்ற கல்வியும், வாய்ப்பும், திராவிட இயக்கத்தின் கல்விக்கான முன்னெடுப்பும் நாம் அறிந்ததே. பார்ப்பனரல்லாதவர்களின் கல்வி சதவிகிதம் 1900இ-ல் 1 சதவிகிதம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்று தமிழ் நாட்டில் கல்வி சதவிகிதம் 87.9. இது எவ்வளவு பெரிய மாற்றம்!


யுனெஸ்கோ நிறுவனம் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை என்று அறிவித்திருக்கிறது. கல்வி வாழ்க்கையை மாற்றுகிறது, உலகில் அமைதியை நிலைநாட்ட, வறுமையை ஒழிக்க, இயற்கையோடு இயைந்த வளர்ச்சியை அடைய கல்வி ஒன்றே வழி என்று யுனெஸ்கோ குறிப்பிடுகிறது. வெறுமனே ஒரு மொழியில் படிக்கவும் எழுதவும் தெரிந்தால் அவர்கள் கற்றவர்கள் கணக்கில் சேர்க்கப்படுகிறார்கள். ஆனால், தந்தை பெரியார் நோக்கில் கற்றவர்கள் யார்? கற்பது எதற்காக என்று நாம் சிந்திக்க வேண்டும்.

“கல்வி என்பதைப் பற்றி நமது மக்கள் பெரும்பாலும் புத்தகப் படிப்பையும், குருட்டு உருப்போட்டுத் தேர்வுகளில் தேறி விடுவதையுமே கல்வி என்று கருதிக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, ஆங்கிலத்தில் பி.ஏ., எம்.ஏ. படித்துப் பட்டம் பெற்றவர்களையும் தமிழ்ச் சங்கத்தில் படித்து வித்துவான் பரீட்சை பாஸ் பண்ணி பட்டம் பெற்றவர்களையும் கல்வியாளர் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் ஏதோ ஒரு வித்தையில், அதாவது குருட்டு உருப்போட்டு ஒப்புவிக்கக்கூடிய ஒரு வித்தை அல்லது ஒரு சாதனத்தில் தேர்ந்தவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அதாவது, அலமாரியில் உள்ள புத்தகங்களைப் போல், இவர்களும் தங்கள் மனத்தில் பல விஷயங்களைப் பதிய வைத்திருக்கும் ‘ஒரு நகரும் அலமாரி’ என்றுதான் சொல்லவேண்டும்.’’ (‘குடிஅரசு’ 27.7.1930) என்று குறிப்பிடுகின்றார்.



தந்தை பெரியாரின் சொல்லாடலைப் பாருங்கள். நகரும் அலமாரி என்று படித்தவரைக் குறிப்பிடுகின்றார். நகரும் அலமாரிகளால் சமூகத்திற்கான பயன் என்ன? என்னும் கேள்வி எழுகிறது. நான் ஒரு மாதத்தில் 100 புத்தகங்கள் படிக்கிறேன் என்று சொல்லும்போது, வெறுமனே ஒருவர் அவராகப் படித்துக் கொண்டிருப்பதனால், சமூகத்திற்கு ஏற்படும் நலன் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். அவர் படிக்கும் படிப்பு மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளில் வரும் புத்தகங்கள் பற்றிய சிந்தனைகள் போல மற்றவர்களுக்கும் பயன்படும்படி ஒருவரின் வாசிப்பு அனுபவம் அமையவேண்டும்.


“கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும் அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்குவது என்பதாகும்’’ என்றார் தந்தை பெரியார். ஒருவருக்குக் கிடைக்கும் எழுத்தறிவு, அந்த எழுத்தறிவைக் கற்றுக்கொள்-பவருக்கு சுயமரியாதையையும், பகுத்தறிவையும் ஏற்படுத்த வேண்டும். எழுத்தறிவு கிட்டுவதால், அவருக்குத் தன்மான உணர்ச்சி ஏற்பட-வேண்டும்.

ஒருவருக்கு எழுத்தறிவு கிட்டினால், அந்த எழுத்தறிவு மேன்மையான வாழ்க்கைக்கு, தொழில் செய்வதற்குப் பயன்படவேண்டும் என்பதுவும் தந்தை பெரியாரின் கருத்து.

புகழ்பெற்ற கல்வியாளர் பாவ்லோ பிரையர் ஒருமுறை சொன்னார், “எழுதப் படிக்க மட்டும் கற்றுக் கொடுப்பது கல்வியல்ல. வெறும் மனப்பாடத் திறமையில் தகவல் தொகுப்பாக குழந்தைகளை மாற்றுவது கல்வியின் பணியல்ல.




மாறாக, ஒட்டுமொத்த சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் விருப்பு வெறுப்பின்றி விசாரணை செய்வதும், சமூக அநீதியைக் களைவதும், ஒரு சிலர் மட்டும் அனுபவிக்கும் முறையற்ற செல்வப் பகிர்வை உலகில் உள்ள அனைவருக்கும் பயனுடையதாக மாற்றுவதுமே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்!’’ என்றார் எனக் குறிப்பிடுவர்.

கணினியும் இணையமும் எழுத்தறிவு சதவிகிதத்தை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. எழுத்தறிவும் கணினி அறிவும் முக்கியமானவை. ஆனால், அதையும்-விட பகுத்தறிவும் உலக அறிவும் முக்கிய-மானவை. எழுத்தறிவு என்பது பகுத்தறிவு அடிப்படையில் அமைதல் வேண்டும். ஏன், எதற்கு, எப்படி என்னும் கேள்விகளை எழுத்தறிவு பெற்றவர்கள் கேட்கும் வண்ணம் எழுத்தறிவு அமைதல் வேண்டும். “உலக அறிவே முக்கியமானது. உலகத்துடன் பழகியவர்க்குத்-தான் பொது அறிவு வளர முடியும்’’ என்றார் தந்தை பெரியார். உலக அறிவை, பகுத்தறிவை வளர்ப்பது குறித்தும் எழுத்து அறிவு நாளில் நாம் சிந்திக்கும் நாளாக செப்டம்பர் -8 அமையட்டும்!



https://unmaionline.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af/ 


நன்றி : உண்மை செப்டம்பர் 01-15 இதழ்