Friday 19 November 2021

திறனாய்வு போட்டியில் முதல் பரிசு பெற்ற எழுத்தாளர்-வழக்கறிஞர் சித்ராதேவி அவர்களின் திறனாய்வு....தீவிர சிகிச்சைப் பிரிவு

 



தீவிர சிகிச்சைப் பிரிவு-

சிறுகதை.
கதாசிரியர்:- வா.நேரு அவர்கள்
கதாசிரியர் பகுத்தறிவாளர் மற்றும் முற்போக்குச் சிந்தனையாளர்.கதையிலும் அது கலக்காமல் இருந்தால் எப்படி?
பிறப்பும், இறப்பும், சர்வசாதாரணமாக வந்துபோகும், சகல வசதிகளையும்( எல்லாம் மதம் சார்ந்த கோயில் உட்பட) உடைய,மிகப்பிரம்மாண்டமான மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவின், உள்ளே, வெளியே தான் ,கதையின் களம் .
கதையின் கதாநாயகனான முத்து, அவன் தனது தாயின் சிகிச்சைக்காக 15 நாட்களாக, அந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் அவனைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் கதை.
தேவையில்லைன்னா கடவுளிடம் ஏன் போகிறான்? பயமும் சுயநலமும் தான் கடவுள் பக்திக்கு அடிப்படை என்ற முத்துவின் எண்ண ஓட்டம், பெரியார் சிந்தனையைத் தெளிக்கிறது.
வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கும் அம்மா, பேச முடியாமல் கண்ணீர் விடுவது கொடுமை முத்துவுக்கும்,நமக்கும்.
அங்கு ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் அந்த குழாய்களில் இணைப்புகள், அதன் மின் கருவிகளின் சப்தங்கள் தான், அந்த அமைதியை கலைப்பதாக இருந்திருக்க வேண்டும். ஒரு முறை அதற்குள் சென்று வந்தாலே, வாழ்க்கை இவ்வளவுதான் என்ற பக்குவம் வந்துவிடும்.
இதை சுடுகாடு அமைதி என ஆசிரியர் குறிப்பிடுவது பொறுத்தமே.
தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளே நோயாளியைப் பார்க்க, ஒரு நாளுக்கு ஒரு முறை தான்,அனுமதி அளிக்கிறார்கள்.அங்கி அணிந்து கொண்டுதான் உள்ளே அனுமதி.முத்து, மருத்துவரின் வெள்ளை நிற அங்கியை அணிந்து கொண்டு செல்வது, அந்த கதையின் இறுக்கத்தை தளர்த்தும் நிகழ்வு.
அந்த தீவிர சிகிச்சைப் பிரிவின் முன்,மூட்டை முடிச்சுகளோடு,,
கண்ணீர், கதறல் ,அழுகைகளோடு காத்திருக்கும் முகங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.
நேரில் பார்ப்பது போன்ற நேரடிக்காட்சி.
பலவித நோயாளிகள் 20 வயது, 42 வயது, 20, 30 ,10 வயது என பலவித நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவின் உள்ளே.அவர்களின் உறவுகள் வெளியே தள்ளாடும் தள்ளாட்டம்,
உள்ளே நோயாளிகள் படும் துன்பத்தைவிட, வலிகள் நிறைந்த பதைபதைப்புடன் கூடிய வலி.அதை அப்படியே காட்சிப்படுத்திய கதாசிரியருக்குப் பாராட்டுகள்.
20 வயதே ஆன பாம்பு கடித்த தன் மகனை எப்படியாவது பிழைக்க வைக்கும் தவிப்புடன் , அப்பா கோயிலுக்குப் போவதும் வருவதுமாக இருக்க ,அவன்
அம்மா ஒப்பாரியுடன்
,கண்ணீர் மல்க காத்திருப்பதும்
எவ்வளவு வேதனை..?!!
இன்னொருவர், சாலைவிபத்தில் அடிபட்ட தன் மகனை பற்றிப் புலம்பி புலம்பி தவிப்பதும்,அவர்
சிலுவையும்,பைபிளும், ஆக ஒருபுறம் பிரார்த்தித்துக் கொண்டு,
குடும்பத்தின் மேல் அன்பைப் பொழிகின்ற ஒரு ஆசிரியர், அளவுக்கு அதிகமான காய்ச்சலினால்,உள்ளே.அவரின்
பெண் குழந்தை செல்வி
ஒரு கடவுள் படத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கடவுளிடம், என் நேரமும் பிரார்த்தித்தபடி இருந்தது, நெஞ்சை கவ்வியது.
அவள் அப்பா
இறந்து விட்டார் என குழந்தை உணரும்போது, அவள் கையிலிருந்த, அந்த கடவுள் படம், விழுந்து, உடைந்து போவதாகவும் அவள் அதை கண்டுகொள்ளாமல், கடந்து போவதாகவும் எழுதியிருப்பார் கதாசிரியர்.சிறப்பான எழுத்து.
அந்த குடும்பத்தின் அன்பில் நான் உருகிவிட்டேன்.
அவசரத் தேவைக்காக மருந்து வாங்கச் சென்றால் ,அங்கு அலட்சியமாக மருந்து எடுத்துக் கொடுப்பது, ராக்கெட் வேகத்தில் செலவு.பொருள்களை அடகு வைத்தும், காடு ஆடு, மாடு இதனை விற்று கொண்டு வந்து, நோயாளிகளை காப்பாற்ற, உறவுகள் தவிக்கும் தவிப்பும்,கலக்கமும், மருத்துவமனை ஒரு தொழிற்சாலை போல, என முத்துவுக்கு தெரிவது வியப்பொன்றுமில்லை.
பிறப்பவர்கள்,இறப்பவர்கள்,இருப்பவர்கள், நோயாளிகளுக்கு மத்தியில், வாழ்ந்து பழகிவிட்ட, அந்த மருத்துவமனை ஊழியர்கள், மனசு மறுத்துப் போவதில் ஆச்சரியமில்லை.அவர்களை
காசுக்கு படுக்கும் ஒருத்தியோடு ஒப்பிட்டு இருப்பது,சரியாகப்படவில்லை.ஆசிரியர் வேறு உதாரணம் கூறியிருக்கலாமே?
ஒவ்வொருவருக்காகவும் வருத்தப்பட்ட மனநிலையில் அவர்கள் இருந்து கொண்டிருந்தால், பணியில் எப்படி செயல்பட முடியும்??என்பது என் கேள்வி.
கடவுள் உண்டா?மனிதம் உண்டா? என்பதே இந்தக் கதைக்குள் உள்ள
கேள்வி.
எதைத் தின்னால் பித்தம் தெளியும் "என்பவர்களுக்கு,மதம், கடவுள் ஒரு பிடிப்புத்தான்.
இக்கதையில்,
" இழந்தவன் குடும்பத்தில் இறைவன் இறக்கிறான் .
பிழைத்தவன் குடும்பத்தில் இறைவன் இருக்கிறான்."
"ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் மனிதன் இயங்கிக் கொண்டிருக்கிறான். அதில் மதம் அந்த நம்பிக்கையைக் கொடுக்கிறது."என்பது என் கருத்து.

திறனாய்வு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற எழுத்தாளர் அர்ஷா மனோகரன் அவர்களின் திறனாய்வு....தீவிர சிகிச்சைப் பிரிவு

 சிறுகதை

தீவிர சிகிச்சைப் பிரிவு
எழுத்தாளர் : முனைவர் வா. நேரு
"நீங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் நீங்கள்
எங்களுக்குக் கொடுக்கும் பரிசு"
என்ற மருத்துவமனை வாசகத்தோடு ஆரம்பிக்கிறது தீவிர சிகிச்சைப் பிரிவு.
எழுத்தாளர் வாசகனின்
மதநம்பிக்கைகளையும் நடைமுறை சிக்கல்களையும் நாசுக்காய் சுட்டிக் காட்டி வாசிப்பின் முடிவில் நம்பிக்கை சார்ந்த உணர்ச்சிகள் அடிப்படையில் கட்டுண்டு கிடக்கின்ற மூளைக்குள் இருக்கின்ற கற்பனை கடவுளுக்கும் நம்பிக்கைகளுக்கும் அறுவை சிகிச்சை செய்து சமூகத்தின் குறைகளை வாசகனுக்கு சுட்டிக்காட்டுகிறார். தெளிவான சிந்தனையை தூண்டி வாசகனின் சிந்தனையை சீரமைத்து அதையே பரிசளித்து அனுப்பி வைக்கிறார்.
கதையின் நாயகன் முத்து
கடவுள் நம்பிக்கை மீதான தன் ஆதங்கத்தை வாழ வேண்டியவர்கள் ஏன் சாக வேண்டும் மருத்துவமும் காப்பாற்றாது நம்பிக்கையும் காப்பாற்றாது என்றான பிறகு சிலைகளும் சித்திரங்களும் பூஜைகளும் வேண்டுதல்களும் ஆரத்தி ஆராதனைகளும் எதற்கு என்ற சாமானியனின் பிரதிநிதியாகிறான்.
தனியார் மருத்துவமனைகளின் தேவையற்ற வசதிகளும் தேவைக்கதிகமான கட்டணங்களையும், முடிவில் அவர்களது கையறு நிலையும் நிச்சயமற்ற உத்தரவாதமற்ற சிகிச்சையும் ஒரு சாமானியனின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அது என்ன தொழில் கூடமா பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய உயிர்களைக் காப்பாற்ற நம்பி வருகின்றவர்களின் வாழ்க்கை அதன்பின் அடங்கி இருப்பது ஒரு குடும்பத்தின் கண்ணீர்
குறிப்பிட்ட நபரின் குடும்பத்திற்கான முக்கியத்துவமும் என எத்தனை எத்தனை நுணுக்கங்கள் உள்ளடக்கிய இந்த வாழ்க்கையில் சர்வசாதாரணமாகக் கட்டணங்கள் நியமிக்கப்பட்டு உயிர்களோடு விளையாடும் தனியார் மருத்துவ மனைகள் எங்கே போய்க்கொண்டிருக்கிறன.
எல்லோரும் தனியார் மருத்துவமனையை நோக்கி விரைகிறோம் அப்படியென்றால் அரசின் ஒதுக்கீடுகளும் அரசு மருத்துவமனைகளும் என்ன செய்து கொண்டிருக்கின்றன ஏன் நாம் அங்குச் செல்வதில்லை என்ற எண்ணங்களும் பல்வேறு கேள்விகளை மனம் கேட்கத் தொடங்க சிந்தனைகள் வேறு திசை நோக்கி விரியத் தொடங்கி விட்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு என்று தனி மருந்தக பிரிவு இருக்கக் கூடாதா என்பதில் நாம் அன்றாடம் பார்க்கக் கூடிய மருத்துவமனைகளின் நெருக்கடிகளையும் நமது பதட்டத்தைப் புரிந்து கொள்ளாத எதிராளியின் குணத்தையும் சிறப்பாகச் சித்தரித்துள்ளார்.
எல்லா மனிதர்களும் தனக்கு ஏற்படுகின்ற பயம் சுயநலம் இவற்றால்தான் இறைவனைத் தேடுகிறான் அதில் மாற்றுக்கருத்தில்லை. அதையே எழுத்தாளரும் சுட்டிக்காட்டுகிறார்.
மருத்துவமனைகளும் மருத்துவ கட்டணங்களும் அவை வெறும் தொழிற்சாலை கூடங்களே.
ஒரு ரயில் பெட்டியைப் போல் மருத்துவமனையும் பல்வேறு மனநிலையில் உள்ள மனிதர்களைச் சுமக்கிறது. புதிய வரவு மகிழ்ச்சியையும் ஒரு உறவின் மறைவு துன்பத்தையும் தருகிறது இந்த இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையில் மனிதன் படுகின்ற அல்லோலங்கள் தான் எத்தனை எத்தனை?
வாழ்ந்து விட வேண்டும் என்ற ஒன்றைத் தவிர மருத்துவமனைக்கு வர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
வயது வித்தியாசமின்றி போராடும் நோயாளர்கள் அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் குடும்பத்தார். முயற்சிக்குத் தடை நிற்கும் மருத்துவமனை கட்டணங்கள். எல்லாவற்றையும் கடந்து நிற்கும் கடவுள் நம்பிக்கை.
கடைசியில் கைவிட்ட கடவுள்கள்
என் ஆசிரியரின் ஆதங்கம் நம்மைத் தொற்றிக்
கொள்கிறது.
கல்வியும் மருத்துவமும் அனைத்து சாமானியர்களுக்கும் குறைவின்றி கிடைக்க வேண்டும் அதில் எந்த பாகுபாடும் ஏற்றதாழ்வும் இருக்கக்கூடாது. பிறந்த எல்லா உயிர்க்கும் வாழும் உரிமை உண்டு அவ்வுரிமை பணத்தால் நிர்ணயம் செய்யப் படக்கூடாது.
வீட்டைவிற்று காட்டைவிற்று இறுதியில் பயனற்றுப் போன மருத்துவமும் செலவழித்த பணமும் நெஞ்சைப் பிழிகிறது.
மருந்துகளும் மருத்துவரும் இருக்கின்ற இடத்தில் கண்ணுக்குத் தெரியாத கடவுள் எதற்கு அவரால் மட்டும் எப்படிக் காப்பாற்ற முடியும் மருத்துவமனைக்குள் மத வழிபாட்டுக் கூடங்கள் எதற்கு?
இப்படி மனித உணர்வுகளோடு விளையாட உன்னதமாகக் கட்டமைக்கப்பட்டுத் திட்டமிட்டுத் திருடும் கூட்டங்கள் கையில் அல்லவா
மருத்துவமும் கல்வியும் இன்று சிக்கி தவிக்கிறது.
ஒரு இடத்தில் கூட கதையை வாசிக்கின்றோம் என்ற எண்ணம் வரவில்லை.
ஒரு மருத்துவமனையில் உட்கார்ந்து அனுபவித்த காட்சிகளாகவே உணரமுடிந்தது கதையின் இறுதிக் காட்சி நம்மை ஒரு சில நிமிடங்கள் உலுக்கிவிட்டது அந்த குழந்தைச் சாமி படத்தை விட்டு தந்தை பின் கதறிச் செல்லும் காட்சி மனம் கனத்தது. கண்முன் விரித்த அத்தனை காட்சிகளும் உண்மைக்குச் சாட்சிகளே.
அருமையான
வாசிப்பு அனுபவமும் சமூக கல்வியையும் போதித்தது இச்சிறுகதை.

Thursday 18 November 2021

தீவிர சிகிச்சைப் பிரிவு.....திறனாய்வு.....எழுத்தாளர் வாசுகி தேவராஜ்

 தீவிர சிகிச்சைப் பிரிவு - வா.நேரு

*******************************************
சமூகத்தின் இன்றியமையாத ஒரு அங்கமான மருத்துவமனையில் நிகழும் சம்பவம் தான் கதை.
"நீங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு" இப்படியாக கதை களமாட ஆரம்பிக்கும் ஆசிரியர் கதையின் சூழலையும் காட்சியையும் அழகாய் அடையாளம் காட்டிவிட்டு நிற்கிறார்.
மருத்துவமனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் எத்தனை கலை நயத்துடன் கட்டப்பட்டிருந்தாலும் அதை ரசிக்கவோ ஆராதிக்கவோ யாருக்கும் நேரம் இருப்பதில்லை. அல்லது மனம் அதில் ஒன்றுவதில்லை. அதிலும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வருபவர்களின் நிலை பரிதாபகரமானது.
சில பல லட்சங்களை கொடுத்து அம்மாவை காப்பாற்ற துடிக்கும் முத்துவோடு இன்னும் சில நோயாளிகளின் உறவினர்கள்...
பாம்பு கடித்த பையனை தூக்கி வந்தவர்கள், விபத்தில் சிக்கிய மகனை கொண்டு வந்தவர், காய்ச்சல் கண்ட கணவரை அழைத்து வந்த குடும்பம் என பலர்....
தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டவர்களை பிணமாக எடுத்துச் செல்லும் சூழல்...
இவையெல்லாம் முத்துவுக்கு பழக்கப்படாதவை. ஒவ்வொரு நிகழ்வும் முத்துவை பெரிதும் பாதிக்க, மனிதர்களின் ஆற்றாமை துயரங்களை மிகச் சாதரணமாக கடக்கும் மருத்துவமனை ஊழியர்கள் புதிராக தோன்றுகிறார்கள்.
அவர்களின் இறுகிய மனப்போக்கை விலைமகளுடன் ஒப்பிட்டு காட்டுவது கொஞ்சம் நெருடல் தான்.
(மருத்துவமனை ஊழியர்கள் மனப்போக்கு பழக்கத்தால் - யதார்த்தத்தை புரிந்து ஏற்றுக்கொள்வதால் வரும் உணர்வு. விலைமகள் வாழ்வை வெறுத்து விரக்தியில் வரும் உணர்வு. இரண்டையும் ஒப்பீடு செய்வது சரியல்ல என்பது என் கருத்து)
மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிக்காக இரக்கப்பட்டு கலங்க ஆரம்பித்தால் மற்ற நோயாளிகளின் நிலை என்னவாகும் என்பதையும் சொல்லியிருக்கலாம்.
காய்ச்சல் கண்ட தந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்கும் சிறுமி கடவுள் படத்தை வைத்து பிரார்த்தனை செய்தபடி இருக்கிறாள். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்களே அது போல.
"இனிவரும் உலகம்" புத்தகத்தில் பெரியாரின் சொற்களை "தேவை அற்றுப்போன இடமே கடவுள் செத்துப்போன இடமாகும்" எடுத்தாண்ட விதம் அழகு.
(பெரியாரின் புத்தகத்தை அடுத்த தலைமுறையை தேட வைக்கும் இடம்)
மருந்து வாங்குமிடத்தில் தாமதமாவது, பொறுப்பற்று நடந்து கொள்வது கண்டிக்கபட வேண்டிய ஒன்று தான்!
மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு ஆபத்து நேர்கையில் தத்தளித்து போகும் மனம் தன்னையும் அறியாமல் கடவுளை நாடுவதும் பிரார்த்தனை பலிக்காவிட்டால் உடைந்து போய் கடவுளை திட்டி தீர்ப்பதும் சாமானியர்களின் வாழ்வில் நிகழும் யதார்த்தம் என்பதை செல்வி மூலம் அழுத்தமாக சொல்கிறார் ஆசிரியர்.
வாழ்த்துகள் சார்
நேசமுடன்
வாசுகி தேவராஜ்

தீவிர சிகிச்சைப்பிரிவு ....திறனாய்வு

எனது சிறுகதைகளைத் தொகுத்து,சென்னை எம்ரால்ட் பதிப்பகத்தின் எழிழினி பதிப்பகம் 'நெருப்பினுள் துஞ்சல்' என்னும் தலைப்பில் வெளியிட்டது. அந்தத் தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையான 'தீவிர சிகிச்சைப்பிரிவு  ' என்னும் சிறுகதையை 'வாருங்கள் படிப்போம்' வாட்சப் குழுவில் திறனாய்வு செய்வதற்கான போட்டி அறிவித்து இருந்தார்கள்.அதில் 6 பேர் பரிசு பெற்றார்கள்.முதல் பரிசினை  சித்ராதேவி அவர்களும்,இரண்டாம் பரிசினை அர்ஷா மனோகரன் அவர்களும்,மூன்றாம் பரிசினை வாசுகி தேவராசன் அவர்களும்,நான்காம் பரிசினை பார்வதி நல்லியண்ணன் அவர்களும்,ஐந்தாம் பரிசினை இருவர்,வெண்ணிலா காமராஜ் அவர்களும் ம.வீ.கனிமொழி அவர்களும் பெற்றனர்.ஆண்களும் போட்டியில் கலந்து கொண்டாலும் பரிசு பெற்ற ஆறு பேருமே பெண்கள். அத்தனை பேருக்கும் பாராட்டுகளும்,வாழ்த்துகளும்... அதில் கலந்து கொண்ட சகோதரி பூங்கோதை கனகராஜன் அவர்களின் திறனாய்வு இது. ஒரு எழுத்தாளனுக்கு கொட்டிக் கொடுக்கும் பரிசே,படித்து விட்டுத் தனது கருத்தை எழுதுவதுதான்.படித்து,திறனாய்வு எழுதிய அத்தனை தோழமைகளுக்கும் இதயம் கனிந்த நன்றி. முக நூலில் ,'தீவிர சிகிச்சைப் பிரிவு " சிறுகதை பற்றி தனது திறனாய்வுக் கருத்துகளைப் பதிந்துள்ள கவிஞர் பூங்கோதை கனகராஜன் அவர்களின் கருத்து.....


தீவிர சிகிச்சைப் பிரிவு

ஆசிரியர்:முனைவர்.வா.நேரு 

பதினைந்து நாட்களாக அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளேயும்,வெளியேயும் அல்லலுறும் மனிதர்களின் உணர்வுகளை வலியோடு வடித்தெடுக்கிறார் ஆசிரியர். வார்த்தை உளி கொண்டு கதைச்சிலையில் படாமல் உள்ளத்தில் வலியாக கொத்துகிறது கதை.

மூட்டை முடிச்சுகளோடு அவசர ஆத்திரங்களுக்கு ஒதுங்கக் கூட பக்கத்திலிருந்தவரைப் பார்த்துக் கொள்ளக் கூறி மனம் நிறைய சுமையோடு ஆடியோடி அயராமல் உழைத்த அம்மா வாய் பேச முடியாமல் கண்ணில் நீர் வழியப் படுத்துக் கிடக்க, காசு தண்ணீராய்க் கரைய தாயைக் காப்பாற்ற வேண்டி பாடுபடும் முத்துவின் கண்களில் துயரக் காட்சிகள் விதவிதமான மனிதர்களோடு. 

பாம்பு கொத்திப் படுத்துக் கிடக்கும் மகனுக்காக மருத்துவமனைக் கோவிலில் வேண்டிக் கொள்ளும் குடும்பமும், சென்னையிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து விபத்துக்குள்ளான மகனின் தவறைக் கவலையோடு விவரிக்கும் தந்தையின் சொற்களும் துயரத்தின் மறுஉரு.

காய்ச்சலுக்காக சேர்க்கப்பட்ட தந்தைக்காக கையில் சாமி படத்துடன் செல்வி வேண்டிக் கொண்டிருக்க, செல்வியின் அப்பா மருத்துவமனையில் காப்பாற்ற முடியாமல் அவளை விட்டு விட்டுப்போனதறிந்து கத்திக்கதறி ஓடிய செல்வியின் கையிலிருந்து விழுகிறது சாமிப்படம் . 

எத்தனை எத்தனை உணர்வுகள் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளன உறவினர்களின் மனதிலென திடுக்கிடும் சம்பவங்கள் கோர்த்து நம்மையும் கலங்க வைக்கிறார் ஆசிரியர். 

அவசரமாக மருந்து வாங்கச் சென்ற இடத்தில் அவர்கள் விளையாட்டாக பேசிக்கொண்டே தாமதப் படுத்த உங்கள் வீட்டில் இப்படி யாராவது படுத்திருந்தால் தாமதப்படுத்துவீர்களா என்று கேட்கும் இடம் வேதனையான யதார்த்தம்.

கோவில் வளாகத்தில் ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கோவில் கட்டியவர்கள்,பணம் கட்ட செல்லும் இடத்தில்  தீவிர சிகிச்சைப் பிரிவினருக்கு மட்டும் தனி மருந்துக்கடை வைக்க மாட்டார்களா, மத வழிபாட்டுத் தலங்கள் இத்தனையை வைத்தவர்கள் இதனை வைக்கக்கூடாதா என எண்ணம் முத்துவின் மனதில்  ஓடியது.

இந்த இடத்தில் முத்துவின் ஆதங்கமாக சரியான கேள்வியில் முன் வைக்கிறார் ஆசிரியர். 

எத்தனை பணம் செலவானாலும் சுற்றத்தார் உயிரைப் பெரிதாக மதிக்கும் உள்ளங்களை இதைவிடத் தெளிவான வரிகளில் விளக்க முடியாது. படிக்கும் நம் மனம் சில்லுசில்லாக சிதற வலி நிறைந்த வார்த்தைகளை மருத்துவமனை வராந்தா வழியெங்கும் சிதற விட்டிருக்கிறார். 

கதை படித்து முடித்த பின் ஒரு நல்ல கதை படித்த திருப்தியுடனும், மனம் கொஞ்சம் சோகத்துடனும்  நிறைவது நிச்சயம். 

பூங்கோதை கனகராஜன்.