Thursday, 20 February 2025

மாட்டிவிடாமல் மீட்டதற்காக...

 

மூளைக்குள்

அப்பிக்கிடக்கும்

அழுக்கை அகற்றுவது

அவ்வளவு ஒன்றும் எளிதல்ல...

ஆபத்தான மலக்கழிவு

நுண்ணுயிர்கள் மண்டிக்கிடக்கும்

கும்பமேளா ஆற்றில்

குளிப்பதற்குப் போட்டியிடும்

மனிதர்களுக்கு உண்மையை

உணர்த்துவது அவ்வளவு சுலபமல்ல..

நாட்டை ஆள்பவர் முதல்

நாடோடிகள் வரை

இந்த மலக்குப்பைக் குட்டையில்

மூழ்கி எழுந்தால்

மோட்சம் என நம்புவதை

முறிப்பது அவ்வளவு எளிதல்ல..

பகுத்தறிவுக் கண்ணாடி அளித்த

தந்தை பெரியாரை நினைத்திடுவோம்

இந்தக் குப்பைகளுக்குள் நாம்

மாட்டிவிடாமல் மீட்டதற்காக...

                               வா.நேரு,20.02.2025

Wednesday, 19 February 2025

தமிழில் குறள்வெண்பா எழுதும் அமெரிக்கர் ...

 





தமிழில் குறள்வெண்பா எழுதும் அமெரிக்கர்...

        (முனைவர் வா.நேரு) 

சென்றமாதம் சென்னையில் நடைபெற்ற பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு..ஸ்டாலின் அவர்கள் ஒருவரை வியப்புடன் பார்த்து கைதட்டிப் பாராட்டினார்.அவர் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் தாமஸ் கிட்டோசி புருக்சிமா அவர்கள்.தன்னைத் தமிழில் அறிமுகப்படுத்தி திருக்குறளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் கூறி  விளக்கம் கொடுத்து அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கினார்.மதுரைக்கு,லையபட்டிக்கு  வந்திருந்த அவரை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு(நானும்),கவிஞர் சொ.நே.அன்புமணி,மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகச்செயலாளர் இரா.லீ.சுரேசு ஆகியோர் சந்தித்து நூல்களை அளித்து வாழ்த்து தெரிவித்து உரையாடினோம்.அப்போது அவர் எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் .

கேள்விசென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா  நிறைவு விழாவில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள்.மதுரைக்கு எப்போது,எதற்காக வந்தீர்கள்?

பதில்நான் அமெரிக்காவில் தத்துவத்துறை மாணவன்.வெளிநாட்டில் சென்று படிப்பதற்கான உதவித்தொகையோடு 1998-ஆம் ஆண்டு நான் மதுரைக்கு,அமெரிக்கன் கல்லூரிக்கு வந்தேன்.அப்போது எனக்கு வயது 22. நான் எனது ஆராய்ச்சியோடு ஆங்கிலத்தில் பேசுவது எப்படி என்னும் வகுப்புகளை அமெரிக்கன் கல்லூரியில் நடத்தினேன். அதில் நிறைய மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் அப்படி அந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட ஒரு மாணவர் என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவரது அப்பா என்னிடம் இரண்டு நூல்களைக் கொடுத்தார். அதில் ஒன்று திருக்குறள். அது தமிழிலேயே இருந்தது. நீங்கள் தமிழைப் படித்து இந்தத் திருக்குறள் நூலைப் படிக்க வேண்டும் என்று அவர் எனக்குச் சொன்னார்திருக்குறள் பற்றி  நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தேன்படிக்கவில்லை 

கேள்வி : திருக்குறள் எப்போது படிக்க ஆரம்பித்தீர்கள்?..

பதில்:மதுரைக்கு வந்தவுடன் நான் மதுரை நகரத்துக்குள்ளேயே தங்கியிருந்தேன்.பேச்சுத் தமிழ் மட்டும் முதலில் பழகினேன். பேருந்தில் மதுரைக்குள் பயணம் செய்வேன்பேருந்தில் திருவள்ளுவர் படம் போட்டு, திருக்குறள் எழுதிப் போடப்பட்டிருக்கும். எனக்கு அது திருக்குறள் என்று தெரியும் ஆனால் படிக்கத் தெரியாது. அதுதான் எனக்கு முதல் அறிமுகமாக இருந்தது. பிறகு எழுத்துக்கூட்டி பேருந்தில் போகும்போது திருக்குறளை வாசிக்கும் அளவிற்குத் தமிழைப் படித்தேன்.பேருந்தில்  திருக்குறளைப் படிப்பேன். ஆனால் அந்த்த் திருக்குறளுக்கு பொருள் எனக்குப் புரியாது. நான் எழுத்துத் தமிழ் படிப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வரவில்லை நாம் எதற்காக வந்தோமோ அதைப் பார்ப்போம் பின்னர் தமிழ் எழுதப் படிக்க முடிந்தால் படிப்போம் என்று நினைத்தேன்.பேச்சுத் தமிழ் மட்டும் பழகினேன்நான் முதலில் மதுரை அமெரிக்கன் கல்லூரிக்குள்ளேயே தங்கி இருந்தேன். அப்போது தமிழில் பேசுவதற்கு எனக்கு ஆள் கிடைக்கவில்லை. என்னைப் பார்த்தவுடன் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிப்பார்கள். நான் தமிழில் பேச ஆசைப்படுவேன். என்னோடு தமிழில் பேசுங்கள் பேசுங்கள் என்று நான் கேட்டுக் கொள்வேன்.அப்படி இரண்டு மூன்று நண்பர்கள் கிடைத்தார்கள்.அவர்களோடு தமிழில் பேசிக்கொண்டே இருப்பேன்அப்படியே இரண்டு ஆண்டுகள் முடிந்தபிறகு அமெரிக்கா போய்விட்டேன்.

கேள்வி :வலையபட்டி கிராமத்திற்கு எப்போது வந்தீர்கள்?

பதில்அமெரிக்கன் கல்லூரிக்குள் தங்கி இருக்கும்போது நகரத்துக்குள் தங்காமல்கிராமத்தில் தங்கவேண்டும் என்று முடிவு எடுத்தேன்.இந்த மக்களையும்,மண்ணையும் புரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்தேன்.ஒரு நண்பர் மூலம் வலையபட்டியில் ஒரு வீடு கிடைத்ததுநானே பால் காய்ச்சி,சமைத்து சாப்பிட ஆரம்பித்தேன். அந்த வீட்டு உரிமையாளர்கள் என்னைச் சமைக்க விடவில்லை. நீங்களாக எதற்கு சமைத்து சாப்பிடுகிறீர்கள்,எங்கள் வீட்டிலேயே சாப்பிடுங்கள் என்று சொன்னார்கள். நான் ரொம்பத் தயங்கினேன், அவர்களுக்கு நான் ஒரு பாரமாக ஆகிவிடக்கூடாது என்று .ஆனால் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்கள். சரி என்று சொல்லிவிட்டேன். அன்று முதல் நானும் வலையபட்டியில் இந்த வீட்டில் ஒரு உறுப்பினராகி விட்டேன்.எனது தம்பிதான் இவர்.(வலையபட்டிக்காரர் வணக்கம் வைத்தார்.நாங்களும் வணக்கம் வைத்தோம்.அவரது இணையர் தேநீர் கொண்டுவந்து கொடுத்து உபசரித்தார்) .விவசாயம் இருப்பதால்தான் நாம் இருக்கிறோம் அதனால் விவசாயம் சார்ந்திருக்கிற மண்ணில் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் திருவள்ளுவர் உழவுபற்றிக் கூட மிக அருமையாக பாடி இருக்கிறார் அல்லவா எனவே இந்த விவசாய மக்கள் எனக்கு ரொம்பப் பிடித்துப்போனார்கள்.எப்போது வந்தாலும் இந்த வீட்டில்,என் வீட்டில்தான் தங்குகிறேன் என்று உரிமையோடு சொல்கிறார்.

கேள்விஎழுத்துத் தமிழ் எப்போது படிக்க ஆரம்பித்தீர்கள்?

பதில்:2003 –ஆம் ஆண்டு அமெரிக்க பல்கலைக்கழகத்தின் நிதி உதவி மீண்டும் ஆண்டுகளுக்கு கிடைத்தது.மறுபடியும் மதுரைக்கு வந்தேன்.வலையபட்டியில் தங்கினேன் தமிழ் எழுத்துப் படிக்க எனக்கு ஒரு நல்ல வாத்தியார் கிடைத்தார் .மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரியில் இருந்த பேராசிரியர் கு.வே. ராமகோடி என்பவர்தான் அந்த நல்ல வாத்தியார். அவர்தான் எனக்கு எழுத்துத் தமிழைச் சொல்லிக் கொடுத்தவர், கற்றுக் கொடுத்தவர். அவர்தான் தமிழைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தைக் கொடுத்தது மட்டுமல்ல, தமிழ் செய்யுள்களின் ஓசை இனிமையை எனக்குக் கற்றுக் கொடுத்தவர். கொஞ்சம் கொஞ்சமாக படிக்க படிக்க எனக்கு எழுத்துத் தமிழில்  விருப்பம் வந்தது நான் அமெரிக்காவில் படித்து தத்துவம். தத்துவத்தில் ஒரு பகுதி நீதி.தமிழ் நீதி நூல்கள் எனக்கு மிகுந்த ஆர்வத்தைக் கொடுத்தன.

 

தமிழ் படிக்கும் போது ,அதில் அவ்வையாரின் மூதுரை படிக்கும் போது கவிதை அமைப்பு அதன் இன்பம் அப்போதுதான் நான் உணர ஆரம்பித்தேன்.மீண்டும் அமெரிக்கா போனேன். மறுபடியும் ஒரு இரண்டரை வருடம் எனக்கு அனுமதி கிடைத்தது. வந்தேன். அப்போதுதான் மூதுரை, திருக்குறள், தொல்காப்பியம் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் திருக்குறளைத் தமிழிலேயே படிக்க வேண்டும் என்று முயற்சி செய்து படிக்க ஆரம்பித்தேன். பரிமேலழகர்,மணக்குடவர் மற்றும் 6,7 பேரின் உரைகளையும் உரைகளையும் படிக்க ஆரம்பித்தேன். தமிழில் படிக்க ஆரம்பித்தேன். ஒரு 600 ,700 திருக்குறள் பாடல்களை மனப்பாடம் செய்தேன். திருக்குறளை எப்படி அமைப்பது என்பதைப் பற்றிய ஒரு பயிற்சியும் மேற்கொண்டேன். வெண்பா எழுதக் கற்றுக் கொண்டேன். நானும் வெண்பா எழுதுவேன்.சீர்,அடி,தளை  என்பதைப் பற்றி எல்லாம் சொல்லும் யாப்பிலக்கணம் கற்றுக் கொண்டேன். நானும் எனது ஆசிரியர் கு.வே.ராமகோடியும் இணைந்து ஒரு புத்தகம் போட்டோம். பேச்சுச் தமிழைப் படிப்பது எப்படி என்பது பற்றிய புத்தகம் அது.

மறுபடியும் அமெரிக்கா போனேன். மறுபடியும் மதுரைக்கு வந்தேன்

 

கேள்வி: தமிழைக் கற்றுக் கொள்வது  எளிதாக இருந்ததா? கடினமாக இருந்ததா


பதில்கடினமாகத்தான் இருந்தது.(சிரிக்கிறார்). மிகக் கடினமாகத்தான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கற்றுக் கொள்ள முடிந்தது எனது பேராசிரியர் கு.வே.ராமகோடி அவர்கள் அவசரப்படாதே, கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள் என்று சொன்னார். அ, ஆ, இ, ஈ கற்றுக் கொள்ள மட்டும் எனக்கு ஒரு மாதம் பிடித்தது. முறையாக அவர் தமிழ் எழுத்துகளைச் சொல்லிக் கொடுத்தார். குறில், நெடில் இவற்றைப் பற்றி எல்லாம் கற்றுக் கொள்வது முதலில் கடினமாக இருந்தது. ஆனால் அவர் மிக அருமையாக சொல்லிக் கொடுத்தார்,புரிந்து கற்றுக்கொண்டேன். ,, வேறுபாடுகளை எல்லாம் முறையாகச் சொல்லிக் கொடுத்தார். பயிற்சி கொடுத்து கொடுத்து என்னை அவர் உருவாக்கினார் ஆனால் இங்கு வலையப்பட்டிக்கு வந்த பிறகு எனக்கு தமிழில் பேசுவது பிரச்சனையில்லை. இவர்களுக்குத் தமிழ் மட்டும்தான் தெரியும்.அதனால் தமிழில் நானும் பேசினேன், அவர்களும் தமிழில் பேசினார்கள்.பேச்சுத்தமிழ்,எழுத்துத் தமிழ் இரண்டும் எனக்கு வளர்ந்தது.

 

(தொடர்ச்சி அடுத்த இதழில்)


நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ் பிப்ரவரி(16-28),2025







மரணமேளாவா?...

மகாமேளாவா?

மரணமேளாவா?

சரியான கேள்வியெழுப்பிய

மம்தாவிற்கு எதிராகப்

பொங்குகிறார்கள்..

யோகி-யின் பக்தர்கள்..

கும்பமேளாவில் குளித்த

பெண்களின் வீடியோக்கள்

அவர்கள் உடைமாற்றும்போது

எடுத்த வீடியோக்கள்

அமோக விற்பனை ஆன்லைனில்!

'தினமணி'க் கரடியே உங்கள்

முகத்தில் காறித் துப்புகிறது!

ரெயிலில் ஏற முண்டியடித்த

கூட்டத்தில் மிதிபட்டு...

கும்பமேளா நெரிசலில் சிக்கி...

எத்தனை பேர் செத்தனர்?…

அட உடைபடும்

ரெயில் ஜன்னல்கள்..

விரட்டப்படும்

ரெயில் ஓட்டுநர்கள்..

உலகமே பார்த்துச்சிரிக்கிறது

உங்கள் பக்தியின்

இலட்சணம் பார்த்து!..

இதில் மம்தாவைக்

கண்டிக்க வேண்டுமாம்!    

                          வா.நேரு,19.02.2025 

Tuesday, 18 February 2025

முறைகேடாய்ப் பணம் சேர்த்தாலே

 

அழுக்குச்சேற்றில்

குளிப்பதை

அகம் மகிழ்ந்து

பதிவிட்டிருந்தான்

தெரிந்தவன் ஒருவன்..

தமிழ் நாட்டில் பிறந்து

வளர்ந்து  திராவிட

இயக்கத்துக் கல்வியால்

உயர் நிலைக்குப் போன

அவனுக்கு இந்த ஆசை

ஏன் வந்து தொலைத்தது?

தெரியவில்லை…

முறைகேடாய்ப் பணம்

சேர்த்தாலே..பக்தி

முந்திக்கொண்டு

வந்து விடும்போல…

                     வா.நேரு,18.02.2025

செம்மொழித் தமிழ் நிறுவனமும் அகத்தியரும்.... முனைவர் வா.நேரு



நன்றி: விடுதலை 18.02.2025

செம்மொழித் தமிழ் நிறுவனமும் அகத்தியரும்...

          (முனைவர் வா.நேரு)


புராணக் குப்பைகளைப் புறந்தள்ளி,கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு ஸனாதானிகளுக்கு உறுத்திக்கொண்டே இருக்கிறது.’அனைவர்க்கும் அனைத்தும்’ என்னும் இலட்சிய  நோக்கோடு பீடு நடை போடும்  நூற்றாண்டு விழாக்காணும் சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாம் திராவிட மாடல் ஆட்சியும் அதன் கல்வி பரப்பும் விதமும் வர்ணாசிரமத்தை நம்பும் இந்துத்துவவாதிகளுக்கு  எரிச்சலாக இருக்கிறது.தனித்துவமாய்த் திகழும் தமிழ்நாட்டின் திராவிட இனம் சிந்து சமவெளி நாகரித்திற்கு சொந்தக்காரர்கள் என்பதும் உலக நாகரிகத்தின் தொட்டிலாகத் திகழும் கீழடி போன்ற அகழ்வாராய்ச்சி தரும் உண்மைகளும் அவர்களின் அடிவயிற்றில் நெருப்பைக் கொட்டுவது போல் இருக்கிறது..ஏதாவது செய்து இவற்றை எல்லாம் இல்லாமல் ஆக்கவேண்டுமே என்னும் நினைப்போடு பல தகிடுதத்தங்களை தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.


பண்பாட்டுப் படையெடுப்பு

 

காசித் தமிழ்ச்சங்கமம் என்ற அமைப்பை வைத்து அதன் மூலம் பண்பாட்டுப் படையெடுப்பை நடத்த திட்டமிட்டு ,நடத்திக்கொண்டிருக்கிறார்கள். சென்னையில் தமிழ் செம்மொழி மத்திய நிறுவனமும் ,சாஸ்த்ரா நிகர் நிலைப் பல்கலைக் கழகமும் இணைந்து ஓர் ஊர்வலம் நடத்தியிருக்கிறார்கள்.என்ன ஊர்வலம் என்றால் 100 மாணவர்களை அகத்திய முனிவர் போல வேடம் அணியச்செய்து ஊர்வலம் நடத்தி இருக்கிறார்கள்.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.அகத்தியருக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்?’கல்வியை காவி மயமாக்க பாஜக சதி ‘அகத்தியர் வேடம் நிகழ்வுக்கு தி.மு.க. கண்டனம் என்று தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது(12.2.2025).இந்தக் கண்டன அறிக்கையை திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கொடுத்துள்ளார். பாராட்டத்தக்க அறிக்கை. சென்னையில் நடைபெற்ற ஊர்வலத்தில் அகத்தியர் வேடம் பூண்டு கையில் கமண்டங்களோடு மாணவர்கள் ஊர்வலம்.இந்த தமிழ் செம்மொழி மத்திய   நிறுவனம் என்ன சொல்ல வருகிறது.?

 

செம்மொழி நிறுவனத்தின் வேலை என்னஎத்தனை கனவுகளோடு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் செம்மொழி தமிழ் நிறுவனத்தை உருவாக்க முயற்சி செய்தார்?.ஏன் இப்படி இந்த நிறுவனத்தை குட்டிச்சுவராக ஆக்குகிறார்கள்.தமிழ் இந்து செய்தியின் பின்னோட்ட பகுதியில் இளங்கோ என்பவர் பின்னோட்டம் இட்டுள்ளார்.


 நிதி இல்லை 

 

அந்தப் பின்னோட்டம் “ஆட்சிக்குழு உறுப்பினர்களில் ஒருவராக சமஸ்க்ரித மொழி வளர்ச்சிக்கு Nodal நிறுவனமாக செயல்படும் புதுடில்லியில் உள்ள ராஷ்ட்ரிய சமஸ்க்ரித சன்ஸ்தானின் துணைவேந்தர் இடம்பெற்றிருப்பது ஏன்? 2017-18 முதல் 2019-20 வரை,மேற்கண்ட நிறுவனத்தின் மூலமாகத்தான் ஒன்றிய அரசு,சமஸ்க்ரித வளர்ச்சிக்கு ஒதுக்கிய நிதியான ரூபாய் 640 கோடியை செலவிட்டிருக்கிறது.சமஸ்க்ரிதத்துக்கு முன்னரே,செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ்மொழிக்கு,மேற்கண்ட மூன்று ஆண்டுகளில்,ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி வெறும் 24 கோடி மட்டுமே.மற்ற செம்மொழிகளான தெலுங்கு மற்றும் கன்னட மொழி வளர்ச்சிக்கு செலவிட்ட தொகை ரூபாய் கோடி மட்டுமே.செம்மொழிகளான மலையாளம் மற்றும் ஓடியா மொழிகளின் வளர்ச்சிக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.இந்த தகவல் எல்லாம் நாடாளுமன்றத்தில் ,3-2-2020 அன்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதி செம்மொழி தமிழாய்வு மையத்திடம்தான் வழங்கப்படுகிறது.அண்மையில் ,செம்மொழி தமிழாய்வு மையத்தின் துணைத்தலைவராக ,தமிழறிஞர் அல்லாத,புராண சொற்பொழிவுகள் செய்து வரும் பெண்மணி ஒருவர் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டார்.அவர்தான் முன்பு நடந்த காசி சங்கமம் நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றினார்.விரைவில் நடக்கவிருக்கும் காசி சங்கமம் நிகழ்ச்சியில் ,புராண பாத்திரமான அகத்தியரை முன்னிலைப்படுத்துவதற்கு ,இவர்தான் ஆலோசனை கூறினார் என்று தெரிகிறது.செம்மொழி தமிழாய்வு மையத்தின் தலைவரான தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,தமிழை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்த பெண்மணியை துணைத்தலைவர் பதவியிலிருந்தும் மேற்கண்ட சமஸ்க்ரித பல்கலைக்கழக துணைவேந்தரை ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.” என்று கூறுகின்றது.

 

சமஸ்கிருதத்திற்கு 640 கோடி ரூபாய் ஒன்றிய அரசு ஒதுக்கி செலவழிக்கிறது.செம்மொழியான தமிழுக்கு வெறும் 8 கோடி ரூபாய் ஒரு ஆண்டுக்கு.அந்த நிதியும் செம்மொழி தமிழாய்வு மையத்திடம்தான் கொடுக்கப்படுகின்றது.அந்த நிதியை வைத்து அந்த நிறுவனம் இந்துத்துவாவாதிகள் நடத்தும் கல்வி நிறுவனங்களோடு சேர்ந்து அகத்தியர் புகழ் பரப்ப செலவழிக்கிறார்கள்.செம்மொழி தமிழ் வளர்ச்சிக்கு செலவழிக்க வேறு துறையில்லையா?செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் மொழி வளர்ச்சி போன்ற பொருண்மைகளில்  நிகழ்வுகள்,கருத்தரங்குகள் நடத்தாமல் அகத்தியர் பெயரில் நடத்துவது ஏன்?

 

சரி,அந்த அகத்தியர் யார்? செம்மொழி தமிழ்  நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்கும் செய்தியின் ஒரு பகுதியை  அப்படியே தருகின்றேன்.

 

அகத்தியரின் பிறப்பே மனிதப்பிறப்பில் இருந்து வேறுபட்டது.தாரகன் என்னும் அசுரன் கடுந்தவம் புரிந்ததன் மூலம்கடலுக்குள் சென்று ஒளிந்து வாழும் வரத்தினையும் ,ஒரு குடம் அளவு உள்ளோரோல்தான் தனக்கு மரணம் அமையவேண்டும் என்னும் வரத்தினையும் பிரம்மனிடம் இருந்து பெற்றுக்கொண்டான்.பிற அரக்கர்களுடன் சேர்ந்து வரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உலகத்தையே அச்சுறுத்தி வந்தான்.உலக மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தேவலோகத்திலிருந்து இந்திரன் கோபத்துடன் பூலோகத்தை வந்தடைந்தார்.இதனைக் கேள்வியுற்ற தாரகனோ கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான்.


புராணக்குப்பை

 

தாரகனைப் பின் தொடர முடியாத இந்திரன் முதலில் அக்கினி வகவானை அழைத்து ,”உன் வெப்பத்தால் இந்தக் கடலை ஆவியாக்கிவிடு “ என்று கூறினார்.ஆனால் அக்கின்பகவானோ.’கடல் நீர் இருந்தால்தான் மழை பெய்யும்.தண்ணீர் இல்லாமல் எந்த உயிரும் பூமியில் வாழ முடியாது.இந்தப் பாவத்தை நான் செய்யமாட்டேன் என்று கூறிவிட்டார்.இரண்டாவதாக இந்திரன் வாயு பகவானை அழைத்து வறண்ட காற்றினால் கடலை ஆவியாக்கும்படி கூறினார்.ஆனால் வாயுபகவானும் அக்னிதேவன் கூறிய அதே காரணமதைக் கூறித் தன்னாலும் முடியாது என்று கூறிவிட்டார்.  இதனால் கோபமடைந்த இந்திரன்,வாயு பகவானுக்கும்,அக்னிபகவானுக்கும் பூமியில் மனிதனாகப் பிறந்து துயரப்படவேண்டும் என்னும் சாபத்தினை அளித்தார்.

 

அக்கினி பகவான் மித்திரா என்ற பெயரிலும் வாயு பகவான் வர்ணன் என்ற பெயரிலும் பூமியில் மனிதனாகப் பிறந்தனர்.ஒரு நாள் குளத்தில் நீராடிக் கொண்டிருக்கும்போது மித்திரனும் வர்ணனும் ஊர்வசி என்னும் தேவலோகக் கன்னிகையைக் கண்டனர்.இப்படிப்பட்ட பேரழகியை அவர்கள் கணடதில்லை.அப்போது அவர்களிடம் இருந்து வீரியம்(விந்துவெளிப்பட்டது.மித்திரர் தன் கையில் இருந்த கும்பத்தில் வீரியத்தை வெளியிட்டார்.(விட்டார்).வர்ணன் தன் வீரியத்தை தண்ணீரில் விட்டார்.கும்பத்தில் இருந்து அவதரித்தவர்தான் அகத்தியர்.அகத்தியர் குடத்தின் அளவே இருந்தார்.குடத்தின் அளவு உள்ள அகத்தியரிடம் தேவர்கள் சென்று தாராகன் செய்து வரும் கொடுமைகளைப் பற்றிக் கூறினார்கள்.தாரகனை அழித்து தங்கள் அனைவரையும் காக்கவேண்டும் என்று தேவர்கள்  கேட்டுக்கொண்டனர்.

 

அகத்தியர் தேவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.தாரகனை அழிக்க அகத்தியர் 12 ஆண்டுகள் தண்ணீரின் மேல் தவம் செய்தார்.கடும் தவத்தினால் பல அரிய வரங்களை அகத்தியரால் பெற முடிந்தது.அகத்தியரும் இந்திரனும் தாரகனையும் அவனது அசுரக் கூட்டத்தையும் அழிக்கச்சென்றார்கள்.இதை அறிந்த தாரகன் மறுபடியும் கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான்.அகத்தியர் தன் தவ வலிமையினால் பெற்ற சக்தியின் காரணமாக கடல் நீர் அனைத்தையும் குடித்துவிட்டார்.அதன் பின்னர் இந்திரன் கடலுக்குள் சென்று தாரகனை வதம் செய்தார்.தாரகனை வதம் செய்த பிறகு அனைத்து கடல் நீரையும் கடலிலியே விட்டுவிட்டார் அகத்தியர்

நன்றிசெம்மொழி தமிழ் நிறுவனம் –இணையதளம்)


வெட்கமாக இல்லையா?


பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர்கள் 5 பக்க கட்டுரை எழுத வேண்டும்.அதற்கு முதல் பரிசு ரூ 30,000,இரண்டாவது பரிசு ரூ 20,000 மூன்றாவது பரிசு ரூ 10,000.அந்தக் கட்டுரை எழுதுவதற்கான குறிப்புகளாக செம்மொழி நிறுவனம் கொடுத்திருப்பதில் ஒரு பகுதிதான் மேலே குறிப்பிட்டிருப்பது.


இந்தக் கதை பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் மத்தியில் பரப்பப்படவேண்டிய கதையா?வெட்கமாக இல்லையாவாயு பகவான்,அக்னி பகவான் இருவரும் மனிதப்பிறவிகளாகப் பிறந்தார்களாம்.அவர்கள் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது வந்த அழகியைப் பார்த்து ஒழுக விட்டார்களாம்.குடத்தில் ஒருவர் ஒழுகவிட்டாராம்.குடத்து அளவே உள்ள அகத்தியர் பிறந்தாராம்.தண்ணீரில் ஒருவர் ஒழுகவிட்டாராம்.அதில் இருந்து பிறந்தவர் வசிஷ்டராம்.சங்க இலக்கியம்,நீதி நூல்கள் என்று பழந்தமிழ் இலக்கியங்கள் இத்தனை உள்ளதே?எதிலாவது ஒருவன் அழகியைப் பார்த்தான்,அடக்க முடியவில்லை,விந்தைக் குடத்தில் விட்டான் என்று கதை உள்ளதாஅந்தக் குடத்தில் குழந்தை பிறந்தது என்றால் குடத்திற்குள் வீரியத்தை விட்டால் எப்படிடா குழந்தை பிறக்கும் என்ற கேள்வி எழாதா?

 

அகத்தியர் தன்னுடைய தவவலிமையால் கடல் நீரை எல்லாம் குடித்து விட்டாராம்.கடல் நீர் உப்புத் தண்ணீர். ஒரு தம்ளர் உப்பு நீரைக் குடிப்பதே கடினம். இதில் பூமியின் 4-ல் 3 பங்கு இருக்கும் கடல் நீரை எல்லாம் அகத்தியர் குடித்துவிட்டாராம்.அதனால் கடல் வற்றியதாம். கடலுக்குள் ஒளிந்து இருந்த தாரகன் என்னும் அரக்கன் கட்டாந்தரையான கடலில் இருந்தானாம்.அவனை இந்திரன் வதம் செய்தானாம். அவன் இறந்தவுடன் மீண்டும் அகத்தியன் தான் குடித்திருந்த கடல் நீரை எல்லாம் உமிழ்ந்தானாம். மீண்டும் உலகில் உள்ள கடல் எல்லாம் கடல் நீரால் நிரம்பி விட்டதாம்.?அண்டப்புளுகு,ஆகாசப்புளுகு என்று சொல்வதற்கெல்லாம் மேலான புளுகாக இது இல்லையா?ந்தப் புளுகைத்தான் மாணவர்கள் மத்தியில் பரப்ப வேண்டுமா? இதுதான் செம்மொழித் தமிழ் மத்திய அரசு நிறுவனத்தின் வேலையா?


சீரழியலாமா?

 

21-ஆம்  நூற்றாண்டில் எதைச்சொன்னாலும் மக்கள் நம்பிக்கை என்னும் பெயரில் ஏற்றுக்கொள்வார்கள் என்னும் எண்ணமாஎன்ன கொடுமை இது?   மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடிய,’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ‘ என்று எல்லா உயிரையும் போற்றிய தமிழ் இலக்கியங்களைப் பற்றிப் பேசுவதற்காக அமைக்கப்பட்ட இந்த செம்மொழித் தமிழ் நிறுவனம் இப்படிச் சீரழியலாமா?.தமிழர்கள் நாம் இப்படி சீரழிக்கவிடலாமா?

 

இதை உண்மை என்று சொல்லி பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் கட்டுரை  எழுதவேண்டும்.இந்த அகத்தியரைப் பற்றி நடத்தப்படும் கருத்தரங்கம் என்ற பெயரில் நடக்கும் கூத்துகளில் பங்கு பெறும் தமிழ் பேராசிரியர்களே,உங்களுக்கு எல்லாம் மனச்சாட்சி இல்லையா?எதைப் பற்றி வேண்டுமானாலும்,எவர் அழைத்தாலும் பேசப்போய் விடுவீர்களா?


ஆசிரியரின் கண்டனம்

 

செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவனமாஅல்லது புராணக் கதைகளை வரலாறு என்று சொல்லி மாணவ மாணவிகள் மத்தியில் பரப்பும் பஜனை மடமாஎவருக்கு கோபம் வந்தது?திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்தானே இதனைக் கண்டித்துப் பேசினார்.அறிக்கை விடுத்தார்.

அகத்தியர் குறித்த புராணச் செய்திகளைஆராய்ச்சி செய்கின்றோம் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ். கருத்துகளைக் காவிக் கும்பல் கல்விப்புலங்களில் விதைத்து வருவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். கடந்த ஒரு வாரமாக இந்திய அளவில் உள்ள பார்ப்பனர்களும்பார்ப்பன ஆதரவாளர்களும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ச்சங்கங்கள்கல்வி நிறுவனங்களைத் தொடர்புகொண்டுஅகத்தியரைப் பற்றிய கருத்தரங்குகள் பேச்சுப்போட்டிகட்டுரைப் போட்டிகள்சொற்பொழிவுகளை நடத்துமாறும் அதற்கு ஒன்றிய அரசு நிறுவனங்களின் வழியாக செலவுக்குரிய தொகையை அளிக்கின்றோம் என்றும் கூறிபொம்மை (டம்மி) துணைவேந்தர்களைத் துணைகொண்டுஅகத்தியர் குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.”  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்  (9.2.2025) விடுதலையில் அறிக்கை கொடுத்தார்.

 

செம்மொழி தமிழ் நிறுவனத்திற்கு எதிராக  நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டிய நேரம் இது.உண்மையை உறக்கச்சொல்லவேண்டிய நேரம் இது.தெருக்கள் தோறும் கல்வி நிறுவன்ங்கள் தோறும் இந்தச்செய்தியைக் கொண்டு போக வேண்டிய நேரம் இது.ஒன்றிணைவோம்.போராடுவோம்.இந்த அகத்தியர் என்னும் பொய்ப்பிம்பத்தைத் தகர்ப்போம்.