Friday 30 May 2014

வேட்டையாடப்படும் விலங்காக.......

உனது விருப்பம்
என்பது உனதல்ல
உன் குடும்பத்தினர்
விருப்பமே உன் விருப்பம்

பெண்ணே,
அவன் உனைப் பெற்றவனாக இருக்கலாம்,
பெண்ணே,
அவன் உன் உடன் பிறந்தவனாக இருக்கலாம்
உனது விருப்பமும்
அவர்கள் விருப்பமும்
வேறு வேறானால்
வேட்டையாடப்படும் விலங்காக
எறிந்து கொள்வார் உன்னை!

கர்ப்பிணியா நீ !
நீயாகத் தேர்ந்தெடுத்த
ஒருவனோடு வாழ்வதா நீ!
சாகடிப்பார் உன்னை !
நட்ட நடுத்தெருவில்
காக்கிச்சட்டைகள் பார்த்திருக்க
கற்களால் எறிந்து கொள்வார் உன்னை !

அடிபணிந்து போ !
அப்பனுக்கு,அண்ணனுக்கு,
அவர்கள் காட்டும்
ஒருவனுக்கு சொந்தமாகிப்போ!
காட்டும் ஒருவன்
கிழமோ,கீழ்த்தரமோ
குடிகாரனோ, ஒழுங்கீனனோ
எதைப் பற்றியும்
கவலைப் படாதே !
அவர்கள் சுட்டும்
ஒருவனோடு நீ வாழ வேண்டும்!
இல்லையேல் நீ சாக வேண்டும் !

பாழாய்ப்போன சாதியால்
செய்கிறான் சிலர் இங்கே !
சாதி இல்லை அங்கே
இருந்தாலும் ஏன் இக்கொலை அங்கே!

ஒன்றல்ல ! இரண்டல்ல !
ஓராண்டில்
நூற்றுக்கணக்கில்
கொல்லப்பட்ட பெண்கள்!
சொந்த குடும்பத்து ஆண்களால்
கவுரவக் கொலைகளாம் !
சொல்லக் கொதிக்கதடா நெஞ்சம் !

உனது விருப்பம்
என்பது உனதல்ல
உன் குடும்பத்தினர்
விருப்பமே உன் விருப்பம் !

குடும்பம் எனும்
அமைப்பு நொறுங்காமல்
பெண்ணடிமை ஒழியாது !
வேலியாவது - வெங்காயமாவது
என்று வெகுண்டெழாமல்
பெண் வேதனைகள் தீராது !

(பாகிஸ்தானில் தனது குடும்பத்தாராலேயே கொல்லப்பட்ட பர்ஸானா பர்வீன் என்ற பெண்ணின் நினைவாக) .
                                                                 வா.நேரு 


நன்றி : எழுத்து.காம்

Saturday 24 May 2014

அண்மையில் படித்த புத்தகம் : ஊர் சுற்றிப் புராணம் ஆசிரியர் : ராகுல் சாங்கிருத்யாயன்

அண்மையில் படித்த புத்தகம் : ஊர் சுற்றிப் புராணம்
ஆசிரியர் :  ராகுல் சாங்கிருத்யாயன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-98
நான்காம் ப்திப்பு  செப்டம்பர் 2003,விலை ரூ 70  மொத்த பக்கங்கள் : 236

                          புகழ் பெற்ற எழுத்தாளரான ராகுல் சாங்கிருத்யாயன் அவர்கள் எழுதிய  இந்த 'ஊர் சுற்றிப் புராணம்' - புத்தக வாசிப்பு ஒரு வேறுபட்ட அனுபவத்தைக் கொடுத்தது. " உலகம் இன்பத்திலும் துன்பத்திலும் யாரிடமிருந்தாவது உதவி பெறுகிறது என்றால் அது ஊர் சுற்றிகளினால்தான் " எனச்சொல்கின்றார் இந்தப் புத்தகத்தின்  ஆசிரியர். " ஏ , கிணற்றுத்தவளை மன்ப்பான்மையே , நீ அடியோடு ஒழிக " என்பதுதான் இந்த நூலின் நோக்கம் எனக் கொள்ளலாம்.

