Sunday, 13 July 2025

ஒற்றை வாளி-சிறுகதைத் தொகுப்பு - பேரா சு.காந்திதுரை

https://www.youtube.com/live/7dCxL_hnLAo?si=lnvr8rnPSljTf6c3
வாருங்கள் படிப்போம் குழுவினை அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்கள் வாட்சப் குழுவாக நிறுவி,அதன் ஒருங்கிணைப்பாளராக பேரா பெ.உமா மகேஸ்வரி அவர்கள் மிகச்சிறப்பாக கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகின்றார்கள்.வாரந்தோறும் ஒரு நூல் மதிப்புரை சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகின்றது. அதனுடைய 311வது நிகழ்வில், மதுரை தியாகராசர் கல்லூரி ,தமிழ்த்துறை தலைவர் அய்யா பேரா முனைவர் சு.காந்திதுரை எழுதிய சிறுகதைத் தொகுப்பான 'ஒற்றை வாளி' என்ற நூலினை திறனாய்வு செய்தேன். அய்யா சு.காந்திதுரை அவர்கள் மிக நெகழ்ச்சியாக ஏற்புரை நிகழ்த்தினார்.அந்த நிகழ்வின் இணைப்பு மேலே உள்ள சுட்டியில் உள்ளது.விரும்புகிறவர்கள் கேட்கலாம்.'வாருங்கள் படிப்போம் ' குழுவில் வந்த பின்னோட்டங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

எழுத்தாளர் பேராசிரியர் காந்திதுரை என்கின்ற ஒரு அற்புதமான படைப்பாளியை நமக்கு அறிமுகம் செய்து வைத்த நேரு அண்ணாவிற்கு நன்றி.

அதிலும் அவர் இன்றைய வளரும் எழுத்தாளர்களுக்கு வழி காட்டினார் என்று தான் கூற வேண்டும். அதிகாலை 3 மணிக்கு எழுத ஆரம்பித்து விடுவாராம்..தினம் தோன்றுபவற்றை தாளில் எழுதி வைத்து விடுவார்..இயல்பாக நடக்கும் விஷயங்கள்..ஏக்கங்கள்,மண் மணம் இப்படி... இரு நாட்களுக்கு முன்பு தான் நேரு அண்ணாவிடம் கூறினேன்.உடனே தயாராகி ஒரு சிறப்பான திறனாய்வை வழங்கியமைக்கு வாழ்த்துகள்!!பங்கேற்றுச் சிறப்பித்த தோழமைகளுக்கு நன்றி!!

பேரா உமா மகேஸ்வரி அவர்கள்,ஒருங்கிணைப்பாளர்,’வாருங்கள் படிப்போம்’

 

ஒரு எளிய மனிதராக விளங்கும் சிறப்புக்குரிய ஒரு ஆளுமையை அறிமுகப்படுத்தினீர்கள் அண்ணா. மிக்க நன்றி!

இன்னும் ஓரிரு கதைகளைச் சொல்வீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

ஆனால் நேரம் இடம் கொடுக்கவில்லை என்பதை அறிந்து நீங்கள் முடித்துக் கொண்டது கொஞ்சம் ஏமாற்றம் தான். 

பரவாயில்லை .ஒரு கிணற்றுத் தண்ணீருக்கு ஒரு வாளித் தண்ணீர் பதம்!

பேரா. மகாதேவன் அவர்கள்,சென்னை.

 

அருமையான நூலைத் தேர்ந்தெடுத்து அதனை பாங்குற திறனாய்வு செய்த அண்ணன் நேரு அவர்களுக்குப் பாராட்டு

டாக்டர் கோ.ஒளிவண்ணன் அவர்கள், நிறுவனர் ‘வாருங்கள் படிப்போம்’, மாநிலத் துணைத்தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

 

மிகச்சிறப்பானதொரு நூல் அறிமுகம்  நேரு அண்ணா…

இசை ஆசிரியர் லோ.குமரன் அவர்கள்,சென்னை.

 

சிறப்பான நூல் அறிமுகம் அய்யா. வணக்கங்களும் வாழ்த்துகளும்

தகடூர். மு.சக்திவேல் அவர்கள்.



 

அருமையான நூல்.அருமையான திறனாய்வு.மனமார்ந்த பாராட்டுகள் நேரு அண்ணாவிற்கு…

எழுத்தாளர் ஆசிரியர் கலையரசி,அவர்கள்.

 

இன்றைய சிறப்பு விருந்தினர், படைப்பாளர் பேராசிரியர் காந்திதுரை ஐயா அவர்களை, கடந்த மாதம், மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ் கல்லூரி யில் நடந்த என்னுடைய கவிதைநூல் திறனாய்வில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு, எனக்கும், நேரு சார் க்கும் கிடைத்தது. முதன்முறை பார்த்தது போல் இல்லாமல் அவ்வளவு இயல்பாக, உரிமையாக பேசினார். அவர் இவ்வளவு படைப்புகள் படைத்திருப்பது இன்று தான் தெரியும்..

இன்று, நேரு சார் திறனாய்வு செய்த கதைகளில் அவ்வளவு யதார்த்தம்..

இப்படி,மண் சார்ந்த, மக்களின் மனம் சார்ந்த, இத்தனை சிறந்த படைப்பாளரை அறிமுகம் செய்த தோழர் - நேரு அவர்களுக்கும், உமா mam க்கும் என் அன்பும்.. நன்றியும்

கவிஞர்.வினோத் பரமானந்தன் அவர்கள்,இராணுவஅதிகாரி,இராஜஸ்தானில் இருந்து.



வணக்கம் சார்🙏🏿
நேற்றைய திறனாய்வு மிக அருமையாக இருந்தது.
(Story Vs Plot )

கதை மற்றும் அதன் கருத்து- இதன் வேறுபாட்டை நேற்று மூன்று கதைகளிலும் தெளிவாக கூறினீர்கள்.

முதலில் புத்தகத்தைப் பற்றி, அதன் பதிப்பாளர் பற்றி,பதிப்புரை ,பின்பு கதை ஆசிரியர் பற்றி, அவருடைய ஏனைய படைப்புகள், பின்பு கதைக்குள் செல்வது என்று புத்தகத் திறனாய்வு format புரிந்து கொள்ள முடிந்தது. 

ஒவ்வொரு கதையிலும் அவருடைய மொழி மற்றும் அதன் நடையை பற்றி வாக்கியங்கள் வாசித்து திறனாய்வு செய்தது மிகவும் அருமை.

அதில் உங்கள் அனுபவத்தையும் நீங்கள் மதுரை மார்க்கெட்டில் சந்தித்த  ஒரு முதியோரின் குடும்பத்தைப் பற்றியும்  பகிர்ந்து கொண்டீர்கள்.

 கதைகள் அனைத்தும் எழுத்தாளர் அனுபவம்,அவர்  பார்வையில், வாசகர்கள் புரிந்து கொள்ளக்கூடிய நடையில் எளிமையாக இருக்க வேண்டும் என்பதை 
புரிந்து கொள்ள முடிந்தது.


கதை ஆசிரியர் -அவர் எப்படி காலை 3 மணிக்கு எழுந்து கதை எழுதி, இந்த 11 கதைகளையும் தன் கதை  குவியல்களில் இருந்து தேர்ந்தெடுத்து, பதிப்பித்த விதம் மிகவும் சுவாரசியமாக இருந்தது .


 தங்களின் பல வேலைகளுக்கு இடையே , இந்தப் புத்தகத்தை எடுத்து திறனாய்வு செய்து, அந்தக் கதை திறனாய்வின் format ல் செய்தது உங்கள் அனுபவத்தை குறிக்கின்றது.

 மேலும் உங்கள் பல முயற்சித் திட்டங்கள் வெற்றி பெற ,
எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 மிக்க நன்றி🙏🏿
ஶ்ரீதேவி

வாருங்கள் படிப்போம் குழு உறுப்பினர் வாட்சப் வழியாக...

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி...வா.நேரு

Friday, 4 July 2025

நூல் தேர்வு- முனைவர் வா.நேரு

 

சென்னையில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பு நான் சென்று பார்த்தபோது அவ்வளவு பெருமலைப்பாக இருந்தது. பல மாடிக் கட்டடங்கள், குளிரூட்டப்பட்ட அறைகள், சிறுவர், பெண்களுக்கு எனத் தனித்தனிப் பகுதிகள் எனப் பார்த்தவுடன் வியப்பும் மகிழ்ச்சியும் அளித்தது. சென்னையில் கலைஞர் அவர்கள் காலத்தில் அவர் பார்த்து பார்த்து அண்ணாவின் பெயரால் கட்டப்பட்ட  நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம். ஆனால், அதன் வடிவமைப்பை டாக்டர் கலைஞர் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தூண்டுதலால் உருவாக்கினார் என்றால் அது மிகையில்லை.



அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும், இயக்க நிகழ்ச்சிகளுக்கிடையே நூலகத்தைப் பார்வையிடுதலும் சேர்ந்து இருக்கும். அப்படிச் சிங்கப்பூருக்கு பல முறை சென்ற நேரத்தில் அங்கு இருந்த நூலகமும், அதன் வடிவமைப்பும், பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அங்கு நூல்கள் எளிமையாக வாசகர்கள் எடுக்கும் வண்ணம் அடுக்கப்பட்டிருந்த முறையும் அய்யா ஆசிரியர் அவர்களை வெகுவாக ஈர்த்து இருக்கிறது. அங்கு இருந்த நூலகர் அம்மையாரோடு அய்யா ஆசிரியர் அவர்கள் நட்புப் பாராட்டி, உரையாடியபோதுதான் அங்கு இருக்கும் நூலகம் எப்படி அமைக்கப்பட்டது, எப்படி எல்லோருக்கும் பயனளிக்கும் வகையிலே இருக்கிறது என்று பல தகவல்களை அறிந்து அத்தகவல்களை டாக்டர் கலைஞர் அவர்களிடம்
குறிப்பிட்டிருக்கிறார். அதனால் உந்தப்பட்ட டாக்டர் கலைஞர் அவர்கள், அறிஞர் அண்ணாவின் பெயராலேயே மாபெரும் நூலகத்தைச் சென்னையிலே தன் ஆட்சிக்காலத்தில் அமைத்து ஒரு புதிய வரலாற்றைத் தொடங்கி வைத்தார் என்பது வரலாறு.

திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் முதன்முதலாகக் கலைஞர்  நூற்றாண்டு நூலகத்தை மதுரையிலே அமைத்தார்.கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்ற பெரிய நூலகத்திற்குச் செல்லும் பொழுது பல நேரங்களில் நமக்கு எந்த நூலை வாசிப்பது அல்லது எந்த நூலை எடுத்துச் சென்று வாசிப்பது என்ற குழப்பம் வரும்.

“நான் படிக்க விரும்பும் புத்தகம் நல்ல புத்தகம்தானா? பயனுறு புத்தகம்தானா? என்று அறிந்து அதனைத் தேர்வு செய்து படிப்பதே முக்கியம்.எப்படிப்பட்ட புத்தகங்களை நாம் வாசிக்கவேண்டும் என்று முடிவெடுப்பதற்குச் சிலஇயக்கங்கள், சில வாட்சப் குழுக்கள் வழிகாட்டுகின்றன. பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக கடந்த சில ஆண்டுகளாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6.30 முதல் 8 மணி வரைதிராவிட இயக்க எழுத்தாளர்களின் புத்தகங்கள் மதிப்புரை செய்யப்படுகின்றன. அமெரிக்காவில் இருக்கும் மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்கள் எல்லாம் இணைந்து  நடத்தும் ‘தமிழ் ரீடிங் சர்க்கிள்’ என்னும் வாட்சப் குழுமத்தில் தொடர்ச்சியாக நூல் அறிமுகங்கள் நடைபெறுகின்றன.இப்படிப்பட்ட குழுக்களின் வாயிலாகவும் நாம் எந்தப் புத்தகங்களைப் படிக்கலாம், படிக்கவேண்டும் என்று முடிவு செய்யலாம்.

நூலைப் படி, சங்கத் தமிழ் நூலைப்படி, காலையில் படி, கடும்பகல்படி மாலை இரவு முழுவதும் படி என்று படி படி என்று சொல்லிக்கொண்டே வரும் புரட்சிக் கவிஞர் சிலவற்றைப் படிக்காதே என்று சொல்கிறார். “பொய்யிலே முக்காற்படி புரட்டிலே காற்படி, வையகம் ஏமாறும்படி வைத்துள்ள நூல்களை ஒப்புவது எப்படி? என்னும் கேள்வியைக் கேட்கின்றார். எனவே, நூலகத்திற்குச் செல்லும் பொழுது சில நேரங்களில்  வையகம் ஏமாறும்படி வைத்துள்ள நூல்களை வாசிக்க வேண்டாம் என்று முடிவு எடுப்பது நல்லது.

பொது நூலகம் என்று வருகின்றபோது, அங்கு எல்லாவகையான புத்தகங்களும் வாங்கி வைக்கப்படுகின்றன.கற்பனை இதிகாசங்கள், புராணங்கள், அறிவுக்கு ஒவ்வாத, நடைமுறை வாழ்விற்குப் பயன்படாதவற்றை ஒதுக்கிவிட்டு, பகுத்தறிவு உகந்த, வாழ்வைச் செம்மைப்படுத்தக்கூடிய, முன்னேற்றத்திற்கு வழிகாட்டக்கூடிய அறிவு வளர்ச்சிக்கு உதவக்கூடிய நூல்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும்.

இலக்கிய வகைகளில் சிலருக்குக் கவிதைகள் பிடிக்கும், சிலருக்குக் கதைகள் பிடிக்கும், சிலருக்குக் கட்டுரைகள் மட்டுமே பிடிக்கும். இந்த மனப்பான்மைக்குத் தக்கவாறு நாம் விரும்பும் இலக்கிய வகைமையில்  புத்தகங்களை எடுத்துக்கொள்வதற்கு நூலகங்கள் வழி வகுக்கின்றன. சிலர் மட்டும் கதை, கவிதை, கட்டுரை என எல்லாவற்றையும் எடுத்துப் படிப்பார்கள்.

நம்முடைய குழந்தைகள் நூலகத்திற்குச் சென்று படிக்கின்றபொழுது அவர்கள் பெரும்பாலும் சிறுவயதில் கதைகளைத்தான் தேர்ந்தெடுத்துப் படிப்பார்கள். அதிலும் தெனாலிராமன் கதை, பீர்பால் கதை, ஈசாப் கதை போன்ற புகழ்பெற்ற கதைகளைக் குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு பெரியார் பிஞ்சு மாத இதழ் பயனுள்ள ஒரு மாற்று. நமது இயக்கத்தால் நடத்தப்படும் ‘பெரியார் பிஞ்சு’ இதழ் சிறப்பான கதைகளோடு, அறிவியல் செய்திகள், கட்டுரைகள், சித்திரக் கதைகள் என்று அனைத்தையும் உள்ளடக்கியதாக வருகிறது. ’பெரியார் பிஞ்சு’ இதழை ஒழுங்காக ஒரு குழந்தை வாசித்தால், வாசிப்பில் ஈர்ப்பு வருவது மட்டுமல்ல; அறிவியலிலும் பெரும் ஈர்ப்பு வரும்.



நூலகத்திற்குச் சென்று நூலைத் தேடுவது பழைய முறை. கணினி முன் அமர்ந்துகொண்டு நாம் படிக்கவிரும்புகிற புத்தகம் நூலகத்திற்குள் இருக்கிறதா என்று தேடுவது புதிய முறை. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் வலைத்தளத்திற்குள் சென்று, அய்யா கு.வெ.கி. ஆசான் அவர்கள் மொழி பெயர்த்த ‘கடவுள் ஒரு பொய் நம்பிக்கை’ என்னும் புத்தகம் இருக்கிறதா என்று தேடுபொறியில் கேட்டால், இருக்கிறது, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இரண்டாவது தளத்தில் நுழைந்தவுடன் முதல் பகுதியில் இருக்கிறது என்று வரிசை எண் உட்படச் சுட்டிக்காட்டி அடையாளம் காட்டுகிறது. பின்பு நேரிடையாகச் சென்று அந்தப் புத்தகத்தை எடுத்து வந்து வீட்டில் வாசிக்க முடிகிறது.குறிப்புகள் எடுக்க முடிகிறது.

உருவாக்கப்பட்டுப் பல இலட்சம்பேர் வந்து செல்லும் கலைஞர் நூற்றாண்டு நூலகம், உருவாக்கப்படவிருக்கும் கோயம்புத்தூர் தந்தை பெரியார் நூலகம், திருச்சியில் பெருந்தலைவர் காமராசர் நூலகம், திருநெல்வேலியில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நூலகம் ஆகியவை மிகப்பெரிய நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றன. மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.தொடரட்டும் நூலகங்கள் உருவாக்கம்! வெல்லட்டும் திராவிடம்!!

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஜூலை 1-15,2025.