Sunday 7 March 2021

மார்ச் 8ல்.......

 பெண்களால்

பெரியார் எனப் பெயர் சூட்டப்பட்ட

பெருந்தகையே!

உலக மகளிர்

தினம் என்றவுடன்

உன் நினைவுதான்

எங்கள் முன்னால்



ஆனால் சிலர்

மகளிர் நாள்

எனச்சொல்லி

மார்ச் 8ல்

கோலப்போட்டி

நடத்திக்

கொண்டிருக்கிறார்கள்



நல்ல

பட்டுப்புடவை

ஒன்றுபோல் எடுத்து

பெண்கள் எல்லாம்

மார்ச் 8ல்

அலுவலகத்திற்கு

கட்டிவர வேண்டுமாம்

சில மாமிகள்

அலுவலகத்தில்

ஆணையிட்டுக்

கொண்டிருக்கிறார்கள்



சிலர் கோயில்

பிரசாதங்கள்

வழங்க

பட்டியல்

தயாரிக்கின்றார்கள்

மகளிர் தினத்தை

முன்னிட்டு

எந்த நாளையும்

மாமிகள்

விடுவதாயில்லை

இந்துமத

வளையத்துக்குள்

கொண்டு வருவதிலேயே

குறியாய் இருக்கிறார்கள்



பெண்ணுரிமை

எனும் பேச்சு

வரும் இடமெல்லாம்

பெரியார் எனும்

பெயர் நினைவில் வரும்

நம் எதிரிகளுக்கும்



ஆதலால்

என்ன செய்யலாம்

இந்நாளில்

பெரியார் பெயர்

வராமல் இருக்க ?

யோசித்து யோசித்து

பாரதியை

முன்னிறுத்துகின்றார்



எங்கள்

ஈரோட்டுச்சூரியனே

தன்னிகர் இல்லா

பெண் விடுதலைக்

கருத்துகளை

தரணியில் எவரும்

சிந்திக்கா நிலையில்

கனலாய் கக்கிய

எரிமலையே!

மண்ணில்

ஆணுக்கு

என்னென்ன

உரிமை உண்டோ

அத்தனையும்

பெண்ணுக்கு

வேண்டுமெனக்

கேட்டவர் நீ !


மதம்

தோற்றுவிக்கப்பட்டதே

பெண்களை

அடிமைப்படுத்த என்றாய்

கடவுள் எனும்

வார்த்தையே

பெண்விடுதலை

எனும் சொல்லுக்கு

எதிர்ப்பதம் என்றாய்!


கற்பு என்ற

சொல்லே பெண்ணை

வீட்டுக்குள்ளே

பூட்டிவைக்க சிலர்

சொல்லிவைத்த

வார்த்தை என்றாய்

கர்ப்பப்பையை

கழற்றி எறி என்றாய்


எனக்கு தாலி என்றால்

உனக்கு என்னடா

அடையாளம்?

எனக்

கேட்கச் சொன்னாய்

பெண்ணை விதவை என்றால்

விதவன் எனப்பெயர் ஏன்

ஆணுக்கு இல்லை?

வினவச் சொன்னாய்


ஆரியப் பார்ப்பான்

மனுவைச் சொல்லி

அடங்கிப் போ என்றான்

கல்வியை

ஆயுதமாக்கு!

துணிச்சலை

துணையாகக் கொள்!

மனு தர்மத்தை

பொசுக்கு என்றாய்

நடுங்கித்தான் போனது

பார்ப்பனியம்



பெண் ஏன்

அடிமையானாள்?

எண்பது ஆண்டுகளுக்கு

முன்னால் நீ

சொல்லிய வார்த்தைகளை

திருப்பிச் சொல்வதற்கே

பயம்

நிறைய முற்போக்குகளுக்கு

இன்றைக்கும்



எங்கள் முன்னால்

எனது தங்கையும்

எனது துணையும்

நன்றியோடு

உனை நினைத்து

புகழ்கிறார்கள்!

மண்ணில் மகளிர்

சுயம்ரியாதையாய்

வாழ வழிகாட்டியவர்

நீங்கள் என்பதால் ...


                வா.நேரு....

எனது 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்' என்னும் கவிதை நூல் தொகுப்பில் இருந்து 


1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

பெண் ஏன்

அடிமையானாள்?

எண்பது ஆண்டுகளுக்கு

முன்னால் நீ

சொல்லிய வார்த்தைகளை

திருப்பிச் சொல்வதற்கே

பயம்

நிறைய முற்போக்குகளுக்கு

இன்றைக்கும்


உண்மை
உண்மை