                               மொத்தம் 16 அத்தியாயங்கள். 'ஊர் சுற்றும் அவா'வில்  ஆரம்பித்து, 'நினைவுகள்' என்பதுவரை இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ஊர் சுற்றும் அவாவில் ' எதிர்கால ஊர் சுற்றிகளே , புறப்படத் தயாராகுங்கள், உங்களை வரவேற்க உலகம் இரண்டு கைகளையும் விரித்து நிற்கிறது ' எனச்சொல்லும் ராகுல்ஜி புத்தர், மகாவீரர் போன்ற பலரைச்சொல்லி, அவர்கள் ஊர் சுற்றிகளாக இருந்ததால்தான் உலகம் பயன்பெற்றது என்பதனை மிக அழகாகச்சொல்லி, ஊர் சுற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அம்மா அழுவதை, அப்பா சொல்வதை, மனைவி சொல்வதை, கண்வன் சொல்வதை  எல்லாம் கேட்காதீர்கள், ஊர் சுற்றக்கிளம்பி விடுங்கள்  என்று ' தடைகளைத் தகர்த்தெறியச்' சொல்கின்றார், மகன் இல்லாவிட்டால் மோட்சமில்லை என்று நினைத்து, தந்தை விடமாட்டார் அதனை எல்லாம் கண்டு கொள்ளாதே என்று சொல்லும் ராகுல்ஜி, " தற்போதைய மக்கள் தொகையே சமாளிக்க முடியாததாக இருக்கின்றதென்றால் ஒவ்வொரு ஆண்டும் ஐம்பது இலட்சம் புதிய ஜீவன்கள் கந்து வட்டி விகிதத்தில் பெருகி வருகின்றனர்.. புதிய உயிர்களை உலகிற்கு கொண்டு வர விரும்பாத ஆண் பெண்கள் இன்று புண்ணியவான்களாகக் கருதப்படவேண்டும். புண்ணியத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையெனில், அவர்களை மரியாதைக்குரியவர்கள் என்றுதான் சொல்வோமே, அவர்கள் நாட்டின் பளுவைக் குறைக்கின்றனர்...சுமேரு ,மலையின் மேல் இருப்பதாகக்கூறப்பட்ட சொர்க்கமும், பாதாளத்தில் இருப்பதாகச்சொல்லப்பட்ட நரகமும் பொய்யானவை என்று தற்காலப் பூகோள சாஸ்திரம் ஐயந்திரிபின்றி நிருபித்துவிட்டது. " (பக்கம் 27) என்று சொல்லும் ராகுல்ஜி அப்பாவும் மகனும் தள்ளி இருந்தால்தான் அன்பும் பாசமும் கூடும் என்று சொல்கின்றார்.
                                  ஊர் சுற்ற ஆர்வம் இருக்கும் மனிதர்களை உசுப்பேற்றும் ராகுல்ஜி அதனைச்சொல்லும் விதம் மிகவும் சுவையாக உள்ளது. " நீங்கள் உங்கள் நகரைத் துறக்கத் தயாரானால் ஆயிரக்கணக்கான நகரங்கள் உங்களை வரவேற்க முன்வரும். நீங்கள் உங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுங்கள்; ஆயிரக்கணக்கான கிராமங்கள் உங்களை வரவேற்கத் தயாராயிருக்கும். ஒரு சில நண்பர் சுற்றத்தாருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான நண்பர்களும் சுற்றத்தாரும் உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் தனியாரவரல்ல. இங்கு நான் மீண்டும் ஆயிரம் பொய்களையும் , ஓரிரு உண்மைகளையும் எடுத்துக்கூறும் இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் 'பகவத் கீதை'யின் சுலோகத்தை மேற்கோள் காட்டுவேன். " (பக்கம் 34-35) . மேலே உள்ள வாசகங்களில் உள்ள கேலியைப் பாருங்கள். இதே மாதிரியான வசனங்கள் நூல் முழுவதும் அங்கங்கு விரவிக் கிடக்கின்றன. 

                                 ஊர் சுற்றும் எண்ணத்தை மிக ஆழமாக படிக்கும் வாசகர்களின் மனதில் ஏற்படுத்தும் ராகுல்ஜி , ஊர் சுற்றுவதற்கு முன் முடிவு செய்ய வேண்டிய விசயங்கள் என்று சிலவற்றைச்சொல்கின்றார்.
" சில விசயங்களை முன்னதாகவே முடிவு செய்து கொண்டுவிட்டால், மனிதனின் வாழ்க்கையில் பன்னிரண்டு ஆண்டுகளில் சாதிப்பதை இரண்டே ஆண்டுகளில் சாதிக்க முடியும் " (பக்கம் 39) எனச்சொல்லும் ராகுல்ஜி ஊர் சுற்றுவது என்று முடிவுசெய்துவிட்டால் என்னென்ன செய்ய வேண்டும், முன் தயாரிப்புகள் எப்படி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில்  கல்வியின் அவசியம் பற்றி மூன்றாம் அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றார். படித்து முடித்து 24 வய்துக்குள் வீட்டை விட்டு வெளியேறி விடவேண்டும் என்று சொல்கின்றார். " நீங்கள் ஊர் சுற்ற வேண்டுமென்ற முடிவெடுத்துக் கொண்டதும் சுற்றுப் புறத்திலுள்ள நூல் நிலையங்களிலும் பள்ளி நூல் நிலையத்திலுள்ள பயண நூல்களையும், வாழ்க்கை வரலாறுகளையும் நன்றாகப் படித்துக்கொள்ளவேண்டும் " பக்கம் (44) குறிப்பிடுகின்றார். ப்ல மொழிகளைக் கற்றுக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும் , உடல் வலிமையாக இருக்க உடல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்  என்று அறிவுறுத்துகின்றார். உடல் உழைப்பு பயிற்சி கட்டாயம் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

                                       அண்ணல் அம்பேத்கர் " எனக்கு மேலானவர் என்று எவரும் இல்லை, அதனைப் போலவே எனக்கு கீழானவர் எவரும் இல்லை " என்று சொன்னதைப் போல சம நிலைப் பார்வை ஊர் சுற்றிக்கு வேண்டும் என்கின்றார் ராகுல்ஜி. " உலகத்தில் எவரையுமே த்ன்னைவிட உயர்ந்தவர்களாகவும், அதே சமய்த்தில் தன்னைவிட தாழ்ந்தவர்களாகவும் எண்ணா மனோநிலையை ஊர் சுற்றி பெற்றிருக்க வேண்டும். அவனுடைய நடவடிக்கைகளும் இதனைப் பொறுத்திருக்க வேண்டும். சம நிலைப் பார்வையும், நெருக்கமான நட்புறவும் அவன் கொண்டிருக்க வேண்டும் " பக்கம் (57) ." கல்வியும், பண்பாடும், தன் மானமும் ஊர் சுற்றிக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்கள் " என்றும் குறிப்பிடுகின்றார்.

                             ஊர் சுற்றி உடலுழைப்பு செய்து பணம் சம்பாதிக்க தெரிய வேண்டும் என்று சொல்கின்றார். " முகச்சவரம் செய்வதையோ, சிகையலங்காரத்தையோ ' கற்றுக் கொண்டால் எளிது எனக்குறிப்பிடுகின்றார். (பக்கம் 60,61). யுவதிகள் அழகுபடுத்தும் கலையை கற்றுக்கொள்ளலாம் என்று சொல்கின்றார். இயந்திரத் தொழில், நகைத் தொழில், தையல் , ஆடை வெளுத்தல், தச்சுத் தொழிலை கற்றுக் கொள்ளலாம். கடிகார ரிப்பேர், இயந்திர ரிப்பேர், புகைப்படத் தொழில் போன்றவை ஊர் சுற்றிகள் பணம் சம்பாரித்து ஊர் சுற்ற தேவைப்படும் தொழில்கள் என்றும் சொல்கின்றார். ஜோதிடம், கைரேகை போன்றவை பணம் சம்பாதிக்கப் பயன்படும் ஆனால் அவை மூட் நம்பிக்கை வளர்ப்பவை எனவே அதனைக் கற்றுக்கொள்ளாதே, பயன்படுத்தாதே என்று சொல்கின்றார். முதலுதவிச்சிகிச்சை கற்றுக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார்.

                               சிற்பக் கலை, கலைகள் பற்றிய ஆர்வம் ஊர் சுற்றிக்கு இருந்தால் அதனை வளர்த்துக் கொள்ள வேண்டும் . நடனம் , சங்கீதம், வாத்திய இசை போன்றவை  ஊர் சுற்றிக்கு எந்த நாட்டு மக்களிடத்திலும் எளிதாக அணுகவும் , பாராட்டு பெறவும் உதவியாக இருக்கும் என்று விளக்குகின்றார். பழங்குடி மக்கள் பற்றியும், ஊர் சுற்றிகள் கவனமாக இருக்க வேண்டிய செயல்கள் பற்றியும் 'பழங்குடிகளிடையே ' என்னும் அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றார். " காட்டுவாழ் மக்களிடம் செல்லும் ஊர் சுற்றி, அவர்களுக்குச்சில விசயங்களைக் கற்றுத் தருவதுடன் அவர்களிடமிருந்தும் சில விசயங்களைக் கற்றுக் கொள்கிறான் " (பக்கம் 89 )- கற்றுத் தருபவை, கற்றுக் கொள்ள வேண்டியவை என அவர் விவரிக்கும் தனமை அருமை.

                                  ஊர் சுற்றி இனத்தவர் என்ற தலைப்பில் நாடோடி மக்களாக வாழும் மக்கள் பற்றிய தகவலகள் தகவல் களஞ்சியங்களாக உள்ளன. பெண் ஊர் சுற்றிகள் என்னும் தலைப்பில் , பெண்கள் ஏன் ஊர் சுற்ற வேண்டும் என்பதனை விவரிக்கின்றார். தந்தை பெரியார், "பூனைகளால் எலிகளுக்கு எப்போதும் விடுதலை கிடைக்காது, அத்னைப் போல ஆண்களால் பெண்களுக்கு எப்போதும் விடுதலை கிடைக்காது"  என்று  சொன்னதைப் போல ராகுல்ஜி ஆணாதிக்கத்தின் கொடுமைகளை பட்டியலிடுகின்றார், " ஆயிரக்கணக்கான விலங்குகளால் (ஆண்கள்) தம்மைக் கட்டி வைத்திருக்கிறார்களென்பதைத் துணிவு படைத்த யுவதிகள் உணர வேண்டும். ஆண் , பெண்ணின் ஒவ்வொரு ரோமக் கண்ணிலும் ஆணி வைத்து அடித்திருக்கிறான். பெண்களின் அவல நிலையைப் பார்க்கும்போது சிறு வயதில் கேட்ட ஒரு கதை நினைவுக்கு வருகிறது. " மனித நடமாட்டமில்லாத மாளிகையொன்றில் ஒரு பிணம் அழுகாமல் நல்ல நிலைமையில் விழுந்து கிடந்தது. பிணத்தின் ஒவ்வொரு ரோமத்திலும் ஆணிகள் அடிக்கப்பட்டிருந்தன. அவ்வாணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கப் பிடுங்க, பிணத்துள் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் வரத் தொடங்கியது. அதன் கண்களில் செலுத்தப்பட்டிருந்த ஆணிகளைப் பிடுங்கியதுமே பிணம் எழுந்து உட்கார்ந்து ரொம்ப நேரம் தூங்கிவிட்டேன் என்று முணு முணுத்துக் கொண்டதாம். இன்றைய சமுதாயத்தில் ஆண்கள், தம் கைகளால் பெண்களின் ஒவ்வொரு ரோமத்திலும் அடிமைத்தனத்தின் ஆணிகளை அடித்திருக்கின்றனர். ஆனால் ஆண்களே அந்த ஆணிகளை எடுத்து விடுவார்களென்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம் " (பக்கம் 117). அருமையான வரிகள். இன்றைக்கு நமது பெண்கள் ஐ.டி. படித்து தன்னந்தனியாக சென்னை, பெங்களூரிலும், வெளி நாடுகளிலும் வேலை பார்க்கின்றனர். கை நிறையச்சம்பளம் வாங்குகின்றனர்.பெரும்பாலும் தங்கள் வாழ்க்கை இணையர்களைத் தாங்களே அமைத்துக் கொள்கின்றனர். எவ்வளவு பெரிய மாற்றம். ராகுல்ஜி தன்னுடைய வாழ்க்கையில் கடந்த நூற்றாண்டு, இந்த நூற்றாண்டு, இன்றைய கால கட்டப்பெண்கள் என்று ஒப்பிடுகின்றார், பத்தாம் பசலிகளை தன்னுடைய வார்த்தைகளால் எள்ளி நகையாடுகின்றார். இன்றைய பெண்கள் அதையெல்லாம் கடந்து அடுத்த கட்டம் சென்று விட்டார்கள்.

                     மதமும் ஊர் சுற்றுதலும் என்னும் தலைப்பில் மத நம்பிக்கையாளன் ஊர் சுற்றுபவனாக இருந்தால் அவனுக்கு மத வெறி இருக்காது என்று சொல்கின்றார்." மதங்களின் குறுகிய எல்லைகளை ஊர் சுற்றி கடந்து போய்விடுகிறான். அவன் மதப் பாகுபாட்டைத் துச்சமெனக் கருதிகிறான். ...உண்மையில் ஊர் சுற்றி , மதம் என்பதை ஒரு தனி மனிதனின் சொந்த விசயமாகவே கருதுகிறான் " (பக்கம் 139). நாத்திக ஊர் சுற்றி, ஆத்திக  ஊர் சுற்றி எனப்பிரிக்கின்றார் ராகுல்ஜி. " வாய்ப்பு கிடைக்கும்போது நாத்திக ஊர் சுற்றி , தன் கருத்துக்களைத் தெளிவாகக் கூறுவதற்குப் பின் வாங்குவதில்லை; என்றாலும் மத்ததில் உண்மையான நம்பிக்கை உள்ள சக ஊர் சுற்றியின் உள்ளத்தைச்சுடு சொல்லால் வேதனைக்குள்ளாக்க விரும்பவும் மாட்டான். எல்லாருடனும் அன்பாகப் பழகுவதுதான் அவனுடைய ல்ட்சியமாகும் " (பக்கம் 142).

                      காதல் பற்றி, ஊர் சுற்றிக்கு இருக்க வேண்டிய ஊர் சுற்றப்போகும் நாட்டறிவு பற்றி, மரண தத்துவம் பற்றி தொடர் அத்தியாயங்களில் எழுதுகின்றார். ஊர் சுற்றிகள் எப்படியெல்லாம் எழுதுகோலையும் , தூரிகையையும் பயன்படுத்தலாம், அதனால் எப்படி, எப்படி எல்லாம் நன்மைகள் விளைந்தன , ந்ன்மைகள் விளையும் என்பதனை அழகுற எழுதியிருக்கின்றார். இன்றைக்கும் கூட மேல் நாட்டு அறிஞர்கள் ஒரு புத்தகம் எழுதுவதற்கு முன்னால் அந்தப் புத்தகம் எழுதுவதற்காகப் பயணிக்கின்றார்கள், தகவல்கள் சேகரிக்கின்றார்கள், பின்னர்தான் எழுதுகிறார்கள் என்று படிக்கின்றோம். ஆனால் இயல்பாகவே ஊர் சுற்றியாக இருக்கும் ஒருவரின் எழுத்தாற்றல் எவ்வளவு வலிமையானது என்பதனை ராகுல்ஜி விளக்கும் விதமே அருமை. பொய்யாக எழுதாதே, இட்டுக் கட்டி எழுதாதே, அழகுற உண்மையோடு எழுது  என்று சொல்கின்றார். ஊர் சுற்றுதல் பயன் கருதாப் பயணம் அல்ல, மனித இனத்திற்கு  வலிமை சேர்க்கும் பயணம் என விவரிக்கின்றார். " இளம் பெண்கள் ஊர் சுற்றுவதெப்படி " என்னும் அத்தியாயத்திற்கு மட்டும் தனிக் கட்டுரை எழுதலாம். அவ்வளவு விசயங்கள் அந்த அத்தியாயத்தில் உள்ளன. இன்றைய புதுமைப் பெண்கள் எவை எவையெற்றையெல்லாம் தகர்த்தெறிந்து இன்றைய புதுமை நிலையை அடைந்திருக்கின்றார்கள் என்பதனை உணர இந்த அத்தியாயத்தை ஊன்றிப் படிக்கலாம். உணரலாம்.

                        நினைவுகள் என்னும் கடைசிப் பகுதியில் தான் ஊர் சுற்றிய அனுபங்களைப் பகிர்ந்து கொள்கின்றார். இதிலும் மேம்பட்ட நூல்கள் வரவேண்டும் என்னும் தன் விருப்பத்தை வெளியிடுகின்றார் ராகுல்ஜி.

                     2000-க்குப் பிறகு உலகம் முழுவதும் தமிழர்கள் புலம் பெயர்ந்தும், வெளி நாடுகளில் வேலை வாய்ப்புக் கிடைத்தும் வாழ்கின்றார்கள். அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என விமானங்களில் பறந்து கொண்டுள்ளார்கள். ராகுல்ஜி எழுதிய காலத்தில் கணினியும் , இணைய தளமும் இல்லை. இவை இரண்டும் இன்றைக்கு ஊர் சுற்றுதலை மிக எளிதாக ஆக்கி இருக்கின்றன. ஆனால் பறந்து பறந்து போய் , ஏதோ ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் அடைந்து கொள்ளுதல் என்பதுதான் இன்றைய வழக்கமாக இருக்கின்றது,ஆனால் ராகுல்ஜியின் இந்த 'ஊர் சுற்றிப் புராணம் ' என்னும் இந்தப் புத்தகம் மக்களோடு பழகுவதை, மக்களோடு வாழ்வதை, மக்களைப் புரிந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தங்கள் பயண அனுபவத்தை, வாழும் சூழலை பதிய வேண்டும், நூலாக வெளியிட வேண்டும் என்னும் உணர்வை இந்தப் புத்தகம் படிப்பவர்கள் மனதில் உறுதியாக ஏற்படுத்தும். படிக்கலாம். இந்த நூலை அடுத்தவர்களையும் படிக்கச்சொல்லலாம். 




                       

Tuesday 13 May 2014

நிகழ்வும் நினைப்பும்(23) : வீர வணக்கம் ! வீரவணக்கம்! தோழர் பெரியார் சாக்ரடீஸுக்கு வீரவணக்கம் !

நிகழ்வும் நினைப்பும்(23) : வீர வணக்கம் ! வீரவணக்கம்! தோழர் பெரியார் சாக்ரடீஸுக்கு வீரவணக்கம் !

தோழர் விருதுநகர் க. நல்லதம்பி அவர்கள் , 12.05.2014 மாலை 7 ம்ணியளவில் அழைத்து, ' அய்யா, செய்தி உண்மையா? ' என்றார். என்ன? என்று கேட்க, இடியென விழுந்த அந்த செய்தியைச்சொன்னார், தோழர் பெரியார் சாக்ரடீஸ் இறந்து விட்டாரமே,உண்மையா ?  என்றார்.அண்ணன் வீ.குமரேசன்  அவர்கள் ஆமாம் என்று உறுதி செய்தபோது , அந்த முகமும் , பெரியார் திடலுக்குள் துறு, துறுவென்ற அவரின் செயல்பாடும், உண்மை இதழும் ஞாபகத்திற்கு வர , மிகப்பெரிய துயரம் மனதை அடைத்தது.

                              திராவிடர் கழகம் அதைச்செய்ய வேண்டும் , இதைச்செய்ய வேண்டும் என்று ஆலோசனை  சொல்லுவோர் நிறைய உண்டு. செயல்பாடுகளில்   என்ன குற்றம் சொல்லலாம் என்று யோசித்து யோசித்து குறை சொல்வோர் உண்டு. ஆனால் தந்தை பெரியாருக்குப் பின்னால் இன்று சூழ்ந்துள்ள ஆபத்தையும் அந்த ஆபததை நீக்க  அரும்பணியாற்றும் அய்யா ஆசிரியரின் நம்பிக்கைக்கு உரியவர்களாய், அவர் சொல்லும் செய்ல்களை,இராணுவக் கட்டுப்பாட்டோடு செய்து முடிக்கும் தோழர்களில் மிக முக்கியமானவர் பெரியார் சாக்ரடீஸ். உண்மை இதழின் பக்கங்களுக்கு மெருகேற்றி, மெருகேற்றி , அவ்விதழ் மிகச்சிறப்பாக வரக் காரணமானவர் தோழர் பெரியார் சாக்ரடீஸ். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளராக இருந்த்  செயல்பட்ட அருமைத்தோழர் பெரியார் சாகரடீஸின் இழப்பு இயக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பு. வீரவணக்கம், வீர வணக்கம். தோழர் பெரியார் சாக்ரடீஸ் அவர்களுக்கு வீர வணக்கம்.

                  திராவிடர் கழகத்து தோழர்களின் குடும்பங்களின் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் அறிக்கை படிக்கும்போதே கண்களில் கண்ணீரை  வரவழைத்தது, இதோ அவரின் அறிக்கை:
பெரியார் குடும்பத்து மூன்றாம் தலைமுறையே!

பெரியார் சாக்ரடீஸே, மறைந்தாயா? நம்பமுடியவில்லையே!

- தமிழர் தலைவர் ஆசிரியர் கண்ணீர் அறிக்கை

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளியும், தந்தை பெரியாரின் தன் மான இயக்கத்தை தலை தாழாது தூக்கிப்பிடித்த பெரியார் பெருந்தொண்டருமான காரைக்குடி (கல்லுக்கட்டி) என்.ஆர். சாமி என்ற மாபெரும் ஆலமரத்து அருங்கிளையின் விழுதான எங்கள் அன்புச் செல்வன் பெரியார் சாக்ரடிஸை (வயது 44) விபத்து பதம் பார்த்து விட்ட நிலையில், எப்படியாவது பிழைத்துவிட மாட்டாரா என்று ஏங்கித் துடித்த எங்களை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாரே!

அவரை வளர்த்து ஆளாக்கிய அவரின் பெற்றோர்களான தந்தை, சாமி திராவிடமணியும், தாய் ஜெயா அம்மையாரும் வாழ்விணையர் இங்கர்சாலும், ஒரே அன்பு மகள் தமிழ் ஈழமும்,  அவரது சகோதரர்கள் மற்றும் பெரியப்பா, சித்தப்பா குடும்பவத்தார்கள், அதைவிட இயக்கத்தோடு பின்னிப்பிணைந்த உறவால் எங்களையும் இப்படித் தவிக்கவிட்டுவிட்டுச் சென்றுவிட்டாரே என்று எண்ணும்போது எழுதக்கூட எனது கையும், மனமும் ஒத்துழைக்க மறுக்கின்றனவே!

பெரியார் குடும்பத்து மூன்றாம் தலைமுறையே!

உன் இழப்பை எப்படி  நாங்கள் சரிசெய்வோம்?

எங்கள் இயக்கக் கொள்கை குலக்கொழுந்தே, என் பணியில் பெரும்பகுதியை ஏட்டுத்துறையில் எடுத்துக்கொண்டு உதவிய எனது இளம் ஏந்தலே!

எனக்குரிய நம்பிக்கையான செய்திப் புறாவாக எப்போதும் பறந்துவந்து, தந்து, உன் கடமையாற்றிப் பறந்து போவாயே; அதுபோல இப்போதும் சொல்லாமல் விடைபெறாமல் சென்றுவிட்டாயே -  எங்கள் கொள்கைத் தங்கமே!

கொண்ட தலைமைக்கும், கொள்கைக்கும் நெறிதவறாது ஒரு கவசத் தொண்டராக இருந்து பெற்ற தந்தையைவிட எம்மை உற்ற தந்தை தாயாகவே கருதி, பெரியார் திடல் முகவரியாகவே வாழ்ந்த எங்கள் இலட்சிய முகமே!

உன்னை பறித்தெடுத்த இயற்கையின் கோணல் புத்தியை எப்படித்தான் விமர்சிப்பது, எங்களுக்கே புரியவில்லையே!

திடலில் பல அறிஞர்கள் இறையனாரும், கு.வெ.கி.ஆசானும், ஆளுமைக்குரிய ஆளவந்தார், பொருளாளர் சாமிதுரை, கல்வியாளர் சிவராசன்களும் எம்மை விட்டுப் பிரிந்த நிலையிலும் இதோ நம் கொள்கைப் பரப்ப நம்பிக்கை நட்சத்திரங்களான பெரியார் சாக்ரடிஸை போன்ற இளம்புலிகள் உள்ளனரே என்று நாங்கள் பெற்ற ஆறுதலையும் பறித்துவிட்டாயே!

நீ மறைந்து விட்டாயா? நம்பமுடியவில்லையே!  எனது மற்றொரு துரைச் சக்ரவர்த்தி ஆகிவிட்டாயே!

எப்படித்தான் தாங்குவதோ. எங்களுக்கே இப்படியென்றால் உங்கள் குருதி கொள்கைக் குடும்பம், வாழ்விணையர்கள், எம் பேரப்பிள்ளைகள் இவர்களுக்கு யார்தான் ஆறுதலும், தேறுதலும் கூறுவது?

எல்லோரும் சேர்ந்து வழியனுப்பக் கூடாத அந்த வசீகரக் கொள்கைத் தங்கக் கட்டியை வழியனுப்புவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டதே... அந்தோ!

