Monday 30 October 2023

பிரபஞ்சனின் 'மரி என்கிற ஆட்டுக்குட்டி ' சிறுகதை- நன்செய் வெளியீடு

மதுரையில் இந்த வருடம்(2023) அக்டோபர் 11 முதல் அக்டோபர் 22 வரை  நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் அதிக நேரம்,அதிக நாட்கள் செலவழிக்க முடிந்தது. முதல் நாளே எனது மகள் சொ.நே.அறிவுமதி,அவரின் லேடி டோக் கல்லூரியின் சார்பாக 'இலக்கியங்களில் மதுரை ' என்னும் தலைப்பில் பேசினார். மதுரை மாவட்டத்தலைவர் அவர்கள் நேரில்,அறிவுமதியைப் பாராட்டியது மகிழ்ச்சி அளித்தது.

நிறைய கடைகளில் நிறையப் புத்தகம் வாங்கினாலும், நன்செய் பதிப்பகத்தில் தோழர் தம்பியை நேரில் சந்தித்து வாங்கிய புத்தகம் குறிப்பிடத்தக்கது.அவரைச்சந்தித்தவுடன், 'தோழர் புத்தகங்கள் குறித்து நிறையப் பேசியிருக்கிறோம்.ஆனால் நேரில் சந்திப்பது இப்போதுதான்.சந்திப்பதில் மகிழ்ச்சி"  என்றார். ஆமாம்,'பெண் ஏன் அடிமையானாள் ' புத்தகத்தை திராவிடர் கழகத்தின்  அனுமதியைப் பெற்று, மலிவுப்பதிப்பாக அச்சிட்டு,இலட்சக்கணக்கான புத்தகங்களை விற்றவர். தொடர்ந்து பல புத்தகங்களை அவ்வாறு மலிவுப்பதிப்பில் கொண்டு வருகின்றார்.

அவரது வெளியீடுகாளில்  எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய 'மரி என்னும் ஆட்டுக்குட்டி ' சிறுகதை மட்டும் தனிப் புத்தகமாக இருந்தது. ஏற்கனவே படித்த கதை.தொகுப்பில் உள்ள கதையை மட்டும் ஏன் தனியாக வெளியிட்டு இருக்கிறார் என்று திருப்பி திருப்பிப் பார்த்தேன். எத்தனை புத்தகம் வேண்டும் தோழர் என்றார்?. விலையைப் பார்த்தேன்.வெறும் 5 ரூபாய். தோழர் இரண்டு புத்தகங்கள் கொடுங்கள் என்று சொல்லி இரண்டு புத்தகம் வாங்கி வந்தேன்.

வீட்டில் வந்து தனியாக மீண்டும் அந்தக் கதையைப் படித்தபொழுது, மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சி,அவ்வளவு மகிழ்ச்சி. அங்குலம் அங்குலமாக இரசிப்பது எனச்சொல்வார்களே அப்படி பிரபஞ்சனை இரசித்து இரசித்துப் படிக்கவேண்டும்.அதற்கு இப்படிப்பட்ட ஒரு தனிக் கதை வெளியீடு பயன்படும் எனத்தோன்றியது.

ஒரு இடத்தில் அந்தக் கதையில் பிரபஞ்சன்," அப்போதுதான் பூத்த ஒரு பூ மாதிரி,மழையில் நனைந்த சாலை ஓரத்து மரம் மாதிரி,ஓடைக்கூழாங்கல் மாதிரி'வெளிப்பட்டால் மரி " என்று எழுதியிருந்தார்.சாலை ஓரத்து மரம் நிரம்ப நேரம் யோசிக்க வைத்தது.அதைப்போல ' நீயும் கெட்டவள் இல்லை,உங்க அம்மாவும் ,அப்பாவும் கெட்டவள் இல்லை" எனும் உரையாடலும் அதற்கு முந்தைய பிந்தைய சில வரிகளும் மிகவும் யோசிக்க வைத்தது.

"கற்கிற வயதில் வழி தவறுகிற ஒரு மாணவியோடு ஓர் ஆசிரியர் நடத்தும் கனிவு மிகுந்த உரையாடலையும் அது அம்மாணவிக்குள் நிகழ்த்தும் மாற்றத்தையும் பேசும் இக்கதை ,இன்று பள்ளிகளில் மாணவர்களின் நடத்தைகள் காணொலிகளாக சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகும் காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்த்ததாகிறது.

உரையாடல்கள் வற்றிப்போய் மனங்கள் பாலையாகிவிட்ட சமூகச்சூழலில் பிரபஞ்சன் நீட்டும் நேசத்தின் பிடி பூங்கொத்தே இச்சிறுகதை " என்று நன்செய் பதிப்பகத்தார் பின் அட்டையில் அச்சிட்டு இருக்கிறார்கள்.

ஆகச்சிறந்த கதை.ரூ 5 க்கு இக்காலத்தில். இந்தக் கதையைப் படிக்காதவர்கள் கட்டாயம் வாங்கிப் படித்துப்பாருங்கள். கதையின் ஆரம்பித்தில் தலைமை ஆசிரியரோடு நடத்தும் உரையாடலாக இருக்கட்டும், கதையின் ஓட்டமாக இருக்கட்டும்,எழுத விரும்பும் எவருக்கும் பாடமாக இருக்கும் கதை. வாசிப்பவரின் வாழ்க்கைக்கும் பாடமாக அமையக்கூடும்.

Friday 27 October 2023

அய்யா பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களோடு நிகழ்ந்த உரையாடல்...

 வாருங்கள் படைப்போம் குழுவின் சார்பாக நடைபெற்ற கலந்துரையாடலில்  அய்யா பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களைப் பேட்டி காணும் வாய்ப்புக் கிடைத்தது. அதற்காகக்  கடந்த சில நாட்களாக அவரின் பெரும்பாலான படைப்புகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. நிகழ்வு முடிந்தவுடன் வந்த வாட்சப் குழு பின்னோட்டங்கள் மகிழ்ச்சி அளித்தன.

நிகழ்வில் கலந்து கொண்ட தோழர் மு.சங்கையா நிகழ்வு முடிந்தபின்பு செல்பேசியில் அழைத்து  நிகழ்வினைக் குறித்துப் பேசிப் பாராட்டினார். உங்கள் கேள்விகளில் மிக முதிர்ச்சி இருந்தது தோழர், மிக நன்றாக இருந்தது,அவரின் பல பரிமாணங்களை அறிந்து கொள்ள முடிந்தது என்றார்.

 நிகழ்வினை யூ டியூப்பில் கேட்டு ,கவிஞர் சமயவேல் அவர்கள் அய்யா ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் படைப்புகளைப் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். நானும் அவரும் ஒரே பகுதி கிராமத்தைச்சார்ந்தார்கள் என்று கூறியதோடு அவரை நேரில் சந்தித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்வினை யூ டியூப்பில் கேட்ட எங்கள் கல்லூரிப் பேராசிரியர், நான் பெரியாரியலை நோக்கி முறையாக வருவதற்கு பாதை வகுத்து அளித்த பேரா.கி.ஆழ்வார் அவர்கள்(முன்னாள் ஆங்கிலத்துறைத்தலைவர்,திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி ), நிகழ்வினை முழுமையாகக் கேட்டேன் நேரு, நன்றாக இருந்தது என்று சொன்னதோடு பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கல்லூரிப்பேராசிரியராக இருந்த காலத்திலேயே அய்யா ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் அவ்வளவு  எளிமையாகவும் ,சக ஆசிரியர்களோடு ,மாணவர்களோடு தோழமையாகவும் இருப்பார் என்றும் குறிப்பிட்டார்.

அவரோடு கலந்துரையாடிய உரையாடல் கீழ்க்காணும் சுட்டியில். பாருங்கள்.

https://www.youtube.com/live/H_GzTnDdyFQ?si=8zMvP3yR079EUwUF

Monday 23 October 2023

ஆய்வாளர் அய்யா பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களோடு கலந்துரையாடுதல் நிகழ்ச்சி

 

வாருங்கள் படைப்போம் குழுவின் சார்பாக இன்று(24.10.2023) இரவு 7.30 மணிக்கு படைப்பாளர்,ஆய்வாளர் அய்யா பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களோடு கலந்துரையாடுதல்  நிகழ்ச்சி. தன்னுடைய 17 வயதில் தொடங்கி இன்று வரை வாசிப்பை ,கண்ணாக நேசிப்பவர்.இடதுசாரி இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டு,கள ஆய்வுகளை மேற்கொண்டவர்.அவருடைய படைப்புகளை,ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிக்க,படிக்க வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.வாருங்கள் படைப்போம் குழுவில் இதுவரை 149 படைப்பாளிகளை நேர்காணல் செய்திருக்கிறார்கள்.தொடர்ச்சியாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு நிகழும் இந்த நிகழ்வு எழுத நினைப்பவர்களுக்கு நல்ல விருந்து.ஆராய்ச்சி மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு வழிகாட்டும் பாதை. அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்களின் வழிகாட்டுதலில் ,ஒருங்கிணைப்பாளர்கள் தோழர்கள் வினிதா மோகன்,உமாமித்ரா,அர்ஷா,சுனிதா,அண்ணன்கள் இளங்கோ,குமரன் ஆகியோர்களின் ஒருங்கிணைப்பில் நிகழும் இலக்கிய  நிகழ்வு. வாருங்கள் ,காணொலி வழியாகச்சந்திப்போம். அய்யா பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் படைப்புகளோடும் அவரின் கள ஆய்வு பகிர்வுகளோடும்  இன்றைய மாலை நேரத்தை மகிழ்வான நேரமாக ஆக்கிக்கொள்வோம்.
தோழமையுடன் 
வா.நேரு,






இதுவரை வாருங்கள் படைப்போம் குழுவில் பங்கு பெற்ற படைப்பாளிகள் பற்றிய காணொளி கீழே...


