Saturday 29 December 2012

அண்மையில் படித்த புத்தகம் : திருப்புமுனைகள் - என்.சொக்கன்

அண்மையில் படித்த புத்தகம் : திருப்புமுனைகள் - என்.சொக்கன்
 
நூலின் தலைப்பு         :  திருப்புமுனைகள் .
ஆசிரியர்             :   என்.சொக்கன்.
பதிப்பகம்                :   மதி நிலையம் , சென்னை-86,
முதல் பதிப்பு         :   டிசம்பர் 2011 , 288 பக்கங்கள்
 விலை               :   ரூ 160
                                      வெற்றி அடைந்த 50 சாதனையாளர்களை எடுத்துக்கொண்டு , அவர்கள் வாழ்க்கையில் நடந்த திருப்பு முனை சம்பவங்களைக் கோடிட்டுக் காட்டுகிற புத்தகம் இந்தப் புத்தகம் .முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தொடங்கி , பாட்டுக்கோட்டையாக தமிழகத்தில் புகழ்பெற்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை வரை பட்டியலிட்டுக் காட்டுகிறது.

             முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர், கபில்தேவ் தன்னுடைய 13-வது வய்தில் கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்து ரசிப்பதற்காக வந்த இடத்தில், விளையாடும் அணியில் ஒருவர் குறைவதால் விளையாட்டை ஆரம்பிக்காமல் இருக்கிறார்கள். சிறுவன் கபில்தேவ் ஏன் விளையாட்டை ஆரம்பிக்க தாமதம் ஆகின்றது எனக்கேட்க, ஒருவர் குறைகிறார், தம்பி நீ விளையாட வருகிறாயா எனக் கபில்தேவிடம் கேட்க , சரி என கிரிக்கெட்  விளையாட்டு மைதானத்தில் இறங்கியதுதான் கபில்தேவ் வாழ்க்கையில் நடைபெற்ற திருப்புமுனை. கிரிக்கெட் விளையாட்டு  என்றால் என்னவென்றே தெரியாத குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய பரம்பரையில் யாரும் விளையாட விளையாட்டில் உலகப்புகழ் பெற்ற கபில்தேவ் வாழ்க்கையில் தானாகக் கிடைத்த வாய்ப்பு, அதனை எப்படி கபில்தேவ் வசப்படுத்திக் கொண்டார் என்பதனை பக்கம் 11முதல் 15 வரை நன்றாக சொல்கின்றார் இந்த நூலின் ஆசிரியர் திரு.என்.சொக்கன்.

                             எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்த சிறுவன் வில்லியம்ஸ், எதை எடுத்தாலும் 'போரடிக்கிறது ' என்று சொல்லி வாழ்க்கையை நொந்து கொண்டிருந்த சிறுவன் வில்லியம்ஸ் வாழ்க்கையில் , அவனது பள்ளியில் வந்து இறங்கிய கம்யூட்டர்கள் திருப்பு முனையாக மாறுகின்றது. புத்திசாலிப் பையனான வில்லியம்ஸ், எந்தப் பாடத்தையும் அதிவேகத்தில் கிரகித்துக்கொள்ளும் வில்லியம்ஸ் கம்ப்யூட்டரைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபின் போரடிக்கிறது என்ற வார்த்தையைக் கூறவில்லை. அலாவுதினின் அற்புத விளக்கைப் போல அற்புதங்கள் பல செய்யும் கருவியாக கண்னியை மாற்றுகின்றான் சிறுவன் வில்லியம்ஸ் , அவர்தான் பில் கேட்ஸ் என்று சொல்லி விளக்கம் கொடுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். " நம்முடைய இலக்கு எது, பாதை எது என்று தெரியும்வரை வாழ்க்கைப் பயணம் போரடிப்பது போல்தான் தோன்றும்.ஆனால் ,பில் கேட்ஸிக்கு கம்ப்யூட்டர் போல் நமது வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் அந்தத் திருப்புமுனை, எப்போது ,எப்படி எதிர்ப்படுமோ தெரியாது. அந்த நேரத்தில், அதைச்சரியாக அடையாளம் கண்டு பயன்படுத்திக்கொள்வது, நம்முடைய சமர்த்து என்று சொல்கின்றார் இந்த நூலின் ஆசிரியர் என். சொக்கன் பக்கம் 19-.

            கோபக்குதிரைகள் என்ற தலைப்பில் அலெக்ஸாண்டரின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனையை புத்தக ஆசிரியர் பக்கம் 35 முதல் 39 வரை விவரிக்கின்றார். யாராலும் அடக்க முடியாத முரட்டுக்குதிரையை அடக்க சிறுவன் அலெக்சாண்டர் அவனது தந்தையிடம் கேட்பது, அவர் அரைகுறை மனதோடு சரி எனச்சொல்வது, கோபக்குதிரையான பூசெபைலஸ் குதிரையிடம் சென்ற அலெக்ஸாண்டர் , தன் நிழலைப் பார்த்து குதிரை பயப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு அதன் நிழல் படியாமல் சூரியனுக்கு நேராக நிறுத்தி, பின் குதிரையில் சவாரி ஏறி குதிரையை அடக்கியது என்னும் நிகழ்வைத் தொகுத்து தந்துள்ளார்.  " நாம் சந்திக்கும் தினசரிப் பிரச்சனைகள் ஒவ்வொன்றும் பூசெபைலஸ் போன்ற கோபக்குதிரைகள்தான். அவற்றை அடக்கி ,ஜெயிக்க விரும்பினால் ,வெறும் வீரம் மட்டும் போதாது. பிரச்சனையின் வேர் எது என்று கண்டறிய வேண்டும், குதிரையின் நிழல்போல, அந்தப் பிரச்சனை வேர்களை வெட்டி எறிந்து விட்டால் , வெற்றி தானாக மடியில் விழும் " என்கின்றார் நூல் ஆசிரியர் பக்கம் 39. ஆம் உண்மைதான், வீரமும் விவேகமும் இணைந்தால் மட்டும்தானே வெற்றி .

                    வெற்றிக்கும் விடாமுயற்சிக்கும் உள்ள தொடர்பை சுட்டிக்காட்டப் பலரும் பயன்படுத்தும் வாழ்க்கை வரலாறு அறிவியல் அறிஞர் தாம்ஸ் ஆல்வா எடிசன் அவர்களின் வரலாறு. அவரது வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை அவரது மனித நேயச்செயல் என விவரிக்கின்றார் நூல் ஆசிரியர் பக்கங்கள் 40 முதல் 45 வரை 'வெளிச்சம் ' என்னும் தலைப்பில் . ரெயில் தண்டவாளத்தில் ஒரு சிறுவன் விளையாடிக்கொண்டிருக்கிறான். அந்தத் தண்டவாளத்தில் ஒரு ரெயில் வருகிறது, அந்தச்சிறுவனை யாரும் கவனிக்கவில்லை. " யாரோ ஒரு பையன் அடிபடப்போகிறான், நமக்கென்ன ? " என்று சும்மா இருந்து விடாமல் , பாய்ந்து சென்று அந்தப்பையனைக் காப்பாறுகின்றார் தாமஸ் ஆல்வா எடிசன். தனது காலில் அடிபட்டு, சிராய்ப்புகள் , சின்ன அடிகள் பட்டாலும் உயிரைப் பயணம் வைத்து அந்தச்சிறுவனைக் காப்பாற்றி விடுகின்றார். அந்தச்சிறுவனின் தந்தை , மோர்ஸ் தந்தி அடிப்பது எப்படி என்பதனை நிறையப் படிக்காது தாமஸிக்கு சொல்லித் தருகின்றார். தந்தி அடிப்பதைக் கற்றுக்கொண்ட தாமஸ் ஆல்வா எடிசன் அதில் வல்லுநராகி, அதில் புதிய தொழில் நுட்பங்களைக் கண்டுபிடிக்கின்றார், அந்த சிறு விபத்தில் அந்தச்சிறுவனைக் காப்பாற்றியதுதான் தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கையில் திருப்புமுனை என்பதனை சுவை படச்சொல்கின்றார் நூல் ஆசிரியர்.
 
                                  " குரு " என்ற தலைப்பில் பேரறிஞர் அண்ணா அவர்கள் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனையை சுட்டிக்காட்டுகின்றார் நூல் ஆசிரியர் பக்கம் 51 முதல் 55 வரை . 1935 திருப்பூர் வாலிபர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களோடு நிகழ்ந்த முதல் சந்திப்புதான் அண்ணா அவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனை  என்பதனை விவரிக்கின்றார். " ஒருவர் எத்தனை பெரிய திறமைசாலி, உழைப்பாளியாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களும் கூட , தங்களுடைய முழுத்திறமையை வெளிப்படுத்தி ஜொலிப்பதற்கு ஒரு சரியான ஆசிரியர் ,வழிகாட்டி தேவைப்படுகிறார். தனது வாழ் நாள் முழுவதும் , தந்தை பெரியாரின் தொண்டராகவே வாழ்ந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாத்துரையை, தமிழகம் 'அறிஞர் அண்ணா ' என்று அன்போடு அழைக்கிறது. தந்தை பெரியாரையும் , அறிஞர் அண்ணாவையும் இணைத்த அந்த முதல் சந்திப்பு, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி, ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயததுக்கும் ஒரு முக்கியத் திருப்புமுனையாகத் திகழ்கிறது " என்று பக்கம் 55-ல் குறிப்பிடுகின்றார்.

                                                               கனவு காணுங்கள் என்று சொல்கின்றோம், ஆனால் காணும் கனவு அவ்வளவு எளிதில் வசப்பட்டு விடுகிறதா என்ன? உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் 'தி மாங்க் கூசோல்டு ஹிஸ் பெர்ராரி " என்னும் புத்தகத்தை எழுதிய ராபின் சர்மாவின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை, காணும் கனவை வசப்படுத்தும் வழிமுறையைச் சொல்கிறது. புகழ்பெற்ற வழக்கறிஞராக , இலட்சக்கணக்கில் வழக்கறிஞர் தொழிலில் பணம் சம்பாதித்த ராபின்சர்மா, எழுத்தாளர் ஆவது என முடிவு செய்து வழக்கறிஞர் தொழிலை விட்டு விடுகின்றார். நிறையப் படிக்கின்றார்.  எழுதத் தொடங்குகின்றார்.'தி மெகா லிவிங் எனப் புத்தகம் எழுதுகிறார், , தானே அச்சடித்து வெளியிடுகின்றார். வாங்க ஆளில்லை, தளராமல் அடுத்த புத்தகம் எழுதுகிறார், தானே பதிப்பிக்கின்றார், விற்கவில்லை, அப்போதுதான் ஒரு நண்பர் பதிப்பகத்தின் மூலம் வெளியிடுங்கள் எனச்சொல்ல, பதிப்பகத்தின் மூலம் வெளியிடுகின்றார். இன்று உலக மொழிகள் பலவற்றில் அவரது புத்தகம்.  புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்த ராபின்சர்மா அதனை விட்டுவிட்டு எழுதுவது என முடிவெடுத்து எழுத்துக் களத்தில் இறங்கியதுதான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை என்பதனை அழகுற பக்கம் 190 முதல் 194 சொல்லுகின்றார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

                பெரும்பாலும் மனிதர்கள் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைவது நல்ல மனிதர்களிடம் ஏற்படும் தொடர்பு அல்லது படிக்கும் நல்ல புத்தகங்கள் எனலாம், அதனை நிருபிக்கும் விதமாக புகழ்பெற்ற மனிதர்கள் , புகழ் பெறுவதற்கு முன்னால் சந்தித்த மனிதர்களால் ஏற்பட்ட திருப்புமுனைகளை பல்வேறு அத்தியாயங்களில் இந்த நூலின் ஆசிரியர் என்.சொக்கன் சுட்டிக்காட்டியுள்ளார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் முதன்முதலாக பாரதியார் அவர்களை சந்தித்த நிகழ்வு , பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் அவர்கள் முன்னாள் முதலமைச்சர் திரு எம்.ஜி.ஆர் அவர்களால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பாட வாய்ப்பு பெற்ற நிகழ்வு,முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல்கலாம் அவர்கள் சுவாமி சிவானந்தர் அவர்களைச் சந்தித்த நிகழ்வு, கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் இசை அமைப்பாளர் திரு எம்.எஸ்.விசுவநாதன் அவர்களைச் சந்தித்து முதன்முதலாக வாய்ப்பு பெற்ற நிகழ்வு  எனப் பல்வேறு பிரபலங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பு முனைகள் விரிவாக தனித்தனி அத்தியாயங்களாக விவரிக்கப்பட்டுள்ளன. "இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள 50 பேரில் ஒரு சிலரைத் தவிர , மற்ற யாரும் ஏற்கனவே புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தவர்கள் அல்லர். அவர்களுடைய வாழ்க்கையில் , அது குழந்தைப் பருவத்திலோ, இளம் பருவத்திலோ அல்லது முதுமைப் பருவத்திலோ ஏதோ ஒரு தருணத்தில் - ஒரு சிறு பொறி தட்டியது என்று சொல்வார்களே அதுபோல் வாழ்க்கையையே மாற்றிய சம்பவத்தால் இன்று சாதனையாளர்களாக உயர்ந்து நிற்கிறார்கள் ". படித்துப்பார்க்கலாம். இளைஞர்கள், மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கக்கூடிய புத்தகம். வரும் திருப்புமுனைகளைப் புரிந்துகொண்டு வாழ்வில் உயர  , இந்தத் திருப்புமுனைகள் பயன்படும்,

Sunday 23 December 2012

அண்மையில் படித்த புத்தகம் : மோகினி - டால் ஸ்டாய்

அண்மையில் படித்த புத்தகம் : மோகினி - டால் ஸ்டாய்

நூலின் தலைப்பு : மோகினி (ரஷ்ய நாவல்)
ஆசிரியர்                : டால் ஸ்டாய்
தமிழில்                   : ஆர்.வி.
வெளியீடு              :  தையல் வெளியீடு, சென்னை -12
முதல்பதிப்பு         : 2004
மொத்த பக்கம்     :  64  விலை ரூ 25
மதுரை மைய நூலக எண் : 166368.


                                          உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் டால் ஸ்டாயின் நாவல் இது. மோகினி (The devil)  என்னும் இந்த நாவல் ஒரு ஜமின்தாரைப் பற்றியது. யுஜின் இர்ட்டினேவ் என்னும் அந்தக் கனவான் திருமணத்திற்கு முன்பே ஒரு மணமான பெண்ணிடம் தொடர்பு வைத்திருந்ததும், ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து நல்ல நிலையில் வாழும் போதும், பழைய பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளம் தடுமாறுவதும், பின்பு அது தவறு எனத் தெரிந்து அந்த நினைப்பிலிருந்து மீண்டும் வருவதும் தொடர்கதையாவ்தை அவருடைய பாணியில் சொல்லிச்செல்கிறார். உணர்ச்சிக்கும் நேர்மைக்கும் நடக்கும் போராட்டம். கடைசியில் அந்த நினைப்பிலிருந்து மீள முடியாமல் , குடித்தவன் மீண்டும் மீண்டும் உறுதி மொழி எடுத்தபின்பும் சாராயக் கடைக்கே திரும்பிப்போவது போலத் தன் மனம் மீண்டும் மீண்டும் தடுமாறுவதால் , யுசின் இர்ட்டினேவ் தற்கொலை செய்து கொள்கிறான், அவன் ஏன் இறந்தான் என்பது யாருக்கும் தெரியவில்லை, நல்ல மனைவி, குழந்தை, நல்ல வருமானம், நல்ல அந்தஸ்து போன்றவற்றோடு இருந்த அவன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு  என்ன பிரச்சனை என்பது யாருக்கும் புரியவில்லை, தெரியவில்லை என முடிகின்ற்து. அவனுக்கு ஏதாவது மூளைக் கோளாறு , பைத்தியம் புடித்து விட்டது என்று பேசிக் கொள்கிறார்கள் என முடிக்கின்றார் டால் ஸ்டாய் . "  யுசினுக்கு மூளைக் கோளாறு என்றால் ஒவ்வொருவருக்கும் மூளைக் கோளாறுதான்; பைத்தியந்தான், தங்க்ளிடம் உள்ள பைத்தியக்காரத்தனத்தைத் தெரிந்து கொள்ளாமல் பிறரிடம் அந்தக் குணங்களைக் காண்பவர்கள்தான் பெரும்பாலான பைத்தியக்காரர்கள் " என்று புத்தகம் முடிகின்றது.

                                                " நெறியும் நேர்மையும் முரண்படும்போது உண்டாகும் போராட்டமே இந்தக் கதையின் உரு. புலனடக்கம் இல்லாதவன் இச்சைக்கு அடிமையாகி விடுகிறான். அதிலும் உடல் சம்பந்தமான உறவு வைத்துக்கொள்பவன் , பிசாசு போன்ற மிருக உணர்ச்சிக்குப் பலியாகி விடுகிறான். இதுதான் கதையின் கரு ...டால்ஸ்டாயின் கதைகளும் கட்டுரைகளும் மனித உள்ளத்தை வளப்படுத்தி,உயர்த்தக் கூடியவை; இலக்கியத்தின் நயத்தையும் மேம்பாடுகளையும் உணர்த்தக்கூடியவை " என்று சொல்கின்றார் முன்னுரையில் மொழி பெயர்ப்பாளர் ஆர்.வி.உண்மைதானே ...

Wednesday 19 December 2012

சாகப்போகும் விவசாயிகளே!


கடன் வாங்கி
நாத்து விதைத்து
மீண்டும் கடன் வாங்கி
நாத்தை நட்டு
பயிராகிப் பார்த்தவேளை
பருவ மழை பொய்த்துப்போனது !

கண்மாய் பெருகிவிடும்
கன மழை பெய்துவிடும்
பயிரெல்லாம் நெல்லாகி
அம்பாரம் குவிந்துவிடும்
அடைத்து விடலாம்
கடனை என்றெண்ணி
நம்பி விதைத்த பயிரெல்லாம்
சருகாகி காய்ந்து போக‌
வானம் பார்த்த விவசாயம்
வயிற்றைக் காயப் போட்டதடா !

கண்மாயில் தண்ணியில்லை
பக்கத்து கிணத்து மோட்டாரிலே
இன்னும் கொஞ்சம் கடனை
வாங்கியாவது காப்பாத்திடலாம்
பயிரையென்னு
விடிய விடிய உட்கார்ந்திருந்தும்
வீணாப்போன கரண்ட் இல்லே

கரண்டில்லை ,தண்ணியில்லை
அன்பார்ந்த விவசாயிகளேன்னு
அகில இந்திய வானொலி
காலையிலே கொட்டி முழக்கும்
கூத்துக்கு மட்டும் குறைவில்லே!

சேற்றில் நெட்டியைப் போட்டு
மிதித்தற்கு காசு வேணாம்
வரப்பு வெட்டி வாய்க்கால் வெட்டி
ஒத்தாசையா நின்னு
உழைத்ததுக்கு காசு வேணாம்
இராப் பகலா
மோட்டை அடைச்சு
தண்ணீர் பாய்ச்சி
நாத்தை வளர்த்ததற்கு காசு வேணாம்

செத்துப் போன
பிள்ளையைப் பார்த்து
கதறி அழும் பெத்தவன் போல‌
கருகின பயிரைப் பார்த்து
மனதுக்குள் கதறி அழும்வேளை
வட்டிக்கு கடன் கொடுத்த
பணக்காரன் வாறானே !
அவனுக்கு கொடுக்க காசு வேணுமே
என்ன செய்ய ?

பாறைக்குள்ளிருக்கும்
தண்ணியெடுத்து
பயிரை விளைய வைக்கிறோம்ன்னு
இத்தாலிக்காரன் சொல்லுகிறான்

இருக்கிற தண்ணியை
பகிர்ந்து கொடுக்க வக்கில்லே!
இல்லாத பகுதிக்கு
தண்ணி வர வைக்கிற‌
திட்டம் ஏதுமில்லே!

பின்னே எதுக்கு
அன்பார்ந்த விவசாயிகளே!
இனிமே சொல்லுங்கடா
அரசாங்க வானொலியில்
சாகப்போகும் விவசாயிகளே!
                                                      வா. நேரு .

எனது கவிதையை வெளியிட்ட எழுத்து.காம் -ற்கு நன்றி .

Sunday 16 December 2012

உலகம் அழியும் நாளில் ...?

பால் குடித்தார்
பிள்ளையார்
ஒரு நாள் புரளி
ஓரிரு நாளில் முடிந்தது

அழியப் போகிறது
உலகம் !
சில நாளாய்
புரளி கொடி கட்டிப்பறக்கிறது!

உலகம் அழியும் நாளில்
நாம் அழியாமல்
தப்பிப்பது எப்படி ?
பிரார்த்தனை வகுப்புகள்
ஒரு மதத்தால்

உலகம் அழியும் நாளில்
தப்பிக்க
பரிகாரங்கள்
பட்டியலிடும்
இன்னொரு மதத்து
ஜோதிடர்கள் !

பியூஸ் வயர் போட்டால்
சரியாகும் மின்சாரமா
உங்கள் கடவுள் ?
பிரார்த்தனையும்
பரிகாரமும் பியூஸ் வயரா?

அழியாது ! அழியாது என
உரத்துச் சொன்னாலும்
கேட்காத இவரெல்லாம்
இருபத்தி இரண்டு தேதியில்
தற்கொலை செய்து கொள்வாரோ!

இல்லை தன்னிடத்தில்
உள்ள சொத்தையெல்லாம்
இருபதாம் தேதியே
ஏழைகளுக்கு கொடுத்து விடுவாரோ!

கொள்ளை சிரிப்பு வருகுதே!
இந்தக் கோமாளித்தனங்களைப்
பார்த்து ! பார்த்து !

எழுதியவர் :வா. நேரு
நாள் :2012-12-16 15:10:57
நன்றி : எழுத்து.காம்

உலகம் அழியும் என்று பீதி கிளப்பியவர்கள் கைது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 டிசம்பர், 2012 - 17:02 ஜிஎம்டி
விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட புவிப் படம்
விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட புவிப் படம்
இந்த மாதம் 21 ஆம் தேதியுடன் உலகம் அழியப்போகிறது என்று ஆருடம் சொல்வதற்காக சீனாவின் பல்வேறு ஊர்களில் பொதுச் சதுக்கங்களில் கூடியவர்கள் சிலரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
நாட்டின் மத்தியப் பகுதியிலும் மேற்கு மாகாணங்களிலும் பல இடங்களில் உலகம் அழியப்போகிறது என்று நம்பும் பிரிவினர் கூடினார்கள் என்றும் பொலிசார் இவர்களைக் கலைத்துள்ளனர் என்றும் அரசு ஊடகங்கள் கூறுகின்றன.
மாயா என்ற அழிந்துபோன அமெரிக்க நாகரிகத்தின் ஆரூடத்தின்படி இந்த மாதம் உலகம் அழியும் என்று இந்தப் பிரிவினர் நம்பி இணையத்தில் எச்சரிக்கைகளைப் பரப்பிவருகின்ரனர்.
ஹொங்கொங்கிலும் இந்த காரணத்துக்காக 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
இந்த விடயம் சீனாவில் மட்டுமல்லாத வேறு பல நாடுகளிலும் பயத்தை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான அடிப்படையற்ற தகவல்கள் இணையத்திலும் வேகமாக பரவி வருகின்றன.
nantri - bbc news -tamil -16-12-12

Wednesday 12 December 2012

அண்மையில் படித்த புத்தகம் : காற்றில் அலையும் சிறகு


நூலின் தலைப்பு : காற்றில் அலையும் சிறகு
ஆசிரியர்             : சுப்ர பாரதி மணியன்
வெளியீடு           :  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்
முதல் பதிப்பு      : டிசம்பர் 2005
மொத்த பக்கங்கள் : 130, விலை ரூ 50

                                          காற்றில் அலையும் சிறகு என்னும் இந்தப் புத்தகம் 16 சிறுகதைகளின் தொகுப்பு.ஆனந்த விகடன், தாய், பாக்யா, குங்குமம் போன்ற பல இதழ்களில் வந்த சிறுகதைகள் நம் கையில் மொத்தமாய், புத்தகமாய். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் , தொலைபேசித்துறையில் உதவிக் கோட்டப்பொறியாளர், இப்போது கோட்டப்பொறியாளர் ஆகியிருக்கக்கூடும் . 6 நாவல்கள், 12 சிறுகதைத் தொகுப்புகள், 2 குறு நாவல் தொகுப்புகள், 2 கட்டுரைத் தொகுப்புகள் என அவர் எழுதியிருக்கும் நூல்களின் தொகுப்புகள் நம்மை மலைக்க வைக்கின்றன. பல பரிசுகளை அவர் இலக்கியத்திற்காகப் பெற்றிருப்பது, அவரது துறையைச் சேர்ந்தவன் என்ற வகையில் பெருமையாக இருக்கின்றது.

                                                                                  16 கதைகள் , ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கின்றன. 'இந்தப் புத்தகத்தின் தலைப்பான காற்றில் அலையும் சிறகு, எப்படி எப்படியோ இருப்பவர்கள் , இப்படி எப்படி ஆனார்கள் என்னும் கேள்வியை எழுப்புவதாக இருக்கின்றது. நிதானத்தை கற்றுக்கொடுக்கும் இரவிச்சந்திரன், ருசிப்பதை, எதையும் ரசிப்பதை கற்றுக்கொடுக்கும் இரவிச்சந்திரனின் மாற்றமும், அவன் கடன் வாங்கி , கடன் வாங்கி  நோயாளியாக மாறுவதையும் கடைசியில்  உணவகத்தில் இரை கண்ட மிருகம் போல அள்ளி அள்ளி சோற்றை விழுங்குவதையும் அழகுற விவரித்துள்ளார் சுப்ரபாரதி மணியன் .இரவிச்சந்திரனைப் பற்றிப் படிக்கும் போது இறந்த போன எனது நண்பன் ஞாபகம் வருகின்றது. ஒரு கதாபாத்திரத்தில் நம்மை ஒன்ற வைப்பதும் அதில் நம்மை இணைத்துப் பார்க்குமளவுக்கு எழுதுவதும்தானே எழுத்தாளனின் வெற்றி.

                                                                பல கெளரவக் கொலைகளுக்கு அடிப்படையான , அண்ணன்களாலும் அப்பாக்களாலும் கொல்லப்பட்ட பல பெண்கள் செய்த தவறு திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாதல்.  ஆனால்   திருமணத்திற்கு முன்னே  கர்ப்பமாகிப் போன தன் பெண்ணை கர்ப்பக்கலைப்பிற்கு அழைத்துப்போகும் அப்பாவின் கதை, இந்த சிறுகதைத் தொகுப்பில்  "வழி". செத்துப்போ என்று சொன்னாலும் , வளர்த்த பாசமும், ஏமாந்து போன தனது மகளின் நிலையும் கடைசியில் "செத்து மட்டும் தொலைச்சுராதே" என்று சொல்லும் அப்பாவின் குரலும் திருப்பூரிலிருந்து ஒலிப்பது எதார்த்தமான குரல்தான். 

                                            பெரிய உணவு விடுதிகளின் முன்னால் பிச்சையெடுக்கும் முதியவர்களைக் கேட்டுப்பாருங்கள், அவர்கள் முன்னால் கிராமத்து கூலி விவசாயிகளாக இருப்பார்கள், அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களாக இருப்பார்கள். காட்டை விட்டுத் துரத்தப்பட்ட ஆதிவாசிகள், பழங்குடியினரைப் பற்றி மறைந்த பிரதேசம் சிறுகதை பேசுகின்றது.

                                           வேலையற்ற பட்டதாரி இளைஞனைப் பற்றிப் பேசும் 'எல்லோருக்குமான துயரம் " நமக்கும் துயரத்தை ஏற்படுத்துகிறது. எத்தனை அவமானங்களைச் சகித்துக்கொண்டு அவர்கள் துயருற வாழ்கிறார்கள் எனபதனைப் பேசும் சிறுகதை. ஆம், இந்த நாட்டின் துயரம்தான் இது, படித்தவனுக்கு வேலை இல்லை என்பது...

                                          இதைப் போல ஒவ்வொரு கதையையும் சொல்லமுடியும் என்றாலும் தனி மனித அவலங்களை, சமுக அவலங்களை சுட்டிக்காட்டும் கதைகளாக இக்கதைகள் இருக்கின்றன. துறவி என்று ஆனாலும் குடும்பக்கடமைகள் விடாது துரத்தும் , உறவினர்கள் விடாது பொருளாதார ஆதரவுக்காக துறத்துவர் என்பத்னை துறவி கதை சொல்கின்றது. மகளின் திருமணத்திற்காக சிறுநீரகத்தை பணத்திற்க்காக விற்கப்போய் ஏமாந்து வெறுமனே சிறுநீரகத்தை இழ்ந்து வந்த கதை என்று வாழ்வின் எதார்த்தை சுட்டுவதாக பல கதைகள் உள்ளன.