வழியில்லாமல் விழிநீரைத் துடைத்து, கட்டுப்பாட்டின் சின்னமான இராணுவ வீரனுக்கு வீர வணக்கம் கூறி, ஒருவருக்கொருவர் தேற்றமுடியாத நிலையிலும், பெரியாரின் கொள்கை உறுதித் துணையோடு இலட்சியப் பயணத்தை தொடர்ந்து, மேலும் ஆயிரம் ஆயிரம் பெரியார் சாக்ரடீஸ்களை உருவாக்குவோம்!

உறுதி கொள்ளுவோம்!!!

புரந்தார்கண் நீர் மல்க, உன்னை வழி அனுப்பும் உன் கொள்கைக் குடும்பத்து முகவரியாளன்,

உண்மை இதழில் ஒவ்வொரு வளர்ச்சிப் பக்கத்திலும் என்றும் வாழ்வாய்- வாழ்ந்துகொண்டே எம்முடன் பயணிப்பாய்! என்ற ஆறுதலுடன்...

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

12.5.2014
 

http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2014/may/13/35.jpg

Tuesday 6 May 2014

வயலில் விடிந்ததுபோல....

கணினி முகத்தில்தான்
எனது விடியல்
எனது தாத்தா பாட்டன்
வாழ்க்கை
வயலில் விடிந்ததுபோல

சூரிய ஒளிக்கதிர்கள்
தரையில் விழுவதற்குமுன்னே
துயில் எழுகின்றேன்
என் முன்னோர்கள் போலவே

அவரக்ள் வெளி உலகில்
விடியலுக்காக
கால்வைத்த வேளைகளில்
நான் வீட்டிற்குள்ளேயே
ஒரு மூலையில்
கணினினுக்குள் மூழ்குகின்றேன்
இதுவும் கூட விடியலுக்காக

வயிற்றுப் பசி அடங்கியது
என் காலத்தில்
அறிவுப் பசி தொடர்கிறது
என் காலத்திலும்
என் பிள்ளைகள் காலத்திலும்

அடக்கப்பட்டோம் - ஏன்?
ஒடுக்கப்பட்டோம் -ஏன் ?
எனும் கேள்விகள்
அன்று விடை தெரியாத
வினாகக்ள் ?
இன்று தெரிந்த
விடைகளால்
மீண்டும் ஒருமுறை
அந்த நிலைக்கு ஆட்படோம்
எனும் தெளிவு நிலையால்
கணினினுக்குள் மூழ்குகின்றேன்

ஒரு நாள் முழுதாய் விடியும்
எனும் நம்பிக்கை இருக்கிறது !
உண்ண உணவில்லா நிலையில்
எவரும் இல்லை என்னும்
நிலை வரும் என்னும்
நம்பிக்கை வலுக்கிறது !

ஒடுக்கப்பட்டு மூலையில்
கிடந்தோரெல்லாம்
ஒன்றிணையும்
இணைப்புப் புள்ளிகளாய்
சமூக வலைத்தளங்களைப்
பார்க்கிறபோது
இணையத்திற்குள்
கருத்துக்களால்
இணையும்
இளைஞர்களைப் பார்க்கிறபோது
ஒரு நாள் முழுதாய் விடியும்
எனும் நம்பிக்கை
வலுக்கிறது மனதில் !
                                                   ...........வா. நேரு ....................
நன்றி : எழுத்து.காம்

Sunday 4 May 2014

அண்மையில் படித்த புத்தகம் : எனக்கென்று முகம் இல்லை

அண்மையில் படித்த புத்தகம் : எனக்கென்று முகம் இல்லை
தொகுப்பாசிரியர் : தி.அமிர்தகணேசன்
வெளியீடு : சபானந்தாச்சார்யா பதிப்பகம், புதுச்சேரி-1
முதல் பதிப்பு : 2014, 144 பக்கங்கள் , விலை ரூ 130.

'எனக்கென்று முகம் இல்லை' என்னும் இக்கவிதைத் தொகுப்பு 12 பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூல். எழுத்து.காம். இணையதளத்தில் வெளி வந்த கவிதைகளின் தொகுப்பு. வய்தில், கருத்தில் வேற்றுமை இருந்தாலும் பெண் கவிஞர்களால் படைக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பாய், பல மலர்கள் இணைந்த கதம்பமாய் மணக்கிறது. தொகுப்பாசிரியர் ' மேலெழும்பும் முகப்பிம்பங்கள் ' என்னும் தலைப்பில் அணிந்துரையும், ' ஒரு சோறு பதமென...அகத்தின் புற முழக்கம் ' என தோழர் பொள்ளாச்சி அபி அவர்களும் அணிந்துரை கொடுத்துள்ளார்கள். இரண்டுமே சிறப்பான ஒரு உள்ளடகத்தை, அதன் நோக்கத்தை நூலுக்குள் புகுமுன்னே கொடுக்கின்றன.

மனிதர்கள் குடியேறினால் செவ்வாய்க்கிரகம் என்ன வாகும் ? என்னும் கற்பனையில் 'செவ்வாய்க்கிரகம் பாவம்தான்' , உறுதி கொள் பெண்ணே என்னும் நோக்கில் அமைந்த 'பெண்ணே ,...நெஞ்சில் உறுதி வேண்டும் ' 'வலிகள் விற்பனைக்கல்ல ; போன்ற சொ. சாந்தி-யின் கவிதைகள் நேர் கொண்ட பார்வையோடு நினைவில் நிற்கின்றன.
.

கே.பிரியாவின் ' முதலிடம் எப்போதும் என் சைக்கிளுக்கு மட்டும்தான் ' என முடியும் சைக்கிள் நினைவுகள் அருமை. என்னென்மோ அதிசயம் நடக்குதுன்னு சொல்றீங்க, 'பிச்சை எடுக்கும் கைகளும் நாளை புத்தகம் தூக்காதோ ' என்னும் கேள்வி, 'கடல் நீர்', 'தனிமை' போன்ற கவிதைகள் கற்பனை வளத்தோடு நன்றாக அமைந்துள்ளது. 'முற்படுத்தப்பட்டவள் ' என்னும் கவிதையின் பொருளோடு எனக்கு 100 சதவீதம் மாறுபாடு உண்டு. என்னதான் பொருளாதார ரீதியாக துன்பப்பட்டாலும், அவரது சாதியின் பெயரை இழிவுச்சொல்லாய் யாரும் பயன்படுத்தப்போவதில்லை.


