Wednesday, 18 June 2025

பெரியவர்களின் கடமை- முனைவர் வா.நேரு

 குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டிய பழக்கங்களில் மிக முக்கியமானது நூலகத்திற்குச் சென்று வாசிக்கும் பழக்கம் ஆகும். அதனை வெறும் சொற்களால் சொல்லி, குழந்தைகளுக்கு  நூலகம் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்த முடியாது. அதற்கு வழிகாட்டிகளாக பெற்றோர்களாகிய நாம் இருக்கவேண்டும். குறைந்தபட்சம் மாதத்திற்கு இருமுறையாவது நூலகத்திற்குச் செல்லும் பழக்கம் நமக்கு இருக்கவேண்டும். அப்படிச் செல்கிறபோது, நம் குழந்தைகளையோ அல்லது வயதானவர்கள் என்றால் தங்கள் பேரக் குழந்தைகளையோ அழைத்துச் சென்றால், குழந்தைகளுக்கு நூலகம் செல்லும் பழக்கம் ஏற்பட்டு விடும். வளர்ந்த நிலையில் அவர்கள் தாங்களாக நேரத்தை, நாள்களை ஒதுக்கி நூலகத்திற்குச் செல்ல ஆரம்பிப்பார்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒருமுறை லண்டன் சென்றபோது, எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது,
எந்த விடுதி நூலகத்திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டு அந்த விடுதியில் தங்கினாராம். அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்குப் புத்தகங்கள் மீது இருந்த விருப்பம் பற்றி, அவரின் வாசிப்பு நாட்டம் பற்றித் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும், புத்தகக் காதலும்‘ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ஒரு சிறிய புத்தகமாகவே வந்திருக்கிறது. புத்தகங்களை வாசிப்பதிலும், புத்தகங்களைச் சேர்ப்பதிலும் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு இருந்த விருப்பம் நமக்குப் பெரும் வியப்பைத் தருகிறது.


உலகில் உள்ள மக்கள் எல்லோரும் நன்றாக வாழவேண்டும், சமத்துவம் வேண்டும், சமூக நீதி வேண்டும், பாலின சமத்துவம் வேண்டும். ‘எல்லோருக்கும் எல்லாம் வேண்டும்‘ என்று விரும்பியவர்கள் மாமேதைகள் எல்லாம் புத்தகங்களைக் காதலித்திருக்கிறார்கள், புத்தகங்களை விரும்பியிருக்கிறார்கள்,தேடித்தேடிப் போய் படித்திருக்கிறார்கள். பொதுவுடைமைக் கருத்தைத் தன் புத்தகங்கள் வாயிலாக விதைத்த தோழர் காரல் மார்க்ஸ் அவர்கள் லண்டன் நூலகத்தில் செலவழித்த  நேரம் பற்றியும், உணவு, உறக்கம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது நோக்கத்திற்காகத் தேடித்தேடி புத்தகங்களை வாசித்த அவரின் நூலக நேரம் பற்றியெல்லாம் அவரின் வாழ்க்கை வரலாற்றில் படிக்கிறபோது நமக்கு வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.




ஒருமுறை அறிஞர் அண்ணா அவர்கள் காரிலேயே மும்பை சென்றிருக்கிறார். விமானத்தில் செல்லாமல் ஏன் மூன்று நாள்கள் காரிலேயே பயணம் செய்து மும்பை சென்றீர்கள் என்று கேட்டபோது பத்துப் புத்தகங்களைப் படிக்க வேண்டியிருந்தது என்று சொன்னாராம் அறிஞர் அண்ணா. படிப்பதற்காக எளிதான விமானப் பயணத்தை விட்டுவிட்டு, கடினமான கார் பயணத்தை அண்ணா அவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.  இன்றைக்கு ஆடியோ புத்தகங்கள் வந்து விட்டன. காரிலோ மற்ற வாகனங்களில் செல்லும் போதோ, காதில் நாம் ஹெட்போன்களை மாட்டிக்கொண்டால், நாம் விரும்புகிற புத்தகத்தை இன்னொருவர் வாசிக்க, பொறுமையாக நாம் கேட்டு உள்வாங்கிக்கொண்டே போகலாம். நாம் வாசிப்பதை எளிதாக்க எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன. ஆனால், புத்தகத்தை வாசிக்கும் அல்லது வாசிப்பதைக் கேட்கும் பழக்கம் என்பது குறைந்துகொண்டே போகிறது என்பது இன்றைய வருந்தத்தக்க நிலைமை.



நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விட்டால் பெற்றோர்களுக்குப் பெரும் சுமை குறையும். தனியாக அதைச் செய், இதைச் செய் என்று குழந்தைகளுக்குக் கட்டளை இட்டுக்கொண்டே இருக்கவேண்டிய அவசியம் இல்லை. வாசிப்பின் மூலமே பலவற்றை அவர்களாகவே கற்றுக் கொள்வார்கள். தங்களைத் தாங்களே திருத்திக்கொள்வார்கள். கவலைகளைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிமுறைகளைத் தாங்களே தேடிக் கொள்வார்கள். தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்வார்கள்; செதுக்கிக் கொள்வார்கள்.


திருமணத்தின்போது தாம்பூலத்திற்கு மாற்றாக சிறு நூல்களை அச்சிட்டு வழங்கலாம் என்று தந்தை பெரியார் அவர்களே வலியுறுத்தி
யுள்ளார்கள். வீரமணியே சொன்னார், “அய்யா எத்தனையோ திருமணத்திற்குத் தலைமை வகித்துச் சிறப்புரை எல்லாம் ஆற்றியிருக்கி
றீர்கள். இது திருமண சம்பந்தமாக இருக்கின்றது. அந்தப் பேச்சுகளில் பத்து, இருபது பேச்சுகளைப் புத்தகமாகப் போட்டுவிட்டு, அதற்குப் பெயரை வேண்டுமானால் ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்ற தலைப்புப் போட்டுப் புத்தகமாகக் கொடுக்கலாம்” என்று சொன்னார் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த நூல் இன்றைக்கும் நமக்குக் கிடைக்கிறது.

பெரும்பாலான நம், தோழர்கள் கடைப்பிடிக்கும் பழக்கம் நமது இல்ல விழாக்களுக்கு வருபவர்களுக்கு நூலினைப் பரிசாகக் கொடுத்து
அனுப்புவது. எல்லோரும் இதனைக் கடைப்பிடிக்கவேண்டும். எளிய முறையில் நடைபெறும் திருமணங்களிலும் கூட ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை இந்த நூல் பரிசுக்கு என்று ஒதுக்க வேண்டும். வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் ‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச்சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். பெரியவர்களுக்குக் கொடுக்கக்கூடிய ஆகச்சிறந்த பரிசும் கூட ஒரு புத்தகம்தான். நமது இல்ல விழாக்கள் என்று சொல்கிறபோது தந்தை பெரியார் இயக்கத்தவர்கள் மட்டுமல்ல, நமது உறவினர்கள், நமது நண்பர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் என்று பலதரப்பட்டவர்கள் வருவார்கள். அவர்களுக்கு நம் இயக்கத்து கருத்துகளும் அடங்கிய நூல்களைக் கொடுப்பதென்பது மிகப்பெரும் பரிசாகவும் நமது கருத்துகள் பரவும் விதமாகவும் அமையும்.

இல்ல விழாக்களில் வருகிறவர்களில் பெரும்பாலோர் புத்தகப் பரிசு என்பதை விரும்பக் கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், ஒரு எழுத்தாளரின் 2500 புத்தகங்களைப் பதிப்பகத்திலிருந்து விலைக்கு வாங்கி, தன் வீட்டுத் திருமணத்திற்கு வந்த எல்லோருக்கும் ஒரு பையில் வைத்து அளித்தார். எல்லோரும் மகிழ்ச்சியாகப் பெற்றுக்கொண்டு சென்றார்கள். ‘புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம்’ என்பது சீனப் பழமொழி. நமது திராவிட இயக்கக் கருத்தியல்களும் ஒரு பூந்தோட்டம்தான்.

புத்தகங்களைப் பரிசாகப் பெறுகின்றபோது, அதுவும் நூலாசிரியரின் கையினால் பெற்றோம் என்றால் அதனைப் படித்து முடித்து, அதனைப் பற்றிய நமது கருத்தினை அவருக்குத் தெரிவிப்பதும் மிகவும் தேவையானதாகும். ஆசிரியர் அய்யா அவர்கள், தான் விரும்பிப் படித்த நூலினைப் பற்றி, வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்பில் எழுதினால் நூலாசிரியர்கள் பெறும் மகிழ்ச்சியை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். 75 வயதினைக் கொண்டாடிய தனது வாழ்க்கையினை’விறகு வண்டி முதல் விமானம்வரை’ என்னும் நூலினை எழுதிய, மதுரை திராவிடர் கழகத்தின் காப்பாளர் சே.முனியசாமி அவர்கள், அய்யா ஆசிரியர் அவர்கள் தனது நூலினைப் பற்றி எழுதியதும் அப்படி ஓர் ஆனந்தக் கூத்தாடினார். மகிழ்ந்தார். நமது தலைவர் அவர்களின் வழியைப் பின்பற்றி அவரின் தொண்டர்களாகிய நாமும் நமது இயக்க நூல்களை,இயக்கத்தவர் எழுதி இருக்கும் நூல்களை வாசிப்பதும், வாசித்து முடித்தபின்பு அந்த நூலைப்பற்றி எழுதுவதும் பேசுவதும் கூட நமது கடமையே ஆகும்.


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஜூன் 16-30

Saturday, 7 June 2025

அறிவு முதலீடு- முனைவர் வா.நேரு

 



அனுபவங்கள்தான் புத்தகங்கள் ஆகின்றன. ஒவ்வொரு நூலுக்குள்ளும் ஓராயிரம் அனுபவங்கள் புதைந்து கிடக்கின்றன.ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கும் நூலகங்களுக்குள் நுழைந்து, நாம் அங்கிருக்கும் புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்கும்போது, பல ஆயிரம் பேர்களின் அனுபவங்களை நாம் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

அதுவும் திராவிட இயக்க எழுத்தாளர்களின் புத்தகங்கள் எதிர்ப்பில் எழுந்தவை. அறிவில் முகிழ்த்தவை. களத்தில் விளைந்தவை.காலத்திற்கும் அறிவையும் ஆற்றலையும் விதைப்பவை. எனவேதான் திராவிட இயக்க எழுத்தாளர்களின் புத்தகங்களை மறைத்து வைக்கவே நமது பரம்பரை எதிரிகள் அன்றுமுதல் இன்றுவரை
விரும்புகிறார்கள். மறைக்கிறார்கள். ஆனால், நமது தலைவர்கள், நமது திராவிட இயக்கப் புத்தகங்கள் எளியவர்களின் கைகளில் சென்றடைய வேண்டும் என விரும்பினார்கள்,
விரும்புகிறார்கள். ஆதலால்தான், தந்தை பெரியார் காலந்தொட்டு, குறைந்த விலையில் நமது கருத்து நூல்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நட்டம் என்றாலும் பரவாயில்லை என்று அச்சடித்துக் கொடுக்கிறார்கள்.

‘ஞானசூரியன்’ வெளிவந்தவுடன், ‘குடிஅரசு’ இதழில் அதுபற்றி அறிமுகம் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு:

‘‘ஞானசூரியன் என்ற புத்தகம் கானாடுகாத் தான் திருவாளர் வயி.சு.சண்முகம் செட்டியார் அவர்களின் வேண்டுகோளின் பேரில்  சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்களால் எழுதப்பட்டது. இது முழுதும் ஆரியர்களின் வேதம், சாஸ்திரம், புராணம், சாமி என்பவைகளின் புரட்டுகளை வெளியாக்கும் கருத்துக் கொண்டே எழுதப்பட்டதாகும். இதில், பெரும்பாலும் வேதத்திலும் மற்றும் பல ஆரிய ஆதாரங்களிலும் உள்ள சுலோகங்களை எடுத்து எழுதி அவற்றுக்கு ஏற்பட்ட பொருள்களையும் எழுதி அப்படி ஏன் அவர்கள் எழுதி வைத்துக் கொண்டு நம்மை நம்பச் செய்து வருகிறார்கள் என்பதற்கு உள்ள அவ்வாரியர்களின் சூழ்ச்சியும் கெட்ட எண்ணமும் சுயநலமும் பளிங்கு போல் வெளியாக்கப்பட்டிருக்கின்றன.’’ (ஆசிரியர் அவர்கள்,வாழ்வியல் சிந்தனைகள், உலகின் தனித்த புத்தகப் புரட்சி இதோ(3)
– ‘விடுதலை’ 28.04.2025).

சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் இந்த நூலில்தான் 16 வருடங்களாக ஆராய்ந்து, இந்தியா முழுவதும்,நேபாளம்,காஷ்மீரம் (அப்போது தனி நாடாக இருந்தது),சிலோன் முதலிய பல தேசங்களுக்குச் சென்று முற்கால, தற்கால வழக்க ஒழுக்கங்களை அறிஞர்களை நேரில் கண்டும் கேட்டும், தமிழர்கள் ஏமாந்து கிடக்கும் தன்மையை அறிந்து இந்த நூலை எழுதியதாகக் குறிப்பிடுகின்றார்.

‘ஞான சூரியன்’ போன்ற 169 புத்தகங்கள் திராவிட இயக்கத்தவர்க்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளன. ‘ஏப்ரல் 23, உலகப் புத்தக நாளை முன்னிட்டு, 8 நாட்களுக்கு  10% முதல் 50% சிறப்புத் தள்ளுபடியில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றும் திராவிடர் கழக(இயக்க) வெளியீடுகள் விற்கப்பட்டன. தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி, கவிஞர் கலி.பூங்குன்றன், மஞ்சை வசந்தன் உள்ளிட்ட பலரின் படைப்புகள், 169 புத்தகங்கள் 50 விழுக்காடு தள்ளுபடி விலையில் கொடுக்கப்பட்டன.

ரூபாய் 9665 மதிப்புள்ள குடிஅரசு தொகுதிகள் 5000 ரூபாய்க்கும், ரூபாய் 3650 மதிப்புள்ள வாழ்வியல் சிந்தனைகள்-18 தொகுதிகள் ரூபாய் 2500க்கும் இன்னும் பல தொகுப்புகளாகப் புத்தகங்கள் விற்கப்பட்டன.இவையெல்லாம் நமது தோழர்கள் தங்கள் வீடுகளில் நூலகம் அமைக்க வேண்டும் என்னும் அடிப்படை நோக்கத்தில் விற்கப்பட்டவை – விற்கப்படுபவை. திராவிடர் கழகத்துத் தோழன் என்றால் அவரிடம் சில புத்தகங்கள் கட்டாயம் இருக்கும் என்ற நம்பிக்கை தோழமைக் கட்சியினரிடம் இருக்கிறது. அதனை இன்னும் வலுப்படுத்தும் விதமாக இப்படிப்பட்ட விற்பனைகள் அமைகின்றன. எவ்வளவு சிறிய வீடாக இருந்தாலும் நமது இயக்கப் புத்தகங்கள் இருக்கும் சிறிய நூலகம் அந்த வீட்டுக்குள் இருப்பது என்பது நமது தோழரின் வீடு என்பதைப் பறைசாற்றும்.

மதுரைத் தோழர்களில் புத்தகங்கள் மீது அளவற்ற ஆசையும் கவனிப்பும் காட்டுபவர் தோழர் ப.சடகோபன் அவர்கள். பல ஆண்டுகள் மதுரையில் நடமாடும் புத்தக நிலையமாக யாழ் வாடகை நூலகம் வைத்திருந்தவர். தான் படித்த இயக்கப் புத்தகங்களை, மற்ற தோழர்களும் படிக்கவேண்டும் என்பதற்காக நிறைய மெனக்கிடுபவர். சென்னை பெரியார் திடலில் அமைந்திருக்கும் பெரியார் பகுத்தறிவு நூலகம் & ஆய்வகம் வாசலில் ப.சடகோபன் அவர்கள்  அச்சிட்டு வெளியிட்ட, புத்தகங்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும், பயன்படுத்த வேண்டும் என்னும்  துண்டறிக்கை ஒட்டப்பட்டுள்ளது. அந்தத் துண்டறிக்கையை அங்கு பார்த்தவுடன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

‘‘தமிழ்நாட்டில் வீட்டுக்கு ஒரு நூலகம் (புத்தகசாலை) வைக்கவேண்டும் என்று கனவு கண்டவர் பேரறிஞர் அண்ணா.அவர்கள்.’’ பாதுகாப் பான அறை – படுக்கை அறை சமையலறை – பூஜையறை – இவை எல்லாம் இருக்கும் – புத்தகம் உள்ள இடம், படிப்பதற்கென்று ஓர் அறை தேடிப்பாருங்கள் மிகமிகக் கஷ்டம்.
பல வீடுகளிலே தூண்களின் மீது சாளரங்களின் இடுக்கில், பிள்ளையார் மாடத்தில் சில புத்தகங்கள் இருக்கும். ஆனால் புத்தகசாலை உண்டா? என்று கேளுங்கள் – பதில் கூறமாட்டார்கள்; ஒரு புன்னகை தோன்றும். பைத்தியக்காரா! இது வீடு நீ என்ன இங்கு வந்து புத்தக சாலை கேட்கிறாயே, என்று பொருள் அந்தப் புன்னகைக்கு…

வீட்டுக்கோர் புத்தகசாலை நிச்சயம் வேண்டும் – வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருள்களுக்கும், போகப் போக்கியப் பொருள்களுக்கும் தரப்படும் நிலை மாறி, புத்தகசாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை – அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும், முதல் இடம், புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும். என்றார் பேரறிஞர் அண்ணா.’’

திராவிட இயக்கத்தவர் என்றால் அவர், திராவிடர் கழகமாக இருந்தாலும் திராவிட முன்னேற்றக்கழகமாக இருந்தாலும் அல்லது மற்ற திராவிட இயக்கங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அடிப்படையில் அவர்களின் இல்லங்களிலே இருக்கவேண்டியது நூலகமே. அந்த நூலகத்தில் முதலில் இடம் பெறவேண்டியவை தந்தை பெரியாரின் நூல்கள்.பின்பு மற்ற திராவிட இயக்க நூல்கள், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், புரட்சிக்கவிஞரின் கவிதைத் தொகுப்புகள் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நூல்கள் போன்றவை.கட்டாயம் இருக்கவேண்டும்.இவற்றைச் சிறுகச் சிறுகச் சேகரிக்கவேண்டும்.

புத்தகம் என்பது அறிவு முதலீடு. நமக்கு மட்டுமான முதலீடு மட்டுமல்ல; நமது குழந்தைகள்,அவர்களின் குழந்தைகள் என்று  நமது பரம்பரைக்கு உண்மையாக  நாம் போட்டு வைக்கும் முதலீடு என்பது நல்ல புத்தகங்கள். நாம் நமது திராவிட இயக்கத்தில் இருக்கிறோம், பணியாற்றுகிறோம் என்று சொன்னால் அதற்கு அடையாளமாக இருப்பது நமது வீட்டில் இருக்கும் புத்தகங்கள் வைத்திருக்கும். சிறு நூலகம்தான். எனவே, வீட்டில் சிறு நூலகம் வைப்பதை நமது  இயக்கக் கடமைகளில் ஒன்றாகக் கொள்வோம். நூலகங் களில் இருப்பது போல நம் வீட்டில் இருக்கும் நூல்களைப் பட்டியலிடுவோம்.அதனைக் கணினியில் அல்லது ஏடுகளில் எழுதி, முறைப்படுத்தி வைப்போம். அந்த நூல்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.






நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஜூன் 1-15,2025