நிகழ்வும்
நினைப்பும் ..ஆகஸ்ட் 9,2026…நட்பு தமிழ் வட்டம் ஆண்டுவிழா..
ஏழாம் ஆண்டு விழா மதுரை
அழகர் கோவில் ரோட்டில் உள்ள பிரபு மகாலில்
காலை 8.45 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது .இடையில் ஒரு மணி நேரம் உணவு இடைவெளி தவிர்த்து தொடர்ச்சியான நிகழ்வுகள். காலையில் பேரா நாவினி நாசர் அவர்களின் வரவேற்புரையோடு
முதல் நிகழ்வு தொடங்கியது.இசையறிஞர் விருதை
சி.த.ரெங்கராசன் அருமையாகப் பாடினார்.
தீர்மானங்களைப் பாவலர்
சுப.முருகானந்தம்
வாசித்தார். வழக்கறிஞர் மு,ஆசைத்தம்பி உரையாற்றினார்
பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம்
புரட்சிக்கவிஞர் பாடலையும் தன் பாடலையும் பாடினார். அடுத்து ‘பிள்ளை
நிலாக்கள் ‘என்னும் தலைப்பில் . மாணவ மாணவிகளின் கதை சொல்லல்,திருக்குறள் ,புரட்சிக்கவிஞர்,தந்தை பெரியார் பற்றிய
உரைவீச்சுகளோடு நடந்தது. குழந்தைகள் பேசினார்கள், பாடினார்கள், ஆடினார்கள் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.அந்த நிகழ்வு முடிந்தவுடன்
நிகழ்வினை வாழ்த்தி
நான் பேசினேன்.
நிகழ்வின்
சிறப்பு விருந்தினர்களாக அய்யா புலவர்
நா நா ஆறுமுகம்
அவர்களிடம் படித்த அவரது மாணவர்கள் மேனாள்
நீதியரசர் மா.கோமதி நாயகம் அவர்களும்
திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம் அவர்களும்
கலந்து கொண்டனர். இரண்டாவது
நிகழ்வாக நூல் வெளியீடு நடைபெற்றது. ‘சொல்லும் பொருளும்
தொகுதி-2’ நூலினை
சிறப்பு விருந்தினர்கள் வெளியிட முதற்படியினைத் திருமதி குன்றக்குடி
தனலெட்சுமி பெருமாள் அவர்களும்
மதுரை கிருபாராணி முத்துசிங்கம்
அவர்களும் பெற்றனர். முதன்முதலில் நட்பு தமிழ் வட்டம்
தொடங்கியபோது மிகவும் உறுதுணையாக
இருந்தவர்கள் பெருமாள் அவர்களும்
முத்துசிங்கம் அவர்களும் ஆவார்கள். இன்றைக்கு அவர்கள்
இல்லையென்றாலும் ,அவர்களின் உதவியினை
என்றும் மறக்கமுடியாது.எனவே அவர்களின் குடும்பத்தினரை
அழைத்து முதற்படியினை வாங்கச்செய்கிறோம்
என்று அய்யா புலவர்
நாநா ஆறுமுகம் அவர்கள்
குறிப்பிட்டார்.அவரின் நன்றியுணர்ச்சி
நெகிழ வைத்தது.
தொடர்ந்து
புலவர் நாநா ஆறுமுகம்
அவர்களின் ‘முரண்களும் அரண்களும் ‘ என்னும் கவிதை நூலும்,’அம்மாக்களும்
அக்காக்களும் ‘ என்னும் சிறுகதை
நூலும் வெளியிடப்பட்டது.தோழமைகள்
திருப்பத்தூர் ம.கவிதா,பன்முகக் கலையரசி
புதுவை வி.இளவரசி
சங்கர்,கவிஞர் சென்னை
சுசித்ரா செல்லப்பன் ஆகியோர்
பெற்றுக்கொண்டனர்.
அதன்பின்பு
விருதுகள் வழங்கப்பட்டன. விருது
பெறுபவர்களின் சிறப்புகள் சிறப்பாக
அவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. உலகச் சாதனையாளர் விருதினை
மதுரை காமராசர் பல்கலைக்கழகப்
பேராசிரியர், தோழமை பெரி.கபிலன் பெற்றார்.வாழ்நாள் சாதனையாளர்
விருதினை திரு அ.கணபதி பெற்றார்.தமிழமது விருதினை
தோழமை, கவிஞர் நிமிர்
பாபு சசிதரன் பெற்றார்.ஆளுமை மகளிர்
விருதினை ,பெரியார் சுயமரியாதைத்
திருமண நிலைய இயக்குநர்
பசும்பொன் அவர்கள் பெற்றார்.இவரை அருமையாக
வி.இளவரசி
சங்கர் அறிமுகப்படுத்தினார். கருப்புச்சட்டை
தோழர்கள் ஒவ்வொருவருக்கும் நாமே விருது
பெற்றது போன்ற நிறைவு ,பசும்பொன் அவர்களுக்குக் கிடைத்த
விருது.தொல்காப்பியப் புலவர் அய்யா வெற்றியழகன் அவர்கள்
தமிழாழி விருதும்,பொற்கிழி
ரூ 10,000 பரிசும்
பெற்றார்.அவரின் பன்முக
ஆற்றலைக் குறிப்பிட்டு அண்ணன்
பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம்
அவர்கள் அவரை அறிமுகப்படுத்தினார்.தொடர்ந்து அமுதசுரபி
விருதினை கவிஞர் பா.பரமானந்தம் பெற்றார்.அவரின் சிறப்புகளைப் புலவர்
நாநா ஆறுமுகம் அவர்கள்
சிறப்பாகக் குறிப்பிட்டார்.தமிழ்த்தாய்
மடி விருது ஜெயஜானகி
அறக்கட்டளைக்கும்,சுழற்சங்கம் விருதுநகர்
ஹிங்டம்-த்திற்கும் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து 2025-ஆம்
ஆண்டுப் படைப்பிலக்கியப் போட்டி பரிசுகள்
வழங்கும் விழா நடைபெற்றது. நடுவர்கள், ரூ 5000 பரிசு பெற்ற நூல்களின் ஆசிரியர்கள்,சிறப்புப் பரிசு பெற்ற நூல்களின்
ஆசிரியர்கள் என அனைவரும்
பாரட்டப்பெற்றனர். பரிசளிக்கப்பட்டனர்.பாராட்டுக்குரிய
தமிழ்த் தோழமைகளுக்கு நட்பு விருது அளிக்கப்பட்டது.காலை முழுவதும்
நட்பு தமிழ்வட்டத்தின் விருதுகளால் அரங்கு
மேலும் குளுமையானது.
அரசு உயர்நிலைப் பள்ளியைச் சார்ந்த கரூர் மாவட்டம் வடசேரி கிராமத்தில்
இருந்து வந்திருந்த குழந்தைகள் அவர்களது பெற்றோர்கள்
பாராட்டப்பட்டார்கள். நட்பு
தமிழ் வட்டத்தின் இணைய வழிக் கூட்டங்களிலே கலந்து கொண்டு தொடர்ச்சியாகத் திருக்குறளையும் மற்றும் தங்கள் தனித்திறமைகளையும் காட்டக்கூடிய அந்தக் குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களோடு
வந்திருந்தார்கள். அரசுப் பள்ளி ஒன்றினை தத்து எடுத்துக்கொண்டு வருடந்தோறும் நடைபெறும்
செயல்பாடுகளை அய்யா நாநா ஆறுமுகம்
அவர்கள் குறிப்பிட்டார்கள்.