ஒரு மன்னிப்பாவது கேளேன் என்னும் கவிதை வேறு வழியில்லாமல் வாழ்வைக் கடக்கும் பெண்ணின் வலியை வார்த்தை சித்திரங்களாய் கொடுத்திருக்கிறது. 'நீ விரும்பும் முகமாய் ' என் முகத்தை மாற்றுகிறாய் தந்தையே, கணவனே, மகனே என்னும் மனு(அ)தர்மத்தின் நடைமுறையை சுட்டிக் காட்டும் ' எனக்கென்று முகம் இல்லை ' என்னும் கவிதையே தலைப்பாக அமைந்துள்ளது. தலைப்பிற்கு தகுதியான கவிதை கவிஞர் திலகவதியின் கவிதை( கே.பிரியாவின் கவிதையின் தொடர்ச்சியாகவே கவிஞர் திலகவதியின் கவிதை உள்ளது. கவிஞர் திலகவதி( நாஞ்சில் திலகா சிவம் ) என கவிதையாளர்கள் பட்டியலில் உள்ளது. உள்ளே தனித் தலைப்பாக இல்லை, தொகுப்பாளர் அடுத்த பதிப்பில் கவ்னிக்கவும்)

சென்னை ஹீஜ்ஜாவின் ' ஏன் சகாக்களே ' என்னும் கவிதையின் கேள்வி நியாயமானது. சந்தேகப்படுபவன் கூட வாழ்வதும், நல்ல பாம்போடு வாழ்வதும் ஒன்று என்றார் திருவள்ளுவர் . ' சதை விற்கும் பெண்ணா உன் மனைவி ? ' என சந்தேகப்படும் ஆணை பற்றிய கவிதை உள்ளம் தொடுகிறது. அதைப்போலவே ' எனதருமைக் கணவரே ? ' என்னும் கவிதை வரிசையாகக் காரணம் சொல்லி' உம் வாழ் நாள முழுவதும் தாமதாகி விட்டதே என்ன செய்யப்போகிறீர் ? ' எனும் கேள்வியோடு அருமையாக முடிகிறது.

மதுரை புலமி அம்பிகாவின் கவிதைகளில் வார்த்தைகள் புகுந்து விளையாடுகின்றன. மயக்க நிலையில் கொடுக்கப்படும் அறுவைச்சிகிச்சை போல , மயக்கும் வார்த்தைகளுக்குள் வந்து விழுகின்றன நல்கருத்துக்கள். சுதா யுவராஜின் 'புரட்சி செய், புரட்சி செய்' என்னும் கவிதை பிறப்பு முதல் இறப்புவரை பெண்ணுக்கு நேரும் கொடுமைகளைப் பட்டியலிட்டு,.புரட்சி செய் என விளிக்கின்றார். கோபமும், நியாயமும் கொப்புளிப்பதை வார்த்தைகளில் அப்படியே வடித்திருக்கின்றார். வாழ்த்துக்கள் சுதா யுவராஜ். சுதா யுவராஜின் ' விஞ்ஞானி கவிஞனானால் ' என்னும் கவிதை நல்ல கற்பனை .

'நெஞ்சில் சுமந்து வளர்த்த எனை
நட்ட நடு வீதியில் விட்டுவிடாமல்
முதியோர் இல்லத்தில் சேர்த்த' தன் கண்மணியை நலமுடன் நூறாண்டு வாழ வாழ்த்தும் சென்னை சியாமளா ராஜசேகரனின் கவிதைகள் 'ரசிக்க வாங்க' என்று அழைக்கின்றன. 'மனிதை மயக்கும் மழலை ' பாடும் சரண்யா, 'வேண்டாத நட்பை'யும்,'வாழ்க்கையை'யும் பாடும் நாகின் கருப்பசாமி, 'தாய்மை'யின் பெருமை பாடும் உத்தரப்பிரதேசம் புனிதா வேளாங்கன்னி, 'பிள்ளையில்லாதவள் ' படும் பாட்டை கனமான வார்த்தைகளால் கவிதையாகத் தொடுத்திருக்கும் உமா பாரதியின் ' என்னைப் பற்றியோ, என் கனவுகளைப் பற்றியோ எப்போதாகிலும் நீ அறிவாயா? ' என்னும் 'என் கணவனே ' என்னும் கவிதை படிக்கும் எல்லா கணவன்மாரையும் யோசிக்க வைக்கும்.

' வணக்கத்திற்குரிய வயிறே ' என்று மருத்துவரைப் போல கவிதை சொல்லும் குஜராத் யாத்விகா கோமுவின் 'புத்த்கம் ' கவிதை புத்தகத்தின் பெருமை பேசுகிறது.

மொத்தத்தில் இந்தத் தொகுப்பு, பல பெண் கவிஞர்களின் , பல பாடு பொருள், பல்சுவை கவிதைகளின் தொகுப்பாய் தித்திக்கின்றது. பெண் மனதைப் புரிந்து கொள்ள, அவர்களின் மன ஓட்டங்களைப் புரிந்து கொள்ள உதவும் தொகுப்பு. எல்லோருமே, ஒரு எல்லைக்குள் இருந்தே எழுதப்பட்ட கவிதைகளாக உள்ளன. இன்னும் உள்ளத்தின் கோபத்தையெல்லாம் , மகிழ்ச்சியையெல்லாம், துக்கத்தையெல்லாம் எழுத்துக்களில் வடிப்பதற்கு ஒரு முன்னோட்டமான தொகுப்பாக இந்தத் தொகுப்பு உள்ள்து எனலாம். தொகுத்து அளித்த தோழர் அகன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நன்றி : எழுத்து.காம்


