Thursday 28 May 2015

நிகழ்வும் நினைப்பும்(38) : மதுரையில் நடந்த நூல்கள் வெளியீட்டு விழா

நிகழ்வும் நினைப்பும்(38) : மதுரையில் நடந்த நூல்கள் வெளியீட்டு விழா 







தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அய்யாவின் அடிச்சுவட்டில் மற்றும் வாழ்வியல் சிந்தனைகள் பாகம் - 5 அறிமுக விழா


மதுரை, மே 28_ 14.05.2015 வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பாக  தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்களின் அய்யாவின் அடிச் சுவட்டில் மற்றும் வாழ்வியல் சிந்தனைகள் பாகம் - 5 அறிமுக விழா பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள மீனாட்சி மகால் அரங்கத்தில்  நடைபெற்றது. நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் பகுத்தறி வாளர் கழகத்தின் மாவட்டச்செயலாளர் பெரி.காளி யப்பன் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டத்தலைவர் சுப.முருகானந்தம் தலைமையேற்று உரையாற்றினார். திராவிடர் கழக மாநில அமைப்புச்செயலாளர் வே.செல்வம், மதுரை மண்டல திராவிடர் கழகச் செயலாளர் மா.பவுன்ராசா, மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகச்செயலாளர் மீ.அழகர்சாமி ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.

நூல்கள் வெளியீடு

தொடர்ந்து நூல்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெளியீட்டுச்செயலாளர் ஆ.வந்தியத்தேவன் வெளியிட திராவிடர் கழகத்தின் தலைமைச்செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராசாவும் மற்றவர்களும்  பெற்றுக்கொண்டனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 'வாழ்வியல் சிந்தனைகள் -பாகம் 5' நூலை அறிமுகப் படுத்தியும் அந்த நூலின் சிறப்புக்கள் பற்றியும், நூலின் ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்களின் சிறப்புக்கள் பற்றியும் எடுத்துக்கூறி பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு உரையாற்றினார்.

தொடர்ந்து கூட்டத்தின் சிறப்பு பேச்சாளர் மறு மலர்ச்சி தி.மு.க.வின் வெளியீட்டுச்செயலாளர் ஆ.வந் தியத்தேவன் அவர்கள் 'அய்யாவின் அடிச்சுவட்டில்' நூலை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். அவர் தனது உரையில்: "இன்றைக்கு இரண்டு நூல்கள் இங்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. ஒன்று வாழ்வியல் சிந்தனைகள் பாகம்-5. அதனை நேரு அவர்கள் இங்கு சிறப்பாக அறிமுகப்படுத்தினார். இன்னொரு புத்தகம் 'அய்யா வின் அடிச்சுவட்டில் பாகம் -1'. அய்யாவின் அடிச் சுவட்டில் என்பது அய்யா ஆசிரியர் அவர்களின் வரலாறு. அவரது வரலாறு மட்டுமல்ல திராவிடர் இயக்கத்தின் வரலாறு. நெருப்பாற்றில் நீந்திய வரலாறு

திராவிடர் இயக்கத்தின் வரலாறு என்பது சாதாரணமானதல்ல. நெருப்பாற்றில் நீந்திய வரலாறு. எதிர்ப்புக்களை எதிர்கொண்ட வரலாறு.  நாம் பகுத் தறிவு பற்றி, கடவுள் மறுப்பு பற்றி, சாதிக் கொடுமை பற்றி பரப்புரை செய்துகொண்டிந்தபொழுது, இவை யெல்லாம் இப்போது தேவையில்லை, கூலி உயர்வு தான், பொருளாதார சமத்துவம்தான் தேவை அதற் காகத்தான் நாங்கள் பரப்புரை செய்வோம் என்று சொன்ன பொதுவுடமைத்தோழர்கள் இப்போது நம்மோடு கரம் கோர்த்து வருகின்றார்கள்.  -

தாலி அடிமைச்சின்னம் என்பதனை எடுத்துக் காட்டும் விதத்தில் திராவிடர் கழகம் நடத்திய தாலி அகற்றும் நிகழ்விற்கு பொதுவுடமைக்கட்சிகள்  இணைந்து வந்தனர்.  திருமாவளவன் அவர்களின் தலைமையில் உள்ள விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு, சுப.வீ அவர்களின் அமைப்பு எல்லாம்  நம்மோடு சேர்ந்து கை கொடுத்தனர். ம.தி.மு.க  பொதுச் செயலா ளர் வை.கோ. அவர்கள் கண்டன அறிக்கை கொடுத் தார். ம.தி.மு.க.  இயக்கத்தின் அதிகாரபூர்வ 'சங்கொலி' ஏட்டில் இது பெரியார் நாடு என்பதனை அழுத்தம் திருத்துமாக தலையங்கம் எழுதினோம். விடுதலை அதனை இரண்டாம் பக்கத்தில் வெளி யிட்டு மகிழ்ந்தது. ஒரு காலத்தில் தலை நகர் டில்லி யில் பெரியார் மய்யம் முந்தைய பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்டது. மறுமலர்ச்சி தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வை.கோ. அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியரோடு  இணைந்தார். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களையும் அழைத்துக் கொண்டு  அன்றைய அமைச்சர்  அத்வானியை, பிரதமர் வாஜ் பாயை  சந்தித்தனர். அண்ணன் வை.கோ. சொன்னார் "தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் கறுப்புச்சட்டை அணிந்திருக்கின்றார். நான் கறுப்புத்துண்டு அணிந் திருக்கின்றேன். கறுப்பின் சதவீதத்தில் வேண்டு மானால் வேறுபாடு இருக்கலாம். ஆனால் இருவரும் ஒரே எண்ணம் உடையவர்கள். எங்கள் தமிழகத்தில் நேருவின் பெயரால், காந்தியின் பெயரால், வட நாட்டுத் தலைவர்கள் பெயரால் பல இடங்கள் இருக்கின்றன. தலை நகர் டெல்லியில் எங்களுக்கு, தந்தை பெரியாருக்கு உள்ள ஒரே ஒரு இடம் பெரியார் மய்யம். அதுவும் எங்கள் சொந்த நிலத்தில், இடத்தில் உள்ள இடம். -அதை இடிப்பது சரியா?" எனக்கேள்வி கேட்டார். அது மட்டுமல்ல "நாங்கள்  தனி நாடு கேட்ட இயக்கம் மீண்டும் எங்களை தனி நாடு கேட்க வைத்து விடா தீர்கள்" என்று எச்சரித்தார். இரண்டு இடத்தில் டில்லியில் பெரியார் மய்யம்
அதன் விளைவாக இன்றைக்கு இரண்டு இடத்தில் டில்லியில் பெரியார் மய்யம் உள்ளது.

அன்றைக்கு நாம் கட்டிய கட்டடத்திற்கு ஆபத்து வந்தது. சரி செய்தோம். ஆனால் நமது  உழைப்பை, உதிரத்தை சிந்தி வளர்த்த நமது கொள்கைகளுக்கு இன்றைக்கு ஆபத்து வந்திருக்கிறது. அண்ணல்  அம்பேத்கருக்கு விழா நாங்கள் எடுக்கிறோம் என்று பி.ஜே.பி.யும் ஆர்.எஸ்.எஸ்.சும் சொல்கிறார்கள். இன்றைக்கு பெரியார் என்பவர் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழு வதும் வழிகாட்டும் தலைவராக, கொண்டாடப்படும் தலைவராக உள்ளார். அவரை இணையதளத்திலே கொச்சைப்படுத்துகிறார்கள். பெரியார்  எதிர்ப்புக்களை சந்திக்காத தலைவர் இல்லை. ஆனால் இன்றைக்கு அவரை கொச்சைப்படுத்துகிறார்கள். தாலி அகற்றும் விழா இன்றுதான் நடத்துகி றோமோ 100 ஆண்டுகள் கண்ட திராவிட இயக்கம். நமது இயக்கம் தோன்றிய காலம் தொட்டு நடக்கக் கூடிய நிகழ்வு தாலி அகற்றும் நிகழ்வு. நமது  இடத் தில் நமது பெரியார் திடலில்,நமது தலைவர் தமிழர் தலைவர் அவர்கள் நடத்திய நிகழ்வுக்கு எதிர்ப்பு என்று அரசு இயந்திரங்களின் துணையோடு வரு கின்றார்கள். எதிரிகள் துணிச்சலோடு வருகின்றார்கள். நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய நேரம். ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் இது.

கோபிசெட்டிப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தீர்மானம் போட்டு, நாதுராம் கோட்சேக்கு சிலை வைக்கப்போகிறோம், நகர் மன்றம் அனுமதி கொடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கின்றார்கள். காந்தியைச்சுட்டுக்கொன்ற கோட்ஸே சாம்பல் இன்னும் கரைக்கப்படவில்லை. பாதுகாத்து வைத்திருக் கின்றார்கள். அகண்ட பாரதம் கண்டபின்புதான்  சாம்பலை கரைப்போம்  என கோட்ஸே தூக்கிலிடப் பட்ட நாளில்  'சங்கல்பம்' ஏற்போம், உறுதி ஏற்போம் என நிகழ்ச்சி நடத்துகின்றார்கள். காந்தியை சுட்டுக் கொன்றது சரிதான் என்று நியாயப்படுத்துகிறார்கள். பெரியார் பிறந்த மண்ணில் எந்த வழியிலாவது இந்துத்துவாவை புகுத்த துடிக்கின்றார்கள்.  அவர் களுக்கு மாற்றாக களத்தில், கருத்தில் சந்திக்கக்கூடிய இயக்கமாக திராவிடர் கழகம் இருக்கின்றது. அம்பேத்கரைத் தலைவராக ஏற்றுக்கொண்ட இயக்கங்கள் திராவிடர் கழகத்தோடு நெருக்கமாக இருக்கின்றார்கள். தமிழ்ப்புலிகள்  மாநாட்டைப் பற்றி, அதில் ஆசிரியரின் உரை ஒலிபரப்பியதைப் பற்றி, சு. அறிவுக்கரசு அவர்கள் உரையாற்றியதைப் பற்றி நேரு குறிப்பிட்டார். இன்னும் கேட்டால் திராவிடர் கழகம் நடத்தும் வட்டார மாநாடுகளில் தி.மு,க, ம.தி.மு.க, விடுதலைச்சிறுத்தைகள், பொதுவுடமைக் கட்சிகள் என அனைத்து இயக்கங்களும் பி.ஜே.பி. அ.தி.மு.க. தவிர அனைத்து  பார்ப்பனரல்லாத அமைப்புக்களும் பங்கேற்கிறார்கள். தமிழர் தலைவர் ஒருங்கிணைக் கின்றார்.

நாம் கேள்வி கேட்போம், கேள்வி கேட்க வைப் போம் பழைய திராவிட இயக்கக் காட்சியை எல்லாம் எடுத்துச்சொன்னால் மற்றவர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள். அதற்கான ஆவணத்தை அய்யா ஆசிரியர் அவர்கள் 'அய்யாவின் அடிச்சுவட்டில்' எனும்  அருமையான புத்தகமாக கொடுத்துள்ளார்கள். அதனைப் பரப்புவோம். படிப்போம். பணி இருக்கிறது நிறைய. அதற்கான பெரியார் அணியை, தமிழ் இன ஒற்றுமை அணியை  வளர்த்தெடுப்போம் என்று சொல்லி முடிக்கின்றேன்" என்று சிறப்பாக உரையாற்றினார்.

கலந்துகொண்டோர்

முடிவில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட துணைசெயலாளர் பா.சடகோபன் நன்றி கூறினார். கூட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.திருப்பதி, ந.முருகேசன், கனி, எல்.அய்.சி.செல்லக் கிருட்டிணன், ஆட்டோ செல்வம், ம.தி.மு.க. தொழிற் சங்கத் தலைவர் மகபூப்ஜான், அழகுபாண்டி, வழக்கறிஞர் ந.கணேசன், போட்டோ இராதா, மோதிலால், புதூர் பாக்கியம், எரிமலை, பேக்கரி கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நன்றி : விடுதலை - 28.05.2015



No comments: