Wednesday 28 October 2020

திதி பார்த்து திவசம் செய்தல்.........வா.நேரு

 நினைவலைகள் 

எப்போதும் நீள்கிறது...

நீத்தார் நினைவுகளோடு....


அப்பா இறந்து 

அரை நூற்றாண்டுகள்

ஓடிப்போனது...

ஆனாலும் அவரின்

நினைவலைகள்  தொடர்கிறது...


அப்பாவிடம் வண்டப்புலியில்

படித்தவர்கள்...

அப்பாவிடம் சாப்டூரில் 

படித்தவர்கள்....

அப்பாவோடு கைப்பந்து 

விளையாடிவர்கள்...

அதற்காக ஊர் ஊராய்

சென்று வென்றவர்கள்...

கதை கதையாகச்சொல்கிறார்கள்

அப்பாவின் உயர்குணம் பற்றி...


அறியா இளம்வயதில்

அப்பாவைப் பறிகொடுத்த எனக்கு

நினைவலைகள் 

எப்போதும் நீள்கிறது...

அவரோடு இருந்தவர்கள் 

சொல்லும் அத்தனை 

நினைவுகளோடும் 

அப்பாவின் நினைவும் தொடர்கிறது... 


எப்போதும் போல 

அப்பாவின் நினைவு நாள்

முதியோர் இல்லத்தோடும்

அக்னி சிறகுகள் 

அறக்கட்டளையோடும் தொடர்கிறது...

விளம்பரம் போல இதனை

வெளிப்படுத்துவது மனதுக்குள்

உறுத்துகிறது என்றாலும்


இறந்தவர்களுக்கு திதி பார்த்து

திவசம் செய்தல் என்பது 

ஊறிப்போய்க்கிடக்கிறது 

நமது மக்கள் மூளைகளில்


அதீத சக்தி வாய்ந்தது

தர்பைப்புல்! அட!

தர்ப்பைப்புல் 

மூன்றை வைத்து

இறந்து போன உங்கள்

பெற்றோரை வரவழைக்கலாம்

என்று உழைக்காமல்

உண்ணுகின்ற பார்ப்பனர்கள்

கூறுவதை நம்புகின்ற

நம் மக்கள்


பெற்றோரின் நினைவாக

பார்ப்பனருக்கு 

அரிசி,காய்கறி..

பணம் அளித்து 

ஆசி பெற வேண்டும் என

எவனோ சொல்லிவைத்ததை

பெற்றோருக்கு செய்யும்

பெருங்கடமையாய்

படித்தவரும் கூட

செய்கின்ற இந்த நாளில்


பெற்றோர்களின் நினைவு நாளில்

இல்லாது இருப்போருக்கு உதவுங்கள்

இணைந்து ஏதேனும் நல்லது

செய்வோருக்கு துணை நில்லுங்கள்

என்னும் சொல்லை 

சொல்ல வேண்டும் என்னும் 

செய்கையே தவிர வேறில்லை...


                       வா.நேரு

                       28.10.2020

நண்பரே, இந்தக் கவிதையையும் சேர்த்து படித்துவிட்டுப்போங்கள்

https://vaanehru.blogspot.com/2014/10/blog-post_27.html

நன்றி





No comments: