Friday 2 August 2013

அண்மையில் படித்த புத்தகம் : அரைக்கணத்தின் புத்தகம்-சமய்வேல்

அண்மையில் படித்த புத்தகம் : அரைக்கணத்தின் புத்தகம்
புத்தக் ஆசிரியர்                        :  சமய்வேல்
வெளியீடு                                 :  உயிர்மை பதிப்பகம், சென்னை-18
முத்ல் பதிப்பு                            : டிசம்பர் 2007  விலை ரூ 70, பக்கங்கள் : 120
மதுரை மைய நூலக எண்      : 177202

                                                            கவிஞர் சமய்வேல் அவர்களின் கவிதைத்தொகுப்பு இந்த நூல்.மொத்தம் 81 கவிதைகளை உள்ளடக்கியது. என் கண் முன்னால் பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்குள் சில ஆண்டுகளாகவே திரு.சமய்வேல் நடமாடினாலும், தான் ஒரு படைப்பாளி என்பதைக் காட்டிக்கொள்ளாத தோற்றமும், அமைதியும் எப்போதும் அவரிடம் .  அவர் உரக்கப் பேசி நான் பார்த்ததில்லை, அவருடைய கவிதைகளும் அப்படித்தான் அமைந்துள்ளன, மௌனமாய் பல்வேறு கேள்விகளை எழுப்பும் வண்ணம்.

                       பூமியின் கோடிக் கணக்கான /ஜீவங்களில் நானும் ஒன்று என்/
                       துக்கம் தாகம் சந்தோஷமென / நானொரு பெரும் சமுத்திரம் /  என்று சொல்கின்றார் 'என் பெயர் ' என்னும் கவிதையில் (பக்கம் 22) .'அவன் பாடல் ' என்னும் கவிதை
" ஆறுமுகக் கிழவன் பாடிக்கொண்டிருக்கிறான்/ ராத்திரி முழுதும் விடிய விடிய /
பிள்ளைகள் இழந்தான் கிழவியும் இறந்தாள்/ சொத்தும் அற்றான்/இரத்தம் உலர்ந்து/
தசைகள் கரைந்து எண்ண முடியாக் /கோடுகளாகத் தோலும் சுருங்க/
மீதி உயிரையும் பாடலாக்கி/இரவை நிரப்புகிறான் " என்னும் கவிதை வரிகளும் அதன் தொடர்ச்சி வரிகளும் கடைசியில்
" ஆறுமுகக் கிழவன் அனாதைதான் / உலகு போல வானம் போல. " (பக்கம் 25) என்று கவிதை முடிகின்றபோது இரங்கலை நமது மனதில் அடர்த்தியாகவே கவிதை வரிகள் நிரப்புகின்றன. 

                         இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை 'அக்கினிக் காட்சிகள் '

'சுற்றிலும்  வெட்ட வெளிக் கரிசல் / வட்ட வனாந்திரத்தில் ஒருவன் /
'வெயில் முதுகில் வியர்வையாய் வழிய / தன்னந்தனியே உழுது கொண்டிருக்கிறான் /

சால் சாலாக் அடி அடியாக / பொறுமையாக ஒவ்வொரு கோடாய் /
உழுது கொண்டிருக்கிறான்/ விலா எலும்பு தெரிகிற மாடுகளோடு /
சிறிய கலப்பையால் கரிசல் உழவன் / உழுது கொண்டிருக்கிறான்-மண்ணை/
கறுப்பு மண்ணை உழுது கொண்டிருக்கிறான்

எங்கள் நவீன வாழ்க்கை பற்றியும்/ விஞ்ஞான விவசாயம் பற்றியும்/
எந்திர எலட்ரானிக் விந்தைகள் பற்றியும்/ கவலையின்றி உழது கொண்டிருக்கிறான்.

ரெண்டு வருஷமும் பெய்யாத மழை / இந்த வருஷம் பெய்துவிடும் என்று/
வெள்ளை மேகங்களை நம்பி/ உழுது கொண்டிருக்கிறான்.

'இடுப்பில் ஒரு கோவணம் /தலையில் ஒரு துண்டு/ கரும் 'பூமியின் 'மேலே/
களிமண் உருண்டையாய்/ ஊர்ந்து உழும் கரிசல் உழவனே ,/

அழகில் ஊறிய என் கவிதை வரிகளை/ ஓடையில் கொட்டிவிட்டு/
உன் காலடியை நெருங்க முயற்சிக்கிறேன்/ முடியவில்லை முடியவே இல்லை " (பக்கம் 48-49)

உழவுக்கு வந்தனை செய்வோம் என்பதை இவ்வளவு அழுத்தம் திருத்தமாய் எந்தக் கவிஞரின் வரிகளும் உழவனைச்சொல்லி சொன்னதாய் நான் படித்ததில்லை. சால் சாலாக உழுது பார்த்த அனுபவம் இருந்தால்தான் , உழவனாக நின்று எழுத முடியும். சமய்வேல் எழுதியிருக்கின்றார்.

