Saturday 15 April 2017

அண்மையில் படித்த புத்தகம் : ஆரியக்கூத்து -அ.மார்க்ஸ்.

அண்மையில் படித்த புத்தகம் : ஆரியக்கூத்து -அ.மார்க்ஸ்
வெளியீடு                   : எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, 116 பக்கம்,ரூ 70


                                 ஆரியக்கூத்து

                             முனைவர் வா.நேரு,
                            தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்

பகுத்தறிவாளர் கழகத்தோழர்களைப் பொறுத்த அளவில் நல்ல புத்தகங்களைப் படிப்பதும், படித்ததை பகிர்வதும் வழக்க மாக மதுரையில் இருக்கிறது. பகுத்தறி வாளர் கழகப்புரவலர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் பார்க்கும் நேரங்களில் அவரின் கையில் நல்ல நூல்களைக் கொடுத்தால் அவரளவிற்கு மகிழ்பவர் யாருமில்லை. புத்தகங்களை வாசிப்பதையும் புத்தகங்களை நேசிப்ப தையும் தனது வாழ்வியலாகக்கொண்ட ஆசிரியர் கி.வீரமணி அவர்களைத் தலைவராக ஏற்றுக்கொண்ட தொண்டர் களுக்கு புத்தக வாசிப்பு என்பது மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு உண்மையை மேலும் மேலும் தெரிந்து கொள்வதற்கு உதவுவதாகும். அண்மையில் மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச்செயலாளர் அண்ணன் பெரி.காளி யப்பன் அவர்கள் 'ஆரியக்கூத்து' என்னும் நூலைக் கையில் கொடுத்தார். ஏறத்தாழ 8 ஆண்டுகளுக்குமுன் 2009இல் அ.மார்க்ஸ் அவர்கள் எழுதிய புத்தகம். எதிர் வெளி யீடு வெளியிட்டிருக்கும் இந்த நூல் இன் றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருத்த மாக இருக்கிறது.

‘அந்தணர் வரலாறு எனும் ஆரியக் கூத்து -ஆரிய மொழியினரின் புலப் பெயர்வு குறித்த சமகால விவாதங்கள் பற்றிய ஆய்வு' என்னும் இந்த நூல் நமது தோழர்கள் படிக்கவேண்டிய நூல். மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படவேண்டிய நூல். ஆரியர்கள் பூர்வகுடிமக்கள் என் பதை நிலை நாட்ட இந்துத்துவம் செய்யும் மோசடிகள் அவர்களின் அரசியல் எதிர் காலத்தை நிலை நிறுத்த உதவும் என்பது அவர்களின் எண்ணம். இதற்காகவே கழுதையை குதிரையாக்குதல் போன்ற எல்லாவித புனைவுகளிலும் சிறிதும் வெட்கமின்றி இறங்கியுள்ளனர்... எல்லா வித பெருங்கதையாடல்களையும் வர லாற்றுத் திரிபுகளையும் தோலுரிக்கும் தோழர் அ.மார்க்சுடன் இணைந்து இந்நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம் ' எனப் பதிப்புரையில் எதிர் வெளியீடு  குறிப்பிட்டுள்ளனர்.

'வரலாற்றாய்வு என்ற பெயரில் இந் துத்துவ பாசிசக் கருத்தியலுக்கு வலு சேர்க்கும் ஆபத்தான முயற்சிகளைக் கண்டு மனம் பதைத்து மிக்க பொறுப்புடன் இந்த மோசடிகளைத் தோலுரித்த ஹார் வர்ட் பல்கலைக்கழக  சமஸ்கிருத பேரா சிரியர் மிஷேல் விட்ஸலுக்கும் இந்திய வியல் அறிஞர் ஸ்டீவ்ஃபார்மருக் கும்' இந்த நூல் காணிக்கை எனச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

மதுரை அருகில் உள்ள கீழடியில் தொல்லியல் சார்பாக நடந்த ஆராய்ச்சி யில் மிகப்பழைமையான தொல்பொருட் கள் கிடைத்ததையும் ,அது தொடராமல் இன்றைக்கு உள்ள ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டுள்ளதையும் கண்டித்து திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்டோர் அறிக்கை விடுத்ததையும், திராவிடர் கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் நாம் அறிவோம். தொல்பொருள் ஆராய்ச்சி என்றாலே நமது எதிரிகள் பதறுகிறார்கள்.

முன்னுரையில் ‘சிந்துவெளி அகழ்வு களின் அடிப்படையில் இந்திய வரலாறு குறித்த பல புதிய உண்மைகள் 1932-1933 வாக்கில் மேலுக்கு வந்தன. அதுகாறும் மிகவும் தொன்மையானது எனக் கருதப் பட்ட வேதப்பண்பாட்டிற்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னதாகவே இங்கொரு வளர்ச்சியடைந்த நகரப் பண்பாடு சிறந்து விளங்கியது என்பது பலருக்கு அதிர்ச்சியளித்தது.... கால்டுவெல் லின் திராவிட மொழிக்குடும்பம் குறித்த கருத்துடன் சிந்துவெளி அகழ்வுகள் குறித்த கண்டுபிடிப்புகள் இணைந்து இங்கொரு திராவிடக்கருத்தியல் உருவாவதற்கும் வழிவகுத்தன. இந்நிலையில்தான் அன்று உருப்பெற்று வந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தின் குருஜி கோல்வல்கர் நமக்கான வர லாற்றை நாமே எழுதிக்கொள்ள வேண்டும்  என்றார் (1939) .அன்று முதல் வரலாற்றுத் திரிபு இந்துத்துவப் பரிவாரங்களின் பிரதான ஆயுதங்களில் ஒன்றாக விளங்குகிறது' என முன்னுரையில் நூலாசிரியர் ஆரியர்களின் வரலாற்றுத் திரிபின் நோக்கத்தை மிகச் சரியாகவே குறிப்பிடுகின்றார்.

இந்த நூலின் முதல்பகுதி ஆரிய விவாதமும் பார்ப்பனப்புரட்டும் என்னும் தலைப்பில் விவாதிக்கிறது. ‘தமிழக அந்த ணர் வரலாறு' என்னும் நூல் திறந்தவுடன் இரண்டு சங்கராச்சாரிகளின் படத்தோடு இருப்பதைச் சுட்டிக்காட்டும் நூலின் ஆசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் இந்த நூல் வெளியிடப்பட்டதன் நோக்கத்தையும் அவாளின் அதீத ஒற்றுமையையும் விரி வாகவே விளக்குகின்றார். அந்தப் புத்தகத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் 'நான் ஒரு பிராமணன் 'என்னும் தலைப்பில் எழுதி யுள்ள கட்டுரையில் ‘தங்களுடைய தாழ்வு மனப்பான்மையையும், உழைப்பின்மை யையும் சரி செய்து கொள்ள முடியாத வர்களின் அவலமான குற்றச்சாட்டுதான் பிராமணர்களின் ஆதிக்கம் என்ற புலம்பல். பிராமண எதிர்ப்பில் முக்கிய பங்கு வகிப்பவை கலைஞர் திரு.கருணாநிதி ஏற்று நடத்தும் தி.மு.க.வும் திரு.வீரமணி அவர்கள் தலைமையில் நடக்கும் திராவிடர் கழகமும்தான்... இந்தியாவில் பொதுவான சிவில்சட்டமும் பொருளா தாரா ரீதியான நலிந்தவர்களைப் பின் தங்கியவர்களாக அறிவிக்கும் சட்டமும் வரும்வரை தொடர்ந்து போராடுவோம். இந்தக்கொள்கை உடையவர்களை முழு மனதாக ஆதரிப்போம்' என்று எழுதியிருப் பதை சுட்டிக்காட்டுகிறார். இன்று மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் திட்டங்களாக மேலே ஆரியர்கள் குறிப்பிட்ட திட்டங்களே இருப்பதைக் காணலாம். எப்படியெல்லாம் வரலாறு இல்லாதவற்றை வரலாறு ஆக்குவதற்காக பொய் ஆதாரங்களை உருவாக்குகிறார்கள் என்பது பக்கம் 15 முதல் 22 வரை விளக்கப் படுகின்றது.

ஆரியப்பிரச்சினை என்ற தலைப்பில் ‘இந்தோ-அய்ரோப்பிய மொழிக்குடும்பம்', ‘திராவிட மொழிக்குடும்பம்', ‘சிந்து வெளி நாகரிகம்' என்னும் பிரிவுகளை விவரிக் கிறது. ஆரிய திராவிட வேறுபாடு மொழி யியல் அடிப்படையில் எப்படி நிறுவப் படுகிறது எனக்குறிப்பிடுகின்றார். பின் எனினும் ஆரிய/திராவிட வேறுபாடுகளை மொழியியல் அடிப்படையில் மறுக்கிறவர் களும் சென்ற நூற்றாண்டு தொடங்கி இங்கே செயல்பட்டு வந்துள்ளனர். ஆரியர்கள் வெளி நாட்டிலிருந்து வந்த வர்களல்லர். அவர்களின் தாயகம் இந்தியாவே. இங்கிருந்தே அவர்கள் பிற மேலை நாடுகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்பது இவர்களின் கருத்து. இக்கருத்தை முன்வைப்போரில் தொண் ணூற்றொன்பது சதத்தினர் இந்துத்துவாதி களே' எனக்குறிப்பிட்டு இந்துத்துவா வாதிகளின் திரிபுகளை தோலுரிக்கின்றார். தொடர்ந்து 'இந்துத்துவ வெறியுடன் எழுதுகிற டி.என்.ராமச்சந்திரன் போன்ற பார்ப்பனர்கள் மாக்ஸ்முல்லரைத் திட்டித் தீர்ப்பது வழக்கம் ' எனக் குறிப்பிட்டு ஏன் திட்டுகிறார்கள் என்பதனை விவரிக் கின்றார்.

ஆரியர்களின் வருகை ஒட்டுமொத்த மாக படையெடுப்பு என்ற வகையில் இல்லை, ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஆடு, மாடு மேய்ப்பதற்காக கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியா விற்குள் நுழைந்தனர், இங்கு இருந்த மற்றவர்களோடு (தசர்) அவர்கள் மோதி யும், சமரசம் செய்தும் எப்படி எல்லாம் கலந்தனர் என்பதனை ஆய்வுகளின் அடிப்படையில் விவரிக்கின்றார்.ரிக் வேத கலாச்சாரமும் சிந்துவெளி நாகரிகமும் எப்படி வேறுபட்டவை, சிந்து வெளி நாகரிகம் காலத்தோடு முந்தியது என்ப தனை எப்படியெல்லாம் அழிக்கப்பார்க் கின்றார்கள் என்பதனைக் குறிக்கின்றார். இன அடிப்படையில் இந்திய வரலாறு என்ற கருத்துக்கு எதிராக அண்ணல் அம்பேத்கர் எடுத்துவைத்த வாதத்தை எப்படி வசதியாக ஆரியர்கள் தங்கள் பொய் வரலாறுகளை எழுதுவதற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை யும், ஜாதியின் தோற்றம், அகமண முறை, சதிமுறையை உருவாக்கியது பார்ப்பனர் களே என்னும் அண்ணல் அம்பேத்கரின் கருத்துக்களை எல்லாம் மறைத்துவிட்டு தங்களுக்கு வசதியான ஒரு சில கருத்துக் களை மட்டும் எடுத்துக்கொண்டு ஆரியர் கள் திரிபுவாதம் செய்வதை எடுத்துரைக் கின்றார்.

இந்த நூலின் இரண்டாம் பகுதி ‘கழுதை யைக் குதிரையாக்கிய மோசடி ' என்னும் தலைப்பில் கருத்துக்களை விவரிக்கின்றது. "அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் தேசபக்தி " என்கிற சாமுவேல் ஜான்சனின் கருத்தை அடிக்கடி மேற்கோள் காட்டுவார் பெரியார் ஈ.வெ.ரா. "அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் அரசியல் " என்றொரு கருத்தை இங்கு பலரும் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.இந்துத்துவ அரசியலை முன்வைக்கும் மேல்ஜாதி அறிவுஜீவிகள் செய்து வரும் வரலாற்று மோசடியைப் பார்க்கும்போது "அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் வரலாறு" எனச் சொல்லத்தோன்றுகிறது..... கீழேயுள்ள செய்திகளைப் படிக்கும்போது இதைவிட வும் இவர்களின் மோசடியை சித்தரிப்ப தற்கு வேறு வார்த்தைகள் இல்லை என்பதை உணர்வீர்கள்.சிந்துவெளி நாகரிகம் குறித்த வரலாற்று மோசடியில் இந்துத்துவாதிகளின் நோக்கம் என்ன என்பதுபற்றி முதல்பகுதியில் பார்த்தோம்." ஆரியர்கள் வந்தேறிகளல்லர். வேதகாலத் திற்கு முந்தைய வளர்ச்சியடைந்த உள்ளூர் நாகரிகங்கள் என ஏதும் இருந்திருக்க முடியாது. இதுவரை வரலாற்றாசிரியர் களால் வேதகாலத்திற்கு பல நூற்றாண் டுகள் முந்தியதாகவும் அத்துடன் எந்தத் தொடர்ச்சியும் இல்லை எனவும் நிறுவப்பட்டு வந்த சிந்து சமவெளி நாகரிகம் என்பது உண்மையில் ரிக் வேதகால நாகரிகமே" என நிறுவுவதே அவர்களின் நோக்கம். ஆனால் வர லாற்றாசிரியர்கள் இவர்களின் கருத்துக்கு எதிரான வலுவான ஆதாரங்களையும் நிரூபணங்களையும் முன்வைத்திருந்த நிலையில் இந்த முடிவுகளை முறியடிக்க வேண்டுமானால் சில புதிய கண்டுபிடிப் புகளைச்செய்தாக வேண்டிய அவசியம் இந்நூல் ஆய்வாளர்களுக்கு ஏற்பட்டது" என்று குறிப்பிடும் அ.மார்க்ஸ் இதற்காக எப்படி ஒரு பொறியாளர் திடீரென வரலாற்று ஆசிரியராக ஆக்கப்பட்டார் என்பதனைக் குறிப்பிட்டு .சிந்துவெளி முத்திரைகளை தாங்களே ஆய்ந்து அறிந் ததாக வெளியிட்டு செய்த மோசடிகளை விவரிக்கின்றார்.

கணிப்பொறியாளரான ராஜாராம் தனது 'கிராபிக்ஸ்' திறமையைப் பயன்படுத்தி திரைப்பட இயக்குநர் ஸ்பீல்பெர்க் ரேஞ் சில் சிந்துவெளி முத்திரைகளில் அடிக்கடி காணப்படும் புராணிகமான ஒற்றைக் கொம்பனைக் (ஹிழிமிசிளிஸிவி) குதிரையாக மாற்றியிருந்தது அறிஞர்களால் நிறுவப் பட்டது... நிறைய ஆய்வுப்படங்களையும் வேறுபாடுகளையும் சுட்டிக்காட்டும் அ.மார்க்ஸ் 'ராஜாராமனின் மோசடியை வெளிப்படுத்திய அறிஞர்கள் இத்தோடு நிற்கவில்லை. ராஜாராமனின் படத்தை குதிரை என ஏற்றுக்கொண்ட யாரேனும் ஒரு சிந்துவெளி ஆய்வாளரையாவது ஒருவர் காட்டினால் அவருக்கு ஆயிரம் டாலர் பரிசளிக்கப்படும் என்றொரு அறிவிப்பையும் செய்தனர். யாரும் இப்பரிசைப் பெற முயற்சிக்கவில்லை" எனப் பக்கம் 95இல் நூல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.சிந்து வெளி நாகரிக அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகளின் உள்ளடக்கத்தை மாற்று வதற்காக செய்யப்பட்ட வாசிப்பு மோசடிகளை அடுத்த பக்கங்களில் விவரிக்கின்றார்.

ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்காகவே இல்லாத சரஸ்வதி நதியை இருப்பதாகக் காட்டுவதற்காக ஆய்வாளர்கள் என்னும் பெயரில் ஆரியர்கள் செய்யும் தகிடுதத்தங்களை இந்த நூலின் ஆசிரியர் பக்கம் 106-107-களில் விவரிக்கின்றார். இன்று மத்தியில் இருக்கும் அரசு சரஸ்வதி நதி என்னும் பெயரில் பலகோடி ரூபாய்களை ஆராய்ச்சி செய்கிறோம் என்னும் பெயரில் செலவழிப்பதை நாம் அறிவோம். இல்லாததை இருப்பதாகக் காட்டுவதற்காக மக்களின் வரிப்பணம் எப்படிச் செலவாகிறது என்பதனை நாம் உணர் வதற்கு இந்த நூல் உதவும்.

நூலின் பிற்பகுதியில் தன்னுடைய கருத்துக்கள் அத்தனைக்கும் ஆதாரமான நூல்களையும், பத்திரிக்கைச் செய்தி களையும், இணையதளங்களையும் தோழர் அ,மார்க்ஸ் குறிப்பிட்டிருக்கின்றார். மத்தியில் இருக்கும் பாரதிய ஜனதா அரசு ஏன் வரலாற்று திரிபுகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதையும், ஆரியர்கள் எப்படியெல் லாம் இந்த நாட்டின் பூர்வகுடி மக்களாக தங்களை ஆக்கிக்கொள்வதற்காக புளுகு கின்றார்கள் என்பதையும் மிகத் தெளிவாக விளக்கும் நூல் இந்த 'ஆரியக்கூத்து ' என்னும் நூல் எனலாம்

நமது பரம்பரை எதிரிகள் பொய்களை உண்மைகளாக்க ஊடகங்களையும், செய்தித்தாள்களையும் பயன்படுத்து கிறார்கள் என்பதையும் வரலாறு எனும் பெயரில் நடைபெறும் ஆரியக்கூத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ‘திராவிட' என்னும் சொல்லைக் கேட்டாலே ஏன் ஆரியர்கள் பதறு கிறார்கள், ‘திராவிட' என்ற சொல்லிற்கு எதிராக ஏன் 'தமிழ்' என்று பயன்படுத் துங்கள் என்று சொல்கின்றார்கள் என் பதையெல்லாம் நுட்பமாக அறிந்து கொள்ளவும், பரப்புரை செய்யவும் பரந்துபட்ட நூல்களின் அறிமுகம் தேவைப்படுகின்றது. பகுத்தறிவாளர் கழக கருத்தரங்குகளில், பெரியார் பேசுகிறார், விடுதலை வாசகர் வட்டம் போன்ற நமது நிகழ்வுகளில் ஒரு 15 நிமிடமாவது ஒரு நூலைப்பற்றிய அறிமுகம் என்பது நமது தோழர்களுக்கு மிகவும் பயன்படக் கூடியதாக அமையும். ஆரியக்கூத்தினை பொதுமக்கள் எளிதாகப்புரிந்து கொள்ளவும் உதவும்.
நன்றி : விடுதலை ஞாயிறு மலர் 15.04.2017



                  

4 comments:

PUTHIYAMAADHAVI said...

நன்றி தோழர். வாசிக்க தூண்டும் பதிவு

முனைவர். வா.நேரு said...

நன்றி, தோழர் -எழுத்தாளர் புதியமாதவி அவர்களே, கருத்திற்கும், வலைத்தள வாசிப்பிற்கும்...

Aruldoss said...

Super information. Thanks

முனைவர். வா.நேரு said...

நன்றி...