அண்மையில் படித்த புத்தகம்: தோன்றாத்
துணை
ஆசிரியர் : பெருமாள் முருகன்
பதிப்பகம் காலச்சுவடு
முதல் பதிப்பு ஜூலை 2019; நான்காம்
பதிப்பு செப்டம்பர் 2022
மொத்தப் பக்கம்
176 விலை ரூபாய் 220
கலைஞர் நூற்றாண்டு நூலக எண் : 928.94811
PER;2.
சில புத்தகங்களை
வாசிக்கும் போது முழுமையாக அந்தப்
புத்தகம் நம்மை வசியப் படுத்திக்கொள்ளும். அந்தப் புத்தகம் மீண்டும் மீண்டும் நம்மை வாசிக்கத் தூண்டும். அப்படி வாசிப்பதின் மூலமாக நம்முடைய நினைவுக் கிடங்கிலிருந்து பல விவரங்கள்
தோண்டி எடுக்கப்பட்டு புதுப்பிக்கப்படும். ஒப்பிடப்படும். அப்படி ஒப்பிடப்பட்ட சில நினைவுகள்
நம்மைத் துள்ளிக் குதித்து பால்ய நினைவுகளில் போய் விளையாடச்சொல்லும்.
அப்படித்தான் புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய இந்தத் ‘தோன்றாத் துணை’ என்ற புத்தகம் என்னை ஈர்த்தது. இது புதினம் அல்ல, சிறுகதை அல்ல, தன்னுடைய தாயைப் பற்றி பெருமாள் முருகன் அவர்கள் எழுதி இருக்கக் கூடிய வாழ்க்கை வரலாறு.’ எந்த இடத்திலும் புனைவுகள் இல்லாத ஆனால் அதே நேரத்தில் எதார்த்தத்தை மிக இயல்பாக சொல்லக்கூடிய ஒரு புத்தகமாக இந்தப் புத்தகம் இருக்கிறது.
இந்தப் புத்தகம் ஒரு வகையில் பெருமாள் முருகனின் அம்மாவான
பெருமாயி பற்றியது. இன்னொரு வகையில் பெருமாள் முருகன் அவர்களின் இளமைக் காலம் பற்றியது. இருவரது வாழ்க்கையையும் ஒரு சேரச்
சொல்லிச்செல்லும் புத்தகம் இது. தன்னைப் பற்றி பெருமாள்முருகன் சொல்லி இருக்கக்கூடிய பல்வேறு
செய்திகள் சில நேரங்களில் சிரிக்க வைக்கின்றன,பல நேரங்களில் சிந்திக்க வைக்கின்றன. தனது நூலகத்தில்
இருக்கும் புத்தகங்களில் சில
வாங்கியவை,சில இரவல் பெற்றவை,சில
திருடியவை என்று சொல்கிறார்.புத்தகத்தில் நிறைய விசயங்களை வெளிப்படையாகப் பேசுகிறார். தன்னுடைய அம்மாவின் இயல்பைப் பற்றிச் சொல்லுகிற போது அவர் எவ்வளவு கோபக்காரர் என்பதையும் எவ்வளவு
வைராக்கியம் உடையவர் என்பதையும் இணைத்துச் சொல்லியிருக்கிறார். பல அத்தியாயங்களை வாசிக்கும்போது, எனது அம்மா முத்துக்கிருஷ்ணம்மாளை
,பெருமாள் முருகனின் தாயார் பெருமாயி
நினைவுபடுத்திக்கொண்டேயிருந்தார்.
முதல் அத்தியாயத்திலேயே கம்மங்காட்டில் இருந்த
அந்த கம்மந்தட்டைகளை இரவோடு இரவாகச் சென்று அதிலும் சின்னப் பிள்ளைகள் இரண்டுபேரையும்
உடன் அழைத்துக் கொண்டு சென்று அந்தக் கம்மங்காட்டில்
இருந்த அத்தனை கம்மந்தட்டைகளையும் நீக்கியது என்பது மிகப்பெரிய செயல்..’குடல் கறிக் கதை ‘ பற்றி நூலாசிரியர்
அருமையாகச் சொல்லி இருக்கிறார்.ஆனால் அதற்குப் பின் அவரது அண்ணன் வாழ்க்கை
முழுவதும் குடல் கறியைச் சாப்பிடவில்லை என்று குறிப்பிடும்போது, வருத்தம்தான்
ஏற்படுகிறது.
முறுக்குச்சுடுதல் எங்கள் ஊரில்
இருந்த எண்ணெய்ச் செக்கை,அந்த அமைப்பை,அதனை ஓட்டியவரை என்று அனைத்தையும் நினைவு
படுத்தியது.மொய்க்கணக்கு கந்தாயிப்பாட்டி நினைவில் நிற்கிறார்.ஓராயிரம் கண்சட்டை,பெருமாள்
முருகனின் கோபத்தை,அதற்கான நியாயத்தை,அதை அவரது தாயார் புரிந்துகொண்டதை எல்லாம்
அற்புதமாக விவரிக்கிறது.
