Saturday 31 December 2011

அண்மையில் படித்த புத்தகம் ; முழுமையாகச் செய்யுங்கள் (DO IT TI A FINISH )

அண்மையில் படித்த புத்தகம் ; முழுமையாகச் செய்யுங்கள் (DO IT TI A FINISH )

நூலின் தலைப்பு : முழுமையாகச் செய்யுங்கள் ( DO IT TI A FINISH )

மூல நூலின் ஆசிரியர் : ஆரிசன் ஸ்வெட் மார்டன்
தமிழில் : மலர்க்கொடி B.A.
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம், சென்னை- 600017 தொலைபேசி: 2433 2682
முதற்பதிப்பு : நவம்பர் 2005
நான்காம் பதிப்பு : ஜீலை 2010
மொத்த பக்கங்கள் : 56
விலை : ரூ 28.

மொத்தம் 9 தலைப்புகளில் உள்ள 56 பக்கம் உள்ள புத்தகம். முழுமையாக, அருமையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ள புத்தகம் . மொழி பெயர்ப்பாளருக்கு பாராட்டுக்கள்(ஆங்கிலத்தில் உள்ளதையும் படித்ததால்) .

முழுமையாகச் செய்தல் என்றால் என்ன? ஏன் முழுமையாகச் செய்ய வேண்டும், ஒரு சிறு கவனக்குறைவு எப்படியெல்லாம் பாதிக்கும் போன்ற பல்வேறு தகவல்களை ஆரிசன் விவரிக்கும் போக்கே தனித்தன்மையானது. இளைஞர்கள் அதிலும் குறிப்பாக ஒரே நேரத்தில் ஏகப்பட்ட வேலைகளை அரைகுறையாகச் செய்துவிட்டு பரபரவென்று தெரிவோர் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம். தொழிலுக்கும் நடத்தைக்கும் உள்ள தொடர்பு (THE RELATION OF WORK TO CHARACTER) என்னும் அத்தியாயம் 'ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை " என்பதனை விளக்கும் அத்தியாயம் எனலாம். தனக்கு உண்மையாயிருத்தல், நேர்மையாயிருத்தல் போன்றவையே சாதிக்கத் துணை புரியும் என்பதனை பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கியிருக்கிறார். பக்கம் 49,50 ல் உள்ள பிரபல நீதிபதி, வேலி கட்டிய இளைஞன் ஒரு நல்ல எடுத்துக்காட்டான பதிவு.

வா.நேரு -31-12-11

Friday 30 December 2011

டிசம்பர் 24: தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்

விடுதலையின் விழுமிய பணிகள்
கழகத்தின் களப்பணி பேச்சாளர்களின் உரை வீச்சு

சென்னை, டிச. 29- சென்னை - பெரியார் திடலில், தந்தை பெரியாரின் நினைவுநாள் நிகழ்ச்சிகளுள் ஒன்றாக நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 24.12.2011 அன்று மாலை 4.30 மணிக்கு விடுதலையின் விழுமிய பணிகள் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங் கத்திற்கு பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன் தலைமை வகித்தார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் முன்னிலை வகித் தார். கருத்தரங்கத்தின் தொடக்க உரையினை பேராசிரி யர் முனைவர் பு.இராசதுரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு வருகை தந்தோரை வரவேற்றுப் பேசினார்.

விடுதலை சந்தித்த அடக்குமுறைகள் எனும் தலைப்பில் விடுதலை இதழ் பல்வேறு சமூகத் தளங்களில் ஆற்றிவரும் முன்னேற்றப் பணிகளைப் பற்றி வழக்குரைஞர் அ.அருள்மொழி, முனைவர் அதிரடி க.அன்பழகன், தஞ்சை இரா.பெரியார்செல்வன், இராம.அன்பழகன் ஆகியோர் கருத்துச் செறிவு மிக்க உரைகளை ஆற்றினர்.

கருத்தரங்கின் நன்றியுரையினை திராவிடர் மகளிர் பாசறையின் செயலாளர் பொறியாளர் கனிமொழி வழங்கினார்.

விடுதலை - இரவும் பகலுமாய் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்ப் பத்திரிகை

முனைவர் பு.இராசதுரை பேசியதாவது: ஆண்டாண்டு காலமாக, மன்னர் ஆட்சி காலம் முதற்கொண்டு பார்ப்பனர்கள் ஆதிக்கம் தலைதூக்கியே வந்தது. வீரம் மிகு மன்னர்கள் எல்லாம் கடவுள் தத்துவ மயக்கத்தில் பார்ப்பனர்களின் அடிமைகளாகவே இருந் தனர். பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் பொது வாழ்க்கையில் தலை எடுத்ததற்குப் பின், அவரது அருஞ் சமூகப் பணியினால் அடிமைத்தளை மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது.

அறிவுப் புரட்சிக்கான வித்து முளைத்து விளைச்சல் தரத் தொடங்கியது. தந்தை பெரியார் ஏற்படுத்திய அறிவுப்புரட்சியின் ஆற்றல்மிக்க கருவி, கருத்துப் படைக்கலன்தான் விடுதலை ஏடு. 1935ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் வாரம் இருமுறை ஏடாகத் தொடங்கப்பட்டதுதான் விடுதலை.

விடுதலை ஏடு வெளிவந்ததன் மகிழ்ச்சியை தனது குடிஅரசு இதழில் தந்தை பெரியார் வெளிப்படுத்தினார். ஒவ்வொரு பார்ப்பனர் அல்லாதாரும் இரவும் பகலுமாய் தமிழ் பத்திரிகை, தமிழ்ப் பத்திரிகை என்ற தாகத்துடன் அலைந்து கொண்டிருந்த வேளையில் வெளிவந்துள்ளது விடுதலை ஏடு. விடுதலை வெளிவந்ததைப் பார்த்து எந்தப் பார்ப்பனரல்லாதாரும் தங்களுக்கு ஏதோ ஒரு பாக்கியம் கிடைத்ததாக மகிழ்ச்சி அடைவார்களே ஒழிய, இதற்கு மதிப்புரை வருகின்றதா, அது எப்படி வருகிறது என்று கவனிக்க மாட்டார்கள். தமிழ் மக்கள் எதிர்பார்த்த படி தமிழ்பத்திரிகை வந்துவிட்டது.