                                             "கதை எழுதறுதும் ,சாப்பிடறதும் ஒண்ணுதான். நிதானமானது ரெண்டும்." ( பக்கம் 9) .ஆம்,உண்மைதான். சுப்ரபாரதிமணியன் கதைகள் நிதானமாக சாப்பிடும் சாப்பாடாகவே இருக்கின்றன. கதைகளில் மிகப்பெரிய திருப்பங்கள், சஸ்பென்ஸ் அப்படி இப்படி என்றெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் நம்மைச்சுற்றி நிகழும் அவலங்கள் இருக்கின்றன-. ஏன் இந்த அவலங்கள் என்னும் கேள்வியை எழுப்புகின்றன. படித்து , யோசித்து யோசித்து அசை போடும் பல விசயங்கள் சில பக்கங்களில் சிறுகதையாகக் கொடுக்கப்பட்டுள்ளன். படித்து அசை போட்டுப் பாருங்கள். 




Sunday 25 November 2012

நிரம்பி வழிகின்றன

நிரம்பி வழிகின்றன
உணவு விடுதி மேஜைகள்

வித விதமான
ஆடைகளோடும்
அணிகலன்களோடும்
ஆண்களும் பெண்களும்
யுவதிகளும் கிழவிகளுமாய்
உணவினை
சுவைத்துக்கொண்டும்
ஆர்டர் இட்டுக்கொண்டுமாய்
நிரம்பி வழிகின்றன மேஜைகள்

உணவுக்கு ஆர்டர் கொடுத்து
உண்ணும் போதும்
உண்டு முடித்த பின்பும்
எக்மோர் ரெயில்
நிலையத்தில் கேட்ட குரல்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது
காதுகளில் விடாது

நான் பெத்த பிள்ளைகளா
நான் சாப்பிட
ஒத்த ரூபா போடுங்க ராசா
என்னும் அந்தக்குரலுக்கு
செவிமடுக்காது
தாண்டி வந்த பின்பும்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது
விடாது அந்தக்குரல்

நிரம்பி வழிகின்றன
உணவு விடுதி மேஜைகள்
ஏற்றத் தாழ்வைப்
பார்த்துக்கொண்டே
கடந்து செல்லும்
அரசியல்வாதி போலவே

இல்லாக் கொடுமையும்
இருப்பவனின் ஊதாரித்தனமும்
ஏன் இந்நாட்டில் எனும்
கேள்விகளின்றி
சர்வருக்கு சில
நாணயங்களை வைத்துவிட்டு
நடந்து செல்கிறேன் நானும்....





எழுதியவர் :வா. நேரு

நாள் :2012-10-15
nantri : eluthu.com

அண்மையில் படித்த புத்தகம்-நேசத்துணை-திலகவதி

அண்மையில் படித்த புத்தகம்

நூலின் தலைப்பு : நேசத்துணை
ஆசிரியர்        : திலகவதி
பதிப்பகம்        : அம்ருதா பதிப்பகம்
முதல் பதிப்பு    : டிசம்பர் 2007
விலை          : ரூ 80 , 168 பக்கங்கள்

                                            நேசத்துணை எனபது நாவல். மொத்தம் 24 அத்தியாயங்கள் உள்ளன. தமிழில் நவீன எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் திலகவதி. காவல்துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர். கிரேன்பேடி போல மக்கள் பலரால் தமிழகத்தில் அறியப்பட்டவர். திலகவதியின் இந்த நாவல் நல்ல இல்லறத்திற்கு என்ன தேவை என்பதனை கேள்வியாகக் கேட்டு அதற்கு பதிலாக அன்பு  என்பதனைப் பதிலாக தரும் நாவல் எனலாம்.

                                                  160 பக்கம் கதையைப் போலவே திலகவதியின் முன்னுரையும் அருமையாக உள்ளது. ஜெயகாந்தன் தனது நாவல்களில் முன்னுரைகளில் நிறையப் பேசுவதுபோலவே திலகவதியும் பேசியிருக்கிறார். நாவல் ஆசிரியர்கள் முன்னுரையில் பேசவேண்டும்.

                                                   " பெண் , இன்று ஒரு மட்பாண்டம் இல்லை, யார் உடைத்தும் அவள் சிதறிப் போக மாட்டாள். அவள் இன்று கல்வி பெறுகிறாள், உயர்ந்த தேர்வுகளில் உயர்ந்த இடம் பெறுகிறாள். ...பெண் உயர்வு என்பது மானுட உயர்வு. மானுடம் என்பது அன்பினை ஆதாரமாகக் கொண்ட மன ஊற்று.இரு வேறு மனிதர்களை ஒன்றாய் இணைப்பதில் அன்பெனும் ரசாயனம் ஆகச்சிறந்த பங்கினை ஆற்றுகிறது....மனிதர்கள் சோற்றால் வாழ்வதில்லை. அன்பினால் ஜீவிக்கிறார்கள்.  இப்படியாகத் தங்களை அன்பினால் நிரப்பிக்கொண்ட ஒரு ஜோடியை எனக்கு தெரியும். அவர்களிக்கிடையே படிப்பு வித்தியாசம் இருந்தது. இன்னும் பலப்பல வேறுபாடுகள் இருந்திருக்கலாம், என்றாலும் அனைத்துக்குறுக்குச்சுவர்களையும் இடித்து நிரவி சமன்படுத்தியது இந்தப் புரிதலும் அன்புமேயாகும் " என்று முன்னுரையில் குறிப்பிடும் திலகவதி அந்த ஜோடியை வடிவேலு, நளினி பாத்திரங்களை மிக நன்றாக உருவாக்கி நாவல் முழுவதும் உலவ விட்டிருக்கிறார். வாழ்க்கை இணையர்களின் ஒற்றுமை என்பது ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுப்பதிலும் , ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதிலும்தான் இருக்கிறது என்பது மிக அழுத்தமாக இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது .

                                                   அதனைப் போலவே கஸ்தூரி பாத்திரமும். ஆனால் நளினி பாத்திரம் அளவுக்கு இல்லாமல் கொஞ்சம் செயற்கைத்தனம் இருக்கிறது . வடிவேலு , நளினி. கஸ்தூரி பாத்திரங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, " அவர்கள் ஏற்கனவே பூமியின்மேல் இருந்தார்கள், நான் அவர்களை அறிய நேர்ந்தது. உங்களுக்கு அவர்களை எழுதிக்காட்டியிருக்கிறேன். இப்போது என்னைப் பொறுத்தவரை இலக்கியத்தின் பயன் இதுதான் என்று நம்புகின்றேன் " பக்கம்-7 என்று சொல்கின்றார் திலகவதி. உணமைதான். செம்மைப்படுத்தவும் வாழ்க்கையை செழுமைப்படுத்தவும் ஆற்றுப்படுத்துதல்தானே நல்ல இலக்கியத்தின் நோக்கம்.பாகீரதி பாத்திரம் பெண்ணியவாதிகளை  கேலி செய்யும் விதத்தில் இருப்பது மனதைக் கொஞ்சம் நெருடுகிறது.

                               நாவல் விறுவிறுப்பாகவும் அதே நேரத்தில் இடையில் கொஞ்சம் நகைச்சுவை கலந்தும் ஆசிரியரால் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. நாவலைப் படித்து முடித்தவுடன் எனது மனைவியிடம் நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக அன்பு செலுத்த வேண்டும் என்று தோன்றியது. இந்த நாவலைப் படித்ததன் பயன் எனக்கு இது. நீங்களும் படித்துத்தான் பாருங்களேன்.

                           இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பக்கத்தில் " NESATHUNAI. A collection of short stories in Tamil by G. Tilakavathi " என்று போட்டிருக்கிறார்கள். நாவலை எப்படி சிறுகதைத் தொகுப்பு என்று அச்சிட்டார்கள் எனத் தெரியவில்லை. அடுத்த பதிப்புகளில் திருத்திக்கொள்ளலாம்.

                                           

Friday 16 November 2012

அண்மையில் படித்த புத்தகம் -தோல்விகளைத் துரத்தி அடி

 அண்மையில் படித்த புத்தகம்

நூலின் தலைப்பு : தோல்விகளைத் துரத்தி அடி
ஆசிரியர்                : எழில் கிருஷ்ணன்
பதிப்பகம்               : கிழக்கு பதிப்பகம்
முதல் பதிப்பு       : டிசம்பர் 2008
விலை                    : ரூ 75 , 160 பக்கங்கள்

                                               இது ஒரு சுய முன்னேற்றப்புத்தகம். படிக்கட்டுகள் எனத்தலைப்பிட்டு 8 தலைப்புகளில் கருத்துக்கள் உள்ளன.  வெற்றி பெற்றவர்கள் சிலரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள், ஜென் துறவிகள் சொன்ன சில உண்மைகள், நிகழ்வுகள் என நூல் முழுவதும் பல தகவல்கள், சுய முன்னேற்றக் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ள நூல் இது.கையில் எடுத்தால் படிக்கத்தூண்டுமளவு விறுவிறுப்பாய், பல்வேறு விசயங்களை மாறுபட்ட கோணத்தில் சொல்கின்ற புத்தகமாய் இந்தப்புத்தகம்

                                             ஒரு புத்தகச்சந்தையில் எப்படிப்பட்ட புத்தகங்கள் நிறைய விற்கின்றன என்று ஒரு பதிப்பாளரைக்க் கேட்டபொழுது , நிறைய ஜோதிடப்புத்தகங்கள் விற்கின்றன, அதற்கு அடுத்தாற்போல் சுய முன்னேற்றப்புத்தகங்கள் நிறைய விற்கின்றன என்றார். இரண்டுமே சுய நலம் சார்ந்த புத்தகங்கள் என்றார் பக்கத்தில் இருந்த நண்பர் . எப்படி என்றபோது ஜோதிடம் பொய் , ஆனாலும் நிறையப்பேர் படித்தவர்களே நம்பி ஏமாந்து போகிறார்கள் என்றவர், சுய முன்னேற்றப்புத்தகங்கள் பலவும் கூட நீ மட்டும் ஜெயிக்க என்ன வழி என்று சொல்பவைதான் என்றார்.

                                            தோல்விகளைத் துரத்தி அடி என்னும் புத்தகத்தில் கவனித்த ஒரு விசயம் இவர்களின் நோக்கம் என்ன என்பதனைத் தெளிவாக்கியது . " வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களிடம் சில பொதுப்பண்புகள் இருக்கும். வம்புதும்புக்குப் போக மாட்டார்கள் . அடுத்தவர் பிரச்சனையில் தலையிட மாட்டார்கள். மூக்கை நுழைக்க மாட்டார்கள். தன் வேலையுண்டு , தானுண்டு என்று இருப்பார்கள்.

                                                                                                  கலாட்டா செய்ய மாட்டார்கள்.யூனியன் மீட்டிங் அது ,இது என்று எந்தப்புறக்காரியங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டார்கள். கவனித்துப்பாருங்கள், எந்தப் பெரிய ஆளாக இருந்தாலும் அவன் வேலையத் தவிர எதிலும் சிறு ஆர்வம்கூட காட்டிக்கொள்ள மாட்டான் அப்போதுதான் தன் வேலையில் முழுக்கவனம் செலுத்த முடியும் என்பது புத்திசாலிக்குத் தெரியும் " பக்கம் 83.
                        "அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப்போராடாது, அநீதி களைய முடியாது", "ஒன்று படுவோம், போராடுவோம், வெற்றி பெறுவோம் " என்பது தொழிற்சங்கங்க கூட்டங்களில் , போராட்டங்களில் எழுப்பப்படும் முழக்கங்கள். அமெரிக்கக் கன்வுகளோடு இருக்கும் நமது இளைஞர் கைகளில் தவழும் சுய முன்னேற்றப்புத்தகங்களில் தென் படும் உன் வேலையத் தவிர வேறு எதையும் கண்டு கொள்ளாதே என்பது ஆபத்தானது மட்டுமல்ல, இப்போது இருக்கும் பணக்காரர்களையும் , உயர் ஜாதிக்காரர்களையும் பாதுகாக்கும் வேலை என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.  


                                                    

Monday 12 November 2012

ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்

                                  அண்மையில் படித்த புத்தகம்

    புத்தகத்தின் தலைப்பு  : ஒரு விரலில் உலகை ஜெயித்தவர்
    ஆசிரியர்                           : மாலினி சிப்
     தமிழில்                             : ஐஸ்வர்யன்
     வெளியீடு                        : விகடன் பிரசுரம் ( 628)
     முதற்பதிப்பு                    :  டிசம்பர் 2011
     மொத்த பக்கங்கள்       :    248        
      விலை                             :  ரூ 100

                                                          சுயசரிதையை படிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்த செயல். அந்த வகையில் மாலினி சிப் என்னும் பெண்ணின்  இந்த சுய சரிதை என்பது அற்புதமான ஒரு வாசிப்பு அனுபவமாகவும் , அதே நேரத்தில் சமூக சிந்தனையோடு சுயபரிசோதனை செய்யும் விதமாகவும் அமைந்தது என்றால் அது மிகையில்லை.

                                                     தன் கதையை தானே விவரிக்கும் விதமாக அமைந்த இந்த மாலினி சிப்பின் வரலாறு என்பது படிக்கும் பலருக்கும் தன்னம்பிக்கை ஊட்டக்கூடியது. பிறவியில் ஏற்படும் சிறு குறைபாடுகளுக்கே அலுத்துக்கொண்டு வாழ்வில் சலித்துக்கொள்வோர் எல்லாம் அவசியம் படிக்க வேண்டிய கதை இது.

                                                    "செரிப்ரல் பால்ஸி' நோய் என்றால் என்ன்வென்று இந்த நூலைப் படிப்பதற்கு முன்னால் எனக்குத் தெரியாது , ஆனால் இந்தப்புத்தகத்தைப் படித்துமுடித்தபோது அந்த நோய் என்ன செய்யும் , அந்த  நோய் பாதிப்பு ஏற்பட்டால் குடும்பத்தினர் செய்ய வேண்டியது என்ன, சமூகத்தினர் செய்ய வேண்டியது என்ன  போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலும், அப்படிப்பட்ட இயல்பான ஒரு பதிவாக இப்புத்தகம் அமைந்துள்ளது இதன் சிறப்பு.

                                                   இந்தப் புத்தகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி - வேர்கள் என்ற தலைப்பில் 1 முதல் 72 பக்கம் வரை. டாக்டர்கள் சொன்னது பொய்யாப்போச்சு என்னும் முதல் அத்தியாயம் 1966 -ஜீலை மாதம் மாலினி சிப் பிறந்தது, இயல்பான வளர்ச்சி இல்லாததால் , பரிசோதனைகள் மூலம் 'செரிப்ரல் பால்ஸி' என்ற நோய் பாதிப்பு மாலினி சிப்பிற்கு உள்ளது என்பதனை கண்டுபிடித்தது, கடைசிவரை இந்தக் குழந்தை காலம் முழுக்க படுக்கையிலே கிடப்பாள் என்னும் மருத்துவர்களின் கூற்றை மாலினி சிப்பின் பெற்றோர்கள் மனதளவில் மறுத்து மாற்று வழி தேடியது, மாலினி சிப்பின் மருத்துவத்திற்காகவே இவரது பெற்றோர்கள் லண்டனுக்கு சென்றது என்று பல தகவல்கள் கதையாக விவரிக்கப்பட்டுள்ளன.

                                               மாலினி சிப்பின் 6 வயதில் இந்தியாவுக்கு வருகின்றார்கள். லண்டன் பள்ளிக்கும் , இந்தியாவில் கிடைத்த அனுபவத்திற்கும் உள்ள வேறுபாட்டை மாலினி சிப் பக்கம் 34-ல் குறிப்பிடுகின்றார் இப்படி " அந்தப்பள்ளியைச் (லண்டன்) சேர்ந்தவர்கள் , வார்த்தை விவரிக்கு அப்பாற்பட்டு, அன்பாக, இதமாக, உணர்வுபூர்வமாக என்னோடு பழகியதை, எனக்குச் சம உரிமைவழங்கிப் பராமரித்த்தை இன்றளவும் என்னால் மறக்க இயலவில்லை. கண்ட நாள் முதலே அவர்கள் என்னை ஒரு சிறுமியாகத்தான் பார்த்தார்களே தவிர ' ஊனமுற்ற சிறுமி'யாக அல்ல.ஆனால் .இந்தியாவில் கிடைத்த எதிர்மறையான அனுபவமோ சொற்களால் ,வெளிப்படுத்த முடியாத அளவு வலியும் வேதனையும் தந்திருந்தது....முரட்டுத்தனம்,அதிகாரப்போக்கு, அகந்தை, மிரட்டும் போக்கு என சகல கருப்பு அம்சங்களும் நிறைந்திருக்க...அவர்கள் அளித்த சிகிச்சைகள் என்னைக் குணப்படுத்தாமல் காயப்படுத்தின " .

                                                  குழந்தைப் பருவ நிகழ்வுகள், மாலினி சிப்பின் அப்பாவிற்கும் அம்மாவுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு, அதனால் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட விவாகரத்து, கணவரைப் பிரிந்த வேதனையை வெளிக்காட்டாமல் அவரது அம்மா அவரை வளர்த்தது, சிறப்புப்பள்ளியில் படித்தது, ஹாஸ்டல் வாழ்க்கை எனத் தன் குழ்ந்தைப் பருவ நிகழ்வுகளை விவரிப்பதாக - வேர்கள் என்னும் இந்த முதல் பகுதி அமைந்துள்ளது. எலெக்டிரிக் நாற்காலி என்னும் அந்த கருவி எவ்வளவு தூரம் அவரது வாழ்க்கையை மாற்றியது என்பதனை விவரிப்பது அருமை.

                                                  நூலின் இரண்டாம் பகுதியான வளர் பருவத்தில் (பக்கம் 73 முதல் 132 வரை )  மாலினி சிப்பின் இளமைக்காலமும் படிப்பும் விவரிக்கப்பட்டுள்ளது. பம்பாயின் புனித சேவியர் கல்லூரியில் பி.ஏ. படித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்றார். " பொதுவாகப் பத்திரிக்கைக்காரர்கள் திரும்ப திரும்ப கேட்ட ஒரு கேள்வி, கல்லூரியில் படித்த காலத்தில் நான் மற்றவர்கள் மத்தியில் வித்தியாசமாக உணர்ந்தேனா என்பதே. நிச்சயமாக உணர்ந்தேன். செயிண்ட் சேவியர் கல்லூரிக் காலத்தில்தான் அந்த வித்தியாசம் நேரடியாக என்னைத் தாக்கிற்று. " பக்கம் -75  எனக்குறிப்பிடும் மாலினி சிப் மேலை நாட்டுப்படிப்பையும் நமது நாட்டுப் படிப்பையும் ஒப்பிடுகிறார். மிகவும் நன்றாகப் பாடம் நடத்தும் உமா என்னும் ஆசிரியர் இறுக்கமாக மாணவிகளிடம் நடந்து கொள்ளும் தன்மையை சொல்லும் விதம் நன்றாய் உள்ளது. ஒயினை ருசித்ததைப் பற்றித் தனி அத்தியாயமே உள்ளது. கன்னிப்பருவத்திலே என்னும் தலைப்பில் அமெரிக்கா சென்றிருந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றார் மாலினி சிப். " எனது அமெரிக்கப் பயணமே எனது கண்களைத் திறந்த பெருமைக்கு உரியது. தங்களுக்கென ஒரு வாழ்க்கையை கவுரமாக வாழும் அத்தனை மாற்றுத்திறனாளிகளை நான் அமெரிக்கபயணத்துக்கு முன் சந்தித்தே இல்லை " என்று சொல்லும் அவர் மாற்றுத் திறனாளிகள் பற்றிய சமூகப் பார்வையைச் சொல்கின்றார். " மாற்றுத் திறனாளிகள் எப்போதுமே அடுத்தவரைச் சார்ந்தவர்கள் என்றும், வேறு கதி இல்லாதவர்கள் என்றும்தான் நமது சமுதாயம் குறுகிய பார்வை கொண்டிருக்கிறது. அது நியாயமா ? முதலில் நாங்களும் மனிதர்கள். அப்புறம்தான் மாற்றுத்திறனாளிகள் . ஆனால்,பெரும்பாலோர் கண்ணுக்கு மாற்றுத்திறனாளிகளின் குணங்கள் கண்ணுக்குத் தெரிவதற்குமுன்  அவர்களின் அங்கக் குறைபாடுதான் கண்ணுக்குத் தெரிகிறது" பக்கம் -114.
இதனைப் போன்ற பல்வ்று தன்னுடைய  மன் ஓட்டங்களை இந்த நூலில் பதிந்திருக்கின்றார் மாலினி சிப்.

                                                 நூலின் மூன்றாம் பகுதியான சுதந்திரக்காற்றில் , மறுபடியும் லண்டன் சென்றதைப் பற்றி எழுதியுள்ளார். பேசுவதிலும் எழுதுவதிலும் தனக்கு இருந்த பிரச்சனையை சரிசெய்யப் பயன்பட்ட கருவிகளைச் சொல்கின்றார். " இமெயில் வசதி என் வாழ்க்கையில் பெரும் புரட்சியையே ஏற்படுத்திவிட்டது எனலாம் . அனைவருடனும் என்னால் சுயமாகவே தொடர்புகொள்ள முடிந்தது" - (பக்கம் 151) எனச்சொல்லும் மாலினி சிப் இணையமும் , எழுது உபகரணமும்  தன் வாழ்வில் ஏற்படுத்திய மாற்ற்த்தை விவரிக்கும் விதம் அருமை. 'சொந்தக் காலில்'  நிற்கும் திறனையும் துணிச்சல்காரியாக மாறியதையும் சொல்கின்றார். வாகை சூடினேன் என்னும் தலைப்பில் " அந்த ஒற்றைச் சிறு விரல்  எனது வல்லமையின் பொக்கிஷமாக இருந்தது. சிரமமின்றி இமெயிலை உபயோகித்தேன் . " எனக்குறிப்பிடும் மாலினி சிப், எழுத்தாளர் ஜென்ஸி மோரிஸின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டதை விவரிக்கின்றார். அவரை " மாற்றுத் திறனாளிப்  பெண் ஒருத்தி அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளப்போராடிக் கொண்டே , புற உலகோடும் இணைந்து செய்ல்படும்போது சந்திக்க நேரிடும் சிரமங்களை விளக்கமாகச்சொல்லி, பெரியதொரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார் " (பக்கம் 182) எனக்குறிப்பிடுகின்றார்.

மாற்றுத்திறனாளிகள் செக்ஸ் ரீதியாக புறக்கணிக்கப்படுவதை மிக விரிவாக எழுதும் மாலினி சிப், "நீ ஊனமுற்றவள், உனக்கு செக்ஸ் கிடையாது " என்னும் தன் கட்டுரையின் தாக்கம் பற்றியும் விவரிக்கின்றார். ' பெண்ணியம் பற்றி தெரிந்தால்தான், நமது அன்றாட வாழ்வை அலசி ஆராய்ந்தால்தான் பெரிய அளவிலான பெண் அடக்குமுறையை எதிர்த்துப்போராட முடியும் எனும் விழிப்பு உணர்வு எனக்கு ஏற்பட்டது " (பக்கம் - 188) எனச் சொல்கின்றார் .என்னாலும் வாழமுடியும் என்று தன்னம்பிக்கை பெற்றதையும் , இன்னொரு எம்.ஏ.பட்டம் பெற்றதையும் விவரிக்கின்றார். தன்னுடைய துன்பத்தையும் குறிப்பிட்டுச்சொல்கின்றார். " மற்றவர்களுக்கெல்லாம் ஒரு மணி நேரமே ஆகக்கூடிய ஒவ்வொரு பணியும், ஒற்றை விரலைக்கொண்டு செய்து முடிக்க எனக்கு ஒரு நாள் ஆகிவிடும் " என்பதைச் சொல்கின்றார் . தனக்கு மும்பையில் வேலை கிடைத்த்தையும் , ADAPT ( Able Disabled All People Together) என்னும் அமைப்புக்கு உயிரூட்டியதையும் அதில் வேலை செய்து மாற்றுத் திறனாளிகளை ஒன்றிணைத்தையும் குறிப்பிடுகின்றார்.
                 2004-ல் மும்பை மராத்தான் ஓட்ட பந்தயத்தின் பந்தய விதிமுறைகளில் " சக்கர நாற்காலிகளுக்கும் நாய்களுக்கும் அனுமதி இல்லை " எனும் குரூரமான வாசகமும் அதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை ஒருங்கிணைத்ததை, போராடியதை மாலினி சிப் பதிந்துள்ளார்.

                தனக்கு ஏற்பட்ட அவமானங்களை, அவமதிப்புக்களை, ஒதுக்கப்பட்டதை மிக நுட்பமாக நூல் முழுவதும் பதிந்துள்ளார் மாலினி சிப். " ஒருவருக்கு  மட்டுமே தனிப்பட்ட முறையில் நிகழ்வு நிகழ்ந்ததுகூட சக்தி மிக்க ஆயுதமே . அதை மறைப்பதும் ,புதைப்பதும் கூடவே கூடாது. அது மக்கள் மத்தியில் பேசப்பட்டு, ஆதரவு திரட்டப்படும் பட்சத்திலேயே பின்னாளில் அது போன்ற அவலம் நிகழாமல் தவிர்க்க இயலும்" (பக்கம் 234 ) . ஆம் உண்மைதான், இந்த நூலின் நோக்கத்தை விளக்கும் பகுதி இது எனலாம்.

                                                      மாற்றுத் திறனாளிகள் மற்ற நாடுகளில் மனித நேயத்தோடு அணுகப்படுவதற்கும் , நமது நாட்டில் அவ்வாறு அணுகப்படாமைக்கும் என்ன காரணம் என்பதனை மாலினி சிப் சொல்லும் விதம் சிந்திக்கத்தக்கது, மிகவும் தீவிரமாக விவாதிக்கப்படவேண்டியதும்கூட " ஒழுங்கற்ற எங்கள் உடல்களை மட்டும் பார்த்து மதம் சார்ந்த நம்பிக்கையாக முற் பிறப்புப் பாவங்களின் சின்னமாகவே எங்களைக் கணிக்கிறார்கள். பல தடவை ' நான் அப்படி என்ன பாவம் செய்து விட்டேன் ? ' என்று நிஜமாகவே  நான் யோசித்தது உண்டு " பக்கம் - 244. இந்த்  நாட்டில் மாற்றுத் திறனாளிகள் ஏன் மனிதாபிமானத்தோடு நடத்தப்படுவதில்லை என்றால், இவர்கள் முற்பிறவியில் பாவம் செய்தவர்கள், அதனால் இப்படி இருக்கின்றார்கள் என்னும் மன்ப்பான்மை ஊறிப்போயிருக்கிறது என்கின்றார். ஒரு கொலைகாரனுக்கு தண்டனை கிடைத்தால்  எப்படி மக்கள் அவன் செய்த செயலுக்கு தண்டனை என்று நினைக்கின்றார்களோ , அதைப்போல மாற்றுத்திறனாளிகள் என்றால் அவர்கள் முற்பிறப்பில் கொடுமை செய்தவர்கள் என்ற நினைப்பு மக்கள் மத்தியில், மதத்தின் அடிப்படையில் இருக்கிறது என்கின்றார்.

                                                                        இந்த நூல் என் அம்மாவுக்கு என்று மாலினி சிப் காணிக்கையாக்கியுள்ளார். மாலினி சிப்-ன் வெற்றிக்கு அவரது அம்மா எவ்வளவுதூரம் உறுதுணை என்பதனை படித்துப்பாருங்கள் , புரியும்.இப்படி அம்மாக்கள் வாய்த்தால், எந்த மாற்றுத்திறனாளியும் மனம் கலங்க மாட்டார்கள். படிக்க வேண்டிய புத்தகம், மற்றவர்களையும் படிக்கச்சொல்ல வேண்டிய புத்தகம். ஒரு நல்ல புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்த ஐஸ்வர்யனுக்கும், சிறப்பாக வெளியிட்டுள்ள விகடன் பிரசுரத்திற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Tuesday 6 November 2012

டாக்டர் பால்கர்ட்ஸ்


அமெரிக்க நாட்டுத் தத்துவப் பேராசிரியர், மனிதநேயத் தலைவர் டாக்டர் பால்கர்ட்ஸ் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் இரங்கலுரை
சென்னை,நவ.6-அமெரிக்க நாட்டுத் தத்துவப் பேராசிரியரும், மனிதநேய அமைப்பின் தலைவருமான டாக்டர் பால்கர்ட்ஸ் (Dr. Paul Kurtz) அவர்கள் 2012 அக்டோபர் மாதம் 20ஆம் நாள் காலமானார். பால்கர்ட்ஸ் அவர்களின் மறைவிற்கு இரங்கல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நவம்பர் 5ஆம் நாள் மாலை நடை பெற்றது.
பகுத்தறிவாளர் கழகம் ஏற்பாடு செய்த இரங்கல் கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி பால்கர்ட்ஸ் அவர்களின் படத்தினை திறந்துவைத்து இரங்கல் உரையாற்றினார். கூட்டத்தில் பொருளாதார நிபுணரும், சீரிய பகுத்தறிவாளருமான பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன் மற்றும் பகுத்தறி வாளர் கழகத்தின் மேனாள் தலைவர் முனைவர் மா.நன்னன் ஆகியோர் உரையாற்றினர்.
பால்கர்ட்ஸ் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் உரை: டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்களின் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆற்றிய உரை வருமாறு:
ஒருவர் காலமாகும் பொழுது ஏற்படுகின்ற வருத்தத் தின் அளவு அவர் சமுதாயத்திற்கு எந்த அளவிற்குப் பயன்பட்டார் என்பதைப் பொறுத்ததாக அமையும் என்று தந்தை பெரியார் கூறுவார். அமெரிக்க நாட்டுத் தத்துவப் பேராசிரியர் டாக்டர் பால் கர்ட்ஸ் அவர்களின் மறைவு நமக்கெல்லாம், மனிதநேயம் தழைத்திடப்  பாடுபடும் அமைப்புகளுக்கெல்லாம் மாபெரும் இழப்பை, வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. பல அறிஞர்கள் சிந்தனையாளர் களாக விளங்கியுள்ளார்கள். அறிவியல் அறிஞர்கள் பலர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். டாக்டர் பால்கர்ட்ஸ் துணிச்சல் மிக்க சிந்தனையாளர். தான் சிந்தித்ததை துணிச்சலாக வெளியிட்டவர். மனிதர்களுக்கு மனித நேயம் முக்கியம்; வாழ்க்கையினை அமைதியானதாக ஆக்கி வாழ்ந்து மகிழ வேண்டும்; வாழும்பொழுது மனநிறைவில் திளைக்க வேண்டும் என வலியுறுத்தியவர். அமெரிக்க நாட்டில் நாத்திக மனப்பான்மையுடன் பலர் இருக்கிறார்கள். ஆனால் தங்களை நாத்திகர் என வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொள்பவர்கள் வெகு சிலரே. அந்த வகையில் பெரியார் போட்டுத் தந்த பகுத்தறிவுப் பாதையில் பெரும்பான்மையானவர்கள் பயணித்து தங்களை நாத்திகர் என வெளிப்படையாகக் காட்டுவதில் உலகத்திலே பெரும்பான்மையானவர்களைக் கொண்ட மாநிலமாக இருப்பது தமிழ்நாடுதான். நாத்திகர் உலகிற்கு தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது.
உலகில் மத அடிப்படையில்தான் போர்கள் பல நிகழ்ந்திருக்கின்றன. பல்லாயிரக்கணக்கில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மதம் அமைதியான வாழ்வினை அளிக்க வில்லை. பகுத்தறிவிற்கு மதம் புறம்பானது. பகுத்தறி வாளர்களுக்கு மதம் பிடிக்காது; மதமும் பிடிக்காது.
டாக்டர் பால் கர்ட்ஸ் மனிதநேயம் என்பதை மதவாதிகளின் பிடியில் இருந்து மீட்டு மதச்சார்பற்ற மனிதநேயம் (Secular Humanism) என அடையாளப் படுத்தி வலியுறுத்தி வந்தார். Living without Religion (மதம் நீங்கிய வாழ்வு) என ஆங்கிலத்தில் புத்தகம் எழுதி யுள்ளார். அழகான ஒரு புதிய ஆங்கிச் சொல்லை உருவாக்கினார். Eupraxophy என்பதே அந்த சொல். மதம் என்ற வேர்ச்சொல் ஆங்கில மொழியில் கிடையாது. Religion  என்பது டச்சு மொழிச் சொல்லாகும். டச்சு மொழியில் Religion என்பதன் பொருள் கடவுளுக்குச் சேவை செய்வது என்பதாகும். ஆங்கிலத்தில் Religion என்ற சொல் ஆரம்பத்தில் கிடையாது.
மனிதரை மேம்படுத்த மதம் தேவையில்லை. மதம் மனிதனை பின்னடையவே செய்திடும். Eupraxophy எனும் சொல்லில் Eu என்பது நல்லது என பொருள்படும். Praxis என்பது செயல் ஆகும். Sophia என்பது அறிவுடைமை (Wisdom) என பொருள்படும். எனவே eupra xophy என்பதுதான் முழுப்பொருள் நல்ல நடைமுறைக்கான அறிவுடைமை (Good practical wisdom) எனக் கொள்ளலாம்.
மனித நேயம் என்பது மதமல்ல என்பதை வலியுறுத்த eupraxophy எனும் ஆங்கிலச் சொல்லை புதிதாக உருவாக்கி மானிடத் திற்கு அளித்தவர் டாக்டர் பால்கர்ட்ஸ். மதம் என்பதே மற்றவர்களை புண்படுத்து வதாகும். சிந்திக்காதே! நம்பு! ஏற்றுக்கொள்! கேள்வி கேட்காதே! என தடைபோடுவது மதமாகும். மனித நேயத்தின் முழுப்பயன் மானிடத்திற்கு கிடைக்க வேண்டுமானால் மனிதநேயம் மதமாக இருத்தல் கூடாது. மதத்தின் பிடியிலிருந்து மீட்கப்படவேண்டும். என சிந்தித்து, தனது கருத்தினை நடைமுறைப் படுத்தியவர் பால் கர்ட்ஸ் அவர்கள் - தனது சிந்தனை களை பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களாக வடித்து அதைப் பதிப்பிப்பதற்காக புரோமிதியஸ் புக்ஸ் (Prometheus Books) எனும் வெளியீட்டகத்தினை நிறு வினார். தனது புத்தகங்களோடு, பிற அறிஞர்களின் புத்தகங்களையும் பதிப்பித்து வெளியிட்டார். புரோமிய தியஸ் என்பது கிரேக்க புராணப் பெயராகும். பெரியார் இயக்கத்துடன் தொடர்பு
மனிதநேயத்தினை வலியுறுத்திய புராண காலத்தில் வாழ்ந்தவர் பெயராகும். டாக்டர் பால்கர்ட்ஸ் 20 ஆண்டுகளுக்கு முன்பு பம்பாயில் பெரியார் இயக்கத்திற்கு அறிமுகம் ஆனவர். அது முதல் பெரியாரின் பணிகளைப் படித்து அறிந்து, கேட்டு அறிந்து பெரியாரது இயக்கத் தின்பால் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். அமெரிக்க நாட்டிலுள்ள பெரியார் பன்னாட்டு மய்யத்தினர் அவருடன் தொடர்பில் இருந்தனர். அமெரிக்கா செல்லும்பொழுது அவரது இடத்திற்குச் சென்று அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அதுபோல 2007ஆம் ஆண்டில் நமது அழைப்பினை ஏற்று சென்னை-பெரியார் திடலுக்கு வருகை தந்தார். கருஞ்சட்டைத் தோழர்க ளுடன் கலந்துரையாடினார். தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார்.
டாக்டர் பால்கர்ட்ஸ் ஆற்றிய மனித நேய மேம்பாட்டுப் பணியினை பெருமைபடுத்தும் விதமாக மதிப்புறு முனைவர் (D. Litt)
பட்டத்தினை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வழங்கியது.
பெரியார் இயக்கம் நடத்திடும் கல்வி நிலையங்களை பார்த்துவிட்டு ஒரு பகுத்தறிவு இயக்கம் கல்வி மேம் பாட்டுக்கு இந்த அளவிற்கு செயல்பட முடியுமா? என வியந்து பாராட்டினார் டாக்டர் பால்கர்ட்ஸ்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை பிறநாடுகளில், தமது எழுத்துகளின் மூலம் பரப்பிடுவதில் ஒரு குறிப்பிட்ட பங்காற்றியவர் டாக்டர் பால்கர்ட்ஸ். பெரியார் கொள்கை பரப்பு தூதுவர் என்பது மிகவும் பொருத்தம். தந்தை பெரியார் உலகமயமாகும் சூழலில் டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்கள் காலமானது நமக்கெல்லாம் பேரிழப்பாகும். டாக்டர் பால் கர்ட்ஸ் அவர்களது சிந்தனைகள், போற்று தலுக்குரியன. அவருடைய மனிதநேய மேம்பாட்டிற்கான பங்களிப்பு நினைவு கூர்ந்து பாராட்டப்பட வேண்டியது. வாழ்க பால்கர்ட்ஸ் சிந்தனைகள். வாழ்க அவரது புகழ்!
-இவ்வாறு தமிழர் தலைவர் பால்கர்ட்ஸ் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உரையாற்றினார்.
முனைவர் மு.நாகநாதன் உரை
டாக்டர் பால் கர்ட்ஸ் அவர்களுக்கான இரங்கல் கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய பொருளாதாரப் பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன் குறிப்பிட்டதாவது:
பொதுவுடைமை தத்துவத் தந்தை காரல் மார்க்ஸின் துணைவியார் ஜென்னி மார்க்ஸ் தனது கணவருக்கு துணையாக இருந்த ஒரு நாத்திகப் போராளி. தந்தை பெரியாருக்கு வாழ்க்கைத் துணைவியாக, இயக்கத் துணைவியாக, அவரது மறைவிற்குப்பின் இயக்கத்தினை வழி நடத்திய பெருமைமிக்க அன்னை மணியம்மையார் பெயரில் அமைந்துள்ள இந்த மன்றத்தில் டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடை பெறுவது சிறப்புக்குரியது.
அமெரிக்க நாட்டில் நாத்திக கருத்துகள் பரவலாக இருக்கும் நிலையினை எதிர்த்து கடவுள் பற்றினை வளர்த்தெடுக்கும் விதமாக லட்சக்கணக்கில் டாலர் களை செலவழிக்கும் குழுமங்கள் உருவாகி உள்ளன. இத்தகைய சூழல் நிலவும் அமெரிக்க நாட்டில் டாக்டர் பால்கர்ட்ஸ் ஆற்றிய நாத்திகப் பணி, அறிவியல் மனப்பான்மை வளர்ப்புப் பணி, மனிதநேய பணி அளப்பரியது; மகத்தானது.
1973ஆம் ஆண்டு அமெரிக்க மனிதநேய சங்கம் (American Humanist Association) வடித்துக் கொடுத்த மனிதநேயர் அறிக்கை (Humanist Manifesto) தயாரிப்பில் டாக்டர் பால் கர்ட்ஸ் முக்கிய பங்காற்றினார். மூடநம்பிக்கையை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். உலகியலை மதச்சார்பற்ற வகையில் பார்க்கும் உளப்பாங்கு உருவாகிட அயராது சிந்தித்து உழைத்தவர் அந்தப் பெருமகனார். தனது எழுத்துகளில் அத்தகைய சிந்தனை களை வலியுறுத்தி கூறியவர். அண்மையில் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி மார்கண் டேய கட்ஜு ஊடகங்களைத் தாக்கும் போதைகளாக மத மூடத்தனம், சினிமா, மட்டைப் பந்து ஆகியவற்றைக் குறிப் பிட்டார். தந்தை பெரியாரின் இயக்கமும் அதன் இன்றைய தலைவரான வீரமணியார் அவர்களும் அந்தப் போதை எதிர்ப்புப்பிரச்சாரம்தான் செய்து வருகின்றார்.  மனித நேயம் தழைப்பது பகுத்தறிவா ளர்கள் கையில் தான் உள்ளது. மதம் நீங்கிய மனிதநேயத்திற் காகப் பாடுபட்டவர் பால் கர்ட்ஸ். பெரியார் இயக்கத்தின் உற வோடு சமு தாயப் பணி ஆற்றிய வர். பால் கர்ட்ஸ் அவர்களின் நினைவுகள் மனிதநேயம் மனித ரிடம் பெருகிட உறுதியாகப் பயன்படும், பயன்படுத்திட வேண்டும்.
முனைவர் மா.நன்னன்
பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் தலைவர், தமிழாய்ந்த பகுத்தறிவு அறிஞர் முனைவர் மா.நன்னன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
பகுத்தறிவாளர்களுக்கு, மனிதநேயர்களுக்கு நாடு, மொழி, எல்லைகள் கிடையாது. அவர்களது சிந்த னைகள், செயல்பாடுகள் உலகளாவியவை. ஒருநாட்டு எல்லைக்குள் அவர் களைச் சுருக்கிவிடக் கூடாது. பால் கர்ட்ஸ் அத்தகைய ஒருமனிதநேயர். இழப்பு என்பது வருத்தத்தை அளித்தாலும், மானிட இயல்பு அது. வருத்தத்தில் மூழ்கிவிடாமல், இறந்தவர் ஆற்றிய சமுதாயப் பணியினை நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டும்.
அப்பொழுதுதான் மனிதநேயம் மேலும் வலுப்படும். ஒருவரின் மறைவினை காலமாகிவிட்டார் எனக் கூறுதல் மிகவும் பொருத்தமாகும். காலமாகிவிட்ட வருக்கு வைகுண்ட பதவிகள், சிவலோக பதவிகள் மத மூடநம்பிக்கையினால் அளிக்கப்படுகின்றன.
மோசமான வருக்கு நரகபதவி அளிக்க யாரும் முன் வருவதில்லை. மதம், மத உணர்வுகள் என்பதே ஒருவரது விருப்பத்தின் வெளிப்பாடு. பொதுவாழ்வுப் பணி புரிந்தோருக்கு பகுத்தறிவாளர் இரங்கல் கூட்டம் நடத்தும் பொழுது வீரவணக்கம் எனச்சொல்வதை விடுத்து காலமான வரை நினைவு கூருகிறோம் என மரியாதை செலுத்துவது பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் அண்மையில் காலமான மனிதநேயர் முனைவர் பால்கர்ட்ஸ் அவர்களை நினைவுகூர்வோம்.
இரங்கல் கூட்டத்தின் துவக்கத்தில் டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்களுக்கு பெரியார் இயக்கத்துடன் உள்ள தொடர்புகளைக் குறிப்பிட்டு, பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் அறிமுகவுரை யாற்றினார். டாக்டர் பால்கர்ட்ஸ் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பின் சுருக்கத்தினை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சமா.பிரின்ஸ் என்னாரெசு பெரியார் வாசித்து நிகழ்ச்சியினை தொகுத்தளித்தார்.
டாக்டர் பால் கர்ட்ஸ் அவர்களின் இரங்கல் கூட்டத்திற்கு லண்டன் மாநகரிலிருந்து பன்னாட்டு மனிதநேய நன்னெறி அமைப்பின் (International Humanist and Ethical Union) மற்றும் ஒடிசா பகுத்தறி வாளர் சங்கத்தினர் செய்தி அனுப்பி இருந்தனர்.
இரங்கல் கூட்டத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், புதுமை இலக்கிய அணிச் செயலாளர் வீரமர்த்தினி, திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, சென்னை மாநகர மேனாள் மேயர் சா.கணேசன் திராவிடர் கழக, பகுத்தறி வாளர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் மனிதநேய உணர்வாளர்கள் பலர் வருகை தந்தனர்.

Tuesday 30 October 2012

பரிசளிப்பு விழா


மதுரை மாநகர் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாளினையொட்டி நடத்தப்பட்ட பெரியார்-1000 வினா-விடைப் போட்டியின் பரிசளிப்பு விழா
மதுரை, அக். 29- 26.10.2012  மாலை 5 மணிக்கு, மதுரை ஆரத்தி விடுதியில் நடைபெற்ற கழகச் சொற் பொழிவா ளர்கள் கூட்டத்தின் தொடக்கத்தில்  நடைபெற்றது. திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக் குமார் மற்றும் கழக முன்னணியர் முன்னிலையில், போட்டியில் வெற்றி பெற்ற  மாணவ மாணவியர்க்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கி வாழ்த்தினார்கள்.
முதல் பரிசு (ரூ.அய்ந்தாயிரம்); மு.ஜெனிபர்  (மகபூப் பாளையம் மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி, மதுரை), இரண்டாம் பரிசு (ரூ.மூவாயிரம்); அ.சிவலிங்கம் (நீதிராஜன் பாரதி உயர்நிலைப்பள்ளி, மதுரை), மூன்றாம்  பரிசு (ஒவ்வொருவருக்கும் ரூ.இரண்டாயிரம்) 1.சே.அபியா (ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட் சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை), 2.அ.பூஜா, 3.ஹ.ஹசீனா (விப்ஜியார் மெட்ரிக் பள்ளி, மதுரை) ஆகியோர் பரிசினைப் பெற்றனர்.
தென்மாவட்டத் திராவிடர் கழகப் பிரச்சாரக்குழுத்  தலைவர் தே.எடிசன் ராசா, பொறியாளர் சி.மனோகரன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் முனைவர் வா. நேரு, பேரா.முனைவர் நம்.சீனிவாசன்,  ப.க மாநகர் மாவட்ட தலைவர் சே.முனியசாமி, மதுரை மண்டலத்  தி.க  தலைவர் வே.செல் வம், மதுரை மண்டல தி.க செயலாளர் மீ.அழகர்சாமி, மதுரை மாநகர் தி.க தலைவர் க.அழகர், மதுரை மாநகர் தி.க. செயலாளர் இரா.திருப்பதி, மதுரை புற நகர் மாவட்டத் தலைவர் மா.பவுன்ராசா, மாவட்ட செயலாளர் அ.வேல்முருகன்,
மதுரை மாநகர் ப.க. துணைச்செயலாளர்   பா.சடகோபன், மதுரை மாநகர் ப.க.துணைத்தலைவர் எல்.அய்.சி. செல்ல.கிருட்டிணன், ப.க ஆர்வலர் இரா.பழனிவேல் ராஜன், கனி, ஆசிரியர்கள்  போ.சேகரன், திருப் பரங்குன்றம் மணி, பழக்கடை அ.முரு கானந்தம், போட்டோ இராதா, விராட்டிபத்து சுப்பையா, வடக்குமாசி வீதி சிவா, மருத்துவர் அன்புமதி  ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியினை மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், வினாடி வினாப் போட்டியின் மதுரை ஒருங்கிணைப் பாளருமாகிய சுப.முருகானந்தம்  தொகுத்து வழங்கினார். மிகப்பெரிய வாய்ப்பாக புதுமையாக நடத்தப் பட்ட பெரியார் ஆயிரம் வினா - விடைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் பெற்றோரோடு வந்திருந்து தந்தை பெரியாரைத் தெரிந்துகொண்டதால் பரிசினையும் சான்றிதழையும்  தமிழர் தலைவரிடம் பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Tuesday 2 October 2012

தியேட்டரில் சென்று சாட்டை படத்தைப் பாருங்கள்


சாட்டை திரைப்படத்தை நானும், எனது மகன் அன்புமணியும் சென்று மதுரை தமிழ் ஜெயா தியேட்டரில் பார்த்தோம். பெரியார் படத்தை பார்த்தது தியேட்டரில், அதற்குப் பின் 3,4 வருடங்களாக எந்தப் படமும் பார்க்கவில்லை. +2 படிக்கும் எனது மகன் படும் மன அழுத்தங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு இந்தப் படத்தை விளம்பரங்களில் பார்த்தபொழுது பார்க்கவேண்டும் என்று தோன்றியது,அவனையும் அழைத்துச்சென்று  பார்த்தேன்.ஒரு முறை ஒரு நாவலை பற்றிக் குறிப்பிடும்பொழுது முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள், இந்த நாவல் உங்களுக்கும் எனக்கும்தான் புரியும், டவுன்காரர்களுக்குப் புரியாது என்றார். முழுக்க முழக்க கிராம வழக்கு, கிராமத்து சொற்கள், நம்மைப் போன்ற கிராமத்துக்காரர்களுக்குத்தான் புரியும் என்றார்.அதனைப் போல இந்தச் சாட்டை திரைப்படம் , கிராமத்து அரசாங்கப் பள்ளியில் படித்தவர்களுக்கு, படிப்பவர்களுக்கு நிச்சயம் பளிச்செனப் புரியும்.

"சாட்டை 2012 செப்டம்பர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தை தயாரித்தவர் இயக்குனர் பிரபு சாலமன். பிரபு சாலமனிடம் 'மைனா' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய அன்பழகன் இயக்கியிருக்கும் முதல் படம் இதுவாகும்.
கதை சுருக்கம்

மாவட்டத்திலேயே ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் மிகவும் பின் தங்கிய அரசு பள்ளி ஒன்றுக்கு பணி மாற்றம் செய்யப்படும் இயற்பியல் ஆசிரியர் தயாளன் (சமுத்திரக்கனி), அந்த பள்ளியின் நிலையை மாற்ற தலைமை ஆசிரியர் (ஜூனியர் பாலையா) துணையோடு பல மாற்றங்களை செய்கிறார். துணை தலைமை ஆசிரியர் சிங்கபெருமாள் (தம்பி இராமைய்யா) உள்ளிட்ட மற்ற ஆசிரியர்கள் தயாளனின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தயாளன் தன் அணுகுமுறையால் மாணவர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார். மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியராகவும் ஆகி விடுகிறார்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவனான பழனி (யுவன்), தனது சக வகுப்பு மாணவி அறிவழகியை (மகிமா) காதலிப்பதாகச் சொல்லி அவருக்கு தொந்தரவு கொடுக்க, ஒரு கட்டத்தில் அறிவழகி விசம் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அறிவழகி விசம் குடித்ததற்கு காரணம் ஆசிரியர் தயாளன் தான் என்று புரிந்துகொள்ளும் அறிவழகியின் குடும்பத்தார் தயாளனை அடித்து காவலர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

மாணவியின் தற்கொலை முயற்சிக்கு தான் காரணம் அல்ல என்பதை தயாளன் நிரூபித்து பல தடைகளை முறியடித்து அந்தப் பள்ளியை நல்ல நிலைமைக்கு கொண்டுவருகிறார்." நன்றி - விக்கிபீடியா

                   படத்தில் மிகைத் தன்மை என்பது இல்லை. இயல்பாக நடைபெறும் நிகழ்வுகள் படம் பிடிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளன. வட்டிக்கு கொடுக்கும் ஆசிரியர்கள், வேறு தனியார் பள்ளியில் தன் பிள்ளையைப் படிக்கவைத்துவிட்டு  , அரசுப் பள்ளியில் பொறுப்பின்றி இருக்கும் ஆசிரியர்கள், பிரைவேட் பள்ளிகள் தங்கள் பள்ளியை முன்னேற்ற பக்கத்தில் இருக்கும் அரசுப் பள்ளிகளை எப்படி ஒக்கிடுகிறார்கள் , மாணவ மணவிகள் சிறைபோல ஏன் பள்ளிக்கூடங்களைக் கருதுகிறார்கள் போன்ற பல்வேறு செய்திகளை மனதில் பதியும் வண்ணம் படமாக்கியுள்ள இயக்குநர் அன்பழகனுக்கு வாழ்த்துக்கள்.

                     இயற்பியல் ஆசிரியராக நடித்துள்ள சமுத்திரக்கனி வாத்தியாராகவே படம் முழுக்கு வாழ்ந்துள்ளார். உளவியல் ரீதியான அணுகுமுறை, திக்குவாய் பெண்ணுக்கு பேச்சுப் பயிற்சி , ஏன் படிக்க வேண்டும் என்ற உணர்வினை எப்படி மாணவ மாணவியர்கள் மத்தியில் ஊட்டுவது , எப்போது பெற்றோர் தனது படிப்பை நிறுத்துவார்களோ எனப் பயந்து பயந்து பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு காதல் கடிதம் எனக் கடிதம் கொடுத்து அவர்கள் படிப்பை பாழாக்கி விடாதீர்கள் என்னும் வேண்டுகோள் போன்றவை மனதில் நிற்கின்றன.

                 பேராசிரியர் அருப்புக்கோட்டை மாடசாமி அவர்கள் எழுதிய " எனக்குரிய இடம் எங்கே ? " என்னும் நாவல் இந்தப் படத்தைப் பார்த்தபொழுது ஞாபகம் வந்தது, அவரவருக்குரிய திறமைகளை வெளிக்கொண்டு வரும் இடங்களாக கல்லூரி வகுப்பறைகள் திகழவேண்டும் என்பதனை அக்கதையில் மிக அழுத்தமாக சொல்லியிருப்பார். இந்தப் படத்தில் அது பள்ளி வகுப்பறையில் செய்முறை நிகழ்வாக காட்டப்பட்டுள்ளது.

                  எங்கள் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் முதல்வர் பேரா. இரா. கனகசபாபதி அவர்கள் எப்பொழுதும் மாணவர்கள் மேல் தப்பு என்பதனை ஒத்துக்கொள்ள மாட்டார். ஆசிரியர்கள், நிர்வாகத்தின் தவறுதான் என்பதனை ஒத்துக்கொண்டு மாணவர்களை மேன்மைப் படுத்த உழையுங்கள் என்பார். அதனைப் போல இப்படத்தில் நாம்(ஆசிரியர்கள்)  ஒரு பங்கு உழைப்புக் கொடுத்தால், பத்து மடங்கு உழைப்புத் தர மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதனை வசனமாக சொன்னபொழுது தியேட்டரில் எழுந்த கைதட்டல் ஒரு மாற்றத்திற்கான நல்ல அறிகுறி.

                      மற்றவர்களுக்கு இது படமாக இருக்கலாம், எனக்கு இது வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வு. மதுரை மாவட்டம் சாப்டூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் நான்  பத்தாம் வகுப்பு படிக்கும்பொழுது தலைமை ஆசிரியராக் மதுரையைச் சேர்ந்த திரு வே,வீரிசெட்டி அவர்கள், இந்தப் படத்தின் தயாளன் சார் போல வந்தார். ஆறு மாதத்தில் அவர் பள்ளியில் ஏற்படுத்திய மாற்றம், ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்திய மாற்றம்,  மாணவர்கள் மத்தியில் , பெற்றோர் மத்தியில் ஏற்படுத்திய மாற்றம் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னும் என்னுள் தெளிந்த நீரோடை போல ஓடிக்கொண்டிருக்கிறது.

                         தன்னலமற்ற, மாணவ, மாணவிகளின் முன்னேற்றம் மட்டுமே தனது நலனாக் கருதுகிற ஆசிரியர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறார்கள். அவர்களை இப்படம் ஊக்கப்படுத்தும். வட்டிக்கு விட்டுக்கொண்டு, காசு கொடுத்து நல்லாசிரியர் விருது போன்றவற்றை வாங்கி வைத்துக்கொண்டு பாடம் நடத்தாமல் காலம் கடத்தும் ஆசிரியர்களுக்கு இப்படம் குற்ற உணர்ச்சி உண்டாக்கும். பாலியல் ரீதியாக மாணவ, மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்தால் எப்படிப்பட்ட செருப்படி கிடைக்கும் என்பதனை சில ஆசிரியர்களுக்கு இப்படம் பின்னோக்கு செய்முறையாய் உணர்த்தும். வெறும் மார்க் மட்டுமே வாழ்க்கை என்று மாணவர்களைக் கொடுமைப்படுத்தி  பள்ளிக்கூடம் நடத்தும் சில கல்வித் தந்தைகளுக்கு உண்மை இதுதான் என்பதனை உணரவைக்கும்  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளவும் , அவர்களை ஊக்கப்படுத்தவும் இப்படம் கட்டாயமாய் உதவும்.

                             சி.டி. யில் பார்க்கலாமே என்று ஒருவர் சொன்னபொழுது , இல்லை - சமூக உணர்வோடு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை தியேட்டரில்தான் சென்று பார்க்கப்போகிறோம் என்றான் எனது மகன் அவரிடம் . தியேட்டரில் சென்று பார்த்தபொழுது வந்திருந்த கூட்டமும், அவர்களின் உணர்வுகளும், கைதட்டல்களும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி என்பதனைக் காட்டின.

                                   ஜன்னல் ஓரத்தில் சிறுமி (டோட்டோசான்), என்னை ஏன் டீச்சர் பெயிலாக்கினிங்கே, குழந்தைகளைக் கொண்டாடுவோம் போன்ற பல்வேறு கல்வி சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படித்தபொழுது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட  இந்தப் படத்தைப் பார்த்தபொழுது ஏற்பட்ட மகிழ்ச்சி அதிகம். கட்டாயமாக் நீங்களும் குடும்பத்தோடு தியேட்டரில் சென்று படத்தைப் பாருங்கள்,நண்பர்களைப் பார்க்கச்சொல்லுங்கள். 1-ம் வகுப்பு முதல் கல்லூரி வரையுள்ள உங்களுக்குத் தெரிந்த ஆசிரியர்களை இப்படத்தைப் பார்க்கச்சொல்லுங்கள்.

வா. நேரு .02.10.2012



 

Tuesday 25 September 2012

கடவுளா- நம்பாதவர்களா யாரால் பிரச்சனை ?


                                                         வாசகர் கடிதம்
                                                                                                முனைவர் வா. நேரு 

இனிப்பில் எதிரி ஜீலை -2012 மற்றும் ஆகஸ்ட்-2012 இதழ்களை வாசித்தேன் . ஜீலை இதழில் "கடவுளா- நம்பாதவர்களா யாரால் பிரச்சனை"  கட்டுரை படித்தேன், அருமையான கட்டுரை. . எழுதிய அரசூரான் அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். மிகவும் எளிமையாகவும் நடைமுறையில் நாம் காணக்கூடிய எடுத்துக்காட்டுகள் மூலமாகவும் விளக்கிய விதம் அருமை. கடவுளை நம்புகிறவர்கள் என்று சொல்லப்படுகிறவர்களை " கடவுளை நம்புவது போல நடிப்பவர்கள் அல்லது ஏமாற்றுபவர்கள் என்று வைத்துக்கொள்வது சரியாக இருக்கும்  என்று எண்ணுகின்றேன்" என்று குறிப்பிட்டு அதற்கு ஆராய்ச்சி அடிப்படையில்  விளக்கங்களைக் கொடுத்திருந்தார். உண்மை சுடத்தான் செய்யும் , ஆனால் நாம் என்ன செய்வது, உண்மையை உண்மையாக சொல்லித்தானே ஆகவேண்டும். இந்தக் கட்டுரைக்கு மதுரை கே.கே. நகர் பகுதியை சேர்ந்த திரு வி.வீரிசெட்டி அவர்கள் தனது பாராட்டைத் தெரிவித்திருந்தார்.

                                           திரு அரசூரான் அவர்கள் ஒரு கண்காணிப்பாளர் இருந்தால் வேலை எல்லாம் நன்றாக நடக்கிறது, கண்காணிப்பாளர் இல்லை என்றால் கண்டபடி நடக்கிறது என்று பல எடுத்துக்காட்டுகளைக்  குறிப்பிட்டிருந்தார். உலகத்தில் நடப்பவை எல்லாம் கண்டபடி நடக்கிறது, அப்படியென்றால் கண்காணிப்பாளர் இல்லை என்றுதானே அர்த்தம் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். ஒரு வலுவான வாதம்  அவரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

                                          நான் மதுரை மாவட்டம், சாப்டூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரைப் படித்தேன்.   9-ம் வகுப்பு படிக்கும் வரை பள்ளியில் எந்த மாற்றமும் இல்லை. ஆசிரியர்கள் இஷ்டப்பட்டால் வரலாம், அல்லது வராமல் இருக்கலாம். மாணவர்கள் படித்தால் படிக்கலாம், ஏன் படிக்கவில்லை என்று ஒருவரும் கேட்க மாட்டார்கள். நான் 10-ம் வகுப்பு படிக்கும்போது ஒரு புதிய தலைமை ஆசிரியர் வந்தார், அரசுப் பள்ளிக்கூடம் அப்படியே தலைகீழாக மாறியது.மாணவர்களுக்கு காலையில்  ஸடடி, மாலையில் ஸடடி, வீட்டில் மின்சாரம் இல்லாத மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைத்து இரவில் மின்விளக்கில் அவர்களைப் படிக்க செய்து, சந்தேகங்களுக்குப் பதிலளித்து ஒரு அற்புதமான மாற்றத்தை மாணவர்கள் அத்தனைபேருக்கும் வாழ்க்கையில் ஏற்படுத்தினார். எக்ஸ்டிராவாக எங்களிடமிருந்து ஒரு பைசா கூட டியூசன் என்ற பெயரில் வாங்கவில்லை. தலைமை சரியானால் அத்தனையும் சரியாகும் என்பதற்கு என் வாழ்வில் அவரே உதாரணம் . அவர்தான் பெருமைக்குரிய பல பள்ளிகளில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர் , இன்றும் சைக்கிளில் எளிமையாகப் பயணம் செய்யும் எனது தலைமை ஆசிரியர் மதுரை கே.கே. நகர் பகுதியை சேர்ந்த திரு.வி.வீரிசெட்டி அவர்கள்  .
                                   
                                  இப்படி ஒரு பள்ளியை, நிறுவனத்தை ஒருவர் தலைகீழாக  மாற்றம் செய்து எல்லோருக்கும் பலன் அளிக்க செய்ய முடியுமென்றால் , கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவரால் உலகத்தை சீர் செய்து, அனைத்தும் அனைவருக்கும் செய்ய முடியுமே, ஏன் செய்யவில்லை, கடவுள் என்று ஒருவர் இல்லை , அதனால் செய்யவில்லை என்பதுதானே உண்மை , அதனைத் தானே திரு. அரசூரான் அவர்கள்  கூறியிருக்கின்றார்.
                                                                              கடவுள் நம்பிக்கை என்னும் மண்பாண்டத்தை டொம் என்று திரு.அரசூரான் அவர்கள் தூக்கிப்போட்டு உடைத்ததை தாங்கமுடியாமல் , ஒரு ஆற்றாமைக் கட்டுரையாக இனிப்பில் எதிரி ஆகஸ்ட் இதழில் திரு. வேளாண். அ. செளந்தர பாண்டியன் அவர்களின் " பொய் முகங்கள் " கட்டுரை  வந்துள்ளது. அவரின் கருத்துக்கும் மதிப்பளித்து வெளியிட்ட இனிப்பில் எதிரி இதழுக்கு வாழ்த்துக்கள். ஆயிரம் கருத்துக்கள் வரட்டும், ஆரோக்கியமான விவாதம் நடக்கட்டும் என்ற மன்ப்பான்மை இனிப்பில் எதிரிக்கு உள்ளது, பாராட்டுக்குரியது. "பொய் முகங்கள் " கட்டுரை தொடர்பாக எனது சில கேள்விகள் ;

                        "தனி மனிதனின் குணாதிசயக் குறைபாடுகளைக் குறிப்பிட்டிருக்கிறார் , இதில் கடவுள் எங்கிருந்து வருகிறார்" என்று கேட்டிருக்கிறார் . தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் நல்லது, கெட்டது  அனைத்தும் கடவுளால்தான் நடக்கிறது என்று மதவாதிகள் கூறுகின்றார்கள். இன்னும் கேட்டால் காகித்ததில் சில கட்டங்களைப் போட்டுக்கொண்டு , ஜாதகம் -சோதிடம் என்னும் பெயரில் நடக்கும் ஏமாற்று இமாலய ஏமாற்று. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று கூறிவிட்டு , கடவுள் எங்கிருந்து வருகிறார் என்று திரு. வேளாண். அ. செளந்தர பாண்டியன் அவர்கள் கேட்கிறார். அரசூரான் ஏமாற்றுவதற்காக கொண்டு வரப்படுகிறார் என்பதனை விளக்கியுள்ளார்.

                                                கடவுள் பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறது என்னும் வகையில் திரு. வேளாண். அ. செளந்தர பாண்டியன் அவர்கள் கருத்துக் கூறியிருக்கின்றார் (பக்கம் 68 ), மதுரையில் இருக்கும் இளைய ஆதினங்களைப் போன்றவர்களின் செய்திகளையெல்லாம் படித்துவிட்டு , பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறது என்று சொன்னால் எப்படி சிரிப்பது என்று தெரியவில்லை. என்னோடு வேலை பார்ப்பவர் ஒருவர் சொன்னார், " சார், தப்பு பண்ணிட்டு பாவ மன்னிப்பு வாங்கிக்கிரலாம் சார் " என்று. தப்பு பண்ணுவதற்கு லைசன்ஸ் கொடுக்கத்தான் கடவுள் பக்தியே தவிர மனிதன் மனதார தப்புப் பண்ணுவதை தடுக்க அல்ல. கோடி கோடியாகக் கொள்ளை அடிப்பவன் தன்னை நல்லவனாக சமூகத்தில் காட்டிக்கொள்ளத்தான் சில ஆயிரங்களை கும்பாவிஷேகத்திற்கு அளிக்கிறான், பக்தி ஒழுக்கக்கேட்டை வளர்க்கிறது என்பதுதான் நடைமுறை உண்மை.

                              அறிவியல் பிரபஞ்சத்தைப் பற்றியும், உயிர்களின் தோற்றத்தைப் பற்றியும் பல புதிர்களை வரிசையாக விடுவித்துக்கொண்டு வருகின்றது. சூரியன் தினமும் காலையில் கிழக்கே உதிக்கிறது என்பது கடவுளின் செயல் , எனவே நீங்கள் கடவுள் காரியங்களுக்கு கொட்டிக்கொடுங்கள் என்பது என்ன வகையில் நியாயம்? . கரூர் அருகே பக்தி என்ற பெயரில் தேங்காய்களைத் தலையில் உடைத்து ஐம்பது பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். நரம்பியல் மருத்துவர்கள் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்று தலையில் தேங்காயை உடைப்பவர்களை என்ன செய்வது, இதைப் போன்ற நூற்றுக்கணக்கான மூட நம்பிக்கை செயல்களைப் பட்டியலிட முடியும் நம்மால். ஒரு கடவுளை நம்புவர்களுக்கும் , இன்னொரு கடவுளை நம்புகிறவர்களுக்கும் நடக்கும் சண்டதான் உலகின் 2000, 3000 ஆண்டு கால வரலாறு. இரண்டு உலகப்போரினால் இறந்தவர்களைவிட, மதச் சண்டைகளால் மாண்டவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது புள்ளி விவரங்கள் தரும் தகவல்.

                                                              கடவுள் இல்லை என்பவர்கள் எதிர்மறையான சிந்தனையாளர்களாம், கடவுள் உண்டு என்பவர்கள் உடன்பாட்டு சிந்தனையாளர்களாம் (பக்கம் 72). எப்படி இப்படி திரு. வேளாண். அ. செளந்தர பாண்டியன் அவர்கள் எதிர்மறையாக சிந்திக்கிறார் என்பது புரியவில்லை   தன்னை நம்பாமல், தலைவிதியை நம்பி கெட்டுப்போகிறவர்கள்  கடவுள் உண்டு என்பவர்கள். தன்னை நம்பாமல், கோவில் ,கோவிலாக , தேவாலயம், தேவலாயமாக சென்று புலம்பி , விடை தேடுபவர்கள் கடவுள் உண்டு என்பவர்கள்.

                   தன்னால் எது முடியும் , எது முடியாது என்பதனைத் தெரிந்துகொண்டு உடன்பாட்டு சிந்தனையோடு சாதனை புரிபவர்கள் கடவுள் இல்லை என்பவர்கள். உலகத்தில் மனித நேயத்தை விரும்புகிறவர்கள், அமைதியை விரும்புகிறவர்கள், பெண்களுக்கு ஆண்களைப் போல அனைத்து உரிமைகளும் வேண்டும் என்பவர்கள், சாதிக் கொடுமைகள் , சாதி அழிய வேண்டும் என்று விரும்புகிற எங்களைப் போன்றவர்கள்  எல்லாம் அரசூரான் அவர்கள் கூறும் கருத்துக் கட்சிக்காரர்கள்.
நன்றி : இனிப்பில் எதிரி -செப்டம்பர் 2012- பக்கம் -26-28

Friday 7 September 2012

எழுத்துத் தொழிற்சாலை தோழர் அருணனுக்கு பாராட்டு


பகுத்தறிவாளர் கழகமும், பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியும் இணைந்து சென்னை பெரியார் திடலில் 5-9-2012 அன்று மாலை 6 மணி அளவில் முற்போக்கு எழுத்தாளர் தோழர் அருணன் அவர் களுக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தினர். தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்று தோழர் அருணன் அவர்களைப் பாராட்டி, சிறப்புச் செய்து உரையாற்றினார்.
சென்னை - பெரியார் திடல் அன்னை மணியம்மையார் மன்றத்தில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் பல தரப்பட்ட மக்கள், கல்வியாளர்கள், இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் பாராட்டு நாயகர் தோழர் அருணன் பற்றிய தொகுப்பினை பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் ஓர் அங்கமான புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி வழங்கினார்.
தோழர் அருணனின் அண்மைக்காலப் படைப்பான காலந் தோறும் பிராமணியம்நூல் தொகுப்புகளின் (எட்டு பாகங்கள்) குறிப்புகளை பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன், தொகுத்து வழங் கினார்.
காலந்தோறும் பிராமணியம் நூல் தொகுப்புகளின் படைப்பாளி தோழர் அருணனுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
சீரிய சிந்தனையாளரும், பகுத்தறிவாளரும், முற்போக்கு எழுத்தாளருமான, தோழர் அருணன் அவர்கள் ஒரு அருமையான படைப்பினை அண்மையில் அளித்துள்ளது மிகவும் பாராட்டுதலுக்குரியது. எழுத்தாளர் பலரும், சிந்தனையாளர் மிகப் பலரும் எழுதிடத் தயங்கிய - தயங்கி வரும் தலைப்பினை மிகவும் துணிச்சலாக மேற்கொண்டு காலந்தோறும் பிரா மணியம் நூல் தொகுப்புகளைப் படைத்துள்ளார்.
ஆதிக்கத்தின் அடையாளம் பிராமணியம்; மனிதநேயத் தின் விரோதி பிராமணியம்; சமத்துவத்தின் எதிரிடை பிராமணியம், பொதுவாக, பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் காலம் தொடங்கி இன்று வரை கறுப்புச் சட்டைக்காரர்கள் பிராமணர்களை பார்ப்பனர் என்றுதான் குறிப்பிடுவது இயக்க செயல்முறை வழக்கம். காரணம் வருணாசிரம (அ)தர்மத்தின்படி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால் வருணத்தினருள் பிராமணர் மட்டும் அனைவருக்கும் உயர்ந்த நிலையில் உள்ளனர்.
இத் தத்துவம் நமக்கு உடன்பாடானது அல்ல; எதிர்க்கப்பட வேண்டிய நிலையிலும் உள்ளது. பிராமணர் என குறிப்பிடும் நிலையில் சூத்திரர் எனும் நிலையும் ஏற்கப்படுவதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. எனவே சூத்திரத் தன்மையினை மறுப்பதற்கு அதே நேரத்தில் உயர் வருண பிராமணியத்தை எதிர்ப்பதற்கு பார்ப்பனியம், பார்ப்பனர் எனும் சொல்லாட்சிகளை தெளிவாகக் குறிப்பிட்டு, பிரச்சாரம் தொடர்ந்து வருகிறது.
பாராட்டுக் கூட்டத்திற்கு வருகைதந்தோர்.
தந்தை பெரியார் தனக்கே உரிய எளிமையான விளக்கத்தினையும் இதற்கு அளித்துள்ளார். ஒரு ஊரில் பல வீடுகள் இருக்கும். தனி நபர் விருப்பம் என்று ஒரு வீட்டினர் மட்டும் இது பதிவிரதைகள் வாழும் வீடு என எழுதி அவர் வீட்டுக் கதவில் தொங்கவிட்டால் எப்படி இருக்கும்? மற்ற வீட்டினர், அதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?
அதைப் போலவே, பிராமணன் என்று ஒரு வகுப்பினர் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வ தால் பிராமணன் எனக் குறிப்பிட்டால், வருணாசிரமத் தின்படி சூத்திரன் நிலையினை ஏற்றுக் கொண்டதாக - இது பதிவிரதைகள் வாழும் வீடு என அடையாளப் படுத்துவதை மற்ற வீட்டினர் ஒப்புக் கொண்டதைப் போல ஆகிவிடும். எனவே பிராமணர் எனும் குறிப்பு வழக்கில் வேண்டாம். பார்ப்பனர் எனக் குறிப்பிடுவதே சரியாகும்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களும் தனது கவிதைகளில் கூட பார்ப்பனர் எனக் கூறாமல் மேற்படி யான் என குறிப்பிட்டுச் சொல்லுவார்.
தோழர் அருணன் அவர்களுக்கும் இந்த அணுகுமுறை உடன்பாடானது என்றாலும், வாசர்களை எளிதில் சென்றடைய வேண்டும் எனும் நோக்கில்தான் காலந்தோறும் பிராமணியம் எனும் தலைப்பினைத் தெரிவு செய்துள்ளார் எனக் கருதுகிறோம். இந்த பிராமணிய எதிர்ப்பு என்பது எளிதான பணி அல்ல. ஆண்டாண்டு காலமாக பல சிந்தனையாளர்கள் எழுத்து வடிவத்தில், செயல்முறையில் பிராமணியத்தை கடந்த காலத்தில் எதிர்த்து வந்துள்ளனர். ஆனால் அந்த எதிர்ப்புக்கு ஆதரவு அவ்வளவு எளிதில் கிடைத்து விடவில்லை.
பிராமணிய எதிர்ப்பாளர்கள் மனச் சோர்வுற்று ஒதுங்கி விடுவார்கள்; அப்படியே இருந்துவிட்டவர்கள் பலர். கடை விரித்தோம்; கொள்வார் இல்லை என வள்ளலாரும் மனம் நொந்துள்ளார். ஆனால் காலந்தோறும் பிராமணியம் நூல் படைப்பாளி, தோழர் அருணன் மனம் நொந்து போகிறவர் அல்ல. கடை விரித்தோம்; மக்கள் மனம் கொள்ளும் வரை கடையினை மூடமாட்டோம் எனும் துணிச்சலுக்குச் சொந்தக்காரராக உள்ளவர். அவரது முயற்சிகள் வெல்லவேண்டும். முற்போக்குச் சிந்தனை யுடன், தெளிவான சிந்தனையுடன், புரட்சிகரமான கருத்துகளை இந்தத் தொகுப்பில் வழங்கியுள்ளார்.
களப்பிரர் காலம் இருண்ட காலமா? எனும் வினாவினை எழுப்பி அது இருட்டடிப்பு செய்யப்பட்ட காலம் என்பதையும் வலுவாக்கி விளக்கம் தருகிறார். குப்தர்கள் காலம் பொற்காலம் எனும் வரலாற்றுப் புரட்டைப் புரட்டிப் போடும் போக்கு அவரது எழுத்துகளில் உள்ளது. மனித நேயத்திற்கு ஏதிரான கருத்துகளின் உள்ளடக்கமாக உள்ள மனுசாஸ்திரம் வலுப்பெற்ற, குப்தர்கள் காலம் எப்படி பொற்காலமாக இருக்க முடியும்? 1857ஆம் ஆண்டில் சிப்பாய் கலகம் என குறிப்பிடப் பட்ட செய்தியினையும் தோழர் அருணன் நூலில் குறிப்பிடு கிறார்.
(இந்து) மத கருத்து வலுப்பெற்றிட, ஆதிக்கம் செலுத்திட ஏற்பட்ட கலகத்தை சுதந்திரப் போராட்ட நிகழ்வாக சித்தரிக்கும் நிலை வரலாற்றாளர்கள் மத்தியில் உள்ளது. அப்படியே பதிவும் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கலகம் மதம் சார்ந்த கருத்துகள் வலிமையடைய, ஆதிக்க சக்திகள் உருவாக்கிய கலகம் என்பதை தோழர் அருணன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்துத் தொழிற்சாலை
படித்தவர்கள் எல்லாம் எழுதுவதில்லை. பேசுபவர்கள் எல்லாம் எழுத்து மூலம் படைப்பாளிகளாகி விடுவதில்லை. வெகு சிலரே எழுதுகின்றனர். பல சாதனையாளர்கள் கூட எழுதவில்லை. எழுதுவதற்கு ஒரு வித மனப்போக்கு விகிதம் (sense of proposition)  வேண்டும். அற்புதமான பணியினை தோழர் அருணன் செய்து வருகிறார். சலிப்பில்லாமல் எழுத்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தோழர் அருணனை எழுத்துத் தொழிற்சாலை என அழைப்பது மிகவும் பொருத்தமாகும்.
மனிதநேயத்துக்கு விரோதமானது பார்ப்பனியம்
தோழர் அருணன் எடுத்துக் கொண்ட கருப் பொருளான பிராமணியம் - பார்ப்பனியம் மனித நேயத்திற்கு எதிரானது;  விரோதமானது. அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களும், “What Congress and Gandhiji have done to the Untouchables”   என்ற நூலில், மாந்தரிடையே பேதத்தை வளர்ப்பது பிராமணியம், பேதத்தில் வளர்ந்தது பிராமணியம் எனக் குறிப்பிடுகிறார். ஒரு முறை இதயம் பேசுகிறது இதழ் ஆசிரியராக இருந்த மணியனின் வற்புறுத்தலின் பேரில் சிறந்த எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் தாமரை மணாளன் என்னிடம் செவ்வி காண வந்திருந்தார். செவ்வி நடைபெற்ற பொழுது ஒரு கேள்வியினை முன்வைத்தார்.
ஏன் நீங்கள் anti-Brahmin (பார்ப்பன எதிர்ப்பாளர்) ஆக இருக்கிறீர்கள்?
நான் பதிலளித்தேன்: Yes, I am anti-Brahmin, because I am pro-human. (ஆம்; நான் பார்ப்பன எதிர்ப்பாளன்தான்; ஏனென்றால் நான் மனிதத்தை  நேசிக்கிறேன்) ஆங்கிலத்தில் கேள்வி கேட்டதால் ஆங்கிலத்திலேயே பதில் சொல்ல வேண்டி வந்தது. மனிதத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் பார்ப்பனிய எதிர்ப்பாளராகத்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். பார்ப்பனர்களின் புனித(?) நூலாகக் கருதும் பகவத்கீதை வருணாசிரமத்தை - பிறப்பின் அடிப்படை யிலான பேதத்தைக் கற்பிக்கிறது. கடவுள் பிறவியிலேயே பேதத்தைப் படைத்ததாகக் கூறுகிறது.
தான் படைத்ததை தான் நினைத்தாலும் மாற்ற முடியாது எனவும் கடவுள் பிரகடனப்படுத்துகிறார்.  ஆன்மாவுக்கு அழிவில்லை என புத்தியைப் பேதலிக்க வைக்கும் ஆபத்தான கருத்தையும் தெரிவிக்கிறார். கடவுளைக் கற்பித்தவரைக் கூட விட்டுவிடலாம். ஆன்மாவைப் படைத்தவன் மிகவும் ஆபத்தானவன். இதனால்தான் தந்தை பெரியார் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் எனச் சொல்லி விட்டு, ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறவி, பிதிர்லோகம் ஆகியவைகளைக் கற்பித்தவன் அயோக்கியன். நம்புகிறவன் மடையன். இவற்றால் பலன் அனுபவிக் கிறவன் மகா மகா அயோக்கியன் எனக் கூறினார்.
ஆத்மாவால் பலன் பெறும் பார்ப்பனியம் மகாமகா அயோக்கியத்தனமானது. அந்தப் பார்ப்பனியத்தை - பிராமணியத்தை, மனித நேய விரோதத் தத்துவத்தை தோலுரித்துக் காட்டி காலந்தோறும் பிராமணியம் எனும் தனது படைப்பில் காலங்கள் பல கடந்தும் போற்றப்படும் பணியினை தோழர் அருணன் செய்துள்ளார். பெரிய பல்கலைக் கழகங்கள் செய்ய வேண்டிய, பணியினை குழு நிலையில் செய்து முடித்திட வேண்டிய இந்த மாபெரும் பணியினை தனி மனித முயற்சியாக தோழர் அருணன் செய்து முடித்துள்ளார்.
இதற்காக அவர் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பார்; எத்தனை நூலகங்களுக்குச் சென்றிருப்பார்; எத்தனை ஊர்களுக்குச் சென்று அலைந்திருப்பார்; அல்லல் பட்டிருப்பார். அவரது அரும்பணி போற்றுதலுக் குரியது. போற்றப்பட வேண்டும். இங்கு வருகை தந்துள்ள அனைவரும் இந்த எட்டு தொகுதிகளையும் பணம் கொடுத்து வாங்கிட வேண்டும். தாங்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு வாங்கி வழங்கிட வேண்டும். விழாக் காலங்களில், வீட்டில் நடக்கும் மகிழ்ச்சி வேளைகளில் இந்த புத்தகத் தொகுதியைப் பரிசாக அளிக்கலாம்.
Literature is a record of best thoughts (சிறந்த சிந்தனைகளின் பதிவே இலக்கிய மாகும்) என்பது ஆங்கில அறிஞர் எமர்சனின் கூற்று. இந்த எட்டு தொகுப்பும் அப்படிப்பட்ட சிறந்த சிந்தனை களின் பதிவுகளே ஆகும். நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சிந்தனைகள் சமுதாயத்துக்குத் தேவையான மூச்சுக் காற்று போன்றது; உயிர்க் காற்று (பிராணவாயு) போன்றது.
தோழர் அருணனின் பணி போற்றிப் பாதுகாக்கப் படவேண்டும். துணிச்சல் மிக்க இவரது படைப்புகளைத் தூக்கிப் பிடிக்க வேண்டும்.இப்படிப்பட்ட சிந்தனைகள் பல்கிப் பெருகிட வேண்டும். பல அருணன்கள் உருவாகிட வேண்டும்.
போற்றுதலுக்குரிய பல செய்திகளை உள்ளடக்கிய இந்த தொகுப்பில் பெரியார் இயக்கம் பற்றிய விமர்சனங்களும் உண்டு என்பதும் எமக்குத் தெரியும். அந்த விமர்சனங்கள் அனைத்தும் எங்களது சிந்தைக்கு அளிக்கப்பட்டதாகவே கருதுகிறோம். அந்த விமர்சனங் கள் மந்தைக்கு அல்ல; மக்கள் மன்றத்திற்கு அல்ல எனக் கருதுபவர்கள் நாங்கள். எது நம்மைப் பிரிக்கிறது என்பதை விட எது நம்மை இணைக்கிறது என பார்ப்பது அறிவுட மையாகும். ஆக்க ரீதியாக செயலாற்றும் பெரியார் இயக்கத்தினரும், பொது உடைமைக் கருத்தினரும்  இணைந்து பணியாற்றிட வேண்டும்.
கறுப்பு மலர்களும், செம்மலர்களும் இணைந்து கருத்தியல் கூட்டணி அமைத்து (அரசியல் கூட்டணி அல்ல) கடமை ஆற்றிட வேண்டிய காலம் கனிந்துள்ளது. மதவெறி அமைப்பு களிடமிருந்து மக்களை - மனித நேயத்தினைக் காப்பாற்ற வேண்டிய பணி நமக்கெல்லாம் உண்டு. அந்தப் பணியில் களம் புகுவோம். அத்தகைய பணியின் ஒரு கட்டம்தான்  தோழர் அருணனுக்கான இந்தப் பாராட்டு விழா. தோழர் அருணனின் பகுத்தறிவு, மனிதநேயப் படைப்புகள் பல்கிப் பெருகட்டும். பாராட்டுகள். வாழ்க பெரியார்!  வளர்க பகுத்தறிவு!!  பெருகிடுக மானிட சமத்துவம்!!!
- இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.
தோழர் அருணன் ஏற்புரை
தோழர் அருணன் தனது ஏற்புரையில், மார்க்சியம் சமத்துவத்தை நடைமுறைப்படுத்தும்    கருத்தியல், பிராமணியம் அசமத்துவத்தை உருவாக்குவது.  அசமத் துவத்தை நிலை நிறுத்திட வலியுறுத்தும் கருத்தியல் பிராமணியம். எனவே ஒரு மார்க்சியவாதி பிராமணிய எதிர்ப்பாளராகத்தான் இருக்க முடியும். அது இயல்பு. எனக்கு உற்சாகம் வகையில் நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்விற்கு நன்றி.  எனக்கு மகிழ்ச்சி தந்திடும் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் உரை தனது படைப்பாக்கப் பணியினை ஊக்கப்படுத்தும் எனக் குறிப்பிட்டார். (தோழர் அருணன் ஆற்றிய முழு ஏற்புரை பின்னர் விடுதலையில் வரும்.)
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலச் செயலாளர் பெரியார் சாக்ரடீஸ் நன்றி கூற பாராட்டுக் கூட்டம் நிறைவடைந்தது.
கூட்டத்திற்கு திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி, தீக்கதிர் இதழின் ஆசிரியர் தோழர் அ.குமரேசன், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் தோழர் முத்து, பொதுவுடமை எழுத்தாளர் பா.வீரமணி, திராவிடர் தொழிலாளர் அணித் தலைவர் நாகலிங்கம், மற்றும் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் பொறுப் பாளர்கள், பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் மற்றும் பொது நல ஆர்வலர்கள் என பலதரப்பட்டவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.