குழந்தையாக
இருக்கும்போது நானும் கூட குண்டாகத்தான் இருந்திருக்கிறேன் .சாப்டூரில் எங்கள் தெருவில் இருந்த அண்ணன் காய்கறிக் கடை ராமகிருஷ்ணன்
அவர்கள் எனது இளம் வயதில் சொல்லிக் கொண்டே இருப்பார் சேடப்பட்டி ஒன்றிய அளவில் , குண்டு குழந்தைக்கான போட்டி வைத்தார்கள் நான் உன்னை ஒன்றைரை வயதில் தூக்கிக் கொண்டு போனேன். உனக்குத்தான் முதல் பரிசு கிடைத்தது என்று சொல்லிக்
கொண்டிருப்பார். அப்படித்தான் பெருமாள் முருகனும் மிகச்சிறிய
வயதில் குண்டாக இருந்தது பற்றிக் குறிப்பிடுகிறார்.
தன்னுடைய வீட்டில் இருந்த எருமை மாடுகளைப் பற்றி, தங்கள் வீட்டில் சில நேரங்களில் அமைந்த வறுமை நிலையைப் போக்குவதற்கு அந்த
மாட்டின் பால் மற்றும் பணம்தான் மிகப்பெரிய உதவியாக இருந்தது என்று எழுதி
இருக்கிறார். எனது வாழ்வில் கூட அப்படித்தான் பல நேரங்களில் கல்லூரிக்கு
பணம் கட்ட வேண்டும் என்றாலும் பள்ளிக்கூடத்திற்கு பணம் கட்ட வேண்டும் என்றாலும்
கூட பால் பண்ணைகளில் போய் நின்றிருக்கிறேன்,எருமை
மாட்டுப் பாலை ஊற்றுகிறோம் என்று சொல்லி அட்வான்ஸாக பணம் வாங்கி
வந்திருக்கிறேன் .
அதேபோல தன்னுடைய
அம்மாவுடைய இயல்பு பற்றி சொல்லும் பொழுது படபடவென்று பேசுவார்கள் சில நேரங்களில்
நேருக்கு நேர் திட்டிப் பேசி விடுவார்கள் என்று சொல்லி இருக்கிறார்
எப்படி எல்லாம் திட்டுவார் என்பதைப் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார் போன தலைமுறை இப்படித்தான்
இருந்திருக்கிறார்கள். மனதிற்குள் ஒளித்து
வைப்பது எல்லாம் கிடையாது. அப்பனாக இருந்தாலும் ,புருசனாக இருந்தாலும் கோபம் வந்தால்
வசவுதான். எங்கள் அம்மாவும் இப்படித்தான் திட்ட வேண்டும் என்று தோன்றினால் நன்றாகத் திட்டி விடுவார்.
கல்லூரியில் வேலை
பார்க்கும் மருமகளான எழிலரசி தன்னுடைய அத்தையான
பெருமாயி பற்றி’ அத்தையம்மா ‘
என்னும் தலைப்பில் எழுதியிருக்கிறார்.அத்தையம்மா என்னும் சொல்லே அம்மா பெருமாயி அவர்களின்
பெருமையைச் சொல்லி விடுகிறது.
மாத மாதம் பணம் கட்டி எடுக்கும் ஏலச் சீட்டு பற்றி எனக்குத் தெரியாது, சீட்டு விளையாடத் தெரியாது, நீச்சல் அடிக்கத் தெரியாது. இவை யாவும் என்னுடைய
அத்தைக்குத் தெரியும் அவற்றைச் சொல்லி என்னிடம் எப்போதும் பெருமைப்பட்டது
கிடையாது, என்னை எப்போதும் அவர் குறைத்து பேசியது இல்லை என்று குறிப்பிட்டு
‘ என்னை என் படிப்போடும் பணியோடும் பொருத்தி மரியாதையாக நடத்தியவர்,உணர வைத்தவர் ‘
எனக் குறிப்பிடுகிறார்..
தனது அம்மாவிற்கு மூட நம்பிக்கை எவ்வளவு
இருந்தது என்பதை அதனால் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை எல்லாம் ‘இரும்புக் கைவிலங்கு ‘அத்தியாயத்தில்
விவரிக்கிறார்.இன்னும் ஒவ்வொரு அத்தியாயம் பற்றியும் எழுதலாம்.நானும் ஒரு நூல்
எழுதும் அளவிற்கான நினைவுகளை இந்தப் புத்தகம் கிளறி விட்டிருக்கிறது அருமையான
அனுபவத்தைக் கொடுத்த புத்தகம்.அருமையான அட்டைப்படம். எப்போதும் போல நல்ல புத்தகத்தை நூலகத்தில் எடுத்துப்
படித்தால்,அந்தப் புத்தகத்தை விலைக்கு வாங்கி வீட்டில் வைப்பது போல இந்தப் புத்தகத்தையும்
வாங்கி வீட்டில் வைக்கவேண்டும்.
வா.நேரு,
27.10.2025


6 comments:
அருமையான விமர்சனம்
நன்றி நண்பா...
Arumaiyana vimarsanam
நன்றி
பெருமாள் முருகன் போன்று நீங்களும் தாயை நேசித்தவர். அதனால் இந்த புத்தகம் உங்களுக்கு பிடித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
நன்றிங்க அண்ணே...
Post a Comment