அதைத் துய்த்து தினசரிக்கு நிலைநிறுத்த வேண்டியது தமிழர்களின் கடமை என அறைகூவல் விடுத்தார். அன்றைய விடுதலை யின் ஆண்டுச் சந்தா 3 ரூபாய் 62 காசுகள். அப்படி ஆரம்பிக்கப்பட்ட விடுதலை ஏட்டினை நீதிக்கட்சியின் தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தந்தை பெரியாரால் தினசரி ஏடாக மாற்றம் பெற்று ஈரோட்டி லிருந்து காலணா விலையில் வெளிவரத் துவங்கியது.

பணச்சுமை, நிருவாக நட்டம் மிகுந்த நிலையில் 1962ஆம் ஆண்டில் விடுதலை ஏட்டினை அதற்கு மேல் நடத்திட முடியாது என்ற நெருக்கடியில்தான் இயக்கத் திற்கு வாராது வந்த மாமணியாய், நமது ஆசிரியர் வீரமணி அவர்கள் கிடைத்தார். அவரது பொறுப்பில் விடுதலையை ஒப்படைத்தார். தந்தை பெரியார். விடுதலை ஏட்டின் வெள்ளி விழாவின் போது விடுதலை சந்தா சேகரிப்புப் பணியாக இரண்டு மாத கால அவகாசத்தில் 2500 சந்தாக்கள் சேகரிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.

அப்படிப்பட்ட சந்தா சேகரிப்பு நிலையிலிருந்து இன்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுதலை ஆசிரியராக 50 ஆண்டுப் பொது வாழ்வின் சிறப்பாக மூன்றே மாதங்களில் 50,000 விடுதலை சந்தாக்களை வழங்கிட முன் வந்துள்ளோம். விடுதலை சந்தா சேகரிப்பு என்பது வெறும் பத்திரிகை சந்தா சேகரிப்பு அல்ல. தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை அவரது இயக்கப் பணியின் இன்றைய தேவையை, சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துக்கொண்டு சேர்க்கும் நீடித்த நிலைத்த கருத்துப் பிரச்சாரப் பணியாகும்.

அப்படிப்பட்ட விடுதலை ஏட்டின் வளர்ச்சி பன்மடங்கு பெருகி தமிழ்ச் சமுதாயத்திற்கு பயன்படவேண்டும் என வாழ்த்துகிறேன். அதற்கு உண்டான பணிகளுக்கு ஆக்கம் சேர்த்திட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். விடுதலை -
சமூகப் பணிக்கான போர்வாள்
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் எழுதிய கவிதையை மேற்கோள் காட்டி அத்தகைய சமூகப் பணிக்கான போர்வாள் விடுதலை ஏடு என எடுத்துரைத்து அதன் வளர்ச்சிக்கு மேலும் வலுகூட்ட வேண்டும் என்றார். வருகைதந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

விடுதலை - வெறும் செய்தித்தாள் அல்ல கருத்து இதழ்

முனைவர் நம்.சீனிவாசன் பேசியதாவது: பயிற்சி வகுப்புகளும், கருத்தரங்குகளும் அறிவு ஆட்சி செய்யும் களமாகும். சுயமரியாதை இயக்கம் தொடங்கிய நாள் தொட்டு கருத்துப் பிரச்சாரத்திற்கு இந்த அறிவியல் வடிவம் பயன்பட்டு வருகிறது.

விடுதலை நாத்திகக் கருத்துகளைத் தாங்கி வரும் ஒரே நாளிதழ். இது செய்தித்தாள் அல்ல; கருத்து இதழ். ஒழுக்கக் கேடானதும், மூடநம்பிக்கைகளை வளர்க்கக் கூடியதும், தமிழ்மக்களுக்குச் சமுதாயத்திலும், அரசிய லிலும், உத்தியோகத் துறையிலும் கேடு அளிக்கக்கூடியது மான காரியங்களை வெளியாக்கி, அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பயன்படும் பத்திரிகை விடுதலை என்று விடுதலை ஏட்டின் இலட்சியப் பணியினை தந்தை பெரியார் தெளிவுபடுத்துகிறார்.

சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய வற்றைத் தமிழ் மக்களிடத்தே வலியுறுத்தி வளர்த்தல், தீண்டாமைக் கொடுமை ஒழிப்பு, வேத, சாஸ்திர, புராண இதிகாசங்களை எதிர்த்து ஒதுக்குதல், புரோகிதம் புறக்கணிப்பு, கடவுள் மதக்கற்பனைகளை மறுத்தல், பெண்ணடிமை நீக்கம், கைம்பெண் மணம், மணவிலக்கு உரிமை, சுயமரியாதை முறை வாழ்க்கை ஒப்பந்தம், வடமொழி, இந்தி மொழிகளின் தீங்குகளைத் துடைத் தெறியக் கிளர்ச்சிகள் மேற்கொள்ளுதல், வடநாட்டாரின் வல்லாட்சி கூடாதென அறவழிப்போராட்டங்களை நடத்துதல், அனைத்துச் ஜாதிப் பிரிவினருக்கும் கல்விச் செல்வம் கிட்டுமாறு செய்தல், அரசுப்பணிகளில் வகுப்பு வாரி உரிமை வழங்கும் சட்டம் இயற்றல் இவற்றையெல்லாம் வழங்குவதற்கான முயற்சிகள், சிறை வாழ்க்கையையும் ஏற்க அணியமாயிருத்தல் முதலிய தன்மான இயக்கக் கொள்கைகள்-திட்டங்கள் தொடர்பாக கருத்துகளைத் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் விடுதலையே என்று பேராசிரியர் இறையனார் விடுதலையின் பாதை இலக்கணத்தை வரையறை செய்கிறார்.

விடுதலை என்ற சொல் எந்த பொருள் உடையது.
ஜாதியிலிருந்து விடுதலை
மதத்திலிருந்து விடுதலை
மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
வறுமையிலிருந்து விடுதலை
ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை
சுரண்டலிலிருந்து விடுதலை
பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து விடுதலை
பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுதலை
என்று பரந்து விரிந்த பொருளைக் கொண்டிருக்கிறது விடுதலை.

விடுதலையின் சாதனை சாதாரணமானதல்ல. தமிழ் அறிஞர்களையும், மடாதிபதிகளையும் மக்களுக்குச் சேவை செய்ய அழைத்த பெருமை விடுதலைக்கு உண்டு. சைவத்தின் உச்சியில் தான் உண்டு, தன் சைவம் உண்டு என்று தவமிருந்த தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரை 1938இல் இந்தித் திணிப்பை எதிர்த்து களமிறக்கியது விடுதலை. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை யும் மக்கள் மன்றத்திற்கு அழைத்து வந்ததும்-தந்தை பெரியாரும், விடுதலையும்தான். அதனை அடிகளாரே ஒப்புக்கொண்டு பேசியதுண்டு.

மாநில அரசுப் பணியில் நடைமுறையில் இருந்த ஊழியர்களுக்கான ரகசியக் குறிப்பை எதிர்த்து அந்த நடைமுறையினை நீக்கிய ஏடு விடுதலை. ஜாதி வெறியர்களின் நிர்ப்பந்தத்தின் பேரில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட சத்துணைவுக் கூட பெண் சமையல் பணி யாளருக்கு ஆதரவாக கண்டித்து எழுதி மாவட்ட ஆட்சியர் மூலம் பணியிட மாறுதல் ஆணையினை ரத்து செய்திட வைத்தது விடுதலை ஏடுதான்.

இப்படி சமுதாய மேம்பாட்டில் விடுதலை ஏட்டின் பங்கு பற்றிய விடுதலையின் விழுமிய பணிகள் எனும் கருத்தரங்கம் பகுத்தறிவுக் கருத்துப் பரவலுக்கு மேலும் வலுவூட்டும். உரையாற்றுவோரின் கருத்து வீச்சு களப் பணியில் எதிரொலிக்க வேண்டும். தமிழர் வீடுதோறும் விடுதலை என்பது நடைமுறை இயல்பு எனும் நிலையினை உருவாக்கிட நாம் பாடுபட வேண்டும் எனக்கூறி கருத்தரங்கை தொடங்கி வைப்பதும், உங்களைப் போல் கேட்டு மூளைக்குள் பதித்து வைப்பதும் என் பணியாகும். கருத்தரங்கினை மகிழ்ச்சியோடு தொடங்கி வைக்கிறேன்.

விடுதலை - உரிமை மீட்புப் பணி

முனைவர் இராம.அன்பழகன் பேசியதாவது: தமிழர் தம் இயற்கைச் செல்வமீட்பு, பொருளாதார மேம்பாட்டுப் பணியில் விடுதலை ஏட்டின் பணி மகத்தானது. நெய்வேலியில் நிலக்கரி எடுப்பதில், தமிழக மக்களுக்குப் பயன்படுகின்ற வகையில் மாநில அரசுக்கு ராயல்டி கிடைக்க வேண்டும் எனும் கோரிக்கையினை முதன் முதலாக எடுத்து வெற்றியைப் பெற்றது விடுதலை ஏடு. பெரும்பாலான மக்கள் ராயல்டி என்பதன் பொருள், உரிமை பற்றிய விளக்கம் பெற்றது விடுதலை ஏட்டின் வாயிலாகத்தான். கிடப்பில் போடப்பட்டிருந்த சேது கால் வாய் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்ததில் ஆரம்பக் காலம் முதல் பெரும்பங்கு வகித்தது விடுதலை தான்.

முல்லைப் பெரியாறு நீரில் தமிழகத்திற்கான உரிமை யினை தக்க வைக்கும் தரு விடுதலை. சபரிமலைக்குப் போகும் பக்தர்களை உரிமை வேட்கை கொள்ளச் செய்து பக்தி மாலையை எடுத்துப்போட்டுவிட்டு போராட வைத்தது விடுதலை நாளிதழ். சேர வேண்டிய ஒப்பந்த அடிப்படையிலான நீர்ப் பங்கீட்டு உரிமை என தொடர்ந்து வலியுறுத்தி தமிழர்தம் உரிமை மீட்புப் பணியில் உரக்கக் குரல் எழுப்பி வருவது விடுதலை ஏடு. தமிழர்தம் உரிமை மீட்பு விடியலுக்கான தனித்துவமான, சிறப்புமிகு போர்க்கருவி விடுதலையே.

விடுதலை - பகுத்தறிவுப் பணி

தஞ்சை பெரியார்செல்வன் பேசியதாவது: மற்ற ஏடுகளிலிருந்து விடுதலை ஏடு முற்றிலும் மாறுபட்டது. ஜோதிடம், ராசிபலன், சொல்லாத ஏடு விடுதலை. மத பண்டிகைக்களுக்கு விடுமுறை விடாத ஏடு விடுதலை. அய்ரோப்பிய நாத்திக அறிஞர் லெவி பிரகல் டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசும் பொழுது, உலகில் நாத்திகக் கொள்கையினை தாங்கி பரப்பிவரும் ஒரே நாளேடு விடுதலை எனக் குறிப்பிட்டது உலக பத்திரிகை உலகில் விடுதலை ஏட்டின் தனியிடத்தை சிறப்பிடத்தை பறைசாற்றுவதாக உள்ளது.

பார்ப்பனர்களின் வஜ்ஜீராயுதம் ஊடகங்கள். அத் தகைய ஊடகத்துறையில் பல வித எதிர்ப்புகளையும் தாண்டி பீடு நடைபோட்டு வருகிறது விடுதலை. டில்லியில் பிள்ளையார் பால் குடிக்கிறார் எனும் செய்தி யினை கன்னியாகுமரி வரை எடுத்துச் சென்ற பார்ப்பனர் களின் செயலை தமிழர் தலைவரின் பிள்ளையார் பால் குடிப்பதை நிரூபித்தால் ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனும் அறிவிப்பால் மூடநம்பிக்கையை முறியடித்த பெருமை விடுதலைக்கு உண்டு. பகுத்தறிவின் அடிப்படையில் மனிதநேய உணர்வுடன் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக தொடர்ந்து குரல் கொடுத்து நடை முறைக்கு பாடுபட்டு வருகிறது விடுதலை.

அய்யப்ப மகரஜோதி - அப்பட்டமான பொய், மோசடி என பிரச்சாரம் செய்ததில் அரசே மகரஜோதி என்பது மனிதசெயல்தான் என ஒப்புக்கொள்ளச் செய்தது விடுதலை. மலைபோன்று நிலைத்துவிட்ட மூடநம்பிக்கையை பகுத்தறிவு உளிமூலம் செதுக்கிய பெருமை விடுதலைக்கு உண்டு. மூடநம்பிக்கை பலூனை, பகுத்தறிவு ஊசிகொண்டு குத்தி செயலிழக்கச் செய்து வலு விழக்கச் செய்தது விடுதலை என்பது வரலாற்றுச் செய்தி மட்டுமல்ல, தொடர்ந்து வரும் நிகழ்வுகளாகும்.

விடுதலை - இனமானப் பணி

முனைவர் அதிரடி க.அன்பழகன் பேசியதாவது: திராவிடர்களுக்கு குரல் கொடுக்க திராவிடர்களிடம் இன உணர்வினை இன மேம்பாட்டு எதிர்பார்ப்பினை ஊக்கப் படுத்திய ஏடு விடுதலை. தமிழர் தலைவர் வீரமணி அவர்களை விடுதலை ஏட்டின் ஆசிரியர் பணியினை ஏற்றிட தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தபொழுது, இந்து ஆங்கில நாளேடு தலையங்கமாக எதை எழுது கிறதோ அதற்கு எதிராக எழுதினாலே நமது கருத்து வெளிப்பட்டு விடும் எனப் பொருள்படும் வகையில் ஆசிரியருக்கு அறிவுறுத்தியது ஒன்றே போதும்; அதுவும் விடுதலையின் இனமானப் பணிக்கு எடுத்துக் காட்டாக அமைந்துவிட்டது.

மேலும் இராஜாஜி விடுதலையும், நாயக்கரும் (பெரியார்) எனது அன்பான எதிரிகள் எனக் குறிப்பிட்டது விடுதலை திராவிடர் இனம் மேம்பாட்டுக்கு பாடுபட்டு வரும் ஏடு என்பதற்கு விளக்கமாக அமைந்துவிட்டது. கலைஞர் ஒரு முறை காய்ச்சலால் உடல்நலம் குன்றிய நிலையில், காஞ்சி சங்கராச்சாரியார், தான் கடவுளிடம் விடுத்த வேண்டுகோளால் கலைஞருக்கு காய்ச்சல் வர செய்துவிட்டார் எனும் சிறிதும் மனிதநேயமற்ற மதவாதி யின் செயலை, ஆரிய ஆதிக்க அடையாளத்தை தோலுரித் துக் காட்டியது விடுதலை ஏடு.

விடுதலை ஏட்டின் இனப்பற்றினை டவுட் செய் யும் சில ஏடுகள் அவுட் ஆகிவிடும் நாள் தூரத்தில் இல்லை. அந்த தூரத்தின் தொலைவை குறைக்கும் பணி விடுதலை ஏட்டின் பரந்துபட்ட வாசிப்பில்தான் நிறைவேறும். திராவிடர் இனமும் மேம்படும்.

விடுதலை - சமூகநீதிப்பணி

வழக்குரைஞர் அ.அருள்மொழி பேசியதாவது: விடுதலை ஏட்டிற்கு எதிர்ப்பு வந்தபொழுது தந்தை பெரியார் எழுதுகிறார். தனிப்பட்ட ஜாதியை எதிர்க்கவோ, மதத்தை துரத்தவோ, தனி மதத்தை துவக்கவோ விடுதலை எடு தொடங்கப்படவில். இந்த நாட்டிற்குச் சொந்தமான ஒரு பெரிய மக்கள் கூட்டத்தை குறிப்பிடுவ தற்கு ஒரு பெயர் கூட இல்லை. பலநூற்றாண்டுகளாக நிலவிவந்த இந்த இழிவை போக்க வந்த ஏடு விடுதலை எனக்கூறினார்.

சமூகநீதித்தளத்தில் விடுதலை ஏடு அளப்பரிய சாதனை புரிந்துள்ளது. அவ்வப்போது இடஒதுக்கீட்டின் நடைமுறை குறைபாடுகளை, எதிர்ப்பாடுகளை குறித்து எழுதி சமூகநீதியை நிலைநாட்டி வருகிறது. எடுத்துக் காட்டாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மொத்த நீதிபதிகளில் 10 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த வர்கள். மொத்த நீதிபதிகளில் ஏறக்குறைய சரிபாதிப்பேர் பெண் நீதியரசர்கள்.

இத்தகைய நிலைமை இந்தியாவின் எந்த உயர்நீதிமன்றத்திலும் இல்லை. சமூகநீதிக்குச் சாதகமாக அரசியல் அதிகாரத்தில் உள்ளோரை, மக்கள் மன்றத்தின் கருத்தைத் திரட்டுவதன் மூலம் பக்குவப் படுத்தி, நேர்செய்து, கொண்டு சென்ற பணியில் விடுதலை ஏடு பெரும்பங்கு வகிக்கிறது.

1980களில் தமிழ்நாட்டில் சென்னையைத் தலைமையிட மாகக் கொண்டுள்ள இந்தியன் வங்கியில் பெரும்பாலான அதிகாரப் பொறுப்பில் பார்ப்பனர்கள் இருந்து அக்கிரகார வங்கி எனச் சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டதை பாராளுமன்றத்தில் பேச வைத்தது நிவர்த்தி செய்தது விடுதலை ஏடு. சமூகத்தின் அடித்தள மக்கள் வீட்டுப் பிள்ளைகள் கல்வி வாய்ப்புகளில் உரிய இடம் பெறுவதற்கு தடையாக இருந்த நுழைவுத்தேர்வினை நீக்கப் பாடுபட்டது விடுதலை நாளிதழ்.

இன்னும் சொல்லப்போனால் நுழைவுத் தேர்வு நுழைவதற்கு முன்பே அதன் பாதக அடையாளங்களை எடுத்துக்கூறிய ஏடு விடுதலைதான் ரூ.9000 வருமான வரம்பு ஆணையை விலக்கிக்கொள்ள வைத்தது. தமிழகத்தில் 69 விழுக்காடு, சட்ட வடிவ இடஒதுக்கீட்டுக்கான ஏற்பாடு, மண்டல் குழு பரிந்துரை நடைமுறையாக்கம் என விடுதலையின் பங்கு, வரலாற் றுச் சுவடுகளாய் தடம் பதித்து நிற்கிறது. வஞ்சிக்கப்பட்டு வரும் தமிழ்நாட்டின் உரிமைக்கு குரல் கொடுத்துவரும் விடுதலை ஏட்டிற்கு நன்றி. விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவருக்கு நன்றி.

கருத்தரங்கின் உரை வீச்சால் கருஞ்சட்டைப் பட்டாளத்திற்கு நினைவூட்டலும் ஊக்கமும், இன உணர்வாளர்களுக்கு புத்தாக்கமும் ஒருங்கே கிடைத்தது, வருகை தந்த அனைவரும் பரந்துபட்ட தளத்தில் விடுதலை ஏட்டின் விழுமிய பணி பற்றிய செய்தி மழை யில் நனைந்து சென்றனர். கருத்து வீச்சால் எழுச்சியும் பெற்று மகிழ்ந்தனர்.

திராவிடர் கழக மகளிர் பாசறையின் செயலாளர் பொறியாளர் கனிமொழி நன்றி கூறிட கருத்தரங்க நிகழ்வு நிறைவு பெற்றது.

- தொகுப்பு வீ.குமரேசன்

Tuesday 27 December 2011

அண்மையில் படித்த புத்தகம்(28.12.11)- குழந்தைகளைக் கொண்டாடுவோம்

நூலின் தலைப்பு : குழந்தைகளைக் கொண்டாடுவோம்
ரஷ்ய மூலம் : ஷ.அமனஷ்வீலி
தமிழில் : டாக்டர் இரா.பாஸ்கரன்
தமிழில் மறுவரைவு : முனைவர் அ.வள்ளிநாயகம்
வ.அம்பிகா
முதல் வெளியீடு : டிசம்பர் 2007,புக்ஸ் பார் சில்ரன்
விற்பனை உரிமை : பாரதி புத்தகாலயம்,சென்னை-18 -044-24332924
மொத்த பக்கங்கள் : 158
விலை : ரூ 80

சோவியத் நாட்டின் கல்வியியல் அறிஞர் ஷ.அமனஷ்வீலி ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தியது, பாடம் நடத்துவதற்கு முன் ஆசிரியரின் மனநிலை, பாடம் நடத்துவதற்காக அவர் தயாரித்த முன் தயாரிப்புகள் - மனதாலும், செய்கையாலும் போன்றவற்றை விவரிக்கும் நூல். ஷ.அமனஷ்வீலி கைவசம் இருந்த 800 பக்க நாட்குறிப்பின் அடிப்படையில் , பள்ளி திறந்த 1வது நாள், 20,84,122,170-வது நாட்களிம் நிகழ்ந்தவைகளை படம் பிடித்துக் காட்டும் நூல்.

26.12.2011 விஜய் டி.வி.யில் நடந்த நீயா? நானா? நிகழ்ச்சியில் (ஆசிரியர்கள் & மாணவர்கள்) ,ஒரு மாணவர் "ஆசிரியர்கள் எந்தவிதமான தயாரிப்பும் இல்லாமல் வந்து எதையாவது பேசி வகுப்பைப் போரடிக்கவைத்து காலத்தைக் கடத்துகிறார்கள் "எனக்குறிப்பிட்டார். கல்லூரி மாணவ,மாணவிகள் புரிந்துகொள்வார்கள் -ஆசிரியர் தயாரிப்போடு வந்திருக்கிறாரா, இல்லையா என்று. ஆனால் 6 வயதுக் குழந்தைகள் புரிந்துகொள்ள இயலுமா? புரிய இயலாத குழந்தைகளுக்குப் பாடம் நடத்தப்போகும்போது எவ்வளவு தயாரிப்போடு போகவேண்டும், அப்படிச் சென்றால் வகுப்பில் எவ்வளவு வெற்றி பெற முடியும் , எவ்வளவு தூரம் அந்தப் பிள்ளைகள் மனதில் இடம்பிடிக்க முடியும், இந்தப் புத்தகத்தைப் படித்தால் உணரலாம்.குழந்தைகள் பற்றி அக்க்றை உள்ள யாரென்றாலும் அவர்கள் ஆசிரியர்களாக இருக்கலாம்,பெற்றோர்களாக இருக்கலாம், கல்வியாளர்களாக இருக்கலாம், சமூக அக்கறை உள்ளவர்களாக இருக்கலாம் அவர்கள் எல்லாம் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

"குழந்தைகள் என் ஆசிரியர்கள் " என்றுதான் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. கற்றுக்கொள்ள எவ்வளவு விசயங்கள் குழந்தைகளிடம் இருக்கின்றன என்பதனை உணர்த்துகிறார். " நாங்கள் பிறந்ததிலிருந்து நல்லவர்கள், எங்களைக் கொடியவர்களாக ஆக்காதீர்கள் " எனக் குழந்தைகள் கூறுவார்கள் என பக்கம் 16-ல் குறிப்பிடுகின்றார். பெரும்பாலான பள்ளிகள் அப்படித்தான் இருக்கின்றன நம்மைச் சுற்றி . நல்லவர்களாக வரும் குழந்தைகளை கெட்டவர்களாக ஆக்குவதற்காக.

"குழந்தைகள் பெரியவர்களாக உதவ வேண்டும் என்றால் அவர்களில் தன்னைப் பார்க்கவேண்டும்.அவர்களின் மூலம் தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ள தனது குழந்தைப் பருவத்தை மீண்டும் அவர்களின் உருவத்தில் காணவேண்டும்,என்றென்றும் மனிதாபிமானம் மிக்க ஆசிரியராக இருக்க வேண்டுமெனில் குழந்தையோடு குழந்தையாக வாழவேண்டும் " பக்கம் 39

" இங்கே குழந்தையுடைய மனதின் ஒவ்வொரு பகுதியையும் சீராட்டி வளர்க்க வேண்டும்.சிறு இதயங்களின் ஒவ்வொரு ஜீவ அசைவிலும் மனித நேயத்தை ஊட்ட வேண்டும் " -பக்கம் 45
"உண்மையான ஆசிரியர்கள் இறப்பதில்லை,இவர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்,யுவதிகளில் கரைந்து அவர்களை உயர்ந்த லட்சியங்களை உடைய நபர்களாக மாற்றுகின்றனர் " பக்கம் 24

இப்படி நூற்றுக்கணக்கான மேற்கோள்களை இப்புத்தகத்தில் காட்டலாம். ஒரு மணி நேரத்திற்குமேல் இப்புத்தகம் குறித்து மட்டுமே ஆசிரியர்கள், பெற்றொர்கள் முன் பேசலாம் அந்தளவிற்கு நிறைய அனுபவங்களை சொல்லும் நூலாக உள்ளது இப்புத்தகம். தமிழில் மறுவரைவு செய்த முனைவர் அ.வள்ளி நாயகம்,வ.அம்பிகா,மொழி பெயர்த்த டாக்டர் இரா.பாஸ்கரனை இப்புத்தகத்தை வாங்கிப் படிப்பதன் மூலம் பாராட்டலாம். இப்புத்தகத்தை என்னிடம் அளித்த(விற்பனை செய்த) மதுரை புத்தகத்தூதன் பா.சடகோபன் (9443362300) அவர்களுக்கு என் நன்றிகள். ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து முடித்தால் அதில் வரும் திருப்தி ......................படித்துப் பார்த்தால்தான் தெரியும்.

வா.நேரு - 28.12.11

Sunday 25 December 2011

நேற்று (25.12.2011 ) படித்த புத்தகம்

நூலின் தலைப்பு : புதிய நோக்கில் புரட்சிக் கவிஞர்
நூலின் ஆசிரியர் : இல.சொ.சத்தியமூர்த்தி, எம்.ஏ., பி.எல்.
பதிப்பகம் : வயல்வெளிப் பதிப்பகம்,இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்),பெரம்பலூர் மாவட்டம்- 612901
விலை : ரூபாய் ஐம்பது
முதல் பதிப்பு : திசம்பர் 2003

தமிழில் பலதுறை சார்ந்த அறிஞர்கள் எழுதுகிறார்கள். இந்த நூலின் ஆசிரியர் ஒரு நீதிபதி. கல்லூரிக் காலத்தில் புரட்சிக் கவிஞர் பற்றிக் கலந்து கொண்ட கட்டுரைப்போட்டியில் வெற்றி பெறுகின்றார். பின் பல் வருடங்கள் கழித்து அந்தக் கட்டுரையின் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். புரட்சிக் கவிஞர் பற்றி பல நுட்பமான செய்திகளை உள்ளடக்கிய புத்தகமாக இந்தப் புத்த்கம் உள்ளது.

மொத்தம் 128 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தில் 10 தலைப்புகளில் கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. புதிய நோக்கில் புரட்சிக் கவிஞரை பார்த்திருக்கின்றார் என சொல்லலாம். "கல்வி நல்காக் கசடர்களுக்குத் தூக்கு மரம் உண்டாம் " எனும் கவிதையைக் குறிப்பிட்டு , கற்றவன் ஒவ்வொருவனும் கல்லாதவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்னும் கருத்தில் பாடிய பாடல் என்பதனை எடுத்துக் காட்டுகளோடு கூறியுள்ளார். மிகவும் அக்க்றையோடு பல்வேறு தகவல்களைத் திரட்டி ஒன்று சேர்த்து , தன் எழுத்துக் கை வண்ணம் சேர்த்துக் கொடுத்துள்ளார். பாராட்டப் படவேண்டியவர். மதுரை மத்திய நூலகத்தில் இதன் எண்: 156244.

வா.நேரு ,26.12.2011

பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் நூல் அறிமுக விழா

பகுத்தறிவாளர் கழக மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு எழுதிய பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் நூல் அறிமுக விழா
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முனைவர் வா.நேரு எழுதிய பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் புத்தக வெளியீடு

பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் சோம.இளங்கோவன் பங்கேற்றார்

மதுரை, டிச. 15- 11.12.2011 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் மதுரை நியூ காலேஜ் ஹவுஸ், திருவள்ளுவர் அரங்கத்தில் பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் நூல் அறிமுக விழா நடைபெற்றது.

விழாவிற்கு வந்தவர்களை இனிப் போடு வரவேற்று வா.நேரு, நே.சொர் ணம் இணையரின் குழந்தைகள் சொ.நே.அன்புமணி, சொ.நே.அறிவு மதி ஆகியோர் பகுத்தறிவுப் புத்தகங் களை வழங்கினர். விழாவிற்கு வந்த அனைவரையும் மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் க.அழகர் வரவேற்றார்.

வீ.குமரேசன்

பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தலைமை யேற்று உரையாற்றினார். அவர் தனது உரையில் பகுத்தறிவாளர் கழகத்தை தந்தை பெரியார் அவர்கள் தொடங் கியதன் நோக்கம், தொடக்க காலம் முதல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புரவலராக இருந்து வழி நடத்தும் இயக்கமாகிய பகுத்தறி வாளர் கழகத்தின் சிறப்புகள், ஆசிரி யர் அவர்களின் அணுகுமுறை போன்ற பல்வேறு செய்திகளைக் கூறி, கவிதை நூலைப் பாராட்டி பேசினார். தொடர்ந்து சிகாகோ, பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள் கவிதை நூலினை வெளியிட முதல் பிரதியினை திராவிடர் கழகத் தின் மாநில சட்டத்துறைத் தலைவர் கி.மகேந்திரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தே.எடிசன் ராசா, மண்டலத்தலைவர் வே.செல்வம், மண்டல செயலாளர் மீ.அழகர்சாமி, மதுரை புற நகர் மாவட்டத் தலைவர் மா.பவுண்ராசா நூலினைப் பெற்றுக் கொண்டனர்.

பேராசிரியர் நம்.சீனிவாசன்

கவிதை நூலின் ஆய்வுரையினை மதுரை மன்னர் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பேரா.நம். சீனிவாசன் அளித்தார். அவர் தனது ஆய்வுரையில் தமிழ்க் கவிதையின் வகைகள், புதுக் கவிதையின் சிறப்புக்கள், கவிஞர் வைர முத்துவின் கவிதைகள் போன்றவற் றைக் கூறி பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் என்ற கவிதையினை முழுமை யாக வாசித்து சிறப்புக்களை எடுத்துக் கூறி கவிதை நூலின் நிறை குறைகளை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து தி.க. நெல்லை மண்ட லத் தலைவர் பொறியாளர் சி.மனோ கரன், ப.க.பொதுச் செயலாளர் வடசேரி வ. இளங்கோவன், தொலை தொடர்புத் துறை தொ.மு.ச. மாவட்ட செயலாளர் ந.முருகன், எழுத்தாளர் க.சி. அகமுடை நம்பி, மதுரை மாநகர் மாவட்ட ப.க. தலைவர் சே.முனிய சாமி, செயலாளர் சுப.முருகானந்தம், பழக்கடை வணிகர் சங்க செயலாளர் அ.முருகானந்தம், திருப்பூர் ஜோ. இராஜேந்திரன், ஐ.ஓ.சி. உதவி மேலா ளர் இரா.பழனிவேல்ராஜன், வழக்கறி ஞர் நா.கணேசன், தேனி மாவட்ட ப.க. தலைவர் ஸ்டார் நாகராசன், திண்டுக் கல் மாவட்ட ப.க. செயலாளர் மு.நாக ராசன், அருப்புக்கோட்டை தி.ஆதவன், அய்யா ஆனந்தம், வா.நேருவின் தாயார் சு.முத்துக்கிருட்டிணம்மாள், தங்கை ஆசிரியை வா.சாரதா, அண் ணண்கள் ஆசிரியர் வா.ஜெயராஜ், வா,தமிழ் செல்வன், மாமா சு.இராதா கிருட்டிணன் , வா.நேருவின் துணைவி யார் நே.சொர்ணம் மற்றும் பலர் கவிதை நூலினைப் பெற்றுக்கொண் டனர்.