Thursday 1 May 2014

நிகழ்வும் நினைப்பும்(22) : மழையும் வருண பூசையும்

நிகழ்வும் நினைப்பும்(22) : மழையும் வருண பூசையும்

                             நேற்று 30.4.2014, மதுரையில் நல்ல மழை. சரியான நேரத்தில், எப்போது மழை பெய்யும் என்று மக்கள் ஆர்வமாக இருந்த நேரத்தில் பெய்த மழை. மகிழ்ச்சியாக இருந்தது. இடியும், மின்னலும், காற்றும் என கோடை மழைக்கே உரித்தான பக்க வாத்தியங்களோடு கொட்டித் தீர்த்தது  மழை. ஒரு தமிழ் பத்திரிக்கையில்  ' வருண பூசை ' செய்தலால் மழை என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு இருந்தார்கள். என் மகள் அறிவு மதி , 'அப்பா 5 மாதமாக மழை இல்லை, கடந்த 5 மாதமா கடவுளுக்கு எதுவும் பூசை செய்யாமலா இருந்தார்கள் ? இப்படி போயி , அறிவுக்கு பொருந்தாமல்  பத்திரிக்கையில் செய்தி போட்டிருக்கின்றார்களே ? " என்றாள். அப்படித்தான் போடுவார்கள் என்றேன் நான் அவளிடம் .

                  200, 300 ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி செய்தி போட்டிருந்தால் ,ஏதோ தெரியாமல் போட்டிருக்கின்றார்கள். மழை எப்படி பெய்கின்றது என்று தெரியவில்லை. அதற்கான அறிவியல் காரணங்கள் புர்யவில்லை என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இன்றைக்கு பத்திரிக்கைகள் இப்படி செய்தி போடுகின்றன, தமிழக அரசின் இந்து சமய்அறநிலையத்துறை வருண பகவான் பூசை செய்யச்சொல்கின்றது என்று சொன்னால், நமது மக்களை எவ்வளவு ஏமாளிகளாக ,கோமாளிகளாக நினைக்கின்றார்கள் இவர்கள்

                    ஒரு மாதத்திற்கு முன்னால், பால் விற்கும் பெண்மணி சொல்லிக்கொண்டிருந்தார் பக்கத்தில் இருக்கும் பெண்மணியிடம். "என்னங்க, ரிசர்வ் லைன் மாரியாத்தாளுக்கு, கூழ் ஊத்தி, கும்பிட்டும் மழையைக் காணாமே" என்று . அவர் படிக்காத பெண்மணி , ஏதோ மாரியாத்தாளுக்கு கூழ் ஊத்துறதுக்கும், மழை பெயவதற்கும் தொடர்பு உண்டு என்று நம்புகிறார் என எண்ணலாம்.

                  பக்கத்தில் இருக்கும் கேரளாவில் நல்ல மழை பெய்கின்றது , மழைக்காலங்களில். பெரும்பாலும் அவர்களின் வீடுகளைப் பார்த்தால், வீட்டிற்குள் மரம் வளர்ப்பதற்குப் பதிலாக, மரங்களுக்குள் வீடு கட்டுகின்றார்கள். ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் 30, 40 மரங்கள் இருக்கின்றன, தமிழகத்தில் ,கிராமப்புறங்களில் கூடவீடுகளுக்குள்ளோ, வீட்டைச்சுற்றியோ மரங்கள் இல்லை. மரம் வளர்ப்பதற்கான மன்நிலை மக்கள் மனதில் இல்லை. ஊர் ஊருக்கு, பங்குனி உத்திரமும், பங்குனிப்பொங்கலும் கொண்டாடி, மாரியாத்தாளுக்கும் , காளியாத்தாளுக்கும் இலட்சக்கணக்கில் செலவு செய்து கூழ் ஊற்றும் இந்த கோமாளிகளுக்கு மரத்திற்கும் மழைக்குமான தொடர்பு தெரியவில்லை. பெரும்பாலான கண்மாய்கள் அழிக்கப்பட்டு , பிளாட்டுகளாக மாறிவிட்டன., இருக்கும் கண்மாய்கள் தூர் வாரப்படவில்லை. சின்ன சின்ன நீர்த்தேக்கங்கள் இல்லை. மழை நீர் சேகரிப்பு ஏட்டளவில் இருக்கிறது. இப்போது நடைமுறையில் இல்லை. ஊர்த்திருவிழாக்கள் என்னும் பெயரில் இலட்சக்கணக்கில் செலவு செய்து வான வேடிக்கைகள் போடுகிறார்கள் . போட்டி போட்டிக்கொண்டு போடப்படும் இந்த வெடிகள் , சுற்றுப்புற சூழலுக்கு கேடு என்பதையோ, மழை வராமல் போவதற்கு கார்பன் டை ஆக்சைடு கூடுவதும் ஒரு காரணம் என்பதையோ இந்த மக்களுக்கு தெரிவிப்பதில்லை. டேய், மழை வருவதற்கும் , மழை வராமல் போவதற்கும் கட்வுள்தான் காரணம் என்று ஒற்றை வரியில் முடித்து விடுகிறார்களே, இது கொடுமை இல்லையா ? மூடத்தனம் இல்லையா? முட்டாள்தனம் இல்லையா?  

                        சின்னப்பிள்ளைகளாக நாங்கள் இருந்த காலத்தில், கிராமத்தில் மழை பெய்கிற போது, சிலர் மழையை கடவுள் ஒன்னுக்கு அடிக்கிறார் என்பார்கள், அவர் ஒன்னுக்கு அடிக்க மறந்து போனால் என்ன ஆகும் என்பார்கள் . அப்படிப்பட்ட மன்நிலையில் பத்திரிக்கைகளும், அரசாங்கமும் இருந்தால் நாம் எங்கே போய் இந்தக் கொடுமையை சொல்வது . எல்லாவற்றிற்கும் கடவுளோடு கனெக்சன் கொடுத்து விடுகின்றார்கள். கடவுள் சிலை கோவிலிலேயே காணாமல் போகிறதே, அப்போ உங்க கடவுள் எங்கே போயிருந்தார், ஏதாவது லீவு போட்டுட்டு நம்மாளுக வீடடைப் பூட்டி போன நேரத்திலே கொள்ளை போவது மாதிரி, உங்க கடவுள் டூர் போயிருந்தாரா ? என்று கேட்டால் நம்மை முறைக்கின்றார்கள்.