Sunday 22 October 2023

கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை...அய்யா கு.வெ.கி,ஆசான் அவர்கள்

இன்று(22.10.2023)  பெரியார் பேருரையாளர் அய்யா கு,வெ,கி,ஆசான் அவர்களின் 13-ஆம் ஆண்டு நினைவு நாள் என்னுடைய பகுத்தறிவாளர் கழக,திராவிடர் கழக இயக்கப்பணியில் மறக்க முடியாத மாமனிதர் அய்யா கு.வெ.கி.ஆசான் அவர்கள். பண்பாளர்,பழகுவதற்கு இனியவர், மிகச்சிறந்த ஆற்றலாளர். ஆங்கிலத்தில்,தமிழில் மிக நல்ல புலமையுடையவர்.பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவராக,திராவிடர் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர். தமிழ்,ஆங்கிலம்,அரசியல் அறிவியல் எனப் பல முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர்.அய்யா ஆசிரியர் அவர்களுக்கு பெரும் துணையாய் ,பெரியார் திடலில் இருந்து 'தி மாடர்ன் ரேசனலிஸ்டு 'இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். அவரின் சிரித்த முகமும்,சீரிய சிந்தனையும்,தலைமை சொல்லை அப்படியே பின்பற்றும் பாங்கும் ,கடினமான உழைப்பும் கண்முன்னே வருகின்றன.அவருக்கு வீரவணக்கம்.அவருடைய பல புத்தகங்களில்  நான் மிக விரும்பி மீண்டும் மீண்டும் வாசிப்பது ,அவரது மொழி பெயர்ப்பு நூலான 'கடவுள் ஒரு பொய் நம்பிக்கை ' என்னும் புத்தகத்தை.ஏற்கனவே ஒரு கூட்டத்தில் அந்தப் புத்தகத்தை முழுமையாகப் பேசியிருக்கிறேன். ஆனால் எழுத்தாகப் பதியவில்லை.பதியவேண்டும். இப்போது அய்யா பேரா.சுப.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய அந்த நூல் மதிப்புரையை கீழே வெளியிட்டுள்ளேன்.ஒருவரின் எழுத்தை நினைவு கூர்ந்து அவரது நினைவைப் போற்றுவது என்பது மிகச்சரியானது. நன்றி. 



கடவுள் ஒரு பொய் நம்பிக்கை...

நூல் மதிப்புரை அய்யா பேரா.சுப.வீரபாண்டியன் அவர்கள்


திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று பகுத்தறிவு. 1926இல் சுயமரியாதை இயக்கம் தோன்றியபோது, அது ஒரு சமூக நீதி-சமத்துவ இயக்கமாகத்தான் உருவெடுத்தது. நீதிக்கட்சியின் வரலாறும் அத்தகையதே. ஆனால் காலப்போக்கில் தன்மான இயக்கமாகவும், அறிவியக்கமாகவும் அது மலர்ந்தது. அறிஞர் அண்ணாவின் தலைமையில், தேசிய இன இயக்க மாகவும் அது வலுப்பெற்றது.

அறிவியக்கங்கள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. சாக்ரடீஸ், எபிகூரஸ் தொடங்கி, அறிஞர்கள் பலர் பகுத்தறிவுக் கருத்துகளை முன்வைத்துள்ளனர். இன்று வரை, உலகின் பல பகுதிகளிலும், பகுத்தறிவுச் சிந்தனையாளர் களையும், அவர்களின் படைப்புகளையும் நம்மால் பார்க்க முடிகிறது.

அந்த வகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், விலங்கியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற, ரிச்சர்டு டாகின்ஸ் எழுதியுள்ள The God - Delusion என்னும் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே, ‘கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை’.

ரிச்சர்டு டாகின்ஸ், இங்கிலாந்தின் காலனி நாடாக அன்று இருந்த கென்யாவின், நைரோபி நகரில் பிறந்தவர். எனினும் எட்டு வயதுச் சிறுவனாக இருந்த போதே இங்கிலாந்து வந்துவிட்டார். லண்டனுக்கு அருகில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் தன் படிப்பையும், ஆய்வையும் நிகழ்த்தியர். இப்போது அவருக்கு வயது 72. தன்னுடைய 65ஆம் அகவையில், 2006ஆம் ஆண்டு அவர் எழுதிய நூல்தான் கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை என்பது.

31 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ள இந்நூலின் ஆங்கிலப் படிகள் மட்டுமே 15 இலட்சத்திற்கும் மேலாக விற்பனையாகி உள்ளன. ஏறத்தாழ 600 பக்கங்களைக் கொண்ட இந்நூலை, மறைந்த கு.வெ.கி.ஆசான் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசானின் அழகிய மொழிநடை, மொழிபெயர்ப்பு நூலைப் போலன்றி, ஒரு தமிழ் நூலைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பதிப்புரை, படிப்போரின் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் உள்ளது.

நூலாசிரியர் டாகின்ஸ், ஓர் அறிவியல் ஆய்வாளர் என்பதால், அறிவியல் சான்றுகளுடன் இந்நூலுள் பகுத்தறிவுக் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வெறுமனே வாதம் செய்யும் நூலாக அல்லாமல், அரிய அறிவியல் ஆய்வு நூலாக இந்நூல் நமக்குக் கிடைத்துள்ளது. பத்து இயல்களைத் தன்னுள் கொண்டிருக்கும் இந்நூல், பகுத்தறிவுச் சிந்தனைகளையும், கடவுள் மறுப்பையும் பல்வேறு கோணங்களில் முன்வைக்கின்றது.

கடவுள் என்னும் கருதுகோள் எப்படி உருவாயிற்று என்னும் வரலாற்றுச் செய்திகள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. கடவுள் நம்பிக்கை உடையவர்களின் வாதங்களும், மூன்றாவது இயலில் முழுமையாக இடம் பெற்றுள்ளன. உலக இருப்பு சார்ந்தும், தங்களின் சொந்த அனுபவங்கள் சார்ந்தும், மதங்களின் புனித நூல்கள் சார்ந்தும், மத அறிவியலாளர்களின் கூற்றுகளைச் சார்ந்தும் கடவுள் நம்பிக்கைக்கு ஆதரவாகக் கூறப்படும் பல்வேறு கருத்துகள் , மிக நேர்மையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடவுள் இல்லை என்பதற்கு நெருக்கமான நிலையாக, இன்று மேலைநாடுகள் பலவற்றில் கிட்டத்தட்டப் பெரும்பாலும் கடவுள் இல்லை என்னும் வாதம் எழுந்துள்ளது. அது குறித்தும் நூலுள், பல செய்திகள் தரப்பட்டுள்ளன.

உலக நாடுகளின் தலைவர்களுக்கு இருந்த, இருக்கின்ற கடவுள் நம்பிக்கை, மறுப்பு ஆகியன குறித்த அறிவியல் அடிப்படையிலான, சுவையான பல வாதங்களை டாகின்ஸ் முன்வைத்துள்ளார். பொதுவாக, ஸ்டாலினும், ஹிட்லரும் நாத்திகர்கள் என்று சொல்லப் படுவதுண்டு. இவ்விரு நாத்திகர்களும்தான், இரண்டாம் உலகப் போருக்கும், இலட்சக்கணக்கான மக்களின் அழிவிற்கும் காரணமாக இருந்தனர் என்று பொத்தாம் பொதுவாக ஒரு குற்றச்சாற்று வைக்கப் படுவதுண்டு. அது குறித்த மிகச் சிறந்த வாதங்களை இந்நூலுள் காண முடிகிறது.

முதலில் இருவரும் நாத்திகர்கள் என்பதே தவறு என்று கூறும் டாகின்ஸ், நாத்திகர்கள் போருக்கும், தீமைகளுக்கும், காரணியர் களாக இருப்பார்கள் என்பது அதைவிடத் தவறு என்கிறார். சோவியத் நாட்டின் அதிபராக இருந்த ஸ்டாலின் ஒரு கடவுள் மறுப்பாளர் என்பதில் ஐயமில்லை என்று கூறும் நூலாசிரியர், ஹிட்லரைப் பற்றிய செய்தி உண்மையில்லை என்பதைச் சான்றுகளுடன் மறுக்கிறார்.

ஹிட்லர் தனது வாழ்க்கை வரலாற்று நூலில் ஆண்டவருக்கு மண்டியிட்டு நன்றி செலுத்தினேன் என்று எழுதியுள்ள இடத்தைச் சுட்டிக் காட்டுகின்றார். 1933ஆம் ஆண்டு, அவர் பெர்லினில் நிகழ்த்திய உரையிலும், நாங்கள் நாத்திக இயக்கத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டோம். அதனை நாங்கள் முற்றிலுமாக அழித்துவிட்டோம் என்று பேசியிருப்பதையும் எடுத்துக் காட்டுகின்றார். நாத்திகத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டதாகக் கூறும் ஒருவர் எப்படி நாத்திகராக இருக்க முடியும் என்று கேட்கிறார் டாகின்ஸ்.

அதனைவிட முதன்மையானது - ஒரு வேளை அவர் நாத்திகராகவே இருந்திருந்தாலும், அவருடைய தீய செயல்களுக்கும், நாத்திகச் சிந்தனைக்கும் எப்படித் தொடர்பு இருக்க முடியும் என்னும் அவருடைய கேள்விதான். உலகில் இறைநம்பிக்கை உடையவர்கள் அனைவரும், ஒரு குற்றச் செயலில் கூட ஈடுபடவில்லை என்றோ, நாத்திகர்கள் அனைவரும் குற்றப்பரம்பரையினர் என்றோ கூற முடியுமா என்னும் அவர் வினாவிற்கு எங்கே விடை இருக்கிறது.

தந்தை பெரியார், குற்றம் புரிந்து, அதற்கான தண்டனையை ஏற்று, சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் எத்தனை பேர் நாத்திகர்கள்? என்று கேட்பார். சமூகத்தின் இன்றை நிலைதான் சிறைச்சாலைகளிலும் உள்ளது. அங்கும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மிக மிகக் குறைவே. கடவுள் நம்பிக்கை கொண்ட குற்றவாளிகளே எண்ணிக்கையில் மிகுதி.

அடுத்ததாக, அறிவாளிகள் அனைவரையும் இறைநம்பிக்கை கொண்டவர்கள் என்று எளிதில் கூறிவிடும் ஒரு போக்கும் இங்கு உள்ளது. அப்படித்தான், இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் அறிஞரான அய்ன்ஸ்டைன், மிகுந்த கடவுள் நம்பிக்கை உடையவர் என்னும் செய்தி இங்கே பரப்பப்படுகின்றது. அதனைச் சான்றுகளுடன் தகர்த்துப் போடுகிறது, ஆசிரியர் வீரமணி அவர்களின் பதிப்புரை.

1954 சனவரி 3ஆம் நாள், அய்ன்ஸ்டைன் தன் நண்பர் எரிக் குட்கிண்ட்டிற்கு எழுதியுள்ள மடலொன்றில், மனித உள்ளத்தின் வலிமை இன்மையின் வெளிப்பாடாகவும், விளைவாகவும் இருக்கிறது என்பதற்கு மேலாக எதையும் கடவுள் என்ற சொல் சுட்டுவதாக எனக்குப் படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். எனவே மிகச் சிறந்த அறிவாளிகள் பலர், கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருந்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.

நூலாசிரியர், விலங்கியல் துறை ஆய்வாளர் என்பதால், தன் கருத்துகளுக்கு அறிவியல் ஆய்வுகளையே சான்றுகளாகத் தந்துள்ளார். அதுவே இந்நூலின் மிகப் பெரிய சிறப்பு என்று கூறலாம்.

மதம், கடவுள் என்பனவெல்லாம், மற்றொன்றின் உடன் விளையு என்று கூறும் அவர், அதற்குப் பொருத்தமான அறிவியல் செய்தி ஒன்றைத் தருகின்றார். இரவுநேரத்தின் செயற்கை ஒளி, அண்மைக் காலத்தில் ஏற்பட்டதாகும். முன்பு நிலவு மற்றும் விண்மீன்களின் ஒளி மட்டுமே இரவில் இருந்தது. அந்த ஒளியைப் பின்பற்றி விட்டில் பூச்சிகள் பறந்தன. இன்றைய கால மாற்றத்தில் நெருப்பு விளக்குகளும், மின் விளக்குகளும் வந்துவிட்டன. இம்மாற்றத்தைப் பகுத்தறிவுடைய மனிதர்கள் உணர்வது போல, விட்டில் பூச்சிகள் உணர முடிவதில்லை. அதனால்தான் அவை, நெருப்பின் ஒளியை, நிலவின் ஒளி என்று கருதி, அதனை நோக்கிப் பறந்து தம் வாழ்வை முடித்துக் கொள்கின்றன.

நடைமுறையில், பகுத்தறிவுடைய மனிதர்களும் கூட, தங்களின் ஆறாவது அறிவைப் பயன்படுத்திக் கால மாற்றங்களைப் புரிந்து, அதற்கேற்பத் தங்களின் வாழ்வைத் தகவமைத்துக் கொள்ளாமல், பழைய பாதையிலேயே பயணம் செய்கின்றனர். எனவே அறிவியல் பூர்வமாக உண்மைகளை உணர்ந்து வாழ்தலே பகுத்தறிவு என்கிறது இந்நூல்.

கடவுள் என்னும் கருதுகோளைப் பல்வேறு வகைகளில் அணுகி, அதனுடைய உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கும், பகுத்தறிவு வழியில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கும் இந்நூல் பெரிதும் உதவும்!

கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை

வெளியீடு: திராவிடர் கழகம்

பெரியார் திடல்,

84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை,

வேப்பேரி, சென்னை - 7

Saturday 21 October 2023

அண்மையில் படித்த புத்தகம் : இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்((சிறுகதைத் தொகுப்பு)

 அண்மையில் படித்த புத்தகம் : இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்(சிறுகதைத் தொகுப்பு)

 நூல் ஆசிரியர் : ரெஜினா சந்திரா

பதிப்பகம்           : எழிலினி பதிப்பகம்,எழும்பூர்,சென்னை-8

முதல்பதிப்பு     : அக்டோபர் 2023

விலை                  : ரூ  250          மொத்த பக்கங்கள் 122

தோழர் ரெஜினா சந்திரா அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு' இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்'. சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்தவர்களுக்கு இந்தத் தலைப்பு சட்டெனப்புரியும். 13 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இந்த நூல்.

ஒரு சிறுகதைக்கான கதைக்கருவினை எங்கிருந்து எடுப்பது ?... இதற்கான தெளிவான விளக்கத்தைத் தனது கதைகள் மூலம் கொடுத்திருக்கிறார் தோழர் ரெஜினா சந்திரா. அவருடைய எல்லாச் சிறுகதைகளும் அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பேசுகின்றன .சின்னச் சின்ன மகிழ்ச்சியை ,சின்னச் சின்ன துக்கங்களை ,சின்ன சின்ன  மனப்பிணக்குகளை,சின்னச்சின்ன அறியாமையை உணரும் தருணங்களை  விவரிக்கும் இச்சிறுகதைகள் நம் தோள் மீது தோள் போட்டுக் கொண்டு உரையாடும் ஒரு தோழனைப் போல ,அறிவுரையாக அல்லாமல் நட்பாக பல விஷயங்களைப் பேசுகிறது. இந்தச் சிறுகதைகளின் குரலும் புதிது, அணுகும் முறையும் புதிது ,எழுத்து நடையும் புதிது.இயல்பாகப் பேசும் நடையாக இந்தப் புத்தகம் அமைந்திருப்பது சிறப்பு.

அண்ணன் கோ.ஒளிவண்ணன்,பேரா.உமா மஹேஸ்வரி அவர்களின் முன்னேற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட 'வாருங்கள் படிப்போம்','வாருங்கள் படைப்போம் ' குழுக்களின் துடிப்பான உறுப்பினர்களில் ஒருவர்.அதில் நடைபெற்ற சிறுகதைத் திறனாய்வு போட்டிகளில் கலந்துகொண்டு திறனாய்வுகள் செய்தவர்.சிறுகதை எழுதுவது எப்படி என்பதனை ஒரு 6 மாதத்திற்கு முன்னால் சென்னை பெரியார் திடலில்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக நடைபெற்ற பயிலரங்கில் கலந்து கொண்டு கற்றுக்கொண்டவர்..பயிற்சி முடிந்த மறுநாளே.ஒரு சிறுகதை முயற்சியைக் கைக்கொண்டு,அந்தக் கதையை தோழர்களுக்கு அனுப்பிக் கருத்தினைக் கேட்டவர்.இன்று மிகச்சிறப்பாக ஒரு தொகுப்பினைக் கொண்டு வந்துள்ளார் பாராட்டுகள்.



இத்தொகுப்பில் விண்மீன்கள்,ரோலர் கோஸ்டர்,மேட்டிமை,நெஞ்சே! நெஞ்சே!,இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்,தீ நுண்மி,நாங்க ஒரு தினுசுதான்,எண்10-புதுத்தெரு,சில்லுனு ஒரு மெட்ரோ காதல்,செல்வி இஆப,வைத்தியம்,மே மாதக் கல்யாணம்,ஜெனிபர் என 13 கதைகள்.இந்தக் கதைகளுக்கு முக நூலில் வந்த பின்னோட்டங்கள் பின் இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொகுப்பில் உள்ள 'தீ நுண்மி 'என்னும் சிறுகதை மிகவும் பிடித்தது. கீழ்க்கண்ட இணைப்பில் அந்தக் கதை பற்றி விரிவாகப் பேசியுள்ளேன். இதில் உள்ள பல கதைகள்,ஒவ்வொன்றையும் அரைமணி நேரம் பேசலாம்.

புதுச்சேரி ஒரு துளிக்கவிதை அமைப்பும்,தமிழ் அமெரிக்கா மற்றும் வல்லினச்சிறகுகள் மின் இதழ் அமைப்பாளர்கள் இணைந்து நடத்தும் இணைய வழிக்கூட்டத்தில் இந்தப் புத்தகத்தினைப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. பேசியிருக்கிறேன். இணைப்பும் அளித்துள்ளேன். வாய்ப்பு உள்ளோர் கேட்டுப்பாருங்கள். உங்கள் கருத்துகளையும் வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள்.




https://youtube.com/live/0uNKnq8JsFc?feature=shared


Tuesday 17 October 2023

உணவும் வறுமை ஒழிப்பும்…. (முனைவர் வா.நேரு)


1945-ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு(Food and Agriculture Organization-FAO)  அக்டோபர் 16 அன்று உருவாக்கப்பட்டது.அந்த அமைப்பின் சார்பாக 1979-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் 20-வது பொது மாநாட்டில்,அதன் உறுப்பு நாடுகள் சார்பாக ஆண்டுதோறும் அக்டோபர் 16 ஐ உலக உணவு நாள்(word Food Day) எனக் கடைப்பிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் தரமான,ஊட்டச்சத்து உள்ள உணவுகளைக் குறைந்த விலையில் கொடுக்கவேண்டும் என்பதுதான் இந்த உணவு நாளின் நோக்கமாகும்.இந்த நாள்  உலகம் முழுவதும் உள்ள உணவு தயாரிக்கப் பயிரிடும்  விவசாயிகளுக்கும்,விளையும் பொருட்களை உணவாக மாற்றுவதற்கு இடையில் உழைக்கும் அனைவருக்கும்  நன்றி செலுத்தும் நாளாகாவும் கடைப்பிடிக்கப்படுகிறது.அதோடு உணவின் தேவை,அதனை வீணாக்காமல் இருக்கப் பழக்குதல்,சத்தான இயற்கை உணவுகளை அடையாளம் காட்டி உண்ண வைத்தல். என உணவினைச்சுற்றி நிகழும் பல்வேறு பொருட்களைப் பற்றிப் பேசும் நாளாகவும் அமைகிறது.

இந்த 2023-ஆம் ஆண்டிற்கான உலக உணவு தினக் கருப்பொருள் “நீரே உயிர்,நீரே உணவு,யாரையும் விட்டு விடாதீர்கள் ‘ என்பதாகும்.

 உலக உணவு நாளைப் பற்றிச் சிந்திக்கும் போது இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் உணவு கிடைக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் பதில். சத்தான உணவை ,அனைத்து வேளைக்கும், அனைவருக்கும் கொடுக்கவேண்டும் என்பதுதான் நமது இலக்கு என ஐக்கிய நாடுகள் சபை கூறும் நிலையில் அந்த இலக்கினைப் பற்றி நினைத்துப்பார்க்க இயலா நிலையில் இந்தியா இருக்கிறது.நல்ல உணவும்,குடி நீரும் இல்லாமல் இருக்கும் கோடான கோடி மக்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது.

அதைப்போல ஐக்கிய நாடுகள் சபை ,வறுமை ஒழிப்பு நாள் என அக்டோபர் 17-ஐ 1992-ஆம் ஆண்டில் அறிவித்தது.1993ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் அக்டோபர் 17 என்பது வறுமையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் சர்வதேச நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.மனிதர்களாக வாழும் யாரும் ஆதரவற்ற நிலையில் வறுமையில்  வாடக்கூடாது என்பதுதான் இந்த நாளின் நோக்கமாகும் .சென்ற 2022-ஆம் ஆண்டு மற்றும் இந்த 2023-ஆம் ஆண்டின் வறுமை ஒழிப்பு நாளின் கருப்பொருள்  ‘சுயமரியாதையுடன் வாழும் உரிமையை எல்லா நிலையிலும் நடைமுறைப்படுத்துதல்(Dignity for all in practice is the umbrella theme of the International Day for the Eradication of Poverty for 2022-2023) ‘என்பது இந்த நாளின்  நோக்கமாகும்.

உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா,காங்கோவுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் இந்தியா உள்ளது என்கிறது ஒரு புல்ளி விவரம்….இந்தியாவில் 73 கோடி பேர் தீவிர வறுமை நிலையில் உள்ளனர் ( நன்றி : தினமணி 13.09.2019).இந்த புள்ளிவிவரத்திற்குப் பின் ஏற்பட்ட கொரனா பாதிப்பு காரணமாக இன்னும் பல கோடி பேர் இந்தியாவில் தீவிரமான வறுமைக்கு ஆளாகி உள்ளனர்.உலகிலேயே வயதான காலத்தில் வறுமையால் வாடுபவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.


இந்தியாவில் இருக்கும் உணவு இல்லாமைக்கும்,வறுமைக்கும் நேரடியான தொடர்பில் இருக்கும் காரணம் ஜாதியே.இன்றைக்கும் சின்னஞ்சிறு குடிசைகளில்,ரோட்டோரங்களில் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கும் பல கோடிப்பேரைக் கொண்டது இந்தியா.கணக்கு எடுத்துப்பார்த்தால் அதில் ஒருவர் கூட உயர் ஜாதியைச்சார்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள். உழைக்கும் மக்களுக்குத்தான் ஒதுங்குவதற்குக் கூட இடம் இல்லாத கொடுமை இந்த நாட்டில் இருக்கிறது.குடிக்கத் தண்ணீர் இல்லை,சாப்பிட உணவு இல்லை, உடுக்க நல்ல உடை இல்லை,இருக்க வீடு இல்லை என்னும் கொடுமையில் வாழ்கிறார்கள் கோடிக்கணக்கான மக்கள் இந்த நாட்டில். அவர்கள் அனைவரும்  தாழ்த்தப்பட்ட,பிறபடுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த மக்கள்.இவர்கள் இப்படி அடிமை வேலையை மட்டுமே தொடர்ந்து செய்யவேண்டும் என்பதற்காகவே அவர்கள் முன்னேற்றத்தை இந்த சனாதன அரசு கண்டு கொள்வதில்லை.

“மேல் நாட்டில் சாதி இல்லாததால் ,அங்கு பொதுவுடமைக்கு முதலில் வகுப்புச்(வர்க்க) சண்டை துவங்கவேண்டியதாயிற்று.இங்கு சாதி இருப்பதால் பொதுவுடமைக்கு முதலில் சாதிச்சண்டை துவக்கவேண்டியதாகும்.

பார்ப்பானும் ,பார்ப்பனீய உணர்ச்சியும் உள்ள மக்கள் பொதுவுடமை வேஷம் போடுவதால் சாதிச்சங்கதியை மூடிவிட்டு,ஆகாத காரியமான- ஆனாலும் தங்களுக்குக் கேடில்லாததான வகுப்பு(class) உணர்ச்சியைப் பற்றிப் பேசி-சாதியை ஒழிக்கப்பாடுபடும் கட்சிகளோடு ஏழைகளை மோதவிடுகிறார்கள்;சாதியை ஒழிக்கச்செய்யப்படும் முயற்சியையும் அழிக்கப்பார்க்கிறார்கள்.

பார்ப்பனர்களுக்கும் மற்றும் மேல்சாதிக்காரர்களுக்கும் இருக்கும் உயர்வை முதலில் ஒழித்தாக வேண்டும்.இதிலேயே அரைப்பாகம் பொதுவுடமை ஏற்பட்டு விடும்.அதாவது,சாதியினால் அனுபவிக்கும் ஏழ்மைத்தன்மையும்,சாதியினால் சுரண்டப்படுவர்களாக இருக்கும் கொடுமையும் நம் பெரும்பான்மை மக்களிடமிருந்து மறைந்துவிடும்.(தந்தை பெரியார்,குடி அரசு தலையங்கம்,25-3-1944) என்கிறார் தந்தை பெரியார்.

இந்த உலக உணவு நாளிலும்,உலக வறுமை ஓழிப்பு நாளிலும் நாம் எண்ணிப்பார்க்கவேண்டிய செய்தி ஜாதி ஒழிப்பாகும்.அதற்கு காரணமாக இருக்கும் ஸ்னாதான மத ஒழிப்பாகும்.உழைக்காமல்  நெய்யை ஊற்றி ஊற்றித் திங்க ஒரு ஜாதியும்,சாப்பிட ஒன்றும் இல்லையென்றாலும் மாடாய் உழைக்கும் மனிதர்களைக் கொண்டதாக ஒரு ஜாதியும் இருக்கும் இந்த நாடு மற்ற நாடுகளோடு ஒப்பிடத்தக்கதன்று.

அண்மையில் பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு உழைக்கும் மக்களின் உண்மையான தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கிறது.இந்தியாவிலேயே கல்வியில்,பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாநிலம் பீகார்.ஆனால் அந்த மாநிலத்தைச்சார்ந்த பார்ப்பனர்கள் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ் போன்ற உயர் பதிவிகளை வகிப்பவர்களாக இருக்கிறார்கள். அப்படி பதவியில் இருந்துவிட்டு ஓய்வு பெற்ற பின்பும் கூட மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.  

பீகார் மாநிலத்தின் மக்கள் தொகை 13 கோடி.இதில் இந்துக்கள் மட்டும் 82 சதவீதம்.இஸ்லாமியர்கள் 17 சதவீதம்.இந்துக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27,மிகப்பிறபடுத்தப்பட்ட வகுப்பினர் 36,பட்டியலினத்தவர்கள் 19,பழங்குடியினர் 1.06 ,உயர்ஜாதி எனப்படுவோர் 15 சதவீதம் எனப் புள்ளிவிவரம் காட்டுகிறது.அதிலும் முன்னேறிய ஜாதியினரில் 3.5 சதமே பார்ப்பனர்கள். அந்த 3.5 சதவீதச பார்ப்பனர்கள் வாய்ப்பும் வசதியும் பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை அந்தப் புள்ளி விவரம் காட்டுகிறது.

 இந்தியா முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும்.அதில் மிக அதிக வறுமை நிலையில் உள்ளவர்கள் யார் யார் என்ற கணக்கெடுப்பும், சத்தான உணவு இன்மையால் துன்பப்படுபவர்கள் யார் யார் என்னும் கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படவேண்டும்.அப்போதுதான் இந்த இந்திய ஒன்றியம் யாருக்கு ஒளிர்கிறது, யாருக்கு இன்னும் இருட்டாகவே இருக்கிறது என்னும் உண்மை அனைவருக்கும் தெரியும்.இந்தியாவில் வறுமை ஒழிப்பிற்கும் ,அனைவருக்கும் சத்தான உணவு கிடைப்பதற்கும் என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய உண்மையான சிந்தனையும் தீர்வும் கிடைக்கும்.பிறவி முதலாளிகளை உருவாக்கும் ஸனாதன தர்மத்தை ஒழிக்கும் சிந்தனை பரவும்.விழிப்புணர்வு ஏற்படும்.அப்படிப்பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக இந்த உலக உணவு நாளையும்,உலக வறுமை ஒழிப்பு நாளையும் நாம் கடைப்பிடிப்போம். 


நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ் அக்டோபர் 15-31

Saturday 14 October 2023

என்ன செய்யப்போகின்றோம் இதனை மாற்ற?

 

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்கு

இராக்கட்டுகள் வீசி

கலகத்தைப் பற்ற வைத்த

அறிவிருப்பதாக நினைக்கும் அறிவிலிகளே!

உங்களின் ஒரு  நாள் செயலைவைத்து

எதிரி கொத்து கொத்தாய் எரிக்கின்றான்..

 

பற்றி எரிய வீசப்படும் வெடிகுண்டுகள்!...

வெந்து சாகும் குழந்தைகள்…

ஓடி ஓடி ஒளியும் மக்களின்

மேலே விழுந்து வெடிக்கும் குண்டுகள்..

படம் கண்டு மனம் பதைக்கிறது..

எங்கள் கண்களில்

2009 தமிழ்ஈழம் கண்ணில் வந்து

கண்ணீர் வடிகிறது!

 

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்

அமெரிக்க மண்ணில் வசித்துவந்த

ஏதுமறியா அப்பாவிகள்…

பூர்வகுடி செவ்வந்தியர்களைக்

கொன்று குவித்து....

அந்தக் குருதியின் மீது

அந்த நிலத்தில் தங்கள்

கொடியை நாட்டிக் கொண்ட

அமெரிக்காதான் இன்றைக்கு

உலகத்தின் நாட்டாமை!

அவன்தான் இன்றைக்கு இஸ்ரேலுக்கு

உதவுகிறான்..

 

அகண்ட பாரதம் காணும் கனவில்

இங்கு இருக்கும் ஒருவரும்கூட

இஸ்ரேலுக்கு உதவிட அழைக்கின்றார்…

இவர்களின் பார்வைகளில்

நிலம்தான் முக்கியம்..

அந்த நிலத்தில் வாழும் மனிதர்களல்ல!

 

எவ்வளவு நாளாக அந்த நிலத்தில்

அந்த மனிதர்களின் மூதாதையர்கள்

வாழ்ந்தார்கள் என்பதோ…

எத்தனை யுகங்களாக

அந்த மனிதர்களின் பரம்பரை இரத்தம்

அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு

உதவியது என்பதோ அவர்களுக்கு முக்கியமில்லை…

 

அந்த  நிலம் வேண்டும்..

வந்தவன் வசதியாக வாழ்வதற்கு

அந்த  நிலம் வேண்டும்..அந்த  நிலத்திற்க்குள்

இருக்கும் இயற்கைப் பொருட்கள் வேண்டும்..

 

அதை அடைய இடையூறாக இருக்கும்

அந்த  நிலத்து மனிதர்கள் அகற்றப்படவேண்டும்..

அவர்கள் அகல்வதற்கு ஒப்புக்கொள்ளவில்லையெனில்

அவர்க:ள் கொல்லப்படவேண்டும்..

 

அப்படிக் கொல்லும் கொலைகாரச்ச்செயலை

நியாயப்படுத்த ஏதேனும் காரணங்கள் வேண்டும்..

இதே காரணத்திற்காகத்தான்

மணிப்பூரும் கூட மாதக்கணக்கில்

எரிந்து கொண்டிருக்கிறது…

இங்கிருப்பவருக்கு மணிப்பூரைப்

பார்க்கவோ! எரியும் நெருப்பை அணைக்கும்

முயற்சிக்கோ நேரமில்லை…

இஸ்ரேலுக்கு உதவிட

முன்வரிசையில் நிற்கின்றார்…

 

கொன்றார்கள்..ஆதலால் கொல்கின்றோம்

திருப்பிக் கொல்வதற்கு

எந்த வழிகாட்டுதலும் தேவையில்லை…

இன்னும் கூடுதலாய் நிலங்களை ஆக்கிரமிப்போம்…

காஸாவில் இருக்கும் அப்பாவி

மக்களை அடைத்துவைத்துக் கொன்றாலும்

அமைதி காக்கவேண்டும் உலக மக்கள்!

என்ன கொடுமை இது!

 

உலகக் கேடிகளின் தலைவன்

இஸ்ரேலையும் அவனுக்கு வழிகாட்டும்

சிலரையும் கண்டு கொண்டோம்..

என்ன செய்யப்போகின்றோம் இதனை மாற்ற?

 

                              முனைவர் வா.நேரு,

                               15.10.2023

Friday 13 October 2023

வெளியேறினார் அண்ணல் இன்றுதான்...

 

அயல்நாடெல்லாம்

சென்று படித்துவந்த

அண்ணலுக்கு இந்த நாட்டின்

ஜாதிய அடுக்குமுறை

அதிர்ச்சியைத் தந்தது…..

 

எளிய உழைக்கும் மனிதர்களின்

மனங்களில் கூட

அப்பிக்கிடக்கும் ஜாதி 

உணர்வைக் களைவது எப்படி?...

என்னும் கவலை அவரின்

இரவுத் தூக்கத்தை எல்லாம் கெடுத்தது…

 

உலகத் தத்துவத்தை எல்லாம்

கரைத்துக் குடித்த அவருக்கு

‘ஸனாதன தர்ம ‘ நஞ்சு

தெளிவாகப் புரிந்தது…

அண்ணல் அம்பேத்கர்

சிந்தித்தார்,சிந்தித்தார்…

‘ஜாதியை ஒழிக்கும் வழி’ குறித்து

இரவு பகலாய்ச் சிந்தித்தார்.


நச்சு மரத்தின் இலைகளை

அகற்றலாமா என எண்ணினார்..

கோவில் நுழைவுப் போராட்டங்களை

நடத்திப்பார்த்தார்….

நச்சு மரம் புதிது புதிதாய்

இலைகளைப் புதிப்பித்துக்கொண்டே இருந்தது..

 

ஊற்றும் தண்ணீரை

மாற்றிப்பார்ப்போமா என எண்ணினார்…

அனைவரும் பிறப்பால் ஒன்று

என்னும் அறிவுரையை சொல்லிப்பார்த்தார்..

நச்சுமரம் புதிய தண்ணீரிலும்

செழித்து வளர்ந்தது…

 

இலைகளைப் பறித்தோ…

தண்ணீரை மாற்றியோ மாற்ற இயலாது

இந்த நச்சுமரத்தின் வேரே

ஜாதிய நச்சுக்காற்று  வீசிடக்

காரணம் என்று கண்டறிந்தார்…

 

வேரோடு மரத்தை

வீழ்த்தினால் ஒழிய

விடிவில்லை எனக்கண்டார்…

 

ஆம் தோழர்களே…

இந்துவாகப் பிறந்தேன் நான்…

இந்துவாகச் சாகமாட்டேன்

எனச்சூளுரைத்து

இலட்சக்கணக்கான தோழர்களோடு

இந்து மதத்திலிருந்து

வெளியேறினார் அண்ணல்

இன்றுதான் 1956-ல்…

 

                முனைவர் வா.நேரு

                 14.10.2023

 

 

Wednesday 11 October 2023

புத்தகத் திருவிழாவிற்கு வாருங்கள்!வாருங்கள்!
















அன்பிற்கினிய நண்பர்களே,தோழர்களே,உறவினர்களே,வணக்கம். நாம் மதுரையில் கொண்டாடும் உண்மையான திருவிழா,புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது. புத்தகங்களால் மதுரை திணறப்போகிறது.எத்தனை பதிப்பகங்கள்,எத்தனை புத்தகங்கள். வாங்க நினைத்த புத்தகங்களை நாம் வாங்கப்போகும் நேரம்.

எம்ரால்டு பதிப்பகத்தின் பிரிவான எழிலினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எனது 'நெருப்பினுள் துஞ்சல் 'சிறுகதைத் தொகுப்பும் , 'இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும் ' என்னும்  எனது முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூலாக்கமும் அரங்கு எண் 186,187-ல் கிடைக்கும்.மற்றும் ' எனது 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்', 'சூரியக் கீற்றுகள்' மற்றும் புதுச்சேரி ஒரு துளிக்கவிதை பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எனது  ''சொற்களின் கூடுகளுக்குள் ' கவிதைத் தொகுப்பும் ,நூல் மதிப்புரை தொகுப்பான 'சங்கப்பலகை'யும் அரங்கு எண் 66-ல் கிடைக்கும்.

கீழடி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எனது மகன் சொ. நே.அன்புமணியின் 'கரைந்து போ மனமே ' கவிதைத் தொகுப்பு கருஞ்சட்டைப் பதிப்பகம் அரங்கு எண் 66-ல் கிடைக்கும்.

எழிலினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எனது மகள் சொ.நே.அறிவுமதியின் 'ஆழினி' நாவல் எம்ரால்டு அரங்கு எண் 186,187-லிலும் அரங்கு எண் 66-லும் கிடைக்கும் .

புத்தகத் திருவிழாவிற்கு வாருங்கள்!வாருங்கள்! ஒன்று கூடுவோம்! புத்தகங்களை நேசிப்போம்,வாசிப்போம்,விவாதிப்போம்,சுவாசிப்போம்.

தோழமையுடன்
வா.நேரு,12.10.2022.





 

Friday 6 October 2023

தந்தை பெரியாரும் காந்தியாரும் ...முனைவர் வா. நேரு

 அக்டோபர் 2, 2023 காந்தியார் அவர்களின் 154ஆம் பிறந்த நாள். தேசத் தந்தை என்று போற்றப்பட்ட காந்தியாரைக் கொன்றவர்களின் தத்துவத்தைக் கொண்டவர்களின்

கைகளில் இன்று இந்திய அரசாங்கம் இருக்கிறது.ஒரு பக்கம் காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்துக்கொண்டே மறுபக்கம் காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சையைப் புகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

1927-இல் தந்தை பெரியாரிடம், காந்தியார் நடத்திய விவாதத்தில் காந்தியாருக்குப் புரியும்படியாக சில விசயங்களைப் பெரியார் புட்டுப் புட்டு வைக்கின்றார்.



வைக்கம் போராட்டத்திற்குப் பிறகு இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்டவர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்கவேண்டும் என்று போராட்டங்கள் நடைபெறுகின்றன. 1933ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழையும் உரிமைக்கான சட்ட சீர்திருத்தத்தை காந்தியார் வலியுறுத்துகின்றார். ஆனால் இன்றைய ஆர்.எஸ்எஸ். இயக்கத்தின் முன்னோடியான மதன் மோகன் மாளவியா அது கூடாது, தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என காந்தியோடு வாக்குவாதம் செய்கின்றார்.காந்தியார் வலியுறுத்திய மசோதாவின் இறுதி முடிவு உயர் ஜாதி இந்துக்களின் கைகளில் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் இதனை எதிர்த்து மதன் மோகன் மாளவியா 1933,ஜனவரி 23- அன்று வாரணாசியில் ‘சனாதன தர்ம மகாசபை’க்கு அழைப்பு விடுத்து இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்.
(நன்றி : பி.பி.சி.தமிழ்)

இந்து மதத்தில் நாம் எளிதாகச் சீர்திருத்தம் செய்து விடலாம் என்று நினைத்த காந்தியாரின் செயல்பாடுகளே அவரின் இறப்புக்குக் காரணமாக அமைகிறது.
காந்தியடிகள் இந்து மத நம்பிக்கை கொண்டவர்தான். மிக ஆழமாக அதனை நம்பியவர்தான். ஆனால் இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையை ஒழிக்கவேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் தனக்குத் தெரிந்த வழியில் போராடினார், வாதாடினார். தீண்டாமைக்கு ஊற்றுக்கண் ஜாதி என்பதும், ஜாதி இந்துமதம் பெற்ற பிள்ளை என்பதும், அதனை விடாமல் வளர்த்துவருவது இந்துமதம்தான் என்பதும் காந்தியாரின் வாழ்க்கையில் இறுதிக்கட்டப் பகுதியில்தான் அவருக்குப் புரிந்தது. அதுவரை தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பியவர் காந்தியார்.

1948- ஜனவரி 30-ஆம் நாள்,இந்துத்துவா வெறி கொண்ட நாதுராம் கோட்சேவால் காந்தி படுகொலை செய்யப்படுகின்றார். காந்தியாரின் மரணம் தந்தை பெரியாரைப் பெரிதும் பாதித்திருக்கிறது. காந்தியாரின் கொலை பற்றி, “காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது. இது உண்மை தான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது.

இந்தியாவும் பதறி இருக்கும். மதமும் வைதீகமும் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாக இருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் சதி முயற்சி இருந்திருக்கவே வேண்டும்.

அது காந்தியார் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ, உயிர் வாழ்ந்து வந்தாரோ அவர்களாலேயே தான் இச்சதிச் செயல் ஏற்பட்டிருக்க வேண்டும். இது மிக மிக வெறுக்கத்தக்க காரியமாகும். இவரது காலி ஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையே ஆகும்.

இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரணமாகவாவது நாட்டில் இனி அரசியல் மத இயல் கருத்து வேற்றுமையும் கலவரங்களும் இல்லாமல் மக்கள் நடந்து கொள்வதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்’’ (குடிஅரசு, 31-.1-.1948). அறிக்கையில் இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவு என்று குறிப்பிடுகின்றார். காந்தியின் மேல் இரக்கம் கொண்டு எழுதுகின்றார்.அது மட்டுமல்லாது இந்த நாட்டிற்கு ‘காந்தி தேசம்’ என்று பெயர் சூட்டுங்கள் என்று குறிப்பிடுகிறார்.

காந்தியாரைப் பற்றி “சுய நலமும் கொஞ்சமும் இல்லாமல், தனது முப்பது ஆண்டுகால வாழ்க்கையையும் இந்தியத் துணைக்கண்டத்து மக்களின் நன்மைக்காகவே, தன் மனதில் எது நன்மை என்று பட்டதோ, அவ்வழியிலேயே உழைத்த பெரியார் காந்தியார், பலாத்கார முறைகளில் கொஞ்சமும் நம்பிக்கையில்லாமல் அகிம்சையையே தன் கருவியாகக் கொண்டவர்.மத இயலில், மதத்திற்கு மதம் வேறுபாடில்லை என்றும், மத முடிவுகள் எல்லாம் ஒன்றுதான் என்றும் வற்புறுத்தியவர்…’’ என்று காந்தியாரைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ இதழில் எழுதுகின்றார். அது மட்டுமல்லாது,

“பெரியார் காந்தியவர்களின் விசனிக்கத்தக்க திடீர் மறைவு என்னைத் திடுக்கிட வைத்தது. இந்திய மக்கள் அனைவரையுமே இந்நிகழ்ச்சி திடுக்கிட வைத்திருக்குமென உறுதியாக நம்புகிறேன்.

கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகவே, தோழர் காந்தியார் இப்பரந்த உபகண்ட மக்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டியாயிருந்து வந்தார். மக்களுக்கு அவரது தொண்டு மகத்தானது. அவரது இலட்சியக் கோட்பாடுகள் உலக மரியாதையினை ஏற்றுவிட்டன.

காந்தியார் மீது நடத்தியிருக்கும் மோசமான தாக்குதல் கண்டனத்துக்குரியதாகும். பலதரப்பட்ட எல்லா வகுப்பு மக்களுக்கும் நியாயமாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடந்துகொண்ட காந்தியார், இக்கொடுந் தாக்குதலுக்கு உள்ளாயிருக்கிறாரென்றால், இது மிகவும் வெறுக்கத்தக்கதாகும். இக்கொலையாளியை ஆட்டிப் படைக்கும் சதிக்கூட்டமொன்று திரைமறைவில் வேலை செய்து வர வேண்டும்.

வட இந்தியாவில் நடைபெற்றுவரும் காரியங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாயிருப்பது மதவெறியாகும். காந்தியாரின் இடத்தை நிறைவு செய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை. மக்கள் தங்கள் அரசியல், மத வேறுபாடுகளை மறந்து, சகோதரபாவத்துடன் நடந்து கொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும். தென்னாட்டுத் திராவிடர்கள் இயல்பாகவே நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலைக்க வைப்பர் (குடிஅரசு, 7.-2.-1948).

மக்கள் தங்கள் அரசியல், மத வேறுபாடுகளை மறந்து, சகோதர பாசத்துடன் நடந்து கொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும். என்று தந்தை பெரியார் குறிப்பிடுகின்றார். காந்தியாரின் 154-ஆம் பிறந்த நாளான இந்த நேரத்தில் அதற்கு நேர் எதிராக அரசியல், மத வேறுபாடுகளை வைத்து மனிதர்கள் அடித்துக் கொல்லப்படும் அவல நிலையை இந்தியாவில் பார்க்கின்றோம்.

இந்த ஆபத்தினை முன்கூட்டியே உணர்ந்ததுபோல் தந்தை பெரியார் அவர்கள் காந்தி இறந்த சமயத்தில் இந்த நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்கள் செய்யவேண்டியது என்ன என்பதைக் குறிப்பிடுகின்றார். ”காந்தியார் பலியாக்கப்பட்டதன் காரணமாய் இந்து மக்கள் சமுதாயத்தில் வருணாசிரம தர்மமுறை, அதாவது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதான உரிமை(பிறவி உரிமை) முறை இனி கிடையாது. வர்ணமுறையைக் குறிக்கும் சட்டம், சாஸ்திரம், சம்பிராதயங்களும் இந்தச் சுயராஜ்யத்தில் இனி அனுஷ்டிக்கப்படமாட்டாது.இவை ஒழியும்படியாக அவசியமான எல்லா ஏற்பாடுகளும் கையாளப்படும் “ என்று சுயராஜ்ய சர்க்கார் ஏற்பாடு செய்து விடுவார்களேயானால்,இந்த நாட்டைப் பிடித்த எந்தவிதமான கேடும், ஒரே அடியாய்த் தீர்ந்துவிடும்.” என்று ‘குடிஅரசில்’ எழுதுகின்றார்.

‘குடிஅரசு’ இதழ் தொகுப்பில் 1948ஆம் ஆண்டிற்கான தொகுப்பின் வழியாக காந்தியார் இறந்தபோது, தந்தை பெரியார் அவர்களின் உள்ளக்கிடக்கையும், நாட்டுக்காக உழைத்த ஒருவரை இப்படி அநியாயமாகக் கொன்று விட்டார்களே என்னும் கவலையையும்,இந்த நேரத்திலாவது இந்த சனாதனத்தை ஒழிக்க இந்த ஆட்சியாளர்கள் முயற்சி செய்வார்களா என்பதற்கான வேண்டுகோளையும் நம்மால் அறிய முடிகிறது.

ஜாதி அமைப்பு காந்தியாரின் பெயரை வைத்து வேகமாக வளர்கிறது. இந்துத்துவக் கோட்பாடு வளர்வதற்கு காந்தியை நன்றாகப் பார்ப்பனர்கள் பயன்படுத்து
கிறார்கள்.’நோகாமல் நொங்கு தின்பது’ என்னும் கிராமத்துப் பழமொழியைப் போல காந்தியின் பெயரைப் பயன்படுத்தி நாட்டைக் கொள்ளையடிப்பவர்கள் அதிகமாகின்றார்கள்.இதற்கெல்லாம் காரணம் காந்தியின் பெயர்தான் என்பதை உணர்ந்த தந்தை பெரியார் அவர்கள் 1957-இல் ‘காந்தி பட எரிப்பு’, ‘காந்தி பொம்மை உடைப்பு’ போன்ற போராட்டங்களை அறிவிக்கின்றார்.தனது கருத்தை மிக விளக்கமாக ‘விடுதலை’யில் எழுதுகின்றார். “தான் 1927-இல் மகாத்மா என்று காந்தியாரை எழுதாததை,பேசாததை எப்படியெல்லாம் எதிர்த்தார்கள், அதற்கு தான் என்னென்ன பதில் சொன்னேன்” என்பதையெல்லாம் எழுதுகின்றார்.

தந்தை பெரியாரின் ஈரோட்டுக் கண்ணாடி வழியாக காந்தியாரைப் பார்க்கின்றபோது, நமக்கு காந்தியாரின் மேல் பரிதாபமே ஏற்படுகிறது.பார்ப்பனர்களின் வஞ்சகத்தால் வீழ்ந்த ஒரு மாபெரும் ஆளுமையை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது. பார்ப்பனியத்தின் கைகளில் சிக்கிய ஒரு பொம்மையே காந்தியார் என்பதை நம்மால் உணரமுடிகிறது. ♦

நன்றி : உண்மை இதழ்   அக்டோபர் 1 - 15, 2023   

Tuesday 3 October 2023

கவிஞர் சமயவேல் அவர்களுடன் 'வாருங்கள் படைப்போம்' குழுவில் நேர்காணல்.


நேற்று (03.10.2023) மாலை அற்புதமாக அமைந்தது. கவிஞர் சமயவேல் அவர்களுடன் 'வாருங்கள் படைப்போம்' குழுவில் நேர்காணல். கவிஞர் சமயவேல் அவர்கள் என்னுடன்  தொலைபேசித்துறையில்(பி.எஸ்.என்.எல்) வேலை பார்த்தவர்.அவரது படைப்புகளோடு கடந்த ஒரு வார காலமாக உறவாடும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.அவரது படைப்புகளின் அடிப்படையில் நான் கேள்விகள் கேட்க, சிறிய புன்னகையுடன் தனது எண்ணங்களை கவிஞர் சமயவேல் அவர்கள் பகிர்ந்துகொண்டார்.அந்த நிகழ்வின் காணொலி கீழே.வாய்ப்பு இருப்பவர்கள் கேட்டுப்பாருங்கள்.உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.



ஜூம் நிகழ்வு...படம்



யூ டியூப் இணைப்பு...நன்றி அண்ணன் ஒளிவண்ணன் அவர்களுக்கு...

 https://www.youtube.com/live/SghCvNY4wVo?si=UxIRmjqIqz2SdrQb

Sunday 1 October 2023

பயிற்சிக் களப் பாடம் முனைவர் வா.நேரு

           பயிற்சிக் களப் பாடம்

                                       முனைவர் வா.நேரு

 


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு முழுவதும் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்புகளால் டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் நினைவு போற்று வகையில், ஆகஸ்ட் 20ஆம் நாளை அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வு நாளாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம், கல்லூரி, பள்ளிகளில் பிரச்சாரம், கருத்தரங்கம், பொதுக்கூட்டம் எனப் பல இடங்களில் பல வடிவங்களில் நடத்தப்பட்டிருக்கிறது.

“எந்த மனிதனாவது தனது லட்சியத்தைப் பிரதானமாய்க் கருதி அதற்கே உழைத்துத் தீர வேண்டுமென்று முடிவு கட்டிக்கொண்டு இருப்பானேயானால் அவன் அதற்காக உயிரை இழக்க நேருவதுதான் அவனது லட்சியத்தில் அவனுக்குள்ள உறுதியையும் அவன் அடைய வேண்டிய வெற்றியையும் காட்டுவதாகும்.
அன்றியும் லட்சியக்காரன் உயிருடன் இருந்து லட்சியத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருப்பதில் எவ்வளவு பயன் ஏற்படுமோ அதைவிட கண்டிப்பாய் பல மடங்கதிகமான பலனும் ஏற்படக்கூடும்.அறிவாளிகளின் வேலையும் அதுவேயாகும். (குடிஅரசு, 30.8.1931) என்று தந்தை பெரியார் எழுதுகிறார். லட்சியத்திற்காக உயிரைக் கொடுப்பது என்பது ஒருவருக்குள்ள உறுதியைக் காட்டுவதாகும் என்று குறிப்பிடுகிறார்.

பல்லாயிரம் ஆண்டுகாலமாக மக்களை ஜாதிகளால் பிரித்து, வர்ணாசிரமக் கோட்பாட்டைத் திணித்து உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் பார்ப்பனியம், வர்ணாசிரமத்தை மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்த கையில் எடுத்த ஆயுதம் அச்சமூட்டுதல் ஆகும். மனுநீதி என்னும் மனித விரோத சட்டப் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, அரசர்களைத் தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு, உழைக்கும் மக்களுக்கு அச்சமூட்டி பார்ப்பனியம் ஆடிய _ ஆடுகின்ற ஆட்டமே கடந்த 2000 ஆண்டுகால இந்திய வரலாறு.

முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல பார்ப்பனியத்தை எதிர்ப்பதற்கு அடிப்படைத் தேவை அச்சமின்மையே. வஞ்சகத் தந்திரம் கொண்ட பார்ப்பனக் கோட்பாடுகளுக்கு இந்திய வரலாற்றில் முதன்முதலில் அச்சமூட்டியவர் புத்தர். தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், அச்சமில்லாமல் எதிர்த்து அதனை ஓரளவிற்கு வீழ்த்தியவரும் கூட. ஆனால் அவரது மறைவிற்குப் பின்னால் அவரது இயக்கத்திற்குள்ளேயே புகுந்து மகாயானம், ஹீனயானம் என்னும் இரண்டு பிரிவாக்கி பார்ப்பனியம் மீண்டும் இந்தியாவிற்குள் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொண்டது. இந்த 2000 ஆண்டுகால பார்ப்பனிய வரலாற்றில் அதற்கு அச்சமூட்டியவர் புத்தருக்குப் பின் தந்தை பெரியாரே ஆவார்.




ஒரு பக்கம் சட்டத்தின் மூலமும் கடுமையான தண்டனைகள் மூலமும் பயமுறுத்திய பார்ப்பனியம் இன்னொரு பக்கம் பக்தி, சடங்குகள் என்னும் பெயரால் தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கைக்குள் புகுந்து பயமுறுத்தியது.பயமுறுத்திய பார்ப்பனியத்தைப் பயமுறுத்தியவர் தந்தை பெரியார் ஆவார். ஏன் சவுண்டிப் பார்ப்பனர் முதல் ஜனாதிபதியாக இருந்த பார்ப்பனர் வரை தந்தை பெரியார் என்ற பெயரைக் கேட்டாலே அச்சப்படுகிறார்கள், அவதூறு பரப்புகிறார்கள் என்றால் அவர்களின் சனாதனக் கோட்பாட்டைச் சாக வைப்பதற்கான தத்துவத்தை, வழிமுறையை, நடைமுறையைச் சொன்னவர் பெரியார். அதனை வீதிதோறும் மக்களின் மனங்கள்தோறும் கொண்டு சென்றவர்கள்  கொண்டு செல்பவர்கள் தந்தை பெரியாரின் தொண்டர்கள். ஒருவர் பெரியார் தொண்டர் என்பதற்கு அடையாளமே அச்சமின்மை ஆகும்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இயக்க வரலாறாக எழுதப்பட்டிருக்கும் தன் வரலாற்று நூலான ‘அய்யாவின் அடிச்சுவட்டில் ‘முதல் பாகத்தில் திராவிடர் கழகத்தின் கூட்டங்கள் எவ்வளவு பெரிய எதிர்ப்புகளுக்கிடையே நடைபெற்றன என்பதைப் பல அத்தியாயங்களில் குறிப்பிட்டிருப்பார். அதில் கடலூரில் நடைபெற்ற கூட்டத்தைப் பற்றி எழுதும்போது “1938-இல் கடலூர் முதுநகரில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பற்றி என் மூத்த அண்ணன் கி. கோவிந்தராஜன் அவர்கள் விளக்கியதைக் கேட்டு அதிர்ந்து போன என் பிஞ்சு உள்ளத்திற்கு அதுவே பயிற்சிக் களப்பாடமாகவும் அமைந்தது என்றே சொல்ல வேண்டும். அன்று மாலை கடலூர் முதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பன்றிகள் விரட்டி விடப்பட்டனவாம். அய்யா(தந்தை பெரியார்) போகும்போது அவர் எதிரில் ஒரு கலகக் கூட்டம் முட்டை ஓட்டுக்குள் மலத்தை அடைத்து அவர் மீது வீசியெறிய, அது அவரது பொன்னிற மேனியில் பட்டு கெட்ட வாடை வீசிய நிலையில் கூட, அய்யா தனது பேச்சை நிறுத்தாமல் ஆரஞ்சு நிற சால்வையை எடுத்து மேலே போட்டு மூடிக்கொண்டே கடுமையாக வீராவேசமாகப் பேசினாராம். அதைக் கண்டு கேட்ட என் அண்ணன் கோவிந்தராசன் இந்த இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டவரானார். எனவே எதிர்ப்பு, ஏளனம், கண்டனம், கலவரம்,ஆகிய இவையெல்லாம் எனது பொதுவாழ்வின் பால பாடங்களாகவும் பரிசோதனை வகுப்புகளாகவும் கடலூரில் அன்றாட அனுபவமாகப் பெற முடிந்தது; அஞ்சாத நெஞ்சுரத்தையே தந்தது. (பக்கம் 30).

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியிருக்கும் நிகழ்ச்சி 1938இல் நிகழ்ந்தது. ஏறத்தாழ 85 ஆண்டுகள் கழித்து, ‘சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் ‘ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அமர்ந்திருக்க, மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வடநாட்டில் திட்டமிட்டு எதிர்க்கப்படுகிறது. கண்டனம் செய்யப்படுகிறது.ஆனால், இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய அவரின் சனாதன ஒழிப்புக் கருத்தை வரவேற்றுக் கொண்டாடப்படுகிறார். தீண்டாமை, அண்டாமை, பாராமையால் இன்றும் பாதிக்கப்படும் பலர் தங்கள் கருத்துகளை  தங்களைச் சனாதனம் படுத்தும் பாட்டைத் தங்கள், தங்கள் மொழிகளில் எடுத்துவைக்கிறார்கள். அது உடனுக்குடன் மொழிபெயர்க்கப்படுகிறது.

பல மொழிகளில் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் சொன்ன சனாதன ஒழிப்பு பற்றிய விவாதங்களும், பாராட்டுகளும் தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. ‘நான் சொன்ன சொற்களில் ஒரு சொல்லில் இருந்து கூட பின்வாங்கப் போவதில்லை’ என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். டாக்டர் கலைஞரின், தந்தை பெரியாரின்,தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் துணிச்சலை, பயமற்ற தன்மையை மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் காணமுடிகிறது. பாராட்டி மகிழ்கின்றோம் நாம்.

உண்மை எப்போதும் உண்மைதான். அது உலகத்திற்கு உண்மை என்று தெரிவதற்கு வேண்டுமானால் நாளாகலாம், ஆனால் உண்மை எப்போதும் உண்மைதான். கலீலியோ உலகம் உருண்டை என்று சொன்னபொழுது, உலகம் நம்பவில்லை, மதம் அவரைத் தண்டித்தது, விசாரணைக்கு உள்ளாக்கியது.ஆனால் 400 ஆண்டுகளுக்குப் பிறகு அதே மதம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டது.அதனைப் போல பகுத்தறிவாளர்கள் சொல்லும் கருத்துகள் என்றைக்கும் வெல்லும் கருத்துகள்.

எதிர்க்கப்படவேண்டியதல்ல, ஒழிக்கப்பட வேண்டும் என்னும் குரல் இந்தியா
முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்திருப்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.’

பார்ப்பனர்கள் வாழத் தகுதியானதல்ல தமிழ்நாடு’ என்று இராஜாஜி புலம்பியது போல, ‘பார்ப்பனர்கள் வாழத் தகுதியானதல்ல இந்தியா’ என்னும் புலம்பல்கள் இந்தியா முழுவதும் இருக்கும் பார்ப்பனர்களால் சொல்லப்படும் காலம் விரைவில் வரவேண்டும்.அதற்கு இந்தத் தந்தை பெரியாரின்
145-ஆவது ஆண்டு பிறந்த நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்.

தந்தை பெரியாரின் தத்துவத்தை, வாழ்க்கையை நம் வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் உணர்வதற்கு வழிகாட்டும் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காட்டும் வழியில் தொடர்ந்து உழைப்போம். ♦

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் 

செப்டம்பர் 16-30, 2023