நூலினைப் பெற்றுக்கொண்டு கருத்துரையினை பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி, மதுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் முனைவர் க.பசும்பொன் ஆகியோர் அளித்தனர். தொடர்ந்து திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறைத் தலைவர் கி.மகேந்திரன் கவிதை நூலினை விமர்சனம் செய்து உரையாற்றினார்.

டாக்டர் சோம.இளங்கோவன்

நிறைவாக பெரியார் பன்னாட்டு மையத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் நிறைவுரை யாற்றினார். அவர் தனது உரையில் புரட்சிக் கவிஞரின் பாடல்களை எடுத்துக்கூறி நேருவின் கவிதைகளை ஒப்பிட்டுக் கூறினார். தந்தை பெரியா ரின் தனித்துவத்தை எடுத்துக்கூறினார். 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் ' கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகளை எடுத்துக்கூறி விமர்சனம் செய்தார்.

தமிழர் தலைவர் அவர் களின் உழைப்பினைக் கூறி அவருக்கு முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண் டார். இணையத்தில் வரும் அவதூறு களுக்கு பதிலடி கொடுக்கும் பழனி தமிழ் ஓவியா, காரைக்குடி பிராட்லா போன்றவர்களைப் பாராட்டினார். இணையத்தை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும், அது ஒன்றும் கடினமல்ல என்று எடுத்துரைத்தார். தமிழ் ஓவியாவிற்கு நினைவுப் பரிசு அளித்துப் பாராட்டினார்.

முடிவில் வா.நேரு ஏற்புரையாற் றினார். தனது ஆசிரியர் வீரி செட்டி அவர்கள் இவ்விழாவிற்கு வந்து சிறப்பித்ததற்காகவும் மற்றும் தனது தாயார், உறவினர்கள், நண்பர்கள், இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார். சிக்காகோவில் இருந்து இங்கு வந்த நிலையில், இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்த, இந்த கவிதை நூலினை வெளியிட்ட பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களுக்கு என்றைக் கும் நன்றி உடையவனாக இருப்பேன் என்று உரைத்தார்.

நூலினைப் படித்த சிலர் கருத்துக் களை சொல்லும்விதம் மிகக் கடுமை யாக இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல, பண்படுத்துவதே எங் கள் நோக்கம், அதுவே எங்களுக்கு தந்தை பெரியாரும் , தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் கற்றுக் கொடுத்த பாடம் எனக்குறிப்பிட்டார்.

முடிவில் மானமிகு பதிப்பகத்தின் உரிமையாளரும், ப.க. மாவட்ட துணை செயலாளருமான பா.சடகோ பன் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழர் தலைவரின் அறிவுரைப்படி சால்வைக்குப் பதிலாக விழா நினை வுப் பரிசுகள் அளிக்கப்பட்டன.

மாநில ப.க.

ப.க. தோழர்கள் விடுதலை சந்தா ரூ.3,74,430 2013-இல் உலக பகுத்தறிவு, மனிதநேய மாநாடு

மாநில ப.க. கலந்துரையாடலில் தமிழர் தலைவர் அறிவிப்பு

சென்னை, டிச. 19-சென்னை பெரியார் திடலில் மாநில பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் ரூ.3,74,430 விடுதலைக்கான சந்தா வழங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டின் துவக்கத்தில் உலக பகுத்தறிவு மனிதநேய மாநாடு நடைபெறும் என்று கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அறிவித்தார்.

விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் பொன் விழா ஆண்டில் சென்னையில் பகுத்தறி வாளர் கழக மாநில, மாவட்டப் பொறுப்பா ளர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தாவாக ரூ3,74,430 அளிக்கப்பட்டது.

ஊமை.ஜெயராமன் உள்ளிட்ட தோழர்கள் கழகத் தலைவரிடம் சந்தாவை வழங்கினர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் 18.12.2011 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு சென்னை-பெரியார் திடல் அன்னை மணியம்மை மன்றத்தில் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர் கள் வழிகாட்டு நெறி யுரையாற்றினார்.

பொறுப்பாளர்கள் தாங்கள் சேகரித்த விடுதலை சந்தாக்களின் தொகையாக ரூ3,74,430 அய் தமிழர் தலைவ ரிடம் அளித்தனர்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங் கோவன் கலந்துகொண் டார்.

பொதுச் செயலாளர் வீ. குமரேசன்

கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்த பொறுப்பாளர் களை, தோழர்களை வரவேற்று பகுத்தறிவா ளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரே சன் உரையாற்றினார்.

விடுதலை சந்தா சேகரிப்புப் பணியில், கடந்த கலந்துரையாடல் கூட்டங்களில் வழங்கப் பட்ட தொகை, களப்பணி ஆற்றிவரும் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் மாவட்ட அளவிலான பங்கேற்பு, பங்களிப்பு பற்றி எடுத்துக்கூறினார்.

இயக்கத்தின் பிற அணியினருடன் இணைந்து பணியாற்றி, தங்களது விடுதலை சந்தா சேகரிப்பு பங்க ளிப்பினை தனித்துவ மாக காட்டிடும் பகுத் தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் பணிபற்றி ஊக்கப்படுத் திப் பேசினார். விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் பொன்விழா ஆண்டு நிறைவு பெற இருக்கின்ற தருணத்தில் விடுபட்ட விடுதலை சந்தாக்களை சேகரித்து இன்னும் முனைப்பாகப் பணி ஆற்றிட வேண்டு கோள் விடுத்தார்.

ப.க. தலைவர் வா. நேரு

பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் வா.நேருவுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் வா.நேரு தலைமை உரையாற்றியதாவது:
பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக 50 ஆண்டுகள் விடுதலை நாளிதழின் ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்திருக் கும் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்து களை, பாராட்டுகளை, நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம்.

தந்தை பெரியாரின் இயலே, மனிதநேய நெறி, உலகுக்கு புதுப் பாதை காட்டும் நெறி-அந்த நெறியை உலக மெங்கும் பரப்பிட அய்யா ஆசிரியர் அவர் களின் பணிக்கு உறு துணையாக இருப் போம். பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பிற மொழிகளில் நமது இயக்க நூல்கள் வெளி யீடு, இணையதள பயிற்சி முகாம் போன்ற வற்றை முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.

தமிழர் தலைவர் நெறியுரை

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி நெறியுரையாற்றினார்.
விடுதலை ஏட் டிற்கு சந்தா சேர்த்திடும் பணியில் முனைப்பாக ஈடுபட்டுள்ள பகுத்தறி வாளர் கழகத்தின் செயல்பாடு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பகுத்தறிவாளர் கழகத் தின் பணித்தளம் பரந்து பட்டது.

பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பா ளர்கள் மற்றும் தோழர் கள் அரசுப்பணி, அலு வலகப் பணியில் ஈடுபட் டுள்ள தன்மையால் களம் இறங்கி போராட்ட தளத்தில் பங்கேற்க இய லாது. ஆனால் பகுத்த றிவுக் கருத்துகளை மூட நம்பிக்கை ஒழிப்பினை, அறிவியல் மனப்பான்மை வளர்ப்பது பற்றிய பிரச் சாரப் பணியில் முழு மையாக ஈடுபடலாம்.

பெரியார் உலக மயமாக்கல் பணியில் பகுத்தறிவாளர் கழகம் பெரும்பங்கு வகித்திட வேண்டும். வெளி மாநி லங்களில் அயல்நாடு களில் பெரியாரின் மனிதநேயக் கருத்துகள் சென்றடையும் வகையில் பல்வேறு நவீன தொழில் நுட்ப தளங்களான இணையதளம், மின் னஞ்சல் மூலம் பிரச்சா ரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2013ஆம் ஆண்டின் துவக்கத்தில் உலக பகுத்தறிவு, மனிதநேய மாநாடுபெரியார் உலகமய மாக்கல் பணியில் ஒரு கட்டமாக 2013ஆம்ஆண்டு தொடக்கத்தில் இயக்கத்தின் சார்பாக உலக பகுத்தறிவு, மனிதநேய மாநாடு நடத்திட வேண்டும்.

அம்மாநாட்டினை நடத்துவதில் பகுத்தறிவாளர் கழகத்தின் பணி பெரும்பங்கு வகித்திட வேண்டும். கால அவகாசம் கணிசமாகவே உள்ளது. பகுத்தறிவுக் கருத்துகள் பரப்பும் பணியினை பல்வேறு தளங்களில் பிரித்து காலக்கட்டத்தின் முன்னுரிமை அறிந்து களப்பணி ஆற்றிட தோழர்கள் முன் வரவேண்டும். விடுதலை சந்தா சேர்க்கும் பணியினை நிலைத்து நீடிக்கும் கொள்கை பரப்பும் அணுகுமுறையாகக் கருதி அளிக்கப்பட்ட இலக்கினை பொறுப்பாளர்கள் விரைந்து முடித்திடல் வேண்டும் என்று கூறி விளக்கவுரையாற்றினார்.

பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் கலந்துரையாடல் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் பேசியதாவது:

கணினி தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில் கருத்துப் பரப்பும் பணியிலும் புதுமையான தொழில்நுட்ப அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இணையதளம் மூலம் உலகின் மூலை முடுக்குகளில் உள்ளவர் களிடமெல்லாம் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இருப்பதை முழுமையாகப் பயன்படுத்தும் வண்ணம் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தங்களது அணுகுமுறை ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த நூற்றாண்டும், இன்னும்வருகின்ற காலமும் பெரியார் கருத்து வெற்றியடையும் காலம் என்பது உறுதி. தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்துகளுக்கெல்லாம் முதன்மைச் சொத்து தமிழர் தலைவர் ஆசிரியர் ஆவார்கள். அவர்களது வழிகாட்டுதலில் வரக் கூடிய காலங்களில் பெரியார் உலகமயமாக்கல் மேலும் வலுப்படும். வலுப்படுத்தும் கரங்களாக கழகத் தோழர்கள் செயல்பட வேண்டும் என்றார்.

கோ.சாமிதுரை

திராவிடர் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை தமது உரையில் கூறியதாவது:
பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் இயக்கத்தின் மற்ற அணியினரைவிட, பலதரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பினைப் பெற்றவர்கள். பழகுநிலைச் சூழலுக்கு ஏற்றவாறு பகுத்தறிவுக் கருத்து பிரச் சாரப் பணியில் ஈடுபட முன்வரவேண்டும். விடுதலை சந்தா சேகரிப்புப் பணியில் பகுத்தறி வாளர் கழகத் தோழர்கள் தனி முத்திரை பதித்திட வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பினை வளப்படுத்தி சந்தா சேகரிப்புப் பணியினை விரைந்து முடித்திட வேண்டுகிறேன்.

கவிஞர் கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தமது உரையில் கூறியதாவது:

விடுதலை சந்தா சேர்த்திடும் பணியில் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பல்வேறு மாவட்டங்களில் இயக்கத்தின் இதர அணித் தோழர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின் றனர். தனிப்பட்ட முயற்சியில், உரியவர்களைச் சந்தித்து சந்தா தொகையினை மட்டுமல்ல. விடுதலை வளர்ச்சிக்கு நிதி திரட்டும் ஆற்றல் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு உண்டு. அந்த ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி விடுதலை பரப்பும் பணியில் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட பங்களிப்பினை விரைந்து, குறித்த காலத்தில் முடித்திட பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் முயல வேண்டும்.

முயற்சி திருவினை யாக்கும் என்பது உங்களது செயல்பாடுகளில் பிரதிபலித்திட வேண்டும். மேலும் கலந்துரை யாடல் கூட்டத்தில் பகுத்தறி வாளர் கழகத்தில் மாநில துணைத் தலைவர் பொறுப்பினை புதிதாக ஏற்றுள்ள கோ.ஒளிவண்ணன் மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் டாக்டர் ஆர்.எஸ். இரத்தினசபாபதி ஆகியோர் உரையாற்றினர்.