மதிய உணவு இடைவேளைக்குப் பின்பு கவியரங்கம் கவிக்கோ துரை.வசந்தராசன் அவர்கள்
தலைமையில்,’இவர்கள் இன்றிருந்தால் ‘ என்னும் தலைப்பில் நடைபெற்றது. ‘முடியரசன் எனும் நான்’ என்னும் தலைப்பில்
கம்பீரமாகக் கவிச்சுடர் முருகுபாண்டியன் பாடினார்.’பட்டுக்கோட்டை எனும் நான் ‘எனும் தலைப்பில் விருதைக்கவி
ரெ.சிறீராம்,சுருக்கமாக ஆனால் மனதில் பதியும்
வண்ணம் கவிதை பாடினார்.’ஒளவை எனும் நான்’ என்னும் தலைப்பில் தோழர் பா.மகாலெட்சுமி பாடினார்.அவரது
கவிதைக்கு அரங்கில் நிறைய கைதட்டல்.’வள்ளுவன் எனும் நான் ‘என்னும் தலைப்பில் நடப்பு
செய்திகளை இணைத்து கணீர் குரலில் கலைச்செல்வன் இராசங்கம் கவிதை பாடினார். கவியரங்கத்தலைவர்
அய்யா கவிக்கோ துரை.வசந்தராசன் அவர்கள் இணைத்தும்
முடித்தும் அருமையாகக் கவிதைகளைக் கொடுத்தார்.
கவிஞர்
மா.கவிதாவின் ‘உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்’ என்னும் நூல் விமர்சன உரையை
அய்யா புலவர் நாநா ஆறுமுகம் அவர்கள் ‘நிமிர் இலக்கிய வட்டத்தின்’
இணைய வழிக்கூட்டத்தில் நிகழ்த்தினார். கவிஞர் மா.கவிதா அவர்கள் மிக அழகாக அச்சிட்டு, வண்ணப் பட அட்டைகளோடு
கொண்டு வந்திருந்தார். அந்த நூல் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து ‘இன்று மனித நேயம் பூத்திருக்கா? பூத்துப்போச்சா ‘ என்னும் தலைப்பில்
பட்டிமன்றம் நடைபெற்றது.பட்டிமன்றம்
மிகச்சிறப்பாக இருந்தது.
இரண்டு
நடுவர்கள் அய்யா புலவர்
நாநா ஆறுமுகம் அவர்களும்
தமிழ்வானம் க.இராசேந்திரன்
அவர்களும்.பூத்திருக்கு எனும் தலைப்பில் ஆரம்பித்த
தங்கை வி.இளவரசி
சங்கர் அவருக்கே உரித்தான
தனிப்பாணியில் அவையைக் கலகலப்பாக்கினார்.கவிஞர்
மூரா அவர்கள் பூத்துப்பூச்சு
எனும் தலைப்பில் நகைச்சுவையோடு
ஆரம்பித்து முடிக்கும்போது மனம் கணக்கச்
செய்துவிட்டார்.அடுத்து வந்த கவிஞர் பொன். நாகராசன் அவர்களும்,விருதை மகள் ம.மரிய ஆன்சி அவர்களும்
சிறப்பாகத் தங்கள் வாதங்களை
எடுத்துவைத்தனர். ஆழமான கருத்துகளை
நடுவராக இருந்த தமிழ்வானம்
க.இராசேந்திரன்
அவர்கள் எடுத்துவைத்தார் என்றால், பேச்சாளர்களின்
பேச்சில் இடை இடையே குறுக்கிட்டு நகைச்சுவையால்
அவையை அதிரவிட்டார் அய்யா புலவர் நாநா ஆறுமுகம் அவர்கள்.இறுதியில் ஓர் ஆழமான,அருமையான தீர்ப்பு
உரையையும் வழங்கினார்.
ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த நிகழ்விற்குத் திட்டமிட்டு பல்வேறு ஆளுமைகளை வெளியூர்களில் இருந்து வரச் செய்து அவர்களுக்குத் தங்கும் வசதிகளைச் செய்து, கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் புத்தகங்கள் வழங்கி, அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பு செய்து ஒவ்வொருவரையும்
பாராட்டிய விதம் அருமை. .மதுரையைச் சார்ந்த கவிஞர் காளிதாஸ், சிறுகதை ஆசிரியர் அய்யனார் ஈடாடி ஆசிரியர் மகேந்திராபாபு என்று பல
படைப்பாளிகளைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு இங்கு கிடைத்தது .பல்வேறு ஆளுமைகள், படைப்பாளர்கள் எல்லோரும்
ஒருங்கிணைந்து வந்திருந்த அரங்கமாக இந்த அரங்கம்
அன்றைக்கு அமைந்தது. அது மட்டுமல்ல திருப்பத்தூரில் இருந்து மா.கவிதா, சென்னையில் இருந்து
நம்முடைய தோழர்கள் தொண்டறம்,பொறியாளர் நர்மதா,இறைவி,இசையின்பன்,ஓசூரிலிருந்து தங்கை செல்வி,அவரது இணையர் செல்வம்,
குடியாத்தத்தில் இருந்து தேன்மொழி,சென்னையில் இருந்து
பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்,அவரது இணையர்
பரிமளம், தாம்பரம் முத்தையன்,புதுச்சேரியில் இருந்து இளவரசி சங்கர்
அவர்கள் அதிலும் குறிப்பாக வாழ்நாள் சாதனையாளராகப் பாராட்டப்பட்ட நம்முடைய பசும்பொன்
அவர்கள்,தங்கை ஜெ.வெண்ணிலா,பேரா சி.மகேந்திரன் ,போட்டோ இராதா,பெரி.காளியப்பன்
என இயக்க உறவுகளாலும் அரங்கம் நிறைந்தது.
எத்தனை எத்தனை நிகழ்வுகள். இத்தனை பேரை இணைத்து இவ்வளவு சிறப்பாகச் செய்தமைக்கு ஆணி வேர் அய்யா புலவர்
நாநா ஆறுமுகம் என்றால் அவருக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கக்கூடிய,அவரது
இணையர் அம்மா நிர்மலா ஆறுமுகம் அவர்கள்… அமைதியாக, மிகவும் ஆழமாக அய்யா நாநா ஆறுமுகம் அவர்களின் இத்தனை வேலைகளுக்கும், இத்தனை பணிகளுக்கும் ஈடுகொடுத்து அவர்கள் நிகழ்விற்கு அடிப்படையாக அமைந்தது
மட்டுமல்ல இறுதியிலே ஓர் அருமையான கவிதையினை வாசித்தார்கள்.தங்கை
லதா முருகானந்தம் சிறப்பான ஒரு கவிதையை வாசித்தார். மிக நிறைவான நாளாக எனக்கு அமைந்தது. கடைசியாக நடைபெற்ற கவிதை வாசிப்பு நிகழ்வில் என்னுடைய மகன் சொ.நே.அன்புமணியும் தன்னுடைய கவிதையை வாசித்தான். இப்படி நிறைய இளைஞர்கள் முதியோர்கள்… பாலின பாகுபாடு
இல்லாமல், வயது பாகுபாடு இல்லாமல் எல்லோரும் தங்கள், தங்கள் கவிதையை வாசிக்கக்கூடிய ஒரு களமாக
அன்று அமைந்தது என்பது அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது அன்றைக்கு
வேறு பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு காலை 9 முதல் மாலை ஆறு மணி
வரை இந்த அரங்கத்திலேயே இருந்தேன். நிறைவான நாள்.மிக மகிழ்வான
நாள்..
நட்புத்தமிழ் வட்டத்தின் தலைவர் புலவர் நாநா ஆறுமுகம்,செயலாளர் பேரா நாவினி நாசர்,பொருளாளர் வழக்குரைஞர்
மு.ஆசைத்தம்பி,இணைச்செயலாளர் கவிஞர் ரெ.சிறீராம்., புரவலர் கவிஞர் பா.பரமானந்தம்,பாவலர் சுப.முருகானந்தம்,மற்றும் செயற்குழு ,. பொதுக்குழு உறுப்பினர்கள் என்று ஒரு பெரிய பட்டாளமே இந்த நிகழ்வுக்காக
வேலை செய்திருக்கிறார்கள்.ஒத்துழைத்து பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்










தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணே!
ReplyDeleteநன்றிங்க அண்ணே @ சுப.முருகானந்தம்.
ReplyDelete