' நகரத்துச் சுவர்களின் மத்தியில் ஒரு கிராமத்து மனிதன் ' என்னும் கவிதை அற்புதமாய்.
 " எல்லாச்சுவர்களையும் வெறுக்கிறேன்....
அவ்வளவு சுவர்களும் அந்நியச்சுவர்கள்/நம்மைக் கூறுகட்டிப் பிரித்து
நம் உரையாடலைக் குலைக்கிற / அடையாளமற்ற சுவர்கள் ...." (பக்கம் 60-61)  எனும் கவிதை நகரத்தின் போலித்தனததை, அந்நியத்தனத்தை அப்பட்டமாய் தோலுரிக்கிறது.

'கோயில் கலாச்சாரம்' என்னும் கவிதை
பாம்பை வணங்குவோம் /பெருச்சாளியை வணங்குவோம்/பேப்பரை வணங்குவோம்/
சதுரங்களை வணங்குவோம்/முக்கோணங்களை வணங்குவோம்/
பஸ்ஸைக் கும்பிடு /ரயிலைக் கும்பிடு /பல்லியைக் கும்பிடு /நெருப்பைக் கும்பிடு /
நடிகை ஸ்ரீஸ்ரீயைக் கும்பிடு/சாராய வியாபாரியைக் கும்பிடு / ஆட்டோவுக்குப் பொட்டு வைத்து /விழுந்து கும்பிடு /
எம்.எல்.ஏ.வைக் கும்பிடுவோம்/ஆபிசரை வணங்குவோம்/பெரிய ஆபிசரைத் தண்டனிடுவோம்/
டி.வி.யைக் கும்பிடுவோம்/ மந்திரிகள் காலில் விழுவோம்/உளுந்த வடையைக் கும்பிடுவோம் /
பனியனைக் கும்பிடு /ஜட்டியைக் கும்பிடு /பனியனைக் கும்பிடு / நிலாவைக் கும்பிடு /
சூரியனைக் கும்பிடு /காக்காவை வணங்கு /கழுதையைக் கும்பிடு /
தமிழா / இரு கரங்குவித்து / கும்பிட்டுக்கொண்டே இரு " (பக்கம் 74). நல்ல நையாண்டிக் கவிதை. படிக்கிறவனுக்கு பட்டென்று உரைக்கிறமாதிரியான கவிதை இது. 

இந்த நூலின் தலைப்பாக உள்ள 'அரைக்கணத்தின் புத்தகம் ' என்னும் கவிதை வாழ்க்கையின் வினோதத்தைச்சொல்லும் கவிதையாக " ஏய் , நில், நில்லு /சொல்லி முடிப்பதற்குள் / மாடிப்படிகளில் என் குட்டி மகள்/ உருண்டு கொண்டிருக்கிறாள்/ ....
ஒரு சொடுக்கில். இழுப்பில்.புரட்டலில்/முழுச்சித்திரமே மாறிவிடும் / வினோதப் புத்தகம் அது "  சொல்லப்பட்டிருக்கிறது. .

                   இது மாதிரியான நிறைய கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக இந்தக் கவிதை நூலை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ' வாழ்க்கை பற்றிய என் கருத்துக்கள் /அனைத்தும் ஒரு மரங்கொத்தியாய் மாறி / என் முன் பறந்து கொண்டிருந்தது " (பக்கம் 102 ) என்று கவிஞர் சமயவேல் சொல்வதைப் போல வாழ்க்கை பற்றிய பலவிதமான தனது கருத்துக்களை பருந்துப்பார்வையாய் பார்த்து அதனைக் கவிதையாய் வடித்திருக்கும் புத்தகம் . படித்துப்பார்க்கலாம். சில கவிதைகளில் நாமும் அதன் பாத்திரங்களாய் மாறி , நம்மையும் அக்கவிதை உணர வைப்பதை உணரலாம். 'சில சொற்கள் ' என்னும் முன்னுரையும் , பின் இணைப்பும் கவிஞரைப் புரிந்து கொள்ளவும் கவிதையின் சூழலைப் புரிந்து கொள்ளவும் உதவுகின்றன.


No comments: