Wednesday, 18 June 2025

பெரியவர்களின் கடமை- முனைவர் வா.நேரு

 குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டிய பழக்கங்களில் மிக முக்கியமானது நூலகத்திற்குச் சென்று வாசிக்கும் பழக்கம் ஆகும். அதனை வெறும் சொற்களால் சொல்லி, குழந்தைகளுக்கு  நூலகம் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்த முடியாது. அதற்கு வழிகாட்டிகளாக பெற்றோர்களாகிய நாம் இருக்கவேண்டும். குறைந்தபட்சம் மாதத்திற்கு இருமுறையாவது நூலகத்திற்குச் செல்லும் பழக்கம் நமக்கு இருக்கவேண்டும். அப்படிச் செல்கிறபோது, நம் குழந்தைகளையோ அல்லது வயதானவர்கள் என்றால் தங்கள் பேரக் குழந்தைகளையோ அழைத்துச் சென்றால், குழந்தைகளுக்கு நூலகம் செல்லும் பழக்கம் ஏற்பட்டு விடும். வளர்ந்த நிலையில் அவர்கள் தாங்களாக நேரத்தை, நாள்களை ஒதுக்கி நூலகத்திற்குச் செல்ல ஆரம்பிப்பார்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒருமுறை லண்டன் சென்றபோது, எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது,
எந்த விடுதி நூலகத்திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டு அந்த விடுதியில் தங்கினாராம். அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்குப் புத்தகங்கள் மீது இருந்த விருப்பம் பற்றி, அவரின் வாசிப்பு நாட்டம் பற்றித் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும், புத்தகக் காதலும்‘ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ஒரு சிறிய புத்தகமாகவே வந்திருக்கிறது. புத்தகங்களை வாசிப்பதிலும், புத்தகங்களைச் சேர்ப்பதிலும் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு இருந்த விருப்பம் நமக்குப் பெரும் வியப்பைத் தருகிறது.


உலகில் உள்ள மக்கள் எல்லோரும் நன்றாக வாழவேண்டும், சமத்துவம் வேண்டும், சமூக நீதி வேண்டும், பாலின சமத்துவம் வேண்டும். ‘எல்லோருக்கும் எல்லாம் வேண்டும்‘ என்று விரும்பியவர்கள் மாமேதைகள் எல்லாம் புத்தகங்களைக் காதலித்திருக்கிறார்கள், புத்தகங்களை விரும்பியிருக்கிறார்கள்,தேடித்தேடிப் போய் படித்திருக்கிறார்கள். பொதுவுடைமைக் கருத்தைத் தன் புத்தகங்கள் வாயிலாக விதைத்த தோழர் காரல் மார்க்ஸ் அவர்கள் லண்டன் நூலகத்தில் செலவழித்த  நேரம் பற்றியும், உணவு, உறக்கம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது நோக்கத்திற்காகத் தேடித்தேடி புத்தகங்களை வாசித்த அவரின் நூலக நேரம் பற்றியெல்லாம் அவரின் வாழ்க்கை வரலாற்றில் படிக்கிறபோது நமக்கு வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.




ஒருமுறை அறிஞர் அண்ணா அவர்கள் காரிலேயே மும்பை சென்றிருக்கிறார். விமானத்தில் செல்லாமல் ஏன் மூன்று நாள்கள் காரிலேயே பயணம் செய்து மும்பை சென்றீர்கள் என்று கேட்டபோது பத்துப் புத்தகங்களைப் படிக்க வேண்டியிருந்தது என்று சொன்னாராம் அறிஞர் அண்ணா. படிப்பதற்காக எளிதான விமானப் பயணத்தை விட்டுவிட்டு, கடினமான கார் பயணத்தை அண்ணா அவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.  இன்றைக்கு ஆடியோ புத்தகங்கள் வந்து விட்டன. காரிலோ மற்ற வாகனங்களில் செல்லும் போதோ, காதில் நாம் ஹெட்போன்களை மாட்டிக்கொண்டால், நாம் விரும்புகிற புத்தகத்தை இன்னொருவர் வாசிக்க, பொறுமையாக நாம் கேட்டு உள்வாங்கிக்கொண்டே போகலாம். நாம் வாசிப்பதை எளிதாக்க எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன. ஆனால், புத்தகத்தை வாசிக்கும் அல்லது வாசிப்பதைக் கேட்கும் பழக்கம் என்பது குறைந்துகொண்டே போகிறது என்பது இன்றைய வருந்தத்தக்க நிலைமை.



நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விட்டால் பெற்றோர்களுக்குப் பெரும் சுமை குறையும். தனியாக அதைச் செய், இதைச் செய் என்று குழந்தைகளுக்குக் கட்டளை இட்டுக்கொண்டே இருக்கவேண்டிய அவசியம் இல்லை. வாசிப்பின் மூலமே பலவற்றை அவர்களாகவே கற்றுக் கொள்வார்கள். தங்களைத் தாங்களே திருத்திக்கொள்வார்கள். கவலைகளைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிமுறைகளைத் தாங்களே தேடிக் கொள்வார்கள். தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்வார்கள்; செதுக்கிக் கொள்வார்கள்.


திருமணத்தின்போது தாம்பூலத்திற்கு மாற்றாக சிறு நூல்களை அச்சிட்டு வழங்கலாம் என்று தந்தை பெரியார் அவர்களே வலியுறுத்தி
யுள்ளார்கள். வீரமணியே சொன்னார், “அய்யா எத்தனையோ திருமணத்திற்குத் தலைமை வகித்துச் சிறப்புரை எல்லாம் ஆற்றியிருக்கி
றீர்கள். இது திருமண சம்பந்தமாக இருக்கின்றது. அந்தப் பேச்சுகளில் பத்து, இருபது பேச்சுகளைப் புத்தகமாகப் போட்டுவிட்டு, அதற்குப் பெயரை வேண்டுமானால் ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்ற தலைப்புப் போட்டுப் புத்தகமாகக் கொடுக்கலாம்” என்று சொன்னார் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த நூல் இன்றைக்கும் நமக்குக் கிடைக்கிறது.

பெரும்பாலான நம், தோழர்கள் கடைப்பிடிக்கும் பழக்கம் நமது இல்ல விழாக்களுக்கு வருபவர்களுக்கு நூலினைப் பரிசாகக் கொடுத்து
அனுப்புவது. எல்லோரும் இதனைக் கடைப்பிடிக்கவேண்டும். எளிய முறையில் நடைபெறும் திருமணங்களிலும் கூட ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை இந்த நூல் பரிசுக்கு என்று ஒதுக்க வேண்டும். வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் ‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச்சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். பெரியவர்களுக்குக் கொடுக்கக்கூடிய ஆகச்சிறந்த பரிசும் கூட ஒரு புத்தகம்தான். நமது இல்ல விழாக்கள் என்று சொல்கிறபோது தந்தை பெரியார் இயக்கத்தவர்கள் மட்டுமல்ல, நமது உறவினர்கள், நமது நண்பர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் என்று பலதரப்பட்டவர்கள் வருவார்கள். அவர்களுக்கு நம் இயக்கத்து கருத்துகளும் அடங்கிய நூல்களைக் கொடுப்பதென்பது மிகப்பெரும் பரிசாகவும் நமது கருத்துகள் பரவும் விதமாகவும் அமையும்.

இல்ல விழாக்களில் வருகிறவர்களில் பெரும்பாலோர் புத்தகப் பரிசு என்பதை விரும்பக் கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், ஒரு எழுத்தாளரின் 2500 புத்தகங்களைப் பதிப்பகத்திலிருந்து விலைக்கு வாங்கி, தன் வீட்டுத் திருமணத்திற்கு வந்த எல்லோருக்கும் ஒரு பையில் வைத்து அளித்தார். எல்லோரும் மகிழ்ச்சியாகப் பெற்றுக்கொண்டு சென்றார்கள். ‘புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம்’ என்பது சீனப் பழமொழி. நமது திராவிட இயக்கக் கருத்தியல்களும் ஒரு பூந்தோட்டம்தான்.

புத்தகங்களைப் பரிசாகப் பெறுகின்றபோது, அதுவும் நூலாசிரியரின் கையினால் பெற்றோம் என்றால் அதனைப் படித்து முடித்து, அதனைப் பற்றிய நமது கருத்தினை அவருக்குத் தெரிவிப்பதும் மிகவும் தேவையானதாகும். ஆசிரியர் அய்யா அவர்கள், தான் விரும்பிப் படித்த நூலினைப் பற்றி, வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்பில் எழுதினால் நூலாசிரியர்கள் பெறும் மகிழ்ச்சியை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். 75 வயதினைக் கொண்டாடிய தனது வாழ்க்கையினை’விறகு வண்டி முதல் விமானம்வரை’ என்னும் நூலினை எழுதிய, மதுரை திராவிடர் கழகத்தின் காப்பாளர் சே.முனியசாமி அவர்கள், அய்யா ஆசிரியர் அவர்கள் தனது நூலினைப் பற்றி எழுதியதும் அப்படி ஓர் ஆனந்தக் கூத்தாடினார். மகிழ்ந்தார். நமது தலைவர் அவர்களின் வழியைப் பின்பற்றி அவரின் தொண்டர்களாகிய நாமும் நமது இயக்க நூல்களை,இயக்கத்தவர் எழுதி இருக்கும் நூல்களை வாசிப்பதும், வாசித்து முடித்தபின்பு அந்த நூலைப்பற்றி எழுதுவதும் பேசுவதும் கூட நமது கடமையே ஆகும்.


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஜூன் 16-30

No comments: