Tuesday 24 March 2015

அண்மையில் படித்த புத்தகம் : கெடை காடு(நாவல்)

அண்மையில் படித்த புத்தகம் : கெடை காடு(நாவல்)
ஆசிரியர்                                    : ஏக்நாத்
பதிப்பகம்                                   :  காவ்யா, சென்னை -24. 044- 23726882
முதல் பதிப்பு                             :   2014, 184 பக்கங்கள், விலை ரூ 170.





                                           வாசிப்போர் களத்தில் கவிஞர் பாலகுமார் (JTO)  அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நாவல். அவரிடம் இரவல் வாங்கி வந்து படித்தேன். வித்தியாசமான வாசிப்பு அனுபவமாக இருந்தது . இன்று நகரத்தில் வேலைபார்க்கும் ஏக்நாத்தின் இளவயது அனுபவமாக , 1980-களின் இறுதியில்  நிகழ்ந்த நிகழ்வாக இக்கதை சொல்லப்பட்டுள்ளது. என்னதான் நாம் நகரத்தில் கணினிக்கு முன் அமர்ந்து வேலை பார்த்தாலும், கிராமத்திலிருந்து வந்தவனுக்கு கிராமத்து ஓடையும் , கிணறும் , ஆடும், மாடும் அங்கு வாழும் பல்வகைக் குணமுடைய மனிதர்களும்தான் 20, 30 ஆண்டுகளுக்கு பின்னும் கூட நினைவில் இருக்கிறது. கிராமத்திலிருந்து வந்த ஏக்நாத் தன்னுடைய கிராமத்தை, மாடுகளை , மாடுகளைப் போலத் தெரியும் சில மனிதர்களை , அவர்களின் குணங்களை கதையாக வடித்திருக்கின்றார். நானும் ஒரு மேற்குத்தொடர்ச்சி மலைக்கு கீழே உள்ள சாப்டூர் கிராமத்தில் வளர்ந்தவன் என்பதலோ, கிடை அமர்த்தும் மனிதர்களை இளம் வயதில் நன்றாக அறிந்தவன் என்பதாலோ என்னவோ, மிகவும் நெருக்கமான ஒரு கதையாக இக்கதை வாசிப்பு எனக்கு அமைந்தது.

                                     கிராமத்து மனிதர்களை அப்படியே வார்த்தைகளில் வார்த்தெடுத்திருப்பது இந்த நாவலின் சிறப்பு . முதல் பக்கத்தில் உச்சிமாகாளி என்னும் மனிதனை அறிமுகப்படுத்தும் வார்த்தைகளிலேயே , வர்ணனைகளிலேயே தான் ஒரு சிறந்த கதை சொல்பவன் என்பதனை நிருபித்துவிடுகின்றார் இந்த நாவலாசிரியர். கிராமத்தில் மாட்டுவண்டியில் படுத்திருப்பவனை அப்படியே மனக்கண்ணால் கொண்டுவருகின்றார். " வாதமடக்கி மர நிழலில் நின்றிருந்த மாட்டு வண்டியின் நோக்காலில் உட்கார்ந்திருந்தான் உச்சி மாகாளி. பொடதியில் கைகளை வைத்துக்கொண்டு பின்பக்கமாக அப்படியே படுத்தான். வாய் பிளந்து வந்த கொட்டாவியை விட்டுக்கொண்டு  வானம் பார்த்தான். இப்போதுதான் விடிந்து ஈரப்பதம்கொண்ட காற்று மெதுவாக உடலைத்தேய்த்துக்கொண்டு சென்றது. ....." இந்தச்சித்தரிப்பு கதையின் கடைசி வரி வரை தொடர்வது இந்த நாவலின் சிறப்பு.

                                   'குள்ராட்டி -மேற்கு மலைத்தொடர்ச்சியின் குளூ குளூ பிரதேசம்' என ஆரம்பித்து ஊரில் இருக்கும் 150 மாடுகளை காட்டுக்கு   மேய்ச்சலுக்காகப் பத்திக்கொண்டு போய் காவல் காத்து திருப்பிக் கொண்டு வந்து 10 நாட்கள் கழித்து விடுவதுதான் இந்த நாவலின் கதை. காடு, காட்டு விலங்குகள், பாரஸ்டு அதிகாரிகள் வாங்கும் கையூட்டுகள், அவர்களின் அதிகாரங்கள், காட்டுக்குள் இருக்க நேரிடும் மனிதர்களின் பரஸ்பர உதவிகள், உபசரிப்புகள், பகிர்தல்கள், எப்போதுமே அச்சத்தோடு தூங்க நேரிடும் காடு , காட்டில் எழும் வேறுபட்ட ஒலிகள், புலிகளின் கால்தடம் கொடுக்கும் பயம், செந்நாயால் கடிக்கப்பட்டு இரத்தக்காயமான மாட்டிற்கு செய்யப்படும் சூடு மற்றும் மூலிகை மருத்துவம் எனக் காட்டின் கதை விரிகிறது .  உச்சிமாகாளி, தவிட்டான், நொடிஞ்சான்,கந்தையா,  கேசரி என்று மாட்டை பத்திக்கொண்டு குள்ராட்டிக்கு போகும் மனிதர்கள்,அவர்களின் கதைகள்; நொடிஞ்சான் திருமணம் முடித்த கதை, தவிட்டான் அத்தை மகளைத் திருமணம் முடிக்காமல் விட்ட கதை, உச்சிமாகாளியிம் அப்பன் செண்பகக்கோன், அவனது அம்மா புண்ணியதாக்கும் இடையிலான தாம்பத்ய உறவு இல்லாமை, பேச்சுவார்த்தை அறுந்து போன கதை என்று நிறையக் குட்டிக் குட்டிக்கதைகள், நாவலின் தொடர்ச்சியாக இணைப்பாக கொண்டு செல்லப்பட்டிருப்பது இந்த  நாவல் ஆசிரியர் ஏக்நாத்தின் வெற்றி.

                              கிராமத்து சாதிச்சங்கம்.ராமசுப்பு என்னும் சங்கத்தலைவர். அவனது சல்லித்தனம். கல்யாணி என்னும் கணவரை இழந்த பெண். அவளது மகன். கோயிலுக்கு வீட்டு வீட்டுக்கு வரி. அதில் வரி கொடுக்கவில்லை என்று சொல்லி கல்யாணியை ஜாதியை விட்டுத்தள்ளி வைப்பது, அதனால் எழும் பிரச்சனைகள். கோயிலுக்கு வரி என்று சொல்லி ,வறுமையால் கொடுக்க முடியாதவர்களை எப்படி எல்லாம் பழி வாங்குகிறார்கள் என்பதனை மிக விரிவாகவே ஏக்நாத் எழுதியுள்ளார். சாதிக் கட்டுமானம் என்னும் பெயரில் நடைபெறும் அநீதிகளைத் தொட்டிக்காட்டியுள்ளார். இருபத்தி மூன்று வயதாகும் உச்சி மாகாளி காதலித்த, பழகிய பெண்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கின்றார். குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது எனக்கு.

                          இதுவரை எழுதாத ஒரு கதையை, தன்னுடைய இளமைக்கால அனுபவங்களால், கிராமத்து வாழ்க்கையால் எழுதியிருக்கும் ஏக்நாத் பாராட்டப்படவேண்டியவர். ஏதோ கற்பனையில் எழுதுவதுதான் சிறந்த கதை என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு மத்தியில் தனது மண்ணின் மைந்தர்களை, அவர்களது மாடுகளை கதாபாத்திரமாக எடுத்துக்கொண்டு அதனை கிராமத்து மொழியில் , அங்கு புழங்கும் வட்டார மொழிகளோடும், வசவு மொழிகளோடும் படைத்திருக்கின்றார். நகரத்துவாசிகள் எத்தனை பேருக்கு இந்தக் கதையின் மொழி புரியும் என்று தெரியவில்லை. ஆனால் கிராமத்துக்காரனுக்கு, கிராமத்திலிருந்து நகரத்திற்கு  பிழைக்க வந்த அனைவருக்கும் இந்த நாவலின் மொழி புரியும் , பழைய நினைவுகளுக்கு கொண்டு செல்லும் ஆக்கபூர்வமான படைப்பு. வாழ்த்துக்கள் இளம் எழுத்தாளருக்கு.

பரவும் கருத்துக்களின் நறுமணம்

பரவும் கருத்துக்களின் நறுமணம்

‘மாவீரர்களே, ஆயிரம் மடங்கு வணக்கம்!' என்னும் கட்டுரையை பகத் சிங்கின் வீர வணக்க நாளில் வெளியிட்டமைக்கு நன்றி. இந்திய மக்கள் அனைவருக்கும் பொது உரிமையும், பொது உடமையும் வேண்டும் என்பதற்காக இன்னுயிர் ஈந்தவர்.
‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?' எனப் புத்தகம் எழுதியவர். தமிழில் அதனை மொழிபெயர்த்து பெரியார் இயக்கம் மக்களிடம் கொண்டுசென்றது. மனித நேயத்தை மையமாகக் கொண்ட பொதுவுடமைவாதிகளின் அடிப்படைக் கோட்பாடு, கடவுள் என்னும் கருத்தியல் மறுப்புதான், மத அடிப்படையிலான சடங்குகள் மறுப்புதான். அதனை தோழர் பகத் சிங்கும் அவருடைய தோழர்களும் கொண்டிருந்தனர் என்பது வரலாறு.
மதமற்ற, மனித நேய, பொதுவுடமைச் சுதந்திரமே பகத் சிங்கின் கோட்பாடு. பகத் சிங்கை நினைவுகொள்வது என்பது அந்தத் திசை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே ஆகும். “உயிருள்ள பகத் சிங்கை விட உயிரற்ற பகத் சிங் பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகளுக்கு ஆபத்தானவன். நான் தூக்கிலிடப்பட்ட பின்னர், என்னுடைய புரட்சிகரக் கருத்துக்களின் நறுமணம் நம்முடைய இந்த அழகான தேசத்தின் சூழலெங்கும் பரவும்.
இளைஞர்களுக்கு வெறியூட்டி சுதந்திரம் மற்றும் புரட்சி ஆகியவற்றின் மீது அவர்களைப் பித்துக்கொள்ளச் செய்யும். அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் அழிவை விரைவில் கொண்டுவரும். இது என்னுடைய உறுதியான நம்பிக்கை” என பகத் சிங் கூறினார்.
ஆம், பகத் சிங் பற்றிய முழுமையான அறிதல் இன்றைய இளைஞர்களுக்குக் கிடைத்துவிட்டால், அடிப்படைவாதிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இளைஞர்களை அண்ட இயலாது. எனவேதான் மேலோட்டமாக பகத் சிங் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி என்பதோடு முடிக்கப் பார்க்கிறார்கள். அவர் அதற்கும் மேலே!
- முனைவர். வா. நேரு, தலைவர், மாநிலப் பகுத்தறிவாளர் கழகம், மதுரை

நன்றி : தமிழ் இந்து நாளிதழ் - 24.03.2015.

Tuesday 17 March 2015

ஒன்ற இயலுவதில்லை......

எப்படியோ
எங்கேயோ
ஆரம்பிக்கும் விரிசல்
அவ்வளவு எளிதாய்
ஆரம்ப நாட்களில்
கண்களுக்குத் தெரிவதில்லை

சுவற்றைப் பிளந்து
நிற்கும் விரிசல்
எளிதில் அடையாளம்
காட்டுகிறது
என்றோ ஆரம்பித்த
ஒவ்வாமையை

சுவற்றில் ஆரம்பிக்கும்
விரிசல்போல
ஏதோ ஒரு வார்த்தை
ஏதோ ஒரு செயல்
ஏதோ ஒரு உடலசைவு
ஏற்படுத்தும் விரிசல்
உடல் முழுக்கப் பரவி
மெல்லக் கொல்லும்
நஞ்சு போல
மனம் முழுக்கப் பரவி
விரிசலாய் விரிகிறது

நகமும் சதையமுமாய்
இருந்தார்களே
ஈருடல் ஓருயிர்போல
நட்பாக இருந்தார்களே
எல்லோரும் வியக்க
இணைந்து இயைந்து
இருந்தவர்களின்
விரிசல் எப்படி
ஆரம்பித்தது?
எங்கே ஆரம்பித்தது ?

விரிசலால்
விலகி நிற்பவர்கள்
வினாக்குறிகளாய்
பார்ப்பவர் பார்வைகளில்

விரிசலுக்கு ஆட்பட்டவர்களிடம்
விடைகள் கேட்டால்
பெரும்பாலும் மெளனமே
விடையாக
சில நேரங்களில் புன்னகை
மட்டுமே பதிலாக

சுட்ட மண்பாண்டங்கள்
களி மண்களாவதில்லை
மன விரிசல்கள்
உண்டான பின்
என்னதான் ஓரிடத்தில்
ஒன்றாய் நின்றாலும்
பழைய நிலையில்
ஒன்ற இயலுவதில்லை...

                        ..... வா.நேரு.....


நன்றி: எழுத்து.காம்

Wednesday 11 March 2015

அண்மையில் படித்த புத்தகம் : வேடிக்கை பார்ப்பவன்...கவிஞர் நா.முத்துக்குமார்

அண்மையில் படித்த புத்தகம் : வேடிக்கை பார்ப்பவன்
புத்தக ஆசிரியர்             :  கவிஞர் நா.முத்துக்குமார்
பதிப்பகம்                   :  விகடன் பிரசுரம்
வெளியிடப்பட்ட ஆண்டு     : செப்டம்பர் -2014, மொத்த பக்கங்கள் 240, விலை ரூ 140.

                          இந்த நூல் ' என் எல்லா கிறுக்குத்தனங்களோடும் என்னைப்பொறுத்துக்கொண்டிருக்கும் மனைவி ஜீவல்ட்சுமிக்கு '  எனக்குறிப்பிட்டிருக்கின்றார். தன்னை 'எல்லா கிறுக்குத்தனங்களோடும் ' என்று விமர்சிக்கும் இந்த மனப்போக்குத்தான் , தன் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை 'வேடிக்கை பார்ப்பவனாக ' பார்க்கத்தூண்டியதுபோலும். பதிப்புரையில் ' நா.முத்துக்குமார் வித்தியாசமாக வேடிக்கை பார்த்திருக்கிறார். இந்த சமூகத்தில் தன்னைச்சுற்றி நடந்தவற்றை புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதன் தாக்கத்தை, வலியை, சுகத்தை, இன்பத்தை இந்த நூலில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார் " என்று கூறியிருப்பது நூலை வாசிக்க, வாசிக்க பொருத்தமாகத்தோன்றுகிறது.
                          தனது தாய் இறந்த சமயத்தில் தான் அறியாப்பருவத்தில் இருந்ததை " உங்க அம்மா செத்துட்டாங்க... உன்னை கூப்பிட்டுப்போக ஆள் வந்திருக்கு " ...ஸ்கூல் ஆயா வந்து சொன்னபோது ,இவனுக்குச்சந்தோசமாக இருந்தது. மேத்ஸ் ஹோமொர்க்கை இவன் செய்யவில்லை. அடுத்த பீரியடின் அடியில் இருந்து இவன் தப்பித்துக்கொண்டதாக நினைத்தான். இவனை விட்டு தள்ளி நின்று, இவன் வாழ்க்கை இவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை இவன் அறியவில்லை.  அம்மாவின் பிணம் கிடக்க ,அறியாமல் தான் விளையாடியதையும் . 'எங்க அம்மா தலைல நான் தான் நெருப்பு வச்ச்சேன். ..எப்படி எரிஞ்சுச்சு தெரியுமா ? " என்று பால்ய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதையும் வாசிக்கும்போது நம் மனதும் கனக்கிறது.அறியாவயதில் பெற்றோரை இழப்பது பெரும் துயரம் என்பதும் புரிகிறது.

                                                   'நட்சத்திரங்களின் தேசம் ' என்று தலைப்புக்கொடுத்து, தனது அப்பாவைப் பற்றிச்சொல்வதற்கு முன் புகழ்பெற்ற எழுத்தாளர் கேப்ரியேல் கார்ஸியோ மார்க்வெஸ் சொன்ன மேற்கோளைச்சுட்டிக்காட்டுகிறார். " என் தகப்பன் எனக்கு எப்படி வாழவேண்டும் என்று நேரடியாகச்சொல்லித் தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன் " என்பதனை சுட்டிவிட்டு, " அம்மா இறந்தபிறகு, இவன் அப்பாவின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டான். இந்த உலகை பகலில் சூரியன் வழி நடத்துகிறது. இரவில் சந்திரன் வழி நடத்துகிறது. பகலிலும் இரவிலும் வழி நடத்துவது தகப்பனின் கைவிரல்களே என்பதை இவன் அறிந்துகொண்ட காலம் அது. இவன் தந்தையின் விரல்கள், இவனை பல்வேறு திசைகளுக்கு அழைத்துச்சென்றன. இந்த உலகம் இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது; அதிசயமாக இருந்தது; அதிர்ச்சியாக இருந்தது; அச்சமாக இருந்தது; தன் தந்தையின் கைவிரல்களைப் பற்றியிருந்ததால் , எல்லாமே அனுபவமாக இருந்தது " என்று பக்கம் 29-ல் கவித்துவமான உரை நடையில் தனக்கும் தனது தந்தைக்குமான பாசப்பிணைப்பைப் பட்டியலிடுகின்றார் நா.முத்துக்குமார்.

                                       'கிராமத்தில் முன் ஏர் எப்படிப்போகிறதோ , அப்படித்தான் பின் ஏர் போகும் என்பார்கள்'. தன் வாழ்வின் முன் ஏராய் , தனது தந்தை எப்படி வாழ்ந்தார் என்பதனைச்சொல்கின்றார் நா.முத்துக்குமார். 10-ம்வகுப்பு வரை தானும் தன் தந்தையும் வாழ்ந்தது குடிசை வீடு என்பதையும் தாழ்ப்பாள் இல்லாத குடிசை வீட்டிற்குள் " அந்த அறை முழுக்க மூட்டை மூட்டையாகப் புத்தகங்களை அப்பா குவித்து வைத்திருந்தார். கட்டிலிலும், கட்டிலுக்கு அடியிலும் , அலமாரியிலும் , பரணியிலும் ....கிட்டத்தட்ட ஒரு ல்ட்சம் புத்தகங்கள். வீட்டிற்கு நிறைய சிறு பத்திரிக்கைகள் வரும். எல்லாவற்றிற்கும் இவன் அப்பா சந்தா கட்டி வரவழைத்துக்கொண்டிருந்தார். கணையாழி, கொல்லிப்பாவை, அஃக், கசடதபற.... என பல்வேறு வண்ணங்கள், பல்வேறு விவாதங்களைச்சுமந்து வரும் அந்த இதழ்களை இவன் புரிந்தும் புரியாமலும் படித்துக்கொண்டிருந்தான்." என்று விவரிக்கின்றார். நாமும் கூட வியப்படைகின்றோம். புத்தகங்கள் மீதும் , சில பத்திரிக்கைகள் மீதும் தீராக்காதல் கொண்டிருந்த ஒருவரின் மகனாக வளர்ந்த சூழல், நா.முத்துக்குமார் என்னும் கவிஞரின் வளர்ச்சியின் வேர்த்தளம் என்று புரிந்துகொள்கின்றோம்.

                         ஒரு நண்பருக்காக பூங்காவில் காத்திருந்தவேளையில் , தன்னைச்சந்தித்த கல்யாணராமன் பற்றியும், அவர் தனக்கு எழுதுவது பற்றிக் கொடுத்த அறிவுரைகள் பற்றியும் முடிவில் இவர் சுந்தரராமசாமி எழுதிய ஒரு கவிதையைச்சொன்னவுடன் இடம் பெயர்ந்து நகர்ந்ததையும் சொல்லும் விதம் நகைச்சுவையாக உள்ளது என்றாலும் இன்றைய எதார்த்தம்.
"  உன் கவிதையை நீ எழுது
    எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
    எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
    நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
    உன்னை ஏமாற்றும் போலிப்புரட்சியாளர்கள்பற்றி எழுது
    சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகுபற்றி எழுது
    நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
    எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப்பற்றி எழுது
    எவரிடமும் அதைக்காட்ட முடியாமலிருக்கும்
    தத்தளிப்பைப்பற்றி எழுது
    எழுது உன் கவிதையை நீ எழுது
    அதற்கு உனக்கு வக்கில்லையென்றால் ஒன்றுசெய்
    உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
    என்னைக்கேட்காமலேனும் இரு " என்னும் கவிதை ஈர்ப்பாக உள்ளது. புத்தகம் முழுவதும் இதைப்போன்ற தான் இரசித்த கவிதைகளை, மேற்கோள்களை ஆபரணத்தில் பதியும் முத்துக்களாய் அங்கங்கே பதித்து இருக்கின்றார் நா.முத்துக்குமார்.

             " பள்ளிக்கூடத்தைப் பற்றி நினைக்கையில் வகுப்பறைகளை விட, வெளியே இருக்கிற மரங்களும் மைதானமும்தான் இவன் நினைவுக்கு வருகின்றன. இவன் பள்ளி மைதானத்தில் நட்டுவைத்த குடைகள்போல அசோக மரங்கள் வரிசையாக நின்றிருக்கும் " என ஆரம்பித்து பள்ளி நினைவுகளைப் பகிரும்பகுதி பசுமை நிறைந்த நினைவுகளை வார்த்தை ஓவியங்களால் வார்த்திருக்கிறார் எனலாம்.தனக்கு +2-வில் இயற்பியல் பாடம் எடுத்த சந்திரசேகர் மாஸ்டரால் இயற்பியலில் விருப்பம் உண்டான கதையை, இயற்பியலில் நல்ல மதிப்பெண் எடுத்து கல்லூரியில் இளம் அறிவியல் இயற்பியல் எடுத்து படித்ததைக் கூறுகின்றார். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் படித்த காலத்தை விவரிக்கின்றார். " அந்தக் கல்லூரி , பசுமை நிறைந்த நினைவுகளாக , பாடித்திரிந்த  பறவைகளாக இவனை அணைத்துக்கொண்டது. இவன் பாடம் படித்தான் . கட்டடித்து , நண்பர்களுடன் படங்கள் பார்த்தான். அவ்வப்போது பெண்கள் கல்லூரிப்பக்கம் ஒதுங்கி, பார்வைகளால் காதலும் செய்தான். கல்லூரிப்பருவம் என்பது , காலம் ஒரு மாணவனைக் கூட்டுப்புழு பருவத்தில் இருந்து வண்ணத்துப்பூச்சியாக மாற்றி வெளியே பறக்கவிடும் பருவம். இவன் சுதந்திரமாகப்பறந்தான்; பதின் வயதுகளின் பூந்தோட்டங்களில் மிதந்தான்; முள்மரங்களில் சிக்கி ,இறகுகள் கிழிந்தான்; மீண்டும் வண்ணங்களைப் பூசிக்கொண்டு வானம் அளந்தான்; கைப்பிடிக்குத் தப்பிப்போன அந்த வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்கள் , இன்றும் இவன் நெஞ்சுக்குள் கொட்டிக்கிடக்கின்றன " என விவரித்து தன்னுடைய கல்லூரிக்கால  நண்பர்களின் பெயர்களையும் குறிப்பிடுகின்றார், கல்லூரியில் தன்னோடு படித்த டி.எஸ்.இராஜராஜனும் , தானும் மாலையில் மரத்தடியில் அமர்ந்து ஒரு தலைப்புக் கொடுத்து கவிதைகளை எழுதியதைக் குறிப்பிடுகின்றார்.

                         தான் +2 படிக்கும்போது , தனது ஊரான காஞ்சிபுரத்தில் வந்து எடிட்டர் பி.லெனின்  தேசிய விருது பெற்ற 'நாக் அவுட் ' படத்தை திரையிட்டதையும் , அவரின் பேச்சு  தனது சினிமா பற்றிய பார்வையை மாற்றியதையும் குறிப்பிடுகின்றார். ' திரைத்துறைதான் தன் தொழில் என்று முடிவானதும் இவன் தன் அப்பாவிடம் எப்படிச்சொல்வது என்று பல வாரங்களாக யோசித்துக்கொண்டிருந்தான். இவன் உறவுகளிலிருந்து திரைத்துறையில் சாதித்தவர் யாரென்று பட்டியலிட்டான். அந்தப்பட்டியலில் ஒரேயொரு பெயர்தான் இருந்தது. இவன் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்ட அவர், திரைத்துறையில் தன் அடுக்குமொழி வசனங்களில் கோலாச்சினார். தமிழ் சினிமாவை திராவிடக் கொள்கைகளின் பின்னால் திசை திருப்பினார். அரசியலிலும் ஆங்கிலப்புலமையிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின்போது வரலாறு காணாத அளவு மக்கள் திரண்டார்கள். அவர்தான் பேரறிஞர் அண்ணா. இவன் அம்மா வழியிலும் , அப்பா வழியிலும் பேரறிஞர் அண்ண இவன் உறவினர் " என்று சொல்லும் நூல் ஆசிரியர் அண்ணாவின் மகன் சி.என்.ஏ.பரிமளம் இளவயதில் தன்னுடைய கவிதைகளைக் கேட்டு பாராட்டி உற்சாகப்படுத்தியவர் எனக் குறிப்பிடுகின்றார். சினிமாவில் சேரவேண்டும் என்ற ஆசையை அப்பாவிடம் சொன்னவுடன் , அவரது அப்பா நடிகர் சிவகுமார் எழுதிய 'இது இராஜாபாட்டை அல்ல' என்ற புத்தகத்தைக் கொடுத்ததையும் இரவு முழுவதும் படித்துவிட்டு , நான் சினிமாவிற்குப்போகிறேன் என்று சொல்ல அப்பாவும் அனுமதி கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

                                            தான் உதவி இயக்குநராக பணியாற்றிய படங்களை, காலங்களைக் குறிப்பிட்டுள்ளார்.  நடிக்க சான்ஸ் கேட்டுவந்த , வாழ்ந்து கெட்ட தஞ்சாவூர் குடும்பததைச்சார்ந்த ஒருவரின் கதையை 138, 139 பக்கங்களில் விவரித்துள்ளார். " வாழ்ந்து கெட்ட் வீடுகளில் இருந்து ஒரு வலி, மெள்ளக் கசிந்து காற்றில் பரவி நிலையற்று அலைவதை எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா ? கிராமத்தில் வாழ்ந்த சொந்த வீட்டை பூனைகள் உறங்கவும் , அரசமரச்செடிகள் சுவர் வழி வேர்விட்டு, வெடித்துக் கிளம்ப அனுமதித்துவிட்டு மாநகரத்து வீதிகளில் பசியுடன் அலையும் கண்கள் நடு நிசியில் வந்து உங்களை அலைக்கழித்ததுண்டா ? ..... " என வரிசையாகக் கேட்டு அவர் விவரிக்கும்போதே நமக்கும் நமக்குத்தெரிந்த வாழ்ந்து கெட்டவர்களின் வாழ்க்கை அவலங்கள் மனக்கண் முன்னால் விரிகின்றன.

                    " சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம். ஆகாயத்துக்கும் பூமிக்குமாக அடிவயிற்றுப்பயத்துடன் சுற்றிக்கொண்டு இருந்தாலும், கீழே வந்து போகும் அந்த ஒரு கணம் , மனதுக்கும் புத்திக்கும் ஏறுவதே இல்லை. நாம் எப்போதும் மேலேதான் இருந்துகொண்டிருக்கிறோம் எனும் மாயத்தோற்றத்தை சினிமா ரங்கராட்டினம் காலம் காலமாக எல்லோர் மனதிலும் தந்து கொண்டிருக்கிறது " என்று சொல்லும் ந.முத்துக்குமார் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ரங்கராட்டினம் கீழே வந்த கதையை 'முன்பனிக்காலம் ' எனத் தலைப்பிட்டுத்தருகின்றார். " வேலையற்றவனின் பகலும்,நோயாளியின் இரவும் நீளமானவை என்பதை இவன் உணர்ந்த காலம் அது. தூரத்தில் இருந்து பார்க்கையில் தங்க நிலவாகத் தெரிந்த சினிமாவின் மறுபக்கம் வேறுவிதமாக இருந்தது . மஞ்சள் வணணத்தில் தகதகத்த அந்த நிலவின் உள்பக்கம், ஆக்சிஜனற்று, தண்ணீரற்று, பள்ளம் பள்ளமாக இவன் முன் விரிந்தது .' எனக் குறிப்பிட்டு தான் சினிமாவில் வாய்ப்பு கேட்டு அலைந்த கதையைச்சொல்லுகின்றார்.' சிறுகதைக் கதிர் ' என்னும் இதழில் துணை ஆசிரியராகப்பணியாற்றியதை, திரைப்பட இயக்குநர் ஷ்ங்கரிடம் பேட்டி எடுத்ததை  வேடிக்கை பார்ப்பவனாகத் தொடர்கின்றார் நா.முத்துக்குமார் இந்தப்புத்தகத்தில்.

                         என்னுடைய ஞானத்தகப்பனே, என இயக்குநர் பாலுமகேந்திரா பற்றி , அவரின் மறைந்தவுடன் எழுதிய கட்டுரை படிக்கும் எவர் மனதையும் உருக்கும். நா.முத்துக்குமாரின் நன்றி உணர்ச்சியும் படிப்போர்க்கு எளிதில் புரியும். " என் ஞானத்தகப்பனே ! நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில்தானே , என் தகப்பன் ஏழு வருடங்களுக்கு முன்பு என்னை விட்டு விட்டு இறந்துபோனான். நீங்களும் பாதியிலேயே விட்டுவிட்டுப்போனால் , இனி நான் எங்கு செல்வது ? ஒரு கூட்டுப்புழுவாக உங்கள் அலுவலகத்துக்குள் நுழைந்த என்னை, பாட்டுப்புழுவாக மாற்றி, பட்டாம் பூச்சியாகப் பறக்கவிட்டவர் நீங்கள் " என்று ப்க்கம் 166 குறிப்பிடும் நா.முத்துக்குமார் பாலுமகேந்திராவின் தனித்தன்மைகளைக் கூறும் விதமே அழ்கு, அருமை, பெருமை அத்தனையும் ஒன்று இணைந்து தன்மையாக உள்ளது.

                   சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ.தமிழ் இலக்கியப்பாடம் எடுத்துப்படித்த நிகழ்வுகளைக் கூறி " ஒரு மாணவன் வேதியியல் படித்தால் , அந்தப்பாடப்புத்தகம் வேதியியலை மட்டும்தான் கற்றுத்தரும். இப்படித்தான் கணிதமும், இயற்பியலும், கணிப்பொறியும், பொறியியலும், மருத்துவமும் அந்தந்தத் துறையைச்சார்ந்த அறிவை மட்டுமே வளர்க்கும். ஆனால் இலக்கியம் மட்டுமே வாழ்க்கையைச்சொல்லிக்கொடுக்கும், சகமனிதர்கள் மீதான் மனித நேயத்தை, தோல்விகளைத் துரத்தும் தன்னம்பிக்கையை, புல் நுனியில் தூங்கும் பனித்துளியின் அழகியலை வேறு எந்தப்பாடம் சொல்லிக்கொடுக்கும் ? இவன் கசிந்துருகிக் காதலித்துத் தமிழ் கற்றான். பக்கம் 179-ல் நா.முத்துக்குமார் தமிழ் இலக்கியம் படிப்பதன் மேன்மையை சொல்லும் விதம் அருமை. " ஒழுங்காப்படிச்சா தமிழ் எவனையும் தெருவுல நிக்கவெக்காது. ஓய்வா இருக்கும்போது வாங்க. நான் ரசிச்ச நூற்றுக்கணக்கான பாடல்களைக் குறிச்சுக் கொடுக்கிறேன். அதைப்புரிஞ்சுகிட்டு மனப்பாடம் பண்ணா மட்டும்போதும்.வாழ்ற வரைக்கும் நீங்க பேசியே பொழச்சிக்கலாம் " என்று அவரின் பேராசிரியர் சொல்வதாக வரும் பகுதியும் எதார்த்தம்.

                     63-வது ஆளாக பேச்சுப்போட்டியில் மேடையேறி " புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்; என்னிடம் இருந்து பறிக்கிறான்; பூனை வளர்க்கும் சுதந்திரம் " என்னும் கவிதை பாடி ,முதல் பரிசு பெற்ற கதையை வேடிக்கையாகச்சொல்கின்றார். தொடர்ந்து சென்னை முழுவதும் நடந்த கல்லூரிகளுக்கான கவிதைப்போட்டிகளில் கலந்து கொண்டதுதான், சொன்னவுடன் இன்று கவிதை எழுதுவதற்கான காரணம் என்று குறிப்பிடுகின்றார். ' பச்சையப்பன் கல்லூரியில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' நமக்கும் கூட நினைவில் நிற்கிறது இவரின் எழுத்துக்களால். கணையாழி இதழில் வந்த 'தூர்' என்னும்  கவிதையையும் அதனை வாசித்த எழுத்தாளர் சுஜாதா பாராட்டியதையும்   பெயர் தெரியாத அன்பர் கொடுத்த ஆயிரம் ரூபாயும், அதில் கணையாழி இதழுக்கு நா.முத்துக்குமார் கொடுத்த ரூ ஐநூறும்  'பெள்ர்ணமி 'காலமாய் பதியப்பட்டிருக்கிறது.

                    தன்னுடைய பேராசிரியர்களும், பேராசிரியர் பெரியார்தாசனும் பாராட்டிய நிகழ்வைப் பகிர்ந்துகொள்கின்றார். தன்னுடைய வளர்ச்சியில் கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பேராசிரியர் வ.ஜெயதேவன், முனைவர் பட்ட ஆய்வு, படைப்புக்கலை பற்றி எம்.ஏ.மாணவர்களுக்கு எடுத்த பாடம், அதனால் கிடைத்த அனுபவங்கள் என விவரித்து முடிவில் 'வீர நடை ' என்னும் திரைப்படத்தில் தான் முதன்முதலில் எழுதிய ' முத்து முத்தாய்ப் பூத்திருக்கும் ' என்னும் பாடல் அதனைப் பாராட்டிய இயுக்குநர் சீமான், இசையமைப்பாளர் தேவா  என விவரிக்கின்றார். முடிவில் " சுடலையிலே வேகும்வரை : சூத்திரம் இதுதான் கற்றுப்பார் ! ; உடலை விட்டு வெளியேறி உன்னை நீயே உற்றுப்பார் " என்னும் தன் கவிதையைக்கூறி பனித்துளியின் வாழ்க்கையோடு வாழ்க்கையை ஒப்பிட்டு முடிக்கின்றார். படித்துப்பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும் இந்தப்புத்தகம்.

(மதுரை வானொலி நிலையம்- புத்தக விமர்சனத்திற்காக என்னால் தயாரிக்கப்பட்டது-வா.நேரு... )  

Tuesday 10 March 2015

முகநூலில் விண்ணப்பங்கள்.......

விரிந்து கிடக்கிறது முக நூல்
விரிந்து கிடக்கும் வானம் போலவே !
வித விதமாய்க் கண்சிமிட்டும்
நட்சத்திரங்கள் போலவே
எவரெவரோ தரும்
விவரங்களும் கேள்விகளும்
வித விதமாய் சிந்தனைத்
துளிகளைத் தூவுகின்றன !

காற்றும் மழையும்
வெயிலும் குளிரும்
நண்பர் விண்ணப்பம்
கொடுத்து வருவதில்லை !
வந்தபின்புதான்
உடையாலோ குடையாலோ
மறைத்துக்கொள்ள
வேண்டியிருக்கிறது !

முகநூலில்
விண்ணப்பங்கள்
வந்து கொண்டேயிருக்கின்றன
அறிந்தவர்கள்
அறியாதவர்கள்
தெரிந்தவர்கள்
தெரியாதவர்கள்
என நட்பு விண்ணப்பங்கள்
வந்து கொண்டேயிருக்கின்றன !

செயற்கரிய யாவுள நட்பின்
வினைக்கரிய யாவுள காப்பு
வினாவும் கேட்டு
விடையும் சொன்ன
திருவள்ளுவரின்
அதிகாரங்களில்
'ஒன்று ஈத்தும் ஒருவுக நட்பை'
என அறிவுறுத்தும்
'கூடா நட்பும் ' 'தீ நட்பும் '
கூடவே இருக்கிறது !

விலக்க வேண்டிய நட்பு பற்றி
தூரத்தில் வரும்போதே
வேண்டாம் என ஓடவேண்டிய
நட்பு பற்றியெல்லாம்
நயமாக இயம்புகின்றன
திருக்குறளின் வரிகள் !


போலிகள் நிறைந்துகிடக்கும்
முக நூலில்
எவரின் நட்பை ஏற்பது ?
எவரின் நட்பை வெறுப்பது ?
புதுக்குறள் எவரேனும்
எழுதுங்களேன் !
திணறும் முக நூல்
நட்புகளுக்கு உதவுங்களேன் !

                                         ....வா.நேரு......

                                       நன்றி : எழுத்து.காம்

Monday 9 March 2015

எவரின் தாக்கம் ?......

இந்துப்பண்பாடாம் !
'இந்திய மகள்'
படத்தால் இந்திய
மாண்பைக் கெடுக்கிறார்களாம் !
என்னனமோ எழுதுகிறார்கள்
தி...மணிகளின்
நடுப்பக்கங்களில் !

சீதனமாகப் பொருள்
கொடுத்தார்களாம் ...
மேற்கத்தியத்தாக்கத்தால்
சொத்துரிமை கேட்டதால்
பெண்களுக்கு கேடாம் ...

மகன் என்றால் மற்றவர்க்கு
இனிப்பும்
மகள் என்றால் பச்சைக்குழந்தைக்கு
கள்ளிப்பாலும் கொடுக்கச்சொன்னது
எவரின் தாக்கம் !

மேற்கத்தியத் தாக்கத்து
முன்னமே
மகாபாரதக்கதையில்
ஒருத்தியை கட்டிவந்து
ஐந்து பேர் பங்குபோட்டது
எந்தத் தாக்கம் !

பொம்பளை மோகம் பிடித்தவனை
கூடையில் சுமந்து போய்
அடுத்த பொம்பளையிடம்
விட்டவளுக்கு
பத்தினிப் பட்டம் கொடுத்தது
எவரின் தாக்கம் !

தீக்குள் குளித்துவா !
பத்தினி என உன்னை
நான் ஏற்றுக்கொள்கிறேன்
என்று கடவுள் சொன்னதாய்
எழுதி வைத்தது
எந்தத் தாக்கம் ?
எவரின் தாக்கம் ?

மாயக்கண்ணாடியாம் !
கண்ணாடிக்கு முன்னால்
நின்றால் மனதில் இருப்பவர்
எவர் எனத்தெரியுமாம் !
கடவுளின் மனதில் இருப்பவர்
நீயா ? நானா ? எனச்
சக்களத்திகள் இருவரும்
சண்டையிட்டு
இருவரும் இல்லையென்றால்
இருப்பவள் வேறு எவள்
என அறியக்
கடவுளைக் கண்ணாடிமுன்
நிப்பாட்டினார்களாம் ....
உங்க கடவுள்களின்
யோக்கியதை இப்படி
ஆனதற்கு காரணம்
எந்தத் தாக்கம் !

பத்தினியைக் களங்கப்படுத்த
மாறுவேடத்தில்
பிச்சைகேட்டு
கடவுள்கள் போனதாக
கதை எழுதியது
எந்த மேற்கத்தியத் தாக்கம் ?

உங்களது
புராணக் கடவுள்கள்முதல்
நடமாடும் கடவுள்கள்வரை
பெண்களிடத்தில் யோக்கியமாய்
நடந்த கடவுள் ஒன்றைக்
காட்டுங்கள் ! பின்பு
மேற்கத்தியத் தாக்கம்
பற்றிப்பேசலாம் .....

வக்கிரமாய்
இந்திய ஆண்கள்
மனது ஆனதன்
காரணம்
உங்களது கடவுள்கள்
அவர்களின் லீலைகள்
எனச்சொல்லும் கதைகள்

கடவுள் கதைகளைத்
திருத்துங்கள் ...
அல்லது திருந்தாத
கடவுள்களைக்
கொளுத்துங்கள் ....
பெண்களின் நிலைமாறும்
இந்த நாட்டில் ....

                           ..... வா.நேரு....

Tuesday 3 March 2015

படித்த செய்தியில் பிடித்த செய்தி(2) : வீடில்லா புத்தகங்கள் 23: வாழ்க்கைத் துணை! - எஸ். ராமகிருஷ்ணன்

படித்த செய்தியில் பிடித்த செய்தி(2) : வீடில்லா புத்தகங்கள் 23: வாழ்க்கைத் துணை! -  எஸ். ராமகிருஷ்ணன்

ஓர் எழுத்தாளன் உருவாவதற்கு அவனது குடும்பச் சூழல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டில் எழுதுவதற்கான சூழல் கிடைக்காத எழுத்தாளர்களே அதிகம். படிப்பையும் எழுத்தையும் அவ்வளவு சீக்கிரமாக வீடு அங்கீகரித்துவிடுவது இல்லை.

குடும்பப் பிரச்சினைகளின் காரண மாக இலக்கியம் படிப்பதை கைவிட்ட வர்கள், எழுதுவதை நிறுத்திக்கொண்ட வர்கள் பலரை நான் அறிவேன். பல எழுத்தாளர்கள் குடும்பத்தின் கோபம், சண்டைகளை மீறியே தனது எழுத்து செயல்பாடுகளைத் தொடர்ந்து வருகி றார்கள். அரிதாக சிலருக்கே நல்ல துணையும் எழுதுவதற்கான இலக்கியச் சூழல்கொண்ட வீடும் அமைகிறது.

ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் தனது மனைவியோடு சண்டையிட்டுக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறிய போது அவருடைய வயது 82.

கவிஞர் டி.எஸ். எலியட் கருத்துவேறு பாட்டால் மனைவி விவியனை விவாக ரத்து செய்துவிட்டார். ஆனால், எலியட் எந்த இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டாலும் விவியன் அங்கே தேடிவந்து முன்னிருக்கையில் அமர்ந்தபடியே, ‘‘நீ ஒரு பொய்யன்…” என்ற அட்டையைத் தூக்கிப் பிடித்து கலாட்டா செய்வார்.

‘இழந்த சொர்க்கம்’ (பேரடைஸ் லாஸ்ட்) என்கிற காவியம் படைத்த மகாகவி மில்டன், தனது 35-வது வயதில் மேரி பாவல் என்ற அரசக் குடும்பத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். மனைவியின் கடுமையான நடத்தையால் அவதிப்பட்ட மில்டன், தனது இறப்புவரை தான் இழந்த சொர்க்கத்தை மீண்டும் பெறவே இல்லை என்கிறார்கள் இலக்கிய விமர்சகர்கள்.

சார்லஸ் டிக்கன்ஸ் தன் மனைவி கேதரின் கண்ணிலேயே படக் கூடாது என்று படுக்கை அறை நடுவில் தடுப்புச் சுவர் ஒன்றைக் கட்டியிருந்தாராம்.

சிந்தனையாளர் சாக்ரடீஸின் மனைவி ஜாந்திபி, ஒருநாள் தனது பேச்சைக் கேட்காத சாக்ரடீஸின் தலையில் கோபத்தில் ஒரு வாளி தண்ணீரைத் தூக்கி ஊற்றினாள். அதற்கு ‘முன்பு இடி இடித்தது… இப் போது மழை பெய்கிறது’ என்று சாக்ரடீஸ் சொன்னதாக ஒரு கட்டுக் கதை நெடுங் காலமாகவே இருந்து வருகிறது.

இப்படி எழுத்தாளர்களின் மோசமான மனைவிகுறித்து நிறைய சம்பவங்கள் திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. அவை எல்லாம் உண்மை கலந்த பொய்கள்!

சாக்ரடீஸ் ஜாந்திபியைத் திருமணம் செய்து கொள்ளும்போது அவருடைய வயது 50. ஜாந்திபிக்கோ 20 வயது. ஜாந்திபி வறுமையின் காரணமாகவே சாக்ரடீஸைத் திருமணம் செய்து கொண்டார் என்கிறார்கள். குடியும், கூத்தும், பெண் தொடர்பும் கொண்ட கிரீஸ் நாட்டு ஆண்களைப் போலவே சாக்ரடீஸ் நடந்துகொண்டார் என்பதால் தான் அவர்களுக்குள் சண்டை என்றும் ஒரு தரப்பு வாதிடுகிறது.

ஜாந்திபி சாக்ரடீஸோடு வாழ்ந்து மூன்று குழந்தைகளைப் பெற்றிருக் கிறாள். மரண தண்டனை விதிக்கப்பட்ட சாக்ரடீஸைப் பார்க்க சிறைக்கு வரும்போது மூன்றாவது கைக் குழந்தையோடு ஜாந்திபி வந்திருந்தாள் என்றும் குறிப்பிடப்படுகிறது. சாக்ரடீஸ் சாகும்போது அவருக்கு 71 வயது.

சாக்ரடீஸீன் மரணத்துக்குப் பிறகு ஜாந்திபி என்ன ஆனாள்? எப்படி வாழ்ந்தாள்? பிள்ளைகளை எப்படி வளர்த்தாள்… என்கிற கேள்விகளுக்குப் பதில் இல்லை.

மோசமான மனைவிகள் ஒருபுறம் என்றால், மறுபக்கம் தன் வாழ்க்கை யைக் கணவரின் வெற்றிக்காக அர்ப் பணித்துக்கொண்ட பெண்கள் பலரும் வரலாற்றில் நினைவு கூரப்படுகிறார்கள்.

ஜென்னியின் ஆதவுரவுதான் காரல் மார்க்ஸை மாபெரும் சிந்தனையாளராக உருவாக்கியது. பார்வையற்ற போர் ஹெஸுக்குத் துணையாக இருந்தவர் அவரது தாய். வர்ஜீனியா வுல்ப் என்ற பெண் எழுத்தாளரின் கணவர் லியோனார்டு, தன் மனைவி எழுத்தாள ராகச் செயல்பட சகல விதங்களிலும் உறுதுணையாக இருந்தார்.

இவ்வளவு ஏன்… டால்ஸ்டாயின் மனைவி சோபியா, ஒவ்வோர் இரவும் கணவர் எழுதிப் போட்ட நாவலின் பக்கங்களை முதுகு ஒடியப் பிரதி எடுத்து உதவி செய்திருக்கிறார். இப்படி ஒருவரையொருவர் புரிந்து கொண்ட துணை கிடைத்த எழுத் தாளர்கள் பாக்கியவான்கள்.

அப்படியான ஒரு மனிதர் கரிசல் இலக்கியத்தின் தந்தை, எழுத்தாளர் கி.ராஜநாராயணன்! அவரது துணைவி யார் கணவதி, அற்புதமான பெண்மணி. அன்பிலும் உபசரிப்பிலும் அவருக்கு இணையே கிடையாது. கி.ராவின் எழுத்துப் பணிக்கும் குடும்ப வாழ்வுக் கும் அவரே அச்சாணி!

கணவதி அம்மாள்குறித்து ‘கி.ரா இணைநலம்’ என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது. எழுதிய வர் எஸ்.பி.சாந்தி. வெளியிட்டது ‘அகரம்’ பதிப்பகம். ஓர் எழுத்தாளரின் மனைவிகுறித்து, தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் இதுதான் என நினைக்கிறேன். கணவதி அம்மாளின் நினைவுகளை வாசிக்கும்போது நெகிழ்வாக இருக்கிறது.

கி.ரா பிறந்த இடைசெவல் கிராமம்தான் கணவதி அம்மாளின் ஊரும். ஜில்லா போர்டு தொடக்கப் பள்ளியில் படித்த தனது பள்ளி நாட்கள் பற்றியும், உடன் படித்த தோழிகள் குறித்தும் நினைவுகூரும் கணவதி அம்மாள், பொதுவாக ‘திருமணத்துக்குப் பிறகு பெண்கள் தன்னோடு படித்த பெண் தோழிகளை, விருப்பமான மனிதர்களைப் பிரிந்து சென்றுவிடுகிறார்கள். பிள்ளை பெற்றதோடு அவளது சகல தனித் தன்மைகளும் புதையுண்டுப் போய் விடுகின்றன’ என ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார்.

காசநோயாளியாக இருந்த கி.ராவை நம்பிக்கையுடன் தைரிய மாக தான் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதையும், தங்களுடைய கல்யாணத்துக்கு போட்டோ கிடையாது, மேளதாளம் கிடையாது, சடங்குகள் எதுவும் கிடையாது, விருந்து சாப்பாடு கூட கிடையாது. முகூர்த்தப் பட்டுப் புடவைகூட நூல் புடவைதான். கல்யாணத்துக்கு ஆன மொத்த செலவு 200 ரூபாய் மட்டுமே என நினைவுகூர்கிறார்.

விவசாயப் பணிகளுக்கு ஓடியோடி உதவிகள் செய்தது, நோயாளியான கணவரைக் கவனித்துக்கொண்டது, பிள்ளைகளை நோய் நொடியில் இருந்து காத்து வளர்க்கப் பாடுபட்டது, வீடு தேடிவரும் இலக்கியவாதிகளுக்கு விருந்து உபசாரம் செய்தது,

விவசாயச் சங்கப் போராட்டத்தில் கலந்துகொண்டு கி.ரா சிறைப்பட்டபோது ஒற்றை ஆளாக குடும்பத்தை கவனித்துக்கொண்டது… என நீளும் கணவதி அம்மா ளின் பல்வேறு நினைவுகளின் ஊடாக, ஒரு பெண்ணின் அர்ப்பணிப்புமிக்க மனதும் போராட்டமான வாழ்க்கையும் வெளிப்படுகிறது.

‘ஆனந்த விகடன்’ இதழில் முத்திரை கதை எழுதி கிடைத்த 100 ரூபாயில், கி.ரா தனக்கு காஞ்சிபுரம் பட்டுப் புடவை எடுத்து தந்தது, எங்கே சென்றாலும் தன்னை உடன் அழைத்துப் போனது, ஹிந்தி படங்களுக்குக் கூட தன்னை அழைத்துப் போனது,

கடிந்து பேசாமல், முகம் சுளித்துத் திட்டாமல், தன்னை கவுரவமாக, மரியாதையாக நடத்தியது. திருமணமானது முதல் இன்று வரை தனது விருப்பங்களை மதித்து நடந்துகொள்ளும் அன்பான கணவராக கி.ரா திகழ்வதை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார் கணவதி அம்மாள்.

தண்ணீர் மாதிரி தன் வழித் தடமெங்கும் ஈரப்படுத்திக்கொண்டு, புல்முளைக்கச் செய்யும் காதலே உயர்வானது. அத்தகைய ஓர் ஆதர்ச தம்பதி என்கிறார் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ள சாந்தி.

எழுத்தையும் எழுத்தாளனையும் கொண்டாடும் நாம், அந்த எழுத்தாள னுக்குத் துணை நிற்கும் குடும்பத் தினரையும் நன்றியோடு நினைவு கொள்ள வேண்டும். அதுவே சிறந்த பண்பாடு!

- வாசிப்போம்…

நன்றி : தமிழ் இந்து நாளிதழ் -பிப்ரவரி -26.

                      இரு வகையான எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். துணையாக இருக்கும் குடும்பத்தினரால் எழுதுபவர்கள், கொடுமையாக இருக்கும் குடும்பத்தினரை மறக்க எழுதுபவர்களும் இருக்கின்றார்கள். வரலாறு முழுக்க இந்த இருவகையான எழுத்தாளர்களும் இருந்திருக்கின்றார்கள். என்னைச்சுற்றி இருக்கும், நான் அறிந்த எழுத்தாளர்களையும் பார்க்கின்றேன். இந்த இருவகையான எழுத்தாளர்களும் இருக்கின்றார்கள். வயதான காலத்தில் தன்னுடைய இணையரோடு இணைந்து வீட்டிற்குள் வாழ முடியாத காரணத்தால் பிரியாமல் ஆனால் இணையரை விட்டுத்தனித்துப்போய் ஏதோ ஓர் இல்லத்தில் இருந்து எழுதும் எழுத்தாளர்களும் உண்டு. வீட்டில் இருவர் மட்டுமே என்றாலும் அன்றாடம் சண்டைக்கோழியாய் எதெற்கெடுத்தாலும் சண்டையிடும் இணையைச்சமாளித்துக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களையும் நான் அறிவேன். போராட்டமே வாழ்க்கைக்களமாய் தொழிற்சங்கத்திலும் பொதுப்பணியிலும் அமைத்துக்கொண்டு மனம் ஒத்த தம்பதிகளாய் வாழ்ந்து , கணவர் எழுதும் நூல் அத்தனைக்கும் ஆக்கமும் ஊக்கமுமாய் இருக்கும் தோழியர்களையும் நான் அறிவேன். எந்த வகையில் என்றாலும் ஆக்கத்தாலோ அல்லது எதிர்மறை தாக்கத்தாலோ எழுதத்தூண்டும் குடும்பத்தினர்கள் சமூகத்தின் நன்றிக்குரியவர்க்ள், பாராட்டுக்குரியவர்கள்தானே .  அவர்கள் கொடுக்கும் வினையால்(Action-ல்) தானே எழுத்து என்னும் எதிர்வினை(Reaction ) நிகழ்கிறது. இன்று வெற்றிகரமான எழுத்தாளராக இருக்கும் எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் தனது குடும்பத்தினரின் , இணையரின் ஒத்துழைப்பு பற்றி இதுவரை எழுதியதாக நான் படித்ததில்லை. இல்லையெனில் பதியவேண்டும். 

Sunday 1 March 2015

பசியால் பட்டறிவு.....

     

எதிர்பார்த்துக்
காத்திருக்கிறேன்
எவரேனும்
வருவார்களா என்று !

மருத்துவமனையில்
நோய்வாய்ப்பட்ட மகளோடு
துணையாய் நான் !
நோயால்
மருள மருள விழிக்கும்
மகளைத் தனியே
விட்டுச்செல்ல மனமில்லாமல்
நெருக்கமான நண்பர்கள்
எவரேனும் வருவார்களா என
எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் !

நண்பர்கள்
படை உண்டு
வாருங்கள் என்று
சொன்னால் வந்து
குவிவார்கள் என்றாலும்
எவரையும் தொந்தரவு
செய்ய வேண்டாம்
எனும் எண்ணத்தில்
தானாக எவரேனும்
வருவார்களா என
எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் !

பை நிறையப்
பணம் இருக்கிறது !
பத்து நிமிட தூரத்தில்
உணவு விடுதிகள் இருக்கின்றன
என்றாலும் பட்டினியாய்
பலமணி நேரம்
எவரேனும் வருவார்களா என
எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் !

எண்ணிப்பார்க்கிறேன் !
எத்தனை நண்பர்களின்
குழ்ந்தைகள் இருந்தனர்
மருத்துவமனைகளில் !
கால்களில் சுடுதண்ணீர்
ஊற்றிக்கொண்டு
சென்றோம் , விசாரித்தோம்
வந்தோம் என்றுதானே
இருந்தோம் !
எப்போதாவது நண்பர்களிடம்
நானும் இருக்கவேண்டுமா
என்றோ
ஏதேனும் குறிப்பிட்ட நேரத்தில்
வந்து இருக்கவேண்டுமா
என்றோ
கேட்டதில்லை இதுவரை !

வயிற்றைக் கடிக்கும்
பசியால் பட்டறிவு கிடைத்தது !
இனிமேல் மருத்துவமனைகளில்
இருக்கும் நட்புகளிடம்
கேட்டல் வேண்டும் !
நேரத்தை நிறைய
ஒதுக்கவேண்டும் !

செயற்கை புன்னகை
உதிர்த்து
நலமடைய வாழ்த்துக்கள்
எனச்சொல்லி வருவதைவிட
நானும் உன்னோடு
இருக்கிறேன்
உனக்கு வரும் இடர்களில்
என்னும் உரிமையோடு
நேரத்தை ஒதுக்கியும்
நட்புகள் இருக்கும்
மருத்துவமனைகளில்
நுழைந்திடவும்
இருந்திடவும் நினைக்கிறேன்....

                                              -- வா.நேரு---

நன்றி : எழுத்து.காம்.