Monday 27 March 2017

முதல்வர் டாக்டர் இரா. கனகசபாபதி அவர்களைப் பற்றிய புத்தக வெளியீடு




ஆண்டுகள் பல ஆனாலும் சில நினைவுகள் மறப்பதில்லை. ஆயிரமாயிரம் மனிதர்களைப் பார்த்தாலும் , அவரைப் போல உண்டா என நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் மனிதர்கள் சிலர்தான் வாழ்க்கையில் அமைகின்றார்கள். அப்படி ஒரு நிகழ்வாக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் எங்கள் முன்னாள் முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களைப் பற்றிய புத்தக வெளியீடு நேற்று(26.03.2017) மதுரை காந்தி மியூசியத்தில்  நடைபெற்றது.


பசுமை நிறைந்த நினைவுகளாய், வாழ்வின் உயரத்தில் இருக்கும் பலர், இந்த உயர்வுக்கு காரணம் இந்தப்புத்தகத்தில் வாழ்க்கை வரலாறாக இருக்கும் இவர்தான் என அவரைப்பற்றி நினைவு கூர்ந்தது நிகழ்ந்தது.நிகழ்வின் தொடக்கத்தில் திரு தேவதாஸ் காந்தி அவர்களும் , அகில இந்திய வானொலி மதுரை மீனாட்சி அவர்களும் சர்வசமயப்பாடல்களைப் பாடினர்.

வரவேற்புரையாற்றிய பேரா.டாக்டர் சு. ஆண்டியப்பன் தனது வாழ்க்கை நினைவுகளோடு ஆரம்பித்து , தான் வாழ்வில் இந்த நிலைக்கு வந்ததற்குக் காரணம் முதல்வர் கனகசபாபதி அவர்கள்தான் ,அவரின் வழிகாட்டுதல்தான் என்பதனைக் குறிப்பிட்டு வந்திருக்கும் சிறப்பு அழைப்பாளர்களின் சிறப்புக்களை தனித்தனியாகக் குறிப்பிட்டு  அனைவரையும் வரவேற்றார். 

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் 'தனித்துவ மிக்க காந்திய முதல்வர் டாக்டர் இரா. கனகசபாபதி ' என்னும் இந்த நூலினை எழுதியுள்ளார். அறிமுக உரையாற்றிய முன்னாள் முதல்வர், டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் ,தானுமொரு முன்னாள் முதல்வர் என்றாலும் , திருச்செந்தூரி கல்லூரி மாணவர்கள் முதல்வர் என்று சொன்னால் அது திரு.இரா.கனகசபாபதி அவர்களைத்தான் குறிக்கும் என்றார். நான் 150 நூல்கள் எழுதியிருக்கிறேன் ஆனால் எனக்கு மிகப்பெரிய நிறைவைத்தருவது 151-வது நூலான இந்த நூல்தான் என்றார். டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களைப்பற்றிய பல்வேறு நினைவுகளை மிக விரிவாகப்  பகிர்ந்துகொண்டார்.

'மிக நீண்டகாலமாக திரு.கனகசபாபதி அவர்களோடு உடனிருந்தவர். உடன் வேலை பார்த்தவர். அவரின் ஒவ்வொரு செயலையும் அருகே இருந்து பார்த்தவர். எனவே இந்த நூலினை  வேறு யார் எழுதியிருந்தாலும் இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. மா.பா. குருசாமி அவர்கள் மிகச்சிறந்த எழுத்தாளர் ' எனக்குறிப்பிட்டு புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைமை ஏற்ற  தமிழ் நாடு சர்வோதய மண்டல் தலைவர் திரு.க.மு. நடராசன் அவர்கள் உரையாற்றினார்.நூலினை வெளியிட்ட சேவாப்பூர் இன்ப சேவா சங்கத்தின் தலைவர்  ,திரு.மா.பாதமுத்து அவர்கள்  தனக்கு திரு கனகசபாபதி அவர்களோடும் திரு. மா.பா.குருசாமி அவர்களோடும் இருக்கும் தொடர்பையும் எதார்த்தமாகவும் , எளிமையாகவும் அரங்கில் பகிர்ந்துகொண்டார்,    
                                   
\

புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட சிவகாசி தொழிலதிபர் திரு தனசேகரன் அவர்கள் , விருது நகரில்  டாக்டர் கனகசபாபதி அவர்களிடம் பி.யூ.சி. படித்தது, பின்பு உடன் வேலை பார்த்தது ,தன்னுடைய உயர்வுக்கு எப்படி எல்லாம் திரு.கனகசபாபதி அவர்கள் உதவியாக இருந்தார் என்பதை மிக நெகிழ்வாக குறிப்பிட்டார். தன்னுடைய மகனுக்கு கனக என சாரின் பெயரை இணைத்து வைத்திருப்பதைக் குறிப்பிட்டார்.

மதுரை ஸ்பார்க் செண்டர் பார் ஐ.ஏ.எஸ். ஸ்டிஸ் நிறுவனத்தின் செயலாளராக இருந்த , மதுரையின் தொழிலதிபர் திரு.டி.கல்யாணசுந்தரம் தான் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்த கதையையும் பின்னர் தனக்கு முன்னோடியாக பேராசிரியர் பதவியை வேண்டாம் என உதறித்தள்ளி தொழிலதிபரான திரு தனசேகரன் அவர்களின் ஆலோசனையின் படியே தான் தனியாகத் தொழில் தொடங்கியதையும் திரு கனகசபாபதி சாரிடம் எப்போதும் ஒரு மரியாதை கலந்த பயம் இருந்ததையும், தனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய தன்னம்பிக்கையை, சுய நம்பிக்கையை ஏற்படுத்தியவர் திரு.கனகசபாபதி அவர்கள் என்பதையும்  குறிப்பிட்டுச்சொன்னார்.

 மதுரை அமுதம் மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் திரு ஜெயவீரபாண்டியன் அவர்கள் ஐ.ஏ.எஸ் -ஆக இருக்கும் தனது சகோதரரின் உயர்வுக்கும், அமுதம் பள்ளியின் உயர்வுக்கும் திரு.கனகசபாபதி அவர்கள் எப்படி எல்லாம் வழிகாட்டினார்கள் என்பதனை ஒரு அறிக்கையாகவே வாசித்து அளித்தார்கள். 2003 மார்ச் 8 எப்படி ஒரு கொடுமையான தினமாக அமைந்தது என்பதனை மிக்க துயரத்தோடு பகிர்ந்துகொண்டார்


.
தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் வெங்கட்ராமன் அவர்கள், தனது டாக்டரேட் படிப்புக்கும், தனக்கு பல்கலைக்கழகத்தில் வேலை கிடைப்பதற்கும் திரு.கனகசபாபதி அவர்களின் வழிகாட்டுதலே காரணம் என்பதையும்,திருகனகசபாபதி அவர்கள் மைனஸை பிளசாக மாற்றும் வல்லமை கொண்டவர் என்பதையும்  தனக்கே உரித்தான நகைச்சுவையோடு அவையில் எடுத்துவைத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் கி.ஆழ்வார் அவர்கள், 1967-ல் முதன்முதலாக விருதுநகரில் முதல்வர் அவர்களைச்சந்தித்ததையும்,அவர் ஒரு இன்ஸ்டியூசன் பில்டராக இருந்தார் என்பதையும்  ஆன்மிகவாதியாக இருந்த திரு.கனகசபாபதி அவர்கள் பக்கத்தில் வைத்திருந்தது டாக்டர் அப்துல்ரசாக் அவர்களையும் நாத்திகனான என்னையும்தான் எனக்குறிப்பிட்டார். மாணவர்களுக்கு சமூக நீதி அடிப்படையிலும் மனித நேய அடிப்படையிலும் உதவ வேண்டும் என்பதே அவரின் நோக்கம். அவரின் நோக்கத்திற்கு முழுமையாக ஆதித்தனார் கல்லூரியின் நிர்வாகமும் உதவி செய்தது என்பதனையும் குறிப்பிட்டார். தந்தை பெரியார் அவர்கள் மறையும்போது ,உங்களை இன்னும் இந்த இழிவு நிலையில் விட்டுவிட்டுப் போகின்றேனே என்பதே அவரின் கவலையாக இருந்தது. அதனைப்போல டாக்டர் கனகசபாபதி அவர்களின் நோக்கம் முழுவதும் மாணவர்களின் உயர்வு என்பதுமட்டுமே இருந்தது. டாக்டர் கனகசபாபதி அவர்கள் எழுதிய ஆங்கில நூலான 'How to develop a college in backward Area' என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறிப்பிட்டுப்பேசினார்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைப்பேராசிரியர், ஸ்பார்க் நிறுவனத்தின் தமிழ் விரிவுரையாளராக இருந்த பேரா.ம.இராமச்சந்திரன் அவர்கள் தனக்கு உறவினர் டாக்டர் கனகசபாபதி என்பதையும், குலையன் கரிசல் ஊரைப்பற்றியும் ,அவரின் தனித்தன்மைபற்றியும் குறிப்பிட்டார்.திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் வளர்ச்சியையும் ,திரு.கனகசபாபதி அவர்களின் வாழ்க்கையையும் பிரித்துப்பார்க்கமுடியாது என்றார்.

 பாண்டிச்சேரி சிவில்சர்வீஸ் திரு.சுந்தரேசன் ஐ.ஏ.எஸ். அவர்கள் , தான் பதவியில் இருக்கும்போது யாராவது திட்டினார்கள் என்றால் அது அந்தப்பதவியைத்தான், தன்னை அல்ல என்பதனை எனக்கு உணர்த்தியவர் திரு. கனகசபாபதி என்பதனைக் குறிப்பிட்டார்.

 தொடர்ந்து ஹைதராபாத்திலிருந்து இந்த நூல் வெளியீட்டிற்க்காக வந்திருந்த திரு ஆறுமுகப்பாண்டியன் அவர்கள்,தான் SBI-ல் cGM ஆக இருப்பதையும் ,தான் படிக்க வந்த காலத்தில் எவ்வளவு வறுமையான சூழலில் வந்தேன் என்பதையும் , முதல்வர் மூலமாக கிடைத்த உதவிகளையும் டெலிபோனில் வேலை கிடைத்தது என்று சொன்னபோது , நீ பெரிய பதவிக்கு போவேன் என்று நினைத்தால் கிளார்க் வேலைக்குப்போகிறேன் என்று சொல்கிறாயா என்று சொன்னதையும் , அவரின் உந்துதலாலேயே போட்டித்தேர்வுகள் எழுதி, வெற்றி பெற்று மிகப்பெரிய பொறுப்பில்தான் இருப்பதையும், கல்லூரியில் நான் எந்தப்பணமும் கட்டவில்லை என்பது மட்டுமல்ல கல்லூரியிலிருந்து முடிந்து செல்லும்போது 50 ரூயாய் மீதத்தோடு போனேன் என நினைவுகூர்ந்து சொன்னவிதம், இன்றுவரை தான் நேர்மையாக, மரியாதையாக இருப்பதற்குக் காரணம் டாக்டர் கனகசபாபதி அவர்களே எனச்சொன்னபோது அரங்கமே வியந்து பார்த்தது.


தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர், டாக்டர் கனகசபாபதி அவர்களின் உறவினர், டாக்டர் கனகசபாபதி அவர்கள் மதுரையில் இருந்தபொழுது அவரின் உடல் நிலையைக் கவனித்துக்கொண்ட மருத்துவர் திரு.டாக்டர் பி.ஜெகதீசபாண்டியன் அவர்கள் , திரு.கனகசபாபதி அவர்களுக்கு நான் மாமா முறை. ஆனால் வயதில் அவரைவிட இளையவன். தனது கிராமமான குலையங்கரிசலுக்கே உரித்தான உருவத்தோற்றம் டாக்டர் கனகசபாபதிக்கும் தனக்கும் இருப்பதை ஒப்பிட்டுக்கூறினார். குட்டி மாமா எனத்தன்னை அழைப்பார் என்பதையும் தான் மருத்துவராக வழிகாட்டியதையும், அவரின் உடல் நிலை எப்படி திடிரென மோசமானது என்பதைப் பற்றியும் குறிப்பிட்டு, திரு.கனகசபாபதி அவர்கள் மருத்துவமனையில் இருந்தபொழுது பழைய மாணவர்கள் அடிக்கடி வந்ததையும் கவனித்ததையும் குறிப்பாக இன்றைக்கு சென்னை வருமானவரித்துறை ஆணையாளராக இருக்கும் திரு.மகாலிங்கம் IRS அவர்கள் தினந்தோறும் வந்ததையும் குறிப்பிட்டு இப்படி ஒரு பிணைப்பை ஆசிரியரிடம் மாணவர்கள் கொண்டிருந்ததைக் கண்டதாகவும் குறிப்பிட்டார்.

 மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இரண்டு திருக்குறளைக்குறிப்பிட்டு, அது எப்படி தனது வாழ்க்கையில் திரு.கனகசபாபதி அவர்கள் மூலமாக விளக்கவுரை கிடைத்தது என்பதைக் குறிப்பிட்டார்.

 தியாகராசர் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் ஆர். raaகோவிந்தசாமி அவர்கள் திரு.கனகசபாபதி அவர்கள் பயின்ற கல்லூரியில் தானும் திரு வேத சிரோன்மணியிடம் கல்வி கற்றதையும் , அவரைப் பற்றித் திரு.மா.பா.குருசாமி அவர்கள் இந்தப்புத்தகத்தில் அவரைப் பற்றிக்குறிப்பிட்டிருப்பதைக் குறிப்பிட்டு திரு கனகசபாபதி அவர்கள் Physically fit, Mentally Alert, Morally correct எனக்குறிப்பிட்டு  உரையாற்றினார். பால்வண்ணம் அவர்கள் திரு.கனகசபாபதி அவர்களைப் பற்றி ஒரு பாடல் பாடினார். முடிவில் பழைய மாணவர் முனைவர் வா,நேரு  , டாக்டர் கனகசபாபதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவோம், அதற்கு ஆங்கிலப்பேராசிரியர்  சாமுவேல் லாரன்ஸ் போன்றவர்களின் உதவியை நாடுவோம் என்றும் கூறி அனைவருக்கும் நன்றி கூறி முடிக்க புத்தக் வெளியீட்டு விழா முடிவுற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை காந்திய இலக்கியச்சங்க செயலாளர் பா.அன்புசிவன்,நந்தா, கல்வி அலுவலர் நடராசன், நூலகர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.




நிகழ்வில் பேரா.சாமுவேல் லாரன்ஸ்( அமெரிக்கன் கல்லூரி), பேரா. இ.கி.இராமசாமி (யாதவர் கல்லூரி), பேராசிரியர் சீனிவாசன் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்),பேரா.கதிரேசன், பேரா.சந்திரசேகரன், பேரா.கணேசன், பேரா.மச்சக்காளை, பேரா.ஜெயப்பிரகாசம்,பேரா.டாக்டர் கமல்ராசு,மதுரை ஸ்பார்க் கா.பா.மாரிக்குமார், அவரிடம் பயிலும் மாணவ,மாணவிகள், டாக்டர் கனகசபாபதியின் மாணவர்கள் பேரா.டாக்டர்.இரா.சீனிவாசன்,தே.கல்லுப்பட்டி பாலகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், வேலுச்சாமி, பதஞ்சலி சில்க்ஸ் உரிமையாளர் செல்வம், திரு. லட்சுமணன்,கண்ணன், பாலதண்டாயுதம்,பி.எஸ்.என்.எல். ராஜ்குமார்,மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியைச்சார்ந்த டாக்டர் வனம், அவருடைய மாணவர்கள் கலந்துகொண்டனர். திருமதி ஆண்டியப்பன்,திருமதி கல்யாணசுந்தரம்,திருமதி தனசேகரன்,திருமதி நேரு,திருமதி பேரா.ஆழ்வார் மற்றும் நேருவின் பிள்ளைகள் சொ.நே.அன்புமணி, சொ.நே.அறிவுமதி கலந்துகொண்டனர். நூல் வெளியீட்டு விழா அன்றே 800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்றுத்தீர்ந்தன. குடும்பம், குடும்பமாக பேரா.கனகசபாபதி அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டீல் கல்ந்துகொண்டதும்,பல உயர் பதவிகளில் இருக்கும் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் மாணவர்கள் உயர் அதிகாரிகள் என்றாலும் மிகச்சாதாரணமானவர்களைப் போலக் கலந்துகொண்டதும் திரு.கனகசபாபதி அவர்களுக்கு நன்றியுணர்வு காட்டியதும் புதியவர்களுக்கு வியப்பளித்தது,.









4 comments:

அபயாஅருணா said...

முதல்வர் கனகசபாபதி அவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் . மற்ற விபரங்கள் இப்போது தான் தெரிந்து கொண்டே ன் . நல்ல தொகுப்பு

anandam said...

"தக்கார் தகவிலார் என்பதவரவர் எச்சத்தால் காணப்படும்" எனும் இலக்கணத்திற்கு இலக்கியமாய் வாழ்ந்துள்ள அய்யா கனகசபாபதி அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.

anandam said...
This comment has been removed by a blog administrator.
முனைவர். வா.நேரு said...

நன்றி, வருகைக்கும் கருத்திற்கும். டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் எழுதியுள்ள 'தனித்துவமிக்க காந்திய முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி ' என்னும் நூல் மிக அற்புதமாக அவரின் பன்முகத்தன்மையை சுட்டிக்காட்டுகிறது. விரைவில் அந்த நூலைப் பற்றி எழுதுகிறேன். அவரின் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரைப்பற்றி சொல்வதற்கு செய்தி இருக்கிறது......