Saturday 2 February 2013

ஏய்த்துப் பிழைக்கும் தொழிலே - சரிதானா?(1)

  ஏய்த்துப் பிழைக்கும் தொழிலே - சரிதானா?(1)
      (முனைவர் வா. நேரு தலைவர், மாநிலப் பகுத்தறிவாளர் கழகம்)

ஒரு விபத்து, உடன் வேலை பார்க்கும் ஒருவரின் பையன் இரு சக்கர வாகனத்தில் சென்று விபத்தில் அடிபட்டு, மருத்துவமனையில் இருந் தான் . நானும் என் துணைவியார் சொர்ணமும் பார்க்கச் சென்றிருந் தோம். மருத்துவமனையில் அடிபட்ட பையனோடு அவனது தாயார் இருந்தார். தைரியம் சொன்னோம், நமது கொள்கை பற்றி அறியாத அவர், என் மகன் மிகுந்த ஆபத்தில் இருக்கிறான், கடவுள்தான் அவனைக் காப்பாற்ற வேண்டும், தொடர்ந்து கடவுளைப் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கின்றேன், கடவுள் என் மகனை எப்படியும் காப்பாற்றி விடுவான் என்றார். உடன் வந்திருந்த சிலர் நாங்களும் எங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறோம், சின்ன வயது, கடவுள் காப்பாற்றி விடுவான் என்றனர். நானும் என் துணைவியாரும் மனிதம் கருதி அந்த இடத்தில் ஒன்றும் விவாதம் செய்ய வில்லை.

பிரார்த்தனை செய்தால் கடவுள் காப்பாற்றி விடுவான் என்றால் மருத் துவமனைக்கே கொண்டு வரவேண்டிய அவசியமில்லையே, கசிந்துருகி கண்ணீர் மல்க பாட்டுப்பாடி பிரார்த் தனை செய்தே காப்பாற்றி விடலாமே என்று அந்த இடத்தில் கேட்கத் தோன் றவில்லை. மிகப்பெரிய இக்கட்டில் இருக்கும் சகோதரி தன்னுடைய ஆற்றாமையைத் தணிப்பதற்காக ஏதோ கடவுள் என்று கதைக்கிறாள் என்று வந்து விட்டோம். மருத்துவமனையில் இருந்த அந்தப் பையன் இறந்து விட்டான். சென்று வந்தோம். சில மாதங்களுக்குப் பின் அந்த பையனின் தாயாரைப் பார்க்க நேர்ந்தது.
பக்தி மார்க்கத்தின் மொத்த உருவமாக இருந்தார். பிரார்த்தனை செய்து, அந்தக் கடவுள் ஒன்றும் செய்ய வில்லையே, (ஏனெனில் கடவுள் இருப் பதாக நம்புகிறவர்கள் அவர்கள்)- கடவுள் மீது மொத்தக் கோபம் வந்து பக்தி மார்க்கத்தை கழற்றி வீசி எறிந்திருப்பார் என நினைத்ததால் இப்படி இருக்கிறாரே எனப் பேச்சுக் கொடுத்தேன். கடவுள் என்னை ரொம்பச்சோதிக்கிறான் சார், அதனாலே விடாமல் அவனைத் துதித்து, சோதனையக் குறைக்க வேண்டுகிறேன் என்றார். எனக்கு அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை- அவரது அறியாமையை நினைத்து.

நல்லது நடந்தால் பிரார்த் தனைக்கு பலன் கிடைத்து விட்டது, கெட்டது நடந்தால் கடவுள் சோதிக் கிறான், அட எப்படி என்றாலும் கடவுள் என்னும் கருத்துக்கு பங்கம் வராமல் நமது மக்கள் மூளையில் ஏற்றி வைத்திருக் கிறார்களே என்னும் எண்ணம் ஓடியது.         அலுவலகத்தில் தனிப்பட்ட முறையில் உடல் பிரச்சனை, குடும்பப்பிரச்சனை என்று பேசமுடியவில்லை என்றார் நண்பர் ஒருவர். ஏதாவது பிரச்சனை என்று சொன்னாலே இந்த ..... பிரிவு ஆட்கள் வந்து விடுகிறார்கள் சார். உங்கள் பிரச்சனை உடனே தீர்ந்து விடும், பிரார்த்தனைப் பெருவிழா அங்கு நடக்கிறது, இங்கு நடக்கிறது வாருங்கள், குடும்பத்தோடு வாருங்கள் என்று கூப்பிடுகிறார்கள்,நாம் வரவில்லை என்று சொன்னாலும், மறு நாள் வந்து எங்கள் கூட்டத்தில் உங்கள் பிரச்சனையைக் குறிப்பிட்டு, பிரார்த்தனை செய்தோம், எங்கள் பிரார்த்தனை மூலமாக உங்கள் பிரச்சனை முடிந்து விடும் என்று சொல்லி, ஒருவர் இருவர் அறிந்திருந்த பிரச்சனையை அலுவலகம் முழுக்க அறிந்த பிரச்சனையாக ஆக்கி விடு கிறார்கள் என்றார். அவர்களுக்கு எல்லாம் பிரேயர்தான். பக்கத்தில் இருந்த நண்பர் ஒருவர், நான் ஒரு நாள் இவர்களின் பிரேயர் கூட்டத்திற்குப் போயிருந்தேன், எதை, எதையோ உளறி விட்டு அந்நிய மொழியில் பேசினேன் என்று சொல்கிறார்கள் .என்றார்.

 சார், அலுவலகத்தில் இருந்த ஒரு நோட்டைப் பத்து நாளாக் காணாம். எங்கே, எங்கே என்று தேடினோம் , காணாம், திடீரென்று சிலர் , நாங்கள் சேர்ந்து பிரார்த்தனை செய்தோம், நோட்டைக் கண்டுபிடித்தோம் என்று சொல்கிறார்கள், என்றார் நண்பர்.  என்னத்ததான் இவர்கள் எம்.எஸ்.ஸி, எம்,இ, பி.இ. படித்தார்களோ தெரிய வில்லை என்றார், செவிடர்கள் கேட்கிறார்கள், குருடர்கள் பார்க் கிறார்கள், நடக்க முடியாதவர்கள் நடக்கிறார்கள் என்று கூசாமல் பொய்யைக் கதைக்கிறார்கள். ஆனால் ஒரு பெருங்கூட்டம் அவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறதே, தான் படித்த அறிவியல் உண்மை களோடு ஒப்பிட்டுப் பார்க்க மறுக்  கிறார்களே, மெத்தப்படித்தவர்கள் கூட என என் மனம் எண்ணியது.

வீடு வாங்கணுமா? பிரார்த்தனை பண்ணுங்கள், காடு வாங்கணுமா? பிரார்த்தனை பண்ணுங்கள், உடல் நலம் பெற வேண்டுமா? பிரார்த்தனை பண்ணுங்கள் என்னும் சத்தம் நம்மைச் சுற்றி கேட்டுக்கொண்டேயிருக்கிறது. "திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு- திருவத்திபுரத்தில் உள்ள ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில், 13.3.12 அன்று சக்தி விகடனும், தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தி வரும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடந்தது. சக்தி விகடனின் 82 ஆவது திருவிளக்கு பூஜையாம் இது! இந்தப் பக்கம் சென் னையில் இருந்தும் அந்தப் பக்கம் திருநெல்வேலியில் இருந்தும் என... பல ஊர்களில் இருந்தும் வாசகியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ''சக்தி விகடன் நடத்தும் விளக்கு பூஜையில் நான் கலந்து கொள்வது, இது 6 ஆவது முறை. வீடு வாங் கணுங்கற பிரார்த்தனை முதல் எல்லாமே நிறைவேறிருக்கு'' என்றார் சென்னை வாசகி லீலாவதி. "இது பத்திரிக்கையில் வந்த செய்தி. சக்தி விகடனுக்கு பத்திரிகை விற்கும், எண்ணெய் நிறுவனத்திற்கு எண் ணெய் விற்கும்.......(தொடரும்) 

 நன்றி - விடுதலை ( 30-1-2013)



No comments: