Saturday 2 March 2013

போகிறபோக்கில்…-1-பொள்ளாச்சி அபி.

ஒரு எழுத்தாளரின் பாராட்டுரை - எழுத்து இணைய தளத்தில் எனக்கு.   வந்து 7, 8 மாதங்கள் ஆனபோதிலும் இதனை எனது வலைத்தளத்தில் பதிவிடுவதில் ஒரு தயக்கம் இருந்தது எனக்கு. பொள்ளாச்சி அபி என்னும் கவிஞரின் அறிமுகம் எழுத்து தளத்தில் மட்டும்தான். அவர் யார்? ஏதும்  இயக்கம் சார்ந்தவரா? இல்லையா? என்பது தெரியவில்லை. என்ன தொழில் செய்கின்றார் ? என்ன வயது ?  என்பதெல்லாம் தெரியவில்லை. நேரடியாகவோ, தொலைபேசி வழியாகவோ அவரிடம் தொடர்பு இல்லை.
தனக்குத் தானே பாராட்டுரைகள் எழுதிக்கொள்ளும் இந்த யுகத்தில் , வந்த பாராட்டைப்  பதிவிடுவதில் என்ன தயக்கம் என்றார் நண்பர்  ஒருவர். முகம் தெரியாத தோழரின் கருத்துக்கள் என் கவிதை பற்றி, நண்பர்களின் பார்வைக்காக !



28.5.12 .போகிறபோக்கில்…-1-பொள்ளாச்சி அபி.

கடந்த ஒரு வருடத்தில்,இந்தத்தளத்தில் எழுபத்தைந்து கவிதைகளைப் பதிவு செய்திருக்கிறார் வா.நேரு எனும் கவிஞர்.அதிலென்ன விசேஷசம்.? என்றா கேட்கிறீர்கள்..?
சமூகமாற்றத்திற்கான விருப்பத்தையும்,சமூகத்தில் நிலவும் கேடுகெட்ட பல்வேறு விஷயங்களையும் தனது கவிதைப் பொருளாகக் கொண்டு தனது கவிதைகளைப் படைத்திருக்கிறார் அவர்.சமூக சீரழிவுகள் அனைத்தையும் கேள்விகளால் துளைக்கிறது அவர் கவிதை.அவருடைய படைப்புகளை எங்கிருந்து பார்த்தாலும்,எந்த வகையில் விவாதித்தாலும் அவர் வெற்றிக்குரிய கவிஞராகவே மிளிர்கிறார்.
ஆனால் அவருடைய கவிதைகள் இந்தத் தளத்தில் 99 சதவீதம் கண்டுகொள்ளப்படவே இல்லை என்பது மிக வருத்தமான செய்தி.!.
ஆனாலும் அவர் அதனை எதிர்பார்க்காமல் என் பணி கவிதை செய்து கிடப்பதே என்று செயல்பட்டு அற்புதமான படைப்புகளை நமக்கு அளித்தே வந்திருக்கிறார்.
நல்ல கவிதைகளைத் தேடிப்பிடித்தேனும் படைக்கவேண்டும் என்ற ஆவல் யாருக்கு இருந்தாலும் வா.நேருவின் கவிதைகளை நிச்சயம் படிக்கவேண்டும்.
யாருடைய அங்கீகாரத்திற்கும் காத்திருக்காத அவருடைய மனப்போக்கிற்கு அவரின் படைப்புகளுக்கான சிபாரிசு அவருக்கு தேவையே இல்லாமலிருக்கலாம்.
ஆனால் நல்ல வாசகர்கள் என்ற முறையில் நாம் அப்படி விட்டுவிட முடியாதல்லவா.?.இத்தனை நாளும் அதனைப் பார்வையிடத் தவறிவிட்டோமே என்று இப்போது நான் உணரும் வேதனையை நீங்களும் அனுபவிக்கலாமா.?.
இந்தத் தளத்தில் உள்ள இன்னும் இதுபோல நல்லகவிதைகளைப் பார்வையிடும் நண்பர்கள் அதுகுறித்து அனைவருக்கும் தெரிவிக்கலாமே.!.
நல்லவற்றைப் படிப்பதன்மூலம்,நல்ல சிந்தனைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ள நமக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம்.அதற்கான தீனியும்,திராணியும் கவிஞர் வா.நேருவிடம் நிச்சயம் இருக்கிறது.இவர் ஒரு பத்திரிகையாளர் என்றும் தெரிகிறது.!
உதிப்பதும் உயர்வதும் ஓய்வெடுப்பதும் எனது பணி.இதில் பயன்பெறுவதும் பதுங்கிக் கொள்வதும் உனது விருப்பம் என்றபடி வந்துகொண்டேயிருக்கும் சூரியன் போல எனக்குத் தெரிகிறார் இந்தக்கவிஞர்.
அன்புடன் பொள்ளாச்சி அபி.

நன்றி : எழுத்து.காம்

No comments: